2012/08/27

வளர்ச்சிக்கு விலையில்லை.....யா?



    சென்னை, பெங்களூர் நகரப் புத்தகக்கடைகளில் நிறையப் பத்திரிகைகள் தென்பட்டன. தின, வார, மாத இதழ்கள். ஆங்கிலம், இந்தி மொழிகளில் எக்கச்சக்கமானப் பத்திரிகைகள், புத்தகங்கள். ஹைதராவில் அதிகம் பத்திரிகைகள், தெலுங்கிலும் தென்படவில்லை. பெங்களூரில் தெலுங்கு, மலையாளம், மராத்தி என்று பிறமொழி நாளிதழ், பத்திரிகைகள் பார்த்தேன். ஒன்றிரண்டு ஆங்கிலம் தவிர, சென்னையில் தமிழ்ப் பத்திரிகைகளே அதிகம். சென்னையில் இன்னும் யாரும் இந்தி படிக்கத் தொடங்கவில்லை போலிருக்கிறது. இந்தியாவில் இந்திக்கு அடுத்தபடி தமிழ்ப் பத்திரிகைகள் அதிகமோ என்றும் தோன்றியது. சிறியப் பெட்டிக்கடையில் கூட உயிர்மை போன்ற பத்திரிகைகள் தொங்குவது ஆச்சரியமும் நிறைவும். கண்ணில் பட்ட அத்தனை "இலக்கிய"ப் பத்திரிகைகளையும் வாங்கினேன். கடைக்காரருக்கு உள்ளூர பயம், நான் பணத்தை எண்ணிக் கொடுக்கும் வரை - சும்மா காமெடி பண்ணி ஓடி விடுவேனோ என்று. சாவகாசமாகப் புரட்டினால்... எதையுமே ஒரு நிமிடத்துக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. முதல் வரியிலேயே "இலக்கியம்" முகத்திலடித்துப் பயமுறுத்துகிறது.

    சென்னைப் புத்தகக் கடைகளில் இன்னும் சுஜாதா ஆதிக்கம் உணர முடிகிறது. அவர் இறப்பின் தாக்கம் மூன்று வருடங்கள் நிலைக்கும் என்று கணித்திருந்தேன், இன்னும் மூன்று வருடங்கள் நிலைக்கும் போல. சென்ற இருபது ஆண்டுகளின் "இலக்கியக் காவலர்கள்" சிலர் எழுதியப் புத்தகங்களை மேலோட்டமாகப் புரட்டிப் படித்தேன். அதிர்ச்சியில் வயிற்று வலி வந்துவிட்டது. 'காவல் கோட்டம்' வாங்க எண்ணி தி.நகர் புத்தகக் கடையில் மேய்ந்தபோது, ஒரே ஒரு பிரதி வைத்திருந்தார்கள். அச்சும் காகிதமும் படு மோசம். பின்பக்க எழுத்துக்கள் முன்பக்கத்தில் ஊடுறுவி.. படிக்கவே சிரமமாக இருந்தது. சிறப்பான விருது பெற்ற புத்தகத்துக்கே இந்தக் கதியா? (அப்புறம்... எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்திருக்கிறதா? அதைவிட மேலான விருது ஏதாவது சீக்கிரம் கிடைக்கட்டும். அவருடைய பொறாமையும் காழ்ப்பும் அடங்கட்டும். பழைய கதை என்றாலும் 'காவல் கோட்டம்' பற்றிய அவருடையப் பண்பற்றக் கருத்தைப் படித்து மிகவும் வருந்தினேன். that was low.)

    நாக்பூர்-மும்பை பயணத்தில் ஒரு மராத்தி நடிகையைச் சந்தித்தேன். நடிக/நடிகைகள் என்றால் ரசிகர்கள் ஈ போல் மேலே விழுவார்கள் என்று படித்திருக்கிறேன். விமான நிலையத்தில் சர்வ சாதாரணமாகப் பழகினார். கூட்டமும் பண்போடு நடந்தது. பிரபல நடிகையாம். தமிழ் நடிகர்களையே தெரியாது, மராத்தியை எங்கே தெரிந்து வைக்கப் போகிறேன்? ஸ்புருஹா ஹோஷி என்றார்கள். பெயர் எத்தனை சிரமமாக இருக்கிறது! நிஜப்பெயரா, இல்லை புருஹா விடுகிறாரா? சாதாரணமாக எங்களுடன் போர்டிங் பஸ்சுக்கு லைன் கட்டி நின்றார். என்னிடமிருந்த ப்லேபுக் பார்த்து 'may i see it?' என்றார். "ஆங்கிலத்தில் கேட்டதற்கு மிகவும் நன்றி. எனில் எனக்குப் பண்பில்லை என்றோ நான் செவிடு என்றோ நினைத்திருப்பீர்கள்" என்றேன். முறுவலுடன், "உங்களைப் பார்த்தாலே தெரிகிறதே?" என்றார். ஹ்ம்.. என்ன தெரிந்ததோ? ஒரு விக் வைத்துக் கொண்டிருந்திருக்கலாம்.

    ஹைதராபாதில் தன் நாலு வயதுப் பிள்ளைக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தாள் என் niece. மண்ணை அள்ளித் தின்றக் குட்டிக்கிருஷ்ணன் வாயில் யசோதா அண்டம் கண்ட கதை. எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட பிள்ளை கடைசியில், "சரி, க்ருஷ்ணர் வாயிலிருந்த மண் என்ன ஆச்சு?" என்றான். அப்படிக் கேளுடா சிங்கக்குட்டி, கண்மூடாதே. ஹை,பெ,செ எல்லா இடங்களிலும் ஒன்றைக் கவனித்தேன். எல்லாரும் கம்யூனிடி லிவிங் என்ற அமைப்புக்குள் - அபார்ட்மெந்ட் வளாகத்துக்குள்ளேயே புழங்குகிறார்கள். பிள்ளைகள் வெளியில் சென்று விளையாட வாய்ப்பே இல்லை. காலை ஆறரை மணிக்கு சிலர் பள்ளிக்கூடம் செல்கிறார்கள்! மாலை திரும்பினால் வீட்டுப் பாடம், பியேனோ, கராத்தே என்று கிளம்பி அரை மணி நேரம் போல் விளையாடுகிறார்கள் - அதுவும் காம்பவுன்ட் சுவருக்குள் இருக்கும் பத்தடி மணல் திடலில். வெளியே செல்ல நமக்கே பயமாக இருக்கிறது - அத்தனை நெரிசல் என்பதும் காரணமாக இருக்கலாம். தனிவீட்டில் வளரும் ஒரு நண்பரின் மகன், கம்யூனிடி லிவிங் காரணமாகத் தனக்கு விளையாட ஆள்/நேரம் இல்லை என்று புலம்பியது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது. முப்பது வருடங்களில் வாழ்க்கைமுறை தலைகீழ் ஆகிவிட்டது! சற்றும் எதிர்பாராத வளர்ச்சி (?) இது. வரம்புக்குட்பட்டக் குடியிருப்புகள். ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனித்தனி வசதிகள், சட்டங்கள், கமிட்டிகள். forrest ackerman என்றைக்கோ எழுதிய எதிர்காலப் புனைவு ஒன்று நினைவுக்கு வந்தது. நாடுகள் என்ற எல்லை/வரம்புகள் ஒழிந்து உலகில் எல்லாமே கம்யூனிடி லிவிங் பாணிக் குடியிருப்புகள். ஒவ்வொரு குடியிருப்பு/காலனியும் தத்தம் சட்டதிட்டங்களுக்குள் இயங்குவார்கள். கடைசியில் ஒவ்வொரு காலனியும் அடித்துக் கொண்டுச் சாவார்கள்.

    குரோம்பேட்டை எதிர்வீட்டில் காலை ஏழு மணி வாக்கில் செய்திகள் மட்டும் கேட்கிறார்கள். டிவி என்று நினைத்தேன். ரேடியோ என்று தெரிந்ததும் ஆச்சரியப்பட்டேன். எனக்குப் பழைய சரோஜ் நாராயணசுவாமியின் குரல் நினைவுக்கு வந்தது. மற்றபடி வீடுகளில் வானொலி அனேகமாக மறைந்துவிட்டது என்றே நினைக்கிறேன். விவித்பாரதி எல்லாம் இன்னும் இருக்கிறதா தெரியவில்லை.
எல்லிருவே
மாலை தமிழ் வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு முன்பு அரைமணி கதம்ப நிகழ்ச்சி ஒன்றில் தென்னிந்திய மொழிகளில் இருந்து ஒன்றிரண்டு பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அப்போது கேட்ட ஒரு எஸ்பிபி கன்னடப் பாடல். பிறகு ராஜாஜி நகர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் முதல் வேலையில் சேர்ந்தபோது நாள் முழுதும் ஒலித்தப் பாடல். பெங்களூர் டிவியில் பாடல் காட்சியை இப்போது முதல் முறையாகப் பார்த்தேன். ரேடியோவின் மதிப்பு மிக உயர்ந்தது. பாடல் இன்றைக்கும் சில நினைவுகளைக் கிளறி இனித்தது.

    பெங்களூரில் என் நண்பன் எனக்காக விருந்தொன்று ஏற்பாடு செய்திருந்தான். இந்த விருந்தில் சாப்பாடு கிடையாது. வந்திருந்தோரில் தன் மகளை அறிமுகப்படுத்தினான். பிறகு மகளின் நண்பரையும் அறிமுகப்படுத்தினான். "தே லிவ் டுகெதர்" என்றான். அரை செகந்டுக்கும் குறைவாகத்தான் என்றாலும் என் மனதில் தோன்றி மறைந்த சஞ்சலம் முகத்தில் தெரியாமல் இருக்கச் சிரமப்பட்டேன். ஆச்சரியம் மறைந்து கொஞ்சம் சந்தோஷம் தோன்றியதும் உண்மை. இந்நாளில் நிறைய இளைஞர்கள் திருமணத்துக்கு முன் சேர்ந்திருக்க உடன்படுகிறார்கள் என்று படித்திருந்தும், இப்பொழுது தான் முதல் முறையாக நேர்கொள்கிறேன். தனிமையில் இருவரையும் பிறகு நண்பரையும் பாராட்டிய போது, என்னைக் கீழாகப் பார்த்தார்கள். "நீயெல்லாம் முற்போக்காடா, பாடு" என்றான் நண்பன் வெளிப்படையாக. "அவங்க வாழ்க்கை. இதுல என்னோட அனுமதி இருந்தா என்னா இல்லாட்டி போனா என்ன?" என்றான்.

    கரங்களில் எங்கே பார்த்தாலும் செக்யூரிடி. சாதாரண மால்களின் நுழைவாயிலில் கூட செக்யூரிடி. ஆயுதம், போதைப்பொருள் பரிசோதனை. இதை ஏற்றுகொண்டபின் அமெரிக்க விமான நிலைய சோதனைகளை என்னமோ பெரிய அவமானமாக போஸ்டர் ஒட்டிப் புலம்புகிறார்களே இந்தியப் பிரபலங்கள்? எல்லா சாலைகளையும் தோண்டி சின்னாபின்னப் படுத்தியிருக்கிறார்கள். சர்வசாதாரணமாக மோதிவிட்டுப் போகிறார்கள். இந்தியாவின் அன்றாட வாழ்க்கை அபாயகரமானது என்ற எண்ணம் அவ்வப்போது வந்து போனது.

    ன் பயண நேரத்தில் வெளிநாட்டிலிருந்து ஹைதராபாத் வந்தப் பழைய நண்பன் ஒரே வாரத்தில் தன் மூத்த உறவினர்கள் இருவரை இழந்தக் காரணத்தால், அவனைச் சந்திக்க முடியவில்லை. பலமுறை தொலைபேசினேன். "டேய்.. என்னுடைய முந்தைய ஜெனரேஷன் எல்லாரும் 65-85 வயசு ரேஞ்சுல இருக்காங்கடா. என்னிக்குப் போவாங்கனு சொல்லமுடியாது. இவங்க எங்கயோ இருக்காங்க.. நான் எங்கயோ இருக்கேன். ஒரு அவசரம்னு ப்ளேனை பிடிச்சு வரக்கூட பத்துப் பனிரெண்டு மணி நேரமாகுது. என் முந்தைய தலைமுறை மறைஞ்சு போறதை நான் பார்க்கக் கூட முடியாதுனு நெனக்கறப்ப எனக்கு தாங்கலேடா. இதுக்காகவாவது கொஞ்ச நாள் இந்தியா வந்திருந்து அவங்களோட பழகணும்னு தோணுது.. இவங்கள்ளாம் என் சின்ன வயசுல என்னை அப்பப்ப எடுத்து வளத்தவங்கடா.." என்றான். சிறிய ரம்பம் ஒன்று என் இதயத்தை மெள்ள மெள்ள இடம் பார்த்து அறுக்கத் தொடங்குவதைத் தடுக்க முடியவில்லை. சென்ற எந்தப் பயணத்திலும் உணராத அளவுக்கு இந்தப் பயணத்தில் என் உற்றார் சுற்றார் முதுமையின் தாக்கத்தை உணர்ந்தேன்.

    ந்தியாவில் பொருள் அமெரிக்க விலை விற்கிறது. பெட்ரோல், தண்ணீர், பால், சில காய்கறிகள், துணி, பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் அமெரிக்க விலையை விட அதிகம். பெட்ரோல் விலை அதிகம் என்று இங்கே புலம்பும் நான், இந்திய விலைகளைப் பார்த்ததும் மூச்பேச் இல்லாது போனேன். பத்து சதவிகிதத்துக்கு மேல் வட்டிக்குக் கடன் வாங்கி, நாற்பது லட்சத்திலிருந்து கோடிக்கணக்கில் செலவு செய்து வீடு வாங்குகிறார்கள். அதைத் தவிர மாதம் ஐந்தாயிரம் வரை பராமரிப்புச் செலவு என்று கம்யூனிடி கமிட்டியில் கட்டுகிறார்கள். வாங்கும் சம்பளத்தில் அறுபது எழுபது சதவிகிதம் வீட்டுக்கே போயிவிடும் போலிருக்கிறது. அப்புறம் கார். சாதாரண வசதியுடன் கூடிய வீட்டு மாதவாடகை ஐம்பதாயிரம் வரை போகிறது. விலைவாசி தொடர்ந்து ஏறினால் (gdp ஏழில் தாக்குப் பிடிக்கிறது - விலைவாசி இப்போதைக்கு குறையும் என்று தோன்றவில்லை. என்றைக்காவது குறைந்திருக்கிறதா?), விரைவில் புவாவுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. இந்நிலையில் வீட்டின் விலை மிக உயர்ந்தாலொழிய சொந்தவீடு வாங்கி லாபம் பார்க்க முடியாது என்று தோன்றியது. இந்திய நகரங்களில் வாழவேண்டுமானால் வீட்டு வாடகை தவிர மாதச் செலவுகளுக்குப் பத்தாயிரக்கணக்கில் பணம் வேண்டும் என்று தோன்றியது. பயந்து போனேன். சீக்கிரம் ஊரைப் பார்க்கப் போகணும் என்ற உந்துதல், அரிக்கத் தொடங்கியது.

    ரில் இறங்கியதும் நிம்மதிப் பெருமூச்சு. இரண்டு நாள் பொறுத்து மறுபடி சென்னை ஏக்கம். பழைய பயண நினைவுகள்; புதிய பயணக் கனவுகள். மனம் கேவலம்.

2012/08/23

எந்தப் புதிரில் எந்தப் பதிவோ?



   பதிவர் விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்.

உங்கள் பதிவறிவைக் கொஞ்சம் உரைத்துப் பார்க்கலாமா?

கீழ்வரும் 'குறுக்கெழுத்துப் புதிர்' என்றத் தலைப்பை (சுட்டியை) க்ளிக்கினால், பதிவுகள்/பதிவர்களை அடையாளம் காட்டும் குறுக்கெழுத்துப் புதிர் புதிய பக்கத்தில் தோன்றும்.

அறிக:
1. புதிரின் மேல் இடப்பக்க முனையில் தெரியும் '+' சின்னத்தைச் சொடுக்கினால் தமிழ் எழுத்து அட்டவணை தோன்றும். விடைக்கான எழுத்தை அட்டவணையிலிருந்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. விடைகளுக்கான துப்புகளும், விடைகளும் புதிர்ப் பக்கத்தில் கிடைக்கும். (பிட் அடித்தே பிழைத்தவர்கள் மேல் பாசமுண்டு, நேசமுண்டு)

குறுக்கெழுத்துப் புதிர்

மேலும் அறிக:
1. புதிரைச் செயல்படுத்த Flash மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். சமீபத் தேடலில் Flash இங்கே கிடைத்தது
2. சில உலாவிகளில் புதிர் காணாமல் போகிறது அல்லது கிறுக்கலாகத் தோன்றுகிறது. அட்டவணையில் எழுத்துக்கள் நெட்டித்தள்ளி வருகின்றன. முதல் வரிசையை மாதிரியாகப் பாவித்துத் தேவையான எழுத்தைத் தீர்மானிக்கவும். உதாரணத்துக்கு: முதல் வரிசை 'ஔ' உயிரெழுத்தின் கீழே இருப்பவை 'கௌ'லிருந்து 'ஹௌ' வரையிலான உயிர்மெய்கள். குளறுபடிக்குக் காரணம் தெரியவில்லை, தீர்வும் தெரியவில்லை. (க்கும்.. அத்தனை தொழில்நுட்பம் தெரிந்தால் நான் கைப்பூனையை என்றோ துரத்தியிருப்பேனே?)

முடிவாக அறிக:
கணினியில் புதிர் கடவுள் போல் தெரிந்தால் இந்த எளியோனை மன்னித்து, சேர்த்திருக்கும் ரஸ்ஸ்சமான 'A' certified எஸ்பிபி டூயட்களில் உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் துணையோடோ தனியாகவோ முணுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். (பாடல்களைப் புதிர்ப்பக்கத்திலும் யோசித்தபடியே கேட்கலாம் அ கேட்டபடியே யோசிக்கலாம். புதிர் முயற்சி பண்றவங்களுக்கு ஒரே ஒரு சின்ன surprise).

எஸ்பிபி 'A' டூயட்கள் சில | 2012/8/23


புதிரை (விடைகளோடு) தனியாக பிடிஎப் வடிவில் சேர்த்திருக்கிறேன். கணினியில் பார்க்க முடியாதவர்களுக்காக.
pdf வடிவில் புதிர்



2012/08/20

மெல்லிசை நினைவுகள்


    பாலராஜன் கீதாவைத் தவிர இரண்டு வாசக நட்புக்களை முதல் முறையாக நேரில் சந்தித்தேன். ஒருவர் பெயரில்லாமல் பின்னூட்டம் இடுபவர். என்னுடன் நீண்ட நாட்களாக இமெயில் தொடர்பு வைத்திருப்பவர். நான் சற்றும் எதிர்பாராத பரிசொன்றை வழங்கினார். விவரம் பிறகு சொல்கிறேன்.


முக்திப் பாடல்கள்


    சென்னைப் பயணத்தின் சுகங்களில் அரியது பழைய திரைப்படப் பாடல்களைப் பார்க்க/கேட்கக் கிடைக்கும் அனுபவம். இந்த முறை முரசு என்று ஒரு சேனல் பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருந்தேன் என்பது appropriate. கோவிந்தபுரத்தில் இருந்த ஒவ்வொரு நாளும் பக்தியோடு முரசு சேனலை வழிபட்டு முக்தியடைந்தேன்.

என் முக்தியின் பலனாக இரண்டு விடியோக்களை, இதோ உங்கள் முக்திக்காக வழங்குகிறேன்.

'நிலவென்னும்' எம்ஜிஆர்-சரோஜாதேவியை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. உதட்டைச் சுழித்து எம்ஜிஆர் பாடும் வரிகளை, மெட்டில் மெய்மறக்காமல், இந்த முறை கவனித்தேன். பண்பாடு கலாசாரம் என்று எத்தனை இழுத்தாலும் இது போன்ற பாடல்களைக் கேட்டே வளர்ந்தார்கள், வளர்கிறோம், வளர்வார்கள். டிவியில் சமீபப் பாடல் ஒன்றையும் பார்க்க/கேட்க நேர்ந்தது. அதைப் பார்த்ததும் இந்த எம்ஜிஆர் பாடலை தொடக்கப்பள்ளிப் பாடத்தில் வைக்கலாம் என்று தோன்றிவிட்டது. தமிழ்ச்சினிமா பாடல் வரிகளில் புதைந்திருக்கும் விரசம், சுவாரசியமான கலாசார முகமூடி. ஓ..இன்னொரு ஆணை காதல் பாவத்தோடு எம்ஜிஆர் முத்தமிட்டது இந்தப் பாட்டில் மட்டுமே என்று நினைக்கிறேன்.

'இன்று நமதுள்ளமே' பாடலின் இறுதியில் பத்மினி ஏன் பதட்டப்படுகிறார் தெரியவில்லை. முதலிரவு பாணிக் காதல் பாட்டு போலத்தானே இருக்கிறது? அடுத்தக்காட்சியில் சிவாஜி மூன்று கால் ராட்சசனாக.. okay didn't mean that, சரியாக வரவில்லை... பயங்கர மந்திரவாதியாக மாறப்போகிறாரா? மேக்கப்பை இன்னொரு தடவை பாருங்கள் - பொய்முடியும் வக்கிரப் புன்னகையும் ஏதோ பயங்கரத்தின் பீடிகையாக இருக்கும் போலிருக்கிறது.


    லைக்கோவில், வானம்பாடி இரண்டு பட டிவிடிகளையும் தேடினேன். கிடைத்தது. கலைக்கோவில் படத்தில் - படுபாவிகள், படத்தின் பாடல்களை சகட்டு மேனிக்கு வெட்டி விட்டார்கள். அவர்கள் தலையில் வயிற்றுகடுப்பெடுத்த யானைகள் வேகமாகக் கழியட்டும்.

கலைக்கோவில் படம் என்னவோ இலக்கியத்தரம் ஆகா ஓகோ என்றார்கள். 'தங்கரதம்' 'தேவியர் இருவர்' பாடல்களின் classical bent, 'வரவேண்டும்' 'முள்ளில் ரோஜா' பாடல்களின் மேற்கத்திய ஜாலம், 'நான் உன்னைச் சேர்ந்த செல்வம்' பாடலின் pure காதல் spirit, பாடல் வரிகளில் வெளிப்படும் moral, ethical and emotional conflict, பாலமுரளி, சிட்டிபாபு என்று ஜாம்பவான்களின் collaboration, போதாக்குறைக்கு 'கலைக்கோவில்' என்று பெயர் - எல்லாம் சேர்ந்து ஏதோ சங்கராபரண முன்னோடி என்று ஆவலுடன் கைகளைத் தேய்த்துப் படம் பார்த்தால்.. பார்த்தால்.. what a fucking let down! படமா இது? எனக்குத் தாங்கவில்லை. கொடுமையான டப்பா. இப்படி ஒரு கதையா, படமா, அதுவும் ஸ்ரீதரிடமிருந்தா? படம் அன்றைக்கும் ஓடவில்லை, என்றைக்கும் ஓடாது என்பது என் கருத்து. விசுவனாதன்-ராமமூர்த்தியின் இசையை இப்படியா வீணடிப்பது! colossal! மிகவும் வருந்தினேன். எனக்கு மிகவும் பிடித்த 'முள்ளில் ரோஜா', டிவிடியில் காணோம். அசல் படத்தில் உண்டா இல்லையா என்று தெரியாது.

ஊர் திரும்பியதும் 'முள்ளில் ரோஜா' பாடலை பத்து தடவை கேட்டபிறகு.. இப்போது கொஞ்சம் பரவாயில்லை... i feel better, thank you. மெல்லிய jazz மெட்டு, காதலி மடி. அடக்கமாகத் தொடங்கும் பியேனோ, கிடார், ஐஸ் மின்னல் போல் புகுந்து வெளிவரும் குழல், வயலின்.. தொடர்ந்து வரும் ஈஸ்வரியின் அலட்டாத மிதமான குரலும் பிபிஸ்ரீயின் குடிபோதை ஹம்மிங்கும் பாடலின் போதையைக் கூட்டினாலும், முக்கிய லாகிரிகள் இசையும் மெட்டுமே. கிடார், பாங்கோஸின் புரட்டல் - பாடலின் க்ளைமேக்ஸ், well, as good as க்ளைமேக்ஸ் என்பேன்.
முள்ளில் ரோஜா


   எம்எஸ்வியின் swing-jazz மெட்டுக்களில், வரும் பாடல் என்னுடைய favorite. டிரம்ஸ் இந்த அளவுக்கு peppyஆக வேறெந்த பாடலிலும் உபயோகித்திருக்கிறாரா தெரியவில்லை. பேஸ் கிடார், குழல், பியேனோ, ட்ரம்பெட் என்று பின்னியெடுத்திருக்கிறார். சரணங்களின் இடையே ஈஸ்வரி இழுத்துத் தொக்கி நிற்கையில், அரை செகந்ட் தாமதித்து ட்ரம்ஸ் ஒரு தட்டு தட்டி இசையையும் பாடலையும் இணைப்பதைக் கேளுங்கள் - அந்தக் கணத்தில் முக்தி உத்தரவாதம்.

பம்மலில் குடிபுகுந்தத் தொடக்க நாட்களில் ஒரு உடைசல் band வைத்திருந்தோம். விடலைகள் எங்களை நம்பி யாரும் வாய்ப்பு தரவில்லை. தளருவோமா என்ன? விக்கிரமாதித்தக் கூட்டமாச்சே நாங்கள்? முரளி வீட்டு மாடியிலும், முத்தமிழ் நகர் ஜெயன் வீட்டு மாடியிலும் பெரிய கூட்டத்தின் முன் கச்சேரி நிகழ்த்தும் பாவனையுடன் பாடுவோம். ஜெயன் வீட்டில் பாடும் பொழுது அவனுடைய பெரிய அண்ணன் சுதிர் சேர்ந்து கொள்வார். அப்புறம் எப்போதாவது எங்களுடன் பாடச் சம்மதிக்கும் ஜெயன் எதிர்வீட்டு பாபுவின் அக்கா உமா. ஜமுனாராணிக்கும் ஈஸ்வரிக்கும் இடைப்பட்டக் குரல். பக்திப் பாடல்களை மட்டுமே பாட அனுமதிப்பார்கள் உமா வீட்டில். 'தாயே கருமாரி' என்று தொடங்கினால் நாங்கள் நமட்டுச் சிரிப்புடன் பொறுமை காப்போம். சோம்பலுடன் லொட்டு தட்டுவான் ஜெயன். ஆனால், உமா கொஞ்ச நாளாக ஒரு பாடலை ஒவ்வொரு முறையும் பாடத்தொடங்கினார். அட்டகாசமான இசையுடன் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாட்டு. ஜெயனுக்குக் குஷி தாங்காமல் டிரம்சில் புகுந்து விளையாடுவான். எங்களிடம் ட்ரம்பெட் இல்லாததால் ஜேம்ஸின் கீபோர்ட் தான் எல்லாம். இந்தப் பாடலுக்காக தாயே கருமாரியைப் பொறுத்தோம்.

இப்படி இருக்கையிலே திடீரென்று ஒரு நாள் - உமாவையும் சுதிரையும் காணோம். ஓடிவிட்டார்கள்.

உமா அக்கா சுத்தமான தமிழ் ஐயர். சுதிர் அண்ணா சுத்தமான கன்னட முதலியார். ஓடாமல் என்ன செய்வார்கள்?

முப்பது வருடங்கள் கழித்து இருவரையும் இந்த முறை பெங்களூருவில் சந்தித்தேன். 'பெயரில்லா' வாசகர் தயவால் கிடைத்த, சற்றும் எதிர்பாராதப் பரிசு. உமா-சுதிர் குடும்பத்துடன் ஒரு மணி நேரமே செலவழித்தாலும் நிறைவாக இருந்தது. மிக மகிழ்ச்சியாக இன்றைக்கும் காதலிக்கிறார்கள்.

சிகாகோ வருகையில் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டேன். ஏதோ கவர்ச்சி நடனப்பாட்டு என்று நினைத்திருந்தேன். பாடல் வரிகளில் காதல் ஏக்கம், வலி, சோகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு, கனவு அத்தனையும் புதைந்திருப்பது புரிந்தது. சோகப்பாட்டுக்கு இப்படியொரு மெட்டா? எம்எஸ்வியால் மட்டுந்தான் முடியும். எம்எஸ்வி-கண்ணதாசன்-ஈஸ்வரியின் அற்புதமான படைப்பு. உமா அக்கா இந்தப் பாட்டை அடிக்கடி ஏன் பாடினார் என்ற ரகசியம் புரிந்துக் கேட்டால் இன்னும் போதையாக இருக்கிறது.
நினைத்தேன் என்னை

பரம ரசிகனாக இருந்துகொண்டு என் எம்எஸ்வியை இதுவரை நான் நேருக்கு நேர் சந்தித்ததில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. ஒவ்வொரு முறை சென்னை வரும் பொழுதும் நினைத்துக் கொள்கிறேன், ஆனால் நேரமோ வாய்ப்போ கிடைப்பதில்லை.


    ந்தப் பயணத்தில் ரா.கி.ரங்கராஜனை சந்திக்க விரும்பி அவருடன் தொடர்பு கொண்டேன். சந்திக்க முடியவில்லை. இந்த வாரம் அவர் மறைந்த விவரம் அறிந்து மிகவும் வருந்தினேன். நிறைய பேர் கவனிக்காதது ஒரு குறை என்றாலும், இந்த ரங்கராஜனும் எழுத்து வித்தகர். நாலைந்து புனைப்பெயரில் நாலைந்து தனி நடையோடு எழுதிய most versatile writer.

'80 வாக்கில் சிறுகதை எப்படி எழுதவேண்டும் என்று ரா.கி.ரங்கராஜன் ஒரு கடிதம் எழுதினார். அன்றைய குமுதம் பத்திரிகை நிர்வாகிகளில் ஒருவரான ரங்கராஜன், ஊர் பெயர் தெரியாத என்னைப் புறக்கணித்திருக்கலாம். மறக்காமல் எனக்கு அவர் எழுத நினைத்தது, என்னால் மறக்க முடியாததாகிப் போனது.

இந்தப் பயணத்தில் பறிகொடுத்தப் புத்தகங்களில் ராகிரவின் படைப்புகள் நான்கோ ஐந்தோ, நினைவில்லை ஆனால் வலிக்கிறது.

உங்கள் காலத்தில் வாழும் வாய்ப்பு கிடைத்ததில் எமக்கு ஒரு சிறு ஆறுதல், ரா.கி.ரங்கராஜன் ஐயா. கனிவான நினைவுகளுடனும் அன்புடனும் விடை தருகிறோம். goodbye!


    சென்னைப் பயணச் சட்டியில் இன்னும் இருக்கிறது கிளறியெடுக்க :=)

2012/08/17

சென்னைத் தா[க்]கம்



    யல்வெளிகளை விற்று வான் முட்டக் கட்டி வருகிறார்கள். இழந்தப் பசுமையை ஈடுகட்டும் முறைகளைப் புறக்கணித்துவிட்டார்கள். கார் போக்குவரத்து ஆறு மடங்காக உயர்ந்திருக்கிறது என்கிறார்கள். சாலைகள் ஷாக் அப்சார்பர்களின் சோதனையாகவே இருக்கின்றன. தடுக்கி விழுந்தால் சூபர் மார்கெட் ரீடெய்ல் செந்டர் கட்டியிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களைத் திருடர்களாய் பாவித்து ஆறாம் விரல் போல் ஒட்டிக்கொண்டே வருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய்க்கு சின்னஞ்சிறிய விளையாட்டுப் பொருள் விற்கிறார்கள், வீட்டுக்கு வந்ததும் வேலை செய்யவில்லை. கஸ்டமர் சர்வீசில் கேட்டால் முகத்தில் அடிக்காத குறையாக ஏசுகிறார்கள். படித்தவர் முதல் பாமரர் வரை எல்லாரும் விதவிதமான செல்போன் வைத்திருக்கிறார்கள். செல்போனில் பேசியபடி தெருவோரம் சிறுநீர் கழித்து மூக்கைச் சிந்தி காறித் துப்புகிறார்கள். அத்லெடிக் பிடிப்பு ஆடைகளும் கேமியும் நைகியும் புலோவாவும் அணிந்துத் தள்ளுகிறார்கள். கூடவே வாய் மணமும் வியர்வை மணமும் குமட்டும்படி நெருக்கித் தள்ளுகிறார்கள். தலைவலியென்று டாக்டரைப் பார்த்தால் எக்ஸ்ரே ரத்தம் நரம்பு என்று தனித்தனிப் பரிசோதனைக்கனுப்புகிறார்கள். patient bill of rights என்று கேட்டால் ஓரமாகப் போய்ப் புடுங்கச் சொல்கிறார்கள். மேற்கத்தியத் தாக்கம் என்கிறார்கள். எது?

    தி.நகர் ரங்கநாதன் தெரு பஜாரில் நிழலாக விற்கிறார்கள், எனினும் பழைய படங்கள் அதிகம் காணோம். "பக்த ஹனுமான் டிவிடி இருக்கிறதா?" என்றேன். பலான படத்தின் குறிப்பெயர் அல்ல என்றுத் தெரிந்து கொண்ட கடைக்காரச் சிறுவன் நிச்சயமாக என்னைத் திட்டியிருக்க வேண்டும். சென்னையில் முன் போல திருட்டு டிவிடிக்கள் நடுத்தெருவில் போட்டு விற்காதது ஒரு வியப்பு. ஏமாற்றமும் :-).

    விமானப் பயணச்சீட்டுக்கான அச்சுப்பிரதியை எடுத்துவர வற்புறுத்துகிறார்களே என்று என் ப்லேஷ் டிரைவில் இருந்த டிகெட்டுகளை அச்செடுக்க, குரோம்பேட்டையில் ஒரு இன்டர்நெட் கடைக்குப் போனேன். "ப்ரின்ட் அவுட் தானே? இதற்கு கணினி வாடகைக்கு எடுக்க வேண்டியதில்லை" என்று என்னிடமிருந்து டிரைவை வாங்கிக்கொண்டு கேட்ட டிகெட்டுகளை ப்ரின்ட் எடுத்துக் கொடுத்தார்கள். ஒரு வாரம் கழித்து ஹைதராபாதில் வேலை விஷயமாகத் தேடுகிறேன் - ப்லேஷ் டிரைவைக் காணோம். ப்லேஷ் டிரைவில் என் அத்தனை விஷயமும் வைத்திருந்தேன். ஐந்து வருட பிசினஸ் ப்லான், வருமான வரி விவரங்கள், என் வங்கிக் கணக்கு விவரம், சில வியாபார ரகசியக் கோப்புகள், என் தொடர்புகளின் முழு விவரம், குடும்ப மற்றும் நண்பர் படங்கள், சில முக்கிய வழக்கு விவரங்கள், சில பலான படங்கள், வங்கிக் கடன் விவரங்கள், என் குடும்ப பாஸ்போர்ட் விவரம் என்று அத்தனையும் அதில் இருந்தது. புதிதாக வாங்கியிருந்த கணினியில் சேர்ப்பதற்காகத் தேடினால்.. அய்யோ, காணோமே! இன்டர்நெட் கடையில் விட்டு வந்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது. இதயம் வயிற்றுக்குள் விழுந்துப் பிசைந்துச் சக்கையானது போல் உணர்வு. தெரிந்தவர்களை அனுப்பிக் கேட்கச் சொன்னால் எதுவும் கிடைக்கவில்லை. 'மீண்டும் சென்னை போவதற்கான வாய்ப்பு இந்தப் பயணத்தில் இல்லை. விஷமிகளின் கையில் சிக்கிவிடப் போகிறதே' என்ற கலக்கம் என்னை வாட்டாத நாளில்லை. எனக்குத் தான் அறிவில்லை; என்னிடமிருந்து ப்லேஷ் டிரைவை வாங்கியவர்களாவது திருப்பிக் கொடுக்க வேண்டாமோ? இதை ஒரு process என்று ஏன் அவர்கள் முறைப்படுத்தவில்லை?. தினம் நொந்தேன்.

    ம்சி பதிப்பகத்தாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பவா செல்லத்துரை, ஷைலஜா இருவரையும் சந்தித்ததில் என் இந்தியப் பயணமே மெருகேறியது. எழுத்தைக் காதலிக்கும் தம்பதி. எழுத்தாளர்களை (என்னையும் அந்த வகையில் சேர்த்தார்கள்) மிகவும் மதிக்கிறார்கள், கௌரவிக்கிறார்கள். சிறுகதைப் போட்டியின் பரிசைப் பெற்றுக் கொண்டேன். இரவு அவர்கள் வீட்டில் தங்க/சாப்பிடச் சொல்லி மிகவும் அன்புத்தொல்லை கொடுத்தார்கள். சாப்பாட்டை ருசித்ததும் "நல்லவேளை வற்புறுத்தினார்களே" என்று தோன்றியது. இரவு நெடுநேரம் பேசினோம். பவா, ஷைலஜா இருவரின் இலக்கியப் பிடிப்பு மிகவும் பரந்ததாகத் தோன்றியது. "வம்சி பதிப்பகத்தை, புத்தகக் காதலுக்காக வணிக நோக்கமின்றி நடத்தி வருகிறோம்" என்றார்கள். மறுநாள் அந்த உண்மை புரிந்தது. என் ஆர்வத்துக்கேற்பப் புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்தார்கள். ஒரு புத்தகமோ இரண்டோ அல்ல. அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள். நெகிழ்ந்து போனேன். அடுத்த முறை இந்தியா போகையில் திருவண்ணாமலையில் இரண்டு நாள் இவர்களுடன் தங்க நினைத்திருக்கிறேன். அவர்களின் பண்பு என்னிடம் கொஞ்சம் ஒட்டிக் கொள்ளட்டும்.

    முப்பது வருடங்களுக்குப் பிறகு புல்லாரெட்டி இனிப்பு கார வகைகளை ருசி பார்க்கும் வாய்ப்பு ஹைதராபாதில் கிடைத்தது. முந்திரிப்பருப்பு லட்டு இன்றும் அதே போல் சுவையாக இருப்பது ஆச்சரியம். மொசாம்சாகி மார்கெட்டில் கராச்சி பேகரி என்னுடைய அந்தநாள் வாடிக்கையாளர். சிறிய கடை. பழபிஸ்கட்டுகள், by-two டீ சாப்பிட லைன் கட்டி நிற்பார்கள். கராச்சி பேகரி இப்போது மிகப் பெரிய நிறுவனமாகி விட்டது. மொசாம்சாகி மார்கெட் இப்போது இருக்கிறதா தெரியவில்லை. இரண்டு பொன்னான மாலைகளில் ஹலீம் சாப்பிட்டேன். ஹைதராபாத் ஹலீமுக்கு இணையில்லை. பத்து கிலோ எடை கூடினேன் என்பது வேறு விஷயம். ஹைதராபாத் அடையாளமே மாறிவிட்டது. ஏசி குளுமைக்காகவும் சில நேரம் தென்படும் மினி ஸ்கர்ட்களுக்காகவும் icri என்று அழைக்கப்பட்ட பயிர் ஆராய்ச்சி நிலையத்துக்கு, என் வாடிக்கையாளர் என்பதால், அடிக்கடி வருவேன். பிறகு ராமசந்திரபுரம் தாண்டி bhel வருவேன். ஒவ்வொரு முறையும் ஓய்வெடுக்கச் சொல்லும் அலுப்பு. இன்றைக்கு என்னடாவென்றால் எல்லாமே ஹைதராபாத் என்கிறார்கள். bhel எதிரே இப்போது அட்டகாசமான பஸ் நிலையம் வேறே. civilized! அந்த நாளில் சம்சாபாத் போக நெடு நேரமாகும். போனால் எங்கே பார்த்தாலும் திராட்சைத் தோட்டங்கள் - ஆயிரக்கணக்கான ஏக்கருக்குத் தோட்டங்கள்! வரிசை வரிசையாய்ப் பந்தல் கட்டித் திராட்சைக் கொடிகள்! இன்றைக்கு அங்கே வெறும் தரையில் மிகப்பெரிய கான்க்ரீட் விமான நிலையம். திராட்சைத் தோட்டங்களை என்ன செயதார்கள்?

    பெங்களூரு போவதற்காக மறுபடி ஹைதராபாத் விமான நிலையம். மறுபடி திராட்சைத் தோட்ட நினைவு. ஏற்கனவே துக்கமாக இருந்த என்னை இண்டிகோ நிறுவனம் இன்னும் துக்கப்படுத்தியது. எல்லா இடங்களுக்கும் இழுத்துக் கொண்டு போன என் பெரிய மூட்டையை excess baggage என்று ஏற்க மறுத்துவிட்டார்கள். என் american express சலுகைகளைக் காட்டி வாதாடியபோது 'போடா உனக்கும் உன் அமெக்சுக்கும் பெப்பே' என்றாள் இண்டிகோக்காரி. ஜெட் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் தொல்லை தரவில்லை. இவர்கள் மட்டும் அல்பத்தனமாக நடந்து கொண்டார்கள். எனக்கு உரிய சலுகையைத் தர மறுத்தவர்களின் பரம்பரையைத் திட்டியபடி லகேஜைப் பிரித்தேன். புல்லாரெட்டி இனிப்பு, காரப் பெட்டிகளைத் தனியே எடுத்து வைத்தேன். அந்தப் பைகளில் நான் வாங்கி வந்தப் புத்தகங்கள், பரிசாகக் கிடைத்தப் புத்தகங்கள் என்று அடுக்கினேன். அறிவுரிக்கப்பட்ட என் பெரிய லகேஜ் மூட்டையை அங்கிருந்த எடை எந்திரத்தில் சரிபார்த்துவிட்டுத் திரும்புகிறேன், புத்தகப்பைகளையும் புல்லாரெட்டி பெட்டிகளையும் காணோம். அடப்பாவிகளா! புத்தகங்களையும் சேர்த்துத் திருடிவிட்டீர்களா? அங்கே இங்கே அலைந்தேன். ஏர்போர்ட் செக்யூரிடியிடம் முறையிட்டேன். என் முகவரியை எழுதிக் கொடுத்தேன். எப்படியும் புத்தகங்களைத் திருப்பிவிடுவார்கள் என்று நம்பிக்கையோடு விமானம் புறப்படும் வரைக் காத்திருந்தேன். புத்தகங்களைத் தொலைத்தது பேரிழப்பு.

    ந்தியாவிலேயே அதிக வளர்ச்சியைக் கண்டது பெங்களூரு என்கிறார்கள். இரண்டரை கோடி ரூபாய்க்கு சர்வ சாதாரணமாக வீடுகள் விற்பனையாகின்றன. கட்டிடம் தவிர பெங்களூருவில் எதையுமே காணோம். எம்.ஜி.ரோடு பக்கம் நடந்தால் கிடைத்த அமைதியும் நிறைவும் சுத்தமாக அழிந்துவிட்டது. லால்பாக் இப்போது நகருக்கு நடுவில் இருக்கிறது. ஜெயநகர் மட்டும் இன்னும் அமைதியாக இருக்கிறது. "இரண்டு கோடி ரூபாய்க்கு வீடா.." என்று பழைய நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஐந்து கோடிக்கு வீடு என்று சில ப்ராஜக்டுகளைக் காட்டினார்கள். இந்தப்பக்கம் பூந்தமல்லி வரை பெங்களூரு வளர்ந்து விட்டது. நம்பவே முடியவில்லை. பொதுவாக ரியல் எஸ்டேட் தென்னிந்தியாவில் உச்சத்துக்கு வந்திருப்பது போல் தோன்றினாலும், பெங்களூரு இன்னும் உயரும் என்றே தோன்றுகிறது. strange feeling.

    பெங்களூருவிலிருந்து சிகாகோ போக இருந்தவன், ஏர் ப்ரேன்ஸ் குளறுபடியினால் சென்னை போய், உடனே பெங்களூரு திரும்பி, பழையபடி பெங்களூருவிலிருந்து சிகாகோ போகும் நிலையுண்டானது. கிடைத்த சில மணி நேரங்களில் குரோம்பேட்டையில் ஓய்வெடுக்கச் சென்றேன். இன்டர்நெட் கடை நினைவுக்கு வந்து ஓடினேன். விவரம் சொன்னதும், "இதுங்களா? யாருதுனு தெரியலிங்க.. இங்கயே வச்சிருந்தோம்" என்று என் ப்லேஷ் டிரைவை எடுத்துக் கொடுத்தார் கடைக்காரப் பெண். முத்தம் கொடுக்காதக் குறையாக நன்றி சொல்லித் திரும்பினேன். புத்தகங்களும் அது போல் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கை தோன்றி...

    நீண்ட பயணத்தில் சென்னையை மறக்க முயன்றேன். பறிகொடுக்காதப் புத்தகங்கள் படித்தேன். வலைப்பதிவுகளை வைத்து ஒரு புதிர் சமைத்தேன். ஒலியொளிக் குறை பொறுத்துப் பழைய பாடல்களை நிறையப் பார்த்து ரசித்தேன். புதிர் பிறிதொரு பதிவில்.


2012/08/13

நட்புக்கு நன்றி



    மீப இந்தியப் பயணம் எதிர்பாராமல் தொடங்கி அவசரமாக முடிந்தது. பல பதிவுகளுக்கானக் கருப்பை. இப்போதே சொல்லிவிடுகிறேன்.

முன்பு சந்தித்த அல்லது அறிமுகமான பதிவர்கள் பலருடன் இந்தமுறை பேசக்கூட முடியவில்லை. புதிதாகப் பலரைச் சந்தித்தேன். இந்த நட்பை எப்படி வளர்க்கப்போகிறேன் என்ற அச்சம் ஒரு புறம் இருந்தாலும் முதலடி வைத்ததில் கொஞ்சம் நிறைவு.

சுந்தர்ஜி, கணேஷ் இருவரும் ஒன்றைப் பலவாக்கும் வித்தை தெரிந்தவர்கள். ஒருவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பில் பலரைச் சேர்த்து அந்தக் குறிப்பிட்ட மாலைகளை மறக்கமுடியாதபடி செய்தவர்கள்.

அடுத்தவரைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் வித்தை எனக்கு மட்டுமே தெரியும் என்று நினைத்திருந்தேன் - மோகன்குமார் இதில் விற்பன்னர் என்றுச் சடுதியில் புரிந்து கொண்டேன். விஷயம் தெரிந்தவர். அவருடைய வளர்ச்சி நெளிவு சுளிவு வேகம் எல்லாம் அவர் பைக்கைப் பார்த்ததும் புரிந்தது :-) "ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வரவா?" என்ற கேள்வியை அடக்கப் பெரும்பாடானது.

கண்ணதாசன் பற்றி ரமணியைப் பேசவிட்டு நாள் முழுதும் அலுக்காமல் கேட்கலாம். சொந்தத்துக்கும் பந்தத்துக்கும் வேறுபாட்டை இத்தனை நாள் பாட்டாகக் கேட்டிருந்தாலும் ரமணி அதே வரிகளைச் சொன்னபோது தான் புரிந்தது. கண்ணதாசன், வாலி, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர் என்று இவர் பேசப்பேச 'இன்னும் இன்னும்' என்று கேட்கத் தோன்றியது. வயதாகி விட்டது என்ற உணர்வும் :-).

பத்மா சற்று ஆழமான கருத்துக்களை இயல்பாக almost அலட்சியமாகப் பேசுகிறார். மற்றப் பதிவர்கள் சேருமுன் கிடைத்த சில நிமிடங்களின் தனிமையை, போகன் பற்றிப் புறஞ்சொல்லிக் கழித்தோம்.

தன்னுடைய படைப்புகளைப் போலவே அமைதியாக, தீவிரக் கவனத்தோடு இருக்கிறார் மாதங்கி, ஒன்றிரண்டு கருத்துக்கள் சொன்னாலும் says what matters.

எஸ்.வி.வேணுகோபாலன் சிறிய நகைச்சுவை இயந்திரம் ஒன்றை உள்ளுக்குள் புதைத்து வைத்திருக்கிறாரோ என்ற ஐயம் எனக்கு அடிக்கடி வந்து போனது. சாதாரண கருத்தைச் சொன்னாலும் உடனே நகைச்சுவை கலந்து பதில் சொல்கிறார் - நாகேஷின் timing. நீங்கள் blog எழுதவில்லையா என்று கேட்டதற்கு, "நேரமுமில்லை, சாரமுமில்லை" என்கிறார்.

சாதனைகளை வியப்பதா அல்லது அவையடக்கத்தை வியப்பதா என்று எண்ண வைத்தவர் கதிர்பாரதி.

ஜெயகாந்தனைச் சந்திக்கிறேனோ என்ற முதல் பார்வையின் ஐயத்துக்குக் காரணமானவர் தஞ்சாவூர் கவிராயர். சமீபத்தில் ஒரு சின்னத்திரைப்படத்தில் தன்னுடைய அந்தத் தோற்றம் காரணமாகவே ஒரு எழுத்தாளர் வேடத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பற்றிச் சொன்னார். அந்தப் படத்தை கலைஞர் டிவிக்காக இயக்கிய ராஜகுமாரன், குடும்பத்துடன் வந்திருந்தது வரமாக அமைந்தது. பத்மா, நான், ராஜகுமாரன் - எங்களுக்கிடையே இருக்கும் ஒரு சிறிய நைலான் நூலிழைப் பிணைப்பு புரிந்தபோது மூவருமே வியந்தோம்.

கவிராயர், வாசன், ரமணி, வேல்கண்ணன், சுந்தர்ஜி போன்றவர்கள் பேச்சைக் கேட்கையில், அவர்களுடையத் தமிழ்ப் பிடிப்பும் தெளிவும் வியக்க வைத்தது. நான் தொலைத்தது புரிந்து வருந்தினேன்.

ஆர்வீஎஸ்சைக் கொஞ்சம் வேடிக்கை பார்க்க எண்ணினால், மனிதர் உண்மையிலேயே influential. பதிவர் சந்திப்புக்காக வந்து சிவப்பியை no parking பகுதியில் ஜாலியாக நிறுத்திவிட்டு எங்களுடன் இரண்டு வகை சுண்டல், காபி மற்றும் கலந்துரையாடல் என்று நேரத்தைக் கழித்தவர், சிவப்பியைக் கவர எண்ணியக் கார்பொரேஷன்/காவல் ஆட்களை 'நான் யார் தெரியுமா?' பாணியில் விரலைவிட்டு ஆட்டி, நொடிகளில் சிவப்பியை மீட்ட சுந்தரபாண்டியனானார். நானும் சுந்தர்ஜியும் எங்களுடைய சொந்த மூக்கின் மேல் விரல் வைத்தோம்.

சந்திப்பு முடிந்து வீடு திரும்புகையில் வேல்கண்ணனுடன் செலவழித்த நிமிடங்கள் சுவையானவை. அவருடைய சமூக நோக்கும் வேகமும் தொற்றிக்கொண்டது.

இந்த முறையும் ஸ்ரீராம் வீட்டில் விருந்து - விடமாட்டார். சாப்பிட்டபடியே கொஞ்சம் புத்தகங்கள், சென்னைக் கல்லூரிகளில் இடம் பிடிக்கும் வித்தை, பதிவர்கள் என்றும் கொரித்தோம்.

மோகன்ஜியைச் சந்திக்க முடியாமல் போகுமோ என்றுக் கலங்கியபோது சுந்தர்ஜி மீண்டும் ஆஜராகி மந்திரம் போட்டார். எனக்காக ஹைதராபாத் வந்து மோகன்ஜியைச் சந்திக்க வைத்தார். மோகன்ஜி அட்டகாசமாகச் சமைக்கிறார் (என்னுடைய நளகர்வம் அடங்கிப் பொடியானது). வயிற்றுக்கு நிறைய ஈந்துவிட்டு செவிக்குத் தாவினோம். குடும்பம், கலை, இலக்கியம், 'இலக்கியக் காவலர்'களின் போலித்தனம், சினிமா, பொருளாதாரம், ரியல் எஸ்டேட், அரசியல், அகநானூறு, ஐயப்பன், அழகானப் பெண்கள் என்று நிறையப் பேசினோம். அவர் வீட்டில் கழித்த நாள் சுவாரசியமானது, சுவையானது. ஒரு பிரபல குணச்சித்திர நடிகரைப் போல் பேச்சும் மேனரிசமும் மோகன்ஜிக்கு இருப்பதாகத் தோன்றியது - நடிகர் பெயர் இதோ நாக்கு நுனியில் இருக்கிறது.

'இருபுளிக் குழம்பு' என்ற மறந்து போன உணவு வகை நினைவுக்குத் திரும்பக் காரணமானது காஸ்யபன் வீட்டு விருந்து. எழுத்துக் குடும்பம் என்றால் காஸ்யபன் குடும்பம் எனலாம். கொஞ்சம் அரசியல், சமூகம், பெரும்பாலும் புத்தகங்கள் எழுத்தாளர்கள் பற்றியே பேசினோம். நான் சற்றும் எதிர்பாராத விதத்தில் எனக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்து, ஒரு புத்தகக் கட்டும் பரிசாகக் கொடுத்தார் - நசிகேத வெண்பா எழுதியதற்காக. i choked. காஸ்யபன் அவர்களைச் சந்தித்தது மறக்க முடியாத நாள். நான் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

பெங்களூரின் நெரிசலில் மணிக்கணக்காகச் சிக்கி எங்கே சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்றுக் கலங்கினாலும், ஜிஎம்பி அவர்களைச் சந்தித்தது நிறைவாக இருந்தது. அவர் வீட்டு விருந்து என்னை எங்கள் கிராமத்துக்கு அழைத்துச் சென்றது. உணவு முடிந்து நிறையப் பேசினோம். தன் பதிவுலகக் கோட்டையைச் சுற்றிக் காட்டினார். கலாசாரம், பதிவர்கள், விலைவாசி, பெங்களூர் என்று பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. திரும்பிச் செல்லும் வழியென்று அவர் விவரமாகச் சொன்னதைக் கொஞ்சம் வீம்புடன் உள்வாங்கிய டிரைவர், என்னை ஜலஹள்ளியிலிருந்து சர்ஜாபுர ரோடுக்குக் கவனமாக அழைத்துச் சென்றார் - கேரளா வழியாக.

பாலராஜன் கீதாவைச் சந்தித்தது மறக்க முடியாத இன்னொரு நிறைவு. சுவாரசியமான மனிதர், ரசிகர், தம்பதி.

எங்கள் குடும்பப் பதிவர்களான கீதா சந்தானம், ஸ்ரீராம் இருவரையும் சந்திக்க முடிந்ததும் ஆச்சரியம். ஹி. நாங்கள் சென்னை வரும் நேரும் அபூர்வமாக இணைந்தது காரணம்.

சந்திக்க முடியாமல் போனவர்களில் சிலருடன் தொலைபேச முடிந்தது - ஜீவி, சமுத்ரா, சிவகுமாரன், கௌசல்யா ராஜ், கீதா சாம்பசிவம் (சுப்பறியும் தாம்பு என்ற விருதை இவருக்கு வழங்கிக் களிக்கிறேன். 'எந்த ஊர்ல இருக்கீங்க?' என்றக் கேள்விக்கான சாதாரண விடையிலிருந்து ஒரு மொகஞ்சதாரோவை அசாதாரணமாகப் பெயர்த்தெடுத்தார்). சாந்தினி, போகன், ஷைலஜா, கௌதமன் நால்வருக்கும் தலா ஒரு ஹலோ போட்டதோடு சரி. சத்ரியன் சென்னையில் வசிக்கவில்லை என்று அவருடன் பேசியதில் தெரிந்து கொண்டேன்.

பாலராஜன் கீதா, மோகன்குமார், ரமணி, கணேஷோடு புகைப்படம் எடுக்க மறந்தது ஒரு குறை. "தமிழ்மணம் #1 பதிவரைச் சந்தித்தீர்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி?" என்று யாராவது கேட்டால் என்ன சொல்வது?

தமிழகத்தில் வசித்தால் இது போல் அடிக்கடி சந்தித்துக் கொஞ்சம் intellectual மேய்ச்சலுக்கான வழி கிடைக்கும். யோசிக்கிறேன்.

2012/08/07

மனதிற்கினிய மேரி டீச்சர்



    ருத்துவக்குடி என்ற உடைந்த சிமெந்ட் பலகையருகே காரை நிறுத்தினான் ரகு. கண்ணாடிக் கதவைக் கீழிறக்கி, பலகையருகே கைக்குழந்தையோடு நின்றிருந்தப் பெண்ணிடம் "அம்மா.. இது மேல்மருத்துவக்குடி தானே?" என்று கேட்டான்.

"ஆமாம்.. யாரைப் பாக்க வந்திங்க?"

சொன்னான்.

"தெரியாதுங்களே.. தபாலாபீஸ் ஐயாட்டே கேட்டுப் பாருங்க.." என்றுத் தெருக்கோடிக்கு வழி சொன்னாள் குழந்தைக்காரி.

தபாலாபீஸ் எதிரே நிறுத்தி, காரிலிருந்து கைப்பெட்டியை எடுத்துப் படியேறி வருமுன், வாசலுக்கு வந்தார் ஒரு பெரியவர். "வணக்கம். நீங்க யாரு? என்ன வேணும்? இன்னிக்கு தபாலாபீஸ் லீவாச்சே? பள்ளிக்கூடத்தைப் பாக்க வந்தீங்களா?"

விழித்த ரகுவிடம், "நான் போஸ்ட்மாஸ்டர் கம் ஹெட்மாஸ்டர். பேரு சகாயம். இது போஸ்டாபீஸ் கம் எலிமென்டரி ஸ்கூல். இங்க சுத்துவட்டாரக் கிராமத்து ஜனங்க பத்து இருவது வருசமா மெட்ராசு பெங்களூர் வெளிநாடுனு போனவங்க யாரும் திரும்பலே.. குடும்பங்கள் பெயர்ந்துகிட்டே இருக்கு.. இன்னும் பட்டா போட்டு விக்காத நிலங்கள்ள வேலை செய்யுறவங்க பிள்ளைங்களுக்கு நானும் என் பெஞ்சாதியும் பாடம் சொல்லித்தரோம். அப்பப்போ டொனேஷன் குடுக்க யாருனா வருவாங்க.. அதான் அப்படிக் கேட்டேன்.. ஹ ஹ.. சொல்லுங்க உங்களுக்கு என்ன ஆவணும்?" என்ற போஸ்ட்மாஸ்டரை இப்போது ரகுவுக்குத் தெளிவாக அடையாளம் தெரிந்தது. எனினும், தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளத் தயங்கி, "சார்... இங்கே மேரி டீச்சர்னு இருந்தாங்க. கிட்டத்தட்ட நாப்பது வருசத்துக்கு முந்தி.. இப்ப இங்க இருக்காங்களா தெரியாது.. இருந்தா சந்திச்சுப் பேசலாம்னு வந்தேன்" என்றான்.

"மேரி டீ ச் ச ரா?" என்றப் பெரியவர் அவனை ஏற இறங்க ஆழப்பார்வை பார்த்து, "நீங்க யாரு தெரியலியே?" என்றார்.

என்ன சொல்வது என்று தயங்கிய ரகு, திட்டமின்றி வளர்ந்தத் தாடியை நன்றியோடு தடவியபடி "வேண்டியவன்" என்றான். ஒருவித வேகமும் எதிர்பார்ப்பும் கலந்து, "எங்க இருக்காங்கனு தெரியுமா சார்?" என்றான்.

    மேல்மருத்துவக்குடியில் அப்பொழுது உயர்நிலைப்பள்ளி இருந்தது. எட்டாம் வகுப்புக்கு மேல் அநேகமாக யாரும் படிக்கமாட்டார்கள் என்றாலும் மேல்நிலை வகுப்புக்களில் சிலராவது படித்தார்கள். அந்த வருடம் பத்தாம் வகுப்புக்கு முன்னேறியிருந்த ஆறு பேரில் ரகு ஒருவன்.

முதலில் ரகுவைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். காலை ஏழு மணிக்குள் அக்ரகாரத்துப் பவழமல்லி மரங்களை உலுக்கி, தரையில் கம்பளமாய்ப் பரந்திருக்கும் பூக்களை ஒன்றுவிடாமல் எடுத்து ஒவ்வொரு வீட்டுக்கும் இவ்வளவு என்று அவனே பங்கு போட்டுக் கொடுப்பான். எட்டு மணி வரை சிவன் கோவில் வாசலில் 'குடியானவ'த் தெருப்பிள்ளைகளுடன் உடைத்த மரக்கிளைகளை வைத்து ஹாக்கி விளையாடுவான். எட்டரை மணி வரை கோயில் குளப்படியில் உட்கார்ந்து பாரதியார் கவிதைகளை உரக்கப் படிப்பான். ஒன்றிரண்டு பேர் அவன் படிப்பதைக் கேட்டு ரசிப்பார்கள். பிறகு குளத்து நடுவிலிருந்த மணிமண்டபத்துக்கு நீந்தி, அங்கே பத்து நிமிடம் போல் அமைதியாக உட்கார்ந்திருப்பான். அதற்குள் "ரகு" என்ற குரல் வரத்தொடங்கும். மீண்டும் படித்துறைக்கு நீந்தி, வீட்டுக்கு ஓடுவான். குளித்து, அப்பா தயாராக வைத்திருக்கும் மிளகாய்ப்பொடி எண்ணை தடவிய இட்லிகள் ஏழெட்டை விழுங்குவான். மிதமாக உப்பு பெருங்காயம் கரைத்த நீர் மோர் பருகுவான். படமாகத் தொங்கிய அம்மாவை வணங்கிவிட்டு, அடுத்தப் பதினைந்து நிமிடங்களில் கிளம்பி ஒன்பதரைக்குப் பள்ளிக்கூடம் வரும் பொழுது சரியாக முதல் மணி அடிக்கும். நேராகப் பிரார்த்தனை மையத்துக்குச் சென்று சகாயம் டீச்சருடன் சேர்ந்து நீராறும் கடலுடுத்த, வாழிய செந்தமிழ் தொடர்ந்து அன்றைய செய்திகள், பொன்மொழிகள் என்று இரண்டு பக்கம் படிப்பான்.

மேற்சொன்னவற்றில் ஏதாவது ஒன்று கணம் தப்பி நடக்குமா என்றால் நடக்காது, நடக்கவில்லை. ரகு எதையாவது தவறிச் செய்தானா, உற்சாகம் இழந்து கைவிட்டானா என்றால் இல்லை - பத்தாம் வகுப்பில் முதல் நாளன்று மேரி டீச்சரைச் சந்திக்கும் வரை.

அடுத்து மேரி டீச்சரைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். பார்த்தக் கணத்தில் கேட்டதையெல்லாம்.. கேட்காததையெல்லாம்.. அவர் காலில் கொட்டி சரணாகதி என்று விழத்தூண்டும் முகம் மேரி டீச்சருக்கு. கருணையும் அழகும் கம்பீரமும் கலந்தக் களையான முகம். அவர் தெருவில் இறங்கி நடந்தால், வேகும் வெயிலை மேகம் மூடும். காற்று சங்கீதம் படிக்கும். எங்கிருந்தோ கிளிகளும் குருவிகளும் அவருக்குக் காவலாகப் பறக்கும். குழாயடியில் சண்டை போட்டவர்கள் சமாதானமாகிக் கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். எல்லாவற்றிலும் இனிமையான மிதம் கலந்திருக்கும் நாட்கள் வரும்பொழுது "இந்த வருசம் ஒரு பத்து மேரி டீச்சர் நாள் கிடைச்சுதோ பிழைச்சோமோ!" என்பார்கள். மாணவர்கள் போதாதென்று உடன் வேலை பார்த்த ஆணாசிரியர்கள் அக்கம்பக்கத்தில் இருப்போர் என்று அத்தனைபேரும் "மேரி மேரி" என்று ஏதோ ஒரு வகையில் அவருக்குப் பணிவிடை செய்வதில் குறியாக இருந்தார்கள்.

கேளாமல் கிடைத்த அத்தனை பணிவிடைகளும் உபசாரங்களும் ஆராதனையும் அவருக்கு எந்தவித சலனத்தையோ கிளர்ச்சியையோ உண்டாக்கவில்லை - பத்தாம் வகுப்பு மாணவன் ரகுவைச் சந்திக்கும் வரை.

    முதல் நாள் வகுப்பில் நுழைந்துத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட மேரி, "பத்தாம்பு எஸெல்சி ரெண்டுத்துக்கும் நான் தான் உங்க க்ளாஸ் டீச்சர். பேர் சொல்லுங்க" என்றார். வரிசையாக அறிமுகம் செய்துகொண்டவர்களில் ரகு சற்று அதிகமாகத் தன்னைக் கவனிப்பதைக் கவனித்தார் மேரி. ஆங்கிலம், தொடர்ந்து கணிதம், அறிவியல், வரலாறு, தமிழ் என்று வகுப்புக்கள் முடிந்ததும் மாலையில் வாளி தண்ணீர் கந்தல் துணி சகிதம் அறைக்குள் நுழைந்த ரகுவை, மறுநாளுக்கான கணக்குப் பாடத்தைப் புரட்டிக் கொண்டிருந்த மேரி டீச்சர் கவனித்து, "என்ன ரகு, வீட்டுக்குப் போகலே?" என்றார்.

"போர்டு ரொம்ப அழுக்கா இருக்குது.. துடைச்சிட்டு நாளை விவரம் எழுதிட்டு போறேனே? உங்க அனுமதி கேட்டு உள்ளே வந்திருக்கணும்.." என்று தயங்கினான்.

"போவுது விடு.. அனுமதி கேட்டதா நெனச்சுக்குறேன், சரியா? எப்படியும் புனிதம் வந்து சுத்தம் செய்வா இல்லியா? நீ வீட்டுக்குப் போ சீக்கிரம்.. உன் நண்பர்களோட விளையாடு.. போ".

"இல்லே டீச்சர்.. எல்லாம் எடுத்தாந்துட்டேன்.. இன்னிக்கு க்ளீன் செஞ்சுடறேன்" என்று அவசரமாகக் கரும்பலகையைச் சுத்தம் செய்தான் ரகு. பிறகு மேரி கிளம்பும் வரைக் காத்திருந்து, "டீச்சர்.. நான் உங்க கூட நடந்து வரட்டுமா? நீலக்குடி தானே போறீங்க? என் வீடும் அங்கதான்" என்றான். மேரியைக் கேளாமலே அவர் கையிலிருந்த நாலைந்து புத்தகங்களையும் பேப்பர் கட்டையும் எடுத்துக் கொண்டான். "ரொம்ப நன்றிப்பா.. ஆனா அவசியமில்லையே?" என்றார் மேரி.

மரைக்காயர் தெருவில் திரும்பிய மேரி, "நான் போய்க்கிறேன்.. நீ பத்திரமா போ.. நாளைக்கு ஸ்கூல்ல பார்க்கலாம்" என்றார். டீச்சர் மறையும் வரைக் காத்திருந்த ரகு, வேகமாக வீட்டுக்கு ஓடினான். அவனுள் புது உணர்வுகள் தீப்பொறியாய்ச் சிதறின.

    மறுநாள் காலை ஒன்பது மணிக்கு மரைக்காயர் தெருமுனையில் மேரி திரும்பியதும் அங்கே நின்றிருந்த ரகுவைக் கவனித்து மென்மையாகச் சிரித்தார். "நானும் உங்க கூட வரலாம்னு வந்தேன் டீச்சர்.. ஆச்சரியமா இருக்கா?" என்றான்.

"ம்ம்.. ஆச்சரியம் இல்லேனு தான் சொல்லணும்.. ஆமா.. இது என்ன இன்னிக்கு சைக்கிள் கொண்டாந்திருக்கே?" என்றார்.

"இது எங்கப்பா சைக்கிள்.. எப்பனா யூஸ் பண்ணுவாரு. நான் இன்னிக்கு எடுத்தாந்தேன்.. ஈசியா டபுள்ஸ் அடிப்பேன்.. உங்களை ஸ்கூல்ல இறக்கி விடறேன்.. பயப்படாம உக்காருங்க" என்று பின்னிருக்கையைத் தட்டினான்.

"வேணாம்பா.. எனக்கு இந்த நடை பிடிச்சிருக்கு" என்று நடக்கத் தொடங்கினார் மேரி. ரகுவின் முகத்தில் தோன்றி மறைந்த ஏமாற்றத்தைக் கவனித்தார். நொடியில் திரும்பிய புன்னகையுடன், "பரவாயில்லை டீச்சர்.. உங்க புக்ஸையாவது குடுங்க, சைக்கிள் சுமக்கட்டும்" என்று அவரிடமிருந்து புத்தகங்களை வாங்கி கேரியரில் வைத்தான். டீச்சருடன் சைக்கிளைத் தள்ளியபடி நடந்தான். மனதுள் சிரித்த மேரி எதுவும் சொல்லாமல் நடந்தார். தன்னுடன் வருவதில் இவனுக்கு எத்தனை சந்தோஷம்! அவனாகப் பேசட்டும் என்று அமைதியாக நடந்தார். ரகு பேசவில்லை. ஸ்கூல் முனையருகே வந்ததும் திடீரென்று தயங்கிய ரகு, "டீச்சர்.. இந்தாங்க உங்க புக்ஸ்.. நீங்க தனியாவே போங்க.. நான் பொறுத்து வரேன்.. புரிஞ்சுக்காம ஏதாவது பேசுவாங்க சில பேர்" என்றான்.

முதிர்ச்சொற்களைக் கேட்டுத் திகைத்த மேரி, "புரியலியேப்பா?" என்றார்.

அடுத்த சில வாரங்களுக்கு ரகு, மேரி டீச்சரிடம் அதிகம் பேசவில்லை. காலையில் மரைக்காயர் தெரு முனையில் மேரி டீச்சரின் கைப்புத்தகங்களை வாங்கிப் பள்ளிக்கூடம் வரை சுமப்பதிலாகட்டும்... வகுப்பில் டீச்சர் சொல்வதை கவனிப்பதிலாகட்டும்.. மாலை மூன்று மணிக்கு வகுப்புக்கள் முடிந்ததும் கரும்பலகையைச் சுத்தம் செய்வதிலாகட்டும்.. எல்லாம் முடிந்ததும் மேரி டீச்சரின் புத்தகப்புரட்டல் ஓசைகளை உள்வாங்கியபடி கடைசி பெஞ்சில் சில நாட்கள் ஐந்து மணி வரைக் காத்திருப்பதிலாகட்டும்.. எந்த விதப் பேச்சு வார்த்தையும் காணவில்லை. மாறாக அவனுடையச் செய்கைகளில் சூரியன் தோன்றி மறையும் நியமத்தின் அமைதியும் விளங்காத அற்புதமும் இருந்தது. பூக்கள் மணம் வீசுவதன் புரியாப் புதிர் இருந்தது. மழைத்துளியின் அதிசயமும் மின்னலின் சாகசமும் புதைந்திருந்தது. மாலை ஐந்து மணி வரை படித்துக் கொண்டிருந்த மேரி தலை நிமிர்ந்து, "என்ன ரகு, இன்னுமா இங்கே இருக்கே? வீட்டுக்குப் போக வேணாமா?" என்பார். அந்த முக நிமிர்தலுக்காகவே காத்திருந்தவன் போல் பரவசமாகி, டீச்சரின் புத்தகங்களையும் சமீபமாக அவர் கொண்டு வரத்தொடங்கியிருந்த நீலப்பூப்போட்ட மஞ்சள் குடையையும் எடுத்துக் கொண்டு சைக்கிளில் அமைதியாக உடன் நடந்து வருவான்.

திடீரென்று ஒரு நாள் பேசத் தொடங்கினான். வழியெல்லாம் பேசினான். தனக்குப் பிடித்த பாரதி கவிதைகளைப் பற்றிச் சொன்னான். மேரி டீச்சர் வந்த பிறகே ஷெல்லி கீட்ஸ் மில்டன் என்று படிக்கத் தொடங்கியிருப்பதாகச் சொன்னான். பிடித்த கண்ணதாசன் வரிகளைப் பற்றிப் பேசினான். காலையில் கோவில்குளத்தில் நீந்தும் பொழுது பார்த்த சிறு மீன்களைப் பற்றிச் சொன்னான். பெருவயல் தாண்டி காவிரிக் கரை பற்றிப் பேசினான். கரை மணலில் புதைந்திருந்தச் சிறு ஊற்றுக்களைப் பற்றிப் பேசினான். கரையில் இருந்த ஆலமரம் பற்றிப் பேசினான். ஆலமரத்தில் கூடு கட்டியிருந்த மஞ்சள் சிறகுப் பறவைகள் பற்றிப் பேசினான். சில மாலைகளில் மெல்லிய குரலில் சினிமாப் பாடல்களை முணுத்தான்.

"என்ன பலமா பாடுறே?" என்றார் மேரி.

"நீங்க ஊருக்கு வந்ததுலந்து மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு டீச்சர்.. உங்களுக்கு இந்த ஊர் பிடிச்சிருக்கா?"

"ம்"

"பள்ளிக்கூடத்தை.. ஜனங்களை.. "

"ம்"

"எ.. ன்.. னை?"

சிரித்தார் மேரி. "தினம் ஸ்கூலுக்கு வரே, எல்லா வீட்டுப்பாடமும் ஒழுங்கா செய்யுறே, வகுப்புல கவனமா இருக்கே.. அப்புறம் மாலை கரும்பலகை சுத்தம் செஞ்சு சாக்பீஸ் டஸ்டர் எல்லாம் எடுத்து வைக்கறே.. போதாம தினம் என் புக்ஸையெல்லாம் சுமந்து என் கூட துணைக்கு வேறே வந்திட்டிருக்கே.. உன்னைப் பிடிக்காமல் இருக்குமா? ஏன் அப்படி கேக்குறே?"

ரகு பதில் சொல்லவில்லை. தலை குனிந்து நடந்து வந்தான். அவனது முகத்தைக் கவனிக்க முடியாதபடி நடந்து கொள்கிறான் என்று புரிந்துகொண்ட மேரி சற்று வியந்தார். "ரகு.. நீ பெரியவனா வளந்ததும் என்ன செய்யுறதா எண்ணம்?"

"இப்பவே நான் பெரியவன் தான் டீச்சர்" என்ற ரகுவின் உடனடி பதிலில் தேவைக்கதிகமான அழுத்தம் இருந்ததாகப் பட்டது.

"அதில்லப்பா.. என்ன மேற்படிப்பு, என்ன தொழில், இதெல்லாம் யோசிச்சு வச்சிருக்கியா?"

"ஒரு எழுத்தாளனாகணும்னு ஆசை டீச்சர். அப்பப்போ கவிதைகள் எழுதுவேன். பாரதியார், பாரதிதாசன், தாகூர் எல்லாம் படிச்சிருக்கேன். அவங்களைப் போல எழுதணும்னு ஆசை"

"யப்பாடி! எழுத்தாளரா? பெரிய லட்சியம். நிறைய உழைக்கணும்.. படிக்கணும், எழுதிப் பழகணும், நிறையப் பயிற்சி செய்யணும்.."

"தெரியும் டீச்சர்.. நேரம் கிடைக்குறப்பல்லாம் பயிற்சி செய்வேன்.. உழைப்பேன்"

"இப்படி ஸ்கூல் விட்டதும் பலகை கழுவுறதும், என்னோட வந்திட்டிருக்குறதும்... இந்த நேரமெல்லாம் உன் லட்சியத்துக்கு செலவழிக்க உதவியா இருக்குமில்லே?"

"உங்க கூட செலவழிக்கிற இந்த நேரம் எனக்கு ஒரு புத்துணர்ச்சியைக் குடுக்குது டீச்சர்.. என் லட்சியத்துக்கு ஒரு காரணம், ஒரு நியாயம் கிடைக்குது டீச்சர்.. என்ன இப்படிக் கேட்டுட்டீங்க?" என்றான் ரகு. அவன் முகம் வாடிய வேகத்தில் மீண்டும் மலர்ந்ததை கவனித்து வியந்தார் மேரி. சரியான பதில் சொல்லத் தெரியாமல் அமைதியாக நடந்தார்.

மேரி டீச்சர் முன் வந்து நின்று "டீச்சர்... நான் ஒண்ணு கேட்டா தருவீங்களா?" என்றான்.

"கேக்கறதைப் பொருத்து.. என்னால முடிஞ்சா.."

"உங்க ஓய்வு நேரத்துல சில மணித்துளிகள் டீச்சர்" என்றான். "நாளைக்கு சனிக்கிழமை. சாயந்திரம் காவேரிக்கரைக்கு வரீங்களா? ஒவ்வொரு சனிக்கிழமையும் அஞ்சு மணிக்கு அங்கே இருப்பேன். ஆலமரம், மகிழமரம், மணல் எல்லாம் ரம்மியமா இருக்கும். சின்ன சின்ன ஊத்துக்கள் தோண்டலாம். காத்தாடி விடலாம். ஆத்துக்கு அந்தப்பக்கம் கூட்டம் கூட்டமா மயில் ஓடுறதைப் பார்க்கலாம்.. சில சமயம் மணல்லயே பட்டாம்பூச்சி பிடிக்கலாம்.. இல்லே சும்மா மணலோரமா நடந்துட்டே இருக்கலாம்.. சூரியன் மறையுறப்ப காவேரித் தண்ணியோட மணலெல்லாம் ஜொலிக்கும்.. சலிக்காம பாக்கலாம். வரீங்களா?"

"பட்டாம்பூச்சி, மயில், சன்செட்.. எனக்குப் பிடிச்சதா சொல்றியே?"

"அப்போ வரீங்களா?"

"ம்ம்ம்... என்னால் முடியாதுப்பா. சாரி.."

"பிக்னிக் மாதிரி.. நான் வீட்டுலந்து இட்லி தோசை எடுத்துட்டு வரேன்.. என்னோட கவிதை நோட்டையும் எடுத்துட்டு வரேன்.. நீங்க கேட்ட கவிதையை அங்கயே எழுதித்தரேன்.."

"பெரிய திட்டமெல்லாம் போட்டிருக்கே?"

"வரேன்னு சொல்லுங்க"

"இன்னொரு சமயம்.. ஒகே?"

ரகு வற்புறுத்தவில்லை. அதிகம் பேசவும் இல்லை. மரைக்காயர் தெரு வந்ததும் வழக்கம் போல மேரி விலகி நடக்காமல் தயங்கினார். "ரகு.." என்றார். அதற்குள் ரகு சைக்கிளில் ஏறி மறைந்துவிட்டான். "ரகு.. நாளைலந்து என் கூட வரவேண்டாம்.." என்று சொல்ல எண்ணியதை சொல்லாமலே மெள்ள வீட்டுக்கு நடந்தார் டீச்சர்.

    மரைக்காயர் தெருவில் திங்கட்கிழமை காலை ரகு தனக்காகக் காத்திராதது கண்டு வியந்தார் மேரி. வகுப்பில் ரகு தன்னை வழக்கம் போல் தேவைக்கதிகமாக கவனிக்காததைக் கவனித்தார். மாலையில் பலகை சுத்தம் செய்யவோ மீண்டும் வீடு வரை உடன் நடந்து வரவோ முன்வராதது இன்னும் வியப்பாக இருந்தது. 'நான் பிக்னிக் வராததினால் கோபமோ? ஒரு வேளை ஒரு வேளை.. என் மனதைப் புரிந்து கொண்டானா?' என்று குழம்பினார்.

மேரி டீச்சரோடு தினம் பழக முன்வரவில்லையே தவிர, வகுப்பில் ரகு மிகுந்த கவனம் செலுத்தினான். வகுப்பில் கொடுத்த ஆங்கில கணித தமிழ் பாடங்களை அலசித் தள்ளினான். மெர்செந்ட் ஆப் வெனிஸ், க்ரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ், மணிமேகலை என்று அவனுடைய கட்டுரைகளைப் படித்துப் பிரமித்துப் போனார் டீச்சர்.

இரண்டாவது திங்கட்கிழமை தன் மேஜையில் ஒரு பட்டாம்பூச்சி இருப்பதைக் கவனித்தார் மேரி. உயிரோடிருப்பதாக எண்ணி அதைத் தட்டிவிடப் போனவர், இறந்த பட்டாம்பூச்சி பதப்படுத்தப்பட்டு ஒரு சிறு மரத்தட்டில் ஒட்டப்பட்டிருப்பதைக் கவனித்தார். ரகு இருந்த திசையைப் பார்த்தபோது, பக்கத்து மாணவனோடு வேண்டுமென்றே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். அந்த வாரம், தினம் ஒரு பட்டாம்பூச்சி அவர் மேஜையை அலங்கரித்தது.

மூன்றாவது திங்கட்கிழமை தன் மேஜை மேல் ஒரு அழகான பெரிய மயிலிறகு செருகப் பட்டிருப்பதைக் கவனித்தார். மயிலிறகின் அழகைப் பிரமித்தவாறு ரகு இருந்த திசையில் பார்த்தபோது, வழக்கம் போல் ரகு வேறு ஏதோ கவனத்தில் இருந்தான். அந்த வாரம் முழுதும் விதவிதமான மயிலிறகு அலங்காரங்கள் அவர் மேஜையை அலங்கரித்தன.

அடுத்த வாரம் ரகு பள்ளிக்கு வரவில்லை. அவனை அடிக்கடி நினைத்துக் கொண்ட மேரி டீச்சருக்குத் தன் மேல் எரிச்சல் வந்தது.

ஐந்தாம் வாரம் திடீரென்று ரகு மறுபடி பலகை துடைக்கத் தொடங்கினான். மாலை சைக்கிளுடன் டீச்சருக்காகக் காத்திருந்து புத்தகங்களை வாங்கிக் கொண்டபோது எதுவும் பேசவில்லை. தானும் எதுவும் பேசாமல் அவனிடம் புத்தகங்களைக் கொடுத்ததை உணர்ந்தார் மேரி. காலையிலும் மாலையிலும் தினம் வழியில் எதுவும் பேசாமல் நடந்தார்கள். வகுப்பில் அவன் மீது தேவையில்லாமல் தன் கவனம் செல்வதைத் தவிர்க்க முயன்றார் மேரி.

ஆறாம் வாரம் வெள்ளிக்கிழமை, பள்ளிக்கூடத்தில் திடீரென்று சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வந்துவிட, ஒரே கலவரம். ஒவ்வொரு வகுப்பாக வந்து கேள்வி கேட்டார். மாலை மூன்று மணிக்கு இன்ஸ்பெக்சன் முடிந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மாணவர்களுக்குப் பரிசும் பத்திரமும் கொடுத்தார். தனக்கான ஜீப் வரும்வரை விளையாட்டாகப் புதிர் போட்டுக் கொண்டிருந்தார். மாணவர்களின் முறை வந்தபோது ரகு எழுந்து, "சார்.. ஒரு வயசுனு சொல்லலாம், பத்து வயசுனு சொல்லலாம், முப்பது வயசுனு சொல்லலாம், எழுபது வயசுனும் சொல்லலாம். ஒரே நேரத்துல வித விதமா வயசாகக் கூடியது ஒண்ணே ஒண்ணுதான் இந்த உலகத்துல.. அது என்ன?" என்றான். மாணவர்கள் விழித்தார்கள். இன்ஸ்பெக்டர் சிரித்து, "இதை உங்க டீச்சர் தான் சொல்லணும். மிஸ் மேரி. நீங்களே சொல்லுங்க.. உங்க ஸ்டூன்ட் தானே புதிர் போடுறாரு?" என்று சமாளித்தார். மேரி சற்று யோசித்தார்.

"நானே சொல்லிடறேன்" என்றான் ரகு. "மனம்" என்றான். மேரி டீச்சர் சபையில் விடை தெரியாமல் தடுமாறுவது அவனுக்குப் பொறுக்கவில்லை என்பது பலருக்கும் புரிந்தது என்பதை ரகு பொருட்படுத்தவில்லை.

மாலை வழியில் இருவரும் வழக்கம் போல் பேசிக்கொள்ளவில்லை. ரகுவின் புதிரும் விடையும், மேரியின் மனதை வண்டாகக் குடைந்தெடுத்தது. வீட்டுக்குள் நுழைந்தபோது மனம் கனத்திருந்தது.

    மறுநாள் சனிக்கிழமை. மாலை ஐந்து மணிக்கு ரகு காவேரிக் கரைக்கு வந்தபோது, மகிழ மரத்தடியில் மேரி டீச்சர் குடையோடு நின்றிருப்பதைப் பார்த்தான். வேகமாக ஓடி மேரி டீச்சரைக் கட்டிக்கொள்ளாதக் குறையாக அவர் முன் நின்றான். "வந்துட்டீங்களா? வாங்க வாங்க" என்று அவர் பதிலுக்குக் காத்திராமல் அவருடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு காவிரிக்கரைக்கு ஓடத்தொடங்கினான். "ஏய்.. நில்லு.. நில்லு" என்று நிதானித்துத் தோற்ற மேரி, அவனுடன் ஓடினார்.

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு பட்டாம்பூச்சி துரத்தினார்கள். நீரில் அளைந்தார்கள். ஊற்று தோண்டினார்கள். தட்டையான கூழாங்கற்களை தண்ணீரில் தட்டி எறிந்து, எத்தனை முறை தத்தி மூழ்கியது என்று கணக்கிட்டார்கள். அவ்வப்போது கத்திப் பறந்த மயில் கூட்டத்தைப் பார்த்துச் சிலிர்த்தார்கள். ஆலமரத்தடியில் ரகு கொண்டு வந்திருந்த மிளகாய்ப்பொடி இட்லியை சுவைத்தவாறு, அவன் எழுதியக் கவிதைகளைப் படித்தார்கள். காரணமில்லாமல், காரணத்துக்கான அவசியமில்லாமல், மனதாரச் சிரித்தார்கள். தங்கள் கைகளை மணலில் புதைத்து வேகமாக இழுத்த போது உண்டான மணற்பிளவு வடிவங்களைப் பற்றிப் பேசினார்கள். மேரி டீச்சரின் புடவைத் தலைப்பும் தலைமுடியும் காற்றில் படபடத்ததைக் கண்ட ரகு, "எனக்குப் படம் வரையத் தெரிஞ்சா உங்களை இப்பவே படமா வரைவேன்" என்றான். "என்னப்பா ஏமாத்திட்டியே? உனக்குப் படம் வரையத் தெரியும்னு நெனச்சனே?" என்று சிரித்த மேரி டீச்சர், அவனுடைய கவிதை நோட்டை வாங்கினார். "கொஞ்சம் அப்படியே உக்காரு" என்று அவனை அழுத்தி உட்கார வைத்தார். நிமிடங்களில் அவனையும் சூழலையும் வரைந்து அவனிடம் கொடுத்தார். "என்னுடைய பரிசு" என்றார்.

"பரிசா? எதுக்கு?"

"நீ மட்டும் பட்டாம்பூச்சி மயிலிறகுனு எனக்குத் தரலியா?" என்று மேரி அவன் முகத்தைப் பார்த்தார்.

ரகு மலர்ந்து சிரித்தான். "தேங்க்ஸ் டீச்சர்".

சூரியன் மறையத் தொடங்கியதும் மணலோரமாக நடந்தார்கள். திடீரென்று தூறல் தொடங்க, மகிழமரத்துக்கு ஓடினார்கள். டீச்சரை இழுத்துக் கொண்டு, கவிதை நோட்டை மறைத்துக் கொண்டு, ரகு ஓடினான். மரத்தடியில் இருவரும் விழுந்தார்கள். மூச்சு முட்டி அடங்கியதும் சிரித்தார்கள். "நனைஞ்சுட்டோம் போலிருக்கே? படம் அழிஞ்சுடுச்சா?" என்றார் மேரி. சட்டைக்குள்ளிருந்து படத்தை எடுத்த ரகு, "நான் சாகற வரைக்கும் அழியாது டீச்சர்" என்றான்.

மழை வலுக்கத் தொடங்கியது. இருவரும் மரத்தடியில் டீச்சரின் மஞ்சள் குடைக்குள் நெருங்கி ஒண்டினார்கள். மழை பெய்து ஓய்ந்தது. சூரியன் அனேகமாக மறைந்து விட, மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். "நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டீச்சர்" என்றான் ரகு.

"நானும் தான்"

"இந்த சந்தோஷம் நிலைக்காது இல்லியா டீச்சர்? அதைச் சொல்லத்தானே வந்தீங்க?"

சற்றே திடுக்கிட்ட மேரி அமைதியாக, "உனக்கே இது புரியுதா ரகு?" என்றார்.

"ஆமாம். எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா தோலை உரிச்சுடுவாரு. மத்தவங்களுக்கும் புரியாது. ஏன் இங்க வந்தோம்னு இருக்கு டீச்சர்.." என்ற ரகு, குலுங்கி அழுதான்.

அவனுடைய கைகளை மெள்ளப் பிடித்துக் கொண்ட மேரி, "போவுது விடு, ரகு" என்றார்.

"யாருக்குப் புரியாமப் போனாலும் பரவாயில்லை டீச்சர். இந்த நிலமை எனக்கு பிடிச்சிருக்கு" என்றான்.

மேரி எதுவும் சொல்லவில்லை.

"ஆனா அதைத் தொடர முடியாதுனு நீங்க நினைக்கறது எனக்குத் தெரியும் டீச்சர். மனசுக்கு வயசு கிடையாதுனு நான் சொன்னது இதை வச்சுத்தான்"

"உனக்கு எத்தனை வயசு ரகு?"

"பதினஞ்சு முடியப்போகுது டீச்சர்"

"எனக்கு இருபத்தது மூணு"

"இன்னும் பத்து வருசத்துல இந்த வயசு வித்தியாசம் பெரிசாத் தெரியாது இல்லியா டீச்சர்?"

"ஆனா இப்பத் தெரியுதே ரகு? நாம இப்பத்தானே.. இந்தக் கணத்துல தானே.. வாழ்ந்துட்டிருக்கோம்?"

"சில சமயம் எனக்கு இப்பவே இருபத்தஞ்சு வயசு போலத் தோணுது டீச்சர்"

மேரி சிரித்தார். "எனக்கு அதுல சந்தேகமே இல்லை" என்றார். பிறகு ரகுவின் கைகளைப் பிடித்து, "ரகு, நாம இன்னிக்கு இதைப் பத்திப் பேசி முடிவெடுத்தாகணும், புரியுதா? அந்த முடிவை ஏத்துக்குற பக்குவம் உனக்கு இருக்குனு தெரியும். மனசுக்கு வயசில்லைனு சொன்ன முனிவனாச்சே நீ?"

"சொல்லுங்க டீச்சர்" என்றான் ரகு, கைகளை விலக்காமல்.

"மொதல்ல இதைப் புரிஞ்சுக்க. நாம ரெண்டு பேரும் மிக நெருக்கமானவர்கள். அது மாறப்போவதில்லை. இந்தச் சூழலில்.. இப்போதைக்கு.. நண்பர்கள் என்ற முறை மட்டுமே ஒத்து வரும். வேறே எதுவும் முறையற்றதாகும்". பதில் சொல்ல வந்த ரகுவைத் தடுத்து, "நான் இதுவரை சந்திச்ச மாணவர்களில் நீ தான் எனக்கு மிகவும் பிடித்தமானவன், நெருக்கமானவன், வெரி ஸ்பெஷல். அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதே போல நீ சந்திச்ச டீச்சர்கள்ள என்னை உனக்கு பிடிச்சிருக்கு இல்லையா.. உனக்காக நானே சொல்லிடறேன்" என்ற டீச்சர் அவனுடைய கைகளை விடுவித்தார்.

"உங்களை எனக்கு டீச்சர் ஸ்தானத்துக்கு மேலயே பிடிச்சிருக்கு" என்றான் ரகு. தலை குனியாமல், டீச்சரின் கண்களைப் பார்த்துப் பேசினான். மேரி வெலவெலத்துப் போனார்.

"இருக்கலாம் ரகு. நீ எனக்கு இதைச் சொல்ல வேண்டியதில்லை, உன்னுடைய செயல்களையும் உணர்வுகளையும் நான் கவனிக்கலைனோ மதிக்கலைனோ நினைச்சுடாதே, இருந்தாலும் உன் நேர்மையைப் பாராட்டறேன். சமூக நியதிகள் முறைகள்னு சில இருக்கு. பெரும்பான்மைக்காக வகுப்பட்டவை என்பதாலே, சிறுபான்மையும் அதோட ஒத்துப் போகணும். நம்ம வாழ்க்கையின் ஒழுங்குகளும் செயல்களும், ஒவ்வொரு காலகட்டத்துலயும் வயது வரம்பை வச்சே நியமிக்கப்பட்டிருக்கு. எதையும் நியமிக்கப்பட்ட வயதுக்கு முன்போ பின்போ செய்தா ஒழுக்கக்கேடாகும். சில சமயம் குற்றமாகும். நான் சொல்றது புரியுதா?"

"வயசு என்கிறது கோள் சுற்றலின் ஒரு பரிமாண விளைவு டீச்சர்.. பூமிக் கணக்குப்படி, செவ்வாயில எனக்கு இப்ப வயசு எட்டு. இன்னொரு கோள்ல முப்பத்திரண்டாக இருக்கலாம். நம்ம உலகத்துலயே நாலாயிரம் வருசத்துக்கு முன்னால என்னோட வயசு பதினஞ்சு கிடையாதுனு நிச்சயமா சொல்லலாம். "

"மனசுக்குப் பல வயசுனு நீ புதிர் போட்டது, அப்பவே எனக்குப் புரிஞ்சு போச்சு ரகு" என்று மேரி புன்னகைத்தார்.

"வயசு.. உயரம்.. உடலின் இந்தப் பரிமாணங்கள்.. இதெல்லாம் இருந்தா நீங்க சொன்ன ஒழுங்கீனம் எல்லாம் இப்பவே சரியாகிடும் இல்லையா? மனசளவில நாம ஒரே வயசா இப்பவே இருந்தாலும் ஒரு பயனும் கிடையாது இல்லையா?"

"மனசளவில நாம ரெண்டு பேரும் ஒரே வயசுனு இப்ப சொல்லுறே.. இன்னும் பத்து வருசம் கழிச்சுச் சொல்ல மாட்டே.. அதான் வித்தியாசம்.. நம்ம வாழ்க்கை முறையின் மகத்துவம்"

"எனக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்கலே. வருத்தமா இருக்கு"

"எனக்கும் பிடிக்கலே தான். ஆனா அதுக்காக அதை ஒதுக்கினா இன்னும் வருத்தமும் ஏமாற்றமும் உண்டாகலாம். ரெண்டு பேரோட சந்தோசமும் நிம்மதியும் கெட்டு வாழ்க்கை முழுக்க வருத்தப்படும்படி நேரலாம். சிக்கல்கள் போதாதுனு சட்டரீதியா வேறே சங்கடப்பட வேண்டிவரும் இல்லையா?"

"ஆமாம்"

"வயதுக்கு மீறின.. சாரி.. உனக்குத்தான் வயசுல நம்பிக்கை இல்லையே? எப்படிச் சொல்றது.. சில பேருக்கு சில உணர்வுகள் உடல் வளர்ச்சியோடு ஒத்து வளருவதில்லை.."

"காதல் மாதிரி" என்றான் ரகு, டீச்சரை நேராகப் பார்த்து.

சற்று நிலை தடுமாறிச் சுதாரித்த மேரி, "ரைட்" என்றார். "ஏன் எப்போ எப்படி வருதுனு சொல்லமுடியாது.. இந்த உணர்வுகள் இந்த நேரத்துல உனக்கும் எனக்கும் ஏற்பட்டிருக்கு என்கிறதை மட்டும் நாம் ஏத்துக்கிட்டு, சமூக நியதிகள் மற்றும் நியமங்களுக்கு ஏத்த மாதிரி நேர்மையான முடிவு எடுக்கறது தான் சரி, இல்லையா?"

ரகு வரட்டுத்தனமாக சிரித்தான். "சிலருக்கு எப்பவுமே இந்த உணர்வுகள் வருவது கிடையாது. கடமைக்காக வாழ்ந்துட்டுப் போயிடறாங்க. அவங்களுக்கெல்லாம் ஒழுக்கமோ ஒழுங்கீனமோ எதுவுமே தேவையில்லாமப் போயிடுது. வாழ்க்கையை நேசிச்சு ஒவ்வொரு கணத்தின் பெருமையையும் மதிப்பையும் உணர்ந்து வாழ நினைக்கிறவங்களுக்கு, முறை வரம்புனு ஆயிரத்தெட்டு சிக்கல். நீங்க சொல்றது சரிதான்"

"குட். ரெண்டு பேரும் இதைப் பத்திப் பேசினது முக்கியம். நீ என் கூட நேர்மையா இருந்த மாதிரி, நானும் என் எண்ணங்களை உன் கிட்டே மறைக்காம சொல்ல ஆசைப்பட்டேன். அதான் இன்னிக்கு இங்கே வந்தேன். நான் உன்னிடம் எதையும் மறைக்க விரும்பலே ரகு"

"புரியுது டீச்சர். தேங்க்ஸ்" என்ற ரகு, திடீரென்று டீச்சரின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டான். "இந்த உணர்வு.. இங்கயே அழிய வேண்டியது தானா டீச்சர்?"

"சிக்கல் பிரச்சினையா மாறுமுன்னே முடிக்க வேண்டியது தான் முறை ரகு" என்று தன் கைகளை விடுவித்துக் கொண்டார் மேரி. ரகுவின் தலையை லேசாக வருடிக் கொடுத்தார். "இருட்டுறதுக்கு முன்னே வீட்டுக்குப் போவோம், சரியா?"

அமைதியாக நடந்தார்கள். "வாழ்க்கை ஒரு விசித்திரமான வரப்பெட்டி ரகு. ஒரு வரம் தொலைஞ்சு போச்சேனு வருத்தப்பட்டுத் திறந்தா, அங்கே இன்னொரு அதிசய வரம் காத்திருக்கும். ஒண்ணு முடிஞ்சு போச்சுனு வருத்தப்படாம, பத்து தொடங்குதேனு சந்தோஷப்படத் தெரியணும். இப்ப.. இந்தக் கணத்துல.. இந்த வரம் தொலஞ்சு போனதுல உனக்கு வருத்தம். எனக்கும் தான். ஆனா வரப்பெட்டியிலே நம்ம ரெண்டு பேருக்குமே வேறே வரங்கள் காத்திட்டிருக்கலாம்" என்றார் மேரி.

"ஒரு வரம் நம்ம ரெண்டு பேருக்குமே ஒத்து வரும்"

"என்ன?"

"நம்ம ரெண்டு பேருக்கும் பத்து வருஷம் வயசு கூடிச்சுனா?"

"அப்ப எனக்கு முப்பதுக்கு மேலே வயசாயிடும். இப்ப இருக்குற மேரி டீச்சரா இருக்க மாட்டேன். நீயும் இப்பத்து ரகுவா இருக்க மாட்டே. சரிப்பட்டு வராது"

"ஆனா அந்த வரம் உங்களுக்கு இஷ்டம் தானே?" ரகுவின் குரலில் ஆற்றாமையும் ஆத்திரமும் ஒலித்தது.

"ஈஸி ரகு. அந்த வரத்துல எனக்கு இஷ்டம் தான். போதுமா?" மேரி அவன் தலையைக் கோதினார். "இதை முடிச்சாகணும் ரகு. இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்கு மட்டுந்தான் தெரியும். நான் வேறே ஸ்கூலுக்கு ட்ரேன்ஸ்பர் வாங்கிட்டுப் போற வரைக்கும் டீச்சர் மாணவனா நடந்துக்குவோம். ட்ரேன்ஸ்பர் வந்துரும்".

    அடுத்த இரண்டு நாள் ரகு பள்ளிக்கு வரவில்லை. மூன்றாம் நாள் காலை மரைக்காயர் தெருமுனையில் சைக்கிளோடு நின்று கொண்டிருந்தான். "டீச்சர், இன்னிக்கு உங்க கூட வரேன். கொஞ்சம் பேசணும். பரவாயில்லியா?"

டீச்சர் புன்னகையுடன், "யாருப்பா நீ, ரகு மாதிரி இருக்கியே?" என்றார்.

"ட்ரேன்ஸ்பர் போடாதீங்க டீச்சர்" என்றான் நேரடியாக.

"ஏன்?"

"எங்கப்பாவுக்கு ட்ரேன்ஸ்பர் வருது டீச்சர். திங்கட்கிழமை தான் அவருக்கே தெரியும். ஜனவரி ஒண்ணாந்தேதி அவருக்கு டூட்டி ஜாயின் பண்ணனும். அதனால இன்னும் ரெண்டு வாரத்துல நாங்க மெட்ராஸ் போறோம். ப்லீஸ் டீச்சர்.. நீங்க இங்கயே இருங்க.. இங்கயே இருப்பேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க" ரகுவின் குரல் கம்மியது.

"ரகு.. என்ன இது.. சரி சரி.. நான் ட்ரேன்ஸ்பர் வாங்கலே.. இங்கயே இருக்கேன்.. சின்னப் பிள்ளையாட்டம்.. ஒழுங்கா நடந்து வா"

"என்னால உங்களை மறக்க முடியாது, நான் வரேன் டீச்சர்" என்ற ரகு, காத்திராமல் சைக்கிளில் வேகமாகச் சென்றான். "என்னாலும்" என்று மேரி சொன்னதைக் கவனிக்கவில்லை.

    "வேண்டியவங்களா? அப்ப அவங்க இறந்து போனது உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே?" என்றார் போஸ்ட்மாஸ்டர் சகாயம். "தெரியாதா?"

இதயம் நசுங்கியது போல் உணர்ந்தான் ரகு. "இறந்துட்டாங்களா?"

"ஆமா. ஸ்கூல்ல சேந்து ஒரு வருசத்துக்குள்ளாற இறந்துட்டாங்க. தோமையார் சமாதியில தான் புதைச்சிருக்கம். வந்து பாக்கறீங்களா?".

மேரி டீச்சரின் கல்லறை சரியாகப் பராமரிக்கப் படாமல் அங்கங்கே விரிசலும் புதருமாக இருந்தது. கல்லறையில், "மேரி டீச்சர். தோற்றம்: நவம்பர் 6, 1950 - மறைவு: ஜனவரி 30, 1974" என்றிருந்ததைப் படித்ததும் ரகு உடைந்து போனான். 'இங்கயே இருக்குறதா சொன்னீங்களே டீச்சர்?..'

கைப்பெட்டியைத் திறந்து உள்ளேயிருந்த படத்தைக் கல்லறை மேல் வைத்தான். படத்தில் பதினைந்து வயது ரகு, காவிரிக்கரையில் சிரித்துக் கொண்டிருந்தான். 'டீச்சர்.. இப்ப என்னோட உடம்புக்கு உங்களை விட வயசு அதிகம்' என்று மனதுள் வெதும்பினான். கேவிக் கேவி அழுதான்.


குறிப்பு [-]
நீங்கள் மேலே படித்தது, ரே ப்ரேட்பரி எழுதிய 'A Story of Love' எனும் அற்புதச் சிறுகதையின் தழுவல். தமிழில் சில ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டுள்ளேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு.