2015/06/19

கைந்நிலை



    ப்போதோ விடிந்திருந்தப் பொழுதிலே முந்தைய இரவுகளின் இருள் தவிர்க்க முடியாமல் ஒட்டிக்கொண்டிருந்தது... சுமைகள் இறங்கினாலும் தோள்களின் விலகாத வலி போல். இந்த வலி இந்தச் சுமையினால் வந்தது என்றுக் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறதா என்ன? சில பார்வைகளுக்கே தெரியும் காட்சி. சிலருக்கு மட்டுமே புரியும் புறநானூற்று வரிகள்.

வெளியே பார்த்தேன்.

இருளை அழித்தக் குற்ற உணர்வுக் குழப்பத்தில் பல ஒளிக்கற்றைகள் வெயிலைப் பரப்பிக் கொண்டிருந்தன. வெயிலின் வறட்சி செடி கொடிகளைக் கடந்து, புழு பூச்சிகளைக் கடந்து, பிராணிகளைக் கடந்து, மனித உள்ளங்களை ஊடுறுவியிருந்தது போல் பட்டது. சொல்லிப் புரியாத எண்ணங்களைக் கண்டு அஞ்சிப் பதுங்கியோடும் இன்னும் சொல்லாத எண்ணங்களின் தோல்விப் போராட்டம் போல, இளவெயில் புது வெயிலில் கரைந்து கொண்டிருந்தது.

அருகே நிழலாடுவதைக் கவனித்தேன். அவள் தான்.

அருகில் நின்றாலும் தொலைவில் இருந்தாள் என்பது புரிய வேண்டிய அவசியமில்லாமல் புரிந்தது. எனக்கென்று சொல்லாமல் எனக்காக அவள் விருப்பப்படிக் கலந்து கொண்டு வந்த காபியை கோப்பையுடன் அருகே வைத்தாள். அதை எடுத்துக் குடித்தால் கிடைக்கும் அங்கீகாரத்தை அளிப்பதா மறுப்பதா? இல்லாத மதிப்பை இருப்பதாக எண்ணுவதால் வரும் குழப்பமா? இருக்கிற மதிப்பை இல்லாமல் செய்து கொள்ளும் முட்டாள்தனமா? சாதாரண காபிக் கோப்பைக்கு ஏன் இத்தனை சித்தாந்தச் சுற்று?

அவள் மனதின் தீர்மானங்களைப் புரிந்து கொள்ள முடியாத இறுக்கம். என் மனதின் தீர்மானங்களை வெளிப்படுத்த இயலாத இறுக்கம்.

இறுக்கங்களின் வேர் புரிய மறுக்கிறது. எங்கிருந்து வருகின்றன அவநம்பிக்கைகளும் குழப்பங்களும்? பச்சிளம்பிள்ளையின் நம்பிக்கை.. வாயில் திணிக்கப்பட்ட முலையில் விஷமில்லை என்ற ஒட்டுமொத்த நம்பிக்கை.. அறிவற்ற நிலையில் உடன் ஒட்டிய அந்தக் கபடமற்ற நம்பிக்கை அறிவார்ந்த நிலையில் எப்படி மறைகிறது? சந்தேகமும் சுயநலமும் அப்பாவி நம்பிக்கைகளைச் சாப்பிட்டு விடுகின்றனவா? அல்லது நம்பிக்கை என்பதே நாடகமா? விளங்காத அண்ட நிலையின் அணுவளவு வெளிப்பாடா?

சனிக்கிழமையின் விடுமுறைச் சோம்பலில் உள்ளக்கனங்களைப் போர்த்திய வண்ணம்... என்னையறியாமல் காபிக் கோப்பையை எடுத்தேன். 'விழுங்கிய சூடான காபி நரம்புகளின் ஊடாய் ஓடி எத்தனை பிறவிகளின் சோர்வினைத் துரத்தும்?' என்ற பதிலுக்கப்பாற்பட்டக் கேள்வியுடன் மறுபடி வெளியே பார்த்தேன். மெல்லிய ஒலி. அழுகிறாளோ?

விளிம்புப் பார்வையில் கவனித்தேன். அவள் அழவில்லை. நான் அழுதால் அவளுக்குத் தெரியப்போவதுமில்லை. தெரிந்தும் பயனில்லை. புரியாதவர்கள் எதைத் தெரிந்து கொண்டு என்ன பயன்? அழுவது என்பது அடையாள வெளிப்பாடாக இருக்க வேண்டுமா என்ன? உள்ளத்தின் ஓரத்தில் அவநம்பிக்கையின் அசுத்தமான கத்தி கீறி வரும் இரத்தம் சாதாரணமானதா? வலியும் சாதாரணமானதா? உள்ளம் எப்படி அழும்? நான் அழுகிறேனா என்று அவள் கவனிக்கிறாளோ? அவள் அழவில்லை என்ற என் எண்ணம் வலுக்கவே அழாதிருக்கிறாளோ? அல்லது அவளின் அழுகை, நகைப் போர்வை போர்த்திய மேல் மரபோ?

ஒரு வேளை அழுவது நான் தானோ? இல்லை. நான் அழவில்லை. ஒலி அவளிடமிருந்தும் வரவில்லை... வெளியிலிருந்து வருகிறது. ஒரு குழந்தையின் கேவல் போல்.

கண்களை விரித்தேன். வெயிலின் கடுமை. இயற்கையை வாட்டி வதக்கும் இயற்கையின் முரண். கண்கள் கூசின. ஒலியின் பிறப்பிடத்தை எதிர் வீட்டின் தெருத்திருப்பச் சுவரோரமாக இருந்த மரத்தடியில் கண்டேன்.

இரண்டு பூனைகள். ஒரு குட்டிப் பூனை. ஒரு பெரிய பூனை. குட்டிப்பூனையை அவ்வப்போது வாயால் கடித்தும் கைகளால் அறைந்தும் துன்புறுத்திக் கொண்டிருந்தது பெரிய பூனை. வீலென்று குட்டிப்பூனை அலறும் போது சட்டென்று விலகிய பெரிய பூனை, சற்றுப் பொறுத்து மறுபடி தாக்கியது.

நான் கவனிப்பதை அவள் கவனித்தாள். "காலையிலந்து இப்படித்தான்" என்றாள்.

தலையசைத்தேன்.

எதிர் வீட்டில் யாருமில்லை. கோடை விடுமுறைக்குக் குடும்பத்துடன் வெளி நாடு போயிருந்தார்கள். அவர்கள் வீட்டுப் பூனையாக இருக்க வேண்டும். இந்தக் குடியிருப்பில் பிராணி வளர்ப்போர் வேறு எவருமில்லை. ஒரு வேளை குட்டி போட்ட பூனையோ? முதல் குட்டியைத் தின்னும் என்பார்களே? அது தானோ? பெரிய பூனைக்குப் பசியோ? அல்லது சிறிய பூனைக்குத் தரப் பாலில்லையோ? பசியால் வாடும் சிறிய பூனைக்குப் பால் தரமுடியாத வேதனையில் அதைக் கொன்று நிம்மதியை வழங்குகிறதோ? பிறப்பின் வேதனை இறப்பில் சாதனையாகிறதா? இறந்தால் நிம்மதி கிடைக்குமா? எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வு மரணம் தானா?

குட்டிப் பூனை மெள்ளத் தளர்ந்து அயர்ந்து கொண்டிருந்தது. பெரிய பூனை அதை வாயில் கவ்விக் கவ்விக் கீழே போட்டது. ஒவ்வொரு முறை கீழே போட்ட போதும் குட்டிப்பூனை கெஞ்சியது. பலமாக அலறக்கூட முடியவில்லை. கொல்லாதே என்கிறதா, சீக்கிரம் கொல் என்கிறதா?

"விலக்கலாம்னு பார்த்தா பயமா இருக்கு" என்றாள்.

தலையசைத்தேன்.

விலக்கி என்ன பயன்? குட்டிப் பூனையை எடுத்து வந்தால் பிழைக்கும் என்பது என்ன நிச்சயம்? அப்படிப் பிழைத்தாலும் வளர்க்க முடியுமா? அப்படி வளர்த்தாலும் குட்டிப் பூனை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் என்பது என்ன நிச்சயம்? ஒருவேளை பெரிய பூனையின் கொடுமைகள் அதற்குப் பிடித்திருக்கிறதோ? பழக்கமோ என்னவோ? பெரிய பூனையின் நிலமை என்னவாகும்? ஒரு வேளை காப்பாற்றப்பட வேண்டியதே பெரிய பூனை தானோ? யாரிடமிருந்து யார் யாரைக் காப்பாற்றுவது?

பெரிய பூனை விடாமல் குதறிக் கொண்டிருந்தது. சிறிய பூனை சாகவுமில்லை. பிழைத்து ஓடவுமில்லை. அங்கேயும் இங்கேயும் நகர்ந்து கொண்டிருந்தது. வேகமாக ஓடித் தப்பித்துப் போக வேண்டியது தானே? தப்பிக்கும் சக்தியில்லையா? புத்தியில்லையா? தப்பிக்கும் எண்ணமேயில்லையா?

ஓட்டப் பயிற்சிக்குப் போக வேண்டும். உடையணிந்துக் கிளம்பினேன். அவளைப் பார்த்தேன். சலனமில்லாதிருந்தாள்.

வெளியே வந்துக் காரைக் கிளப்பினேன். பூனைகளின் நினைவு வந்தது. காரை நிறுத்தி மரத்தடிக்குப் போனேன். பெரிய பூனை என்னைப் பார்த்து சட்டென்று விலகியது. ரொம்பத் தூரம் ஓடவில்லை. என் வீட்டருகே நின்றபடி என்னையே பார்த்தது.

பூனைக்குட்டியைப் பார்த்தேன். உடல் முழுதும் கீறல்கள். மிக அடிபட்டிருந்தது. கண்கள் திறக்கவேயில்லை. குருட்டுப் பூனையோ? வருத்தப்பட்டேன். நாம் எல்லாருமே பல வகையில் குருட்டுப் பூனைகளாய்க் கடி படுகிறோமே, இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? தெளிந்தேன்.

கராஜிலிருந்து ஒரு பழைய அட்டைப் பெட்டியை எடுத்து வந்தேன். ஓட்டப் பயிற்சிக்குப் போகும் வழியில் மருத்துவ மையத்துடன் கூடிய சிறு பிராணிகள் காப்பகம் இருக்கிறது. அங்கே விட்டுச் செல்லலாம் என்ற எண்ணத்தில் குட்டிப் பூனையை எடுத்துப் பெட்டிக்குள் போட்டேன். பெரிய பூனை என்னையே பார்த்தபடி இருந்தது. குட்டிப்பூனை இருந்த பெட்டியுடன் காரில் கிளம்பினேன்.

    காப்பக மையத்தில் ஒரு பதின்மப் பெண் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். விவரம் சொல்லி குட்டிப் பூனை இருந்தப் பெட்டியைக் கொடுத்தேன். அவள் அதை வாங்கித் திறந்து, என்னை வியப்போடு பார்த்தாள். "பூனைக்குட்டி இறந்து விட்டது" என்றாள்.

"ஐயோ.. ஒரு வேளை பெட்டியை மூடியதில் மூச்சுத் திணறி இறந்துவிட்டதோ?" என்றேன்.

"இருக்கலாம். அல்லது அடிபட்ட ரணம் கூட காரணமாக இருக்கலாம். அடியும் கடியும் பார்த்தால் குட்டிப் பூனை பிழைத்திருக்காது என்றே நினைக்கிறேன்"

"காப்பாற்றலாம் என்று நினைத்து எடுத்து வந்தேன்"

"காப்பாற்றுவது உங்கள் விருப்பம். பிழைப்பது பூனைக்குட்டியின் விருப்பம் அல்லவா?" என்றாள். வயதுக்கு மீறிய அவளின் ஞானம் என்னைக் கணம் சிலையாக்கியது.

"நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று பெட்டியுடன் உள்ளே போனாள். மெள்ள விலகி விரைந்தேன்.

    நான்கு மணி நேர ஓட்டப்பயிற்சி முடிந்து நண்பர்களுடன் அரை மணி நீச்சல் அடித்துவிட்டு பகல் ஒரு மணி போல் வீடு திரும்பினேன். களைத்திருந்தாலும் புத்துணர்வுடன் இருந்தேன். இயற்கையின் இன்னொரு முரண்.

குடியிருப்புப் பராமரிப்புக் குழுவைச் சேர்ந்த இருவர் என் வீட்டருகே ஏதோ செய்து கொண்டிருந்தனர். காரை நிறுத்தி விசாரித்தேன்.

"தெரியலே சார். செத்துக் கிடக்கு. போன் வந்துச்சு. அதான் அப்புறப்படுத்தலாம்னு வந்தோம்" என்று எதையோ சுருட்டிக் கொண்டிருந்தனர். பார்த்தேன். பெரிய பூனை. காலையில் தானே குட்டிப்பூனையைக் கொன்று கொண்டிருந்தது? இதற்கென்ன வந்தது? ஏன் இறக்க வேண்டும்? பூனையை ஒரு பிலேஸ்டிக் பையில் சுற்றியெடுத்தனர். மருந்தடித்தனர். "வரோம் சார்" என்று விலகினர்.

நான் காரைக் கிளப்பி கராஜுள் செலுத்தினேன்.

    வீட்டுக்குள் அமைதியின் பேரிரைச்சல். இந்த அமைதி புதிதல்ல. வார்த்தைகளின் ஓசை, அமைதியின் இரைச்சலுக்கு இணையே அல்ல என்பது புரிந்து மாதங்களாகின்றன. இரைச்சலை உள்வாங்கியபடிக் குளித்தேன். குட்டிப்பூனை, ஒட்டம், பதின்மப் பெண், பெரிய பூனை, நான், அவள், அலுவல், நண்பர்கள், வெயில், வாழ்க்கை... செயற்கைக் குளியலில் கரைந்த இயற்கை நிலைகளின் அழுக்கு. வெளியேறி உடையணிந்தேன். வீட்டில் அவளைக் காணாதது உறைத்தது.

மிகுந்த தாகத்துடன் பசித்தது. சமையலறைக் குளிர்பெட்டியிலிருந்து புரதப்பால் புட்டியை எடுத்து ஒரு கண்ணாடிக் கோப்பை நிறைய ஊற்றினேன். குளிர்பெட்டியை மூடும்பொழுது முகப்பைக் கவனித்தேன்.

ஒரு வெள்ளைக் காகிதத்தின் நடுவில் ஒரே ஒரு சொல் எழுதி ஒட்டியிருந்தாள்.

2015/06/13

ஜீன்ஸி ராணி



    டையாரிலிருந்து பதினைந்து நிமிடங்களில் சென்ட்ரல் ரயில் நிலையம் அசராமல் கொண்டு விட்ட டிரைவருக்கு நன்றி சொன்னான் ரகு. சதாப்தி ரயில் நின்ற இரண்டாவது பிளாட்பாரத்துக்கு நடந்தான்.

பெட்டியில் உட்கார வந்தால்... தன் இருக்கையில் ஏழெட்டு வயது போல் தெரிந்த அழகான உடையணிந்த ஒரு சிறுமி உட்கார்ந்திருந்தாள். அடுத்த இருக்கையில் கண்ணாடியணிந்த தொப்பைக்காரர் ஒருவர்.

ரகு சிறுமியைப் பார்த்து, "பாப்பா.. என் சீட்ல உக்காந்திருக்கம்மா" என்றான்.

பாப்பா உர்ரென்று பக்கத்து சீட் கண்ணாடிக்காரரைப் பார்த்தாள். "ஆமா சார். இது ஜன்னல் சீட்டு. என் பெண்ணுக்குப் பிடிக்கும். அதான். நீங்க இந்த அயில் சீட்டுல உக்காருங்க. சரியா?" என்றார் கண்ணாடிக்காரர்.

ரகு மெதுவாக, "முடியாதுங்க. தயவுசெய்து என் சீட்ல என்னை உக்கார விடுங்க" என்றான். கைப்பையை எடுத்துக்கொண்டு அவர்கள் விலகத் தயாராக நின்றான்.

சிறுமி இருவரையும் பார்த்து "நோ!" என்றாள். அதிகம் பேசிவிட்டது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கைகளை இறுக்கிக் கொண்டு நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

வேறு வழியில்லாமல் ஏதோ முணுத்தபடி முனை சீட்டில் உட்கார்ந்தான் ரகு. ஹ்ம்.. அசந்தா இப்படி ஏமாத்துறாளே இந்தப் பொண்ணு? வளந்த பிறகு யாரை எப்படி ஏமாத்தி என்ன அராஜகம் பண்ணப் போகுதோ இந்த அம்மா?

மெள்ள கூட்டம் சேரத் தொடங்கியது. ரகுவின் எதிரே மூன்று பேர் வந்தமர்ந்தார்கள். அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, ஜீன்ஸ் கமீஸ் அணிந்த முப்பது வயதின் அண்மையில் ஒரு பெண், ஐந்தாறு வயதுக்குட்பட்ட சிறுவன். சிறுவன் ஒரே பாய்ச்சலில் "அம்மா எனக்கு ஜன்னல் சீட்டு" என்று தாவ, ஜீன்ஸ்-கமீஸ் அவனை "நோ, யூ ஸிட் ஹியர்" என்று ஆங்கிலத்தில் அடக்கி நடு சீட்டில் உட்கார வைத்தார். தான் ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்.

ரகு பிரமித்தான். அட, குழந்தையை அடக்கும் தாய்!

    குழந்தைகள் என்றால் ரகுவுக்கு மிகவும் பிடிக்கும். தான் ஒரு ஊரிலும், அவர்கள் நாலைந்து ஊர்கள் தள்ளியும் இருந்தால். அவர்களின் அழுகையும், நச்சரவும், காரணமில்லாத கெக்கலிப்பும், சிரிப்பும், கூச்சலும், கத்தலும் திடீரென்ற விம்மலும் வீறலும் பிடிவாதமும் மூர்க்கமும்... திடமான மனிதர்களையே சற்று உலுக்கிவிடும். அரசியல், பொருளாதார மற்றும் கோர்பரெட் அழுத்தங்களின் கலவையில் மூழ்கிக் காசுக்கும் கடனுக்கும் அடிமையாகி 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?' என்று தினம் புலம்பியபடி வாழும் அதிட மாந்தர்களில் ஒருவனான ரகுவைக் குழந்தைகளின் ரசிகன் என்று சொல்ல முடியாது.

தன் வரிசையில் குட்டிப் பெண். எதிரே குட்டிப் பையன். 'இன்றைக்கு இரண்டு வில்லர்களுடன் ஆறு மணி நேரம் பயணம் செய்ய வேண்டுமே!' என்று உள்ளுக்குள் கலங்கியவனைப் பார்த்து எதிர்வரிசைச் சிறுவன் இலேசாகச் சிரித்தான். நடுங்கியபடி சுற்றுமுற்றும் பார்த்தான். சிறுவன் சிரிப்பின் வில்லத்தனம் புரிந்தது. இந்தியாவில் இன்று குழந்தைகள் பயண தினம் என்று ஏதாவது கொண்டாடுகிறார்களா தெரியவில்லையே? பெட்டியில் வரிசைக்கு ஒரு குழந்தை என்ற கணக்கில் வந்திருந்தாற்போல் பட்டது. பிறந்த குழந்தை, கைக்குழந்தை, மழலை, பிள்ளை, சிறுவர் என்று வகைக்கு அரை டசனாகப் பெட்டியை அடைத்துக் கொண்டிருந்தது குழவிப் பட்டாளம். 'இன்றைக்குப் பெங்களூர் போய்ச் சேர்ந்த மாதிரிதான்!' என்றெண்ணி... அஞ்சி நடுங்கி... மூலை சீட்டுக்குள் ஒடுங்கினான்.

வண்டி நகரத் தொடங்கியது. ம், "அம்மா எனக்கு சிப்ஸ் வேணும்" என்றான் சிறுவன்.

"ஆஸ்க் க்ரேன்மா" என்று பதில் சொல்லிவிட்டு ஐபேடுக்குத் திரும்பினார் ஜீன்ஸ். இதைக் கேட்ட அறுபது வயது பெண்மணி சிரத்தையுடன் கீழே இருந்த பையிலிருந்து ஒரு சிப்ஸ் பேகெட்டை எடுத்து அவனிடம் கொடுத்தார். "பிரிச்சுத் தரட்டுமாடா கண்ணா?"

"வேணாம் பாட்டி.." என்று சட்டென்று சிப்ஸ் பேகெட்டைப் பிடுங்கிக்கொண்டான் சிறுவன். சிப்ஸ் பேகெட்டை அப்படி இப்படிப் புரட்டிவிட்டு உயரத் தூக்கியெறிந்து கேச் பிடிக்கத் தொடங்கினான்.

பேஸின்ப்ரிட்ஜ் தாண்டியதும் கேடரிங்க சிப்பந்திகள் ஒரு தட்டில் ஒரு பாதுஷா, சமோசா, கெச்சப் என்று கொண்டு தந்தார்கள். சிறுவன் இன்னும் கேச் பிடித்துக் கொண்டிருந்தான். சாப்பிடலாம் என்று இனிப்பை எடுத்தான் ரகு. சிறுவன் எறிந்த சிப்ஸ் பேகெட் ரகு இனிப்புப் பொட்டலம் பிரிக்கும் நேரத்தில் அதன் மேல் விழ, இனிப்போடு பொட்டலத்தைக் கீழே தவற விட்டான். சிப்ஸ் பேகெட் அவன் தட்டில் விழ, சிறுவன் சடாரென்று பாய்ந்து சிப்ஸ் பாகெட்டை எடுக்க, சமோசா பொட்டலம் தவறி உருண்டு தரையில் விழுந்தது.

இப்போது ரகுவின் தட்டில் கெச்சப் பாகெட்டும் பேப்பர் துண்டும் மட்டுமே அசையாமல் இருந்தன. பையன் இன்னும் கேச் பிடித்துக்கொண்டிருந்தான். சில நிமிடங்களில் சிப்பந்திகள் தட்டுக்களை திருப்பி எடுத்துக் கொண்டு போனார்கள். சுத்தம் செய்ய வந்த சிப்பந்தி ரகுவின் காலடியில் கிடந்த பாதுஷாவை அப்புறப்படுத்துகையில், "பாத்து சாப்பிடக் கூடாதா சார்? இப்படி அசுத்தம் பண்றீங்களே?" என்றார்.

நொந்து போன ரகு, கண்களை மூடிச் சாய்ந்து உட்கார்ந்தான். தலையில் ஏதோ மடமடவென்று தாளமிட்டு நெருட, கைகளால் தடவிப் பார்த்தான். செருப்பு போல் பட்டது.

திரும்பிப் பார்த்தான். பின்னிருக்கையில் ஒரு ஐந்து வயதுச் சிறுவன் தலைகீழாக ட போல் உட்கார்ந்திருந்தான். அவனருகே இன்னொரு சிறுவன் இன்னொரு ட. இருவரும் பாகெட் நின்டென்டோ விளையாடிக் கொண்டிருந்தார்கள். நாலைந்து முறை கேட்டும் பயனிலாது போக, சிறுவனின் கால்களை நகர்த்தினான் ரகு.

அந்த நேரத்தில் கையில் ஏதோ பொட்டலத்துடன் அந்தப் பக்கம் நடந்த இன்னொரு சீட்காரர் விதி போல் விளையாடினார். ரகு நகர்த்திய சிறுவனின் கால்கள் அவரை இடறிவிட, தடுமாறி பொட்டலத்துடன் விழுந்தார். சிதறி விழுந்த மிளகாய்ப்பொடி இட்லிகளை விடச் சிவந்திருந்தது விழுந்தவரின் முகம். "ஏன்யா யோவ்? அறிவில்லே?" என்று அமைதியாக ரகுவை அழைத்தார்.

இதற்குள் செய்தியறிந்த பெட்டியின் குழவிப் பட்டாளம் ஆளாளுக்குக் கொக்குத்தலை நீட்டிப் பார்த்துச் சிரித்தன. பலத்த சிரிப்பு.

விழுந்தவர் அவமானம் தாங்காமல் கொதித்தார். அன்புடன் ரகுவைப் பார்த்து, "பன்னாடை! சின்ன பசங்க காலைத் தட்டி விட்டு போற வரவங்களை இப்படித்தான் இடறி விடுறதா? மனுசனாய்யா நீ? இதப் பாரு.. தட்டி விட்டது நீ. சுத்தம் செய்யுறதும் நீ தான்" என்று ரகுவின் கைகளில் பொட்டலத்தைத் திணித்தார். திணித்த வேகத்தில் அதில் கைவிட்டு இருந்த ஒரு இட்லியை எடுத்து வாயில் அடைத்துக் கொண்டார். "இதையாவது விட்டு வச்சியே" என்றபடி நகர்ந்தார். கண்ணில் தென்பட்ட இட்லிகளைப் பொறுக்கி எடுத்துப் பொட்டலமிட்டு பாத்ரூம் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு வந்தான் ரகு.

    சில நிமிடங்களுக்குப் பிறகு சிறுவனும் சிறுமியும் பழையபடி கேச் பிடிக்கத் தொடங்கினர். மெள்ள பெட்டியின் பிற ராட்சசர்கள் குரல் எழுப்பத் தொடங்கினர். "அம்மா!" என்று அலறியது ஒரு குரல். இன்னொன்று பேயறைந்தாற் போல் வீறிட்டலறியது. பின்னிருக்கைச் சிறுவர்கள் சண்டை போடத் தொடங்கினர். கதவோரம் இருந்த பிள்ளைகள் இருக்கைகளின் இடைப்பாதையில் ரன்னிங் ரேஸ் ஓடத்தொடங்கினர். எதிர் வரிசை இருக்கைகள் ஒன்றில் ஒரு பிள்ளை சீட்டில் உட்காராமல் குரங்கு போல் சீட்டின் மேல் ஏற முயற்சித்துக் கொண்டிருந்தான். இன்னொரு இருக்கை வரிசையில் இரண்டு மூன்று சிறுமிகள் பாடத்தொடங்கினர். ஒரு கைக்குழந்தை அழுதது. ரன்னிங் ரேஸ் குழந்தைகளை சமாளித்தபடி ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு பாத்ரூம் பக்கம் அவசரமாக விரைந்தார் ஒரு தந்தை. தன் இருக்கையில் அமர்ந்து மனதுள் கந்த சஷ்டிக் கவசம் சொல்லத் தொடங்கினான் ரகு.

கேச் விளையாட்டை நிறுத்திய சிறுவன் பாகெட்டைப் பிரிக்க முற்பட்டான். "நான் பிரிச்சுத் தரேண்டா ராஜா" என்ற பாட்டியை ஒதுக்கி பாகெட்டை இரண்டாகக் கிழிக்க முற்பட்டான். கன்னாபின்னாவென்று கிழிந்த பாகெட்டிலிருந்து சிதறி விழுந்தன உருளை வறுவல்கள். "ஹஹா!" என்று சிரித்தாள் சிறுமி. மேசையில் கிடந்த ஒரு பிஸ்கெட் பாகெட்டை எடுத்துப் பிரித்துப் போட்டான் சிறுவன். "ஹஹா!" என்றான். சிறுமி உடனே ஒரு பிஸ்கெட்டை எடுத்து சிறுவனைப் பார்த்து எறிந்தாள். சிறுவன் நகர அது பாட்டியின் தோளில் பட்டுத் தெறித்தது. சிறுவன் உடனே ஒரு பிஸ்கெட்டை எடுத்து சிறுமியைக் குறிவைத்து எறிந்தான். அது ஜன்னலில் பட்டுத் தெறித்தது.

சிறுவனுக்கு என்ன தோன்றியதோ அடுத்த பிஸ்கெட்டைச் சிறுமியைப் பார்த்து எறியாமல் தோராயமாக பெட்டியின் வாயிலை நோக்கி எறிந்தான். "ஹேய்!" என்று பின்பக்கத்திலிருந்து குரல் கேட்க, சிரித்தான். சிறுமி சும்மா விடுவாளா? இன்னொரு பிஸ்கெட்டை எடுத்து எதிர்புறம் எறிந்தாள். "யார்ராது?" என்ற குரல் கேட்டு "கிகிகி" என்று மென்மையாகச் சிரித்தாள் வில்லி. இருவருக்கும் இது பிடித்துவிட்டது. சதிகாரக் கூட்டம்!

பெட்டி திடீரென்று அமைதியானது. கேடரிங் சிப்பந்திகள் மறுபடி அடுக்குகளுடன் உள்ளே வந்தார்கள்.

வரிசையாக மறுபடி ஆளுக்கொரு தட்டில் சில பொட்டலங்களைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். முன் அனுபவம் எச்சரிக்க, ரகு அவசரமாகத் தட்டில் பாய்ந்தான். காய்ந்து போன வரட்டித் துண்டு போல் நான்காக வெட்டப்பட்ட பராத்தா ரொட்டி. குமட்ட வைக்கும் கரம் மசாலா போட்ட சென்னா கூட்டு. ஒரு பொட்டலத்தில் கீரைச்சாதம். ஒரு சிறு பேகெட் சிப்ஸ். கொடகொடவென்று ஒரு கப் தயிர். ஒரு ஊறுகாய்ப் பொட்டலம். ஒரு தண்ணீர் பாட்டில், ஸ்பூன், பேப்பர் துண்டு. கீரைச்சாதத்தையும் மோரையும் விழுங்கிவிட்டு தட்டை அப்படியே வைத்தான். தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்துக் கொண்டான்.

தட்டைத் தொடாத ஜீன்ஸ்-கமீஸ் ஐபேடிலிருந்து விலகி, "ஆர் யூ எஞ்சாயிங்?" என்றார் மகனிடம். "ஓ ப்லீஸ் டோன்ட் ஈட் திஸ் ரப்பிஷ்!" என்றார். பிறகு பையிலிருந்த டப்பர்வேர் டப்பாவைத் திறந்து அவனுக்கான உணவை எடுத்து, "அம்மா.. கேன் யூ கிவ் ஹிம்?" என்று அம்மாவிடம் கொடுத்தார். இவருக்கு அம்மா என்பதைத் தவிர வேறு ஏதாவது தமிழ்ச் சொல் தெரியுமா என்று திகைத்தான் ரகு.

    ஜோலார்பேட்டை தாண்டி அரை மணி இருக்கும். பெட்டியில் எல்லோரும் வரிசையாக பாத்ரூம் போகத் தொடங்கினார்கள்.

ரகுவுக்கு தலை வலிக்கத் தொடங்கியது. கண்ணாடிக்காரர் ஏறக்குறைய அவன் மடியிலேயே படுத்துக் கொண்டுவிட்டார். அவ்வப்போது எழுப்பி தோளுக்கு உயர்த்திக் கொண்டிருந்தான். சிறுமி இப்போது கலர் பென்சிலால் மேசை மேல் வரைந்து கொண்டிருந்தாள். சிறுவன் தண்ணீர் பாட்டிலை உருட்டிக் கொண்டிருந்தான். இரண்டரை மணி நேரத்தில் பெங்களூர் அடைந்துவிடும் என்று யாரோ சொல்வது காதில் விழுந்தது. பெங்களூர் வருவதற்குள் ஒரு மணி நேரமாவது தூங்கினால் நன்றாக இருக்குமென்று நினைத்தான் ரகு. முடியாமல் தவித்தான்.

ஜீன்ஸ்-கமீஸ் ஐபேடை உள்ளே வைத்தார். "அம்மா.. ஐ நீட் டு ஸ்லீப். கேன் யு டே கேர் ஆப் ஹிம்?" என்றார். பெட்டியின் இரைச்சலைப் பொருட்படுத்தாமல் ஜீன்ஸ் ராணி கண் மூடியது ரகுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னிருக்கைச் சிறுவர்கள் இப்போது வேகமாக காலால் உதைக்கத் தொடங்கியிருந்தார்கள்.

எதிர்வரிசைச் சிறுவன் உருட்டிக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலின் மூடி அவனது பிடியிலோ உருண்டதிலோ விலகியிருக்க வேண்டும்.. மூடி விலகி மேசையெங்கும் தண்ணீர். கிடுகிடுவென ஓடி ஜீன்ஸ் ராணியின் உடையில் அருவி போல் சரிந்தது. பாட்டி அவசரமாக பாட்டிலை எடுத்து நிறுத்தினாலும் ஜீன்ஸ் நனைந்து விட்டது.

கண்ணயர நினைத்த ஜீன்ஸ் ராணி கோபமாகப் பார்த்தார். "ஒரு பத்து நிமிஷம் தூங்க விடறியா நீ?" என்று இரைந்தார். அதற்குப் பிறகு ரகு கற்பனை செய்து பார்த்திராத சாதனையை நிகழ்த்திக் காட்டினார் அல்லி ராணி.

சிறுவனைப் பிடித்து பட்டென்று கன்னத்தில் ஒரு அறை, தோளில் ஒரு அறை விட்டார். "என்ன விஷமம். ஒரு அளவில்லே? எப்பப் பாத்தாலும் ரகளை" என்று இன்னொரு தட்டு தட்டினார். ஜீன்ஸ் ராணி தமிழில் பேசியதை ரகு கவனிக்கத் தவறவில்லை. "ஆகா! இத்தனை அழகாகத் தமிழ் பேசுகிறவரைச் சந்தேகப்பட்டோமே' என்று வருந்தினான்.

விசும்பிக் கொண்டிருந்த சிறுவனை இழுத்த ஜீன்ஸ் ராணி, "பின்னே என்ன? சொன்னாக் கேட்டா தானே? இங்க வா, படுத்துக்க.. அம்மா தூங்க வேண்டாமா? தூங்கறியா இல்லின்னா இன்னும் ரெண்டு அறை கிடைக்கும்" என்று அணைத்துக் கொண்டார்.

பெட்டியில் சட்டென்று அமைதி. அங்கங்கே சுவிச் அணைத்தாற்போல் ஓசைகள் அடங்கின. "உனக்கும் ரெண்டு போடவா?" என்று அங்கங்கே குரல்கள். எட்டிப் பார்த்த ஒன்றிரண்டு குட்டி அரக்கர்கள் அடங்கினர்.

ரகு ஜீன்ஸ் ராணியைப் பெருமிதத்துடன் பார்த்தான். 'ஆகா! வாட் எ லீடர்?! குழந்தையை ரெண்டு தட்டு தட்டத் துணிந்த சக்தியின் அவதாரம் இல்லையோ இவர்? உலகில் அமைதியை நிலை நாட்டப் பிறந்தவரல்லவோ இந்த ஜீன்ஸி ராணி?' என்று மனதுள் ஆராதித்தான்.

தூங்க முயற்சித்தான்.

2015/06/05

வெத்துவேலை



    ள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறைக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அடுத்த வாரம் முதல் அந்தந்த மாநிலத்தைப் பொறுத்து எட்டிலிருந்து பத்து வாரங்களுக்கு நடை சாத்திடுவார்கள் அறிவுக் கோவில்களில்.

பக்கத்து ஊர் அரோரா உயர் நிலைப்பள்ளிப் பாதுகாப்பு அதிகாரி (பள்ளிக்கூடத்துக்காக ஒதுக்கப்பட்ட உள்ளூர் போலீஸ்) நேற்று தன் வருடாந்திர அறிக்கையில் தெரிவித்த செய்திகளில் இரண்டு என் சிற்றறிவைக் கவர்ந்தன.
  ✹ வடக்கு அரோரா உயர்நிலைப் பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் இதுவரை 44 துப்பாக்கி சூடுகள் நடந்திருக்கின்றன. வருட முடிவுக்குள் இதை ஐம்பதுக்குள் கொண்டுவர அத்தனை முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
  ✹ சென்ற கல்வியாண்டில் 19 துப்பாக்கி சூடுகள்.. இந்த வருடம் 44ஆக முன்னேறியிருக்கிறது. ஹைஸ்கூல் பிள்ளைகள் ரௌடிகளாக அங்கீகாரம் பெற வேண்டித் தேவையற்ற துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதும், பெற்ற்றோர்கள் பிள்ளைகளுடன் முறையாகப் பேசி வளர்க்காததும் இரு பெருங்காரணங்களாகும்.

அலோ அல்லல்லோ அதிகாரி அய்யா! வருட முடிவுக்குள் துப்பாக்கிச் சூடுகளை ஐம்பதுக்குள் கொண்டு வர முயற்சி செய்யறீங்களா? ஏன் 44 பத்தாதா? ஒரு பொறுப்புள்ள அதிகாரியா இருந்துகிட்டு அறிக்கை விடுறதுனா இப்படியா? அடுத்த ரெண்டு வாரத்துக்குள்ளாற ஆறு துப்பாக்கி சூடுங்க எங்கே நடக்கப் போவுதோனு பொதுமக்கள் பயப்பட மாட்டாங்களா? என்னய்யா அதிகாரி நீ? ஹைஸ்கூல் பிள்ளைகள் தேவையற்றத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடறாங்களா? அப்ப.. தேவையுள்ள துப்பாக்கிச் சூடு பள்ளிக்கூடத்துல இருக்குதுன்றே? இரண்டாவதா ஒரு முத்து உதிஞ்சுச்சே? என்னாது? 19லிருந்து.. 44ஆக.. முன்..னேறியிருக்கிறதா? அய்யா, அறிவுக்கொழுந்தே, பாதுகாப்புத் திலகமே, இதுவாய்யா முன்னேற்றம்? ஏலே, ஞானப்பேனே.. என்ன சொல்றோம்னு தெரியாம நீயெல்லாம் எதுக்கய்யா அதிகாரியாவணும்? அதிகாரியாகி அறிக்கை விடணும்? அறிக்கை விட்டு எங்களை வாட்டணும்? கடைசியிலே இன்னொரு குண்டைப் போடுறீங்களே அய்யா? ரௌடிகளாக அங்கீகாரம் பெற விரும்பும் பதின்மர்களைப் பள்ளிக்கூடத்தில் வைக்க என்ன புடலங்காய் முயற்சி செய்கிறீர்கள் அய்யா? இவர்கள் பிள்ளைகள் அய்யா. இன்னும் பதினாறு வயதுகூட நிரம்பாத பிள்ளைகள்! பெற்றோர்கள் பிள்ளைகளுடன் முறையாகப் பேசி வளர்க்கவில்லையா? ஏன்யா.. பின் தங்கிய ஊர்ல ஏதோ கூலி வேலை பாத்துகிட்டு.. தான் படிக்கலே தன் பசங்களாவது நல்லாயிருக்கட்டும்னு பசங்களை பள்ளிகூடத்துக்குத் தினம் அனுப்புறதே வடக்கு அரோரா பெற்றோர்களுக்குக் கஷ்டமா இருக்குறப்ப... பள்ளிக்கூட பாதுகாப்பு அதிகாரியா பதவியிலே உக்காந்துகிட்டு நீ என்னய்யா ஆணியடிச்சுட்டிருக்கே? பசங்களுக்கு ஒரு முன்னோடியா உதாரணமா முனைப்பு தர வேணாமா? ஆசிரியர்களை வச்சுகிட்டு ஒரு சின்ன சைஸ் சமூகப் புரட்சி செய்ய வேணாமா? அட, புரட்சி வேணாம் ஒரு பாதுகாப்பாவது தர வேணாமா? அலோ.. உன் ஜாப் டைட்டில் பாரு நைனா. இன்னா செக்யூரிடி கொடுத்துக் கியிக்கிறே நீ? உம்ம தலையைச் சுத்தி கருப்பா இருக்குறது முடினு நெனச்சேன்.. எப்பேற்பட்ட ஞான இருளய்யா உமக்கு!

இப்படியெல்லாம் கூவத் தோன்றினாலும், யாரும் எதுவும் சொல்லவில்லை. ஊர் மக்களுக்குக் கூவ நேரமில்லை. கூவக்கூடினால் வால் மார்ட்டிலோ மெக்டானல்ட்ஸிலோ கிடைத்த அடிமட்ட மணிக்கூலி வேலையும் போய்விடுமே?

அடுத்த ஆறு துப்பாக்கிச் சூடுகளில் தன் பிள்ளைகள் குறுக்கே வராமல் இருக்கட்டும் என்று எல்லாமறிந்த மேய்ப்பனிடம் மனமுருக முறையிட்டு, ஈடாக வரும் ஞாயிறன்று திருச்சபை உண்டியலில் ஒரு டாலர் காணிக்கையிடத் தீர்மானித்தனர் மெக்சிகோவிலிருந்து பிழைப்புக்காக வந்து அல்லல்படும் மரியாக்களும் பெர்த்தாக்களும்.

    'முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை தரக்கூடாது, பறித்துவிட வேண்டும்' என்று ஒரு இந்திய மத்திய அமைச்சர் சொல்லியிருப்பதாக டிவி செய்திகளில் பார்த்தேன். அதிர்ந்தேன். மோடியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களுக்கு இதுவும் வேண்டும். அவர் பொறுப்பில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. அவர் அறியாது வெளிவந்த செய்தியென்றால் உடனே அப்படிப் பேசியவரை பதவியிலிருந்து நீக்கியோ பொதுவாக அறிக்கை விட்டோ மறுத்திருக்க வேண்டும். செய்தாரா தெரியவில்லை. மாறாக இதைப்பற்றி அர்னாப் கூ(ச்சல்)ஸ்வாமிகள் பொதுமக்கள் காது கிழிய கத்திக் கொண்டிருப்பதே மிச்சம் (பிறகு வருகிறேன்).

ஒரு பக்கம் மோடியின் உலகப்பயண செலவுக்கான அலசல். இன்னொரு பக்கம் ராகுல் காந்தி ஏன் காணாமல் போனார் என்ற புலம்பல் (நிஜமாவேவா?). இன்னொரு பக்கம் அஷ்டலக்ஷ்மிகளின் அவதாரமான அம்மாவைப் பற்றிய அலசல். மோடி ஆட்சிக்கு வருகிறேன். இந்தியாவின் secular அரசியல் சட்ட அமைப்பு இந்த அளவுக்கு எப்போதேனும் அசைக்கப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. எத்தனையோ இனக் கலவரங்களைப் பார்த்திருந்தாலும் தொடர்ந்து வரும் செய்திகளின் பின்னே ஏதோ ஒரு ஒழுங்கும் திட்டமும் இல்லாதிருக்குமோ என்ற கேள்வியும் அச்சமும் தோன்றவே செய்கின்றன. இந்துவாக மதம் மாறினால் லட்சக்கணக்கில் ரூபாய் கிடைக்கும் என்று ஒரு அறிக்கை வந்ததாக அல்லல்பட்டது.

அரசியலில் மதம் கலக்கலாம். மதத்தில் அரசியல் கலக்கலாம். இரண்டையும் ஒன்றாக்கினால் அடுத்த தேர்தலில் காவி காலி.

"மோடி என்ன சாதித்திருக்கிறார்?" என்று பழைய பம்மல் நண்பர் ஒருவரிடம் கேட்ட போது "செல்போன்ல் கேக்குறதோட நிறுத்திக்க. ப்லாக்ல எல்லாம் எழுதிடாத. உள்ளே தள்ளிடப் போறாங்க' என்றார். "66A" என்றேன் பதிலுக்கு. "தாம்பரம்-பூந்தமல்லி" என்றார். "இல்லே" என்றேன். "தாம்பரம்-குன்றத்தூர்?" என்றார். "இது வேறே" என்றேன். "நீ திமிர் பிடிச்சவன்டா" என்றார்.

இந்தியா வந்த ஒபாமா செய்தியின் பின்னணி இப்போது எனக்கும் புரியத் தொடங்கியிருக்கிறது. ஒபாமாவை மோடி நிறைய காபி அடிக்கிறார் என்கிறார்கள். பாவம் பாரதம்.

    அர்னாப் ஸவுன்ட்ப்லேஸ்டர்ஸ்வாமி தன் சிறு வயதில் இரண்டு ஒலிக்கூட்டிகளை விழுங்கியிருக்க வாய்ப்பு இருக்கிறது. இரும்புச்சத்து குறை என்பதைத் தவறாக எடுத்துக்கொண்டிருக்கலாம். இவருடைய குரலின் அளவுக்கு முகத்தின் மேற்பகுதியில் ஏதாவது இருந்தால் சரிதான். 'இவர் செல்போன் இல்லாமலே லாங்க் டிஸ்டென்ஸ் பேசலாம்' 'இவர் குரலிலிருந்து எலக்டிரிசிடி டிரா பண்ணமுடியும்னு நினைக்கிறேன்' 'இவர் ப்ரோக்ரேம் டேப்பிங் பார்க்க ஸ்டூடியோவுக்கு வந்தவங்கள்ள தினம் பத்து பேராவது செவிடாயிருப்பாங்க' 'ஒரு வேளை இந்த ஆள் பரம செவிடோ?' என்று வரிசையாக அடுக்கிவிட்டு, 'இவர் வீட்டில் எப்படிப் பேசுவார்?' என்ற என் மகனின் கேள்வி சுவாரசியமாகப் பட்டது. அர்னாப் டெசிபல்க்ரேக்கர் வீட்டில் உரையாடல்கள் எப்படி இருக்கும்? எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். அவர் பாடு, அவர் பக்கத்துவீட்டுக்காரர் பாடு. என்றாலும் இவர் அழைப்புக்கு இசைந்து தொலைக்காட்சியில் இப்படி காட்டுக்கூச்சலைக் கேட்டு அனுபவிக்க வேண்டும் என்பது விதியா? பேட்டியில் கலந்து கொள்கிறவர்களுக்கு ஒரு கவுரவம் வேண்டாமா?

    சூப்பர் சிங்கர் தொல்லையை எப்படித்தான் மக்கள் பொறுக்கிறார்களோ தெரியவில்லை. சமீபத்தில் பார்த்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஆபாச வரம்புகளை அவ்வப்போது கடந்ததாகத் தோன்றியது. அடுத்து சூப்பர் சிங்கர் toddler, சூப்பர் சிங்கர் baby, சூப்பர் சிங்கர் just born, சூப்பர் சிங்கர் ..சரி.. தொடர்ந்து வரிசையாக வாராதிருக்க வேண்டும் என்று சொல்ல வந்தேன். வயலும் வாழ்வும் காலத்தில் வளர்ந்த எனக்கு இதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய டிவியா!

    'தமிழ் வாழ்க, தமிழினம் ஓங்குக' என்று கூவத்தோன்றியது இன்னொரு நிகழ்ச்சியில். 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' பாடலை ஒலிக்கவிட்டு 'யார் எழுதியது?' என்ற கேள்விக்கு, 'ஜேசுதாஸ்' என்று பதிலளித்தார் ஒரு மாணவர்(?). 'மறைமலையடிகள் யார்?' என்ற கேள்விக்கு 'திருவண்ணாமலைல இருந்தார்னு தெரியும், பேரு சட்னு ஞாபகம் வரலே' என்றார் ஒருவர். 'தொல்காப்பியம்' எழுதியவர் யார் என்பதற்கு, 'இளங்கோவடிகள்' என்றார் ஒருவர். 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' பாடலை ஒலிக்க விட்டு 'யார் எழுதியது?' என்ற கேள்விக்கு, உற்சாகமாகப் பித்தானழுத்தி 'கலைஞர் கருணாநிதி' என்றார் ஒரு பெண்மணி. பாரதியாரின் இயற்பெயர் தெரியாமல் விழித்தார் ஒருவர்.

நிகழ்ச்சியை விமரிசிக்கையில் உடனிருந்த நண்பர் (பெர்சு) "சரி.. இவ்வளவு சொல்றியே, சுப்பிரமணியன் எங்கே எப்போ எப்படி பாரதி ஆனார்னு தெரியுமோ?" என்று என்னைக் கேட்டார். நான் கொஞ்சம் விழித்துப் பின் சுதாரித்து, "என்னது? எங்கிட்ட.. எங்கிட்டயே கேள்வி கேக்கறீங்களா?" என்றேன் தருமி பாணியில். விவரத்தைச் சொல்லி, இந்த நிரலியையும் எனக்குக் காண்பித்துக் கொடுத்த பெர்சின் நல்ல மனம் வாழ்க.

    கமல் ஜோக்ஸ் சொல்லி மாதக்கணக்கிலாகிறது.

சமீபத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் நூறு கமல்கள் பரவலாக அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கையில் ஒரு கமல் மட்டும் கொஞ்சம் கூட அடிபடாமல் பிழைத்த அதிசயத்தை பஜய் டிவியில் பேட்டியாக ஒளிபரப்பினர். கெக்கெக்கே என்று சிரித்தபடி நிருபர் டிங்டிங் பேட்டி கண்டார்.
டிங்டிங்: ரயில் நிலையத்தில் என்ன நடந்துச்சு கமல்?
கமல்: அதுவா? மதுரையிலிருந்து வரும் பாண்டியன் எக்ஸ்ப்ரஸ் இரண்டாம் பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறதுனு ஒலிபெருக்கில சொன்னதும் ப்ளாட்பாரத்துல நின்னுகினு இருந்த அத்தினி கமலுங்களும் சடார்னு தண்டவாளத்துல குதிச்சுட்டாங்க..
டிங்டிங்: ஆச்சரியமா இருக்கே? நீங்க எப்படி பிழைச்சீங்க?
கமல்: அதுக்கு ஏன் இப்படிக் காட்டுப் பன்னி மாதிரி சிரிக்கிறீங்க? கேட்டா சொல்லிட்டு போறேன்..
டிங்டிங்: என் சிரிப்பே அப்படித்தான்.. எப்படி பிழைச்சீங்க சொல்லுங்க கமல்.
கமல்: நான் தற்கொலை செஞ்சுக்கலாம்னு தண்டவாளத்துல இருந்தனா.. ரயிலு ப்ளாட்பாரத்துல வருதுன்னதும் சடார்னு தாவிட்டேன்..

கொசுறுக்கு ஒரு பில் கேட்ஸ் ஜோக்கு (ஷ்! யாருக்கும் தெரியாமல் படிக்கவும்):
முதலிரவில் பில் கேட்ஸின் மனைவி: உங்க கம்பேனி பேரு தான் மைக்ரோசாப்ட்னு நினைச்சேன்..