2013/08/17

கடைசிவரை கணினி



    ணினி என்னைத் தொடக் காரணமாயிருந்த பெண் இன்று எங்கேயிருக்கிறாளோ, எப்படி இருக்கிறாளோ?! ஆகஸ்டு பதினைந்தை அசலில் கண்டாளோ? அல்லது அப்பனுக்குப் பின் கணவன், கணவனுக்குப் பின் பிள்ளை பெண் பேரர்கள் என்று தொடர் அடிமையாக இருக்கிறாளோ?

அந்தத் தென்னைமரம் பசுமாடு கதைக்குப் பிறகு வருகிறேன், அவள் எங்கிருந்தாலும் வாழ்க என்ற நினைப்போடு (பின்னணியில் தவளை சத்தம் சகிதம்).

    உங்களுக்கு எப்படியோ தெரியாது, நானறிந்த மட்டில் கணினிப்பிடி உடும்புப்பிடி. நினைத்துப் பார்க்காத, பார்க்கவும் முடியாத வகைகளில் பிடித்து வைத்திருக்கிறது. பாதிக்கிறது. பாதிக்கும் என்பதும் புரிகிறது. உதாரணத்துக்கு கீழ்க்காணும் யஜூர்வேத சான்னித்யப் ப்ரஷதமா:
        pecados assombrar nos!, pragas legado en crianças!, manda manda!, escarraar te!

என்ன சுந்தர்ஜி? அது யஜூர் வேதமில்லையா? அப்போ உபநிஷதமா? அதுவுமில்லையா? ப்ச.. அது மட்டும் நாங்க என்ன, பொருள் தெரிஞ்சா சொல்றோம்? ஏதோ உங்க தயவுலயும் கணினி தயவுலயும் கணினியறியக் காரணமான அந்தப் பெண் தயவாலும் கொஞ்சம் தெரிஞ்சுக்க முடியுது - இதுவும் அதுவோனு நினைச்சுட்டேன்.

போகட்டும். மேற்கண்ட ஞானவரிகளுக்கு வருவோம். இவை மூன்றாம்சுழி ப்லாகின் spam commentகளாகக் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து வருகின்றன. வெனிசுவேலா, ரஷியா என்று பலவித இடங்களில் இருந்து வந்து விழும் கருத்துக் குருத்துக்கள். ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதப்பட்டிருந்தால் அனானியாகப் பதிவாகியிருக்கக் கூடிய, ஒரு சாதாரண IP Mask உதவியுடன் வந்துவிழும் SPAM மழை. IP Mask என்ன பெரிய புடலங்காய்? ஒன்றுமில்லை.

'அன்புள்ள எங்கள் பிளாக், உங்கள் தயவால் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன். நிற்க, வாந்திபேதி எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ரொம்ப நாளாக ஆசை. அதைப் படங்களுடன் அறியும்படி ஒரு சுட்டியை அடுத்து இணைப்பீர்களா?' என்று கருத்திட நினைக்கிறேன்.. அல்லது..

'இன்னாம்மே.. சும்மா எதுனா கலாய்ச்சினுகிறே? ஒயுங்கா எயுதுவியா, இல்லே எஸ்க்யுஸ் வுட்டுகினே இருப்பியா?' என்று கவிநயாவை கலவரப்படுத்த விரும்புகிறேன்..

..என்று வையுங்கள். இந்தக் கருத்துக்களை அவல் உப்புமா+காபி சுவைத்தபடி, சென்னை எக்ஸ்பிரஸ் hd பிரதியை இணையத்தில் பார்த்தபடி, சிகாகோவில் சாவகாசமாக எழுதிவிட்டு, ஒரு இலவச ஐபி முகமூடி மென்பொருள் தயவால் பெர்முடா, பங்கலாதேஷ் அல்லது பூந்தமல்லியிலிருந்து வரும்படி மாற்றி அனுப்பமுடியும். அனானி கருத்தாக வந்தாலும் நேரம் இடம் பொருள் ஏவல் பார்த்து, எந்த ஊரில் யார் எங்கே இருக்கிறார்கள், எந்தப் படுக்கையில் யார் ஒண்ணுக்கு போயிருக்கிறார்கள் என்று ஸ்டேடஸ் பார்த்துத் துப்பறிந்துத் தூக்கம் தொலைக்கும் ஷெர்லாக்களின் முகத்தில் கொஞ்சம் தார் பூசமுடியும். அல்லது அசல் நல்ல காரியங்களுக்கோ கசமுசாக்களுக்கோ சங்கேதச் செய்தியும் அனானி இமெயிலும் அனுப்பமுடியும். இணைய அடையாளத்துக்கு ஒரு முகமூடி. அம்புட்டுதேன் ஐபி மேஸ்கு. அட்ரா மோளம்! லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ்...

ஞானவரிகளின் பொருள் ஓரளவுக்குப் புரிவதாலும் இவை தொடர்ந்து வருவதாலும்.. இவற்றை ஒரு செய்தியாகப் பாவிக்கலாமா கூடாதா, இது போன்ற குறிப்பற்ற பொதுவானக் கணினி கருத்துக்கள் தனிப்பட்ட மிரட்டலா இல்லையா, கூகுலுக்கும் போலீசுக்கும் சொல்வதா தவிர்ப்பதா என்று ஒற்றையா இரட்டையா போட்டு வருகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அனானியாகவோ நேரிடையாகவோ சொல்லுங்கள். அல்லது தி.தனபாலனின் இணைய முகவரியைப் பயன்படுத்தி அவர் சொல்வதாகவும் சொல்லலாம். உங்கள் வசதி.

IP முகமூடி என்றில்லை, இலவசமாகக் கிடைக்கும் இணையப் ப்ராக்சிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை வளர்மதி (பூத்தூரிகை) விளக்கியதும் நல்ல தமிழ் சினிமா பார்த்தது போல் அதிர்ந்திருக்கிறேன். ஆசிரிய நண்பர் அரசன், புலிகளல்லாத இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செய்தி அனுப்ப இந்த முறையைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று தெரிந்து சில நாள் பயந்திருக்கிறேன். தன் இணையக்கணக்கு அடையாளங்களினால் உண்டான சிக்கலில் வாழ்க்கையே நாசமான நண்பரின் கதையை எப்பொழுதோ ஒரு முறை எழுதியிருக்கிறேன்.

கொஞ்சம் இந்தப் பக்கம் வந்தால் கணினி சுகமாகவே இருக்கிறது.

கணினி தயவில் கண்காணாதவர்களுடன் நட்பு கொள்ள முடிகிறது. மனம் விட்டுப் பேசமுடிகிறது. இன்னும் நிறைய செய்ய முடிகிறது. சென்னையிலிருந்து சிகாகோவுக்கு கணத்தில் பணம் அனுப்பமுடிகிறது. பெங்களூரு புன்னகையை பாஸ்டனில் பார்க்க முடிகிறது. ஒரே நேரத்தில் ஒரு கணினி ஜன்னலில் சென்னை கணேஷுடனும் இன்னொரு கணினி ஜன்னலில் பெங்களூரு ரஞ்சனியுடனும் வளவளாவ முடிகிறது. சிகாகோ கணினியில் மறந்து போன வணிகக் காகிதம் ஒன்றை ப்ரேங்க்பர்ட் ஏர்போர்டில் ப்ரின்ட் எடுத்து பிசினஸுக்குத் தயாராக முடிகிறது. கூகுல் லிங்க்டின் பேஸ்புக் டம்ளர் என்று உலவித் தேடி ஜாதகம் கணித்தது போல் ஒருவரையோ பலரையோ தேவைக்கு மேல் அறிந்து அதற்கேற்ப நடக்க முடிகிறது. விளையாட்டுப் பிள்ளையின் சிவப்பியில் இரண்டு வருடங்களுக்கு முன் பதித்த குட்டி ஜிபிஎஸ் வழியாக எங்கே போகிறார் என்று இப்போதும் அறிய முடிகிறது. (ஹிஹி.. ச்ச்சும்மா).

விடுங்க, இதெல்லாம் ஜூஜூபி. வருங்காலத்தில்.. இன்ன நேரத்தில் கண்ணை மூடவேண்டும் (நிரந்தரமாக) என்றுத் தீர்மானித்ததும் கணினி வளையலை அணிந்து கொண்டால் சரியான நேரத்தில் அலாரம் வைத்தது போல் பத்தாயிரம் பூக்களால் அடித்த ஒரு மென்மையான அதிர்ச்சி கொடுத்து இதயத்தை நிறுத்தவும் முடியும். (இப்போதே முடிகிறது என்றாலும் பொதுவில் வர நாளாகும்). என் முடிவு அப்படி வந்தால் நன்றாக இருக்கும். கடவுளுக்குப் பதில் கடைசி வரை கணினியை நம்பலாம் என்றே தோன்றுகிறது.

என்ன.. கணினியால் நிறைய முடியும் என்றாலும் எல்லாம் ஆகாது. அன்பும் காதலும் மட்டும் மனித செயலாக, மனித அடையாளமாகவே இருந்துவரும். ஹ்ம்ம். அன்பினாலும் காதலினாலும் என்ன பிரயோஜனமோ, யார் கண்டார்கள்!

இன்றைக்கு ஓரளவுக்குக் கணினிப் படம் காட்டும் நான், அந்தப் பக்கமே போகாமலிருந்திருக்கக் கூடும் என்பதை நினைத்தால் நடுக்கமாக இல்லை? சசிகலா, உங்களைத்தான் கேட்கிறேன். நீங்க தானே பதிவெழுதச் சொன்னீங்க? (நன்றி :)

    எனக்கு இருபது வயது என்று நினைக்கிறேன். விரும்பிய ஐஐஎம் கிடைக்காமல் நொந்திருந்தேன். கிடைத்த வேலையையும் ஐஐஎம்மை நம்பி விட்டிருந்தேன். இரண்டு மாதங்களாக நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தவள், அவளுக்கு இடம் கிடைத்து எனக்கு ஐஐஎம் கிடைக்கவில்லை என்றுத் தெரிந்ததும் 'இனி நாம் பழக வேண்டாம் துரை' என்று விலகிக்கொண்ட கடுப்பும் ஏமாற்றமும் மிகுந்திருந்தேன். சிகரெட் மதுவில் ஈடுபாடு இல்லாததால் (காசு இல்லாததாலும்) அங்கேயும் மறதி தேட முடியாத நிலையில், என் பம்மல் நண்பன் தேசிகன் ஒரு செய்தியோடு வந்தான். அவன் வீட்டு ஹிண்டு பேப்பரை நான் ஒசியில் படிப்பது வழக்கம். முழுப் பக்க விளம்பரம். பெங்களூரில் ஒரு கணினி கலாசாலை தொடங்கப் போவதாகவும் அகில இந்திய அளவில் தேர்வு நடக்கப் போவதாகவும் முபவ. அனியாயத்துக்கு கட்டணம். அந்த நாளிலேயே இருபதாயிரமோ என்னவோ. இரண்டு வருட முதுகலைப் படிப்பு. நுழைவுத் தேர்வில் முதல் ஐந்து இடங்களை வெல்வோருக்கு வருடத்துக்கு மூவாயிரம் ரூபாய் புத்தகம் மற்றும் கணினிக்கான உபரிச் செலவு என்று கொடுத்தார்கள். அது தவிர, முதலிடத்தை வெல்பவர் படிப்பு செலவு மொத்தமும் கொடுத்தார்கள்.

மொரார்ஜியினால் துரத்தப்பட்ட ஐபிஎம் நிறுவனம், பின் கதவு வழியாக இந்தியா நுழையத் திட்டம் போட்டது என்ற குழப்படி செய்தி தெரியாமல் (தெரிந்தாலும் ஏதும் செய்திருக்க முடியாத அறிவற்ற இளமை) கோலாகலமாகத் திறக்கப்பட்ட அந்தக் கணினி கலாசாலையின் நுழைவுத் தேர்வெழுதி, அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் வந்தேன். முதல் இடத்தைப் பிடித்தவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்.

இரண்டாவது இடத்தினால் எனக்கு ஒரு பயனும் இல்லை. கணினிப் படிப்புக்கான பணம் கட்ட முடியாத நிலை. என் நண்பர்கள் சிலர் எனக்கு உதவ முன்வந்தாலும் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும் செலவுக்கு எங்கே போவது?! வேலை காதல் படிப்பு என்று எல்லாமே கைக்கெட்டி வாய்க்கெட்டாமலே போன சோகத்தில், சினிமா பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். இசை எம்எஸ் விஸ்வனாதன்.

'என்னால் சேர முடியாது' என்று கணினி கலாசாலைக்காரர்களுக்கு எழுதினேன். இளைஞர் காங்கிரசில் சேர்ந்தேன். சஞ்சய் காந்தி தயவில் ஐயாயிரம் ரூபாய் வரை கேள்வி கேட்காமல் கிடைத்துக் கொண்டிருந்த கடன் ஸ்கீமில் கணிசமாக அடிக்கத் திட்டம் போட்டிருந்த செங்கை இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு என் இங்க்லிஷும் இந்தியும் தேவைப்பட்டது. ஒரு கடன் பத்திரம் முடித்தால் எனக்கு ஆயிரம், தலைவருக்கு மூவாயிரம், வங்கி மேனேஜருக்கு ஐநூறு, கடன் வாங்கியவருக்கு ஐநூறு என்ற விகிதப்படி பட்டுவாடா செய்ய வேண்டும். கடன் கொடுத்த கணக்கை இந்தியிலும் இங்க்லிஷிலும் எழுதி அவருக்கு அனுப்ப வேண்டும். அதான் வேலை. கட்சியில் சேர்த்துக் கொண்டு பணம் தருவதாகவும், வளர்ந்து டெல்லியில் எம்பி ஆகலாமென்றும் தலைவர் ஆசை காட்டியதில் விழுந்தேன். வீட்டில் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. 'என்னடா இது நாலு தங்கைகளை வச்சுக்கிட்டு, இப்படி அரசியல்ல குதிக்கறேன் சினிமா கதை எழுதுறேன்னு என்னென்னவோ சொல்லிட்டிருக்கே? ஒழுங்கா வேலைக்குப் போடா.. அம்மா கர்ப்பரட்சே, அபிராமி! என் பிள்ளைக்கு நல்ல புத்தியைக் கொடுமா' என்று புலம்பத் தொடங்கினார். அவசரத்துக்கு இரண்டாயிரம் ரூபாய்க்குச் சேவை செய்துவிட்டு அத்துடன் அரசியல் ஆசையை விட்டேன்.

அந்த நிலையில் கலைஞரின் நெருங்கியவராக இருந்த நல்லதம்பியின் 'நெருங்கியவராக' இருந்த ஒருவர் எனக்கு துபாயில் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார். அவருக்குச் சொந்தமான ஒரு கம்பெனியில் மேனேஜர் வேலை. இந்திய டேக்சி டிரைவர்களை மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி, அங்கே அவர்களை 'மேய்க்கும்' மேனேஜர் வேலை. டிரைவர்கள் கொடுக்கும் 'விசா செலவுக்கான' பெருந்தொகையை வாங்கி அங்கே அவர் கணக்கில் சேமிக்க வேண்டும். அங்கிருந்து வருடாவருடம் இன்னொரு அடையாளம் தெரியாத வங்கிக்கணக்குக்கு பணத்தை மாற்ற வேண்டும். இதான் வேலை. துபாயில் நூறு பணம் சம்பளம். அதைத் தவிர, இந்தியாவில் பம்மல் வங்கிக் கணக்கில் மாதம் இரண்டாயிரம் சம்பளம். அரசாங்கத்துடன் பேசிப் பழகி முடிவுகள் எடுக்க என் ஆங்கிலமும் பட்டப்படிப்பும், அதே நேரம் 'நம்மாள்' என்ற முறையில் என் நாணயமும் நெருங்கியவருக்கு உதவும். வெளிநாடும் வேலையும் சம்பளமும் எனக்கு உதவும். அவருக்கு இந்த ஏற்பாடு பிடித்திருந்தது. எனக்கும். வீட்டில் சொல்வதில்லை என்று தீர்மானித்திருந்தேன். துபாய் போனபின் சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு இருந்தேன்.

பத்து நாட்களுக்குள் பாஸ்போர்ட் வந்தது. ஓசியில் டிவிஎஸ் ஒட்டிக்கொண்டிருந்த எனக்கு கார் டிரைவிங் லைசென்சும் வந்தது. நான் எங்கேயும் போகவில்லை. எதையும் செய்யவில்லை. எல்லாம் நெருங்கியவரே பார்த்துக் கொண்டார். தொடர்ந்து சில வாரங்களில் விசாவும் வந்தது. 'என்சைக்லோபிடியா விற்கும் வேலை' என்றது என் விசாத்தாள். 'என்ன இழவாக இருந்தால் என்ன!' என்று நான் கிளம்பத் தயாரானேன்.

கிளம்ப ஒரு வாரம் இருக்கும் பொழுது எனக்கு ஒரு தந்தி வந்தது. கணினி கலாசாலையிலிருந்து. சென்னை சபையர் அருகே இருந்த ஹோட்டலில் வந்து சந்திக்குமாறு சொன்ன தந்தியைத் தூக்கி எறியலாமென்று நினைத்தேன். ஏனோ தெரியவில்லை, தியேடரில் படமாவது பார்ப்போம் என்ற சமாதானத்தோடு கிளம்பினேன்.

"மிஸ்டர் துரை. உங்களுக்கு முதல் இடம் கிடைத்திருக்கிறது. கணினிப் படிப்பின் மொத்த செலவையும் கலாசாலையே ஏற்கும். பிடியுங்கள் அட்மிஷன் பேப்பர்ஸ். இன்று மாலை அமெரிக்க எம்பசியில் ஒரு இன்டர்வ்யூ. அது சரியாகிப் போனதென்றால் உங்களுக்கு அட்மிஷன் கன்பர்ம் ஆகும்" என்று கைகுலுக்கினார் சிவப்பாக இருந்த ஒரு கோட் சூட் இந்தியர்.

ஆச்சரியமாக இருந்தது. பெங்களூர் படிப்புக்கு அமெரிகன் எம்பசியில் எதற்கு இன்டர்வ்யூ என்றெல்லாம் கேட்கத் தோன்றவில்லை. "ஒரு பெண் அல்லவா முதல் இடத்தை வென்றார்? என்ன ஆச்சு?" என்றேன்.

"ஆமாம்.. ஆனால் அந்தப் பெண் தனக்கு இந்தப் படிப்பில் இஷ்டமில்லை என்று சொல்லிவிட்டார். நாங்கள் பலமுறை அவர் வீட்டுக்கே சென்று கேட்டுப் பார்த்துவிட்டோம். பிடிவாதமாக இருக்கிறார். அவர் விட்டுக் கொடுத்ததால் உங்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது. நீங்கள் அவசரப்பட்டு படிப்பு வேண்டாம் என்று எழுதிவிட்டதால் அட்மிஷன் பேப்பர்ஸ் மறுபடி தர வேண்டியிருக்கிறது. உங்களை மாணவராக அடைவதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி" என்றார்.

"கொஞ்சம் யோசிக்கிறேன். மாலையில் பார்ப்போம்" என்றேன். அமெரிக்க தூதரகத்தில் இன்டர்வ்யூ முடிந்து எதிரே இருந்த உட்லண்ட்ஸ் டிரைவின்னில் காபி டிபன் சாப்பிட்டோம். மதுரைப் பெண்ணின் முகவரி வேண்டும் என்றேன். கொடுத்தார்கள்.

ஏனோ தெரியவில்லை, மதுரைப் பெண்ணைப் பார்த்து விவரம் கேட்க வேண்டும் என்று மதியத்திலிருந்து தோன்றிய எண்ணத்தை ஒடுக்க முடியவில்லை. முகமறியாத பெண்ணுக்கு நன்றியாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது. நண்பன் வயலினிடம் (பெயர்க்காரணம் இன்னொரு சமயம்) யெஸ்தி கடன் வாங்கிக் கொண்டு மதுரை சென்றேன். அதிகாலை ஏழுமணி சுமாருக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெருவில் இருந்த ஹோட்டலில் குளித்து உடை மாற்ற மட்டும் வாடகைக்கு ரூம் கொடுத்தார்கள். அட்டகாசமாக டிபன் சாப்பிட்டு விட்டு (அப்பொழுதெல்லாம் ரெண்டு இட்லி, பொங்கல், வடை, சாதா தோசை, பூரி மசாலா, காபி என்று சர்வ சாதாரணமாக நாஷ்தா சாப்பிட முடிந்தது) மதுரைப் பெண் வீடு தேடிக் கிளம்பினேன்.

பெண்ணின் அப்பா வரவேற்றார். என் பெயரைக் கேட்டதும் அவர் கேட்ட முதல் கேள்வி: "பாக்கறதுக்கு பிராமணாள் போல இருக்கியேபா?". திண்ணை கடந்து உள்கட்டில் ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். கிராமத்து அசல் அக்கிரகார வீடு. பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

"ஐயா.. ஆமாம்" என்று என் சர்மாவைச் சொன்னதும், "அப்படியா? எந்த ஊர் பூர்வீகம்?" என்றார்.

தோளைக் குலுக்கி எனக்குத் தெரிந்தவரையில் சொன்னேன்.

"நன்னா தெரியுமே? அவாள்ளாம் த்ர்னாங்கோயில்லையோ? நீ என்ன படிச்சிருக்கே? உத்யோகம் பாக்கறியா? எத்தனை அக்கா தங்கை? அப்பா அம்மா என்ன பண்றா? காபி சாப்பிடுறியா?"

உரையாடல் வேறே ரூட்டில் போவதை உணர்ந்து சடன் ப்ரேக் போட்டேன். "சார்.. உங்க பெண்ணோட கொஞ்சம் பேசலாம்னு வந்தேன்" என்றேன்.

"எம்பொண் கிட்டயா? ஏன்? எதுக்கு? யாரு? உனக்கு எப்படி அவளைத் தெரியும்?" என்று வரிசையாக கேள்விக்கணை தொடுத்தார். காபி தரமாட்டாரென்று தோன்றியது.

வந்த விவரத்தை சொன்னேன். "சார்.. மொதல் இடத்துல வரது எவ்ளோ பெரிய சாதனை.. ஏன் விட்டுக் கொடுத்தாங்கனு கேட்க வந்தேன். இது பெரிய வாய்ப்பாச்சே சார்?" என்றேன். சொல்லும் பொழுது அருகே இருந்த அறையில் (ரேழி?) நிழலாடுவதை உணர்ந்தேன். என் எதிரே இருந்த தூண்களில் தொங்கிய செவ்வக நிலைக்கண்ணாடியில் லேசாக ஒரு முகம் தெரிந்தது.

"பொம்னாட்டிகளுக்கு எதுக்கு ஊர் விட்டுப் போய் படிப்பு வேண்டிக்கிடக்கு? அதுவும் கம்பியூடர் எல்லாம்? நாளைக்கு வாக்கப்பட்டு போற இடத்துல அவாளா சொன்னா எல்லாம் படிச்சுக்கட்டும்.. இருக்குற செலவு போறாதா?"

"சார்.. முதல் ரேங்க்னால அவங்களே எல்லா செலவையும் ஏத்துக்குவாங்க சார். இது எவ்வளோ பெரிய சான்ஸ்! நாளைக்கு அமெரிக்கா எல்லாம் போகலாம். அதும் பெண்கள் இப்படி முதல் ரேங்க்ல வந்தா அதை விடுறது தப்பு சார்"

சொல்லியிருக்கக் கூடாது. வெடித்தார். "என்ன தப்புங்கறே? யார்டா நீ? எம்பொண்ணுக்கு எது தப்பு ரைட்டுனு எனக்குத் தெரியாதா? இந்த மாதிரி சொல்லிண்டு தான் ஒரு வடக்கத்திக்காரனும் வெள்ளைக்காரனும் வந்தாங்க.. வாசல்லயே வச்சு போங்கடான்னுட்டேன்.. உன்னை உள்ள விட்டது தப்பா போச்சு"

உடனே பணிந்தேன். "சாரி சார். தெரியாம சொல்லிட்டேன். தப்பா நினைக்காதீங்க. நீங்க வேணாம்னு சொன்னதால உங்க பொண்ணோட இடத்தை எனக்குக் கொடுத்திருக்காங்க. ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா யோசிச்சு சொல்லுங்க சார். நான் இதை உடனே எடுத்துக்கணும்னு இல்லை சார். நாலு நாள் வேணும்னா யோசிச்சுக்குங்க. அங்கே நிறைய பெண்கள் படிக்கிறாங்க. உங்க பெண்ணுக்கு ஒரு ஆபத்தும் வராது". உள்ளறையோரமாக லேசான கொலுசு சப்தம் கேட்டது.

"அதெல்லாம் யோசிக்கறதுக்கு ஒண்ணும் இல்லே. ஏதோ டெஸ்டு எழுதினா. பேங்கு எக்சாம் எழுதுறி தடிச்செறுக்கினா இதையெல்லாம் எழுதி வைக்கறா.. அவ அம்மா குடுக்குற எடம். அவளுக்கு இந்தப் படிப்பெல்லாம் வேண்டாம்" என்றார். உள்ளறையோரமாக ஒரு பெண் ஒரு தட்டில் இரண்டு கப் காபி கொண்டு வைத்ததை உணர முடிந்தது. சட்டென்றுத் திரும்பிப் பார்க்க முடியவில்லை. பார்த்திருந்தாலும் பயனிருந்திருக்காது. காபியை என்னிடம் கொடுத்தார். அற்புதமான டிகாக்ஷன் காபி.

காபி அருந்தியதும் பத்து நிமிடம் போல் பேசினோம். கடைசியில் அவருக்குப் பொறுமை குறையத் தொடங்கியதும், "எனக்குக் கிடைச்ச இந்த இடம் உங்க பெண் போட்ட பிச்சைனு சொல்வேன் சார்" என்றேன். சினிமாவில் எழுதத் துடித்த எனக்கு டயலாக் பேசவா வராது? "அவங்க கிட்டே ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு போயிடறேன்"

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அவளுக்கு எது நல்லதுனு பெத்தவனான எனக்குத் தெரியும். ஒண்ணு செய்.. உங்காத்து அட்ரெஸ் குடுத்துட்டுப் போ. எம்பொண் ஜாதகத்தை அனுப்பறேன். பரவாயில்லையா?" என்றவரிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் என் பம்மல் முகவரியை எழுதிக் கொடுக்க முன்வந்தேன். ஏன் அப்படித் தோன்றியதோ தெரியவில்லை, தெருப்பெயரை மாற்றி எழுதிக் கொடுத்தேன். இன்றைக்கும் லேசாக உறுத்துகிறது.

நெருங்கியவரிடம் எனக்குத் துபாய் வேலையில் இஷ்டமில்லை என்று சொன்னேன். அவரிடமும் தேசியின் அண்ணனிடமும் காங்கிரஸ் தலைவரிடமும் ஆளுக்கு ஆயிரம் கடன் வாங்கினேன். பெங்களூரு சென்று கணினி கலாசாலையில் சேர்ந்தேன்.

    தென்னைமரத்தில் இனி பசுமாட்டை கட்டலாம்.

சேர்ந்த முதல் வாரமே தனியறையில் வீற்றிருந்த வேக்ஸ் மினியைக் காட்டினார்கள். இருபத்து நாலு மணி நேரமும் கணினி உபயோகிக்க ஒரு கார்டு கொடுத்தார்கள். குளுகுளு அறையின் மணத்தில் மனதைக் கொடுத்தேன். விஎம்எஸ் புடலங்காய் என்று ஏதேதோ சொல்லிக் கொடுத்தார்கள். சிஸ்டம்ஸ் அனாலிசிஸ், கோட் செக்மன்ட், கெர்னல், அது இது என்று என்னென்னவோ கற்றேன். சிஎப்டிஆர்ஐ, அமெரிக்க எம்பசி நூலகம், தில்லித் தூதரகம் போன்ற அமைப்புகளுடன் சுலபமாக கணினியில் நெட்வொர்க் செய்யச் சொல்லிக் கொடுத்தார்கள். ஸ்ட்ரெடிஜிக் டிசைன், காக்னிடிவ் அசோசியேசன் என்று மேல்தட்டில் நிறையக் கற்றேன். கணினி அறையின் குளுகுளு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இருபத்து நாலு மணி நேரம் கணினி கிடைத்தாலும், தினம் ஹாஸ்டலில் கொடுத்த சப்பாத்தியும் உடன் சாப்பிடத் தொடங்கிய மஞ்சள் மளேர் மங்களூர் பெண்ணும் கவனத்தில் இருந்தார்களே தவிர கணினிப் படிப்பு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. என்றாலும் நான் முதல் வகுப்பில் தொடர வேண்டியிருந்தது - இல்லையென்றால் ஸ்காலர்ஷிப்பை நிறுத்திவிடுவார்கள் என்ற பயம். கணினியறையின் குளுகுளு பிடித்திருந்தது. தொடர்ந்து முதல் வகுப்பில் வந்ததால் நிறைய அமெரிக்க அறிமுகங்கள் கிடைத்தன. அடுத்த ஒரு வருடத்தில் சிபிஐ என்று இக்கட்டாகி கலாசாலை சீக்கிரமே காலிசாலையானது. மறுபடி ஐஐஎம் எழுதத் தீர்மானித்தேன்.

கணினிப் படிப்பு நின்றாலும், என் அமெரிக்க வாழ்வு அங்கே விதைக்கப்பட்டது என்பதும் விதைத்தவர் அந்த மதுரைப் பெண் என்பதும் என் வாழ்நாளின் கடைசி நொடி வரை மறக்க முடியாது. கணினியுகத்தில் என்றைக்காவது அவரை சந்திக்க முடியாமலா போய்விடும்?

தொடர, Expatguruவை அழைக்கிறேன்.

2013/08/10

கண்பிடுங்கி நீலன்

2


1


    ரு மணி நேரம் காக்க வைத்துப் பின் ரகுவை உள்ளே அழைத்தார் டாக்டர். "உங்களை உள்ளே வர வேணாம்னு சொன்னதுக்கு மன்னிச்சுருங்க ரகு. சில சோதனைகளைத் தனிமையில் செய்ய மருத்துவச் சட்டம் இன்னும் எங்களுக்கு அனுமதி கொடுக்குது.. எங்களுக்கும் அது தேவை.." என்றார் புன்னகையுடன்.

"பரவாயில்லை டாக்டர்.. நீங்க அனுமதிச்சிருந்தாலும் எனக்கு துணிச்சல் கிடையாது"

டாக்டர் புன்னகை குன்றாமல் "விமலாவுக்கு அபார்ஷன் அபாயம் இருக்கிறது. எந்த ட்ரீட்மென்டுக்கும் இது ரொம்ப சீக்கிரம். எத்தனை வாரக் கர்ப்பம் தெரியுமா?" என்றார்.

"பதினேழு வாரம்னு நினைக்கிறேன் டாக்டர்.. சரியாத்"

"நாட் பேட். பதினெட்டு வாரம். நிறைய கணவர்களுக்கு இதிலெல்லாம் அக்கறை கிடையாது. படுக்குறதோட சரினு போயிருவாங்க"

"என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன் டாக்டர். விமலா இல்லாமல்.."

"பொறுங்கள். அந்த டயலாக் இப்ப வேணாம். டூ எர்லி" என்றார் டாக்டர். ப்லேஸ்டிக் புன்னகை என்று நினைத்தான் ரகு. "உங்க மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் உண்டா?"

"உண்டு.. ஆனால் குழந்தை பெறத் தீர்மானித்ததும் ஆறு மாதம் நாங்கள் குடிக்கவில்லை டாக்டர். அதற்கப்புறம் தான் பாதுகாப்பில்லாமல்.. கருத்தரிக்கவே முயற்சி செஞ்சோம்"

"வாட் அபவுட் சிகரெட்ஸ், ட்ரக்ஸ்?"

"வி டோன்ட் ஸ்மோக். என் மனைவி விளம்பரத்துறையில் பெரிய அதிகாரி டாக்டர். வி கெட் இன்வைடட் டு எக்சாடிக் பார்டிஸ் ஆல் த டைம். எப்பவாவது கொகெயின் அல்லது மரிவானா.. ரொம்ப ரேர்.. ஆனா எனக்குத் தெரிஞ்சு கடந்த மூணு வருஷமா நாங்க எந்த போதைப் பொருளையும் தொட்டதில்லை டாக்டர்.. வி ஆர் க்ளீன்.. விமலா ரொம்ப மன உளைச்சல்ல இருக்கா டாக்டர்.. புது வீடு, கர்ப்பம்.."

"கரு அதிரும் அளவுக்கு இவை பாதிக்குதுன்னா.. உங்க ரெண்டு பேருக்குள்ள அன்னியோன்யம் குறைவா? இல்லை அவங்க இயல்பிலேயே மனோதைரியம் குறைஞ்சவங்களா?"

"எங்க பாரம்பரியத்துல புலியை முறத்தால் விரட்டுன பொம்பளைங்க பத்தி லெஜன்ட் இருக்கு. ஆனா பார்வையாலயே புலியை விரட்டுற டைப் என் விமலா. ஷி இஸ் தட் ஸ்ட்ராங்க். ஷி ஆல்சோ லவ்ஸ் மி டீப்லி.." விமலாவின் கனவைப் பற்றிச் சொன்னான். அன்று நடந்த விபத்து, கிழவி பற்றிச் சொன்னான். "ஐ திங்க்.. விமலா இந்த சம்பவங்களினால ரொம்ப ஆடிப்போயிருக்கா.. இல்லின்னா.."

"கிழவி சூனியம் வச்சிருப்பானு நினைக்கிறீங்களா?" சிரித்தார் டாக்டர். "கமான் ரகு.. வாட் டு யு டூ பார் எ லிவிங், ட்ரீம்?"

குழந்தைகள் புத்தகம் எழுதிப் பிரபலமானதைச் சொன்னான்.

"ஓ.. யு ஆர் த ஒன்!" வியந்தார் டாக்டர். "என் பெண்ணுக்கு உங்க புத்தகம்னா உயிர். ஆடோகிராப் தந்துருங்க ப்லீஸ். அப்ப உங்களை ட்ரீமர்னு சொன்னது உண்மை தான்" என்றுச் சிரித்தார். ப்லேஸ்டிக் மறைந்து சினேகம் தெரிந்தது. "கவலைப்படாதீங்க. இத்தனை தொடக்கக் கர்ப்பத்துல அதிகமா மருத்துவம் வழங்கவும் தயக்கமா இருக்குது. ப்ரெதின் ஷாட் குடுத்திருக்கோம். 48 மணி நேரம் விமலா எங்க பார்வைல இருக்கட்டும். முழு ஓய்வு தவிர வேறே ட்ரீட்மென்ட் தேவையில்லை. சில சோதனைகள் செய்யணும். செர்விக்ஸ் அளவெடுக்கணும். ப்ரொஜெஸ்ட்ரோன் ட்ரீட்மென்ட் தேவையானு பார்க்கணும். தேவைப்பட்டா கர்ப்ப காலம் முழுக்க ட்ரீட்மென்ட் தர வேண்டியிருக்கும். இன்ஷூரன்சுல சொல்லிடுங்க. உங்க மனைவிக்கு ஓய்வு தேவை. ஓய்வுனா கம்ப்லீட் பெட் ரெஸ்ட். இன்னும் ஆறு வாரத்துக்காவது அப்படி இருக்கணும். இருபத்துநாலு வாரத்துக்கு மேலே ப்ரொஜெஸ்டிரோன் கொடுக்க முடிஞ்சா கர்ப்பம் வெற்றிகரமா முடிய நிறைய வாய்ப்பிருக்கு. ஆறு வாரம் உங்க மனைவியை நீங்க நிழலாத் தாங்க முடியுமா?"

"நிச்சயமா டாக்டர்.."

"குட். கர்ப்பமான பெண்டாட்டி கீழே விழுந்தா ஆள் வரும் வரை வேடிக்கை பார்க்குற பிரபலங்களைத் தெரியும்.. ஹோப் யு ஆர் டிபரென்ட்.."

"அப்படி நான் வேடிக்கை பார்த்தா, விமலா என் மேலே காறித்துப்பி கட்டையால அடிப்பா டாக்டர். சுயமரியாதை தன்னம்பிக்கையெல்லாம் அவளைப் பார்த்து நான் கத்துக்கிட்டது"

"ஸ்மார்ட் மேன். சரி.. 48 மணி நேரத்துக்கு ஷி ஹேஸ் டு ஸ்டே ஹியர். அவங்களை எக்ஸக்யுடிவ் ஸ்வீட்டுக்கு மாத்திடச் சொல்றேன். தனியா சிறப்பா கவனிச்சுக்குவாங்க. ஒரு நாளைக்கு இரண்டாயிரம் டாலர், மருத்துவச் செலவு தனி. இன்ஷூரன்ஸ் இல்லாமலே கூட உங்களால செலவை ஏத்துக்க முடியும், செலப்ரடியாச்சே?"

"நாட் என் ஆப்ஜெக்ட் டாக்டர்"

"ஓகே தென்.. சோதனைகள் முடிவு தெரிஞ்சதும் கூப்பிடுறேன்" என்ற டாக்டர் தயங்கினார். "ஆமாம் ரகு.. கர்ப்பத்துல இருக்குறது ஆணா பெண்ணானு தெரியுமா?"

"தெரியாது டாக்டர். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு விட்டுட்டோம்"

"தெரிஞ்சுக்க விரும்புறீங்களா?"

"விமலாவைக் கேட்டுச் சொல்றேன் டாக்டர்.. அவ இல்லாம எனக்குத் தெரிஞ்சு ஒரு பயனும் இல்லே"

"ஆதர்சத் தம்பதி.. நீங்க லக்கியா இல்லே விமலா லக்கியா தெரியலே.. "

"கண்டிப்பா நான் தான் டாக்டர். அதுல சந்தேகமே இல்லை. விமலா என்னுடைய மேரிகோல்ட். அவ தனியா இருந்தாலே சிறப்பு. என் கூட சேர்ந்ததுனால எனக்குத்தான் சிறப்பு"

"ஓகே.. லவர் பாய்.. கோ ஹோம்" சிரித்தார் டாக்டர். "உங்க மேரிகோல்டை வாடாம பாத்துக்குறோம். இப்ப போங்க. வி க்லோஸ் பார் கெஸ்ட்ஸ் அட் மிட்நைட். அதுக்குள்ள பேபர் வர்க் முடிச்சுருங்க. தென் கெட் சம் ரெஸ்ட். தேவைப்பட்டா போன் செய்யுறோம்".

    இன்சூரன்சுக்கான படிவங்களை நிரப்பி, அறை வாடகை மற்றும் பராமரிப்புச் செலவுகளை முன்பணமாகக் கட்டி, அங்கே இங்கே கையெழுத்திட்டுத் திரும்பிய ரகு களைத்திருந்தான். பேராமெடிகல் ஆசாமிகளோடு ஆம்புலன்சில் வந்ததால் திரும்பிப் போக டேக்சி எடுத்தாக வேண்டும். லாபியில் ஆஸ்பத்திரி கான்சியர்ஜ் டேக்சி ஆர்டர் செய்து "வர இருபது நிமிடமாகும்" என்றாள். சம்மதித்தான். வலது கையின் ரோலெக்ஸ் ஆய்ஸ்டர் பெர்பெசுவல் மூன்பேஸ் பத்து பத்து என்றது. லாபியின் எதிரே ஸ்டார்பக்ஸ் இன்னும் இயங்குவதைக் கவனித்தான். ஐபேடில் எதையோ பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த சிப்பந்திப் பெண்ணையும் சற்றுத் தள்ளி லவுஞ்சின் நாற்காலிகளில் இருந்த ஓரிருவரையும் கவனித்தான். கடை நோக்கி நடந்தான்.

"இருபத்து நாலு மணி நேரமும் திறந்திருப்போம்.." என்ற கடைப்பெண், ரகுவின் அமெக்ஸ் கார்டைத் திருப்பினள். "உங்க லாடே இதோ தயாராயிடும்".

காபியைப் பெற்றுக்கொண்டு ஆளற்ற இடமாக அமர்ந்து பருகத் தொடங்கினான். சில நிமிடங்களில் அவனெதிரே ஒரு முதியவர் சிரித்துக் கொண்டிருந்தார். "மே ஐ?" என்றார் தன்னுடைய வீல் சேரை அவனருகே நிறுத்தியபடி.

"இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல நான் போகணும்.." என்றான் ரகு, கடியாரத்தைப் பார்த்தபடி.

"தட்ஸ் ஓகே.. அதுவரைக்கும் பொழுது போகும்" என்றார் முதியவர். "எண்பது வயசுக்கு மேலே தூக்கம் சட்டுனு வரமாட்டேங்குது.. ஏதோ என்னை வீல் சேர்ல உலாத்த அனுமதிச்சிருக்காங்க"

"உங்களைப் பாத்தா எண்பதுனு சொல்லவே முடியாது. யு லுக் யங்"

"நம்மில் சில பேர் வயதோ காலமோ கடந்தவர்கள்" சிரித்தார் முதியவர். "டோன்ட் மீன் டு ஸ்கேர் யு.. ஐ எம் மென்டலி யங்னு சொல்றேன்.. ஆமாம்..நீங்க எதுக்கு வந்திருக்கீங்க?"

"என் மனைவிக்கு நலமில்லை". ரகு காபி குடிப்பதில் கவனமாக இருந்தான்.

சிறிது மௌனத்துக்குப் பிறகு "தெரியும்" என்றார் முதியவர்.

ரகு சட்டென்று அவரை நிமிர்ந்து பார்த்தான். முதியவர் அவனை நேராகப் பார்த்தார். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. "என்ன சொல்றீங்க?" என்றான் ரகு.

"தெரியும்னு சொல்றேன்". முதியவர் அழுத்தமாகத் தொடர்ந்தார். "கவனமாகக் கேள். உனக்குப் பிறக்கப் போகும் மகன் மிகக் கொடியவன். பாதகம் மற்றும் அதர்மங்களின் மொத்த அம்சம். அவனைக் கொன்றாக வேண்டும். கருக்கலைந்து அவன் சாக வேண்டும் என்பது என்றைக்கோ எழுதி வைக்கப்பட்டது. நிச்சயமாக இறப்பான். அதற்கு நான் உத்தரவாதம். அதனால் தான் உன் மனைவிக்கு இப்படி நடக்கிறது. அவன் மறைவைப் பற்றிக் கவலைப்படாதே".

ரகு திடுக்கிட்டு எழுந்தான். "ஹூ ஆர் யூ?"

"அவசியமில்லை. உன் மகன் இறந்ததும் நீ என்னைப் பார்க்கப் போவதில்லை. அவன் இறந்தாக வேண்டும்.." என்ற முதியவர் நிறுத்தி நிதானமாக, "..ரகு.. அவன் இறக்கவில்லையென்றால் நீ அழிந்து போவாய்" என்றார்.

ரகுவுக்குக் கோபம் வந்து இரைந்தான். அவன் குரல் கேட்டு அவசரமாக ஓடி வந்த ஆஸ்பத்திரிச் சிப்பந்திகள், "என்ன ஆச்சு?" என்றனர்.

"திஸ் மேன்.." ரகு திணறினான். முதியவர் சோர்ந்திருந்தார். முகத்தில் களையில்லை. கண்கள் செருகியிருந்தன.

"எங்களை மன்னிச்சுருங்க சார்.." என்றனர் சிப்பந்திகள். "பத்தரைக்கு இவரோட பெட் டைம். உலாத்தக் கூட்டிப் போனோம். காபி சாப்பிட ஒதுங்கினோம். எப்படியோ ப்ரேக் விலகியிருக்க வேண்டும்.. வீல் சேர் நகர்ந்து வந்திருக்க வேண்டும்.. இவரால் அசையக்கூட முடியாது.. தொந்தரவுக்கு மன்னிச்சுருங்க.. பெக் யு டு நாட் ரிபோர்ட் திஸ்.. எங்க வேலை போயிடும்.. இவரால உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. வி ஆர் சாரி சார்" என்றபடி அவரைத் தள்ளிக்கொண்டு போனார்கள்.

ரகுவுக்கு வியர்த்தது. யாரிந்த ஆள்? என்னைப் பற்றி இவருக்கு எப்படித் தெரியும்? மகனா? எனக்கே தெரியாதே! என்ன உளறுகிறார் இந்தாள்? காபியை அங்கேயே வைத்துவிட்டு வேகமாகப் படியேறி மாடிக்கு விரைந்தான். எக்சக்யுடிவ் லாபியை அடைந்தான். லாபியில் இருந்த பெண் இவனைப் பார்த்ததும் பணிவாக "என்ன வேண்டும் சார்?" என்றாள்.

"இந்த இடத்தின் பாதுகாப்பு பற்றி எனக்குத் தெரிந்தாக வேண்டும். ஹூ இஸ் இன் சார்ஜ் ஆப் செக்யுரிடி?"

ஒரு நிமிடத்துக்குள் வந்து சேர்ந்த ஆறடிக்கு நாலடி மனிதர் ரகுவின் கையைக் குலுக்கி, "நான் சீப் செக்யூரிடி ஆபீசர்.. உங்களைப் போன்ற பிரபலங்கள் எங்கள் ஆஸ்பத்திரியைத் தேர்ந்தெடுத்தது எங்களுக்குப் பெருமை" என்றார். "என்ன செய்யட்டும்?"

ரகு நடந்தவற்றைச் சொன்னான், "லிஸன்.. ஐ'ம் நாட் க்ரேஸி ஆர் எனிதிங்.. காலையிலிருந்து இது போல் விளங்காத, விளக்க முடியாத சம்பவங்கள் நடக்கின்றன.. மே பி வி ஆர் பேரனாய்ட்.. டயர்ட்.. அது முக்கியமில்லை.. என் மனைவி பாதுகாப்பாக இருக்கிறாள் என்பது தான் எனக்கு முக்கியம்"

"கவலையே வேண்டாம் சார். உங்க மனைவி எங்க கண்காணிப்பில் ரொம்ப பத்திரமாக இருக்கிறார். வேண்டுமென்றால் நீங்களும் உங்க மனைவி அறையைக் கண்காணிக்கலாம். ஐபோன் ஆன்ராய்ட் ரெண்டுலயும் ரூம்வாச் அப்ளிகேஷன் இருக்கு. போனைக் கொடுத்தா நானே இலவசமா இன்ஸ்டால் செஞ்சு தரேன்" என்றபடி ரகுவின் ஐபோனை வாங்கிச் சில நிமிடங்களில் திருப்பிக் கொடுத்தார். "இதோ பாருங்க.. உங்க மனைவி அமைதியா படுத்திருக்காங்க".

ஐபோன் திரையில் விமலா அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. ரகுவுக்கு தெம்பாக இருந்தது. "ஐ'ம் சாரி. உதவிக்கு மிக நன்றி" என்றான்.

"எங்க கடமை சார். நீங்க சொன்ன விவரம் பத்தி நான் கவனிக்கிறேன். தேவைப்பட்டா நடவடிக்கை எடுக்குறேன்" என்ற செக்யூர்டி ஆபீசர், லாபி வரை வந்து ரகுவை வழியனுப்பினார். "உங்க வண்டி வெயிட் பண்ணிட்டிருக்கு".

டேக்சியுள் அமர்ந்ததும் முகவரியைச் சொன்னான். தூக்கம் கண்ணைச் சுற்றியது. வீட்டருகே வந்ததும் எழுப்பச் சொல்லிக் கண்ணயர்ந்தான். மூன் பே மார்கெட் தெருவின் கரடுமுரடு அவனை எழுப்பிவிட்டது. "என்ன சார்.. எழுந்திட்டீங்களா?" என்றான் டிரைவர். "நானே எழுப்பணும்னு இருந்தேன்"

"தேங்க்ஸ்" என்றான் ரகு.

"ரொம்ப டயர்டா இருக்கீங்க போல"

டிரைவர் என்னவோ சொல்லிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் வந்தான். ரகுவின் மனதில் வீல் சேர் முதியவர் சுற்றிச் சுற்றி வந்தார். வண்டி வீட்டு வாசலில் நின்றது தெரியாமல் சிந்தனை வயப்பட்டிருந்தான். "சார்.. இதானே வீடு..?" என்ற டிரைவரின் குரல் கேட்டு சுதாரித்தான். "நாற்பத்தியெட்டு டாலர்.. கேஷா க்ரெடிட்டா?"

மூன்று இருபது டாலர் நோட்டுக்களைக் கொடுத்தான் ரகு. "வச்சுக்க" என்றான். "வீடு வந்ததை கவனிக்கலே"

"பரவாயில்லை" என்று பணத்தை வாங்கிக் கொண்டான் டிரைவர். "ரொம்ப தேங்க்ஸ். ஆஸ்பத்திரில ப்ராப்ளமா சார்?"

"ஒண்ணுமில்லே.." என்றபடி இறங்கத் தயாரானான் ரகு.

"தப்பா நினைக்காதீங்க. லாபியில சொல்லிட்டிருந்தாங்க.. அதான் கேட்டேன்" என்ற டிரைவர், ரகு இறங்க வேண்டித் தானியங்கிக் கதவுக்கான பித்தானை அழுத்தினான். "கவலைப்படாதீங்க சார். உங்க பெண்ணுக்கு ஒண்ணும் ஆவாது"

"பெண்ணில்லப்பா. பெண்டாட்டி" என்றபடி இறங்கிய ரகு, டிரைவரை திரும்பிப் பார்த்தான்.

"எல்லாமே பெண் தானே சார்? கவலைப்படாதீங்க.. உங்க பெண்ணுக்கு எதுவும் நேராது.. உலகத்தைக் காப்பாத்தவே பொறந்திருக்கா பொண்ணு" என்ற டிரைவரின் முகத்தைக் கவனிக்குமுன் வண்டி நகர்ந்தது.

    சில மணி நேரங்களே உறங்கினாலும் தெளிந்து எழுந்தான் ரகு. இரவின் சம்பவங்கள் நிழலாட, ஐபோனை எடுத்து ரூம்வாச் அடையாளத்தைத் தொட்டான். நொடிகளில் ஆஸ்பத்திரியில் விமலாவின் அறை தெரிந்தது. படுத்தபடி மேலே எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள். ஃபேஸ்டைமுக்கு மாற்றி அவளை அழைத்தான். நொடிகளில் அவள் போனில் சிரித்தாள். "டார்லிங்" என்றாள்.

"இப்பத்தான் நிம்மதியா இருக்கு விமலா" என்றான் ரகு. "என்ன எங்கேயோ மேலே வெறிச்சுப் பாத்துட்டிருக்கே?"

"எப்படித் தெரியும்?"

ரூம்வாச் பற்றிச் சொன்னான். "நீ எழுந்துட்டது தெரிஞ்சு ஃபேஸ்டைம்ல கூப்பிட்டேன்.. இங்கிருந்து உன்னைக் கண்காணிச்சுட்டு இருந்தேன்.."

"ஒரு கர்ப்பவதிக்கு நாட்டுல தனிமை இல்லாமப் போச்சே? சரி சரி.. என்ன வாச் பண்ணினே?"

"உன்னைத்தான். உன் முகத்தை.. உன் வயிற்றை.."

"மாரை வாச் பண்றியா? கேமை கீழிறக்கவா?" என்றாள் மென்மையாக.

"ஆஸ்பத்திரில ரேடியோக்ரபி அனுமதி உண்டு. போர்னாக்ரபி அனுமதிக்கறாங்களா என்ன?"

"போடா. நீ என் மாரைப் பார்க்க வேணாம்னா போ.. பட் ஐ வான்ட் டு ஸீ யு நேகட்" என்றாள். "சட்டையைக் கழட்டு.. சீக்கிரம் சீக்கிரம்.."

"ஓகே" என்று போனைக் கீழே வைத்தான். சட்டையைக் கழற்றுகையில் இன்னொரு போன் கால் வந்தது. அழைப்பது ஆஸ்பத்திரி என்று தெரிந்ததும், சட்டென்று எடுத்துப் பேசினான். "ஹலோ" என்றான். மறுமுனையில் விமலாவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர். "ரகு.. உங்களோட பேசணும்.. அதான் அதிகாலைல எழுப்பிட்டேன்.." என்ற டாக்டரின் குரலில் பதட்டம். "தேர் மே பி எ காம்ப்லிகேஷன்"

"சொல்லுங்க டாக்டர்" ரகுவுக்கும் பதட்டம்.

"உங்களுக்கு இரட்டைக் குழந்தைங்கன்றது தெரியாது இல்லையா?"

"வாட்?"

"ஐ நோ.. நானே உங்க மனைவியோட நேடல் ரெகர்ட்ஸ் நேத்து பார்த்தனே.. எனக்கு அப்போ தெரியலே.. ஐ'ம் எம்பேரஸ்ட்.. பட் எங்க சோதனைகளை முடிச்சுப் பார்த்ததும்.. யு ஸீ.. வி டிட் த்ரீ சிக்ஸ்டி அல்ட்ரா சவுன்ட் அன்ட் சோனார் மேபிங்க்.. கரு அதிர்ந்திருக்குதா செர்வெக்ஸ் ஷார்டா இருக்குதானு பார்க்க.. ஸ்ட்ரேஞ்ச்.. விசித்திரம் பாருங்க.. இரண்டு ஹார்ட் பீட்.. தனித்தனியா கேக்குது.. நிச்சயமா கருவுல இருக்குறது இரட்டைக் குழந்தைங்கனு நம்புறேன்.."

"என்ன சொல்றதுனு தெரியலே டாக்டர்.. தேங்க்யூ சொல்லவா? என் மனைவி கிட்டே சொன்னீங்களா?"

"நாட் யெட்.. ரகு.. ஒரு சிக்கல் இருக்கு.. இரண்டாவது கரு ரொம்ப வீக். பிழைக்குமானு சந்தேகமா இருக்கு.. தேர் மே பி எ காம்ப்லிகேஷன்.. அதான் கூப்பிட்டேன்.. அதுல பாருங்க.. எனிவே, இப்ப உங்களுக்குத் தெரிஞ்சே ஆகணும்.. இரண்டு கருவுல ஒண்ணு பெண், இன்னொண்ணு ஆண். வீக்கா இருக்குறது பெண் சிசு. ஆண் சிசு கிட்டத்தட்ட பெண் சிசுவின் கழுத்தை நெறிக்குறாப்புல அழுத்திட்டு இருக்கு.. இத்தனை நாள் இது தெரியாம இருந்ததுக்கு உங்க மனைவியோட கருப்பையும் காரணமா இருக்கலாம்.. வெரி ஸ்ட்ரேஞ்.. பயலாஜிகலி.. இதை எப்படி புரிஞ்சுக்கிறது விளக்கறதுனு தவிக்கிறேன்.."

"என்ன செய்ய டாக்டர்?"

"வி ஹவ் டு ஸீ.. முதலில் இரண்டு சிசுக்களையும் பாதுகாப்பா பராமரிக்கணும். ஒண்ணு இறந்து போச்சுன்னா மற்றதுக்கும் ஆபத்து.. உங்க மனைவியோட கலந்து பேசி முடிவெடுக்கலாம்.. உடனே புறப்பட்டு வரீங்களா?"

"வரேன்" என்ற ரகுவின் மனதில் 'எல்லாமே பெண் தான்' என்று டிரைவர் சொன்னது எதிரொலித்தது.

(தொடரும்)▶ 3

2013/08/09

மெல்லிசை நினைவுகள்



    டனடியாகப் பதிவு எழுதவில்லையெனில் blogஐ bulletin boarடாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறது.

மெல்லிசை நினைவுகள் தலைப்பில் பதிவெழுதி நாளானதை நினைவூட்டியப் பெருந்தகைகளைப் பதிவின் முடிவில் கவனிக்கிறேன். பதிவெழுத நினைத்திருந்த எனக்கு சமீப நிகழ்வுகளும் வசதியாக அமைந்தது என்பேன்.

சமீப வாரங்களின் சிக்கல்களினால் பதிவெழுத முடியாமல் போனது. சோம்பல், பயண ஏமாற்றம், குழப்பம், விபத்து, வேலை, அலைச்சல், சோம்பல், சோகம், சோர்வு, குறிப்பாகச் சோம்பல்.. என்று பல காரணங்களால் உண்டான சிக்கல்கள். அது போதாதென்று கண்பிடுங்கி நீலன் கதையின் அடுத்தப் பகுதிகளைப் படித்து நானே திகிலடைந்ததும் ஒரு காரணம்.

திரிந்தும் உடைந்தும் அடைந்தும் கிடந்த நாட்களில் மெல்லிசையும் புத்தகமும் கதியெனக் கிடந்தேன். வீண் அலைச்சலின் இடையே கண்காணாத ஏர்போர்ட் லவுஞ்சில் நான் சற்றும் எதிர்பாரா விதமாகச் சந்தித்த இரண்டு இசைப் பிரபலங்களுடன் சில நிமிடங்கள் பேசக் கிடைத்த வாய்ப்பு, அசதி போக்கும் சந்தன வாடை மயிலிறகாக அமைந்தது. எஸ்பிபியை அடையாளம் தெரிந்தது. வாணியை அடையாளம் தெரியவில்லை. பிறகு ப்ளேன் பக்கத்து இருக்கைப் பயணி தொடர்ந்து சொன்ன ஜோக்குகளும் குட்டிக்கதைகளும் ஆலையற்ற ஊரின் இலுப்பைப்பூவாயின. எழுதி வைத்துக் கொள்ளாமல் போனேனே..! ஜோக்குகளை நினைவில் வைத்துக் கொண்டு வரிசையாகச் சொல்வது ஒரு கலை. நானறியாத கலை.

கோபமும் ஆத்திரமும் தவறு என்று கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் சொல்லும் நான், அநியாயத்துக்குக் கோபம் கொண்டு வாயில் வந்தபடி காய் கவர்ந்ததை எண்ணிக் குறுகிப் போய் வருந்திய சமீபத் தருணங்களில், மெல்லிசை எனக்குத் திரையானது. என் நண்பர் அரசனிடம் ஒரு வழக்கம் இருந்தது. தன் மீது காறித் துப்பியவர்களிடம் கூட கோபம் காட்ட மாட்டார். நான் சாதாரணத்திலும் சாதாரணம். கோபம் எனக்குத் தூண்டில் புழு போல. சட்டென்று கவ்விச் சிக்கிக் கொண்டு திண்டாடுவேன். பிறகு புத்தகம் இசை என்று காணாமல் போய்விடுவேன். அரசனுக்கும் மெல்லிசை பிடிக்கும். தூத்துக்குடி வானொலி நிலைய நண்பரிடம், இரவின் அமைதியில் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பச் சொல்லிக் கேட்பார். அவர் அடிக்கடி விரும்பிக் கேட்டப் பாடல் இது.
சித்திரப் பூச்சேலை


அம்ருத்சரில் வந்திறங்கிய கமல், உள்ளூர் பாஷை தெரியாமல் விழித்தபடி அங்குமிங்கும் பார்த்தார். எதிரே தென்பட்ட சர்தார்ஜியை நெருங்கி, "தமிழ் தெரியுமா?" என்றார்.
"சாலா, ஹிந்தி தேரா பாப்!" என்றார் சர்தார்ஜி கோபத்துடன்.


தமிழ் டிவிகளில் ஏமாந்தால் சூபர் சிங்கர் ஜூனியர் சிங்கர் சீனியர் சிங்கர் ஹாரிபில் சிங்கர்.. என்று கூத்தாக இருக்கிறது. அதை விட்டால் நீயா நானா என்று கற்பனை வற்றிய விவாத நிகழ்ச்சி ஒன்று. எரிச்சலாக வந்தது. வருடா வருடம் தமிழ் டிவி வரண்டு வருவதாகத் தோன்றுகிறது. (ஏதோ ஒரு நிமிடம் புலம்பிவிட்டுப் போகிறேன், விடுங்கள். என்னால் வேறென்ன செய்ய முடியும்?)

சரோஜாதேவியுடன் மலரும் நினைவுகள் நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தது. எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி தேவிகா பத்மினி பானுமதி பற்றிப் பேசினார். முத்துராமன் பற்றி மூச். இணைந்து நடிக்கவில்லையோ? இடையிடையே பாடல் அல்லது படக்காட்சி ஒளிபரப்பினார்கள். 'போர்க்களமானேன் ஐயோ அம்மா நாதியில்லையே' என்று கண்ணீரும் கம்பலையுமாக ஒரு சோகப் பாடல் ஓடிக்கொண்டிருக்கையில் எழுந்து சாப்பிடப்போனவனுக்கு அதிர்ச்சி. கம்பலை என்றால் என்னவென்றே தெரியாமல் அந்தச் சொல்லை உபயோகித்து வருகிறேன் என்பதல்ல அதிர்ச்சியின் காரணம். சோகப்பாட்டைத் தொடர்ந்த சுகப்பாட்டே அந்த அதிர்ச்சி. சோகத்தின் part2 அந்தப் பாடல் என்பதை இன்றுவரை அறியாதிருந்தேன். பாடலைப் பிறகு கேட்போம். "இன்றைய நடிகைகளில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?" என்று சரோஜாதேவியிடம் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார் பேட்டியாளர். சரோஜாதேவியின் பதிலை ரசித்தேன். "இப்போ நடிக்கிறவங்க எல்லார் குரலும் ஒரே மாதிரி இருக்குது..".

தொடர்ந்த சூபர் சிங்கர் அறுவையில், சுசீலாவின் பழைய பாடலைப் பாடிய பெண் தமிழை வதைத்துத் தொலைத்தார். தமிழின் சிதைவை மறந்து, குரலை மட்டும் கவனிக்கலாம் என்றால் முடியவில்லை. அசல் பாடலிலும் தத்தித்ததா தித்தித்ததா பொட்டிட்டதா பட்டிட்டதா என்று சுசீலா ஏதேதோ பாடுவார். சிறுவயதில் பாடல் புரியவில்லை. பின்னாளில் ஹெட்செட் அணிந்துக் கேட்டும் புரியவில்லை. எனினும், அது தமிழ் என்பது தெளிவாகத் தெரிந்தது. தேன் குரலில் சுசீலா கொஞ்சியதும் நிறையவே பிடித்தது.

சூபர் சிங்கர் அறுவையில் பாடியவரின் குரலைக் கேட்டதும்... இனி பாடகர்களைக் குரல் வளத்துக்காக மட்டும், பாடுவது தமிழா இல்லையா என்று சந்தேகப்படாமல், கேட்டுப் பழக வேண்டியது தானோ என்று தோன்றியது.
தத்தை நெஞ்சம் முத்தத்திலே

மனைவியைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பிய கமல் பக்கத்து வீட்டுக்காரரிடம், "ஒரு வாரம் என் வைப் ஊருக்குப் போயிருக்கா. தனியா படுக்க பயமாயிருக்கு, என் கூட துணைக்குப் படுத்துக்க முடியுமா?" என்று கேட்டார்.
"என்ன கமல் இது.. உனக்கும் உன் பெண்டாட்டிக்கும் இதே பழக்கமா போயிடுச்சே?" என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.


சூபர் சிங்கர் அளவுக்கு இல்லாவிட்டாலும் அந்த நாளிலும் இது போன்ற போட்டிகள் சென்னையின் காஞ்சி, கனிமரா போன்ற ஹோடல்களில் நடந்தன. சினிமாவில் பாட ஆசைப்பட்டு நிறைய இளைஞர்கள் வந்து பாடுவார்கள். என் நெருங்கிய சினேகிதி ஒருத்தி 'சினிமாவில் பாடியே தீருவேன்' என்று அடம்பிடித்து வீட்டுக்குத் தெரியாமல் இது போன்ற நிகழ்ச்சிகளுக்குச் சென்று பாடுவாள். என்னைத் துணைக்கு இழுத்துக் கொண்டு போவாள். சனி ஞாயிறுகளில் சாப்பிட்டு தொண்டனுக்கும் உண்டென்று மயங்கிக் கிடக்கையில் என் தங்கை அவசரக் குரல் கொடுப்பாள்.. "துரை, உன் ப்ரெண்டு அனுராதா வராடா..". அலறி எழுந்து பின்கட்டு வழியாகத் தப்பிக்கப் பார்த்தால் கிணற்றடியில் நின்றபடி சிரிப்பாள் கிராதகி. "சாயந்திரம் சுஜாதா மூவிஸ்ல எம்எஸ்வி ட்ரூப் கோரஸ் வாய்ஸ் டெஸ்ட்ரா.. துணைக்கு வாடா ப்லீஸ்?".

சரியாக நினைவில்லை. எம்எஸ்வி இசையில் ஏதோ ஒரு பாடல் பாடினாள் என்று நினைக்கிறேன். பிறகு சங்கர் கணேஷ் இசையில் லாலாலா என்றுப் பின்னணி கும்பலோடு கோவிந்தா போட்டாளே தவிர, கல்லூரிப் படிப்பு முடியும் வரை அனுராதாவுக்கு எந்த சான்சும் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு அவள் வாய்ப்பு தேடவில்லை. கடைசி வருடப் படிப்பு முடிந்ததும் முஸ்லிம் பையனைக் காதல் திருமணம் செய்து, சில வருடங்கள் தலைமறைவானாள். அவள் மகன், போன வருட சூபர் சிங்கர் கடைசி சுற்றுகளில் எஸ்பிபி பாடல்களைப் பாடினானாம். ஹேரிஸ் ஜெயராம் (?) குழுவில் இப்போது வாத்தியங்கள் வாசிக்கிறான், பாடுகிறான். எல்லாம் சுபம். அனுராதா அடிக்கடி முணுமுணுத்த பாடல் போல் இப்போது பாடல்கள் வருவதில்லை என்று நினைக்கிறேன் (காட்சி அமைக்கிறார்களா என்பதும் தெரியவில்லை).
துள்ளித் துள்ளி விளையாட துடிக்குது மனசு


ஹோட்டல் பாருக்குள் நுழைந்த ஒருவன் பக்கத்தில் இருந்தவனிடம், "ஒரு கமல் ஜோக் சொல்றேன் கேக்குறியா?" என்றான். பக்கத்தில் இருந்தவன் முறைத்தான்: "இதப்பாரு நான் கமல் மன்ற ட்ரஸ்டி. இதோ பார்டெண்டர் இருக்கானே பாடிபில்டர்.. இவன் கமல் மன்றச் செயலாளர். அதோ உக்காந்திருக்காரே மொட்டைத்தலை பார் முதலாளி.. அவரு கமல் மன்றத் தலைவர்.. இதுக்கு மேலயும் கமல் ஜோக் சொல்ல விருப்பமா?"
சொல்ல வந்தவன் தயங்கி, "வேணாம். தனித்தனியா அத்தனை தடவை சொல்லிப் புரியவைக்க முடியாது" என்றான்.


எஸ்பிபி என்றதும் நினைவுக்கு வருபவன், என் பம்மல் வட்ட நண்பன் சாம்பா. எஸ்பிபியை விட எஸ்பிபி போலப் பாடுவான். மவுத் ஆர்கன் வாசிப்பான். முழுப்பாடல்களை மூச்சுவிடாமல் விசிலடிப்பான். தொலைத்த நட்புகளில் மிகவும் தேடுகிற நட்பு. சென்னையில் சொந்தமாக இசைக்குழு வைத்திருக்கிறான், பாடுகிறான் என்கிறார்கள். அடுத்தப் பயணத்தில் இவனைக் கண்டுபிடித்தேயாக வேண்டும். அன்புக்கரசன் கிடார், ஜேம்ஸ் டிரம்ஸ், நானும் சாம்பாவும் பாட்டு. கோடை இரவுகளில் அன்புக்கரசன் வீட்டு மொட்டை மாடியில் மணிக்கணக்காகப் பாடியிருக்கிறோம். 'கிறோம்' என்று சந்தடி சாக்கில் சேர்ந்து கொள்கிறேனே தவிர, உண்மையில் சாம்பா பாடுவான். நான் ஹம் செய்வேன். 'சாமரம் போடுவேன்' என்று கா நே சச்சு சொல்வது போல.
காதல் கதை சொல்வேனோ


"அம்மா.. நாளைக்கு எங்க ஸ்கூல் பார்ட்டிக்கு எல்லாரும் சிவப்பு சட்டை போட்டுகிட்டு வரணும்னு டீச்சர் சொன்னாங்க.." என்று சிறுவன் கமல் சொன்னதும் அது போலவே சிவப்புச் சட்டை போட்டனுப்பினார் அம்மா.
மறுநாள் சீக்கிரமே திரும்பி வந்த கமல் அழுதுகொண்டே, "போம்மா.. நான் இனிமே ஸ்கூல் பார்ட்டிக்கு போகமாட்டேன்" என்றதும், "ஏன்?" என்றார் அம்மா.
"பின்ன என்னம்மா..?" என்றான் கமல். "சிவப்பு சட்டைல வரணும்னு எல்லார் கிட்டயும் சொன்னாங்கல்ல?.. கூடவே ஜட்டியும் ட்ராயரும் போட்டுகிட்டு வரணும்னு எங்கிட்ட மட்டும் சொல்லவேயில்லம்மா.."


டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் (சரியா?) ஒரு பிரபல பாடலை அறிமுகப்படுத்துகையில் "இசையமைத்த எம்எஸ்வியைத் தவிர இந்தப் பாடலில் சம்பந்தப்பட்ட எவருமே உயிரோடு இல்லை" என்றார். எம்எஸ்வி உயிரோடிருப்பதற்காக வருத்தப்படுகிறாரா? இருக்காது என்று சமாதானமாகி, வாலி டிஎம்எஸ்சை மனதில் வைத்துச் சொல்லியிருப்பார் என்று நினைத்தால் சுசீலாவை மறந்துவிட்டாரே?. பாடலில் சம்பந்தப்பட்ட பெண் குரலான சுசீலா இருப்பது தெரியாதா? இல்லை பெண் என்று இளப்பமா? சோமாறி டாய்! அவர் குறிப்பிட்ட பாடல் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அதற்குப் பதில் வேறு பாடலை இணைக்கிறேன்.

வெங்கட்ராமன் என் கல்லூரி கால நெருங்கிய நண்பன். எனக்கும் அவனுக்கும் இரண்டு பெரிய ஒற்றுமைகள் உண்டு. முதலாவது, எங்கள் அப்பாக்கள் மகா உதவாக்கரைகள். இரண்டாவது, எங்களுக்கு டிஎம்எஸ்-சுசீலா என்றால் உயிர். எங்களைச் சுற்றிய ஒரு சுவாரசியமான கதைக்கு இப்போது நேரமில்லை. இந்தப்பாடல் அவனுக்காக. எஞ்சாய் வெங்கட்ராமா!
இதயத்திலிருந்து இதழ்கள் வரை


கிராமத் திருவிழாவில் தங்கள் மனைவிகளைத் தொலைத்துத் தேடிக்கொண்டிருந்த முன்சீபும் கமலும் சந்தித்தார்கள். முன்சீபுக்கு ஆதரவாக, "உங்க பெண்டாட்டி எப்படி இருப்பாங்க?" என்றார் கமல்.
"ராக்கி நல்ல உசரமுங்க.. பச்சைல முழங்கால் உசரத்துக்கு சீலை.. எப்பவும் ரவிக்கை போடமாட்டா.. உதடு ரெண்டும் பளுத்த கோவப்பழம்.. வாளிப்பா கட்டையா இருப்பா.. ஆமா, உங்க பொஞ்சாதி?" என்றார் முன்சீப்.
"கழுத கிடக்கா.. உங்க பெண்டாட்டியை முதல்ல தேடலாம் வாங்க" என்றார் கமல்.


தொடர்வது, நான் மிக விரும்பும் பாடல்களில் ஒன்று. சோகப்பாட்டின் part2. dramatic தொடக்கம், ஏறக்குறைய நௌஷத் மெட்டில் அருவி போல் வயலின், நெஞ்சை வருடும் ஹம்மிங், அற்புதமான வரிகளுடன் இனிய இசை, குரல். serenely uplifting. போட்ட மெட்டைத் திரும்பப் போடுவதில் எம்எஸ்வி வல்லவர் என்றாலும், இந்தப் பாடலின் மெட்டை மறுபடி உபயோகித்தாரா தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். மெல்லிசை நினைவுகள் பதிவெழுத நினைவூட்டியதற்காக:
நான் பாடிய பாடல்