சினிமா-4 | 2010/10/29 | Fred Astaire |   maestroவின் masterpiece   (பாலை பாபாவுக்குப் பணிவன்புடன் :-) ...puttin' on the ritz |
சினிமா-4 | 2010/10/29 | Fred Astaire |   maestroவின் masterpiece   (பாலை பாபாவுக்குப் பணிவன்புடன் :-) ...puttin' on the ritz |
மாற்று:
    என் பதில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்ததா என்பது தெரியவில்லை. பாலைவனக்கல் போல் அசையாதிருந்தான். என் அப்பா இறந்த விவரங்கள் கேட்டான். அலுத்துப் போகும் வரை சொன்னேன். 'இது எங்கே போகிறது?' என்று நினைத்தேன். பிறகு, "துரை, உங்க அப்பாவின் உருவம் தோன்றுவது எதனால் என்று நினைக்கிறீர்கள்?" என்றான்.
நான் பதில் சொல்லவில்லை.
கெவின் சில நிமிடங்கள் அமைதி காத்துவிட்டு, "நீங்க உங்க அப்பா உருவத்தைப் பார்ப்பது, உங்க உள் விகாரம். ஏதாவது குற்ற உணர்வா? கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்லுங்க" என்றான். இன்னும் சில நிமிட அமைதிக்குப்பின், "தாயத்தைக் கையில் எடுத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றியது?" என்றான்.
"என் அப்பா சாகவேண்டும் என்று நினைத்தேன்" என்றேன் நிதானமாக.
இருபது வருடங்களாக அடைத்திருந்த கதவு உடைந்துத் தெறித்தது. "எனக்கும் என் அப்பாவுக்கும் சுமுகமான உறவே இல்லை. எதற்கெடுத்தாலும் அடி உதை ஆத்திரம் ஆங்காரம்னு இருந்ததால எனக்கு வேறு எதுவும் தோணல. பேயோட்டிய மறுநாள் காலை தேவையில்லாம, வளர்ந்த பிள்ளைனும் பாராம, என்னைத் திட்டி அவமானப்படுத்தினார். அந்த ஆத்திரத்தில் இருந்தவன், தாயத்து கிடைச்சதும் என்ன செய்றோமுன்னு தெரியாம வேண்டிக்கிட்டேன். அவருடைய கண்மறைக்கும் ஆத்திரம் எனக்குள்ளும் இருப்பதை அன்னக்கு நான் தெரிஞ்சுக்கலே" என்றேன். "இதெல்லாம் நடக்காதுனு தான் நினைச்சேன். ஆறு மாசத்துக்குள்ள சாலை விபத்தில அடிபட்டு, துணிப்பொட்டலமா வந்த அப்பா உடலைப் பாத்ததும் ரொம்ப உடைஞ்சு போனேன். வேண்டுதலின் விளைவா இருக்குமோனு சந்தேகப்பட்டேன். பிறகு வயலின் திலகத்துடன் ஓடிப்போனதும் எனக்குள் இருந்த சந்தேகம் தீந்து பயம், பிராந்தி... வெளிப்படையா இதைக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் என்னை இந்த உணர்வு அரிச்சுக்கிட்டே இருக்கு".
"நீங்க காண்பதாகச் சொல்லும் உங்க அப்பாவின் உருவம் உங்களை எந்த விதத்திலாவது துன்புறுத்தியிருக்கிறதா? அச்சப்படுத்தியிருக்கிறதா?"
"இல்லை. சொல்லணும்னா கொஞ்சம் பாவமா இருக்கும். ஆனா அடிக்கடி என் முன்னால தோண்றது எனக்கு தொல்லைதான்"
நோட்பேடில் என்னவோ கிறுக்கினான். "உங்க ட்ரீட்மென்டை ஒரு மைல்ட் ரிலேக்சன்டோட தொடங்கப்போகிறேன். ஆறு வாரத்துக்கு தினம் ஒரு வேளை. ஏங்சைடி சப்ரெசன்ட்" என்ற கெவின், என்னிடம் ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுத்தான். பிறகு, "நாளைக்குச் சில எலக்ட்ரோ மேக்னடிக் வேவ் ரீடிங் பாத்துடலாம். உங்க ந்யூரோ ஹெல்த் சரியா இருக்கானு பாத்துருவோம்" என்றான்.
தலையாட்டினேன்.
"துரை, இதற்கு மருந்து கொடுத்து குணமாக்க முடியும் என்று என்னால் சொல்ல முடியாது. லெட் மி கிவ் யு மை வ்யூ. நீங்க சொல்றது போலவே தாயத்தின் விளைவென்றே வைத்துக் கொள்வோம். உங்க நண்பர்களுக்கு நல்லது நடந்ததும் தொடர்ந்து ஒரு கெடுதல் நடந்ததும் தாயத்தினால்தான் என்றே வைத்துக்கொள்வோம். மே பி யூ ஆர் லக்கி. உங்க நண்பர்கள் வேண்டியது எல்லாமே பாசிடிவ். நீங்க வேண்டிக்கொண்டது நெகெடிவா பாடிசிவா சொல்ல முடியாது, என்றாலும் அடுத்தவர் இறந்து போக வேண்டும் என்று நினைப்பது நிச்சயம் பாசிடிவ் இல்லை என்பேன். சரியா? அதனால அவங்களுக்குத் தொடர்ந்து கெடுதல் நடந்தது போல் உங்களுக்கு நடக்கும் என்று இல்லையே? காரணம் உங்க அப்பா அகாலமாய் இறந்து உங்களுக்கும் உங்கக் குடும்பத்துக்கும் ஏற்கனவே பல கெடுதல்கள் உண்டானதாலே, மே பி, உங்களுக்கு பாசிடிவாக ஏதாவது நடக்குமோ என்னவோ?" என்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். "ஒரு வேளை உங்க அப்பாவின் உருவம் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறதோ என்னவோ? பார் ஆல் த இல்ட்ரீட்மென்ட் ஹி'ஸ் சபோஸ்டு ஹவ் டன்?". கடைசி வரிகள் உறைத்தன.
ஒரு வேளை என் அப்பாவின் உருவம் என்னிடம் மன்னிப்புக் கோருகிறதா? என்னை மன்னிக்கச் சொல்கிறதா? கெவினிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். அவன் கொடுத்த ப்ரிஸ்க்ரிப்ஷனைக் கிழித்துப் போட்டேன்.
"அப்பா, உன்னை மன்னித்தேன். லெட்ஸ் பர்கெட்" என்றேன் உரக்க.
என்னை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்த தெருவோர சேக்சபோன் பிச்சைக்காரன் பிஏஜி என்றான். அவன் பையில் ஐந்து டாலர் நோட்டைத் திணித்து நடந்தேன். உளுத்த பெட்டி என் கண்ணெதிரே பொடிப் பொடியாகிக் கரைந்து போனது.
    "அப்புறம் உன்னை ஏண்டா கட்டிக்கிட்டா?" என்றேன்.
"அது வேறே கதைடா" என்றான் வயலின். "ஒரு நா திலகமும் அவ அம்மாவும் எங்க வீட்டுக்கு வந்து, திலகத்தை நான் கெடுத்துட்டதா சொன்னாங்கடா. திலகம் என்னைக் காட்டி நான் அவளைப் படுக்க வச்சதாவும் அதனால கர்ப்பமாயிட்டதாயும் சொன்னா. அதனால காதும் காதும் வச்ச மாதிரி எங்க வீட்லயும் அவ வீட்லயும் பேசி எங்களுக்கு கல்யாணம் கட்டி வச்சுட்டாங்கடா. நீ வந்தப்ப திலகம் கர்ப்பமா இருந்தது, என்னோட கர்ப்பம் இல்லடா" என்றான்.
என் அதிர்ச்சி அதிகமானது. "உனக்கு என்னடா பைத்தியமா பிடிச்சிருந்துச்சு? உண்மையைச் சொல்ல வேண்டியது தானடா?"
"ஒரு பொண்ணு ஒங்க வீட்டுக்கு வந்து, நீ தான் அவளைக் கெடுத்துட்டனு சொன்னா எந்த அப்பா அம்மா நீ சொல்றத கேப்பாங்கடா?" என்றான்.
"இப்ப எங்கடா அவ?"
"தெரியலடா. ஒரு நாள் பொழுது விடிஞ்சு பாத்தப்ப ஆளக்காணோம். எவனோடயோ ஓடிட்டா"
"கொழந்த?"
"அது... அந்த கர்ப்பம் கலஞ்சு போயிடுச்சுரா"
"திலகம் உன்னை நல்லா பயன்படுத்தியிருக்கா" என்றேன். எனக்கு ஆத்திரம் வந்தது.
வயலின் அமைதியாக, "ஆனா, ஓரளவுக்கு அது எனக்கு பிடிச்சு தாண்டா இருந்துச்சு. திலகத்தைக் கட்டிப்பேன்னு நான் கனவுல கூட நினைச்சதில்ல. தாயத்துக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்" என்றான்.
நாற்பது வயதுக்காரனின் தளர்ச்சியும் முதிர்ச்சியும் அவனுடைய பேச்சில் தென்பட்டது. நண்பனின் நிலை இப்படியானது வலித்தது. "பொடாங்... நீ மூளையிலாம நடந்துகிட்டு தாயத்து தயிர்வடைனுட்டு.." என்றேன் எரிச்சலை அடக்க முடியாமல்.
    அதற்குப் பிறகு, படிப்பிலும் ஒன்றிரண்டு காதல் விவகாரங்களிலும் கவனமாக இருந்ததால் கல்லூரி முடியும் வரை பம்மல் போகவில்லை. மேற்படிப்புக்காக ஐஐஎமில் இடம் கிடைத்ததால் உடனே பெங்களூர் கிளம்பிவிட்டேன். படிப்பு முடியுமுன்னரே மேனேஜ்மென்ட் ட்ரெய்னி வேலை கிடைத்து டெல்லி போனேன். டெல்லி கல்கத்தா என்று மூன்று வருடப் பயிற்சி முடிந்து சென்னைக்கு மாற்றம் பெற்று வந்து ஆறு மாதம் ஆகியிருந்தது. புதிதாக வாங்கியிருந்த ராஜ்தூத் யமஹாவில் ஒரு சுற்று சுற்றிவரலாமென்று சும்மா திரிந்த போது, ஜிஎஸ்டி-குரோம் லெதர் கம்பெனி சாலைகளின் முனையில் என் வண்டி காரணமில்லாமல் சட்டென்று நின்றது. புது வண்டி நின்று விட்டதே என்ற கடுப்பிலிருந்த என் எதிரே ஒரு முதியவர் அழுது கொண்டு போனதைப் பார்த்துத் திகைத்தேன். பழகிய முகம். என் முன் கை கூப்பிக்கொண்டே திரும்பிவந்தார். மன்னிப்பு கேட்கிறாரா பிச்சை கேட்கிறாரா என்று புரியவில்லை. திடீரென்று என்னருகில் தோன்றியவரைப் பார்த்து வண்டியை ஒரு கணம் மறந்தேன். என்னிடம் ஏதோ சொல்லவோ கொடை கேட்கவோ போகிறார் என்று நினைத்து வண்டியில் கவனமாக இருப்பது போல் நடித்தேன். என்னை ஏக்கமாகப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமலே போனார். பெட்ரோல் தீர்ந்து ரிசர்வுக்கு மாற்ற மறந்தது தெரிந்து என்னைத் திட்டிக்கொண்டே மாற்றினேன். வண்டி கிளம்பிவிட்ட நிறைவில், 'பாவம், பெரியவருக்கு என்ன கஷ்டமோ.. ஐந்தோ பத்தோ கொடுத்திருக்கலாமே' என்று நினைத்து அவர் போன வழியில் திரும்பியவன் திகைத்தேன். சாலையின் இருபுறமும் மைல் நீளத்துக்கு ஆளரவமே இல்லை. இரண்டு முறை இப்படி அப்படி மெள்ள ஓட்டிப் பார்த்தும் கிழவரைக் காணோம். எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று நினைத்தபடி வீட்டுக்கு வந்தேன்.
தேசியும் அவனுடைய அண்ணா பெண்ணும் வீட்டில் காத்திருந்தார்கள். "டேய், எனக்குக் கல்யாணம்டா. சாயந்திரம் நிச்சயதார்த்தம். கண்டிப்பா வாடா" என்றான். "லவ் மேரேஜுடா. இந்தா போட்டோ".
புகைப்படத்தில் பெண் இளமையாக, மிக அழகாக இருந்தாள். "யார்டா பொண்ணு?" என்றேன். "சொல்லவே இல்லையே? ரொம்ப அழகா இருக்கா". வாழ்த்தினேன். "வேறே யாரைக் கூப்ட? தடியன், வயலின், சேஜோ, காஜூகாரன் யாருனா வராங்களா?" என்றேன்.
"நீ மட்டுந்தாண்டா. வயலின் எதுலயும் கலந்துக்கறதில்லே. தடியன் ஊர்ல இல்லை. கோகுலம் காலனிப் பசங்களைக் கூப்பிடலைடா" என்றான்.
வயலினைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசினோம். தாயத்து பற்றிப் பேச்சு வந்தது. கொஞ்சம் தயங்கி, "உங்கிட்டே ஒண்ணு சொல்லணும்டா" என்றான்.
"என்னடா, உனக்கு லட்ச ரூவா கெடச்சுதா, தாயத்து மகிமையாலே?" என்றேன் கிண்டலாக.
அதற்குள் உள்ளிருந்து வந்த அண்ணன் பெண்ணுடன் கிளம்பினான். "சாயந்திரம் நிச்சயதார்த்தத்துக்கு வா. பேசலாம்" என்றான்.
எனக்குக் குழப்பமாக இருந்தது. இதென்ன, தாயத்து மறுபடி தலையெடுக்கிறதா? மாலை அவன் வீட்டிற்குப் போனேன். பத்து பேர் கூட இல்லை. பெண் வீட்டிலிருந்து இரண்டே பேர். பெண், அவளுடைய தாத்தா. எங்கேயோ பார்த்தாற்போலிருந்தது அவரை. தேசியின் அண்ணா எனக்கு ஒரு ரோல் மாடல் என்பதால் அவனுடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்து விட்டு, "யாரு சம்பத் இந்த ஆளு? எங்கயோ பாத்தாப்புல இருக்கே?" என்றேன்.
"பாலாஜி நகர் மச்சான். லஷ்மணன் அவளைத் தள்ளிகினு போறேனு கெளம்னான். நான்தான் அம்மாவாண்ட சொல்லி கட்டிவைனு ஜபர்தஸ்து பண்ணிகினேன்" என்றான். சம்பத் மெத்தப் படித்தவன். இங்லிஷ் ஞானி. தமிழில் மட்டும் ஏனோ சேரிவழக்கில் பேசுவான். தேசியை லஷ்மணா என்றுதான் கூப்பிடுவான். விசித்திர, உயர்தர கேரக்டர். அதற்குள் புரோகிதர் அழைத்ததால் கூடத்திற்குச் சென்றோம். "தண்ணி வாங்கியாந்திருக்கான் லஷ்மணன். ஒயிட் ஹார்ஸ். முட்டை புர்ஜி பண்ணிகிறேன். தட்டு மாத்தினதும் நாம மாடிக்குப் போவலாம். ஓடிறாத மச்சான்" என்றபடி என்னை இழுத்துக் கொண்டு போனான்.
திருமணப் பத்திரிகை படித்துவிட்டு பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் பழத்தட்டு மாற்றிக்கொண்டார்கள். சீதன வகைப் பேச்சு வந்ததும், பெண் வீட்டுப் பெரியவர், "எனக்கு இருக்குறது இந்தப் பேத்தி மட்டுந்தான். இவ அப்பன் ஆத்தா சொத்து, நகை, என்னோட சொத்து எல்லாம் சேத்து இதோ இந்தப் பணம் முழுக்க இவளுக்குத் தான். இந்தப் பணத்தை சீதனமாத் தரேன். பாதி பொண்ணு பேர்லயும் மீதி ஒங்க ரெண்டு பேர்லயும் பேங்குல போட்டுறுங்க" என்றார். நூறு ரூபாய் கட்டுக்கள் பத்து எடுத்து வைத்தார். "லட்ச ரூவாங்க. மவ பவிசு மனசு குளிருங்க" என்றார். தேசியைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். பொட்டிலறைந்தாற் போல் பெரியவர் யாரென்று நினைவுக்கு வந்தது.
இருப்புக் கொள்ளாமல் தவித்தேன். சாப்பாட்டில் லயிக்காமல் நானும் சம்பத்தும் மொட்டை மாடிக்குப் போனோம். நாகரீகமாக மூன்று ரவுண்டு விஸ்கி அடித்துவிட்டு புர்ஜியைக் கொறித்துக் கொண்டிருந்தோம். சம்பத் ஹிந்தியில் அருமையாகப் பாடுவான். விஸ்கியும் முழுநிலவும் மொட்டைமாடியும் பம்மல் காற்றும் சேர்ந்தக் கலவையில், "..ஹாமோஷியோங்கி சதாயேன் புலா ரஹீஹை துமேன்.." என்று ரபியைத் தோற்கடித்துப் பாடிக்கொண்டிருந்தான். தேசி வந்து சேர்ந்ததும் கொஞ்ச நேரம் விஸ்கி புர்ஜி வேலை அரசியல் என்று ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். எம்ஜிஆர் இறந்த வாரமாகையால் அதைப்பற்றிக் கொஞ்ச நேரம் பேசினோம். "தொப்பித்தலையன் பூட்டான் மச்சான்" என்றான் சம்பத். "லஷ்மணா.. துரையைக் கவனிடா. கிவ் ஹிம் எ ட்ரிங் ஐ சே" என்றான்.
"டேய், லட்ச ரூவா கத்தை கத்தையா கொடுக்குறாங்களேடா பொண் வீட்டுல?" என்றேன் தேசியிடம், சம்பத் கவனிக்கிறானா என்று பார்த்தபடி. குரு தத் போல் எழுந்து நின்ற சம்பத் இரண்டு கைகளையும் உயர்த்தி, "யே துனியா அகர் மில் பி ஜாயே தோ க்யா ஹை?" என்று பாடத் தொடங்கினான். சம்பத் அவனுடைய உலகத்தில் ஆழ்ந்துவிட்டது தெரிந்து தேசியைத் தனியாக இழுத்துப் பிடித்துக் கொண்டேன். "டேய், என்னடா இது?! லட்ச ரூவா? பேய்ப்பொண்ணு தானேடா அவ? தாத்தா தானேடா நம்மளைப் பிடிச்சு ஆடினது?" என்றேன்.
"கோச்சுக்காதறா. பாலாஜி நகர் போனதுல பழக்கமாயிடுச்சுடா. நாலு வருசமா அவளோட பழகிட்டிருக்கேண்டா. ப்லஸ்டூ முடிச்சு ரயில்வே க்ளர்க் பரீட்சை பாஸ் பண்ணி வேலைல இருக்காடா. தாயத்து விஷயம் எனக்கு ஒரு பொருட்டா படலைடா. ஷி இஸ் டிவைன். இவளை நான் உண்மையிலயே விரும்புறேண்டா. தாத்தாவும் என் மேலே அன்பா இருக்கார்டா. லட்ச ரூவா கொடுக்குறதா தாத்தா ரெண்டு வருசமா சொல்லிட்டிருக்காருடா. நான் கல்யாணம் செஞ்சுக்காம போயிருவேனோனு பயத்துல ஆசை காட்டுறதா நெனச்சேன். ஆனா போன வாரம் பணத்தைக் காட்டினதும் ஆடிப் போயிட்டேண்டா. கட்ன துணியோட அவளைக் கல்யாணம் பண்ணிக்கத் தயார்டா. எனக்கு அந்தப் பணம் தேவையே இல்லைடா. லட்ச லட்சமா கெடச்சாலும் அவளுக்கு ஈடாகாதுடா" என்றான்.
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனைக் கட்டிப்பிடித்தேன். "கங்கிராட்ஸ்டா!" என்றேன்.
"ஒரு விதத்துல தாயத்தை வேண்டிக்கிட்டது பலிச்சுடுச்சோனு நெனச்சேன்... இருந்தாலும் பணத்தை அவ பேர்லயே போடச் சொல்லிட்டேண்டா. ஐ லவ் ஹர்" என்றான் மென்மையாய்.
"நல்லா இருடா" என்றேன். "நான் கெளம்புறேண்டா. ஐ நீட் டு ரெகன்சைல். நாளைக்குப் பாப்போம்" என்றபடி கிளம்பினேன். சம்பத் இன்னும் உருகிக் கொண்டிருந்தான். "நயி நயி ரங்க் லேகே..".
நள்ளிரவு போல் தோன்றியது. மேகங்களின் நிழலை முழுநிலவு பூமியில் காட்டிக்கொண்டிருக்க, கொஞ்சம் போதை கொஞ்சம் ஆத்திரம் கொஞ்சம் கலவரம் கலந்தவனாக நடக்கத் தொடங்கினேன். தேசி வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு மூலைவிட்டப் பாதையில் நடந்தால் இருநூறு அடி கூட இருக்காது. பம்மலின் சென்ற ஐந்தாண்டு துரித வளர்ச்சியில் வீடுகள் வந்து, வரப்புகள் அசல் ரோடுகளாக மாறியிருந்தன. தார்சாலையில் செங்கோணமாக அறுநூறு அடி நடக்க வேண்டியிருந்தது. சிவன் கோயில் தெருவும் தேசி வீட்டு அண்ணா சாலையும் சந்திக்கும் இடத்தில் உருவத்தைப் பார்த்தேன். மதியம் குரோம்பேட்டையில் பார்த்தக் கிழவர்! திடுக்கிட்டுப் போய்ப் பின் வாங்கினேன். தெருவில் யாருமில்லை. மாலதி கடை மூடியிருந்தது. கைகூப்பி வந்தார் கிழவர். பாவமாக இருந்தது. என்ன கேட்கப் போகிறார் என்று நினைக்கையில் ஆளைக் காணோம். ஓட்டமெடுத்தேன். மபொசி தெருவிறங்கி கொஞ்சம் மூச்சு வாங்கினேன். ஒற்றைப் பனைமரத்தடியில் கிழவர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் பக்கென்றது. அவரைத் தாண்டித்தான் வீட்டு வேலிக்கதவைத் திறக்க வேண்டும். "சே! என்ன பிரமை" என்று என்னைத் தேற்றிக்கொண்டு வேலிக்கதவைத் திறந்தேன். எனக்கு நேர் எதிரே கிழவர் நின்று கொண்டிருந்தார். ஏதோ சொல்ல முயற்சிப்பது புரிந்தது. "ஏன்?" என்று கிழவர் கேட்பது போல் பட்டது. கெஞ்சுவது போல் பட்டது. வேகமாக நடந்து கதவைத் தட்டினதும் என் தங்கை கதவைத் திறந்து வெளி விளக்கை இயக்கினாள்.
திரும்பிப் பார்த்த போது வாடர் டேங்க் வரை ஈ காக்கா இல்லை. "ஏண்டா, என்னவோ போலிருக்கே?" என்று முகம் சுளித்தத் தங்கையை லட்சியம் செய்யாமல் உள்ளே சென்றேன். என் அறைக்குச் சென்று படுத்தேன். பத்து நிமிடமோ என்னவோ பொறுத்து ஜன்னல் இடுக்கு வழியாக வெளியே பார்த்தேன். பனைமரத்தடியில் கிழ உருவம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.
திடுக்கென்று அவர் யாரென்பது புரிந்து எழுந்து உட்கார்ந்தேன். போதை முழுதுமாகத் தெளிந்து வியர்த்தது. மறுபடி ஜன்னலிடுக்கு வழியாகப் பார்த்தபோது உருவத்தைக் காணோம்.
➤புகை: 3
சினிமா-3 | 2010/10/20 | Cyd Charisse-Fred Astaire | கறுப்பு அங்கிக்குள் சிட் புழுங்கி மூச்சுவிடச் சிரமப்படுவதைப் பார்க்கும் பொழுது பாவமாக இல்லை? |
உஷாராணிக்கு, உன் புருசன் அற்புதராசன் என்கிற ராசு எழுதியது:
இங்க வந்த நாள்ளந்து உன்ன எப்பவும் நெனச்சுட்டிருக்கேன். என்னையே நம்பி இருந்த உன்னையும், பிள்ளங்களயும் தவிக்கவிட்டது பெரிய குத்தமுனு தெரிஞ்சு போச்சு. இந்த வேலூர் ஜெயில்ல சேர நான் செஞ்ச பாவத்தை விட, உங்களையெல்லாம் தவிக்கவிட்டு வந்தனே அதேன் பெரிய பாவம்.
உனக்கும் நம்ம பிள்ளங்களுக்கும் நம்ம எல்லாரையும் ரட்சிக்கும் மேரிமவனான அந்த மெய்யான அற்புதராசனுக்கும் தெரியும், நான் தப்பேதும் செய்யலனு. இருந்தாலும் சொல்றேன் கேட்டுக்க. நான் என்ன சொல்லியும் கேக்காம தண்டனை கொடுத்து என்னை செயிலுக்கு அனுப்பிட்டாங்க. என்னை அவங்க நம்பாட்டாப் போவுது, நீ நம்புனா போதும். நடந்ததையெல்லாம் சொல்லிடறேன்.
சனிக்கிழமை கடை அடைச்சிட்டிருந்தனா? சின்னானையும், ரப்பரையும் கூலி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டு, ரிப்பேருக்கு வந்த வண்டிங்களை உள்ளாற தள்ளிட்டு, கைகால் க்ரீஸ் எண்ணை எல்லாம் கழுவி, வேளாங்கன்னி மாதா படத்துக்கு மெழுவேத்தி, உனக்காவ வாங்குன மல்லியப்பூ எடுத்துகிட்டு வெளிசட்டரை இழுத்துப் பூட்டுறப்ப அவிங்க ரெண்டு பேரையும் பாத்தேன். சீமைக் காரிலந்து எறங்கி வந்தானுங்க. "ராசண்ணே, காலைல வந்தாங்கனு சொன்னனே, இவங்கதேன்" அப்படினு ரப்பர் தான் என் முன்னால கூட்டியாந்தான்.
வணக்கம் சொல்லிட்டு, "ஒனக்குத் தெரிஞ்சவங்களா ரப்பரு?"னு கேட்டேன்.
"ஆமண்ணே. இவர் பேரு முத்து. மும்பைல இருக்காரு. இவரு செண்டு, என் மச்சான்"னு ரப்பர் தலையாட்டினான்.
"கடை அடைச்சாச்சுங்க. வண்டி டிரபிளா? எனக்கு கார் பத்தி அவ்வளவா தெரியாது. மோட்டார் பைக்கு எந்த மாடலானாலும் செய்வேன்"னு சொன்னேன்.
"ராசு, உன்னைப் பாக்க வந்தது வேற விஷயமா. நீ மோட்டார் பைக்கு ஓட்டறதுல சேம்பியன்னு சொன்னான் ரப்பர்"னாரு முத்து.
எனக்கு வெக்கமாயிடுச்சு. "அதெல்லாம் கல்யாணம் கட்டுறதுக்கு முன்னங்க. என்னோட புல்லட்டு வண்டிய எடுத்தேன்னா புல்லட்டு கணக்கா பறப்பேன். இப்ப குடும்பம் வந்திருச்சுங்க. நம்பி ஒருத்தி வந்த பிறவு பொறுப்பில்லாம ரேஸ் ஓட்டுறதுல்லனு இருக்கேனுங்க. சும்மா எப்பனா ஊர் சுத்துறதோட சரிங்க"னு சொன்னேன்.
"போன மாசம் ஒரு திருடனைப் பிடிக்க உதவி செஞ்சதா போட்டிருக்குதே? ரப்பர் தான் எடுத்தாந்தான்"னாரு செண்டு. பேப்பர் கட்டிங்கை காட்னாரு. வீட்டுல மாட்டி வச்சியே, போலீசுல மெடல் கொடுத்தாங்களே, அதே போட்டோ.
"ஆமாங்க, எதிர் பேங்குல கொள்ளையடிச்சிட்டு கார்ல தப்பிச்சு ஓடப் பாத்த கும்பலை, தப்பா நெனக்காதீங்க, அதும் சீமைக் கார்னு தோணுது, போலீஸ் ஜீப்பால பிடிக்க முடியலிங்க. இன்ஸ்பெக்டர் ஐயாவை பின்னால வச்சுகிட்டு, என் புல்லட்டுல துரத்திட்டுப் போய் அவங்களை காஞ்சிபுரத்துல புடிச்சோம்"னு சொன்னேன்.
"அதான் உன்னைப் பாக்க வந்தோம். நாளைக்கு நான் பேங்குல ரொக்கமா நிறைய பணம் எடுக்கணும். எனக்கு விரோதிங்க இருக்காங்க. அவங்க இந்த பணத்தைத் திருடி எடுத்துட்டுப் போக வருவாங்கனு எனக்கு தெரியும். என் உயிருக்கே ஆபத்து வந்தாலும் வரலாம்"னாரு முத்து.
"நான் என்னங்க செய்யட்டும்"னு கேட்டுகிட்டே ரப்பரை சந்தேகமா பாத்தேன்.
"சின்ன உதவி, ராசு"னாரு செண்டு. "நாங்க எதிர் பேங்கிலந்து பணத்தை எடுத்துகிட்டு வெளில வரப்ப, நீ கடையிலயே உக்காந்திரு போதும். உன் பைக்கோட காத்துட்டிரு. இவரு கிட்டருந்து பையை வாங்கி உன் வண்டி சைடுபெட்டில போடறேன். அதை எடுத்துகிட்டு நீ எவ்ளோ வேகமா முடியுமோ.. இந்த இடத்த விட்டுப்போயிரு. அவ்ளோதான்"னாரு.
எனக்குப் பதட்டமா போயிட்டுது. "ஐயையோ, பணத்தை எல்லாம் எடுத்துட்டுப் போக முடியாதுங்க, ஆபத்து"னு சொன்னேன்.
"பதறாதே ராசு"னாரு முத்து. "அந்த பைல வெறும் காயிதம் தான் இருக்கும். என் பணத்தை உன் கிட்டே கொடுக்க எனக்கு மட்டும் என்ன பைத்தியமா சொல்லு? என்னைய தேடி வரவங்களை வழி மாத்த ஒரு திட்டம். அவங்க உன்னையத் துரத்திக் கிட்டு ஓடுவாங்க. செண்டும் நானும் பின்பக்கமா ஓடி கார்ல போயிருவோம்".
நான் ஆவாதுனு சொன்னேன். "நீ சொம்மா செய்ய வேணாம் ராசு"னாரு செண்டு. "உன் உதவிக்கு நன்றியா இருபதாயிரம் ரூவா ரொக்கம். இப்பவே தரோம்"னாரு. சொல்லிட்டு கொத்து பணத்தை எடுத்துக் காட்னாரு. "பத்து நிமிச வேலை ராசு, இருபதாயிரம் ரூவா"னாரு.
என்ன பதில் சொல்லனு யோசிச்சப்ப, என் கையைப் பிடிச்சுக்கிட்டாரு முத்து. "இத பாரு ராசு, நான் பரம்பரை பணக்காரன். இப்ப நொடிச்சி போயிட்டிருக்கேன். என் பொண்ணு கல்யாணத்துக்காவ எல்லாத்தியும் வித்து இந்தப் பணத்தை எடுத்துகிட்டுப் போறேன். எனக்கு தொழில் எதிரிங்க இருக்காங்க. எதுனா தவறிடுச்சுனா என் வயசுப் பொண்ணு கல்யாணம் நின்றும்பா. என் உயிர் போனாலும் பரவாயில்லை, தாயில்லா பொண்ணு என் மகள் கல்யாணம் நின்னுற கூடாது. அதுக்கு பயந்துதான் இந்த உதவி கேக்குறேன். எனக்கு உயிர்ப்பிச்சை, என் மகளுக்குத் தாலிப்பிச்சைனு வச்சுக்க. மேலே பணம் வேணும்னாலும் தரேன்"னாரு. பணத்தைப் பாத்ததும் என் மனசு மாறிடுச்சு. உனக்கு பட்டுசேலை, பசங்களுக்கு கான்வென்டு, கடைக்கு வெள்ளையடிச்சு கண்ணாடி கவுன்டர்னு கணக்கு மேலே கணக்கா போடத் தொடங்கிடுச்சு. அதுவும் கல்யாண உதவினு வேறே சொல்றாங்க. படிச்ச பொண்ணு நீ, பத்தாம்பு மெகேனிக் எங்கூட ஓடியாந்து கலியாணம் கட்டிக்கிட்டது நினைவு வந்திடுச்சு. சரினு ஒத்துகிட்டேன்.
பிறவு நடந்தது உனக்குதான் தெரியுமே? நான் எடுத்துகிட்டுப் போனது வெறும் காயிதப்பைனு தெரிஞ்சு வாலாஜாபேட்ல கடாசிட்டு வந்தனா, போலீஸ் நான்தேன் திருடன், பணத்தை எங்கியோ வச்சிருக்கன்னு சொல்லி, என்னய பிடிச்சிகிட்டு திருட்டு குத்தம் சுமத்தி கொணந்து உள்ற தள்ளிட்டாங்க. பேங்குல பணம் எடுக்க போறதா முத்து சொன்னப்ப, அவங்க அகவுன்ட்லந்து எடுத்துட்டு வருவாங்கன்னு நினைச்சேன். எனக்கென்ன தெரியும் திருடிகிட்டு வருவாங்கனு? சத்தியமா சொல்றேன். இதான் நடந்துச்சு.
ரப்பர் ஓடிட்டதா கேள்விப்பட்டேன்.. அவன் திரும்பி வந்தா எடங்கொடுத்து சோறு போடு. பயத்துல ஓடியிருப்பான். மன்னிச்சுட்டதா சொல்லு. உனக்குப் புண்ணியமா இருக்கும். கர்த்தர் துணையும் ஆசியும் உனக்கு உண்டு.
இப்படிக்கு ராசு.
நீ சிறையில் வாடுவது வேதனையாக இருக்கிறது. வேலூர் சிறையைப் பற்றி பயங்கரமாகப் பேசிக்கொள்கிறார்கள். நீ சிறைக்குப் போன எட்டு மாதங்களில் உனக்கு ஒரு கடிதமும் எழுதவில்லை என்று கலங்காதே. பிள்ளைகளையும் கடையையும் பார்ப்பதற்கே எனக்கு நேரம் போதவில்லை. உன்னைப் பிரிந்த வேதனையில் அடிக்கடி அழுது விடுகிறேன். அதனால் கடிதம் எழுதவில்லை. என் சோகம் உன்னை எவ்வளவு பாதிக்கும் என்று தெரியும்.
இருந்தாலும் என்னால் முடியவில்லை ராசு. அதனால் எழுதுகிறேன்.
எட்டு மாதமாகத் தலைமறைவாக இருந்த ரப்பர் திடீர் என்று போன வாரம் என்னிடம் வந்து, "எனக்கு ஒண்ணும் தெரியாதுமா. என் மச்சானை ராசண்ணன் கிட்டே கூட்டியாந்த பாவத்துக்கு பயந்து ஓடிட்டம்மா, என்னை மன்னிச்சு மறுபடி வேலைக்கு வைங்க, கூலி கூட தேவையில்லை" என்று ஒரு வாரம் போல் தினமும் கெஞ்சினான். முதலாளியாக ஒரு பெண் இருப்பதாலா தெரியவில்லை, வாடிக்கை அதிகமாகி விட்டது. சின்னான் மட்டும் போதவில்லை. ரப்பர் மேலிருந்த கோபத்தைக் குறைத்துக் கொண்டு அவனை வேலைக்கு வைத்திருக்கிறேன்.
சின்னான் முன்னேறி விட்டான். நானும் வேலை கற்றுக் கொண்டேன். கார்பரேடர் சுத்தம் செய்கிறேன். பிரேக் பேட் மாற்றத் தெரியும். இன்னும் நிறைய கற்றுக்கொண்டு, நீ திரும்பி வரும்பொழுது நான் உன்னுடன் கடையிலேயே தினம் வேலை செய்யலாம் என்று இருக்கிறேன். மதிய வேளையில் கடையடைத்து இந்த க்ரீஸ் எண்ணையை உன் மார்பில் தடவ வேண்டும் போலிருக்கிறது.
நிற்க, கடையில் வாடிக்கை மிக அதிகமாகி விட்டாலும் போதுமான வசதியில்லை. பேங்கில் கடன் தர மறுக்கிறார்கள். பிள்ளைகள் கான்வென்ட் பணம் கட்டியது போக கடைக்கு எதுவுமே செலவழிக்க முடியவில்லை. கையில் பணம் இருந்தால் கடையையும் கொஞ்சம் விரிவுபடுத்தி பக்கத்தில் இருக்கும் கடையைக் கூட ஏலத்தில் எடுக்கலாம். பிள்ளைகளுக்கு வருடப் படிப்புச் செலவைக் கட்டி விடலாம். என்ன செய்வதென்றே புரியவில்லை.
இப்படிப் பல சிக்கல்களில் என்னை மறந்து ஆழ்ந்திருப்பதால் உன்னை மறந்து விட்டேனென்று நினைத்து விடாதே. வருத்தப்படாதே. நிற்க, பெரிய வக்கீலைப் போன வாரம் சந்தித்துப் பேசினேன். ஹை கோர்ட்டுக்கு அப்பீல் செய்து உன்னை வெளிக்கொண்டு வரவோ தண்டனை காலத்தைக் குறைக்கவோ வழி செய்கிறேன் என்றார். செண்டு, முத்து ஆட்களைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்கிறார். அவர் உன்னைப் பார்க்க வரும்பொழுது விவரமாக உனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிவிடு.
உன்னையே நினைந்து வாடும்
உயிருள்ளவரை உஷா.
என்ன மன்னிச்சுரு, என்னால ஒனக்கு எத்தினி தொல்லை!
வேலூர் செயிலைப் பத்திக் கவலைபடாதே. காமராசு, அண்ணா, கலைஞரு, இன்னும் எத்தனியோ பேரு.. பெரிய ஆளுங்கலாம் வந்திருக்காங்க. அந்த அய்யரு சாமியார் கூட ரெண்டு ரூம் தள்ளிதான் அடச்சிருந்தாங்களாம். இடமெல்லாம் சுத்தமா இருக்குது. மணியடிச்சா சோறு கிடைக்குது. மதியம் முழுக்க வேலை. செருப்பு தைக்கவும், மணிமாலை கோக்கவும் கத்துட்டிருக்கேன். உனக்காக ஒரு நீலமணி மாலை செஞ்சு எடுத்தாரேன். க்ரீஸ் தடவுறதா உசுப்பேத்திட்டியா, உன்னை நெனச்சு ஏங்குறன். உன்னையும் பசங்களையும் பாக்க முடியாத குறை. படிச்ச பொண்ணு நீ எங்கூட இப்படிச் சிக்கிட்டியேனு எனக்கு ரொம்ப வருத்தம் கண்ணு. இருந்தாலும் என் மேலே நீ வச்சிருக்குற அன்புக்கு நான் எப்படி நன்றி சொல்லுறது?
இந்த தொல்லை நான் வெளிய வந்ததும் தீந்துடும்; அதுவர பொறுத்துக்க செல்லம். எப்படியாவது நான் நம்மள பழைய நெலக்கு கொணாந்துறுவேன்.
ரப்பரை வேலைக்கு வச்சதுக்கு சந்தோசம். அவனைக் கவனிச்சுக்க, பாவம்.
அன்பான ராசு.
உடனே பதில் எழுத முடியவில்லை; தவறாக நினைக்காதே. செலவை எப்படியோ சமாளித்து வருகிறேன். கவலைப்படாதே. உன் அன்பே எனக்குப் போதும்.
ரப்பர் ஒழுங்காக வேலை செய்கிறான் என்றாலும் அவன் நடத்தை கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. திடீரென்று காணாமல் போய் விடுகிறான். மூன்று வாரங்களுக்கு முன் இப்படித்தான் உன்னுடைய புல்லட் வண்டியை சுத்தம் செய்கிறேன் என்று எடுத்துக் கொண்டு போனவன் நான்கு நாட்கள் கழித்து திரும்பி வந்தான். கேட்டால் ஏதோ சாக்கு சொல்கிறான். அவனை நம்பலாமா? சரி விடு, அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.
இடையில், செண்டும் முத்துவும் ஹோசூர் ஹோட்டலில் இறந்து போனதாக டிவியில் செய்தி வந்தது. பிணம் அடையாளம் கூடத் தெரியவில்லையாம். இவர்கள் தான் பேங்கு கொள்ளைக்காரர்கள் என்று சொல்கிறார்கள். செண்டும் முத்தும் இறந்துவிட்டதாலும், பேங்கு விடியோ கேமராவில் தெரிந்த முகமூடிகள் இரண்டு பேர் அவர்களாகவே இருக்கலாம் என்பதாலும், உன் மேல் இருந்த சந்தேகம் தீர்ந்து விட்டதென்றும், காணாமல் போன பணமோ குற்றவாளிகளோ மற்ற சாட்சியோ இல்லாத நிலையில் கேசை மூடி உன்னை விடுதலை செய்வார்கள் என்றார் வக்கீல். குற்றம் நடந்த இடத்தில் நீயில்லை, யாரும் உன்னைப் பார்க்கவும் இல்லை, வாலாஜாபேட் போய் குப்பை கொட்டியதற்காக உன்னைத் தண்டித்திருக்கிறார்கள் என்று வாதாடுவதாகச் சொல்லியிருக்கிறார். உன்னைப் பார்க்க வந்தாரா? விவரமெல்லாம் சொன்னாயா?
நீ விடுதலையாகி வரக்கூடும் என்பதே எனக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கிறது. அப்பாவிகளுக்கு அன்பும் ஆண்டவரும் தான் துணை. இரண்டுமே உனக்கு என்றைக்கும் உண்டு.
உனக்காக என் காதல்.
கண்ணே உஷா
வக்கீலய்யா நேத்து வந்தாரு. வாய்தா போட்டு இழுத்தாலும் ஆறு மாசத்துல விடுதலையாயிரும்னாரு. எல்லாம் அந்த கர்த்தர் கருணை. மேரிமாதா துணையாலயும் உன்னோட அன்பாலயும் நாம வசதியாக இருக்கப் போற நாள் தொலைவில இல்லை.
மறந்துட்டன் பாரு. ரப்பரை தொடர்ந்து வேலைக்கு வச்சதுக்கு மறுபடி நன்றி. விவரம் தெரிஞ்சவன். ரொம்ப உபயோகமா இருப்பான். அவனை துரத்திடாதே.
உன் ராசு.
    ஜெயசந்திரனுக்கு ஒரு குட்டி ரசிகர் கூட்டம் கூடியிருக்கிறதே? இத்தனை பாடல்களை வரிசைப் படுத்தியிருக்கிறார்களே, இதில் எதைக் கேட்டிருக்கிறோம் என்று பார்த்தபோது, எனக்குத் தெரிந்த பாடல்கள் சில நினைவுக்கு வந்தன.
பொதுவாக எனக்கு டிஎம்எஸ் போல் கணீர் குரல் தான் பிடிக்கும். கணீர் என்று தெளிவாகப் பாடுவதோடு மட்டுமல்ல, டிஎம்எஸ் குரலை அருமையாக மாடுலேட் (பால்காரன் சொல்லும் சாக்கென்று நினைக்க வேண்டாம்) செய்வார். யார் தருவார் இந்த அரியாசனமும் வரும்; யாரந்த நிலவும் வரும் அவருக்கு. கணீரும் மென்மையும் சுருதி ஏற்ற இறக்கமும் சில பாடகர்களுக்கு மூச்சு விடுவது போல் தன்னிச்சையாக வரும். ரகுதாத்தா வீட்டுக்கு ஒரு நொடி தாவுவோம். அங்கே கிஷோரை விட ரபி எனக்குப் பிடிக்கும். கிஷோர் கணீர். கணீரோடு சரி. மரக்குரல். ஒன்று, ஒரே சுருதி. இல்லையென்றால் யோடலிங். ரபி அப்படியில்லை. மென்மையும் கணீரும் கலந்த குரல். பிரதமன் பாயசத்தில் பொறித்த அப்பளத்தை உடைத்துப் போட்டுக் கையால் அளைந்து அள்ளிக் குடித்த ஐம்புலன் நிறைவு, எனக்கு டிஎம்எஸ் ரபி குரல்களில் கிடைக்கும்.
எஸ்பிபி விலகலாக, மென்மையான குரல் கொண்ட பிபிஸ்ரீ, யேசுதாஸ் போன்றவர்களின் குரலைக் கேட்கும் பொழுதெல்லாம், ரசிப்பேன் என்றாலும், எனக்குத் தூக்கம் வரும். தூங்குமூஞ்சி பிபிஸ்ரீ என்று சொன்னதற்காக ஒரு காதலை இழந்திருக்கிறேன்! என்னவோ தெரியவில்லை, ஜெயசந்திரன் குரலில் கொஞ்சம் உற்சாகமும் வேகமும் இருப்பதாகப் படுகிறது. கணீர், மென்மை இரண்டும் கலந்திருந்த அவரது குரலை தமிழ்த்திரை அதிகம் பயன்படுத்தவில்லை. ஜெயசந்திரன் எஸ்பிபி போலப் பாட முயற்சி செய்தாரோ என்று சில சமயம் எனக்கும் தோன்றும். இந்தப் பாடல்களைக் கேட்டுப் பாருங்களேன்.
ஜெயசந்திரன் குரலில்.. | 2010/10/07
பிரதமன் ஜொள்: 'அங்கே கொஞ்சம் எடமிருக்கு' என்ற வரிகள் அடிக்கடி வரும் 'ஐயாவுக்கு மனசிருக்கு' பாடலில் ஸ்ரீப்ரியா சில இடங்களில் மட்டும் சஜஸ்டிவாக ஆடியிருப்பார். ரசாபாசம். (இல்லைனா அஞ்சு நிமிசம் கூட உட்கார முடியாத படத்தை அஞ்சு தடவக்கு மேலே பாக்க முடியுமா சொல்லுங்க?) இன்றைய சினிமா நடனங்களில் சஜஸ்டிவ் என்று எதுவும் இல்லை; குழாயடி பாணியில் தான் ஆடுகிறார்கள். அன்றைக்கு ஸ்ரீப்ரியா மூவ் கிக் என்று பட்டது.
மௌனமல்ல மயக்கம்: இசையமைத்தது யாரென்று தெரியவில்லை.
        புது உலகத்திற்கு முன்பு ஆண்களும் பெண்களும் இணைந்து வாழ்ந்ததைப் பற்றிப் படித்திருக்கிறேன். தாய், தந்தை, கணவன், மனைவி என்று போலி உறவுமுறைகளுடன் வாழ்ந்ததாகப் காலச்செய்திப் படங்களில் பார்த்திருக்கிறேன். தொல்கலை நூலகத்தின் முப்பதாவது அடித்தளத்தில் ஒன்றிரண்டு முறை பார்த்த படங்களில், பெண்கள் கருப்பெட்டிகளை வயிற்றில் சுமந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். 'பெண்களும் ஆண்களும் எப்படி இணைந்து வாழ்ந்தார்கள், எத்தனை பிற்போக்கான வாழ்க்கை நெறி' என்று மற்ற ஆண்களுடன் அடிக்கடி வியந்திருக்கிறேன். நான் வெளிவந்த இருபத்துமூன்று ஆண்டுகளில், பெண்களை நேரில் பார்த்ததில்லை. உலகப் பொதுவிழா விருந்தின் போது, தடுப்புச்சுவருக்கப்பால் இருக்கும் பெண்கள் கூட்டத்தை ஒளிப்படத்தில் காண்பதோடு சரி. நேரில் சந்திக்கும் வாய்ப்பே கிடையாது.
இருபது நாட்களுக்கு முந்தைய நிகழ்ச்சி, எல்லாவற்றையும் அடியோடு மாற்றிவிட்டது.
தொழிலறையிலிருந்து வெளிவந்தவன், வழக்கம் போல் பொழுதுபோக்குத் திரையைச் சுட்டினேன். கோள் செய்திகள், விளையாட்டு என்று வரிசையாக ஒளியலை மாறிக் கொண்டே வர, ஒன்றும் பிடிக்காமல் நிறுத்தச் சொன்னேன். அணைந்த திரை விழித்துக் கொண்டது. நிறுத்து என்றேன். நின்று அணைந்த திரை, மறுபடி நான் சொல்லாமல் சுட்டாமல், தானாகவே விழித்தது. ஏதோ கோளாறு என்று எழுந்து சுவற்றிலிருந்த விசையை அழுத்தி நிறுத்தியும், திரை தானாகவே விழித்துக் கொண்டது. பழுது மையத்திற்குத் தெரிவிக்க நினைத்தேன்.
"உட்கார்" என்றது, திரையிலிருந்து வந்த குரல். அதிர்ந்து போய் அமர்ந்தேன். திரையில் ஒரு நிழலுருவம்.
"யார் நீ?" என்றேன்.
"என்னைக் கடவுள் என்பார்கள்"
"இது புது உலகம். போ, போ, பக்கத்துக் கோள் எங்காவது போய் நிதி கேட்டுப் பார், கடவுள் தேவையில்லை" என்று ஒளியலை மாற்றச் சொன்னேன். நிதி திரட்டுவோர் தொல்லை தாளவில்லை.
அடுத்த ஒளியலையிலும் தோன்றிய அதே உருவம், "தேவை இருக்கிறது. தேவையை வலியுறுத்தும் அதிகாரமும் எனக்கு இருக்கிறது" என்றது.
"நீ யார்? மைய அதிகாரியா? உன் அடையாளம் என்ன, சொல்?" என்றேன் கோபமாக.
"இந்தக் கோள், உலகம், நீ... எல்லாமே என் அடையாளம் தான். நீ எனக்காக ஒரு மகத்தான காரியம் செய்யப் போகிறாய்"
"நானா? என்ன செய்ய வேண்டும்?" சற்றுப் பேச்சு கொடுத்தேன். திசை திருப்ப வேண்டும்.
"இரண்டு நாளில் உலகப் பொதுவிழா வருகிறது அல்லவா? விருந்து முடிந்ததும் நீ அங்கேயே பின்தங்க வேண்டும். அனைவரும் வெளியேறியதும், அறை மூலையில் இருக்கும் தடுப்புச்சுவர்க் கதவை நீ திறக்க வேண்டும்"
"வேண்டாத வம்பு. கதவைத் திறந்து சுவருக்கப்பால் போக எனக்கு அனுமதியில்லை. பூட்டிய கதவை என்னால் திறக்க முடியாது. மேலும், விருந்து முடிந்ததும் நான் தங்கிவிட்டால் தானாகவே செய்தி போய் என்னை வெளியேற்றி விடுவார்கள்"
"பூட்டைப் பற்றிக் கவலைப்படாதே. உன்னைப் பற்றிய செய்தி எதுவும் போகாது"
"எப்படிச் சொல்கிறாய்?"
"சொன்னேனே, நான் கடவுளென்று? எனக்கு சக்தியிருக்கிறது. நீ கதவைத் திறந்தால் போதும், சுவருக்கப்பால் போக வேண்டாம்"
"உனக்கு சக்தியிருக்கிறதென்றால், நீயே கதவையும் திறக்க வேண்டியது தானே?"
"நீ தான் திறக்க வேண்டும். உன்னை ஆட்டுவித்தால் தானே நான் ஆள முடியும்?"
"புரியவில்லையே?"
"புரிந்து கொள்வாய். கதவைத் திறந்தால் போதும். அதுவே மகத்தானது"
"அதிலென்ன மகத்துவம்?"
"திறந்த கதவுகள், மறந்த உண்மைகளுக்கு விடுதலை தரும். அதில் மகத்துவம் வரும்"
"வேறே யாரையாவது கேட்பது தானே?"
"நீ தான் தகுந்தவன்"
"நான் முடியாதென்றால்?"
    மையத்திற்குச் செய்தி அனுப்பியதும் உடனே வரச் சொன்னார்கள். நான் கடவுளைச் சந்தித்த விவரமெல்லாம் கேட்டுக் கொண்டு, பரிசோதனைக்குப் பின், என்னை அடித்தளத்தின் நாற்பதாவது நிலையில் மையத்தலைவரைச் சந்திக்கச் சொன்னார்கள். என்னைப் பெயர் சொல்லியழைத்துப் புன்னகை செய்தார் மையத்தலைவர். "கடவுள் கிடையாது என்று உனக்குத் தெரியுமில்லையா?" என்றார் கனிவுடன். "கவலைப்படாதே. கடவுள் சொன்னதை மறைக்காமல், ஒன்று விடாமல் மீண்டும் என்னிடம் சொல்"
"உலகப் பொதுவிழா விருந்து முடிந்ததும் பின்தங்கி, எல்லோரும் வெளியேறிய பின், மூலைக்கதவைத் திறக்க வேண்டும். அவ்வளவு தான்"
"ஏன்?"
"ஏனென்று சொல்லவில்லை. ஆனால் கதவைத் திறப்பது மகத்தான காரியம் என்று..."
"நீ இதையெல்லாம் மறப்பது தான் மகத்தான காரியம்"
"முடியாதென்றால் தொல்லை கொடுப்பேன் என்றதே உருவம்?"
"ஒரு தொல்லையும் கிடையாது. கடவுளுக்கு சக்தியில்லை என்பது எப்பொழுதோ நிரூபிக்கப்பட்டு விட்டது"
கேட்பதா வேண்டாமா என்று தயங்கினேன். "இதற்கு முன், என்னைப் போல் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு யாராவது வந்திருக்கிறார்களா?" என்றேன் மெதுவாக.
என்னை நேராகப் பார்த்த மையத்தலைவர், எதிரிலிருந்த திரையைத் தொட்டார். திரையில் தோன்றிய வரிகளைப் படித்துவிட்டு "வந்திருக்கிறார்கள். ஆயிரம் வருடங்களில் நூறு பேர்" என்றவர், எதையோ கவனித்துவிட்டு "உனக்கும் அவர்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது" என்றார். என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு "ஒரு வேறுபாடும் இருக்கலாம்" என்றார்.
"என்ன ஒற்றுமை?"
"நூறு பேருக்கும் உன்னுடைய பெயர் தான்"
"எனக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?"
"நீ இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறாய். அவர்கள் எல்லாரும் உடனடியாக உயிர்பிரி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்"
கண்கள் இருண்டு, மூச்சு முட்டி, நான் மீண்டுவரச் சில நொடிகளாயின. "என்னையும் உயிர்பிரி நிலையத்திற்கு அனுப்புவீர்களா?" என்றேன்.
"கடவுளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?" என்றார்.
"ஒன்றும் தெரியாது. கடவுளைப் பற்றி பழங்காலச் சுவடுகளிலும் படங்களிலும் பார்த்திருக்கிறேன். ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் கடவுளுக்கெதிராக நடந்த எழுச்சியில் மக்கள் கடவுளை மறந்துவிட முடிவு செய்தனர் என்று படித்திருக்கிறேன். திரையில் தோன்றிய உருவம்.." என்று சொல்லிக் கொண்டிருந்த என்னை நிறுத்தினார்.
"நிச்சயமாக வைரஸ். புது உலக முறைகளுக்கும் விதிகளுக்கும் இடையில் எங்கோ முடங்கிக்கொண்டு சில நூறு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளிவந்து தொந்தரவு தரும் கிருமி. ஒவ்வொரு முறையும் உன் பெயர் கொண்ட நபரையே அது தாக்குவது தான் வியப்பு. உன்னை வைத்தே அந்தக் கிருமியைக் கண்டுபிடிக்கலாமோ என்று எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. என்றாலும், இதையெல்லாம் மறந்துவிடு. அதுதான் உனக்கும் நல்லது"
"கதவுக்கப்பால் என்ன இருக்கிறது?" என்று கேட்டேன், நிதானமாக.
சற்று யோசித்து விட்டு, "அனைவருக்கும் தெரிந்தது தானே?" என்றார் மையத்தலைவர்.
"எனக்குத் தெரியாது, சொல்லுங்களேன்?"
"பெண்கள்! பூட்டிய கதவுக்கப்பால் பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் இணைந்து வாழ முடியவில்லை என்பதால் புது உலகத் தொடக்கத்திற்கு முன்பே பெண்களை நம் வாழ்விலிருந்து அகற்றிப் பூட்டி விட்டோம் அல்லவா? ஒருவருக்கொருவர் தேவையில்லை என்பது நிரூபிக்கத் தேவையில்லாமல் தெளிவாகி விட்டதே?" என்றார். நிதானித்து, "இந்தக் கேள்விகள் எல்லாம் உன்னை ஆபத்தில் கொண்டு விடும். கடவுள் வைரஸ் உன்னைப் பாதித்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. உன் மூளையிலிருந்து வரும் எண்ண அலைகளை பரிசோதனை செய்து பார்த்து விடுவோமா?"
'வைரஸ் என்றால் என் மனதிலிருந்ததை அதனால் எப்படிப் படிக்க முடிந்தது?' என்று கேட்க நினைத்தேன். பயமாக இருந்தது. ஏதாவது கேட்டால் பரிசோதனை என்று தொடங்கி உயிர்பிரி வரை போய்விடப் போகிறதே என்று அமைதியாக எழுந்தேன். "வேண்டாம், நன்றி. நான் வருகிறேன்" என்றேன்.
"பயப்படாதே. நீ இங்கே வந்ததை நான் மறந்து விட்டேன். இங்கு வந்ததை நீயும் மறந்துவிடு" என்றார்.
வெளியேறினேன். வீட்டுக்குள் நுழைகையில் பொறி தட்டியது. நான் பயந்தேன் என்பது மையத்தலைவருக்கு எப்படித் தெரிந்தது?
        உலகப் பொதுவிழாவின் போது எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். மற்ற ஆண்களுடன் விளையாட்டிலும் கேளிக்கையிலும் பொழுதைப் போக்கிவிட்டு விருந்துக்குச் சென்றேன். விருந்து முடியும் நேரம் அருகில் இருந்தவனுடன் பேசிக்கொண்டிருக்கையில், திடீரென்று "அதோ எதிரில் நிற்கிறாரே, அவர் தான் புது மையத்தலைவர். எனக்குத் தெரிந்தவர்" என்றான்.
"பழைய தலைவர் என்ன ஆனார்?" என்றேன்.
"மையத்திற்கு எதிராக நடந்து கொண்டாரென்று சொல்கிறார்கள். நாளைக்குத் தீர்ப்பாம். அவரை உயிர்பிரி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறார்களாம். இரண்டு நாள் முன்பு அவரைச் சந்தித்த நபர் ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி. கடைசியாகச் சந்தித்த நபர் பற்றிய விவரங்களெல்லாம் முறைப்படி அழிக்கப்பட்டனவாம். என்ன விவரம் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவரை உயிர் பிரிக்கப் போகிறார்களென்றால், தீவிரமாகத்தான் இருக்க வேண்டும்" என்று வரிசையாக விவரங்களைக் கொட்டினான்.
நான் திடுக்கிட்டேன். அவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். "கடைசி நபர் பற்றிய விவரம் தெரிந்தால் மையத்திற்குச் செய்தியனுப்ப வேண்டுமென்று திரையில் செய்தி வந்ததே, தெரியாதா?? சரியான துப்பு கொடுத்தால் ஏழு புதுப்பணம் தருவார்களாம்."
மையத்தலைவர் கடைசியாகச் சந்தித்த நபர் யார்? நான் தானா? என்னைப் பற்றிச் சொல்லியிருந்தால்? இருக்காது. இத்தனை நேரம் உயிர்பிரி நிலையத்திலிருந்து தேடிக் கொண்டு வந்திருப்பார்களே? ஏன் என்னைப் பற்றிச் சொல்லவில்லை? இங்கு வந்ததை மறந்துவிடு என்றாரே? நான் அங்கே போனதை மறைத்து விட்டாரா? ஏன்? எனக்குள் கேள்விகள் வெடிக்க, எழுந்து அகன்றேன்.
"எங்கே போகிறாய்?" என்றான்.
"இதோ வந்து விடுகிறேன்" என்று அவனிடமிருந்து விடுபட்டு, மெள்ள தடுப்புச் சுவரை நோக்கி நடந்தேன்.
விருந்து முடிந்து, கூட்டம் கலையத் தொடங்கியிருந்தது. நான் இங்குமங்கும் நடந்து கதவருகே வந்துவிட்டேன். கதவை மெதுவாகத் தொட்டேன். கதவை அழுத்திப் பார்த்தேன். அசையவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். அனேகமாக எல்லாருமே வெளியேறி விட்டார்கள். இதான் கதவா? வேறு ஏதாவது இருக்கிறதா? அதிக ஓசை வராதபடி, கதவைத் தட்டினேன். பயனில்லை. அழுத்தித் திறந்து பார்த்து விடுவோமா? எனக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. சுற்றிலும் பார்த்தேன். யாருமில்லை. என் மனம் முழுவதையும் மூடிய கதவு ஆக்கிரமித்துக் கொள்ள, திறந்தே விடுவது என்று அழுத்தினேன். திறந்தது.
திறந்த கதவில் அழைப்பிருந்தது போல் பட்டது. 'வேண்டாம், போகாதே. கதவுக்கப்பால் போக வேண்டாம் என்று கடவுள் சொல்லவில்லையா? திரும்பி விடு' என்றது என்னுள் ஒரு குரல். 'கதவையோ திறந்தாகி விட்டது. போய்ப் பார்' என்றது இன்னொரு குரல். புதுமையான அனுபவம். எங்கிருந்து வருகின்றன இந்தக் குரல்கள்?
கதவுக்கு அப்பால் தலையை நுழைத்துப் பார்த்தேன். யாருமில்லை. அடியெடுத்து வைத்தேன். வெட்டவெளி போலிருந்தது. இது தானா மகத்துவம்? போய்விடலாமென்று நினைத்துத் திரும்பிய போது அவளைப் பார்த்தேன். திறந்த கதவுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள். முதன் முதலாக ஒரு பெண்ணை நேரில் பார்த்தேன். என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தேன்.
அவள் ஓசையின்றிச் சிரித்தாள். "என்னை இங்கே வரச் சொன்னதும் கடவுள் தான்" என்றாள்.
"நான் ஆடம்" என்றேன்.
"என் பெயர் அதிதி" என்றாள். என் அருகில் வந்தாள். "ஆடம், உன்னைத் தொட்டுப் பார்க்கலாமா?" என்றாள்.
பழங்காலத் திரைப் படங்களில் ஆடை களைந்தப் பெண்களைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவள் ஆடையில்லாமல் எப்படி இருப்பாள் என்று தோன்றியது.
"என்ன சிந்தனை?" என்றாள்.
சொன்னேன்.
"நானும் அந்தப் படங்களைப் பார்த்திருக்கிறேன். நீ நிர்வாண நிலையில் எப்படி இருப்பாய் என்று நானும் யோசித்துக் கொண்டிருந்தேன்" என்றாள். என்னைத் தொட்டாள்.
"மையத்திற்கு தெரிந்து விட்டால் ஆபத்து" என்றேன்.
"மையத்திற்கு தெரியாது, பயப்படாதே" என்றாள். என் ஆடையைக் களைந்து விட்டாள்.
"அதையும் கடவுள் சொன்னாரா?"
அவள் பதில் சொல்லவில்லை. தன் ஆடையையும் முழுவதுமாகக் களைந்து விட்டாள். நான் அதுவரை நேரில் பார்த்திராத உடலுறுப்புகளைப் பார்த்துப் பிரமித்தேன். "தொடவா?" என்றேன். தொட்டபோது என்னுள் ஒரு இழப்பை உணர்ந்தேன். 'வேண்டாம் ஆடம், போய் விடு' என்றது குரல்.
அதற்குப் பிறகு பலமுறை அவளைச் சந்தித்தேன். கதவருகே வந்து நின்றதும் அவள் சொல்லிவைத்தாற்போல் கதவைத் திறப்பாள். மையத்துக்கு விவரம் தெரியாதது ஏனென்று புரியவில்லை. அச்சமாக இருந்தாலும், அவளைப் பற்றி நினைத்ததுமே அச்சம் மறைந்து அவளைத் தொட்டுச் சேரும் ஆர்வம் வந்து விடும். மையத்தைப் பற்றி அவளும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
    அன்றிரவும் அவளைச் சந்திப்பதாகத் திட்டம். கடவுளிடம் பேசியதாகவும் என்னிடம் அவசரமாக ஏதோ சொல்ல வேண்டுமென்றும் முந்தைய சந்திப்பின் போது சொல்லியிருந்தாள். நான் அவளுடைய உடல் சரிவுகளில் கவனமாக இருந்ததால் அவள் பேச்சைப் பொருட்படுத்தவில்லை. அவளை மறுபடி சந்திக்கத் துடித்தேன். இது ஒரு தொல்லையாகி விட்டது. அவளைச் சந்தித்த போது பிரிய முடியவில்லை. பிரிந்த போது சந்திக்கத் துடித்தேன். எப்பொழுதும் அவள் சிந்தனையாகவே இருந்தது. இது என்ன உணர்ச்சி? இது என்ன வேதனை? இதை யாரிடமும் சொல்ல முடியவில்லை. நான் ஏதோ தவறு செய்கிறேனேன்று புரிந்தது. இருந்தாலும் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எல்லாம் கடவுள் கொடுத்த தொல்லை என்று தோன்றியது. அவளை மறக்க எண்ணித் திரையைச் சுட்டினேன். செய்தி, விளையாட்டு என்று ஒளியலை மாற, திடீரென்று திரையில் நான் பார்த்த மையத்தலைவர், "ஆடம்" என்றார். அவர் குரலில் அவசரம் தொனித்தது.
"உன்னை உயிர் பிரித்து விட்டார்கள் என்று சொன்னார்களே?" என்றேன்.
"என்னை உயிர் பிரிக்க முடியாது. நான் கடவுள். நான் உன்னிடம் அவசரமாகப் பேச வேண்டும்"
"நீ பழைய மையத்தலைவர். கடவுள் இல்லை" என்றேன்.
திரையில் மையத்தலைவர் முகம் மறைந்து, நான் முதலில் பார்த்த நிழலுருவம் தோன்றியது. "ஆடம், உனக்கு என்னை எப்படிப் பார்க்க விருப்பமோ அப்படியே பார். ஆனால் நான் சொல்லப் போவதைக் கவனமாகக் கேள்" என்றார்.
எனக்குப் பெருங்கோபம் வந்தது. "உன் பேச்சைக் கேட்டதால் வந்த தொல்லை போதாதா?. எப்பொழுதும் அவள் நினைவாகவே இருக்கிறது. என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கவலை. எங்களுக்கு என்ன நேரும் என்ற கவலை. கவலையே இல்லாமலிருந்த நாங்கள், இப்போது ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்துக் கொண்டு கலவரப்பட்டு... நில், நீ சொன்ன மகத்துவம் இது தானா?"
பொறுமையாகப் பார்த்துவிட்டு "நான் கதவைத் திறந்தால் போதும் என்றுதான் சொன்னேன். போனது உன்னுடைய செயல்" என்றார்.
"திறந்த கதவில் ஒரு அழைப்பு இருந்தது. என்னையறியாமலேயே அப்பால் போக வேண்டும் என்று தோன்றியது" என்றேன்.
உருவம் சிரித்தது. "அது தான் மகத்துவம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இது நிகழ வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தேன்"
"இப்பொழுது என்ன செய்வது? எதற்காக மறுபடி தோன்றினாய்?"
"உனக்கும் அதிதிக்கும் ஆபத்து. ஓடி விடுங்கள், உடனே, உடனே."
எனக்கு நடுக்கமாக இருந்தது. "ஏன்? என்ன ஆபத்து?"
"எல்லாம் சரியாகி விடும். இன்றிரவே தப்பித்து எங்கேயாவது ஓடிவிடுங்கள்."
"ஓடாவிட்டால்?"
"உங்களை உயிர்பிரி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறார்கள். உங்களிருவரையும் விட, அதிதிக்குப் பிறக்கப் போகும் உங்கள் குழந்தைக்குப் பேராபத்து. பல்லாயிரம் வருடங்களுக்குப் பின் இயற்கையாகப் பிறக்கப் போகும் முதல் மனிதக்குழந்தை. புதுச் சமுதாயம். நான் தேவையென்று நம்பப் போகும் சமுதாயம். நீங்கள் தப்பி ஓடாவிட்டால் எல்லாம் அழிந்து விடும். போ, உடனே போ." என்றது.
குழந்தையா? கடவுளை நம்பும் புது சமுதாயமா? "நீ பித்தலாட்டக்காரன். உன்னை நம்ப ஒரு சமுதாயம் வேண்டுமென்பதற்காக எங்கள் நிம்மதியைக் குலைப்பதா? ஏன் எங்களைப் பகடையாக்கி விளையாடுகிறாய்?" என்று கோபமாக ஏசினேன். உருவம் உண்மையிலேயே கடவுள் தானா? அது ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, அங்கிருக்கப் பிடிக்காமல் திரையை நிறுத்தாமலே நகர்ந்தேன். ஒதுக்க முடிந்தது வியப்பாக இருந்தது. இதே கடவுளை முதல்முறை சந்தித்த போது என்னால் ஒதுக்க முடியவில்லை என்பது நினைவுக்கு வந்தது. கடவுளை நம்பத் தொடங்கி விட்டேனா? அதனால் தான் ஒதுக்க முடிகிறதா?
மையத்தில் சரணடைந்து விடுவோமா? வெளிவந்த இருபத்து மூன்று வருடங்களுக்குள் உயிர்பிரி என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 'கடைசி நபர் இவர் தான்' என்று அதிதியைப் பற்றிப் அனாமதேயப் புகார் கொடுத்தால் அவளை உயிர் பிரித்து விடுவார்கள். மையத்தலைவரின் உயிர்பிரி முடிந்ததும் எல்லாம் அடங்கி விடும். இதைப் பற்றித் தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. பழைய நிலைக்கு வந்து விடலாம். எண்ணங்கள் விகாரமாக ஒன்றை ஒன்று துரத்தின. அதிதியைக் காட்டிக் கொடுத்து நான் தப்புவதா? இல்லை நான் சரணடைவதா? நான் சரணடைந்தாலும் அவள் சிக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?
எனக்கு உடலெங்கும் வலித்தது. என்னால் தானே அவளுக்கு ஆபத்து? அவளும் என்னைப் போல் ஏமாற்றப் பட்டவள் தானே? கடவுள் சொன்னது போல் அதிதியுடன் எங்காவது தப்பித்து ஓடிவிடலாமா? தப்பி ஓடினாலும் எங்கே போவது? எப்படி வாழ்வது? புதுச் சமுதாயமாமே? இதற்கு நானா கிடைத்தேன்? இன்னும் பத்தோ நூறோ ஆண்டுகள் பொறுத்து இன்னொரு ஆடம் கிடைத்தால் பிடித்துக் கொள்ளட்டும். ஒதுக்க நினைத்தாலும், அதிதி நினைவு வந்ததும் வேதனையாக இருந்தது. எல்லாம் சரியாகி விடுமென்றாரே, சரியாகி விடுமா? எதற்காகக் கதவைத் திறந்தேன்? எதற்காக உள்ளே சென்றேன்? என் மேல் ஆத்திரமும் கோபமும் வந்தது. புது உலகின் ஆதார நம்பிக்கைகளை அழித்து விட்டதாகத் தோன்றியது. குழம்பினேன். கடவுள் தேவையா? அதிதி தேவையா? சிக்கலற்ற வாழ்க்கை தேவையா? வெகு நேரம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.
மையத்திற்குச் செய்தியனுப்பினேன். "மையத்தலைவர் கடைசியாகச் சந்தித்த நபர் யாரென்று எனக்குத் தெரியும்". அன்றிரவு நான் அதிதியைச் சந்திக்கப் போகவில்லை. எனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள் என்ற நினைவு வாட்டியது. தூங்கத் தொடங்கினேன்.