2010/03/30

மெல்லிசை நினைவுகள்



ந்தப் பதிவுக்கான பாடலை என் வயதுக்காரர்களும், முன் வயதுக்காரர்களும், பல பின் வயதுக்காரர்களும், வருடக்கணக்காக விரும்பிக் கேட்பதை அறிவேன்.

என்னுடைய அபிமான பாடகர்கள் வரிசையில் பிபிஸ்ரீக்கு இடமிருந்தாலும், முன்னணியில் இல்லை. ஜேசுதாசை விட இரண்டு படி மேலே கொடுத்திருக்கிறேனே தவிர, பிபிஸ்ரீ குரலைக் கேட்டால் எனக்குத் தூக்கம் தான் வரும் பெரும்பாலும். ஜேசுதாஸ் குரலைக் கேட்டால் உடனே சோகமும் குறட்டையும் கூடவே வரும் - அது இன்னொரு பதிவில்.

பிபிஸ்ரீ பாடல்களை இசையின் காரணமாக ரசித்துக் கேட்டிருக்கிறேன். பத்து பதினைந்து பாடல்கள் போல் பிபிஸ்ரீ அருமையாகப் பாடியுமிருக்கிறார். அந்தப் பத்துப் பதினைந்தில் இந்தப் பாடல், முதல் மூன்றில் அடங்கும் என்று நினைக்கிறேன். இத்தனை அருமையான இசையிலும் இந்தப் பாடலில் சில இடங்களில் அவர் குரல் என்னைத் தூங்க வைத்திருக்கிறது. தூங்க வைப்பது என்றால் தாலாட்டு அல்ல. காதலியின் கையைப் பிடித்துக் கொண்டு அடுத்த எதிர்பார்ப்பில் அலைந்து கொண்டிருக்கிறீர்கள் - அப்போது தூக்கம் வந்தால் எப்படி? என்ன நான் சொல்வது? பிபிஸ்ரீயின் குரல் அப்படியென்றால், படமாக்கப்பட்ட விதமோ மெத்தை தலையணை போர்வை போட்டு இழுத்து மூடாத குறைதான். எம்ஜிஆருக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தாத குரல். அதுவும் குண்டு எம்ஜிஆர். முதலிரவு கனவுப் பாடல் காட்சியை இப்படியா கும்பகர்ண வகைப்படுத்துவார்கள்? பிபிஸ்ரீ எந்தப் பாட்டைப் பாடினாலும் உடனே 'ஹிட்' டாகுமென்று பல பேட்டிகளில் எம்எஸ்வி குறிப்பிட்டிருக்கிறார். எனக்கென்னவோ இந்தப் பாட்டை டிஎம்எஸ் பாடி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பின்னியிருப்பார் மனிதர்.

இந்தப் பாடலைத் தேர்வு செய்ய சில காரணங்களுண்டு. விசுவனாதன்-ராமமூர்த்தியின் இனிமையான துள்ளலிசை நிச்சயமான காரணம். துள்ளலும் கொஞ்சலும் கூடிய சுசீலாவின் குரல் அடுத்தக் காரணம். முக்கியமான காரணம் கண்ணதாசனின் வரிகள்தான். இன்றைக்கும் இந்தப்பாடலை ரசித்துக் கேட்க முடிகிறது, கேட்கிறார்கள் என்றால் கண்ணதாசனின் வரிகள் தான் காரணம் என்று அடிக்காமல் சொல்வேன், அருகில் வாருங்கள்.

காதலர்கள் பொதுப்பார்வையில் இருக்கும் போது கண்களால் தொட்டுக் கொள்கிறார்கள். தனிமையில் கைகளால் தொட்டுக் கொள்கிறார்கள். சாதாரணமான நடப்பைச் சாதாரணமாகச் சொல்கிற பாடல்தான். சில பாடலாசிரியர்கள் இதே கருத்தை, 'கண் ஜன்னல் வழியாக குதித்து கையில் சிறை புகுந்தாய்' என்று எழுதுவார்கள். சிலர் 'கண் பார்வையின் வியர்வை அதைக் கையால் துடைக்கும் தயவை..' என்று ஏதாவது எழுதுவார்கள். கண்ணதாசனுக்கு ஈடு இணை உண்டோ? கண்ணதாசன் சொல்லியிருக்கும் விதத்தில் புதுமையும் இலக்கியமும் கலந்திருக்கிறது. 'கண் வண்ணம் அங்கே கண்டேன், கை வண்ணம் இங்கே கண்டேன்' என்று எழுதியிருக்கிறார். அதை காலங்காலமாகத் தொடர்ந்து ரசிக்கும்படி இசையும் அமைத்திருக்கிறார்கள் விசுவனாதன்-ராமமூர்த்தி. பாடல் முழுவதும் தபலாவை குமுக்குகிறார்கள் (தபலா என்று தான் நினைக்கிறேன், அது தபலா கிடையாது தஷ்லா என்று யாராவது திருத்தாமல் இருக்க வேண்டுமே, கடவுளே!). 'கார் வண்ணக் கூந்தல் தொட்டு' என்ற இடத்தில் உருட்டுகிறார்களே, அந்த ஒலிக்காகவே பாடலைத் திருப்பித் திருப்பிக் கேட்டிருக்கிறேன்.

கனவு மென்மையோடு தொடங்கும் பாடல், உடனே சூடு பிடித்து கிடார், வயலின், குழல் என்று இசையுடன் நீரருவி போல் பாய்ந்து பரவி ஓடுகிறது. கடைசி வரை டெம்போ குறையாமல் பிசகாமல் இசை அமைத்திருக்கிறார்கள். சுசீலா கை கொடுத்திருக்கிறார்.

என்ன பாடலென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாடல் வரிகளை வைத்துக் கொஞ்சம் தமிழிலக்கியம் பரிமாற விடுவீர்களா?

கண்ணதாசன் பாடல்களில் கருத்தழகு மட்டுமல்ல, சொல்லழகையும் நிறைய கண்டிருக்கிறேன். இவருக்கு மட்டும் இத்தனை தமிழருள் கிடைத்திருக்கிறதே என்று சில சமயம் நினைப்பேன். பழைய தமிழ்ப்பாடல்களின் வடிவத்தைத் தன்னுடைய திரைப்பாடல்களில் கண்ணதாசன் பயன்படுத்தியிருப்பதை, நான் வளர வளர உணர்ந்தேன். கண்ணதாசன் திருப்பிப்போட்ட தமிழ்ப்பாக்களை வைத்து ஒரு பெரிய புத்தகம் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

இந்த 'வண்ணம்' கருத்தை முதலில் எழுதியவர் கவியரசரில்லை; கவிச்சக்கரவர்த்தி. தன்னுடைய ராமாயணக்கதையில் இப்படி எழுதுகிறார் கம்பர்.
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
  இனியிந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
  துயர்வண்ணம் உறுவ துண்டோ
மைவண்ணத் தரக்கி போரில்
  மழைவண்ணத் தண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
  கால்வண்ணம் இங்குக் கண்டேன்


அகலிகைக்கு விமோசனம் கிடைத்ததும் வரும் பாடல். ராமன் தொட்டால் விமோசனமாம். கை பட்டு ஒருத்திக்கு விமோசனம், கால் பட்டு இன்னொருத்திக்கு விமோசனம். இவ்வளவு தான் செய்தி. 'கருவண்ணத் தாடகையுடன் (இன்னும் எத்தனை அரக்கிகளோ தெரியவில்லை) போரில், மேகவண்ணணே, அங்கே உன்னுடைய கைத்திறனைக் கண்டேன். எனக்கு விமோசனம் தந்த இங்கே உன் கால்திறனைக் கண்டேன்.' அந்த 'வண்ணம்' வார்த்தையை வைத்துக் கொஞ்சம் உருகியிருக்கிறார் கம்பர். தமிழார்வம் மிகுந்தோரை உருக்கியிருக்கிறார்.

கண்ணதாசன் காப்பியடித்தாரா? நிச்சயமாக கம்பன் கற்பனையை எடுத்தாண்டிருக்கிறார். இந்தப் பாடல் மட்டுமல்ல, கம்ப காவியத்திலிருந்து எத்தனையோ கருத்துக்களை அபேஸ் பண்ணியிருக்கிறார். பிறகு ஏன் கண்ணதாசன் வரிகளில் புதுமை என்றேன்? கண்ணதாசன் காப்பியடிக்கவில்லை என்றால் இந்த சொல்லழகுப் பாடல்களை சாமானியர்கள் ரசித்திருக்க முடியாது, தெரிந்து கொண்டிருக்கவும் முடியாது, என்பது என் கருத்து. கம்பனின் சொல்லாடல் பொருளாடலை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று என் போன்றவரை வருடக்கணக்கில் ரசிக்கும்படி செய்திருப்பதே கண்ணதாசனின் புதுமை. எம்எஸ்வியின் கொடை.

எம்எஸ்வி-5 | 2010/03/30 | பால் வண்ணம்

2010/03/24

காங்கலியே?

கவிதை













கட்டிவச்ச கோவிலுண்டு நாட்டுலே
    கடுங் காலித்தனம் ஒழியக் காங்கலியே?
பட்டியெல்லா மடங்களுண்டு நாட்டுலே
    பசி போகப்பிடிச் சோத்தைக் காங்கலியே?

மேகங்கொட்டி வெள்ளமுண்டு நாட்டுலே
    மவ தாகத்துக்கு நீரைக் காங்கலியே?
ராகத்தோடே பாட்டுமுண்டு நாட்டுலே
    ராத் தூங்கவொரு கவியைக் காங்கலியே?

கத்தரல்லா கந்தனுண்டு நாட்டுலே
    குணங் காக்கவொரு கடவுளக் காங்கலியே?
மெத்தமெத்த படிப்புமுண்டு நாட்டுலே
    மன மொத்துவாழு மறிவைக் காங்கலியே?

ஆனந்தம் அருளுமுண்டு நாட்டுலே
    அட அடுக்களையில் அன்பைக் காங்கலியே?
வானந்தொட்ட காதலுண்டு நாட்டுலே
    வழி வாழவொரு துணையைக் காங்கலியே?

பத்தாயிரந் தொழிலுண்டு நாட்டுலே
    பய பொழைக்கவொரு வழியைக் காங்கலியே?
எத்தனையோ லெட்சமுண்டு நாட்டுலே
    எஞ் செலவுக்கொரு சல்லிக் காங்கலியே?

2010/03/12

மெல்லிசை நினைவுகள்



    ந்தப் பதிவுக்காகச் சில பாடல்களைத் தேர்ந்தெடுத்த போது ஒன்று புரிந்தது. பதிவுக்குத் தேர்வு செய்யும் சாக்கில் பழைய பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க முடிகிறதே? சாதாரணமாக ஒரு முறை கேட்டு ரசித்து விட்டு அடுத்த பாட்டுக்குத் தாவுவேன். பதிவுக்காகப் பல முறை எம்எஸ்வியின் மெல்லிசையைக் கேட்க வேண்டியிருக்கிறது. இந்தப் பதிவுக்கான பாடல்கள் பல கண்ணதாசன் எழுதியவை என்று தெரிந்த போது, அவருடைய கவிதைக்காகவும் ரசித்துக் கேட்டேன். கரும்பு தின்னக் கூலி. பழந்தின்னப் பொன் தட்டு. முத்தமிட மேனகை. ஓகே, ஓகே.

தேர்ந்தெடுத்த பாடல்களில் பல முறை ரசித்த பாடல் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'. சாதாரண வரிகள், மிகச் சாதாரணப் படப்பிடிப்பு, தேவையில்லாத பாடல் காட்சி. பொருந்தாத நடிப்பு. இவை எல்லாவற்றையும் மறக்கடிக்கும் மெட்டு, இசை, குரல். ஜானகியின் குரலில் கீச்சொலி வெளிப்படாமல் பாடச் செய்தவர் எம்எஸ்வி. இந்தப் பாடலின் பல்லவி 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' இரண்டாவது முறையாக (அனுபல்லவி?) வரும் போது - பாடல் தொடங்கி இருபத்திரண்டு நொடிகள் போல் கடந்து வருகிறது - அந்த இடத்தில் கவனியுங்கள். பேங்கோஸ், டிரம்ஸ், கிடார், பேஸ் கிடார், சேக்சபோன் (என்று நினைக்கிறேன்) கலந்து அசத்தும். இரண்டு நொடிகளுக்கும் குறைவாகத்தான் வருகிறது என்றாலும், கேட்டால் புல்லரிக்கும். ஹெட் செட் அணிந்து கேளுங்கள், இசை நுணுக்கம் புரியும். இந்தப் பாடலின் சிறப்பே இசை தான். கிடார், பியேனோ, குழல், வயலின், நாயனம் (க்ளேரினெட்?) என்று மன்னர் பின்னிவிட்டார்.


'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாட்டை இப்போது தான் ஒரு முறைக்கு மேல் தொடர்ந்து கேட்டேன், பார்த்தேன். மிக எளிமையான பாடல். எனினும், 'தாய்க்கு நீ மகனில்லை' மற்றும் 'வஞ்சகன் கண்ணனடா': ஒரு வரிக் காவியங்கள். இந்தப் பாட்டுக்காகப் படத்தை மறுபடி பார்த்தேன். சொல்ல வந்த கருத்தை மறைமுகமாக, ரசிக்கும்படி, ரசித்து ரசித்து வியக்கும்படி எழுத சில கவிஞர்களால் மட்டுமே முடியும். 'தாய்க்கு நீ மகனில்லை' 'வஞ்சகன் கண்ணனடா' வரிகளைக் கொஞ்சம் விரித்துப் பார்த்தால், கண்ணன் வாயுள் தெரிந்த அண்டம் போல கர்ணன் கதையே தெரிகிறது. புறக்கணித்தத் தாய் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மகனின் சோகம், ஏக்கம், ஆதங்கம், வலி எல்லாமே 'தாய்க்கு நீ மகனில்லை' வரியில் வெளிப்படுகிறது. அந்த வலிகளுக்குக் காரணம் தாயுமல்ல, மகனுமல்ல - சதிகாரன் விதிவாணன் என்பதை 'வஞ்சகன் கண்ணன்' வரி வெளிப்படுத்துகிறது. கம்பன் வரி ஒன்று நினைவுக்கு வருகிறது. ராம சகோதரர்கள் கோதாவரி நதியை அடைந்ததும் அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு வியக்கிறார்கள். நதியைக் கம்பன் எவ்வாறு வர்ணிக்கிறார் தெரியுமா? ராமன் பார்வைக்கு 'சான்றோர் உள்ளம் போல்' இருந்ததாம் நதி. நதியின் ஆழத்தையும் பிரம்மாண்டத்தையும் எவ்வளவு அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்! வேறு யாருக்கு வரும் இந்தக் கற்பனை? கவியரசுக்கு வரும். அதன் வெளிப்பாடு தான் 'வஞ்சகன் கண்ணன்' வரி. பாரதக் கதையின் பின்னணியை இரண்டே சொற்களில் செதுக்கி இருக்கிறார். சீர்காழியின் குரல் கம்பீரமென்றால் மன்னர்களின் இசை இதமான மிதம். (ரசித்த இன்னொரு காட்சியில் பாட்டு, இசை, நடிப்பு, படப்பிடிப்பினால் 'மேனியைக் கொல்வாய்' வரியின் அழுத்தம் என்னை மிகவும் பாதித்தது).
ன்னுடைய தனிப்பட்ட 'Top 10' பாடல்களில் ஒன்று 'உலகமெங்கும் ஒரே மொழி'. ஆயிரக்கணக்கில் கேட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். இப்போது போடுங்கள், உட்கார்ந்து கேட்பேன். இந்த மெட்டும் 'அன்று வந்ததும் இதே நிலா' மெட்டும் ஒரே கூட்டில் வடித்த தேன். கூடு இறக்குமதியோ? நீங்களே கேட்டுப் பாருங்கள்.

ன்னும் சில பாடல்களையும் கேட்டு ரசித்தேன். 'உன்னைத் தானே', 'உறவு என்றொரு சொல் இருந்தால்', 'உன் விழியும் என் வாளும்', 'உலகம் நீயாடும் சோலை'. மான் விழி, வேல் விழி, வாள் விழி எல்லாம் கேட்டிருக்கிறோம், 'பெண்ணின் விழியோடு வாள் போராடி வெற்றி பெருமா?' என்ற மிகவும் ரசிக்கும்படியான கற்பனைப் போட்டியை முன் வைத்தவர் வாலியா, கண்ணதாசனா தெரியவில்லை. இசையும் மெட்டும் அருமை. 'உலகம் நீயாடும் சோலை' பாடலைக் கேட்டு ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். டிவிடி பக்கம் போகவே பயமாக இருக்கிறது. சொல்லிவிட்டேன், அப்புறம் உங்கள் இஷ்டம்.

முன்பே சொன்னது போல் மிகச் சாதாரணமான காட்சியைப் பாடலும் இசையும் வலுப்படுத்த முடியுமென்பதை எம்எஸ்வி பாடல்களை உதாரணம் காட்டிச் சொல்லலாம். 'உனக்கென்ன மேலே நின்றாய்' பாடலும் ஒரு உதாரணம். பாட்டெழுதியது வாலியா, கண்ணதாசனா? ட்ரம்பெட், மேளம், குழல் (எப்படிப் புகுத்தியிருக்கிறார்!), எஸ்.பி.பியின் குரல் என்று மிதமான டெம்போவில் மெல்லிசை மன்னர் முத்திரை பதித்த பாடல். நிறையக் கேட்டிருக்கிறேன். டிவிடி பக்கம் போகவேண்டாம் என்ற அறிவுரை, எச்சரிக்கை இங்கேயும் பொருந்தும்.


திவுக்காக நான் மிகவும் ரசித்த இன்னொரு பாடல்: 'உத்தரவின்றி உள்ளே வா'. எம்எஸ்வி புகுந்து புறப்படும் பல பாடல்களில் இது ஒன்று. எளிமையான தாளமிட வைக்கும் மெட்டுக்கு எத்தனை விதமான இசைக் கருவிகள்! பல்லவியின் துள்ளும் மேற்கத்திய மெட்டுக்கு 'பூமியில் மானிட' சரணத்தின் மிதமான கர்னாடக மெட்டு, இனிமையான முரண்பாடு. எம்எஸ்வியின் டிரேட்மார்க். பல பாடல்களில் இந்த உத்தியைக் கையாண்டிருக்கிறார். மற்ற இசையமைப்பாளர்கள் அதிகம் பயன்படுத்தாத உத்தி என்று தோன்றுகிறது. ஸ்ரீதரின் படப்பிடிப்புக்கு நூறு மார்க். 'மின்னல் மயக்கம் கொள்ளாதோ?' வரியில் குறும்பு கூடிய ஆழமான கவிதை இருக்கிறது. மின்னலுக்கு மயக்கம் வருமளவுக்கு, வேண்டாம், இதை ராமசுப்ரமணி படித்தாலும் படிப்பார். பாட்டை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ந்தேன், வந்தேன். இதோ பதிவுக்காக நான் தேர்ந்தெடுத்த பாடல். கவிதை, குரல், இசை, நடிப்பு, படப்பிடிப்பு என்று ஒவ்வொரு பரிமாணத்திலும் என்னை ரசிக்க வைத்த பாடல். முழுமையாக ரசிக்க வைத்த பாடல். சிவாஜி கணேசனின் கதாபாத்திரத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் சௌகார் ஜானகி ஏசுவார். மறுமொழி சொல்லாமல் அத்தனை ஏச்சையும் பேச்சையும் பெற்றுக் கொண்டு அடக்கி வாசிப்பார் சிவாஜி. பொதுவாக, திரைப்படங்களில் பாடல்களைப் புகுத்துவதற்கான rationale ஒன்றும் கிடையாது. பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு பாடல் என்பதைத் தவிர. இந்தக் காட்சியைப் பொறுத்தவரை பாடல் மிகப் பொருத்தம். பதில் பேச முடியாத சிவாஜி கதாபாத்திரத்துக்குத் தன் எண்ணங்களைக் கொட்ட வடிகால் ஒன்று தேவைப்படுகிறது. அந்த நிலையில் நாமிருந்தால் நமக்கும் அப்படித்தான். இந்தப் பாடல் ஒரு emotional release. சிவாஜி அதை உணர்ந்து நடித்திருக்கிறார். பாடல் வரிகள் சான்றோர் உள்ளம் போலத் தான். தோண்டத் தோண்ட ஆழம். ஆமை, ஊமை எல்லாம் rhymeக்காக எழுதப்பட்டவை என்று நினைத்தேன். படத்தைப் பார்த்ததும் புரிந்தது.

சோகத்தை வேதனையை வெளிப்படுத்தும் காட்சிக்கான பாடல். இதற்கு வீணை சிதார் போட்டு டொய் டொய் என்று சோக இசை சேர்த்திருக்கலாம். மெல்லிசை மன்னர்(கள்) அதைச் செய்யவில்லை. சோகமான pathos மெட்டு. ஆனால் இசையில் நம்பிக்கையும் துள்ளலும் இருக்கிறது. 'நாட்பட நாட்படப் புரியும்' என்ற வரிகளின் நம்பிக்கை தான் பாடலின் வேர். சிவாஜி கேரக்டர் சோகத்தில் தலை மேல் கை வைத்துக்கொண்டு அழும் கேரக்டர் இல்லை - பாசமலர் போல். இந்தப் படத்தின் துவக்கத்தில் போர்க்கைதியாக துன்பம் மேற்கொண்டவர் மற்றவர்களின் சாதாரணக் குற்றச்சாட்டுக்கு அழுது அடம் பிடித்தால் பொருந்தாது. அதற்கு ஏற்றார் போல் காட்சி, பாடல், இசை அமைந்திருப்பதால் மீண்டும் மீண்டும் ரசிக்க முடிகிறது. சினிமா பாடலின் பின்னணியில் இத்தனை நுணுக்கமா என்றால், இதற்கு மேலும் இருக்கிறது என்பேன்.

சிவாஜியின் கேரக்டர் எப்படித் தன் உள்ள வேதனையை வெளிப்படுத்துமோ அதைக் கவிதை வரிகளில் கொண்டு வந்திருக்கிறார் கவியரசு. ஆர்ப்பாட்டமில்லாத இசை, அமைதியான மெட்டு. டிஎம்எஸ் குரலின் தெளிவும் அடக்கி வாசிக்கப்பட்ட கம்பீரமும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். இதில் பாருங்கள், பாடலின் முதல் சரணத்தில் சிவாஜி வலது கையையும் இடது தோளையும் மட்டும் நடிக்க வைப்பார். இரண்டாவது சரணத்தில் இடது கையயும் வலது தோளையும் நடிக்க வைப்பார். பாடல் பெரும்பாலும் க்ளோசப்பில் எடுக்கப்பட்டிருக்கிறது. இடுப்புக்கு மேல் தான் காட்சியில் தெரிகிறது என்றாலும் சிவாஜி நொண்டுகிறார் என்பது புரிகிறது. கவனித்துப் பாருங்கள். சிவாஜி அணிந்திருக்கும் கோட், டை கூட நடிப்பது போல் ஒரு பிரமை. சே, இவருக்கு ஏன் மூப்பும் மரணமும்?!

மன்னரின் மெல்லிசைப் புதையலில் இன்னொரு நல்முத்து.

எம்எஸ்வி-4 | 2010/03/12 | உள்ளம் என்பது ஆமை