2013/05/31

சமீபத்தில்



சிரித்தது

:மாடி போர்ஷனை எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்றீங்களே, ஏன்..?
:என் மனைவி என்னை ரொம்ப எடுத்தெறிஞ்சு பேசுவா, அதான்!
--PUNNAGAI ULAGAM பதிவிலிருந்து


ரசித்தது
'team had a tremendous amount of success' என்று சொல்ல நினைத்தார். என்ன சொல்றாரு கவனிங்க..



நாட்டுல இதே நினைப்பா போச்சுங்க!


படித்தது
சிவப்பிரகாசரின் நன்னெறி.

தங்கட்கு உதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட்கு உரியவரால் தாங்கொள்க - தங்கநெடுங்
குன்றினால் செய்தனைய கொங்காய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து

தங்கத்தினால் செய்த குன்றுகளைப் போல் மார்பகங்களைக் கொண்டவளே! (சுறக்கத் தயங்கும்) பசுவிடம் அதன் கன்றின் உதவியொடு பாலைக் கறப்பது போல், தமக்கு உதவி செய்யத் தயங்குபவரிடம் உதவி வேண்டின் (அவருக்கு) அண்மையானவரின் தயவுடன் உதவியைப் பெற வேண்டும்.

படித்ததும் ஒரு சந்தேகம்.
செய்யுளில் 'ஆவின்பால்' என வருவது தெருவோரப் பால் விற்பனையகம் அல்ல என்பது இன்றைய இருபதுகளுக்குத் தெரியும் என்கிறீர்கள்?
அதல்ல சந்தேகம். இது உண்மையிலேயே நன்னெறி தானா? ஏமாற்றிக் கறப்பது எப்படி நன்னெறியாகும்?
அதுவுமல்ல சந்தேகம். இந்த நெறியைச் சொல்ல, குன்றுகளைக் கூப்பிடுவானேன்?

நிற்க.

தமிழின் அற்புதமான எளிய நூல்களுள் ஒன்று. இது போன்ற நூல்களைக் கருத்துக்காகவும், குறிப்பாக நூலாசிரியர் கையாண்டிருக்கும் உவமை உருவங்களுக்காகவும் படிக்கப் பிடிக்கும். பிடித்திருந்தால் வெட்கப்படாமல் ஓசைப்படாமல் என் கதை கவதை கட்டுரைகளில் காப்பியடிக்கப் பிடிக்கும்.

ஒரு எளிய நெறியை அதை விட எளிய உவமையோடு விளக்கியிருக்கும் அழகுக்காக ஒரு முறையாவது படிக்க வேண்டிய நூல். ஓசியில் கிடைக்கிறது இணையத்தில். தினம் தூங்குமுன் சில படித்தால் ஒரு வாரத்தில் முடித்து விடலாம். தூக்கமும் நன்றாக வருகிறது. அப்படியும் இதைப் படிக்கத் தயங்குபவர்கள் அடுத்த மணிரத்னம் கமல்ஹாசன் படத்தை இரண்டு முறை பார்க்கக் கடவது.


சுட்டது

கண் கவர்ந்த மார்ச் காலை
கண் கூசிய மே மாலை
ஓட்டல் மதில் மேலே..


ஈர்த்தது
செங்குன்றம்-செவ்வாய் அதிவேக ஸ்லீபர் வண்டி.

ஓகே, அறிவிப்பு அதில்லை, இது: செவ்வாய் கிரகத்தில் குடியேற ஒரு வாய்ப்பு.

2023ல் செவ்வாயில் நிரந்தரக் குடியிருப்பு அமைப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியிருக்கிறது mars-one எனும் நிறுவனம். செவ்வாய் வாசிகளாகக் குடியேற ஆளெடுக்கிறார்கள். இலவசப் பயணம். செவ்வாய்க்குக் குடியேற விரும்புகிறவர்கள் தங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை விளக்கி ஒரு சிறு விடியோ எடுத்து இங்கே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப விடியோக்களைத் தளத்தில் பார்த்து ரசிக்கலாம். சில இந்திய/சீன விண்ணப்ப விடியோக்கள் சுவாரசியமானவை.

இந்த நிறுவனத்தின் குறிக்கோள் சரியாகப் புரியவில்லை, நடைமுறை சாத்தியமா தெரியவில்லை, எனினும் முயற்சி பாராட்டுக்குரியது. பிற கிரகங்களில் நிரந்தரக் குடியிருப்புக்கான வசதிகளைச் செய்வதே இனி மனிதத்தின் தலையாயக் கடன் என்று நம்புகிறார்கள். பூபாரம்.

இலவசமாக வழங்கப்படுவது ஒருவழிப் பயணம் என்பதை சின்ன எழுத்தில் போட்டிருக்கிறார்கள். நம்ம அரசியல்வாதிகள் சிலரை இப்படி நைசா அனுப்பிரலாம்னு தோணுதே? 'செவ்வாய்த் தரணியிலே செந்தமிழ் பேச வா தோழா உடன்பிறப்பே ரத்தத்தின் ரத்தமே உயிரிலும் மேலானக் கண்மணிகளே..' என்று ஆளுக்கு நாலைந்து வேட்டிகளைப் பிடிப்போம், பார்சல் செய்து அனுப்புவோம். on second thought, இப்பவும் கோவில் கும்பாபிஷேகம்னு கிளம்புறவங்களை "செவ்வாய் கிரகத்துல கோவிலே கிடையாது, எல்லாத்தையும் படைத்து காத்து அழித்து, பூமியை மட்டும் ரட்சிக்கும் அகிலாண்டேஸ்வர/டீஸ்வரிகளுக்கு செவ்வாயில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்" என்று நம் கனவில் நாத வேத ரூபங்கள் வந்து வற்புறுத்தியதாகச் சொல்லி ஒரு கன்டின்ஜன்ட் அனுப்பிரலாமா? என்ன சொல்கிறீர்கள்?

சரி.. செவ்வாய்ல குடியேறுகிறோம். நாளைக்கு சூரியன் சூபர் நோவா கிளைமேக்சின் போது செவ்வாயும் சுவாஹா தானே? வியாழனுக்கு அப்பால் போனால் பிழைக்கலாம் என்கிறார்கள். குடியிருப்பை ஏற்படுத்துவோர் கொஞ்சம் தள்ளி ஆஸ்டிராய்ட் பட்டி தாண்டி அந்தப் பக்கமாகப் போகக்கூடாதோ?

'போவோம்.. முதலில் சந்திரன், செவ்வாய் போன்ற இடங்களில் தற்காலிக இட வாகன மற்றும் பிற பயண வசதிகளைச் செய்து கொள்ள இது போன்ற முயற்சிகள் தேவை.. எமது குறிக்கோள் ஜூபிடரின் டஜன் கணக்கான சந்திரன்களில் ஆளுக்கொன்று எடுத்துக் கொண்டு, ஆசுவாசமாகக் கால் நீட்டிச் சுகமாக இருப்பதே..' என்ற தீர்மானம் நிறைவேறும் பொதுக்கூட்டத்தில் உட்கார எனக்கு ஒரு சின்ன இடம் தர வேண்டுகிறேன்.


குமட்டியது
உதர, ப்ராண, தர்ம சங்கடம்.

தெற்கு ப்லோரிடாவில் இருக்கும் பென் சீகல் பூச்சிக் கடையில் அவ்வப்போது நடைபெறும் 'தின்னும் போட்டி', ஏப்ரலில் நடைபெற்றது. கரப்பான், பாச்சை, வெட்டுக்கிளிக் குஞ்சு, மண்புழு, பூரான் என்று சுவையான பூச்சிகளைத் தின்னும் போட்டி. முதல் பரிசு ஒரு மலைப்பாம்பு. சாப்பிடுவதும் சாப்பிடாததும் வெற்றி பெற்றவர் இஷ்டம்.

சரி, போட்டிக்கு வருகிறேன்.

முப்பது பேர் கலந்து கொண்ட போட்டியில் எட்வர்ட் என்பவர் 'பூச்சியா புழுவா எதுவானாலும் கொண்டா' என்று சும்மா அடித்துச் சாத்தினார். வெற்றி பெற்றார் என்று அறிவித்துப் பரிசு வழங்கும் நேரத்தில் தொண்டையைப் பிடித்துக் கொண்டு சரிந்தார் எட்வர்ட். மறுநாள் மரணமடைந்தார்.

"ம்ம்ம்.. என்ன ஆச்சுனு தெரியலியே.. எல்லாப் பூச்சிங்களும் நல்லா ப்ரெஷ்ஷாத் தானே இருந்துச்சு?" என்றபடி கன்னத்தில் கை வைத்து ஆள்காட்டி விரலால் தட்டித்தட்டி யோசித்தார் சீகல் கடைக்காரர்.

அடாப்சி ரிபோர்டைப் படித்து ஆய்ந்துத் தள்ளிய கலிபோர்னியா பல்கலைக்கழக என்டமாலஜி பேராசிரியர், "அனேகமாக கரப்பான் பூச்சியில் தான் ஏதாவது கெடுதல் இருந்திருக்க வேண்டும்.." என்று அதிசயமாகக் கண்டுபிடித்தார். 'வெட்டுக்கிளிப் பச்சடி ஊசிப் போயிருக்குமோ?' என்று ஒரு மாணவர் தெரிவித்த சந்தேகத்தை பேரா பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

நடுவில் சீகல் கடைக்காரருக்கு தர்ம சங்கடம். எட்வர்டு உழைத்துப் பெற்ற வெற்றிப் பரிசான மலைப்பாம்பை அவர் குடும்பத்தார் 'இந்தப் பக்கமே கொண்டு வராதீங்க' என்கிறார்களாம். என்ன செயவதென்று தெரியாமல் விழிக்கிறார் கடைக்காரர்.

பூச்சிப்புழுக் கூட்டுக்கு அரளிவிதை மசியலே மேலென்று தோணுதோ?

2013/05/28

திருவே உமது கானம்



செவி நாடும் தேன் சுவை அன்றோ?



















































2013/05/21

ரங்க தோஷம்



      சாயம்            யாழ்     






    'தூக்கில் தொங்க வேண்டியவன் மூழ்கிச் சாகமாட்டான்' என்ற முதுமொழி உண்டு. விதி, தலையெழுத்து, கடவுளின் ஆணை போன்றவைக்கு உதாரணமாகச் சொல்வார்கள்.

    சில மாலைகளில் கோல்கோன்டா சிதிலங்களுக்குப் போவோம். அங்கே சாராயக் காற்றாடி சற்றே அறிவாழ்ந்து உரையாடும் பொழுது இடையிடைத் தலைகாட்டிய விதி, தலையெழுத்து, முன்வினை போன்றவற்றை ரங்கன் நம்பினான். செறிவோடு விவாதிப்பான். பஞ்சாங்கம் முதல் டிஎன்ஏ வரை உதாரணம் காட்டி, "இதையெல்லாம் எழுதி வைக்கப்பட்டதென்று ஏற்கிறோம் - வரும் நாட்களின் தட்பவெட்பம் இன்னதென்று தினப்படிக் கணித்துச் சொல்வதை ஏற்று, குடையோ உடையோ எடுத்துப் போகிறோம் - எனில் ஒரு வாழ்க்கைப் பயணம் இவ்வாறு நடக்கும் என்று எழுதி வைத்திருப்பதாக ஏன் ஏற்க முடியாது? நம்மால் முடியாதெனில் அது முடியாததாகுமா? மூடியக் கண்களுக்குப் பின்னால் தானே தினம் பல வண்ணக் கனவுகளை காண்கிறோம்? acceptance is a way of life.." என்பான்.

"சொன்ட்டி டேய்.. பாமரனாட்டம் இதை நம்பிட்டிருக்கியே?" என்றால் சிரிப்பான். "விதி ஏன் தேவைப்படுகிறது? கடவுள் அனாமதேயமாகத் திரிய வேண்டியிருப்பதால். இதை நான் சொல்லலேடா சொன்ட்டி கபாலுங்ளா.. படிச்ச ஞானி ஐன்ஸ்டைன் சொன்னாரு.." என்பான்.

ரங்கனின் நம்பிக்கைகள், அல்லது புரிதல்கள், அவன் வாழ்வின் போக்கைப் பலவிதமாக நிர்ணயித்தனவோ என்ற ஐயம் ஏற்பட்டு நாங்கள் அதிர்ந்தபோது, ரங்கன் இறந்துப் பல வருடங்களுக்கு மேலாகியிருந்தன.

    வேலை முடிந்து மதியம் வீடு திரும்பினேன். வத்சனும் விஜயும் சற்று முன்பு வந்திருக்கவேண்டும்.. மறைவாக நிறுத்தப்பட்டிருந்த இள நீல லேம்ரெட்டாவின் அருகே நின்றிருந்தனர். என் யெஸ்டியை நிறுத்திவிட்டு அவர்களை நெருங்கினேன். "மச்சி.. இது ரங்கன் வண்டிடா.." என்றான் வத்சன். "அபார்ட்மென்டுல இருக்கான் போல.. இத்னி ஜல்தி வன்டானா?"

ஸ்கூடர் இருக்கையை மோப்பம் பிடித்தான் விஜய். "மச்சி.. ஸ்த்ரீ வாசனைடா.. இரு.. இரு.." என்று மீண்டும் முகர்ந்தான். "ம்ம்.. சந்த்ரிகா சோப்.. லேசா தாழம்பூ சென்ட்.. குடும்பப் பொண்ணு வாசனை.. அனேகமா பச்சைப் புடவை, ப்ரௌன் சோளி, பிங்க் ப்ரா.."

"நிறுத்துடா.. இது திவ்யப்ரபந்த வண்டி. அவங்க வீட்டுல அனுமார் பூஜைக்குப் பூ வாங்கிட்டுப் போயிருப்பான்.. மோப்பம் பிடிக்கிறதப் பாரு.."

"வேணா பாரேன்.." மறுபடி முகர்ந்தான் விஜய். திருப்திப் புன்னகையுடன், "நிச்சயம் குடும்பப் பொண்ணு தான்.." என்றான்.

ரங்கன் எங்கள் அபார்ட்மென்டுக்கு சில மாதங்களாக வரவில்லை. திடீரென்று அவன் வண்டி.. விஜய் சொல்வது உண்மையாக இருக்குமா? ஆர்வத்துடன் நானும் வத்சனும் மாடிப்படி ஏறினோம். "பிங்க் இல்லே கறுப்பு, நிச்சயம் வொயிட் கிடையாது. ரங்கனையே கேட்டுருவோம். இப்பலாம் ப்ரால முன் பக்கமே பட்டனாட்டம் வெல்க்ரோ பொட்டு வந்திடுச்சு தெரியுமாடா? விக்டோரியா சீக்ரட்னு அமெரிக்கால.. நம்ம நாயுடு ஹால் மாதிரி ஆனா என்னா வெரைடிரா! எங்க அண்ணி வந்தப்ப அவங்க ப்ரா ஒண்ணை சுட்டு வச்சுக்கிட்டேன்.." என்று எங்களைத் தொடர்ந்தான் விஜய்.

"your indecency has no bounds" என்றேன்.

"my indecency has plenty of bounce" சிரித்தான்.

"கர்மம்"

"எல்லாம் தெரிஞ்சுக்க வேணாமா? quest for knowledge.. நாளைக்கு விசா இன்டர்வ்யூல ப்ராவைப் பத்தி ஒரு கேள்வி கேக்குறான்னு வை.. பதில் சொல்லலின்னா அமெரிகன் கல்சர் பத்தி எதுவுமே தெரியலனு சொல்ல மாட்டானா? அதைவிடு.. இப்பல்லாம் சிலிகான் வச்சு நமக்குத் தேவையான சைசுல.. தேவையான பதத்துக்கு.."

"..இட்லி மாதிரி பேசுறியே? போதும்டா.." நாங்கள் இரண்டாவது மாடி கடக்கும் போது மேலேயிருந்து நேன்ஸ் சைகை காட்டி ஓசையடக்கச் சொன்னான். அருகில் வந்து, "ஒத்தா மோள வாயுங்களா.. அமைதியா வாங்கடா.. உள்ளே ஸ்ரீசூர்ணம் டாவடிச்சிட்டிருக்கான்.. சமயம் பாத்து அமுக்கிருவோம்" என்று கிசுகிசுத்தான். எங்கள் பெட்டிகளை அப்படியே வைத்து, ஷூக்களைக் கழற்றி, அடி/அடி வைத்து மேலேறினோம்.

    பண்பட்ட முதுமை என்று ஏதாவது உண்டா? இருந்தால் அதை ரங்கனின் பெற்றோரிடம் காண முடிந்தது.

வயது நாற்பதைத் தொடும் வேளையில் மணம் புரிந்த பெற்றோருக்கு, ஐம்பதைத் தொடும் வேளையில் பிறந்த ஒரே பிள்ளை ரங்கன். அசல் ஸ்ரீனிவாசப் பெருமாளின் அவதாரமே தங்கள் ரங்கனென்று நம்பினார்கள். அவன் எங்களுடன் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் ஏறக்குறைய எழுபதைத் தொட்டப் பெற்றோர்கள், இன்னமும் அப்படியே பார்த்தார்கள். 'ரங்கா!' என்று அழைக்கையில் ஆழ்வார்கள் போல் தோன்றினர். அவர்கள் ரங்கனைப் பொழுதெல்லாம் கொண்டாடுவதை அவனுடன் தங்கிய வேளைகளில் பார்த்திருக்கிறேன். அவனும் பெற்றோர்களை வைரச் சிம்மாசனத்தில் வைத்துக் கும்பிட்டான். காலையில் அவர்களை ஊஞ்சலில் உட்கார வைத்துப் பாதபூஜை செய்யாமல் வேலைக்குக் கிளம்பியதில்லை. தினம் அவர்களுக்குச் சோறூட்டிக் கால்பிடித்துச் சேவை செய்வான். "..அன்னையும் தந்தையும் தானே.." என்று பாகவதர் பாணியில் பாடி நாங்கள் கிண்டல் செய்வதைப் பொருட்படுத்த மாட்டான். பெற்றோர்கள், ரங்கனுக்கு ஒரு படி மேலே. இரவில் ரங்கன் படுத்த பின்னரே அவர்கள் படுப்பார்கள். ரங்கனின் படுக்கையைத் தொட்டு, "அரவணைப் பள்ளியானே.. ரங்கா!" என்றுக் கைகூப்பி வணங்கிப் பிறகு உறங்கப் போவதைக் கண்டிருக்கிறேன்.

ரங்கனின் அம்மாவுக்கு வசந்தகோகிலம் வசந்தகுமாரி கலந்த அற்புதமான குரல் வளம். பாசுரங்கள் பாடினால் சிலிர்க்கும்.
        "..ஓடிக் களைத்தோ தேவியைத் தேடி இளைத்தோ
        மரங்கள் ஏழும் துளைத்தோ கடலைக் கட்டி வளைத்தோ..
        இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ
        இராவணாதியரை மடித்த வருத்தமோ..
        ஏன் பள்ளி கொண்டீரய்யா.. ஸ்ரீரங்கநாதா.."
என்று விடியலில் உருகிப் பாடியபடி பெற்றோர்கள் இருவரும் பணிவாக ரங்கனின் பாதம் தொட்டு எழுப்பியதைப் பார்த்து நெஞ்சுருகிக் கண் கலங்கியிருக்கிறேன். பாசத்துக்குப் பலபடிகள் மேலேறி பக்தியோடு பிள்ளையைக் கொண்டாடும் பெற்றோரைப் பெற எத்தனைப் பெருந்தவம் செய்தானிந்த ரங்கன் என்று வியந்திருக்கிறேன். இந்தக் காலத்தில் இப்படி ஒரு குடும்பம் சாத்தியமா என்றுக் கேலியாகத் தோன்றினாலும் அவ்வப்போது மெய்சிலிர்த்து விதிர்த்துப் போயிருக்கிறேன் என்பதும் சத்தியம்.

இதைப் பற்றி அவர்களிடமே கேட்டிருக்கிறேன். "அப்படிப் பேசாதரா.. நாங்க பாவாத்மாக்கள்.. எங்க கோடானுகோடி பாவங்களுக்கு நடுவுல நாராயண ஸ்மரணை எப்பவோ இருந்திருக்கு.. அதனால தான் எங்களுக்கு எல்லா நம்பிக்கையும் போன நேரத்துல.. சம்பவாமினு பொறந்து வந்த ஸ்ரீமன் நாராயணன்டா அவன்! அங்கே பாரேண்டா துரை.. எங்க ரங்கன் திருமண் தீட்டுற அழகைப் பாருடா.. உக்காந்தா உன்னொசரம்.. அந்த தேஜஸ் வருமாடா? ப்ரகலாதனுக்கு அடங்கின நரசிம்ஹனாட்டம் எங்களுக்கு அடங்கி வந்திருக்கானே.. அடியார்க்கடியானில்லையா இவன்?" என்று குழைந்து போவார்கள். "எம்மைக் கரை சேர்க்கவே கூட வந்தாஆஆனிந்த ரங்கன்.. எங்க ரங்கன்" என்று அவனுடைய அப்பா பஜனை பாட்டு போல பாட ஆரம்பித்துவிடுவார்.

இவர்களுக்கு ஒரு பெரிய குறை.

ரங்கனுக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை. முதுகலை படிப்பு, ப்பெரிய கம்பெனி வேலை போன்ற தகுதிகளுக்கு அப்பால் பெற்றோரின் முதுமை.. குடும்பத்தில் ஒருவரையொருவர் இறையவதாரமாகக் கொண்டாடும் விந்தையான பாசச்சூழல்.. இவை பெண்களையும் பெண் பெற்றவர்களையும் அவர்கள் பக்கமே வராமல் தடுத்தன. உறவுக்காரர்கள் கூட பெண் தர முன்வரவில்லை. இதை அவர்கள், "கிழங்களுக்கு சிஸ்ருஷை செய்யணும்னு அவாளுக்குத் தலையெழுத்தாடா?" என்று சாதாரணமாக பாவித்தாலும் உள்ளூர ஏங்கினர். "மகாலட்சுமியோ மைதிலியோ ரங்கநாயகியோ ராஜேஸ்வரியோ.. பிராட்டி இருக்காடா.. வருவா" என்பார் ரங்கனின் அம்மா. ரங்கனும் திருமண ஆசைகளை ஒத்தி வைத்தான். "பத்தோ பதினஞ்சோ.. எத்தனை வருசம் இருப்பாங்களோ.. அதுவரை நான் அவங்களைக் கொண்டாடுறேன்.. முப்பது வயசுக்கு மேலே செஞ்சுக்கிட்டா போச்சு.." என்பான்.

ரங்கனின் படிப்பு/வேலைக்காக வீட்டில் தனியறை இருந்தது. அங்கே ஸ்ரீவித்யா படங்களாக இருக்கும். "மாமி.. ரங்கன் ரூம்ல பாருங்கோ.. சினிமா ஸ்டார் படமா ஒட்டிவச்சிருக்கான்.. ஸ்ரீவித்யா மாதிரி பொண் வேணுங்கறான்.." என்பான் நேன்ஸ். ரங்கனின் அம்மா, "மூக்கும் முழியுமா நன்னாத்தான் இருக்கா.. அவளைவிட ஸ்த்ரீ லக்ஷணமா எங்க ரங்கனுக்கு வருவாடா.." என்பார். நேன்ஸ் விடாமல், "ரங்கனுக்கு இருபத்துரெண்டு வயசாகலையா? ஒத்தொத்தராத்துல பதினெட்டு வயசுல பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணிடறா.. நாளானா இந்த சினிமா ஸ்டார் கூட வரமாட்டா.." என்பான். நானும் வத்சனும் முறைப்போம். "ஏண்டா வயசானவங்களை வாட்டறே?" என்று இடிப்போம். நேன்ஸ் கிண்டல் செய்வது தெரிந்தாலும் அவர் ரங்கனை விட்டுக் கொடுக்காமல் பேசுவார்.

ஒரு முறை ரங்கனின் அப்பா என்னிடம், "உங்க ஸ்மார்த்தா கூட்டத்துல யாருனா பாரேண்டா எங்க ரங்கனுக்கு?" என்றார். நேன்ஸ் கண்ணாடி உடைப்பது போல, "மாமா.. துரைக்குத் தங்கைகள் இருக்கா.. ஆனா உங்க ரெண்டு பேருக்கும் உழைச்சு ஓடாப் போயிருவானு பாக்கறான்.. அதில்லாம நீங்க அய்ங்கார் அரைப் பிராமணர்னு அவனுக்கு இளப்பம் வேறே" என்றான். நான் நடுங்கிப் போய்.."ஐயய்யோ.. அப்படி எதுவுமே கிடையாது மாமா.. இந்த நாசமாப் போற நாராயணன்.." என்று சொல்லடுக்க, அடுத்தக் கணம் அவர் துடித்துப் போனார்.. இரு காதுகளையும் பொத்தி, "ஹரே முகுந்தா!" என்றுக் கலங்கியதும் என் தவறு புரிந்தது. நேன்ஸின் முழுப்பெயர் நாராயணன். திட்டினால் முழுப்பெயர், மற்ற நேரங்களில் நேன்ஸ் என்று எங்களுக்குப் பழகிவிட்டது. ரங்கனின் அம்மா சிறிதும் தயங்காமல், "ஆகா துரை! இனிமே உனக்கு மோக்ஷம் கியேரன்டி.. ஏதோ சாக்குல பெருமாள் பேரைச் சொல்லிட்டியேடா.. சொல்ல வச்சுட்டானேடா எங்க ரங்கன்!" என்று என்னை அணைக்காத குறையாகக் குளிர்ந்து போனார்.

பிறகு நேன்சை நான் தனிமையில் கடிந்து கொண்ட போது, "இப்பத் தெரியுதாடா..? இந்த குடாக்குங்களுக்கு எவன் பொண்ணு கொடுப்பான்?" என்றான். எனக்குச் சங்கடமாக இருந்தாலும் நேன்ஸ் பேச்சில் இருந்த உண்மை உறைத்தது.

    இப்படிப்பட்ட ரங்கன் டாவடிக்கிறான் என்றதும் எங்கள் அனைவருக்குமே ஆச்சரியம். யாரிந்தப் பிராட்டி?

அபார்ட்மென்ட் கதவை மெள்ள்ள்ள விலக்கித் திறந்து உள்ளே நுழைந்தோம். உள்ளே வெங்கட் இருந்ததைப் பார்த்து அதிர்ந்தோம். "ஷ்!" என்று சைகையைத் தொடர்ந்து என் அறையைச் சுட்டினான். அறைக்கதவு மூடியிருந்தாலும் தெளிவாகக் கேட்டது. ரங்கன் சேக்ஸபோன் வாசித்துக் கொண்டிருந்தான். வழக்கமான 'கண்ணே.. தேடி வந்தது யோகம்' பாட்டு.

நின்றதும், "பிரமாதம் ரங்கன்.. மறுபடி வாசியுங்க.." உருது கலந்த இந்தியில் தெளிவானப் பெண்குரல்.

"அடப்பாவி.. துலுக்கப் பொண்ணுரா!" என்றான் விஜய். நேன்ஸ் அவனைக் கிள்ளி அடக்கினான்.

"இன்னும் வாசிக்க வேண்டியது நிறைய இருக்கே?" இது ரங்கன்.

"அடுத்து என்ன வாசிக்கப் போறீங்க?" பெண் குரலில் அப்படியொரு இனிமை.

"உன்னை வாசிக்கவா?"

"என்னையா?" சிரித்தாள். அப்படியொரு கொஞ்சல்.

"எல்லாம் நீ தான்.. இனி நான் இசைக்கப்போகும் இசை.. பாடப்போகிற பாடல்.. படிக்கப்போகிறப் புத்தகம்.. உண்ணப்போகிற உணவு.."

"வேறேதும்..?"

"..உடுத்தப்போகும் உடை?"

"சீய்.." என்ற கெஞ்சலான அதட்டல். தொடர்ந்து, "நீங்கள் வரம் பெற்றக் கவிஞரோ..?"

"நானா? இல்லை. நான் கவிஞன் இல்லை. நீ..கவிதை. தானாக உருவானக் கவிதை. சுயம்பு. நான் உன்னை வரமாகத் தேடும் சாதாரண ரசிகன்"

"ஓ! வெறும் ரசி..கரா? ம்ம்ம்.. எனில் வரக்கவிதையை ரசித்தபின் மறைந்து விடுவீர்களோ?"

"ஆமாம்.."

"என்ன..?"

"கவிதையோடு கலந்து மறைந்துவிடும் ரசிகன்.." என்னை வியப்பிலாழ்த்தினான் ரங்கன்.

"ஆள் விழுங்கிக் கவிதை என்று ரசிகர்கள் சாடினால்?" அந்தப் பெண் விடுவதாக இல்லை.

"மாட்டார்கள். மோட்சம் தரும் கவிதையென ரசிகர் கூட்டம் அதிகரிக்கும்.." ரங்கனும்.

"ரசிகனைக் காணாத உலகம் கவிதையைப் பழிக்குமே?"

"பசித்தக் கவிதைக்கு விருந்தான ரசிகனைப் பாராட்டும்"

"அப்படியும் ரசிகனுக்குத்தான் பாராட்டா?" மெல்லிய சிரிப்பு.

நேன்சுக்குப் பொறுமை குறைந்து கொண்டிருந்தது. "ஒத்தா.. பேசினேகிறாங்க.. அதுவும் இந்திலயே.." என்று மெள்ள என் அறைக்கதவைத் தள்ளினான். அரையங்குலம் திறந்தது.

"ஆள் விழுங்கிக் கவிதைக்குப் பசிக்கிறதே.." பெண்ணின் குரல்.

"பசி தீர்க்க ரசிகன் தயார்.." ரங்கன்.

"தள்ளியிருந்தால் எப்படி விழுங்குவதாம்? கவிதைக்கு அருகில் வந்தால் தானே? வாசனை பார்த்தால் பசியடங்குமா?"

சிறிது நேரம் எந்தக் குரலும் கேட்கவில்லை. இருவரும் எக்கச்சமான நிலையில் இருப்பார்கள் என்று நாங்கள் கதவை அடித்துத் திறந்தோம். சட்டை கூட கழற்றாத ரங்கன், அந்தப் பெண்ணின் கைகளைப் பிடித்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்தபடி, தரையில் உட்கார்ந்திருந்தான். அந்தப் பெண் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள்.

"ஜல்சா பண்ணுவீங்கனு பாத்தா.. ஜபம் பண்ணினுக்ரீங்கோ.. யாரு நீங்கோ? இதுக்காகவா அல்லாடுனோம்?" என்றான் நேன்ஸ். அடக்க முடியாமல் சிரித்தான் வெங்கட். தலையிலடித்துக் கொண்டான் விஜய். நானும் வத்சனும் அருகில் சென்றோம்.

அந்தப் பெண் எங்களைப் பார்த்துவிட்டு அதிர்ந்து எழுந்தாள். ரங்கன் கையில் இருந்த துப்பட்டாவைப் பிடுங்கித் தலையைச் சுற்றிப் போர்த்தி மார்பை மறைத்துக் கொண்டாள். "மன்னியுங்கள் சகோதரர்களே!" என்றாள் பயத்துடன்.

அவளைப் பார்த்தோம். உலகத்துப் பெண் கடவுளில் அழகானவர்களை மட்டும் கரைத்து உருவாக்கப்பட்டவள் போல் இருந்தாள். ரங்கனின் வயதிருக்கலாம். அவன் உயரத்துக்கு இணையாக இருந்தாள். கிளிப்பச்சையில் மெல்லிய சரிகை வரிகளாக நெய்த சூடிதார். ரோஜாப்பூக்கள் வரைந்த அரக்குக் கலர் துப்பட்டா, அவளைப் பூந்தோட்டமாகக் காட்டியது. கண்களில் மருட்சி. உட்காராமலும் நிற்காமலும் இடைப்பட்ட நிலையில் இருந்தாள். ரங்கன் அவளை இழுத்து மடியில் கிடத்திக் கொண்டான். அவள் வெட்கத்திலும் பயத்திலும் நடுங்கிப் போய்விட்டாள். ரங்கன் விடாமல் அவளை நெருக்கமாகவும் ஆதரவாகவும் அணைத்துக் கொண்டான். "பயப்படாதே.." என்றான்.

"எதுக்குப் பயப்படுறே? நாங்கள்ளாம் நண்பர்கள்.. இந்தத் தடியன் எங்களைப் பத்தி மோசமா எதுனா சொன்னானா?" என்றான் வத்சன்.

"யாருடா இந்தப் பொண்ணு? வீட்ல தெரியுமா?" என்றான் வெங்கட்.

"எல்லாம் சொல்றேன்.. நீங்கள்ளாம் எங்களுக்கு பெரிய உதவி செய்யணும்.." என்றான் ரங்கன்.

எங்கள் பார்வைகளின் கேள்வியைப் புரிந்து கொண்டு, "முதல்ல.. இன்னிக்கு ராத்திரி மட்டும் இவளை உங்க அபார்டுமென்டுல தங்குறதுக்கு அனுமதிங்கடா" என்றான். எங்களிடமிருந்து பதில் வராததால் தொடர்ந்தான். "ரெண்டாவது.. வெய்ட்.. அதுக்கு முன்னால விவரமெல்லாம் சொல்றேன்..". அவன் கேட்ட உதவி சற்றே அச்சமூட்டியது என்றால் அவன் சொன்ன விவரங்கள் கலங்க வைத்தன.

    நாதிரா வசதியான குடும்பத்தில் பிறந்தவள். நிஜாமின் உறவுமுறை. பெற்றோரின் ஒரே பெண் குழந்தை. மூன்று அண்ணன்கள். கடைசி அண்ணனை விடப் பத்தொன்பது வயது இளையவள். இரண்டு வருட முந்தைய மாரடைப்பின் பக்கவாத விளைவால் அவள் அப்பாவுக்கு இடதுபுறம் விளங்கவில்லை. அம்மாவுக்குச் சமீபமாகப் பார்வை கோளாறு. படிப்பும் பண்பும் கொண்டாலும் இனக் கௌரவம் பார்த்த மூத்த அண்ணன்கள், குடும்பச் சொத்துப் பங்கைப் பிரித்துக்கொண்டுத் திரைப்பட, காவல் துறைகளில் வேரூன்றத் தொடங்கியிருந்தனர். முதல் அண்ணன் தயாரிப்பில் வெளியானதாக அவள் சொன்ன சிரஞ்சீவி-ராதா படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. சமீப நக்சலைட் அடக்குமுறை விவகாரத்தில் இரண்டாவது அண்ணனின் புகழ் பரவத் தொடங்கியிருந்தது. படிக்காத பண்பற்ற மூன்றாவது அண்ணன், சமீபத்தில் ஒரு விதவையைக் கற்பழித்தக் குற்றம் அண்ணன்மாரின் மறைமுகச் செல்வாக்கின் காரணமாக நிரூபிக்கப்படாமல் போனத் திமிருடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். ஓய்வு நேரங்களில் கூடாநட்புடன் வீடு வந்து, சொத்துப் பங்கு தரும்படி வயதானப் பெற்றோரைத் துன்புறுத்தினான். பி.காம் படித்த நாதிரா, வங்கித் தேர்வில் வென்று, அபிட்ஸ் கேனரா பாங்கில் ப்ரொபேஷனரி ஆபீசராகச் சேர்ந்திருந்தாள். வேலைக்குப் போகாத நேரங்களில், முதிர்ந்த உடல் நலமற்றப் பெற்றோர்களைக் கவனித்தாள்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன் ரங்கனும் நாதிராவும் செகந்திராபாத் ஆஸ்பத்திரியில் தற்செயலாகச் சந்தித்துப் பழகத் தொடங்கினார்கள். பெற்றோரை அழைத்துப் போயிருந்தான் ரங்கன். நாதிரா தன் பெற்றோரை. அன்று ஆஸ்பத்திரியில் அதிகத் தாமதமானதாலும் நாதிரா அவசரமாக வேலைக்குப் போக வேண்டியிருந்தக் கட்டாயத்தாலும், ரங்கன் உதவி செய்ய முன்வந்தான். சிகிச்சை முடிந்து நாதிராவின் பெற்றோரை வீட்டில் விடுவதாகச் சொல்லி, அவளைக் கலங்காமல் வேலைக்குப் போகச் சொன்னான்.

இப்படித் தொடங்கிய நட்பு குறுகிய காலத்தில் காதலாய் மாறியதற்கு, இருவரின் இளமைக்குத் துணையான உருதுப்பிடிப்பும் பொதுவில் அமைந்து போன பெற்றோர் நிலமையும் காரணங்கள். நாதிராவின் வேலை நிரந்தரமானதும் வீட்டில் சொல்ல நினைத்திருந்தார்கள். இரண்டு நாட்கள் முன்பு நாதிராவின் மணமுறை சித்தி மகன் அவர்கள் இருவரையும் பார்த்து, வீட்டில் சொல்லி விவகாரமாகிவிட்டது. அதுவரை அன்போடு இருந்த நாதிராவின் அம்மா, ரங்கனை வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாள். மீறினால் தன் இளைய மகனை விட்டு ரங்கனை அடித்து நொறுக்கி விடச் சொன்னாள். அதுவரை ஒதுங்கியிருந்த மூத்த அண்ணன்மார் திடீரென்று இனக் கௌரவம் பார்த்து ரங்கனையும் நாதிராவையும் மிரட்டி அடக்கி வைக்கத் தொடங்கினர். அம்மாவோ தங்கை மகனுக்கு உடனடியாகப் பரிசம் போட்டு, வரும் வெள்ளிக்கிழமைக்கு நிக்காஹ் தேதி குறித்துவிட்டாள்.

திருமணத்தில் விருப்பமின்றி, அண்ணன்மார் துணையில்லாமல், அப்பாவிடம் சொல்லிப் பயனில்லாமல், அம்மாவுக்கு அஞ்சி, ரங்கனையும் வறுபுறுத்த முடியாமல்.. நாதிரா வீட்டை விட்டு ஓடத் தீர்மானித்தாள். விவரமறிந்த ரங்கன் அவளைச் சமாதானப்படுத்தி, மறுநாள் பதிவுத் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்து அதுவரை எங்கள் அபார்ட்மென்டில் தங்குவதற்காக அவளை அழைத்து வந்திருந்தான்.

    நேன்ஸ் முதலில் வெடித்தான். "ஒத்தா.. என்னாடா வெளையாட்டாருக்குதா? ஒரு வருஷமா பழகுறேனு சொல்றே..? ஒங்க ரெண்டு பேர் வீட்டுலயும் தெரியாது.. உன் திக் ப்ரண்ட்ஸ்.. எங்க கிட்டேயும் சொல்லலே.. இன்னிக்கு நைட் ஓடிப்போறதா முடிவெடுத்து இப்பத் தீடீர்னு எங்ககிட்டே வந்தா என்னடா அர்த்தம்?"

வெங்கட் அமைதியாக, "நம்மகிட்டே சொல்லாத போனா என்னடா.. யோசிச்சுப் பாரு.. they have a lot in common.. இவன் குடும்ப நிலமை.. அவ குடும்ப நிலமை.. அதான் இப்ப ஒருத்தர் வீட்டுல தெரிஞ்சு போயிடுச்சுன்றானே?"

"டேய் ரங்கா.. முதல்ல அவளை சரியாக உட்கார விடுறா" என்றேன். "நாதிரா.. கட்டில் மேலே வசதியா உக்காந்துக்க. we will sort this out".

எங்களுக்குப் பசித்தது. "சாப்பிட்டீங்களா ரெண்டு பேரும்?" என்றான் வெங்கட்.

"இல்லடா.. இந்த நிலமைலே இவளை வெளில கூட்டிப் போய்.. மாட்டிக்கிட்டா டேஞ்சர்.." என்றான் ரங்கன்.

"சாப்பாடு வாங்கிட்டு வரேன்" என்று கிளம்பினான் வெங்கட். ரங்கனிடம், "உனக்குச் சோறு கிடையாதுடா" என்றான் கடுப்புடன். "வாடா விஜய்.." என்று கிளம்பவும் உமேஷ் வரவும் சரியாக இருந்தது.

ஆறு பேருக்கான எடுப்புச் சாப்பாட்டை எட்டு பேர் சாப்பிட்டோம். சாப்பிட்டு முடிக்குமுன் நாதிரா எங்களுடன் சுமுகமாகப் பழகத் தொடங்கிவிட்டாள்.

"போலீஸ்ல சொல்லிப் பாதுகாப்பு எடுக்கலாமேடா?" என்றான் வெங்கட் ரங்கனிடம்.

"அவங்க அண்ணன் செல்வாக்குடா.. தலையிடமாட்டாங்க.." என்றான் ரங்கன். "..ரங்கனைத்தான் உள்ளே வைப்பாங்க.. எனக்குத் தெரியும்.." என்றாள் நாதிரா.

"ரெஜிஸ்டர் மேரேஜ் தவிர வழியில்லைடா.. கல்யாணம் ஆகி.. அப்புறம் எங்க வீட்டுல எப்படியாவது சமாளிச்சுருவேன்.." என்றான் ரங்கன்.

"அறிவுகெட்ட முண்டம்.. ரெஜிஸ்டர் ஆபீஸ்ல தேதி இருக்குதானு கேட்டியா?" என்று முத்துதிர்த்தான் விஜய். எங்கள் யாருக்குமே அது தோன்றவில்லை. "ரெட்டைபாத்துல ரெஜிஸ்டர் ஆபீசுங்கள்ள தேதி பத்து நாளாகும்.. இல்லின்னா போலீஸ் ஸ்டேஷன்ல எமர்ஜென்சி வெடிங்க் ரெஜிஸ்ட்ரேஷன் தான் செய்யணும்.."

"போலீஸ் வேணாங்க.." நிஜமாகப் பயந்தாள்.

"அப்ப வேறே ஊர்ல ரெஜிஸ்டர் செஞ்சுக்கலாம்.. சாட்சிங்களோட" என்ற விஜய், உள்ளே சென்று தொலைபேசி வந்தான். "கண்ணுங்களா.." என்றான். "கரீம்நகர்ல என் டீலர்ட்ட பேசி ஏற்பாடு செஞ்சிருக்கேன்.. அவரே ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் கூட்டிப்போய் சாட்சியோட செஞ்சு வக்குறதா சொல்லிட்டாரு. ஆனா அங்கேயும் வெள்ளிக்கிழமை தான் தேதி இருக்குதாம். நான் நாளைக்கு கரீம்நகர் போறேன்.. அங்கேயே ரெண்டு நாள் தங்கியிருக்கேன்.. நீங்க வந்ததும் எல்லாம் முடிச்சுறலாம்.."

"வெள்ளிக்கிழமை வரைக்கும் டிலே செய்யுறது டேஞ்சர்.." என்ற ரங்கனும் நாதிராவும் சற்று மௌனமாக இருந்தார்கள். "அதுவரை இவ இங்கயே இருக்கட்டும்டா.." என்றான் ரங்கன், என்னையும் வத்சனையும் பார்த்து.

"நீ என்னாடா சொல்றே?" என்று வத்சன் என்னைப் பார்த்தான். நான் அவனை முறைத்தேன். "thought so.." என்றான் வத்சன். "அவ இங்கே இருக்குறது அவளுக்கும் டேஞ்சர், நம்ம எல்லாருக்குமே டேஞ்சர்டா.."

"சொன்னாக் கேளுங்க.. நாதிரா நீ உன் வீட்டுக்குப் போ.. pretend nothing happened.. வேணும்னா நாலு தடவை அழு.. just go with the flow.. வெள்ளிக்கிழமை காலைலே ஆபீசுக்குக் கிளம்புறாப்புல நேரே பஸ் ஸ்டேன்ட் வந்துரு.. எட்டரைக்கு பாயின்ட் டு பாயின்ட் பஸ் பிடிச்சா ரெண்டு மணிக்கு கரீம்நகர். மூணு மணிக்கு ரெஜிஸ்டர் முடிச்சுட்டு, டீலர் வீட்டுல கல்யாண சாப்பாடு.. அந்த ஆளு பாத்துக்குறதா சொல்லியிருக்காரு.. அதுவரை யாருக்கும் இது தெரிய வேண்டிய அவசியமேயில்லை.." என்றான் விஜய்.

"பஸ்ல வேணாம்டா.. டேக்ஸி எடுத்துட்டுப் போயிருவோம்.. இல்லே ப்ரைவேட் கார்.." ரங்கனுக்கு இன்னும் தயக்கமாக இருந்தது.

"நக்கோ" என்றான் உமேஷ், இயல்பான ரெட்டைபாத் இந்தி வழக்கில். "வேணாம்.. பொது பஸ் உங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பு. ஒரு வேளை தெரிஞ்சு போச்சுனு வைங்க.. நிச்சயம் தெரிஞ்சு போவும்.. கார் டேக்ஸி தான் முதல்ல மாட்டும்.. மாட்டினாலும் பொது பஸ்ல ஆர்பாட்டம் செய்ய மாட்டாங்க.."

"டேய்.. உடுப்பி வாயா.. கம்னு இருடா.. எதுனா சொல்லாதே.." என்றேன் உமேஷிடம். தொடர்ந்து, "நீங்க தைரியமா இருங்க.. ஒண்ணும் ஆவாது.. இவன் அப்படித்தான் வாய வைப்பான்.."

உமேஷ் விடவில்லை. "ஜரூர் மான்ஜாதே.." என்றான். "நாம தயாரா இருக்கணும். உங்களுக்குப் பாதுகாப்பா என் கடை ரவுடிங்க நாலு பேரை மப்டிலே உங்க பஸ்லே அனுப்பி வைக்கறேன்.. அவங்க வர்றது உங்களுக்குக் கூடத் தெரியாது.. பயப்படாதீங்க.."

உமேஷைச் சுட்டி, "ஊர்ல ஒண்ணாம் நம்பர் பொறுக்கி.." என்றான் நேன்ஸ். "இவனே ஆளை அனுப்புறதா சொல்றான்.. அப்புறம் என்னடா.. கவலைய விடு.. என்னைக் கேட்டா நீ இப்பவே உங்க வீட்டு ஆழ்வாருங்க கிட்டே விஷயத்தைப் பக்குவமா சொல்லிடறது நல்லதுரா.." என்றான் ரங்கனிடம்.

"எல்லாம் செட்டிலாயிருச்சுல்ல? நாதிரா.. தயவு செஞ்சு உடனே வீட்டுக்குப் போயிரு. நார்மலா நடந்துக்க.. வெள்ளிக்கிழமை காலைல பஸ் ஸ்டேன்ட் வந்துரு.. ரங்கா நீயும் அவ வீட்டுப் பக்கமே போவாத.. பஸ் டயத்துக்கு வந்துரு.. குட் லக்.. ஆல் செடில்ட்" என்றான் வெங்கட் முதலாளித்துவமாக.

எல்லாரும் தலையாட்ட விஜய் மட்டும், "ஒண்ணு தான் பாக்கி" என்றான். "வந்து.. நீ மூணு கலர்ல ட்ரஸ் செஞ்சிருப்பேனு இந்தப் பசங்க கிட்டே சொன்னேன். பச்சை சரியாயிடுச்சு..சல்வார். ப்ரௌன் கூட..துப்பட்டா. பிங்க் மட்டும் தான்" என்றான் நாதிராவிடம் சரளமாக.

குப்பென்று கோடி கிலோ குங்குமம் கொட்டியது போல் முகம் சிவந்து.. கண்கள் விரிந்து.. உண்மை வெளிப்பட்டக் கோபம் ரோஷம் பயம் கடந்து நாதிராவின் முகம் மெல்லிய நாணப் புன்னகைக்குச் சடுதியில் மாறிய உணர்ச்சிப் போக்கில்.. அவள் ரங்கனின் விரல்களைப் பிணைத்துத் தன்னுடன் இழுத்துக் கொண்ட ரவிவர்மக் காட்சியைக் காண நேர்ந்தது, எங்கள் அன்றையத் தினத்தின் வரம்.

    வெள்ளிக்கிழமை காலையிலேயே நாங்கள் பஸ்ஸில் டிகெட் வாங்கி இடம் பிடித்தோம். உமேஷின் அடியாட்கள் ஆறு பேர் வந்தார்கள். ரங்கன் முன் இரண்டாவது வரிசையில் ஒரு அடியாளருகே உட்கார்ந்தான். நேன்சும் நானும் கடைசி வரிசையில். இடப்புறம் போக்குவரத்து நிறைந்த முச்சந்தி நெரிசல், ரங்கனுக்கும் எனக்கும் தெளிவாகத் தெரிந்தது. வத்சனும் வெங்கட்டும் எதிர்ப்புற டீக்கடையில் இருந்தார்கள். டீக்கடை ஒட்டிய மாரட்பல்லி சாலை எங்கள் கண்ணெதிரே ஆளில்லாமல் விரிந்தது. நாதிராவுக்காகக் காத்திருந்தோம். என்ன ஆனாலும் ரங்கனை பஸ்ஸிலிருந்து இறங்கக் கூடாது என்று சொல்லியிருந்தோம். கூட்டம் சேரத் தொடங்கியது. எட்டு ஐந்து. எட்டேகால். கண்டக்டர் டிகெட் சோதித்தும் விற்றும் கொண்டிருந்தார். எதிரே வத்சன் கட்டைவிரலைத் தாழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தான். தாமதம். எட்டுப் பதினாறு.. பதினெட்டு.. எங்களுக்கு முதல் முறையாகக் கலக்கத் தொடங்கியது. உமேஷ் கண்டக்டரிடம், "ஒருத்தர் வரணும்.. இதா வந்துருவாங்க" என்று சொல்லத் தொடங்கினான்.

எட்டு இருபதுக்கு நாதிரா சற்றுத் தொலைவில் மாரட்பல்லி தெருவில் சந்து திரும்பி எங்களை நோக்கி வருவது தெரிந்தது. சீக்கிரம்!

நிதானமாக நடந்தவள், சற்று வேகம் பிடிக்கத் தொடங்கி.. திடீரென்று ஓடிவரத் தொடங்கினாள். அவள் பின்னால் சந்து திரும்பிய ஒரு ஆட்டோவும் இரண்டு ஆட்களும் துரத்தி வருவதைக் கவனித்து அவசரமாக பஸ் இறங்கி, "வத்சன்" என்று கூவினேன். இறங்க முனைந்த ரங்கனை உமேஷின் அடியாள் பிடித்து அழுத்தினான். எனக்குப் பின்னே இறங்கிய நேன்ஸ் அவசரமாக ஓடி வெங்கட்டை அழைத்தான். "டேய்.. சைட்ல பாருங்கடா..". அதற்குள் வெங்கட் மாரட்பல்லி தெருவைக் கவனிக்க, நாதிரா வேகமாக ஓடிவருவதைப் பார்த்தான். அவள் பின்னால் வந்த ஆட்களைக் கவனிப்பதற்குள் நாதிரா அவனைத் தாண்டி தெருமுனைக்கு வந்து விட்டாள். ஆட்டோவும் வேகமாக அவள் பின்னே வந்துவிட, பஸ்ஸில் ஏறுவதற்காக நாதிரா வேகமாக தெருவைக் கடக்க முற்பட்டாள்.

பேகம்பேட் அவசரத்தில் முச்சந்தி கடந்த ஒரு பியட் கார் அவளைக் கவனிக்கவில்லை. இருபதடி தூக்கியெறியப்பட்ட நாதிராவைக் கவனித்த எங்கள் நெஞ்சாறவில்லை.

தொடர்ந்து பஸ் ஸ்டேன்டில் கலவரம். ரங்கனை அடிக்க ஆட்கள் வர, உமேஷின் ஆட்கள் பாதுகாப்பாக அவனைப் பிடித்துக் கொண்டனர். ரங்கன் திமிறி "ஐயோ நாதிரா நாதிரா!" என்று அலறி ஓடி அவளை மடியில் எடுத்துப் போட்டுக் கதறினான். "என்னையும் கொன்னுறுங்க.. என்னையும் கொன்னுறுங்க" என்றுத் துடித்தான்.

உமேஷின் அடியாட்கள் ரங்கனைப் பாதுகாப்பாகச் சூழ்ந்து கொள்ள, நொடிகளில் நாதிராவின் போலீஸ் அண்ணன் வந்துவிட்டான். "இவன் கொலைகாரன்.. இவனை உள்ளே தள்ளு.. தோலைக்கிழி.." என்றுப் பலவாறு அரற்றிய மூன்றாவது அண்ணனைப் பொருட்படுத்தாமல் எல்லாவற்றையும் விசாரித்தான். நாதிராவை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி, இருந்த கூட்டத்தை அமைதிப்படுத்தி நகர்த்தியபோது மணி பத்தாகிவிட்டது. "மாரோ இஸ்கோ.. இந்துச்சூத்" என்று இனப்பகை தூண்ட முயன்ற எழுச்சியை அடக்கி, "இது விபத்து" என்ற நாதிராவின் அண்ணன், எங்களை வியக்க வைத்தான். ரங்கனிடம் ஸ்டேட்மேன்ட் வாங்கிக் கொண்டு பாதுகாப்போடு வீட்டுக்கு அனுப்பி வைத்தான். நாங்களும் ரங்கனுடன் வீட்டுக்கு வந்தோம்.

ரங்கன் விவரமெல்லாம் சொல்லி அழுதான். அவன் பெற்றோர்களுக்கு மெள்ள விவரம் புரிந்த போது "க்ருஷ்ணா! க்ருஷ்ணா!" என்றதைத் தவிர எதுவுமே பேசவில்லை.

சிறிது நேரத்தில் நாதிராவின் அம்மா ஆட்டோவில் வந்திறங்கினார். நேரே உள்ளே வந்து ஒரு கைப்பிடி மண்ணை வீசினார். "நீ அல்பாயுசுல போயிடுவே.. என் பெண்ணைப் பலி வாங்கின உனக்கு வாழ்க்கைல சந்தோஷமே கிடைக்காது.. என் பெண் போனாப்புல உங்கப் பையனும் போயிடுவான்" என்றுச் சபித்து, வீசிய மண்ணையும் அவர்களையும் திரும்பிப் பாராமல் வந்த வேகத்தில் வெளியேறினார்.

    நாங்கள் பழைய நிலைக்குத் திரும்பச் சில வாரங்களாயின. ரங்கனுக்குச் சில மாதங்கள். நாதிராவின் பெற்றோருடன் அவன் சுமுகமானது எங்களுக்கு ஆச்சரியம். இழப்பின் தவிப்பைத் தணிக்க இரு தரப்புக்கும் அந்த நெருக்கம் தேவைப்பட்டது. தன் பெற்றோரையும் நாதிராவின் பெற்றோரையும் மாதமிருமுறை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனான். தினம் நாதிராவின் பெற்றோரைச் சந்தித்துப் பேசினான். முதல் வருட நினைவு நாள் வாக்கில் ரங்கன் அவர்கள் மகன் போலவே பழகிவிட்டான். தன்னலமில்லாத ரங்கனின் மனம் புரிந்து நாதிராவின் அம்மா, அடிக்கடி தன் சாபத்துக்கு மன்னிப்புக் கேட்டு வந்தார். நாளாக ஆக ரங்கனின் பெற்றோரும் நாதிராவின் பெற்றோரும் அவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டினர். ரங்கன் மீண்டும் திருமணம் பற்றி நினைப்பான் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. மறுபடியும் ரங்கனைப் பற்றித் தவறாகக் கணித்தோம்.

இரண்டாம் வருடம், சேல்ஸ் மீட்டிங்குக்காக நாங்கள் விசாகப்பட்டினம் போய்த் திரும்பிய அன்று மாலை ரங்கன் வீட்டில் ஒரு முதியவரும் பெண்ணும் வந்திருந்ததைப் பார்த்தோம். அவனுடைய பெற்றோர் என்னையும் நேன்ஸையும் பிடித்துக் கொண்டார்கள்.

"இவா எங்கப் பங்காளிகள்.. புருலியாப் பக்கம்.. இவர் பொண்ணுக்குக் கல்யாணமே ஆகலை.. நான் எங்க ரங்கனுக்குப் பண்ணிக்கறேன்னு வரச் சொன்னேன்.. கல்யாணமே ஆகலேன்னாலும் ரங்கனுக்குப் பொண்ணு தர பயப்படுறாளே?" என்றார் நாங்கள் விவரம் கேட்டது போல.

நபர், "ரங்கன் ஜாதகம் பாத்தோம்.. சரி வரல்லியே? என் பொண்ணுக்கு செவ்வாய் தோஷம். எட்டாம் ஸ்தானம். ரங்கனுக்கு சுத்த ஜாதகம்.. அவருக்கும் செவ்வாய் தோஷம்னா ஏதோ பரிகாரம் பண்ணிச் சேக்கலாம்.." என்றுத் தொடங்க, நாங்கள் திகைத்தோம். இதையெல்லாம் எங்களிடம் சொல்லி என்ன பயன்? ரங்கன் உள்ளிருந்து நக்கலாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.

"என்ன பெரிய தோஷம்.. எல்லாம் வேஷம்!" என்றார் ரங்கனின் அப்பா. "மாமி இருக்காளே.. அவளுக்கும் செவ்வாய் தோஷம்னு சொன்னா.. என் ஜாதகத்துல தோஷம் கிடையாது.. நான் பண்ணிக்கலியா? இப்ப என்னாச்சு சொல்லுங்கோ?" என்றார். எங்களை விஷமமாகப் பார்த்தார். "மாமி இருக்காளே.. சாந்தி முகூர்த்தப்போ இவ பயந்து என்னண்டை வந்து.. நேக்கு செவ்வாய் தோஷம்னு தெரிஞ்சும் பண்ணிண்டேளேனு கலங்கறா.. நான் சட்டுனு அவ வாயிலே ரெண்டு உதட்டையும் கடிக்கறாப்ல ஒரு முத்தம்.. பச்சுனு கொடுத்தேன்.. எனக்கு அப்படி எந்தத் தோஷமும் தெரியலியேடி.. சரியா கவனிக்கலியோ.. இன்னொரு தடவை பாக்கட்டுமானேன்.. அவ்ளோ தான்.. ஏற்கனவே தாம்பூலம் போட்ட வாய் லஜ்ஜையிலே இன்னும் சூர்யோதயமா ஜொலிக்கிறது.." என்றுச் சிரித்தார். ரங்கனின் அம்மாவுக்கு இந்த வயதிலும் முகம் சிவந்தது. "see what i mean? அப்பவும் தெரியலே.. இன்னி வரைக்கும் தெரியலே.. எங்களுக்குள்ள மனஸ்தாபம் வரப்போ ஏண்டி உயிரை வாங்குறேனு கேட்டாலும், இன்னைக்கும் நெதம் கையைப் பிடிச்சுண்டு ஊஞ்சலாடறோம்.. தூங்கறோம்.. இல்லையா? என்ன தோஷம் கெட்டுப் போச்சு? மனசுல கல்மிஷம் இருக்கறவாளுக்குத் தான் தோஷம் வேஷம் எல்லாம்.." என்றார் புருலியாக்காரரைப் பார்த்து. எனக்கு ரங்கன் பெற்றோர் கால்களில் விழத் தோன்றியது.

"அப்புறம் என்ன சார்.. பொண்ணைக் கொடுங்கோ.. ரங்கன் உங்க மாப்பிளையா வர நீங்கக் கொடுத்து வச்சுருக்கணும்" என்றான் நேன்ஸ்.

புருலியாக்காரர் பதறினார். "ஐயையோ.. நேக்கந்த சந்தேகமே இல்லை.. எம்பொண்ணு ஜாதகம் எமன்ட்டந்து வந்திருக்குற ஒன்வே டிக்கெட்.. ரங்கன் என்ன பண்ணுவார்? நாங்க ரொம்ப ஏழை.. ரங்கனுக்குப் பொண் கொடுக்கக் கசக்குமா? தோஷ ஜாதகத்தை ஏமாத்திப் பொண் கொடுக்க மனசு ஒப்பலே. பொண்ணு.. பொறந்த வாரமே அம்மாவை முழுங்கிட்டா.. செவ்வாய் தோஷம் அம்மாவை முழுங்குமோ? பெத்தவளை முழுங்கியாச்சு.. புருஷனை முழுங்கணுமா? இன்னும் என்னை முழுங்காம இருக்காளேனு தலையிலடிச்சுக்கறேன்.. செறுக்கி ஜாதகத்தை அழிச்சு நாலு செவ்வா தோஷ ஜாதகம் கணிக்கலாம்.. அத்தனைக்கிருக்கு தோஷம்.. அதான்.."

பெண்ணைப் பற்றி இப்படிப் பேசுகிறாரே என்று அதிர்ந்தோம். இத்தனைக்கும் நடுவில் அந்தப் பெண் அறையோரமாகத் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள். எங்களுக்குப் பாவமாக இருந்தது. பெண்ணின் கண் கலங்கியிருந்தது.

"ஏம்மா.. செவ்வாய் தோஷம்னா செக்சுல ரொம்ப ஆர்வமா இருப்பானு சொல்வாளே?" என்றான் ரங்கன் திடீரென்று.

ரங்கன் கேள்வியின் காரணம் புரியாவிட்டாலும் டைமிங் புரிந்தது. கண்ணீர் நீக்கியத் திடுக்கிட்ட வெட்கப் புன்னகையை மறைக்க முயன்றாள் அந்தப் பெண்.

"போதும்டா அசடு.." என்றார் ரங்கனின் அம்மா. "இதப் பாருங்கோ.." என்றார் புருலியா நபரிடம். "எம்புள்ள பங்குனி உத்தராடம் மகர ராசி. மகாவிஷ்ணு வம்சம், மகாலிங்க அம்சம். பத்து செவ்வாய் எட்டு சனியை ஜோட்டாலடிச்சு விரட்டாதோ ரங்கன் ஜாதகம்? ஆட நட்சத்திரம் ஐயா.. இவன் தான் எல்லாத்துக்கும் ஆரம்பம்.. இவனண்டை உண்டானது தான் எல்லாம்.. என் ரங்கனை எந்தத் தோஷம் என்ன பண்ணும்? தோஷத்துக்கு தோஷமாகும்.. இவன் யாரு? இகபரத்ரிலோகாதிபதி.. சாக்ஷாத் நாராயணன், அவ சாக்ஷாத் பிராட்டியாக்கும்.. தவம் பண்ணிக் கடைசியா இங்கே வந்திருக்கா தெரியலியா? உங்க கண்ணை மாயை மறைக்குறது.. நீங்க எதுக்கும் பயப்படாதீங்கோ.. க்ருஷ்ணாய துப்யம் நமனு சொல்லிட்டு கல்யாணத்தைப் பண்ணி வைப்போம்.. நானும் உங்க கிட்டே எல்லாத்தையும் சொல்லியாச்சு.. ரங்கனுக்குக் கல்யாணம் நடந்தா நாங்களும் நிம்மதியாக் கண்மூடலாம்.. பெரிய மனசோட கன்னிகாதானம் பண்ணுங்கோ.. ஸ்ரீநிதியைக் கண்கலங்காம பிராட்டியை விட மேலாப் பாத்துக்குறோம்.. அவ முகக்களை எந்த தோஷத்தையும் பஸ்பமாக்கிடும்.. எல்லாப் பரிகாரமும் பண்ணி.. துவரை வாழைனு தானத்துக்கு மேலே தானமாப் பண்ணி.. தோஷத்தையே கரைச்சுடறோம் கவலைப்படாதீங்கோ.. அவ எங்காத்துப் பொண்ணா வந்துட்டா சந்தோஷத்தைத் தவிர எந்தத் தோஷமும் வராது.. பொண் தரமாட்டேன்னு சொல்லிடாதீங்கோ". ரங்கன் அம்மாவுக்கு குரல் கம்மியது.

"இருந்தாலும் எம்பொண்ணு எமனுக்கு டிகெட் செக்கரா இல்லே வந்திருக்கா.. நாளைக்கு ஏதானு ஆச்சுன்னா அவ நிலமையும்னா கஷ்டம்.. கல்யாணமாகாமலே இருந்துட்டுப் போகட்டும் துடைப்பக்கட்டை.."

நாங்கள் மெள்ள ரங்கனிடம் சென்றோம். "என்னடா இது.. நீங்கள்ளாம் சேந்து அந்தப் பொண்ணை எக்சிபிஷன் பொம்மையாட்டம் வச்சு.. டிராமா போட்டுட்டிருக்கீங்க.. உனக்குப் பிடிச்சிருந்தா பண்ணிக்கடா.. இல்லைனா spare some dignity" என்றேன்.

என்ன தோன்றியதோ, ரங்கன் நேராக அந்தப் பெண்ணிடம் சென்றான். "ஸ்ரீநிதி.. எல்லார் எதிர்லயும் உன்னைக் கேக்கறேன்.. என்னைக் கல்யாணம் செஞ்சுக்க உனக்கு இஷ்டமா?" என்றான்.

அவள் விதிர்த்துப் போய் அவசரமாக எழுந்தாள். ரங்கன் விடவில்லை. "என்ன சொல்றே?"

அவள் ஆமோதித்துத் தலையாட்டினாள். ரங்கன் தொடர்ந்தான், "தலையாட்டினா என்ன அர்த்தம்? சரிங்கறியா வேணாங்கறியா?"

"சரி" என்று அவள் சொன்ன அந்தக் கணத்தில், தயங்காமல் அவள் கையைப் பிடித்தான் ரங்கன். "அப்பா.. அம்மா.. இனிமே ஸ்ரீநிதி தான் எனக்குப் பொண்டாட்டி. நான் ரங்கன், இவ ரங்கநாயகி. நான் கண்ணன், இவ கோதை" என்றபடி ஸ்ரீநிதியின் தந்தையைப் பார்த்தான். "சார்.. தோஷம் எல்லாம் இனிமே எங்க குடும்பத்துக்குள்ள வந்தாச்சுனு வச்சுக்குங்க.. உங்க குடும்பத்தை விட்டாச்சுன்னு சந்தோஷப்பட்டுக்குங்க. அப்படியே ஏதாவது ஆனாலும் உங்க பொண்ணு உங்களுக்குப் பாரமா இருக்கவே மாட்டா.. எங்க சொத்து எல்லாமே அவளுக்குத்தான்" என்று ஸ்ரீநிதியின் தலையிலடித்துச் சத்தியம் செய்தான்.

ஸ்ரீநிதியின் தந்தை, ரங்கனின் பெற்றோர் கால்களில் விழுந்து விழுந்து எழுந்து கொண்டிருந்தார்.

இந்த மெலோடிராமாவின் தாக்கம் தீருமுன் ரங்கன்-ஸ்ரீநிதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு நாதிராவின் பெற்றோரும் வந்திருந்தனர். அவர்களுக்கு அளவிலாத மகிழ்ச்சி. தங்கள் சொத்தில் ஒரு பங்கை திருமணப் பரிசாக ஆசீர்வாதம் செய்துக் கொடுத்தார்கள் நாதிராவின் பெற்றோர்கள்! ரங்கனின் திருமணம் முடிந்த கையோடு தங்கள் மிச்ச சொத்துக்களை விற்று, தானங்கள் செய்து, ஹஜ் சென்ற நாதிராவின் பெற்றோர்களைப் பற்றி நாங்கள் அதற்குப் பிறகு கேள்விப்படவில்லை.

    ரங்கன் தம்பதியினர் மிக மகிழ்ச்சியாக இருந்தார்கள். இரண்டாம் வருடம் ஸ்ரீநிதி கருவுற்றாள். குழந்தை பிறந்த அன்றைக்கு தாயையும் சேயையும் பார்க்க ரங்கன் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வருகையில் லேம்ரெட்டாவில் ப்ரேக் பிடிக்காமல் எதிரே வந்த சிமென்ட் லாரிமேல் மோதி.. ரங்கன் தென்படவில்லை.

யாருக்கு எந்த விவரத்தைச் சொல்வது என்று நாங்கள் தவித்து ஒருவழியாக எல்லாவற்றையும் எல்லாருக்கும் சொல்லி முடித்தோம். 'க்ருஷ்ணா!' என்றுக் கதறிய ரங்கனின் அப்பா, அந்தக் கணத்தில் பேச்சையிழந்தார். பெற்றோர் இருவரும் அறைக்குள் தாளிட்டுக் கொண்டு ஒரு வாரம் போல் வெளியே வரவேயில்லை. 'க்ருஷ்ணா!' என்ற மாமியின் குரல் மட்டும் அந்த அறையிலிருந்து இராப்பகலாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நானும் நேன்சும் நிறையப் பயந்தோம். ரங்கனின் இறுதிச் சடங்குகளை நாங்கள் செய்தோம்.

    2006ல் இந்தியா போயிருந்தேன். நேன்ஸின் சென்னை வீட்டில் தங்கியிருந்தேன். நாலு நாள் லீவ் போட்டு என்னுடன் சுற்றினான் நேன்ஸ். இருவரும் ரங்கன் வீட்டுக்குப் போக எண்ணி நேன்சின் சொந்த விமானத்தில் ஹைதராபாத் போனோம். வழியெல்லாம் ரெட்டைபாத் நினைவுகளைக் கிளறினோம்.

நாங்கள் எல்லோருமே ரங்கன் குடும்பத்துக்கு உதவினோம் என்றாலும், நேன்ஸ் ரங்கனின் பெற்றோர்களை பத்து வருடங்களுக்கு மேல் சொந்த மகன் போல் கவனித்துக் கொண்டான். ஸ்ரீநிதிக்கு எத்தனையோ உதவிகள் செய்தான். ரங்கனின் அப்பா இறந்த போது அத்தனை காரியங்களையும் நேன்ஸ் செய்தான்.

"ரங்கன் பொண்ணு எப்படிரா இருக்கா?" என்றேன்

"ஒத்தா.. பெரிய ஆள்டா அவ.. பிட்ஸ் பைனல் இயர் கம்ப்யூடர் சயன்ஸ்.. இப்பவே ட்ரீம்வொர்க்ஸ்ல ப்ரீலேன்ஸ் அனிமேஷன் பண்றா.. சூபர் ஸ்மார்ட்.. ஷ்ரெக் பாத்திருப்பியே அதுல நாலு சீன் அவளோட அனிமேஷன்.. அப்படியே ரங்கனை உரிச்சு வச்சிருக்கா.. ஆனா அழகாவும் புத்திசாலியாவும் இருக்கா.. எவ்ளோ பெரிய ஆளா வருவா பாரு.."

"ரொம்ப சந்தோஷமா இருக்குடா" என்றபடி அமைதியானேன்.

வெளியே விமானம் தரையிறங்கத் தொடங்கியிருந்தது. மிகச் சிறிய விமானமானாலும் டர்புலன்ஸ் தெரியவில்லை. சிஇஓ தகுதிக்கேற்றபடி உள்ளே சொகுசாக இருந்தது. எங்கே எப்படி எப்போது இங்கே வந்தேன்.. இந்தக் கணத்தின் மகத்துவம் என்ன?

எங்கள் வட்டத்திலிருந்து விழுந்த முதல் ஆள் ரங்கன். அவனுடன் கழித்த வருடங்கள் எங்களை உலுக்கியதோடு ஒரு அச்சாணியாகவும் இருந்தது பல வருடங்கள் கழித்தே புரிந்தது. 'செவ்வாய் தோஷமாவது மயிராவது' என்று ஸ்ரீநிதியைக் கைதொட்டக் கணத்திலே ரங்கன் தன் வாழ்வை முடித்துக் கொண்டதாக அவன் இறந்த நேரத்தில் தோன்றினாலும், உண்மையில் இரண்டு புதிய வாழ்க்கைகளை உருவாக்கியவன், ஏழெட்டு வெற்று வாழ்க்கைகளை நிறைவாக்கியவன்.. முடிவின் முடிவே தொடக்கம் என்ற ரங்க ரகசியம் போகப் போகப் புரிந்தது. எங்கள் வட்டத்திலிருந்து விழுந்த இரண்டாவது ஆளான எனக்கு ஒரு பிடிப்பு தேவைப்பட்டது. ரங்கன் இறந்த அடுத்த வருடம், நான் அவமானம் தரும் விதத்தில் என் வேலையை இழந்தேன். தற்கொலை எண்ணம் இருந்தது. என்னுடன் தங்கிய உமேஷ் ஒரு இரவு முழுதும் ரங்கனைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வந்தது. எதையுமே இயல்பாகக் காண முடியாத என் இயலாமையை எண்ணிப் பின்னாளில் சிரித்ததும்.

நேன்ஸ் என்னை உலுக்கினான். "என்னாடா சைலன்ட் ஆயிட்டே? லேன்டிங் தியானமா?"

"this rangan.. strange bird.." என்றேன். நேன்ஸ் என்னைப் பார்த்தான். "ஆமாடா" என்றேன். "நீயும் நானும் ஒண்ணு செய்யுறதுக்கு முன்னால எதையெதையோ நினைக்கிறோம்.. we rationalize.. rangan just did it.. எதையும் தன்னிடம் வருவதாகவே பார்த்தான்.. நாதிரா.. தன்னோட பெற்றோர்.. நாதிராவோட பெற்றோர்.. ஸ்ரீநிதி.. நம்ம வட்டம்.. எல்லாமே அவனுக்கு ஒரு sign.. ஒண்ணிலந்து இன்னொண்ணுக்கான transition.."

"he embraced it" என்றான் நேன்ஸ்.

பேச்சை மாற்றினேன். "ரங்கனோட அப்பாம்மா, ஸ்ரீநிதி.. எல்லாரும் உனக்கு ரொம்பக் கடன் பட்டிருக்காங்கடா.. நம்ம கும்பல்லே அவன் குடும்பத்தை ரொம்பக் கிண்டல் செஞ்சது நீதான்.. அவங்க கூட இருந்து அதிகமா உதவி செஞ்சதும் நீதான்.."

"சீசீ.. நாமள்ளாம் ஓடற நதி மாதிரிடா.. அவங்கள்ளாம் கரைல நிலைச்சு இருக்குற மரம் மாதிரி.. we recede.. they remain.. அப்பப்போ அவங்களை சுத்தி நாம நதியா வாழ்ந்துட்டுப் போறதுனால, வத்திப் போறப்ப கூட உள்ளுக்குள்ளே ஈரமா இருக்கு.. இல்லேன்னா எல்லாம் மண்ணுதாண்டா.. நானும் அவங்களுக்குக் கடமைப்பட்டிருக்கேன்.. நாம எல்லாருமே.. rangan made us.. each of us.. in some way. this is about him, not about us.." என்றான்.

விமானம் தரை தொட்டுத் தயங்கி நின்றது. அவன் கம்பெனிக் கார் எங்களைக் கூட்டிப் போனது. வழியில் நான் பேசவில்லை. நேன்ஸ் சொன்னது உறுத்தியது. 'நாம எல்லாருமே கடமைப் பட்டிருக்கோம்.. இல்லை.. நாங்கள் யாருமே நேன்சுக்குச் சரியான முறையில் நன்றி சொல்லவில்லை.. இன்றைக்கு ரங்கனின் அடுத்த தலைமுறை வளர்ந்த நிறைவில் மட்டும் பங்கெடுக்கிறேனே.. இவனுக்கு எப்படி நன்றி சொல்வது' என்று ஏதோ யோசிக்கும் வேளையில் ரங்கன் வீட்டுக்குள் வந்துவிட்டோம். ஸ்ரீநிதி என்னை அடையாளம் கண்டு முகமெல்லாம் புன்னகையாக வரவேற்றாள். "வாங்க அண்ணா!" என்றாள். எப்படி இவர்களால் பொய்யில்லாமல் வாழ முடிகிறது!

"மொதல்ல அம்மாவைப் பாத்துடறோம்" என்று நேன்ஸ் என்னை இழுத்துக் கொண்டு பின்கட்டுக்குச் சென்றான். ரங்கனின் அம்மாவுக்கு தொண்ணூறுக்கு வடக்கே வயது. கண் பார்வை அறவே கிடையாது. எலும்பை ஒட்டிப் போர்த்திய தோலாக ஈசிசேரில் படுத்திருந்தார். நேன்ஸ் அவருக்கு மிக மிக அருகில் சென்று, கையைப் பிடித்து மென்மையாக, "அம்மா!" என்றான்.

பேசச் சிரமப்பட்டாலும் பொக்கையாக முயன்று, நேன்சின் கையைப் பிடித்து வருடியபடி, "வந்..துட்..டியா   ரங்..கா!" என்றார்.

அந்தக் கணத்தில் எங்கள் எல்லாருக்கும் சேர்த்து, எங்கள் யாராலும் முடியாத அளவுக்கு, ரங்கனின் அம்மா நேன்சுக்கு நன்றி சொன்னதாகப் பட்டது.


      மலர்     

2013/05/10

மகரயாழ் தேவமார் முகமுரச வருமட்டும்



      சாயம்     






    சுதோஷ் வீட்டில் துக்கம் விசாரித்து இரவு எட்டு மணிக்குத் திரும்பியதிலிருந்து.. சாப்பிடத் தோன்றாமல் வத்சன் வீட்டுப் பால்கனியில் உட்கார்ந்தபடி.. நள்ளிரவைத் தாண்டிப் பேசிக்கொண்டிருந்தோம். தீர்ந்திருந்த ஜானி வாகர் ப்லூ லேபில் விஸ்கிப் புட்டி, அது கிளறிய நினைவுகளை அறியாமல் சாதுவாகக் கவிழ்ந்திருந்தது. இன்னமும் திறக்காத கடைசிப் புட்டி, நினைவுக் கரண்டியோடு காத்திருந்தது. வத்சனின் நுரையீரல் அனுப்பிய மார்ல்ப்ரோ வளையங்கள் உயரே எழுந்து காணாமல் போவது, மெல்லிய நிலவொளியில் சுவாரசியமானத் திகில் காட்சியாகத் தோன்றியது. பால்கனிக்கு வெளியே, அடர்ந்த மரங்களைத் தாண்டி ஜெயநகரின் அமுங்கிய சாலையொலிகள். பால்கனிக்கு உள்ளே, சுவரொட்டியப் படுக்கையறையில் அயர்ந்துறங்கும் ரம்யா வத்சனின் இடைவெளி விட்ட குறட்டையொலி. இடையே நான், வத்சன், இரவு, நிலவு, அமைதி. எங்கள் நினைவுகள் மட்டும் உரத்த ஓசையுடன்.

"ஆ! மறந்து போச்சுபா.. உங்க்ட்ட ஒண்ணு காமிக்ணம்" என்று உள்ளே போனான் வத்சன். திரும்பி வந்தவன் கைகளில் ஒரு கலர் படம், ஒரு எல்இடி ப்லேஷ் லைட், சில தலையணை போர்வைகள். படத்தை என்னிடம் தந்தான். "பால்கனி லைட் போட்டுமாடா?"

"வேணாம்.." அவன் நீட்டிய ப்லேஷ் லைட்டை வாங்கி அழுத்தினேன். படம் கண்களை நிறைத்தது. என் இரட்டைபாத் வட்டம். வருடாந்தரச் சாதனைப் பயணமாக ஒருமுறை கம்பெனி செலவில் கொடைக்கானல் போனபோது எடுத்த படம். இடம் நினைவில்லை. ஏதோ ஒரு ஏரி, அருவி, மலைப் பாங்கான இடம். உயர்ந்த பாறை மீதிருந்து நீரில் குதித்து விளையாடியதன் நினைவாக எடுத்த படம். அவனுடைய யாஷிகா காமெராவில் தானியங்கி டைமர் வைத்து, வெங்கட் அனைத்துமாட ஓடி வந்து சேர்ந்து கொண்டது நினைவு கிடாரை இதமாய்த் தட்டியது. நாங்கள் அனைவரும் அம்மணமாக எடுத்துக்கொண்ட ஒரே படம்.

நான் ரிச்சர்டை இரண்டு முறை அவனுடைய ஆபீசில் சந்தித்திருக்கிறேன். இந்த முதல் சந்திப்பில் அசுதோஷும் என் இரட்டைபாத் வட்டமும். அசுதோஷ் எங்கள் மேற்பார்வை அதிகாரி. ரிச்சர்ட் மேலதிகாரி.

"so.. young men.. you like skinny dipping?" என்றான் ரிச்சர்ட்.

கொடைக்கானலில் நாங்கள் அம்மணமாக அருவியில் குளித்தது பற்றி நிறைய பேர் புகார் கொடுத்திருந்தார்கள். ரிச்சர்ட் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டி எங்களை அழைத்திருந்தான்.

"ரிச்சர்ட்.. எங்க கிட்டே இருந்தது ஒரே டிரஸ் தான்.. அதை ஈரமாக்க விரும்பலே.." என்றான் விஜய்.

எனக்குச் சிரிப்பு வந்தாலும் அடக்கினேன். "அக்கம்பக்கத்துல யாருமே இல்லை ரிச்சர்ட்.. besides.. எங்க தனிப்பட்ட விஷயம் இல்லையா? நாங்க எந்த சட்டத்துக்கும் முரணா நடக்கலியே?"

"generally accepted decorum.. common decency.. அதுக்கு முரணா நடந்திருக்கீங்க.. law comes later.. இருபது இருபத்திரண்டு வயசாவுது உங்களுக்கு.. அம்மணமா இப்படி பொது இடத்துல குளிக்கலாமா?"

"கொடைக்கானல் போனதே எஞ்சாய் பண்ணத்தானே ரிச்?" என்றான் அசுதோஷ்.

"ஓ!" என்ற ரிச்சர்டின் பார்வையில் இருந்தது வெம்மையா பொறாமையா தெரியவில்லை. "அடுத்து ஆபீஸ்ல அம்மணமா சுத்துவீங்க போல?"

"as a punishment.. சொல்லுங்க, வேணும்னா சுத்துறோம்.." என்றான் விஜய், தயங்கி.

ரிச்சர்ட் வெடியாகச் சிரித்தான். "யாருக்கு punishment? you dirty rogues.." கண்ணீர் வரச் சிரித்தான். "கம்பெனி செலவுல இனி அம்மணமா சுத்தாதீங்க.. புரியுதா?" என்று எழுந்தான். அசுதோஷைத் தோளில் தட்டி, "get these mavericks out of my office" என்றான்.

ப்லேஷ் லைட்டை அடக்கி நொடி பொறுத்து மீண்டும் இயக்கினேன். வெளிச்ச அலையில் படம் படபடத்தது. "வத்சன்.. அன்னைக்கே ரிச்சர்ட் நமக்கு கல்தா கொடுத்திருக்கலாம்.. improper conduct.. அசுதோஷ் நம்மளைக் காப்பாத்தினான்.." என்றேன்.

"நா.. நாம ஒண்ணும் தப்பு செய்யலியேடா.. நாம அவனைக் கூப்பிடலியேனு ரிச்சர்டுக்கு பொறாமையாம்.. அசுதோஷ் சொன்னான்.."

சிரித்தேன். படத்தை இடது உள்ளங்கை மேல் தட்டினேன். "நம்ம வட்டத்துல மூணு பேர் தான் உயிரோட இருக்கோம்" என்றேன் கனமாக.

இன்னொரு புகை வளையத்தை விட்டபடி, "நம்ம நட்பு வரலாற்றின் கடைசி அத்தியாயங்கள்.. to the remaining chapters" என்று கீழே கிடந்த விஸ்கிப் புட்டியை உயர்த்தினான் வத்சன்.

"நம் மரண வேளையில், தேவர்கள் முகம் வருடி யாழ் மீட்டட்டும்" என்று என் வெறுங்கோப்பையை உயர்த்தினேன்.

"no..none of that bender shit.. எனக்கு தேவதைகள் மட்டும்.. அதுவும்.." நெஞ்சருகே இரு கைகளையும் குவித்துக் காட்டினான்.

"நல்லது. உன் மரண வேளையில், மார்வளம் மிகுந்த அழகு தேவதைகள் முகம் வருடி மகர யாழ் மீட்டட்டும்" என்றேன்.

மௌனம்.

"நேன்ஸ் வருவான்னு நினைச்சேன்.. நாளாச்சுப் பாத்து.. ரெண்டு சம்மர் முந்தி ந்யுயோர்க் வந்திருந்தான்.." என்றேன்.

"அசுதோஷ் சாவுக்கு வந்திருந்தான்.. வரும்போதே, 'ஒத்தா பூட்டானா'னு சொல்லிட்டே வந்தான்.."

"நேன்ஸ் மாறவே மாட்டான்.."

"he has changed alright.. பெரிய சிஇஓ ஆச்சே? கால ஓநாயின் நகம் அவன் உடம்பெல்லாம் தாறுமாறாக் கீறியிருக்கு.. அவனோட பேச்சும் அவனோட வளந்துடுச்சு .. from shockingly funny to appallingly hilarious.. பொண்டாட்டி பசங்களைக்கூட 'ஒத்தா இங்க வாங்க எல்லாரும்'னு கூப்பிடறான் தெரியுமா?"

மனம் விட்டுச் சிரித்தோம். சிறிது நேரம் நாங்கள் எதுவும் பேசவில்லை. திடீரென்று, "அசுதோஷுக்கு எய்ட்ஸ் தெரியும்ல.. you were in touch with him, right?" என்றான்.

"எய்ட்ஸ்னு தெளிவானதும் எனக்கு இமெயில் அனுப்பியிருந்தான். அப்பப்போ போன் செஞ்சிருக்கேன் till he was able to talk.. சாவுறன்னிக்கு எனக்கு ஒரு இமெயில் அனுப்பியிருந்தான்.. i think he knew"

நீண்ட மௌனம்.

"அசுதோஷ் பட்டாசார்ஜி.. நம் வட்டத்துக்கு குறுக்கே வந்த ஒரு கோடு" என்று ஒரு நீண்டப் பெருமூச்சு விட்டேன்.

"வட்டத்தை வெட்டிய கோடு" என்றான் வத்சன். "that fucker!"

சற்றே நீண்ட மௌனம்.

வத்சனின் கண்களைச் சந்தித்து, "i fucked him once" என்றேன் நிதானமாக.

"no.. i think he fucked you.. you just.. let him go.. நீ ஒரு தொடை நடுங்கி.."

"இல்லே, நான் சொல்றது வேறே..." என்று அவனிடமிருந்த பாதி சிகரெட்டை வாங்கித் தீர்க்கமாக உள்ளிழுத்தேன்.

என்னைக் கேள்விப் பார்வை பார்த்தவனிடம் சிகரெட்டைக் கொடுத்துப் புகையை வெளிவிட்டேன். ஆமென்றுத் தலையாட்டினேன்.

ஜோகாவில் கடைசி வாரம். படிப்பு முடிந்து, ப்ப்பெரிய கம்பெனி வேலையை ஏற்றுக்கொண்டாகிவிட்டது. என் வகுப்பிலேயே எனக்கு அதிகச் சம்பளம் என்பது எப்படியோ வெளியாகி அந்தப் பெருமை வேறே. வெள்ளிக்கிழமை இரவு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். என், எதிர் மற்றும் பக்கத்து அறைகளில் பார்ட்டி. என்னுடன் படித்தவர்கள், சில ஜூனியர்கள், கல்கத்தாவில் வசித்த சில சீனியர்கள், அலம்னை, சில நம்பத் தகுந்த புரபசர்கள்.. எனக்கு வேலை கொடுத்த அசுதோஷ், ஷர்மிளா முகர்ஜி.. நண்பர்களுடன் நான் துரத்திய அல்லது எங்களைத் துரத்திய சில அலிபொர், பவானிபொர், டாலிகஞ்ச் பிரதேச மேல்தட்டுப் பெண்கள்... என்று அழைத்திருந்தேன். ஹாஸ்டல் சமையல்காரருக்குப் போனஸ் பணம் கொடுத்து சமைக்கச் சொல்லியிருந்தேன். எடுபிடி டோபிவாலாவிடம் strictly prohibited சமாசாரங்களை strictly stealthyஆகக் கொண்டு வரச் சொல்லியிருந்தேன். விஷயம் வெளியில் தெரியாதிருக்க யார் யாருக்கு சம்திங் வெட்ட வேண்டுமோ, பிறழாமல் புரிந்திருந்தேன்.

மாலை ஐந்து மணிக்கு கூட்டம் சேரத் தொடங்கியது. கஞ்சா கல்யாணி மெக்டாவல் என்று நான் வாங்கி வைத்திருந்தவை தவிர, பவானிபொர் பெண்கள் கொண்டு வந்திருந்த ஹஷிஷ், எல்எஸ்டி மற்றும் உயர்தர ஷேம்பேன் என்று பார்ட்டி களை கட்டியது. அழையாமல் வந்திருந்த ஒரு டாலிகஞ்ச் பெண் என்னைக் கவர்ந்தாள். அவளைக் கணக்கு போட்டபடி, வந்தவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஷர்மிளா முகர்ஜி என்னை மெலிதாக அணைத்து, "கங்கிராட்ஸ்" என்றாள்.

ஷர்மிளா helpage என்ற இயக்கத்தின் இந்திய சேர்மன். முதியோர் பராமரிப்புச் சேவை நிறுவனம். என்னை வற்புறுத்தி வேலைக்குச் சேரச் சொன்னாள். ஒரு வருடத்தில் என்னை சிஇஓ ஆக்குவதாகச் சொன்னாள். சம்பளம் எவ்வளவு என்று சொன்னதும், "ஒரு நாளைக்கா?" என்றேன். சிரித்துவிட்டாள். வேலை வேண்டாமென்று அங்கேயே சொல்லிவிட்டேன். "please think it over" என்றாள். "you can't afford my thought" என்ற என் ஆணவமான பதிலைப் புன்னகையோடு ஏற்றாள். நான் எந்தத் தொடர்பையும் வெட்டியதில்லை. அவளைப் பிடித்திருந்தது. நல்ல பதவியும் செல்வாக்கும் வசதியும் உள்ளவள். என் வளர்ச்சிக்குப் பயன்படுவாள். "didn't mean to be rude. i will think it over" என்றுச் சமாதானமாக விலகினேன். என்றாலும் வாரம் எனக்கு ஒரு கார்டு அனுப்புவாள். ஏதோ ஒரு கிழம் எங்கோ அனாதையாகக் கிடப்பதாகவும் helpage இயக்கம் அது போன்றக் கிழங்களை மீட்டு ஆதரவும் அன்பும்.. வள வள என்று ஏதாவது எழுதியிருப்பாள்.

சுதாரித்து, "தேங்க்ஸ் ஷர்மிளா.. பார்ட்டிக்கு வந்ததுக்கு மகிழ்ச்சி. helpageல சேரலனு உங்களுக்கு வருத்தமில்லையே?" என்றேன்.

"வருத்தம் தான். உன் போல் திறமைசாலிகள் எங்களுக்குத் தேவை. ஆனால் உன் தினக்கூலி எங்களுக்குக் கட்டுப்படியாகாதே?" என்றுச் சிரித்தாள். "எங்களை மறக்காதே. another time.."

"நிச்சயமா.." என்று விலக, டாலிகஞ்ச் பெண் கண்ணில் பட்டு உறுத்தினாள். 'இவளைத் தொடமுடியுமா' என்று நினைத்தக் கணத்தில் என் முதுகில் யாரோ தொட்டார்கள். திரும்பினேன். "அசுதோஷ்! ஹலோ.. வெல்கம்.. வெல்கம்.." என்று வழிந்தேன்.

வலது கையால் என் கைகளை இறுக்கப் பிடித்து இடது கையால் என் தோளை அணைப்பது போல் தட்டி, "கங்கிராட்ஸ்" என்றான். "பார்ட்டி அட்டகாசமா இருக்கு.. இதெல்லாம் லீகலா?"

என்ன சொல்வது என்று விழித்த என்னிடம் "சும்மா தமாஷ்" என்றான். மறுபடியும் சிரித்து ஒரு சிறிய கவரைக் கொடுத்தான். பிரித்தேன். புத்தம் புது நூறு ரூபாய் நோட்டு. "to my best hire" என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தான். நன்றி சொன்னேன். "எஞ்சாய்" என்று விலகிய அசுதோஷ், வந்திருந்தோரிடம் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டு அங்கே இங்கே பேசிக் கூட்டத்தில் கரைந்தான்.

யாரோ ஸ்டீரியோ கேசட் ப்ளேயரைத் தட்ட, பானிஎம் பொலீஸ் ஒஸிபிஸா அபா என வரிசையாகப் பாடல்கள். நடுவே பப்பி லஹரியின் கூத்திசை. சிலர் ஆடத்தொடங்கினார்கள். கையில் சிகரெட் இல்லாத ஆணோ பெண்ணோ இல்லை. அவ்வப்போது டோபிவாலா "ஆவாஜ் கம்" என்று சொல்லிப் போனதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இருந்த ஒரே திவானில் மையமாக முழங்காலிட்டு, சட்டை துறந்த ஒரு பவானிபொர் பெண் மெல்லிய பெங்காலிப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றியிருந்த தாடிக்கார ஜூனியர்கள் அவளது குரலை ரசித்தார்களா அல்லது பாடலுக்கு ஏற்பக் குலுங்காமல் அசைந்த அவளுடைய சற்றே காம்பெழுந்த இளமுலைகளை ரசித்தார்களா என்றுத் தீர்மானமாகச் சொல்லமுடியவில்லை.

இரவு பரவத் தொடங்கியிருந்தது. டோபிவாலா கடைசி முறையாக வந்து "சப் டீக் பந்து" என்று ஐம்பது ரூபாயும் கட்டுச்சோறும் எடுத்துக் கொண்டு மறைந்தான். போதை தவிர்த்த சிலர் விடைபெறத் தொடங்கினர். நான் அளவாகக் குடித்திருந்தேன். கஞ்சா கலந்த ஒன்றிரண்டு சிகரெட் இழுத்திருந்தேன். பாத்ரூம் போகலாம் என்று அறைக்குள் போனபோது.. டாலிகஞ்ச் பெண்! ஒரு கையில் சிகரெட்டும் இன்னொரு கையில் தங்டி கபாபுமாக என் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். போதையிலிருந்தாள்.

"ஹாய்.." என்றேன். பதிலுக்குக் காத்திராமல் அவளருகே உட்கார்ந்தேன். "நான் உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்"

"நீ கவனிப்பதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்" என்றாள். "பலா உபாத்னா.." என்றாள் சிகரெட்டைக் காட்டி. "really good stuff"

உடைந்த பெங்காலியில் "தாயியாமி" என்றேன், என்னைச் சுட்டி. சிரித்தாள். அவளை நெருங்கி, "இது என்னுடைய படுக்கை.. meant for good stuff too.. பலா உபாத்னா" என்றேன். அவளைத் தொடப் போனபோது சரிந்தாள். போதையின் உச்சம். அவள் கையிலிருந்ததைப் பிடுங்கி எறிந்து, படுக்கையில் அவளைச் சீராகக் கிடத்தி, மின்விசிறியைத் தட்டிவிட்டு ஒரு பெருமூச்சோடு வெளியே வந்தேன்.

அறையோரமாகச் சுவரில் சாய்ந்து, கால் நீட்டி அமர்ந்திருந்தான் அசுதோஷ். "ஹாய்.. நீ கிளம்பியிருப்பேனு நினைச்சேன்" என்றேன்.

"இல்லே.. உன்னை மாதிரி கம்பெனி கிடைக்காததுனால ஐ'ம்.. ஜஸ்ட் தனியா.. ரிலேக்ஸ் பண்ணிட்டிருக்கேன்.. மால் அச்சா ஹை" என்று விஸ்கியைக் காட்டினான். "நீ உன் நண்பர்களைக் கவனி.. நாம் பிறகு பேசலாம்.. ஐ'ம் ஓகே பை மைசெல்ப்"

"நோ.. அந்த நட்பெல்லாம் இந்த வாரத்தோட முடிஞ்சுரும்.. நீ என்னுடைய எதிர்காலம்.." என்றேன்.

"தாராலொ பந்து!" என்றான். "astute. அந்த டாலிகஞ்ச் சோக்ரி என்ன ஆனா? காம்கி நஹி?"

"big boob, small brain.." என்றேன். அசுதோஷைத் தெரிந்து கொள்வது எனக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்று அந்தக் கணத்தில் தீர்மானமாக உணர்ந்தேன். "நீ பார்ட்டிக்கு வந்தது எனக்குப் பெருமை.. பசங்க காயுறாங்க.. இங்கே இரைச்சலா இருக்கு.. எதிர் ரூமுக்குப் போகலாம்" என்றேன்.

நாலைந்து சிகரெட்களையும் ஒரு விஸ்கி பாட்டிலையும் எடுத்துக் கொண்டு, எதிர் அறையில் யாருமில்லாததால் அங்கே போனோம்.

"யு நோ.." இழுத்தான் அசுதோஷ், சோபாவில் சரிந்தபடி. "கேம்பஸ் இன்டர்வ்யூல உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சுது. ஸ்ட்ரேடஜி புதிர்கள் அத்தனைக்கும் சரியான பதில் சொன்னே; அது மட்டுமில்லே வித்தியாசமான, எங்களுக்கே தெரியாத பதில்கள் சிலவற்றைச் சொன்ன ஒரே ஆள் நீ தான். வெரி ப்ரைட்"

"என்னுடைய அறிவுக் கூர்மையின் ரகசியம்" என்றேன், கஞ்சா சிகரெட்டையும் விஸ்கி பாட்டிலையும் காட்டி. சிரித்தேன். அவனுக்கு இடதுபுறம் சோபாவில் சரிந்து உட்கார்ந்தேன்.

எங்களுக்கிடையே நிறையப் பொது ரசனைகள் கண்டோம். ஷேக்ஸ்பியர், வோடவுஸ், டூமா, இங்க்ரிட், சேப்லின், பீடில்ஸ், அமிதாப், பாசு சேடர்ஜி.. மேக்பெத், ஜீவ்ஸ், ஊஸ்டர், கேஸப்லான்கா, மாடர்ன் டைம்ஸ், தீவார், மான்டி க்ரிஸ்டோ.. என்றுப் பேசினோம். அவன் உலக சினிமா, அரசியல் பேசியதை இமைக்காமல் கேட்டேன். ஷா, கார்டர், ரேகன் என்று இரானியப் பணயம் பற்றி வாய் பிளக்க விவரங்கள் சொன்னான். அவன் அமெரிக்கச் சுயநலத்தைச் சாடியபோது நானும் சோசலிஸ்ட் போல் உணர்ந்தேன். pink floydன் dark side of the moon பின்புலம் சொன்னான். லெனன் மரணத்தின் அநியாயத்தைச் சொல்லி அழுதபோது நெஞ்சைக் கட்டியது... மிக நெருங்கி என் கைகளைப் பிடித்தபோது, 'இவன் என் பாஸ்' என்ற எண்ணம் கரைந்து சமன் போல் உணர்ந்தேன்... எனக்குப் பழக்கமில்லாத சோல்சனிட்சின் எழுதிய புத்தகங்கள் பற்றிப் பேசினான். ஜனதா கட்சி உடைந்ததன் பின்னும் சமீப காங்கிரஸ் வெற்றியின் பின்னுமிருந்த அரசியல் தந்திரங்கள் பற்றிப் பேசினான். ராஜ்நாராயணுக்கு ஆதரவாக ரே பரேலியில் பிரசாரம் செய்ததாகச் சொன்னான். சஞ்சய் காந்தியின் மரணம் பாதித்தது என்றான். "சாஜிஷ்.." மிக நெருங்கி உடல் பட ஒட்டி உட்கார்ந்தேன். எனக்கும் sophistication உண்டு என்று அறிவிக்க கஜல் பற்றி.. பங்கஜ் உதாஸ், ஜக்ஜித் சிங்க் என்றதும் என் மனம் புண்படாது அழகாகச் சிரித்தான். படே குலாம் அலிகான் என்று நான் கேள்விப்பட்டிராத பெயர் சொல்லிப் பதினைந்து நிமிடங்களில் என் கஜல் அறிவை மேம்படுத்தினான். மெல்லிசையில் சலீல் சௌத்ரிக்கு ஈடில்லை என்றான். 'b,v' குழப்பாத அவனது நளின ஆங்கிலப் பிடிப்பு ஆச்சரியம் எனில், அழகான ஹிந்தியில் அவ்வப்போது பேசியது போதை. முகமது ரபியை விட கிஷோர்குமார் பிடிக்கும் என்றான். "அய் தில் ஹை முஷ்கில் ஜீனா யஹான்" என்று மனங்கவரப் பாடினான்... மெல்ல என்னை மென்மையாகக் கன்னத்தில் முத்தமிட்ட போது நன்றாக இருந்தது... பொறுமையாக உதட்டில் முத்தமிட்ட போது இனிமையாக இருந்தது... artful seduction.. அவன் பின்புறத்தைத் தேடித் தடவினேன்.

என் கைகளை விலக்கி, "this is getting awkward.." என்றான்.

"i like awkward" என்றேன், அவன் கழுத்தில் உரசி.

மிச்சமிருந்த விஸ்கியை பாட்டிலோடு ஒரு மிடறு குடித்து என்னிடம் கொடுத்தான். "எனக்குத் தெரியாமப் போனது ஆச்சரியம். எனக்கு இருபத்தாறு வயசாவுது. பருவம் வந்த நாள்லந்து நான் ஹோமொ, அதே மாதிரி மத்த ஹோமொசெக்சுவல்களை என்னால் சுலபமாக அடையாளம் காண முடியும். அந்தப் பெண்ணைத் துரத்துறே.. என்னையும் தடவுறே.. நீ ஹோமொசெக்சுவலா? ஆச்சரியமா இருக்கு"

சிரித்தேன்.

"நீ சிரிப்பது புறாக்கள் படபடத்து எழுவது போல் அழகாக ஒலித்தாலும், காரணம் கேட்கத் தோணுது"

"நான்-வெஜிடேரியனானு கேட்குற மாதிரி இருக்கு, உன் கேள்வி.."

"புரியலியே?"

"எங்க ஊர்ல சில பேரை 'அவுரு என்வி'ம்பாங்க.. அதாவது நான்வெஜ்காரர்கள் வெஜ் சாப்பிடமாட்டாங்க என்கிற மாதிரி பிரிப்பாங்க.. நீ ஹோமொசெக்சுவலானு கேட்டதும் எனக்கு அதான் நினைவுக்கு வந்தது.."

"good example, bad analogy.. சாப்பிடுவது காய்கறிகளா மாமிசமா என்பதைப் பொறுத்து அப்படிச் சொன்னாங்க.. அதற்கும்.."

"சிக்கன்ல வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு கலந்து செய்தா.. அது வியா என்வியா? என்வினா அதுல இருக்குற சிக்கனை மட்டும் சாப்பிடணுமா?"

"okay.. good analogy, bad example then" சிரித்தான். "சரி, ஹோமொ ஹெடரொ இதுல யார் வெஜ் யார் நான்வெஜ்..? அப்போ வெங்காயம் தக்காளியோட சிக்கன் சாப்பிடுற நீ யார்? bisexual?"

"தெரியாது. i am.. just sexual. sexல் ஹோமொ ஹெடரொ என்று பேதம் பார்ப்பதில்லை என்பது மட்டுமே தெரியும்" என்றேன். "இது தான் செக்ஸ் என்று ஒரு குழப்ப வரையறைக்குள் சிக்க விரும்பவில்லை.. எனக்கு இன்னும் அத்தனை வயதாகவில்லை.. செக்ஸ் என்றால் என்னவெனறு தெரிந்து கொள்ளும் சோதனைக் கட்டத்தில் தான் இன்னும் இருக்கிறேன்.."

"interesting.. பொதுவா நானறிந்தத் தென்னிந்தியர்கள்.. pardon me.. ரொம்ப கவனமாக நேர்க்கோட்டில் போகிறவர்கள்.. சுற்றி நடப்பது தெரியாத, பொருட்படுத்தாத, closed-mind righteous folks.. won't take a step unless pushed.."

"sexual discretionல தெற்கு வடக்கு என்று எதுவும் இல்லை.. உலகமெங்கும் ஒரே மொழி. அர்ஜூனன்-க்ருஷ்ணன் உறவை, உங்களைப் போல் நாங்களும், வேறு எந்தக் கோணத்திலும் பார்க்கத் தயங்குபவர்கள். இவனுக்கும் அவனுக்கும், இருப்பதற்கும் இல்லாததற்கும், சமூகத்துக்கும் சமயத்துக்கும் பயந்து இயல்பான உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறவர்கள் இந்தியாவெங்கும்.. உலகெங்கும் உண்டு. இருந்தாலும் நீ சொல்வது புரிகிறது. வடக்கை விட தெற்கே அதிகமா hypocrites இருக்கலாம். you know.. என் குடும்பத்தில் சில closet homosexuals உண்டு. என் உறவினர்.. என்னைவிட இருபது வயசு மூத்தவர்.. ஒரு தடவை.. விடுமுறைக்குப் போயிருந்தேன்.. பதினாறு வயசிருக்கும்.. தூங்கிட்டிருந்தேன்.. திடீர்னு விழுப்பு வந்து.. பார்த்தா.. this uncle.. என்னோட கருவியைப் பிடிச்சு உருவிட்டிருக்காரு.. that was my first real experience with a man.." அசுதோஷுடன் என் நிழல்களை இயல்பாகப் பகிர முடிந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

"do you feel guilty?"

"guilty? no. violated? yes"

"makes me sick.. that is not homosexual.. that is hideously perverted"

"i was bred in perversion... my cross of burden until tormented shadows lead to the pulpit of torturous death"

"shakespeare சொன்னதா?"

"இல்லை, நான் சொன்னது"

"குடும்பத்திலே அல்லது சமூகப் பெரியவங்க யாருடனாவது இதைப் பற்றிப் பேசினாயா?"

"யார் கிட்டே இதைப் பத்தி என்ன சொல்ல? என் ஆசிரியர் ஒருத்தர் கிட்டே பேசினேன். கடவுள் விதினு என்னென்னவோ சொன்னாரு.. எல்லாம் ஆண்டவன் விதிச்சது போல நடக்குமாம், எப்படியிருக்கு? oh, god! that i might read my book of fate.."

"நீ சொன்னதா?"

"இல்லை, shakespeare சொன்னது"

என்னிடமிருந்த சிகரெட்டை வாங்கி இழுத்து விஸ்கி பாட்டில் மீது வைத்தான். "you have turned out okay.." என்று என்னை நெற்றியில் முத்தமிட்டான். மூக்கில். உதட்டில். "பகுத் லம்பா சபர் கியே ஹைன் ஆப்" என்று என்னைத் தோளோடு இறுக்கி இழுத்துக் கொண்டான்.

இடது கையால் அவன் கைகளைக் கோர்த்தேன். திரும்பி வலது கையால் அவன் கன்னங்களை வருடினேன்.

"is there a man in your life?" என்றான்.

"isn't" அவன் கண்களைச் சந்தித்தேன்.

"woman?"

"was" அவன் மூக்கில் உரசினேன்.

"ah.. அதனால் தான் ஆண்கள் மேலென்று நினைக்கிறாயா?"

"உன்னை மேலேன்று நினைக்கிறேன், அவ்வளவு தான்.. நீ ஆண் என்பது தற்செயல்"

"உன் பாஸ் என்பதாலா? என்னுடன் படுத்தால் ஏதாவது சலுகை கிடைக்கும் என்று நினைக்கிறாயா?"

"இருக்கலாம். நாளைக்கு நான் உன் பாஸானாலும், உன்னுடைய கவர்ச்சி என்னுள் நிலைக்குமென்றே நினைக்கிறேன்.."

"உன்னுடைய துணிவு எனக்குப் பிடித்திருக்கிறது"

"நன்றி" என்று அவனை மெல்ல முத்தமிட்டேன்.

"இந்த வகைச் சேர்க்கையின் முரண் பற்றி உனக்குக் கவலையில்லையா? இது தப்பு பாவம்னு எதுவும்.." என்று என் இடதுகையை தன் மார் மேல் வைத்துக் கொண்டான்.

பலமாகச் சிரித்தேன். "the immoral, the divine.. inseparable till the end of time"

"shakespeare சொன்னதா?" என்று கேட்டு என்னை அணைத்தான்.

"no, நான் சொன்னது" என்று அவனைப் பதிலுக்கு அணைத்தேன். "பாவக்கணக்கு போடவேண்டிய அவசியமே இல்லை. nothing is good or bad, thinking makes it so"

"that your own?"

"no, shakespeare".

வத்சனுக்குச் சில நிமிடங்கள் பிடித்தது எல்லாவற்றையும் ஜீரணிக்க. "whoa! நீயும் அசுதோஷும் நெருக்கம்னு தெரியும். ஆனா படுக்கை நெருக்கம்னு இது வரைக்கும் தெரியாது.. குட்நெஸ் மச்சி! எனக்கு என்ன சொல்றதுனு தெரியலே.." என்றான்.

"சொல்றதுக்கு எதுவும் இல்லே.." என்றபடி பால்கனிச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தேன்.

"காதலிச்சீங்களா? how long?"

"just that one time. வேலைக்குச் சேர்ந்த பிறகு உறவாடுவதில்லை தொடுவதில்லை என்று அந்த இரவே தீர்மானித்தோம்.. strictly platonic after that night. but what a night! அந்த இரவுக்குப் பிறகு நான் கவிதை படிப்பதையே நிறுத்திட்டேன் தெரியுமா?"

"அப்புறம் என்ன ஆச்சு.. இவ்வளவு நெருக்கமா இருந்து, he turned against you..".

ரிச்சர்டை இரண்டாவது முறை அவன் அலுவலகத்தில் சந்தித்த போது நானும் அசுதோஷும் மட்டும்.

"young man.. i am disappointed.. நீ ஒரு மாடல் ஆபீசராக வருவாய்னு நினைச்சேன்.. இப்படி ஒரு குற்றவாளியாக மாறுவாய்னு நினைக்கவேயில்லை.. you have betrayed our collective trust.."

"ரிச்சர்ட்.."

"எதுவும் பேசாதே. நீ செய்திருப்பது குற்றம். உன்னை மட்டுமல்ல, எங்க எல்லாரையும் ஜெயிலுக்கு அனுப்பக் கூடிய குற்றம். என்ன ஆகுமோ தெரியாமல் விழிக்கிறேன். நாங்கள் திரும்பி வரும் வரையில் இந்த அறையிலேயே இரு" என்று ரிச்சர்டும் அசுதோஷும் அடுத்த அறையில் கூடியிருந்த சிலருடன் பேசப் போனார்கள்.

நான் தலைகுனிந்தபடி இருந்தேன்.

நான் செய்தது தப்பு. தெரிந்தே செய்தது. விளைவுகளின் தீவிரத்தைப் பற்றிப் புரியாமல் செய்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, என் தொழிலில் சாதாரணமாக நிறைய பேர் செய்வது தானே என்றப் போலிச் சமாதானத்துடன் செய்தது.

நாங்கள் விரும்பி ஏற்ற fmcg, ஒரு விசித்திரமான தொழில். எங்கே எது எப்படி எதனால் விற்கிறது, மக்கள் ஏன் வாங்குகிறார்கள் என்பதற்கான காரணம் சரிவர நியமிக்க முடியாமலே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் மந்திரத் தொழில். ஒரு மார்க்கெட்டில் காபிப்பொடி விற்காது, தேயிலை விற்கும். சூப் விற்கும் கெச்சப் விற்காது. ஒரு இடத்தில் பற்பசை விற்கும், டூத் பிரஷ் விற்காது. அரை கிலோ பேகட் விற்கும், நூறு கிராம் பேகட் விற்காது. ஆனால் எல்லா மார்க்கெட்டிலும் எல்லாவற்றையும் இத்தனை கேஸ் விற்கவேண்டும்.. மக்கள் வாங்குகிறார்களோ இல்லையோ, எல்லாப் பொருளுக்கும் எல்லா மார்க்கெட்டிலும் கோட்டா. கோட்டாப்படி கடைகளுக்கு விற்கவில்லையென்றால் கல்தா.

வினியோகஸ்தர்களுக்கு நாங்கள் விற்றதை மறுபடி மார்க்கெட் கடைகளுக்கு விற்க வேண்டும். இந்த மறுவினியோகம் தான் fmcg கம்பெனிகளின் கார்கில். market share யுத்தங்களின் பீரங்கி. கம்பெனியின் நிகர லாபத்துக்கு வேர். கடைகாரர்களோ விற்பனையாகும் சரக்கை மட்டுமே கேட்பார்கள். எங்களுக்கோ எல்லாவற்றையும் விற்றாக வேண்டும். பரவலான ஒரு மறுவினியோகத் தந்திரம், அடாவடி. வத்சனின் மார்க்கெட்டில் பால்பொடி அநியாயத்துக்கு விற்கும். சூப் கெச்சப் விற்காது. வத்சன் கடைக்காரர்களுக்கு இத்தனை கேஸ் சூப் கெச்சப் வாங்கினால் இத்தனை கேஸ் பால்பொடி கொடுப்பது என்று பிடிவாதமாக இருப்பான். ரங்கன், உமேஷ், விஜய் எல்லாருமே இதைக் கடைபிடித்தார்கள். விற்காத சரக்கை கடைக்காரர்கள் ஆறு மாதம் கழித்துத் திருப்புவார்கள். இது போதாது என்று அக்கம்பக்கத்து எல்லைக் கடைகளிருந்தும் சரக்கு வரும். அனேகமாக எல்லாமே எங்கள் வினியோகஸ்தர்களிடம் வந்து சேரும். அசுதோஷின் மேற்பார்வைப் பகுதியின் நிகர லாபம் இதனால் பாதிக்கப்பட்டது.

இப்படி காபி, சூப், கெச்சப், தேயிலை, பற்பசை, பால்பொடி, ஊறுகாய் என்று விற்காதப் பொருட்களைச் சேதமாக விடாமல், எங்கள் நிகர லாபமும் குறையாமல், சுலபமாகச் சென்னையில் நிழலாக விற்க முடியுமென்றுத் தோன்றியது எனக்கு.

அசுதோஷ் அந்த வருட அகில இந்திய விற்பனை மேலதிகாரிப் போட்டியில் முன்னணியில் இருந்தான். 100% மறுவினியோகம், அதாவது எந்த வித சரக்கு வாபசும் இல்லையென்றால் போட்டியில் வெல்வதோடு நில்லாமல் கம்பெனியின் இந்திய வரலாற்றில் நிகழாதச் சாதனை படைப்பான். இது "நடைமுறைக்கு ஒத்து வராத, ஏங்கவைக்கும் கனவு" என்று என்னிடம் சொன்னான். "ஒரு முறையாவது நனவாக்குகிறேனே?" என்றேன். அசுதோஷ் சாதனை படைக்க விரும்பினேன். என் யோசனையைச் சொன்னேன். "திரும்பிவந்தக் கடைச்சரக்குகளைச் சென்னைக்கு ரெயிலில் கொண்டு போகிறேன். சென்னையில் ஆவடி அம்பத்தூர் அருகே இறங்கிகொண்டால் ஒரு பிரச்சனையும் இருக்காது. என் ஆவடி விநியோகஸ்தர் மிகுந்த அரசியல் செல்வாக்குள்ளவர். பேட்டை ரௌடி. எனக்கு நல்ல நண்பர். சகோதரன் போல. அவர் வந்து சரக்கை எடுத்துக்கொண்டு பணத்தைக் கொடுத்துவிடுவார். சென்னையில் இந்தப் பொருட்கள் சற்றே விலையதிகம் என்பதால் அவருக்கு கொள்முதலில் லாபம் வேறே.. யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லை.. மார்க்கெட்டிலும் நமக்கு ஒரு control கிடைக்கும்".

அசுதோஷ் சம்மதிக்க, நான் அவ்வப்போது சரக்குடன் சென்னைக்குப் பயணமானேன். அந்த வருடம் அசுதோஷுக்கு மிகப்பெரியப் பரிசாகத் தங்க மெடல் கிடைத்தது. என்னையும் அசுதோஷையும் தவிர இந்த வெற்றியின் ரகசியம் யாருக்கும் தெரியாது.

ருசி கண்ட பூனையாதலால் இந்தக் கடத்தல் அடுத்த வருடமும் தொடர்ந்தது. ரிச்சர்ட் மார்கெட் விசிட் வந்தால் வியந்து பொதுவில் விசாரிப்பான். அசுதோஷ் என்னைப் பெருமையாக முன்னிறுத்துவான். எனக்குக் கிறங்கும். இரண்டாம் வருடம் ரிச்சர்டுக்குத் தங்க மெடல். தில்லி பம்பாய் லன்டனிலிருந்து அதிகாரிகள் வந்தார்கள். 'அசுதோஷின் வட்டம் அத்தனை பொருட்களையும் சரக்குத் திருப்பம் இல்லாமல் எப்படி விற்கமுடிகிறது!' என்று சிவந்த மூக்கில் விரல் வைத்து வியந்தார்கள். ரிச்சர்டுக்கு தென் கிழக்காசிய அளவில் 'மார்கெட் ஆல் ரவுண்டர் ஆப் தி இயர்' பதக்கமும் பரிசும், ஒரு வார ஹாங்காங் உல்லாசப் பயணமும் கிடைத்தது.

வெற்றியின் போதை அலாதியான கடிவாளம். திக்குத் தெரியாத அதிலாபாதில் கெச்சப் எப்படி இத்தனை விற்கிறது என்று எவரும் ஆராயவில்லை. நான், அசுதோஷ் மற்றும் இந்தக் கடத்தலில் பங்கேற்ற முக்கிய வினியோகஸ்தர், கடைக்காரர்கள் எல்லோருமே வெற்றிக் குமிழியுள் மிதந்தோம். எந்தச் சரக்கும் சேதமடையாமல் விற்கிறது என்ற பரந்த நோக்கில் இது சரியென்று பட்டாலும், மார்க்கெட் கண்ணோட்டத்தில் இது பிழை. எல்லை கடந்து விற்பது கடத்தல். குற்றம். ஆனால் வெற்றியின் ஒளி அறிவுக்கண்களைச் சுலபமாக கூசச் செய்துவிடும் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் கவலைப்படவில்லை. ஆண்டவனே வந்தாலும் ஒன்றும் பிடுங்க முடியாது என்று இருந்தேன். இருந்தோம்.

ஆண்டவன் வரவில்லை. ஆடிட்டர்கள் வந்தார்கள்.

எங்கே எப்படி யாரால் துப்பு கிடைத்தது என்பது தெரியாது. ஆவடியில் இறங்கியதும் கம்பெனி ஆடிட்டர்கள், சுங்கவரி, வணிகவரி ஆடிட்டர்கள் என்று சிறிய மானாடு போல் கூட்டம். இரண்டு தொப்பை போலீஸ்காரர்கள் என்னைப் பிடித்தார்கள். ஆடிட்டர்கள் வரிசையாக என் குற்றங்களைச் சொல்லி அங்கங்கே கையெழுத்து பெற்றார்கள். பிறகு இன்ஸ்பெக்டர் போலிருந்த பெண் என்னை அன்றிரவு ஆவடிக் காவல் நிலையத்தில் சிறைவைப்பதாகச் சொன்னாள். தற்செயலாக அங்கு வந்தது போல் நடித்த என் ஆவடி நண்பர் கொடுத்த ஜாமீன், எங்கள் கம்பெனி ஆடிட்டர்கள் கொடுத்த உத்தரவாதங்களின் பெயரில், 'ஓடிப்போக நினைத்தால் என்ன ஆகும்' என்பதைத் தெளிவாகப் பயமுறுத்திய இன்ஸ்பெக்டர் என்னை மறுநாள் எங்கள் கம்பெனி அலுவலகத்துக்கு வரச்சொன்னாள்.

ரிச்சர்டும் அசுதோஷும் திரும்பிய போது அரைமணிக்கு மேலாகியிருக்கும். அசுதோஷ் பேசினான். "உன் மேற்பார்வை அதிகாரியான எனக்கோ அல்லது மேலதிகாரியான ரிச்சர்டுக்கோ தெரியாமல், சட்ட விரோதமாகவும் கம்பெனி விதிமுறைகளுக்குப் புறம்பாகவும், உன் விருப்பத்துக்கு நீயே தீர்மானித்துப் புரிந்த இந்த அத்துமீறல்களினால் கம்பெனிக்குப் பெரும் நஷ்டமும் அவமானமும் ஏற்பட்டுள்ளது" என்றான்.

நான் திடுக்கிட்டேன். "அசுதோஷ்.. உனக்குத் தெரியாமலா.."

ரிச்சர்ட் என்னை அமைதியாக இருக்கச் சைகை செய்தான். அசுதோஷ் தொடர்ந்தான். "சட்ட ஆலோசனையின் பெயரில் உன்னைக் காவலில் ஒப்படைக்க வேண்டுமானாலும், உன் குடும்ப நிலை கருதி போலீஸ் கேஸ் எதுவும் பதியாமல், உன்னை உடனடியாக வேலை நீக்கம் செய்யும்படி சிபாரிசு செய்கிறேன்".

ரிச்சர்ட், "உன் அதிகாரி என்றப் பொறுப்பில் அசுதோஷ் சொன்ன சிபாரிசை ஏற்று உன்னை உடனடியாக வேலையை விட்டு நீக்குகிறேன்" என்றான். அசுதோஷிடம் "நீ போகலாம்" என்றான்.

"அத்துமீறல்களினால் ஏற்பட்ட அத்தனை நஷ்டங்களையும் கம்பெனி ஏற்கும்" என்று சொன்ன ரிச்சர்ட், அடுத்த ஐந்து நிமிடங்களில் என்னிடம் நூறு கையெழுத்துக்களும் உறுதிமொழிகளும் வாங்கிக்கொண்டு, பதிலுக்கு என் பெயரில் போலீஸ் கேஸ் எதுவும் பதிவு செய்யாமல் வேலையை விட்டு நீக்கினான்.

நான் வெளியே வந்தபோது அசுதோஷைக் காணவில்லை.

"bastard!" என்றான் வத்சன். "இந்தியாவுல எந்த fmcgம் உன்னை வேலைக்கு எடுக்க முடியாம செஞ்சுட்டான் பாரு.. விஷயம் தெரிஞ்சதும் எங்களுக்குத் தாங்கலேடா... இதைப் பத்தி எங்க கிட்ட சொல்லியிருக்கலாமேடா? நாங்க சாட்சி சொல்லியிருப்போமே? உமேஷ் விவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வந்து சொன்னப்போ.. it was late.. you were destroyed.."

"the fact is அசுதோஷ் நினைச்சிருந்தா அன்னிக்கு நான் ஜெயிலுக்குப் போயிருக்கலாம்.. என் வாழ்க்கையே நாசமாகியிருக்கும். உங்க யாராலயும் எதுவும் செஞ்சிருக்க முடியாது. உமேஷ் கிட்டே சில விவரங்களை நான் தான் சொன்னேன்.. நான் தற்கொலை செஞ்சிக்குவேனோனு.. அந்த எண்ணம் என் மனசுல இருந்துச்சு.. அதை அவன் எப்படியோ தெரிஞ்சுகிட்டு என் கூடவே நிழலாட்டம் without sleep இருந்தான்.."

"லூசு.. அசுதோஷும் ரிச்சர்டும் உடந்தை.. அவங்க சூத்து பழுத்துறுமேனு பயந்து உன்னை மாட்டிவிட்டாங்க.. they sequestered you.. it all happened so fast.. இதுல அசுதோஷ் உங்கிட்டே மன்னிப்பு கூடக் கேட்காதது.."

"he did. சாவுறன்னிக்கு இமெயில் எழுதினானு சொன்னனே... அதுல வரிவரியா, துடிக்கத் துடிக்க, மன்னிப்புக் கேட்டிருந்தான். நோயினால வாடுறதையும், வலி தாளாம துடிப்பதையும்.. நாக்கு தொண்டைக்குள்ளயே அழுகத் தொடங்கிடுச்சாம்.. ஒவ்வொரு கணமும் மரணத்தை வேண்டினாலும் இழுத்துக்கிட்டே இருந்ததாகவும், என்னுடைய மனமார்ந்த மன்னிப்பு மட்டுமே அவனுக்கு மரணத்தைக் கொடுக்கும்னும் எழுதியிருந்தான். மரண தானம் கேட்டு ரொம்பக் கெஞ்சி எழுதியிருந்தான். 'i forgive you'னு பதில் எழுதினேன். 'கருணைத் தேன் தோய்ந்த உன் மன்னிப்பே என் உயிரணைக்கும் மருந்து. தகுதிகளுக்கு அப்பாற்பட்ட உனக்கு, தகுதியற்றவனின் நன்றி'னு அவன் பதில் போட்டான். மறுநாள் he passed away.. அடுத்த நாளே மரணம்!"

நீண்ட மௌனம்.

"things could have been different.." என்றேன் நிதானமாக.

"how so?"

"வத்சன்.. நானும் அசுதோஷும் சேர்ந்திருந்த அன்னிக்கு ராத்திரி.. 'வேலைக்குச் சேர்ந்த பின்னே தொடுவதில்லைனு தீர்மானிச்சோம்'னு சொன்னனே.. he offered to quit his job for me.. for me! அவன் வேறே வேலை தேடிக்கொள்வதாகவும் எங்கள் நெருக்கத்தைத் தொடர விரும்புவதாகவும் சொன்னான்.. என் பதிலுக்கு ரெண்டு நாள் அவகாசம் தரதா சொன்னான்.. நான் தேவையில்லைனு ஒதுக்கிட்டேன்.. என்னால உறவுக்கு commit பண்ணமுடியாதுனு சொன்னேன்.. besides, அப்போ எனக்கு எந்த மாதிரி உறவு வேணுமுன்னு ஒரு ஐடியா கூட இல்லாமருந்தேன்.."

திடீரென்று அழத் தொடங்கினேன்.

விக்கலாகத் தொடங்கிய அழுகை நெஞ்சைப் பிழிந்து துடித்துத் துடித்து வெளிவந்தது. குலுங்கிப் புரண்டு நெஞ்சிலடித்து அழுதேன். வத்சன் திகைத்தாலும் என்னைத் தடுக்கவில்லை. என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. பொங்கிப் பொங்கி வந்தது. வத்சன் என்னருகே வந்து என் தோள்களை மெள்ள அழுத்தினான். அமைதிப்படுத்தினான். அவன் தோள்களில் சாய்ந்தபடி அழுது முடித்தேன்.

"i am sorry.. நீ அசுதோஷை இத்தனை நேசிச்சது எனக்குச் சத்தியமா தெரியாதுடா.." என்றான்.

"எல்லாமே இப்போ கண்ணீர்ல கரைஞ்சு போச்சு.." என்றேன். "i feel better"

சிறிது நேர அமைதி.

"i cannot forgive him.. உன்னுடைய பெருந்தன்மை அவனுடைய வலி நிவாரணியாப் போச்சு.. பெருந்தன்மையா முட்டாள்தனமா தெரியலே.. அவன் இன்னும் துடிச்சிருக்கணும்.." என்றான் வத்சன்.

"let go, i did.."

"talk about death wish! on a lighter vein, உன்னோட இமெயில் தான் அசுதோஷோட மரண யாழிசை"

புன்னகைத்தேன்.

வத்சன் பெரிதாகச் சோம்பல் முறித்தான். "என் மரண ambiance கவலை நீங்கியது நண்பா!" ஏனோ அடுக்காய்ச் சிரித்தான். "கற்பனை செஞ்சுப் பார்த்தேன்.. தேவதைகளின் யாழிசை, சுமைகளைக் கரைக்குதோ இல்லையோ நிரந்தரமாக் கண்மூட இதமாகவே இருக்கும்னு தோணுது.." என்றவன், தலையணையைப் பொருத்தி பால்கனியில் வசதியாகப் படுத்தான். "i need to crash.. மணி அஞ்சாவுதுடா.. what a night! வருஷக் கணக்காகும்டா இது செறிக்க.." என்றான். தன்னிடமிருந்தப் போர்வையால் தலைகால் மூடிக் கொண்டான்.

"தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும், அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்"

"shakespeare சொன்னதா?" சிரித்தான்.

"ஆமாம்.. மறுபிறவியில்" என்றேன்.

சில நிமிடங்களில் வத்சனின் குறட்டையொலி கேட்டது. பரவிக் கிடந்த குப்பையை ஒதுக்கித் தள்ளினேன். இன்னொரு போர்வையை வத்சன் மீது போர்த்தினேன். சுவரோரமாகத் தலையணையைப் பொருத்தி, சாய்ந்து, இழுத்துப் போர்த்துப் படுத்தேன். வெளியே ஜெயநகர் விழிக்கத் தொடங்கியது. நான் உறங்கத் தொடங்கினேன்.

      தோஷம்