2011/12/31

மெல்லிசை நினைவுகள்


    மிழ்ச் சினிமா காதல் டூயட்கள் பற்றி ஆகஸ்டு மாதம் சில பதிவுகள் எழுதியிருந்தேன். சென்ற ஐம்பது வருடங்களின் சிறந்த தமிழ்ச்சினிமா காதல் பாடல்கள் பற்றி உங்கள் தேர்வுகளையும் கேட்டிருந்தேன்.

நான் ரசிக்கும் காதல் டூயட்களில் #2 இடத்தில் இந்தப் பாடல் என்று எழுதி நிறுத்தியிருந்தேன்.

பின்னூட்டங்களில் கிடைத்த உங்கள் தேர்வுகளில் சிலவற்றைத் தொகுத்து ஒரு பதிவும் எழுதியிருந்தேன் (நன்றி :-).

நான் ரசிக்கும் #1 காதல் டூயட் பாடல் பற்றிய பதிவோடு இந்த வருடத்துக்கு விடைகொடுக்க விரும்புகிறேன்.

பாடல், இசை, குரல், நடிப்பு, அலங்காரம், படப்பிடிப்பு என்று பல கோணங்களிலும் ரசிக்கக் கூடிய பாடல்களில் இது #1. ரசமான காதல் பாடலாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த ஒரு பாடலுக்காக மட்டும் கண்ணதாசனை அழைத்தார்களாம். காலத்தால் அழியாதக் காதல் மெல்லிசைக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தியை விட்டால் ஆளே இல்லை. சொக்கவைக்கும் காதல் டூயட்களுக்கு குரல் கொடுக்க, டிஎம்எஸ்-சுசீலாவை விட்டால் ஆளில்லை. தொடர்ந்து ரசிக்க முடிகிற காதல் ஜோடிகளுக்கு எம்ஜிஆர்-ஜெயலலிதாவை விட்டாலும் ஆளில்லை.

துள்ளும் இசை. பாடல் முழுதும் இழையூடும் spanish பாணி lilting guitar riff, மோக முத்தம் போலவே சிலிர்க்க வைக்கிறது. இந்தப் பாடலில், எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் ஆக்கிரமிப்பு திரையைவிட்டு மனதில் குடியேறிவிடுகிறது.

இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டு ரசித்திருக்கிறேன் என்பதற்கு கணக்கே இல்லை. விடியோ வசதி கிடைத்ததும் எத்தனை முறை பார்த்து ரசித்திருக்கிறேன் என்பதற்கும். ஒவ்வொரு முறையும் ரசிப்பதற்குப் படப்பிடிப்பில் புதிதாக ஏதாவது தென்படுகிறது. இந்த முறை ஜெ தலையில் பதிந்திருக்கும் குட்டிக் குட்டி ரோஜாக்களை ரசிப்பதற்காகவே தொடர்ந்து மூன்று முறை பார்த்தேன் :).

ஒரு சிறப்பான ஆக்கத்தின் பின்னணியில் இருக்கும் கூட்டுழைப்பு, இந்தப் பாடலில் வெளிப்படுகிறது. சென்ற ஐம்பது வருடங்களின் சிறந்த தமிழ்ச்சினிமா காதல் டூயட்டுக்கான என்னுடைய தேர்வு இந்தப் பாடல்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சினிமா-13 | 2012/12/31 | #1 தமிழ்ச்சினிமா காதல் பாட்டு


2011/12/29

ஸ்மரண யாத்ரை

(பெரிய) சிறுகதை


1 2 3 4 ◀◀ பூர்வத்துலே..

    "அந்தக் கமண்டலத்தை கீழே வைங்கோளேன்.. ரொம்ப நேரமா பிடிச்சிண்டிருக்கேள். கை வலிக்கப் போறது"ங்கறான் விஸ்வகர்மா. அவனோட பயம் அவனுக்கு.

"ஹ"ன்னார் கௌதமர்.

"என்னையும் மன்னிச்சிடுங்கோ"னு சாஷ்டாங்கமா கௌதமர் காலிலே விழுந்தா, தாழ்வார அகல்யா.

"அகல்யா மாதிரியே இருக்கே... நீ யாரா இருந்தாலும் தீர்க்கசுமங்கலியா இரும்மா"னுடறார் கௌதமர்.

இதான் சான்சுனுட்டு அவளும் எழுந்துண்டு, ""நான் ஸிந்து. இவரோட பார்யாள்"னுட்டு விஸ்வகர்மாவைக் காண்பிக்கிறா. "உங்க ஆசீர்வாதத்தை மறந்துடாதீங்கோ"னு கௌதமர் கிட்டே சொல்றா.

குழம்பிக் கிடந்த கௌதமருக்கு ஆத்திரமும் அவமானமும் சேர்ந்து இன்னும் பாடா படுத்தறது. விஸ்வகர்மாவையே பாத்துண்டிருக்கார்.

"பூலோகத்துல யாரோட ரூபத்தை எடுத்துக்கறதுன்னு நெனச்சப்போ... இருக்கறவாளிலே ஆதர்ச தம்பதிகளாப் பாத்து அவா ரூபத்தை எடுத்துக்கலாம்னு தோணித்து.. அப்படி யாராவது உண்டானு இவர் கிட்டே கேட்டேன்"னு சொல்றா ஸிந்து.

விஸ்வகர்மா சேந்துண்டான். "அதுக்கு நான் சொன்னேன்... அடி அசடே... நோக்குத் தெரியாதோ? கௌதம மகரிஷியையும் அகல்யாவையும் விட்டா ஆதர்ச தம்பதிகள், பூலோகமென்ன ஸப்த லோகத்லயும் கிடையாதே..?"

நன்னா ஐஸ் வைக்கறான். ஆமோதிக்கற மாதிரி ஸிந்து தலையை நாலு தடவை ஆட்டறா. மருமகள் தன்னைத்தான் கிண்டல் பண்றாளோனு பிரம்மாவுக்கு தோண்றது.. இருந்தாலும் கவனிச்சுக் கேக்கறார். விஸ்வகர்மா தொடர்ந்து சொல்றான். "மகரிஷி.. உங்களையும் அகல்யாவையும் பார்க்க ஸ்மரண யாத்ரை பண்ணி வந்தோம். குடிலுக்குள்ளே பாத்தா யாருமில்லே. அகல்யா கொட்டில்லே கோபூஜை பண்ணிண்டிருந்ததைப் பார்த்தோம். குடில் நிசப்தமா ஆளில்லாம இருந்துது. உங்க பாதம் பட்ட புண்ய பூமியா என்னனு தெரியலை, எங்களுக்கு உடனே உங்களை மாதிரி ரூபமெடுக்கணும்னு தோணித்து.."

"எல்லாம் உங்க மேலே இருந்த அதீத மரியாதையினாலே.. மன்னிச்சுடுங்கோ"னு முடிக்கறா ஸிந்து. "ஹிஹி"ங்கறான் விஸ்வகர்மா. மனசுக்குள்ளே அகல்யா சொல்லிக்கொடுத்த வசனம் எல்லாத்தையும் சரியாச் சொன்னோமான்னு கணக்கு போடறான். கௌதமர் கொஞ்சம் இறங்கின மாதிரித் தோண்றது அவனுக்கு.

'அவசரப்பட்டு சாபத்தை ஆரமிச்சுட்டோமே, முன்கோபத்தை காண்பிச்சுட்டோமே!'னு இருக்கு கௌதமருக்கு. முணுக் முணுக்னு கோவம் வந்தா இப்படித்தான். கண்மண் தெரியாமக் கோபம்னு சொல்வாளே, அது இது தான். என்ன பாக்கறோம் என்ன கேக்கறோம் என்ன செய்யறோம்னு யோசிக்காம, புரிஞ்சுக்காம கோபம் வந்துடுத்துன்னு வைங்கோ, அப்புறம் ரொம்ப சங்கடம் தான். 'கண்ணால் காண்பதும் பொய்'னு புலவர் சொல்லலியோ? 'அது கௌதமருக்கு எப்படிய்யா தெரிஞ்சிருக்கும்?'னு கேக்கறார் ஜிஎம்பி சார். வாஸ்தவம். விடுங்கோ.

முன்கோபத்தினாலே சகலத்தையும் கோட்டை விட்டுட்டோம்னு புரிஞ்சுண்ட கௌதமர், "ஸ்மரண யாத்ரை எந்த்ரமா? என்னய்யா கதை விடறே?"னு ஹீனமாக் கேக்கறார்.

"தோ பாருங்கோ"னுட்டு விஸ்வகர்மா அடுக்களையோரமா இருந்த குண்டத்தைக் காண்பிக்கறான். எடுத்துண்டு வரான். தப்பிச்சது யாரோட புண்யமோனு அவன் மனசு அடிச்சுக்கறது. சட்னு அதுல இறங்கி ஓடிப்போய்டலாமானு தோண்றது. ஆனா வித்வான் பாருங்கோ. வித்வான்களுக்கே உண்டான வித்யாகர்வம் அவனுக்கும் உண்டு. தன்னோட உன்னதமான எந்த்ரத்தை கதைனு சொல்றாரே கிழவர்னு நெனச்சுக்கறான். "கதையில்லை மகரிஷி. வாஸ்தவம்"னுட்டு குண்டத்துல இறங்கி வேறே வேறே ரூபத்துல குடில் முழுக்க ஸ்மரண யாத்ரை பண்ணிக் காட்டறான். அப்புறம் சுயரூபத்துக்கு வந்து, "உங்க பேர்ல இருந்த அலாதி பக்தியிலே.. ஒரு மோகத்துல அப்படி நடந்துண்டோம்.. மன்னிச்சுடுங்கோ"னு மறுபடி கெஞ்சறான். அவனுக்குத் தெரியும் சாபம் கொடுக்க கௌதமருக்குப் பவரில்லேனு.. இந்த்ரன் மேலே சாபம் கொடுக்க ஆரம்பிச்சாச்சே? சாப சக்தி எல்லாம் இன்னொத்தருக்கு நான்-ட்ரேன்ஸ்பரபில் இல்லியோ? அதனால கொஞ்சம் மூச்சு வந்தாலும், எதுக்கும் இருக்கட்டுமேனு மன்னிப்பு மேலே மன்னிப்பா கேட்டு வைக்கறான். விட்டா போறும்னு இருக்கு அவனுக்கு உள்ளுக்குள்ளே. அகல்யா முன்னாடி இந்த்ரன் வேஷம் போட்டதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு நெனச்சுக்கறான்.

அசல் அகலிகை கௌதமர் காலில் விழறா. "முனி ஸ்ரேஷ்டரே. உங்க தவபலனைக் கட்டுப்படுத்தறதுக்கு என்னை பிரம்மா இங்கே அனுப்பிச்சார். இங்கே வரதுக்கு முன்னாலயே இந்த்ரன் மேலே எனக்குத் தீராத காதல். உங்க நிழல்லே இருக்குற வரைக்கும் உங்க தர்மத்துக்கும் மானத்துக்கும் புறம்பா நான் ஒரு நாளும் நடக்கலே. உங்க தபோபலனை கட்டுப்படுத்துற நேரம் வந்தாச்சுங்கறதினாலே இப்போ இதெல்லாம் நடக்கறது. இனிமே நான் உங்க பத்னியா மனுஷ்ய ரூபத்துலே இருக்க முடியாது. எனக்கு தேவரூபத்துல என் வழியில போறதுக்கு அனுமதி குடுங்கோ"னு கேக்கறா.

பிரம்மாவும் "இதுக்கெல்லாம் காரணம் நான்தான். உங்களோட முன் கோபத்தைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். உங்க தபோபலன் அதீதமாகி எங்கே இந்த்ரபதவிக்குப் பங்கம் வந்துடுமோனு முன் ஜாக்ரதையா நடந்துக்க வேண்டியதா போச்சு. அதனால அகல்யாவை உண்டாக்கி... இதெல்லாம் என்னோட நாடகம்னாலும் இது என் தொழில் தர்மம். மன்னிச்சுருங்கோ"னு சொல்றார்.

கௌதமருக்கு நன்னா ஏமாந்துட்டோம்னு கடுப்பா இருக்கு. "இந்த எந்த்ரத்தை வச்சுத்தானே நீங்களெல்லாம் என்னை ஏமாத்தினேள்? இனிமே இந்த எந்த்ரம் தேவாளுக்குப் பயன்படாம போகட்டும்"னு சொல்லிடறார். அகல்யை தேவலோகத்துக்குப் போறதைப் பத்தியெல்லாம் அவர் கவலைப்படலே. முன்கோபத்துலே எல்லாத்தையும் இழந்துட்டோமேனு மட்டுமே அவருக்கு வருத்தம். 'சே!'னு ஆயிடுத்து. "இருந்தாலும் இந்த சாபத்தை நான் கொடுத்தே ஆகணும்.. இப்ப என்ன பண்றது?"னு கேக்கறார் பிரம்மா கிட்டே.

"நீங்க இந்த்ரனை கர்த்தாவாக்கி சாபம் கொடுக்க ஆரம்பிச்சதுனாலே, இந்த்ரன் தான் இதுக்கு ஒரு முடிவு சொல்லணும். அவனுக்குத் தான் சாபவலயத்துக்கு உரிமையிருக்கு"னு சொல்றார் பிரம்மா. இந்த்ரனைப் பார்த்து சாபவலய, அதாவது சாபத்தை திசை திருப்ப, யோசனை உண்டானு கேக்கறார்.

இந்த்ரனுக்கு உள்ளுக்குள்ள ஒரு சின்ன பயம் இருந்ததை இப்போ சொல்லியே ஆகணும். விஸ்வகர்மா மாதிரி ஆட்கள் சட்னு தன்னைப் போல வேஷம் போட்டு எல்லாரையும் ஏமாத்த முடியறதுன்னா, இந்த எந்த்ரத்துனாலே ஆபத்து வரத்தான் செய்யும்னு நெனச்சுக்கறான். இதல்லவோ வெபன் ஆப் மாஸ் டிஸ்ட்ரக்ஷன்னுட்டு ஒரு காரியம் பண்ணினான். பொதுவாவே வெபன் ஆப் மாஸ்டிஸ்ட்ரக்ஷன்னு சொல்றவா எல்லாருமே அவசரப்படறா.. அரைலூசா இருக்கா.. ஏன்னு தெரியலே. பாருங்கோ, அமெரிகாவிலே புஷ்ஷு பண்ணின கார்யம்.. சும்மாவானும் ஈராக்கோட ஒரு யுத்தத்தை உண்டுபண்ணி.. தேவையா சொல்லுங்கோ. நம்ம ஊர் கூடங்குளக் கதையாட்டம். பிரச்னை என்னனு நன்னா தெரிஞ்சுண்டு அதுக்கேத்த மாதிரி ஒரு உபாயத்தை.. சித்தியை செஞ்சு முடிக்க வேண்டாமோ? கூடங்குளத்தை இழுத்து மூடுனு சொல்றது கண்மூடித்தனம் இல்லையோ? இந்த்ரனுக்கும் அந்த மாதிரி ஒரு மைன்ட்லெஸ் இன்செக்யூரிடினு வைங்கோ. எந்த்ரத்தையே ஒழிச்சுடணும்னு நெனச்சான்.

கௌதமர் கிட்டே, "மகரிஷி.. உங்க சாபசக்தியை இந்த எந்த்ரத்து மேலே காண்பிச்சுடுங்கோ"னு சொல்லிடறான். கௌதமரும் எத்தனை நாழி கமண்டலத்தைக் கையிலயே பிடிச்சுண்டிருப்பார்? சரியாப் போச்சுனுட்டு சாபசக்தியை இந்த்ரன் கிட்டேயிருந்து திசை திருப்பி எந்த்ரத்து மேலே காண்பிச்சார். கமண்டலத்துலேந்து நாலு சொட்டு தண்ணியைத் தெளிச்சு "கல்லாப் போ!"னு சாபம் கொடுத்தார்.

சாபசக்தியை உள்வாங்கின எந்த்ரம் உருமாறிடுத்து. எந்திரம் இருந்த இடத்துலே குட்டியானை சைசுலே இப்போ ஒரு பெரிய பாறாங்கல் இருக்கு. விஸ்வகர்மாவுக்கு அழுகை தாங்கலை. தன்னோட மாஸ்டர்பீஸ் வேஸ்டாயிடுத்தேனுட்டு வேதனை. எப்பேற்பட்ட எந்திரம் இப்படி காதலுக்காக அடிபட்டு உருத்தெரியாமப் போயிடுத்தேனு புலம்பறான்.

கௌதமருக்கே பாவமாயிடுத்து. என்ன பண்றதுன்னு தெரியலை. "பிற்காலத்துலே ஜனங்கள் எல்லாம் என்னை முட்டாள்னு சொல்வாளே?"னு அவரும் புலம்ப ஆரம்பிச்சார்,

அப்போ பிரம்மா சொல்றார். இங்லிஷ்லே ஸ்பின் டாக்டர்ம்பா பிரம்மா மாதிரி ஆட்களை. ஏதாவது சேதி கட்டி ஏமாத்தற வித்தை தெரிஞ்சவா. "மகரிஷி. ஜனங்களைப் பத்திக் கொஞ்சம் கூட கவலைப்படாதீங்கோ. நாம அதுக்கு ஏதாவது கதை கட்டி விடுவோம். பாருங்கோ, அகலிகை தான் இந்தக் கல்லா மாறினாள்னு சொல்லிக் கதைகட்டி விடுவோம். முட்டாள் ஜனங்க தானே.. எல்லாம் கண்மூடிகள்.. எதைச் சொன்னாலும் நம்பிடுவா.. பாருங்கோ இதுக்காக ஒரு விரதம் ஒரு பூஜைனு வேறே பண்ணுவா பாருங்கோ. இதுக்கப்புறம் உங்க முன்கோபமும் போயிடும் பாருங்கோ.. இது தான் உங்களுக்குப் பாடம்"னு சொல்றார். கௌதமருக்குத் த்ருப்தியா இருக்கு.

விஸ்வகர்மா இன்னும் புலம்பிண்டிருக்கான். பிரம்மா அவன் கிட்டே போறார். "குழந்தே.. போனாப் போறது விடு. புத்திசாலிப் பெண்கள் கிட்டே நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும். இதான் உனக்குப் பாடம். இதே மாதிரி இன்னொண்ணு செஞ்சுக்கோ. விஷ்ணு கூட ஒண்ணு வேணும்னு ஆர்டர் கொடுக்கறதா சொன்னார்"னு ஏதோ சொல்லி அவனை சமாதானப் படுத்தறார். அவன் விசும்பிண்டே இருக்கான். பிரம்மா மேலும் சொல்றார். "மகனே விஸ்வகர்மா.. உனக்கு ஒரு வரம் தரேன். இந்த கல் ஒரு நாள் வெடிக்கும். கவலைப்படாதே. அதுக்குள்ளே இருக்கற ஸ்மரண யாத்ரை எந்த்ரம் வெளிவரும். இன்னொரு காதல் ஜோடியை சேர்த்து வைக்க உதவியா இருக்கும்"

"என்ன ஜோடி?"ங்கறான் விஸ்வகர்மா.

"அது ஒரு கதை. நடக்கபோற கதை. இப்ப சொல்ல முடியாது. அந்த ஜோடியை சேத்து வைக்க ஒருத்தர் கடல் தாண்ட வேண்டியிருக்கும், நெனச்ச நேரத்துல மூலிகை மலையைத் தேடிப் போக வேண்டியிருக்கும்.. அதுக்கெல்லாம் தோதுப்படும் இந்த எந்த்ரம். இந்த இடத்துக்கு அந்தக் கதையோட நாயகன் வந்ததும், இன்னொரு மகரிஷி அதை ரகஸ்யமா சொல்வார்"னு சொல்றார். தன்னோட எந்த்ரம் இன்னொரு காதல் ஜோடியைச் சேர்த்து வைக்கும்னு தெரிஞ்சுண்டு விஸ்வகர்மா அடங்கறான்.

"என்னை சித்தே தனியா இருக்க விடுங்கோ"ங்கறார் கௌதமர்.

இந்த்ரனும் அகல்யாவும் கை கோத்துண்டு கிளம்பிட்டா. பிரம்மாவும் ஐராவதத்துலே லிப்ட் கேட்டுண்டுக் கிளம்பிட்டார். "சீக்கிரம் கெளம்புங்கோ. கிழம் மனசை மாத்திக்கப் போறது"னு கிசுகிசுக்கறா ஸிந்து. விஸ்வகர்மாவும் கெளம்பறான். திரும்பத் திரும்பப் பாத்துண்டே போறான்.

மகோன்னதமான அவனோட எந்த்ரம் இருந்த இடத்துலே இப்போ ஒரு மகாப் பெரிய கல் இருக்கு.

    "இதான் நடந்த கதை"னு சொல்லிட்டு என்னைப் பார்த்தார் மாமா.

'ஆ!'னு வாயப் பொளந்துண்டிருந்தேன். ஆத்துக்காரியும் மாமியும் உள்ளே நன்னா தூங்கிண்டிருக்கா. கர்காரரவம் அதாவது குறட்டை சப்தம் திண்ணைல கேக்கறது. நடுஜாமத்துக்கு மேலே ஆயாச்சு. பக்கத்துல எங்கயோ சுவர்கோழி கத்தறது. ஆகாசத்துல நாலஞ்சு நட்சத்திரம் மினுக்கறது. ரொம்ப தூரத்துல தெருநாய் ஒண்ணு ஊளையிடறது. அதை விட்டா நிசப்தம்னா நிசப்தம்.

நேக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. "என்ன இப்படி.. ஒரேயடியா மாத்திட்டேளே? அகல்யாவை ஸ்மரணம் பண்ணினா பாவம் போகும்னில்லையா சொல்லியிருக்கு? எப்பேர்பட்ட பாவவிமோசன புண்யக் கதையை... ரஜினிகாந்த் சினிமா சயன்ஸ் பிக்சன் மாதிரி மாத்திட்டேளே?"னு கேட்டேன்.

"ஓய்! பாவபுண்யம் வினாசம் சம்ரக்ஷணம் எல்லாம் அவாவா இஷ்டத்துக்குக் கட்டினது ஓய். அகலிகையை தெனம் ஒரு தரம் நெனச்சுக்கோ பாவமெல்லாம் போயிடும்னு சொல்றது நமக்கே ஒருமாதிரியாப் படலியோ? அகலிகையை ஸ்மரணம் பண்ணிப் பாவம் போய்டும்னா தெனம் பாவம் பண்ணிண்டிருக்கலாம்னும் அர்த்தம் ஆறதே ஓய்? ஜனங்கள் கண்மூடிகளா இருக்கற வரைக்கும் இதையெல்லாம் நம்பிண்டிருப்பா"னு சொன்னார்.

நேக்கு விட்டுக் கொடுக்க மனசில்லை. "யுகக் கணக்கா ராமாயணம் பாராயணம் நடக்கறது. ராமபிரான் பாதம்பட்டு அகலிகை விமோசனம் அடைஞ்சதை பக்தியோடே லோகம் முழுக்கச் சொல்லிண்டிருக்கா. நீர் என்னமோ நேர்ல பார்த்த மாதிரியில்லே எந்த்ரம் மந்த்ரம்னு சொல்றீர்? யார் கண்மூடினு தெரியலியே?"னேன்.

"ஓய்! எல்லாம் தெரிஞ்சு தான் சொல்றேன். அனுமார் கடலைத் தாவினார் மலையைத் தாவினார்னு சொல்றேளே? அதெல்லாம் எப்படி நடந்ததுனு நெனக்கறேள்? ராம லக்ஷ்மணருக்கு அகல்யா கதையைச் சொன்ன விஸ்வாமித்ரர் ராமனைத் தனியா அழைச்சுண்டு போய் விவரமெல்லாம் சொன்னார். பையா ராமா.. இதையெல்லாம் ஞாபகம் வச்சுக்கோ. நாளைக்குத் தோதுப்படும்னு சொன்னார். ரகஸ்யத்தை ராமன் யாருக்கும் சொல்லலே. ஆஞ்சநேயருக்கு மட்டும் சொல்லிக் கொடுத்துடறான்.. ராம பட்டாபிஷேகம் முடிஞ்சதுக்கப்புறம், தன்னோட ரகஸ்யம் வேறே யாருக்கும் தெரியக் கூடாதுங்கறதுனால ஆஞ்சநேயர் எந்த்ரத்தை தலையை சுத்தி தூக்கி எறிஞ்சுட்டார்.."

விட்டா ராமாயணத்தையே மாத்திடுவார் போலத் தோணித்து. "நிறுத்தும் ஓய்!"னு கொஞ்சம் சத்தமா சொன்னேன். "சுவாரசியமா இருந்தாலும், நீர் சொல்றது எதுவுமே நம்பறதுக்கில்லே"னுட்டேன்.

சித்த யோசிச்சுட்டு, "எந்த்ரத்தைப் பாத்தா நம்புவீரோ?"னார் நாலு பக்கமும் பாத்துண்டே. "அனுமார் எறிஞ்ச எந்த்ரம் க்ருஷ்ணாபுரம் கோவில் பூமியில தான் விழுந்துது. இன்னும் அங்கயே தான் இருக்கு எந்த்ரம். வேணும்னா எங்கூட வாங்கோ. காட்டறேன்"னு சொன்னார். சட்னு எழுந்து போய் ஒரு டார்ச் லைட்டு எடுத்துண்டு வந்தார். "ஓய்.. வாரும் போலாம். விடிஞ்சா பஸ் பிடிச்சு ஊரைப்பார்க்கக் கெளமபிடுவீர். இனிமே இந்தப் பக்கம் வருவீரோ மாட்டீரோ.. இப்பவே போய்ப் பார்க்கலாம் வாரும். போய்ட்டு அரை மணியில திரும்பிடலாம். எங்கிட்டே சாவி இருக்கு"னார்.

என்னோட ரிஸ்ட்வாச்சிலே மணி ஒண்ணரை. "ஓய்! அர்த்தராத்ரி மணி ரெண்டாப்போறது.. இப்போ எதுக்கு?"னேன். வயத்துல புளியைக் கரைச்சு விட்டாப்ல இருக்கு. பேசாம இவர் சொன்னதை நம்பினதா சொல்லிடுவோமானு தோணித்து. இருந்தாலும் ஒரு விபரீத ஆசை. "சரி"ன்னுட்டேன்.

கோவிலுக்குப் பக்கத்துல தான் வீடுங்கறதாலே பத்து நிமிஷத்துக்கெல்லாம் கோவிலுக்குப் போயிட்டோம். வடக்கு வாசல்லே ஒரு சின்ன கதவு. இவர் பாட்டுக்குத் திறந்து உள்ளே போனார். என்னையும் வான்னார். பயந்துண்டே போனேன். வீரப்ப நாயக்க மண்டபத்தை தாண்டிப் போறச்சே யானைகளுக்கு உயிர் வந்தா மாதிரி தோணித்து. அவர் டாக்கு டாக்குனு நடக்கறார். இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திரும்பாமே நானும் அவர் பின்னாலே போனேன். புருஷமிருகம் தூண் கிட்டே வந்து நின்னார். நாலு பக்கமும் பார்த்தார். "ஈ காக்கா இல்லை ஓய்.. என்ன பாக்குறீர்?"னு சொன்னேன். சட்னு தரையில விழுந்து தூணும் தரையும் தொடற இடத்துலே தடவினார்.

தரை நகந்து கதவாட்டம் தொறக்கறது. பயத்துல நேக்கு மூச்சே நின்னுடும் போலருக்கு. இவரோ, "வாரும்"னுட்டு என்னை இழுக்கறார். கீழே இறங்கினேன். க்ருஷ்ணாபுரம் கோவில்லே சுரங்கம் இருக்குனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்பத்தான் மொதல் தடவையா பாக்கறேன். மாமா கதவைச் சாத்திட்டு என்னைக் கூட்டிண்டு நடக்கறார். டார்ச் லைட்டு வெளிச்சம் பயப்பிராந்தியை ஜாஸ்தி பண்ணித்தே ஒழிய குறைக்கலை. ஒரு நிமிஷமோ என்னமோ நடந்திருப்போம். "அதோ பாரும் ஓய்!"னு லைட் அடிச்சுக் காண்பிச்சார். சின்ன ஹோமகுண்டம் மாதிரி இருக்கு. சுத்திவர ஸ்படிகம் மாதிரி பளபளனு இருக்கு. "இதான் ஓய்.. ஸ்மரண யாத்ரை எந்த்ரம். சாக்ஷாத் விஸ்வகர்மா நிர்மாணம் பண்ணினது. அகல்யாவோட காதல் நிறைவேறவும் ராமாயணம் சுபமா முடியவும் காரணமானது"னு சொன்னார்.

"நேக்கு வேர்க்கறது ஓய்!"னேன். எதுக்கு சொன்னேன்னு தெரியலை. உளறினேன். அங்கேந்து போனாப் போறும்னு ஆயிடுத்து.

அவரோ விடமாட்டேங்கறார். "ஓய். இதுல இறங்கி ஏதாவது ரூபத்துல எங்கயாவது ஸ்மரண யாத்ரை பண்ணிட்டு வாரும். அப்பத்தான் நம்புவீர்"னு சொல்றார். "பயப்படாம இறங்கும்வே".

நேக்கு சப்தநாடியும் ஒடுங்கியாச்சு. "வேண்டாம் சுவாமி"னு அவரை கும்பிட்டேன். "உங்களை நம்பறேன். ஆத்துக்குப் போலாம் வாங்கோ"னு கெஞ்சினேன்.

"இல்லை ஓய். நீர் என்னை நம்பலைனு தெரியறது. சரி. நானே போய்க் காட்டறேன்"னு உள்ளே இறங்கினார். ரெண்டாவது நொடியிலே ஆளைக்காணோம்.

நடுக்கம்னா என்னன்னே அன்னிக்குத் தான் தெரிஞ்சுண்டேன். அர்த்த ராத்ரியிலே க்ருஷ்ணாபுரம் கோவில் சுரங்கத்துலே கூட இருந்த மனுஷரைக் காத்துலே பறி கொடுத்துட்டு.. நேக்கு எப்படி இருந்திருக்கும்னு நெனச்சுப் பாருங்கோ!

ரெண்டு நிமிஷம் கழிச்சு பிராமணர் குண்டத்துலேந்து ஏறி வந்தார். சர்வ சாதாரணமா "காஞ்சிபுரம் போய்ட்டு வந்தேன்"னார். அவர் கைல என்னவோ மினுக்கறது. என்னன்னு பாத்தா மூக்குத்தி மாதிரி இருக்கு. "வேணும்னா எடுத்துக்கும். ஞாபகார்த்தமா வச்சுக்கும் ஓய்!"னார். "வேண்டாம் சுவாமி. நேக்கு நம்பிக்கை வந்தாச்சு. கெளம்பலாம்"னேன். சிரிச்சுண்டே "சரி, வாரும்"னார்.

அன்னிக்கு ஆத்துக்கு வந்தும் தூக்கமே வரலை. ரெண்டு நாளைக்கு நடுக்கமே நிக்கலைனா பாத்துக்குங்கோ.

இதான் ஸ்மரண யாத்ரை ப்ரதாபம். கேட்ட அத்தனை பேருக்கும் நல்ல புத்தி கிடைக்கும். முன் கோபம் கொறையும். ஸ்த்ரீகள் மேலே மதிப்பு உண்டாகும். மழை பிடிக்கறதுக்கு முன்னாலே கெளம்புங்கோ. பொறுமையா கேட்டதுக்கு ரொம்ப சந்தோஷம். சித்தே இருங்கோ.. சிவகுமாரன் என்னமோ கேக்கறார்.

என்ன இப்படிக் கேட்டுட்டேள்? நான் பார்த்தது, "ஸ்மரண யாத்ரை எந்த்ரம்னு எப்படித் தெரியும்? மாமா எங்கயாவது சுரங்கத்துல ஒளிஞ்சுண்டிருக்கலாமே?"னு கேக்கறார். நன்னா நறுக்குனு கேட்டார். பாருங்கோ.. நான் அதுலே இறங்கிப் ப்ரயாணம் பண்ணினாலொழிய அனுபவபூர்வமா சொல்ல முடியாது தான். ஆனா, கண்ணால பார்த்ததோட நிக்காமே கொஞ்சம் தீர விசாரிச்சிருக்கேன். நம்பிக்கையா சொல்றேன், கேளுங்கோ.

கதையை ஆதியிலிருந்து கேட்டவாளுக்கு விருத்தாசலம் கோவில் பத்தி நியூஸ் ஐடம் சொன்னேனே ஞாபகமிருக்கோ? பக்கத்தாத்து மாமாவோட அநித்ய உத்யோகம் பத்தியும் அவா ஆத்துல சகல பாத்ரங்களும் வெள்ளினும் சொன்னேனே ஞாபகம் இருக்கோ? சாப்பாட்டுக்கு முந்தி மாமாவோட பேசிண்டிருக்கச்சே அவா குடும்பத்து போட்டோவையும், அவரோட அண்ணா தம்பி எல்லாருமே குருக்கள்னு குடும்ப விவரங்களைப் பேசினதையும் சொன்னேனே ஞாபகமிருக்கோ?

சித்தே பொறுமையா கேளுங்கோ. எல்லாத்துக்கும் முடிச்சு இருக்கு. விருத்தாசலம் குருக்கள் 'தான் ஊர்லயே இல்லை'னு கோர்ட்டுல சொன்னார்னு சொன்னேனில்லையா? பேப்பர்ல விருத்தாசலம் குருக்கள் போட்டோவைப் பாத்ததும் நேக்கே ரொம்ப ஷாக்காயிடுத்து. பாருங்கோ, மாமா காமிச்ச குடும்ப போட்டோவிலே அவரோட அண்ணா பாக்கறதுக்கு அசப்பிலே விருத்தாசலம் குருக்களாட்டமே இருந்தார். இப்போ எல்லாத்தையும் நீங்களே முடிச்சு போட்டுப் பாருங்கோ, புரியும்.

ஸ்மரண யாத்ரை சாத்யம். க்ருஷ்ணாபுரம் கோவில் சுரங்கத்துலே எந்த்ரம் இருக்கு. இது அசுவத்தாமன் வாக்கு. அசத்யம் இல்லாத வாக்கு. ப்ரசங்கம் சமாப்தம். போய்ட்டு வாங்கோ.



2011/12/28

ஸ்மரண யாத்ரை

(பெரிய) சிறுகதை


1 2 3 ◀◀ பூர்வத்துலே..

    பொதுவாவே தபஸ்விகள் எல்லாரும் ரொம்பவே நிதானத்தை அனுஷ்டிக்கறவா. மெதுக்குன்னோ சோம்பேறின்னோ சொல்லலாம், ஆனா பாருங்கோ நிதானம்ங்கறது காயிருப்பக் கனி கவர்ந்த மாதிரியோன்னோ, அதனாலே அப்டியே வச்சுப்போம்.

கௌதமர் பொதுவா நிதானமானப் பேர்வழினு சொல்லலாம். கார்த்தாலே நித்யகர்மாக்களைப் பண்ணி முடிக்கணும்னு நெனச்சுண்டு எழுந்துண்டவர், சித்தே நிதானமா இருக்கார். நமக்கெல்லாம் இந்த நாளிலே கண் முழிச்ச பத்து நிமிஷத்துக்குள்ளே காபி உள்ளே இறங்கலைன்னா எல்லாமே துவேஷமாயிடறது இல்லியோ? அதுவும் நல்ல டிகிரிக் காபியா வேண்டியிருக்கு நாக்குக்கு. செலபேர் காபி போடறேன்னுட்டு எதையோ போட்டுக் கொடுக்கறா. குத்தமில்லை. ஆனா, அந்த நாள்ல காபியாவது கீபியாவது? கிடையாதுன்னாலும், காச்சின பசும்பாலிலே மொத நாள் பொடிச்சு வச்ச சுக்கைக் கொஞ்சம் கலந்து உள்ளே தள்ளினாத்தான் அவாளுக்கும் இஞ்சின் ஓடித்து. அப்புறந்தான் மத்த ஆஜார அனுஷ்டானங்களோட நெனப்பே வந்துதாக்கும்.

ஒரு வகை ஆஜாரம் அகல்யைக்கு அப்புறந்தான் லோக அப்யாசத்துக்கு வந்துதுனு சொல்லுவா. அதாவது, ஸ்த்ரீகளுக்கு மாசா மாசம் ருது உண்டாறதும் தூரம் தீட்டு பாக்கறதும் அவாள்ளாம் இந்த்ரனோட பாவத்தை சுமக்கறதுனால வந்ததுனு, அகல்யை கதையை வச்சுப் புராணத்துல வந்ததா சொல்றா. அதெல்லாம் பொய்யாக்கும். இட்டுக்கட்டாக்கும். நம்ம பாவத்தை சுமக்கறதுக்கே நமக்கு ஒழியலை, இதுல இன்னொருத்தர் பாவத்தை வேறே சுமக்கணுமா? அக்ரமம் பாருங்கோ. தாய்மைங்கற ஒசந்த ஸ்தானத்தை, தெய்வங்களுக்கு மேலான ஸ்தானத்தை, ஸ்த்ரீகள் அடையறதுக்கு சாத்யமான இயற்கையான ஒரு அனுலோம கார்யத்தை, இந்த்ரனோட பாவம்னு சொல்றது அழிச்சாட்டியமில்லையோ? 'நாதியில்லாத பொம்னாட்டிகள் தானே, வாயை மூடிண்டிருப்பா'னு ஒரு குபுத்திலே சொன்னதாக்கும். அத்தனையும் வ்யாகுதி. புராணப் புருஷாளோடத் திமிராக்கும். அத்தனை லோகாதய சுகத்தையும் அதர்மத்தையும் அனுசரிச்சுட்டு, கடைசியிலே 'பெண் என்னும் மாயப் பேய்'னு அவாளைப் போட்டு மிதிச்சு த்வம்சம் பண்றது, அத்தனைப் புராணப் பண்டிதாளுக்கும் தொழிலா இருந்துது. கடவுளை கும்பிடறேன் பேர்வழின்னு வாய்ல வந்தபடி ஸ்த்ரீகளை பங்கப்படுத்தியிருக்கா. ஐயா.. உமக்கு கடவுள் ஞானம் வந்துதா? பலே, கும்பிட்டுக்கோ! வேண்டாங்கலே. என்னவோ பண்ணிக்கோ. ஏன் ஸ்த்ரீகளைப் போட்டு சாக்கடை சல்லடைனும் பிணினும் கன்னாபின்னானு சொல்லணும்? 'ஸ்த்ரீகள் கிட்டேயிருந்து என்னைக் காப்பாத்தினேடா சிவனே! வைகுந்தா!'னு இஷ்டத்துக்கு பாடுவானேன்? 'ஸ்த்ரீகள்டேயிருந்து என்னைக் காப்பாத்தினியே, மகாலக்ஷ்மி! பராசக்தி!'னு யாராவது பாடியிருக்காளா தெரியலை. கண்ணைக் குத்தியிருப்பா.

தான் என்கிற அகந்தையிலே புருஷ வம்சாவளி, என்னையும் சேத்து சொல்றேன், ஆயிரம் கோடி வர்ஷமா ஸ்த்ரீகளுக்கு மனசாலும் வாக்காலும் கார்யத்தாலும் செஞ்ச அபகாரங்களுக்கு இந்த அசுவத்தாமன் மன்னிப்பு கேட்டுக்கறேன். நல்ல வேளையா ஒரே ஒரு புலவராவது 'எங்கெங்கு காணினும் சக்தியடா'னு பாடினாரேனு த்ருப்தியா நெனச்சுக்கறேன். ஸ்த்ரீகளோட அசாத்ய சக்தியினாலே தான் அனித்யமான இந்த லோகவாழ்க்கைல நாங்கள்ளாம் ஏதோ ஒப்பேத்திட்டுப் போயிண்டிருக்கோம். இதை நான் ரொம்ப நன்றியோட சொல்றேனாக்கும். புருஷாளை மன்னிச்சுடுங்கோனு தண்டமா கேட்டுக்கறேன். நரகம்ங்கறது ஆம்ப்ளேளுக்கு மட்டும் தானாக்கும். கவலையே படாதீங்கோ. ஸ்த்ரீயாப் பொறந்தாலே அது ஸ்வர்க்கத்துக்கு ஒன் வே டிக்கட் வாங்கின மாதிரியாக்கும்.

என்னமோ சொல்ல வந்து எங்கயோ போயிட்டேன் பாருங்கோ. சித்தே இருங்கோ. ம்ம்ம்.. இந்தப் பொடிப் பழக்கத்தை விடமுடியலை.

அகல்யா உள்ளே வரதைப் பாத்துண்டிருந்த கௌதமர், "ஏது இவ்வளவு நேரமாச்சு உனக்கு?"னு கேட்டார். "இங்கே நான் எழுந்து எத்தனை நாழியாக் காத்துண்டிருக்கேன்?"

"என்னம்மா, நல்லாத் தூங்கினியா?"னு கேக்கலை. "காலங்கார்த்தாலே பச்சைத்தண்ணிலே ஸ்நானம் பண்ணிட்டு வந்திருக்கே. குளிர் ஜூரம் வந்துடப்போறது. சீக்கிரமா தலையைத் துவட்டிக்கோ. நான் வேணும்னா சாம்ப்ராணி புகைச்சுக் குடுக்கட்டுமா?"னு கேக்கலை. "சிரமபரிகாரம் ஏதாவது பண்ணிண்டியா?"னு கேக்கலை. "இத்தனை நாழியாக் காத்துண்டிருக்கேனே, தெரிய வேண்டாம்?"னு கேட்டார்.

கௌதமரைப் பிரமாதமா குத்தம் ஒண்ணும் சொல்லலை. புருஷாள் நாங்க எல்லாருமே அப்படித்தான். அம்மாவாகட்டும் அக்காவாகட்டும் ஆம்படையாளாகட்டும், அவா சிரமத்துல படுத்துண்டிருந்தாலும் சரி, "என்னை மொதல்ல கவனி.. என்னை மொதல்ல கவனி.. என்னை மொதல்ல கவனி.." இதைத்தான் பரம்பரை பரம்பரையா கௌதமர் காலத்லேந்து சொல்லிண்டிருக்கோம்னா பாருங்கோ. டிஎன்ஏலனா கலந்துடுத்து? லேசுல மாறுமோ? நாமதான் அப்படி.. ஸ்த்ரீகளாவது மாறுவாள்னா அங்கயும் டிங்கிரியானா இருக்கு? எல்லாத்தையும் பொறுத்துண்டு.. கோவில் மாடு மாதிரி தலையை தலையை ஆட்டிண்டு.. தன் மதிப்பைத் தானே கெடுத்துண்டு.. கண்றாவி போங்கோ.

"இதோ ஆச்சு.. மன்னிச்சுருங்கோ"னுட்டு உள்ளே ஓடறா அகல்யா. அவசரமா ஒரு விளக்கேத்திட்டு, கறந்து வச்சப் பாலைக் காய்ச்சரா. காஞ்ச சுக்கை ஒரு கை எடுத்து நன்னா பொடி பண்றா. அதை அப்படியே பாலில் கலக்கறா. பாலும் சுக்கும் சேந்து காயற வாசனை மூக்கைத் தொளைக்கறது. காயட்டும்னுட்டு அங்கேந்து நகந்து அன்னைய ஔபாசனத்துக்கு வேண்டிய சமித்து, பஞ்சபாத்திரம், சந்தனம், குங்குமம், மஞ்சளரிசி எல்லாம் எடுத்து வைக்கறா. அகல்யா குடுகுனு வேலை செய்றதைப் பாத்துட்டு ஒக்காந்துண்டிருந்த கௌதமர் கேட்டார். "என்ன நீ.. ரொம்ப உத்சாகமா இருக்கியே?"னுட்டு.

சில குடும்பத்துல பாத்திருக்கேன். பெண்டாட்டி சித்தே உற்சாகமா இருந்தா புருஷாளுக்குத் தாங்காது. "நான் இப்படி நோஞ்சு கிடக்குறப்போ நீ மட்டும் சந்தோஷமா இருக்கலாமா?"ங்கற மாதிரியா கேப்பா பாத்திருக்கேன். அதுமாதிரி இருக்கு கௌதமர் கேக்கறது. அகல்யாக்கு திக்குங்கறது. 'நம்ம மனசுல இருக்குற குதூகலம் ஒருவேளை மொகத்துலயும் கார்யத்லேயும் தெரியறதோ?'னுட்டு நெனச்சுக்கறா. பொங்க ஆரமிச்சப் பாலை எடுத்துக் கீழே வச்சுட்டு, "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே. ஒங்களுக்கு நேரமாறதேனுட்டு அவசரம் அதான்"னு சொல்றா.

"இருந்தாலும் இத்தனை சுறுசுறுப்பை இன்னிக்குத்தான் பாக்கறேன்"னு சொன்ன கௌதமர் சட்னு, "ஆமா, குடத்துல தண்ணி கொண்டு வருவியே.. எங்கே குடத்தைக் காணோம்? நான் முகம் அலம்பிக்கணுமே?"னு கேட்டார்.

அப்பத்தான் அகல்யாவுக்குத் திக்குனு ஆறது. அதாவது திக்குனு ஆன மாதிரி நடிக்கிறா. "அடடா! மறந்துட்டேன்"னு சொல்றப்பவே கௌதமர் குறுக்கே சொல்றார். "மறந்துட்டேனு தான் நானும் சொல்றேன். வாசப்படியிலயே வச்சிருக்கியே?"னு சொல்றார். டக்குனு அவ வாசல்ல பாக்கறா. பார்த்தவுடனே சட்னு அடுக்களைல ஒதுங்கிக்கறா. கௌதமர்ட்டே, "அதிதி வந்திருக்காப்ல இருக்கு"னு சொல்றா.

விருந்தாளி யாராயிருக்கும்னுட்டு கௌதமர் வாசல்ல பாக்க வரார். அங்க இந்த்ரன் நின்னுண்டிருக்கான். கௌதமரைப் பாத்துட்டு நம்ஸ்காரம்னு சொல்றான். சட்னு குடத்தை எடுத்து "இந்தாங்கோ.. நான் உள்ளே எடுத்துண்டு வரேன்"னு சொல்றான்.

கௌதமர் குடத்தை வாங்கற மாதிரி தவறவிடறார். தண்ணி கொட்டிடறது.

அமர்ஷஹாசம்னு சொல்வா. அதாவது சிரிப்பும் இல்லாம உறுமலும் இல்லாம முனகலும் இல்லாம ஒரு நையாண்டி.. அடுத்தவாளை மட்டம் தட்டற மாதிரி ஒரு கேனைத்தனமான சிரிப்புக்கு அமர்ஷஹாசம்னு பேர். 'ஹ'னு ஒரு சப்தம் கேட்டிருப்பேள்.. சிரிக்கறாளா மாட்டை விரட்டறாளானு தெரியாது.. அதான் அமர்ஷஹாசம். அசுவத்தாமனோட குடும்பத்லயும் அமர்ஷஹாசப் புலிகள் உண்டு.

"ஹஹ.. இந்த்ரன் கைபட்டா எல்லாம் தவறிடும் போலிருக்கே?"ங்கறார் கௌதமர். 'ஹ்ம்ம்ம்'னுட்டு கௌதமர் உள்ளேயும் வெளியேயும் பாத்தார். தாடியைத் தடவிண்டார். "உள்ளே வானு இப்ப சொல்லமுடியலியே. என்னை மன்னிக்கணும்.. நான் ஸ்நானம் பண்ணிட்டு வரேன்.. ஒரு நாழி கழிச்சு வாங்கோ"னு சொல்றார்.

"அதனால என்ன, பரவாயில்லை. நானும் ஸ்நானம் பண்ணனும். உங்ககூட வந்தா எனக்கும் இடம் தெரிஞ்ச மாதிரி. அப்புறம் இந்த ஆஸ்ரமத்துல விஷ்ணு பூஜை பண்ண நீங்க தான் அனுக்ரகம் பண்ணனும்"னு பவ்யமா சொல்றான்.

"ஆகா! வாங்கோ போகலாம்"னு சொல்லிட்டு படியிறங்கினார் கௌதமர். 'விஷ்ணு பூஜை பண்ண வந்த மூஞ்சியப் பாரு?'னு மனசுல நெனச்சுண்டார். குடிலுக்குள்ளே பாத்து, "அகல்யா.. தட்டியைச் சாத்திக்கோம்மா. யார் வந்தாலும் திறக்காதே, பத்திரம்"னு உரக்கவே சொல்றார். இந்த்ரனைப் பாத்து, "ஹ.. கதவைத் தொறந்து வச்சா.. கண்டதும் உள்ளே வந்துடறது.. காடு பாருங்கோ..நீங்க வாங்கோ தேவராஜா.. ஹ.. நாம போகலாம்"னு நடக்கறார்.

இந்த்ரன் அவர் கூடவே போறான். அவன் மனசெல்லாம் அகல்யானு ஜபம் பண்றது. இருந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாம நடக்கறான். திட்டம் போடறான். 'இந்தக் கிழவனை வஜ்ராயுதத்தால லேசா ஒரு தட்டு தட்டிடலாமா? பிரம்மஹத்தியாவது புடலங்காயாவது? எல்லாத்துக்கும் பரிகாரம் வச்சிருக்காளே, அப்புறம் என்ன?'னு அவன் மனசுல தோணறது. இருந்தாலும் கட்டுப் படுத்திக்கறான்.

அகல்யாவைக் கொண்டுவிடறப்போ பிரம்மா சொன்னதை நினைச்சுக்கறார் கௌதமர். "முனி ஸ்ரேஷ்டரே.. என்னோட பொண்ணை.. உலகத்துலயே சௌந்தரின்னு சொல்லக்கூடிய இந்த அகல்யாவை, உங்களுக்கு ஒத்தாசையா இருக்க விட்டுட்டுப் போறேன். கடுமையான தபஸ் பண்றேள், உங்களுக்கு சகல விதத்துலயும் ஒத்தாசையா இருப்பா"னு தாரை வாத்துக் கொடுத்த பிரம்மா, சும்மா இருக்காம "இந்த்ரன் கண்ல படாம பாத்துங்கோ"னு வேறே சொல்லிட்டு போனார். பிரம்மக் குசும்புன்னா சும்மாவா?

கௌதமர் மறுபடியும் மனசுக்குள்ளே 'ஹ' போடறார். இந்த்ரனை ஓரக்கண்ணாலப் பாக்கறார். 'பிரம்மா மட்டும் யோக்யனா? சொந்தப் பொண்ணுனு பாக்காம சரஸ்வதி பின்னால ஓடினவன் தானே? எல்லா தேவாளுமே அயோக்யத்தனம் பண்றதுலே சளைச்சவா இல்லே போலிருக்கு'னு நெனச்சுக்கறார். அகல்யாவைப் பார்க்கறதுக்குத் தான் வந்திருக்கான் இந்த்ரன்னு அவருக்கு நன்னா தெரியறது. சும்மா இருக்காம இந்த்ரனைக் கிண்டல் பண்றார்.

"பாக்க வந்தது பாக்க முடியாம போயிடுத்தோ தேவராஜா?"னு கேட்டார்.

பக்குனு ஆறது இந்த்ரனுக்கு. "என்ன சொல்றேள்?"னு கேட்டான்.

"விஷ்ணு பூஜை பண்ண இடம் பாக்கறதா சொன்னேளே.. நான் கரடியாட்டம் குறுக்க வந்து உங்களை என்னோட ஸ்நானம் பண்ண அழைச்சுண்டு போறதைச் சொன்னேன்.. ஹ"

"பாக்க வேண்டியதை பாத்துட்டு தான் வந்தேன்.. இருந்தாலும் உங்க அனுக்ரகம் இல்லாம ஒண்ணும் செய்யக்கூடாதுனுட்டு.."னு இழுக்கறான் இந்த்ரன். அவன் மட்டும் சளைச்சவனா?

"ஸ்நானம் பண்ணுங்கோ.. எல்லாத்தையும் முழுகிடுங்கோ"னு ஜாடையா சொல்றார் கௌதமர். "கௌதமன் அனுக்ரகம் லேசுல கிடைக்காதாக்கும்.. ஹ.."

"சாபம் மட்டும் உடனே கொடுப்பேளோ?"னு கேட்டுடறான் இந்த்ரன். அப்புறம் சமாளிச்சு "இல்லை.. உங்க கோபம் த்ரிலோகப் பிரசித்தி.. அதான் பயத்துல கேட்டேன்.. க்ஷமிக்கணும்"னு சப்பை கட்டறான்.

கௌதமர் சட்னு பேச்சை மாத்தி இன்னும் தூபம் போடறார். "அகல்யா இருக்காளே.. அழகுன்னா அத்தனை அழகு.. புருஷாள் நமக்குள்ளே சொல்றதுக்கு என்ன.. அவ அழகை வர்ணிக்கவே முடியாது தெரியுமோ? உங்க இந்த்ராணி அழகுன்னாலும் அகல்யா ஆயிரம் மடங்கு அழகுன்னு தோணறது, மன்னிக்கணும்"னு சொல்லிட்டு இந்த்ரன் முகத்தை கவனிக்கறார். பொறாமையால வேகட்டும்னு மனசுக்குள்ள நெனச்சுக்கறார். "நேத்திக்கு முழு நிலா வெளிச்சத்துலே ஆஸ்ரமத் தரையிலே அவளோட ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அகல்யாவை எனக்குக் கொடுத்த பிரம்மாவுக்கு என்னிக்குமே என்னோட க்ருதக்ஞை'னு சொல்றார். க்ருதக்ஞைனா அதிகமான ஸ்வஸ்த்யக்ஷரம்.. இங்க்லிஷ்லே க்ரேடிட்யூட்ம்பாளே.. நன்றிக்கு ஒரு படி மேலே.

'உன்னோட க்ருதக்ஞையை உடைப்புல போட'னு நெனச்சுக்கறான் இந்த்ரன். இருந்தாலும் பவ்யமா தலையாட்டறான். அவன் மனசுல உடனே அகல்யாவைக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்கணும்னு தோணியாச்சு. உதட்ல ரெண்டு மார்ல ரெண்டுனு எண்ணி நாலு முத்தம் குடுத்துட்டு மறுகாரியம் பாக்கணும்னு துடிக்க ஆரம்பிச்சான்.

அதுக்குள்ள புருஷாளுக்கான தடாகம் வந்தாச்சு. கௌதமர் மண் படிக்கட்டுல இறங்கி, "வாங்கோ, ஸ்நானம் பண்ணலாம்"னு இந்த்ரனைக் கூப்பிடறார்.

இந்த்ரனும் படிக்கட்டுல இறங்கறான். கடைசிப் படியிலே நிக்கறச்சே தடாகத்துலே கௌதமரோட உருவம் தெரியறதைப் பாக்கறான். டகால்னு அவன் மனசுல ஒரு யுக்தி. 'அடடா! அருமையான சான்சு. இந்தக் கிழம் இங்கே குளிச்சிண்டிருக்கச்சே நாம அகல்யாவை கொஞ்சிட வேண்டியது தான். கௌதமர் மாதிரியே வேஷம் போட்டுண்டு போனா அவளுக்கும் தெரியாது. சங்கடம் இருக்காது'னு அவன் மனசுல தோணறது. தேவகன்னிகைகளோட அலங்காரம் எதுவும் இல்லாம, சாதாரண கச்சைகளோட அகல்யா நடந்து போனதையும் அவளோட ஸ்தனமும் ப்ருஷ்டமும் எந்தவிதமான கட்டுமில்லாம இயற்கையா அசைஞ்சதையும் நெனச்சுப் பாக்கறான். எப்பேற்பட்ட அழகி அவள்! இந்த தபஸ்விக் கிழத்துக்கிட்டே மாட்டிண்டு முழிக்கறாளே? உடனடியா போய் அந்த அழகை ஆராதிக்க வேண்டியது தான்னுட்டு கௌதமர் போல வேஷம் போடத் தீர்மானிக்கறான். தண்ணிலே தெரிஞ்ச கௌதமரோட உருவத்துல கொஞ்சம் மண்ணைத் தள்ளறான். அது அந்த உருவத்தைக் கலைச்சுப் போட்டதை ரசிக்கறான்.

திடீர்னு தலை சுத்தறா மாதிரி இருக்கு அவனுக்கு. படியிலே உக்காந்துக்கறான். மனசுல அகல்யா மறைஞ்சு போய் விஸ்வகர்மா ஞாபகம் வரது. "விஸ்வகர்மா! விஸ்வகர்மா!"ங்கறான்.

"என்னாச்சு?"னு கேட்டார் கௌதமர்.

"தெரியலே.. குளிக்கலாம்னு நெனச்சேன்.. திடீர்னு மனசுல விஸ்வகர்மா ஞாபகம் வியாபிச்சிண்டிருக்கு.. தேவகுலத்துக்கு ஏதாவது ஆபத்தோ.. அசுரக்கூட்டம் ஏதாவது படையெடுத்து வந்துடுத்தோ தெரியலியே?"னு புலம்பறான். அதுக்குள்ளே ஐராவதம் பிளிறிண்டே வரது. இந்த்ரன் கௌதமர் கிட்டே, "என்னை மன்னிச்சுடுங்கோ.. என்னவோ நடக்கறது.. போய் பாத்துட்டு வந்துடறேன்"னு உடனே கிளம்பறான். அவன் ஏறி உக்காந்ததும் ஐராவதம் ஜெட் ஏர்வேஸ் ஜம்போ மாதிரி சொய்னு ஆகாசத்துல காணாம போறது.

'விட்டது சனி'னு கௌதமர் குளிக்கறார்.

பாதி குளிக்கறச்சே திடீர்னு அவருக்கு சந்தேகம் வரது. 'மகாபாவி ஒருவேளை ஆஸ்ரமத்துக்குப் போயிருப்பானோ?'னு நெனச்சுக்கறார். 'போறும் குளிச்சது'னுட்டு எழுந்துக்கறார். அவசரமா வேஷ்டி அங்கவஸ்திரத்தைச் சுத்திண்டு பரக்க பரக்க ஆஸ்ரமத்துக்கு நடந்தார். 'அவன் மட்டும் அங்கே இருக்கட்டும், இன்னிக்கு அவனை பஸ்பமாக்கிடறேன்'னுட்டு பொறுமிண்டே நடந்தார்.

ஆஸ்ரமத்து வேலிதாண்டி உள்ளே வந்தவர் சட்னு நின்னார். வாசல்ல தட்டிக்கதவு சாத்தியிருக்கு. ஆனா உள்ளே ஏதோ பேச்சுக்குரல் கேக்கறது. உடனே உள்ளே போகாம என்ன நடக்கறதுனு பாத்து கையும் களவுமா பிடிக்கணும்னு நெனக்கறார். பக்கவாட்டுல நடந்து மாட்டுக் கொட்டில் மேலே பரபரனு ஏறி அதுலேந்து குடிலோட கூரைக்குத் மெதுவாத் தாவினார். அடுக்களை கிட்டேயும் தாழ்வாரம் கிட்டேயும் கூரை லேசா ஜன்னல் மாதிரிப் பிரிஞ்சிருக்கும் அந்த நாளிலே. சமையல், ஹோமப் புகை போறதுக்காகவும், நிலா வெளிச்சத்துல சம்போகம் பண்றதுக்காகவும் அந்த ஏற்பாடு. இப்பலாம் சன்ரூப் மூன்ரூப் சன்லைட் வின்டோ தஸ்சுபுஸ்சுனு என்னவோ சொல்றா, எல்லா ஏகாந்தமும் நம்ம கலாசாரத்துலயும் கட்டுமானத்துலயும் உண்டு. அடுக்களையில அரவம் இல்லே. மெள்ள நகந்து தாழ்வாரக் கூரை பக்கம் போறார்.

"ஏதுடா அசுவத்தாமா? முனிஸ்ரேஷ்டாளுக்கு ஞானத்ருஷ்டி உண்டே? அப்படித் தெரிஞ்சுக்காம என்னமோ திருடனாட்டம் கூரை ஏறினார்னு சொல்றியே? இதெல்லாம் நியாயமாடா?"னு ரமணிண்ணா கேக்கறார். உங்களுக்குத் தெரியாததை நான் என்ன சொல்லிடப்போறேன்? இந்த ஞான த்ருஷ்டியெல்லாம் உடான்சுண்ணா. பாருங்கோ.. அந்த நாள்லே பாதி தபஸ்விகளுக்கு த்ருஷ்டியே கிடையாது... மிச்ச பாதிக்கு ஞானம் கிடையாது.. இதுல எங்கேந்து ஞானதிருஷ்டி வரது? எல்லாரும் இந்த அசுவத்தாமன் மாதிரிதான். பாருங்கோ.. என்னோட பால்யத்துலே.. வாத்யார் தொழிலைப் பத்திச் சொல்வா. வேறே வேலை கிடைக்கலேன்னா ஸ்கூல் வாத்யார் வேலைக்கு போம்பா. அதுமாதிரி புராண காலத்துலே.. பொழைக்க வழி வேறே ஒண்ணும் இல்லேன்னு வையுங்கோ, தபஸ் பண்ணப் போயிடுவா. வாஸ்தவமாக்கும். எல்லா தபஸ்விகளும் அப்படினு இந்த அசுவத்தாமன் ஒரு நாளும் சொல்லமாட்டான். அதே நேரம் எந்த தபஸ்விக்கும் ஞானத்ருஷ்டினெல்லாம் எதுவும் இருக்கலைனும் திட்டமா சொல்வான்.. தப்பா நெனக்காதீங்கோ.

கௌதமருக்கு ஞானம் இருந்தாலும் த்ருஷ்டி கொஞ்சம் தகராறு. அதனாலே மெள்ள நகந்து கூரையைப் பிரிச்சுப் பாக்கறார். உத்துக் கவனிக்கறார். அங்கே தாழ்வாரத்து ஓரமா ரெண்டு பேர் ரொம்ப மதாகுளமா அதாவது காம உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சிண்டும் பேசிண்டும் இருக்கா. அகல்யாவை நன்னா அடையாளம் தெரியறது. அதிர்ச்சிலே விழுந்துடக் கூடாதுன்னு கூரையைக் கவனமா பிடிச்சுண்டே பாக்கறார். இன்னொருத்தர் பாக்கறதுக்குத் தன்னை மாதிரியே இருக்கார். "இது என்னடா கூத்து?"னுட்டுக் கவனிக்கறார்.

கீழே சல்லாபம் நடந்துண்டிருக்கு.

"இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?"னு கேக்கறா அகல்யா.

"உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை"னு சொல்றார் கௌதமர். சொல்லிட்டு அகல்யாவைக் கட்டிப் பிடிக்கறார். அகல்யா அவரோட மார்லயும் முகத்துலயும் முத்தம் கொடுக்கறா. கௌதமரோ வாலிபனாட்டம் அகல்யாவை ரெண்டு கைலயும் அள்ளியெடுத்துண்டு அப்படியே முத்தம் கொடுக்கறார். அவளைக் கீழே விடாமே இடுப்போட சேத்துப் பிடிக்சுக்கறார். அவளும் கால் ரெண்டையும் கௌதமரோட இடுப்பைச் சுத்திக் கட்டிக்கறா. கையை அவரோட கழுத்தைச் சுத்திக் கட்டிக்கறா. அப்புறம் ரெண்டு பேரும் தாழ்வாரத்துலே புரள்றா. திடீர்னு அகல்யா, "என்ன.. இந்த்ரனை விட உங்களுக்கு என் மேலே ஆசை அதிகமா?"னு கேக்கறா. "நல்ல வேளை பிரம்மா என்னை இங்கே கொண்டு விட்டாரே"னு சொல்றா.

"நான் இந்த்ரன்னு சொன்னா நம்புவியா அகல்யா?"னு கேக்கறார் கௌதமர்.

மேலேந்து பாத்துண்டிருக்கற கௌதமருக்கு உடம்பெல்லாம் பத்திக்கறது. புரிஞ்சு போச்சு. இந்த்ரன் தான் வேஷம் போட்டுண்டு வந்திருக்கான். கௌதமருக்கு கோவத்துலே ருத்ரதாண்டவம் ஆடத்தோண்றது. ஆனா ஆட வராதேன்னுட்டு ஆக்ரோஷமா பாத்துண்டிருக்கார். 'மகாபாவி! விஸ்வகர்மாவைப் பாக்கணும் அப்படி இப்படினு கதைவிட்டு இங்கே வந்து என் பெண்டாட்டியைப் பாத்துண்டிருக்கியே சண்டாளா!'னு நெனச்சுக்கறார். அந்த வேகத்துல பிடியை விட்டுடறார். சரசரனு வழுக்கி வாசல் பக்கமா தட்டிக் கதவு கிட்டே விழப்போனவர், சுதாரிச்சுண்டு தட்டியிலே சாஞ்சு உள்ளே விழுந்தார்.

விழுந்த வேகத்துலே எழுந்து உள்ளே இருந்த ரெண்டு பேரையும் பார்த்தார். அவர் முகத்துல கோபாக்னி. "ஏலே.. இந்த்ரா"னார். 'ஏலே'ன்னது பக்கத்தாத்து மாமாவாக்கும். இந்த்ரன் சொன்னானா தெரியாது. "ஏட்டி.. அகல்யா"னார். 'ஏட்டி'ன்னதும் பக்கத்தாத்து மாமாதான். "உங்க ரெண்டு பேரையும் சபிக்கிறேன் பார்"னு கமண்டலத்தைத் தேடினார். "இங்க தானே வச்சேன் கமண்டலம்.. எங்கே போச்சு?"னு கத்தினார்.

சுவரோரமா கிடந்த கமண்டலத்தை எடுத்து, "ஏலே இந்த்ரா.. பொம்னாட்டி தேகத்துலே யோனி மோகத்துலே மூழ்கி நாசமாப் போற பயலே.. உனக்கு உடம்"னு சொல்லி முடிக்கறதுக்குள்ளே காலிங் பெல் சத்தம் மாதிரி கேக்கறது. திரும்பிப் பாக்கறார். தட்டியோரமா இந்த்ரனும் அகல்யாவும் நின்னுண்டிருக்கா. கௌதமருக்கு ஒண்ணும் புரியலே. 'இங்க ஒரு கௌதமர்-அகல்யா ஜோடி, அங்க ஒரு இந்த்ரன்-அகல்யா ஜோடி.. நடுவுல நான் அசல் கௌதமன்.. என்ன இது?'னு முழிக்கறார்.

"முனி ஸ்ரேஷ்டரே.. உங்க சாபத்துலே நியாயமே இல்லை"னு சொல்றான் வாசல்ல நிக்கற இந்த்ரன். "ஏன்னா.. நான் தான் இந்த்ரன்.. அது வேறே யாரோ.. அவாளை சபிக்கறதுக்கு பதிலா என்னை சபிக்கறது அநியாயம் மட்டுமில்லே, அதர்மமும் கூட"னு சொல்றான்.

"உங்க ரெண்டு பேரையும் சபிச்சுடறேன்"னு குதிக்கறார் கௌதமர்.

"அதெப்படி? நான் ஒரு தப்பும் பண்ணலையே.. என்னை எப்படி சபிக்கலாம்?"னு லா பாயின்ட் போடறான் அசல் இந்த்ரன்.

"அகல்யா.. க்ராதகி"னு தாழ்வார அகல்யாவைப் பாத்து சபிக்கப் போறார் கௌதமர்.

"நிறுத்துங்கோ.. அது அகல்யாவுமில்லை. நான் தான் அசல் அகல்யா"னு சொல்றா வாசல்ல நின்ன அகல்யா. தாழ்வார அகல்யா திருதிருனு முழிக்கறா.

கொழம்பிப் போறார் கௌதமர். சாபம் கொடுக்க எடுத்த கையும் கமண்டலமும் அப்படியே இருக்கு. ஆரம்பிச்ச சாபத்தை கொடுத்து முடிச்சே ஆகணும். இப்ப என்ன பண்றது? அப்போ காலிங் பெல் சப்தம் மாதிரி மறுபடியும் கேக்கறது. பிரம்மா படியேறி வரார். "தவ ஸ்ரேஷ்டரே.. என்னை மன்னிச்சுடுங்கோ"னு நாலு மண்டையையும் பணிவா ஆட்டறார். ஆனா ஒரு மனசுக்குள்ள, "அம்பி.. ஒன்னோட தபோபலன் எல்லாம் புஸ்வாணமாயிடுத்து.. இனிமே இந்த்ர பதவிக்கெல்லாம் ஆபத்தில்லை'னு நெனச்சுக்கறார்.

"பிரம்மா.. இது என்ன நாடகம்?"னு வசனம் பேசறார் கௌதமர். இன்னும் கமண்டலத்தைப் பிடிச்சுண்டே.

"நான் சொல்றேன்"னுட்டு தாழ்வார கௌதமர் அசல் கௌதமர் கால்லே சாஷ்டாங்கமா விழுந்தார். "எங்களை மன்னிச்சுடுங்கோ.. ஏதோ ஆசைக் கோளாறினாலே இப்படி நடந்துண்டோம். நான் விஸ்வகர்மாவாக்கும்"னுட்டு அசல் உருவத்துக்கு வந்தான் விஸ்வகர்மா.

"நெனச்ச நேரத்துலே நெனச்ச ரூபத்துல ஸ்மரண யாத்ரை போற எந்திரம் ஒண்ணு கண்டுபிடிச்சேன். அதை என் ஆம்பிடையாள் கிட்டே காமிச்சப்போ, எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஒரு ரூபத்துல பூலோகம் போய் சந்தோஷமா இருக்கணும்னு தோணித்து"னு சொல்றான் விஸ்வகர்மா. சொல்றப்பபோ வாசல் பக்கம் நிக்கற அசல் அகல்யாவைப் பாக்கறான். 'நீ சொல்லிக் கொடுத்தபடியே சொல்றேனா?"னு கேக்கற மாதிரி இருக்கு அவன் பார்வை.

கௌதமருக்கு இன்னும் கோவம் தணிஞ்ச பாடில்லை.


அடுத்த ப்ரசங்கத்துல முடிச்சுடறேன். ►►



2011/12/20

ஸ்மரண யாத்ரை

(பெரிய) சிறுகதை


1 2 ◀◀ பூர்வத்துலே..

    சிரிச்சுண்டே நின்னுண்டிருந்த இந்த்ரனை ப்ரமிச்சுப் போய் பாத்துண்டிருக்கா அகல்யா. சினிமால பாடறாளே, நினைத்தேன் வந்தாய் நூறு வயதுனு, அந்த மாதிரி பாடத் தோணறது அவளுக்கு. இந்த்ரனைக் கட்டிப் பிடிச்சுக்கலாம்னு வாத்சல்யத்தோட போறா. ஒரு அடியெடுத்து வைச்ச அகல்யா, சட்டுனு நின்னுடறா. தன்னோட காலப் புடிச்சுக்கறா. கண்டகம் குத்திடறது. நெருஞ்சி முள். நன்னா காய்ஞ்சு போன நீளமான முள். சுர்ருனு பாதத்துல குத்திக் குடைஞ்சு ஏறிடுறது.

இந்த மாதிரி டயத்துல நமக்கெல்லாம் என்ன தோணும்? 'சனியன்'னு எரிச்சல் படத்தோணும். 'ஐயோ, அம்மா.. பிராணன் போச்சே'னு கூச்சல் போட்டு ஊரைக்கூட்டத் தோணும். அகல்யாவுக்கு முள்வலினாலும் யோசிக்கறா. 'கௌதமரும் அவரோட ரிஷிக் கூட்டமும் தெனம் நடமாடற இடமாச்சே? நானும் மத்த ரிஷிபத்னிகளும் நித்யம் ஆசிரமத்திலேந்து தடாகம் வரைக்கும் இந்தப் பாதையைப் பெருக்கித் தள்ளி சுத்தமா வச்சிருக்கோமே, இன்னிக்கு எங்கேந்து முள் வந்தது? அதுவும் காஞ்ச கண்டகம்? ஒரு வேளை ரிஷிகள் யார் கால்லயாவது குத்தியிருந்தா எத்தனை கஷ்டமாயிருக்கும்? நல்ல வேளை, நம்ம கால்ல குத்தினதால இதை எடுத்துத் தூர போட முடியறதே!'னு முள்ளை எடுத்து ஓரமா போட்டு ஸ்ராங்கா மண்ணைத் தூவி மூடறா.

அதுக்குள்ள "என்னாச்சு?"னுட்டு ஓடி வந்துட்டான் இந்த்ரன்.

"குத்திடுத்து"னு, கொழந்தை மாதிரி விசும்பிண்டே ஒரு பாதத்தைக் காட்டறா.

'கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ?'னு அவளைப் பாத்துட்டு, "இதென்ன வினோதம்? முத்தும் பவழமும் இப்படி சேந்து உருள்றதே?"னு கேக்கறான்.

அகல்யாவோட பாதம் அவளோட முகம் மாதிரி அத்தனை பொலிவா இருக்காம். பாதத்துல ரத்தம் பவழமா வரதாம். முள் குத்தின வலி தாங்காம அகல்யாவோட கண்லேந்து ஜலம் முத்தா உருள்றதாம். என்னமா டயலாக் விடறான் பாருங்கோ! சினிமாக்காராள் காதல் டயலாக் எழுதக் கத்துண்டது இந்த்ரன் அகல்யா ஜோடி கிட்டேயாக்கும்.

தன்னோட காலையும் கண்ணையும் பாத்துட்டு இந்த்ரன் இப்படி வர்ணிக்கறான்னு தெரிஞ்சதும், வலி போன மாதிரி இருக்கு அகல்யாவுக்கு. இந்த்ரன் அவளோட காலைப் பிடிக்க வரான். முள்ளு குத்தினதுக்கான ஹேது புரிஞ்சுது அவளுக்கு. அவசரமா ஒதுங்கிண்டு இந்த்ரனைத் தடுக்கறா. "இந்த முள்ளை அத்தனை லகுவா எடுக்க முடியாது"னுட்டு கழுத்தைக் தொட்டுக் காட்டறா. அவள் கழுத்துல மின்னின மஞ்சள் குங்குமத்தைப் பாத்துட்டு ஒதுங்கறான் இந்த்ரன்.

அந்த காலத்துல மனுஷ்ய கல்யாணத்துக்கு அடையாளமோ லக்ஷணமோ உண்டானு கேட்டேள்னா, உச்சந்தலைலயும் கழுத்துக் குழியிலயும் வச்சுக்குற மஞ்சள் குங்குமப் பொட்டுதான். விவாகச் சின்னம்னு இப்ப நாம எல்லாம் விவாதம் பண்ற தாலி, மாங்கல்யம், மெட்டி எல்லாம் பின்னால வந்தது. மாங்கல்யதாரணம்னு ஒரு க்ருதானுசாரத்தை நாம ஏன் அனுஷ்டிக்கிறோம்னு தெரிஞ்சா, இந்தக் காலத்துப் பொண்கள் பாதி பேர் தாலி கட்டிக்க மாட்டா. 'என்னடா அசுவத்தாமா, அடி வாங்கத் தயாரா இருக்கியா?'ங்கற மாதிரி பாக்கறார் பாருங்கோ காஸ்யபன் மாமா.. அதனால அந்தக் கதையை இன்னொரு நாள் சொல்றேன்.

அகல்யா தன்னோட மஞ்சள் குங்குமத்தைத் தொட்டுக் காமிச்சதும் இந்த்ரனுக்கு எரிச்சலாவும் கஷ்டமாவும் இருக்கு. "இதெல்லாம் மனுஷ சம்ஸ்காரம், இதுக்கெல்லாம் நீ ஏன் கவலைப் படறே?"ங்கறான்.

"இப்ப நான் மனுஷியாத்தானே இங்கே வந்திருக்கேன்? மனுஷ பழக்கங்களையும் யதார்த்தங்களையும் அனுசரிச்சு தானே ஆகணும்?"னு பதில் கேள்வி கேக்கறா அகல்யா.

"பூ போட்டு என்னை வரச்சொன்ன மனுஷி, நீ தானே?"னு, 'மனுஷி'யை அழுத்தி, கொஞ்சம் கோவமா கேக்கறான். அவளைத் தொட்டுத் தாங்க முடியலையேனு அவனுக்கு ஆதங்கம். ஆத்திரம். சில பொம்னாட்டிகள் காதலிக்கிறேம்பா தியாகம் பண்றேம்பா.. ஆனா திடீர்னு அப்பா அம்மா குடும்பம் வேலை லொட்டுனு ஏதோ சாக்கு சொல்லி பல்டி அடிச்சு காதலிக்கறவனை நடுத்தெருல நிக்க வச்சுருவா. அப்படித்தான் ஏமாந்த சோணகிரியான மாதிரி இருக்கு இந்த்ரனுக்கு.

"நான் என்ன தெரிஞ்சா பூ போட்டேன்? எதை எதுக்காக ஆகாயத்துல எறியறேன்னு தெரியாம தானே இத்தனை நாளும் எறிஞ்சேன்?"னு பதிலுக்குக் கேக்கறா.

"நீ மனுஷப்பிறவில இதையெல்லாம் மறந்துடுவேன்னு தானே முன் ஜாக்கிரதையா அப்படி ஒரு வரம் கேட்டே? என்னோட பலஹீனத்தைப் புரிஞ்சுண்டு என்னை வரவழைக்கத் தானே திட்டம் போட்டு அப்படி ஒரு வரம் கேட்டே?"னு இந்த்ரன் லா பாயின்டை புட்டு புட்டு வைக்கறான்.

அகல்யா யோசிக்கறா. புத்திசாலி பொம்பளையோன்னோ? பேச்சை மாத்திடறா. "சரி, ரெண்டு பேரும் மாத்தி மாத்திக் கேள்வி கேட்டுண்டு இருந்தா எப்படி?"னு இந்த்ரனைப் பாத்து சிரிக்கறா. கொஞ்ச நேரம் அவனையே பாத்துண்டு இருக்கா. ரெண்டு பேர் பார்வைலயும் இந்த அசுவத்தாமனால பிரஸ்தாபிக்க முடியாத அளவுக்கு சிந்தா பரிவர்த்தனை நடந்துண்டிருக்கு. அத்தனை பேசிக்கறா நயன பாஷைல. 'வாய்ச் சொற்கள் யாது பயனும் இல'னு புலவர் சொன்னது இவாளை வச்சுத்தான்.

அப்புறம் அகல்யா, "விவாகமான ஒரு ஸ்த்ரீ இன்னொரு புருஷனைப் பாக்கறதே அதர்மம்னு மனுஷ சாஸ்த்ரம் சொல்றது, இருந்தாலும் ஒங்களைப் பாக்கணும் போல இருந்துது. என்னோட மனுஷ்ய ஜீவிதத்லே சோர்வு என்னை உருக்கும் போது உங்களை பாத்தா உற்சாகமா இருக்கும்னு எனக்கு அப்பத் தோணித்து, வரம் கேட்டேன்"னு ரொம்ப சாத்வீகமா சொல்றா.

இந்த்ரன் சாந்தமாறான். அகல்யாவைப் பாத்து, "சுகம் தானா? சொல்லு கண்ணே"ங்கறான்.

அவளும் அவனைப் பாத்து விஷமமா, "சுகம் சுகம் தானே நினைவிருந்தால்"னு சொல்றா. அப்புறம், "எனக்கு ஒரு குறையுமில்லை. என்னை ஒரு சேவகி மாதிரி பாவிக்கறார் கௌதமர். அவருக்கு எல்லா விதத்துலயும் ஒத்தாசையா இருக்கேன். இருந்தாலும் அப்பப்போ கோவம் வந்து சபிச்சுத் தள்ளிடறார்"னு கையை காலைக் காட்டறா. அங்கங்க ஒரே புண்ணா இருக்கு.

"இப்படிப் புண்ணாக்கி வச்சிருக்கியேடா என் தங்கமே?"னு உருகறான் இந்த்ரன்.

"அதுக்காகத் தானே இங்கே வந்திருக்கேன்? கௌதமரோட தவபலத்தைக் கட்டுப்படுத்தத்தானே? சாபத்தைக் கொடுத்துட்டா அதைத் திருப்பி எடுத்துக்க முடியாதே? அதான் சாப நிவர்த்திக்காகவும் உக்ரத்தைக் குறைக்கவும் இப்படியெல்லாம் பரிகாரம் பண்ண வேண்டியிருக்கு"னு அவ தலையைக் குனிஞ்சுண்டே சொல்றா.

ச்ச்ச்.. அகல்யா என்ன சொல்றா கவனிச்சேளா? புஷ்பத்தைப் போலானவள் பெண். முனிவரோட சாபத்தை வாங்கிண்டு புண்ணா சொமக்கறா பாருங்கோ? எப்பேர்கொத்த தியாகம்? எதுக்காக இந்த த்யாகம்? புரிஞ்சுக்க முடியாத த்யாகங்கள் பொம்பளேள்ட்டே நெறய உண்டு போங்கோ! எங்கம்மா ஞாபகம் வந்து நேக்கே கண் கலங்கறது.

சாபம் ஏன் குடுக்கத் தோண்றது? க்ரோதம். ஆங்காரம். தபஸ்வியா இருக்கறவா சாந்தமா, மன்யு விட்டு இருக்கணும். க்ரோதமோ மன்யுவோ வந்து சாபம் கொடுத்துட்டா, சாந்தமா இருந்து சம்பாதிச்ச தபோபலன் அத்தனையும் காணாம போயிடும். பேலன்சிங் ஆக்டுங்கறாளே, அதான். மனுஷாளை மனுஷாளாவே வச்சிருக்க இது ஒரு தேவ யுக்தியாக்கும்.

கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேள்னா, இதுல பெரிய லோகநீதி புதைஞ்சிருக்குனு புரியும். ஆத்துல ஏதோ அசம்பாவிதம் நடக்கறது. கொழந்தை காபி டம்ளரைத் தட்டிவிடறது. வாழக்கா பொடிமாஸ்ல பொண்டாட்டி உப்பை ஜாஸ்தியா போட்டுடறா. பிள்ளை பரீட்சைலே மார்க்கு கம்மியா வாங்கியிருக்கான். பொண்ணு சொன்ன பேச்சு கேக்காம அடம் புடிக்கறா. ஆபீஸ்லே சொன்ன டயத்துக்கு வந்து வேலை செய்ய மாட்டேங்கறா. ஷாப்பிங் சென்டருலே கார் பார்க் இடத்துக்கு சண்டை. ஏதோ ஒரு அல்ப காரணம். மனுஷ நியமப்படி நமக்குக் கோபம் வந்து அடாபுடானு வையறோம், பல சமயம் கைநீட்டி அடிச்சுடறோம். 'உன் தலையில இடி விழ'னு நாம் சொல்றது வசவா இருந்தாலும், யோசிச்சுப் பாத்தேள்னா அது சாபம் தானே? 'நீ உருப்படமாட்டே'னு நம்ம கொழந்தேளை நாம சொல்றது திட்டா, சாபமா? 'கட்டேலே போக'னு எத்தனை தடவ சொல்றோம், அது சாபம் தான்னு நமக்குத் தோணலை பாத்தேளா? மனுஷாளா பொறந்து சம்சார பந்தத்துலேந்து அனாச்ருதம் வேணும்னு நாம பண்ற தபஸ், இந்த மாதிரி சாபங்களால தானே ஸ்வாதீனமே இல்லாமப் போறது? கோவத்தை வளத்து இப்படி சாபம் குடுக்க குடுக்க, நாம பிறவி எடுத்துண்டே இருப்போம். நாம சொல்ற கடுமையான வார்த்தை, திட்டு வாங்கினவாள் கிட்டே புண்ணா மாறிடறது. அந்தப் புண் நம்ம கண்ணுக்குத் தெரியாதே தவிர, வாங்கிண்டவா மனசுலயும் உடம்புலயும் அது அழுகிண்டே இருக்கும். சுட்டுண்டே இருக்கும். 'நாவினால் சுட்ட வடு ஆறாதே'னு புலவர் சொல்லலியா?

மன்யுவை, அதாவது அசாத்யக் கோபத்தை, மனுஷா எல்லாருமே குறைக்கணும். மன்யு அகார்ஷீத்னு ஜபம் பண்றதே அதுக்குத்தான் தெரியுமோ? சும்மா பூணலை மாட்டிண்டு புரியாத பாஷைல எதையோ சொல்லிட்டு பாயசம் வடையைச் சாப்பிடறோம். என்ன ப்ரயோஜனம்? இந்த ஜபத்தை எல்லாருமே பண்ணலாம். மத நம்பிக்கை இல்லேன்னா கூட இந்த ஜபம் பண்ணலாம். 'அசாத்ய கோபம் தொலஞ்சு போகட்டும்'னு ஜபம் பண்றதுக்கு தெய்வ மத நம்பிக்கை தேவையில்லை. லோகத்துல கோவம் குறையட்டும்னு பிரார்த்தனை பண்ணுங்கோ எல்லாரும் நாளைக்கு.

சரி, கதைக்கு வரேன். லோகநீதியப் பத்தி பேசினா நாலு மாமாங்கம் ஆகும் முடியறதுக்கு. அகல்யா கதையை புராணமாட்டம் இழுத்துண்டு போனேன்னு வைங்கோ, சிவகுமாரன் வெண்பாவிலே அறம் பாட ஆரம்பிச்சுடுவார்.

கௌதமர் அகல்யாவைச் சபிக்கற போதெல்லாம் இப்படி அவ தேகத்துல ரணகளமாயிடறது. அவளும் பிரம்மாகிட்டே கொடுத்த வாக்கைக் காப்பாத்தணும்னு த்யாகம் பண்ணிண்டே இருக்கா. இங்கயும் பாத்தேள்னா, இது லோகநீதி தான். ஸ்த்ரீகளுக்கு புருஷன் தானே தெய்வம்னு சொல்றா? அதனாலதானே லோகநீதி காரணமா ஸ்ரீராமபிரான் பண்ணின கொடுமையெல்லாம், பிராட்டி பொறுத்துண்டா? எப்பேர்கொத்த மகோன்னத த்யாகம் அது!

மனுஷ தர்மப்படி நடக்கணும்னு அகல்யாவும் பொறுமையா இருக்கா.

இந்த்ரனுக்கு கை துறுதுறுங்கறது. வஜ்ராயுதத்தை நெனச்சுக்கறான். அகல்யாவை இப்படி நடத்தறானே பாதகன்னு தோணறது அவனுக்கு. தேவாளோன்னோ, மனுஷாள் எல்லாருமே அவாளுக்குப் பாதகாளாத் தோணும். தேவாள் என்ன பாதகம் பண்ணாலும் குத்தமில்லே, பாவ மூட்டைய சொமக்கறது மனுஷக் கூட்டம். மனுஷனா பொறந்துட்டாலே பாவம் பண்றவாள்னு சொல்றதே வேதம்? நம்ம வேதம் மட்டுமில்லே. எங்காத்து முனைலே ஒரு சர்ச் இருக்கு. போன வாரம் பாருங்கோ, அந்தப் பக்கமா வர போறவாளை எல்லாம் பாவிகளே பாவிகளேனு கூப்டுண்டேயிருக்கா மைக் வச்சு. ரெண்டு நாளைக்கப்புறம் அந்தப் பக்கம் போறதையே நிறுத்திட்டேன். கதைக்கு வருவோம்.

"உன் மனசு எத்தனை கஷ்டப்படும்?"னு சொல்றான் இந்த்ரன்.

"இல்லையே. உங்க மனசைத்தானே நான் எடுத்துண்டு வந்தேன்? என் மனசு உங்க கிட்டேதானே இருக்கு? வச்சிண்டிருக்கேளா, இல்லே இன்னொரு பொண்ணைப் பாத்துட்டு என் மனசைத் தூக்கிப் போட்டுட்டேளா? கடைசி வரைக்கும் பத்திரமா வச்சுப்பேள்னு தானே குடுத்துட்டு வந்தேன்?"னு முள் குத்தின வலிலே கண்ல தண்ணி வந்தாலும், சிரிச்சுண்டே சொல்றா அகல்யா. "என் ஒடம்புல தான் காயம். மனசுல பாருங்கோ, ஒண்ணுமில்லே. ஒங்க மனசாச்சே, பத்திரமா காயம் படாம வச்சுண்டிருக்கேன்"னு சொல்றா.

அகல்யா சொன்னது இந்த்ரன் ஹ்ருதயத்தைக் கூழாக்கறது. அகல்யா மேலேயே கோபம் வரது. தேவராஜனாச்சே, கொஞ்சம் கட்டுப் படுத்திண்டு ஒண்ணும் பேசாம இருக்கான்.

"என்ன, உம்முனு இருக்கேள்? உங்களைப் பாத்ததுல சந்தோஷம்"னு ஏக்கத்தோட மறுபடியும் சொல்றா அகல்யா. "ஆனா, என்னோட நெலமையை மறந்து உங்களை நெனச்சது தப்புதான். தெரியாமலே செஞ்ச பாதகம். உங்களோட இப்படிப் பேசிண்டிருந்தா அவருக்குக் கோபம் வந்து ரெண்டு பேரையும் சபிச்சுடப் போறார். என்னைப் பாக்க வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். கிளம்புங்கோ. நானும் போயிட்டு வரேன்"னுட்டு ஆஸ்ரமத்தைப் பாத்து நடக்கறா. முள் தச்ச பாதமோன்னோ, உந்திண்டே நடந்து போறா பாவம்.

    அவ போறதையே பாத்துண்டிருக்கான் இந்த்ரன். அகல்யா உந்தி உந்தித் தள்ளாடறது அவனுக்குத் துக்கமா இருக்கு. தனக்காகத் தானே இந்தத் த்யாகம் பண்றானு வருத்தமா இருக்கு. மனசுக்கு இஷ்டமானவளோட இருக்க முடியாம, இந்த்ர பதவினால என்ன ப்ரயோஜனம்னு எரிச்சலா இருக்கு. க்லேசம் ஓயணும்னு சித்த நாழி கண்ணை மூடிக்கறான்.

கொஞ்சம் ஆசுவாசமானதும், திரும்பிப் போகலாம்னு எழுந்து ஐராவதத்தைக் கூப்பிட்டவன், கீழே பாக்கறான். அகல்யா கைதவறி விட்ட குடம் ஓரமா உருண்டு கிடக்கு. அகல்யாவைக் கூப்பிடலாம்னு பாத்தா அவளைக் காணோம். 'அடடா, இதை மறந்துட்டாளே, கௌதமர் கோவத்துல ஏதாவது சபிச்சுடப் போறாரே'னு எழுந்து குடத்தைக் கையிலே எடுத்துண்டு ஆஸ்ரமத்தைப் பாக்க ஓடறான்.

இந்த சமயத்துல கார்யசித்திக்கான ஒரு சுவாரஸ்யமான உத்தியைப் பத்திச் சொல்லணும். பொண்களுக்கு ரொம்பக் கைவந்த யுக்தியாக்கும்.

அகல்யா அந்தக் குடத்தை மறந்து விட்டுட்டு போனாள்னு தானே நாம நெனச்சுண்டிருக்கோம்? ஆனா துளசி மாமியைக் கேளுங்கோ.. அகல்யா குடத்தை வேணும்னே விட்டுட்டுப் போனாள்னு டக்குனு சொல்லிடுவா டீச்சர். வாஸ்தவமாக்கும். தேவைப்பட்டா புத்தியில்லாம நடந்துக்கறது அசாத்திய புத்தியாக்கும். கார்யசித்திக்கோஸ்ரம் பொண்கள் இப்படி நடந்துப்பா. புருஷாளுக்கு இது சுட்டுப் போட்டாலும் வராது. பொண்கள் இப்படி நடந்துக்கறாங்கறதும் நமக்குத் தெரியாது. நம்ம கண்ணைத்தான் காமமும் க்ரோதமும் சதா மறைச்சுண்டே இருக்கே? 'புத்தியில்லாம இருக்கியே?'னு கத்திட்டுத் தொண்டையப் பிடிச்சுண்டு ஒக்காந்துடுவோம். கார்யம் ஜெயம்னு அவா மௌனமா மனசுக்குள்ள கொண்டாடிண்டிருப்பா.

அகல்யாவும் அப்படித்தான். இந்த்ரன் குடத்தை எடுத்துண்டு வருவான், கௌதமரைப் பாத்து பேசுவான், விவகாரத்தை முத்த வைக்கணும்னு தான் குடத்தை மறந்து போன மாதிரி விட்டுட்டுப் போனா. இந்த்ரன் கண்ணை மூடிண்டு ஒக்காந்துண்டான்னு தெரிஞ்சதும், உந்தி உந்தி நடந்துண்டிருந்தவ, ஒரே ஓட்டமா ஆஸ்ரமத்துக்குப் போக ஆரமிச்சா. அவ மனசுல உத்சாகம்.

ஓடறப்போ ஞானோத்சவத்துல விஸ்வகர்மாவோட பேசினது ஞாபகம் வரது அகல்யாவுக்கு. ஸ்ரீராம் அண்ணாவுக்காக ஸ்பெஷலா இன்னோரு ப்ளேஷ்பேக்.

விஸ்வகர்மாவுக்கு எப்பவுமே அபிக்யாத்ர மனசு, அதாவது மேனேஜ்மென்ட் மென்டாலிடிம்பாளே, அது உண்டு. தேவேந்த்ரனோடும், க்ரகாதிபதிகளோடும், மும்மூர்த்திகளோடும் விஸ்ராந்தியா குழைஞ்சு பேசுவானே தவிர, சாதாரண தேவாளை துரும்பாக் கூட நினைக்க மாட்டான். அவாள பாக்கறதே காலவிரயம்னு நெனக்கறவன் எங்கேந்து பேசப் போறான்? வந்தவாள் கிட்டே அவனோட எடுபிடிகளை விட்டு பேசச் சொல்லிண்டிருந்தவன், திடீர்னு சதசுக்கு வந்த அகல்யாவைப் பாத்ததும் அசந்துட்டான். இத்தனை முகலட்சணத்தை அவன் மகாலக்ஷ்மி கிட்டேயும் பாத்ததில்லை. அவ பின்னாடியே ஓடி, அவளுக்கு எல்லாத்தையும் சொல்லிக் காண்பிச்சான். அகல்யா எல்லாத்தையும் பாத்துட்டு, ஓரமா இருந்த ஹோமகுண்டத்துக்கு வந்து, "இது என்ன?"னு கேட்டா.

"அதை தேவேந்த்ரனுக்கும் மும்மூர்த்திகளுக்கு மாத்ரமே சொல்ல முடியும். மகா ரகஸ்யமாக்கும். என்னை மன்னிச்சுடுங்கோ"னான்.

"நீங்க எனக்கு அண்ணாவாகணும். தங்கை கிட்டே சொல்லக் கூடாதா?"னு கெஞ்சிப் பேசறா.

"அண்ணாவா?"னு கேக்கறான் விஸ்வகர்மா.

"சரஸ்வதியை சித்தத்துல நெனச்சு உங்களை ஒரு விசேஷ கார்யத்துக்காகப் படைச்சார் இல்லையா பிரம்மா? அதே மாதிரி சரஸ்வதி க்ருபையோட என்னையும் ஒரு விசேஷ கார்யத்துக்காகப் படைச்சிருக்கார். இருக்கிற தேவாள்ள சரஸ்வதி க்ருபையோட பொறந்தது நாரதனை விட்டா, நீங்களும் நானும் தான். நீங்க தேவேந்த்ரனுக்கு உதவி பண்றேள். நானும் தேவேந்த்ரனுக்கு உதவி பண்றேன்"னுட்டு பிரம்ம ஆக்ஞை பத்தி எல்லாத்தையும் சொல்றா. சொல்லிட்டு விஸ்வகர்மா முகத்தை ஏக்கத்தோட பாக்கறா. அவ கண்ல அப்படி ஒரு ஆகர்ஷணம். காந்தி. கவர்ச்சி. உருகிடறான் விஸ்வகர்மா.

அனேக புருஷாளுக்கு ஒரு துர்பலம் உண்டு. அவாளைப் பொருத்தவரைக்கும் அழகான பொண்கள், ஒண்ணு தான் கல்யாணம் பண்ணிக்கறவாளா இருக்கணும், இல்லை கூடப் பொறந்தவாளா இருக்கணும். அழகான பொண்களோட நெருக்கம் புருஷாளுக்குத் தேவைப்படறது. அப்பத்தான் மத்த புருஷாளோட மதிப்பும் மரியாதையும் நமக்கு கிடைக்கிறதுன்னு ஒரு எண்ணம். வாஸ்தவம்.

அகல்யாவைக் காட்டிலும் அழகியுண்டோ? விவேகியுண்டோ? விஸ்வகர்மாவுக்கு ஹோமகுண்டத்தைப் பத்தி ஆதியோடந்தமா அகல்யாவண்டை சொல்லத் தோணறது. "இது அதி விசேஷமாக்கும். நெனச்ச நேரத்தில் நெனச்ச ரூபத்தில் ப்ரயாணம் செய்யத் தோது பண்ணும். இதுல இப்படி நின்னுண்டு எந்த உருவம் வேணுமோ அதை மனசுல நினைச்சுண்டு, எங்கே போகணும்னு விரும்பறோமோ, அங்கே ஸ்மரண வேகத்துல போய்டலாம்."

"ஆச்சரியமா இருக்கே?"னு கண்ணைப் படபடனு அடிச்சிக்கறா அகல்யா. "இது இருந்தா எந்த வாகனமும் வேண்டாம் போலிருக்கே? உங்க வித்யை பத்திக் கேள்விப் பட்டிருக்கேன், ஆனா இப்போதான் பாக்கறேன். ஆஹா! நீங்க எப்பேர்பட்ட புத்திமான்! இந்த்ரன் கொடுத்து வச்சிருக்கணும், நீங்க இந்த்ர சபைல ஆஸ்தான வித்தகரா சேந்து இருக்கறதுக்கு! அண்ணானா அண்ணா தான்!"னு ஏகத்துக்கு ஸ்துதி பண்றா.

விஸ்வகர்மா கர்ணம் குளிற எல்லாத்தையும் கேட்டுண்டிருக்கான். திடீர்னு அகல்யா கேக்கறா, "ஆமாம், இது நெஜமாவே வேலை செய்யுமாண்ணா?"னு.

காத்து போன பலூன் மாதிரி ஆய்டறது விஸ்வகர்மா மொகம். ரோஷம் வரது. "என்ன இப்படி சொல்றே?"னு அதிகாரத்தோட கேக்கறான்.

"இல்லை அண்ணா. கொஞ்ச நேரத்துல தேவேந்த்ரன் வந்து இதைப் பத்திக் கேட்டு வேலை செய்யலைனு வச்சுங்கோ.. அண்ணா, ஒங்களுக்குத் தானே கெட்ட பேர்? இதைப் பரீக்ஷை பண்ணிப் பார்க்க வேண்டாமா?"னு கேக்கறா அகல்யா.

அப்பத்தான் இந்த்ரன் ஒண்ணும் சொல்லாமப் போனது ஞாபகம் வரது விஸ்வகர்மாவுக்கு. ஒருவேளை இந்த்ரன் திரும்பி வந்து பரீக்ஷை பண்ணிணா? வாஸ்தவம்னு தலையாட்டிட்டு, "இந்தா, நீ பரீக்ஷை பண்ணிப் பார்"னு சொல்றான்.

"வேண்டாம் அண்ணா, எனக்கு பயமா இருக்கு அண்ணா!"னு வரிக்கு வரி அண்ணானு கொஞ்சறா அகல்யா. "நீங்களே பண்ணுங்கோ. ஒங்களுக்குத்தான் ஞானம் ஜாஸ்தி. ஏதாவது ஆச்சுனா கூட என்ன பணணனும்னு தெரிஞ்சு புத்திசாலித்தனமா திரும்பி வந்துடுவேள்"னு சொல்றா. பாருங்கோ, லக்ஷ்மி கடாக்ஷம் அவச்யமில்லே, அழகான பொண்களுக்கு முகஸ்துதியே சகல சௌபாக்யத்தையும் கொடுக்குமாக்கும்.

"சரி, என்ன ரூபம் எடுக்கட்டும் சொல்லு"ங்கறான் விஸ்வகர்மா.

அகல்யா கொஞ்சம் யோசிக்கறா. எல்லாம் பாவ்லா. அவளுக்கு நன்னா தெரியும், என்ன கேக்கணும்னு. சொன்னேனில்லையா, சில சமயம் புத்திமட்டா நடந்துக்கறது அதிபுத்திசாலித்தனம்னு? "நேக்கு ஒண்ணும் தோண மாட்டேங்கறதே, அண்ணா?"ங்கறா. அப்புறம் விஸ்வகர்மாவோட கையைப் பிடிச்சுண்டு சின்னக் குழந்தையாட்டம் குதிக்கறா வேணும்னே. "இப்படிப் பண்ண முடியுமா அண்ணா? பிரம்மாவை விட்டா நான் உங்களையும் இந்த்ரனையும் தான் பாத்திருக்கேன். இந்த்ரன் மாதிரி ரூபம் எடுத்துண்டு பரீக்ஷை பண்ணிக் காட்டுங்கோ பாக்கலாம், நான் நம்பறேன்"னு சொல்றா.

விஸ்வகர்மா கொஞ்சமும் யோசிக்காம, "சரி, அதுக்கென்ன? இதோ பார்"னு அந்த குண்டத்துக்குள்ள இறங்கி நின்னான். "இந்த்ரனா மாறி அதோ அந்த கூட்டத்துல தெரிவேன் பார். உன்னைப் பாத்து வலது கையை அசைக்கிறேன் சரியா?"னு வடக்குப் பக்கமா கை காண்பிக்கறான். அப்படியே கண்ணை மூடிக்கறான். காத்துல கரைஞ்சு போன மாதிரி, விஸ்வகர்மாவைக் காணோம்.

அகல்யாவுக்கு திக்குனு ஆறது. சட்டுனு உத்தர தெசைலே பாக்கறா. அங்கே தேவேந்த்ரன் நின்னுண்டிருக்கான். சாக்ஷாத் தேவேந்த்ரன்னுட்டு எல்லா தேவாளும் அவனோட பேசிண்டிருக்கா. அங்கேருந்துண்டே அகல்யாவைப் பாத்து வலது கையை ஆட்டறான். அகல்யாவுக்குப் புரிஞ்சு போச்சு அது விஸ்வகர்மானு.

இப்பல்லாம் டெலிபோர்டேஷன்னு விசித்ரமா சொல்றாளே.. பாருங்கோ அது அப்பவே நம்ம விஸ்வகர்மா வித்தையாக்கும்.

தேவேந்த்ரனாட்டம் இருந்த விஸ்வகர்மா தன்னை எல்லாரும் விழுந்து விழுந்து உபசரிக்கறதைக் கொஞ்ச நாழி அனுபவிச்சுட்டு, பழையபடி குண்டத்துலேந்து திரும்பி வந்தான். அகல்யாவைப் பாத்துட்டு பெருமையா, "இப்ப என்ன சொல்றே?"னான்.

"நான் என்ன சொல்றது அண்ணா? அபாரம். ப்ரமாதம். அபூர்வம்"னு அவனைக் கட்டிப் பிடிச்சு நெத்தியிலே முத்தம் கொடுக்கறா. "நான் வரேன் அண்ணா"னுட்டு கிளம்பறா. ஒரு நாலடி நடந்து போய்ட்டு திரும்பி வந்து விஸ்வகர்மாவைத் தனியா கூப்பிடறா. "அண்ணா, இந்த குண்டத்துனால உங்களுக்கு ஆபத்து வரும்னு தோணறது"னு சொல்றா.

"திடீர்னு என்ன இப்படி சொல்றே அகல்யா?"னு கேக்கறான் விஸ்வகர்மா.

"ஒண்ணும் இல்லை. தேவேந்த்ரனோட பதவிமோகம் அதிதீவிரம்னு எல்லாருக்குமே தெரியும். இந்த குண்டத்தை வச்சுண்டு யார் வேணா தேவேந்த்ரனா ஆயிடலாம் போலிருக்கே? இதைக் கண்டுபிடிச்ச உங்களை தேவேந்த்ரன் கண்டிப்பா அழிச்சுடுவார்னு தோணறது"னு மெதுவா, ஆனா நல்லா ஒறைக்கும்படி சொல்றா.

"நான் இதைக் கண்டுபிடிச்சதோட சரி. வஜ்ராயுதம் மாதிரி இதுவும் ஒரு லவி, சாஸ்த்ரம், கருவி அவ்ளோதான்"னு சொல்றான் விஸ்வகர்மா. அவன் குரல் லேசா நடுங்கறதைக் கண்டுக்கறா அகல்யா.

"நீங்க சொல்றது சரிதான் அண்ணா. ஆனா நீங்க இந்த்ரனா மாறி தேவாளோட பேசிண்டிருந்ததை நெறய பேர் பாத்திருக்காளே? அதுவும் நல்லா அனுபவிச்சுப் பேசிண்டிருந்தேளே? அவா போய் ஏதாவது கோள் சொல்லிட்டா? இந்த்ரனுக்கு சந்தேகக் குணமாச்சே? இன்னோரு இந்த்ரன் எங்கேந்து வந்தான்னு யோசிச்சா?"னு கிளறிவிடறா அகல்யா.

"ஏண்டிம்மா.. நீயே போய் சொல்லிக் கொடுத்துடுவே போலிருக்கே?"ங்கறான் விஸ்வகர்மா. பக்குனு அடிவயிறு பத்திக்கறது. இருந்தாலும் சமாளிக்கறான். "அது நான்தான்னு யாருக்கும் தெரியாதே, உனக்கு மட்டுந்தானே தெரியும்? நீ என்ன ஒங்கண்ணாவையே சொல்லிக் கொடுக்கவா போறே?"னுட்டு அகல்யாவைப் பாக்கறான்.

அகல்யா முகத்துல ஒரு அதீதக் களை. விஷமமா சிரிச்சுண்டே விஸ்வகர்மாவைப் பாக்கறா. அவன் கேள்விக்கு பதில் சொல்லாம, ஒண்ணும் பேசாம, அவனை அப்படியே பாத்துண்டிருக்கா. விஸ்வகர்மாவுக்கு பயம் பிடிச்சுண்டுது. தன்னை இந்த்ர ரூபம் எடுக்கச் சொன்னக் காரணம் எல்லாம் மொள்ளப் புரியறது அவனுக்கு.

"அகல்யா, நீ என்னோட தங்கையில்லையா? ஒனக்கென்ன வேணும் சொல்லு, நான் செய்யறேன். இந்த்ரன் கிட்டே மட்டும் இதைச் சொல்லிடாதே. என்னைக் காப்பாத்து"னு சாஷ்டாங்கமா அகல்யா கால்ல விழறான். பயம் வந்தாலும் தன்னம்பிக்கை போனாலும் புருஷாளுக்கு என்ன பணறதுன்னே தெரியாது. அகல்யா அவனைத் தடுத்து, "என்ன அண்ணா இது? நான் உங்க தங்கையாச்சே, ஒங்களைக் காட்டிக் குடுப்பேனா?"ங்கறா. அப்புறம் சாவதானமா, "நீங்க எனக்கு ஒரு கார்யம் பண்ணினாப் போறும். பண்றேள்னு சொல்லுங்கோ, நான் இந்த்ரன் கிட்டே மூச்சு விடலை"னு சொல்றா.

"என்ன பண்ணனும் சொல்லு, சத்யமா பண்றேன்"னு வாக்கு கொடுக்கறான் விஸ்வகர்மா. அசடு.

அகல்யா தனக்கு என்ன வேணும்னு அவன் கிட்டே விளக்கமா சொல்றா.

அதைக் கேட்டதும் விஸ்வகர்மா மொகத்துல களையே இல்லை. "என்ன அகல்யா, இப்படிப் பண்ணச் சொல்றே?"னு கேக்கறான்.

"இதை விட்டா வேறே வழியே இல்லை அண்ணா. உங்களுக்கும் எனக்கும் இந்த்ரனுக்கும் ஆபத்து வராமே இருக்கணும்னா நீங்க இதுக்கு ஒத்துண்டே ஆகணும். எனக்காகவாவது நீங்க இதைப் பண்ணித்தான் ஆகணும். இல்லேன்னா ஒரு வேகத்துல நான் இந்த்ரன் கிட்டே ஒங்களைப் பத்திச் சொல்லிடுவேன்"னு, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டும்பாளே அது மாதிரி, சொல்லிடறா அகல்யா.

"சரி, இந்த்ரன் எங்கிட்டே வந்ததும் நீ சொன்னபடி செய்யறேன். நல்ல தங்கச்சி வந்து வாச்சாளே எனக்குனு"னுட்டு புலம்பிண்டே வாக்கு கொடுக்கறான் விஸ்வகர்மா.

"மறந்துடாதீங்கோ அண்ணா, இப்படிக் கேக்கறேனேனு தப்பா நினைக்காதீங்கோ. உங்களைக் காட்டிக் குடுத்தா நேக்கு மட்டும் நிம்மதி இருக்கும்னு நினைக்கறேளா?"னு சொல்லிட்டு அங்கேந்து கிளம்பறா.

காரணத்தோடே தானே விஸ்கர்மாவைப் பாத்துப் பேசிட்டு வந்தா அகல்யா? இந்த்ரன் பூலோகம் வந்தாச்சு, இனிமே நெனச்சதெல்லாம் ஒண்ணொண்ணா கை கூடி வரும்னு மனசுக்குள்ள சிரிச்சுண்டே ஆஸ்ரமத்துக்குள்ளே போனா அகல்யா.

அங்கே கௌதமர் காத்துண்டிருக்கார்.

மிச்சக் கதை அடுத்த ப்ரசங்கத்துல.►►



2011/12/18

ஸ்மரண யாத்ரை

(பெரிய) சிறுகதை


1 ◀◀ பூர்வத்துலே..

    துக்குள்ள மாமா லேசா தொண்டைய கனைச்சுண்டார். என்னை அங்கேயே இருக்கும்படி சைகை காண்பிச்சார். காசித்துண்டால வாயைப் பொத்திண்டு பொழக்கடை பக்கம் போனார்.

'ஆகா, என்னமோ புதுசா கதை சொல்றார்'னு காத்துண்டிருக்கேன். அதுக்குள்ள மாமி ரெண்டு கைலயும் ரெண்டு தட்டைக் கொண்டு வந்தா. ரெண்டு தட்லயும் கிண்ணம். எழுந்து கை குடுப்போம்னு நினைக்கறச்சே, "சாப்டுங்கோ, போளியும் பால்பாயசமும் பண்ணினேன்"னுட்டு என் எதிர்ல தட்டையும் கிண்ணத்தையும் வச்சார். "எங்க போனார்? அவர் சொல்றதை எல்லாம் கேட்டுண்டிருக்காதீங்கோ.. என்னமாவது சொல்வார்.. அவருக்கு சித்தசுவாதீனம் இல்லையோனு நேக்கே செல சமயம் தோணும்"னு சொல்லிட்டு உள்ளே போனார். "பாயசம் ஆறிடப் போறது, சீக்கிரமா சாப்டுங்கோ ரெண்டு பேரும்"னார்.

நான் பாயசத்தைப் பாத்தேன். சுண்டக்காய்ச்சின பால், நெய்யில வறுத்து வேகவச்ச ஜவ்வரிசி, குங்குமப்பூ, ஏலக்காய், முந்திரிப்பருப்புனு வாசனை மூக்கைத் துளைக்கறது. "மாமா வரட்டும்"னு சொன்னேன்.

ஒண்ணு மட்டும் நேக்குப் புரியலை. மாமாவுக்கோ நிரந்தர உத்யோகம் இல்லை. பூர்வீக சொத்தும் இல்லை. ஆனா பாருங்கோ, எங்களுக்கு சாப்பாடு போட்ட தாம்பாளம் வெள்ளி. மாமி கழுத்துலயும் காதுலயும் கைலயும் ஜாஸ்தி இல்லேன்னாலும், ஏதோ மினுக்கறது. பகு ப்ரமாதமா விருந்து பண்ணிப் போட்டுட்டு, இப்ப என்னடான்னா வெள்ளிக் கிண்ணத்துல பால்பாயசம் கொண்டு வரார். இதுக்கெல்லாம் எங்கேந்து முடியறது இவாளாலனு நேக்குத் தோணினாலும், ஒண்ணும் கேக்கலை. விருந்தோம்பல்னா செல பேருக்கு தெய்வ கைங்கர்யம்னு கேள்விப்பட்டிருக்கேன்.

அதுக்குள்ள மாமா வந்து, "எல்லாம் அந்த திருவாழத்தான் வேலை"னார்.

நேக்குப் புரியலை. "யாரு? என்ன?"னேன்.

"எதுத்தாத்து ராமலிங்கம் ஓய். என்னோட செப்புக் கிண்ணத்தை வாங்கிண்டு போனான், திருப்பித் தரலை. இப்போ வெத்தலை போட்டா, எழுந்து போய் துப்பிட்டு வர வேண்டியிருக்கு"னார்.

யாரோ ராமலிங்கம் இவரோட செப்புக் கிண்ணத்தை வச்சுண்டு என்ன பண்ணினா, நமக்கென்ன ஹானி சொல்லுங்கோ? "மாமா.. அகல்யை பத்திச் சொல்ல ஆரம்பிச்சேள்"னேன்.

"சொல்றேன். மொதல்ல போளியும் பாயசமும் சாப்பிடும் ஓய்"னு மாமா சொன்னதும், கண்ணாலயும் மூக்காலயும் அனுபவிச்சுண்டிருந்த பாயசத்தை ஆச்வாதம் பண்ண ஒரு வாய் எடுத்துண்டேன்.

ஆகா! அம்ருதம் எப்படி இருக்கும்னு நேக்குத் தெரியாது, ஆனா இந்த பாயசத்தோட பாதி ருசி அதுக்கு இருக்கும்னா, தேவாசுர யுத்தம் ஏன் வந்துதுனு புரிஞ்சு போச்சு. அப்படி ஒரு அலாதி ருசி போங்கோ. இதைப் பண்ணின மாமியைக் கட்டிப் புடிச்சு ஒரு முத்தம் கொடுக்கலாம்னா, மாமா ஏதாவது சொல்லுவாரோனு பேசாம இருந்துட்டேன். போளியையும் பாயசத்தையும் ரசனையே இல்லாம க்ஷணத்துல கபளீகரம் பண்ணிட்டு, தட்டையும் கிண்ணத்தையும் தடால்னு கீழே வச்சுட்டார் மாமா. 'என்னடாது, இந்த மனுஷனுக்கு அனுபவிக்கத் தெரியலையே?'னு நேக்கு தோணித்து.

சாப்பாட்டு ரசனை பாருங்கோ, அது காதலிக்கிற மாதிரி. நல்ல சாப்பாட்டை பஞ்சேந்த்ரியம், அதான் அஞ்சு புலன்ம்பாளே, மெய் வாய் கண் மூக்கு செவி, எல்லாத்தாலயும் அனுபவிக்கணும்.

த்ருஷ்டாந்தத்துக்கு, காதலியோட லாவண்ய மொகத்தைப் பாக்கறேள்னு வச்சுங்கோ. பொண்கள்ளாம் காதலனோட மொகத்தைப் பாக்கறதா நெனச்சுக்குங்கோ, அசுவத்தாமனுக்கு ஸ்த்ரீபுருஷ பேதம் கெடயாது. காதலியோட உதடு வாவானு ஏங்கறது. ஓடிப் போய் பச்சுனு ஒரு முத்தம் குடுத்துடலாம், தப்பில்லை. ஆனா பாருங்கோ.. மொகத்தைக் கைல ஏந்திண்டு உதட்டைத் தொட்டும் தொடாம கிட்ட கொண்டு போய்ட்டு, வெளையாட்டா கொஞ்சி, அவ முகத்து வாசனையையும் மூச்சு சப்தத்தையும் அனுபவிச்சுண்டே, லேசா உரசி, கொஞ்சம் கொஞ்சமா அந்த முத்தம் உதட்டுல ஆரம்பிச்சு, மூளையில ஏறி, மனசுல பதியறதுக்கு அவகாசம் கொடுத்தேள்னு வச்சுங்கோ, அது முத்தம். அப்படி அனுபவிச்சா தானே காதலிக்கும், நாம அவளை மதிக்கறோம்னு தெரியும் இல்லையோ? முத்தத்துக்கும் அதானே மதிப்பு?

அந்த மாதிரி, நேக்கு அந்த பாயசத்தை சித்த அனுபவிச்சு சாப்டலாமேனு தோணித்து. போளியை சின்ன துண்டா பிச்சு பாயசத்துல தோச்சு ஒரு வாய், போளி தனியா ஒரு வாய், அப்றம் பாயசம் தனியா ஒரு வாய்னு மாத்தி மாத்தி சாப்ட வேண்டாமோ? ஆனா.. இந்த மனுஷன் புர்ர்னு உறிஞ்சு தட்டைக் கீழே வச்சுட்டு என்னையே பாக்கறார். என்ன பண்றது, நானும் பீமபோஜனம் பண்ணிட்டு தட்டையும் கிண்ணத்தையும் கீழே வச்சேன்.

கதையை விட்ட எடத்திலந்து சொல்ல ஆரம்பிச்சார் மாமா.

    ந்த்ரன் நெலமை இப்படி இருக்கச்சே, பூலோகத்துல அகல்யா மனசு சஞ்சலப்படறது.

தன்னை யாரோ கவனிச்ச மாதிரி அவளுக்குத் தோணறது. இந்த்ரனா இருக்குமோனு நெனக்கறா. பூலோகத்துல இருக்கற அத்தனை பொண்களையும் இந்த்ரன் பாத்துண்டிருப்பான்னு அகல்யா பொதுவா கேட்டிருந்தாலும்.. ராஜேஸ்வரி மாமி.. இதை நான் சொல்லலை, இந்த்ரன் த்ரிலோகத்துப் பொண்களை சதா கண்காணிச்சுண்டு இருக்கறதா புராணத்துல சொல்லியிருக்கு.. லோகத்து புருஷாளுக்குத்தான் க்லேசம்.. இருந்தாலும் இந்த்ரன் தன்னை மட்டும் கவனிச்ச மாதிரி அகல்யாவுக்குத் தோணித்து. ரிஷிபத்னியோல்லியோ? கோவம் வரது. சாபம் குடுக்க நெனக்கறா. ஆனா க்ஷணத்துல கோவம் மறைஞ்சு போறது. தலை சுத்தறது. கரையோரமா இருந்த துணி துவைக்கற கல் ஒண்ணு மேலே உக்காந்து ஆசுவாசப்படுத்திக்கறா. தான் கௌதமரோட பத்னினு நெனச்சுண்டிருந்த அகல்யாவுக்கு திடீர்னு என்னென்னவோ ஞாபகம் எல்லாம் வரது. தன்னோட பூர்வீகம் ஞாபகம் வரது. ஸ்ரீராம் அண்ணா சிலாகிக்கற மாதிரி ப்ளேஷ்பேக்கா ஓடறது அவ மனசுல. பூமிக்கு வரதுக்கு முன்னாடி பிரம்மாவோட பேசினதும், இந்த்ரனோட சந்திப்பும், அகல்யாவுக்கு ஞாபகம் வரது.

பிரம்மா சொல்றார், "உன்னைப் போல ஒரு சுந்தர ஸ்வரூபிணியை இதுவரைக்கும் நான் படைக்கலை. இனிமே படைக்கவும் போறதில்லை". அவளைப் படைச்சதா சொன்னதும், பிரம்மா கால்ல விழறா அகல்யா. "நித்யகீர்த்தியோட இரும்மா"னு ஆசீர்வாதம் பண்ணிட்டு, "உன்னை யாருமே புரிஞ்சுக்க முடியாது. அதனாலயும் உனக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு வ்யாதியாலயும் உனக்கு அகல்யானு பேர் வைக்கறேன்"னார் பிரம்மா.

"எனக்கு என்ன வ்யாதி?"னு கேக்கறா அகல்யா.

"நான் சொல்லமாட்டேன், தானா உனக்குத் தெரியும். படைக்கும் போது ஒரு சின்ன தப்பு செஞ்சுட்டேன். அதான். ஆனா பயப்படாதே, நீ பூலோகத்துலந்து திரும்பி வரச்சே இந்த வ்யாதியை அங்கேயே விட்டுட்டு வந்துடலாம். இந்த வ்யாதியினால ஒன்னோட கீர்த்தி ஒசரப்போறது"னுடறார் பிரம்மா.

"பூலோகமா? எதுக்கு?"ங்கறா அகல்யா. "இப்பத்தானே என்னைப் படைச்சேள்?"

"கௌதமர்னு ஒரு மகரிஷி, மகா தபஸ் பண்ணிண்டிருக்கார். அவரோட தவபலத்தைக் கொஞ்சம் திசை மாத்திவிட உன்னை அவருக்கு தாரமா கொடுத்து, சேவை செய்யச் சொல்லப்போறேன். நீ அவருக்கு நானாவித சிஸ்ருஷையும் பண்ணி, அவர் தவத்தை கட்டுப்படுத்தணும்"

"நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்"னு சமத்தா சொல்றா அகல்யா.

"செய்யச் சொல்றதை செய். செய்யக்கூடாதுனு சொல்றதை செய்யாதே"னு புதிர் போடறார் பிரம்மா.

"என்ன செய்யக்கூடாது?"

"நாளைக்கு வருஷாந்த்ர மகோத்சவம். நீ உன் இஷ்டத்துக்கு தேவலோக உத்சவத்தை அனுபவி. ஆனா, இந்த்ரன் கண்ல மட்டும் படாதே. பட்டாலும் அவனை நீ பாக்காதே. அப்படியே பாத்தாலும் ஒரு வார்த்தை பேசாதே. அப்படியே பேசினாலும் அவனையோ அவன் சொன்னதையோ மனசுல வச்சுக்காதே. அப்படியே மனசுல வச்சுண்டாலும் ஒடனே மறந்துடு"னு சொல்லிட்டு வேகமா போயிடறார் பிரம்மா.

மனசு இருக்கு பாருங்கோ, விசித்ரமா வேலை செய்யும். ராமஜபம் பண்ணச் சொன்னா, மனசு கேக்கறதோ? அப்பத்தான் ஜிலுக்கடி ஜிகினானு பாட்டு ஞாபகம் வரதில்லையோ? வைராக்யத்தைப் பிடிச்சுக்கோன்னா வையாக்ரத்துலனா தடுக்கி விழறது? 'பாக்காதே, பேசாதே, நினைக்காதே'னு பிரம்மா சொன்னதெல்லாம் 'கண்டிப்பா பாத்துடு, பேசிடு, மனசார நினைச்சுக்கோ'னு அர்த்தமாறது அகல்யாவுக்கு. ஒண்ணும் புரியாம, சரி, மறுநாள் பாத்துக்கலாம்னு விட்டுடறா.

மறுநாள் ஞானோத்சவ வைபவத்துல அகல்யை இந்த்ரனைப் பாத்ததும் என்ன ஆச்சுனுதான் நமக்குத் தெரியுமே? பாத்த க்ஷணத்துலயே 'என்னோட மனசு ஒனக்கு, ஒன்னோட மனசு எனக்கு'னு ரெண்டு பேரும் நைமேயம் பண்ணிண்டது தெரியுமே? எங்கிட்ட இருக்கறது அவரோட மனசுன்னா? இதுல அவர் சொன்னதை வச்சுக்கவோ மறக்கவோ எனக்கு க்யாதியில்லையே? என் மனசுதான் எங்கிட்டயே இல்லையே? இன்னும் சித்த நாழி அவர் முகத்தை பாத்துண்டு இருந்திருக்கலாமோ? அங்கே என்னை பொசுக்கிட்டு எங்கே இந்த கிழட்டு பிரம்மனைக் காணோம்?'னு நெறைய பிரச்னச்சின்னம் அதான் கேள்விக்குறி போட்டு நினைச்சுக்கறா. ஞானோத்சவத்துல இந்த்ரனை விட்டு பொசுக்னு கிளம்பினதை நெனச்சு வருத்தப்படறா.

டாண்ணு பிரம்மா வந்துட்டார். "என்ன அகல்யா, ரெடியா? முன்னாடியே வந்தேன்.. ஒன்னைக் காணோம்னு சரஸ்வதியைப் பாத்து.."

"விஸ்வகர்மாவைப் பாத்துப் பேசினேன். வர நாழியாயிடுத்து. எதுக்கு என்னைப் பொசுக்கினேள், இந்த்ரன் இருந்த இடத்துலேந்து?"னா அகல்யா.

பிரம்மாவும், "இல்லேன்னா ஒன்னை அங்கயே த்வம்சம் பண்ணியிருப்பான் போலத் தோணித்து.. பார்வையா பாக்கறான் பாவி? ம்ம்ம்.. இந்த்ரனை விட்டு வரதுக்குள்ள போறும்னாயிடுத்து.. ஒன்னையே நெனச்சுண்டிருக்கான்.. பக்கம் வராதடா படவானு நன்னா சொல்லிட்டு வந்திருக்கேன்"னார்.

திடீர்னு அகல்யா மொகத்தைத் தூக்கி வச்சுக்கறா. "பூலோகத்துக்குப் போகப் பிடிக்கலை"னு சொல்றா. "இனிமே இந்த்ரனைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது, யாருக்கும் சிஸ்ருஷை பண்ண முடியாது. இந்த்ரனும் என்னைக் காதலிக்கறது தெரியும். நீங்க சொல்றபடி கேக்க முடியாது"னு சொல்றா.

பிரம்மாவுக்குத் தூக்கிவாரிப் போடறது. பெத்தவனையே எதிர்த்துப் பேசறாளே? தன்னோட தப்பு அதுக்குள்ள விஸ்வரூபம் எடுத்துடுத்தேனு அவருக்கு விபக்கம்.. கடுப்பு. "இந்தா தடிச்செருக்கி.. இந்தக் காதல் கீதல்னு பேச்சே ப்டாது இந்த இடத்துல. ப்டாதுன்னா ப்டாது"னு ஏகதேசத்துக்கு கோவப்படறார். அப்புறம் சாந்தமாகி, "கொழந்தே.. ஏதோ தெரியாம கோபிச்சுண்டேன். மனசுல வைச்சுக்காதே"னு சொல்றார். மண்ணெண்ணை தீந்து போற அரிக்கேன் விளக்காட்டம் பிரம்மா மனசு பக்கு பக்குனு அடிச்சுண்டுது. "அவனுக்குக் கல்யாணம் ஆகி ஒரு இந்த்ராணி கூட இருக்காளே?"னு சொல்றார் பிரம்மா. சொல்லும்போதே அவருக்கு தன்னோட வீக் பாயின்ட் புரிஞ்சு போயிடுத்து.

"காதலாகப்பட்டது சித்தாந்தம். கல்யாணம் வெறும் சடங்குதானே? அதனால இந்த்ரனோட கல்யாணத்தையும் மதிக்கிறேன், அவரோட காதலையும் மதிக்கிறேன். என்னோட காதலை விட்டுக்குடுக்க முடியாது"னு சொல்லிடறா அகல்யா. "ஒரு வேளை அவர் என்னையும் இந்த்ராணியாக்கலாம்"னு சொல்றா.

'இது ஏதுடா வம்பா போயிடுத்தே?'னு இருக்கு பிரம்மாவுக்கு. 'இவளை ஏதாவது சொல்லி வழிக்கு கொண்டு வரணுமே'னு நினைக்கறார். "இந்தாம்மா அகல்யா, நீ இந்த்ரனைக் காதலிக்கறதா சொல்றே, அவனுக்காக ஒரு சின்ன த்யாகம் கூட பண்ண மாட்டேங்கறியே? அவன் என்னடான்னா நேக்கு இந்த்ர பதவி வேண்டாம், அகல்யாதான் வேணுங்கறான். ஒன்னால அவனுக்கு இந்த்ர பதவி போயிடப்போறது போ"னு அளந்து சொல்றார் பிரம்மா.

"இந்த்ரனுக்காக என்ன த்யாகம் வேணும்னாலும் செய்வேன். என்ன செய்ய்யணும்?"னு கேக்கறா அகல்யா.

பிரம்மா விட்டுப் பிடிக்கறார், "இல்லம்மா, ஒனக்கு அவன் மேலே ரொம்ப ப்ரீதி வந்துடுத்து. இனிமே நீயாச்சு, இந்த்ர பதவி போன அவனாச்சு".

"இந்த்ர பதவிக்கு ஆபத்தா? ஏன்? யாராலே?"னு வெகுளியா கேக்கறா அகல்யா.

"கௌதம ரிஷி இருக்காரே, அவராலதான் ஆபத்து. தவ ஸ்ரேஷ்டர். அவரை இப்படியே தவம் செய்யவிட்டா இந்த்ர பதவிய அவருக்குக் கொடுக்க வேண்டி வரும். நீதான் அவருக்கு எல்லா விதத்துலயும் உதவியா இருந்து அவர் தவத்தைக் கட்டுப்படுத்தணும். இந்த த்யாகத்தை செய்வியா?"

"என்னுடைய காதலை விட்டுக்கொடுத்து, இன்னொருத்தரைக் கல்யாணம் செய்யச் சொல்றேளே?"னு அழறா அகல்யா.

"பூலோக விவாகம் தேவலோகத்துல செல்லாது கொழந்தே.. யாருக்காக கேக்கறேன்? எல்லாம் உன் காதலனுக்காகத் தானே? இந்த்ரன் எப்பவுமே தேவராஜாவா இருக்கணும்னு நீ மனசார நினைக்கறேனு தெரிஞ்சதால தானே கேக்கறேன்? நீ இந்த த்யாகத்தைப் பண்ணலைனா, அவன் இந்த்ர பதவி போனப்புறம் உன் மனசு பாடுபடக் கூடாதேனு தானே கேக்கறேன்?"னு அடுக்கி விடறார் பிரம்மா.

"எங்களோட காதல் உங்களுக்கு புரியலையா?"னு விசும்பறா அகல்யா.

பிரம்மா கொஞ்சம் விட்டுப் பிடிக்கறார். "அழாதே. அழறதுக்காகவா உன்னை இத்தனை அழகா படைச்சேன்? அழாதே. சரிம்மா கொழந்தே. உன்னோட காதல் நேக்குப் புரியறது. அதுவும் மொதல் காதல் வேறே. காதலிக்கறவாளைப் பிரிக்கற கல்நெஞ்சக்காரன் இல்லை நான். வேறே ஏதாவது ஏற்பாடு செஞ்சுக்கறேன்"னு சொல்லிட்டு புறப்படற மாதிரி பாவலா பண்றார். "ஒரு வேளை, என்னால கௌதமரோட தவத்தைக் கட்டுப்படுத்த முடியாம போய் இந்த்ரனுக்கு தேவராஜ அந்தஸ்து போனாலும், நீ இதைச் செய்யாம இருந்துட்டேங்கறதை நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன். இந்த்ரன் கிட்டே மட்டும் நிச்சயமா சொல்ல மாட்டேன். நீ தியாகம் பண்ணாததாலே அவன் பதவி போச்சுனு அவனுக்குத் தெரியவே படாது. வரட்டுமா?"னார். கடைசியாச் சொன்னது அகல்யா மனசுல பதியணும்ங்கறதுக்காக கொஞ்ச நாழி நிக்கறார். சண்முகத்தையும் மோகனாவையும் பிரிக்க வைத்தி வில்லத்தனம் கத்துண்டது யார்ட்டேனு நினைக்கறேள்?

அதுக்குள்ள அகல்யா கண்ணைத் தொடச்சுண்டு, "சரி, நான் இந்தத் த்யாகம் பண்றேன்"னு சொல்றா. "நீங்க எனக்கொரு வரம் தரணும். பூலோகத்துலந்து திரும்பி வந்ததும் என்னையும் இந்த்ரனையும் சேத்து வைக்கணும்".

"தந்தேன்"னுடறார் பிரம்மா. வரம் தரதுக்கு முன்னால துளியாணும் யோசிக்குமோ இந்த மூர்த்தி? என்னிக்கு யோசிச்சு வரம் கொடுத்தார், இன்னைக்கு யோசிக்க?

"ரொம்ப சந்தோஷம். நான் இப்பவே பூலோகம் போகத் தயார்"னு சொல்றா அகல்யா.

"ஒன்னோட பேரும் கீர்த்தியும் சிரஞ்சீவியா நெலைக்கப் போறது. இந்த த்யாகத்தைப் பண்ணுவேனு தெரியும். ஆனா.."னு இழுக்கறார் பிரம்மா.

"என்ன?"ங்கறா அகல்யா.

"எந்தக் காரணம் தொட்டும் நீ பூலோகத்துல இந்த்ரனைப் பாக்கவே கூடாது. அப்படிப் பார்த்தா, அதனால உண்டாகக் கூடிய அபாயத்துனால நீ இங்கே திரும்பி வர அனேக வர்ஷாயுதமாகலாம்"னு சொல்றார் பிரம்மா. வர்ஷாயுதம்னா பத்தாயிரம் வருஷம்.

"அனேக வர்ஷாயுதமா? என்ன அபாயம்?"னு கேக்கறா.

"என்னால அதைச் சொல்ல முடியாது. நீ இந்த்ரனைப் பாத்தாலும் சரி, அவன் உன்னைப் பாத்தாலும் சரி, ஒனக்குத்தான் அபாயம் வரும்னு மட்டும் சொல்ல முடியும்"னுடறார் பிரம்மா.

பாருங்கோ.. பிரம்மா சறுக்கினது இங்கதான். சபைலே நெறைய பேர் இருக்கா. சேல்ஸ்ல இருக்கறவாளுக்கு நான் சொல்றது புரியும். சாய்ராம் அண்ணாவைக் கேளுங்கோ சொல்வார். வியாபாரம் முடியற சிக்னல் கிடைச்சப்புறம் வளவளனு ஏதாவது பேசப்படாது. வியாபாரத்தை முடிச்சோமா, ஆர்டரை வாங்கினோமானு இருக்கணும். சேல்ஸ் க்ளோஸ் ஆற டயத்துல எதையாவது சொன்னா ஏடாகூடமாயிடும். டிஸ்கவுன்ட் குடு வாரன்டி குடுனு எக்ஸ்ட்ராவா கேக்க மாட்டாளோ?

அகல்யா 'வாங்கோ பூலோகம் போலாம்'னு சொன்னாளோனோ? அந்த இடத்துல டீலை க்ளோஸ் பண்ணாம, அபாயம் கிபாயம்னு எதாவது சொல்லலாமோ பிரம்மக் கிழம்? அண்வ வாயிருக்கச்சே ரகஸ்யம் ஏதாவது மனசுல நிக்குமோ? பிரம்மாவுக்கு சல்லடை வாய்னு அகல்யாவுக்குப் புரிஞ்சு போச்சு.

"பூலோகத்துல அடியெடுத்து வச்சதும் எனக்கு இந்த்ரன் ஞாபகமே இருக்காதே? அவரைப் பார்த்தாலும் அடையாளம் தெரியாதே?"னு நைசா சொல்றா.

"ஆனா இந்த்ரனுக்கு ஞாபகம் இருக்குமே? அவன் உன் கண்ணை எங்கேந்து பாத்தாலும் உனக்குப் பூர்வீகமெல்லாம் தெரிஞ்சுடுமே? அதனால உன்னைக் கண்ணாலயும் பாக்கக் கூடாது, உன்னை மறந்துடணும்னு அவன் கிட்டே திட்டமா சொல்லியிருக்கேனாக்கும்"னு பெருமையா சொல்றார் பிரம்மா.

"அப்போ, பதிலுக்கு நீங்க எனக்கு ரெண்டு வரம் தரணும்"னு கேக்கறா.

"வரமா? என்ன சொல்லு.."னு இழுத்தார் பிரம்மா.

அகல்யா சித்த நாழி யோசிக்கறாப்ல நடிக்கறா. பிரம்மா ஓட்டை வாய்னு தெரிஞ்சதுமே அவ சப்ஜாடா ப்ளான் போட்டாச்சே? புத்திசாலிப் பொண்ணோல்லியோ? "சரி, நீங்க சொல்ற மாதிரி நான் இந்த்ரனைப் பாக்கலை. ஆனா அவர் என்னைப் பாத்தா நான் என்ன செய்ய முடியும்? ஆம்பளையோட முட்டாள்தனத்துனால பொம்பளைக்கு ஆபத்து வரது நியாயமா படலியே? அதனால அவர் என்னை முதல்ல பாத்தார்னு வைங்கோ, எனக்கு அபாயம் வரதுக்கு முன்னாடி அவருக்கு விஸ்வகர்மா ஞாபகம் வரணும். ரெண்டாவது, பூலோகத்துல இருக்குற வரைக்கும் எனக்கு எதையாவது அடிக்கடி ஆகாசத்துல எறியத் தோணனும். இதான் நான் கேக்கற வரம்"னா.

விஸ்வகர்மாவைப் பாக்கணுமா? ஆகாசத்துல எதையாவது எறியணுமா? வரம் கேக்கத் தெரியலியே இவளுக்கு? ரொம்ப சோமபானம் குடிச்சிருப்பாளோ இந்தப் பொண்ணு? பிரம்மாவுக்கு ஒண்ணும் புரியலை. யாராலயும் புரிஞ்சுக்க முடியாதவள் என்கிறதால தானே அவளுக்கு அகல்யானு பேர் வச்சார்? என்னென்னவோ நெனச்சுக்கறார். ஆளவிட்டாப் போறும்னு இருக்கு. சரினு தலையாட்டறார். அவர் காரியம் ஆகணும் அவருக்கு.

பெரிய சமஸ்தான ராஜாக்கள் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானத்துல முடிஞ்ச மாதிரி இருக்கு ரெண்டு பேருக்கும். "பூலோகத்துல கார்த்தால இருக்கணுமாக்கும். தயாரா இரு, வரேன். சொன்னதை மறந்துடாதே"னுட்டு பிரம்மா கிளம்பிப் போயிடறார்.

    கொஞ்ச நாழி கழிச்சு, இந்த்ரன் வந்தான். அகல்யாவைப் பாத்ததும் "என்ன நீ? ஞானோத்சவத்துல பொசுக்னு காணாமப் போயிட்டே? உன்னைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. எனக்கு இந்த்ர பதவி வேண்டாம்னு உன் கிட்ட வந்துட்டேன். இனிமே நீ தான் எனக்கு பூலோகம், தேவலோகம், ஸ்வர்க்கம் எல்லாம்"னு சொல்றான்.

'இது ஏது ரெண்டுங்கெட்டானா மண்டூகமா இருக்கே? இதுக்கா இப்படி த்யாகம் பண்ணினோம்?'னு தோணறது அகல்யாவுக்கு. இருந்தாலும் தன் மேலிருந்த வாஞ்சையினாலும் ப்ரேமையினாலும் தானே இந்த்ரன் எல்லாத்தையும் விட்டு ஓடி வந்தான்னும் தோண்றது. ஒடனே இந்த்ரனை ஆலிங்கனம் பண்ணிக்கறா. இந்த்ரனும் அவளை அப்படியே அள்ளிக்கறான். அவளோட ஸ்தனம் ரெண்டும் அவனோட ஹ்ருதயத்தை அழுத்தறது. ஸ்தனமுக்யம் முறிஞ்சுபோயிடற மாதிரி உத்வேகத்தோட அணைச்சுக்கறான். அவ மூச்சோட உஷ்ணம் அவன் முகத்தைப் பொசுக்கறது. அவனும் அதே வேகத்தோட அவ மொகத்துல உதட்டால ஒத்திப் பாக்கறான். சின்ன முத்தம். ம்ருதுசும்பம்னு பேரு. அப்புறம் அவளோட நயனம், நாசினு மாறி மாறி முத்தமா பொழியறான். சும்பானந்தம்னு பேரு. முத்தமே லாகிரி வஸ்துவா மாறி மனுஷாளைக் கெறங்க அடிச்ச நிலை. முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வரனு புலவர் பாடலியோ? அகல்யாவோ இந்த்ரனுக்கு ஒரு படி மேலே போறா. அவனோட கைகளை எடுத்து தன் இடுப்பில கொக்கி மாதிரி போட்டுக்கறா. மேகலை நழுவறது தெரியலை. ஒட்டியாணம் கழள்றது தெரியலை. இடுப்புலேந்து துணி வெலகறது தெரியலை. ரெண்டு பேருக்கும் என்ன நெலைல இருக்கோம்னும் தெரியலை. என்ன பண்றோம்னு புரியலை. புரிஞ்சப்போ ரெண்டு பேரும் கலந்தாச்சு.

ஒருத்தரை ஒருத்தர் மனசோட மட்டும் நெனச்சுண்டிருந்தா, அது வெறும் ப்ரேமை.. மானசீகக் காதல்னு சொல்வா. ரெண்டு பேர் உணர்ச்சியும் கலந்தாத்தான் மானசீகக் காதலுக்கு ப்ராணன் வரதும்பா. 'மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா?'னு பாடலியோ புலவர்? இதுல பாருங்கோ, கலந்தப்புறம் என்ன தெரிஞ்சு என்ன ப்ரயோஜனம்? கலந்தப்புறம் ரெண்டே நிலமை தான். ஒண்ணு பரமானந்தமான நெலமை. இல்லேன்னா பரமசங்கடமான நெலமை. இல்லையா? இவா ரெண்டு பேருக்கும் ஒரு பக்கம் பரமானந்தம், இன்னொரு பக்கம் பரமசங்கடம். ஒரு பக்கம், ஆத்ம காதலுக்கான ஆசீர்வாதம் கெடச்சாச்சுனு குதூகலம். இன்னொரு பக்கம், காதலுக்காக ஆத்மாவையே சீதனம் கொடுக்க வேண்டியதாப் போச்சுனு சங்கடம்.

பிரம்மாவோட பேசினதையெல்லாம் அவளண்டை சொல்றான் இந்த்ரன். அவன் மார்ல தலைய வச்சுண்டே, அவளும் நடந்ததையெல்லாம் சொல்றா. அவளுக்காக அவனும் அவனுக்காக அவளும் த்யாகம் பண்ண சித்தமாயிருந்ததை சொல்லிப் பாத்து ஏகத்துக்குச் சிரிச்சுக்கறா.

"அகல்யா.. வா. எல்லாத்தையும் விட்டு ரெண்டு பேரும் எங்கேயாவது கண்காணாம ஓடிப்போயிடலாம்"னு சொல்றான் இந்த்ரன். இந்தக் காலத்து காதல் ஜோடிக்கெல்லாம் இந்த டயலாக்கைக் கொடுத்தவன், இந்த்ரன் தானாக்கும்.

"வேண்டாம். நான் திரும்பி வரப்போறேனே. வந்ததும் ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கப் போறோமே?"ங்கறா அகல்யா.

"ஏதோ ஆபத்து வரும்னு சொன்னியே?"ங்கறான் இந்த்ரன். அவன் நெஜமாவே பதறதைப் பாத்ததும் அவளுக்குச் சிரிப்பும் ஆசையும் கூடிவந்து அவனைத் தன் மேலே இழுத்துக்கறா. "நீங்க என்னைப் பாக்க வந்தாத்தானே ஆபத்து?"னு கொஞ்சறா.

"ஒன்னை பாக்காமே என்னாலே எப்படி இருக்க முடியும்?"னு பதிலுக்குக் கொஞ்சறான் இந்த்ரன்.

"நீங்கதான் எல்லாப் பொண்களையுமே எப்பவுமே பாத்துண்டு இருக்கறதா சொல்றாளே?"ங்கறா அகல்யா பொய்க் கோபத்தோடே.

"ஆனா எந்தப் பொண்ணைப் பாத்தாலும் நீயாத்தானே தெரியறது?"னு சிரிக்கறான் இந்த்ரன்.

"ஓஹோ? அப்ப என்னைப் பாக்கணும்னு உங்களுக்குத் தோணினா, ஏதாவது ஒரு பொண்ணைப் பாப்பேளோ?"னு இன்னும் கடுமையான பொய்க்கோபத்தோடே கேக்கறா அகல்யா.

"இல்லை. உன்னைத்தான் பாக்கணும். ஆனா, என்ன பண்றதுனு தெரியலையே?"ங்கறான் இந்த்ரன் ஆதங்கத்தோடே. "வேணும்னா, அந்த கௌதமரை வஜ்ராயுதத்தாலே கொன்னுடட்டுமா?"ங்கறான்.

"வேண்டாம்"னு அவ பதறிப் போயிடறா. இந்த்ரன் முகத்தை ரெண்டு கைலேயும் தாங்கிண்டு அவன் கண்ணைத் தீட்சண்யமா பாத்து, "அந்த மாதிரி அசட்டுக் காரியமெல்லாம் செய்யமாட்டேன்னு சொல்லுங்கோ"ங்கறா. அவனும் சரின்னு தலையசைக்கறான்.

"நீங்க என்னைப் பாக்க வரணும்னு எனக்குத் தோணித்துனா, ஒரு பூவை எடுத்து ஆகாசத்துல எறிவேன். அப்ப நீங்க என்னை வந்து பாக்கலாம்"னு சொல்றா.

"நான் உன்னைப் பாக்க வந்து, உனக்கு ஏதாவது அபாயம் வந்து, அப்புறம் மன்வந்த்ரக் கணக்குலே ஒன்னைப் பாக்க முடியாமலே போயிடுத்துனா?"னு இந்த்ரன் சந்தேகப்பட்டுக் கேக்கறான்.

"அதுக்குத்தான் உங்களுக்கு விஸ்வகர்மா ஞாபகம் வரணும்னு வரம் வாங்கியிருக்கேன்"னு சொல்றா அகல்யா, விஷமமா சிரிச்சுண்டே.

"விஸ்வகர்மா என்ன பண்ணப் போறான்?"னு கேக்கறான் இந்த்ரன்.

"என்னோட அண்ணா மேலே ஒரு நம்பிக்கை"னு சொல்லிட்டு இந்த்ரனைக் கீழே தள்ளறா.

"ஒண்ணும் புரியலையே?"ங்கறான் இந்த்ரன்.

"அதனாலதான் என் பேர் அகல்யா"னுட்டு அவனுக்குச் செல்லமா ஒரு முத்தம் குடுக்கறா. "பொழுது விடியப் போறது பூலோகத்துல. நான் போகணும்"னு எழுந்துக்கறா.

    கண்ணைத் தொறந்து பாத்த இந்த்ரன் கோதாவரியையும் காணாம அகல்யாவையும் காணாம தவிச்சுப் போனான். இதென்ன ஆச்சர்யம்! பூலோக நடப்பை எப்படி தன்னால கை வீசினதும் பார்க்க முடியறது? மறுபடியும் காத்துல கையைத் தேச்சான். இப்போ நன்னா தெரியறது. கரையோரமா நின்னுண்டு ஆகாசத்தையே ஏக்கத்தோட பாத்துண்டு இருக்கறவள், தன்னோட அகல்யானு தெரிஞ்சுத் துடிச்சுப் போறான்.

அப்போதான் அவனுக்கு அவள் சொன்னது ஞாபகம் வரது. "நீங்க என்னைப் பாக்க வரணும்னு எனக்குத் தோணித்துனா, ஒரு பூவை எடுத்து ஆகாசத்துல எறிவேன். அப்ப நீங்க என்னை வந்து பாக்கலாம்".

என்ன செய்யணுங்கற ஒரு தீர்மானத்தோட எழுந்துக்கறான் இந்த்ரன்.

கொஞ்சம் நிலைக்கு வந்த அகல்யா, ஆகாசத்துல பூ விட்டெறிஞ்ச எடத்தையே பாத்துண்டிருந்தா. இந்த்ரன் தன்னை இன்னும் ஞாபகம் வச்சுண்டிருப்பானா, மறந்து போயிருப்பானா?

பிரம்மா சொன்ன அபாயம் என்னன்னு இன்னும் புரியலை அகல்யாவுக்கு. ஆனா தனக்கு வந்த வ்யாதி மட்டும் என்னன்னு அவளுக்குப் புரிஞ்சு போச்சு. லாலசம்.

லாலசம் அபிகாமம் இதுக்கெல்லாம் பசலைனு அர்த்தம். நமக்கு பசலையைக் கொடுத்துட்டுப் போனது அகல்யை. வையறதானாலும் வாழ்த்தறதானாலும் நாம அகல்யாவைத்தான் வையணும், வாழ்த்தணும். அகல்யாவுக்கு முன்னாலே பூலோகத்துலே ஆத்மார்த்தமான காதலும் பிரிவும் சோகமும் சேர்ப்பும் கிடையாது. 'அண்ணலும் நோக்கினான்' 'செம்புலப்பெயநீர்' எல்லாம் அவளாலே கிடைச்சது. காதல், காதல் சம்பந்தப்பட்ட உபத்திரவம் எல்லாமே நமக்கு அகல்யா கொடுத்தது. தேவர்களுக்கு இந்த வியாதி கிடையாது. 'அகல்யா'ங்கற பதத்துக்கு 'காதல் நோய்'னும் ஒரு அர்த்தம் உண்டாக்கும். ஆத்மார்த்தமா க்ஷணம் கூடப் பிரிஞ்சு இருக்க முடியாம காதலிக்கறவாளை, அப்படிப் பிரிஞ்சு இருக்கும் போது உண்டாற அதீத மனக்கஷ்டம் இருக்கு பாருங்கோ, அதுக்குத்தான் பசலைம்பா. அதைப் பத்தி மகா பண்டிதாள்ளாம் பாட்டு எழுதித் தள்ளியிருக்கா. சபைல கூடப் பாருங்கோ. காதலைப் பத்தி அவாவா விதம்விதமா எழுதறா. இன்னோரு புலவர் மழைமுத்தம்னு பாடினதை ரொம்ப சிலாகிச்சு அப்பாதுரைனு ஒரு ஆப்தர், நேக்கு அனுப்பிச்சார். படிச்சுப் பாத்து அசந்துட்டேன். யாரிந்தப் புலவர்னு பாத்தா.. நம்ம ஹேமாவாக்கும். இந்தக் காதல் பசலை பாட்டு எழுதுறதுலே அவர் ரொம்ப பிரசித்தம்னு சொல்லிக்கறாளே?

சரி, கதைக்கு வந்துடறேன். சித்தே இருங்கோ. மோகன்ஜியாட்டம் அப்பப்போ காணாமப் போனாலும், பத்மநாபனாட்டம் திரும்பி வந்துடுவேன்.

    பூர்வீகம் எல்லாம் ஞாபகம் வந்து என்னென்னமோ யோசிச்சுண்டிருக்கா அகல்யா. வியாமோகம். மனக்கொழப்பம் தீர்ந்தபாடில்லை. ஆச்சு, ஆஸ்ரமத்துக்குப் போயாகணும். அங்கே தன்னை ஜடமாட்டம் பாவிக்கற கௌதமருக்கு சகல சிஸ்ருஷையும் செய்யணுமே? கௌதமரை அகல்யா தப்பாவே நெனைக்கலை. அவர் தபஸ்வி. தபஸ்தான் முக்யம்னு நெனைக்கறவர். அதுதான் ப்ரதான கர்மம்னு நினைக்கறவர். அவருக்கு அகல்யா ஒரு சேவகி, அவ்ளோதான். அதனால தன்னை ஜடமா பாவிச்சாலும் அகல்யா அதைப் பெரிசு பண்ணலை.

'இதுநாள் வரைக்கும் தோணாம இப்ப ஜடமாட்டம் நடத்தறதா தோணுவானேன்?'னு யோசிச்சுண்டே கரைலேந்து நடந்து வரா. மத்த ரிஷிபத்னியெல்லாம் இன்னும் ஜலத்துலயே இருக்கா. ஆஸ்ரம திக்குலே அகல்யா மட்டும் தனியா கைல ஒரு கொடத்தோட நடந்து வரா.

கொஞ்சம் தள்ளி எதிர்க்க யாரோ நிக்கறாப்ல தெரியறதே, யாருன்னு பாக்கறா. பாத்தா அவளுக்கு அதிந்து போயிடறது.

ஒரு அத்யந்த சுந்தரன் சிரிச்சுண்டே நின்னுண்டிருக்கான். அவளைப் பாத்து, "அகல்யா? என்னைத் தெரியலையா? நான்தான் இந்த்ரன்" அப்டீங்கறான்.

திடுக்கிட்டுப் போய் கைல இருந்த கொடத்தைக் கீழே போட்டுடறா அகல்யா.


மிச்சக் கதை அடுத்த ப்ரசங்கத்துல. ►►

2011/12/16

ஸ்மரண யாத்ரை

(பெரிய) சிறுகதை

    கதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன். வியாக்யானமும் சம்பாஷணையும் ஏ சர்டிபிகேட்டா எசகுபிசகா இருக்கலாம், பால்யருக்கு உசிதமில்லேனு பெரியவாள்ளாம் பவ்யமா எடுத்துச் சொல்லுங்கோ. கேக்கலேனா, செவிட்டுல ரெண்டு சாத்துங்கோ, குத்தமில்லை, பகவான் ரக்ஷிப்பார்.

மரண யாத்ரை தெரியும். அதான் பாடறாளே, நாலு பேருக்கு நன்றினு. சினிமாப் பாட்டு பாடினா எல்லாருக்கும் ஞானம் வந்துடறது. ஸ்மரண யாத்ரை தெரியுமோ? ஒரு எடத்துக்குப் போகணும்னு நெனக்கறோம்.. பஸ்சு காரு ப்ளேனுனு இல்லாம, டக்குனு நெனச்ச ஒடனே போக முடியறதுனு வைங்கோ, அதான் ஸ்மரண யாத்ரை.

எல்லாம் நடக்கற காரியந்தான் கீதா மாமி. நடந்துருக்கே? சொல்றேன், சித்த இருங்கோ. ஒரு சிட்டிகை....நல்ல பட்டணம் பொடில்லாம் இப்ப கெடைக்கறதே இல்லை...நன்னா விர்ர்ர்னு ஏர்றது.

மெட்ராஸ்ல மழை விடாது போலிருக்கே? என்னோட ஸ்கூடர் பாருங்கோ, பாதி நாள் ஓடாது. இன்னைக்கு அது சத்யமா ஓடாதுனு ஸ்டார்ட் பண்ணினா, பட்டுனு ஸ்டார்டாயிடுத்து. மழை என்னடானா ப்ரளய சம்ஸ்காரம் பண்றாப்ல கொட்டறது, இன்னைக்குப் பாத்து ஸ்டார்ட் ஆறதே சனியன்னு தர்ஜம் பண்ணிண்டே ஆப் பண்ணிட்டு, கொடை எடுத்துண்டு நடராஜா சர்வீஸ்ல ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்து நின்னா.. ஸத்யவ்ரதனோட ஓடத்துக்கு காத்துண்டுருக்கற மாதிரி, அங்க அப்படி ஒரு ஜனசந்தம். எனக்கானா இங்க வந்து சம்வாதம் பண்ணனுமே, இப்படி விளம்பிதமாயிண்டுருக்கேனு ஆயாசம். ஸ்மரண யாத்ரை பண்ண முடிஞ்சுதுனு வைங்கோ, இங்கே வரணும்னு நெனச்ச க்ஷணத்துலயே வந்திருக்க மாட்டேனோ?

என்னடா அசுவத்தாமா, இப்படி இல்லாததக் கொண்டா கல்லாததப் பாடுனு சொல்றாப்ல இருக்கேங்கறா, நம்ம மீனா மாமி. சரி மாமா, உங்க மீனா மாமி. நீங்களே வச்சுங்கோ, யார் வேண்டாம்னா? ஸ்மரண யாத்ரை பண்ண சாத்யப்படுமானு கேக்ககறா மாமி. அதுக்கு நான் சொல்றேன். ஸ்மரண யாத்ரை சாத்யம். சாத்யம். சாத்யம். இது சத்யம். சத்யம். சத்யம்.

சயன்ஸ் பிக்சன்னதும் சாத்யமெல்லாம் மறந்துட்டு வாயைப் பிளந்துண்டு படிக்கறா பாக்கறா. சயன்ஸ் பிக்சன் என்ன சுண்டைக்காய்? பாலக்ருஷ்ணனோட வாய்க்குள்ளே பூலோகம் மேலோகம் எல்லாம் தெரிஞ்சுதுனா அது கப்ஸாங்கறோம். அதையே இன்டர் ஸ்டெல்லர் விஷன்னு யாராவது சொன்னா ஆகா ஓகோங்கறோம். பகுத்தறிவிலே பரவசமாகிச் செலபேருக்கு ந்ருஜலமே வந்துடறது. சரிண்ணா, கதைக்கு வந்துடறேன். ஸ்ரீராம் இருக்கார் பாருங்கோ, விடாம தார்க்குச்சி போட்டுண்டே இருப்பார்.

நெனச்ச மாத்ரத்துல என்னண்ணா, நெனச்ச ரூபத்துல கூடப் ப்ரயாணம் பண்ணலாம். எல்லாத்துக்கும் நம்ம இதிகாசத்துல சாக்ஷி இருக்கு. நிதர்சனமா.. இன்ன முறைலே இன்ன விதமா எப்படி பண்ணனும்னு சிஷ்டாத்வமா சொல்லியும் வச்சுருக்கா. கிருஷ்ணர் முருகர் எல்லாம் டக்கு டக்குனு இங்கயும் அங்கயும் போனார், தர்சனம் கொடுத்தார்னெல்லாம் படிச்சிருக்கோமே. கேட்டிருக்கோமே. எல்லாம் இப்படியாகப்பட்ட பயணம் தான். சந்தேகமே வேண்டாம்.

பகவானை விடுங்கோ. நேத்தி பேப்பர்ல பாத்தேளா? போன மாசம் நடந்த விருத்தாசலம் கோவில் திருட்டுப் பத்தி தகவல் போட்டிருக்காளே? கோவில் குருக்கள் தான் எல்லாத்தையும் திருடினார்னு குத்தம் சாத்தி அவரை ஜெயில்ல போட்டுட்டாளே? இவர் என்னடானா, 'திருட்டு நடந்த அன்னைக்கு நான் ஊர்லயே இல்லை, இது எப்படி சாத்யம்?'னு கதறிக் கதறிக் கேக்கறார். கதறினாலும், அவரைக் கண்ணால பாத்ததா எத்தனை பேர் சத்யம் பண்ணியிருக்கா பாருங்கோ! எனக்கென்னவோ குருக்கள் அன்னிக்கு ஊர்ல இல்லைனு சொல்றது வாஸ்தவமாப் படறது. வேற யாரோ.. குருக்கள் ரூபத்துல வந்து, அவாளே திருடிட்டு ஸ்மரண யாத்ரை பண்ணி காணாம போயிருக்காங்கறேன். குருக்கள் பாவம், மாட்டிண்டிருக்கார். குருக்கள் தானே, பொய் சொல்லுவார்னு தோணிடுத்து எல்லாருக்கும். என்ன பண்றது? நெலமை... குருக்கள், மடத்துக்காராளை எல்லாம் ஜெயில்ல போடறதை கொஞ்ச நாள் பாக்காம இருந்தோம்.. இப்போ மறுபடி அடியைப் பிடிரா பாரதபட்டானு கிளம்பிடுத்தோனு தோண்றது..

நான் உளறலை மாமி. புத்தியோட, வித்யிதமாத்தான் பேசறேன்.

போன மாசம் என்னோட மாமனார் தவறிப் போயிட்டார்னு நானும் பார்யாளும் போயிருந்தோம். மாமனாரோட மரண யாத்ரைக்கும் நான் சொல்ற ஸ்மரண யாத்ரைக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காதெங்கோ. நானே சொல்றேன்.

என்னோட மாமனார் ஊர், திருநெல்வேலி பக்கத்துல க்ருஷ்ணாபுரம். மாமனார் ஒண்டிக் கட்டை. வயசாயிடுத்து. காரியம் எல்லாம் முடிஞ்சு ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கோமா?

பக்கத்து ஆத்துக்காரர், க்ருஷ்ணாபுரம் கோவில்ல அநித்ய குருக்கள் வேலை பாக்கறார். இப்பத்தான் கோவிலை எல்லாம் கவர்மெண்டு எடுத்துண்டு அழிச்சாட்டியம் பண்றாளே, என்ன பண்றது சொல்லுங்கோ? அநித்யமா இருந்தாலும் ஏதோ பகவத் கைங்கர்யம் பண்ணிண்டு, புவாவுக்கு வேலைன்னு ஒண்ணு இருக்கேன்னு சாத்வீகமா இருக்கா பாவம். கிளம்பறதுக்கு மொத நாளன்னிக்கு அவாத்துல சாப்பிடக் கூப்பிட்டிருந்தாளேனு போனோம்.

அவா குடும்பத்லே அண்ணா தம்பி எல்லாருமே குருக்கள் தானாம். ஒண்ணு ரெண்டு போட்டோ காட்டிட்டு குடும்பக் கதை பேசி முடிக்கறதுக்குள்ளே சமையல் ரெடி. தளிகை தேவாம்ருதம். சூயன் அந்த ஊர்ல பண்ணி சாப்டாத்தான் நேக்குத் திருப்தி. புருஷாள் ரெண்டு பேரும் சாப்ட உக்காந்திருக்கோம். நான் ஏதோ அவசரமா சாதத்தைப் பிசஞ்சுண்டு, பிட்ளைக்காக காத்துண்டிருக்கேன். என்னோட பார்யை அழறாப்ல கேக்கறது. என்னனு அவளைப் பார்த்தேன். அவ என்னடான்னா அந்தப் பக்கத்தாத்து மாமாவைப் பாத்துண்டு, பரிமாறாம நிக்கறா. நானும் அவரைப் பாத்தேன்.

சாப்பாட்டுராமர் அநேகம் பேர் இருக்கா. செலபேர் போஜனம் பண்றது, பாக்கறதுக்கு விசித்ரமாவோ நூதனமாவோ இருக்கும். ஒத்தொத்தர் போஜனம் பண்றத பாத்தா, சம்க்ஷோபமா.. அதி பயங்கரமா இருக்கும். இன்னும் செலபேர் பாத்தேள்னா, என்னமோ எல்ஐசி கட்டின எஞ்சினியர் மாதிரி வித்தை எல்லாம் காட்டுவா.

பாருங்கோ, என்னோட மாமனார் இப்படித்தான். தட்டு சாதம், அதுக்கு மேலே பருப்புப்பொடி, நெய், அதுக்கு மேலே சொட்டு நல்லெண்ணெய் குத்திண்டு, அப்படியே பெசஞ்சு ஒரு கொளம் கட்டுவார். நாலு பக்கமும் நன்னா வரப்பு மாதிரி கட்டி, பெசஞ்ச சாதம் உள்பக்கம் சரிஞ்சுண்டு வரும். அப்புறம் தெளிவா ரசம் நாலு கரண்டி எடுத்து அந்த குளத்துல விடுவார். குளம்னா அப்படியே ரசத் தடாகம் மாதிரி இருக்கும். கொத்தமல்லி தக்காளித்துண்டு எல்லாம் குளத்துல அல்லி மாதிரி ரசத்துல மொதந்துண்டு இருக்கும்.

தாம்பாளத்துல சிவில் எஞ்சினியர் வேலை பாத்துண்டிருக்கார் பக்கத்தாத்து மாமா. அதைப் பாத்ததும் என் ப்ரியைக்கு அப்பா ஞாபகம் வந்து அழ ஆரம்பிச்சுட்டா. மொள்ள அடங்கி, ஒரு முகூர்த்தத்துல எல்லாரும் சாப்டு முடிச்சோம். தாம்பூலம் போடலாம்னு திண்ணைக்கு வந்தோம். மாமியும் என்னோட மிஸசும் வந்து உக்காந்துண்டா. மாமி ராமாயண புஸ்தகத்தை எடுத்துண்டு வந்து படிக்க ஆரம்பிச்சா. அகல்யை விமோசனம். "படிக்கறேன், கேக்கறேளா?"னா. "பேஷா"னேன்.

மாமி ராமாயணம் படிக்க ஆரம்பிச்சார். கொஞ்ச நாழி கழிச்சு மாமா, "வெத்தலை போடறேளாவே?"னார்.

"நேக்கு பழக்கமில்லை"னேன்.

கால் பேகட் வாசனை சீவலை எடுத்து ஒண்ணொண்ணா வாயில போட்டுண்டார் மாமா. மூணு வெத்தலை எடுத்து, காம்பைக் கிள்ளிட்டு தொடையில அப்டி ஒத்தி எடுத்துட்டு, சுண்ணாம்பைத் தடவி.. அப்டி இப்டி மடிச்சு.. ஒண்ணொண்ணா வாயில போட்டுண்டார். வெத்தலைச் சாறு, சர்ர்னு தெளிக்கறது. அதை அப்படியே வாயைத் திறந்தபடி உறிஞ்சுண்டார். மாமிக்குக் கோபம் வந்துடுத்து. "கோதண்டராமன் சரிதம் படிக்கறச்சே இப்படி கட்டபொம்மன் பஸ் மாதிரி சத்தம் போடறேளே. உள்ள போலாம் வா"னு என் பெண்டாட்டியை அழைச்சுண்டு உள்ளே போனார்.

அவா போனப்புறம், மாமா சிரிச்சுண்டார். "அப்படி நடக்கலை"னார்.

"என்ன?"

"அகல்யை சாபம், ஓய். அப்படி நடக்கலை"னார்.

"அகல்யை விவகாரம் பொய்ங்கறேளா?"னேன்.

"ஓய், அதைச் சொல்லலை. அகல்யை விவகாரம் நடந்தது வாஸ்தவம். ஆனா வெவரம் எல்லாம் மாத்திட்டா".

"அப்படின்னா?"

"சொல்றேன் கேளும்"னுட்டு என்னமோ பகுஜனப் பிரசங்கம் பண்ற மாதிரி, த்ருஷ்டாந்தமா நானா பக்கமும் பாத்துட்டு, மாமா சொல்ல ஆரம்பிச்சார்.

    தேவலோகத்துல அன்னிக்கு வருஷாந்த்ர மகோத்சவம் ஆரம்பம். தேவசபை முழுக்க ஜகஜ்ஜோதியா அலங்காரம் பண்ணியிருக்கா. எட்டு திக்குலயும் பாரிஜாத சுகந்தம். முப்பத்து முக்கோடில ரெண்டு பேரைத் தவிர மத்த தேவாளும், மும்மூர்த்திகளும், தேவாசுர குருக்களும், ப்ரத்யேகமா கூப்பிட்ட அசுர கந்தர்வ ராஜாக்களும், சபைல கூடியிருக்கா. பாட்டும் நாட்யமும் களை கட்டிண்டிருக்கு. இந்த்ராணியும், தேவேந்த்ரனும் வந்து மகோத்சவத்தை ஆரம்பிச்சு வைக்கறதுக்காக தேவலோகமே காத்துண்டிருக்கு.

பிரம்மாவுக்கு நாலு முகமோல்லியோ, தலையைத் திருப்பாமலேயே நாலு பக்கமும் சைட் அடிச்சுண்டிருக்கார்.

நேர் எதிர்த்தாப்ல, மன்மதன் ஒக்காந்துண்டிருக்கான். பக்கத்துல ரதி. மல்கோவா மாம்பழம் மாதிரியான அவளோட மார் ரெண்டும் எப்படி அந்தரத்துல நிக்கறது, இடுப்பையே காணோமேன்னுட்டு, எல்லா ஆம்பள தேவாளும் நாக்கைத் தொங்கப் போட்டுண்டு பாக்கறது தெரிஞ்சதும், வேணும்னே ரதியோட தோளைச் சுத்திக் கையைப் போட்டு, மார்ல மார் அப்படி பக்கவாட்ல உரசற மாதிரி, பக்கத்துல இழுத்துக்கறான். பொறாமைல மத்த தேவாள்ளாம் பஸ்பமாறா.

'எல்லாரும் என்னோட சந்ததி, என்னோட கொழந்தேள், ஆனாலும் இப்படி ஒருத்தர ஒருத்தர் சைட் அடிக்கறேளே?'னு நினைச்சுண்டே இடது பக்கம் பாக்கறார் பிரம்மா.

அங்க, விஷ்ணு மகாலக்ஷ்மியோட ஒக்காந்துண்டிருக்கார். தேமேனு சாதுவா ஒக்காந்துண்டிருக்கார்னு நினைக்கறச்சேயே பத்தடி தள்ளி ராமரா சீதை பக்கத்துல ஒக்காந்திண்டிருக்கார். கொஞ்சம் தள்ளி பாமா ருக்மணியோட ஒக்காந்துண்டிருக்கார். இன்னும் சித்த தள்ளி ராதையோட தோள்ல தலையை சாச்சுண்டு இருக்கார். மகாப் பொல்லாதா பத்தடி தள்ளி பாலக்ருஷ்ணரா கோபிகைகளோட சில்மிஷம் பண்ணிண்டிருக்கார். கொடுத்து வச்சவர்னு நினைச்சுண்டு வலது பக்கம் பாக்கறார் பிரம்மா.

யாருடானு பாத்தா நீலகண்டர். மகாதேவன். சிவபெருமான். உம்முனு இருக்கார், பாவம். பராசக்தி மகாதேவி அவரைக் கட்டுப்படுத்தி வச்சிருக்கா. இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பிப் பாத்து சைட் அடிச்சா காளி ரூபம் எடுத்துண்டு பரமசிவனை நடுங்க வச்சு, பெட்டிப் பாம்பா அடக்கி வச்சிருக்கா. கங்கையைக் கூட சைட் அடிக்க முடியலை, தலைக்கு மேலேனா ஒக்காந்திருக்கா? நெத்தியில கண் இருந்து என்ன ப்ரயோசனம், தலைலனா இருக்கணும்? பிரம்மா மனசுக்குள்ள சிரிச்சுண்டு தலையைத் திருப்பாமலே பின்பக்கம் பாக்கறார்.

அங்க என்னடான்னா ஞானோத்சவத்துக்கான ப்ரயத்னங்கள் நடந்துண்டிருக்கு.

நம்ம ஊர்ல சயன்ஸ் எக்சிபிஷன், கண்காட்சிம்பாளே, அதேதான். வந்திருக்கிற தேவ விஞ்ஞானியெல்லாம் அவா அவா கண்டுபிடிச்சதை மத்தவாளுக்கு காண்பிச்சுண்டிருக்கா. ஒரு பக்கம் சுக்ராச்சாரியார் டீம்லந்து விசேஷ ஆயுதங்கள். இன்னொரு பக்கம் ப்ரஹஸ்பதி பாடசாலைலேந்து அஸ்த்ரம், ஆதர்சம், விமானம்னு என்னென்னமோ எடுத்துப் பிரிச்சுப் போட்டிருக்கா. எல்லாரையும் தாண்டி விஸ்வகர்மா ஏகதேசத்துக்கு கண்டுபிடிப்புகளை எடுத்து வச்சுண்டுருக்கார். என்னவா இருக்கும்னு பாக்கறச்சேயே கூட்டத்துல உற்சாக சப்தம் கேக்கறது.

'நாலு முகம் இருந்து என்ன புண்யம், எதுக்காக கோஷம் போடறா, கண்ணுக்கு ஒண்ணும் தெரியலையே'னு பிரம்மா நினைக்கறச்சே, ஆகாச மார்க்கமா பிளிறிண்டே இறங்கறது ஐராவதம்.

மொதல்ல இந்த்ரன் இறங்கறான். தேவராஜாவோன்னோ, கம்பீரம்னா அப்படி ஒரு கம்பீரம். இந்த்ராணியை இடுப்பைப் பிடிச்சு இறக்கி விடறச்சே அவ உடுத்திண்டிருந்த பட்டு சரிஞ்சு அவளோட காலும் தொடையும் தெரியறது. எல்லாரும் 'ஙே'னு பாக்கறா. அவளோ கவலைப்படாம அலட்சியமா, இந்த்ரனுக்கேத்த கம்பீரத்தோட நடந்து வரா. 'ஜே' 'ஜே'னு எல்லாரும் கூச்சல் போடறா. எல்லாரையும் பாத்து இந்த்ரனும் ராணியும் கையசைக்கறா. தேவசபைல கரகோஷம் பிளக்கறது. சில தேவாள்ளாம் விசிலடிக்கறா. தேவராஜனைப் பாத்த சந்தோஷம். எல்லாரையும் சாந்தமா இருக்கும்படி சைகை காண்பிச்சுட்டு, இந்த்ரன் தன்னோட வஜ்ராயுதத்தை எடுத்து அப்படி ஆகாசத்துல ஒசத்தினதும் அதுலந்து வர்ணஜாலமா தீப்பொறி பறக்கறது. உத்சவம் ஆரம்பமாயாச்சு. கோலாகலம்.

மும்மூர்த்திகளுக்கும் ஒரு 'ஹலோ' போட்டுட்டு, ஞானோத்சவ ப்ரதேசத்துக்குப் போறான் இந்த்ரன். மத்த தேவ கூட்டம் வர்றதுக்கு முன்னாடி, இந்த்ரனுக்கு மட்டும் ப்ரைவேட் ஷோ உண்டு எப்பவும். ஒவ்வொரு ஐட்டமா பாத்துண்டு வரான். ப்ரகஸ்பதி பாடசாலைல ஒருத்தன் ஒரு சின்ன பெட்டியை வச்சுண்டு இருக்கான். "என்ன இது?"ங்கறான் இந்த்ரன்.

"திவ்யாதர்சம்"ங்கறான் அந்தப் பெட்டிய காமிச்சவன்.

"புரியும்படியா சொல்லும் ஓய்"னான் இந்த்ரன். திருநெல்வேலியோன்னோ, எல்லாத்துக்கும் ஒரு ஓய் போட்டுடுவார் மாமா. இந்த்ரன் ஓய் போட்டானா தெரியாது.

"தேவராஜா, உங்க கையைக் காட்டுங்கோ"னான் பெட்டிக்காரன். இந்த்ரன் கையைக் காட்டினதும் அந்தப் பெட்டியத் தொறந்து, இந்த்ரன் ஆள்காட்டி வெரல்லே மோதிரம் மாதிரி ஒண்ணைப் போட்டு நன்னா நாலு வாட்டி தேச்சான்.

"இனிமே, நீங்க இப்படி விரலைக் காத்துல கிழிச்சேள்னா ஒடனே கண்ணுக்குத் தெரியாததெல்லாம் தெரியும். இது உங்களுக்காகப் பண்ணினது"னுட்டு இந்த்ரன் கால்ல சாஷ்டாங்கமா விழறான் பெட்டிக்காரன். இந்த்ரனுக்கு இதுல நம்பிக்கையில்லை. இருந்தாலும் படிச்சவாள் ஸ்னேகம் வேணும்னுட்டு பேசாம சிரிச்சுண்டே நகந்து, விஸ்வகர்மாவாண்ட போறான். விஸ்வகர்மா இந்த்ரனோட பேவரட்டாக்கும். போன வருஷம் வஜ்ராயுதம் பண்ணிக் கொடுத்திருந்தான்.

"இந்த வருஷம் என்ன விசேஷம்?"னு கேக்கறான் இந்த்ரன்.

ரெண்டு கையையும் தூக்கி ஒரு பெரிய கும்பிடு போட்ட விஸ்வகர்மா, "தோ பாருங்கோ தேவராஜா"னான்.

விஸ்வகர்மா காமிச்ச எடத்தைப் பாத்தான் இந்த்ரன். நாலஞ்சு செங்கலை சேத்து வச்ச ஹோம குண்டம் மாதிரி சதுரமா ஒண்ணு இருக்கு. நம்ம ஊர் கோவில் சிலதுல த்வஜஸ்தம்பம் பக்கத்துல இதை மாதிரி பாக்கலாம். "என்ன இது?"னு வழக்கமா கேக்கறான் இந்த்ரன்.

விஸ்வகர்மா அதைப் பத்தி விஸ்தாரமா சொன்னான்.

எல்லாத்தையும் பொறுமையா கேட்ட இந்த்ரனுக்கு நம்பிக்கை வரலை. 'சரிதான் இந்த வருஷம் ஞானோத்வசத்ல எல்லாமே ரொம்ப அபூர்வமா இருக்கும் போலிருக்கே?'னு வெளிப்படையா சொல்லாம, விஸ்வகர்மாவை 'ஆகா ஒகோ'னு முகஸ்துதி பண்றான். யாரையுமே பகைச்சுக்கப் படாதில்லையா? அதுலயும் புத்திமான் த்வேஷம் நிந்திதமாச்சே?

எல்லாத்தையும் பாத்துட்டு வெளில வந்த இந்த்ரன், "இனிமே பொது தேவாளுக்கு உள்ளே வர அனுஜ்யை..பர்மிஷன் க்ரேன்டட்"னு கூட வந்த சாதாரண தேவாள்ட்ட சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினான். கொஞ்சம் தள்ளி நின்னுண்டிருந்த பிரம்மாவைப் பாத்து பிரமிச்சுப் போறான். என்னிக்குமில்லாதபடி அப்படி ஒரு தேஜஸ் பிரம்மாகிட்ட ஜொலிக்கறது. என்ன இப்படி ஒரு தேஜஸ்னு பாத்தப்போ, பிரம்மா பக்கத்துல நின்னுண்டிருந்த கன்னிகையைக் கவனிக்கறான் இந்த்ரன்.

அவளைப் பாத்ததும் அவனுக்கு கை கால் உடம்பெல்லாம் வஜ்ராயுதம் பட்ட மாதிரி பொறி பறக்கறது. தேவலோகமே காலடிலேந்து கழண்டு விழுந்த மாதிரி இருக்கு. அப்படி ஒரு அழகியை அவன் பாத்ததே இல்லை. பிரம்மாவுக்கு இத்தனை ரசனையுண்டா? கிழட்டு பிராமணனால இப்படி எல்லாம் கூட படைக்க முடியறதா? அப்படி இப்படினு மனசுல நினைச்சு அவளை மறுபடியும் பாத்துத் திக்குமுக்காடிப் போயிடறான்.

அவளால தான் பிரம்மாவே ஜொலிக்கறார்னு அவனுக்கு இப்போ புரிஞ்சு போச்சு. அவளோட சௌந்தர்யம் அப்படி ப்ரகாசிச்சுண்டு, பக்கத்துல இருக்கறவா எல்லாரையுமே அழகா காட்டிண்டு இருக்கு.

இந்த ஸ்த்ரீயை த்ரிலோகத்துலயும் பாத்ததில்லையேனு அசந்து போறான் இந்த்ரன். ரதி, த்லோத்தமை, ஊர்வசி, மேனகை எல்லாரோட அழகையும் ஒண்ணாக்கி, அதுக்கு மேலே லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதியோட லாலித்யத்தைக் கலந்து, மும்மூர்த்திகளோட தேஜசைக் கலந்து, அதுக்கு மேலே அது எல்லாத்தையும் லக்ஷம் மடங்கு பெருக்கினா கூட இத்தனை ரூப லாவண்யம் வருமாங்கறது சந்தேகம்னு அவனுக்குத் தோணறது.

'யாரிந்த சுந்தரி சௌந்தரி நிரந்தரி?'னு நினைச்சுண்டே பிரம்மாவைப் பாத்து வேகமா நடக்கறான். இவன் இப்படி நினைச்சுண்டிருக்கச்சே, அவளும் இந்த்ரனைப் பாத்துட்டா.

பாத்த க்ஷணத்துலயே மனசைப் பறிகொடுத்துடறா. எப்பேர்க்கொத்த அழகன் இவன்! ஐராவதத்துக்குப் பக்கத்துல நின்னா, இவன் தோள் எது ஐராவதம் எதுன்னு புரியாது போல இருக்கே! என்னமா நடந்து வரான்?! சிம்ஹம் மாதிரி அவன் ஒவ்வொரு அடி வைக்கும் போதும் 'என்னை எடுத்துக்கோ'னு சொல்லத் தோணறதே! இவனைப் பாத்தப்புறமும் இன்னும் எதுக்கு எல்லாரும் மும்மூர்த்திகளக் கும்பிட்டுண்டு இருக்கா? பார்வைல எத்தனை தீட்சண்யம்?! 'என் மனசை அப்படியே இழுத்துண்டு போறதே, யாராவது தடுத்து நிறுத்துங்கோளேன்'னு படபடத்துப் போறா. ஆனாலும் உள்ளுக்குள்ள சந்தோஷமா இருக்கு. த்விகுண லீலாவா நின்னுண்டிருக்கா.

பிரம்மா சொன்ன விஷயம் ஒண்ணு சட்னு தேவையில்லாம அவளுக்கு ஞாபகம் வரது. இருந்தாலும் இந்த்ரனையே பாத்துண்டிருக்கா.

அதுக்குள்ள இந்த்ரன் பக்கத்துல வந்துட்டான். கண் பிரம்மாவைப் பாத்தாலும், அவன் மனசு மட்டும் அவளையே சுத்திண்டிருக்கு. அவளுக்கும் அவன் தன்னை மானசீகமா பாத்துண்டிருக்கான்னு தெரிஞ்சுடறது. பேனோவிஷன் கேமராங்கறாளே அது மாதிரி அவள் கண் ரெண்டும் அவன் முகத்தை படம் புடிச்சு ப்ரேம் போட்டு மனசுல மாட்டி வச்சுடறது. அவளோட நாடி நரம்பு ஹ்ருதயம் எல்லாம் 'இந்த்ரா இந்த்ரா'னு அடிச்சுக்கறது. பக்கத்துல இருந்தாலும் தொட முடியலையேன்னு நினைச்சுக்கறா.

இந்த்ரன் பிரம்மாகிட்டே ஏதோ பேசிண்டிருக்கறதைப் பாத்துண்டு இருக்கா. திடீர்னு ரெண்டு பேரும் அவ கிட்ட வந்துடறா. இந்த்ரன் அவளைப் பாத்து முகமெல்லாம ப்ரகாசமா புன்னகை பண்றான். அவளும் பதிலுக்கு புன்னகைக்கறா. சாதாரண புன்னகையா? கமலஹாசம்னா! இந்த்ரன் சொக்கிப் போயிடறான்.

பிரம்மா அவள் கிட்டே சொல்றார். "அகல்யா, இவன் தேவராஜன். இந்த்ரன். உன்னைப் பாத்துப் பேசணும்னு சொன்னான்"னு அறிமுகம் பண்ணி வைக்கறார்.

"அகல்யா. த்ரிலோக அழகையெல்லாம் நீ ஒருத்தியே இப்படி எடுத்துண்டா இனிமே வரவாளெல்லாம் அழகுக்கு எங்க போறது?"னு வசனம் பேசறான் இந்த்ரன். தேவ ராஜனோல்லியோ, பேச வராதா?

"சந்தோஷம்"னு ஒரு வார்த்தை சொல்றா. பாற்கடல்லேந்து எடுத்த அம்ருதம் கூட அத்தனை மதுரமா அவனுக்குத் தோணலை. அந்த ஒரு வார்த்தைக்கப்புறம் அவன் எதையுமே கேட்கப் ப்ரியப்படலை. அந்தப் பேரழகியோட மொதல் வார்த்தையே 'சந்தோஷம்'னு வரப்போ, இனிமே எதுக்குப் பேசுவானேன்னு அவன் நினைக்கறான். அவன் நினைக்கறது அவளுக்குப் புரியறது.

பிரம்மா அவளைப் போகச் சொல்றார். "போம்மா, சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கட்டும்"ங்கறார்.

அவளும் தலையசைச்சுட்டு, இந்த்ரனைப் பாத்து "வரேன்"னு சொல்லிட்டுப் போறா.

"சத்யமா வருவியா?"னு அவன் மனசு கேட்டதை அவள் மனசும் கேக்கறது.

அகல்யா போனப்புறம், பிரம்மா இந்த்ரனைப் பாத்து தீர்மானமா பேசறார். "நீ அவளை மறந்துடு. பூலோகத்துல கௌதமர் மகாதவம் பண்ணிண்டு இருக்கார். அவரை இப்படியே விட்டா உன்னோட இந்த்ர பதவிக்கு ஆபத்து வந்துடும். அதனால கௌதமர் முன்னாடி ப்ரசன்னமாகி அகல்யாவை அவருக்கு தாரம் கொடுத்து சேவை செய்யச் சொல்லப் போறேன். உன்னோட பதவி நெலைக்கணும்னா அவளை மறந்துடு"ங்கறார்.

"எனக்கு இந்த்ர பதவி வேண்டாம். அகல்யா தான் வேணும்"னு சொல்றான் இந்த்ரன்.

"நோக்கு இந்த்ர பதவி வேண்டாம்னாலும், எங்களுக்கெல்லாம் நீ தான் ராஜா. அதனால இந்த பதவில நீ இருந்து தான் ஆகணும்.. ஒன்னோட திருவாழத்தான் வேலையை எல்லாம் அவகிட்டே காட்டாதே. அவளை மறக்காம நீ ஏதாவது திப்பிசம் பண்ணினியோ, உனக்கு ரொம்பக் கெடுதல் வரும் தெரிஞ்சுக்கோ"னு உக்ரமா சொல்லிட்டுக் கிளம்பிடறார் பிரம்மா.

அகல்யாவும் பொசுக்னு காணாமப் போயிடறா.

இந்த்ரனுக்கு எல்லாமே வெறுப்பா இருக்கு. இத்தனை நாள் இல்லாம இன்னிக்கு எங்கருந்து வந்து முளைச்சா இந்த அகல்யானு நெனச்சு வேகறான். கொஞ்ச நாளானா சரியாப் போய்டும்னு அவனாவே சமாதானம் பண்ணிக்கறான்.

    கொஞ்ச நாள் ஆறது. இந்த்ரன் அகல்யா ஞாபகமாவே இருக்கான். முன்னை விட மோசமாயிடுத்து. தன்னை மாதிரி அவளும் நினைச்சுத் துடிப்பாள்னு நினைச்சுக்கறான். அப்ப அவனுக்கு திவ்யாதர்ச மோதிரம் ஞாபகம் வரது. அகல்யாவை மனசுல நினைச்சுண்டே கையை ஆகாசத்துல தேய்க்கறான்.

ஆதர்சம்னா கண்ணாடினு ஒரு அர்த்தமுண்டு. இந்த்ரன் கையை அப்படி தேச்சதும், காத்துல கண்ணாடி மாதிரி தெரியறது. பிரமிச்சுப் போய் நிக்கறான். அகல்யாவை மனசுல நினச்சுண்டு எதிர்க்க தெரிஞ்ச காத்து கண்ணாடில பாக்கறான்.

ஹபுல்னு சொல்றாளே.. அதுல பாத்தா ஆகாசத்துல அத்தனையும் க்ளோசப் ஷாட் மாதிரி தெரியுமாமே? அது மாதிரி அந்தக் காலத்லயே வந்தாச்சு பாருங்கோ! இந்திரன் காத்துல தேச்சது அந்தக்கால ஹபுலாக்கும். கூகுல் எர்த் மேப் மாதிரி பூலோகத்துல அத்தனையும் விஸ்தாரமா தெரியறது. சூபர் அமோலெட் டிஸ்ப்லேங்கறாளே.. இந்த்ரன் பார்த்தது அதைவிட சூபராக்கும். இந்த்ரன் ஆள்காட்டி விரலாலே காத்துல டக்கு டக்குனு க்ளிக் பண்றான்.

பூலோகம் தெரியறது. கோதாவரி சுழிச்சுண்டு ஓடறது. சுத்திப் பாக்கறான். கங்காத்வாரம் கிட்ட, கோவம் அடங்கின காதலி மாதிரி, கோதாவரி சாந்தமா ஒடற எடத்துல ஒரு பெரிய தடாகம் பரவி இருக்கு. அல்லி, தாமரைனு எராளமான ஜல புஷ்பங்கள். ஒரு தாமரை ரொமப அழகா இருக்கேனு அவன் கவனிச்சுப் பாக்கறச்சே, அது அகல்யாவோட முகம்னு புரிஞ்சு போய்டறது. அப்புறம் பாத்தா அனேக ரிஷி பத்னிகள் ஸ்நானம் பண்ணிண்டு ஜலத்துல விளையாடிண்டு இருக்கா.

இந்த்ரன் பாத்துண்டு இருக்கச்சே அகல்யா எழுந்துக்கறா. பூமிலேந்து உதிச்ச நிலா மாதிரி அவ எழுந்துக்கறதைப் பாத்ததும் இந்த்ரன் ஆனந்தப் பரவசமாய்டறான்.

முகமும், தோளும், மார்பும், கையும், வயிறும், இடுப்பும், தொடையும், காலும் ஈரம் சொட்டறது. ஸ்த்ரீ லக்ஷண சிற்ப சாஸ்த்ரத்துக்கு எழுதின வ்யாக்யானம் மாதிரி அவ எழுந்துக்கறா. எழுந்து கரைக்கு வரா. ஒரு சின்ன அல்லிப்பூவை கிள்ளி எடுத்து முகத்துலயும் மார்லயும் வச்சுக்கறா. அப்புறம் அந்தப் பூவை எடுத்து ஒரு முத்தம் குடுக்கறா. என்ன தோணித்தோ அப்படியே ஆகாசத்துல வீசறா. பூ ஆகாசத்துல போன இடத்தைப் பாத்துண்டு இருக்கா.

தேவலோகத்துலந்து அந்தப் பூவைப் பாத்துண்டு இருந்த இந்த்ரனுக்கு, பூலோகத்துலேந்து அதே பூவைப் பாத்துண்டிருந்த அகல்யாவோட கண்ணைப் பாத்த மாதிரி தோண்றது. திக்குனு ஆய்டறது. ஒரு வேளை தான் பாத்தது அவளுக்கு தெரிஞ்சு போயிருக்குமோன்னு நினைச்சு சட்டுனு கண்ணை மூடிக்கறான். கண் தொறந்து பாக்கறச்சே கோதாவரியும் தெரியலை. ஸ்வப்ன சுந்தரியும் தெரியலை.

மிச்சக் கதை அடுத்த ப்ரசங்கத்துல.►►