இன்னொரு இந்திய நண்பர் மூட்டை கட்டத் தொடங்கியிருக்கிறார். மகள் முதுகலைக் கல்லூரியில் சேர்ந்த இரண்டே மாதங்களில் நட்புத் தம்பதிகள் இருவரும், "போதும்டா ஆசாமி! (நாத்திகத் தம்பதிகள்) இத்தனை நாள் அமெரிக்காவில் இருந்ததும் சேர்த்ததும் போதும்" என்று வேலையை உதறினார்கள், வீடு கார் என்று தொடங்கி ஐபாட் வரை அத்தனை வசதிப் பொருட்களையும் விற்றார்கள் (கராஜ் சேல் எனும் சுலபமான சந்தைமுறை இன்னும் இந்தியாவைத் தொடவில்லை என்று நினைக்கிறேன்). பெண் பெயரில் பாதிப் பணத்தைப் போட்டார்கள், மீதிப்பணத்தில் கோயமுத்தூர் அருகே முதியோர் இல்லம் ஒன்றில் இடம் வாங்கினார்கள்.. கிளம்பத் தயாராகி விட்டார்கள். புதுவருடத்தை இந்தியாவில் கொண்டாடப் போகிறார்கள். நீடித்த மின்சாரத் தடையுடன் வாழப் பழகிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க நினைவாக ஒரு சிறிய விழா வைத்து அழைத்திருந்தார் நண்பர். போனதும் என்னை ஆறத்தழுவி, "எல்லாம் முடிஞ்சாச்சு அப்பாத்துரை" என்று என் பெயர் உடைய அழுத்தினார். "இனிமே பொண்ணு கல்யாணம் கில்யாணம்னு ஏதானு செஞ்சுகிட்டு, அதும் கல்யாணத்துக்குக் கூப்பிட்டா இங்கே வருவோம்.. இல்லாட்டி அவ்ளோ தான்.. இந்தப் பக்கமே தலைவச்சுப் படுக்கப் போறதில்லே.." என்றார். எனக்கு மட்டுமே கேட்டப் பெருமூச்சுடன் வாழ்த்தினேன். விழாவுக்கு வருகிறேன். இந்த ஊரில் நட்புக்கூட்டம் சேர்ந்தால் 'இந்த மேரதான் அந்த மேரதான்' என்று ஏதாவது செய்வார்கள். இது ஓடுகிற மேரதான் அல்ல. சொல்கிறேன். நண்பர் எம்ஜிஆர் ரசிகர். ஊருக்குக் கிளம்புமுன் தன் முப்பது வருட ஆசை ஒன்றைத் தீர்த்துக் கொண்டார். எம்ஜிஆர் சினிமா மேரதான் ஒன்றைத் தன் ஊர்திரும்பல் விழாவின் மையக் கொண்டாட்டமாக அமைத்தார் (மோகன்குமாரின் பதிவுப்பெயர், பொருள் புரிந்து நெற்றியில் அடித்தது). ஒரு புறநகர் சினிமா அரங்கை வார இறுதிப் பேகேஜ் என்று புதன் கிழமை முதல் ஐந்து நாள் வாடகைக்கு எடுத்திருந்தார் நண்பர். அவர் அழைத்திருந்த சுமார் இருபது குடும்பங்களும் தினம் அரங்கிலேயே தஞ்சம். அரங்கில் இரண்டு சினிமா தியேட்டர்கள். இரண்டு தியேட்டரிலும் தினம் சுமார் பதினெட்டு மணி நேரம் எம்ஜிஆர் படங்கள் ஓட, அரங்கிலேயே விருந்து, அரட்டை, விடியோ விளையாட்டு, கேரம், சீட்டாட்டம்... எங்கிருந்தோ பல்லாங்குழி புளியங்கொட்டை கூட கொண்டு வந்திருந்தார்கள்!.. அண்மை ஓட்டலில் ஐந்து ரூம்கள் குட்டித்தூக்கம் மற்றும் பிற வசதிகளுக்கு என அருமையாக ஏற்பாடு செய்திருந்தார். எத்தனையோ வருடங்கள் கழித்து முதல் வரிசையில் அமர்ந்து விசில் அடித்தேன். சுகமான அனுபவம். ஒரு அமெரிக்க நண்பர் அத்தனை எம்ஜிஆர் படங்களையும் பார்த்தார். கிளம்பும் பொழுது தமிழ் சினிமா ஆச்சரியம் அவர் கண்களில் ஒட்டிக் கொண்டிருந்தது. "you guys make films, we only make movies" என்றார் எங்களிடம். புரிந்தது போல் தலையாட்டினோம். வித்தியாசமான thanksgiving. அரட்டை அமர்க்களத்தில் எங்கள் தூக்கம் போனது. எனினும் நட்புத் தம்பதியருக்குப் பெரும் நிறைவு. அதுதான் முக்கியம். | Thanksgiving என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. அமெரிக்கா வந்த புதிது. ஒரு தமிழ் நண்பர் என் போன்ற சோற்றுக்கு லாட்டரியடித்த மாணவர்களை அழைத்து வருடந்தோறும் விருந்து கொடுப்பார். ஒருமுறை விருந்துக்கு ஒரு பிரிடிஷ் பேராசிரியரை அழைத்திருந்தார். சும்மா இருக்காமல் ஒரு கேனை அமெரிக்க மாணவன் அவரிடம், "இங்கிலாந்தில் தேங்ஸ்கிவிங் எல்லாம் கொண்டாடுவீர்களா?" என்றான். பேராசிரியர் அமைதியாக, "ஜூலை நாலாம் தேதி கொண்டாடுவோம்" என்றார். |
            மனித இனம் மூளை மழுங்கி வருவதாக - நம்முடைய புத்திசாலித்தனம் குறைந்து வருவதாக - கண்டுபிடித்திருக்கிறார்கள் ஸ்டேன்பர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள். மனித அறிவாளுமையை நிர்ணயிக்கும் ஏறத்தாழ ஐந்தாயிரம் மரபணுக்களை வகைப்படுத்தி ஆராய்ந்தவர்கள், இந்தப் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள். 'இது என்ன பெரிய கண்டுபிடிப்பு - என் அப்பா அம்மாவுக்கும் மனைவி கணவருக்கும் இன்ன பிறருக்கும் எப்போதோ தெரிந்த விஷயமாச்சே?' என்று நீங்கள் எண்ணினால் நானும் துணை. எனினும், இவர்கள் கண்டுபிடித்திருப்பது உங்களையும் என்னையும் பற்றியல்ல. பொதுவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, மனித இனம் தன்னுடைய மூளை வளர்ச்சியின் உச்சத்தை எப்போதோ அடைந்துவிட்டதாம். எப்போது அடைந்ததாம்? மனித இனம் கூட்டாக வாழும் நாகரீகத்தைத் தழுவிய போது என்கிறார்கள். அதாவது, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாம். கூட்டாக வாழத்தொடங்கியதால் மனித அறிவு அந்த வாழ்க்கைக்குத் தேவையான மாற்றங்களுக்குத் தன்னைத் தயார் செய்வதிலேயே மூளையைச் செலவழிக்கத் தொடங்கியதால், மூளை தொடர்ந்து வளரவேயில்லையாம். இதை எதிர்த்து ஒரு ஆய்வாளக்கூட்டம், "அதெப்படி? இன்றைக்குக் காணப்படும் இத்தனை வளர்ச்சிகளும் மூளை வளராமல் ஏதாவது கடவுள் கொண்டு வந்து போட்டதா?" என்று வம்புக்கு வர, முதல் ஆய்வாளக் கூட்டம், "அப்படியில்லை.. மனித இனம் தன் மூளையை lateral developmentஆகப் பயன்படுத்தி வருகிறது. மூளையின் பயன்பாடு வளர்ந்தாலும் மூளையின் அளவு ஆயிரக்கணக்கான வருடங்களாக வளரவேயில்லை" என்று விளக்கியது. எதிர்கூட்டம் விடாமல் "இது போன்ற ஆய்வில் நேரத்தையும் பணத்தையும் செலவழிப்போருக்குத் தான் மூளை வளரவில்லை" என்று இடித்தது. என்னுடைய ஓட்டு எதிர்க்கட்சிக்கு (எப்போதுமே). போகட்டும், நம்முடைய மூமூமூமூமூ...மூதாதையரின் மூளை நம் மூளையைவிட ஒரு சைஸ் பெரிதாக இருந்திருக்கலாம். அதைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு நமக்கு மூளை இருக்கிறது. அதுதான் முக்கியம். | மூளை அளவு என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. மூளை மியூசியம் ஒன்றில் உலகத்தின் அத்தனை நாடு/இன மக்களின் மூளை அளவுகளையும் விவரங்களையும் தொகுத்துக் காட்சியில் வைத்திருந்தார்களாம். மற்ற இனங்களை விட சர்தார்களின் மூளை மிகப்பெரிதாக இருந்ததாம். அதை மனைவி மக்களிடம் காட்டிப் பெருமைபட்ட ஒரு சர்தார், "நல்ல வேளை நாம மூளையை பொறுப்பா அப்படியே வச்சிருக்கோம், மத்தவங்களைப் போல செலவழிக்காம.." என்றாராம். |
            அந்தப் பக்கம் அப்படியென்றால், இந்தப்பக்கம் இப்படி ஒரு ஆராய்ச்சி. மரணத்தை வெல்ல முடியும் என்றுத் தீர்மானமாகச் சொல்கிறார்கள் marine வேதியல் ஆராய்ச்சியாளர்கள். நிறையச் சிரிக்க வேண்டும், கவலை இல்லாமல் இருக்கவேண்டும், பற்றறுக்க வேண்டும், அரை வயிறு சாப்பிட வேண்டும் போன்ற 'சும்மா இலக்கியத்தனப்' பேச்சு இல்லை. திருமூலரின் 'காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறி'யுமல்ல. இது அசலில் நோ டெத். சாவுக்குச் சாவு. கயாவுக்கு ஒரு கயா. மரணத்தை எண்ணிக் கலங்காத விஜயனின் ரகசியம். இந்த ரகசியம் கெமிஸ்ட்ரியில் புதைந்திருப்பதாகச் சொல்கிறார்கள் ஸ்மித்சோனியன் ஆய்வாளர்கள். அப்படி என்ன ரகசியம்? செசியம் க்லோரைட், செசியம் க்லோரைட் என்று ஒரு உப்பு. இந்த உப்பின் ஒரு முக்கிய பாதிப்பு, RD என்று செல்லமாக வழங்கப்படும் Reversed Development. உடனே நாம் குரங்காவோம் என்று பயப்படவேண்டாம். இந்த RD ரொம்ப நல்ல RD. நீரினங்களில் இந்த உப்பின் பாதிப்பை ஆராய்ந்தவர்கள், 'turritopsis nutricula' எனப்படும் jelly fish வகை தாமாக இறப்பதே இல்லை என்று கண்டுபிடித்தார்கள். செசியம் உப்பின் பாதிப்பினால் இந்த மீன் வகையின் உயிரணுக்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்கின்றனவாம். alright! அங்கிருந்து மனித இனத்துக்குக்கானப் பயன்பாடு, தொட்டு விடும் தொலைவு தானே? நமது உடலின் திசு மற்றும் உயியரணுக்களை 'பிறந்த நிலைக்கு' மீண்டும் எடுத்துப் புதுப்பிக்க வைக்கும் RD உப்பை வருக வருக என்று வரவேற்கிறேன். நமது செல்கள் இயற்கையாகத் தம்மைத்தாமே தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டால், என்றைக்கும் இளமை தானே? மரணபயமே லேதே? ..காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன். எல்லோரும் பாடலாம். மீசை optional. காலனை வெல்லும் இந்த உப்பு, என் வாழ்நாளில் தெருமுனை முருகன் கடையில் கிடைக்கப் போவதில்லை. இந்த நூற்றாண்டு முடிவுக்குள் கிடைக்கலாம், முருகன் கடைகள் மூடினாலும். சின்ன சிக்கல்கள் தீர வேண்டும் முதலில். இது முழுக்க முழுக்க கதிரியக்க உப்பு என்பதால் கட்டுப்பாட்டுடன் nuclear medicineஆக மட்டுமே பயன்படுகிறது. இப்போதைக்கு 'அருகிலிருந்தும் தொடப்பயந்தேனே' கதை. மரணத்தை வென்றால் 'கடவுள் சொர்க்கம் நரகம் எல்லாம் என்னாவது?' என்றக் கவலைகள் கிடக்கட்டும், மனிதம் மரணத்தை வெல்ல ஒரு சாத்திய வழி தெரிந்திருக்கிறது. அதுதான் முக்கியம். | மரணம் கடவுள் சொர்க்கம் நரகம் என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. ஒரு பூசாரி, ஒரு மருத்துவர் - ஒரே நேரத்தில் இறந்த பின் எமனைச் சந்திக்கிறார்கள். எமன் இருவரையும் வரவேற்று "இருவருக்குமே சொர்க்கம்" என்று தீர்ப்பளித்து அனுப்புகிறான். சொர்க்கத்தில் ஒரு பெரிய வசதியான இடத்தில் மருத்துவருக்கு இடம் கிடைக்கிறது. பரமசிவனுக்குப் பக்கத்து வீடு. பூசாரிக்கோ முப்பத்து இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து சொச்ச தேவர் ஒருவருடைய வீட்டின் பின்கட்டில் ஒரு இலையில்லா மரத்தடியில் சிறிய கூரை போட்டுக் கொடுக்கிறார்கள். மருத்துவருக்குப் புரியவில்லை. பரமசிவனிடம், "என்ன இது மிஸ்டர் பரமசிவம்? இந்தப் பூசாரி நாள் முழுதும் உம் போன்றக் கடவுள்களையே வழிபட்டு புகழ்பாடி வந்தார். அவருக்கு இப்படி ஒரு இடம். நாளும் பணம் தேடிக்கொண்டிருந்த டாக்டரான எனக்கு இத்தனை வசதியான இடமா, புரியவில்லையே!?" என்று கேட்டார். பரமசிவன், "ஐயா.. இங்கே பூசாரிகள் கணக்கில்லாமல் வராங்க.. ஆனால் பாருங்க.. சொர்க்கத்துக்கு வந்திருக்கும் முதல் டாக்டர் நீங்கள் தான். அதனால் இந்த வரவேற்பு" என்றார். |
            இந்த வாரம் அத்தனை எம்ஜிஆர் படங்களைப் பார்த்ததும், ஏற்கனவே தெரிந்திருந்த ஒன்று தீர்மானமானது. சரோஜாதேவியே எம்ஜிஆருக்கு மிகப் பொருத்தமான ஜோடி. 'ஆயிரத்தில் ஒருவன்' மட்டும் விதிவிலக்கு. கொஞ்சம் கூடப் பொருந்தாத இணை நடிகைகள் பாரதி, வாணிஸ்ரீ, மற்றும் லதா. தேவிகா சற்று ஆச்சரியமான பொருத்தம். எம்ஜிஆர் அருகில் இருந்தாலும் பானுமதி, சாவித்திரி இருவரும் ஏதோ தனியாக நடிப்பது போலிருந்தது. சந்திரகலா, மஞ்சுளா இருவரையும் ஏன் தன் ஜோடியாக நடிக்க வைத்தார் எம்ஜிஆர் என்பது புதிர். பின்னாள் படங்களைப் பார்க்கையில் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்குப் பலமா அல்லது ஜெ எம்ஜிஆருக்குப் பலமாக இருந்தாரா என்றக் கேள்வி அடிக்கடித் தோன்றியது. பாடல் காட்சிகளில் சரோஜாதேவி சளைக்காமல் எம்ஜிஆரையே கணக்கு பண்ணுகிறார்! எம்ஜிஆர் பானுமதியிடம் பயந்து நடிக்கிறார். பத்மினி எம்ஜிஆர் படங்களில் அழகாக இருக்கிறார். சௌகார் ஜானகிக்கு அட்டகாசமான பாடல்கள் கிடைத்திருக்கின்றன. கேஆர்விஜயா ஜெயலலிதா இருவருடனும் எம்ஜிஆர் 'நெருங்கி' நடித்திருக்கிறார். வில்லன்களில் நம்பியாருக்குத் தனியிடம் கொடுத்திருக்கிறார். மற்றவர் படங்கள் போல் நாகேஷ் காமெடி எம்ஜிஆர் படங்களில் அத்தனை சிறப்பாக இல்லை. எம்ஜிஆரைப் போல் நடனமாட தமிழ்ச் சினிமாவில் யாரும் இல்லை. 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' போல் ஒரு வேக நடனக் காட்சியை நான் பார்த்ததில்லை என்றே நம்புகிறேன். விஜயலட்சுமியுடன் போட்டியாட்டம் சில நேரம் கேமரா ட்ரிக்கோ என்று நினைக்க வைத்தது. நடனத்தை ரசித்த இன்னும் சில பாடல்கள் 'பல்லவன் பல்லவி', 'நல்ல வேளை'. ஜெமினி சிவாஜியைப் பார்க்கையில் எம்ஜிஆர், பாடலுக்கேற்ற உடையலங்காரத்தில் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். 'வனமேவும் ராஜகுமாரி' பாட்டில் ராஜேந்திரனுக்குத் துணைவரிகளைப் பாடுகிறார் என்றாலும் எம்ஜிஆரின் உடையும், நடன அசைவில் பெண் பாவனையும் மறக்கவே முடியவில்லை. கேவிஎம் எம்ஜிஆருக்கு நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். மிகவும் ரசித்த கேவிஎம் பாடல்கள்:'உன்னை அறிந்தால்', 'அழகுக்கு மறு பெயர்'. இரண்டு பாடல்களிலும் சவுன்டுக்கு ராஜன் சொக்க வைக்கிறார். எம்எஸ்வி எம்ஜிஆருக்கு உபரியாக உழைத்தார் என்றுச் சொல்வார்கள். உண்மைதானோ என்றுத் தோன்றியது. அனைத்து டூயட்களிலும் டிஎம்எஸ்-சுசீலா அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள். 'தஞ்சாவூரு சீமையிலே', 'நாங்க புதுசா' பாடல்களில் சுசீலா டிஎம்ஸை லபக் என்று விழுங்கியிருக்கிறார். இந்த வாரம் பார்த்தப் படங்களில் மிக மோசமானது நவரத்தினம். மிக மோசமான பாடல் படமாக்கம்/வரிகள்: 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. எப்பேற்பட்ட பாடல் மெட்டை எப்படி வீணாக்கியுள்ளார் எம்ஜிஆர்... எண்ணித் தாங்கவில்லை. முதல் முறையாகப் பார்த்து, சற்றும் எதிர்பாராமல் ரசித்த படம்: பெற்றால் தான் பிள்ளையா. எம்ஜிஆர் டூயட்களில் நிறைய 'சிப்பி/முத்து' உவமை வருகிறது. அதற்கு ஏற்ற நடன அசைவுகள் தணிக்கைக்குத் தப்பியது ஆச்சரியம். 'நீ வெட்கத்தை விட வேண்டும், நான் சொர்க்கத்தைத் தொட வேண்டும்' போன்றப் பாடல் வரிகளை மட்டும் பருப்பு ரசமாக மாற்றி என்ன பயன்? மிகவும் ரசித்த டூயட்கள்: 'பாட்டு வரும்', 'நாணமோ'. விடாமல் திருப்பித் திருப்பிப் போட்டுப் பார்த்த டூயட்: 'வளர்வது கண்ணுக்குத் தெரியலே'. தனிப்பாடல்களில் 'ஒரு கை பார்ப்பேன்' என்ற பொருள் அடிக்கடி வருகிறது. 'உலகம் பிறந்தது எனக்காக' 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' 'வெற்றி மீது வெற்றி' என எம்ஜிஆருக்கு அமைந்தாற்போல் கொள்கை/தனிப்பாடல்கள் பிறருக்கு அமையாதது ஆச்சரியம். பார்த்ததில் மிகவும் ரசித்தத் தனிப்பாடல்கள்: 'போயும் போயும்', 'தைரியமாகச் சொல்'. கணக்கில்லாமல் எம்ஜிஆர் படம், பாட்டு, நட்புடன் அரட்டை என நாட்கள் போனதே தெரியவில்லை. நண்பரை நானும், இந்த விழாவை அவரும், எங்கள் மரணம் வரை மறக்கப் போவதில்லை. அதுதான் முக்கியம். | எம்ஜிஆர் என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி மூவரும் சொர்க்கத்தில் சந்திச்சாங்களாம். 'கதாநாயகிங்களை ரம்பை ரதினு பாடினமே, அவங்க எப்படித்தான் இருக்காங்க பார்ப்போம்'னு தேவகன்னிகை குவார்டர்சுக்குப் போனாங்களாம். அங்கே ரதி, ரம்பை, மேனகை, திலோத்தமை எல்லாம் ஒரு ஓடையில உல்லாசமா குளிச்சிட்டிருந்தாங்களாம். அவங்க நடுவுல யாரது தெரிஞ்ச முகமா இருக்குதேனு பாத்தா.. நாகேஷாம். மூணு பேருக்கும் கடுப்பாயிடுச்சாம். நேரே போய்.. மேலே சொன்னால் மக்கள் உதைக்க வருவாங்களோ? அப்ப ஜோக்கை இன்னொரு சமயம் சொல்றேன். இப்ப நான் ரசித்துப் பார்த்த சில வாத்தியார் டூயட்களைப் போட்டுச் சமாதானமாப் போயிடறேன். |