2012/08/20

மெல்லிசை நினைவுகள்


    பாலராஜன் கீதாவைத் தவிர இரண்டு வாசக நட்புக்களை முதல் முறையாக நேரில் சந்தித்தேன். ஒருவர் பெயரில்லாமல் பின்னூட்டம் இடுபவர். என்னுடன் நீண்ட நாட்களாக இமெயில் தொடர்பு வைத்திருப்பவர். நான் சற்றும் எதிர்பாராத பரிசொன்றை வழங்கினார். விவரம் பிறகு சொல்கிறேன்.


முக்திப் பாடல்கள்


    சென்னைப் பயணத்தின் சுகங்களில் அரியது பழைய திரைப்படப் பாடல்களைப் பார்க்க/கேட்கக் கிடைக்கும் அனுபவம். இந்த முறை முரசு என்று ஒரு சேனல் பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருந்தேன் என்பது appropriate. கோவிந்தபுரத்தில் இருந்த ஒவ்வொரு நாளும் பக்தியோடு முரசு சேனலை வழிபட்டு முக்தியடைந்தேன்.

என் முக்தியின் பலனாக இரண்டு விடியோக்களை, இதோ உங்கள் முக்திக்காக வழங்குகிறேன்.

'நிலவென்னும்' எம்ஜிஆர்-சரோஜாதேவியை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. உதட்டைச் சுழித்து எம்ஜிஆர் பாடும் வரிகளை, மெட்டில் மெய்மறக்காமல், இந்த முறை கவனித்தேன். பண்பாடு கலாசாரம் என்று எத்தனை இழுத்தாலும் இது போன்ற பாடல்களைக் கேட்டே வளர்ந்தார்கள், வளர்கிறோம், வளர்வார்கள். டிவியில் சமீபப் பாடல் ஒன்றையும் பார்க்க/கேட்க நேர்ந்தது. அதைப் பார்த்ததும் இந்த எம்ஜிஆர் பாடலை தொடக்கப்பள்ளிப் பாடத்தில் வைக்கலாம் என்று தோன்றிவிட்டது. தமிழ்ச்சினிமா பாடல் வரிகளில் புதைந்திருக்கும் விரசம், சுவாரசியமான கலாசார முகமூடி. ஓ..இன்னொரு ஆணை காதல் பாவத்தோடு எம்ஜிஆர் முத்தமிட்டது இந்தப் பாட்டில் மட்டுமே என்று நினைக்கிறேன்.

'இன்று நமதுள்ளமே' பாடலின் இறுதியில் பத்மினி ஏன் பதட்டப்படுகிறார் தெரியவில்லை. முதலிரவு பாணிக் காதல் பாட்டு போலத்தானே இருக்கிறது? அடுத்தக்காட்சியில் சிவாஜி மூன்று கால் ராட்சசனாக.. okay didn't mean that, சரியாக வரவில்லை... பயங்கர மந்திரவாதியாக மாறப்போகிறாரா? மேக்கப்பை இன்னொரு தடவை பாருங்கள் - பொய்முடியும் வக்கிரப் புன்னகையும் ஏதோ பயங்கரத்தின் பீடிகையாக இருக்கும் போலிருக்கிறது.


    லைக்கோவில், வானம்பாடி இரண்டு பட டிவிடிகளையும் தேடினேன். கிடைத்தது. கலைக்கோவில் படத்தில் - படுபாவிகள், படத்தின் பாடல்களை சகட்டு மேனிக்கு வெட்டி விட்டார்கள். அவர்கள் தலையில் வயிற்றுகடுப்பெடுத்த யானைகள் வேகமாகக் கழியட்டும்.

கலைக்கோவில் படம் என்னவோ இலக்கியத்தரம் ஆகா ஓகோ என்றார்கள். 'தங்கரதம்' 'தேவியர் இருவர்' பாடல்களின் classical bent, 'வரவேண்டும்' 'முள்ளில் ரோஜா' பாடல்களின் மேற்கத்திய ஜாலம், 'நான் உன்னைச் சேர்ந்த செல்வம்' பாடலின் pure காதல் spirit, பாடல் வரிகளில் வெளிப்படும் moral, ethical and emotional conflict, பாலமுரளி, சிட்டிபாபு என்று ஜாம்பவான்களின் collaboration, போதாக்குறைக்கு 'கலைக்கோவில்' என்று பெயர் - எல்லாம் சேர்ந்து ஏதோ சங்கராபரண முன்னோடி என்று ஆவலுடன் கைகளைத் தேய்த்துப் படம் பார்த்தால்.. பார்த்தால்.. what a fucking let down! படமா இது? எனக்குத் தாங்கவில்லை. கொடுமையான டப்பா. இப்படி ஒரு கதையா, படமா, அதுவும் ஸ்ரீதரிடமிருந்தா? படம் அன்றைக்கும் ஓடவில்லை, என்றைக்கும் ஓடாது என்பது என் கருத்து. விசுவனாதன்-ராமமூர்த்தியின் இசையை இப்படியா வீணடிப்பது! colossal! மிகவும் வருந்தினேன். எனக்கு மிகவும் பிடித்த 'முள்ளில் ரோஜா', டிவிடியில் காணோம். அசல் படத்தில் உண்டா இல்லையா என்று தெரியாது.

ஊர் திரும்பியதும் 'முள்ளில் ரோஜா' பாடலை பத்து தடவை கேட்டபிறகு.. இப்போது கொஞ்சம் பரவாயில்லை... i feel better, thank you. மெல்லிய jazz மெட்டு, காதலி மடி. அடக்கமாகத் தொடங்கும் பியேனோ, கிடார், ஐஸ் மின்னல் போல் புகுந்து வெளிவரும் குழல், வயலின்.. தொடர்ந்து வரும் ஈஸ்வரியின் அலட்டாத மிதமான குரலும் பிபிஸ்ரீயின் குடிபோதை ஹம்மிங்கும் பாடலின் போதையைக் கூட்டினாலும், முக்கிய லாகிரிகள் இசையும் மெட்டுமே. கிடார், பாங்கோஸின் புரட்டல் - பாடலின் க்ளைமேக்ஸ், well, as good as க்ளைமேக்ஸ் என்பேன்.
முள்ளில் ரோஜா


   எம்எஸ்வியின் swing-jazz மெட்டுக்களில், வரும் பாடல் என்னுடைய favorite. டிரம்ஸ் இந்த அளவுக்கு peppyஆக வேறெந்த பாடலிலும் உபயோகித்திருக்கிறாரா தெரியவில்லை. பேஸ் கிடார், குழல், பியேனோ, ட்ரம்பெட் என்று பின்னியெடுத்திருக்கிறார். சரணங்களின் இடையே ஈஸ்வரி இழுத்துத் தொக்கி நிற்கையில், அரை செகந்ட் தாமதித்து ட்ரம்ஸ் ஒரு தட்டு தட்டி இசையையும் பாடலையும் இணைப்பதைக் கேளுங்கள் - அந்தக் கணத்தில் முக்தி உத்தரவாதம்.

பம்மலில் குடிபுகுந்தத் தொடக்க நாட்களில் ஒரு உடைசல் band வைத்திருந்தோம். விடலைகள் எங்களை நம்பி யாரும் வாய்ப்பு தரவில்லை. தளருவோமா என்ன? விக்கிரமாதித்தக் கூட்டமாச்சே நாங்கள்? முரளி வீட்டு மாடியிலும், முத்தமிழ் நகர் ஜெயன் வீட்டு மாடியிலும் பெரிய கூட்டத்தின் முன் கச்சேரி நிகழ்த்தும் பாவனையுடன் பாடுவோம். ஜெயன் வீட்டில் பாடும் பொழுது அவனுடைய பெரிய அண்ணன் சுதிர் சேர்ந்து கொள்வார். அப்புறம் எப்போதாவது எங்களுடன் பாடச் சம்மதிக்கும் ஜெயன் எதிர்வீட்டு பாபுவின் அக்கா உமா. ஜமுனாராணிக்கும் ஈஸ்வரிக்கும் இடைப்பட்டக் குரல். பக்திப் பாடல்களை மட்டுமே பாட அனுமதிப்பார்கள் உமா வீட்டில். 'தாயே கருமாரி' என்று தொடங்கினால் நாங்கள் நமட்டுச் சிரிப்புடன் பொறுமை காப்போம். சோம்பலுடன் லொட்டு தட்டுவான் ஜெயன். ஆனால், உமா கொஞ்ச நாளாக ஒரு பாடலை ஒவ்வொரு முறையும் பாடத்தொடங்கினார். அட்டகாசமான இசையுடன் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாட்டு. ஜெயனுக்குக் குஷி தாங்காமல் டிரம்சில் புகுந்து விளையாடுவான். எங்களிடம் ட்ரம்பெட் இல்லாததால் ஜேம்ஸின் கீபோர்ட் தான் எல்லாம். இந்தப் பாடலுக்காக தாயே கருமாரியைப் பொறுத்தோம்.

இப்படி இருக்கையிலே திடீரென்று ஒரு நாள் - உமாவையும் சுதிரையும் காணோம். ஓடிவிட்டார்கள்.

உமா அக்கா சுத்தமான தமிழ் ஐயர். சுதிர் அண்ணா சுத்தமான கன்னட முதலியார். ஓடாமல் என்ன செய்வார்கள்?

முப்பது வருடங்கள் கழித்து இருவரையும் இந்த முறை பெங்களூருவில் சந்தித்தேன். 'பெயரில்லா' வாசகர் தயவால் கிடைத்த, சற்றும் எதிர்பாராதப் பரிசு. உமா-சுதிர் குடும்பத்துடன் ஒரு மணி நேரமே செலவழித்தாலும் நிறைவாக இருந்தது. மிக மகிழ்ச்சியாக இன்றைக்கும் காதலிக்கிறார்கள்.

சிகாகோ வருகையில் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டேன். ஏதோ கவர்ச்சி நடனப்பாட்டு என்று நினைத்திருந்தேன். பாடல் வரிகளில் காதல் ஏக்கம், வலி, சோகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு, கனவு அத்தனையும் புதைந்திருப்பது புரிந்தது. சோகப்பாட்டுக்கு இப்படியொரு மெட்டா? எம்எஸ்வியால் மட்டுந்தான் முடியும். எம்எஸ்வி-கண்ணதாசன்-ஈஸ்வரியின் அற்புதமான படைப்பு. உமா அக்கா இந்தப் பாட்டை அடிக்கடி ஏன் பாடினார் என்ற ரகசியம் புரிந்துக் கேட்டால் இன்னும் போதையாக இருக்கிறது.
நினைத்தேன் என்னை

பரம ரசிகனாக இருந்துகொண்டு என் எம்எஸ்வியை இதுவரை நான் நேருக்கு நேர் சந்தித்ததில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. ஒவ்வொரு முறை சென்னை வரும் பொழுதும் நினைத்துக் கொள்கிறேன், ஆனால் நேரமோ வாய்ப்போ கிடைப்பதில்லை.


    ந்தப் பயணத்தில் ரா.கி.ரங்கராஜனை சந்திக்க விரும்பி அவருடன் தொடர்பு கொண்டேன். சந்திக்க முடியவில்லை. இந்த வாரம் அவர் மறைந்த விவரம் அறிந்து மிகவும் வருந்தினேன். நிறைய பேர் கவனிக்காதது ஒரு குறை என்றாலும், இந்த ரங்கராஜனும் எழுத்து வித்தகர். நாலைந்து புனைப்பெயரில் நாலைந்து தனி நடையோடு எழுதிய most versatile writer.

'80 வாக்கில் சிறுகதை எப்படி எழுதவேண்டும் என்று ரா.கி.ரங்கராஜன் ஒரு கடிதம் எழுதினார். அன்றைய குமுதம் பத்திரிகை நிர்வாகிகளில் ஒருவரான ரங்கராஜன், ஊர் பெயர் தெரியாத என்னைப் புறக்கணித்திருக்கலாம். மறக்காமல் எனக்கு அவர் எழுத நினைத்தது, என்னால் மறக்க முடியாததாகிப் போனது.

இந்தப் பயணத்தில் பறிகொடுத்தப் புத்தகங்களில் ராகிரவின் படைப்புகள் நான்கோ ஐந்தோ, நினைவில்லை ஆனால் வலிக்கிறது.

உங்கள் காலத்தில் வாழும் வாய்ப்பு கிடைத்ததில் எமக்கு ஒரு சிறு ஆறுதல், ரா.கி.ரங்கராஜன் ஐயா. கனிவான நினைவுகளுடனும் அன்புடனும் விடை தருகிறோம். goodbye!


    சென்னைப் பயணச் சட்டியில் இன்னும் இருக்கிறது கிளறியெடுக்க :=)

18 கருத்துகள்:

  1. இணைத்த பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள்... தொடருங்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அப்பாஜி....ரொம்ப நாளாச்சு பழைய பாடகள் உங்கள் தெரிவில் தந்து.இருங்க...இன்னும் ஒருதரம் கேக்கப்போறேன் !

    பதிலளிநீக்கு
  3. // சென்னைப் பயணச் சட்டியில் இன்னும் இருக்கிறது கிளறியெடுக்க :=)

    வீடு திரும்பல்னு ஒரு ப்ளாக் எழுதுறவர் இருக்காரு. ரெண்டு நாலு டூர் போயிட்டு வந்து பத்து பதிவு எழுதுவாரு.

    நீங்க அவரு மாதிரி இல்லை. முப்பது நாள் டூரில் எழுத நிறைய இருக்கும் எழுதுங்க எழுதுங்க

    பதிலளிநீக்கு
  4. பாடல்களை ரசிக்கும் ரசனையில் நான் உங்கள் அலைவரிசையோடு இணைந்தவனாக இருக்கிறேன் என்பதில் பரம சந்தோஷம் எனக்கு. என்னது... ரா.கி.ர. நாலைந்து புனை பெயர்களில் எழுதினாரா? ஏழுஎட்டு பெயர்கள் அப்பா ஸார். ரா.கி.ரங்கராஜன். கிருஷ்ணகுமார். முள்ரி. வினோத். துரைசாமி. அவிட்டம். லலித். மோகினி இதெல்லாம் எனக்குத தெரிந்தவை. மேலும் சில உண்டுங்க.

    பதிலளிநீக்கு
  5. //மறக்காமல் எனக்கு அவர் எழுத நினைத்தது, என்னால் மறக்க முடியாததாகிப் போனது.
    //
    சொல்லக்கூடிய விஷயமாய் இருந்தால் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அவர் பார்வையில் சிறுகதை என்றால் என்ன- என்பதை அறியும் ஆவல் தான். வேறொன்றுமில்லை.

    உங்கள் பயண அனுபவக்கட்டுரை ஒவ்வொன்றும் சுவாரஸ்யமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. நிறைய பேர் கவனிக்காதது ஒரு குறை என்றாலும், இந்த ரங்கராஜனும் எழுத்து வித்தகர். நாலைந்து புனைப்பெயரில் நாலைந்து தனி நடையோடு எழுதிய most versatile writer.//

    மறக்கவில்லை; உடனேயே மின் தமிழில் அநுதாபச் செய்தி போட்டோம். நான் அவரின் தீவிர ரசிகை. என்றாலும் அவர் நியூயார்க்கில் பார்த்த தயாநந்த சரஸ்வதியின் தக்ஷிணாமூர்த்தி கோயில் பற்றியும் அங்கே சாப்பிட்ட உப்புமா பற்றியும் கல்கி தீபாவளி மலரில் எழுதின கட்டுரை தான் என் ஃபேவரிட். அவரைச் சந்திக்கையில் சொல்லணும்னு எல்லாம் நினைச்சுப்பேன்.

    சந்திக்க நினைச்சு சந்திக்க முடியாமல் போனவர்களில் லா.ச.ரா., ஏ.எஸ்.ராகவன், இப்போ ரா.கி.ர.

    பதிலளிநீக்கு
  7. பின்னூட்டங்களுக்கு நன்றி.
    மோகன்குமார்: அதே, அதே!
    geethasmbsvm6:தேடிப் படித்துப் பார்க்கிறேன். நன்றி. (போங்க நீங்க.. ரொம்பப் படிக்கிறீங்க)
    பால கணேஷ்: அத்தனைப் புனைப்பெயர்களா ராகிரவுக்கு? சத்தியமாக எனக்கு க்ருஷ்ணகுமார், அவிட்டம் இரண்டு தான் தெரியும். அவிட்டம் கூட சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன். நாலைந்து என்று ஒரு பேச்சுக்கு.. எழுத்துக்கு எழுதினேன். ஜவஹரின் அஞ்சலிப் பதிவில் நாலைந்தைப் பார்த்து கொஞ்சம் சமாதானமடைந்தேன் - நீங்கள் ஏழெட்டு எடுத்து விடுகிறீர்களே? யப்பாடி! அந்த நாள் குமுதத்தில் எழுதியவர்கள் எல்லாருமே ஜராசு, ராகிரவின் அவதாரங்கள் தானோ என்று இப்பொழுது சந்தேகமாக இருக்கிறது.
    ஹேமா (HVL): பகிர்ந்து கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. எனக்குத் தோன்றாமல் போனதே என்று கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது. நல்ல feedback. நன்றி.
    சிறிய கடிதம் தான். அவர் கொடுத்த பெரிய அறிவுரைகள், நினைவிலிருந்து:
    - கதை என்றால் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை தெளிவாக இருக்கவேண்டும். கதாசிரியர் என்ன சொல்கிறார் என்று வாசகர்கள் குழம்பக் கூடாது. (தத்துவமாக ஏற்றாலும், இதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. ராகிரவின் பாணி மிக எளிமையானது என்பதால் அவர் அப்படிச் சொல்லியிருக்கக்கூடும். ஜவஹர் எழுதிய அஞ்சலியைப் படித்துப் பாருங்கள். அந்த ரங்கராஜன் முடிந்த அளவுக்கு வாசகர்களை தன் உயரத்துக்கு இழுத்தார், இந்த ரங்கராஜன் முடிந்த அளவுக்கு வாசகர்களின் நிலைக்கு இறங்கி வந்தார் - இரண்டுமே delightfully acceptable)
    - புதிய விஷயம் என்றால் பாமரனுக்கும் புரியும்படி எழுதவேண்டும் (இது மட்டும் verbatim நினைவிருக்கிறது)
    - பாரம்பரியம் கலாசாரம் போன்றவற்றில் பிறர் நம்பிக்கையை மதித்து எழுதுங்கள் (verbatim)
    - சிறுகதை என்றால் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை நேர்க்கோட்டில் சொல்ல வேண்டும்
    - தமிழ்க் கதை என்றால் தமிழில் எழுதுங்கள் (இதுவும் verbatim)
    background: ஒரு எதிர்காலக் கதை எழுதியனுப்பியிருந்தேன். outrightஆக reject செய்யாமல், புரியும்படி எழுதுங்கள் என்று இரண்டு முறை திருப்பியனுப்பி coaching தந்து பிரசுரிக்கவும் செய்தார். கதையும் குமுதம் பிரதியும் காலம் சாப்பிட்டுவிட்டது. (ஒருவேளை கணேஷ் பொக்கிஷக் கடையில் கிடைக்குமோ?)

    பதிலளிநீக்கு
  8. முள்ளில் ரோஜா கேட்ட நினைவு இல்லை. ஆனால் உன்னைச் சேர்ந்த செல்வமும் தங்கரதமும் ரொம்பப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் அனுபவங்களை சுவாரசியமாகத் தந்திருக்கிறீர்கள்.அருமையாக எழுதக் கூடிய ரா.கி.ரா உங்களை சரியாக அடையாளம் காணத் தவறி விட்டார் என்றே தோன்றுகிறது.
    ரா.கி.ரங்கராஜனின் கதைகளை நான் அவ்வளவாகப் படித்ததில்லை. சிறுவனாக இருந்தபோது படித்த எப்படிக் கதைஎழுதுவது தொடரில் உதாரணம் காட்டிய ஒரே ஒரு கதை மட்டும் நினைவு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. எனது முதல் வருகை இது. உங்கள் எழுத்தக்கள் என்னை மிகவும் ஈர்த்து விட்டன. திரு ராகிர பற்றிய எனது பதிவை எனது வலைத்தளத்தில் ranjaninarayanan.wordpress.com படிக்கலாம். அவரது கதைகளை தொடர்ந்து படித்தவள் என்பதைத் தவிர எனக்கும் அவருக்கும் ஒரு கடிதம் தான் முதலும் கடைசியுமான தொடர்பு. மிகச் சிறந்த மனிதர், எழுத்தாளர்.
    அவரது நினைவைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. அப்பாதுரை அவ்ர்களே! வஜ்ரதம்ரஷ்ட்ரன் கதையையும் எழுதுவீர்.! பயணக்கட்டுரையும் எழுதுவீர் ! அநியாயமான மனுசன்யா நீர்! ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  12. ஆஹா அப்பாதுரை இம்முறை இந்தியாவுக்கு சென்றபோது மிஸ் செய்தவர்களில் நீங்களும் ஒன்றா? :(

    உங்கள் பயணக்கட்டுரை படிக்கும்போதே செவி வழி சென்று மனதை நிறைக்கும் பாடல்களும் தந்தது சிறப்புப்பா...

    முரசு சேனல் தான் எங்கள் ஃபேவரைட்டும் ஆபிசு செல்லும் வரை இந்த சேனல் தான் நானும் என் வீட்டுக்காரரும் விரும்பி கேட்பது....பழைய பாடல்கள் தேன் தேன்...

    ரா.கி.ரா அவரை நீங்கள் பார்க்க நினைத்ததையும் அவர் மறைந்த செய்தியையும் கேட்டு மனசு கஷ்டமானதுப்பா...

    ரொம்ப வருடங்கள் கழித்து நீங்கள் சந்தித்த உமா அக்கா தம்பதியினர் குறித்து நீங்கள் பதிவு இடும்போது உங்க மனம் எத்தனை சந்தோஷத்தில் இருக்கும் என்பதை என்னாலும் உணரமுடிகிறது....

    எத்தனையோ வருடங்கள் கழித்து கஷ்டப்பட்டு எங்கெங்கோ யார் யாரிடமோ முகவரி விசாரித்து என் பள்ளிக்கால தோழியை சென்று கண்டபோது நானும் அதே சந்தோஷம் அடைந்தேன்பா....

    அன்பு நலன் விசாரிப்பிலும் உங்களை அடிச்சுக்கமுடியாது ஸ்வாமி.....

    பதிலளிநீக்கு
  13. //இந்த ரங்கராஜனும் எழுத்து வித்தகர். நாலைந்து புனைப்பெயரில் நாலைந்து தனி நடையோடு எழுதிய most versatile writer. //

    அந்த ரங்கராஜனையும் தாண்டி. இந்த ரங்கராஜனுக்கு இணை இவரே.

    எனது பதிவின் 'எழுத்தாளர்' பகுதியில்
    தூங்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. இந்தப் பாடல்களை இங்கு தான் கேட்க முடிகிறது. என் அப்பாவிடம் நூற்றுக்கணக்கான கேசட்கள் இருந்தன. இன்னும் பரணில் கிடக்கின்றன.

    பதிலளிநீக்கு
  15. எல்லாப் பாடல்களுக்கும் ,கருத்துகளுக்கும் மிக மிக நன்றி துரை.
    எனக்கும் முள்ளீல் ரோஜா மிகவும் பிடிக்கும்.
    திருமணம் ஆன பிறகு இந்தத் தேவியர் இருவர் பாடலை வைத்து பல நண்பர்களின் வாழ்க்கையில் ரகசியங்கள் இருப்பதை நானும் இவரும் கண்டுபிடித்தோம்:))

    பதிலளிநீக்கு
  16. //பல நண்பர்களின் வாழ்க்கையில் ரகசியங்கள் இருப்பதை..

    ம்னசுலோ  மர்மமமுலுவா?  சுவாரசியமா பிரஷதமா..

    பதிலளிநீக்கு