2015/07/24

பாடல் பெற்ற பதிவர்


தேவியர் இல்லம் பதிவில் தினவாழ்வின்
மேவுமிடர் ஆய்ந்திடுவார் ஜோதிஜி - ஆவலிந்த
மின்னூல் மகராசன் டாலர் நகரம்போல்
இன்னும் எழுதவேண்டு மென்று.




    மேல்தட்டுச் சமூகச் சிந்தனை, அடித்தட்டுச் சமூக அக்கறை, தீவிரப் பொதுநோக்கம், பாமரச் சிக்கல்களின் ஆழறிவு, முன்னேற்றத்துக்கான மெய்க்கவலை, வணிக நாணயத்தின் இருபுறப் பார்வை, தனித்தமிழ் வீச்சு, எழுத்தாளுமை - வேறு சூழலில், காலக்கட்டத்தில் எங்கள் நட்பு நேரிட்டிருந்தால் தமிழக அரசியலில் மாற்று அமைப்புகள் வேரிட்டிருக்கும் கடுஞ்சாத்தியத் தொலைக்கனவைத் தன் எண்ண வெளிப்பாடுகளில் அடிக்கடி முன்னிறுத்தும் இலட்சியப்பதிவர் ஜோதிஜி.

எதையும் அக்கறையுடன் எழுதும் இவரின் படைப்பு நேர்மை பிரமிக்க வைக்கிறது. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். பதிவர்கள் தங்களைப் பற்றிக் குறிப்பெழுத 'ப்லாகர்' அனுமதிக்கிறது. ஜோதிஜி தன்னைப் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கும் விதம் - இதுவரை படித்திராதவர்கள் கைவேலைகளைத் துறந்து உடனே படித்து ரசித்து அனுபவிக்க வேண்டும்.

இவரது வலைப்பூ libertarian intellectual கள் பானை. உள்ளே இறங்கிவிட்டால் போதை தலைக்கேறும் வரை பதிவுகளைப் புரட்டிக்கொண்டே இருக்கத் தோன்றும். எப்போதாவது எழுதும் சமூக வரலாற்றுக் குறிப்புகள் ஊறுகாய் போல. [நாடார்களின் தோற்றம் பற்றியப் பதிவு சுவாரசியமானது. நாடார்களை உருவாக்கியவர் peeping tom இந்திரனாம்.]

இவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் தகவல் சுரங்கம்.





அடுத்து பாடல் பெறும் பதிவர்: சூரி என்கிற சுப்புத்தாத்தா.

முன்னர்:

கீதா சாம்பசிவம்
பாலகணேஷ்
சிவகுமாரன்
ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி


2015/07/15

மன்னருக்கு மெல்லிசையின் நன்றி



மெல்லிசை மன்னரின் நினைவில்.. என் பழைய பதிவுகளிலிருந்து சில வரிகள்:

    இசைச்சக்கரவர்த்தி, இசைத் திலகம், இசைப்புயல், இசை இளவல், இசையாளுனர், இசை மாமன்னர், இசை இன்னார், இசை அன்னார் என்று இந்நாளில் பலர் பலவாறாகப் பட்டம் பெற்றாலும் கொடுத்துக் கொண்டாலும், பட்டத்துக்கு ஒரு படி மேலேயே தன்னை இருத்திக் கொண்டவர், பட்டத்துக்கு தகுதியேற்படுத்திக் கொடுத்தவர், மன்னர் எம்.எஸ்.வி ஒருவர் தான் என்பது என் கருத்து. எம்.எஸ்.வி அபிமானம் என் வயதைச் சுட்டிக் காட்டுகிறது என்று ஒரு கண்ணோட்டத்தில் கொண்டாலும், எம்.எஸ்.வியின் இசை மட்டுமே என்னை இளமையாக்கி எங்கோ கொண்டு சென்று இன்ப வேகத்தில் இயங்க வைக்கிறது. அந்த வகையில் எனக்கு நூறு வயதானாலும் எம்.எஸ்.வியின் இசையைக் கேட்க முடிந்தவரை இளமையின் ரகசியத்தை அறிந்தவனாவேன்.

    மெல்லிசை மன்னர்(களின்) இசையில் வந்த ஒரு இந்திப்பாடல் பற்றியது இந்தப் பதிவு. தமிழ்த் திரையிசையில் புதுத்திருப்பத்தை ஏற்படுத்திய இரட்டையர் இவர்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இவர்கள் சேர்ந்து வடித்த பாதையில் எம்.எஸ்.வி பின்னர் தனியாகப் புகுந்து விளையாடினாரென்றாலும், திருப்பத்தை உருவாக்கியதற்கான பெருமை இருவருக்குமே சேரும். இரட்டையர் சேர்ந்து இசையமைத்த பாடல்களில் பெரும்பாலானவை இன்றைக்கும் கேட்டு ரசிக்கும்படி இருப்பது இதற்கு சாட்சி. எம்.எஸ்.வியின் தனிப்பட்ட ஆட்சி இருவரும் சேர்ந்திருந்த காலத்தை விட நீண்டது என்றாலும், இரட்டையராக இருந்த போது பெற்ற வெற்றியை விட கணிசமாகக் குறைவாகத் தான் இருந்தது அவருடைய தனிப்பட்ட வெற்றி என்ற கருத்து நிலவுவதை அறிவேன். தனியாக எம்எஸ்வி தொட்ட வெற்றியின் உச்சங்களை இரட்டையராக தொட்டிருக்க முடியாது என்பது என் கருத்து. எம்.எஸ்.வியின் வெற்றிக்கு இணையாக, இன்னொரு தனி இசையமைப்பாளர் இன்னும் வெற்றி பெறவில்லை.. காலத்தை வென்று நெஞ்சில் நிறைந்திருக்கும் பாடல்களை அமைத்த விதத்தையே, நான் இங்கே வெற்றியென்று குறிப்பிடுகிறேன்.

    மெல்லிசை மன்னரின் ஆடம்பரமே இல்லாத எளிய பாடல்கள் மூன்றை இங்கே தொகுத்திருக்கிறேன். இந்தப் பாடல்களை இன்றைய தலைமுறையினர் கேட்டிருப்பார்களா?

    மெல்லிசை என்றால் எம்எஸ்வி தான். சந்தேகமிருந்தால் அடுத்த வரியைப் பத்து முறை படிக்கவும். மெல்லிசை என்றால் எம்எஸ்வி தான்.
***

    டவுள் நம்பிக்கையில்லாத எனக்கு தெய்வீக உணர்வை அனுபவிக்க சில வழிகள் அன்றாடம் கிடைக்கின்றன. முதலில் என்னைப் பெற்றவள். அதற்கடுத்த படிகளில் முதல் படி என்னை வளர்த்த மெல்லிசை மன்னரின் இசை.

மெல்லிசை மன்னரின் இசை என் வாழ்வின் எத்தனை சோகங்களை சோர்வுகளை ஓட ஓட விரட்டியடித்திருக்கிறது என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும்.

சமீபத்தில் தெரிந்து கொண்ட செய்தி. கணவன் இறந்ததும் கைக்குழந்தையை வளர்க்க வசதியில்லாத வறுமையில் குழந்தை எம்எஸ்வியைக் கொன்றுத் தானும் சாகத் தீர்மானித்தாராம் இவரின் தாயார். நல்லவேளையாக இவர் தாத்தா குறிக்கிட்டு... எத்தனை கொடிய விபத்திலிருந்து தப்பித்தார்... தப்பித்தோம்?!

வாழ்ந்ததற்கும் வழங்கியதற்கும் உளமார்ந்த நன்றி, எம் இனிய மன்னரே!

சற்றே தொண்டையை அடைக்கிறது. இருங்கள்.. மெல்லிசை வள்ளலின் துள்ளல் மெட்டில் குரலும் குழலும் வயலினும் வீணையும் கிடாரும் குதூகலக் கொட்டும் கலந்து கொஞ்சுவதைக் கொஞ்சம் கேட்டு வருகிறேன்.