சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2018/06/23

புள்ளி - 4

    .
  . . .
. . . . .



◄◄ 1 2 3

        ந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவிலுக்கு போய் வருகிறேன். ஒவ்வொரு சனிக்கழமையும் நெடியோனைப் பார்த்து உள்ளுக்குள் உருகி வருகிறேன். என்னைச் சுற்றி இருக்கும் பிறரைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் சிலிர்க்கும். இத்தனை பக்தர்களில் எத்தனை பேர் அச்சுதனை அமரர் ஏறை பச்சை மேனியனை புருஷோத்தமனை நேரில் சந்தித்திருக்கப் போகிறார்கள்?

ஐம்பத்தாறு சனிக்கிழமைகள் வாக்குக் கொடுத்திருக்கிறேன். இன்னும் ஐம்பது வாரங்கள்.

புள்ளி.

"என்னடா இது? வந்ததும் வராததுமா இப்படிப் பண்றே? எல்லாத்தையும் திருப்பி எடுத்து வந்துட்டே?" என்றார் அம்மா. எனக்காகக் கொடுத்திருந்த சாமி படங்கள்.. பரம்பரையாக வந்த சிவன் பார்வதி படம்.. குலதெய்வம் வெங்கடாஜலபதி படம்.. அம்மா பூஜை செய்த வெள்ளி கிருஷ்ணர் மகாலக்ஷ்மி குட்டி விக்ரகங்கள்.. தாத்தா வீட்டு திருநாங்கூர் பெருமாள் அச்சு.. ஸ்ரீசக்ரம்.. ருத்ராக்ஷம்.. என்று எல்லாவற்றையும் திருப்பினேன். அம்மாவுக்கு அழுகை வந்து விட்டது.. "என்ன இப்படி பண்றான் இவன்?" என்று பூஜையறை சுவற்றைப் பார்த்துக் கேட்டார்.

சுவரில் காஞ்சிப் பெரியவர் படம். ஜெயேந்திரர். "அந்தாளையே புடிச்சு உள்ளே போட்டாச்சு. அவரைக் கேட்டு என்ன பிரயோஜனம்?" என்றேன். அம்மாவுக்கு இன்னும் அழுகை வந்துவிட்டது. கோபமும்.

"என்னடா இது? இப்படிப் பண்றே? உனக்கே நல்லாருக்கா?" என்று அதட்டினாள் அக்கா.

"நான் என்ன பண்றேன்? எனக்கு நம்பிக்கையில்லை. நீங்களாவது உபயோகிக்கலாம்னு அமெரிக்காலந்து மூட்டை கட்டி எடுத்துட்டு வந்தேன்.. இல்லைன்னா அங்கயே குப்பைனு தூக்கிப் போட்டிருப்பேன்"

அம்மாவுக்கு என்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அந்த நிலையிலும் "இவனை ஒண்ணும் செஞ்சிடாதே அபிராமி" என்றாள்.

நான் குளிக்கத் தயாரானேன். "துண்டு இருக்கா.. குளிக்கணும்.. ப்ளைட்ல வந்து ட்ரெயின்ல வந்து பஸ்ல வந்து.. ரொம்ப களைப்பா இருக்கு.. உடம்பெல்லாம் நாறுது" என்று நான் குளியலறைக்குப் போனேன்.

"பயப்படாதம்மா.. அவனை இந்த மாதிரி பண்ண வச்சதே அபிராமி தான்.. " என்று என் அக்கா சொன்னது தெளிவாகக் கேட்டது. இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.

புள்ளி.

லன்டனில் விமானம் தரை தொட்டதும் பைலட் ஒருவர் என்னைத் தேடி வந்தார். "உங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. விமானம் நின்றதும் உங்கள் மனைவியுடன் பேசுங்கள்" என்று தொலை பேசியைக் காட்டினார். என்னிடம் செல்போன் இருக்கிறது என்றேன்.

"பதட்டப்படாமல் சொல்லு" என்றேன் மனைவியிடம்.

அவள் மறுமுனையில் அழுது கொண்டே சொன்னபோது திக்கென்றது. என் பெண்ணைக் காணோம். இரவு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் கொடுத்துத் தேடுகிறார்கள். இந்த நேரம் பார்த்து நான் பயணத்தில்.. ஐயோ என்று அடித்துக் கொண்டேன்.

"என்ன ஆச்சு?" இப்போது நான் பதறினேன்.

தொடர்ந்து அழுதாள் மனைவி. "என் பெற்றோரை எனக்குப் பிடிக்கவில்லை" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுக் காணாமல் போய்விட்டாள் பெண். பதிமூன்று வயது. எங்கே போயிருப்பாள்? நண்பர்கள் வீட்டில் தேடியாகி விட்டது. அவளால் கார் ஓட்ட முடியாது. சைக்கிள் ஒட்டக்கூடத் தெரியாது. எங்கே போயிருப்பாள்? மறுமுனையில் போலீஸ் வந்தது. அவள் எழுதியிருந்த கடிதம் பற்றி கேட்டார்கள். துன்புறுத்தினோமா கொடுமைப்படுத்தினோமா.. என்று என்னிடம் விசாரித்தார்கள். முதல் நாளிரவு மைகேல்ஸ் காய்கறி மார்கெட் பக்கம் என் பெண்ணின் அடையாளங்களுடன் ஒரு சிறுமி வெள்ளை நிற பிக்கப் டிரக் ஒன்றில் ஏறியதாக யாரோ சொல்ல அதைப் பற்றி விசாரித்தார்கள். என் உறவினர் நண்பர்கள் யாரிடமாவது அப்படி பிக்கப் டிரக் இருக்கிறதா என்று கேட்டார்கள். பகீரென்றது. இல்லை இல்லை. என் பெண்ணைப் கண்டுபிடியுங்கள் என்று கெஞ்சினேன். அழுகை தொண்டையை அடைத்தது. உடனே திரும்பி வருவதாகச் சொன்னேன். "தைரியமாக இருங்கள்" என்றார்கள்.

பெண்பிள்ளை கடத்தலில் முதல் இருபத்து நாலு மணி நேரம் மிக முக்கியம். அதற்குள் முக்கிய திருப்பங்களோ தடயங்களோ கிடைக்கவில்லை என்றால் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆண்பிள்ளை கடத்தலில் உடனடியாக தொலைவாக இடம் மாற்றுவார்கள். பெண்பிள்ளை கடத்தலில் முதல் நாலைந்து நாட்கள் போல் அனேகமாக உள்ளூர் சுற்று வட்டாரத்தில் தனியிடத்தில் அடைத்து வைப்பார்கள். பனிரெண்டு வயதுக்கு மேலான சிறுமிகளுக்கு சுய நினைவுகள் சுத்தமாக அழியும் வரை தொடர்ந்து நாலைந்து நாட்களும் போதைப் பொருள் கொடுத்து... அதற்குப் பிறகு அடுத்தக் கட்டத்தைத் தீர்மானிப்பார்கள். பெரும்பாலும் வெளியூர் ஆசாமிகளுக்கு விற்று விடுவார்கள். இதைப் பற்றி ஆராய்ந்து கதை கதையாக எழுதியிருக்கிறேன். எல்லாம் இப்போது வந்து அச்சுறுத்தியது. அதுவும் என் பெண் எங்களைப் பிடிக்கவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போயிருக்கிறாள். அவளைக் கண்டுபிடித்தாலும் DCFS காரர்கள் பிடித்துக் கொள்வார்கள்.

லன்டன் ஏர்போர்ட்டில் தாறுமாறாக ஓடினேன். என் லக்கேஜ் கூட எடுக்கவில்லை. எப்படியோ போகிறது. எனக்கு என் பெண் வேண்டும். பத்திரமாக ஆபத்தில்லாமல் வீடு திரும்ப வேண்டும். அடுத்த இரண்டு அமெரிக்கன் விமானங்களில் சிகாகோவுக்கு இடமில்லை. நிலையை எடுத்துச் சொன்னேன். முதல் வகுப்பில் இரண்டு இடம் இருக்கிறது என்றார்கள். ஒரு டிக்கெட் ஆறாயிரம் டாலர். முதல் வகுப்பு டிக்கெட் எடுக்க காசில்லை. பெண் காணாமல் போய்விட்டாள் என்பதற்காக டிக்கெட் விலை குறைக்க முடியாது என்று சொல்லாமல் சொன்னார்கள். எனக்குத் தலை சுற்றியது. யுனைடெட் பிரிடிஷ் டெல்டா லுப்தான்சா என்று மாறி மாறித் தேடி கடைசியில் மறு நாள் காலை ஏர் லிங்கசில் எழுநூறு டாலருக்கு இடம் பிடித்தேன். பெண் காணாமல் போய்விட்டாள் என்றாலும் உடனடியாகக் கிடைத்த விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்க மனமில்லாமல் சுற்றியது மிக உறுத்தியது. பெண்ணை விட ஆறாயிரம் டாலர் பெரிதா? ஆறாயிரம் போகிறது என்று கிரெடிட் கார்ட் கொடுத்து எடுத்திருக்க வேண்டுமோ? இந்நேரம் சிகாகோ சேர்ந்திருக்கலாமோ? ஆறாயிரம் டாலர் என்றதும் என் தயங்கினேன்? என் பெண் முக்கியமில்லையா? 'என் பெற்றோர்களை எனக்குப் பிடிக்கவில்லை' என்று பெண் எழுதி வைத்தது நினைவுக்கு வந்தது. இத்தகைய உணர்வுச் சிக்கல்கள் யாருக்கும் வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

'என் பெண் கிடைக்க வேண்டும்.. கிடைக்க வேண்டும்.. அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தேன். யாரிடம் சொல்கிறேன்? அதைப் பற்றிக் கவலைப்படாமல் மனதுள் பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.

"கண்டிப்பாகக் கிடைப்பா. பயப்படாதீங்க" என்று ஸ்பஷ்டமாகத் தமிழில் குரல் வர, திரும்பினேன். பக்கத்தில் இருந்தவரை அதுவரை கவனிக்கவே இல்லை. "பயப்படாம போங்க.. எல்லாம் சரியாகிடும்" என்றார். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

"உங்களுக்கு எப்படி?"

"எனக்கு எல்லாம் தெரியும்" என்றார். உடனே அமைதியுடன் சிரித்து "நீங்க அமெரிக்கன் ஏர்லைன் காரிகிட்டே நிலைமையை விவரமா சொன்னதை நானும் கேட்டேன்.. உங்க பின்னாடியே நின்னுட்டிருந்தேன்.. அதான்" என்று என் தோளை ஆதரவாகத் தொட்டு அழுத்தினார். சுரர்ர்ர்ரென்றது. "எல்லாம் சரியாகிடும்" என்றார் என்னை தீர்க்கமாகப் பார்த்து.

நிச்சயம் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

புள்ளி.

"நாளைக்குப் பணத்தை ரிலீஸ் பண்ணுகிறோம்" என்றான் வசீம்.

நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். மூன்று வருடங்களாக சவுதியில் கைதி போல் வாழ்ந்த வாழ்க்கை முடியப்போகிறது என்ற நிமமதி. ப்லாக் நண்பரை நம்பிப் பணம் கொடுத்துத் தொடங்கிய தொழில். என்னையும் எமாற்றி வாடிக்கைக் காரரையும் ஏமாற்றி... சவுதி அரசாங்கமே வாடிக்கை என்றால் சும்மா விடுமா? நண்பர் அவசரமாக என்னை அழைத்து நீங்கள் தான் எப்படியாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்று பதற மூன்று வருடங்களுக்கு முன் இங்கே வந்தவன் ஏறக்குறைய கைதி போல் வாழ்ந்து கொடுத்த வாக்கை நிறைவேற்றி இருக்கிறேன்.

உள்ளே காலடி வைத்ததும் எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டுள் என்பது புரிந்தபோது தாமதமாகி விட்டிருந்தது. உள்ளே வந்து விட்டிருந்தேன். அமெரிக்க பாஸ்போர்ட் இருந்ததால் இரண்டு மாதங்களில் கொஞ்சம் கனிவுடன் நடத்தினார்கள், இல்லையெனில் நண்பர் செய்த மோசடிக்கு என்னை ஏதாவது செய்திருக்கலாம். என்னதான் அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் பார்க்க இந்திய லட்சணம் தானே? அதுவும் தமிழ்க் கறுப்பு. சவுதியில் இந்தியருக்கு மதிப்பு பிலிபினருக்கு கொஞ்சம் உயர்வான மட்டில், அவ்வளவே. மத்தியக் கிழக்கு முழுதும் அப்படியே என்று நினைக்கிறேன்.

வீட்டுக்கு வந்தேன். டிரைவர் கண்ணன் மட்டும் இல்லையென்றால் எனக்கு இன்னும் கடினமாக இருந்திருக்கும். தினம் என்னை ரிபைனரி-வீடு என்று மேலும் கீழும் சாரதியாக இருந்து.. வெள்ளி சனியில் தயங்கி தயங்கிப் பழகி.. ஒரு பிடிப்பில் இருந்தான். "கண்ணன்.. எல்லாம் முடிஞ்சிருச்சு.. நாளைக்குப் பணம் வந்ததும் சவுதிக்கு ஒரு சலாம்" என்றேன். "நல்லது சார்.. ரொம்ப சந்தோசம் சார்" என்று சிரித்தான்.. கன்னத்தில் குழி விழ அவன் சிரிப்பதைப் பார்க்கப் பிடிக்கும்.

உடனே சென்னையில் ப்லாக் நண்பரை அழைத்து விவரம் சொன்னேன். "என்னை மன்னிச்சிருங்க.. உங்களை இப்படி வம்புல மாட்டிவிட எண்ணியதேயில்லை.. நல்லவேளை முடிச்சிருச்சே.. ரொம்ப சாரி துரை.." என்றார்.

"விடுங்க.. விடுங்க.. மூணு வருசமாயிருச்சு விடுங்க.. ஏதோ செஞ்சுட்டீங்க.. ஐம் ஓவர் இட்" என்றேன்.

மறுநாள் பணம் கிடைக்கவில்லை. "நீங்க கடன் வாங்கினதா பேங்குல முடக்கிட்டாங்க" என்றான் வசீம்.

"வாட்?" அதிர்ந்தேன். "என்னமோ பிழை நடந்திருக்கு.. யார் கிட்டே கடன்?"

"அப்தப் சையத் பைசல்னு ஒருத்தர் புகார் கொடுத்திருக்கார். ஜட்ஜ்மென்ட் வாங்கி பேங்குல சமர்ப்பிச்சிருக்காரு. சவுதி நாட்டவருன்றதால அவருக்கு முன்னுரிமை இருக்கு"

விழித்தேன். வசீம் தொடர்ந்தான். "அது மட்டுமில்லே.. கடன் தொகைல மிச்சம் எட்டாயிரம் ரியால் நீங்க தர வரைக்கும் ட்ரேவல் பேன் பண்ணியிருக்காங்க.. நீங்க வெளியே போக முடியாது"

எனக்கு தலை சுற்றியது. நடுங்கினேன். என்ன இது, புதுக் கதை?

வசீமிடம் அப்தப் பற்றிய முழு விவரம் வாங்கிக் கொண்டு கண்ணனுடன் விரைந்தேன். அப்தப் விவரமாகச் சொன்னார். ப்லாக் நண்பர் இந்த கான்ட்ராக்ட்டைக் காட்டி லெட்டர் அப் கிரெடிட் பாணியில் சுத்தமாக வழித்து எடுத்து கடன் வாங்கியிருந்தார். தனிக் கடன். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அப்தப்பிடம் சொல்லி பார்த்தேன் "ஐயா.. இது நான் வாங்கின கடன் இல்லை.."

அப்தப் விடவில்லை. "இந்த கான்ட்ராக்ட் பேர்ல கடன் கொடுத்தேன்.. கான்ட்ராக்ட் பணம் கடன் திருப்பத்தான் எடுக்குறேன்"

ப்லாக் நண்பர் (?) மறுபடி மன்னிப்பு கேட்டார். இந்த முறை அழுதார். "உங்க கால் செருப்புக்கு கூட நான் சமானம் கிடையாது துரை.. உங்களை எப்படி ஏமாத்தியிருக்கேன்.. எனக்கு மன்னிப்பே கிடையாது.. எனக்கு வெட்கமா இருந்ததால உங்க கிட்டே மறைச்சுட்டேன்.. எனக்கு விமோசனமே கிடையாது.. ஆனா என்னை நம்புங்க.. நான் எப்படியாவது இந்தப் பணத்தைத் திருப்பிடுவேன்.."

"எப்படிங்க? எப்படித் திருப்புவீங்க? இதென்ன ஆயிரமா பத்தாயிரமா ஒரு லட்சமா திருப்பித் தரேன்னு நீங்க சொல்றதுக்கு? நானும் நம்புறதுக்கு?"

ஒரு வாரம் அலைந்தேன். பணம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நாட்டை விட்டு வெளியேற அனுமதி கிடைத்தால் போதுமென்றாகிவிட்டது. கண்ணன் என்னிடம் "சார்.. இந்த ஊர்ல வாஸ்தா இருந்தா எல்லாமே நடக்கும் சார்.. நான் ஒருத்தர் கிட்டே கூட்டிப் போறேன்.. நூறு இருநூறு ரியால் கொடுத்தா விஷயத்தை முடிச்சுக் கொடுத்துருவாரு.." என்றான். நம்பிக்கையில்லாமல் சரியென்றேன்.

எங்கேயோ சுற்றி கவனமாக என்னை ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றான் கண்ணன். என்னை வரவேற்றவருக்கு அறுபது வயதாவது இருக்கும். முகம் நிறைய புன்னகைத்தார். உள்ளே அழைத்து உட்கார வைத்து டீ கொடுத்தார். சிறிய தட்டில் அல்வா போல் ஒரு இனிப்பு. "சாப்பிடுங்க" என்றார். "மஜ்தூல் பேரீச்சம். உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்தும்.. நபிகள் கைப்பட விதைச்ச மரத்துலருந்து வந்தது.. மக்காவுக்கு பத்து கிலோமீடருல இருக்கு தோப்பு"

என் விவரங்கள் எல்லாம் கேட்டார். உடனே நாலைந்து பேருக்கு செல் போன் செய்தார். பிறகு அமைதியாக "உங்க கான்ட்ராக்ட் கடன் பணம் திரும்ப வராது. ஆனா அந்த எட்டாயிரம் ரியாலை தள்ளுபடி செய்யுறதா சொல்லிட்டாரு அப்தப். உங்க பயணத் தடை நாளைக்கு நீக்கிடறதா பேங்குல சொல்லிட்டாங்க.. என்னால இதான் பண்ண முடியும்"

என்ன செய்வதென்று புரியவில்லை. மூன்று வருட உழைப்பு வீணான துடிப்பு. ப்லாக் எழுத்தின் திறனை வியந்து எந்தப் பொறுக்கியையோ நம்பிக் கடன் கொடுத்த அசட்டுத்தனம். அதைத் தொடர்ந்து ஏமாந்த முட்டாள்தனம். எல்லாம் என்னைப் புரட்டி எடுத்தது.

"போகுது விடுங்க.." என்றார் பெரியவர். "நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும்" என்று ஆதரவாக என் தோளை அழுத்தினார். "இந்தப் பணம் உங்களது இல்லை.. யாருக்கோ நீங்க பட்ட கடன்"

"இல்லிங்க.. எப்படி.."

"உங்க நண்பரை மன்னிச்சு நிலைமையை ஏத்துக்கிட்டு அடுத்த கட்டத்தை நோக்கிப் போங்க.. எல்லாம் உன்னதமா இருக்கும்"

நீண்ட பெருமூச்சு விட்டேன். ப்லாக் நண்பரை மன்னித்தேன். சட்டி சுட்டதடா. மெள்ள எழுந்தேன். பெரியவருக்குத் தர வேண்டிய பணத்தை எடுத்துக் கொடுத்தேன். சிரித்தபடி வாங்கிக் கொண்டார். "கொஞ்சம் இருங்க" என்று உள்ளே சென்றார். திரும்பி வந்து "நிறைய இழந்துட்ட வருத்தம் உங்க முகத்துல தெரியுது. இருந்தாலும் உங்களுக்கு துரோகம் செஞ்சவங்களை மன்னிச்ச பெரிய மனசு உங்களுக்கு நிம்மதியையும் உன்னதத்தையும் கொடுக்கும்" என்று ஒரு சிறிய உருள் பொட்டலத்தை என்னிடம் கொடுத்தார். "விலை மதிப்பில்லாத ஒன்றை உங்களுக்கு பரிசா கொடுக்க விரும்பறேன். எடுத்துக்குங்க"

பிரித்தேன். திடுக்கிட்டேன். என் மனைவியின் உறவினர் சாகும் தறுவாயில் எனக்குக் கொடுத்தப் பிள்ளையார். அதே வில்லேந்திய பிள்ளையார். எத்தனை வருடங்களுக்குப் பின்.. அதுவும் இங்கே..

திகைப்பு அடங்காமல் அவரை ஏறிட்டேன். "இது எப்படி உங்க கிட்டே? ஆச்சரியமா.. நம்பவே முடியலியே?"

பெரியவர் என்னை வழியனுப்பி "நம்ப முடியாதது எதுவுமே இல்லை.." என்றார். தயங்கி என்னை நேராகப் பார்த்து "..நம்பினால்" என்றார்.

என் மிக அருகே வந்து, "நம்புறீங்க இல்லையா?" என்றார் என் தோளை அழுத்தி. பிறகு கண்ணனை அழைத்து "இவரை ஜாக்கிரதையா சேர்க்க வேண்டிய இடத்துல கொண்டு போய் சேர்த்துடு" என்றார்,

வீட்டுக்கு வந்ததும் உறைத்தது. பெரியவர்.. சவுதியில் கால் வைத்த ஐந்தாம் நிமிடம் என்னுடன் உரையாடிச் சேர்ந்து தொடர்ந்து முடிவில் பெரியவரைப் பார்க்க அழைத்துச் சென்ற கண்ணன்.. திரும்பக் கிடைத்த வில்லேந்திய பிள்ளையார்.. "இவரை சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்துடு" என்ற பெரியவரின் சொற்கள்.. என் டிரைவரின் பெயர் கண்ணன் என்பது கூட ஒரு பெரிய விஷயமாக முதல் முறையாகத் தோன்றியது. எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நானென்றான்.

புள்ளி.


<இன்னும் உண்டு>


*DCFS: Department of Children and Family Services - பிள்ளை வளர்ப்பு முறைகேடுகளை விசாரணை செய்யும் அரசு மையம்.


2018/06/12

புள்ளி - 3

    .
  . . .



◄◄ 1 2


        ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை கூட்டம் வெயிலில் நிற்கிறது என்கிறார்கள். தெரியாது. அந்நாளில் ஒன்பதரை மணிக்குத் திறக்கும் அமெரிக்க தூதரக விசா அலுவலக வளாகத்தில் காலை எட்டரை மணிக்கே கூட்டம் சேர்ந்து விடும். அலுவலக வெளியில் மரத்தடியில் வரிசையாக கயிறு கட்டி ஒரு மணி நேரம் நிற்க வைப்பார்கள். அமெரிக்கா செல்லும் ஆர்வத்தில் ஒரு மணி நேரம் வெளியே நாய் போல் நிற்கும் அவதியைச் சகித்தேன். உள்ளே சென்ற பின் இன்னொரு அரை மணி நேரம். என் விவரமெல்லாம் சரி பார்த்தார்கள். கூண்டுக்கு அந்தப்புறம் இருந்த வெள்ளைக்காரப் பெண்மணி "that's a very good school.. what is your ph.d in?" என்றாள்.

"application of cognitive science models for consumer marketing precision" என்றேன்.

"i don't understand a word of what you said" என்றாள்.

"me neither" என்றேன்.

உரக்கச் சிரித்தாள். என் விவரங்களை சரி பார்த்தாள். வழக்கமாக கேட்பாளா என்னை மட்டும் கேட்டாளா தெரியாது. "what will you do when you come back.. or would you look to stay in America?"

"why else would i go there? actually.. i intend to run away soon as i land in America; my ambition is to find a job at a petrol bunk and work my way up"

"we call it gas station" என்றாள் நிதானமாக. "do you know i can disqualify you for expressing vagabond intent?" என்று முறைத்தாள். ஆழமான பார்வை தொடர்ந்த மிதமான புன்னகையுடன் "your application seems in order.. we'll verify.. come back at 4pm for visa" என்றாள்.

அடக்க முடியாத சந்தோஷத்துடன் வெளியே வந்தேன். பெருமையுடன் எதிரே உட்லண்ட்சில் நுழைந்து ஒரு சூடான பாதாம் பால் தரவழைத்தேன். சிகாகோவுக்கான டிக்கெட் போக கையில் ஆயிரம் ரூபாயோ என்னவோ இருந்தது. அமெரிக்கா போகும் வரை இதை வைத்து ஓட்டியாக வேண்டும். மாலை விசா வந்தவுடன் நேரே பர்மா பஜார் சென்று ஒரு நல்ல சூட்கேஸ் வாங்க வேண்டும். தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு எத்தனை சீக்கிரம் முடியுமோ இந்த நரகத்தில் இருந்து கிளம்பி ஒரே ஓட்டம் திரும்பி வரவே கூடாது.. ஐயே.. நாடா இது? பல வித சிந்தனைகளுடன் பொங்கல் வடை பூரி என்று வெட்டினேன். பொழுதை எப்படிக் கழிப்பது என்று எண்ணியபடி வெளியே வந்து நடந்தேன். எதிரே சபையர் தியேடர் வளாகத்தில் நுழைந்தேன். மூன்று தியேடர்களிலும் ஆங்கிலப் படங்கள். அமெரிக்கா போவதால் இனி ஆங்கிலப் படங்கள் மேற்கத்திய வழக்கங்கள் மட்டுமே ஏற்பது என்று தீர்மானித்திருந்தேன். நாகேஷ் நினைவு வந்தது. நாகேஷுக்கு இணையாக ஒரு மேற்கத்திய நடிகன் உண்டா என்ற நினைப்பை அசை போட்டபடி ப்லூ டைமன்ட் தியேடரில் 'the world according to Garp" என்று ஒரு படத்துக்கு டிகெட் எடுத்தேன். சகிக்கவில்லை. உடனடியாக ஜம்பு ஜகன்மோகினி பாணி படம் பார்த்து துக்கத்தைத் துடைத்துக் கொள்ள நினைத்து வெளியே வந்தேன். எல்ஐசி பக்கமாக நடந்தேன். விக்டோரியா காட்சியகத்தில் ஈயடித்தது. நேரம் கடத்த எண்ணி உள்ளே நுழைந்தேன். விதவிதமான சிலைகள் அலங்காரங்கள் காட்சியில் இருந்தன. எட்டு கைகள் கொண்ட நாட்டியப் பிள்ளையார் சிலை ஏனோ கவர்ந்தது. ஒவ்வொரு கையிலும் ஒரு ஆயுதமோ சங்கோ என்னவோ வைத்திருந்தார். போதாக்குறைக்கு தகப்பன் ஸ்டைலில் காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே டான்ஸ் வேறே. வெண்கலமோ செம்போ தெரியவில்லை. செம விலை. இதையெல்லாம் எந்த மனுஷன் வாங்குவான் என்று நகர எண்ணிய போது பிள்ளையாரின் ஒரு கை வளைந்து என்னைச் சுட்டியது "டேய்!" என்பது போல. சட்டென்று விலகி நின்று பார்த்தேன். பிள்ளையார் சிலை லேசாக என் பக்கம் திரும்பி கால்களை ஊன்றி இரண்டு கைகளை இடுப்பில் வைத்து மூன்றாவது கையால் அதே விரல் சுட்டு. "டேய்!". லேசான நடுக்கத்துடன் பிள்ளையார் அருகே சென்று பார்த்தேன். நிச்சயமாக பிரமையில்லை. அதிர்ந்து அவசரமாக வெளியே வந்தேன். சீ சீ நிச்சயம் பிரமை தான்.. இன்னும் ஒரு வாரமோ பத்து நாளோ.. அதன் பிறகு இந்த கண்றாவியெல்லாம் இல்லை. அமெரிக்கா.

அங்குமிங்கும் சுற்றி மறுபடி தூதரகத்துக்கு வந்தேன். வந்தவருக்கெல்லாம் விசா கொடுத்துவிட்டு கடைசியில் என்னை அழைத்தார்கள். இந்த முறை ஒரு ஆண். டிப்டாப் வடக்கத்தி இந்தியர். என்னை ஏற இறங்கப் பார்த்து "உங்களைப் பற்றி ஒரு புகார் வந்திருக்கிறதே? நீங்கள் கொடுத்திருக்கும் படிப்பு விவரங்கள் வங்கி விவரங்கள் எல்லாம் ஏமாற்று என்று புகார். பெங்களூர் இந்திரா நகர் போலீஸ் ஸ்டேஷனில் உங்களைப் பற்றிய மோசடி புகாரின் நகல். ஆளை அடித்து மிரட்டி ரவுடித்தனம் செய்ததற்கான புகார்.." என்று வரிசையாக அடுக்கினார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"இதோ" என்று ஒரு கடிதத்தைக் காட்டினார். "இந்தா.. இதன் நகல்" என்று என்னிடம் கொடுத்தார். விடுவிடுவென்று படிக்கத் தொடங்கினேன். சேஷாத்ரி என்று கையொப்பம் பார்த்தேன். உடனே புரிந்து விட்டது. "சார்.. இது வெறும் பொய் சார்.. நான் கொடுத்த விவரமெல்லாம் உண்மை.. போலீஸ் புகார் எல்லாம் பொய் என்று போலீசே சொல்லிவிட்டது.. கேட்டுப் பாருங்கள்" என்றேன். எனக்கு அழுகையே வந்து விட்டது.

சமாதானப்படுத்துவது போல "we will find out.. அதனால நீங்க ரெண்டு நாள் கழித்து வாங்க.. visa is on hold" என்றார்.

உலகமே இடிந்தது போல் வெளியே வந்தேன். இந்த சேஷாத்ரி என் மேனேஜர். கம்பெனி என்னை அமெரிக்கா அனுப்ப எண்ணி எல்லாம் செய்தது. ஆனால் எனக்கும் அவனுக்கும் ஒத்து வராமல் நான் வேலையை விட்ட போது இந்த மாதிரி ஒரு விஷமக் கடிதம் அனுப்பி என்னை இக்கட்டில் விட்டிருக்கிறான். எச்சக்கலைப் பரதேசி. சொறி நாய். சாக்கடைக் காளான். பன்னி. உடனே பெங்களூர் சென்று அவன் கொட்டையை சுத்தியலால் அடித்து நசுக்க ஆத்திரமும் வேகமும் வந்தது.

சோர்வுடன் வெளி வந்து பஸ் பிடிக்க நடக்கையில் விக்டோரியா பிள்ளையார் நினைவுக்கு வந்தது. ஏன்? எனக்கு உதவக்கூடாதா? பிள்ளையாரப்பா? நீயெல்லாம் ஒரு அப்பனா? உன்னைப் போய் சாமினு கொண்டாடினேன் பாரு? உனக்கு எத்தனை பூஜை செய்திருப்பேன்.. கடவுளே.. இந்த சேஷாத்ரிக்கு குஷ்டமோ தீராத மூலமோ வந்தால் தான் நீ இருக்கிறாய் என்று அர்த்தம்.. இல்லாவிட்டால் கடவுள்னு பேரை வச்சுகிட்டு ஊரை ஏமாத்துற கல்.. கல் கூட பரவாயில்லை சாணி தட்ட உதவுது.. சாமிக்கல் எதுக்கும் உதவாத நாய் மூத்திரம் போகிற கல். அரை மணி போல் அத்தனை கடவுளையும் திட்டிவிட்டு பல்டி அடித்தேன். பிள்ளையாரப்பா.. எப்படியாவது இந்த விசா வாங்கிக் கொடுத்துரு.. நூத்தி எட்டு தேங்காய் உடைக்கிறேன். ஏதேதோ மனதுள் புலம்பியபடி சைதாப்பேட்டை வரை நடந்தே வந்தேன். வீட்டில் சொன்னதும் அம்மா "கவலைப்படாதடா.. அபிராமி இருக்கா பார்த்துப்பா" என்றாள்.

இரண்டு நாள் பொறுத்துக் கொஞ்சம் தெளிந்திருந்தேன். விசா கிடைக்கிறதோ இல்லையோ வருந்தப்போவதில்லை. சேஷாத்ரியை மன்னித்து விட்டேன். போகிறான் அல்பன். தூதரகம் சென்றேன். வரிசையில் நின்று என் முறை வந்ததும்.. முன்பு பார்த்த பெண்மணி. "ah.. the gas station aspirant" என்றாள். இன்டர்காமில் யாரையோ பெயர் சொல்லி அழைத்தாள். அதே வடக்கத்தி டிப்டாப் வந்து ஒரு பொட்டலத்தைக் கொடுத்தான். என்னைப் பார்த்தான். முறைத்தான். விலகினான். "ok.. here's your visa.." என்று என்னிடம் பொட்டலத்தைக் கொடுத்தாள் பெண்மணி. பரவசமானேன். "thank you.. thank you" என்றேன் இரட்டைக்கிளவியில். "thank the man who was here" என்றாள். மறுபடி "thank you.. thank you" என்றேன்.. "goodluck" என்றாள். மனம் மாறி விசாவைப் பிடுங்கிக் கொள்ளுமுன் இங்கிருந்து ஓடி விட வேண்டும்.. தலையாட்டி வெளியே வந்தேன்.

தூதரக வாயில் கடந்தபின் உறைத்தது. அவள் இன்டர்காமில் அழைத்த டிப்டாப். மிஸ்டர் கேனஷ்ரேம். மிஸ்டர் கணேஷ்ராம்.

புள்ளி.

அப்பா இறந்து ஒரு வருடம் போலிருக்கும் பூணலைக் கழற்றி எறிந்திருந்தேன். "எனக்கு வேணாம்மா"

"என்னடா இப்படி அக்கிரமம் பண்றே?" என்றாள் அம்மா. "செலவழிச்சு போட்டது.. அடுத்த மாசம் வர்ஷாப்தீகம் முடிஞ்சு காசில கர்மா எல்லாம் பண்ண பூணல் வேணும்.."

"என்ன செலவு? எதுக்காக போட்டீங்க.. அப்பனுக்கு ஸ்ரார்த்தம் பண்ணத்தானே? என்னவோ ஆசையா பூணல் போட்டாப்புல பேசுறே?"

"வாய மூடுறா சண்டாளா" என்றார் தாத்தா.

"யோவ்.. யாருயா நீ? யாரைப் பாத்து சண்டாளன்ற? வயசனவன்னு பாக்க மாட்டேன் ஆமா"

"என்னடா இது..?" அம்மா அதிர்ந்தாள்.. அவளுக்கு அழுகை வந்துவிட்டது.

"அப்பனைப் பெத்தவனையே யாருன்னு கேக்குறான்.. உருப்படுவானா இவன்.. சல்லிப்பய..?"

"அப்பனே பூட்டான்.. அப்புறம் அப்பனுக்கு அப்பன் என்ன வேண்டிக்கிடக்கு?"

"கூறுகெட்டப் பய.. வளத்திருக்கே பாரு? " என்று அம்மாவிடம் பாய்ந்தார்.

"டேய்.. மரியாதை கெட்டுரும்.. எங்கம்மாவை பத்திப் பேசினா.. உன் பையனை நீ ஒழுங்கா வளத்திருந்தா இதெல்லாம் வந்திருக்குமா? பேச வன்டான்"

"தாத்தா.. பிள்ளையார் சிலையை கிணத்துல போட்டான்.. நான் பார்த்தேன்.." என்று நேரம் தெரியாமல் வத்தி வைத்தாள் தங்கை.

"ஒ.. ஏதுரீ.." என்று பாட்டி சேர்ந்து கொண்டார். "சாமியார் கொடுத்த பிள்ளையார் ஆச்சே? திரும்ப வந்து வாங்கிப்பார்னு சொல்வானே அம்பி?"

"சாமியார் என் கனவுல வந்து பிள்ளையாரைக் கிணத்துல போடச் சொன்னார்.." என்றேன்.

"புத்திர சோகம் போறாதுன்னு இப்படி தெய்வச் சேதம் பாக்கணும்னு எழுதியிருக்கானே.." கண் கலங்கினார் பாட்டி.

"அப்புறம் அம்மா.. நான் காசி எல்லாம் போறதா இல்லே.." என்றேன். தாத்தாவைப் பார்த்தேன். "யோவ்.. உன் பையன் தானே? வேணும்னா நீ போய் காசில எல்லாம் போட்டுக்க"

என் அம்மா வழக்கம் போல் எதுவும் சொல்லவில்லை. ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்றாள். பாட்டி என்னிடம் வந்து "அந்தப் பிள்ளையாரையாவது எடுத்துக் கொடுரா.. நீ நல்லா இருப்பே.." என்றார்.

புள்ளி.

<இன்னும் உண்டு>►► 4




2018/06/10

புள்ளி - 2

    .
  .


◄◄ 1


        தாம்பரம் பட்ஸ் ஓட்டல் வெளிச்சுவற்றில் ஒரு சிறிய பிள்ளையார் சிலை பதித்து வைத்திருப்பார்கள். ஒரு கதர் துண்டை உடுக்கையாகவும் பட்டையாக விபூதியும் ஒரு எருக்க மாலையும் அணிவித்து பிள்ளையாரை அவர் பாட்டுக்கு விட்டிருப்பார்கள். நான் சென்ற போதெல்லாம் ஒருவராவது கும்பிட்டோ தேங்காய் உடைத்தோ பார்த்ததில்லை. யார் இவருக்கு உடையும் அலங்காரமும் செய்கிறார்கள் என்பதும் அறிந்து கொண்டதில்லை.

என் அப்பாவின் கொலை வழக்கு தொடர்பாக அடிக்கடி செங்கல்பட்டு போவேன். அப்படியே சில நேரம் புதுப்பட்டினத்திலிருந்த என் மாமா வீட்டுக்குப் போய் ஒரு நாள் தங்கிவிட்டு வருவதுண்டு. வரும் வியாழனன்று முக்கியமான திருப்பம் என்று என்னை ஒரு நாள் முன்பே வரச்சொல்லியிருந்தார் வக்கீல். நான் போவது தெரிந்து நண்பன் ஸ்ரீதர் உடன் வருவதாகச் சொன்னான். செங்கல்பட்டில் அவன் அத்தை வீடு இருந்தது. அவனுக்கு திருக்கழுகுன்றம் போகப் பிடிக்கும். எனக்கு அவன் அத்தை மகளைப் பார்க்கப் பிடிக்கும். எங்களை விட நாலு வயதோ என்னவோ மூத்தவள், பார்க்க அட்டகாசமாக இருப்பாள். இதான் சாக்கு என்று வீட்டில் கொஞ்சம் அதிகம் சில்லறை வாங்கிக் கொண்டு புதன் மதியமே தாம்பரத்துக்கு நடை கட்டினோம். வெயிலாவது கியிலாவது? பொருட்படுத்தியதே இல்லை. பட்ஸ் ஓட்டலில் வெட்டிவிட்டு அங்கிருந்து வண்டலூரில் மாலை சுப்ரமணிய ராஜுவின் பேச்சு ஒன்றைக் கேட்டுவிட்டு அங்கிருந்து செங்கல்பட்டுக்கு பஸ் பிடிக்கத் திட்டம். ஸ்ரீதருக்கு இந்த எழுத்தாளர் வட்டம் கிட்டம் எல்லாம் ரொம்ப இட்டம். பட்ஸ் ஓட்டலில் பணம் கட்டுவதாக வேறே சொல்லியிருந்தானா, குஷியாகக் கிளம்பினேன்.

தாம்பரம் சேனடோரியம் அருகே நடந்து வந்த போது என்னை யாரோ பெயர் சொல்லி அழைப்பது போலிருந்தது. என் நண்பன் ரவியின் மாமா பையன் பாலுவைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். இதே சேனடோரியம் மருத்துவமனையில் தான் கொடூரமாக இறந்தான். 'என்ன இது.. பாலுவின் குரல் மாதிரி இருக்கிறதே?' என்று எண்ணியபடி ஸ்ரீதரைப் பார்த்தேன். பாலு விவகாரத்துக்குப் பிறகு ஸ்ரீதர் என்னுடன் நட்பைத் துண்டித்துக் கொண்டு சமீபத்தில் தான் ராசியாகி இருந்தான். அதுவும் ஒரே கல்லூரயில் சேர்ந்ததே காரணம். பாலுவைப் பற்றிப் பேச்செடுக்கத் தயக்கமாக இருந்தது. நடந்தேன். தொடர்ந்து யாரோ அழைப்பது போலவே இருந்தது. ராமர் கோவில் அருகே வந்ததும் ஸ்ரீதர் சட்டென்று என்னை இழுத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தான். பதட்டத்துடன், "டே.. என்னை யாரோ தொட்டு தொட்டுக் கூப்பிடுறாப்புல இருந்துதுடா" என்றான். "கோவில்ல கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போவோம்"

"என்னையும் யாரோ கூப்பிடுறாப்புல இருந்துச்சுடா.. நான் தான்.."

"பாலு தானே? எனக்குத் தெரியும்டா"

"சீ சீ.. அதெல்லாம் இல்லடா.. அவன் போய் மூணு நாலு வருஷம் இருக்குமா? சரி. சரி.. நீ வேணா கும்பிட்டு வாடா.. போவோம்.. பசிக்குது."

கோவிலில் நடை சார்த்தியிருந்தார்கள். ஐந்து மணிக்கு மேல் தான் திறப்பார்கள். அவன் அவசரமாக பிரபந்தப் பாசுரம் நாலைந்து சொல்லிவிட்டு 'வாடா' என்று என் தோள் மேல் கை வைக்கப் போனவன் திடுக்கிட்டு "என்னடா இது?" என்றான். என் சட்டை தோள்பட்டை அருகே சிவப்பு நிறத்தில்.. சட்டையைக் கழற்றினேன்.. வில் போல ஒரு வடிவம்.

"நீ பிரகாரம் சுத்துறப்ப இங்க சாஞ்சிட்டிருந்தனா.. ஒட்டியிருக்கும்" என்று ஒரு தூணைக் காட்டினேன்.

ஸ்ரீதர் மசியவில்லை. "அடப்போடா.. தோராயமா சாஞ்சா இப்படி தெளிவா சித்திரம் வருமாடா? இது அசல் கோதண்டம்டா. ஞாபகம் இருக்கா.." என்று ஒரு கணம் என் வாயைப் பொத்தி விலகி, "பேர் சொல்லாதே.. இப்பத்தானே பேசிட்டிருந்தோம்..? பதட்டப்பட்டோம்ல? இது ராமர் கோவில்.. நான் பாசுரம் சொல்லி முடிச்சதும் பாருடா.. துணைக்கு அனுப்பியிருக்கார்டா"

நான் நெளிந்தேன். "என்னடா இது.. ராமராவது.. கோதண்டமாவது.. இது அழுக்கு சட்டைடா டேய்.."

"லூசு.. சட்டையைக் கசக்காதடா.. இதப்பாரு இன்னும் அப்படியே இருக்கு. இது ஒரு குறி.. அப்படியே போட்டுக்க.. துணைக்கு கோதண்டம் வரும்"

"இல்லடா.. நீயே வச்சுக்க" என்று அவனிடம் கொடுத்தேன். பையிலிருந்த மாற்றுச் சட்டையை எடுத்து அணிந்து கொண்டேன். ஸ்ரீதருக்கு என் செயல் பிடிக்கவில்லை. சட்டையை வாங்கிக் கவனமாக இடுப்பில் சுற்றிக் கொண்டான் - வில் வெளியே தெரியும் படி. தாம்பரம் வரை என்னுடன் அதிகம் பேசவில்லை. பட்ஸ் ஓட்டல் வந்ததும் என்னைப் பார்த்தான். சிரித்தான். "சாரிடா.. நீ சொல்றது சரிதான்.. எனக்குத்தான் குழப்பம்.. கோதண்டமாவது.." என்று என்னிடம் சட்டையைத் திருப்பினான்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அங்கே வந்த ஒரு அரை டிராயர் பிச்சைக்காரச் சிறுவன் எங்களிடம் கையேந்தினான். என்னிடமிருந்த சில்லறையிலிருந்து கவனமாக மூன்று பைசா நாணயம் ஒன்றைப் பொறுக்கி எடுத்து அவனிடம் கொடுத்தேன். என்னிடம் இருந்த சட்டையை.. என்ன தோன்றியதோ.. அவனுக்குத் தரப் போனேன்.. "இந்தாப்பா சட்டை போட்டுக்குறியா? பெரிய சட்டை.. பரவாயில்லையா?"

"இருடா.. எதுக்குடா" என்று ஸ்ரீதர் தடுத்தான். அதற்குள் என்னிடமிருந்து சட்டையைப் பிடுங்கிக் கொண்டு தாவி ஓடி பட்ஸ் ஓட்டல் சுவர் பிள்ளையார் இடுப்பில் இருந்த துண்டையும் உருவிக் கொண்டு சடுதியில் மறைந்து விட்டான் சிறுவன். திகைத்தோம். பட்ஸில் கணிசமாக வயிற்றுக்கு உணவீய்ந்து பிறகு சுப்ரமண்யராஜு தயவில் செவிக்கும் சற்று ஈய்ந்து முடித்து ஒன்பது மணி வாக்கில் நாங்கள் தாம்பரம்-செங்கல்பட்டு மொபசல் வண்டி ஏறிய நேரத்தில் எல்லாம் மறந்து விட்டோம். செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் இறங்கிய போது இரவு பதினொரு மணியாவது இருக்கும். பழைய பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீதர் அத்தை வீடு பத்து நிமிட பொடி நடை. சுறுசுறுப்பாக நடந்தோம். பத்தடி நடந்திருப்போம். ஸ்ரீதர் என் கைகளைப் பிடித்து நிறுத்தினான். "டே.. அங்க பாருடா.." என்று தெருவின் எதிர்புறம் காட்டினான். "உன் சட்டையைப் பிடுங்கிக் கிட்டு ஓடின பையன்.."

பார்த்தேன். அப்படித்தான் தோன்றியது என்றாலும் மறுத்தேன். "அதெப்படிறா முடியும்? சின்னப் பையன்.. பிச்சைக்காரன் வேறே.."

"டே.. அவனே தான்.. நம்மளைப் பாத்து வரான்.. போவோம் வா" என்று வேகமாக நடக்கத் தொடங்கினான். நானும் விரைந்தேன். ஸ்ரீதர் வீட்டு முனையிலிருந்து திரும்பிப் பார்த்த போது அந்தப் பையன் போலவே உருவம் தொலைவில் நின்றபடி கை அசைத்தது. அடுத்த கணம் நானும் ஸ்ரீதரும் ஓட்டம் பிடித்து ஸ்ரீதர் வீட்டுக்குள் நுழைந்து நின்றோம். விவரம் சொன்னதும் சிரித்த ஸ்ரீதரின் அத்தை "இது கூட தெரியலியா? உனக்கு துணையா வீடு வரைக்கும் கொண்டு விட்டு டாடா காமிச்சுட்டும் போயிருக்கான் ஸ்ரீராமன். உள்ளே வந்து பெருமாளை சேவிச்சுட்டு படுங்கோ ரெண்டு பேரும்" என்றார். ஸ்ரீதரின் அத்தை மகளை சைட் அடிக்க முடியவில்லை.. தூங்கிவிட்டிருந்தாள். கை முகம் கழுவிக் கொண்டு அத்தை சொன்னபடி உள்ளேயிருந்த ராமர் படத்துக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுப் படுக்கப் போனோம். ராமர் படத்திலிருந்த வில் உறுத்தியது. படத்தில் பளிச்சென்று வில் மட்டும் தெரிந்தது. சட்டையில் இருந்தாற்போல். அதே வடிவம். ஸ்ரீதரைக் கேட்க நினைத்து அடக்கிக் கொண்டு படுத்தேன்.

கோர்ட் விவகாரம் முடிந்து ஸ்ரீதர் வீட்டுக்கு நான் திரும்பிய போது மணி ஒன்றிருக்கும். "டே.. நான் எங்க மாமா வீட்டுக்குப் போறேன்.. திருக்கழுகுன்றம் வரை நடந்து அங்கிருந்து புதுப்பட்டினம் பஸ் பிடிப்பேன்.. வரேன்.." என்றேன்.

"திருக்கழுகுன்றமா? இருடா நானும் வரேன்" என்று உடன் கிளம்பினான். அவன் வருவானென்று தெரியும். "அத்திம்பேர்.. உங்க சைக்கிளை எடுத்துண்டு போறேன்" என்று கூவினான். "வாடா, சைக்கிள்ள போவோம்"

கோவிலுக்கு அரை கிலோமீடர் கிழக்கே ஒரு பெரிய குளம்* உண்டு. சிறிய ஏரி எனலாம். கோவிலுக்கு வரும் கழுகு இந்தக் குளத்தின் நடுவில் மூழ்கிக் குளித்து விட்டு வரும் என்பார்கள். கரையில் நிறைய மரங்கள் உண்டு. மரத்தில் ஏறி அங்கிருந்து குளத்தில் தாவிக் குதிப்பது சுவாரசியமான குதூகலம். "குளிக்கலாம்டா" என்றான். ஆளுக்கொரு மரத்தைப் பிடித்துக் கொண்டு சர் சர்ரென்று மரமேறிக் குதித்தோம்.. ஸ்ரீதர் என்னை விட வேகமாக ஓடி நீந்துவான். நான் நாலாவது முறை மரம் ஏறுவதற்குள் அவன் குதித்து எழுந்து நீந்திக் கொண்டிருந்தான். நான் குதிக்கத் தயாராகும் நிலையில் திடீரென்று ஸ்ரீதர் நீரில் மூழ்குவதைக் கவனித்தேன். யாரோ அவனை உள்ளே இழுப்பது போல். இழுத்து இழுத்து அடிப்பது போல். ஸ்ரீதருக்கு எப்போதாவது வலிப்பு போல் வரும். கையில் ஒரு இரும்புக் கவசம் வைத்திருப்பான். ஒருவேளை.. சட்டென்று குதித்தேன். அவனை நோக்கி நீந்தினேன். அவனைப் பிடிக்கபோன என்னை உதறித் தள்ளினான். நான் எதிர்பாரா விதமாக என்னை உள்ளே இழுக்கத் தொடங்கினான். திமிறி வெளிவந்து அவனை மேலே இழுக்கப் போனேன். அதற்குள் ஸ்ரீதர் மயங்கி விடுவான் போல் தொய்ந்து போயிருந்தான். 'ராமா' என்று மனதுள் கூவினேன். . எனக்கு அவனை மேலே இழுக்கும் வலு குறைந்து கொண்டிருந்தது. தெரிந்த கடவுள் பெயரெல்லாம் அழைத்தேன். மூச்சு முட்டியது. கண்களில் தளர்ச்சி. ஒரு நிமிடம் போலிருக்கும். இரண்டு பேர் நீரிலிருந்து எங்களை மேலே இழுத்துக் கொண்டிருந்தார்கள்.

கரையில் கொஞ்சம் சுதாரித்த பின் எங்களைக் காப்பாற்றியவருக்கு நன்றி சொன்னோம். "ரெண்டு பேரு இழுத்தாப்புல இருந்துச்சே?"

அவர் சிரித்து "நீங்க ரெண்டு பேராச்சே? அப்படித்தான் இருக்கும்"

"சார்.. உங்களுக்கு ஏதாவது.. எங்க கிட்டே ரெண்டு ரூவா இருக்கு.."

"உங்கிட்ட வாங்க வேண்டியது நிறைய இருக்கு தேவையானா வாங்கிக்குவேன்.. ரெண்டு பேரும் பத்திரமா வீடு சேருங்க" என்று மரத்தடியில் இருந்த தன் சட்டையை அணியத் தொடங்கினார்.

எனக்குப் புரியவில்லை.

என் குழப்பத்தைப் படித்தது போல் "புரியும் போது புரியும்" என்று எங்களைப் பார்த்துத் திரும்பினார்.

திடுக்கிட்டோம். அது.. அது.. என் சட்டை. வில் படிமம் உட்பட அப்படியே..

"உங்களுக்கு இந்த சட்டை எப்படிக் கிடைச்சுது? இது என் சட்டை.."

"என்னுதுபா! எல்லாமே என்னுது.. அதான் சொன்னேன்ல? தேவையானா உங்கிட்ட வாங்கிக்குவேன்" என்று சிரித்து ஸ்ரீதரின் சைக்கிளில் ஏறிக் காணாமல் போனார்.

"யோவ் யோவ்.. வண்டி அவனுதில்லையா.. என்னுதுமில்லையா.." என்று தள்ளாடி எழுந்து அவர் பின்னே ஓடிய ஸ்ரீதரின் பின்னே நான் ஓடினேன். சன்னதித் தெரு முனையில் சைக்கிள் மட்டும் கிடந்தது.

புள்ளி.

<இன்னும் உண்டு> ►► 3




*இப்போது அங்கே அபார்ட்மென்ட் வரிசையாகக் கட்டியிருக்கிறார்கள். குளத்தைக் காணோம். மரங்களையும் காணோம். திருக்கழுகுன்றத்தைக் கூட விடவில்லை.


2018/06/03

புள்ளி - 1

    .



        காரணம் காரியம் எல்லாமே இணைந்திருக்கிருன்றன என்கிறார்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத சூட்சுமம் என்கிறார்கள். இப்பிறவியின் நடப்புகள் அனைத்தும் முற்பிறவிச் செயல்களின் விளைவுகள் என்றும் சொல்கிறார்கள். முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்கிறார்கள். பிற்பகல் செயின் எப்போது விளையும் என்று ஏனோ சொல்லாததால் நிறைய பேர் பிற்பகல் செய்கிறார்கள். எனக்கு அது தோன்றாமல் எல்லாவற்றையும் முற்பகலிலே செய்து பிற்பகலில் அனுபவிப்பது என் வாழ்வின் வாடிக்கை ஆகிவிட்டது.

எல்லாம் கடவுளுக்குத் தெரியும் என்கிறார்கள். கடவுளை விட்டால் யாருக்காவது தெரியுமா என்று கேட்டால் கர்மாவுக்குத் தெரியும் என்கிறார்கள். கர்மா அறியாதது எதுவும் இல்லை. நம் செயல்கள் எதுவுமே அழிவதில்லை. எல்லாவற்றையும் பிறவி வாரியாகக் கர்மா பதிவு செய்து கொள்கிறது என்கிறார்கள். அண்டத்தின் முதல் blockchain கர்மா தான் போலிருக்கிறது. அத்தனை செயல்களின் முனைப்புகளும் பாதிப்புகளும் இந்தக் கர்மா blockchainல் பதிவு செய்யப்படுகின்றன. பிறகு அதிலிருந்து அவரவருகேற்ற மாதிரி கர்மா data mining நடத்தி விளைவுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. எங்கே எது எப்படி இணைகிறது.. எத்தனை விலகல்களில் இணைகிறது.. என்பது கர்மா அல்லது கடவுள் அறிந்த புதிர்.

கடவுளை அவ்வப்போது சந்தித்திருக்கிறேன். அந்தக் சந்திப்புகளினாலேயே கடவுள் இல்லை என்ற எண்ணம் எனக்குப் பலமாகத் தோன்றும். சரி, கலர்சட்டை விவாதம் இங்கே வேண்டாம். 'என்னடா இவன் கமல்ஹாசன் மாதிரி ஒரு தினுசா பேசுறானே?' என்றும் நினைக்க வேண்டாம். பல நேரம் நான் சொல்வது பலருக்கும் புரியும். எனக்கும் கடவுளுக்கும் நேரடி மற்றும் மறைமுக பிணைப்புகள் நிறைய உண்டு. குறிப்பாக பிள்ளையார், ராமர். ஆம். மூஷிக வாகனன். மோதக ஹஸ்தன். ரகுவீரன். ரங்கபுர விகாரன். அவர்களே தான். நிறைய சம்பவங்கள். நிறைய புள்ளிகள். முன்பெல்லாம் புள்ளிகள் தெரியும். இப்போது புள்ளிகள் இணைந்த கோலம் மட்டுமே புலப்படுகிறது. புள்ளிகள் புரிகின்றன. கோலம் இன்னும் புரிந்த பாடில்லை. இந்தக் கதையை எழுதினால் ஒருவேளை எனக்கு விவரம் புரியக்கூடும் என்பதனால் எழுதுகிறேன். எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா.

நான் எழுத ஒரு நியாயம் கற்பிக்க முடியுமே தவிர நீங்கள் படிக்க அல்ல. அதனால் உடனே இந்தக் கதையை விட்டு பக்கத்து பிலாக் போனால் வருந்த மாட்டேன். இந்தக் கதையை இனித் தொடர்ந்து படிப்பதிலும் ஒரு சிறு சங்கடம் இருக்கிறது. கதையா? நிஜமா? என்ற ஐயம் எழலாம் (அய்யம் என்று எழுத வேண்டுமோ?). நிஜம் என்பது நிகழ்வுப் புள்ளிகள் இணைந்த கோலம். கதை என்பதும் அதானே? நிகழ்வுப் புள்ளிகள் கற்பனையில் இருந்தால் என்ன, கண்ணெதிரே நடந்தால் என்ன? கண்ணெதிரே நடப்பதும் இன்னொருவருக்குக் கற்பனையாகலாமே? எனக்கே கூட அந்தச் சந்தேகம் அடிக்கடி தோன்றும். இந்த நிகழ்வுகள் எனக்கு இந்த உலகில் நடக்கிறதா? அல்லது இன்னொரு இணையுலகில் இதே நேரம் நடக்கிறதா? எது கற்பனை? எது நிஜம்? இதுவா, அதுவா? இங்கா அங்கா? இத்தகைய இணையுலகக் குழப்பங்கள் சில நேரம் வழி நடத்திச் செல்கின்றன. சில நேரம் வழி கடத்திச் செல்கின்றன. என்ன நான் சொல்வது?

இந்தக் கதை என் கடவுள் சந்திப்புப் புள்ளிகளைத் தழுவியது. தழுவியது என்றதும் நினைவுக்கு வருகிறது. தப்பித் தவறி இந்தக் கதையை இனித் தொடர்ந்து படிப்பவர்களுள் பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்கள் இருந்தால் ஆங்காங்கே உரசலான விஷயங்கள் தென்படலாம். கவனம். யூட்யூபிலும் இன்னொரு ட்யூபிலும் இல்லாத உரசலா என்று இக்கட்டான எதிர்கேள்வி கேட்டால், கேசவா நாராயணா மாதவா கோவிந்தா விஷ்ணு மதுசூதனா த்ரிவிக்ரமா வாமனா ஸ்ரீதரா ருஷீகேசா பத்மநாபா தாமோதரா, ஏழை நான் என் செய்வேன்? ஊரிலேன். உறவிலேன். உன் பாதமன்றி ஒரு பற்றிலேன்.

புள்ளி.

அவர் பிள்ளையார் ரசிகை. வீட்டில் நூற்றுக்கணக்கில் சிறிதும் பெரிதுமாக விதம் விதமான பிள்ளையார் சிலைகள் வைத்திருப்பார். என் மனைவிக்கு உறவு. அதனாலேயோ என்னவோ அவரை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. கர்வமும் அகங்காரமும் தேவையில்லாத நீள் மூக்கும் கொண்டவர் என்பது என் அபிப்பிராயம்.

திடீரென்று ஒரு நாள் உறவினர் "சாகக் கிடக்கிறார், வந்து பார்க்கச் சொல்கிறார்" என்று என் மனைவி வற்புறுத்தியதால் சென்று பார்த்தேன். அடுத்தவரைப் பேச விடாமல் தானே பேசிக்கொண்டிருப்பவர் இன்று பேசத் திணறுவது எத்தனை முரணான விந்தை என்று எண்ணினாலும் கொஞ்சம் பரிதாபமாக இருந்தது.

என் கைகளைப் பிடித்துக் கொண்டார். பிறகு தன் தலையணையின் கீழிருந்து பிள்ளையார் சிலையொன்றை எடுத்து என் கையில் திணித்தார். வித்தியாசமான குட்டிப் பிள்ளையார். ராமர் போலக் கையில் வில்லேந்திய பிள்ளையார். ராமனுக்கு முன்னால் சிவதனுசை அலட்சியமாக எடுத்தாண்டவர் பிள்ளையார் என்று படித்திருக்கிறேன். பிள்ளையாருக்கு பட்டையாய் திறுநீறு பூசிப் பார்த்திருக்கிறேன், ஆனால் இந்தக் குட்டிச் சிலையின் நெற்றியில் திருமண் காப்பிட்டிருந்தார்கள். நாமம் போலவும் இருந்தது. சூலம் போலவும் இருந்தது. அதிசயம். வில்லேந்திய வைஷ்ணவப் பிள்ளையாரைப் பார்ப்பது இதுவே முதல்.

சிலையைப் பெறத் தயங்கிய என்னை அவர் விடவில்லை. கண்களால் எதோ சொல்ல வந்துத் திணறி விசுக் விசுக் என்று கழுத்தில் நரம்புகள் துடிக்க என் கைகளில் பிள்ளையாரை அழுத்தியபடியே காலமானார்.

திடுக்கிட்டேன். என் கைகளில் ஒருவர் சாவதும் இதுவே முதல். சாகிறவர் நம் வலது கையைப் பிடித்துக் கொண்டு செத்தால் ஆவியாகவோ வேறே வடிவிலோ நம்மைத் தொடர்ந்து வருவார் என்று பம்மல் பூசாரி தணிகாசலம் ஒரு முறை சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது. சட்டென்று பார்த்தேன். என் வலது கையை அவர் வலதுகை பிடித்துக் கொண்டிருந்தது. பதட்டத்துடன் விலக்கிக் கொண்டேன். ஆச்சரியமாக இருந்தது பிணப்பிடியின் வலிமை. வீட்டுக்கு வந்ததும் அவர் கொடுத்த பிள்ளையாரை எங்கேயோ வைத்தேன். அத்தோடு மறந்தும் போனேன்.

புள்ளி.

தற்செயலாகக் கிடைத்த 'நினைத்தது பலிக்கச் செய்யும்' மந்திர தாயத்தை கையில் பிடித்து நண்பர்கள் ஆளுக்கொரு வேண்டுதல் வைத்து மறந்த விஷயம் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். என்றாலும் நடந்தது என்னவோ இது தான்.

மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை என் அப்பா பிள்ளையாருக்கு விசாலமாகப் பூஜை செய்வார். சொத்தெல்லாம் போனபின் வேலை தேடி சென்னை வந்து காசில்லாமல் சென்னை மெரீனா பீச்சில் நடந்த போது யாரோ சாமியார் கொடுத்த சிறிய வெள்ளிப் பிள்ளையார் என்பார். அந்தச் சிலைக்கு சந்தனக் காப்பு சார்த்தி அட்டகாசமாக அலங்கரித்து ஒரு அஷ்டோத்திரப் புத்தகத்தைப் படித்து அர்ச்சனை செய்வார். மற்ற நாட்களில் ஒன்றுக்கும் உருப்படாத என் அப்பா மாதத்தில் இந்த ஒரு பூஜையை மட்டும் பந்தாவாகச் செய்வார்.

மறு நாள் பூஜைக்கு உதிரிப்பூ வாங்கிவரச் சொல்லி காசும் கொடுத்திருந்தார். பம்மல் மலையுச்சியில் தாயத்து விவகாரத்தில் பூ வாங்க மறந்தே விட்டது மட்டுமில்லாமல் காசையும் தொலைத்து விட்டேன். வீட்டுக்கு வரும் பொழுதே நேரமாகி விட்டது. காசு வேறே இல்லை. திரும்பி வரும் பொழுது கோகுலம் காலனியில் மாமாவிடம் ஒரு ரூபாய் கேட்டு வாங்கி வந்து வைத்து விடலாம் என்ற எண்ணத்துடன் சட்டென்று என் அப்பா பர்சிலிருந்து ஒரு ரூபாயைத் திருடிக் கொண்டு ஓடினேன். இரட்டைப் பிள்ளையார் கோவிலருகே இருக்கும் பூக்கடை எல்லாம் அடைத்து விட்டன. என் அப்பாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. முதலில் அடி. அப்புறம் பேச்சு. அடியென்றால் அப்படி ஒரு அடி. அர்த்தமே இல்லாமல் அடிப்பார். இப்போது காரணம் வேறு கிடைத்து விட்டதே? செத்தேன் என்று கிருஷ்ணா நகருக்கு ஓடினேன். பிள்ளையார் கோவில் அருகே பூக்கடை உண்டு. அங்கேயும் மூடிவிட்டார்கள். "பூ இல்லே, பலாப்பழம் கீது, வாங்கிக்கிறியா?" என்றாள் க்ருஷ்ணா நகர்க் கிழவி. இன்றைக்குப் பலிதான் என்று பதறி பிள்ளையாரைப் பார்த்து வேண்டிக்கொண்டே பல்லாவரத்துக்கு ஓடினேன். நல்ல வேளையாகக் கடை அடைக்கவில்லை. "ஒரு ரூபாய்க்கு உதிரிப்பூ குடுங்க" என்று பையில் கை விடுகிறேன்...

திக்கென்றது. கடைக்காரியிடம் நடந்ததைச் சொல்லி அழுது கடன் கேட்டேன். முதலில் முடியாது என்றவள் என்ன தோன்றியதோ ஒரு பெரிய பொட்டலம் நிறையப் பூ வைத்து என்னிடம் கொடுத்து, "போ ராஜா" என்றாள். தெருவின் அசிங்கம் பாராமல் சாஷ்டாங்கமாக அவள் காலில் விழுந்தேன். பூவை வாங்கிக் கொண்டு அழுது கொண்டே திரும்பி ஓடி வந்தேன். நேரமாகி விட்டது. இனி எப்படியும் அடி விழும். திரும்பும் வழியில் பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டேன். 'அப்பனை அடிக்காமல் இருக்கச் சொல்லு, மாமியிடம் கேட்டு தேங்காய் உடைக்கிறேன்'.

கோகுலம் காலனி வந்த போது மாமா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நைசாக மாமியிடம் ஒரு ரூபாய் கேட்டேன். மாமா காதில் விழுந்து விட்டது. "எதுக்குடா ஒரு ரூபாய்?" என்றார். சொன்னேன். "அப்பா வந்திருப்பா மாமா, அவசரமா ஓடணும்" என்றேன். "ரூபாலாம் வேண்டாம். அடிக்க மாட்டான். நடந்ததைச் சொல்லு" என்றார் மாமா. மாமியும் இனி பணம் தர மாட்டார். "இருடா.. சாப்டுட்டு போ. மாமாவை அழைச்சுண்டு போ.. நீங்க போய் சமாதானமா சொல்லிட்டு வாங்கோ.. குழந்தையை அடிக்கிறதாவது.. என்ன ம்ருகம்.. பயந்து போயிருக்கான் பாருங்கோ" என்றார். நான் சாப்பிடவில்லை. மாமாவும் வரவில்லை.

வீட்டுக்கு ஓடினேன். அப்பா குளித்துக் கொண்டிருந்தார். அவசரமாக பூவை பூஜை மேடையில் வைத்தேன். பர்சில் பணம் இல்லாததைப் பார்த்து விசாரணை நடத்தி முடித்திருந்தார் என்று என் தங்கை என்னிடம் விவரமாகச் சொன்னாள். "என்னடா நீ திருடினியா?" என்றாள். சுத்தமாக மறுத்து விடுவது என்று தீர்மானித்திருந்தேன். "சீ சீ" என்றேன். அப்பா குளித்து வந்ததும் முதல் வேலையாக என்னிடம் கேட்டார். "ஏலே.. திருவாழத்தான்.. உளப்பாம சொல்லு.. எடுத்தியா?". "எனக்குத் தெரியவே தெரியாதுப்பா". பிள்ளையார் மேல் சத்தியம் செய்தால் என் அப்பா சற்று தளர்வதைப் பார்த்திருக்கிறேன். "இல்லப்பா.. பிள்ளையார் மேலே சத்தியமா நான் எடுக்கலே.. உன் பர்ஸ் பக்கமே வரலே.. நாள் முழுக்க விளையாடிட்டிருந்தேன்.. அதான் பூ வாங்கவே லேட்டு.. பிள்ளையார் மேலே சத்தியம்பா" என்று ஒரு போடு போட்டேன்.

வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது. என் தங்கை ஓடித் திறந்தாள். மாமி உள்ளே வந்தார். எங்களைப் பார்த்தார்.

"சரியான டயத்துக்கு வந்திருக்கேன். இதோ பாருங்கோ அத்திம்பேர்.. குழந்தை வந்து எல்லாம் சொன்னான்.. தெரியாம எடுத்துட்டான்.. அடிக்காதீங்கோ.." என்று எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னார். என் கன்னத்தைத் தட்டி, "வரட்டுமாடா கண்ணா.. அப்பா அடிக்க மாட்டா சரியா? சாப்டாம ஓடி வந்துட்டியேடா.. டீந்த்ரா.. வரட்டுமாடி.. இவனுக்கு சாதம் போடு.." என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். "குழந்தையை அடிக்காதீங்கோ.. ரூவா தானே.. போய்ட்டுப் போறது.."

என் மாமி கிளம்பியதும் எனக்கு விழுந்த முதல் அறையில் கன்னம் பழுத்துப் போனது. "பிள்ளையார் மேலேயா சத்தியம் பண்றே ப்ளேக்காட்?" எனக்கு விழுந்த இரண்டாவது அறையைப் பார்த்த என் தங்கை நின்றபடி அதிர்ச்சியில் ஒன்றுக்குப் போனாள். பூஜை மேடைப் பிள்ளையாரைப் பார்த்தேன். சிரிப்பது போல் பட்டது. என் அப்பா அடிக்கும் பொழுது என் அம்மா பொதுவாகத் தடுத்ததே இல்லை. அன்றைக்கும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு அடிக்கு மேல் தாங்க முடியவில்லை. பிள்ளையாரைப் பார்த்தேன். என்னைக் கைவிட்டு சிரிப்பு வேறேயா? மீண்டும் தாயத்து நினைவு வந்தது. இந்த முறை உருகி வேண்டிக் கொண்டேன். அப்பா சாக வேண்டும்.

அன்றைக்கு அவரிடம் வாங்கியது தான் கடைசி அடி. அடுத்த மாதம் ஆகஸ்டு 15ம் தேதி இறந்தார். எனக்கும் விடுதலை.

புள்ளி.

<இன்னும் உண்டு> ►► 2




2017/09/28

நோற்றான்



        ன் எதிரே இருந்த இருவரின் பார்வையில் தெரிந்தது என்ன? விடை அ)வெறுப்பு ஆ)கோபம் இ)ஆத்திரம் ஈ)கனிவு - என்ற கேள்வியை என்னிடம் யாராவது கேட்டால் விடை சொல்வது கடினம்.

விடை ஈ)கனிவு அல்ல என்பது மட்டும் நிச்சயம். வெறுப்பு, ஆத்திரம், கோபம், அருவருப்பு, இயலாமை எல்லாம் கலந்த பார்வையை என்னை நோக்கி தாராளமாக வீசினார்கள் இருவரும்.

"எப்படி உங்களுக்கு இது போலக் கேட்கத் தோணுது சார்?" என்றார் இளையவர். அவரை அடக்கிய மூத்த பெண்மணி, "கொஞ்சம் இருங்க ராதிகா, நான் பேசுறேன்" என்று என்னைப் பார்த்தார். "சார்.. தயவு செய்து இங்கருந்து போயிடுங்க.. போய் கோர்ட் ஆர்டரோட வாங்க.. இதுக்கு மேலே உங்களோட பேச எங்களுக்கு விருப்பம் இல்லே".

நான் விடவில்லை. "மேடம்.. எனக்குச் சேரவேண்டியதைக் குடுத்து நீங்க போகச் சொன்னா தாராளமா போயிருவேன்.. ஆனா எனக்குச் சொந்தமானதை நீங்க எடுத்து வச்சுக்கிட்டு தர மறுக்குறீங்க.. கேட்டா சட்டம் பேசுறீங்க.. சட்டமே என் பக்கத்துல இருக்குதுனு ஆதாரத்தோட வந்திருக்கேன்.. அப்பவும் என்னவோ உங்க சொத்தை நான் கேக்குற மாதிரி பேசுறீங்க.. பீ தொடச்ச துணியாட்டம் என்னைப் பாக்குறீங்க.. போவுது.. உங்க பார்வையைப் பத்தியெல்லாம் எனக்கு அக்கறையில்லே.. என் சொத்தை.. எனக்கு உரிமையானதை எங்கிட்ட கொடுத்துடுங்க.. நான் போயிட்டே இருக்கேன்.. இங்க தங்கி உங்க ரெண்டு பேத்தையும் பாத்துட்டு இருக்க எனக்கு மட்டும் முடையா என்ன?"

ராதிகாவுக்கு கோபம் வந்துவிட்டது. "சார்.. நீங்க கிளம்புறீங்களா.. இல்லை போலீசை கூப்பிடவா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசுறீங்களே? நீங்கள்ளாம்.."

"நீங்கள்ளாம் மனுசனானு கேக்கப்போறீங்களா? கேளுங்க. நீங்களும் மனுசன் தான். நானும் மனுசன் தான். என்ன நம்ம நிறம் வேறே அவ்வளவு தான். தகாதது அப்படி என்ன கேட்டுட்டதா கடுப்பாறீங்க. நாலு வருசத்துக்கு முந்தி நீங்க எடுத்துக்கிட்டுப் போன என் பிள்ளையைத் திருப்பிக் குடுங்கனு கேக்குறேன்.. அந்தப் பிள்ளைக்கு அப்பன் நான் தான், எனக்குப் பொறந்தது தான் அந்தப் பிள்ளைனு அத்தாட்சியோட வந்திருக்கேன்.. என் பிள்ளையை எங்கிட்ட குடுங்கனு கேட்டா மனசாட்சி மாங்கா இஞ்சின்றீங்களே?"

"மிஸ்டர்.. நாங்க உங்க பிள்ளையை எடுத்துக்கிட்டமா?" என்றார் மூத்தவர்.

"ஆமாம் மேடம்.. இந்தம்மா தானே சொன்னாங்க.. என் பிள்ளையை போலீஸ் ஸ்டேசன்லந்து கூட்டியாந்து இங்கே வளக்குறதா?"

"ஆமாங்க.. உங்க பிள்ளைக்கு அப்ப ஒரு வயசு கூட ஆவலே.. போலீஸ் ஸ்டேசன் வாசல்ல விட்டுப் போயிட்டீங்க.. அதுவும் ஒரு கை ஊனமான குழந்தை.. கொஞ்சம் கூட இரக்கமில்லாம குழந்தையை விட்டு ஓடிட்டீங்க.. இரக்கம் உள்ள ஆசாமிங்க சிலர் போலீஸ் ஸ்டேசன் வாசல்ல கிடந்த குழந்தையைப் பார்த்துட்டு போலீஸ்ல சொல்லி.. இன்ஸ்பெக்டர் கலெக்டர் வரைக்கும் போய் பிறகு எங்க கிட்டே வளர்ப்பு ஆணையோட ஒப்படைக்கப்பட்ட பிள்ளைக்குழந்தை.. இப்ப உங்களுதுனு உரிமை கொண்டாடிட்டு வரீங்களே?"

"ராதிகாதானம்மா உம் பேரு? நல்ல பேரு.. அழகா பேர் வச்சிருக்கே.. ஆனா ஆத்திரமா பேசுற.. பரவாயில்லே.. ராதிகா.. இதுல பாரும்மா.. நீ ஆணை கீணைனு நாலு வச்சிருந்தாலும் சட்டம் உரிமைனு ரெண்டு இருக்கு பாரு.. அது என் பக்கம். நீ எடுத்து வளக்குறது என்னுடைய குழந்தைன்றதுக்கு மறுக்க முடியாத கோர்ட் ஆதாரங்களைக் காட்டியிருக்கேன்.. பதினெட்டு வயசு வரைக்கும் பெற்றவருக்குத்தான் உரிமை.. நான் என் பிள்ளையை அடிக்கிறேனா கொல்றேனா..? அதுக்கு சாட்சியும் கிடையாது.. என் போறாத வேளை.. பிள்ளை பொறந்து நாலே மாசத்துல பெண்டாட்டி செத்துட்டா.. பச்சைப் பிள்ளையை நான் எப்படி காப்பாத்துவேன்னு நொந்து போயி ரொம்ப வேதனையோட மனசுருகி வேறே வழியில்லாம போலீஸ் ஸ்டேசன் வாசல்ல விட்டுப் போனேன்.. எத்தனை துக்கம் தெரியுமா.." எனக்குத் தொண்டை அடைத்தது.. கண்களில் நீர்.

"ஆமாம்.. கேள்விப்பட்டோம்.. உங்க பெண்டாட்டி தண்ணீல மூழ்கி செத்துட்டாங்களாம்.. கொலையா தற்கொலையானு போலீஸ் முடிவெடுக்க முடியாம கேஸை மூடிட்டாங்கனு சொன்னாரு இன்ஸ்பெக்டர்.. இன்சூரன்சு பணம் கிடைச்ச ஆறு மாசத்துல ஊரை விட்டே ஓடிட்டீங்க.. எல்லா விவரமும் குழந்தை ரெகார்டுல கூட இருக்கு.. போங்க சார்.. இடத்தை காலி பண்ணுங்க.. கோர்ட் ஆர்டரோட வாங்க.. நாங்களும் கோர்ட் போகத் தயாரா இருக்கோம்"

"விளையாடுறியா? அப்போ நான் எதுக்குத் தயார்னு காட்டவா?"

"சார்.. போலீஸை கூப்பிட்டிருக்கேன்.. போலீஸ் வர வரைக்கும் அமைதியா இருங்க" என்றார் மூத்தவர். சுசீலாவோ என்னவோ பெயர். நினைவுக்கு வரவில்லை. எதுவாக இருந்தால் எனக்கு என்ன? கிழம்.. பார்க்கச் சகிக்கவில்லை.

"இதென்னம்மா இது.. என் பிள்ளையை நான் கேட்டா போலீஸ் வரட்டும்ன்றீங்க? போலீஸ் வந்து என்ன புடுங்கிடப் போவுது?"

"மிஸ்டர் மரியாதையில்லாம பேசாதீங்க.. படிச்சவரா இருந்துட்டு"

"இதென்னம்மா அடாவடியா இருக்குதே? பெண்களாச்சேனு பாக்குறேன்.. வாயுல வந்தபடி பேசிருவேன்.. அனாதை ஆசிரமம்னு பேர்ல மத்தவங்க குழந்தைகளை திருடி வச்சுக்கிட்டு காசு பண்ணிட்டிருக்கீங்க.. உங்களுக்கு நான் எந்த விதத்துல குறைஞ்சவன்? என்ன மரியாதை வேண்டிக்கிடக்குது திருட்டு களவானிகளுக்கு? அனாதை ஆசிரமம்னு பேர் வச்சிட்டு ஊரை ஏமாத்துறீங்க ரெண்டு முண்டைகளும்.."

ராதிகா அழத்தொடங்கினார். "சார்.. அப்படியெல்லாம் பேசாதீங்க சார்.. இந்த ஆசிரமம் உயர்ந்த நோக்கம் கொண்டது சார்.. இங்க இருக்குற குழந்தைகள்ல ஒரு குழந்தைக்குக் கூட கண் முழுதும் தெரியாது.. உடல்ல வேறே ஊனம்.. ஆனா யாரும் அநாதை இல்லை சார்.. அநாதை என்கிற வார்த்தையே நாங்க பயன் படுத்துறதில்லே.. இந்த வார்த்தையெல்லாம் இங்க பேசி பிள்ளைங்களுக்கு கத்துக் குடுத்துறாதீங்க.. இந்தக் குழந்தைகளுக்கு நாங்க இருக்கோம்.. இங்க வேலை பாக்குற அத்தனை பேரும்.. எங்க ரெண்டு பேர் உள்பட.. ஒரு நயா பைசா சம்பளம் வாங்கறதில்லே.. கிடைக்கிற அரசாங்க மற்றும் தனியார் உதவி அத்தனையும் பிள்ளைங்களுக்கே போவுது.."

"என்ன சொன்னீங்க? என் பிள்ளைக்குக் கண் தெரியாதா?" என்றேன், வேறெதையும் காதில் வாங்காதது போல. இவர்கள் நயா பைசா சம்பளம் வாங்கினால் எனக்கென்ன.. அனாதைகளை அனாதையெனக் கூப்பிடாவிட்டால் எனக்கென்ன..

"தெரியாத மாதிரி பேசாதீங்க சார்.. உங்க பிள்ளைன்றீங்க..மெடிகல், பர்த் சர்டிபிகெட் எல்லாம் காட்டுனீங்க.. அதுல இரிடோகோர்னியல் டிபெக்ட் போட்டிருக்குதுனு படிக்க முடியலியா? கண் சரியா தெரியாத ஊனக் குழந்தைனு தானே விட்டு ஓடினீங்க? பெண்டாட்டி செத்தது வேறே வசதியாப் போச்சு.. இன்சூரன்சு பணம் கிடைச்சதும் செங்கல்பட்டுல யாரையோ கல்யாணம் கட்டிக்கிட்டு மும்பை ஓடிட்டதா போலீஸ்ல சொன்னாங்க.. இத்தனைக்கும் மேலே இது உங்க பிள்ளையே இல்லனு போலீஸ்லயும் கோர்டுலயும் வக்கீல மூலமா பிராக்ஸி வாக்குமூலம் கொடுத்திருக்கீங்க.. எல்லாம் ரெகார்டுல இருக்கு"

"ராதிகா.. ப்லீஸ்.. வேணாம்.. போலீஸ் வர வரைக்கும் அமைதியா இருப்போம்" என்றார் மூத்தவர். இந்த முகத்தை எத்தனை நேரம் பார்க்க வேண்டுமோ தெரியவில்லையே.. எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா!

"இல்லே மேடம்.. எல்லா அயோக்கியத்தனமும் செஞ்சிட்டு நாலு வருசம் கழிச்சு பிள்ளையைக் கொண்டான்றாரு.. அதுக்கு மேலே நாக்குல நரம்பில்லாம.."

"சரி மேடம்.. மன்னிச்சுருங்க.. நாலு வருசத்துக்கு என்ன செலவு செஞ்சிருக்கீங்க.. அதுக்கு மேலே அம்பதாயிரம் செக் எழுதிக் கொடுத்துடறேன்.. கணக்கை தீர்த்துக்குவோம்.. சரியாப் போச்சா?"

ராதிகா சீறியது அழகாக இருந்தது. "வாட் நான்சென்ஸ்? உங்க பிள்ளை உயிரோட இருக்குறதுக்கு என்ன சார் விலை? செத்தா என்னனு எங்கியோ ரோட்டுல விட்டுட்டு ஓடினீங்க.. இப்ப கணக்கா கேக்குறீங்க? லஞ்சமா கொடுக்கறீங்க.."

"ராதிகா.. ப்லீஸ்.. இதோ போலீஸ் வந்துரும்"

"என்ன்ன்ன்ன்ன்னங்ங்ங்கடி.." என்று எழுந்தேன். எனக்குக் கோபம் வந்துவிட்டால் அடுத்தவர் வேட்டியை உருவிய பின்னரே நிற்பேன். இந்தப் பெண்களை என்ன செய்வது என்று பார்த்தேன். "என்னை என்ன அக்குள் மசிருனு நெனச்சிங்களா? பணிவா கேட்டேன் நயமா கேட்டேன் மசியமாட்றீங்க.. அதுவும் திருட்டுத்தனம் பண்ணி நாடகமாடறீங்க.. இன்னொருத்தர் மகவை திருடி வச்சுகிட்டு ஆசிரமம்னு கூத்தா அடிக்குறீங்க? அஞ்சு எண்றதுக்குள்ற என் பிள்ளையை இங்கே கொண்டுவாங்க.. இல்லின்னா நானே உள்ளாற வந்து ஒண்ணுக்கு ரெண்டா தூக்கிட்டுப் போயிருவேன்.. அஞ்சு எண்ணுவேன்.. புரியுதா?"

எண்ணத் தொடங்கினேன். ஐந்து எண்ணி முடிக்கையில் போலீஸ் வண்டி வந்தது. ஒரு இன்ஸ்பெக்டரும் ஏட்டும் வந்தனர். பெண் இன்ஸ்பெக்டர். போச்சுடா. பெண்ணுரிமைனு நாடு குட்டிச்சுவராயிட்டிருக்குது.

வேறு வழியில்லாமல் பெண் இன்ஸ்பெக்டரிடம் எல்லா விவரமும் சொன்னேன். "இன்ஸ்பெக்டர் மேடம்.. நான் செஞ்சது தவறு தான். பெத்த பிள்ளையை நடுத்தெருவுல அனாதையா விட்டுப் போனது பெரிய பாவம்னு உணர்ந்ததால தான் இப்ப இங்கே வந்திருக்கேன். பழைய வக்கீலை விசாரிசசு.. போலீஸ் ஸ்டேசன்ல விசாரிச்சு.. இந்த இடத்துல இருக்குறதா சொன்னாங்க.. ஆண்டவன் புண்ணியத்துல நல்ல அனாதை ஆசிரமமா கிடைச்சுதேனு சந்தோசம்.. ஆனா பாருங்க.. என் பிள்ளையை எங்கிட்டே ஒப்படைங்க.. என்ன இருந்தாலும் தாய் தகப்பன் மாதிரி வருமா? பிள்ளையக் கொடுங்கனு கேட்டா சட்டம் பேசுறாங்க.. மனசை ரொம்ப நோகடிக்கிறாங்க மேடம்" என்றேன். ஆதாரங்களைக் காட்டினேன். "இது என் பிள்ளைதான்.. பாருங்க. ஏதோ என் போறாத வேளை வாக்குமூலம் கொடுத்தேன்.. இப்ப அதை சாக்கா வச்சுக்கிட்டு என்னை ஏமாத்தப் பாக்குறாங்க"

ராதிகா குறுக்கிட்டு ஆசிரம ஆதாரங்களைக் காட்டினார். "இன்ஸ்பெக்டர்.. இவர் நல்லவரில்லே.. இந்தக் குழந்தையை மும்பைல வித்துப் பணம் செய்ய வந்திருக்காருனு எனக்கு நம்பத்தகுந்த தகவல் இருக்கு.. ப்லீஸ்.. இவரை இந்த இடத்துலந்து விலகச் சொல்லுங்க.. பிள்ளையை தர முடியாதுனு சொல்லிடுங்க"

இன்ஸ்பெக்டர் எல்லா ஆவணங்களையும் பார்த்தார். ராதிகாவைப் பார்த்து "மேடம்.. தேவையில்லாம வதந்தி பொய் பிரசாரங்களை நம்பாதிங்க.. உண்மையான தகப்பன் உணர்வோட இவரு இங்க வந்திருக்காரா இல்லையானு இவருக்கு மட்டும் தான் தெரியும்.. தகவல்களை நம்பி நாம எந்த முடிவும் எடுக்க முடியாது" என்றவர், என்னிடம் "மிஸ்டர்.. இது உங்க பிள்ளையா இருக்கலாம்.. ஆனா சட்டப்படி இவங்க வளக்கலாம்னு கோர்ட் சொல்லியிருக்குது. அதையும் மதிக்கணும்" என்றார்.

"அதெப்படி? என் பிள்ளையை இவங்க எதுக்கு வளக்கணும்? நான் வக்கீல் கோர்ட்னு போய் லட்சம் செலவானாலும் கேஸ் போடுவேன்"

"எத்தனை செலவழிப்பிங்களோ உங்க விருப்பம்.. கோர்ட் ஆர்டர் வாங்கிட்டு வந்து பிள்ளையைத் தாராளமா கூட்டிப் போங்க.. நானே வந்து உதவி செய்யுறேன்.. இப்ப கிளம்புங்க.. கலாட்டா செய்யாதிங்க"

"கலாட்டா இல்லிங்க.. இவங்க தான் தாறுமாறா பேசுறாங்க.. என் பிள்ளையைக் குடுத்துட்டா நான் போயிருவேன்.. இன்ஸ்பெக்டர் நீங்க வந்து நியாயம் காட்டுவிங்கனு பார்த்தா.. என்னவோ என்னை நெருக்குறீங்க.. இவங்க செலவை நான் குடுத்துடறேன் இன்ஸ்பெக்டர்.. அதுக்கு மேலே இவங்க செய்யுற இந்த நல்ல காரியத்துக்கு நன்கொடையா ஒரு லட்சம் வேணும்னாலும்.."

"சார்.. கிளம்புங்க" என்றார் இன்ஸ்பெக்டர் என்னைத் தள்ளாத குறையாக. ஏட்டை அழைத்து ஜீப்பை ஸ்டேசனுக்கு ஓட்டிவரச் சொன்னார். என் வாடகைக் காரில் என்னுடன் ஏறிக்கொண்டு பயணம் செய்தார். போலீஸ் ஸ்டேசன் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி என்னிடம் "சார்.. கோர்ட் ஆர்டர் வாங்கிட்டு என்னை வந்து பாருங்க.. இதே போலிஸ் ஸ்டேசன்ல தான் இருப்பேன்.. கோர்ட் உத்தரவும் போலீஸ் துணையும் இல்லாம ஆசிரமம் பக்கம் போவாதிங்க.. புரியுதா?" என்றபடி இறங்கிக் கொண்டார்.

வண்டியைக் கிளப்பச் சொன்னேன். அழுது மிரட்டி பிள்ளையை வாங்கிவிடலாம் என்று வந்தால்.. இந்தத் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. முதல் பெண்டாட்டி சாவு போல சுலபமாக முடியாது போலிருக்கிறதே? மும்பைக்காரனிடம் பேரம் பேசியது அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரிந்தது? சும்மா கிளப்பி விட்டாளா? என்னைப் போல் ஆசாமிகளைப் பார்த்திருக்கிறாள். விவரம் தெரிந்த பெண்ணாக இருக்கிறாள். குருட்டு ஊனப் பிள்ளைக்கு ஐந்து லட்சம் வரை தருவதாகச் சொல்லியிருந்தான் மும்பை புரோக்கர். முழுக்குருடாக இல்லாவிட்டால் நல்லது தான்.. வேறு ஏதாவது பாலியல் அடிமை வேலைக்கும் வைத்துக் கொள்வார்கள்.. ஒன்றுக்கும் உதவாத பிள்ளையைப் பெற்றதற்கு ஐந்து லட்சம் நல்ல லாபம் என்று நினைத்திருந்தேன். பிள்ளை கைக்கு வந்தால் அவனைக் காட்டி புரோக்கரிடம் கொஞ்சம் அதிகமாகவே கறந்து விடலாம்.. ம்ம்ம்... வேலை வைத்துவிட்டாள் ராதிகா. அவளைப் பிறகு கவனிக்கலாம். இப்போதைக்கு இந்தப் பிள்ளையைப் பிடுங்கி ஐந்து ல பார்க்கவேண்டும். கோர்ட்டுக்கு போனால் ஜெயித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. என்னுடைய பழைய வக்கீலும் அதைத்தான் சொல்லியிருந்தார். டிஎன்ஏ சோதனை என்று பணம் பிடுங்காமல் இருந்தால் சரி.

எப்படியிருந்தாலும் கேஸ் முடிகிற வரையில் பொறுப்புள்ள தகப்பனாக நடக்க வேண்டும். வக்கீல் செலவுக்கு எத்தனை ஆகும் என்று யோசிக்கத் தொடங்கினேன்.

2017/07/21

வந்தவள்



        ப்போதெல்லாம் இரவில் தூக்கம் சரியாக வருவதில்லை தவறி வந்தாலும் மூன்றரை மணிக்கே விழிப்பு வந்துவிடுகிறது. உதவியில்லாமல் படுக்கையை விட்டு எழுந்து நடமாடக்கூடாது என்று விதியிருப்பதால் படுத்திருப்பேன். ராம ராம என்று ஏதாவது சொல்வேன். சரியாக ஆறு மணிக்குச் செவிலிப்பெண் வந்து எழுப்புவது போல் எழுப்பி, நான் காலைக்கடன் முடிக்க உதவி செய்து, சிறிய டம்ளரில் சொட்டுப் பால் கலந்து சர்க்கரையில்லாத காபி கொடுப்பாள். இரண்டு பிரிட்டானியா பிஸ்கெட் கொடுத்து என்னை சாய்நாற்காலியில் உட்காரவைத்துப் போவாள். சில நேரம் பெரிய எழுத்து பாகவதம் படிப்பேன். கண்ணன் கதைகள் பிடிக்கும். அலமாரியில் வரிசையாக இருக்கும் மெடல்களைப் பார்ப்பேன்.. என் நேர்மைக்கும் திறமைக்கும் கிடைத்த பரிசுகள்.. சில நேரம் ஆல்பத்தைப் புரட்டிப் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் படங்களையோ அவர்களனுப்பிய கடிதங்களையோ பார்ப்பேன். படிக்க முடிவதில்லை. பல நேரம் கண்மூடியிருப்பேன். அன்றைக்கும் அப்படியே.

சலசலப்பு கேட்டு விழித்தேன்.

விழித்தேன் என்பது சரியான சொல்லா தெரியவில்லை. கண் திறந்தேன் எனலாமா? அப்படித்தான் வைத்துக் கொள்ளவேண்டும். விழிப்பது புறச் செய்கையெனில் நான் தூங்கினால் தானே விழிப்பதற்கு? அகத்தைப் பற்றியதெனில் விழிப்பதற்கான வாய்ப்பே இல்லை. மூன்று வருடங்கள் முன்பு தூங்கிய அகம் இனி விழிக்கப் போவதில்லை.

வெளியே சலசலப்பு பெரிதாகக் கேட்டது. அவளாகவே இருக்க வேண்டும். யாருக்கு அதிர்ஷ்டமோ? இன்றைக்கு என்னைப் பார்க்க வந்தால் நன்றாக இருக்குமே என்று உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில்…. சரி வரும் போது வரட்டும்… என்று நினைக்கும் போதே அறைக்கதவைத் தட்டும் ஓசை. தொடர்ந்து உள்ளே வந்தாள். அவள்தான்.

பதினைந்து பதினாறு வயதிருக்குமா? தினமும் பதினாறாகவே இருக்கிறாளே? இன்றைக்குப் பாவாடை தாவணி அணிந்திருந்தாள். குழந்தைத்தனமும் விலகாமல் குமரித்தனமும் பரவாமல் ஒருவிதக் குதூகலமான முகம். வெகுளியும் விவேகமும் கலந்த அறிவார்ந்த முகம். நெற்றியில் கருங்கீற்று. அதன் கீழே சிறிய குங்குமப் பொட்டு. கருணைக் கடலாய் கண்கள். கழுத்தில் ஒரு கண்ணாடி மாலை. இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையல்கள். ஒரு கையில் சிறிய துணிப்பை. பளிச்சென்று இருந்தாள். பார்வைக்குப் பரவசம் தந்தாள். ஆறேழு மாதங்களாக அவ்வப்போது வருகிறாள். எப்போது வந்தாலும் அதே தோற்றம். அதே முகம். அதே பரவசம்.

“தாத்தா” என்று ஓடிவந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். “எப்படி இருக்கீங்க தாத்தா? இந்தாங்க உங்களுக்காக..” என்று தன் பையிலிருந்து ஒரு பிடி பவழமல்லிப் பூக்களை எடுத்துத் தந்தாள். “பாவாடை தாவணி உங்களுக்காகக் கட்டிக்கிட்டேன். அழகா இருக்கா? பவளமல்லியும் உங்களுக்குத்தான் தாத்தா.. இன்னிக்கு உங்க பிறந்த நாள் இல்லியா? வாழ்த்துக்கள் தாத்தா”

“சந்தோஷம்”. புன்னகைத்தேன். “நாளைக்கு வருவியா?” என்ற என் கேள்விப் பார்வையைப் புரிந்துகொண்டவள் போல் “அவசியம் இருந்தா வருவேன் தாத்தா..” என்ற வழக்கமான பதிலைச் சொல்லிக் கிளம்பி மறைந்து விட்டாள்.

ஆல்பத்தைப் புரட்டி மகன் பேரன் பேத்தி படங்கள் சிலவற்றைப் பார்த்தேன். பிறகு கண்களை மூடி பவழமல்லிப் பூக்களை என் முகத்தில் அப்படியே கவிழ்த்துக் கொண்டேன். மணம் மனத்தை இழுத்தது.

        ன் மனைவி பூரணியின் எழுபதாவது பிறந்தநாள். பூரணி என் உயிர். என் அகம். என் எல்லாம். எங்களுக்கு ஆறு பிள்ளைகள். முதல் ஐந்தும் வரிசையாக ஆண், கடைசியில் ஒரு பெண். எல்லாரையும் வளர்த்து, படிக்க வைத்து முன்னேற்றப் பாதையில் வழியனுப்பிவிட்டு என்னுடய ஹைகோர்ட் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று ராஜா அண்ணாமலை புரத்தில் இருந்த என் குடும்ப வீட்டில் என் மூன்றாவது மகன் குடும்பத்துடன் இருந்தோம். அங்கேதான் விழா. சிகாகோ, லசான், துபாய், டோக்கியோ, மும்பையிலிருந்து எங்கள் மற்றப் பிள்ளைகளும் குடும்பத்துடன் வந்து ஆச்சரியப்படுத்தினார்கள். பூரணி பிறந்த நாளுக்கு ஹோமம், அன்னதானம், துணிதானம் என்று அமர்க்களப்படுத்தியிருந்தார்கள்.

மறுநாள் காலை சிற்றுண்டி முடித்ததும் பேரக்குழந்தைகள் அனைவரும் மருமகனுடன் வெளியே பிக்னிக் கிளம்பினார்கள். மருமகள் ஐவரும் அதிகாலையிலேயே மொத்தமாக வெளியே கிளம்பியிருந்தார்கள். மகன் ஐவரும் மகளும் நாங்களும் மட்டும் இருந்தோம். “அப்பா அம்மா.. உங்களுட பேசணும்" என்றார்கள்.

மூன்றாவது மகன் தொடங்கிவைத்தான். “அப்பா.. அம்மா.. நீங்க ரெண்டு பேருமே நல்ல வாழ்க்கை வாழ்ந்தீங்க.. எங்களுக்கும் வழி செஞ்சீங்க.. இனி அடுத்த நிலையைப் பத்தி யோசிக்க வேண்டாமா.. அப்பா.. உங்களுக்கு எழுவத்தெட்டு வயசாகுது.. அம்மாவுக்கு எழுபதாயிடுச்சு.. எனக்கும் என் மனைவிக்கும் இருக்குற வேலை குழந்தை வளர்ப்பு சமூக ஈடுபாடுகள்ல உங்களைக் கவனிக்க முடியலே.. குழந்தைகளுக்கும் நீங்க கொஞ்சம் பழைய நடத்தைகளைக் காட்டுறது என் மனைவிக்குப் பிடிக்கலேபா.. எனக்கும் கஷ்டமா இருக்கு”.

“வீடு வேறே பழசாயிடுச்சுப்பா..” என்றான் இரண்டாமவன்.

“டேய்.. இது எங்க தாத்தா காலத்து வீடுரா”

“அதனாலதாம்பா..” என்றான் முதல்வன். “இதுல எங்களுக்கும் பங்கு இருக்குல்ல?”

“என்ன சொல்றே?” என்றாள் பூரணி.

“அம்மா. நீ கொஞ்சம் சும்மா இரும்மா” என்று அடக்கினாள் மகள்.

“உங்க ரெண்டு பேரையும் முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டா எல்லாருக்குமே வசதியா இருக்கும்னு தோணுதுபா” – இது நான்காவது மகன்.

“அதனாலதான் எல்லாரும் சேர்ந்து பேசலாம்னு ஒண்ணா வந்தோம்.. அம்மாவோட எழுபதாவது பொறந்த நாளையும் தவறவிடாம வந்துட்டோம்” கடைசி மகன்.

“ஆமாம்பா.. இந்த வீட்டை இடிச்சு ஆறு பேரும் ஜேவி போட்டு பனிரெண்டு ப்ளாட் கட்டுறதா திட்டம்.. ஜனாவே ஏற்பாடு செய்துடுவான்..” என்றான் மூத்தவன். ஜனா என் மூன்றாவது மகன். நகரின் மிகப்பிரபல கட்டிட நிறுவனம் ஒன்றின் முதலாளி. எங்களுடன் தினம் வாழ்ந்து வருபவன். “நாங்க ஆளுக்கு ஒரு ப்ளாட் எடுத்துக்குறோம். மிச்ச பிளாட்டை வித்து பணத்துலந்து ஒரு நல்ல முதியோர் இல்லத்துல வைப்புத்தொகை கட்டி உங்க ரெண்டுபேரையும் ஆயுசுக்கும் பாத்துக்கும்படி செய்துடறோம்.. மீதிப் பணத்துல உங்க பேரக் குழந்தைகளுக்கு ஒரு டிரஸ்ட் உருவாக்கிடறோம்”. அடப்பாவிகளா.. இதற்குத்தான் ஒன்றாக வந்தீர்களா எல்லாரும்?

“ஏண்டா.. எங்களை கவனிக்க கஷ்டமா இருக்குதா?” பூரணி மறித்தாள்.

“அம்மா.. சும்மா இருக்கியா? உங்க நனமைக்குத்தான் சொல்றோம். உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுனு வை, அவசரத்துக்கு நாங்க யாருமே இல்லியேமா? முதியோர் இல்லத்துல நல்லா கவனிப்பாங்க.. நாங்க யாராவது அப்பப்ப வந்து பார்ப்போம். உங்களுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டோம். பெத்தவங்க இல்லியா?” ஏறக்குறைய முடித்து வைத்தாள், என் செல்ல மகள். “என்னப்பா சொல்றீங்க?”

நான் என்ன சொன்னேன் என்று நினைவில்லை. அவர்கள் என்ன பேசினார்கள் என்று நினைவில்லை. எதிலெதிலோ கையொப்பமிட்டேன். ஒரு வருடத்துக்குள் இங்கே பவானி பக்கம் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு எங்களுடன் சில நாட்கள் தங்கினார்கள். பிரிந்தார்கள்.

        து நடந்தது பதினொரு வருடங்களுக்கு முன்பு.

எனக்கு இன்றைக்கு தொண்ணூறாவது பிறந்த நாள். பூரணி இருந்தால் ஏதாவது செய்வாள். இனிப்பு ஆகாது என்பதால் கொஞ்சம் தேன் எடுத்து என் நாவில் தடவி முத்தம் தருவாள். என் கைகளைப் பிடித்துக் கொண்டே ஏதாவது சினிமா பாட்டு பாடுவாள். எனக்கு சினிமாப் பாடல்கள் தான் பிடிக்கும்.

பூரணி இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் அதிகாலையில் பூரணி பூரணி என்கிறேன்…

என் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் யாரும் வரவில்லை. அவர்களுக்கு என்ன முடக்கமோ வேலையோ.. பாவம். ஒரு மாதம் பொறுத்து ஜனா வந்து பூரணிக்கான வைப்புப் பணத்தை வாங்கிக் கொண்டு போனான். “உனக்கு ஏதும் வேணுமாப்பா?” என்றான்.

அகம் தூங்கியது என்றேனே, அன்றைக்குத் தூங்கியது இனி விழிக்காது. மூன்று வருடங்களாக நானும் என் நலிந்து வரும் உடலும் மனமும் எதற்காகவோ காத்திருக்கிறோம். அவ்வப்போது செவிலிப்பெண் அக்கம்பக்கத்து முதியோர் பற்றிச் சொல்வாள். அனேகமாக எல்லார் கதையும் இப்படித்தான் போலிருக்கிறது.

சென்ற இரண்டு வருடங்களாகவே நான் வெளியே போவதில்லை. அனுமதியில்லை. எலும்புச் சேதம் என்கிறார்கள். அல்சைமர்ஸ் என்கிறார்கள். மயொபிஜியா பராக்சிஸ்மாலிஸ் என்கிறார்கள். பொடேசியப் பற்றாக்குறை என்கிறார்கள். என்னைப் பார்க்கவும் யாரும் வருவதில்லை. ஆக, அறைவாசம் சிறைவாசம்.

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு இரவு மிக அழுதேன். உடல்வலியை மிஞ்சும் மனவலி. மனவலியை மிஞ்சும் இயலாமை. இயலாமையை மிஞ்சும் உயிர்ப்பிடிப்பு. எத்தனை நேரம் அழுதேனோ?

மறு நாள் காலையில் திடீரென்று அறைக்கதவைத் தட்டி அவள் வந்தாள். முதல் முறை. “தாத்தா.. இந்தாங்க பிடிங்க” என்று ஒரு கை மல்லிகை மொட்டுக்களைத் தந்தாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் அப்படி ஒரு களை முகத்தில். “யாரம்மா நீ?” என்று கேட்பதற்குள் கிளம்பிவிட்டாள்.

அதற்குப் பிறகு வந்தபோதெல்லாம் என் கைகளைப் பிடித்துக் கொள்வாள். இல்லையெனில் நெற்றியை வருடி விடுவாள். ஒரு பிடி உதிரி மலர் ஏதாவது கொடுத்து விலகுவாள். “நாளைக்கு வருவியா?” என்றால் சிரித்தபடி “அவசியம் இருந்தால் வரேன் தாத்தா..” என்பாள்.

ஒரு முறை செவிலியிடம் கேட்டேன் அவளைப் பற்றி. “என்னவோ அய்யா.. எங்க கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குதே அந்தப் பொண்ணு?” என்று சிரித்தாள்.

“மாயப் பொண்ணா?”

“இல்லே ஐயா.. நான் வரப்ப அந்தப் பொண்ணு வரலேனு சொல்றேன்.. அக்கம்பக்கம் அந்தப் பொண்ணு வரான்னு சொல்றாங்க. நான் பார்த்ததே இல்லை. அதான்”.

"என்ன செய்யுது அந்தப் பொண்ணு மத்தவங்க கிட்டே?"

"என்னய்யா பொறாமையா?" சிரித்தாள் செவிலி. "உங்களைப்போலத்தான் ஐயா. யாரும் இல்லாதவங்க கிட்டே வந்து பேசுது. ஆறுதலா சிரிக்குது. ஏதோ பூவோ பழமோ குங்குமமோ தருதாம் சிலருக்கு.. கேள்விதான்.. நான் கண்டதில்லே.. ஆனா அந்தப் பொண்ணு வந்து போனா சந்தோசமா இருக்குதுனு சொல்றாங்க.. உண்மை தானே ஐயா.. நான் இங்க கூலிக்கு வேலை பாக்குறேன்னு இருந்தாலும் உங்க முதிய மனசுங்களோட வலி புரியுது ஐயா.. உங்களுக்கு எத்தினி ஆறு புள்ளைங்களா.. உங்க விருந்தாளி ரெஜிஸ்டர்ல அஞ்சு வருசத்துல ஒரே முறை பதிவாயிருக்கு அதும் அம்மா காணாத போன பிறகு.. பன்னீர் செல்வம் அய்யா பாருங்க.. மகன் எம்எல்எ மந்திரி ஆனா ஊழல் செய்யுறது பிடிக்கலேன்னு இங்க வந்து உக்காந்திருக்காரு.. ராகவனய்யா ஒரே பையனை பறிகொடுத்துட்டு.. ராமநாதன் சாருக்கு ரெண்டு பசங்க.. ரெண்டாமவனுக்கு கல்யாணம் கட்டின ஒரு மாசத்துல இங்க அனுப்பிட்டாங்க.. காலம் மாறிட்டு வருதே? இப்படி இங்க வந்த நாதியில்லாத மன்னிச்சுக்குங்க ஐயா வயசானவங்களை அப்பப்ப வந்து விசாரிச்சுட்டுப் போகவும் நல்ல மனசு வேணும்.. அந்தப் பொண்ணு நல்லாருக்கட்டும்".

        செவிலி சமீபமாக இல்லத்தில் முதியவர்கள் ‘காணாமல்’ போய்விடுவதாக அடிக்கடி சொல்லி வருகிறாள். “காணாம போறாங்களா?” என்று நான் அதிர்ந்தால் சிரிப்பாள். “இடக்கரடக்கல் ஐயா. கண் காணாத இடத்துக்கு போயிட்டாங்க”.

என் பூரணியும் காணாமல் போய் மூன்று வருடங்களாகின்றன. எனக்கும் காணாமல் போகும் துடிப்பு இருந்துகொண்டே...
ஏனோ அவளைப் பார்க்கும்பொழுது மட்டும் துடிப்பு சற்று அடங்குவது போல..

பார்த்திருந்தாலும் அவள் பெயரைத் தெரிந்து கொண்டதேயில்லை. ஏனோ கேட்கும் நினைப்பும் வரவில்லை. அவளைப் பார்ப்பதில் கிட்டும் குறுநேரப் பரவசத்தில் எல்லாமே மறந்துவிடும். அடுத்த முறை கேட்கவேண்டும்.

அடுத்த சில நாட்களுக்கு அவள் வரவில்லை. வாரங்களாகவும் இருக்கலாம். நேற்று முன்தினம் ராகவன் காணாது போனதாகச் செவிலி சொன்னாள். ராகவன் எங்களுக்கு ஐந்து வருடங்கள் பின்னால் வந்தவர். இன்று காலை பிஸ்கெட் தின்றுகொண்டே பன்னீர்செல்வம் காணாது போய்விட்டதாகச் சொன்னாள். வலித்தது. கண்களில் லேசாக நீர் திரையிடுவது தெரிந்தாலும் உணரமுடியாதது முரணாக இருந்தது. இன்று அந்தப் பெண் வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.

வந்தாள். வந்த போது நான் கண் மூடியிருந்தேன். "தாத்தா" என்ற குதூகலக் குரல் கேட்டுக் கண் திறந்தேன். என் முன் நின்றாள். அதே பரவசமூட்டும் முகம். புன்னகைக்க முயன்றேன். என் கை விரல்களை மிக மிக மென்மையாகப் பிடித்தாள். "ரொம்ப முடியலியா தாத்தா?" என்றபடி என் நெற்றியைத் தடவினாள்.

"என்ன கொஞ்ச நாளா வரலே?"

"வந்தேனே தாத்தா? நீங்க கண்மூடியிருந்தீங்க.. பார்த்துட்டு போயிட்டேன்.. ஆனா இன்னிக்கு உங்க கண் திறந்து உங்களைப் பாத்து பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்.." என்று இனிமையாகப் பேசினாள்.

"நாளை வருவியா?"

"அவசியம் இருந்தா வருவேன் தாத்தா"

"அவசியம் உண்டா இல்லியானு எப்படி தெரியும்?"

மென்மையாகச் சிரித்தாள். "எனக்கு எல்லாம் தெரியும்" என்றபடி என் கைகளை விடுவித்தாள். "பயப்படாதீங்க தாத்தா". கிளம்பினாள்.

"ஏய்.. இரு.. இரு.." என்றேன்.

"என்ன தாத்தா?"

"கோவிலுக்குப் போவியா?"

ஆச்சரியத்தோடு பார்த்தாள். "ஏன் கேக்குறீங்க?"

"இந்தா" என்று என் ஆல்பத்தைக் கொடுத்தேன்.

"என்ன இது தாத்தா?"

"என் சந்ததி படங்கள்.. எனக்குத் தேவையில்லை.. ஏன் பிடிச்சு வச்சிட்டிருந்தேனோ.. அவங்க நல்லா இருக்கணும்னு அம்மன் கிட்டே நீ எனக்காக வேண்டிக்கிட்டு அங்கயே வச்சுடு.. அதோ அந்த பெட்டிக்குள்ள நிறைய காசும் பணமும் இருக்கு.. எடுத்து அர்ச்சனைக்குப் போக உண்டியல்ல போட்டுரு.. அந்த அலமாரியில என்னுடைய புத்தகங்கள்.. வந்தப்ப கொண்டு வந்தது.. யாருக்காவது கொடுத்துடு.. ஏன் இன்னும் இதையெல்லாம் பிடிச்சிட்டிருக்கேனோ.. இன்னொரு உதவி செய். அப்புறம்.. அதோ அந்த மெடல்கள்.. அப்புறம்.. அந்தப் பெட்டிய.. அதான்.. எடுத்துவா"

வந்தாள்.

"அம்மா.. நீ யாரோ எனக்குத் தெரியாது.. ஆனா நான் சோர்ந்த நேரத்திலெல்லாம் வந்திருக்கே.. எனக்கு இனம் புரியாத பிடிப்பைப் கொடுத்திருக்கே.. அதுக்கு நன்றினு நினைக்காதே.. இந்த மெடல்கள் அசல் தங்கம்.. என் திறமையே அவன் போட்ட பிச்சைனு மறந்துட்டு தங்க மெடல் கிடல்னு பிடிச்சிட்டிருந்தேன் பாரு.. இந்த பெட்டியில என் மனைவியோட நகைகள் இருக்கு.. மெடல்.. நகை.. இதை அத்தனையும் நீ எடுத்துக்க"

அவள் மறுக்கவில்லை. என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "வேறே ஏதாவது தாத்தா..?"

"ஆமாம்.. கேட்கணும்னு இருந்தேன்.. இங்க வா.. எல்லாம் தெரிஞ்ச பெண்ணே.. உன் பேரென்னம்மா?"

"என் பேரு ஈஸ்வரி" என் முகத்தருகே நெருங்கி "எனக்கு மெய்யாவே எல்லாம் தெரியும் தாத்தா" என்றாள்.
■ ■


குறிப்பு [-]

இக்கதையின் கரு, ரே ப்ரேட்பரி எழுதியதாக நம்பப்படும் "The dog in the red bandana" எனும் சிறுகதை. 'காணாமல்' போவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு ரே எழுதியதாகச் சொல்கிறார்கள். ஐம்பது சதவிகிதம் சாத்தியம் என்பேன். குறைந்த பட்சம் முடிவையாவது யாரோ மாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கதை வெளியாகவில்லை எனினும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கம் போல் அசைபோட்டுத் தமிழில் தழுவியதில் ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

இன்னும் சில ப்ரேட்பரி கதைகள், என் எழுத்தில்:
கொலகார பேஷன்ட் | (The Murderer)
ஆஸ்மா கிணறு | (The one who waits)
சிவப்பு வட்டம் | (The last night of the world)
பரணறையில் நன்னாரி மணம் | (A scent of sarasparilla)
மனதிற்கினிய மேரி டீச்சர் | (A story of love)
மகிழ்ச்சி எந்திரம் | (The happiness machine)




2017/07/14

கொலகார பேஷன்ட்



        “டாக்டர் குரு, உங்கள் நாலு மணி பேஷன்ட் தயார். பாதுகாப்பு அறை ஏழு, புது பேஷன்ட். கைதி. மேலாய்வுக்காக டாக்டர் ஸ்னேகா வித்யுத் அனுப்பி வைத்தார்” என்று ப்லூடூத் ஹெட்செட்டில் வந்த தேன்குரல் கேட்டு “ஓகே” என்றான். கணினியில் தெரிந்த விவரங்களைப் படித்தான். இரண்டு அவசர உதவி வாக்கி டாக்கி ரேடியோக்களை எடுத்துக் கொண்டான். ஒன்றை இடது கால் சாக்ஸில் மறைவாகப் பொருத்திக் கொண்டான். மற்றொன்றை கோட் பாகெட்டில் போட்டுக் கொண்டான். ஐபேடை கணினி முன் நீட்ட பேஷன்ட் விவரங்கள் தானாகவே நகலாகின. ஐபேடை பார்த்தபடி பாதுகாப்பு அறை ஏழுக்கு நடந்தான். பேஷன்ட் பெயர் பாதித்தது.

அறைக்குள் நுழையுமுன் பாதுகாப்பு ரேடியோக்களை இயக்கிக் கொண்டான். அறைக்குள் நுழைந்ததும் கதவு தானாகப் பூட்டிக்கொண்டது.

நீண்ட மேஜையின் எதிரெதிரே இரண்டு வசதியான சாய்வு நாற்காலிகள். ஒரு நாற்காலியில் ஒருவன் அமர்ந்திருந்தான். நாற்பது வயதிருக்கும். கைகள் கட்டப்பட்டிருந்தன. மறு நாற்காலிக்குச் சென்ற குரு மனம் மாறி ஆளிருந்த நாற்காலியருகே வந்தான். கோட்டிலிருந்த ரேடியோ, ஐபேட் இரண்டையும் மேஜை மேல் வைத்தான்.

லேசானப் புன்னகையுடன் பேஷன்ட் கைக் கட்டை அவிழ்த்தான். “என் பெயர் டாக்டர் குரு” என்றான். “நீங்க?”

“என் பெயர் கொலகாரன்”

“பார்த்தேன். உங்க நிஜப்பெயரா?”

“கொல செய்யுறவன் கொலகாரன் தானே? நாம எல்லாருமே கொலகாரங்க தான். இனி உங்களையும் கொலகாரன்னே கூப்பிடவா?”

“டாக்டர் குருனே கூப்பிடுங்க…. மிஸ்டர் கொலகாரன்” தயங்கினான் குரு.

“சரி” என்ற பேஷன்ட் சட்டென்று எழுந்து மேஜையிலிருந்த ஐபேடை எடுத்து சிதறு தேங்காய் போல் தரையில் ஓங்கி அடித்தான். சுக்கு நூறான ஐபேடைப் பார்த்துச் சிரித்தான். மேஜை மேலிருந்த ரேடியோவைப் பற்களால் கடித்துக் குதறி சின்னாபின்னமாக்கித் துப்பினான். நாற்காலியில் நிதானமாக அமர்ந்தான்.

திடுக்கிட்ட குரு மெள்ள சுதாரித்தான். எதிர்புறமிருந்த நாற்காலியைப் பலத்த ஒலியுடன் பேஷன்ட் அருகே இழுத்து வந்து உட்கார்ந்தான். “நீங்க உடைச்ச ஐபேடும் ரேடியோவும் எழுவத்தஞ்சாயிரம் ரூபாய்” என்றான்.

“சட்டி சுட்டதடா கை விட்டதடா” என்று உரக்கப் பாடினான் பேஷன்ட்.

கோட் பாகெட்டிலிருந்த குறிப்பேட்டையும் பென்சிலையும் எடுத்தான் குரு. “மன்னிச்சுக்குங்க.. மிஸ்டர் கொலகாரன்… உங்களுக்கு இந்த மாதிரி கருவிகள் எந்திரங்கள் பிடிக்காதுனு மறந்துடுச்சு..” என்றான். புன்னகைத்தான். “போன வெள்ளிக்கிழமை கைது ஆயிருக்கீங்க. டாக்டர் வித்யுத் உங்களை மேற்பரிசோதனைக்காக எங்கிட்டே அனுப்பியிருக்காங்க”

“தெரியும் தெரியும் விஷயம் தெரியும் காலம் வந்தால்..” பாடினான் பேஷன்ட்.

“நல்லாருக்கு. அந்தக்காலத்து சினிமா பாட்டா?” தொடர்ந்தான் குரு. “நான் உங்களுக்கு உதவி செய்ய முடியும்னு நம்பறேன். உங்க மனசிலிருக்குறதை தைரியமா சொல்லுங்க.. என் கிட்டே சொல்லுற எதுவும் உங்களுக்கு எதிரா கோர்ட்டுலயோ பொதுவிலயோ சாட்சியமா பயன்படாது. தைரியமா எதுவானாலும் சொல்லுங்க”

“தைரியமா எதுவானாலும் கேளுங்க” என்றான் பேஷன்ட். “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே..” பாடினான்.

“மிஸ்டர் கொலகாரன்… போன வெள்ளிக்கிழமை மட்டும் அறுபது செல்போனை உடைச்சிருக்கீங்க, முப்பது டிவி உடைச்சிருக்கீங்க, நூறு லேப்டாப்களை அடிச்சு நொறுக்கியிருக்கீங்க.. பதினேழு எக்ஸ்பாக்ஸ்.. முப்பது ப்லேஸ்டேஷன்.. இருநூறு ஹெட்செட்டைப் பிடுங்கி எறிஞ்சிருக்கீங்க..”

“சும்மாவா என்னைக் கொலகாரன்னு சொல்றாங்க?”

“செல்போன் மேலே உங்களுக்கு ஏன் வெறுப்பு? நீங்க போன் உபயோகிச்சிருக்கீங்க இல்லையா?””

“இருக்கேன்., போன் எதுக்கு? ஒரு அவசரத்துக்கு பேச. நேர்ல பேச முடியாதப்பவும் ரொம்ப தொலைவுல இருக்குறவங்க கூட அப்பப்ப இருக்கியா போயிட்டியானு விசாரிச்சுப் பேச. இப்ப பாருங்க.. யாரும் நேர்ல பேசிக்குறதே இல்லே.. மாடியிலிருந்து என் பையன் டெக்ஸ்ட் பண்ணுறான் “சாப்பாடு ரெடியா”னு கேட்டு. வந்து சாப்பிட்டதும் ரூமுக்கு ஓடி விடியோ விளையாடுறான். ஹெட்செட் மாட்டிக்கிட்டா எதுவுமே காதுல விழாது.. அப்புறம் வாட்சப் யூட்யூப்.. இப்படியே போகுது அவன் வாழ்க்கை.. வெளியில எத்தனை மரங்கள்.. எத்தனை குருவிகள்.. எல்லாம் காணாம போச்சு.. இவங்க செல்போன்ல வாழுறதுக்காக இயற்கை தினம் சாகுதய்யா…”

பார்வை விலக்காமல் குரு குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். பேஷன்ட் தன்னை மறந்துப் பேசிக்கொண்டிருந்தான்.

“என் மனைவியைப் பாருங்க.. அந்த நாள்ல எங்கம்மா பாட்டி எல்லாம் சமையல் செய்து அன்போட குழந்தை கணவருக்குப் பரிமாறி சாப்பிடுறதைப் பார்த்து சந்தோஷப்படுவாங்க.. எங்க கூட விளையாடுவாங்க.. சாப்பிடுறப்ப கலகலப்பா இருக்கும். கதை பேசுவோம்.. வம்படிப்போம்.. இப்ப பாருங்க.. யாரும் ஒண்ணா சாப்பிடுறதே இல்லை.. என் மனைவி பசங்களோட சாப்பிட்டு நினைவேயில்லை.. பாதி நேரம் ஆனந்த பவன் கோணங்கி பவன்லந்து டேக் அவுட், ஸ்விக்கி பக்கினு யாரோ டிலிவரி பண்றாங்க.. அரிசி கூட வக்கறதில்லே பல நேரம்.. வாட்சப் ஃபேஸ்புக் ப்லாக்னு கலாய்ப்பா.. இல்லின்னா டிவி சீரியல்.. குடும்ப உணர்வே யாருக்கும் இல்லாமப் போனதுக்கு இந்தக் கருவிகளும் எந்திரங்களும் தானே காரணம்..”

“நீங்க சொல்றது ஒரு விதத்துல உண்மைனாலும் நாகரீகம் வளர்ச்சி இதெல்லாம் நமக்கு பல வசதிகளைக் கொடுக்குது இல்லையா மிஸ்டர் கொலகாரன்? இப்ப பாருங்க.. இணையம் வந்ததுலந்து நம்ம சமூக உணர்வுகள் எவ்வளவு விரிஞ்சிருக்கு? தொழில் நுட்பத்தினால எத்தனை முன்னேற்றங்கள். ஃபேஸ்புக் வாட்சப் வழியா புரட்சியெல்லாம் நடக்குதே? ஊழல் மந்திரிங்க மாட்டுறாங்க.. மதுரை மாணவர் அமெரிக்க எம்ஐடியில் இங்கிருந்தே படிக்க முடியுதே..” என்றான் குரு.

“ஆ.. என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்று பாடினான் பேஷன்ட். “ஐயா.. முன்னாலயும் படிச்சிட்டுத்தான் இருந்தாங்க. அப்ப இல்லாத மேதைங்களா? போஸ், சிவிராமன், தாகூர், ராஜகோபாலாச்சாரி, பாரதி, அம்பேத்கர், காந்தி.. இவங்கள்ளாம் என்ன பாமரங்களா? செல்போனும் டிவியும் ஐபேடும் இணையமும் இல்லாம இவங்க புரட்சி செய்யலியா? புதுமை செய்யலியா? தொழில் நுட்பத்துக்கு என்ன விலை கொடுக்குறோம்னு யாருக்குமே தெரிய மாட்டேங்குதே..”

“அதுனால இதையெல்லாம் போட்டு உடைக்குறது சரினு நினைக்கறீங்களா?”

“தெரியாது. ஆனா அந்த அளவுக்கு எந்திரங்கள் புழக்கத்தில் இருக்காதே? அதான்..”

“இதனால எத்தனை சேதம்னு உங்களுக்குப் புரியுதா? அதுவுமில்லாம நீங்க உடைச்சிருக்குற பொருட்கள் பெரும்பாலும் அடுத்தவங்களுக்குச் சொந்தமானது. இது குற்றம்னு உங்களுக்குத் தோணலியா?”

“கொன்றவன் கண்ணன்.. கொல்பவன் கண்ணன்..” பாடினான் பேஷன்ட். “எது சேதம் டாக்டர்? இன்னிக்கு மகன் மனைவி நட்பு என்னும் அத்தனை உணர்வுகளும் மின்னணுவில் சிக்கிச் சின்னாபின்னமாகுதே அதானே சேதம்? பசுமை வரண்டு பில்டிங்கா வளர்ந்திருக்கும் சிமென்ட் காடு.. இதுவா வளர்ச்சி? யாராவது முன்னோடியா வரணும் இல்லையா? நான் தொடங்கி வைக்கிறேன் அவ்வளவு தான்.. பாருங்க.. இன்னும் ஒரு மாசத்துல ஆறு மாசத்துல வருசத்துல எத்தனை பேர் என்னைப் போல வராங்கனு பாருங்க.. இது ஒரு இயக்கம். இந்த எந்திர மோகம் அழியும் வரை விடமாட்டோம். உலகம் முழுதும் எங்க இயக்கம் பரவும். வீடு வீடா வருவோம். கட்டிடம் கட்டிடமா தேடுவோம்.. மனித நேயம் மறுபடி மலரும் வரை எந்திரங்களைத் தேடி அழிப்போம்..”

“மிஸ்டர் கொலகாரன்..” கால் சாக்ஸிலிருந்த ரேடியோ பித்தானை அழுத்தினான் குரு. “உங்களுக்கு ஓய்வு தேவை. அதுக்கு மருந்து தருகிறேன்”

“எல்லாத்துக்கும் மருந்து மாத்திரை. இயற்கையை நேசிச்சப்ப இதெல்லாம் தேவையே இல்லாம இருந்துச்சே? தூங்க மாத்திரை.. விழிக்க மாத்திரை.. யாருக்கு வியாதி டாக்டர்? உங்களுக்கா எனக்கா? என்ன வேடிக்கை உலகம்யா இது? எந்திரங்கள் நம்மை எந்திரங்களாக்கிடுச்சே.. எழுந்திருங்க டாக்டர்.. எப்ப விழிக்கப் போறீங்க?” என்று சட்டென்று குருவின் தோள்களைக் குலுக்கிக் கையிலிருந்த ஐவாச்சை அவிழ்க்கப் போனான். “என்னோட வந்துருங்க டாக்டர்.. என் இயக்கத்துல சேர்ந்துடுங்க.. நான் உங்களைக் குணப்படுத்துறேன்..”

அதற்குள் உதவியாட்கள் வந்து பேஷன்டைக் கட்டுப்படுத்தி இழுத்துப் போனார்கள். சற்றே கலங்கியிருந்த குரு ஆயாசத்துடன் வெளியேறினான். உதவியாளரை அழைத்து, “நான் வீட்டுக்குப் போறேன். என் மிச்ச பேஷன்ட்களை இன்னொரு நாள் வரச்சொல்லுங்க”.

அலுவலகத்திலிருந்து வெளியேறி மூலைக்கு நடந்தான். கீழிறங்கிய நகர்படியில் பிறருடன் சேர்ந்து மூன்று மாடிகள் இறங்கி நடந்தான். பார்க்கிங் கராஜ் வந்ததும் கார்ச்சாவியின் பித்தானை அழுத்தினான். ஏழாம் வரிசையில் இருந்த கார் மின்னி பீப் என்றது. எஞ்சின் தானே விழித்தெழுந்து தயாரானது. ஏசியை இயக்கியது.

        வீடு வந்த போது ஆறு மணி. காரை நிறுத்திவிட்டு பதினைந்தாவது மாடி ப்ளாட்டிற்கு விரைந்தான். ஐவாச்சின் ப்லூடூத் இணைப்பில் உந்தப்பட்டுத் திறந்த துடிப்பூட்டுக் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தான். சலனமறிந்த அறை விளக்குகள் தானாக எறிந்தன. மேலே மாட்டியிருந்த சான்டலியர் துடிவிளக்கு இள நீலத்தில் ஒளிர்ந்தது. விளக்குள் பொருந்தியிருந்த ஒலிபெருக்கி ஐவாச்சுடன் தானாகவே ப்லூடூத்தில் இணைந்து கூகில் டிரைவிலிருந்து பாடல்களை ஒலிக்கத் தொடங்கியது.

ஐவாச்சின் செயலி ‘900 காலொரி’ எனும் வரை யோகா ட்ரெட்மில் வெயிட்ஸ் என்று பயிற்சி செய்தான் குரு. குளியலறைக்குள் நுழைந்தான். சலனமறிந்த குளியலறை விளக்குகள் தானாக எரியத் தொடங்கின. மின்சாரத்தில் இயங்கிய பல்விளக்கியில் அவசரமாகச் சுத்தம் செய்துகொண்டான். முன்பதிவிலிருந்த கணக்கி இரண்டு நொடிகள் தயங்கி இயங்க, தானாக வெளிவந்த மிதமான சுடுநீர்ச்சாறலில் குளித்தான். வெளியே வந்து உடையணிந்து சமையலறைக் குளிர்பெட்டியிலிருந்து கின்வா பீன்ஸ் புலவ் எடுத்து மைக்ரோவேவில் சுடவைத்தான். ப்ரொடீன் ஷேக் ஒன்றை எடுத்துக் கோப்பையில் ஊற்றினான். சாப்பிட்டபின் ஐவாச்சின் ஹெல்த் செயலியைத் தட்டி 462 காலொரி என்றான்.

வரவேற்பறையின் சொகுசுத் துடி நாற்காலியில் சாய்ந்தான். மசாஜுக்கான பித்தான்களைத் தட்டினான். அரை மணி போல் சாய்ந்து டிவியில் சானல் புரட்டினான். மனைவியிடமிருந்து வாட்ஸப் செய்தி பார்த்தான். அம்மாவைக் கூகில் டுவோவில் கூப்பிட்டுப் பேசினான்.

ஒன்பது மணி. ஐவாச் “உறக்க நேரம்” என்றது. புதிதாக அறிமுகமான உப்பு கலந்த டூத்பேஸ்டில் மறுபடி பல்விளக்கி, புதிதாக அறிமுமான வேம்பும் கிராம்பும் கலந்த மவுத்வாஷில் வாய் கொப்பளித்துச் சுத்தம் செய்து கொண்டான். படுக்கையில் விழுந்தான்.

அறை விளக்குகள் தாமாக அணைந்தன. ஐவாச் ப்லூடூத் இணைப்பில் படுக்கை தலைப்பக்க ஸ்பீக்கர்களில் இதமான மெல்லிசை ஒலிக்கத் தொடங்கியது. குருவுக்கு ஏனோ மாலையின் நினைவுகள் மீண்டன. “என்னோட வந்துருங்க டாக்டர்.. என் இயக்கத்துல சேர்ந்துடுங்க.. நான் உங்களைக் குணப்படுத்துறேன்..”. புரண்டு படுத்தான்.
■ ■


குறிப்பு [-]

இக்கதையின் கரு, ரே ப்ரேட்பரி எழுதி 1953ல் வெளியான 'The Murderer' எனும் சிறுகதை. அசை போட்டுத் தமிழில் தழுவியதில் சில ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

இன்னும் சில ப்ரேட்பரி கதைகள், என் எழுத்தில்:
ஆஸ்மா கிணறு | (The one who waits)
சிவப்பு வட்டம் | (The last night of the world)
பரணறையில் நன்னாரி மணம் | (A scent of sarasparilla)
மனதிற்கினிய மேரி டீச்சர் | (A story of love)
மகிழ்ச்சி எந்திரம் | (The happiness machine)






2015/12/20

தர்மம்?


னிதக் கலைக்கூடம் விசித்திரமானது. தன்னறிவும் தன்னம்பிக்கையும் சரியான அளவில் கலந்து சீராக வடிவமைத்து அறிவுமுலாம் பூசி அடங்காத வெற்றி விளக்கொளியில் மிளிறும்படி வைத்தாலும், காலத் தூசும் வாழ்க்கைத் துருவும் கருணையின்றித் தொடர்ந்து தாக்கியதால் விளைந்த அவநம்பிக்கை அழுக்கில் பொலிவிழக்கும் பெரும்பான்மை மனிதப் பொம்மைகளின் நடுவே, பண்பை மட்டும் அட்சயபாத்திரப் பருக்கை போல் எப்படியோ பிடித்துக்கொண்டு அவலத்திலும் அழியாத அழகாய்த் தோன்றும் பொம்மைகள் சில... கலைக்கூடத்தின் விசித்திரத்தையும் கொடூரத்தையும் நியாயப்படுத்துவது வேதனையைக் கடந்த வியப்பு.

கும்பகோணத்திலிருந்து இரவுப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ரதிமீனா நிறுவனப் பேருந்து ஒன்றில் சீட்டு வாங்கியிருந்தேன். முன்னர் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். வண்டியும் இருக்கையும் ஓரளவுக்கு வசதியாகவும் சுத்தமாகவும் இருக்கும். இந்த முறை வாய்த்தது பாடாவதி வண்டி. சாய்விசையை அழுத்தினால் பின்னாலிருந்த பெண்மணி மடியில் ஒரேயடியாகச் சாய்ந்து விட்டது. அவர் அலற, தொடர்ந்து நான் அலற... சிரமப்பட்டு எழுந்து இருக்கையை மேலெழுப்பினேன்.. ஜன்னலோரப் பக்கத்து இருக்கைக்கு ஆள் வருவதாகவும் வேறு இடம் இல்லையென்றும் சிப்பந்தி சொன்னதால், என் இருக்கையிலேயே நிமிர்ந்த நெஞ்சும் நிறையாத கண்டனமும் கூடியக் கண்மூடிப் பார்வையுடன் அமர்ந்திருந்தேன். பேருந்து கிளம்பும் தருணத்தில் பக்கத்து இருக்கைக்காரர் ஏறிக்கொண்டார். எழுந்து வழிவிடும் பொழுதே ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொண்டோம்.

முரளி என்கிற கோபாலகிருஷ்ணனை நான் சடுதியில் அடையாளம் கண்டதன் பின்னே சில காரணங்கள் உண்டு. என் காரைக்கால் வாழ்வின் மூன்று நண்பர்களில் ஒருவன் முரளி என்பது ஒரு காரணம். என் வாழ்வில் நான் செய்த முதலும் கடைசியுமான திருட்டுக்குக் கூட்டாளி என்பது ஒரு காரணம். திருட்டை விடுவோம். மறக்க முடியாத காரணம் உண்டென்றால் அது அனந்தராமன். முரளியின் அப்பா.

1967ம் வருடம் ஜூன் மாதம் காரைக்காலில் குடிபுகுந்த முதல் நாள். எங்கள் தெருவின் கடைசி வீட்டில் தனியாக வாசலில் உட்கார்ந்திருந்த முரளியிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். தன் பெயரைச் சொல்லி, "எங்கப்பாம்மா ஆஸ்பத்திரி போயிருக்காங்க... எங்க தாத்தா இன்னிக்கு காலைல தூக்கு போட்டுக்கிட்டாரு..." என்றான்.

ஒரு கணம் எனக்கு என்ன சொல்வதென்று தோன்றவில்லை.

என் கைகளைப் பிடித்துக் கொண்டு "நல்லா இருக்கியா துரை?" என்றான். "சதாபிஷேகத்துக்கு நீ காரைக்கால் வந்தப்ப பாத்தோம்.. பதினஞ்சு வருஷம் இருக்குமா?"... வசதியாக உட்கார்ந்து கொண்டு... "சாஞ்சுக்கயேன்?". என்றான்.

ஒரேயடியாகச் சாய்ந்ததைச் சொன்னதும் சிரித்தான். "காசு வாங்குறதுல குறியா இருக்கானுங்களே தவிர பயணிகளுக்கு வசதியா ஏதாவது செய்யறாங்களா பாரு"

"விடு. என் துரதிர்ஷ்டம் இந்த மாதிரி சீட் கிடைச்சுது" என்றேன்.

"வேறே சீட் கிடைச்சிருந்தா இப்ப நாம சந்திச்சிருக்க முடியுமா? அதுவும் அதிர்ஷ்டம் தானே?" என்றபடி இருக்கையை நேராக்கிக் கொண்டான். "நானும் இப்படியே உக்காந்துட்டு வரேன்".

இதான் முரளி என்கிற கோபாலகிருஷ்ணன். எதையும் நிறைவுக் கோணத்தில் மட்டுமே பார்ப்பவன். படுபாவி, மாறவே இல்லை.

"மெட்ராஸ் போறியா?" என்றான். இவனாவது மெட்ராஸ் என்கிறான். மெட்ராஸ் எனும் ஒற்றைச்சொல் கால எந்திரம் இன்னும் எத்தனை நாள் பயணத் தகுதியில் இருக்குமோ தெரியவில்லை.

"ஆமாம்.. அம்மாவைப் பார்க்க வந்தேன்" என்றேன்.

"கும்மோணத்துலயா இருக்கா உங்கம்மா? எப்படி இருக்கா? சௌக்கியமா?"

தலையசைத்தேன். "நீ எங்கே இங்கே?" என்றேன்.

"பத்து வருஷமா இங்கதான் வேலை பாக்கறேன். டவுனைஸ்கூல்ல கணக்கு வாத்தியார்...." சற்றுத் தயங்கி, "வேலை பாத்தேன்னு சொல்லணும்" என்றான்.

"ஏன்?"

"இன்னிக்குக் காலைல வேலையை விட்டுட்டேன்"

"ஏன்?"

"அவசரமா மெட்ராஸ் போகணும். இனிமே மெட்ராஸ் வாழ்க்கைதான் போலிருக்கு"

கேள்வி கேட்காமல் அவனைப் பார்த்தேன்.

"என் பையன் ஸ்ரீகிருஷ்ணன்... தீபாவளிக்கு மொதநாள்... முப்பதாவது பொறந்த நாளன்னிக்கு... தற்கொலை பண்ணிக்கறதுக்காக பாதி ராத்திரி எட்டாவது மாடியிலந்து விழுந்துட்டான்.."

அவன் சொன்னது என்னை உறைய வைத்தது.

பிறப்பிறப்பு புரியாத அந்த வயதிலும் செய்தியின் தீவிரம் புரிந்தது. "என்ன சொல்றே? உங்க தாத்தா தூக்கு போட்டுட்டாறா?"

"ஆமாம். திடீர்னு காலம்பற எங்கம்மா கத்தறா. என்னானு நானும் அப்பாவும் எழுந்து பாத்தா... ஹால்ல எங்க தாத்தா சீலிங் பேன்ல தொங்கறாரு. எங்கப்பா என்னை பெட்ரூம்ல தள்ளிக் கதவை சாத்துறதுக்குள்ள நான் பாத்துட்டேன். தாத்தா கால் ஆடிட்டே இருக்கு. தலை சாஞ்சு கிடக்கு. தாத்தாவை கீழே இறக்கி எங்கப்பா டாக்ஸி கூட்டிட்டு வந்து பெரியாஸ்பத்திரிக்கு போயிருக்காங்க..." என்றவன், அதே ஓட்டத்தில் வெண்மையாக "நீ ஊருக்குப் புதுசா? உங்க வீடு மலர் வீட்டுக்குப் பக்கத்துல தானே? உங்கப்பாவை நான் பாத்துருக்கேன். மோட்டார்பைக் வச்சிருக்காரு தானே? எங்கப்பா கிட்டே சைக்கிள் கூட கிடையாது" என்றான்.

எந்த ஓட்டத்துக்கு ஈடு கொடுப்பது என்பது புரியவேண்டிய அவசியமில்லாத வயதின் வசதியில் பொதுவாகத் தலையசைத்தேன். "எங்கம்மாவும் நாங்களும் இன்னைக்குக் காலைல வந்தோம். போன வாரமே நாகூர் வந்துட்டோம். அங்கே எங்க பெரியம்மா இருக்காங்க. எங்க பெரியம்மா பையன் ரகு என்னோட பெரியவன். குடுகுடுபாண்டியோட சண்டை போட்டான் தெரியுமா? அங்கேந்து பஸ்ல நேத்திக்கு ராத்திரி வந்தோம். எனக்கு ஒரு தம்பி மூணு தங்கை. தம்பியும் கடைசி தங்கையும் மெட்ராஸ்லயும் வாசுதேவநல்லூர்லயும் இருக்காங்க. எங்கப்பா அடிக்கடி வேலையை விட்டுடறாருனு அவங்களை எங்க தாத்தா பாட்டி பாத்துக்கறாங்க" என்று செய்திகளைத் தொடர்பில்லாமல் அறிவித்தேன்.

"நிர்மலா ராணி ஸ்கூல் தானே நீயும்?" என்றான்.

"ஆமாம்.. எங்கப்பா என்னையும் என் தங்கையையும் சேத்துட்டாரு. மெட்ராஸ்ல தெரஸா ஸ்கூல்ல க்வாடர்லி வரைக்கும் படிச்சோம். நான் எப்பவும் பர்ஸ்ட் ரேங்க். இங்கே எனக்கு டபுள் ப்ரமோஷன் கொடுத்து சேத்துக்கிட்டாங்க. என் தங்கைக்கு டபுள் ப்ரமோஷன் கிடையாது. அதே க்ளாஸ்லதான் படிக்கணும்." என்றேன். என்ன பெருமையோ தெரியவில்லை.

"படிக்க்க்க்கிற புள்ளையா?" என்றான் இழுத்து. என்னை மேலும் கீழும் பார்த்தான். "எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா உன் குசுவைக் குடிக்கச் சொல்லுவாரு"

"என்னது?"

"யாராவது பர்ஸ்ட் ரேங்க் பையன் எங்க வீட்டுக்கு வந்தா உடனே குசு குடிரானு ஆரம்பிச்சுடுவாரு"

"ஏன்? நீ நல்லா படிக்க மாட்டியா?"

"படிப்பேன். ஆனா எப்பவும் அஞ்சாவது ஆறாவது ரேங்கு தான்"

திடீரென்று தெருமுனையில் அலாரம் போல் மணி அடிக்க, திரும்பினோம். ஒரு ஆம்புலன்ஸ் வண்டி அவசரமாக வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு பேர் ஒரு படுக்கையில் வெள்ளைத துணி போர்த்திய உடலை அவசரமாக வெளியே எடுத்து வீட்டு ஹாலில் கிடத்தி வந்த வேகத்தில் வண்டியுடன் காணாமல் போனார்கள். விசை தட்டினாற்போல் அழுகை. ஓலம். திடுக்கிட்டேன். வார்த்தை வராமல் பார்த்துக்கொண்டிருந்தேன். முரளியின் அப்பா அனந்தராமன் என்னிடம் வந்து அன்புடன் "யாருப்பா அம்பி நீ?" என்றார். சொன்னதும், "இதெல்லாம் ஒண்ணுமில்லே. பாத்து பயந்துடாதே. இவனோட தாத்தா வைகுண்டம் போயிட்டார்: நாங்கள்ளாம் இருந்து வழியனுப்பணும். நீ ரெண்டு நாள் கழிச்சு விளையாட வா" என்றார் சாதாரணமாக.

"என்ன இப்படி சாதாரணமா சொல்றே?" என்றேன் சற்று நிலைதடுமாறி.

"ப்ராப்தம். அவனுக்கு என்ன பிரச்சினையோ?. கடன்னு சொல்றா. பொண்டாட்டினு சொல்றா. வேலைன்னு சொல்றா. கொஞ்ச நாளாவே லூசாட்டம் என்னமோ பேத்திண்டிருந்தான்னு சொல்றா... நாங்கதான் யாருமே கவனிக்கலேயோ என்னவோ?"

கேட்பதா கூடாதாவென்று புரியாமல் காத்திருந்தேன். அவனாகவே தொடர்ந்தான். "ஆனா சாகலே பாரு. அவனோட துர்பாக்கியம் கரெக்டா ஒரு காய்கறி லாரி மேலே விழுந்துட்டான். ரோட்டுல விழுந்திருந்தாலாவது பொட்டுன்னு போயிருப்பான். இப்படி மண்டைல அடிபட்டு... லாரிக்கார புண்யவான் உடனே ஸ்ரீக்ருஷ்ணாவை ஆஸ்பத்திரிலே சேர்த்து... நானும் ஸ்வர்ணாவும் தீபாவளியன்னிக்கு அடிச்சுண்டு ஓடினோம். ஆஸ்பத்திரிலே கோமால கிடக்கான்... பத்து பதினஞ்சு நாளாவது தீவிர மருத்துவ கவனிப்புல இருக்கணும்னுட்டாங்க ஆஸ்பத்திரிலே. அவனைத் தினம் போய் கவனிக்கறதுக்காக இவ முடிச்சூர்ல அக்கா வீடு காலியா இருக்கேன்னு அங்க தங்கிண்டு இருந்தா. நான் திரும்பி வந்துட்டேன். அடிச்சுது மெட்ராஸ்ல பத்து நாள் பேய்மழை. வெள்ளிக்கிழமை... நல்ல முகூர்த்த நாளா பார்த்து... வீட்டுல தண்ணி அளவு ஏறிண்டே வந்து வெள்ளத்துல சட்டுன்னு வெளில வர முடியாம... உதவிக்கு ஆள் இல்லாம... வீட்டுக்குள்ளயே மூழ்கிச் செத்துட்டா ஸ்வர்ணா. ரெண்டு நாள் கழிச்சுதான் தெரிஞ்சுதாம். அழுகிக் கிடக்காளாம். நேத்திக்கு ஆஸ்பத்திரிலந்தும் சேதி வந்துது. ஸ்ரீக்ருஷ்ணா கோமாலந்து வந்துட்டான். ஆனா மூளை குழம்பியிருக்கு. வலதுபக்கம் வாதம். பேச்சு வரதுக்கு நாளாகும்னு... அரக்க பறக்க கிளம்பிட்டேன். போய் அவளுக்குக் காரியம் பண்ணனும். அப்புறம் அவனுக்கு கைங்கரியம் பண்ணனும்..."

இன்னும் ஏதாவது விபரீதமாகச் சொல்லப் போகிறானோ என்று விளங்காமல் சில கணங்கள் விழித்தேன். சுதாரித்து "என்ன சொல்றதுனே தெரியலே முரளி.. இத்தனை அதிர்ச்சியை ஒட்டு மொத்தமா கேக்கறதுக்கே எனக்கு சக்தியில்லை... நீ எப்படி யதார்த்தமா இருக்கேன்னு புரியலே... எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குடா" என்றேன்.

"சகடம் உருண்டுட்டே இருக்கு துரை. இன்னிக்கு செத்தா நாளைக்கு ரெண்டு. இதுல வருத்தப்பட்டும் துக்கப்பட்டும் என்ன ஆகப்போறது?" என்றான். "ஒருவேளை நானும் அவளோட நாலு நாள் தங்கியிருந்து.. நானும் போயிருந்தா? பிள்ளையை யார் கவனிக்கறது? இப்ப ஸ்ரீக்ருஷ்ணாவுக்காவது நான் இருக்கும்படி ஆச்சு பாரு? அதுவும் ஒரு ஆசீர்வாதம் தானே?"... சிறு மௌனத்துக்குப் பிறகு... "எங்கப்பா ஞாபகமிருக்கில்லையா உனக்கு? அவர் அன்னிக்கே சொன்னாராம்.. ஸ்வர்ணாவுக்கு ஜலகண்ட ம்ருத்யு சாத்யம்னுட்டு அவ அப்பாகிட்டே... சொன்னமாதிரியே ஸ்வர்ணாவுக்கு தண்ணீல சாவு. அனந்தராமன் நாக்கு அசாத்திய வாக்கு இல்லையோ?"

நான் அனந்தராமனையே பார்த்துக் கொண்டிருந்தேன். "என்ன மாமா இப்படிச் சொல்றீங்க? அதிர்ச்சியா இருக்கு"

"என்னைப் பத்தி உனக்குத் தெரியுமில்லையா? எனக்கு கிடைச்சிருக்குற சக்தி ஒரு மகா ஆசீர்வாதம். அதை ஸ்வயலாபத்துக்கு உபயோகிச்சா நிக்காது. மத்தவா பலனுக்குக்காகக் கிடைச்ச சக்தி. அப்படித்தான் இன்னி வரைக்கும் வாழ்ந்துண்டிருக்கேன். எனக்கோ என் நேர் வாரிசுகளுக்கோ இதைப் பயன்படுத்தக்கூடாதுனு வைராக்கியமா இருக்கேன்..." சற்றுத் தயங்கி..."இருந்தேன்னு சொல்லணும்... இல்லேடா... நீ எங்கந்தோ இங்கே வந்திருக்கே... என்னைப் பாக்க வந்தது ஒரு செய்தி போலப் பட்டுது.. அதான்.. உங்கிட்டே சொல்லலாம்னு தோணித்து... பாரமா நினைச்சுக்காதே.. தயவுசெஞ்சு இதை முரளிகிட்டே நான் சொன்னதா சொல்லிடாதே... நான் உசிரோட இருக்குறவரைக்கும் அவனுக்கு இது தெரியவேண்டாம்... எனக்கு செய்யுற ஒரு உதவியா நினைச்சுக்கோ"

அவர் சொன்னது எனக்குள் இறங்கி என்னவோ செய்தது. முரளியின் திருமணத்துக்குப் போனதோடு சரி. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து அவனைப் பார்க்க வந்திருந்தேன். அவன் அப்பாவுக்கு சதாபிஷேகம் என்று என்னை வற்புறுத்தி அழைத்திருந்தான். வந்த இடத்தில் இப்படி ஒரு செய்தியை அனந்தராமன் சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

அவர் எதிரே நின்ற சட்டையற்றச் சிறுவனை குப்புறப் படுக்க வைத்து அவன் கைகளை இறக்கை போல் விரித்துப் பிடித்தார். சிறுவனின் தந்தையிடம் சிறுவனின் இடது கையை அழுத்திப் பிடித்துக் கொள்ளச சொன்னார். அனந்தராமன் சிறுவனின் சூம்பிக் கிடந்த வலது கையை அழுத்திப் பிடித்துக் கொண்டார். சிறுவன் அலறிக் கொண்டிருந்தான். "கண்டுக்காதீங்கோ.. சித்த நாழி அப்படித்தான் இருக்கும்.." என்றார். ஒரு கிண்ணத்தில் குழைத்து வைத்திருந்த வண்ண விழுது ஒன்றை எடுத்து சிறுவனின் முதுகுத் தண்டில் தடவி அழுத்தித் தேய்த்தார். பிறகு தண்டிலிருந்து மேலாகவும் குறுக்காவும் நீவினார். நீவியபடியே சிறுவனின் வலது கையை மெள்ள மெள்ள உயர்த்தினார். சிறுவன் அலறிக்கொண்டிருந்தான். நிறுத்திய அனந்தராமன், "இன்னிக்குப் போறும். புதன் சாயந்திரம் அஸ்தமனத்துல வந்துருங்கோ" என்றார்.

சிறுவனின் தாய் எங்கள் வீட்டில் போல் பல வீடுகளில் வேலை செய்து பிழைப்பவர். தந்தை மாவு மில் அருகே சைக்கிள் ரிக்ஷா வைத்திருந்தார். சிறுவன் பள்ளிக்கூடம் போகவில்லை. விளங்காத வலது கையுடன் எங்கிருந்து படிப்பது? அதைத்தவிர சிறுவனின் சாதி சமூக அந்தஸ்து, கிறுஸ்துவப் பள்ளிகளில் கூட ஏற்கப்படவில்லை.

மூன்றாவது மாதமோ என்னவோ சிறுவனுக்கு எல்லாம் சரியாகி விட்டது. விளங்காதிருந்த கை சுத்தமாகச் சரியாகிவிட்டிருந்தது. ஒரு பைசா பணம் வாங்கவில்லை அனந்தராமன்.

அதே நினைவாக, "உங்கப்பா இருந்தா இந்நேரம் ஸ்ரீக்ருஷ்ணாவைக் குணப்படுத்தியிருப்பார்" என்றேன். அனந்தராமன் என்னிடம் சொன்னதை அவனிடம் சொல்லத் தோன்றியது. "டேய்... சதாபிஷேகத்துக்கு வந்தப்போ உங்கப்பா எங்கிட்டே ஒண்ணு சொன்னாருடா.. எனக்கு அப்போ புரியலே.. இப்போ.."

உடனே என்னைத் தடுத்தான். "வேணாம்டா... என்னைப் பத்தி ஏதாவது சொல்லியிருந்தா தயவுசெஞ்சு சொல்லாதே.." அவன் குரலில் சற்று ஆத்திரம் கலந்திருந்ததை உணர்ந்தேன்.

வண்டி மாயவரம், கடலூர், நெய்வேலி என்று வரிசையாகக் கடந்து கொண்டிருந்தது. எங்கேயாவது காபி டீ சாப்பிட நிறுத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன். சமீப மழையின் விளைவாக வழியோர கும்பகோணம் டிகிரிக் காபிக்கடைகள் எல்லாம் மூடியிருந்தன. ஏற்கனவே அங்கே காபி சகிக்காது. நல்லது என்று நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் எங்கேயாவது ஒரு கப் காபி சாப்பிடக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

"கொஞ்சம் கடுப்பா பேசிட்டேன்னு நினைக்காதே... யார் யாருக்கோ எங்கப்பா ஆரூடமும் மருந்தும் வாக்கும் சொல்லியிருக்காரு... ஞாபகம் இருக்கா.. உனக்கு நாலாவது தங்கை பொறந்து உங்கம்மா பொழைப்பாளானு படுத்துக் கிடந்த போது எங்கப்பா நீங்க எல்லாம் அமோகமா இருக்கப் போறேள்னு சொன்னது? உங்கப்பாவை மோட்டார்பைக் ஓட்டுறதை நிறுத்தச் சொன்னது? நீ அமேரிக்கா போவேன்னு அப்பவே சொன்னாரு ஞாபகம் இருக்கா?.."

"ஏன் ஞாபகம் இல்லே?" என்றேன்.

எதிர்பாராததை ஆரூடமாகச் சொல்வதிலும் நிகழ்த்திக் காட்டுவதிலும் அனந்தராமன் வல்லவர். பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். நேரிடையாகவும் அனுபவித்திருக்கிறேன். எதிர்கால நிகழ்வுகளைச் சொல்லுவார். குணப்படுத்த முடியாது என்று சொல்லப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்துவார். எங்கிருந்தெல்லாமோ வருவார்கள். ஜோசியம் கேட்கவும். தேவமருந்து வாங்கவும். மருத்துவம் என்று ஒரு நாளும் சொல்லமாட்டார். தேவமருந்து என்றே சொல்வார். காரைக்காலில் இருந்த போது என் பாட்டி அடிக்கடி சொல்லுவார். "அந்த அதர்வண பிராமணன் வீட்டுக்குப் போகாதேடா... தலைகீழா நடந்து வரப்போறே ஒரு நாளைக்கு. சொல்றதைக் கேளு".

"சொல்லுங்கோ" என்றேன்.

அனந்தராமனுக்கு சதாபிஷேகம் முடிந்த மறுநாள். காரைக்கால் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தொடங்கி திருவாரூர், திருவிடைமருதூர், சுவாமிமலை, திருநள்ளார் கோவில்களுக்கு வசதியான காரில் அழைத்துச் சென்று திரும்பியிருந்தேன். என்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

என் கைகளைப் பிடித்துக் கொண்டார். "என் பையன் முரளிக்கு ஆயுசுல நிம்மதியே கிடைக்காதுடா. எங்கப்பாவோட கர்மா என் பேரனைக் கட்டியிருக்கு. ஆனா எனக்குக் கிடைச்ச விடுதலை என் பையனுக்குக் கிடைக்காது போலிருக்கு.. நடக்கும்னு தெரிஞ்சே சில சமயம் நடக்காதுனு ஏதோ ஒரு நம்பிக்கைல சில காரியங்களைச் செஞ்சுடறோம்" என்றார். குரல் விம்ம,"இதுக்கு மேலே என்னால சொல்லமுடியாது. இதையே யார் கிட்டேயாவது சொல்லணும்னு மனசு குடைஞ்சு தள்ளித்து. உன்னோட இத்தனை கோவில்களுக்குப் போயிட்டு வந்தப்போ எனக்கு கிடைச்ச அசாத்திய நிம்மதியிலே துணிஞ்சு இதைச் சொல்லிட்டேன்" என்றார். "என் பேரனால அவனுக்கு நிம்மதி போயிடும். ஒரு உதவி பண்ணு... நாளைக்கு நான் போனப்புறம்.. பேரனுக்கு ஏதாவதுனா முரளி எல்லாத்தையும் விட்டு வடக்கே காசிலயோ கேதாரநாத்லயோ சன்யாசம் வாங்கி ஓஞ்சுடச்சொல்லு. சம்சார பந்தம் அவன் நிம்மதியைக் கொலைச்சு சாகற வரைக்கும் விடாது". அதற்குள் ஸ்வர்ணா காபி கொண்டு வர சுதாரித்தார்.

மோசமான காபி என்றாலும் அப்போதைக்கு அது தேவைப்பட்டது. பாண்டிச்சேரி அருகே எங்கேயோ நிறுத்தியிருந்தார்கள் வண்டியை.

"துரை.. எனக்கும் சில சமயம் தோணிருக்கு. எங்கப்பா கிட்டேயே கேட்டிருக்கேன். இத்தனை பரோபகாரம் பண்றேளே.. எனக்குக் கொஞ்சம் உபகாரம் பண்ணக்கூடாதானு.. என் வாழ்க்கை நதி எப்படியெல்லாம் ஓடும்னு பாதை போட்டுக் காட்டியிருந்தா வேறே முடிவுகள் எடுத்திருப்பேனோ என்னவோனு அடிக்கடி தோணும். அப்புறம்தான் உணர்ந்தேன். எங்கப்பா ஆரூடத்துக்கு ஏத்தமாதிரி நான் முடிவுகள் எடுத்திருந்தா அது மட்டும் எனக்கு நிம்மதியையோ ஆனந்தத்தையோ கொடுத்திருக்கும்னு என்ன நிச்சயம்? அதுவுமில்லாம... அவரோட தர்மத்தை எனக்காக விட்டுக்கொடுத்தாருனு ஒரு பாரம் வேண்டாம் பாரு..."

"எதுடா தர்மம்? ஒரு துரும்பைப் பிடிச்சுட்டாவது கரையேற மாட்டோமானு தினம் தினம் வாழ்க்கைக் கடல்ல நீந்திட்டிருக்குற கோடிக்கணக்கான பேர் மத்தியிலே... அப்படிக் கிடைச்ச துரும்பைக் கூட ஊழல்லயும் அரசியல்லயும் முட்டாள்தனத்துலயும் இழந்துட்டு அல்லாடிட்டிருக்குறவங்க மத்தியிலே.. இப்படியொரு சக்தி கிடைச்சிருக்கு உங்கப்பாவுக்கு. பேராசையெல்லாம் வேண்டாம்.. ஒரு சின்ன வழியாவது காண்பிச்சிருக்கலாம் இல்லையா? ஏழைலந்து அரசியல்வாதி வரைக்கும் அவனவன் பணமா கொட்டிக் கொடுத்தப்ப உங்கப்பா ஒரு காசு கூட வாங்காதது எந்த விதத்துல நியாயம்? அப்படி வாங்கியிருந்தா ஒருவேளை நீ இருந்த இடத்துலயே உன் பையனோட அமோகமா இருந்திருக்கலாமே? தனக்கு மிஞ்சித்தாண்டா தானமும் தர்மமும்"

"நீ சொல்றது உனக்கும் எனக்கும் நியாயமாத் தோணினாலும் அது அவரோட தர்மம் ஆகாதுடா. பரோபகாரம் அவருக்கு நிம்மதியைக் கொடுத்துது. சக்தியை தனக்குச் சாதகமா பயன்படுத்திட்டிருந்தா குற்ற உணர்வு தான் மிஞ்சியிருக்கும். எங்கப்பாவை எனக்குத் தெரியும். அவருக்குக் கிடைச்ச அபூர்வ சக்தியினால எங்க தாத்தா தூக்குப் போட்டுட்டதிலந்து என் பையன் நிலமை வரைக்கும் தெரிஞ்சிருக்காம இருக்கும்னு நான் நினைக்கலே. எனக்குச் சொல்லாத காரணத்தையும் நான் வெறுக்கலே"

"நீ இருக்குற நிலமைல..உன் பையனுக்கு இருக்குற நிலமைல.. உன்னால பாத்துக்க முடியுமா?"

"ஏன்?"

"ஸ்வர்ணா தவறிட்டாங்கறே.. உனக்கும் வயசாயிடுச்சு.. வேலையை விட்டாச்சுன்றே.. உன் பையனுக்கு மூளை குழம்பியிருக்குனு சொல்றே. நீ யாருனு கூட அவனுக்குத் தெரியாதுடா.."

"அதனால என்னடா. என் பிள்ளையை எனக்குத் தெரியுமே?"

"முரளி.. தப்பா நினைக்காதே.. இப்பல்லாம் இதுக்குன்னு தனி இடம் வசதியெல்லாம் கிடைக்குது. மொத்தமா பணம் கட்டி ஸ்ரீக்ருஷ்ணாவை சேத்துட்டா அவங்களே பாத்துப்பாங்க. அப்பப்போ போய் பாத்துட்டு வரலாம்..."

"என்னடா உளறல் இது? எனக்குப் பொறந்த குழந்தைடா. யார் பாத்துப்பாங்க? காசுக்காக வேலை செய்யுறவங்களா? போடா"

"கண்மூடித்தனமா பேசாதடா. உன்னால அவனைப் பார்த்துக்க முடியாது. உங்கிட்ட வசதியும் கிடையாது"

"எனக்கென்ன? ஸ்வர்ணாவோட நகையெல்லாம் வித்து இருக்குற பிராவிடன்ட் பணத்தையெல்லாம் எடுத்து அவனைக் கவனிச்சுக்க வேண்டியதுதான். இதைவிட எனக்கு என்ன வேலை?"

"பணத்தைச் சொல்லலே. நாளைக்கே உனக்கு உடம்புக்கு முடியாமப் போனா? அட.. உனக்கே ஒண்ணு ஆறதுனு வை.."

"அதனால என்ன? நான் இருக்குற வரைக்கும் அவனைப் பாத்துண்ட திருப்தியும் நிம்மதியும் போறுமே. பணம் கட்டித் தனியாச் சேத்திருந்தாலும்... எப்படியிருந்தாலும் எனக்கப்புறம் அவனுக்கு என்ன நடக்கும்னு என்ன உத்தரவாதம் இருக்கு?"

"அதெப்படிடா.. நீ போனப்புறமும் அவன் உன் குழந்தை தானே? யாராவது கவனிக்க வேண்டாமா?"

"துரை.. நான் போனப்புறம் நானே இல்லைடா. எனக்கு ஏது குழந்தை? நான் போனப்புறம் யாராவது கவனிக்கணுங்கறதுக்காக இருக்குறப்ப நான் கவனிக்காம இருக்கலாமா? இருக்குறவரைக்கும் தானே என் தர்மமும் நியாயமும் எனக்கு தைரியத்தையும் நிம்மதியையும் கொடுக்கவோ கெடுக்கவோ முடியும்..? எனக்கப்புறம்.. அந்தப் பார்வதி பரமேஸ்வரன் பாத்துக்கட்டும்.. ஒரு பேச்சுக்கு சொல்றேன்... நாளைக்கு உன் குழந்தைக்கு இப்படி ஆச்சுனா விட்டுப் போயிடுவியா?"

"விட்டுப் போகமாட்டேன். விடாம பிடிச்சிட்டிருக்கவும் மாட்டேன். கண்டிப்பா ஒரு இடத்துல சேர்த்து பணம் கட்டி... என் சக்தியின் வரம்பு எனக்குத் தெரியும்"

"அப்படித் தெரிஞ்சா இத்தனை நாள் எல்லாம் பண்ணினே? சின்னக் குழந்தையா நடை பழகினதுலந்து... கைல நாலணா இல்லாம அமெரிக்கா போனதுலந்து... எந்த சக்தியோட வரம்பு உன்னைக் கட்டுப்படுத்தியிருக்கு?"

என்னால் பதில் சொல்ல முடியவில்லை. வண்டி கிளம்பத் தயாரென்று ஒலிக்க, அவசரமாக ஏறிக்கொண்டோம்.

"எங்கப்பா தெரிஞ்சோ தெரியாமலோ எனக்குக் கொடுத்த ஒரு பெரிய சக்தி என்னன்னா... எதையும் அதன் போக்குல எடுத்துக்கணுங்கிறது மட்டும்தான்... நடக்குறது நடக்கும்... அதிலே நாமளும் நடக்கப் பழகிக்கணும்...அவ்வளவுதான். நான் அப்படிக் கேட்டேன்னு தப்பா நினைக்காதே. ஒரு நாளும் உன் குழந்தைக்கு எதுவும் ஆகாது" என்றான் உட்கார்ந்தபடி.

"சே சே! நான் அப்படியெல்லாம் நினைக்கலேடா. நீ நிம்மதியா இருக்கணும்னுதான் அப்படிச் சொன்னேன"

"தெரியும்டா. இருந்தாலும் அப்படிக் கேட்டதுக்கு என்னை மன்னிச்சுடு. ஒரு கணம் தவறி வரம்பு மீறிட்டேன்" என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டான். "உன் கூட பேசினதே பெரிய பாரம் இறங்கினாப்புல இருக்கு. நீ ஊருக்கு வந்ததே தெரியாது. இருந்தும் இன்னிக்குப் பார்த்து இதே பஸ்ல ஏறி என் பக்கத்துல உக்காந்து வரணும்னு இருக்கா சொல்லு? இதான் செய்தி. உனக்குப் புரிஞ்சாலும் ஏத்துக்க மாட்டே இல்லையா? கண் அசத்திட்டு வரது. கொஞ்ச நேரம் தூங்கறேன்" என்றபடி கைகளைத் தளர்த்திக் கண்மூடினான். நொடிகளில் குறட்டை.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கண்மூடியவுடன் தூங்குகிறானே? இத்தனை பிரச்சினைகளின் இடையே? எப்படிச் சமாளிக்கப் போகிறான்? ஏதாவது உதவி செய்வதா? அவனுடைய சிக்கல்களைச் சிந்தித்துக் குழம்பி என் தூக்கத்தைத் தொலைத்தேன்.

குரோம்பேட்டையில் நிற்கவேண்டி வண்டி வேகம் குறையத் தொடங்கியது. முரளியை எழுப்பி விடைபெற எண்ணி அவனைப் பார்த்தேன். கவலையில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தான். முகத்தில் சிறு புன்னகை கூட அரும்பியிருந்தது. இவனுக்கெல்லாம் எதற்கு நிம்மதி? அனந்தராமனின் கவலைக்குப் பொருளில்லை என்பது பொட்டில் அடித்தது. தந்தை மகன் இருவரின் தர்மமும் சற்றே புரிந்தது போல் பட்டாலும்.. தர்மமோ நம்பிக்கையோ ஏதோ ஒன்று இவனைத் தொடர்ந்து நடத்திச்செல்லும் என்பது தெளிந்தது. என் தொடர்பு விவர அட்டை ஒன்றை அவன் சட்டைப்பையில் செருகி, இறங்குவதற்காக எழுந்தேன்.

2015/08/23

தலை சிறந்த தமிழ்ச் சிறுகதை



    நான் ஒரு எழுத்தாளன். என்று சொல்லிக் கொள்ளவாவது விரும்புகிறவன்.

கட்டுரைகள் கவிதைகள் என்று எத்தனையோ எழுதினாலும் சிறுகதை எழுதுவது எனக்குப் பிடிக்கும். கலைகளின் ராணி கவிதை என்பார்கள். எனக்குச் சிறுகதை தான் ராணி ராஜா எல்லாம். என் கதையில் வரும் மாந்தர்கள்... அவர்களின் தோற்றம், உருவம், வளர்ச்சி, குணாதிசயம், படிப்பு, வேலை, திருமணம், வெற்றி, தோல்வி, சுகம், துக்கம், மரணம்... என்று அத்தனை நிகழ்வுகளையும் நானே முடிவு செய்து திட்டமிட்டு நானே நடத்திக்காட்டவும் முடிவதால்.. எனக்கு படைப்பின் முழு நிறைவு கிடைக்கிறது. கடவுளுக்குக் கூட இந்த நிறைவு கிடைக்காது என்றே தோன்றுகிறது. காரணம் நல்லது நிகழ்ந்தால் கடவுளின் கருணை, அல்லது நிகழ்ந்தால் மாந்தரின் பாபம் என்று படைப்பாளி - படைப்பின் உரிமைகளையும் சலுகைகளையும் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். சிறுகதை உலகம் அப்படியல்ல. அந்த ரீதியில் கடவுளை விட நான் அதிகம் பொறுப்புள்ளவன் என்ற ஒரு சிறிய கர்வம் எனக்குண்டு, அதன் நிறைவில் குளிர்காயும் அல்பத்தனமும் எனக்கு உண்டு. பூஜ்யத்தில் சிறிதென்ன பெரிதென்ன.. பூஜ்யப் பெருமை அல்பத்தனம் தானே, என்ன சொல்கிறீர்கள்?

கடவுளைப் போலவே எனக்கும் அங்கீகாரம் தேவைப்படுகிறது. அபிஷேகம், ஆராதனை, பூஜை, நோன்பு, விரதம், யாகம் எல்லாம் செய்து.. படைத்தவன் என்ற அங்கீகாரத்தை அவ்வப்போது தந்து வழிபடாவிட்டால் கண்ணைக் குத்துவதிலிருந்து குடும்ப நாசம் வரை அத்தனை கெடுதல்களையும் செய்து பழி வாங்கும் கடவுள் அளவுக்குச் சிறுகதை எழுத்தாளனான எனக்குத் தோன்றாது.. எனினும் அவ்வப்போது எனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறவன். அந்த அங்கீகாரம் பல விதங்களில் கிடைக்கக் கூடுமென்றாலும் பரவலான வரவேற்பைப் பெறும் பத்திரிகைகளில் என் படைப்புகள் வெளிவந்தால் அதை மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்கிறவன். பெரும்பாலான எழுத்தாளர்கள் என்னைப் போலத்தான். புத்தகமாக வெளிவந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவார்கள். திரைப்படமாகவோ நாடகமாகவோ படைப்புகள் நிரந்தரப்படுத்தப்பட்டால் மேன்மையின் உச்சிக்குப் போய் வரங்களை அருளுவார்கள். நாலைந்து விருதுகள் கொடுத்து கௌரவித்தால் மோட்சம் கூட வழங்குவார்கள். புகழ் வெறி அல்லது போதையின் உக்கிரத்தில் கடவுளையும் அரசியல்வாதிகளையும் போல சில நேரம் எழுத்தாளர்கள் நடந்து கொள்வதைப் பார்க்கும் பொழுது எனக்குச் சற்று பயமாகவே இருக்கும். என்னைப் பொறுத்தவரை பத்திரிகைகளில் அவ்வப்போது சில கதைகள் வெளிவந்தால் அந்த அங்கீகாரமே போதுமானது. என் எதிர்பார்ப்புகள் திருப்பதி வெங்கடாஜலபதி அளவுக்கு இல்லையென்றாலும் எல்லை ஐயனார் போல் என்று வையுங்களேன். அங்கீகாரம் மறுக்கப்பட்ட கடவுள் எனில் ஏதாவது கெடுதல் செய்து மக்களை பயமுறுத்திக் கண்மூடி அடிமைப்படுத்தலாம். சிறுகதாசிரியன் பாவம் என்ன செய்ய முடியும்? புலம்ப மட்டுமே முடியும்.

அதைத்தான் செய்தேன்.

என் நண்பன் ரகுவிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். ரகுவின் கடலோர வீட்டுப் பின்கட்டில் சமீப மாலையொன்றில் பேசிக்கொண்டிருந்தோம். சூரியன் முழுப்பழமாக கடலுள் முங்குவதைப் பார்த்தபடி நான் புலம்பிக் கொண்டிருந்தேன். "ரகு.. நான் எழுதி அனுப்புற கதைகளில் அனேகமா எதுவுமே பிரசுரமாவதில்லை. இரண்டு வருஷங்களா நான் எழுதி அனுப்பிய அறுபத்தேழு சிறுகதைகளில் ஒன்று கூட பிரசுரமாகவில்லை. பத்திரிகை அல்லது பதிப்பக ஆசிரியர் என்ன நினைக்கிறாங்களோ தெரியலியே.. குப்பை கதைகளெல்லாம் பிரசுரமாகுதுப்பா. என் கதைகள் கொஞ்சம் புத்திசாலித்தனமானவை. உள்ளுணர்வுகளைத் தூண்டுபவை. சில கதைகள் முதிர்ந்த வாசகர்களுக்கானவை. டப்பா கதைகளெல்லாம் பிரசுரமாகையில் நான் விழிக்கிறேன்.."

"எத்தனையோ பேர் சிறுகதை எழுதி பிரபலமாறாங்களே? பத்திரிகைகளில் அவர்களின் கதைகள் தொடர்ந்து வருதே? ஜெயமோகன், சாரு நிவேதிதா, ராமகிருஷ்ணன்..."

"அதான் விழிக்கிறேன்.. பிரபலங்கள் என்ன குப்பை எழுதினாலும் பிரசுரமாவுது. பிரபலமாவது எப்படி? பிரபலமாக வாசக ஆதரவு தேவை. ஆனால் பிரசுரிக்கும் ஆசிரியர்களின் கவனத்தைக் கவர்ந்தால் தானே வாசகரைச் அடைய முடியுது?"

"பத்திரிகை ஆசிரியர்களுக்குப் பிடித்தமான முறையில் எழுத வேண்டியது தானே?"

"அதெப்படி தெரியலியே? குங்குமம் ஆசிரியருக்குப் பிடிச்சது குமுதம் ஆசிரியருக்குப் பிடிக்காது. கல்கிக்கு பொருந்தும் கதை விகடனுக்குப் பொருந்தாது. போதாக்குறைக்கு எல்லாப் பத்திரிகைகளிலும் ஒரு பக்கக் கதை என்று படு குப்பையாக எதையோ பிரசுரிக்கிறாங்க. அல்லது முத்திரைக்கதைனு ஒரே ஒரு சிறுகதை வெளியிடுறாங்க. யாரும் பத்திரிகை படிக்கிறதில்லையோனு தோணுது.."

"அப்படிச் சொல்ல முடியாது.. பத்திரிகைகளின் ஒட்டு மொத்த வாசிப்பு அதிகமாயிட்டிருக்குனு ABC புள்ளிவிவரங்கள் சொல்லுது. தங்கள் பத்திரிகை இமெஜ் மற்றும் வாசக வட்டத்தைப் பற்றி ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு கருத்து வச்சிருக்கலாம். அதற்கேற்றபடி கதை எழுதினால் பிரசுரமாகும்"

"சொல்வதற்கென்ன.. வாய் கூட வலிக்காது. எப்படிச் செயலில் காட்டுவது?"

"ஹ்ம்ம்"

"நீ ஏம்பா பெருமூச்சு விடுறே? நானில்லே புலம்பறேன்?"

"பெருமூச்சில்லை. யோசிக்கிறேன். எல்லாப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் பிடித்துப் போகிறாப்புல... தானே வடிவமைத்துக்கொள்ளும் ஒரு கதை எழுதினால்?"

நாங்கள் வெறும் காபி குடித்து அரட்டை அடித்துக் கொண்டிருந்ததால் திடுக்கிட்டேன். "என்ன சொல்றே? நீ மட்டும் தனியா தண்ணி கிண்ணி போட்டியா? தானே வடிவமைத்துக்கொள்ளும் கதையா? அதெப்படி சாத்தியம்?"

"ஆமாம். கம்ப்யூடரை வைத்துக்கொண்டு ஒரு க்வான்டம் அலை உருவாக்கினால், இது சாத்தியம்"

மறுபடி விழித்தேன். நீங்களும் விழித்தால் ஒரு சிறிய அறிமுகம் அவசியமாகிறது.

ஸ்டேன்பர்டு-எம்ஐடி பல்கலைக்கழகக் கூட்டுறவில் ஓசைப்படாமல் இயங்கிக்கொண்டிருக்கும் குவான்டம் ஆய்வுக் குழுமத்தில் உப தலையாக பணி புரிகிறான் ரகு. இந்தத் துறையின் வஸ்தாது. குவான்டம் கம்ப்யூடிங்கை வைத்து என்னென்னவோ ஜாலங்கள் செய்யமுடியும் என்கிறார்கள். இப்போ இருக்கிற கணினிகளெல்லாம் ஒன்றுமேயில்லை. தானே ஜனித்து தானே வளர்ந்து தானே உணர்ந்து தானே விரியும் கணினிகளை வைத்து மனிதம் எங்கேயோ போகப் போகிறது என்று அடிக்கடி சொல்வான்.. என்றாலும் இப்போது தான் உருப்படியாக ஏதோ ஒரு பயன் சொல்லியிருக்கிறான். குவான்டம் கம்ப்யூடர் கதை எழுதும் என்று. அதுவும் நம்ப முடியாத விஷயம்.

"என்ன முழிக்கிறே?" என்றான் ரகு.

"இல்லே. சென்னைப் பித்தன்னு ஒரு எழுத்தாளர் இருக்கார். தனித்தமிழ் விரும்பி. அவரு கோவிச்சுக்காம இருக்கணுமேனு தோணிச்சு. குவான்டம் என்கிறதுக்குத் தமிழ் தெரியாதே ரகு?"

"அவரை ஏம்பா இழுக்குறே?"

"இல்லேப்பா. ஒரு வேளை.. இந்த அனுபவத்தை நான் எழுதுறப்ப தமிழில் வார்த்தை தேடணுமில்லே? இதோ பாரு" என்று என் ஐ-போனில் கூகில் மொழிபெயர்ப்பைக் காட்டினேன். quantum என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு குவாண்டம் என்றது தமிழில் கூகில் - தேவையில்லாமல் மூன்று சுழி ண வேறே.. "சரி போகுது. உன் ஜாலவித்தை பத்திச் சொல்லு"

"எங்க அலுவலகக் கணினியில் ஒரு ப்ரோக்ரேம் எழுதுறேன். குவான்டம் வேவ். உன் சிறுகதைக்குத் தேவையான கரு, உரை, நடை, வீச்சு போன்றவற்றைப் பொதுப்படையாகக் கொடுத்து ஒரு குவான்டம் அலை உருவாக்குறேன். கதையைப் படித்து முடிக்கும் வரை.. அலையுடன் தொடர்பு இருக்கும் வரை.. வாசிப்பு அனுபவம் வாசிப்பவரின் எதிர்பார்ப்புக்கு இணங்க மாறிக்கொண்டேயிருக்கும்.. எல்லாவற்றையும் பரோக்ரேம் பார்த்துக் கொள்ளும். கதை படித்து முடித்ததும் அலையும் துண்டிக்கப்படும். ப்ரோக்ரேம் முடிந்ததும் பலனும் கிடைக்கும். படித்தவரின் ரசனைக்கேற்ப கதை அமைந்திருக்கும்"

"நம்பவே முடியலே"

"இப்பவே போகலாம் வா" என்று என்னை இழுத்துக்கொண்டு பேலோ ஆல்டோ விரைந்தான். தன் தனி அலுவலறையில் இருந்த கணினி முன் அமர்ந்து சிறுகதை எழுதுவது பற்றிய நிறைய விவரங்கள் கேட்டறிந்து கொண்டான்.

    றுநாள் மாலை என்னை அலுவலகத்துக்கு அழைத்தான் ரகு. விரைந்தேன். "டேய்.. ப்ரோக்ரேம் தயார். யார் யாருக்கு அனுப்பணும் சொல்லு" என்றான்.

"ஒரு தடவை நான் கதையைப் படிக்கிறேண்டா"

"கூடாது. நீ படிச்சுட்டா வேவ் முடிஞ்சுடும். பத்திரிகை ஆசிரியருக்குப் பொருத்தமா ப்ரோக்ரேம் முடிவுகள் அமையாமல் போயிடும்"

"அப்போ.. என் கதையை நான் படிக்கக் கூடாதா?"

"கணினி எழுதினது.. இருந்தாலும் உன்னதுனு சொல்லிக்கலாம்.. தப்பில்லே.. ஆனா பிரசுரமானதும் படி"

"நீயாவது படிச்சியா?"

"பிரசுரமானதும் நிச்சயம் படிப்பேன்"

"நிச்சயம் பிரசுரம் ஆகுங்கறே?"

"நிச்சயத்துக்கு ஒரு படி மேலே. தமிழில் வந்த சிறுகதைகளிலேயே சிறந்ததாக அமையணும்னு குறிக்கோள் கொடுத்து ப்ரோக்ரேம் செஞ்சிருக்கேன். அனுப்புற கதைகள் எல்லாம் தலைசிறந்த சிறுகதைகள்னு பேர் வாங்கும். துணிஞ்சு அப்படியே பத்திரிகாசிரியர்களுக்கு அறிமுகம் செய்யலாம்"

"அதெல்லாம் வேணாம்.. சும்மா சிறுகதைனே அறிமுகம் செஞ்சு அனுப்பு. குமுதம், கல்கி, விகடன், குங்குமம்.. இது நாலுக்கு அனுப்பு"

"எதுக்கு பயப்படுறே? சரி.. என்னப்பா இது.. ஆயிரக்கணக்கா தமிழ்ப் பத்திரிகைங்க வந்தாச்சு.. இன்னும் அந்த நாலையே பிடிச்சிட்டிருக்கே?"

"அந்த நாலும் தான் லீடர்ஸ்.. அதுல பிரசுரமானா..."

"சரி. உன் இஷ்டம்.." என்று கணினியில் சிறிது நேரம் தட்டினான். எழுந்தான். "அனுப்பியாச்சு. அவ்வளவு தான். இனி மேல் நீ கதை எழுதி அனுப்ப வேண்டியதில்லை. 'கதை அனுப்புங்க சார்'னு ஒவ்வொரு பத்திரிகாசிரியரும் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கதறுவாங்க பாரு" என்றபடி நாற்காலியில் சாய்ந்தான்.

"அது மரியாதையில்லே, அது மரியாதையில்லே" என்று நானும் விடைபெற்றேன்.

எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எனினும் பல்லைக் கடித்தபடி நாளை.. வாரங்களைக் கடத்தினேன்.

    று வாரங்களாகியும் எந்தப் பத்திரிகையிலும் என் கதை எதுவும் வரவில்லை. எட்டாம் வாரம் குங்குமம் பத்திரிகை தலைமைப் பொறுப்பாசிரியர் திருமுருகனிடமிருந்து ஒரு இமெயில் வந்தது.
    "அன்பின் அப்பாதுரை. நீங்கள் அனுப்பிய கதை படித்தேன். உங்கள் அறிமுகப்படியே இது தமிழில் மிகச் சிறந்த சிறுகதை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தக் கதையை அறுபது வருடங்களுக்கு முன்பே கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற பெயரில் புதுமைப்பித்தன் எழுதிவிட்டாரே? வேண்டுமானால் புதுமைப்பித்தனின் கதையை விமரிசனம் செய்வது போல் அரைப் பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்புங்களேன்? கதையோடு சேர்த்து ஒரு ஓரமாகப் பிரசுரம் செய்துவிடுவோம்?".

எனக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என்பதால் மதிப்பு வைத்து இமெயில் அனுப்பியிருந்தார் திருமுருகன். அவர் எழுதாத எண்ணங்கள் என்னை உக்கிரமாகத் தாக்கின. மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை விட மோசமாகிவிட்டதே! ரகுவின் அலுவலகத்துக்கு விரைந்தேன்.

"என்னடா! பிரசுரமாச்சா? அவனவன் கதை வேணும்னு லைன் கட்டி நிக்க ஆரம்பிச்சிருப்பானுவளே?" என்றான் ரகு.

"அடிக்காத குறை" என்றேன். "டேய்.. அந்த ப்ரோக்ரேம்.. அது என்னென்ன கதை அனுப்புச்சுனு பாருடா" என்றேன் எரிச்சலுடன்.

"ஆர் யூ ஷூர்?" என்றபடி விவரங்களை அச்சில் பிரதியெடுத்தான். எல்லாமே புதுமைப்பித்தன் கதைகள். பெயர் மட்டும் மாறியிருந்தது.

"தமிழின் தலைசிறந்தச் சிறுகதைனு ப்ரோக்ரேம் வரம்பமைச்சேன்.." என்றபடி கம்ப்யூடரையும் என்னையும் மாற்றி ஏற இறங்கப் பார்த்தான்.

என்ன செய்வதென்று தெரியவில்லை. அமைதியானேன். திடீரென்று உரக்கச் சிரித்தேன். ரகுவைத் தட்டி "உன் கம்ப்யூடர் தவறு எதுவும் செய்யவில்லை. தலைசிறந்த கதைகள் எழுத ஒருவரால் மட்டுமே முடியும்" என்றபடி வெளியேறினேன்.



இக்கதை Eric James Stone (EJ) எழுதிய 'the greatest science-fiction story ever written' என்கிற கதையின் அப்பட்டமானத் தழுவல். அத்தனை சிறப்பும் EJவுக்கு. குறைகள் என்னுடையவை. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.