இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2013/12/26

சந்தேகம் - தீராத நோய்


    ன் நோயைத் தீர்த்து வைக்க யாருமேயில்லையா..?

1. காட்சியில் நின்றுகொண்டிருக்கும் சீருடைச் சிப்பந்திகளை அசைந்தால் சுட்டுவிடுவதாக மிரட்டியிருப்பார்களோ?
2. ஏறக்குறைய ஒரே கலர், டிசைனில் புடவை அணிய இரண்டு பெண்களும் எப்படிச் சம்மதித்தார்கள்?
3. காட்சியின் இறுதியில் ஒரு பெண்மணி ஏதோ தேடுகிறாரே, டிபன் ரெடியாகவில்லை என்ற கலக்கமா?
4. சிவப்பு சாக்ஸ் அணிந்து அதை உயர்த்திக் காட்டும் துணிச்சல் எம்ஜிஆருக்கு மட்டும் தான் வருமா?
5. நிர்மலா ஆடுவது டான்ஸா உடான்ஸா?
6. பாடலுக்கான குரல் ஜானகியுடையது என்று வருடக்கணக்கில் நினைத்திருந்தேனே.. இப்போது என்ன செய்வது?




2013/11/30

மாதச் சிறப்பு


    லைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் மட்டுமே தெரியும் என்பார்கள். காதலும் ப்லாக்வலியும் அந்த வகையில் சேரும் என்பது என் அனுபவம். அதிலும் ப்லாக்வலி...

பூத்தூரிகை காலத்தில் முதல் அனுபவம். மூன்றாம் சுழியில் சமீப அனுபவம். தொலைத்த பதிவுகளை மெள்ளச் சேர்க்கப் போகிறேன். தடங்கலுக்கு வருந்துகிறேன்.

ஒரு சில கதைகள் கட்டுரைகள் தவிர மற்றவை என்னிடம் சேமிப்பில் உள்ளன. கவிதைகள் முற்றிலும் தொலைந்து போயின என்பது உலகத்துக்கே மகிழ்ச்சியைத் தரும் செய்தி. பதிவுகளைத் தனியாகச் சேமித்து வைத்திருக்கிறேன் என்றாலும் முறையாகச் செய்யவில்லை. சேமித்தவை அந்தந்தக் காலக்கட்டத்து கணினிகளில் இருப்பதால் எல்லாவற்றையும் தனித்தனியாக எடுத்து மீண்டும் சேர்க்க வேண்டியிருக்கிறது. பெரிய விஷயம் ஒன்றுமில்லை. இருந்தாலும் செய்யப் பொறுமையும் முனைப்பும் போதவில்லை. இந்த வருடம் அக்டோபர் நவம்பரில் நிறையப் படுத்துவிட்டேன். ஆள் விழுங்கி நவம்பர் என்னையும் விழுங்கிவிடுமோ என்று ஒருகணம் தோன்றியது உண்மை. நிலமை இப்படி இருக்கையில் ப்லாக் போனதைப் பற்றிக் கவலைப்பட்டாலும் எதுவும் செய்ய முடியவில்லை. பயணம், வெறுப்பு, சோம்பல் எல்லாம் கலந்து.. எத்தனையோ இழப்புகளில் மனம் சலித்த நிலையில் பதிவுகள் எப்படிப் போனாலென்ன என்று ஒரு கணம்.. ஒரு கணம் எண்ணியதை ஒப்புக்கொள்கிறேன்.

பதிவுகள் காணாமல் போனதை விசாரித்து எனக்கு வந்த இமெயில்கள் என்னைக் கலங்க வைத்தன. நெஞ்சைத் தொட்டன. 'உங்கள் பதிவுகள் ஒரு பரிசு' என்று ஒருவர் எழுதியிருந்தார். இன்னொருவர், 'I feel I am missing something' என்று எழுதியிருந்தார். ஒரு பின்னூட்டம் கூட இதுவரை இடாதவர்கள் பலர் இப்படி எனக்கு எழுதி விசாரித்த போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. கர்வமாகவும். ஒரே ஒரு இமெயில் மட்டும் கொஞ்சம் சுவாரசியமாக உறுத்தியது. பெயர் மறைத்த அவர் நெஞ்சில் சிறிய அக்கினிக் குஞ்சு சில நாள் சிறகடிக்கட்டும்.

ப்லாக் நலம் விசாரித்த அத்தனை பேரின் அன்புக்கும் நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். மிகவும் நன்றி. ஐந்து வருடத்துக்கு மேற்பட்ட உழைப்பை(?) அனாவசியமாக எறிய வேண்டாம் என்றும் தோன்றியதால் நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துவிடுகிறேன்.

யாண்டும் எவர்க்கும் கடவுச்சொல் கொடற்க எனும் அரியநெறி இதனால் அறியற்பாலது.

    வேலையில்லை. பொழுது போக என்ன செய்யலாம்? காழ்ப்புடன் அல்பமாகப் புலம்பலாம். உலகம் கெட்டுவிட்டது என்று அடுத்த தலைமுறையைத் திட்டலாம். அல்லது இந்தியக் கொலை வழக்குகள் படிக்கலாம்.

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கின் தீர்ப்பைப் படித்ததும் இன்னும் தேடத் தோண்டியது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் இதுவரை விவரங்கள் எதுவும் தெரியாதிருந்தேன். தியாகராஜ பாகவதர், என்எஸ் கிருஷணன் இருவரும் கொலை செய்து சிறை சென்றார்கள் என்றே இதுவரை அறிந்திருந்தேன். இந்த வழக்கின் விவரங்களைப் படிக்கையில், இருவரும் கொலை செய்திருக்கச் சாத்தியமில்லை என்ற கருத்தும் வழக்கில் சந்தேகத்துக்கிடமின்றி (சந்தேகத்துடன்?) கிளப்பியிருப்பதைப் படித்தேன். ஜூரிகளில் 6 பேர் ஆதரவாகவும் 3 பேர் எதிர்த்தும் தீர்ப்பு சொல்லி இருவருக்கும் கொலை குற்றத்துக்கானத் தண்டனை வழங்கினார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு ஜூரி எதிர்த்தாலும் தீர்வு காண முடியாது என்ற வரைமுறை இந்த வழக்குக்கோ அல்லது அந்தக் காலத்திலோ புழக்கத்தில் இல்லையா? அல்லது மரண தண்டனைக்கு மட்டும் தான் அந்த வரைமுறையா? என்எஸ்கே, எம்கேடி பற்றி எழுதிய நேரத்தில் இந்தக் கொலை நடந்ததால் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது என்ற கருத்தை கோர்ட்டுகளிலும் ப்ரிவி கவுன்சிலிலும் சொல்லியிருப்பதைப் பார்த்தால் நிறைய சந்தேகம் வருகிறது. தோண்டித் தோண்டிப் படித்ததில்... கொலை செய்தவர்களாகக் கருதப்பட்டவர்களில்.. அந்த நாளில் வளர்ந்து வந்த ஒரு மூன்றெழுத்து நடிகர், மூன்றெழுத்து நான்கெழுத்து பெயர் கொண்ட இரண்டு அரசியல் தலைவர்கள், ஒரு இசைக்குயில், பிரபல தொழிலதிபர், ஒரு சினிமா நடிகையின் 'சமூக அந்தஸ்துள்ள' கள்ளக்காதலன்... என்று நிறைய பேர் அடங்கியிருப்பது சுவாரசியம்.

இதைப் புத்தகமாக யாராவது எழுதியிருக்கிறார்களா? ரண்டார் கய் இதைப் பற்றிப் புத்தகம் எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள். யாருக்காவது விவரம் தெரிந்தால் சொல்லுங்கள். இந்த வழக்கின் காலக்கட்ட விவரங்கள் யாருக்காவது தெரிந்திருந்தால் இந்தியா வரும்பொழுது சுவாரசியமாக அரட்டை அடிக்கலாம். காஸ்யபன் ஐயாவுக்கு நிறைய விவரங்கள் தெரிந்திருக்கும் என்று கௌளி சொல்கிறது. சூரி மற்றும் ஜிஎம்பி அவர்கள்? சென்னைப் பித்தன் அந்த நாட்களில் மயிலையில் இல்லை என்று நினைக்கிறேன்.

குறைந்த பட்சம் இதை யாராவது புத்தகமாக எழுத வேண்டும். ஜெயமோகனைத் தவிர. குறைந்த பட்சம் இதை யாராவது சினிமாவாக எடுக்க வேண்டும். ஹிஹி.. ரைட்.. அவரைத் தவிர.

உபரி: 'எம்கேடி'யின் 'எம்' மாயவரமாம்.

    க்ஷ்மிகாந்தன் பற்றிப் படிக்கையில் எம்எஸ்வி பற்றி ஒரு துக்கடா தெரிந்து கொண்டேன். எல்லாம் அறிந்த ஈசனின் திருவிளையாடலில் மீனாக்ஷி மாதிரி தீவிர எம்எஸ்வி ரசிகர்கள் நெகிழ்ந்து போகலாம் என்பதற்காக இங்கே சேர்க்கிறேன்.

சினிமா சான்ஸ் தேடுவதற்கு முந்தைய காலம். ஒரு பெரிய செல்வந்தர் வீட்டில் வைர நெக்லஸ் திருடினார் என்று குற்றம் சாட்டி எம்எஸ்வியைக் கைது செய்து சிறையிலடைத்தார்களாம். எம்எஸ்வி சரியாகப் பேசத்தெரியாமல் தவித்ததாலோ அல்லது அவர் பேசியதைப் புரிந்து கொள்ள இயலாமல் போனதாலோ அவர் மேல் வழக்கு தொடர்ந்தார்களாம். தீர்ப்புக்காகக் காத்திருக்கையில் அசல் திருடன் பிடிபடவே எம்எஸ்வியை விடுதலை செய்தார்களாம். அசல் திருடன் பிடிபடாதிருந்தால் எம்எஸ்வி திரையுலகுக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம்.

திக்கெனவில்லை?

    ள் விழுங்கி நவம்பர் முடியப்போகிறது. நன்று.

நவம்பர் மாதத்தின் மிகப் பெரிய சிறப்பு ஒன்று உண்டு. அத்தனை இழப்புகளையும் ஈடுகட்டும் சிறப்பு. ஆர்கிமிடீஸ் கோரிய லெவர் மாதிரி ஒரு பிடிப்பைத் தரும் சிறப்பு. என் தம்பி பிறந்த மாதம்.

எங்கள் குடும்பத்தில் சகோதர-ரிகளிடத்தே போலித்தனம் கொஞ்சம் கூட இல்லை. எங்கள் அம்மா ஒரு முக்கியக் காரணம். நாங்களும் சில்லரைக் காரணங்கள். என்னை விட என் சகோதர-ரிகளுக்குப் பண்பு அதிகம் என்று சிலர் சொல்வார்கள். (சொல்பவர்கள் நேரில் வந்து சொன்னால் அவர்கள் பல்லை உடைக்கத் தயாராக இருக்கிறேன்).

சிறுவயதில் நானும் என் தம்பியும் எதற்கெடுத்தாலும் அடித்துக் கொள்வோம். அடிதடி என்றால் அ டி த டி. கட்டிப்புரண்டு கழுத்தை நெறித்துச் சண்டை போடுவோம். 'கொன்னுடுறா.. துரப்பா.. அவனைக் கொன்னு போட்டுரு.. உன்னைவிட சின்னவன்னு பாக்காதே.. கொன்னுடு' என்று பதறுவார் என் பாட்டி. அப்படி ஒரு மாட்டடி அடித்துக் கொள்வோம். ஆளுக்கொரு க்ரிகெட் டீமின் பெயர் கொண்டு எங்கள் வீட்டு ஹாலில் க்ரிகெட் விளையாடி ஏற்கனவே விரிந்திருக்கும் தரையை இன்னும் உடைத்திருக்கிறோம். வீட்டின் தட்டி வேலிக்குள் ஆடு மாடு பன்றிகள் வந்தால் தட்டிவேலிக்கதவை அடைத்து, எங்கிருந்து அடி விழுகிறது என்று புரியாமல் ஆடு மாடுகள் மிரண்டு ஓடும் வகையில் மறைந்திருந்து பெரிய செங்கல்களாகப் பொறுக்கி எடுத்து அடித்திருக்கிறோம். மாதம் மூன்று வாரம் வந்தால் ஒரு ரூபாய் இனாம் தருவார்கள் என்பதற்காக சம்ஸ்கிருத வகுப்புக்குப் போவோம். அம்மா திட்டுவார் என்பது இன்னொரு லேசான காரணம். அவன் ஒரு ரூபாய்க்காக மட்டுமே வருவான். எனக்கு இரண்டு அழகான காரணங்கள் இருந்தன. நாங்கள் இருவரும் ஒரே பள்ளிக்கூடம் தொடர்ந்து ஒரே கல்லூரியில் படித்தோம். நேரத்தில் பள்ளிக்கூடம் போக வேண்டுமென்று மூன்று வருடங்கள் போல் தினம் அவனைப் பின்னால் உட்காரவைத்து காட்டு வேகத்தில் சைக்கிள் மிதித்திருக்கிறேன். அது மட்டுமே அவனுக்கு நான் செய்திருக்கும் உருப்படியான பணி என்று நினைக்கிறேன். அதுவும் நான் பள்ளிக்கூடம் போகிற சாக்கில். ஒரே ஒரு தடவை பள்ளிக்கூடத்தில் அவனை யாரோ மிரட்டினார்கள் என்பதற்காக அவனுக்காகச் சண்டை போட்டிருக்கிறேன். எனக்குப் பாதுகாப்பு தரும் அளவுக்கு அவன் பம்மலில் படா ஆளானது வேறு கதை. இன்றைக்கும் தொடர்கிறது. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது என் மட்டில் வேதம். எங்கள் குடும்பத்தின் பீமன். பல்லாண்டு பலமோடு வாழட்டும்.

அவன் பிறந்தநாளன்று உடனிருந்து இருபத்தைந்து வருடங்களாவது ஆகியிருக்கும். இந்த நவம்பரில் வாய்ப்பு கிடைத்தது. இது அவனுக்காக.


    சினுக்கு பாரத் ரத்னா கொடுத்தது தவறா என்று என்னிடம் ஒருவர் கேட்டார். 'ஒபாமாவுக்கு நொபெல் தரவில்லையா?' என்று உடனடியாக மனதில் தோன்றியதை அடக்கிக் கொண்டேன். வித்தியாசம் இருக்கிறது. ஒபாமாவுக்குக் கொடுத்ததால் நொபெல் பரிசுக்குத் தீராதக் களங்கம் உண்டானது. ஸசினுக்குக் கொடுத்ததால் பாரத ரத்னாவுக்கு ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. இல்லையென்றால் என் போன்றவர்களுக்கு பாரத ரத்னா பற்றி என்ன தெரியப் போகிறது - எம்ஜிஆருக்குக் கொடுத்தார்கள் என்றா?

ஸசின் க்ரிகெட் விளையாடி அவ்வளவாகப் பார்த்ததில்லை. அதிலும் அவர் சிறப்பாக விளையாடிய பதினைந்து இருபது வருடங்களில் ஒரு முறை கூட பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான செஞ்சுரிகளில் ஒன்றைக் கூடப் பார்த்த நினைவில்லை. இருந்தாலும் அவரை அறிய முடிந்தது அவர் விளையாட்டின் சிறப்பினால் என்பது எனக்குத் தெரியும். ஸசின் ஓய்வு விழா (?) தொலைகாட்சியில் பார்த்தேன். 'இந்த பாரத ரத்னா என் அம்மாவுக்கு' என்றார். அதற்காகவே.. அந்தப் பண்புக்காகவே.. பாரத ரத்னா கொடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்துவிட்டது. 'பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக எத்தனையோ செய்கிறார்கள்.. அவர்களைப் பொறுத்தவரை அவை தியாகங்கள் அல்ல.. இந்த நாள் வரை என் பெற்றோர்கள் உனக்காக இதைச் செய்தேன் அதை இழந்தேன் என்று சொன்னதில்லை..' என்றார். இந்த வரிகளுக்காக அடுத்த வருட பாரத ரத்னாவையும் அவருக்கே வழங்கவேண்டும்.

ஸசினை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. எப்படிப்பட்ட பெற்றோர்கள்! 'இன்னிக்கு நீ போட்டிருக்கிற சட்டை நான் வாங்கிக் கொடுத்தது.. இன்னிக்கு நீ சம்பாதிக்கிற வேலை படிச்ச படிப்பு நான் போட்ட பிச்சை.. இன்னிக்கு நீ கட்டியிருக்கிற புடவை என் ரத்தத்தைக் கொட்டி சம்பாதிச்சது..' என்ற பாணியில் புழங்கும் பெற்றோர்களையே இன்றளவும் சந்தித்துச் சந்தித்து.. ஸசின் பேச்சைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. ஸசினுடைய பெற்றோர்களுக்கும் பாரத ரத்னா தரவேண்டும்.

2013/09/21

கலவை



    கூடியிருக்கும் புராண வித்தகர்களுக்கு ஒரு புதிரான புதிர்.
1. குபேரனுடைய 'அழிவில்லாத' செல்வத்தை ஒரு பகலில் அழித்தவர் யார்?
    அ)அகத்தியர் ஆ)வினாயகர் இ)பார்வதி ஈ)ராவணன்
2. 'சிரஞ்சீவி'யான அனுமானை ஒரு முறை கொன்றது யார்?
    அ)சூரியன் ஆ)இந்திரன் இ)கருடர் ஈ)கார்த்திகேயர்
3. ஒரு யானை பலம் கொண்ட பீமனுக்கு ஆயிரம் யானை பலம் கொடுத்தது யார்?
    அ)வாயு ஆ)அனுமான் இ)பரமசிவன் ஈ)நாகராணி


    மீபத்தில் ரசித்த பாடல், காட்சி. சுசீலா கொஞ்சுகிறார். சரோஜாதேவி கெஞ்சுகிறார். சிவாஜி ம்ம்.. கிறார்.


    "ஹலோ.. நல்லா இருக்கீங்களா..? நான் தான் பேசுறேன்" என்று பெயர் சொன்னதும், அரை நொடி தயங்கி முகத்தில் அடித்தாற் போல் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மனதில் சில எண்ணங்கள் தோன்றுகின்றன. ஒருவேளை லைன் கட்டாகியிருக்குமோ? ஒரு வேளை ராங்க் நம்பரோ? பிறகு சமாதானமாகி, "வேண்டுமென்றே தான் துண்டித்திருக்கிறார்கள்" என்ற உணர்வு வந்ததும் மேலும் சில எண்ணங்கள். ஏன்? 'நல்லா இருக்கீங்களா?' என்றுதானே கேட்கிறோம்? எதிரியாக இருந்தால் கூட ஒரு கண்ணியத்துக்காகவோ அல்லது கோபத்தினாலோ "பேச விருப்பமில்லை.." என்றோ, "கட்டையிலே போறவனே.. இனி போன் செய்தால் செருப்பாலடிப்பேன்" என்றோ சொல்லும் நேர்மை கூட இல்லாமல் போனதேன்? அல்லது, "ஹலோ.. ஹலோ.." என்று வேண்டுமென்றே காதில் விழாதது போல் இழுத்தடிப்பது பொறுக்காமல் நாமாகவே துண்டித்து மீண்டும் அழைக்கையில், "தற்சமயம பிஸியாக.." என்றோ "சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது" என்றோ.. செய்திக்குப் பின் தப்பிக்கும் கயமைத்தனம் கூட தோன்றாமல் போனதேன்? "நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டவரிடமா இப்படிப் பண்பில்லாமல் நடந்து கொள்வது? இன்னும் நிறைய எண்ணங்கள் தோன்றி சற்றே வதைத்து வாட்டுகின்றன.

உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?

நண்பர் அரசனுக்கு இந்த நிலை ஒரு முறை ஏற்பட்டது. என்னிடம் விவரங்களைச் சொன்னார்.

"கீழ்த்தரமானவங்க அப்படித்தான் இருப்பாங்க" என்றேன்.

"ஏன் அப்படிச் சொல்லுறே?" என்றார்.

"பின்னே என்ன சார்? ஒருத்தரை வெறுக்கிறோம்னா அதை வெளிப்படையா சொல்லலாமே? அந்த நேர்மை கூட இல்லாம... நீங்க என்ன தொந்தரவு கொடுக்கவா போன் செஞ்சீங்க? அப்படியே இருந்தாலும் நல்லா இருக்கீங்களானு கேட்ட உடனே இப்படியா நடந்துக்குவாங்க.. ப்ரூட்"

அரசன் புன்னகைத்தார். "என்னைக்கும் மனசுல பட்டதை சொல்லி இப்படியே இருடா என் ராசா" என்றார். பிறகு, "இதுல அவங்க செஞ்சது ஒண்ணும் கீழ்த்தரம் இல்லை அய்யா.. பிழை என் பேரில் தான்" என்றார்.

அரசனிடம் இந்தக் கெட்டப் பழக்கம் இருந்தது. எல்லாவற்றையும் சமன் தூக்கிப் பார்ப்பது. கேள்வியோடு பார்த்தேன்.

"இல்லய்யா.. அவங்களுக்கு நான் போன் செஞ்சது பிடிக்கலே.. பிடிக்காதவங்க போன் செஞ்சா நீ சொல்லுறாப்புல நாசமாப்போறவனேனு திட்டியோ.. இல்லே பலமா எச்சரிக்கை செஞ்சோ.. அவங்க பேசியிருக்கலாம்தான். ஆனா அப்படி எதுவும் செய்யாமே சட்டுனு போனை முகத்திலடிக்குறாப்புல வைக்குற கீழ்த்தரம் அவங்களுக்கு வந்ததுக்கு நான் தானே.. என்னுடைய குரல் தானே.. என்னுடைய பெயர் தானே காரணம்? அவங்க என்னை மறந்து இருந்த நேரத்துல என்னை நானே அவங்க நினைவுல நுழைச்சு அவங்க மனதுல வெறுப்பைத் தூவினது.. நான் தானே? அதனால அவங்க கீழ்த்தரமா நடந்துக்கிட்டாங்களேன்றதை விட, நான் அவங்களைக் கீழ்த்தரமா நடக்க வச்சுட்டனேனு எனக்கு வருத்தமா இருக்கப்பா.. அவங்களோட அன்றைய தின வாழ்க்கையிலே கீழ்த்தரமான பண்பற்ற நடத்தை வெளிப்பட நான் காரணமாயிட்டனேனு வருத்தம்"

"உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலே ஐயா" என்றேன்.

"ஒரு நாள் புரிஞ்சுக்குவே.. புரியாத போனாலும் பரவாயில்லே" என்றார்.

நண்பர் அரசனின் நினைவு நாள் அடுத்த மாதம் வருகிறது. "புரிந்து கொண்டேன் நண்பரே" என்று சொல்ல வேண்டும்.

ஒரு சிக்கலை, சிக்கலின் வேர் புரியாமல், என்னுடைய கோணத்திலேயே பார்த்து அடுத்தவர்களைப் பாதிக்குபடியான முடிவெடுக்கும் பழக்கத்திலிருந்து என்று விடுபடுவேன்?

நல்ல ஆசான்களை இழப்பது கொடுமையானது.


    'கோர்பரெட் ஸ்ட்ரேடஜி' பற்றி அவரவர் கிழிகிழி என்று கிழித்திருக்கிறார்கள். கிழிக்க எதுவும் இல்லையென்றால் கிழிந்ததை இன்னும் நையக் கிழித்திருக்கிறார்கள். என்னாலேயே நம்பமுடியவில்லை எனினும், நானும் இந்த வகையில் கொஞ்சம் கிழித்திருக்கிறேன்.

இது ரொம்ப சுளுவான விஷயம், யார் வேண்டுமானாலும் தங்கள் எண்ணங்களைச் சொல்லலாம். செயல்பாட்டில் தானே இருக்குது சூட்சுமம்? செயலில் இறங்க வேண்டியத் தேவையில்லாத வரையில், சொல் சித்தர்களுக்குக் குறைவே இல்லை. உதாரணத்துக்கு.. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போவதைத் தடுக்க எத்தனை பேர் என்னிடம் ஸ்ட்ரேடஜி சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? (ஏழாம் வாய்ப்பாட்டின் கீழ் வரிசையில் வருகிறது விடை).

எழுபதுகளில் ஜபேன், ஜெர்மனி, கேடர்பில்லர், கோமாட்சூ என்றார்கள். எண்பதுகளில் சைனா, ஆப்பில், மோடரோலா, என்றார்கள். தொண்ணூறுகளில் ஆப்பிலை வெறுத்தார்கள். நோகியா, மைக்ரோசாப்ட், இன்டெல், நெட்ஸ்கேப், அமெரிக்க ஐக்கிய சபை, கோர்பசேவ் என்றார்கள். முதல் பத்தில் டெல், மறுபடி ஆப்பில், கூகுல் என்றார்கள். பின் பத்தில் இதுவரை மீண்டும் சைனா, இஸ்ரேல், பேஸ்புக், வால்மார்ட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பத்தில் ஆப்பில், பேஸ்புக் எல்லாம் காணாமல் போகும்.. சைனா கூட தடுமாறலாம்.

எல்லாமே அந்தக் கணத்தின் அறிவை ஒட்டிப் பிறக்கும் சிந்தனைகள். பத்தே நிமிடங்களில் புஸ்வாணமாகும் சிந்தனைகள். அதனால் பெரும்பாலான ஸ்ட்ரேடஜி புத்தகங்களை நான் படிப்பதே இல்லை. முன்போல் ஓசியில் நிறைய புத்தகங்கள் கிடைப்பதில்லை. எப்பவாவது கிடைத்தாலும் சிரித்துக் கொண்டே அவசியம் படிப்பதாகப் பொய் சொல்லி அடுத்த வாரமே யாருக்காவது பரிசாகக் கொடுத்து விடுவேன்.

சமீபத்தில் படித்த புத்தகம் - தலைப்பு காரணமா, இல்லை இதை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய முன்பின் அறியாத பக்கத்து இருக்கையில் என்னுடன் பறந்த பயணியின் அறிவுக் களை காரணமா, தெரியவில்லை, படிக்கத் தோன்றியது, படித்தேன். அட! என் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமோ என்று எண்ண வைத்தது. கால் ஹேமரிக் மற்றும் ரிசர்ட் லூயிஸ் இணைந்து எழுதியிருக்கும் மேலாண்மைத் தந்திரம் பற்றிய புத்தகம் "Fish can't see water". இந்தப் புத்தகம் இன்னும் அமெரிக்காவிலேயே பரவலாக வெளிவரவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட போது ப.இ.பயணிக்கு மனதார நன்றி சொன்னேன்.

தானிருக்கும் நீர் நிலையைப் பற்றி அதில் நீந்தும் மீனுக்குத் தெரிய வாய்ப்பில்லை (என்று வைத்துக் கொள்வோம்). அதே போல் ஒரு வளரும்/வளர்ந்த நிறுவனத்துக்கு, அதன் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த (ஊழியர்களின்) பண்பு கலாசாரம் போன்றவற்றைப் பற்றிய பார்வை கிடைக்க வாய்ப்பில்லை. இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கும் புத்தகம். ஒரு தந்திரம் பலன் தருமா தராதா என்பதைத் தீர்மானமாகச் சொல்லவே முடியாது என்ற துணிச்சலான கருத்தை உலகத்தின் பல நிறுவனங்களின் வரலாற்றை ஒட்டி எழுதியிருக்கிறார்கள். ஆசிரியரின் சொந்தக் கண்டுபிடுப்பான 'cultural dynamic model' என்னும் குழப்படிக் கருவியை வைத்து ஆறுவித கோர்பரேட் கலாசாரங்களை ஆராயும் சுவையான புத்தகம். ஒரு நிறுவனத்தின் உலகளாவிய வெற்றி தோல்விகளை அதனுள் நிரவியிருக்கும் கலாசாரக் கடலின் போக்கே தீர்மானிக்கிறது என்று நம்பும்படி சொல்லியிருக்கிறார்கள்.

எம்பிஏ படிப்பவர்களும் மேலாண்மைக் கலையில் விருப்பமுள்ளவர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக, பங்குச் சந்தையில் விளையாடுவோர், கம்பெனிகள் வாங்க விற்க என்று எல்.ஆர்.சுவாமி (இன்னும் இருக்கிறதா?) பாணியில் அலையும் இன்வெஸ்ட்மென்ட் ஆசாமிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அவர்களைத் தவிர நம்மைப் போல - சரி, உங்களைச் சேர்க்கவில்லை - என் போல, பொழுது போகாதவர்களும் படிக்க வேண்டிய பு.


    லர்சட்டைக்காக வைத்திருந்தேன். இங்கேயே வம்படித்து விடுகிறேன்.

1. ஹெர்பர்ட்-கேதரின் தம்பதியரின் முதல் குழந்தை 2009ல் இறந்தது. அதற்காகப் பெற்றோர்களுக்குத் தண்டனை கிடைத்தது. ஏன்? சளி, பசி, காய்ச்சலில் கிடந்த பிள்ளையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் கடவுளிடம், அதாவது கடவுள் அருளை நம்பி, சர்ச்சில் விட்டார்களாம். தினசரி பைபிலும் தோத்திரங்களும் படித்தார்களாம். பிள்ளை இறந்ததும் அது இறைவனின் ஆணை என்று இருந்தார்களாம். சும்மா விடுமா பிலடெல்பியா சட்டம்? பிடித்துத் தண்டித்தார்கள்.

அறிவு வந்ததோ ஆத்திகருக்கு? இல்லை. போன வருடம் இரண்டாவது குழந்தையும் இதே போல் இறந்தது.

கேட்டால் அதையே சொன்னார்கள் மறுபடி. பிணியும் மருந்தும் இறைவனின் ஆணை என்றார்கள். "பிடிச்சு உள்ளே போடுங்கடா ரெண்டு கேனக்.." என்றது பிலடெல்பியா அரசு.

"நிறுத்துங்கள் அரசே!" என்று ஒரு கொடி. 'தேரா மன்னா!' என்பவர் யாரென்று பார்த்தால்... மைத்ரி ஜெயராமன்! அட, நம்ம ஊர்க்கார லாயரு! என்ன சொல்றாரு? "ஆடாப்ஸி விவரங்கள் கிடைக்கும் வரை பெற்றோர்களை எதுவும் செய்யக்கூடாது" என்கிறார். ஓகே. பட்சவங்க இல்லியா? அப்பால தான் வளுக்குறாங்க தமிழம்மா. இன்னா சொல்றாங்க? "இந்தப் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பெரும் அன்பும் கனிவும் செலுத்தி வந்திருக்கிறார்கள்.. இவர்கள் குற்றவாளிகள் அல்ல". ம்ம்ம்.. யம்மா மைத்ரி.. காய்ச்சலான கொளந்தையை ஒரு தபா கூட டாக்டராண்ட இட்டுகினு போவலியாமே அவங்க? அதுங்களையா பெரும் அன்பும் கனிவும்னு சொல்றே? இன்னாம்மே நீ?

ஹெர்பர்ட் கேதரினுடன் மைத்ரியையும் உள்ளே தள்ள வேண்டும். முட்டாள்தனம் சட்டப்படி குற்றமாகாமல் போனதே, என்ன செய்ய?!

இவர்களின் சர்ச்சான 'first gospel church of philadelphia'வின் இணைய தளத்தில் "மருந்து மாத்திரைகளை நம்புவது பாவம்; யேசுவே குணமளிப்பவர், அவரை நம்புவது மட்டுமே உண்மையான ஆத்திகம்' என்று மே மாதம் வரை இருந்ததாம். (அடச்சே! ஒரு சான்சு போச்சே!)

என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில் இது போன்ற முட்டாள்தனங்கள் நடக்க வாய்ப்பே இல்லை.

2. சமீபத்தில் நடந்து முடிந்த வினாயக சதுர்த்தியின் விளைவாக நிறைய ஆத்திகர்கள் திருடர்களாக மாறியிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இன்டியாவில் வந்திருக்கும் செய்திப்படி நிறைய இடங்களில் ஆத்திகர்கள் எத்தனையோ ஆயிரம் வாட் கணக்கில் பொது மின்சாரம் திருடி வினாயகப் பெம்மானைக் கோலாகலமாக வழிபட்டிருக்கிறார்கள். திருட்டில் வினாயகருக்கும் பங்களித்திருக்கிறாகள் என்பது தெரிந்து செய்திருக்கிறார்களா? இல்லை 'வினாயகர் தானே,, நேரிலா வரப்போகிறார்?' என்ற சமாதானத்துடன் செய்தார்களா? ஆக மொத்தம் நாட்டுக்கு நஷ்டம்.

விடுங்க, அதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? அதை மோடி பாத்துக்குவாரு. இப்பத்திக்கு வினாயகரை நல்லா லைட் வச்சு கூட்டிக்கிட்டுப் போய் கடல்லே கரைச்சா போதும். என்னா சொல்றீங்க?

என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில்..
கொஞ்சம் இருங்க, யாரோ வேகமா வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றாப்ல இருக்குதே?


    மோடி என்றதும் நினைவுக்கு வந்தது. நரேந்திர மோடி நிச்சயம் வெற்றி பெறுவார் என்கிறார்கள். ந.மோடி வருவதால் இந்தியா "எங்கியோ போவப் போவுது" என்கிறார்கள். "என்ன செய்வார் மோடி?" என்று சிலரிடம் கேட்டேன். எல்லோரும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் (குஜராத்?) அப்படி இப்படி சொல்கிறார்களே தவிர, காங்கிரசை விட மோடி எந்த விதத்தில் மேலான ஆட்சியைக் கொண்டு வருவார் என்று யாராலும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஊழலை ஒழிப்பதிலிருந்து இஸ்லாமியரை விரட்டுவது வரை ஆளாளுக்குத் தோன்றியதைச் சொல்கிறார்கள்.

'இந்துக்களுக்கு நல்லது' என்ற காரணத்துக்காக மோடிக்கு ஓட்டு விழுந்தால் வெட்கக் கேடு.


    பாமா சிரியா பற்றிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை வைத்துப் பார்க்கையில் அமெரிக்காவை மட்டம் தட்டிவிட்டேனோ என்று தோன்றுகிறது. ஒபாமா உதவாக்கரை என்பதைச் சொல்ல வந்தேன்.. அவருக்கு ஓட்டுப் போட்டதை வைத்து அமெரிக்காவை எடை போடுவது சரியாகத் தோன்றவில்லை. சிரியா பிரச்சினை பற்றிய என் கருத்தை விரிவாகப் பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு சுருக்கம்: அசாத்தை ஒரு அரபு நாட்டுக்கும் பிடிக்கவில்லை. நேரடியாக எதுவும் சொல்ல/செய்ய முடியாத நிலையில், அமெரிக்காவின் பின்னால் நின்று போராடுகிறார்கள். இது தான் பிரச்சினை. இதை அமெரிக்கா எந்த அளவுக்குத் தனதாக்கிக் கொள்கிறது என்பதில் தான் சிக்கல்.

சரியான தலைமையில்லாமல் அதை அணுகுவதில் இருக்கிறது ஆபத்து.


    ஸ்திரேலியாவில் ஒரு பெண்மணி கோர்ட்டில் கேஸ் போட்டு ஜெயித்திருக்கிறார். வேலை விஷயமாக வெளியூரில் தங்கியிருந்தாராம். படுத்துக் கொண்டிருந்த போது மேலே விளக்கு விழுந்து அடிபட்டதால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டார். வேலை நேரத்துக்கு அப்பால் விபத்து நடந்ததாகச் சொல்லி அவருடைய கம்பெனியும் இன்சூரன்சு கம்பெனியான காம்கேரும் மறுத்துவிட்டதால் வழக்கு தொடர்ந்தார். ஐந்து வருடங்கள் வழக்காடி ஜெயித்தார்.

என்ன பெரிய விசேஷம்? விளக்கு விழுந்த போது பெண்மணி படுத்துக் கொண்டிருந்தார் என்றாலும் அவர் மேல் இன்னொருவரும் படுத்துக் கொண்டிருந்தாராம். ஹிஹி.


    புதிரான புதிருக்கு விடை: ஆ, ஆ, ஈ. (சுவாரசியமான கதைகள்)

2013/08/09

மெல்லிசை நினைவுகள்



    டனடியாகப் பதிவு எழுதவில்லையெனில் blogஐ bulletin boarடாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறது.

மெல்லிசை நினைவுகள் தலைப்பில் பதிவெழுதி நாளானதை நினைவூட்டியப் பெருந்தகைகளைப் பதிவின் முடிவில் கவனிக்கிறேன். பதிவெழுத நினைத்திருந்த எனக்கு சமீப நிகழ்வுகளும் வசதியாக அமைந்தது என்பேன்.

சமீப வாரங்களின் சிக்கல்களினால் பதிவெழுத முடியாமல் போனது. சோம்பல், பயண ஏமாற்றம், குழப்பம், விபத்து, வேலை, அலைச்சல், சோம்பல், சோகம், சோர்வு, குறிப்பாகச் சோம்பல்.. என்று பல காரணங்களால் உண்டான சிக்கல்கள். அது போதாதென்று கண்பிடுங்கி நீலன் கதையின் அடுத்தப் பகுதிகளைப் படித்து நானே திகிலடைந்ததும் ஒரு காரணம்.

திரிந்தும் உடைந்தும் அடைந்தும் கிடந்த நாட்களில் மெல்லிசையும் புத்தகமும் கதியெனக் கிடந்தேன். வீண் அலைச்சலின் இடையே கண்காணாத ஏர்போர்ட் லவுஞ்சில் நான் சற்றும் எதிர்பாரா விதமாகச் சந்தித்த இரண்டு இசைப் பிரபலங்களுடன் சில நிமிடங்கள் பேசக் கிடைத்த வாய்ப்பு, அசதி போக்கும் சந்தன வாடை மயிலிறகாக அமைந்தது. எஸ்பிபியை அடையாளம் தெரிந்தது. வாணியை அடையாளம் தெரியவில்லை. பிறகு ப்ளேன் பக்கத்து இருக்கைப் பயணி தொடர்ந்து சொன்ன ஜோக்குகளும் குட்டிக்கதைகளும் ஆலையற்ற ஊரின் இலுப்பைப்பூவாயின. எழுதி வைத்துக் கொள்ளாமல் போனேனே..! ஜோக்குகளை நினைவில் வைத்துக் கொண்டு வரிசையாகச் சொல்வது ஒரு கலை. நானறியாத கலை.

கோபமும் ஆத்திரமும் தவறு என்று கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் சொல்லும் நான், அநியாயத்துக்குக் கோபம் கொண்டு வாயில் வந்தபடி காய் கவர்ந்ததை எண்ணிக் குறுகிப் போய் வருந்திய சமீபத் தருணங்களில், மெல்லிசை எனக்குத் திரையானது. என் நண்பர் அரசனிடம் ஒரு வழக்கம் இருந்தது. தன் மீது காறித் துப்பியவர்களிடம் கூட கோபம் காட்ட மாட்டார். நான் சாதாரணத்திலும் சாதாரணம். கோபம் எனக்குத் தூண்டில் புழு போல. சட்டென்று கவ்விச் சிக்கிக் கொண்டு திண்டாடுவேன். பிறகு புத்தகம் இசை என்று காணாமல் போய்விடுவேன். அரசனுக்கும் மெல்லிசை பிடிக்கும். தூத்துக்குடி வானொலி நிலைய நண்பரிடம், இரவின் அமைதியில் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பச் சொல்லிக் கேட்பார். அவர் அடிக்கடி விரும்பிக் கேட்டப் பாடல் இது.
சித்திரப் பூச்சேலை


அம்ருத்சரில் வந்திறங்கிய கமல், உள்ளூர் பாஷை தெரியாமல் விழித்தபடி அங்குமிங்கும் பார்த்தார். எதிரே தென்பட்ட சர்தார்ஜியை நெருங்கி, "தமிழ் தெரியுமா?" என்றார்.
"சாலா, ஹிந்தி தேரா பாப்!" என்றார் சர்தார்ஜி கோபத்துடன்.


தமிழ் டிவிகளில் ஏமாந்தால் சூபர் சிங்கர் ஜூனியர் சிங்கர் சீனியர் சிங்கர் ஹாரிபில் சிங்கர்.. என்று கூத்தாக இருக்கிறது. அதை விட்டால் நீயா நானா என்று கற்பனை வற்றிய விவாத நிகழ்ச்சி ஒன்று. எரிச்சலாக வந்தது. வருடா வருடம் தமிழ் டிவி வரண்டு வருவதாகத் தோன்றுகிறது. (ஏதோ ஒரு நிமிடம் புலம்பிவிட்டுப் போகிறேன், விடுங்கள். என்னால் வேறென்ன செய்ய முடியும்?)

சரோஜாதேவியுடன் மலரும் நினைவுகள் நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தது. எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி தேவிகா பத்மினி பானுமதி பற்றிப் பேசினார். முத்துராமன் பற்றி மூச். இணைந்து நடிக்கவில்லையோ? இடையிடையே பாடல் அல்லது படக்காட்சி ஒளிபரப்பினார்கள். 'போர்க்களமானேன் ஐயோ அம்மா நாதியில்லையே' என்று கண்ணீரும் கம்பலையுமாக ஒரு சோகப் பாடல் ஓடிக்கொண்டிருக்கையில் எழுந்து சாப்பிடப்போனவனுக்கு அதிர்ச்சி. கம்பலை என்றால் என்னவென்றே தெரியாமல் அந்தச் சொல்லை உபயோகித்து வருகிறேன் என்பதல்ல அதிர்ச்சியின் காரணம். சோகப்பாட்டைத் தொடர்ந்த சுகப்பாட்டே அந்த அதிர்ச்சி. சோகத்தின் part2 அந்தப் பாடல் என்பதை இன்றுவரை அறியாதிருந்தேன். பாடலைப் பிறகு கேட்போம். "இன்றைய நடிகைகளில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?" என்று சரோஜாதேவியிடம் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார் பேட்டியாளர். சரோஜாதேவியின் பதிலை ரசித்தேன். "இப்போ நடிக்கிறவங்க எல்லார் குரலும் ஒரே மாதிரி இருக்குது..".

தொடர்ந்த சூபர் சிங்கர் அறுவையில், சுசீலாவின் பழைய பாடலைப் பாடிய பெண் தமிழை வதைத்துத் தொலைத்தார். தமிழின் சிதைவை மறந்து, குரலை மட்டும் கவனிக்கலாம் என்றால் முடியவில்லை. அசல் பாடலிலும் தத்தித்ததா தித்தித்ததா பொட்டிட்டதா பட்டிட்டதா என்று சுசீலா ஏதேதோ பாடுவார். சிறுவயதில் பாடல் புரியவில்லை. பின்னாளில் ஹெட்செட் அணிந்துக் கேட்டும் புரியவில்லை. எனினும், அது தமிழ் என்பது தெளிவாகத் தெரிந்தது. தேன் குரலில் சுசீலா கொஞ்சியதும் நிறையவே பிடித்தது.

சூபர் சிங்கர் அறுவையில் பாடியவரின் குரலைக் கேட்டதும்... இனி பாடகர்களைக் குரல் வளத்துக்காக மட்டும், பாடுவது தமிழா இல்லையா என்று சந்தேகப்படாமல், கேட்டுப் பழக வேண்டியது தானோ என்று தோன்றியது.
தத்தை நெஞ்சம் முத்தத்திலே

மனைவியைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பிய கமல் பக்கத்து வீட்டுக்காரரிடம், "ஒரு வாரம் என் வைப் ஊருக்குப் போயிருக்கா. தனியா படுக்க பயமாயிருக்கு, என் கூட துணைக்குப் படுத்துக்க முடியுமா?" என்று கேட்டார்.
"என்ன கமல் இது.. உனக்கும் உன் பெண்டாட்டிக்கும் இதே பழக்கமா போயிடுச்சே?" என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.


சூபர் சிங்கர் அளவுக்கு இல்லாவிட்டாலும் அந்த நாளிலும் இது போன்ற போட்டிகள் சென்னையின் காஞ்சி, கனிமரா போன்ற ஹோடல்களில் நடந்தன. சினிமாவில் பாட ஆசைப்பட்டு நிறைய இளைஞர்கள் வந்து பாடுவார்கள். என் நெருங்கிய சினேகிதி ஒருத்தி 'சினிமாவில் பாடியே தீருவேன்' என்று அடம்பிடித்து வீட்டுக்குத் தெரியாமல் இது போன்ற நிகழ்ச்சிகளுக்குச் சென்று பாடுவாள். என்னைத் துணைக்கு இழுத்துக் கொண்டு போவாள். சனி ஞாயிறுகளில் சாப்பிட்டு தொண்டனுக்கும் உண்டென்று மயங்கிக் கிடக்கையில் என் தங்கை அவசரக் குரல் கொடுப்பாள்.. "துரை, உன் ப்ரெண்டு அனுராதா வராடா..". அலறி எழுந்து பின்கட்டு வழியாகத் தப்பிக்கப் பார்த்தால் கிணற்றடியில் நின்றபடி சிரிப்பாள் கிராதகி. "சாயந்திரம் சுஜாதா மூவிஸ்ல எம்எஸ்வி ட்ரூப் கோரஸ் வாய்ஸ் டெஸ்ட்ரா.. துணைக்கு வாடா ப்லீஸ்?".

சரியாக நினைவில்லை. எம்எஸ்வி இசையில் ஏதோ ஒரு பாடல் பாடினாள் என்று நினைக்கிறேன். பிறகு சங்கர் கணேஷ் இசையில் லாலாலா என்றுப் பின்னணி கும்பலோடு கோவிந்தா போட்டாளே தவிர, கல்லூரிப் படிப்பு முடியும் வரை அனுராதாவுக்கு எந்த சான்சும் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு அவள் வாய்ப்பு தேடவில்லை. கடைசி வருடப் படிப்பு முடிந்ததும் முஸ்லிம் பையனைக் காதல் திருமணம் செய்து, சில வருடங்கள் தலைமறைவானாள். அவள் மகன், போன வருட சூபர் சிங்கர் கடைசி சுற்றுகளில் எஸ்பிபி பாடல்களைப் பாடினானாம். ஹேரிஸ் ஜெயராம் (?) குழுவில் இப்போது வாத்தியங்கள் வாசிக்கிறான், பாடுகிறான். எல்லாம் சுபம். அனுராதா அடிக்கடி முணுமுணுத்த பாடல் போல் இப்போது பாடல்கள் வருவதில்லை என்று நினைக்கிறேன் (காட்சி அமைக்கிறார்களா என்பதும் தெரியவில்லை).
துள்ளித் துள்ளி விளையாட துடிக்குது மனசு


ஹோட்டல் பாருக்குள் நுழைந்த ஒருவன் பக்கத்தில் இருந்தவனிடம், "ஒரு கமல் ஜோக் சொல்றேன் கேக்குறியா?" என்றான். பக்கத்தில் இருந்தவன் முறைத்தான்: "இதப்பாரு நான் கமல் மன்ற ட்ரஸ்டி. இதோ பார்டெண்டர் இருக்கானே பாடிபில்டர்.. இவன் கமல் மன்றச் செயலாளர். அதோ உக்காந்திருக்காரே மொட்டைத்தலை பார் முதலாளி.. அவரு கமல் மன்றத் தலைவர்.. இதுக்கு மேலயும் கமல் ஜோக் சொல்ல விருப்பமா?"
சொல்ல வந்தவன் தயங்கி, "வேணாம். தனித்தனியா அத்தனை தடவை சொல்லிப் புரியவைக்க முடியாது" என்றான்.


எஸ்பிபி என்றதும் நினைவுக்கு வருபவன், என் பம்மல் வட்ட நண்பன் சாம்பா. எஸ்பிபியை விட எஸ்பிபி போலப் பாடுவான். மவுத் ஆர்கன் வாசிப்பான். முழுப்பாடல்களை மூச்சுவிடாமல் விசிலடிப்பான். தொலைத்த நட்புகளில் மிகவும் தேடுகிற நட்பு. சென்னையில் சொந்தமாக இசைக்குழு வைத்திருக்கிறான், பாடுகிறான் என்கிறார்கள். அடுத்தப் பயணத்தில் இவனைக் கண்டுபிடித்தேயாக வேண்டும். அன்புக்கரசன் கிடார், ஜேம்ஸ் டிரம்ஸ், நானும் சாம்பாவும் பாட்டு. கோடை இரவுகளில் அன்புக்கரசன் வீட்டு மொட்டை மாடியில் மணிக்கணக்காகப் பாடியிருக்கிறோம். 'கிறோம்' என்று சந்தடி சாக்கில் சேர்ந்து கொள்கிறேனே தவிர, உண்மையில் சாம்பா பாடுவான். நான் ஹம் செய்வேன். 'சாமரம் போடுவேன்' என்று கா நே சச்சு சொல்வது போல.
காதல் கதை சொல்வேனோ


"அம்மா.. நாளைக்கு எங்க ஸ்கூல் பார்ட்டிக்கு எல்லாரும் சிவப்பு சட்டை போட்டுகிட்டு வரணும்னு டீச்சர் சொன்னாங்க.." என்று சிறுவன் கமல் சொன்னதும் அது போலவே சிவப்புச் சட்டை போட்டனுப்பினார் அம்மா.
மறுநாள் சீக்கிரமே திரும்பி வந்த கமல் அழுதுகொண்டே, "போம்மா.. நான் இனிமே ஸ்கூல் பார்ட்டிக்கு போகமாட்டேன்" என்றதும், "ஏன்?" என்றார் அம்மா.
"பின்ன என்னம்மா..?" என்றான் கமல். "சிவப்பு சட்டைல வரணும்னு எல்லார் கிட்டயும் சொன்னாங்கல்ல?.. கூடவே ஜட்டியும் ட்ராயரும் போட்டுகிட்டு வரணும்னு எங்கிட்ட மட்டும் சொல்லவேயில்லம்மா.."


டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் (சரியா?) ஒரு பிரபல பாடலை அறிமுகப்படுத்துகையில் "இசையமைத்த எம்எஸ்வியைத் தவிர இந்தப் பாடலில் சம்பந்தப்பட்ட எவருமே உயிரோடு இல்லை" என்றார். எம்எஸ்வி உயிரோடிருப்பதற்காக வருத்தப்படுகிறாரா? இருக்காது என்று சமாதானமாகி, வாலி டிஎம்எஸ்சை மனதில் வைத்துச் சொல்லியிருப்பார் என்று நினைத்தால் சுசீலாவை மறந்துவிட்டாரே?. பாடலில் சம்பந்தப்பட்ட பெண் குரலான சுசீலா இருப்பது தெரியாதா? இல்லை பெண் என்று இளப்பமா? சோமாறி டாய்! அவர் குறிப்பிட்ட பாடல் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அதற்குப் பதில் வேறு பாடலை இணைக்கிறேன்.

வெங்கட்ராமன் என் கல்லூரி கால நெருங்கிய நண்பன். எனக்கும் அவனுக்கும் இரண்டு பெரிய ஒற்றுமைகள் உண்டு. முதலாவது, எங்கள் அப்பாக்கள் மகா உதவாக்கரைகள். இரண்டாவது, எங்களுக்கு டிஎம்எஸ்-சுசீலா என்றால் உயிர். எங்களைச் சுற்றிய ஒரு சுவாரசியமான கதைக்கு இப்போது நேரமில்லை. இந்தப்பாடல் அவனுக்காக. எஞ்சாய் வெங்கட்ராமா!
இதயத்திலிருந்து இதழ்கள் வரை


கிராமத் திருவிழாவில் தங்கள் மனைவிகளைத் தொலைத்துத் தேடிக்கொண்டிருந்த முன்சீபும் கமலும் சந்தித்தார்கள். முன்சீபுக்கு ஆதரவாக, "உங்க பெண்டாட்டி எப்படி இருப்பாங்க?" என்றார் கமல்.
"ராக்கி நல்ல உசரமுங்க.. பச்சைல முழங்கால் உசரத்துக்கு சீலை.. எப்பவும் ரவிக்கை போடமாட்டா.. உதடு ரெண்டும் பளுத்த கோவப்பழம்.. வாளிப்பா கட்டையா இருப்பா.. ஆமா, உங்க பொஞ்சாதி?" என்றார் முன்சீப்.
"கழுத கிடக்கா.. உங்க பெண்டாட்டியை முதல்ல தேடலாம் வாங்க" என்றார் கமல்.


தொடர்வது, நான் மிக விரும்பும் பாடல்களில் ஒன்று. சோகப்பாட்டின் part2. dramatic தொடக்கம், ஏறக்குறைய நௌஷத் மெட்டில் அருவி போல் வயலின், நெஞ்சை வருடும் ஹம்மிங், அற்புதமான வரிகளுடன் இனிய இசை, குரல். serenely uplifting. போட்ட மெட்டைத் திரும்பப் போடுவதில் எம்எஸ்வி வல்லவர் என்றாலும், இந்தப் பாடலின் மெட்டை மறுபடி உபயோகித்தாரா தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். மெல்லிசை நினைவுகள் பதிவெழுத நினைவூட்டியதற்காக:
நான் பாடிய பாடல்

2013/06/20

சங்க சொப்பனம்



    திகாலை சுமார் மூன்று மணிக்கு அலறியடித்து விழித்து எழுந்தேன். மறுபடி தூங்கப் பயந்து.. கொஞ்சம் மோர் நானே கலந்து குடித்து.. வேப்பிலை (ப்லேஸ்டிக்) அடித்து.. விபூதி ஸ்டாக் இல்லாததால் medicated powder சிறிது பூசி.. காக்கக் காக்கக் கனகவேல் காக்க.. டகுடகு டிகுடிகு டிங்கு டிங்கு டமுக்கு டப்பா அய்சலக்கா படபடபடபடபடப்பில் இரண்டு மணி நேரம் போல் வியர்த்திருந்தேன்.

இது தான் நான் கண்ட கனவு:

உயர்நிலைப் பள்ளி. தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுதுகிறேன். கேள்வித்தாளைப் பார்க்கிறேன்.

'மாவடு கண்' என்ற உவமை ஆளப்படும் சங்கப் பாடலையும் அதற்கானப் பொருளையும் விளக்கி எழுதுக. 10 மதிப்பெண்.

சங்கப் பாடலா? எனக்கோ சினிமாப் பாட்டு தவிர வேறெதுவும் நினைவுக்கு வர மறுக்கிறது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல, சங்கத்துக்குப் பதில் சினிமாவை நைசாகத் தள்ளிவிட நினைத்தபடி அடுத்தக் கேள்வியைப் பார்க்கிறேன். ஆடிப்போகிறேன்.

'பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழியை உதாரணத்துடன் விளக்குக'.

'இன்னா எயவுடா இது முருகா?' என்று எண்ணி, முதல் நாளிரவு எழுதி மறைத்து வைத்த பிட்டை நாடுகிறேன். பேன்டுக்குப் பதில் அங்கே வேட்டி. ஆ! வேட்டியா கட்டியிருக்கிறேன்?! அதிர்ச்சியடங்கி, மீண்டும் கேள்விகளைப் படிக்கிறேன்.

'10 மதிப்பெண்' என்றிருந்தது, ஸ்பிடாமீடர் போல கிடுகிடுவென உருண்டு, '50 மதிப்பெண்' என்று என் கண் முன்னே மாறுகிறது. இரண்டு கேள்விகளைத் தவிர மற்றக் கேள்விகள் மறைந்து, அங்கே என் தமிழாசிரியரின் முகம் தோன்றுகிறது. பவர்ஸ்டார் போலச் சிரிக்கிறார்.

அலறியடித்து எழுந்தேன்.

இப்படி ஒரு கனவு வந்தால் நீங்கள் மட்டும் அலறாமல் என்னவாம்? இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்றா பாடுவீர்கள்?


    மினி மனைவி. சமீபத்தில் படித்த புத்தகம் #1. மேனுவல் கன்சாலெஸ் எழுதிய பதினெட்டு சிறுகதைகள். பதினெட்டில் பதினொரு கதைகளை ரசித்தேன். இவரின் கதைத்தளங்கள், கொஞ்சம் மூளையைக் கசக்கிப் பிழியும் அசாதாரணத் திகில் கலந்த வக்கிரக் குறும்புத் தளங்கள் (அப்படியென்றால்?). படித்து முடித்ததும், கதையின் விபரீதம் வக்கிரம் இவற்றின் பின்னால் இருக்கும் யதார்த்தம் புரிந்து திடுக்கிடுகிறோம்.

இரண்டு வகை தினசரி முரண்களின் comic extrapolation, இவர் கற்பனையின் வேர்.

ஒன்று: உறவுகள்.
ஆழ்ந்த நேசிப்புகளின் காரணமாகவோ, அந்த நேசிப்புகள் மெள்ள அரிக்கப்பட்ட அல்லது ஒட்டு மொத்தமாக நிராகரிக்கப்பட்டதன் ஆழ்ந்த வெறுப்பை நேசிக்கும் விபரீதம் காரணமாகவோ, சில உறவுகளையும் நினைவுகளையும் பற்றித் திண்டாடுகிறோம்.

இரண்டு: சமூகம்.
வகைசார் எதிர்பார்ப்பு வட்டங்களுக்குள் அடங்கி வாழ வேண்டிய எதிர்பார்ப்பை ஏற்றோ ஏற்காமலோ வாழும் காரணத்தால், நாமோ சமூகமோ எதிர்பார்த்தது முற்றிலும் எதிர்பாராததாக மாறும்
பொழுது நமக்கு என்ன ஆகிறது? சமூகத்துக்கு என்ன ஆகிறது? எதிர்பார்ப்புகளுக்கு என்ன ஆகிறது? (தளம் பற்றிச் சொன்னது இப்போது புரிகிறதா?)

ஒவ்வொரு சிறுகதையும் நம்மை இணையுலகுக்கு இட்டுச் சென்று ஏமாற்றி அங்கேயே தொலைத்து வருகிறது. இவருடைய முதல் புத்தகமாம். நம்பவே முடியவில்லை. புது ப்ரேட்பரியை வரவேற்று ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பி வைத்தேன்.

வாய்ப்பு கிடைத்தால் அவசியம் படியுங்கள். என்னைக் கவர்ந்த சில கதைகளின் துண்டுகள் அதுவரையில் தூண்டிலாய் உங்கள் மனதில் அலையட்டும் ;-)

பைலட்டும் எழுத்தாளனும்
சுமார் பத்தாயிரம் அடி உயரத்தில் நகரை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம், இருபது வருடங்களாக - இப்படித் தொடங்குகிறது கதை.

கடத்தப்பட்ட விமானம் ஒன்றில் பயணியாக நகரை வலம் வரும் எழுத்தாளனுக்கு மெள்ள மெள்ளத் தன் நிலை பழகிவிடுகிறது. இருபது வருடங்களாக ஒரு விமானத்துக்குள் அடைபட்டுக் கிடந்தால் என்ன ஆகும்? எப்பொழுது தரை தொடுவது? பிற பயணிகள் பைலட் சேவகர் அனைவரையும் தெரிந்து கொண்டாகி விட்டது. இனி? எழுத்தாளனுக்கு பழைய நினைவுகள் துணையாகின்றன. இந்த விமானம் என்றைக்காவது தரையிறங்குமா? முதலில் கவலைப்படுகிறான். நாளாக அந்தக் கவலையையும் துறக்கிறான். இறங்கத்தானே வேண்டும் ஒரு நாள்? பயணிகளுக்கும் தினம் வயதாகிக் கொண்டே போகிறதே? யாருமற்ற விமானம் தரை தொடத்தானே வேண்டும்? யாருமற்ற விமானம் தரை தொடுவதை கற்பனையில் ரசிக்கிறான். அனுபவிக்கிறான்.

தரைதொடாத கடத்தப்பட்ட விமானம் ஒரு படிமம். நம் வாழ்வு நாம் விரும்பியபடியா அமைகிறது? இந்த வாழ்வுக்குள் நாம் புகுத்தப்பட்டவர்களா? எனில், அது கடத்தல் தானே? என்றைக்குத் தரை தொடுவோம்?
கலைஞன்
tinnitus தெரியுமோ? அக்கம்ப்பக்கத்தில் எந்த ஒலியெழும்பாவிட்டாலும் காதிலும் மண்டையிலும் கிர்ர்ர்ர்ர் ஒலி கேட்குமே, அதான் tinnitus. இந்தக் கதையின் நாயகன் கார்ல், tinnitus extremus :). அதாவது கார்ல் தன் காதுகளால் பேசக் கூடியவன். in fact, காதுகளால் மட்டுமே பேசக் கூடியவன்.

ஏழு வயதில் பேசத் தொடங்கிய கார்லின் உதடுகள் அசையாமல், ஒலி மட்டும் வருவதைப் பார்த்துப் பேய் பிசாசென பயந்து போன பெற்றோரில் தொடங்கி, கார்லின் பள்ளி வாழ்வு, பின் டீனேஜ், நடுத்தர வயது அனுபவங்கள் என்று விவரமாகப் போகிறது கதை. கார்லின் நிலை பற்றிய மருத்துவக் குறிப்புகள் கொஞ்சம் இழுவையென்றாலும், புதிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. கார்ல் தன் இயலாமையே தன்னுடைய சிறப்பான திறமை என்று உணரத் தொடங்குவதாக முடிகிறது கதை.

நம்மில் எத்தனை பேர் வாயிருந்தும் பேசாமல் வாழ்கிறோம்? காதால் பேசுவது ஒரு படிமம். மனதைப் பேசத் துணிவின்றி மனதுள் பேசித் திரிகிறோம். பலவீனங்களை பலமாக மாற்றுவதன் அவசியத்தை எத்தனை பேர் உணர்ந்து வாழ்கிறோம்?

மினி மனைவி
அளவுச்சுருக்க விற்பன்னன் ஒருவன் தவறுதலாகத் தன் மனைவியை கட்டை விரல் அளவுக்குச் சுருக்கி விடுகிறான். அவளைப் பழைய உருவத்துக்குத் திருப்ப முயலுகையில் அவன் மனதில் வக்கிரம் தலைதூக்குகிறது. மனைவியை அதே நிலையில் விடுகிறான். ஒரு பொம்மை வீடு கட்டி அங்கே அவளை குடிவைக்கிறான். சிறையிருக்கப் பிடிக்காத மனைவி, பழி வாங்கத் தீர்மானிக்கிறாள். 'என்னை நீ பழி வாங்குவதா?' என்று சிரிக்கிறான் கணவன்.

இருவருக்கிடையிலான கார்கில் ஆரம்பம். கணவனும் மனைவியும் முறையெடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் சித்திரவதை செய்கிறார்கள். சோர்ந்து போகிறார்கள். எதிர்பாரா விதத்தில் கணவனைப் பழிவாங்குகிறாள் மனைவி. பதிலுக்கு வீடெங்கும் அரையடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்புகிறான் கணவன். போர் தொடர்கிறது.

அளவுச் சுருக்கம் ஒரு படிமம். உருவகம். சுடுசொல்லால் தினமும் நாம் எத்தனை பேரைச் சுருக்குகிறோம்? தினம் எத்தனை சுருங்குகிறோம்? எத்தனை வதைக்கிறோம்? வதைபடுகிறோம்?


கடுகி யதரலைக்கும் கல்சூழ் பதுக்கை
விடுவி லெயினர்தம் வீளையோர்த் தோடும்
நெடுவிடை அத்தஞ் செலவுரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண்
.

சமீபத்தில் படித்த புத்தகம் #2. பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான கைந்நிலை. ஏனென்று கேட்காதீர்கள், படித்தேன். சங்குப்புலவர் எழுதிய உரை, இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. நீங்களும் படியுங்கள், ஏனென்று கேட்க மாட்டேன்.

மான்விழி மீன்விழி என்றெல்லாம் படித்துக் கேட்டிருக்கிறேன். முதல் முதலாக 'மாவடு கண்ணல்லவோ?' என்றச் சினிமாப் பாடல் வரியைக் கேட்டதும் திகைத்தது நினைவிருக்கிறது.

பெண் இலக்கணம் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது, சொல்லப்பட்டிருக்கிறது. முக்கியமானவை மூக்கும் கண்களும். ("மூக்கும் முழியுமா அழகா இருக்கா பொண்ணு" - இதில் முழியைத் தொடர்ந்து வரும் 'அழகு' என்பதற்கான பொருளறிய விரும்புவோர் 'சாமுத்ரிகா லட்சணம்' படிக்கவும். பெண்ணிலக்கணத்தில் இத்தனை நுட்பம் இருக்கிறதா எனத் திடுக்கிட வைக்கும்). ஒரு சினிமாப் பாட்டில்* கூட 'மூக்கும் விழியும் பார்க்கப் பார்க்க மோகத்தைத் தருமோ, இல்லை முன்னழகைப் பார்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ?' என்று வருகிறது. [நானறிந்த மட்டும், அன்றும் சரி, இன்றும் சரி - ஆண்கள் பெண்களை மோகிப்பதன் காரணம், பெண்களுக்குக் கண்கள் இரண்டு இருப்பதால் அல்ல, kapish?]

பின்னாளில் 'மாவடு கண்' என்று நிறைய புலவர்கள் பாடியிருக்கிறார்கள் என்பது தெரிந்து வியந்தேன்.

வஞ்சி நகரில் வாழும் தலைவியின் முகத்தை அழகு செய்த கண்கள் எப்படிப்பட்டவை? 'புறத்தன, ஊரன, நீரன, மாவின் திறத்தன' என்கிறது ஒரு தண்டியலங்காரப் பாடல்.

காட்டில் வாழும் மான்களின் கண்களைப் போன்றவை (புறத்தன). விரையும் அம்புகளைப் போன்றவை (ஊரன). நீரில் உள்ள குவளை மலர்களைப் போன்றவை (நீரன). and finally.. மாவடுக்களைப் போன்றவை (மாவின் திறத்தன).

திருவாசகத்திலும் வருகிறது. வழக்கம் போல் ஆணாத்திகப் புலம்பல் என்றாலும் தமிழை ரசிக்க முடிகிறது. 'பெண் எனும் பிசாசிடமிருந்து என்னைக் காத்தருளிய பெருமானே!' எனும் மாணிக்கவாசகர், தான் மாவடு கண்களில் சொக்கியதாகவும் சொல்கிறார். 'மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன்' என்கிறார். மாழை = மாவடு. 'மாவடெனப் பருத்த மையிட்ட அழகானக் கண்களையுடையவர் மேல் கொண்ட ஆசை, மத்தின் சுழற்சி வேகத்தில் பானையெங்கும் அலைபாயும் தயிர் போல் என்னை நிலைகொள்ளாதுத் தளர வைத்தது' என்கிறார். (துய்க்குமட்டும் துய்த்துப்பின் பிய்த்துக் கொண்டோடும் புலவரே, மிஸ்டர் மாணிக், சற்று நில்லும். 'ஆணெனும் அரக்கனிடமிருந்து என்னை விடுவித்தாயே!' என்று பெண்கள் எந்தப் பெருமானிடம் வேண்டிப் பாடுவார்கள்.. ம்?)

சங்கப் பாடலின் மாவடு கண் சுவையானது.

இங்கே தலைவி கிடந்து தவிக்கிறாள். "என் தலைவரே, யாது மொழிந்தீர்?!" என்கிறாள். தலைவனின் முரட்டு உதடுகளைத் தன் மலரன்ன விரல்களால் பொத்தித் துடிக்கிறாள்.

ஏன் துடிக்கிறாள்? தலைவன் அப்படி என்ன சொன்னான்? நம் எண்ணத்தைப் புரிந்தவன் போல் தலைவனும் "அப்படி என்ன சொன்னேன் கண்ணே?" எனறு கேட்க எண்ணுகிறான். ஆனால் உதட்டில் பட்டத் தலைவியின் விரல்கள் சுவையாகவும் சுகமாகவும் இருப்பதால் அமைதி காக்கிறான். தலைவன் இருக்கிறானே, ர..சி..கன்.

தலைவி தொடர்கிறாள்.

"எமது காதலரே! பாலை வழிப் போவதாகச் சொல்கிறீரே! இது அடுக்குமா? பாலையை நானறியேனா? பாலை வழியெங்கும் ஆங்காங்கே புதைந்திருக்கும் பெரும்பாறைகளின் பின்னே பதுங்கியிருக்கும் கொடுமையான வேடர்களைப் பற்றி நானறியேனா? வழியில் வருவோரை அடித்து அவர் பொருள் பறிக்கும் கொடுமையானவர்களாயிற்றே? அப்பாவி வழிப்போக்கர்கள் நன்கு உள்ளுக்குள் வரும்வரை பாலையின் பற்பாறைகளில் பதுங்கியிருந்து, தப்பும் வழியின்றி அப்பாவிகள் சிக்கியதும் மிகக் கடூரமான சீழ்க்கையொலியினை எழுப்பி சுற்றியிருக்கும் வேடர்களையெல்லாம் அழைப்பதை நானறியேனா? எத்தகைய வீளையொலி? வலிய காட்டெருமைகள் கூட அந்தச் சீழ்க்கையொலியினைக் கேட்டு அஞ்சிக் கலங்கி ஓடுமே! அத்தகைய இன்னல் நிறைந்த பாலை வழியே போவதாகச் சொல்கிறீரே?!" என்று விரல்களைத் தலைவன் உதட்டிலிருந்து விலக்கிக் குவித்து அவன் நெஞ்சில் குத்துகிறாள். செல்லமாகத்தான்.

இப்படித் தலைவி பிரிவாற்றாமையில் துடிக்கும் பொழுது, அவள் மாவடுக் கண்கள் கண்ணீர் மல்கின. there you go!

மாவடு கண் இங்கே மிகச்சிறந்த உவமையாகிறது என்பது என் கருத்து. அழுத கண்கள் இடுங்கிச் சுருங்கியிருக்கும். அதனால் இங்கே மாவடு கண் என்றார் புலவர். பருத்த சிரித்த தெளிந்த கண்களுக்கு மாவடு பொருந்தினாலும், அழுத கண்களுக்கு மிகச் சிறப்பாகப் பொருந்துவதாக நினைக்கிறேன். இந்தப் பாடலைப் படிப்பவர்களுக்கு மாவடு கண் உவமை மிகுந்த நிறைவைக் கொடுக்குமென நம்புகிறேன். நெடுவிடை அத்தஞ் செலவுரைப்பக் கேட்டே வடுவிடை மெல்கின கண். ஆகா! bravo!

அலோ பிரதர், சிஸ்டர்.. அப்பால இந்த 'பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழி'னா இன்னானு தெர்ஞ்சுக்க கைந்நிலையின் 'ஓங்கல் விழுப்பலவி' பாடலைப் படியுங்க தெர்தா?

நிற்க, சங்கப் பாடல்கள் படித்தால் கெட்ட கனவு வராது. கனவே வராது. நாலு பக்கம் படித்தால் அப்படி அடித்துப் போடுகிறது தூக்கம். எளிமையோ கற்பனையோ நயமோ இல்லாத அருஞ்சொற்பொருளுரை கொண்ட சங்கப்பாடல்கள் ஆர்கேனிக் வேலியம் போல. முதல் பாடலில் கொட்டாவி. இரண்டாவதில் கண் செருகல். மூன்றாவதில் மயக்கம். நான்காவதில் REM.

போகிற போக்கில்: தமிழ் சாதி, தமிழ்க் குருதி (நிதானமாகப் படிக்கவும்), தமிழ் மண், தமிழ் மூச்சு என்றெல்லாம் கொடிபிடிக்கும் கூட்டம், இது போன்ற சங்க இலக்கியங்களை சுலபமான தமிழில் எளிமைப்படுத்தி எழுதலாமே? வரும் சந்ததியும் சிந்திக்குமே? ம்ம்.. அதுவும் சரி. 'எளிய அறிமுகம்' செய்கிறேன் பேர்வழி என்று இலக்கியத்தைத் தொலைத்தாலும் ஆபத்து. பிறகு நிச்சயம் கெட்ட கனவு வரும்.

* அது என்ன சினிமாப் பாட்டு? (எங்களுக்கு மட்டும் சினிமாப் பாட்டுப் புதிர் போட வராதான்னேன்?)

2013/05/28

திருவே உமது கானம்



செவி நாடும் தேன் சுவை அன்றோ?



















































2013/04/20

என்னவோ நடக்குது


    நாயகன் அமெரிக்க ராணுவ அதிகாரி. அவனுக்கு ஒரு விஞ்ஞானி நண்பன். வி.ந ஒரு பெரிய நுட்பத்தைக் கண்டுபிடிக்கிறான். உலக நகரங்கள் மக்கள் அனைத்தையும் அனைவரையும் இணைக்கும் நுட்பம். திடீரென்று விஞ்ஞானியைக் காணவில்லை. சந்தேகம் கொண்ட போலீசார் விஞ்ஞானியின் வீட்டில் தேடிய போது, சலவைக்கணக்கில் வராத ரத்தக்கறையும் போராட்டத்துக்கான தடயங்களும் நாயகனின் உடைமைகளும் கிடைக்கின்றன. நண்பனைக் கொலை செய்ததாக நாயகன் மீது வழக்கு தொடரப்படுகிறது. சாட்சி விசாரணை எல்லாம் முடிந்து, குற்றவாளி என்றத் தீர்ப்பும் வழங்கப்படுகிறது. தான் வடிகட்டின நிரபராதி என்கிறான் நாயகன். அவனுடைய குரலை அழுத்தி ஒதுக்கி மரண தண்டனையும் வழங்கப்படுகிறது.

நாயகனின் நெருங்கிய நண்பன் ஒருவன் இதை நம்பவில்லை. நுட்பத்தைப் பயன்படுத்த நீதிபதியிடம் அனுமதி பெற்று அதை வைத்துக் கொண்டே நாயகன் நிரபராதி என்று நிரூபிக்க முனைகிறான். நுட்பத்தின் துணையுடன் உலகம் முழுதும் இராப்பகலாகத் தேடுகிறான். தண்டனை நிறைவேற்றப்பட சில நிமிடங்களுக்கு முன் சைனாவிலிருந்து ஒரு செய்தி கிடைக்கிறது. கொலையுண்டதாகக் கருதப்பட்ட விஞ்ஞானி ஷேங்ஹாயில் குஜாலாக இருப்பதாக. படமும் விடியோவும் எடுத்து அங்கிருந்தே தகவல் பரவுகிறது.

நீதிபதி வாயைப் பிளக்கிறார். அசல் குற்றவாளியை விட்டு நாயகனைச் சிறைப்படுத்தி தண்டனை வழங்கியதற்காக மன்னிப்பு கேட்கிறார். நாயகனுக்கு ஆகஸ்டு பதினைந்து. சுபம்.
   
    மேற்சொன்னது கதைச்சு.

விருது பெற்ற கதை. இன்றைய இந்டர்னெட் யுகத்தின் வசதிகளில் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. பிறகு இந்தக் கதைக்கு ஏன் பொன்னாடை பணமுடிப்பெல்லாம்?

புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டு முப்பதாண்டுகள் ஆகவில்லை. டெலிபோன் கண்டுபிடிக்கப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆகவில்லை. 'ஓடும் படம்' கண்டுபிடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகவில்லை. விடியோ கண்டுபிடிக்க இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகும். இணையம் கண்டுபிடிக்கப்பட இன்னும் எழுபது ஆண்டுகள் ஆகும். இணையம் பரவ இன்னும் நூறு ஆண்டுகள் ஆகும். உலக மக்கள் அனைவரையும் கனகாலத்தில் இணைக்கும் நுட்பம் பற்றிய விவரம் செறிந்த கற்பனைக்கான விருது பெற்றச் சிறுகதை வெளிவந்தது 1898ல்.

முழுச் சிறுகதையை இணையத்திலோ நூலகத்திலோ படிக்கலாம்.
கேள்வி 1: சிறுகதை எழுதியவர் யார்?



    சுசேனாவுக்கு வயது நாற்பத்து மூன்று. அவருடைய மகள் மரியாவுக்கு வயது இருபத்து மூன்று. மரியாவின் மகள் மிகேலாவுக்கு வயது மூன்று.

"பேத்தியைப் பார்த்துக்கொள், டாக்டரிடம் போய் வருகிறேன்" என்று சொல்லிப்போன மரியா வீடு திரும்பவில்லை. திடுக்கிட்டு நடுங்கிப் போன சுசேனா எல்லா இடங்களிலும் தேடுகிறார், போலீசிடம் சொல்கிறார், தெரிந்தவர்களிடம் உதவி கேட்கிறார் - பயனில்லை. மரியாவைக் காணோம்.

தானே தேடத் தீர்மானித்தார். மரியாவை அழைத்துச் சென்ற டேக்சி டிரைவரைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்கிறார். மரியாவைக் காசுக்காக ஒரு சிவப்பு விளக்குத் தரகன் கடையில் இறக்கி விட்டதாகச் சொல்கிறான் டிரைவர். 'உன்னால் இப்ப அவளை எதுவும் கண்டுபிடிக்க முடியாது கிழவி' என்கிறான்.

சுசேனா விடவில்லை. பேத்தியைக் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு பெண்ணைத் தேடும் படலத்தில் இறங்கினார். இளம்பெண்களை விலைக்கு வாங்கி விபரீதப் பாலியல் குற்றங்களை வற்புறுத்தி செய்யச் சொல்லும் கொடுமையான உலகத்தை அறிந்து வெலவெலத்துப் போனார். 'ஐயோ! என் மரியா இங்கே, இவர்கள் கையில், எங்கோ இருக்கிறாளே! என்ன செய்வேன்!' என்றுத் துடித்துப் போனார்.

தாயின் மனம் துருப்பிடிக்காத இரும்பிலானது என்ற ரகசியம் பலருக்குத் தெரியாது. அடிபட்டத் தாயின் மனமோ இரும்புச் சுரங்கம். வெளியிலிருந்து தேடினால் பயனில்லை என்பது புரிந்து, குற்றவாளிகளுடன் கலந்து தேடத் தீர்மானித்தார். இளம்பெண்களை வாங்கி விற்பது போலத் துணிச்சலோடு நடிக்கத் தொடங்கினார். அந்தப் பாவனையில் நாட்டின் அத்தனை சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கும் ஒவ்வொரு இடமாகச் சென்றார். கிடைத்த இளம்பெண்கள் சிலரை வாங்கி, எவருக்கும் தெரியாமல் நல்வழியில் போக உதவி செய்தார்.

தன் தூய நிழல் தன்னைக் காட்டிக் கொடுத்து விடாதபடி மிகக் கவனமாக இருந்த சுசேனா, இருபது வருடங்களாக தன் பெண் மரியாவைத் தேடித் தேடி இளைத்தாலும் அந்தத் தேடலின் விளைவாக நூற்றுக்கணக்கான இளம்பெண்களை மீட்டு நல்வழியில் திருப்பினார். இந்தத் தேடலில் தன் சொத்துக்கள் அத்தனையும் விற்று ஓட்டாண்டியானதைப் பற்றிச் சிறிதும் வருந்தவில்லை. எத்தனையோ மரியாக்கள் மீட்கப்பட்டனர் என்ற நிறைவை எந்த சொத்தும் ஈடுசெய்யமுடியாது என்கிறார்.

சுசேனாவுக்கு இப்போது அறுபது வயது. இன்னும் மகள் மரியாவைத் தேடிக்கொண்டிருக்கிறார். படித்த வாலிபரான பேத்தி மிகேலாவின் உதவியோடு. 'என் மரியா.. என் செல்வம் இன்னும் உயிரோடு எங்கோ இருக்கிறாள்' என்று, பால் ஈந்தத் தன் மார்புகளில் அடித்துக்கொண்டு இன்னும் தேடுகிறார்.

    'Women of Courage' எனும் அமெரிக்க அரசின் விருதைப் பெற்ற சுசேனா, 2012ல் நொபெல் அமைதிப் பரிசுக்காக நியமிக்கப்பட்டார். கிடைக்கவில்லை. (ஒபாமாவுக்கு விருது கொடுத்த பிறகு, இனி அசல் சாதனையாளர்களுக்கு விருது வழங்குவதில்லை என்றத் தீர்மானத்துக்கு நொபெல் நொண்டிகள் வந்திருக்கலாம்).

ஆனால் அவருடைய நாட்டின் மிகப்பெரிய விருதும் பணமுடிப்பும் சுசேனாவுக்குக் கிடைத்தது. பாலியல் தரகர்களிடம் சிக்கித் தவிக்கும் சிறுமிகளை மீட்கும் பணியில் பணத்தைச் செலவிட அப்படியே கொடுத்துவிட்டார்.
கேள்வி 2: சுசேனா எந்த நாட்டவர்?



    டைலரின் நெருங்கிய நண்பன் மூர் திருமணத்தை நடத்தி வைக்க, டைலரும் பெதனியும் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்ததும் டெக்சஸ் வந்தார்கள். புதுமனை குடிபுகுந்தார்கள். புகுந்ததும் பார்த்தால் வீட்டில் இருபது முப்பது ஆண்கள். ஐந்தாறு பெண்கள்.

கேள்வி கேட்ட பெதனியிடம், "நாமெல்லோரும் சேர்ந்திருக்கப் போகிறோம். இது கடவுளின் ஆணை" என்றான் டைலர். "ஆமாம், என் நண்பனின் மனைவியே" என்று அவளை அணைத்தான் மூர்.

சில மாதங்களுக்குள் பெதனி இறந்தாள். அவள் படுக்கையருகே இருந்தத் தூக்கமாத்திரைப் புட்டிகளை வைத்துத் தற்கொலை என்று தீர்மானித்தார்கள். அவள் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு, பெதனியைக் கொலை செய்ததாகச் சொல்லி மூர் போலிசில் சரணடைந்தான்.

டைலரும் மூரும் கிறுஸ்தவ மதத்தின் ஒரு தனிப்பிரிவைச் சேர்ந்தவர்கள். International House of Prayers என்றக் குழுமம். இந்த IHOPல் 'பரமபிதா பரமபிதா' என்று ஜபித்தபின், இருந்த ஆறேழு பெண்களை இருபது முப்பது ஆண்கள் 'படுக்கவா படுக்கவா' என்றுக் கூட்டமாக ஜபித்திருக்கிறார்கள். இது ஒரு மதச் சார்புள்ள குழு என்பதால் யேசுவின் அருள் கிடைக்கும் என்ற சாக்கில், சாக்கடையில் விரும்பி விழுந்திருக்கிறார்கள். பெதனியையும் மற்ற பெண்களையும் போதை மருந்து கொடுத்து, தினசரி மூன்று வேளை ஜபம் முடிந்ததும் அத்தனை ஆண்களும் கூட்டுப் பிரசாதமாக ஏற்பார்களாம்.

டைலருக்கும் மூருக்கும் என்ன சண்டையோ, மூர் எல்லாவற்றையும் சொல்லிச் சரணடைந்தான். மற்றவர்களும் பிடிபட்டார்கள்.

'கடவுளை நம்பினார் கைவிடப்படார்' என்ற நம்பிக்கையோடு சிறையிலிருக்கிறான் மூர். 'நான் கடவுளின் ஆணைப்படி நடந்தேன். இது குற்றமென்றால் யேசுவின் கருணை மழையில் அது கழுவப்படும்' என்கிறான் டைலர் கூசாமல். 'ஆமென்' என்கிறார்கள் IHOPகாரர்கள்.

    சென்ற ஆண்டின் ஆத்திக அசிங்கங்களில் ஒன்று. அமெரிக்காவில் இப்படியெல்லாம் நடக்கும். தேர்தல் நேரத்தில் வசதியாக 'அமுக்கி வாசிக்கப்பட்ட' வழக்கு.

சிறையில் வாடும் (?) ஆண்களுக்காக ஒரு மாதா கோவில் அமைத்துக் கொடுத்திருக்கிறதாம் IHOP அமைப்பு. இருவரும் அன்னை மேரியிடம் தினம் பிரார்த்தனை செய்கிறார்களாம். புனித மகனின் அருளுக்காக. இவர்களுக்கு ஆதரவாக, IHOP சார்ந்த 'பரிசுத்த ஆவித் தோத்திர மையம்' ஒன்று கிளம்பியிருக்கிறது.

சிரிப்பதா, அழுவதா, எழுவதா?
கேள்வி 3: பரிசுத்த ஆவியினால் பலனுண்டா?



    காதல் என்றாலே கிளுகிளுதான். இந்த வயதில் எனக்கே இப்படியென்றால் இளவயது அலெக்ஸ், லீசாவுக்கு எப்படி இருக்கும்?!

அலெக்சும் லீசாவும் ஹைஸ்கூலில் பழகத்தொடங்கி, பிரிந்து மறந்து, ஐந்து வருடங்களுக்குப் பின் மீண்டும் பழகத்தொடங்கிக் காதல் வயப்பட்டார்கள். கல்லூரி, கடன், வேலை என்று பத்து வருடங்களுக்கு மேல் இருவரும் வெவ்வேறு இடங்களில் அல்லாடினாலும், காதல் திரட்டுப்பால் போல் கெடாமல் இனிப்பாகவே இருந்தது. படிப்புக் கடன் அடைத்ததும் இருவரும் வழக்கமாகச் சந்திக்கும் ரெஸ்டாரென்டில் சாப்பிடுகையில், லீசாவுக்குக் கொஞ்சம் எரிச்சல் வந்தது. விளையாட்டு எரிச்சலோடு அலெக்சைக் குடைந்தாள். "ஆமா, என்னைக் காதலிச்சுகிட்டே இருந்தா எப்படி? ஒரு கல்யாணம் செஞ்சுக்கிட்டா என்னவாம்? அடுத்த மாசம் எனக்கு முப்பது வயசாப் போகுது"

"ஒரு கல்யாணம் தானே?" என்ற அலெக்ஸ், திடீரென்று மிக நெருங்கி வந்து அவளைக் கட்ட்ட்டிப் பிடித்தான், பொதுப் பார்வையில். சற்றே வியந்து வெட்கப்பட்டுக் குனிந்த லீசாவின் முகத்தை நிமிர்த்திக் கண்களைப் பார்த்தான். "உன்னோட முப்பதாவது பிறந்த நாளன்னிக்கு கல்யாணம் செஞ்சுக்குவோம். ஆனா ஒரு கல்யாணமில்லே.. முப்பது கல்யாணம்.. என்ன சொல்றே?" என்றான்.

திக்குமுக்காடிப் போனாள் லீசா. "முப்பது கல்யாணமா?"

"ஆமாம்.. உன் மேலே எனக்கு அவ்வ்வ்வளவு காதல்! உன் முப்பதாவது வயது முழுக்க உலகம் சுத்துவோம். முப்பது கலாசாரங்களில் நம்ம கல்யாணத்தைச் செஞ்சுக்குவோம்.. சரியா?"

"இந்த செலவுக்கெல்லாம் காசு?"

"சேத்து வச்சிருக்கேண்டி என் செல்லமே" என்ற அலெக்ஸ், பட்ஜெட் போட்டுக் காட்டினான்.

"இதென்ன? உதட்டுலயா பட்ஜெட் போடுவாங்க?" என்று சிணுங்கினாள் லீசா.

    உலகம் சுற்றிய வாலிபர்கள் இருவரும் முப்பது கல்யாணங்கள் செய்துகொண்டு, லன்டன் அருகே சுபமாகப் பெருவாழ்வு வாழ்ந்து வருகிறார்கள்.

கல்யாணத்துக்குக் கல்யாணம். தேனிலவுக்குத் தேனிலவு.

(அலோ.. உங்களைத்தான்..போட்டோவையே பாத்துட்டிருக்க வேண்டாம்..)

கேள்வி 4: இந்தப் படத்தில் இருக்கும் அலெக்சும் லீசாவும் எந்த நாட்டுக் கலாசாரத்தைப் பற்றியிருக்கிறார்கள்?




    ன்னொரு குடும்பம் இந்தியா போகிறது. சில வருடங்களாகவே திட்டம் போட்டு வந்தாலும் 'இப்போ போறேன் அப்போ போறேன்' என்று இழுத்துக் கடைசியில் இந்த வருடம் அமெரிக்காவுக்கு டாட்டா சொல்லத் தீர்மானித்திருக்கிறார்கள். தற்காலிக டாட்டாவா என்பது போகப் போகத் தெரியும்.

இந்தியா திரும்பி நன்றாக வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். "இந்தியாவா.. சனியன்.. அங்கே மனுசன் இருப்பானா?" என்று, போன வேகத்திலேயே திரும்பியவர்களுக்கும் இருக்கிறார்கள் (உதாரணத்துக்கு எங்கேயும் தேட வேண்டியதில்லை. 2003ல் நானும் அப்படி முயன்றவன்). இவர்கள் எப்படியோ?

இந்தியாவில் இடம், பள்ளிக்கூடம், கல்லூரி, வங்கிக்கணக்கு எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டார்கள். செட்டிலானதும் வேலை தேடப் போகிறார்களாம். எனக்குத் தெரிந்தவரையில் இங்கிருந்து போகிறவர்கள் வேலை தேடுவது பெரும் போராட்டம் என்கிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம் நல்லபடியாக அமையட்டும்.

இங்கே வீட்டுப் பொருட்களை விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். "பழைய நகை பணம் ஏதாவது இருந்தால் பாதி விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்" என்றேன். சிரித்தார்கள். சிரிப்பானேன், இங்கே என்ன ஜோக்கா சொல்லிட்டுத் திரியறாங்க?

    "இந்தியாவில் சுலபமாக வேலை கிடைக்குமா தெரியவில்லை. கிடைத்தாலும் இங்கே இருந்துப் பழகிய உங்களுக்குப் பொருந்தி வருமா தெரியாது, அதனால் சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்கி நடத்துங்கள்" என்றேன்.

நாளைக்கு அவர்கள் அப்படித் தொடங்கினால் எனக்கும் ஒரு வேலை போட்டுக் கொடுங்கள் என்று கேட்கலாம் பாருங்கள் :-)
கேள்வி 5: யார் இவர்கள்?


பிபிஸ்ரீக்கு சிறிய அஞ்சலி.


1. மார்க் ட்வெய்ன். (telectroscope என்றக் கற்பனைக் கருவியை உருவாக்கி அதன் நுட்பத்தையும் விளக்கியிருக்கிறார் ட்வெய்ன். இதனை அடிப்படையாகக் கொண்டு அசல் telectroscope ஒன்றை லன்டனில் நிறுவியிருக்கிறார்கள். அங்கிருந்து ந்யூயோர்க் நகரை பைனாகுலர் போலப் பார்க்க முடிகிறதாம்!)
2. அர்ஜன்டீனா. (சமீபத்தில் சுசேனாவுக்கு 'உலக மனித உரிமை காவலர்' விருதை வழங்கியிருக்கிறார் அர்ஜன்டீனா நாட்டு அதிபர். மரியாவை இன்னமும் தேடினாலும், அவளைக் கடத்திய குற்றத்துக்காக, டிரைவர் உட்பட, பதிமூன்று பேரைக் கோர்ட்டில் நிறுத்தியிருக்கும் சுசேனாவுக்கு ஜே!)
3. உண்டு. உதாரணத்துக்கு.. இட்லி வேக பரிசுத்த ஆவி தேவை.
4. கொலம்பியா. (ம்ம்ம்.. கல்யாண ஆசை வந்தக் காரணத்தைச் சொல்லவா?)
5. நான் சொல்லமாட்டேம்பா. (க்ளூ: எனக்குத் தெரிஞ்சு, புருசன் பொஞ்சாதி ரெண்டு பேரும் டிஎம்எஸ் பைத்தியம்!)


2013/04/08

(மெல்லிசை) நினைவுகள்




    ர் திரும்பியதும் சில பாடல்களைத் தேடிக் கேட்க வேண்டியிருந்தது. அவசரமாக. காரணம் பிறகு சொல்கிறேன். இது முதலாவது பாடல்.
உய்மா உய்மா எ க்யா ஹோகயா..


    றக்குறைய இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு ஜேசுதாஸ் கச்சேரிக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. குவைத் மைத்துனர் அருள். ஜேசுதாசின் கர்நாடக இசை எனக்குப் பிடிக்கும். இன்றைக்கும் குரல் பிசிறில்லாமல் அதே இளமையோடு இருப்பது, பாடும் பொழுது தெரிந்தது. சிலிர்க்க வைத்தது. கொஞ்ச நேரம் தான். அப்புறம் வித்வான்களுக்கேயுள்ள குளறுபடி. கர்நாடக இசை என்று அறிவித்துவிட்டு கர்நாடக இசையுமில்லாமல், இந்துஸ்தானியுமில்லாமல், மலையாள பக்திப்பாடல்கள் என்றுமில்லாமல், ஹிந்தி சினிமாப்பாடல் என்றில்லாமல், ஐயப்பன் பாடல்கள் என்றில்லாமல் - உப்புச்சப்பில்லாத அவியல். குரல்வளத்தை வைத்துக்கொண்டு "தாண்டு ராமா" விளையாடுகிறாரே என்று வருந்தினேன். மனிதர் ஒரு தமிழ்ப்பாட்டு கூட பாடவில்லை தெரியுமோ?

நடுவில் சண்டை வேறே. பாதிப் பாட்டின் போது (சரஸ சாமதான, ஜேசுதாஸ் நன்றாகவே பாடினார்), வரிசையில் இருந்த ஒருவர் செல்போனில் பேசத் தொடங்கினார். என் தம்பி ஏதோ சொல்லப்போய் அந்த நபர், "பஷ்டபால், டு யூ அன்டர்ஸ்டேண்டு வாட்டு ஹி இஸ் சிங்கிங்கு?" என்றார். "பன்னாடை, மூதேவி, பொறம்போக்கு நாயே, இங்லிஷ் வேறயா? செவிட்டுப் பொணமே. உனக்குப் புரியலேனா அடுத்தவனை கேக்க விடுறா.. கசுமாலம் தரித்திரம் பன்னி பன்னி" என்று சொல்லப்போன என்னைத் தடுத்து, என் தம்பி பண்புடன் ஏதோ சொல்லவே நபர் செல் மூடி அடங்கினார்.. கச்சேரி முடிந்து வெளியே வரும்பொழுது சண்டையாவது போட்டிருக்கலாம் என்று தோன்றியது.

    ப்லூமிங்டன் பயணத்தில் படித்தப் புத்தகம். இரண்டு பதிவெழுதும் அளவுக்கு விஷயம் இருக்கிறது. ஆனால் எழுதப் போவதில்லை, போரடிக்கும். பாருங்கள், இது போன்ற புத்தகங்களைப் படிப்பது சிரமம். ஓகே, எனக்கு சிரமமென்றேன்.

இரண்டாம் பகுதியில் புத்தர் தோத்திரம் மதம் என்று ஆழமற்ற விஷயங்கள். மணிமேகலை தவிர. முதல் பகுதியில் நிறைய ஆழமான விஷயங்கள். 'அருமையாக இருக்கிறதே படிக்க' என்று பத்து பக்கம் புரட்டினால் பொசுக்கென்று இனப்பகை. பிராமண இனத்தைத் தமிழின் எதிரிகள் போல் பாவித்து எழுதுவது ஏனென்று புரியவில்லை. 'என்னவோ இவர்கள்தான் தமிழ் வளர்த்தார்கள் போல.. யாரிந்த மயிலை சீனி வேங்கடசாமி?' என்று தேடிப்பார்த்தால்.. அய்யோடா, பெர்ர்ரிய சாதனையாளர்! அடக்கிக் கொண்டு படித்து முடித்தேன்.

ப்ரம்மி எழுத்துக்களிலிருந்து ஐம்பெருங்காப்பியங்கள் வரையில் தமிழ் வளர்த்த பௌத்த மதம் பற்றிய நிறையக் குறிப்புகள். தமிழில் பாலி (ஆதி பௌத்த மொழி - தமிழ் நாட்டில் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது) மொழிக் கலப்பு பற்றிய பகுதி சுவாரசியம். புத்தகத்தின் தயவால் குண்டலகேசி கதை கிடைத்தது. பெரிய பலன்.

அவ்வப்போது வசதிக்கேற்றார்போல் சமணமும் பௌத்தமும் ஒன்றே என்ற வாதம் இடிக்கிறது. தமிழ் நாட்டின் பல்வேறு ஊர்களில் இருக்கும் சமண பௌத்த இடங்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பிள்ளையார் கோவில் பற்றிய விவரம் சுவாரசியம். பிள்ளையார் இந்துக் கடவுளே அல்ல என்ற பாணியில் விவரம் சொல்லியிருக்கிறார். சமண 'வினாயகர்' கோவில்களை இடித்து இந்துக்கள் பிள்ளையார் கோவில் கட்டியதாகச் சொல்கிறார். கோவில் இடிப்பு, பௌத்த சமண நினைவாலயங்கள், தடங்கள், இடிபாடுகள் என்று பக்கம் பக்கமாகப் போகிறது புத்தகம். இந்துமதம் இதை ஏற்றுக் கொண்டது அதைத் திருடியது என்றும் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்.

இதற்கும் தமிழ் வளர்ப்புக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்குத் தோன்றினால் - ஹிஹி.. நாம் ஒரே கட்சி.

பௌத்த மதம் தமிழ் வளர்த்தது என்று சொல்லட்டும் தவறேயில்லை, உண்மையும் கூட. ஆனால் இன்னொரு மொழியோ இனமோ தமிழைக் கெடுத்தது போல் எழுதுவதால் என்ன பயன்? பழைய புத்தகம். என்றைக்கோ எழுதியது. இப்போது விமரிசித்துப் பயனில்லை.

தமிழ் வளர்க்க விரும்பிய அத்தனை பேரும் வளர்த்தார்கள் என்றே நினைக்கிறேன். ஜாம்பஜார் ஜக்கு உட்பட. நிற்க, ஐம்பெருங்காப்பியங்கள் என்பதே பொருந்தாத, போலி அங்கீகாரம் என்பது என் கருத்து. சங்க இலக்கியங்கள் (குறுந்தொகை, புறநானூறு), இறையிலக்கியங்கள் (திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், தேவாரம்) எல்லாம் தமிழ் வளர்க்காமல் தயிரா கடைந்தன?

போகட்டும். ஐம்பெருங்காப்பியங்கள் மூன்று படித்திருக்கிறேன். மூன்றில் ஒன்று மட்டுமே தமிழ் வளர்க்க எழுதப்பட்டது. இது என் கருத்து. உதைக்க விரும்புவோர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

மொழி வரலாற்றில் விருப்பமுள்ளோர் நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம். தையல் வெளியீடு. ரூ.100.

    ன்னுடன் வாஷிங்டனுக்குப் பனிரெண்டு மணி நேர விமானப்பயணம் செய்தவரைப் பற்றிச் சொல்லவேண்டும். ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் ஆறுமாத ஆராய்ச்சிக்காக வந்திருக்கிறார். 'இந்தியச் சமூகவளர்ச்சியில் திரையிசையின் பாதிப்பு' பற்றிய ஆய்வு. "இங்கே எதற்கு வந்தீர்கள்?" என்று கேட்டேன். இந்தியாவில் இல்லாத அளவுக்கு இங்கே பாடல்களைக் குறிப்புகளுடன் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்களாம். ஆராய்ச்சிக்குப் பணமும் தருகிறார்களாம். நிறைய ஆச்சரியமும் கொஞ்சம் புலம்பலும் கலந்து சொன்னார். "நம்ம ஆளுங்களுக்கு இல்லாத அக்கறை பாருங்க சார்!".

இந்த ஆராய்ச்சி பற்றிய ஆர்வம் எப்படி வந்தது என்றுத் தொடங்கி நிறைய பேசினோம். இசையமைப்பாளர் வேதா இவருடைய உறவாம். "அடடே" என்றேன். வேதாவின் இசையில் நிறைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். "அப்பட்டமான இறக்குமதி என்றாலும் கூச்சப்படாமல் வஞ்சனையில்லாமல் பாடல்கள் தந்திருக்கிறார் உங்கள் உறவினர்.." என்றேன். மனிதர் அமைதியானார். "இந்தியிலிருந்து யார் தான் தட்டவில்லை? எம்எஸ்வி எத்தனை பாடல்களைத் தட்டியிருக்கிறார் பாருங்கள்.." என்று ஒரு லிஸ்ட் கொடுத்தேன். ஒருவேளை வேதாவைக் கிண்டல் செய்வதாக நினைத்துவிடக்கூடாதே? மனிதர் அமைதியாக இருந்தார். "இந்தியிலிருந்து எடுத்தாலும் தமிழில் அட்டகாசமாகத் தந்திருக்கிறார் - அவர் இல்லையென்றால் நிறைய இந்திப்பாடல்களின் இனிமையான மெட்டுக்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும்.." என்றேன். மனிதர் எதுவும் சொல்லவில்லை. "சமீபத்தில் தெரிந்து கொண்ட 'இதய வானின் உதய நிலவே' அவருடைய உச்சப் பாடல்களில் ஒன்று.. மை மோஸ்ட் ரீசன்ட் பேவரிட்.." என்றேன். குளிர்ந்திருப்பார் என்ற நம்பிக்கையில்.

மெள்ள, "யாரைச் சொல்றீங்க?" என்றார். புருவம் சுருக்கிப் பார்த்தேன். நமக்குத் தெரியாத வேதாவா? பிறகு என்னை நேராகப் பார்த்து, "பாச்சா பாட்டுங்க கேட்டிருக்கீங்களா?" என்றார். பாச்சாவாவது மூச்சாவாவது? என்ன சொல்கிறார் இவர்? "கேட்டதில்லையே? எந்த இந்திப்பாட்டு அது?" என்றேன். "இந்திப்பாட்டில்லிங்க.." என்று விவரம் எல்லாம் சொன்னார். நெளிந்தேன். "ஹிஹி.. நீங்க சொன்னது வேதானு காதுல விழுந்துச்சு.. அதான். மன்னிக்கணும்..." என்றேன்.

தரைதொடும் வரை அவர் பக்கமே திரும்பவில்லை. பாச்சா கேட்கணுமாமே? குலை நடுங்கியது. வீட்டுக்கு வந்ததும் கேட்ட பாடல்களில் அடுத்து வருவது முதலில் கேட்ட இந்திப்பாடலின் தமிழ்.
காவிரிக்கரையின் தோட்டத்திலே..

தமிழ் வடிவம் அட்டகாசம் என்று தோன்றுவதற்குக் காரணம் வேதா மட்டுமல்ல, சுசீலா மட்டுமல்ல, புரிவது மட்டுமல்ல, 00:56 - 01:01ம். தில்லையம்பலம் போற்றிஹி.

    ன் தங்கை மகன் ஹார்வர்டில் படிக்கப் போகிறான். செய்தி கேட்டதும் அவனிடம், "எனக்குப் பெருமையாக இருக்கிறது" என்றேன். "எல்லாம் அம்பாள் அருள்" என்றாள் என் தங்கை. ஆக இருவருமே அவன் செயலை, அவன் உழைப்பை, முதலில் பாராட்டவில்லை என்பது இடித்தது. என்னை விட என் தங்கை எவ்வளவோ மேல். அவளாவது அம்பாள் என்றாள், நான் அவன் உழைப்பில் குளிர்காயப் பார்த்தேன். உருப்படமாட்டேன், விடுங்கள். தவளைகளைத் தத்தித் துரத்தி "இதோ பார் மாமா" என்று எளிய சந்தோஷங்களைத் தேடியச் சிறுவன் கண்களில் நிற்க.. ஒரு மெய்யான சாதனையை சாதாரணப் புன்னகைக்குள் மறைத்து இயல்பாகப் போகும் இவனுக்கு.. இப்பொழுது இதைப் பற்றிப் பதிவிடும் நான் எப்படிச் சொந்தமானேன்? படிப்பிலும் வேலையிலும் காட்டுத்தனமாக உழைக்கிறான். முதியோர் வீட்டு நாய் பூனைகளை தினம் ஒரு மணியாவது பூங்காவில் நடக்க அழைத்துப் போகிறான். படித்து முடித்ததும் என்ன செய்யப்போகிறான் என்றத் திட்டத்தைக் கேட்டதும் அசந்து போனேன். எண்ணத்திலும் செயலிலும் தெளிவாக இருக்கிறான். எங்கிருந்து வந்தான் இவன்?! இந்தப் பரம்பரையின் அடுத்தத் தலைமுறைக்கான ஹீரோ தயாராகிறான் என்பது புரிந்தது. இன்னும் சாதிக்கட்டும். சிறப்போடு வாழட்டும்.

    ன்னொரு பெருமைக்குரிய செய்தி சமீபப் பயணத்தில் தெரிந்தது. என் நண்பன் மகளைச் சந்தித்தேன். என் முகவரியை நினைவாக வைத்திருந்து எனக்குச் செய்தி அனுப்பியிருந்தாள். அவளுடைய அனிமேசன் திறமையைப் பார்த்த டிஸ்னி நிறுவனம் அவளை உடனடியாக வரச்சொல்லி வேலை கொடுத்திருக்கிறதாம். மும்பையிலிருந்து ப்ரான்சுக்கு வந்திருந்தாள். இங்கே ஒரு படப்பிடிப்பில் ஆறு மாதங்கள் கலந்து கொண்டு பிறகு ஹாலிவுட் போவாளாம். வரப்போகும் ஒரு படத்துக்கான முழு வடிவமைப்புப் பொறுப்பையும் இவளிடம் கொடுத்திருப்பதாகச் சொன்னாள். "அப்படியா? நல்ல சம்பளம் கொடுப்பார்களா?" என்றேன். அல்பம், அல்பம்! தொகையைக் கேட்டதும் நடுங்கிப் போனேன் என்றால், அடுத்து சொன்னதைக் கேட்டு ஆடிப் போனேன். "ஒரு படம் அங்கிள், தட்ஸ் இட். நான் திரும்பிப் போறேன். seed money.. பணத்துக்காக இதை ஒத்துக்கிட்டேன். நான் படிச்சதன் காரணம் இது இல்லே.." என்று விவரம் சொன்னாள். ஒரு பெரிய கம்பெனியில் சில வருடங்கள் வேலை பார்த்து, சம்பாதித்தது போதும் என்று வேலையை விட்டவள். புவனேஸ்வர் அருகிலோ எங்கேயோ ஒரு corporate sponsored பயிற்சி முகாம் தொடங்கப் போகிறாளாம். பில் கேட்ஸை சந்தித்திருக்கிறாளாம். அறக்கட்டளையிலிருந்து உதவி கிடைக்கும் என்று மகிழ்ச்சியோடு சொன்னாள். எட்டு முதல் பதினொரு வயது வரையிலான பின்தங்கிய வசதியற்ற பெண் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி வசதி செய்யப் போகிறாளாம். அவளுடையக் குறிக்கோள் நூறு பெண் குழந்தைகளை ஐஐடி ஐஐஎம் படிக்க வைப்பதாம்! எங்கிருந்து வந்தாள் இவள்?! அசல் ஹீரோ!

"அங்கிள்.. சின்னப்போ வீட்டுக்கு வந்து இஷ்டத்துக்கு மசாலா சேர்த்துப் புராணக் கதை சொல்வீங்களே, ஞாபகம் இருக்கா?" என்று நெகிழ்ந்து பேசினாள். இவளைத் தூங்கப் பண்ணியிருக்கிறேன். இவளுக்கு இப்போது இருபத்தைந்து இருபத்தாறு வயதிருக்குமா? இருக்கும். இவளின் அப்பா ரங்கன், என் இரட்டைபாத் வட்டத்தில் ஒருவன். "அம்மா எப்படி இருக்காங்க?" என்றேன். "ஷிஸ் ஹேப்பி.." என்றாள். "அப்பா எப்படி இருக்கான்?" என்று கேட்கவில்லை. காரணம், இவள் பிறந்த அன்றைக்கு ரங்கன் இறந்தான்.

காதல் வயப்பட்டிருந்த காலத்தில் ரங்கன் இந்தப் பாட்டை அடிக்கடி முணுமுணுப்பான். அவனுடைய காதல் பற்றி இன்னொரு சமயம். இப்போதைக்கு.. ரங்கா, உன் பெண் சாதனையரசிடா!
சந்தா ஓ சந்தா..

2013/03/04

அதே Same


    மிழ்ப் படப் பாடல்களுக்கு ஆங்கிலத்தில் சப் டைடில் எழுதும் வேலை கிடைத்தால் மகிழ்வேன். உலகத்துக் கவலையெல்லாம் போக்கும் வேலை. யுட்யூபில் பாருங்களேன்:
      garland that moves in air told me as a woman - காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மை என்றது.

இதற்காகத் தனியாகப் பயிற்சி தருகிறார்களா தெரியவில்லை.

எனக்கு இந்த வேலை வேண்டும். பயிற்சி இல்லாமலே என்னால் எழுத முடியும். என் திறமைக்கு எடுத்துக்காட்டாக:
      1
      moon becomes woman, wandering is it cute?
      water waves transpose, swimming is that flute?

      2
      keeping in hand if patient
      waiting on foot grateful dogs in nation..
      hence without kin without bond
      without memory of coming way
      boys also born in the house..
      mother oh mother
      trusting to be a brother..

      3
      born on lies bred on lies
      oh bard great deer
      you she knows truth she knows
      this flower dynasty deer

      4
      what is it rockmother palanquin turning
      my heart is shaking a beat

      5
      this same moon came that day
      that same moon came this day
      always there only moon
      for both eyes only moon
      aaah aaah
      for both eyes only moon

தமிழ்ப்பாடல் வரிகள் உங்களுக்கு உடனே புலப்பட்டால், எனக்கு இந்த வேலை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கூடும். புரியவில்லையெனில், பயிற்சி பெறவும் தயார். எப்படியாவது இந்த வேலை எனக்குக் கிடைத்தால் பரவாயில்லை.

தமிழிலிருந்து அங்கே என்றில்லை, அங்கிருந்தும் இந்தப் பக்கத்துக்கு சும்மா அடித்து விடுவேன்.
      நள்ளிரவுக்கு அது மூடி
      எதுவோ சைத்தான் இருட்டில் லருக்கியது.
      it was close to midnight
      something evil lurking in the dark

எல்லா மொழிமாற்றமும் இப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. இலக்கியம், ரசனை, புதைபொருள், மறைபொருள் என்று சிரமப் படுத்திவிடும். சமீபத்தில் முத்துச்சரம் பதிவில் வந்த ராபர்ட் ப்ராஸ்ட் கவிதையின் தமிழாக்கம் ஒரு உதாரணம். நித்திலம் பதிவில் அவ்வப்போது வரும் கலீல் ஜிப்ரன் மொழி பெயர்ப்புகளும் அப்படித்தான். இவர்களுக்கு என்னைப் போலவோ தமிழ்ப்பட சப் டைடில் எழுதுவோரைப் போலவோ திறமை இருப்பதாகச் சொல்ல முடியாது. உதாரணத்துக்கு, இந்தப் பாட்டு இப்போ தோன்றி இப்போ பெயர்த்தது:
      silk insect silk insect baby
      cut and dropped tied hair toupee
இத்தனை சுலபமாக ராமலட்சுமியாலோ பவளசங்கரியாலோ மொழிமாற்ற முடியுமா? சான்சே லேது (தெலுங்கிலும் உதறுவேன்).

என்ன நான் சொல்வது?

அபாரமான திறமையுள்ள எனக்கு எப்படியாவது இந்த மொழிமாற்ற சப் டைடில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும்.

sir, if you appoint now you will never disappoint sir என்று எனக்கு வந்த வேலை விண்ணப்ப வரிகளின் பொருள் இப்போது புரிகிறது. me telling same that also.



2013/02/09

போகிற வழியில்...



     குடும்ப முன்னோர்/மூத்தோர் புகைப்படம் ஒன்றைச் சுட்டேன். இந்தக் கூட்டத்தில், as a gene, ஏதோ ஒரு கட்புலனாகா அணுவாக - ஏறக்குறைய கடவுள் மாதிரி - நானும் இருக்கிறேன் என்பது, கொஞ்சம் சொத்தையாக இருந்தாலும் நிறைவாகவே இருக்கிறது. சுதந்திரம் வருவதற்கு முன் படம் எடுத்தார்களாம். விடியலில் பிடித்தது. விடியலாகவே தொடரட்டும். நன்று.



                   ல்லிசிம்ஹன் தம்பதிகளை முன்பே சந்தித்திருக்கிறேன். இந்த முறை சந்தித்த போது 'இவர்களால் வீட்டை எப்படி இத்தனை சுத்தமாக வைத்திருக்க முடிகிறது?' என்று வியந்தேன். இத்தனைக்கும் தெரு முனையிலிருந்து தொலைபேசி 'இதோ வருகிறேன்' என்று சொல்லி, இதோவுக்கு அரை நிமிடம் முன்பாகவே வந்தேன். என்னைத் தேடி அப்படி யாராவது வந்தால் சட்டென்று பக்கத்து வீட்டு முகவரியைக் கொடுத்து அங்கே சந்திப்பேன். என் வீட்டு இலக்கணம் அப்படி! கணவரை 'சிங்கம்' என்று அழைக்கிறார் (how romantic!). சிங்கத்துக்கு hot rod constructionல் விருப்பம். எனக்கும். எப்போதாவது இரண்டு வாரம் ஒழிந்தால் சிங்கத்துடன் சேர்ந்து பழைய அம்பேசடர் அல்லது ஜாவாவைப் பிரித்துப் போட்டு உரமேறிய hot rod உருவாக்கலாம் என்ற ஆசை வந்தது. சென்னையின் செழிப்பில் custom hot rodல் கணிசமான காசு பார்க்கலாம். அண்மை வீடு ஒன்று அரவமின்றிக் கிடந்தது. விசாரித்தேன். 'சொத்துத் தகராறில் முடங்கியிருக்கிறது, நாற்பது ரூபாய் கேட்கிறார்கள்' என்று சொன்னார் சிங்கம். 'சீப்பா இருக்கே, தட்டிடுவோமா?' என்று கேட்டவுடன், 'ஹிஹி..' என்று நாற்பதுக்கு நெருக்கமாக பத்துப் பதினஞ்சு சைபர் போட்டார். ஆடிப்போய் வெளியே வந்து மூச்சைப் பிடிக்கக் கொஞ்சம் காம்பவுன்ட் சுவரில் சாய்ந்து நின்றேன். திருச்சி ஜன்னலைப் போல இந்தத் திருமயிலை காம்பவுன்ட் சுவரும் பல வகையில் சுவாரசியம். போய்ப் பாருங்கள் புரியும்.



         மிழகத்தில் விஸ்வரூபக் காய்ச்சல். 'ஆயிரம் ரூபாய் டிடிஎச் கட்டலாமா வேண்டாமா?' என்று இருக்கிற/இல்லாத முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் குழப்பத்தை நீக்க, கமல்ஹாசனே வழக்கம் போல் இன்னொரு குழப்பத்தைக் கொடுத்தார். பிறகு அதை நீக்க இன்னொன்று. பிறகு அதைப் போக்க... 'creating a problem to solve it' என்று அருமையான மேலாண்மைத் தந்திரம் ஒன்று உண்டு. இதைச் சரியாகச் செய்யவில்லையென்றால் முட்டாள்தனமான முடிவுகள் விளையும். கமல்ஹாசன் என்ன நினைத்து குட்டையைக் கிளறினாறோ தெரியவில்லை. deflection and damage control முறைகளும் சரியில்லாமல் போனது வருத்தம். இந்தப் படத்துக்காக இன்னும் எத்தனை வழக்குகளைச் சந்திக்கப் போகிறாரோ தெரியவில்லை. சந்தடி சாக்கில் ஹுசேன் போல் ஹாசன் என்று leg bye சிக்ஸர் அடிக்கப் பார்த்தார். stupidity begets. ஹிஹ்ஹிஹ்ஹி. இவர் படத்துக்கு மட்டும் அடிக்கடி எதிர்ப்புகள் வருவதேன்? இவர் சொல்வது போல் சமூக அமைப்புகள் ஒன்று விடாமல் இவரை இளிச்சவாயன் என்று நினைக்கின்றனவா? அல்லது கலை என்ற பெயரில் எதையாவது கண்றாவியாக வேண்டுமென்றே செய்கிறாரா? ஒரு கலைஞனை முடக்குவதால், பாதிக்கப்பட்டக் கலைஞனைத் தவிர, யாருக்கும் எந்தப் பலனும் கிட்டியதாக வரலாற்றில் செய்தியில்லை. nevertheless, இந்தப் படத்தினால் இவர் நொடித்துப் போவதைப் பொறுக்க முடியவில்லை. இதைப் பதிவிடும் நேரம் படம் வந்திருக்கும் - அதாவது தமிழக தியேடர்களில். ஜனவரி 26 முதல் இணையத்தில் விஸ்வரூபம் HD பிரதிகள் கிடைப்பதாகத் தகவல்கள் புழங்கினாலும், ஹு i mean ஹாசனுக்காக, இந்தப் படத்தை அடுத்த சென்னைப் பயணத்தில் பணம் கொடுத்து டிகெட் வாங்கிப் பார்க்க முடிவு செய்திருக்கிறேன். (ஹிஹி..பேசுவது கிலியா?)



         முன்பே சந்தித்த மற்றொரு பதிவர் ஜவஹர். புத்தகப் புண்காட்சியில் லேசாக உரசிய பின்னர் பொங்கல் நாட்கள் ஒன்றில் சந்தித்தோம். புத்தகம், இலக்கியம், சினிமா என்று மேற்சொன்ன தலைப்புகள் ஒவ்வொன்றிலும் நேரம் போனது தெரியாமல் அரட்டை. தொடர்ந்து ISO 6sigma என்று கணிசமான அரட்டை. அதற்குப் பிறகு பஸ் நிலையம் வரை நடந்து அங்கே கொஞ்சம் படு சுவாரசியமான சமூக அரட்டை (டாபிக் பற்றிச் சொல்லவே கூடாது என்று உறுதி வாங்கிக் கொண்டதால், உறுதி வாங்கிக் கொண்டாரென்பதை மட்டும் சொல்கிறேன்). இவரைச் சந்தித்த பின்னர் ஸ்ரீராமை சந்திக்க பிளான். பேச்சு சுவாரசியத்தில் நேரம் தொலைந்து போனதும், 'நம்ம ஸ்ரீராம் தானே?' என்று சாக்கு சொல்லிக் கொண்டோம். மறுபடி கொசுறுக்காகப் பேசினோம். புத்தகம் எழுத விரும்பும் பதிவர்களுக்கு நிறைய டிப்ஸ் வைத்திருக்கிறார். இதைப் பற்றி ஒரு பதிவு எழுதலாம் இவர். விடையுடன் விலகி, பரவிக்கிடந்த ஆட்டோக்கிருமியிடம் ஒட்டிக்கொண்ட போது இந்த சந்திப்பில் நாங்கள் நிறைய நெருங்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்.



         நாக்பூருக்கு போகிற பஸ்சில் OMG என்ற பெயரில் ஒரு இந்திப்படம் - அரைப்படம் பார்த்தேன். டூரிஸ்டுகளிடம் அனியாய விலைக்கு அபத்தமான பின்புலம் சொல்லி கடவுள் சிலைகளை விற்கும் நாத்திகர் ஒருவரின் கடை மட்டும் புயலில் சின்னாபின்னமாகிறது. இன்சூரன்சு கம்பெனிக்காரர்கள் 'act of god' என்று சின்ன எழுத்துக் காரணம் காட்டி அவருக்கு நஷ்ட ஈடு கிடையாது என்கிறார்கள். நிரூபியுங்கள் என்று வழக்கு போடுகிறார். சுவாரசியமான கரு. பாதியில் நிறுத்திவிட்டார்களே என்று கடுத்தேன்.



     ஸ்ஸில் வந்து இறங்கியதும் சாலையோர மர இலைகள் காலைச் சூரியனின் சிவப்பில் கொஞ்சம் தகிப்பது போல் தெரிந்தது. நாக்பூர் அதிகாலையைப் பாடாவதி ப்லேபுக்கில் பிடித்தேன். மீள்சந்திப்பு காஸ்யபன் அவர்களுடன். வயிற்றுக்கும் அறிவுக்கும் விருந்தாய்க் கழிந்தது நாட்பொழுது. எனக்கு வந்த சில சங்கடமான இமெயில்கள் பற்றி அவரிடம் அறிவுரை கேட்டேன். அரசியல் கலை இலக்கிய பதிவுலக கிசுகிசுக்கள் பேசினோம். படுஜாலி. இன்னும் நிறையப் புத்தகங்கள் பரிசாகக் கொடுத்தார். (இந்த முறை புண்காட்சியில் வாங்கியதையும் நண்பர்களிடம் பெற்றதையும் தொலைக்காமல் ஊருக்கு எடுத்துச் செல்லவேண்டும் பராபரமே!) வரும் கோடையில் இவருக்குப் பாராட்டு விழாவாம். தமிழ்நாட்டில் நடைபெறுகிறதாம். விவரங்களை அறிவிப்பார் என்று நம்புகிறேன். இப்பொழுதே வாழ்த்துக்களும் வணக்கங்களும்.



         புலம்பக்கூடாது. புலம்பி என்ன பயன்? ஹைதராவிலிருந்து எழும்பூர் வர முப்பத்தாறு மணி நேரத்துக்கு மேல் எடுத்துக்கொண்ட சண்டாள காசிகுடா எக்ஸ்பிரஸ் பற்றி புலம்பினால் போன காலம் திரும்பக் கிடைக்கவா போகிறது? வேண்டாம். ஐயையோ, புலம்புகிறேனே!



         ந்தியாவை விட்டுக் கிளம்புகையில் மும்பை விமானத்தை, பேசின் பிரிட்ஜ் போல் அவுட்டரில் நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்பொழுது அவசரமாகப் பிடித்த மாலைப் பொழுதின் touchdown மயக்கம்.



         special 26 என்று ஒரு இந்திப்படம் பார்த்தேன். இறுதியில் ocean's eleven நினைவுக்கு வந்தாலும் mostly சுவாரசியமான படம். சில இடங்களில் நகைச்சுவை அட்டகாசம். intelligent humor என்பது போனஸ். அருமையான திரைக்கதையில் பாடல்கள் தொய்வுடன் செவிவலியும் கூட. தவிர்த்திருக்கலாம். பெயர் தெரியவில்லை - போலீஸ் சிபிஐ காரர்களாக வரும் இரண்டு மீசைக்காரர்களும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். அனுபம் கெர் ஒரு ஜாம்பவான். பின்னணி இசை, எடிடிங் பிரமாதம்.

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு நான் தியேடரில் பார்த்த முதல் படம் கடல். மூச்சைக்கட்டும் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு. மற்றபடி "மணிரத்னத்தையும் ஜெயமோகனையும் படத்தில் வர்ராப்ல கவுறு கட்டி தலைகீழாத் தொங்கவிடணும்லே" என்ற exit chatter காதில் விழ அவசரமாக வெளியே வந்தேன். in violent agreement.

விஸ்வ பார்த்தேன்.. (பதிவை எழுதி முடிப்பதற்குள் படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது, என்ன செய்ய?) கமல்ஹாசன் தமிழ்ப்படத் தரத்தை உயர்த்துகிறார் என்று சொல்லிக்கொள்வது கேலியாக இருக்கிறது. ந்யூயோர்க் நகரில் பிராமண வழக்கில் பேசும் எவரையும் நான் சந்தித்ததில்லை (nuclear oncologists that too, wtf!). effiminate expressions இவருக்கு வரவேயில்லை. ஆச்சரியமாகவும் கஷ்டமாகவும் இருந்தது பார்ப்பதற்கு. i always thought acting was his forte. பாடல்களும் இசையும் நாராசம். சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பிலிருந்து எடுக்கிறார் - எல்லாப் பெண்களும் எனக்கு எனக்கு என்று சுவைக்க முன்வர, கமல் கேரக்டர் சொல்லும் வசனம்: "இருங்கருங்க.. பாப்பாத்திம்மா.. நீ மொதல்ல சாப்டுப் பாத்துச் சொல்லு. உனக்குத்தான் சிக்கன் ருசில்லாம் தெரியும்". what? தமிழ்நாடு பிராமண சங்கம், தமிழ் ஹிந்துகாரர்கள் எப்படி சும்மா விட்டார்கள்? (and oh, get this. microwaveல் எலும்புடன் சிக்கன் சமைப்பார்களா யாராவது? இது கூட தெரியவேண்டாம்? காட்சி அமைக்கிறார்களாம் உலகத் தரத்துக்கு!).

ஒன்று தெளிவானது. தமிழ்ப்படம் இந்திப்படத் தரத்துக்கு வரவே இன்னும் நாளாகும். உலகத்தரத்துக்கு இட்லி வடை பொங்கல் பரோட்டா சாப்ஸ் செய்கிறோமே, போதாதா?



     சென்ற வாரம் படித்த இரண்டு புத்தகங்களும் அற்புதம். முதலாவது மகாகவி சண்முகத்தின் 'அஷ்டலட்சுமி காவியம்' பற்றித் தனிப்பதிவாக எழுத விரும்புகிறேன். இரண்டாவது, ராகிரவின் 'புரபசர் மித்ரா'. ரசித்தேன். க்ருஷ்ணகுமார் என்ற பெயரில் எழுதி வெளிவந்தத் தொடர்கதை. பிரபல மேஜிக் நிபுணர் மித்ரா தன் மனைவியைச் சந்தேகிக்கிறார். தன் சந்தேகம் தொட்ட விவரங்களை அறிய தன் மனைவியை ஒரு காலக்கட்டத்துக்கு ஹிப்னோசிஸ் வழியாக அழைத்துச் செல்ல விரும்புகிறார். ஆனால் அதற்கான ஆற்றல் அவரிடம் இல்லை. பெண்ணை வளர்த்து கலை கற்றுத் தருகிறார் - இந்தக் காரியத்துக்காக. மித்ராவின் கொடூர நடத்தைகள் இன்றைக்குப் படித்தாலும் திடுக்கிட வைக்கின்றன. மித்ரா, மித்ராவின் மனைவி ஜெகதா - இரண்டும் அருமையானப் பாத்திரங்கள். நிஜ வாழ்வில் சில மனைவிகள் இப்படிப்பட்டக் கணவர்களிடம் வாழ்கிறார்கள் என்பது தெரிந்தாலும், 'ஐயோ வேண்டாமே!' என்று இரங்க வைக்கும்படியான பாத்திரம். லேசான காதலும் இழைந்த, சுவாரசியமான, பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பான கதை. விறுவிறுப்பான திரைப்படமாக வரவேண்டிய கதை.

புரபசர் மித்ரா: அல்லயன்ஸ் பதிப்பகம், 2009 ஆண்டுப் பதிப்பு, விலை ரூ105.



         ண்பதுகளின் தொடக்கத்தில் பெங்களூரின் ஹொசஹள்ளி பகுதியில் விடலை நண்பர்களுடன் இருபத்தேழு இஞ்ச் பெல்பாட்டம் அணிந்து, ராஜாஜி நகர் பெண்களை சைட் அடிக்கையில் ஹம் செய்துத் திரிந்த கன்னட சினிமாப் பாடல். எங்கள் கலெக்டிவ் ஜொள்ளுக்குக் காரணமான சுகுணா என்றொரு பெண், எங்கே எப்படி இருக்கிறாளோ! இசை இளையராஜா என்று இந்தப் பயணத்தில் தான் தெரிந்து கொண்டேன். பெங்களூர் நண்பனிடம் அவசரமாகச் சுட்ட பாடலுடன், இப்போதைக்கு விடை.


2012/12/06

போகட்டும் 2012



            2012 முடியப் போகிறது. இந்த வருடத் தொடக்கத்தில் செய்வதாகத் தீர்மானித்தவைகளைச் செய்து முடிக்க இன்னும் இருபத்தைந்து நாட்களே உள்ளன, மக்களே! செய்யத் தொடங்க இன்னும் இருபத்தைந்து நாட்களே உள்ளன, அப்பாதுரை!
***

கணக்கற்ற வாக்குறுதிகளைக்
கண்ணாடியில் அள்ளி வீசும்
பத்து நாள் அரசியல்வாதி.
பாமரனின் புதுவருடச் சலுகை.
***

            12/12/12 பற்றி ஒரு திகில் சிலருக்கு இருக்கிறது. இதை வைத்து நான் 2009ல் எழுதிய 'நாகூர் கசம் சே!' paranormal கதையை நினைவில் வைத்துக் கொண்டு இமெயில் அனுப்பி 'ஷ்யாமி 12/12/12 அன்று வருவாளா?' என்று விசாரித்த (பயமுறுத்திய) இந்ட்லி நண்பர் சுரேந்திரனுக்கு நன்றி. கதை மறந்தே போனது. கதையின் நாயகன் ரகு இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து போனான் என்று என்னுடைய சமீப இந்தியப் பயணம் ஒன்றில் தெரிந்து கொண்டேன். ஷ்யாமி வந்தாலும் ரகுவின் ஆவியைத் தான் தேடவேண்டும். உலகம் அழியுமோ என்றுக் கலங்குவோர் உடனடியாகக் கதையைப் படித்து பயப்படலாம். பிறகு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாம். ஒரு பயம் இன்னொரு பயத்தைப் போக்கலாம், அல்லது கூட்டலாம். எல்லாம் நல்லெண்ணம் தான்.
***

            21/12/12 பற்றி ஒரு திகில் சிலருக்கு இருக்கிறது. இன்றிலிருந்து மூன்றாவது வெள்ளிக்கிழமை உலகம் அழியுமா? இதைப் பற்றிக் கலவரப்பட்டு NASAவுக்கு கோடிக்கணக்கில் இமெயில், கடிதங்கள் வருகின்றனவாம். தனியாக ஒரு இணையதளக் கேள்விபதில் பகுதி அமைத்து அமைதிப்படுத்த முனைந்திருக்கிறது அமெரிக்க அரசாங்கம்/NASA. அப்படி உலகம் அழியும் என்று நம்புகிறவர்கள் தங்கள் சொத்துக்களை விற்றுப் பணமாக என்னிடம் கொடுக்கலாம். என்னுடைய ஸ்விஸ் வங்கியில் போட்டு வைக்கிறேன். உலகம் அழியவில்லையென்றால் ஸ்விஸ் வங்கிச் சேமிப்புக்கான செலவை மட்டும் எடுத்துக் கொண்டு மிச்சதைத் திருப்பிவிடுகிறேன். என் கருமுடி, மீசை, தாடி மேல் சத்தியமாகச் சொல்கிறேன், என்னை நம்பலாம்.
***

            2012ன் மோசமான தோல்வி, ஹ்ம், வேண்டாம், திரும்பத் திரும்பப் புலம்பி என்ன பயன்?
***

            2012ன் மிகப்பெரிய வெற்றி.. க்கும்.. அது ஒன்றும் இல்லை.

2012ன் மிகப்பெரிய வெற்றி, கந்னம் ஸ்டைலாக்கும்.

கந்னம் ஸ்டைலுக்குச் சொந்தக்காரரான தென் கொரியாவைச் சேர்ந்தக் கலைஞர் ஸை (psy), யுட்யூப் சாதனத்தின் வழியாக உலகப் புகழ் பெற்றவர். இவரது கந்னம் ஸ்டைல் விடியோக்கள் ஒன்றரை பிலியன் பார்வைகளுக்கு மேல் பெற்று யுட்யூபில் யாராலும் எளிதில் எட்டிப் பிடிக்க முடியாத சாதனையைப் படைத்திருக்கிறது. இவரது அசல் விடியோ மட்டும் ஏறக்குறைய பிலியன் பார்வைகளைப் பெற்றிருக்கிறது. மெட்டு/டேன்ஸ் இரண்டையும் ஷாருக் கான், விஜய் போன்றவர்கள் காபியடித்து இந்தியாவுக்கு இன்னும் கொண்டு வரவில்லையென்றால் ஆச்சரியம். ஒரு வேளை ரஜனிகாந்துக்காகக் காத்திருக்கிறார்களோ என்னவோ.

கவனிக்கவில்லையெனில் மறுபடியும் சொல்கிறேன். யுட்யூபில் ஒன்றரை பிலியன் பார்வைகளுக்கு மேல்!!! ஒரே ஒரு பாடல்/ஆட்டம் மட்டும்! ஆங்கிலம் கிடையாது, பிரபலங்கள் யாரும் இல்லை. புது ஆள் புரியாத பாஷையில் பின்னி எடுக்கும் இந்த விடியோவுக்கு பார்வைகள் இன்னும் பிய்த்துக் கொண்டு போகின்றன. பாடலின் தொடக்கத்தில் விளம்பரத்தை இணைக்க போட்டா போட்டியாம். ஒரு யுட்யூப் பதிவை வெட்/ஒட் செய்து மறு யுட்யூப் பதிவு செய்வோருக்கும் விளம்பரங்கள் குவிகின்றனவாம்!

இந்த வருடம் முழுதும் அமெரிக்காவில் கந்னம் கூத்து. டீனேஜ் பிள்ளைகள் முதல் ஒபாமா வரை கந்னம் ஜூரம். மடானா, ப்ரிட்னி, ப்ரூஸ் ஸ்ப்ரிங்க்ஸ்டீன் என்று பழைய பிரபலங்களும் டெய்லர் ஸ்விப்ட், கேடி பெரி போன்ற புதுப்பிரபலங்களும் புஸ்க் புஸ்க் என்று கந்னம் சூடு போட்டுக் கொண்டு குதித்தது சிரிப்பாக இருந்தது. அசல் கந்னமும் சிரிப்பு தான் - அது வேறே விஷயம்.

still, ஜூரம் வந்து ஆடும் இந்த ரசிகர்களைப் பாருங்களேன், நான் சொல்வது புரியும். இந்த ரசிகர்களின் உற்சாகம் கொஞ்சமாவது நம்மைத் தொற்றிக் கொள்ளும்.

இளம் கலைஞர் ஸையின் வாழ்க்கை வரலாற்றை (!) படித்த போது - இந்த நபரின் சாதனைகளின் பின்னே இருக்கும் விடாமுயற்சியும் தளராமையும் கந்னத்தில் கைவைத்து வியக்க வைத்தது. அது தான் இவரது வெற்றியை நிறைவோடு நோக்கச் செய்கிறது.
***

            2012ன் கொடுமையான சோகம். இந்தியாவில் இளைஞர் தற்கொலைகள் சென்றப் பதினொரு வருடங்களை விட அதிகமென்று சமீபத்தில் படித்தேன். எப்போதோ படித்த இந்த வரிகள் நினைவுக்கு வந்தன. "I know life can be tough at times, but when I think about the fact that I'll be dead for trillions and trillions of years longer than I'll be alive, I think I'll hang around and deal with it as long as I can". துயரங்கள் வாட்டினாலும், வாழ்வது எவ்வளவோ மேல்.
***

            2012ல் உலகம் அழிகிறதோ இல்லையோ அனாவசிய பயங்களையும் கண்மூடித்தனங்களையும் இந்த வருடத்தோடு அழிப்போம். தன்னம்பிக்கையோடு புதுவருடத்தைத் தொடங்குவோம்.