அசுதோஷ் வீட்டில் துக்கம் விசாரித்து இரவு எட்டு மணிக்குத் திரும்பியதிலிருந்து.. சாப்பிடத் தோன்றாமல் வத்சன் வீட்டுப் பால்கனியில் உட்கார்ந்தபடி.. நள்ளிரவைத் தாண்டிப் பேசிக்கொண்டிருந்தோம். தீர்ந்திருந்த ஜானி வாகர் ப்லூ லேபில் விஸ்கிப் புட்டி, அது கிளறிய நினைவுகளை அறியாமல் சாதுவாகக் கவிழ்ந்திருந்தது. இன்னமும் திறக்காத கடைசிப் புட்டி, நினைவுக் கரண்டியோடு காத்திருந்தது. வத்சனின் நுரையீரல் அனுப்பிய மார்ல்ப்ரோ வளையங்கள் உயரே எழுந்து காணாமல் போவது, மெல்லிய நிலவொளியில் சுவாரசியமானத் திகில் காட்சியாகத் தோன்றியது. பால்கனிக்கு வெளியே, அடர்ந்த மரங்களைத் தாண்டி ஜெயநகரின் அமுங்கிய சாலையொலிகள். பால்கனிக்கு உள்ளே, சுவரொட்டியப் படுக்கையறையில் அயர்ந்துறங்கும் ரம்யா வத்சனின் இடைவெளி விட்ட குறட்டையொலி. இடையே நான், வத்சன், இரவு, நிலவு, அமைதி. எங்கள் நினைவுகள் மட்டும் உரத்த ஓசையுடன்.
"ஆ! மறந்து போச்சுபா.. உங்க்ட்ட ஒண்ணு காமிக்ணம்" என்று உள்ளே போனான் வத்சன். திரும்பி வந்தவன் கைகளில் ஒரு கலர் படம், ஒரு எல்இடி ப்லேஷ் லைட், சில தலையணை போர்வைகள். படத்தை என்னிடம் தந்தான். "பால்கனி லைட் போட்டுமாடா?"
"வேணாம்.." அவன் நீட்டிய ப்லேஷ் லைட்டை வாங்கி அழுத்தினேன். படம் கண்களை நிறைத்தது. என் இரட்டைபாத் வட்டம். வருடாந்தரச் சாதனைப் பயணமாக ஒருமுறை கம்பெனி செலவில் கொடைக்கானல் போனபோது எடுத்த படம். இடம் நினைவில்லை. ஏதோ ஒரு ஏரி, அருவி, மலைப் பாங்கான இடம். உயர்ந்த பாறை மீதிருந்து நீரில் குதித்து விளையாடியதன் நினைவாக எடுத்த படம். அவனுடைய யாஷிகா காமெராவில் தானியங்கி டைமர் வைத்து, வெங்கட் அனைத்துமாட ஓடி வந்து சேர்ந்து கொண்டது நினைவு கிடாரை இதமாய்த் தட்டியது. நாங்கள் அனைவரும் அம்மணமாக எடுத்துக்கொண்ட ஒரே படம்.
நான் ரிச்சர்டை இரண்டு முறை அவனுடைய ஆபீசில் சந்தித்திருக்கிறேன். இந்த முதல் சந்திப்பில் அசுதோஷும் என் இரட்டைபாத் வட்டமும். அசுதோஷ் எங்கள் மேற்பார்வை அதிகாரி. ரிச்சர்ட் மேலதிகாரி.
"so.. young men.. you like skinny dipping?" என்றான் ரிச்சர்ட்.
கொடைக்கானலில் நாங்கள் அம்மணமாக அருவியில் குளித்தது பற்றி நிறைய பேர் புகார் கொடுத்திருந்தார்கள். ரிச்சர்ட் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டி எங்களை அழைத்திருந்தான்.
"ரிச்சர்ட்.. எங்க கிட்டே இருந்தது ஒரே டிரஸ் தான்.. அதை ஈரமாக்க விரும்பலே.." என்றான் விஜய்.
எனக்குச் சிரிப்பு வந்தாலும் அடக்கினேன். "அக்கம்பக்கத்துல யாருமே இல்லை ரிச்சர்ட்.. besides.. எங்க தனிப்பட்ட விஷயம் இல்லையா? நாங்க எந்த சட்டத்துக்கும் முரணா நடக்கலியே?"
"generally accepted decorum.. common decency.. அதுக்கு முரணா நடந்திருக்கீங்க.. law comes later.. இருபது இருபத்திரண்டு வயசாவுது உங்களுக்கு.. அம்மணமா இப்படி பொது இடத்துல குளிக்கலாமா?"
"கொடைக்கானல் போனதே எஞ்சாய் பண்ணத்தானே ரிச்?" என்றான் அசுதோஷ்.
"ஓ!" என்ற ரிச்சர்டின் பார்வையில் இருந்தது வெம்மையா பொறாமையா தெரியவில்லை. "அடுத்து ஆபீஸ்ல அம்மணமா சுத்துவீங்க போல?"
"as a punishment.. சொல்லுங்க, வேணும்னா சுத்துறோம்.." என்றான் விஜய், தயங்கி.
ரிச்சர்ட் வெடியாகச் சிரித்தான். "யாருக்கு punishment? you dirty rogues.." கண்ணீர் வரச் சிரித்தான். "கம்பெனி செலவுல இனி அம்மணமா சுத்தாதீங்க.. புரியுதா?" என்று எழுந்தான். அசுதோஷைத் தோளில் தட்டி, "get these mavericks out of my office" என்றான்.
ப்லேஷ் லைட்டை அடக்கி நொடி பொறுத்து மீண்டும் இயக்கினேன். வெளிச்ச அலையில் படம் படபடத்தது. "வத்சன்.. அன்னைக்கே ரிச்சர்ட் நமக்கு கல்தா கொடுத்திருக்கலாம்.. improper conduct.. அசுதோஷ் நம்மளைக் காப்பாத்தினான்.." என்றேன்.
"நா.. நாம ஒண்ணும் தப்பு செய்யலியேடா.. நாம அவனைக் கூப்பிடலியேனு ரிச்சர்டுக்கு பொறாமையாம்.. அசுதோஷ் சொன்னான்.."
சிரித்தேன். படத்தை இடது உள்ளங்கை மேல் தட்டினேன். "நம்ம வட்டத்துல மூணு பேர் தான் உயிரோட இருக்கோம்" என்றேன் கனமாக.
இன்னொரு புகை வளையத்தை விட்டபடி, "நம்ம நட்பு வரலாற்றின் கடைசி அத்தியாயங்கள்.. to the remaining chapters" என்று கீழே கிடந்த விஸ்கிப் புட்டியை உயர்த்தினான் வத்சன்.
"நம் மரண வேளையில், தேவர்கள் முகம் வருடி யாழ் மீட்டட்டும்" என்று என் வெறுங்கோப்பையை உயர்த்தினேன்.
"no..none of that bender shit.. எனக்கு தேவதைகள் மட்டும்.. அதுவும்.." நெஞ்சருகே இரு கைகளையும் குவித்துக் காட்டினான்.
"நல்லது. உன் மரண வேளையில், மார்வளம் மிகுந்த அழகு தேவதைகள் முகம் வருடி மகர யாழ் மீட்டட்டும்" என்றேன்.
மௌனம்.
"நேன்ஸ் வருவான்னு நினைச்சேன்.. நாளாச்சுப் பாத்து.. ரெண்டு சம்மர் முந்தி ந்யுயோர்க் வந்திருந்தான்.." என்றேன்.
"அசுதோஷ் சாவுக்கு வந்திருந்தான்.. வரும்போதே, 'ஒத்தா பூட்டானா'னு சொல்லிட்டே வந்தான்.."
"நேன்ஸ் மாறவே மாட்டான்.."
"he has changed alright.. பெரிய சிஇஓ ஆச்சே? கால ஓநாயின் நகம் அவன் உடம்பெல்லாம் தாறுமாறாக் கீறியிருக்கு.. அவனோட பேச்சும் அவனோட வளந்துடுச்சு .. from shockingly funny to appallingly hilarious.. பொண்டாட்டி பசங்களைக்கூட 'ஒத்தா இங்க வாங்க எல்லாரும்'னு கூப்பிடறான் தெரியுமா?"
மனம் விட்டுச் சிரித்தோம். சிறிது நேரம் நாங்கள் எதுவும் பேசவில்லை. திடீரென்று, "அசுதோஷுக்கு எய்ட்ஸ் தெரியும்ல.. you were in touch with him, right?" என்றான்.
"எய்ட்ஸ்னு தெளிவானதும் எனக்கு இமெயில் அனுப்பியிருந்தான். அப்பப்போ போன் செஞ்சிருக்கேன் till he was able to talk.. சாவுறன்னிக்கு எனக்கு ஒரு இமெயில் அனுப்பியிருந்தான்.. i think he knew"
நீண்ட மௌனம்.
"அசுதோஷ் பட்டாசார்ஜி.. நம் வட்டத்துக்கு குறுக்கே வந்த ஒரு கோடு" என்று ஒரு நீண்டப் பெருமூச்சு விட்டேன்.
"வட்டத்தை வெட்டிய கோடு" என்றான் வத்சன். "that fucker!"
சற்றே நீண்ட மௌனம்.
வத்சனின் கண்களைச் சந்தித்து, "i fucked him once" என்றேன் நிதானமாக.
"no.. i think he fucked you.. you just.. let him go.. நீ ஒரு தொடை நடுங்கி.."
"இல்லே, நான் சொல்றது வேறே..." என்று அவனிடமிருந்த பாதி சிகரெட்டை வாங்கித் தீர்க்கமாக உள்ளிழுத்தேன்.
என்னைக் கேள்விப் பார்வை பார்த்தவனிடம் சிகரெட்டைக் கொடுத்துப் புகையை வெளிவிட்டேன். ஆமென்றுத் தலையாட்டினேன்.
ஜோகாவில் கடைசி வாரம். படிப்பு முடிந்து, ப்ப்பெரிய கம்பெனி வேலையை ஏற்றுக்கொண்டாகிவிட்டது. என் வகுப்பிலேயே எனக்கு அதிகச் சம்பளம் என்பது எப்படியோ வெளியாகி அந்தப் பெருமை வேறே. வெள்ளிக்கிழமை இரவு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். என், எதிர் மற்றும் பக்கத்து அறைகளில் பார்ட்டி. என்னுடன் படித்தவர்கள், சில ஜூனியர்கள், கல்கத்தாவில் வசித்த சில சீனியர்கள், அலம்னை, சில நம்பத் தகுந்த புரபசர்கள்.. எனக்கு வேலை கொடுத்த அசுதோஷ், ஷர்மிளா முகர்ஜி.. நண்பர்களுடன் நான் துரத்திய அல்லது எங்களைத் துரத்திய சில அலிபொர், பவானிபொர், டாலிகஞ்ச் பிரதேச மேல்தட்டுப் பெண்கள்... என்று அழைத்திருந்தேன். ஹாஸ்டல் சமையல்காரருக்குப் போனஸ் பணம் கொடுத்து சமைக்கச் சொல்லியிருந்தேன். எடுபிடி டோபிவாலாவிடம் strictly prohibited சமாசாரங்களை strictly stealthyஆகக் கொண்டு வரச் சொல்லியிருந்தேன். விஷயம் வெளியில் தெரியாதிருக்க யார் யாருக்கு சம்திங் வெட்ட வேண்டுமோ, பிறழாமல் புரிந்திருந்தேன்.
மாலை ஐந்து மணிக்கு கூட்டம் சேரத் தொடங்கியது. கஞ்சா கல்யாணி மெக்டாவல் என்று நான் வாங்கி வைத்திருந்தவை தவிர, பவானிபொர் பெண்கள் கொண்டு வந்திருந்த ஹஷிஷ், எல்எஸ்டி மற்றும் உயர்தர ஷேம்பேன் என்று பார்ட்டி களை கட்டியது. அழையாமல் வந்திருந்த ஒரு டாலிகஞ்ச் பெண் என்னைக் கவர்ந்தாள். அவளைக் கணக்கு போட்டபடி, வந்தவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஷர்மிளா முகர்ஜி என்னை மெலிதாக அணைத்து, "கங்கிராட்ஸ்" என்றாள்.
ஷர்மிளா helpage என்ற இயக்கத்தின் இந்திய சேர்மன். முதியோர் பராமரிப்புச் சேவை நிறுவனம். என்னை வற்புறுத்தி வேலைக்குச் சேரச் சொன்னாள். ஒரு வருடத்தில் என்னை சிஇஓ ஆக்குவதாகச் சொன்னாள். சம்பளம் எவ்வளவு என்று சொன்னதும், "ஒரு நாளைக்கா?" என்றேன். சிரித்துவிட்டாள். வேலை வேண்டாமென்று அங்கேயே சொல்லிவிட்டேன். "please think it over" என்றாள். "you can't afford my thought" என்ற என் ஆணவமான பதிலைப் புன்னகையோடு ஏற்றாள். நான் எந்தத் தொடர்பையும் வெட்டியதில்லை. அவளைப் பிடித்திருந்தது. நல்ல பதவியும் செல்வாக்கும் வசதியும் உள்ளவள். என் வளர்ச்சிக்குப் பயன்படுவாள். "didn't mean to be rude. i will think it over" என்றுச் சமாதானமாக விலகினேன். என்றாலும் வாரம் எனக்கு ஒரு கார்டு அனுப்புவாள். ஏதோ ஒரு கிழம் எங்கோ அனாதையாகக் கிடப்பதாகவும் helpage இயக்கம் அது போன்றக் கிழங்களை மீட்டு ஆதரவும் அன்பும்.. வள வள என்று ஏதாவது எழுதியிருப்பாள்.
சுதாரித்து, "தேங்க்ஸ் ஷர்மிளா.. பார்ட்டிக்கு வந்ததுக்கு மகிழ்ச்சி. helpageல சேரலனு உங்களுக்கு வருத்தமில்லையே?" என்றேன்.
"வருத்தம் தான். உன் போல் திறமைசாலிகள் எங்களுக்குத் தேவை. ஆனால் உன் தினக்கூலி எங்களுக்குக் கட்டுப்படியாகாதே?" என்றுச் சிரித்தாள். "எங்களை மறக்காதே. another time.."
"நிச்சயமா.." என்று விலக, டாலிகஞ்ச் பெண் கண்ணில் பட்டு உறுத்தினாள். 'இவளைத் தொடமுடியுமா' என்று நினைத்தக் கணத்தில் என் முதுகில் யாரோ தொட்டார்கள். திரும்பினேன். "அசுதோஷ்! ஹலோ.. வெல்கம்.. வெல்கம்.." என்று வழிந்தேன்.
வலது கையால் என் கைகளை இறுக்கப் பிடித்து இடது கையால் என் தோளை அணைப்பது போல் தட்டி, "கங்கிராட்ஸ்" என்றான். "பார்ட்டி அட்டகாசமா இருக்கு.. இதெல்லாம் லீகலா?"
என்ன சொல்வது என்று விழித்த என்னிடம் "சும்மா தமாஷ்" என்றான். மறுபடியும் சிரித்து ஒரு சிறிய கவரைக் கொடுத்தான். பிரித்தேன். புத்தம் புது நூறு ரூபாய் நோட்டு. "to my best hire" என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தான். நன்றி சொன்னேன். "எஞ்சாய்" என்று விலகிய அசுதோஷ், வந்திருந்தோரிடம் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டு அங்கே இங்கே பேசிக் கூட்டத்தில் கரைந்தான்.
யாரோ ஸ்டீரியோ கேசட் ப்ளேயரைத் தட்ட, பானிஎம் பொலீஸ் ஒஸிபிஸா அபா என வரிசையாகப் பாடல்கள். நடுவே பப்பி லஹரியின் கூத்திசை. சிலர் ஆடத்தொடங்கினார்கள். கையில் சிகரெட் இல்லாத ஆணோ பெண்ணோ இல்லை. அவ்வப்போது டோபிவாலா "ஆவாஜ் கம்" என்று சொல்லிப் போனதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இருந்த ஒரே திவானில் மையமாக முழங்காலிட்டு, சட்டை துறந்த ஒரு பவானிபொர் பெண் மெல்லிய பெங்காலிப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றியிருந்த தாடிக்கார ஜூனியர்கள் அவளது குரலை ரசித்தார்களா அல்லது பாடலுக்கு ஏற்பக் குலுங்காமல் அசைந்த அவளுடைய சற்றே காம்பெழுந்த இளமுலைகளை ரசித்தார்களா என்றுத் தீர்மானமாகச் சொல்லமுடியவில்லை.
இரவு பரவத் தொடங்கியிருந்தது. டோபிவாலா கடைசி முறையாக வந்து "சப் டீக் பந்து" என்று ஐம்பது ரூபாயும் கட்டுச்சோறும் எடுத்துக் கொண்டு மறைந்தான். போதை தவிர்த்த சிலர் விடைபெறத் தொடங்கினர். நான் அளவாகக் குடித்திருந்தேன். கஞ்சா கலந்த ஒன்றிரண்டு சிகரெட் இழுத்திருந்தேன். பாத்ரூம் போகலாம் என்று அறைக்குள் போனபோது.. டாலிகஞ்ச் பெண்! ஒரு கையில் சிகரெட்டும் இன்னொரு கையில் தங்டி கபாபுமாக என் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். போதையிலிருந்தாள்.
"ஹாய்.." என்றேன். பதிலுக்குக் காத்திராமல் அவளருகே உட்கார்ந்தேன். "நான் உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்"
"நீ கவனிப்பதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்" என்றாள். "பலா உபாத்னா.." என்றாள் சிகரெட்டைக் காட்டி. "really good stuff"
உடைந்த பெங்காலியில் "தாயியாமி" என்றேன், என்னைச் சுட்டி. சிரித்தாள். அவளை நெருங்கி, "இது என்னுடைய படுக்கை.. meant for good stuff too.. பலா உபாத்னா" என்றேன். அவளைத் தொடப் போனபோது சரிந்தாள். போதையின் உச்சம். அவள் கையிலிருந்ததைப் பிடுங்கி எறிந்து, படுக்கையில் அவளைச் சீராகக் கிடத்தி, மின்விசிறியைத் தட்டிவிட்டு ஒரு பெருமூச்சோடு வெளியே வந்தேன்.
அறையோரமாகச் சுவரில் சாய்ந்து, கால் நீட்டி அமர்ந்திருந்தான் அசுதோஷ். "ஹாய்.. நீ கிளம்பியிருப்பேனு நினைச்சேன்" என்றேன்.
"இல்லே.. உன்னை மாதிரி கம்பெனி கிடைக்காததுனால ஐ'ம்.. ஜஸ்ட் தனியா.. ரிலேக்ஸ் பண்ணிட்டிருக்கேன்.. மால் அச்சா ஹை" என்று விஸ்கியைக் காட்டினான். "நீ உன் நண்பர்களைக் கவனி.. நாம் பிறகு பேசலாம்.. ஐ'ம் ஓகே பை மைசெல்ப்"
"நோ.. அந்த நட்பெல்லாம் இந்த வாரத்தோட முடிஞ்சுரும்.. நீ என்னுடைய எதிர்காலம்.." என்றேன்.
"தாராலொ பந்து!" என்றான். "astute. அந்த டாலிகஞ்ச் சோக்ரி என்ன ஆனா? காம்கி நஹி?"
"big boob, small brain.." என்றேன். அசுதோஷைத் தெரிந்து கொள்வது எனக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்று அந்தக் கணத்தில் தீர்மானமாக உணர்ந்தேன். "நீ பார்ட்டிக்கு வந்தது எனக்குப் பெருமை.. பசங்க காயுறாங்க.. இங்கே இரைச்சலா இருக்கு.. எதிர் ரூமுக்குப் போகலாம்" என்றேன்.
நாலைந்து சிகரெட்களையும் ஒரு விஸ்கி பாட்டிலையும் எடுத்துக் கொண்டு, எதிர் அறையில் யாருமில்லாததால் அங்கே போனோம்.
"யு நோ.." இழுத்தான் அசுதோஷ், சோபாவில் சரிந்தபடி. "கேம்பஸ் இன்டர்வ்யூல உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சுது. ஸ்ட்ரேடஜி புதிர்கள் அத்தனைக்கும் சரியான பதில் சொன்னே; அது மட்டுமில்லே வித்தியாசமான, எங்களுக்கே தெரியாத பதில்கள் சிலவற்றைச் சொன்ன ஒரே ஆள் நீ தான். வெரி ப்ரைட்"
"என்னுடைய அறிவுக் கூர்மையின் ரகசியம்" என்றேன், கஞ்சா சிகரெட்டையும் விஸ்கி பாட்டிலையும் காட்டி. சிரித்தேன். அவனுக்கு இடதுபுறம் சோபாவில் சரிந்து உட்கார்ந்தேன்.
எங்களுக்கிடையே நிறையப் பொது ரசனைகள் கண்டோம். ஷேக்ஸ்பியர், வோடவுஸ், டூமா, இங்க்ரிட், சேப்லின், பீடில்ஸ், அமிதாப், பாசு சேடர்ஜி.. மேக்பெத், ஜீவ்ஸ், ஊஸ்டர், கேஸப்லான்கா, மாடர்ன் டைம்ஸ், தீவார், மான்டி க்ரிஸ்டோ.. என்றுப் பேசினோம். அவன் உலக சினிமா, அரசியல் பேசியதை இமைக்காமல் கேட்டேன். ஷா, கார்டர், ரேகன் என்று இரானியப் பணயம் பற்றி வாய் பிளக்க விவரங்கள் சொன்னான். அவன் அமெரிக்கச் சுயநலத்தைச் சாடியபோது நானும் சோசலிஸ்ட் போல் உணர்ந்தேன். pink floydன் dark side of the moon பின்புலம் சொன்னான். லெனன் மரணத்தின் அநியாயத்தைச் சொல்லி அழுதபோது நெஞ்சைக் கட்டியது... மிக நெருங்கி என் கைகளைப் பிடித்தபோது, 'இவன் என் பாஸ்' என்ற எண்ணம் கரைந்து சமன் போல் உணர்ந்தேன்... எனக்குப் பழக்கமில்லாத சோல்சனிட்சின் எழுதிய புத்தகங்கள் பற்றிப் பேசினான். ஜனதா கட்சி உடைந்ததன் பின்னும் சமீப காங்கிரஸ் வெற்றியின் பின்னுமிருந்த அரசியல் தந்திரங்கள் பற்றிப் பேசினான். ராஜ்நாராயணுக்கு ஆதரவாக ரே பரேலியில் பிரசாரம் செய்ததாகச் சொன்னான். சஞ்சய் காந்தியின் மரணம் பாதித்தது என்றான். "சாஜிஷ்.." மிக நெருங்கி உடல் பட ஒட்டி உட்கார்ந்தேன். எனக்கும் sophistication உண்டு என்று அறிவிக்க கஜல் பற்றி.. பங்கஜ் உதாஸ், ஜக்ஜித் சிங்க் என்றதும் என் மனம் புண்படாது அழகாகச் சிரித்தான். படே குலாம் அலிகான் என்று நான் கேள்விப்பட்டிராத பெயர் சொல்லிப் பதினைந்து நிமிடங்களில் என் கஜல் அறிவை மேம்படுத்தினான். மெல்லிசையில் சலீல் சௌத்ரிக்கு ஈடில்லை என்றான். 'b,v' குழப்பாத அவனது நளின ஆங்கிலப் பிடிப்பு ஆச்சரியம் எனில், அழகான ஹிந்தியில் அவ்வப்போது பேசியது போதை. முகமது ரபியை விட கிஷோர்குமார் பிடிக்கும் என்றான். "அய் தில் ஹை முஷ்கில் ஜீனா யஹான்" என்று மனங்கவரப் பாடினான்... மெல்ல என்னை மென்மையாகக் கன்னத்தில் முத்தமிட்ட போது நன்றாக இருந்தது... பொறுமையாக உதட்டில் முத்தமிட்ட போது இனிமையாக இருந்தது... artful seduction.. அவன் பின்புறத்தைத் தேடித் தடவினேன்.
என் கைகளை விலக்கி, "this is getting awkward.." என்றான்.
"i like awkward" என்றேன், அவன் கழுத்தில் உரசி.
மிச்சமிருந்த விஸ்கியை பாட்டிலோடு ஒரு மிடறு குடித்து என்னிடம் கொடுத்தான். "எனக்குத் தெரியாமப் போனது ஆச்சரியம். எனக்கு இருபத்தாறு வயசாவுது. பருவம் வந்த நாள்லந்து நான் ஹோமொ, அதே மாதிரி மத்த ஹோமொசெக்சுவல்களை என்னால் சுலபமாக அடையாளம் காண முடியும். அந்தப் பெண்ணைத் துரத்துறே.. என்னையும் தடவுறே.. நீ ஹோமொசெக்சுவலா? ஆச்சரியமா இருக்கு"
சிரித்தேன்.
"நீ சிரிப்பது புறாக்கள் படபடத்து எழுவது போல் அழகாக ஒலித்தாலும், காரணம் கேட்கத் தோணுது"
"நான்-வெஜிடேரியனானு கேட்குற மாதிரி இருக்கு, உன் கேள்வி.."
"புரியலியே?"
"எங்க ஊர்ல சில பேரை 'அவுரு என்வி'ம்பாங்க.. அதாவது நான்வெஜ்காரர்கள் வெஜ் சாப்பிடமாட்டாங்க என்கிற மாதிரி பிரிப்பாங்க.. நீ ஹோமொசெக்சுவலானு கேட்டதும் எனக்கு அதான் நினைவுக்கு வந்தது.."
"good example, bad analogy.. சாப்பிடுவது காய்கறிகளா மாமிசமா என்பதைப் பொறுத்து அப்படிச் சொன்னாங்க.. அதற்கும்.."
"சிக்கன்ல வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு கலந்து செய்தா.. அது வியா என்வியா? என்வினா அதுல இருக்குற சிக்கனை மட்டும் சாப்பிடணுமா?"
"okay.. good analogy, bad example then" சிரித்தான். "சரி, ஹோமொ ஹெடரொ இதுல யார் வெஜ் யார் நான்வெஜ்..? அப்போ வெங்காயம் தக்காளியோட சிக்கன் சாப்பிடுற நீ யார்? bisexual?"
"தெரியாது. i am.. just sexual. sexல் ஹோமொ ஹெடரொ என்று பேதம் பார்ப்பதில்லை என்பது மட்டுமே தெரியும்" என்றேன். "இது தான் செக்ஸ் என்று ஒரு குழப்ப வரையறைக்குள் சிக்க விரும்பவில்லை.. எனக்கு இன்னும் அத்தனை வயதாகவில்லை.. செக்ஸ் என்றால் என்னவெனறு தெரிந்து கொள்ளும் சோதனைக் கட்டத்தில் தான் இன்னும் இருக்கிறேன்.."
"interesting.. பொதுவா நானறிந்தத் தென்னிந்தியர்கள்.. pardon me.. ரொம்ப கவனமாக நேர்க்கோட்டில் போகிறவர்கள்.. சுற்றி நடப்பது தெரியாத, பொருட்படுத்தாத, closed-mind righteous folks.. won't take a step unless pushed.."
"sexual discretionல தெற்கு வடக்கு என்று எதுவும் இல்லை.. உலகமெங்கும் ஒரே மொழி. அர்ஜூனன்-க்ருஷ்ணன் உறவை, உங்களைப் போல் நாங்களும், வேறு எந்தக் கோணத்திலும் பார்க்கத் தயங்குபவர்கள். இவனுக்கும் அவனுக்கும், இருப்பதற்கும் இல்லாததற்கும், சமூகத்துக்கும் சமயத்துக்கும் பயந்து இயல்பான உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறவர்கள் இந்தியாவெங்கும்.. உலகெங்கும் உண்டு. இருந்தாலும் நீ சொல்வது புரிகிறது. வடக்கை விட தெற்கே அதிகமா hypocrites இருக்கலாம். you know.. என் குடும்பத்தில் சில closet homosexuals உண்டு. என் உறவினர்.. என்னைவிட இருபது வயசு மூத்தவர்.. ஒரு தடவை.. விடுமுறைக்குப் போயிருந்தேன்.. பதினாறு வயசிருக்கும்.. தூங்கிட்டிருந்தேன்.. திடீர்னு விழுப்பு வந்து.. பார்த்தா.. this uncle.. என்னோட கருவியைப் பிடிச்சு உருவிட்டிருக்காரு.. that was my first real experience with a man.." அசுதோஷுடன் என் நிழல்களை இயல்பாகப் பகிர முடிந்தது எனக்கு வியப்பாக இருந்தது.
"do you feel guilty?"
"guilty? no. violated? yes"
"makes me sick.. that is not homosexual.. that is hideously perverted"
"i was bred in perversion... my cross of burden until tormented shadows lead to the pulpit of torturous death"
"shakespeare சொன்னதா?"
"இல்லை, நான் சொன்னது"
"குடும்பத்திலே அல்லது சமூகப் பெரியவங்க யாருடனாவது இதைப் பற்றிப் பேசினாயா?"
"யார் கிட்டே இதைப் பத்தி என்ன சொல்ல? என் ஆசிரியர் ஒருத்தர் கிட்டே பேசினேன். கடவுள் விதினு என்னென்னவோ சொன்னாரு.. எல்லாம் ஆண்டவன் விதிச்சது போல நடக்குமாம், எப்படியிருக்கு? oh, god! that i might read my book of fate.."
"நீ சொன்னதா?"
"இல்லை, shakespeare சொன்னது"
என்னிடமிருந்த சிகரெட்டை வாங்கி இழுத்து விஸ்கி பாட்டில் மீது வைத்தான். "you have turned out okay.." என்று என்னை நெற்றியில் முத்தமிட்டான். மூக்கில். உதட்டில். "பகுத் லம்பா சபர் கியே ஹைன் ஆப்" என்று என்னைத் தோளோடு இறுக்கி இழுத்துக் கொண்டான்.
இடது கையால் அவன் கைகளைக் கோர்த்தேன். திரும்பி வலது கையால் அவன் கன்னங்களை வருடினேன்.
"is there a man in your life?" என்றான்.
"isn't" அவன் கண்களைச் சந்தித்தேன்.
"woman?"
"was" அவன் மூக்கில் உரசினேன்.
"ah.. அதனால் தான் ஆண்கள் மேலென்று நினைக்கிறாயா?"
"உன்னை மேலேன்று நினைக்கிறேன், அவ்வளவு தான்.. நீ ஆண் என்பது தற்செயல்"
"உன் பாஸ் என்பதாலா? என்னுடன் படுத்தால் ஏதாவது சலுகை கிடைக்கும் என்று நினைக்கிறாயா?"
"இருக்கலாம். நாளைக்கு நான் உன் பாஸானாலும், உன்னுடைய கவர்ச்சி என்னுள் நிலைக்குமென்றே நினைக்கிறேன்.."
"உன்னுடைய துணிவு எனக்குப் பிடித்திருக்கிறது"
"நன்றி" என்று அவனை மெல்ல முத்தமிட்டேன்.
"இந்த வகைச் சேர்க்கையின் முரண் பற்றி உனக்குக் கவலையில்லையா? இது தப்பு பாவம்னு எதுவும்.." என்று என் இடதுகையை தன் மார் மேல் வைத்துக் கொண்டான்.
பலமாகச் சிரித்தேன். "the immoral, the divine.. inseparable till the end of time"
"shakespeare சொன்னதா?" என்று கேட்டு என்னை அணைத்தான்.
"no, நான் சொன்னது" என்று அவனைப் பதிலுக்கு அணைத்தேன். "பாவக்கணக்கு போடவேண்டிய அவசியமே இல்லை. nothing is good or bad, thinking makes it so"
"that your own?"
"no, shakespeare".
வத்சனுக்குச் சில நிமிடங்கள் பிடித்தது எல்லாவற்றையும் ஜீரணிக்க. "whoa! நீயும் அசுதோஷும் நெருக்கம்னு தெரியும். ஆனா படுக்கை நெருக்கம்னு இது வரைக்கும் தெரியாது.. குட்நெஸ் மச்சி! எனக்கு என்ன சொல்றதுனு தெரியலே.." என்றான்.
"சொல்றதுக்கு எதுவும் இல்லே.." என்றபடி பால்கனிச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தேன்.
"காதலிச்சீங்களா? how long?"
"just that one time. வேலைக்குச் சேர்ந்த பிறகு உறவாடுவதில்லை தொடுவதில்லை என்று அந்த இரவே தீர்மானித்தோம்.. strictly platonic after that night. but what a night! அந்த இரவுக்குப் பிறகு நான் கவிதை படிப்பதையே நிறுத்திட்டேன் தெரியுமா?"
"அப்புறம் என்ன ஆச்சு.. இவ்வளவு நெருக்கமா இருந்து, he turned against you..".
ரிச்சர்டை இரண்டாவது முறை அவன் அலுவலகத்தில் சந்தித்த போது நானும் அசுதோஷும் மட்டும்.
"young man.. i am disappointed.. நீ ஒரு மாடல் ஆபீசராக வருவாய்னு நினைச்சேன்.. இப்படி ஒரு குற்றவாளியாக மாறுவாய்னு நினைக்கவேயில்லை.. you have betrayed our collective trust.."
"ரிச்சர்ட்.."
"எதுவும் பேசாதே. நீ செய்திருப்பது குற்றம். உன்னை மட்டுமல்ல, எங்க எல்லாரையும் ஜெயிலுக்கு அனுப்பக் கூடிய குற்றம். என்ன ஆகுமோ தெரியாமல் விழிக்கிறேன். நாங்கள் திரும்பி வரும் வரையில் இந்த அறையிலேயே இரு" என்று ரிச்சர்டும் அசுதோஷும் அடுத்த அறையில் கூடியிருந்த சிலருடன் பேசப் போனார்கள்.
நான் தலைகுனிந்தபடி இருந்தேன்.
நான் செய்தது தப்பு. தெரிந்தே செய்தது. விளைவுகளின் தீவிரத்தைப் பற்றிப் புரியாமல் செய்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, என் தொழிலில் சாதாரணமாக நிறைய பேர் செய்வது தானே என்றப் போலிச் சமாதானத்துடன் செய்தது.
நாங்கள் விரும்பி ஏற்ற fmcg, ஒரு விசித்திரமான தொழில். எங்கே எது எப்படி எதனால் விற்கிறது, மக்கள் ஏன் வாங்குகிறார்கள் என்பதற்கான காரணம் சரிவர நியமிக்க முடியாமலே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் மந்திரத் தொழில். ஒரு மார்க்கெட்டில் காபிப்பொடி விற்காது, தேயிலை விற்கும். சூப் விற்கும் கெச்சப் விற்காது. ஒரு இடத்தில் பற்பசை விற்கும், டூத் பிரஷ் விற்காது. அரை கிலோ பேகட் விற்கும், நூறு கிராம் பேகட் விற்காது. ஆனால் எல்லா மார்க்கெட்டிலும் எல்லாவற்றையும் இத்தனை கேஸ் விற்கவேண்டும்.. மக்கள் வாங்குகிறார்களோ இல்லையோ, எல்லாப் பொருளுக்கும் எல்லா மார்க்கெட்டிலும் கோட்டா. கோட்டாப்படி கடைகளுக்கு விற்கவில்லையென்றால் கல்தா.
வினியோகஸ்தர்களுக்கு நாங்கள் விற்றதை மறுபடி மார்க்கெட் கடைகளுக்கு விற்க வேண்டும். இந்த மறுவினியோகம் தான் fmcg கம்பெனிகளின் கார்கில். market share யுத்தங்களின் பீரங்கி. கம்பெனியின் நிகர லாபத்துக்கு வேர். கடைகாரர்களோ விற்பனையாகும் சரக்கை மட்டுமே கேட்பார்கள். எங்களுக்கோ எல்லாவற்றையும் விற்றாக வேண்டும். பரவலான ஒரு மறுவினியோகத் தந்திரம், அடாவடி. வத்சனின் மார்க்கெட்டில் பால்பொடி அநியாயத்துக்கு விற்கும். சூப் கெச்சப் விற்காது. வத்சன் கடைக்காரர்களுக்கு இத்தனை கேஸ் சூப் கெச்சப் வாங்கினால் இத்தனை கேஸ் பால்பொடி கொடுப்பது என்று பிடிவாதமாக இருப்பான். ரங்கன், உமேஷ், விஜய் எல்லாருமே இதைக் கடைபிடித்தார்கள். விற்காத சரக்கை கடைக்காரர்கள் ஆறு மாதம் கழித்துத் திருப்புவார்கள். இது போதாது என்று அக்கம்பக்கத்து எல்லைக் கடைகளிருந்தும் சரக்கு வரும். அனேகமாக எல்லாமே எங்கள் வினியோகஸ்தர்களிடம் வந்து சேரும். அசுதோஷின் மேற்பார்வைப் பகுதியின் நிகர லாபம் இதனால் பாதிக்கப்பட்டது.
இப்படி காபி, சூப், கெச்சப், தேயிலை, பற்பசை, பால்பொடி, ஊறுகாய் என்று விற்காதப் பொருட்களைச் சேதமாக விடாமல், எங்கள் நிகர லாபமும் குறையாமல், சுலபமாகச் சென்னையில் நிழலாக விற்க முடியுமென்றுத் தோன்றியது எனக்கு.
அசுதோஷ் அந்த வருட அகில இந்திய விற்பனை மேலதிகாரிப் போட்டியில் முன்னணியில் இருந்தான். 100% மறுவினியோகம், அதாவது எந்த வித சரக்கு வாபசும் இல்லையென்றால் போட்டியில் வெல்வதோடு நில்லாமல் கம்பெனியின் இந்திய வரலாற்றில் நிகழாதச் சாதனை படைப்பான். இது "நடைமுறைக்கு ஒத்து வராத, ஏங்கவைக்கும் கனவு" என்று என்னிடம் சொன்னான். "ஒரு முறையாவது நனவாக்குகிறேனே?" என்றேன். அசுதோஷ் சாதனை படைக்க விரும்பினேன். என் யோசனையைச் சொன்னேன். "திரும்பிவந்தக் கடைச்சரக்குகளைச் சென்னைக்கு ரெயிலில் கொண்டு போகிறேன். சென்னையில் ஆவடி அம்பத்தூர் அருகே இறங்கிகொண்டால் ஒரு பிரச்சனையும் இருக்காது. என் ஆவடி விநியோகஸ்தர் மிகுந்த அரசியல் செல்வாக்குள்ளவர். பேட்டை ரௌடி. எனக்கு நல்ல நண்பர். சகோதரன் போல. அவர் வந்து சரக்கை எடுத்துக்கொண்டு பணத்தைக் கொடுத்துவிடுவார். சென்னையில் இந்தப் பொருட்கள் சற்றே விலையதிகம் என்பதால் அவருக்கு கொள்முதலில் லாபம் வேறே.. யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லை.. மார்க்கெட்டிலும் நமக்கு ஒரு control கிடைக்கும்".
அசுதோஷ் சம்மதிக்க, நான் அவ்வப்போது சரக்குடன் சென்னைக்குப் பயணமானேன். அந்த வருடம் அசுதோஷுக்கு மிகப்பெரியப் பரிசாகத் தங்க மெடல் கிடைத்தது. என்னையும் அசுதோஷையும் தவிர இந்த வெற்றியின் ரகசியம் யாருக்கும் தெரியாது.
ருசி கண்ட பூனையாதலால் இந்தக் கடத்தல் அடுத்த வருடமும் தொடர்ந்தது. ரிச்சர்ட் மார்கெட் விசிட் வந்தால் வியந்து பொதுவில் விசாரிப்பான். அசுதோஷ் என்னைப் பெருமையாக முன்னிறுத்துவான். எனக்குக் கிறங்கும். இரண்டாம் வருடம் ரிச்சர்டுக்குத் தங்க மெடல். தில்லி பம்பாய் லன்டனிலிருந்து அதிகாரிகள் வந்தார்கள். 'அசுதோஷின் வட்டம் அத்தனை பொருட்களையும் சரக்குத் திருப்பம் இல்லாமல் எப்படி விற்கமுடிகிறது!' என்று சிவந்த மூக்கில் விரல் வைத்து வியந்தார்கள். ரிச்சர்டுக்கு தென் கிழக்காசிய அளவில் 'மார்கெட் ஆல் ரவுண்டர் ஆப் தி இயர்' பதக்கமும் பரிசும், ஒரு வார ஹாங்காங் உல்லாசப் பயணமும் கிடைத்தது.
வெற்றியின் போதை அலாதியான கடிவாளம். திக்குத் தெரியாத அதிலாபாதில் கெச்சப் எப்படி இத்தனை விற்கிறது என்று எவரும் ஆராயவில்லை. நான், அசுதோஷ் மற்றும் இந்தக் கடத்தலில் பங்கேற்ற முக்கிய வினியோகஸ்தர், கடைக்காரர்கள் எல்லோருமே வெற்றிக் குமிழியுள் மிதந்தோம். எந்தச் சரக்கும் சேதமடையாமல் விற்கிறது என்ற பரந்த நோக்கில் இது சரியென்று பட்டாலும், மார்க்கெட் கண்ணோட்டத்தில் இது பிழை. எல்லை கடந்து விற்பது கடத்தல். குற்றம். ஆனால் வெற்றியின் ஒளி அறிவுக்கண்களைச் சுலபமாக கூசச் செய்துவிடும் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் கவலைப்படவில்லை. ஆண்டவனே வந்தாலும் ஒன்றும் பிடுங்க முடியாது என்று இருந்தேன். இருந்தோம்.
ஆண்டவன் வரவில்லை. ஆடிட்டர்கள் வந்தார்கள்.
எங்கே எப்படி யாரால் துப்பு கிடைத்தது என்பது தெரியாது. ஆவடியில் இறங்கியதும் கம்பெனி ஆடிட்டர்கள், சுங்கவரி, வணிகவரி ஆடிட்டர்கள் என்று சிறிய மானாடு போல் கூட்டம். இரண்டு தொப்பை போலீஸ்காரர்கள் என்னைப் பிடித்தார்கள். ஆடிட்டர்கள் வரிசையாக என் குற்றங்களைச் சொல்லி அங்கங்கே கையெழுத்து பெற்றார்கள். பிறகு இன்ஸ்பெக்டர் போலிருந்த பெண் என்னை அன்றிரவு ஆவடிக் காவல் நிலையத்தில் சிறைவைப்பதாகச் சொன்னாள். தற்செயலாக அங்கு வந்தது போல் நடித்த என் ஆவடி நண்பர் கொடுத்த ஜாமீன், எங்கள் கம்பெனி ஆடிட்டர்கள் கொடுத்த உத்தரவாதங்களின் பெயரில், 'ஓடிப்போக நினைத்தால் என்ன ஆகும்' என்பதைத் தெளிவாகப் பயமுறுத்திய இன்ஸ்பெக்டர் என்னை மறுநாள் எங்கள் கம்பெனி அலுவலகத்துக்கு வரச்சொன்னாள்.
ரிச்சர்டும் அசுதோஷும் திரும்பிய போது அரைமணிக்கு மேலாகியிருக்கும். அசுதோஷ் பேசினான். "உன் மேற்பார்வை அதிகாரியான எனக்கோ அல்லது மேலதிகாரியான ரிச்சர்டுக்கோ தெரியாமல், சட்ட விரோதமாகவும் கம்பெனி விதிமுறைகளுக்குப் புறம்பாகவும், உன் விருப்பத்துக்கு நீயே தீர்மானித்துப் புரிந்த இந்த அத்துமீறல்களினால் கம்பெனிக்குப் பெரும் நஷ்டமும் அவமானமும் ஏற்பட்டுள்ளது" என்றான்.
நான் திடுக்கிட்டேன். "அசுதோஷ்.. உனக்குத் தெரியாமலா.."
ரிச்சர்ட் என்னை அமைதியாக இருக்கச் சைகை செய்தான். அசுதோஷ் தொடர்ந்தான். "சட்ட ஆலோசனையின் பெயரில் உன்னைக் காவலில் ஒப்படைக்க வேண்டுமானாலும், உன் குடும்ப நிலை கருதி போலீஸ் கேஸ் எதுவும் பதியாமல், உன்னை உடனடியாக வேலை நீக்கம் செய்யும்படி சிபாரிசு செய்கிறேன்".
ரிச்சர்ட், "உன் அதிகாரி என்றப் பொறுப்பில் அசுதோஷ் சொன்ன சிபாரிசை ஏற்று உன்னை உடனடியாக வேலையை விட்டு நீக்குகிறேன்" என்றான். அசுதோஷிடம் "நீ போகலாம்" என்றான்.
"அத்துமீறல்களினால் ஏற்பட்ட அத்தனை நஷ்டங்களையும் கம்பெனி ஏற்கும்" என்று சொன்ன ரிச்சர்ட், அடுத்த ஐந்து நிமிடங்களில் என்னிடம் நூறு கையெழுத்துக்களும் உறுதிமொழிகளும் வாங்கிக்கொண்டு, பதிலுக்கு என் பெயரில் போலீஸ் கேஸ் எதுவும் பதிவு செய்யாமல் வேலையை விட்டு நீக்கினான்.
நான் வெளியே வந்தபோது அசுதோஷைக் காணவில்லை.
"bastard!" என்றான் வத்சன். "இந்தியாவுல எந்த fmcgம் உன்னை வேலைக்கு எடுக்க முடியாம செஞ்சுட்டான் பாரு.. விஷயம் தெரிஞ்சதும் எங்களுக்குத் தாங்கலேடா... இதைப் பத்தி எங்க கிட்ட சொல்லியிருக்கலாமேடா? நாங்க சாட்சி சொல்லியிருப்போமே? உமேஷ் விவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வந்து சொன்னப்போ.. it was late.. you were destroyed.."
"the fact is அசுதோஷ் நினைச்சிருந்தா அன்னிக்கு நான் ஜெயிலுக்குப் போயிருக்கலாம்.. என் வாழ்க்கையே நாசமாகியிருக்கும். உங்க யாராலயும் எதுவும் செஞ்சிருக்க முடியாது. உமேஷ் கிட்டே சில விவரங்களை நான் தான் சொன்னேன்.. நான் தற்கொலை செஞ்சிக்குவேனோனு.. அந்த எண்ணம் என் மனசுல இருந்துச்சு.. அதை அவன் எப்படியோ தெரிஞ்சுகிட்டு என் கூடவே நிழலாட்டம் without sleep இருந்தான்.."
"லூசு.. அசுதோஷும் ரிச்சர்டும் உடந்தை.. அவங்க சூத்து பழுத்துறுமேனு பயந்து உன்னை மாட்டிவிட்டாங்க.. they sequestered you.. it all happened so fast.. இதுல அசுதோஷ் உங்கிட்டே மன்னிப்பு கூடக் கேட்காதது.."
"he did. சாவுறன்னிக்கு இமெயில் எழுதினானு சொன்னனே... அதுல வரிவரியா, துடிக்கத் துடிக்க, மன்னிப்புக் கேட்டிருந்தான். நோயினால வாடுறதையும், வலி தாளாம துடிப்பதையும்.. நாக்கு தொண்டைக்குள்ளயே அழுகத் தொடங்கிடுச்சாம்.. ஒவ்வொரு கணமும் மரணத்தை வேண்டினாலும் இழுத்துக்கிட்டே இருந்ததாகவும், என்னுடைய மனமார்ந்த மன்னிப்பு மட்டுமே அவனுக்கு மரணத்தைக் கொடுக்கும்னும் எழுதியிருந்தான். மரண தானம் கேட்டு ரொம்பக் கெஞ்சி எழுதியிருந்தான். 'i forgive you'னு பதில் எழுதினேன். 'கருணைத் தேன் தோய்ந்த உன் மன்னிப்பே என் உயிரணைக்கும் மருந்து. தகுதிகளுக்கு அப்பாற்பட்ட உனக்கு, தகுதியற்றவனின் நன்றி'னு அவன் பதில் போட்டான். மறுநாள் he passed away.. அடுத்த நாளே மரணம்!"
நீண்ட மௌனம்.
"things could have been different.." என்றேன் நிதானமாக.
"how so?"
"வத்சன்.. நானும் அசுதோஷும் சேர்ந்திருந்த அன்னிக்கு ராத்திரி.. 'வேலைக்குச் சேர்ந்த பின்னே தொடுவதில்லைனு தீர்மானிச்சோம்'னு சொன்னனே.. he offered to quit his job for me.. for me! அவன் வேறே வேலை தேடிக்கொள்வதாகவும் எங்கள் நெருக்கத்தைத் தொடர விரும்புவதாகவும் சொன்னான்.. என் பதிலுக்கு ரெண்டு நாள் அவகாசம் தரதா சொன்னான்.. நான் தேவையில்லைனு ஒதுக்கிட்டேன்.. என்னால உறவுக்கு commit பண்ணமுடியாதுனு சொன்னேன்.. besides, அப்போ எனக்கு எந்த மாதிரி உறவு வேணுமுன்னு ஒரு ஐடியா கூட இல்லாமருந்தேன்.."
திடீரென்று அழத் தொடங்கினேன்.
விக்கலாகத் தொடங்கிய அழுகை நெஞ்சைப் பிழிந்து துடித்துத் துடித்து வெளிவந்தது. குலுங்கிப் புரண்டு நெஞ்சிலடித்து அழுதேன். வத்சன் திகைத்தாலும் என்னைத் தடுக்கவில்லை. என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. பொங்கிப் பொங்கி வந்தது. வத்சன் என்னருகே வந்து என் தோள்களை மெள்ள அழுத்தினான். அமைதிப்படுத்தினான். அவன் தோள்களில் சாய்ந்தபடி அழுது முடித்தேன்.
"i am sorry.. நீ அசுதோஷை இத்தனை நேசிச்சது எனக்குச் சத்தியமா தெரியாதுடா.." என்றான்.
"எல்லாமே இப்போ கண்ணீர்ல கரைஞ்சு போச்சு.." என்றேன். "i feel better"
சிறிது நேர அமைதி.
"i cannot forgive him.. உன்னுடைய பெருந்தன்மை அவனுடைய வலி நிவாரணியாப் போச்சு.. பெருந்தன்மையா முட்டாள்தனமா தெரியலே.. அவன் இன்னும் துடிச்சிருக்கணும்.." என்றான் வத்சன்.
"let go, i did.."
"talk about death wish! on a lighter vein, உன்னோட இமெயில் தான் அசுதோஷோட மரண யாழிசை"
புன்னகைத்தேன்.
வத்சன் பெரிதாகச் சோம்பல் முறித்தான். "என் மரண ambiance கவலை நீங்கியது நண்பா!" ஏனோ அடுக்காய்ச் சிரித்தான். "கற்பனை செஞ்சுப் பார்த்தேன்.. தேவதைகளின் யாழிசை, சுமைகளைக் கரைக்குதோ இல்லையோ நிரந்தரமாக் கண்மூட இதமாகவே இருக்கும்னு தோணுது.." என்றவன், தலையணையைப் பொருத்தி பால்கனியில் வசதியாகப் படுத்தான். "i need to crash.. மணி அஞ்சாவுதுடா.. what a night! வருஷக் கணக்காகும்டா இது செறிக்க.." என்றான். தன்னிடமிருந்தப் போர்வையால் தலைகால் மூடிக் கொண்டான்.
"தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும், அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்"
"shakespeare சொன்னதா?" சிரித்தான்.
"ஆமாம்.. மறுபிறவியில்" என்றேன்.
சில நிமிடங்களில் வத்சனின் குறட்டையொலி கேட்டது. பரவிக் கிடந்த குப்பையை ஒதுக்கித் தள்ளினேன். இன்னொரு போர்வையை வத்சன் மீது போர்த்தினேன். சுவரோரமாகத் தலையணையைப் பொருத்தி, சாய்ந்து, இழுத்துப் போர்த்துப் படுத்தேன். வெளியே ஜெயநகர் விழிக்கத் தொடங்கியது. நான் உறங்கத் தொடங்கினேன்.