அசுவத்தாமன் கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அசுவத்தாமன் கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2014/10/11
உளமளவாமுலகளவும்
    ஊருக்குப் போயிருந்தேன்.
முதல் நாள், வழக்கம் போல் பொழுது போனதே தெரியவில்லை. இரண்டாம் நாள், வழக்கம் போல் பொழுதே போகவில்லை. "ஏண்டா இப்டி இருப்பு கொள்ளாம அடைபட்ட மூஞ்சூராட்டம் சுத்தி சுத்தி வரே?" என்றார் பாட்டி.
பாட்டியைப் பார்த்தேன். அவரும் அடைபட்ட மூஞ்சூரு போலத்தான். அவருக்கு நூறு வயதாகிறது. ஆறு தலைமுறை சந்ததிகளைப் பார்த்திருக்கிறார். எத்தனை ஜனனம் எத்தனை மரணம் எத்தனை விவாகம் எத்தனை துக்கம் எத்தனை கேலி எத்தனை குதூகலம் எத்தனை இன்பம் எத்தனை துன்பம் எத்தனை நோய் எத்தனை இழப்பு எத்தனை மழலை எத்தனை மூப்பு எத்தனை வெற்றி எத்தனை ஏமாற்றம்... "எல்லாரும் போயிண்டிருக்கா.. நான் இன்னும் குத்துக்கல்லாட்டம் உக்காந்துண்டு... போக மாட்டேங்கறேனே?!" என்று ஆயாச மூச்சு விட்டபடி, தளர்ந்து போன உடற்கூட்டுக்குள் அடங்காத அனுபவச் சுமையுடன் தடுமாறிச் சுற்றி வரும் எலி, என் பாட்டி. பாட்டியைப் நினைத்தால் இறுக்கமாகவும் வருத்தமாகவும் இருந்தது. எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா!
"போரடிக்குதே.." என்றிழுத்தேன் பொதுவாக.
"ஏண்டா.. உன் ப்ரண்டு யாரோ ஒருத்தர் இங்கே எங்கியோ இருக்கார்னு சொல்வியே? அவரைப் பாத்துட்டு வாயேன்?"என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.
இது போன்ற மிகத் தெளிவான கருத்துக்களைத் தாராளமாகவும் ஏராளமாகவும் அள்ளி வீசக்கூடிய நானறிந்த இருவரில் ஒருவர், என் அம்மா.
"எப்படிம்மா உன்னால் முடியுது?" என்றேன்.
"அதாண்டா.. சமூக உபன்யாசம் பண்றேன் பேர்வழினு அசடாட்டம் எதையாவது சொல்வாரே.. உன் ப்லாக்ல கூட எழுதுவாரே.. அசுவத்தாமன்? அவர் ஒப்பிலியப்பன் கோவில் கிட்டே இருக்கார்னு சொல்வியே? பாத்துட்டு வரதுதானேனு கேட்டேன், இது கூட புரியலையா?"
போலியாக வியந்து, "ப்ச.. அவரா..?" என்றேன். சொல்லும் பொழுதே அவரைச் சந்திக்க எண்ணினேன்.
"உனக்குத் தெரியுமோ? அவரை யாரோ நாலஞ்சு பேர் சேர்ந்து நன்னா அடிச்சுப் போட்டுட்டாளாம். பேப்பர்ல எல்லாம் வந்துது" என்றார் அம்மா.
"என்னமா சொல்றே? என்னாச்சு?"
"சரியா தெரியலடா. சும்மா இருக்காம எந்த வம்பை விலைக்கு வாங்கினாரோ யார் கண்டா? உன் ப்ரண்டு தானே?"
"சரி.. நான் போய் பார்த்துட்டு வரேன்" என்று ஆயத்தமானேன். என் வட்டம் எல்லாம் வம்பிழுக்கும் காந்தம் போலப் பார்த்த அம்மாவிடம் வேறேதும் சொல்லத் தோன்றவில்லை.
"வரப்போ கும்மோணத்துல கொஞ்சம் காய்கறியும் உதிரிப்பூவும் வாங்கிண்டு வரியா?. ப்ரண்டைப் பாக்கறச்சே அப்படியே கோவிலுக்குள்ளே அடி வச்சுட்டு வா, ஒண்ணும் குறைஞ்சு போயிடமாட்டே"
"ரைட்டு" என்று விலகினேன்.
கும்பகோணம் பஸ் பிடிக்க ஆடுதுறை கலைஞர் பேருந்து நிலையத்துக்கு வந்தேன். எதிரே 'அம்மா'வின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்த சுமார் முப்பது பேரில் பலர், பக்கத்து ரகுராம விலாசிலிருந்து வந்த இட்லி மசால்வடை பொட்டலங்களைக் கவர்ந்து கொண்டு பின் வரிசைக்கு மறைவாக நகர்ந்து கொண்டிருந்தனர். "நீதி தேவதைக்கு தண்டனை தர நீ யார் என்று நான் கேட்கிறேன்?" என்று யாரையோ கேட்டுக் கொண்டிருந்த சில்லறைப் பேச்சாளரின் கண்கள், பொட்டலத்துக்குத் தாவித் திரும்பின. பஸ் வர, ஏறிக்கொண்டேன்.
ஒப்பிலியப்பன் கோவில் பக்கம் போய் வருடக்கணக்காகிறது. எல்லாமே கல்லென்று தீர்மானமாகத் தெளிந்துவிட்ட நிலையில் கோவில்களின் அமைதி, அதிலும் சில கோவில்களின் அமைதி மட்டுமே எனக்குப் பிடிக்கிறது இப்பொழுதெல்லாம்.
திருநாகேசுரத்தில் ஈயடிக்கும், போவேன். திருவிண்ணகரத்தில் கொஞ்சம் கூட்டம் இருக்கும். அதனால் போவதில்லை. ஒப்பிலியப்பன் கோவில் அசுவத்தாமருக்குப் பிடிக்கும். அவரைப் பார்க்கப் போனால் கோவில் ட்ரிப் நிச்சயம். அத்தோடு போகிற வழியில், "ஆஸ்திகன் நாஸ்திகன் எல்லாம் நமக்காக்கும். ஜகன்மாதாவுக்கும் ஜகப்பிதாவுக்கும் தேவையில்லைணா. மிஸ்டர் ஒப்பிலியப்பனுக்கு இதெல்லாம் டோன்ட் கேர் தெரியுமோ? ஆஸ்திகமாவது நாஸ்திகமாவது? இதெல்லாம் தர்க்கத்துக்கான அந்தஸ்து முத்ரைகள். ஸ்டேடஸ் ஸிம்பல்ஸ் பார் இன்டெலெக்சுவல் வேனிடி யு நோ? சர்வேஸ்வரனுக்கு இதெல்லாம் சின்னக்குழந்தை மூச்சா மாதிரி. அசூயையே பட மாட்டான். யு நோ ஸம்திங்? நீங்க அவனைப் பார்க்க வேண்டியதில்லை. அவனுக்கு உம்மைப் பார்க்கணும்னா ஹி வில் சம்மன் யு. தெனம் கோவிலுக்குப் போறவா லட்சக்கணக்குல இருக்கா. அதுல எல்லாரையும் அவனால பார்க்க முடியுமோ? முடியாது. ஹி டஸ் நாட் ஸீ எவரிபடி விஸிடிங் ஹிம். இவா என்னமோ க்யூல நின்னு அர்ச்சனை பண்ணிப் பாத்துட்டு வந்து, 'ஆகா திவ்ய தரிசனம் கிடைச்சது'னு கூத்தாடுவா. கஷ்மல ஸாகரம். இவா பாக்க வராங்கறதுக்காகவும் பெரிய பணத்துல சீட்டு வாங்கி அர்ச்சனை பண்றாங்கறதுக்காகவும் வொய் ஷுட் ஹி ஸீ தெம்? இந்த க்விட் ப்ரொ க்வோவெல்லாம் பகவானிடத்துல பலிக்குமோ? என்னத்தை சொல்றது?! இப்டி கண்மூடிப் போய்ட்டு வர லட்சத்துல பதினாயிரம் பேராவது உம்மை மாதிரி ஸ்கெப்டிகல் டைப்பு. நாலு அட்சரம் படிச்சு நாலு தேசம் பார்த்த கெத்துல கடவுள் கிடையாதுனு பாபுலர் டயலாக் விடறவா.. யு ஸீ.. இவாள்ல சில பேரை அவன் வரவழைக்கறான். ஹி வான்ட்ஸ் டு ஸீ, அவ்ளோ தான். இல்லேன்னா நீங்க சொன்னேளே போனவாட்டி காலேஜ்ல ஆள் எடுக்கப் போனப்போ அப்படியே அயோத்யா போய் ஸ்ரீராம பகவான் பாதம் பட்ட இடங்கள்ள நின்னதாச் சொன்னேளே..அதெல்லாம் உம்மைப் போல ஆசாமிகளுக்கு வாய்க்குமா? வாட் ஐ மீன் இஸ் சில குழந்தைகள் அப்பாம்மாவைப் பாக்க வரா. சில குழந்தைகளை அப்பாம்மா வரவழைச்சுப் பாக்கறா. ஹீப் ஆப் ஸ்டோன்னு நீங்க நெனச்சுண்டு வருவேள். லீப் ஆப் ஓன்னு அவன் நெனச்சுப்பான். நாமா போய் பார்த்தாலும், நம்மை வரவழைச்சு அவன் பார்த்தாலும் என்ன வித்தியாசம்? சர்வம் ஏகம்ணா" என்று ஒரு பிரசங்கம் செய்வார். பிரசங்கம் செய்யட்டும். பரவாயில்லை. என்னை ணா போட்டு பேசுவது எனக்குச் சங்கடமாக இருக்கும். என்னவோ இவர் என்னை விட இளையவர் போல.
கும்பகோணம் டவுன் பஸ் நிலையத்திலிருந்து அநியாயத்துக்குக் கேட்ட ஒரு ஆட்டோக்காரனிடம் பேரம் பேசி ஒருவழியாக அசுவத்தாமன் வீட்டுக்கு வந்தேன். செவ்வாய் கிரகத்துக்குப் போக ஒரு கிலோமீட்டருக்கு ஏழு ரூபாய் மட்டுமே ஆகும் இந்நாளில், ஆறு கிலோமீட்டருக்கு நூற்றைம்பது ரூபாயை அழுதேன். செவ்வாய் கிரகத்துக்குப் போனால் ஆட்டோவில் போகக் கூடாது என்றுத் தீர்மானித்தேன்.
"வாங்கோ வாங்கோ, வரணும்ணா" என்று வரவேற்றார் அசுவத்தாமன். மெலிந்திருந்தார். கண்களில் ஒரு அச்சம். உடலில் ஒரு தளர்ச்சி. வரவேற்றதற்கே வாயைப் பிடித்துக் கொண்டார். உட்காரச் சொன்னார். "காபி சாப்டறேளா? சன்ரைஸ் காபி. இல்லேன்னா பக்கத்துல பீமாஸ்லந்து மைசூர் போண்டா பைனாப்பிள் அல்வா எடுத்துண்டு வரச்சொல்லட்டுமா? பில்டர் காபியும் கொண்டு வருவான்" என்றார்.
"பீமாஸா? நான் பாக்கவேயில்லையே?"
"பக்கத்தாத்துக்காரர். ரிடையர்டு பப்லிக் வொர்க்ஸ் எஞ்சினியர். விடோயர். மாமி வைகுந்தலோகம் போனப்புறம், போன சந்தோஷமோ என்னமோ தெரியலே, நன்னாவே சமைக்கறார். நளபாகம் நாலு பேர் அனுபவிக்கட்டுமேனு, கேஷ் ஒன்லி டேக் அவே மீல்ஸ் டிபன்னு தெனம் ஆத்துலந்து சப்ளை பண்றார். ஏழெட்டு வாடிக்கை என்னை மாதிரி. பீமாஸ்னு நான் பேர் வச்சிருக்கேன். சித்த இருங்கோ" என்று செல்பேசி டிபன் காபி வரவழைத்தார்.
"ரொம்ப நாளாச்சு பாத்து.. இப்பல்லாம் ப்ரசங்கம் பண்றதில்லையா?" என்றேன்.
இல்லையென்று தலையாட்டினார். "ப்ரஸங்கம் பண்றதிலே. ப்லாக்ல எழுதறதில்லே. எதுவுமே பண்றதில்லே. எங்கயும் போறதில்லே. யதாஸ்தானம்னு இருக்கேன்"
"ஏன் சார்? உங்களுக்கு அடி பட்டுதுனு சொல்றாளே? அதனாலயா?"
"அடி படலைணா. இதென்ன மடியா விழுப்பா படறதுக்கு? அடிச்சு நொறுக்கிட்டா. நாலஞ்சு காலிப் பசங்க சேர்ந்துண்டு மொச்சு எடுத்துட்டா. திருடைமருதூர்ல ப்ரஸங்கம் பண்ணிட்டு ஆத்துக்கு வந்தேனா? பசியில்லை. முழுசா லங்கணம் வேண்டாம்னுட்டு ஒரு சுருள் காஞ்ச நாத்தங்கா ரெண்டு மோர் மொளகாவோட நாலு கரண்டி ததியன்னம் போட்டு சாப்டுட்டு, விஸ்ராந்தியா திண்ணைல படுத்துத் தூங்கிண்டிருந்தேன். திடீர்னு நாலு பேர் பரசுராமனாட்டம் வந்து என்னைத் தூக்கத்துல ரணப்படுத்திட்டுப் போய்ட்டா. உக்கார முடியலே. நிக்க முடியலே. அழ முடியலே. சிரிக்க முடியலே. ஆஸ்பத்திரில இருந்த அத்தனை பேண்டேஜும் தீந்து போற அளவுக்குக் கட்டுப் போட்டு, ஏழெட்டு மாசமா தெனம் தெரபினு வந்து, என்னை இந்த நிலமைல விட்டிருக்கா. இன்னிக்கு கை கால் அசஞ்சு கொஞ்சம் பேசறேன்னா ஏதோ ஒரு ஜென்மாந்த்ர புண்யம். ஹ்ம். என்னை மொத்தியெடுத்துட்டானா மொத்தியெடுத்துட்டாணா" என்று இரு சுழிகளை ஒரே வாக்கியத்தில் பயன்படுத்திப் பேசினார்.
"யார் செஞ்சா? என்ன ஆச்சு? போலீசுக்குப் போனேளா?" என்றேன்.
"போலீஸ்ல வந்து கேட்டா. ஆஸ்பத்திரிலே படுத்துண்டிருக்கச்சே வந்தா. அங்க வந்த ஒரு மீசைக்காரப் போலீஸ் கிட்டே இந்த மாதிரிடாப்பானு சொன்னேன்.. நேக்கு சத்ருக்கள் யாரும் கிடையாதுன்னேன்... ஆனா அவா என்னைப் பார்த்த பார்வை இருக்கு பாருங்கோ.."
"ஏன்?"
"ஓய் பெரியவரே..'வாயையும் சூத்தையும் வச்சுகினு சும்மா கெடக்கலாம்ல? உனுகின்னா லொள்ளு வேண்டிகிது இந்த வயசுல? பெர்சுனா இன்னா வேணா பேசுறதா? நீ பேதியாவுறதை நாங்கள்ளாம் பாத்துகிணு இருக்கவா? இன்னும் ரெண்டு தட்டாம விட்டானுவளே..'னு நாக்கூசாம நாராசமா பேசிட்டுப் போறான்! என்ன பண்றதுணா.. இதெல்லாம் ப்ராரப்தம்னு விட்டுட்டேன்"
சுவாரசியமான விஷயம் போலிருந்தது. "என்ன ஆச்சு சொல்லுங்களேன்?" என்றேன்.
"சொல்றதுக்கு என்ன? சொல்றேன் சொல்றேன். இதையெல்லாம் ப்லாக்ல எழுதவேண்டாம்ணா..புரியறதா?"
"சொல்லுங்க"
"திருடைமருதூர்ல ப்ரசங்கம்னேன் இல்லையா? நம்ம கோவில் ஸ்தல புராணங்கள் பத்தின உபன்யாசம். நேக்குத் தெரிஞ்சதைச் சொல்வோம்னு போயிருந்தேன்" என்றபடி கால்களை நீட்டிக் கொண்டார்.
"திருடைமருதூர்க்குள்ளே சமீபத்துல போயிருக்கேள் இல்லையா? இங்கனு இல்லே பொதுவாவே மாயரம் கும்மோணத்தைச் சுத்தி எல்லா இடத்துலயும் பாத்தேள்னா இப்படிக் கொஞ்ச காலமாவே நடந்துண்டிருக்கு. திட்டம் போட்டுப் பண்றானு சொல்லலே.. ஆனா தற்செயலா நடக்கறாப்ல நடக்கறதுனு சொல்றேன்.. வித்யாசம் புரியறதோ?"
"புரியற மாதிரி சொல்லுங்க சார்"
"சொல்றேன். மொதல்ல ப்ரசங்கத்தை ஸங்க்ஷேபமா சுருக்கமா சொல்றேன்"
"ஐராவதேஸ்வரம் புராதனக் கோவில். ஐராவதேஸ்வரம் கதை தெரியுமோ? பிரம்மா கொடுத்த மாலையைத் அலட்சியமா தூக்கியெறிஞ்சதும் இந்த்ரனுக்கும் ஐராவதத்துக்கும் சாபம் குடுத்துடறார் துர்வாசர். இந்த்ரனுக்குப் பதவி போயிடறது, ஐராவதம் கறுப்பாயிடறது. வெளுப்பா இருந்தாத்தான் யானைக்கும் பிடிக்கும் போலருக்கு - சிவபெருமான் கிட்டே ஐராவதம் தவமிருந்து சாப விமோசனம் கிடச்ச இடமாக்கும். அங்க இருக்குற விநாயகருக்குத் தும்பிக்கைப் பாத்தேள்னா விருச்சிகமாட்டம் இருக்கும். தேள் மாதிரி துதிக்கைங்கறதாலே விநாயகருக்கு மருந்தேஸ்வரன்னும் பேருண்டு. லோகத்து அத்தனை பூச்சிக்கடிக்கெல்லாம் இந்த மூஷிகவாகனன் தான் மூலிகை. அப்பனே பிள்ளையாரப்பானு அழுதா அத்தனை கடியும் கரைஞ்சு போயிடும். சத்யம்..
..திருடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் எத்தனை புராதனமான தேவஸ்தானம்! பாடல் பெற்ற ஸ்தலம். கோவிலுக்குள்ளே போனேள்னா சுவர் சித்ரங்கள்ளாம் கண்ணைப் பறிக்கும். ரெண்டாயிரம் வருஷத்துக்கும் புராதனமான கோவில்! அத்தனை கடவுள்களும் இங்கே மகாலிங்கஸ்வாமியை ப்ரார்த்தனை பண்ணியிருக்கா. தபஸ் பன்ணியிருக்கா.. கோவிலுக்குள்ள அம்பாள் சன்னதிலே ரெண்டு நிமிஷம் நின்னேள்னா கண்ல தண்ணி ஊத்தெடுக்கும்.. அப்படிப்பட்ட லக்ஷணம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூணு பேரும் உருகி உருகிப் பாடின ஸ்தலம். ஆதி சங்கரர் ஆராதனை பண்ணின ஸ்தலம். இங்கேதான் அவருக்கு அத்வைத ஞானப்பிரகாசம் கிடைச்சது. வில்வக்காடா இருந்த இடத்துல விஸ்வநாதன் சுயம்புவா வந்த இடம். சுவாரசியமான கதை தெரியுமோ? தபஸ் பண்ணின அகஸ்தியருக்கு ப்ரத்யக்ஷமான உமையாம்பிகை, 'ஓய் அகஸ்தியரே! என்னய்யா வேணும்?'னு கேக்கறார். அகஸ்தியர் உமையாளைத் தரிசனம் பண்ணினதுல திக்குமுக்காடிப் போய், 'ஜகதாம்பிகே! உமா! எனக்கு ஈஸ்வரனை இங்கே தரிசிச்சு தினப்படிக்கு ஆராதனை பண்ணணும் தாயே!'னு கேக்கறார். சரின்னுட்டு பரமேஸ்வரனை வேண்டிக்கறா பார்வதி. அவரோட ஹ்ருதயத்துலந்து ஜோதிர்மயமா வெளிவரார் லோகேஸ்வரன். அந்த அக்னியையும் ப்ரகாசத்தையும் அகஸ்தியரால தாங்க முடியலே. அம்பாள் யாரு? சும்மாவா? அப்படியே ஜோதிர்மயமா வந்த ஈஸ்வரனைச் செல்லமா அடக்கி வழி பண்றா. ஜோதிஸ்வரூபமான ஈஸ்வரன் சுவயம்பு லிங்கமா வரார். லிங்கம்னா அப்பேற்கொத்த மகோன்னத லிங்கம். மகாலிங்கமா வந்த மகேஸ்வரன் முன்னால 'உண்முத்தாட உவகை தந்தாய் தண்முத்தாடத் தடமூன்றுடையாய், உனையுண்ணிக் கண்முத்தாடக் கழற்சேவடி புரிவேன்'னுட்டு ஆனந்தக் கூத்தாடறார் அகஸ்தியர். இதையெல்லாம் பாத்த ஈஸ்வரர், 'என்னடா இந்தாளு, கூத்தாடி கிட்டயே கூத்தாடுறானே? இவனை நம்பி நாளைக்கு காவேரியை எப்படி ஒப்படைக்கறது?'னு கலங்கறார். உமை அப்படியிப்படி பாக்கறா. நேக்கொண்ணும் தெரியாதுங்கறா. சட்னு ஸ்வாமி ஒரு காரியம் பண்றார். மகாலிங்கத்துக்கு முன்னாடி உக்காந்து ஆராதனை பண்ண ஆரம்பிக்கறார் மகாலிங்கம். உமையாம்பிகை ஆச்சரியப்படறா. 'என்ன ஸ்வாமி இது? உங்களை நாங்கள்ளாம் ப்ராத்தனை பண்றோம். நீங்களே உங்களைப் ப்ரார்த்தனை பண்ணிக்கறேளே? இதென்ன சமாசாரம்?'னு, இப்படி இடுப்புல ஒரு கையும் அப்படி கன்னத்துல இன்னொரு கையும் வச்சுண்டு ஆஸ்சர்யத்துல மூழ்கிப் போய்க் கேக்கறா. அதுக்கு அந்த ஒரிஜினல் அசல் உலகநாயகன் என்ன சொல்றார் தெரியுமோ? 'இல்லேடி கண்மணி. இந்த இடம் வில்வக்காடு. உன்னதமான மருதமரம் சூழ்ந்த இந்த இடத்துல என்னைப் ப்ரார்த்தனை பண்றவாளுக்கு சர்வ பாப நாசமும் சர்வ சாப விமோசனமும் உடனடியா கிடைக்கும். அது ரொம்ப சாதாரணமான பலன். அதுக்கு மேலே அஸ்வமேத யாகம் பண்ணின புண்யம் கிடைக்கும். அது போறாதுன்னா அதுக்கு மேலே கைலாசத்துல என்னை தரிசனம் பண்ணின பலன். அதுக்கும் மேலே வேணும்னா மோக்ஷமும் கிடைக்கும். இந்த ஒரு இடத்துல என்னைக் கும்பிட்டா போறும். ஆனா முறையா கும்பிடணும். சாஸ்த்ரோத்ரமா ப்ரார்த்தனை பண்ணினா இத்தனை பலனும் உண்டு.. அதான் நேக்கே.. ஆசை வந்திருச்சு, ஆகையால் ஓடி வந்தேன்'னுட்டு பல்லைக் காட்டறார். அவர் எப்படி சாஸ்த்ரோத்ரமா பண்றார்னு படிச்சுண்ட அகஸ்தியர் நமக்கெல்லாம் அதைக் கத்துக்க வழி பண்ணினார். இப்படி பகவானை எப்படிக் கும்பிடணும்னு பகவானே சொல்லிக் கொடுத்த ஸ்தலம்..
..உப்பிலியப்பன் கதை கேட்டேள்னா ப்ரம்மானந்த புராணத்துல இருக்கு - என்னமோ இன்னிக்கு நேத்திக்கு கட்டிவிட்டதில்லைணா. ஆழ்வாரெல்லாம் இழை இழைனு இழைஞ்சு பாடியிருக்கா, சும்மாயில்லே. மகாலக்ஷ்மி இங்க ஒரு துளசிமாடத்துல பொறந்த இடம். துளசிச் செடி அப்படி ஒரு வரம் கேக்கறது பகவான்ட்ட. ஒரு செடியோட வேண்டுதலை மதிச்சு பிராட்டி பொறக்கறா. கண்மூடித்தனம்னு சொல்லுங்கோ இல்லே க்ரீன் அவேர்னஸ்னும் சொல்லுங்கோ.. எல்லாம் சிம்பாலிக் தானேணா? கதையைக் கேளுங்கோ. என்னமோ துளசிமாடத்துல சப்தம் கேக்கறதேனு மார்க்கண்டேய முனிவர் வரார். துளசி மடிலே குழந்தையைப் பாத்துட்டு பரவசமாயிடறார். மகாலக்ஷ்மி மார்க்கண்டேயரைப் பாத்து லேசா சிரிக்கறா. மழலைச் சிரிப்புக்கு பத்து மோகனத்தைக் கட்டியடிக்கலாம் இல்லையோ? எக்ஸ்ட்ரா பரவசமாயிடறார் மார்க்கண்டேயர். அடடா.. லோகத்துல இப்பேற்பட்ட பெண் குழந்தை பொறக்கறது சாத்யமோ? இதென்ன மனுஷக் குழந்தை மாதிரியே இல்லையே? தெய்வீகத்துக்கு ஒரு படிமேலன்னா இருக்கு இந்தப் பொண்ணோட மந்தகாசம்? உள்ளே எடுத்துண்டு போய் வளக்கறார். வருஷமாறது. சிங்கில் மேனா இருந்த மகாவிஷ்ணு ரொம்ப லோன்லியா பீல் பண்றார். 'போறும்டி என் பட்டு.. நீயும் நானும் தனியா இருந்தது'னு சொல்லிண்டு ஒரு வயோதிகரா வேஷம் போட்டுண்டு வந்து மார்க்கண்டேயர்ட்ட பொண்ணு கேக்கறார். மார்க்கண்டேயர் நாசூக்கா 'ஐயா பெரியவரே. என் பொண்ணு ரொம்ப சின்னவள். அவளுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்கத் தெரியாது'னுட்டு எதையோ சொல்லி மழுப்பப் பார்க்கறார். மகாவிஷ்ணு விடாம, 'அதனாலென்ன? நேக்கு ரத்த அழுத்தம், யூரியா பிரச்னையெல்லாம் உண்டு.. வயசாறதோன்னோ? உப்பில்லாமலே சமைச்சுப் போடட்டும்.. உங்க பொண்ணு ஜலம் சுட வச்சுக் குடுத்தா கூட அது நேக்கு தேவாம்ருதமா இருக்கும்'னுட்டு படு ரொமான்டிக்கா டயலாக் விடறார். 'இதென்ன கூத்தா இருக்கே?'னுட்டு தவிக்கறார் மார்க்கண்டேயர். 'சித்தே இருங்கோ பெரியவரே'னுட்டு உள்ளே போய் நேரா பெருமாள்ட்டயே உதவி கேக்கறார். அப்பத்தான் சட்னு புரியறது அவருக்கு. ஓடோடி வெளில வந்து பார்க்கறார். சங்கு சக்ரதாரியா ஆகாசத்துக்கும் பூமிக்குமா நின்னுண்டிருக்கார் உலகளந்த பெருமான். மார்க்கண்டேயரைப் பார்த்து பவழமல்லிப்பூவா சிரிக்கறார். 'என்னைத் தெரியுமா.. நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா?'ங்கறார். 'ஆகா தெரிஞ்சுண்டேனே. ஆகாகா! பல்லுருவையெல்லாம் படர்வித்த வித்தா! உன் தொல்லுருவைத் தெரிந்து கொண்டேன். சொல்லித் தெரிவதா உன் சுந்தர ரூபம்? அள்ள முடியாதென்னிரு கண்கள் இருந்தென்ன? கொள்ள முடியாதென்னிரு கைகள் இருந்தென்ன? மனமெலாம் மயங்கித் தவிக்கிறேனே! என் ஞானப்பிரானை அல்லால் இல்லை இனி நான் கண்ட நல்லதுவே'னுட்டு உருகிப்போயிடறார். ஓடோடிப் போய் பிராட்டியைக் கூட்டிண்டு வந்து மகாவிஷ்ணு கைல சேர்த்து 'உப்பிலாத போழ்தும் ஒப்பென்று ஏற்ற ஒப்பிலியப்பா'னுட்டு சாஷ்டாங்கமா தரை தேய தண்டம் பண்றார். இதான் ஒப்பிலியப்பன் சரித்ரமாக்கும். கேட்டவாளுக்குக் கேட்ட க்ஷணத்துல மோக்ஷம் தர புண்ய சரித்ரம். வைகுந்த நகரம்னு பேராக்கும் இந்த க்ஷேத்ரத்துக்கு..
..திருனாகேசுரப் புராணம் இதெல்லாத்துக்கும் ஒரு படி மேலே.."
விருப்பமில்லாமல் அவரை மறித்தேன். "இதுக்காகவா உங்களை அடிச்சுப் போட்டா? புரியலியே?"
"சொல்றேன். வாய்க் கொழுப்புனு இல்லே. நடைமுறைல நிதர்சனமா இருக்குறதைச் சொன்னேன். நான் சொன்ன ஸ்தலபுராணாதிகாசக் கதைகள் ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னால நடந்ததா சந்ததி விட்டு சந்ததி கேட்டு அறிஞ்சுண்டது. சத்யம்னு நினைக்கறேளோ ப்ருடானு நினைக்கறேளோ எப்படி எடுத்துண்டாலும் இதுக்கெல்லாம் ஒரு வேர்.. ஒரு மூலம்.. ஒரு ம்ருணாளம் இருக்குங்கறதை ஒத்துப்பேள் இல்லையாணா? இதையெல்லாம் நம்ம கலாசாரத்தோட அணு.. டிஎன்ஏ.. விப்ருஷம்னு சொன்னா ஒத்துப்பேள் இல்லையாணா?"
"சரி..." இழுத்தேன்.
"திருடைமருதூர் கோவிலைச் சுத்திப் பாத்தேள்னா இப்போ அங்கேலாம் நிறைய முஸ்லிம்கள் வீடு வாங்கறானு தெரிஞ்சு போகும். ஐராவதேஸ்வரக் கோவில் தெப்பக்கொளத்துக்குப் பக்கத்துல கிறுஸ்தவ வீடுகள். திருநாகேசுரத்துல அக்ரகாரமே காணோம். இதெல்லாம் தப்பா ரைட்டானு நேக்கு தெரியாது. ஆனா நான் சொல்ல வரது என்னன்னா இதெல்லாம் இந்தப் புராதன இடங்களின் அடையாளங்களை மாத்திண்டிருக்கு. இந்த மாத்தம் உசிதமானு சந்தேகமா இருக்கு. பாருங்கோணா.. இப்பல்லாம் இந்துக் கோவிலுக்கே கூட்டம் வரது குறைஞ்சிண்டிருக்கு இல்லையா? அரசாங்கமோ அறநிலையத்துறை அது இதுனு சொல்றாளே தவிர, பாதிக் காசை எடுத்துண்டுடறா. மீதிக் காசுலயும் பாதியை அப்பப்போ அன்னதானம்னு சொல்லி ஓட்டு வாங்கறதுக்காக இலவச சாப்பாட்டுக் கூடமாக்கிண்டிருக்கா கோவிலையெல்லாம். அறநிலயத்துறைக்காரா சர்ச் தர்கா எல்லாத்தையும் எடுத்துக்கறாளா? இல்லையே, ஏன்? நம்ம கோவிலை மட்டும்தான். கேட்டா இந்து அறநிலையத்துறைங்கறா. விடுங்கோ எடுத்துக்கறா எடுக்காம இருக்கா போயிட்டு போறது. ஆனா நம்ம கோவில் வருமானத்தையும் எடுத்துண்டு, மிச்சமிருக்குறதையும் சுருட்டிண்டு, அக்கம்பக்கத்துலயும் இப்படி சர்ச் தர்கானு வர விட்டு.. ஒரு கேடான சூழல் உண்டாறப்ல இருக்கு. நம்ம மனுஷாளும் கோவிலுக்குப் போறதில்லே.. அப்படியிருக்கச்சே கோவிலை நம்பின அக்கிரகாரக் குடும்பங்கள்.. வைதீகக் காரியங்களையும் தெய்வீகக் கைங்கர்யங்களையும் வயத்துப் பொழப்பா நம்பி வந்தக் குடும்பங்கள் எல்லாம்.. சிதைஞ்சுண்டே போறது. இருந்த ப்ராமணக் குடும்பங்கள் எல்லாம் கடல் தாண்டிப் பரதேசம் போயிட்டா, இல்லேன்னா போயிண்டிருக்கா. இந்த லாஸ்ட் ட்வன்டி பைவ் இயர்ஸுல இந்த மாதிரி கலைஞ்சு போன ப்ராமணக் குடும்ப சந்ததிகள் யாரும் ஊருக்குத் திரும்பி வரப் பிடிக்காம அமெரிக்கா துபாய் ஜெர்மனினு இருக்கா. பணம் பேயாட்டம் ஆடறது. பெரிய பெரிய சிடில பங்களாவும் ப்லாட்டுமா வாங்கிப் போடறா. கிராமத்து வீடும் வேரும் யாருக்கு வேண்டியிருக்கு? அப்பாம்மாவை ஏகாந்தத்துலந்து விட்டுப் புரட்டியெடுத்து பெரிய நகரத்துலயோ இல்லேன்னா இப்பல்லாம் சொல்றாளே சீனியர் ஹோம்னுட்டு.. முதியோர் இல்லத்துல விட்டுட்டு போயிடறா. இங்கே இவா பிதாமகர் பிரபிதாமகர் கட்டின பூர்வீக வீடெல்லாம் நலிஞ்சு போய்.. இதெயெல்லாம் மீறி அப்படியும் இங்கதான் இருப்பேன்னு வைராக்யத்தோட இருக்குற குடும்பங்கள் கோவில் கைங்கர்யத்துல பிழைச்சுண்டிருக்கு..
..இதுல கோவிலைச் சுத்தி இருந்த வீடுகளையெல்லாம் பாத்தா, ஒண்ணொண்ணா வாங்கறவா எல்லாம் துபாய் சவுதினு போன நம்ம் ஊர் முஸ்லிம்கள். இல்லேன்னா கிறுஸ்தவா. கோவில் வருவாயும் குறைஞ்சு, பசங்களையும் பிரிஞ்சு, அரசாங்க உதவியும் கொறஞ்ச நிலைமைலே.. வந்த வரைக்கும் லாபம்னு வீட்டை வித்துட்டுப் போயிடறா அக்ரகார பிராமணா"
"நஷ்டத்துக்கு விக்கலியே.. லாபத்துக்குத்தானே விக்கிறாங்க?"
"லாபம் நஷ்டம்னு எதைச் சொல்றதுணா? நூத்திமூணு வருஷமா அக்ராகரத்துல இருந்த தேக்குமரம் இழைச்ச பெரிய வீட்டை இப்போ இவா வறுமைக்காக வித்துட்டு... வாங்கின கையோட அவா இடிச்சு கலர் கலரா கண்ணை உறுத்துற பெயிண்ட் அடிச்சு ரெண்டு மாடி அடுக்கு வீடு கட்டி.. இதுல யாருக்கு நஷ்டம்னு சொல்றது.. யாருக்கு லாபம்னு சொல்றது?"
நெளிந்தேன். இவர் அடி வாங்கிய ரகசியம் புரியத் தொடங்கியது போலிருந்தது.
"அதான் ப்ரசங்கத்துல கேட்டேன். நம்ம ஜனங்களைத்தான் கேட்டேன். ஐயா.. இந்துத்வம், ப்ராமண சங்கம்னு பேசிண்டிருக்கேளே.. இந்த மாதிரி நம்ம இந்துக் கோவில்களை ஒட்டின வீடுகள் இப்படி மதம் மாறாம பாத்துங்கோ. ஐயா.. முஸ்லிம் சகோதரர்களே.. கிறுஸ்தவ சகோதரர்களே.. உங்களுக்கு இருக்கற வசதிக்கு சிவன் கோவிலுக்கு அடுத்த வீட்டைத்தான் வாங்கணுமா? பெருமாள் கோவில் பக்கத்துல வீடு வாங்கி என்ன பண்ணப் போறேள்? சித்த தள்ளி வாங்கப்டாதானு ப்ரஸங்கத்துல பேசினேன். இது இப்படியே போனா நாளைக்கு என்னாகும்னா... நாளைக்கு இந்துக் கோவில்களைச் சுத்தி மத்த மத வீடுகளும்.. அப்றம் அவா வழிபட இடம் வேணுமே.. அந்த ஆலயங்களும் வந்துடும். அப்புறம் கோவில் இருந்து என்ன பிரயோஜனம்? அவாளாவது கோவிலை எதுக்காவது உபயோகிச்சுக்கட்டும்னு இந்துக்கள் நாம விடமாட்டோம். நாப்பது அம்பது வருஷம் கழிச்சு 'இது எங்க கோவில் நிலம்.. இதுக்குள்ள நீங்க எப்படி வரலாம்?'னு, சப்ஜாடா வித்துட்டு ஊரை விட்டு ஓடின நாமளே கொடி பிடிப்போம். இதையெல்லாம் தவிர்க்கலாம்னு பேசினேன். இந்துப் புராதன கோவில்களை ஒட்டின அக்ரகார வீடுகளை இந்துக்கள் நாமதான் பராமரிக்கணும்னு பேசினேன்.. இல்லேன்னா நம்ம கோவில்களைச் சுத்தி பள்ளிவாசலோ சர்ச்சோ வந்தா நாம வருத்தப்படக்கூடாதுனு பேசினேன்.. நம்ம கோவில் அக்ரகார வீடுகளை வாங்கி உதவி பண்றது வெளி நாட்டுல சம்பாதிக்கற இந்துக் குடும்பங்கள் அத்தனை பேருடைய கடமைனு பேசினேன். ஒரு ஆதர்சமான ஸ்பட த்ருஷ்டியோட பேசின பேச்சு.." என்றார்.
"அதிசயம்" என்றேன்.
"என்ன சொல்றேள்ணா?"
"உங்களை உயிரோட விட்டது அதிசயம்"
"மிச்ச காரியமும் ஆகட்டும்னு ஆளைக் கூட்டிண்டு வந்துடுவேள் போலிருக்கே? ஏன் அப்படிச் சொல்றேள்?"
"ஜாதி மதம் ஒழியணும்னு சொல்ற நாள்ல நீங்க இப்படி பேசினது ரொம்ப விஷமத்தனமா தோணுது. யார் கிட்டே வசதியிருக்குதோ அவங்க வீடு வாங்றதுல என்ன தப்பு இருக்கு? எங்க வாங்கினா என்ன? ராமர் கோவில் பக்கத்துல சர்ச் இருந்தா என்ன? விஷ்ணு கோவில் பக்கத்துல ஒரு தர்கா இருந்தா என்ன? நீங்க சொல்றது ஜாதிவெறியோட உச்சம் இல்லையா?"
"உச்சமாவது மச்சமாவது? செல சமயம் நீங்க அமெரிக்கா போய் படிச்சேளா விடிச்சேளானு சம்சயமாறது. பக்கத்து பக்கத்துல இருந்தா யாருக்கு என்ன பலன்? இவாளுக்கும் நிம்மதியில்லே அவாளுக்கும் சந்தோஷமில்லே. ஒவ்வொத்தருக்கும் கல்சர் ஹெரிடெஜ்னு இருக்குணா. பள்ளிவாசலை ஒட்டி ஒரு பிராமணன் வீடு வாங்குவானா? மாட்டான். ஆனா பெருமாள் கோவிலை ஒட்டின தன்னோட வீட்டை மட்டும் ரெண்டு காசு ஜாஸ்தியா வரதுன்னுட்டு எதுக்கு இன்னொரு மதக்காரனுக்கு அதே ப்ராமணன் விக்கணும்னேன்? அவ்வளவுதான். எ ரிக்வெஸ்ட் பார் எதிகல் இந்ட்ராஸ்பெக்ஷன். இதுல ஜாதி வெறி எங்க இருக்குணா?"
அவருடைய வாதம் என்னைச் சற்றே மயக்கினாலும், அதன் அடிப்படை என்னை அச்சுறுத்தியது.
"இட்ஸ் எ பிடி" என்றார். "நான் சொன்னதுல ஜாதி மத ஆதாரம் பாத்து என்னை அடிச்சுப் போட்டவா எல்லாம் இந்துவா முஸ்லிமா யாருனே தெரியாது. என்னை மாதிரி அவாளுக்கும் ரெண்டு கால் கை. என்னை அடிச்சுப் போட்ட வலி அப்பவே போயிடுத்து. ஆனா இவா அறியாமை..அஞ்ஞானமும் அசம்போதமும் தான் எனக்கு ரொம்ப ப்ராண சங்கடமா இருக்கு. தீராத பீடை. ஒரு ரோகம் மாதிரி. என்னமோ கிராமத்துல இருக்கறவா நேரோ மைன்ட் மாதிரியும், பட்ணம் விதேசம் போய்ட்டு வந்தவா ரொம்ப முற்போக்கு மாதிரியும் பேசிண்டு திரியறவாளைப் பார்த்தா சிரிப்பா இருக்கு".
நிச்சயம் கொக்கி போடுகிறார் என்பது புரிந்தது. அவரையே பார்த்தேன்.
"விடுங்கோ. எனக்குத் தோணிதை நான் சொன்னேன். அவாளுக்குத் தோணினதை அவா செஞ்சா. உமக்கொண்ணு தெரியுமோ? இந்த வட்டாரத்துல இருக்கற அனேக ப்ராமணர்க்குள்ள ஒரு முஸ்லிம் ரத்தம் ஓடறது. இந்த வட்டாரத்துக்குள்ள இருக்கற அனேக முஸ்லிம்கள் ஒரு ப்ராமண அம்மணியைத்தான் ரொம்ப நாளைக்கு ரகஸ்யமா ஆராதிச்சுண்டு வந்தா"
"என்ன சார் கதை விடறீங்க?"
"கொஞ்சம் உள்ளே போய் ஊர்ல பழந்தின்னு கொட்டை போட்டவாளைக் கேட்டா விவரம் தெரியும்..எல்லாம் இந்தப் பக்கதுல தான் நடந்துது. கபிஸ்தலம் போற வழியிலே வைதீஸ்வர அக்ரகாரம்னு இருந்தது, நூறு இருநூறு வர்ஷங்களுக்கு மின்னாலே பிரசித்தம்னு எங்க பெரிய பாட்டி சொல்வா. இப்போ ஊரையே காணோம். ஊர் காணாமப் போனாலும் அங்க நடந்த சமாசாரம் காணாம போகலே, இந்தப் ப்ரதேச ரத்தத்துல கலந்துடுத்து" என்றபடி என்னைப் பார்த்தார். "நேக்கும் பொழுது போகலே. ஆர அமறக் கேளுங்கோணா".
இவரைப் பார்க்க வந்து ஒரு நாள் பொழுது கழியும் என்று நான் நம்பியது வீணாகவில்லை. தொடர்ந்து நான்கு நாட்கள் அவரைத் தினம் சந்திக்க வேண்டியிருந்தது. அத்தனை சுவாரசியமான சமாசாரம். ஜாதி மதம் கடந்த விவகாரம்.
காதல் விவகாரம்.
[தொடரும் சாத்தியம்: 60-75%]
2012/06/15
தைவாதர்சனம்
◄◄   1     2     3
    கதை கேக்கத் திரும்பி வந்தவாளுக்கு ஒரு ஆத்மார்த்த வெல்கம் போட்டுடறேன்.
பொடி டப்பாவை கால் டேக்சில தொலைச்சுட்டேன்னு சொன்னேனில்லையா? மகராஜன், வீடு தேடிக் கொண்டு வந்து கொடுத்தான். காசு கூட வாங்கிக்கலை. இவாள்ளாம் இருக்கறதுனால தான் மழை பெய்யறது.
மழைன்னதும் பாருங்கோ, அன்னைக்கு சரியான மழை. பின்னால இருக்கற எங்காத்துப் போர்ஷன்லந்து வாசல் கேட்டுக்குக் குறுகலான மண்பாதை. கொட்ற மழைக்குக் கேக்கணுமா? ந்ருஜலம் கோமியத்துலந்து பக்கத்து பில்டிங் சாக்கடை எல்லாம் கலந்து சேறும் சகதியுமா சர்வமூத்ர சாகரமா ஓடிண்டிருக்கு. வாசல்லந்து பீங் பீங்னு ஹாரன் அடிக்கறது. யாருடாதுனு எந்தப் போர்ஷன்காராளும் பார்க்கலை. யாரோ இறங்கி வந்து "ஐரே! ஐரே!"னு கூவறான். நான் ஒரு குடையைப் பிடிச்சுண்டு வாசல்ல வந்தேன். அதுக்குள்ள கால் சேத்துல புதைஞ்சுடுத்து. சபிச்சுண்டே காலை தண்ணில அளஞ்சுண்டே பாத்தேன், கால் டேக்சிக்காரன் தான். மூக்கை மூடிண்டு அங்கயும் இங்கயும் அருவருப்போட தாவித்தாவி நான் சிரமப்பட்டு நடக்க ஆரம்பிச்சதைப் பாத்ததும் அவன் அங்கருந்து, "நின்னுக்க ஐரே.. நான் வரேன்"னு சொல்லி, கன அலட்சியமா சீட்டியடிச்சுண்டே புண்யநதியில இறங்கிவர மாதிரி எங்கிட்ட வந்தான். பொடி டப்பாவைத் தந்தான். நான் ஏதாவது அவனுக்குத் தரதுக்குள்ளே, "ஒண்ணும் வேணாம் ஐரே, வர்ட்டா?"னுட்டு மறுபடியும் சீட்டியடிச்சுண்டே சந்தோஷமா நடந்து போயிட்டான். பொடி டப்பா அந்த மூத்ரசகதியில மூழ்கிடப் போறதுன்னுட்டு சர்வ ஜாக்கிரதையா அடி மேல அடி வச்சு ஆத்து வாசலுக்கு வந்து காலையலம்பிண்டு உள்ளே போனேன்.
எனக்கும் அந்த டேக்சிக்காரனுக்கும் எவ்வளவு வித்தியாசம் பார்த்தேளா? நேக்கு உதவி செய்ய வந்திருக்கான். என்னால சந்தோஷமா அந்த சகதியில இறங்கி அந்த உபகாரத்தை வாங்கிக்க முடியலே. ஆனா அவன் சீட்டியடிச்சுண்டே வந்து சந்தோஷமா குடுத்துட்டு நன்றி கூட எதிர்ப்பார்க்காம அதே சகதியிலே நடந்து போயிட்டான். நான் உடம்பு சுத்தம் பார்த்ததாலே எல்லாத்துக்கும் கவலைப்பட்டு எதையும் செய்ய முடியலே. அவனுக்கு மனசு சுத்தமா இருக்குறதால எதைப் பத்தியுமே கவலையில்லாம எல்லாத்தையும் செய்ய முடிஞ்சுது. இதான் வித்தியாசம்.
இதே மாதிரி பாருங்கோ.. பிரதாப ராஜா, பிரம்மா ரெண்டு பேருமே அவாந்த்ர லோகப் பாதையிலே போயிண்டிருக்கா. ஆனா ஒருத்தருக்கு அசூயை, இன்னொருத்தருக்கு ஆனந்தம். அவாந்த்ர லோகத்துக் கிட்டே வரப்போ ரசகந்தம் அடிக்கிறது. இங்லிஷ்ல சல்பர்னு சொல்லுவாளோனோ.. எரியற வாடை அடிக்கறது. என்னென்னவோ சப்தம் எல்லாம் கேக்கறது. பிரம்மா மனசுக்குள்ளே திட்டிண்டே வரார். பிரதாப ராஜாவோ ஒரு சந்தோஷ எதிர்பார்ப்போடயும் தேவாளுக்கு உபகாரம் பண்ணப்போற நிறைவிலயும் வரார். மனசுல பாருங்கோ.. மார்க்கம் உண்டு, மூர்க்கமும் உண்டு.
அவாந்த்ர லோகம் வந்ததும் ப்ரம்மா, "பிரதாபா, நீ போய் அழைச்சுண்டு வா, நான் இங்கயே இருக்கேன்"னு சொல்றார். பிரம்மாவுக்கு உள்ளே போகப் பிடிக்கலைங்கறது பிரதாபனுக்குப் புரியறது.
ராஜா தனியா உள்ளே போறார். அங்கே ம்ருத்யுவான ஜன்மாக்களெல்லாம் ஓலமிட்டிண்டுருக்கு. உருவமெல்லாம் இல்லை. ஆனா தன்னைச் சுத்தி நடமாட்டம் இருக்கறதை உணர முடியறது. தன்னோட குமாரனைத் தேடறார். "பிரதாப குமாரா, குமரா"னு கதறிண்டே போறார். சப்தமே காணோம். இந்த டைம் பார்த்து ஒரு குடும்பப் பாட்டு கூட இல்லாமப் போனது அவருக்கு வருத்தமா இருக்கு. அவாந்த்ர லோகத்துக் கடைசி வரைக்கும் பாத்துட்டு திரும்பறார். பிள்ளையோட ஜீவன் குரல் கொடுக்கக் காணோம். இவ்ளோ தூரம் வந்தும் கண்டுபிடிக்க முடியலையேனு ரொம்ப வருத்தமா போய், "குமரா, குமரா"னு துடிச்சு அழறார்.
மனசுவிட்டு அழறோம் பாருங்கோ, அதுக்கு எப்பவுமே அதீத சக்தி உண்டு. ஜீவனோட ஜீவனை சேக்கற சக்தி. தெய்வத்தையும் மனுஷாளையும் சேக்கற சக்தி. 'ஆருளர் களைகண்?'னு எதுக்கு அழணும்? சகலத்தையும் துறந்து, 'ரங்கா! நீ எனக்கு அம்மாயில்லையா? பிள்ளைக்கு அம்மாவை விட்டா வேற யார் இருக்கா? உன்னை விட்டா நேக்கு வேறு யாரு இருக்கா, என் அம்மா?!'னு ஆத்மா கரைய அழறப்போ, அங்கே அடிப்பொடிக்கும் அனந்தனுக்கும் ஹாட்லைன் கனெக்ஷன் கிடைக்கறது பாருங்கோ.. அந்தச் சக்தி. அமானுஷ்யத்துக்கும் அப்பாற்பட்ட சக்தி.
ராஜா அப்படி மனசு வெம்பி அழ ஆரம்பிச்ச சித்த நாழிக்கெல்லாம், "அப்பா!"னு ஒரு குரல் கேக்கறது.
திக்குமுக்காடிப் போறார் ராஜா. "குமரா!"ங்கறார். "அப்பா!"ங்கறது ஒரு ஜீவன். "குமரா!"ங்கறார் மறுபடி. "அப்பா!"ங்கறது அதே ஜீவன். குரலை வச்சுத் தேடிக் கண்டுபிடிச்சுடறார் ராஜா. அவர் கண்லேந்து தாரை தாரையா ஆனந்தஜலம். நடந்ததையெல்லாம் சொல்றார்.
உள்ளே இப்படி இருக்கச்சே, வெளில பிரம்மா பொறுமையில்லாம காத்துண்டிருக்கார். 'என்னடாது, உள்ள போன ராஜாவை இன்னும் காணோமே?'னு அவருக்கு ஒரே அமாதி. 'சரி, இனிமே ராஜா திரும்பி வரப் போறதில்லை'னு நினைக்கறப்போ, ராஜாவோட குரல் கேக்கறது. "பிரம்ம தேவரே! என் பையனைக் கண்டுபிடிச்சுட்டேன்"னு குரல் கேக்கறது. பிரம்மாவுக்கு பரம சந்தோஷம். "என்ன பிரதாபரே, உம்ம பையனைக் கூட்டிண்டு வந்தீரா?"னு கேக்கறார்.
"அவன் வர மாட்டேன்னுட்டான்"கறார் பிரதாப ராஜா.
"என்ன? வர மாட்டானாமா? என்னய்யா இது?"னு பதட்டப்படறார் பிரம்மா.
"நான் என்ன பண்றது. எவ்வளவு கெஞ்சியும் வரமுடியாதுன்னுட்டான். நீங்களே வேணும்னாலும் கேட்டுப் பாருங்கோ"னுட்டு நடக்க ஆரம்பிக்கறார் ராஜா.
"நான் எப்படிய்யா உள்ளே போறது?"னு எரிஞ்சு விழறார் பிரம்மா.
"அவாந்த்ர லோகத்து வாசல்லயே தான் நிக்கறான். நீங்க இங்கருந்தே பேசுங்கோ"னு சொல்றார் பிரதாப ராஜா.
"பிரதாப குமாரா.. என்னய்யா கூத்தடிக்கிறே? என் வரமாட்டேங்கறே?"னு நாலு வாயாலயும் கத்தறார் பிரம்மா.
குமார ஜீவன் கொஞ்சம் நிதானமா பதில் சொல்றது. கிணத்துக்குள்ளேந்து வர மாதிரி இருக்கு சப்தம். ஆனா நிதானமா, தெளிவாக் கேக்கறது.
பதிலைக் கேட்டதும் பிரம்மாவுக்கு ரொம்பக் கோவம் வரது. அவர் மொகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்கறது. "பிரதாப ராஜா, உம்ம புத்தியைக் காமிச்சுட்டீரே?"னு கோவமா பேசறார்.
"நான் என்னய்யா செய்யறது? எல்லாம் என் பையனோட ஜீவன் சொன்னதைத் திருப்பிச் சொன்னேன்! இப்ப நீங்களே அதன் வாயால கேட்டாச்சு. நீங்க பண்ணின கூத்துக்கு நான் எப்படி ஜவாப்தாரியாறது?"ங்கறார் பிரதாப ராஜா. "என் பிள்ளை சொன்னதை கேட்டேள் இல்லையா? இப்ப என்ன செய்யணுமோ செய்யுங்கோ"னு சொல்லிட்டு அங்கருந்து நடக்க ஆரம்பிச்சார்.
"இரும் ஓய்.. மும்மூர்த்திகளும் சேந்து எடுக்க வேண்டிய முடிவாச்சே?"னுட்டு நேரா ராஜாவை இழுத்துண்டு விஷ்ணு லோகத்துக்குப் போறார்.
அங்க தேவர்கள் கூட்டம் நின்னுண்டிருக்கு. சிவனும் விஷ்ணுவும் காத்துண்டிருக்கா. பிரம்மா வேக வேகமா வர்றதைப் பாக்கறா. "என்னய்யா? அந்த உதவாக்கரை என்ன பண்ணினான்?"னு கேக்கறா.
"ஷ்!"ங்கறார் பிரம்மா. "இதோ என் பக்கத்துல தான் இருக்கான்"னு சைகை காட்டறார் பிரம்மா.
"பிரதாபனை யாரு என்னய்யா சொன்னா? அவர் மகாபுருஷனாச்சே. நாங்க அந்த உருப்படாத தேவ தோப்பனாரைச் சொன்னோம், இல்லையா பரமசிவம்?"னு வழிஞ்சுண்டே சொல்றார் மகாவிஷ்ணு. அசடாட்டம் தலையாட்டறார் சிவன்.
பிரம்மா எல்லாத்தையும் சொல்றார். "அந்தப் பையனோட ஜீவன் கிட்டே பேசிட்டு வந்தேன். ஒரு நிர்ப்பந்தம் போடறான். தன்னோட அப்பாவை, அதாவது பிரதாப ராஜாவை, நாலாவது மூர்த்தியா ம்ருத்யுலோக மேனேஜரா போட்டாத்தான் திரும்பி வருவேன்னு சொல்லிட்டான். இல்லைன்னா இப்படியே ஜீவனாவே இருந்துட்டுப் போறேன்னு சொல்லிட்டான்"கறார்.
"என்னய்யா இது? அக்கிரமமா இருக்கே?"ங்கறார் நமச்சிவாயர்.
"நான் என்ன செய்யறது? என் பையனோட ஜீவன் வேணும்னா இதான் கண்டிஷன்"கறார் பிரதாப ராஜா.
"அத்தனையும் சொல்லிக் குடுத்துட்டு, நான் என்ன செய்யட்டுங்கறார். என்ன ஒரு அழிச்சாட்டியம் பாருங்கோ!"ங்கறார் பிரம்மா.
மகாவிஷ்ணு எல்லாத்தையும் பாத்துட்டு சிவன் காதுல ஏதோ சொல்றார்.
தலையாட்டிட்டு சிவன் சொன்னார். "சரி. நேரமாயிண்டே போறது. எப்படி இருந்தாலும் ம்ருத்யு மேனேஜ் பண்ண ஆள் தேவைன்னு போட்டிருக்கோமே. அமரத்வமான நமக்கு ம்ருத்யு லோகத்தை மேனேஜ் பண்ண வரலை. பிரதாப ராஜாவுக்கு அந்த வேலையைக் கொடுத்துடுவோம். அவரும் ரொம்ப நாளா தேவ வம்சத்துல சேந்துடணும்னு சொல்லிண்டிருக்கார். சீக்கிரம் அந்த ஜீவனைத் திருப்பலைன்னா நம்ம கதி ரொம்ப மோசமாயிடும். நம்ம சௌகரியத்துக்காகவாவது பிரதாப ராஜாவுக்கு இந்த வேலையைக் குடுத்துட வேண்டியது தான். என்ன, பிரதாபரே, உம்மை நாலாவது மூர்த்தியா செஞ்சுட்டா, உம்ம பையன் ஜீவனைத் திருப்பிக் கொண்டு வந்து சேக்க சம்மதமா?"ங்கறார்.
"மொதல்ல என்னை தேவ வம்சமாக்கி, ம்ருத்யுலோகாதிபதி ஆக்குங்கோ"ங்கறார் பிரதாப ராஜா.
"பிரதாபராஜா இந்தக் க்ஷணத்துலந்து தேவ வம்சம். இந்தக் க்ஷணத்துலந்து ம்ருத்யுலோகாதிபதி. இந்தக் க்ஷணத்துலந்து நாலாவது மூர்த்தி. தர்மலோக பரிபாலனம் பண்றதுனால அவர் பெயர் இன்னைலேந்து தர்மராஜன். ம்ருத்யுலோகாதிபதியா இருக்கறதால யமன். இந்தக் க்ஷணத்துலந்து யமதர்மராஜன்"னு நீலகண்டர் பிரதாப ராஜாவோட கையைப் பிடிச்சு அர்க்கயம் விட்டு சொல்றார்.
பிரதாப ராஜனுக்கு சந்தோஷம். மும்மூர்த்திகளைக் காத்தோடக் கட்டிண்டு தேங்க்ஸ் சொன்னார். குமாரனோட ஜீவனைப் பாத்துக் கூட்டிண்டு வர ஓடினார்.
யமதர்மராஜன் தான் தேவ வம்சத்துல சேர்ந்த மொதல் மனுஷன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம், ஆனா இதான் யமதர்மராஜன் உதயமான கதை. உண்டான கதை. நிலைச்ச கதை. அன்னைலேந்து ஸ்ரத்தையா தர்மலோகம் பரிபாலனம், ம்ருத்யுலோக பரிபாலனம் பண்ணிண்டு அமரத்வத்தோட இருக்கார் பிரதாப ராஜன் அலியெஸ் எமதர்மராஜன்.
சாபத்துக்கு அப்புறம் உண்டானதாலே, மனுஷனா இருந்து தேவனா மாறினதாலே, யமன் மட்டுமே மனுஷாள் கண்ணுக்குத் தெரியறான். இதான் கதை. இதி சமாப்தம். எல்லாரும் போய்ட்டு வாங்கோ.
என்ன? துளசி மாமி அடிக்க வராப்ல மொறச்சுண்டு நிக்கறாரே? ஓ! பிரதாபகுமாரன்-ப்ரியதர்சனி பத்தின மிச்ச காதல் கதையா? மறந்து போயிருப்பேள்னு நினைச்சேன். சரி, அதையும் சொல்லி, சுப சமாப்தமா பண்ணிட்டா போச்சு.
யமதர்மராஜன், அதான் நம்ம பிரதாப ராஜன், வேக வேகமா போய் குமாரனோட ஜீவனைக் கூட்டிண்டு வந்து ஒடம்போட சேத்ததும், பிள்ளையாண்டான் பழையபடி புருஷோத்தமனா எழுந்துக்கறான்.
மூச்சு வந்த முகூர்த்தம், "ப்ரியதர்சனி, எங்க நீ, கண்ணே?"னு தேடறான்.
"இங்கே இருக்கேன் கண்ணா.. இதோ வந்துட்டேன் என் ராஜா"னு குரல் மட்டும் கேக்கறது.
'என்னடாது.. குரலைக் காதலிக்கவா இத்தனைக் கஷ்டப்பட்டோம்?'னு நெனக்கறான் குமாரன்.
"இந்தாடி.. தடிச்செருக்கி, சித்த நில்லுடி"னு அதட்டறார் பிரம்மா. "உம்பாட்டுக்கு சாபத்தைக் குடுத்துட்டு கண்ணா ராஜானு சுத்திண்டிருக்கே? எங்க கதி என்னாறது? சாபத்தை மொதல்ல வாபஸ் வாங்கிக்கோ"னு கோவமாச் சொல்றார்.
"மறந்தே போச்சு!"னுட்டு சாபத்தை திருப்பி எடுத்துக்கறா ப்ரியதர்சனி. "சாபம் வாபஸ்"ங்கறா.
ஒரு க்ஷணமாறது, ரெண்டு நாழியாறது, மூணு முகூர்த்தமாறது. ஒரு மாத்தமும் காணோம். தேவாளும் மனுஷாளும் ஒருத்தருக்கொருத்தர் கண்ணுக்குத் தெரியாம இருக்கா.
"கக்கக்க்கும்"னு யாரோ கனைக்கறது கேக்கறது. எல்லா தேவாளும் திரும்பிப் பாக்கறா. அங்கே விஷமமா இளிச்சுண்டே நிக்கறார் தேவகுரு, பிரகஸ்பதி.
"என்னய்யா?"னு எரிச்சலோட கேக்கறா விஷ்ணுவும் சிவனும்.
"ஒண்ணுமில்லே. 'தேவசாபம் சாஸ்வதம்'னு நீங்க ரெண்டு பேரும் தான் தீர்மானிச்சேள். தேவாளுக்கு அம்ருதம் கடைஞ்சு கொடுக்கறச்சே. ஞாபகமில்லையோ?"ங்கறார் பிரகஸ்பதி.
எல்லா தேவாளுக்கும் திக்குங்கறது. எல்லா தேவாளும் சிவாவிஷ்ணு கிட்டே "இப்ப என்ன செய்யறது?"னு கேக்கறா. "கொடுத்த சாபத்தை எடுக்க முடியாது. ஆனா நிவர்த்தி பண்ணலாம்னு நாம சொன்னது நம்மளையே பழி வாங்கறதே? நீயே பரிகாரம் சொல்லுமா"னு கெஞ்சறா ரெண்டு மூர்த்திகளும் ப்ரியத்ரசினி கிட்டே.
ப்ரியதர்சனி பொம்னாட்டியாச்சே? முன் பின் எப்பவும் புத்திசாலியோன்னோ? யோசிச்சு சொல்றா: "தப்பு நடந்து போச்சு. சாபம் குடுத்தாச்சு. சரி, அரூபமா தெரியமாட்டேள். ஆனா லோகத்துல காதலிக்கற மனுஷா யாராயிருந்தாலும் கோவிலுக்கு வர வரைக்கும் இனிமே கோவில்ல விக்ரகம், சிலைனு பல வடிவங்கள்ல கண்ணுக்குத் தெரிவேள். மனுஷாளும் விக்ரகம்னு நினைக்காம தெய்வம்னு நினைச்சு பழைய மாதிரியே நேசமா நம்பிக்கையா இருப்பா. ஒவ்வொரு கோவில் கட்டும் போதும் மூல உற்சவர் வடிவத்துலயும், கோபுர சிலா வடிவத்துலயும் எல்லா தேவர்களும் கொஞ்சம் கொஞ்சமா ரூபத்துக்கு வருவேள். முப்பத்து முக்கோடி தேவர்களும் இப்படி ஒத்தொத்தரா கோவில் கட்டி வந்ததும், பழையபடி தேவா மனுஷா சகஜீவிதம் பரிணாமிக்கும்".
சிவா விஷ்ணுவுக்கு ஒரே ஆனந்தம். "நல்ல காரியம்.."னு சொல்றா.
"சரிதான்... முப்பத்து முக்கோடி தேவாளும் ஒத்தொத்தரா கோவில விக்ரகம், கோபுரச் சிலாரூபம்னு வர்றதுக்குள்ளே நிறைய யுகாந்தரமாகுமே?"ங்கறார் தேவ தோப்பனார்.
டக்குனு அவர் வாயைப் பொத்தறார் பிரம்மா. "உமக்கு வேறே ஏதாவது ஐடியா இருந்தா சொல்லும், இல்லை இனி வாயைத் திறந்தீரோ, நீர் தான் கடைசிச் சிலா ரூபம்"னு கோவமா சொல்றார். கப்சிப் காராபூந்தின்னு ஆயிடறார் தேவ தோப்பனார்.
எதனால கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்றோம்னு இப்பப் புரியறதோ? சாமி கும்பிடறதுக்காகனு சிலபேர் நினைக்கறா. ஆனா அது லோகத்துல காதலை வளக்கறதுக்காக. அதே நேரம் ஒவ்வொரு தடவையும் நூத்துக் கணக்குல தேவாளுக்கு ரூபம் கொடுக்கறோம். அப்படி வந்த தேவாள் நம்மோடதான் இருக்கா. எல்லா தேவாளுக்கும் ரூபம் வந்தோடனே, எல்லார் கண்லயும் படும்படி ஒண்ணா இருப்பா. தேவா மனுஷா எல்லாரும் ஒண்ணா இருப்போம். அது வரைக்கும் அங்க இங்கனு சில பேர் கண்ணுக்கு மட்டும் தெரியறா.
ஆச்சு. கதை முடிஞ்சுது.
என்ன? கைல கல்லு வச்சுண்டு நிக்கறாரே வெங்கட்? இன்னும் மொறைக்கலாப்ல இருக்கே? மிச்சத்தையும் சொல்லிடறேன். கல்லைக் கீழே போடுங்கோ.
சாபத்தை தணிக்கும்படியான யோசனை பண்ணியும், தான் இன்னும் தன்னோட காதலனோட சேர முடியலையேனு வருத்தமா இருக்கு ப்ரியதர்சனிக்கு.
அப்போ மகாவிஷ்ணு அவகிட்டே சொல்றார். "அம்மா, ப்ரியதர்சனி. தேவ எண்ணிக்கை அபிக்ஷணமா.. நிரந்தரமா இருக்கணும். இப்ப ஒண்ணு ஜாஸ்தியாயிடுத்து. உனக்கோ உன் காதலனோட சேந்து இருக்கணும்னு ஆசை. ஆனா, அது மனுஷ்ய வம்சத்துல தான் சாத்யப்படும். உனக்குக் காதல் அவ்ளோ பெரிசுன்னா, முக்யம்னா, நீ தேவ வம்சத்தை விட்டு மனுஷ்ய வம்சத்துல சேந்துடு. உன் மனசுக்குப் பிடிச்சவனோட சந்தோசஷமா இருக்கலாம். நான் ஒரு வரம் குடுக்கறேன். காதல்னாலே உங்க ரெண்டு பேர் ஞாபகம் தான் எல்லாருக்கு வரும், காதலிக்கறவா எல்லாருமே உங்க ரெண்டு பேரையும் கொண்டாடுவா. உங்க நினைவா காதலைத் தேடி லோகத்துல ஸ்த்ரீ புருஷாள்ளாம் கோவிலுக்கு வருவா"னு சொல்றார்.
சொல்லிட்டு அவளை ஒரு அர்த்தபுஷ்டியான புன்னகையோடப் பாக்கறார். இவ சாமானியமான பொண்ணில்லை, கார்யத்தை சாதிக்கச் தெரிஞ்சவள்னு சொல்றது அந்தப் புன்னகை.
"வேண்டாம், போகாதே. எங்களை விட்டுப் போயிடாதே"னு தடுக்கறா, ப்ரியதர்சனியோட தோப்பனார் தாயார் பங்காளிகள் எல்லாரும்.
ப்ரியதர்சனி யோசிக்கறா. ஒரு முடிவுக்கு வந்துடறா. "பெத்த பெண்ணோட மனசைப் புரிஞ்சுக்காம நடந்துக்கற அப்பா அம்மா நேக்கு இருந்து என்ன ப்ரயோஜனம்? தன்னோட ஆடம்பரத்துக்கும் ஆசாரத்துக்கும் என்னை பலி கொடுக்கத் தயாரா இருக்குற அப்பா அம்மாவை விட, எனக்காக எதையும் விட்டுக் கொடுக்கற மனுஷ்ய ராஜனே மேல்"னு சொல்லிட்டு தேவரூபத்தைக் களையறா. மனுஷ்ய ரூபம் எடுத்துக்கறா.
பிரதாப குமாரனுக்கு சந்தோஷம். ப்ரியதர்சனி கண்ணுக்குத் தெரிஞ்சதும் அவளை அப்படியே கட்டிண்டு அழறான். "என்னை மீட்டுண்டு வந்தியே!"னு முத்தமா பொழியறான். அவளுக்கோ அவனோட தேக ஸ்பர்சம், வாத்சல்யம், எல்லாம் சொர்க்க லோகத்தை விட மகோன்னதமா இருக்கு.
ரெண்டு பேரும் அப்பவே கல்யாணம் பண்ணிண்டா. அந்தக் க்ஷணத்துலந்து சந்தோஷமா இருந்தா.
அந்த ஜன்மத்துக்கப்புறம் சத்யவான்-சாவித்ரியா பொறந்தா. அப்றம் நள-தமயந்தி, ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராவதின்னு காதல் ஜோடியா ஜன்மம் எடுத்துண்டே இருக்கா. எத்தனை ஜன்மம் எடுத்தாலும் அவாளோட காதல் கொறையவே இல்லை. இது தான் அவாளோட கதை.
இவ்ளோ தூரம் கேட்டேள், இன்னும் சமாசாரம் பாக்கி, அதையும் கேட்டுட்டுப் போங்கோ.
யமதர்மராஜனானதும் திடீர்னு பிரதாப ராஜா எதிர்ல சர்வாலங்காரத்தோட ஒரு மகிஷம், எருமை மாடு.. நிக்கறது. "இனிமே நீ இதுல தான் போகணும்"னு சொல்றா தேவாள்ளாம்.
ஒரு நாள் போறான், ரெண்டு நாள் போறான். ஊர்ல எல்லாரும் சிரிக்கறா மாதிரி இருக்கு. ராஜாவோன்னோ? "இன்னைலந்து எருமை மாடு சாஸ்வதம். எல்லாரும் பசும்பாலுக்குப் பதில் எருமைப்பால் சாப்பிடணும். வீட்டுக்கு ரெண்டு எருமை வளக்கணும்"னு ஆணை போடறான். 'தேவனான உடனேயே அக்கிரமம் பண்றானே!'னுட்டு புலம்பிண்டே எல்லாரும் எருமை மாட்டை வளக்க ஆரம்பிச்சா. எருமைப்பால் காபி இன்னிக்குச் சாப்பிடறோம்னா அதுக்கு பிரதாபகுமாரன்-ப்ரியதர்சனி காதல் தான் காரணமாக்கும்.
கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் பண்ணப் பண்ண, தேவாள்ளாம் சாப விமோசனம் கெடைச்சு, ஒத்தொத்தரா ரூபத்துக்கு வருவானு சொன்னேனில்லையா? அந்தக் கணக்குப்படி பாத்தா, அனேகம் தேவாளுக்கு ஏற்கனவே சாப விமோசனம் கிடைச்சாச்சு. நாமதான் தெருவுக்குத் தெரு கோவில் கட்டிண்டிருக்கோமே? ஒரு பக்கம் கோவில் பாழடைஞ்சாலும் இன்னொரு பக்கம் புதுசா கட்டறோமே? அந்தக் கணக்குப்படி, இதே வேகத்தில கோவில் கும்பாபிஷேகம்னு பண்ணிண்டிருந்தா, இன்னும் முப்பத்து மூணு வருஷத்திலே, 2045ல, எல்லா தேவாளுக்கும் சாப விமோசனம் கிடைச்சுடும். அன்னைலேந்து தேவா-மனுஷா சகஜீவனம் தான். அதைப் பாக்க எல்லாரும் தீர்க்காயுசா இருக்கணும்னு வேண்டி கதையை முடிச்சுக்கறேன். சுபஸ்ய சுபம்.
இது அசுவத்தாமன் வாக்கு. அசத்யம் இல்லாத வாக்கு. ப்ரசங்கம் சமாப்தம். போய்ட்டு வாங்கோ.
2012/06/13
தைவாதர்சனம்
◄◄ 1 2
கதை கேக்கத் திரும்பி வந்தவாளுக்கு ஒரு ஆத்மார்த்த வெல்கம் போட்டுடறேன்.
சினேகிதர் ஒத்தராத்துக்கு சாப்பிடக் கூப்பிட்டிருந்தாளேன்னு இன்னைக்குப் போயிருந்தேன். தேங்காய்த் தொகையல், மோர்க்கொழம்பு, மைசூர் ரசம், எண்ணைக் கத்திரிக்காய் கறி, கொத்தவரங்காய் கூட்டு, பால்போளினு விருந்து பண்ணிட்டா. நமக்கோ வயசாயிடுத்து, எங்கேந்து இத்தனையும் சாப்பிடறது சொல்லுங்கோ? இருந்தாலும் வரச்சொல்லி ஆசையா பண்ணியிருக்காளேன்னு, சாப்ட ஒக்காந்தேன். கொத்தவரங்காய் கூட்டுன்னா நேக்கு பிடிக்கும். ஆனா பாருங்கோ, ஒரு வாய் போட்டுண்டா அன்னத்வேஷம் மாதிரி வந்துடுத்து. கூட்டு சகிக்கலை. மாமிக்கு ரொம்ப வருத்தம். அதனாலென்ன, போனாப் போறது, மிச்ச எல்லாம் நன்னாருக்கேன்னு சொல்லி, "ரொம்ப சாப்பிட்டா இன்னிக்குப் கதோபாக்யானம் பண்ணமுடியாது"னு சாக்கு சொல்லிட்டு ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன்.
சமையல் நன்னா வரது ஒரு புண்யமாக்கும். செல பேர் விபாகமா சமைப்பா, செல பேர் அபாகமா சமைப்பா. மாமி சமையல் அபாக ரகம், என்ன பண்றது சொல்லுங்கோ? அனேகம் பேருக்கு கொத்தவரங்காய் கூட்டு பண்ண வராது. அது பிரம்ம வித்யையாக்கும். பாருங்கோ, கொத்தவரங்காய்க் கூட்டுலே கொழம்புக் கருடாம் போட்டா அதீத ருசி. தேங்காய் மிளகாவத்தல் கொத்தமல்லி விரை அரைச்சு விடறா மாதிரி, நன்னா நெய்ல வறுத்த கைப்பிடி கொழம்புக் கருடாமும் போடணும். அதான் கொத்தவரங்காயை அலாதியான கூட்டா ட்ரேன்ஸ்பார்ம் பண்ணறது. மாமி கொழம்புக் கருடாம் சேர்க்க மறந்துட்டா. கூட்டுல தேங்காய் அரைச்சுவிடவும் மறந்துட்டா. உப்பு மாத்துக் கம்மியாப் போட்டுட்டா. கொத்தவரங்கா கூட இன்னும் சித்தே வெந்திருக்கலாம். என் சினேகிதருக்கு கோபம் வந்து, பாருங்கோ, என் முன்னாலேயே பார்யாளை கோச்சுண்டுட்டார். 'நல்ல காய்கறியை நாசம் பண்ணிட்டியேடி..'னு என் எதிர்லயே நன்னா வைய ஆரம்பிச்சுட்டார். "கர்மம்!"னு என்னெதிர்லயே சாப்பாட்டுத் தட்டை அப்படி நெட்டித் தள்றார். நேக்கே ஒரு மாதிரியா ஆய்டுத்துன்னா, அந்த மாமிக்கு எத்தனை அவாத்யம் பாவம், நினைச்சுப் பாருங்கோ.
எதுக்குச் சொல்றேன்னா, இப்ப அம்ருதமாச் சாப்பிட்டாலும் எட்டுமணி நேரத்துல மலமாற மகா அல்ப வஸ்து.. கொத்தவரங்காய், அதைச் சரியா தன்னிஷ்டப்படி பண்ணாததுக்கே கொலைக் குத்தம் பண்ண மாதிரி கோவம் வந்தா... தேவ தோப்பனார் வாஸ்தவமாவே கொலை பண்ணிட்டார். ப்ரியதர்சனிக்குப் பொத்துண்டு வராதோ?
ப்ராணனில்லாம கெடக்கற பிரதாபகுமாரனைப் பாக்கறா ப்ரியதர்சனி. தான் கொத்தவரங்கா, பிரதாபகுமாரன் கொழம்புக் கருடாம்னு இருக்கச்சே, பிரிச்சுப் போட்டா ருசி கெட்டுப்போகாதோ? அழுகையும் கோவமும் சேந்து வர்றது. சம்க்ஷோபத்துல, தாங்க முடியாத அதிர்ச்சில, "அப்பா, என்ன காரியம் பண்ணிட்டேள்!"னு கதறித் துடிக்கறா ப்ரியதர்சனி.
பிரதாப ராஜாவோ கீழே விழறப் புத்ரனோட தலையை அந்தக்கால ஏக்நாத் சோல்கர் மாதிரி டைவடிச்சுக் கேச் பிடிக்கப் பார்த்தார். அது மிஸ் ஆகி உருண்டோடறது. ராஜா, "குமரா குமரா!"னுண்டே துரத்தி அதை எடுத்துண்டு வந்து அலற ஆரம்பிச்சார்.
தேவ தோப்பனாருக்கு இப்பத்தான் மண்டைல அறைஞ்ச மாதிரி, தான் பண்ணின தப்பு தெரிஞ்சு போறது. பிராணஹத்யை மகா தோஷமில்லையோ? மும்மூர்த்திகளெல்லாம் தான் பண்ணின பிராணஹத்யைக்கு சாக்கு வச்சுண்டிருந்தா. பக்தாளும் அதை நம்பி அவாளோட பாதகமான உயிர்க்கொலைகளை மறந்துட்டு பூஜை பண்ணினா. இவர் யாரு? நேத்து சாம்பார் மாதிரி சாதாரண தேவனில்லையோ? பிசாத்தில்லையோ? இவரை யார் மன்னிப்பா? தேவ ஜோட்டாலயே அடிக்க மாட்டாளோ?
என்ன பண்றதுன்னு பாக்கறார். மிச்ச தேவாள் பண்ற மாதிரி மனுஷா மேலே பழி போடறார். "பிரதாபா.. என்னை என்ன கார்யம் பண்ண வச்சுட்டே பார்.. இந்தப் பாவம் உன்னை சும்மா விடாது"ங்கறார்.
பிரதாப ராஜா இன்னும் "குமரா குமரா"னு அலறிண்டிருக்கார்.
அதிர்ச்சிலே ஸ்தம்பிச்சுப் போன ப்ரியதர்சனி, பிரதாப ராஜாட்டேருந்து தன் ப்ரியனோட தலையை வாங்கி உடம்போட சேத்து வைக்கறா. என்னென்னமோ பண்ணிப் பாக்கறா. ம்ஹூம். அசைவில்லை. கூட்டை விட்டுப் பறந்து போன கிளி எங்கயாவது திரும்பி வந்திருக்கா? தலை வெட்டினதுமே உசிர் காத்துல கலந்தாச்சு. ப்ரியதர்சினி கலக்கத்துலயும் கோவத்துலயும் அவனை சேர்த்து வைக்க ட்ரை பண்றா.
தேவ தோப்பனாரோ காருண்யமே இல்லாம, "போறும். எழுந்து வா. இவன் மனுஷ்யன், நாம தேவ குலம். என் பேச்சைக் கேக்காம நீ இவனோட எப்படி சேந்திருக்கலாம்? ஜாதி வித்யாசம் கிடையாதா? நம்ம அந்தஸ்து என்ன, இவன் உனக்கு தகுதி கெடயாது. அதுவும், என் கண் முன்னாலயே இப்படிக் கொஞ்சி விளையாடறேளே, உங்களுக்கு வெக்கமா இல்லை?"னு பொண்ணைக் கத்தறார்.
அது வரைக்கும் புலம்பிண்டிருந்த பிரதாபன், சட்டுனு வாளை உருவிண்டு "என் பையனைக் கொன்னுட்டீரே ஐயா, இது என்ன நியாயம்?"னு ஆக்ரோஷத்தோட தேவ தோப்பனார் மேல பாயறார்.
பிரதாபன் தன் மேலே பாயறதைப் பார்த்ததும் டக்குனு கண் மறைவாயிடறார் தேவ தோப்பனார். "தேவஸ்த்ரீயைத் தொட்டதனால, இது உம்ம புத்ரனுக்குத் தண்டனை"னு குரல் மட்டும் கேக்கறது.
திரும்பித் திரும்பிப் பாக்கறார் பிரதாப ராஜா. "கோழை! வீரமிருந்தா வெளில வா. நியாயமான முறைல என்னோட சண்டை போடு. உன்னை உருத்தெரியாம அழிச்சுடறேன்"னு கத்தறார். அதுக்கு தேவர், "இப்ப மட்டுமென்ன? உருத் தெரியறதா?"னு கிண்டல் பண்றார்.
பிரதாப ராஜா கீழே விழுந்து கெடக்கற சீமந்தபுத்ரனைப் பாத்துக் கதறி அழறார். "அக்கிரமம்.. அக்கிரமம்.."னுட்டு தலைலயும் மார்லயும் அடிச்சுக்கறார். பட்டாபிஷேகம் பண்ணி மகராஜாவா இருக்க வேண்டியவன் இப்படி பார்ட் பார்டா கழண்டிருக்கானேனு அவர் மனசு துடிக்கறது.
ப்ரியதர்சனியைப் பார்த்ததும் இன்னும் அழுகையா வரது. "அம்மா.. சௌபாக்யவதி.. என் பிள்ளை பண்ணின தப்பு என்னனு சொல்லும்மா... உன்னைக் காதலிச்சான்.. நீயும் தானே அவனைப் பதிலுக்குக் காதலிச்சே? ரெண்டு பேரும் வேறே வேறே ஜாதி தான், குலம் தான், இல்லங்கலே.. ஜாதிவிட்டுக் காதலிச்சா வெட்டிக் கொல்றதா? ஈனத்தனமில்லையா? இந்தப் பாவத்தை மனுஷா கூட செய்ய மாட்டாளே? இனிமே உங்களைப் பாத்து இந்தப் பழக்கம் மனுஷாளுக்கு வந்துடுமே!"னுட்டு தலைல தலைல அடிச்சுக்கறார். "நீயே சொல்லும்மா.. ஆத்மார்த்த காதலைத் தவிர இவன் செஞ்ச பாவம் என்னனு சொல்லுமா.. இதுக்காகவா இவனை சீரும் சிறப்புமா வளர்த்தேன்.."னு பாசமலர் சிவாஜிகணேசன் மாதிரி அழறார். "கொலையப் பண்ணிட்டு காணாமப் போறதுதான் தேவ நியமமா! கேப்பாரில்லையா?"னு விடாமப் புலம்பறார்.
இதையெல்லாம் பாத்துண்டிருந்த ப்ரியதர்சனிக்கு அசாத்ய கோபம் வர்றது. "எனக்கு அப்பாவான ப்ராணஹத்தி! மகாபாவி! எங்க ரெண்டு பேரையும் மறைஞ்சு நின்னுப் பாத்தேள். என்னோட காதலனைக் கொன்னுட்டு மறுபடியும் மாயமா மறஞ்சுட்டேள். கேவலம், கோழைத்தனம்.."னு கத்தறா.
கொஞ்சம் கூட யோசிக்காம, சாபம் குடுக்கறா. "உருத்தெரியலேனு கிண்டலா பண்றேள்? நேருக்கு நேர் நின்னு பேச தைர்யமில்லாத தேவகூட்டம் இந்த க்ஷணத்துலேந்து கண்ணுக்கே தெரியாம மறஞ்சு போகட்டும். உங்க கண் முன்னாடி இப்படி நடந்ததுன்னு தானே கோபம்? இனிமே மனுஷ்யாளும், மனுஷ்யாள் சம்பந்தப்பட்ட எதுவுமே, தேவாள் கண்ணுக்குத் தெரியாம போகட்டும். ஒண்ணா இருந்தாத்தானே மனுஷ்ய ஜாதி, தேவ ஜாதின்னு பேதம் பேசறேள்? இனிமே மனுஷாள் இருக்கற லோகத்துல உங்களுக்கு இடம் இல்லாமப் போகட்டும். ஆத்மார்த்தமான நேசமும் காதலும் பக்தியும் தேவாள் மேலே இருக்கணும், ஆனா தேவாளோட கலந்து இருக்க மட்டும் மனுஷாளுக்கு பாத்யதை கிடையாதுன்னு சொல்றேளே? இனிமே ஜீவராசிகள் யார் கண்ணுக்கும் தெரியாம தேவாள்ளாம் மறஞ்சு போகட்டும்"னு சீரியல் சாபம் குடுத்துடறா. சாபம் குடுத்துண்டே பிரதாபர் கொண்டு வந்திருந்த நாலு கிலோ குங்குமத்தை கோவத்துல அங்கயும் இங்கயும் வாரி இறைக்கறா ஆக்ரோஷமா. அப்புறம் குலுங்கி அழறா. மகா ஆக்ரோஷமான காட்சியைப் பாத்துட்டு பிரதாப ராஜாவே பையனை மறந்துட்டு பயந்து நடுங்க ஆரம்பிச்சார்.
காதலனை பறி கொடுத்த வேகத்துலயும் துக்கத்துலயும் ஆத்ரத்துலயும் என்ன சொல்றோம்னு தெரியாம சாபம் குடுத்துட்டா. பொல்லாத சாபமில்லையோ? அடுத்த க்ஷணம் எல்லாம் மாறிப் போக ஆரம்பிச்சுது.
கரண்ட் போனதும் லைட் அணையற மாதிரி பொட்டு பொட்டுனு தேவாள்ளாம் காணாம போயிண்டிருக்கா. சிவசபை, பிரம்ம கூட்டம், விஷ்ணு பரிவாரம் எல்லாம் ஒத்தொத்தரா அஞ்ஞாத பெவிலியனுக்குப் போயிண்டிருக்கா.
சாபம் தனக்கும் பலிக்கும்னு தெரியாம கொடுத்தாளோன்னோ நம்ம ஹீரோயின் ப்ரியதர்சனி? கொஞ்ச நாழில அவளும் காணாமப் போயிட்டா.
"இதேதுடா வம்பா போச்சே!"னுட்டு கலங்கிப் போயிருக்கார் பிரதாப ராஜா. தான் இருக்கோம், தன் புத்ரனோட ப்ரேதம் இருக்கு. கோவில் சுத்துப்புறம் எங்கயும் யாரையும் காணோம். இதென்ன விபரீதம்னு ஆடிப்போயிட்டார். இனிமே தேவர்கள் யாரையுமே பார்க்க முடியாதா? பிள்ளையார் பிடிக்க வந்து உள்ளதையும் போக்கிட்டோமேனு நினைச்சார்.
இதுல பாருங்கோ, தேவர்கள் எல்லாரும் ஜீவராசிகளோட கண்ணுக்குத் தெரியாம போகட்டும்னுதான் சாபம் குடுத்தா ப்ரியதர்சனி. கண்ணுக்கே தெரியாமப் போகட்டும்னு குடுத்திருந்தா, இந்தக் கதைக்கு சமாபனமே இல்லாமப் போயிருக்கும். ஏன்னா, இப்பப் பாருங்கோ அட்லீஸ்டு தேவர்களுக்குள்ளேயாவது ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சுண்டா. அதனால, கதையைக் கொஞ்சம் முடிவுக்குக் கொண்டு போக முடியறது.
தேவக் கூட்டத்துல அலாதி கலவரம்.
நம்மாத்துல கரண்ட் கட்டாகி லைட்டெல்லாம் போனா, என்ன பண்றோம்? மொதல் வேலையா அடுத்தாத்துல லைட் எரியறதான்னு பாக்கறோம். அங்க எரியலைனா ஒரு அல்பத் திருப்தியோட, தெருவுல வேற யார் வீட்லயாவது லைட் எரியறாதான்னு பாக்கறோம். தெருவுலயும் எரியலைனா எதிர் தெரு, பக்கத்துத் தெருன்னு பாக்கறோம். அப்புறம் புலம்ப ஆரம்பிக்கிறோம். அந்த மாதிரி தேவாள்ளாம் சிவ லோகம், விஷ்ணு லோகம், பிரம்ம லோகம்னு ஒத்தொத்தரையா பாத்துக்கறா கேட்டுக்கறா. அவாள மட்டும் ஒத்தருக்கொத்தர் பாத்துக்க முடியறது, மத்தது எல்லாம் கண்ணுக்குத் தெரியலை. எல்லாருக்கும் ஒரே கலவரமாப் போறது. என்னடாது கண்ணுக்குத் தெரிஞ்சுண்டிருந்த ஜீவராசியெல்லாம் மறைஞ்சு போச்சேன்னு பிரமிப்பு போய், பயம் வர ஆரம்பிச்சுது.
எமர்ஜன்சின்னுட்டு மும்மூர்த்திகளும் கலந்து பேசறா. என்ன ஆச்சுனு இங்க்வைரி பண்றப்போ, எல்லா விஷயமும் தெரிஞ்சுபோறது. நேரா ப்ரியதர்சனியண்டை போறா. "என்ன கார்யம் பண்ணிட்டேமா?"னு கதறிட்டு, "சாபத்தைத் திருப்பி வாங்கிக்கோ"னு சொல்றா.
சாபத்தை எங்கேந்து திருப்பிக்கறது? "மொதல்ல என் நாயகனை, பிரதாபகுமாரனை, உயிரோட திருப்புங்கோ. நான் சாபத்தைத் திருப்பறதைப் பத்தி அப்புறம் யோசிக்கறேன்"னு அவ சொல்றா. இன்னும் ஆத்திரம் அடங்கலை. எப்படி அடங்கும்? ஆத்மார்த்தக் காதலை அடாவடியாப் பிரிச்சுட்டா ஜன்மத்துக்கும் இருக்குமே துவேஷம்?
"அவன் மானுடன், அவனோட ம்ருத்யுவை மேனேஜ் பண்ண உபகாரி யாரும் இல்லை. அவன் இப்போ அவாந்த்ரத்துல இருக்கான். சொர்க்கமோ, நரகமோ அவன் பிராப்தத்துக்கு ஏத்த மாதிரி நடக்கும்"னு மும்மூர்த்திகளும் கை விரிச்சுடறா.
"அப்படின்னா, என் சாபத்தை நான் மாத்திக்க மாட்டேன். நீங்கள்ளாம் கண்ணுக்குத் தெரியாம இருக்க வேண்டியது தான்"னு தீர்மானமா சொல்லிடறா ப்ரியதர்சனி.
"இதேதுடா வம்பா போச்சே!"னுட்டு தேவாளும் கலங்கிப் போயிடறா. என்ன சொல்லியும் ப்ரியதர்சனி கேக்க மாட்டேங்கறா.
என்னதான் மும்மூர்த்திகள் ஆனாலும், தேவசாபம்னு வந்துட்டா அவாளும் அனுபவிச்சுத் தானே ஆகணும்? இதுக்குப் பிராயசித்தம் எதுவும் அவாளுக்குத் தோணலை. குமாரனோட ஜீவன் பிரிஞ்சு அவாந்த்ரத்துக்கு போயாச்சு. மீட்டுண்டு வரவும் முடியலை. ஏதாவது அவுட்-ஆப்-கோர்ட் செட்டில்மென்ட் பண்ணலாம்னு நிர்ணயம் பண்றா.
ப்ரியதர்சனியண்டை வந்து, "என் கண்ணோல்லியோ, சொல்றதைக் கேளுமா"ன்னார் விஷ்ணு. உஷாரானப் பார்ட்டியோன்னோ? இன்னும் எக்கச்சக்கமா சாபம் கொடுத்துடப் போறாளேனுட்டு சர்வ ஜாக்ரதையா பேசறார்.
"என்ன?"ங்கறா எரிச்சலோட.
"நான் நெலமையைச் சொல்றேன், கோவிச்சுக்காதே. பிரதாபகுமாரனோட ஜீவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. ம்ருத்யுவானப்புறம் மனுஷ்ய ஜீவனெல்லாம் ஒண்ணுக் கொண்ணு வித்தியாசமில்லாம அடுத்த ஜன்மம் தீர்மானமாற வரைக்கும் அவாந்த்ரத்துல அலஞ்சிண்டிருக்கும். உன்னாலயும் சரி, என்னாலயும் சரி அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அப்படி இருக்கச்சே, திருப்பணும்னு நினைச்சாலும் அந்த ஜீவனை எப்படி திருப்பிக் கொண்டு வர முடியும்? நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாருமா"
"ஆமாம்.. யோசிச்சுப் பாருமா"னு அஞ்சு தடவை தலையாட்டறா சிவனும், பிரம்மாவும்.
சத்யமான காதல் இருக்கு பாருங்கோ, அது கல்லை விட நெருக்கமா உடைக்க முடியாம சாஸ்வதமா இருக்கும்பா. ப்ரியதர்சனி பிரதாபகுமாரன் காதல் அந்த மாதிரி சாலிட் ராக்கில்லையோ?
ப்ரியதர்சனி விடறதாயில்லை. "அது மனுஷ்ய ஜீவன் தானே? பிரதாப ராஜாவாலே கண்டுபிடிக்க முடியும். தோப்பனார் கூப்பிட்டா, பிள்ளையோட ஜீவன் வராமலா போகும்? அவரை அனுப்பி அந்த ஜீவனைக் கூட்டிண்டு வந்து, இந்த ஒடம்போட மறுபடி சேத்து வையுங்கோ"னு அடம் பிடிக்கறா.
எல்லா தேவாளும் பிரதாப ராஜா கிட்டே வந்து கெஞ்சறா.
யாருமே கண்ணுக்கு தெரியலை, ஆனா தினுசு தினுசா குரல் மட்டும் கேக்கறது, ராஜாவுக்கு ஒண்ணும் புரியலை. கலங்கிப் போறார். பிள்ளையையும் பறி கொடுத்துட்டு, இப்படி பைத்தியம் மாதிரி காத்துல சத்தம் கேக்க ஆரம்பிச்சுதுன்னா, யாருக்குத் தான் கலக்கமா இருக்காது?
எல்லாத்தையும் பாத்துட்டு, சிவன் சொல்றார். "தேவாள்ளாம் சித்த சாந்தமா இருங்கோ. பிரதாப ராஜா கொழம்பி பயந்து போயிருக்கார். பிரதாபா, நான் மகாதேவன் பேசறேன். ப்ரியதர்சனி போட்ட சாபத்துனால நாங்க எல்லாரும் மனுஷா கண்ணுக்குத் தெரியாம போய்ட்டோம். பழைய நிலைக்கு வரணும்னா, உன் பையனைத் திருப்பிக் கொண்டு வந்தாத்தான் முடியும். எங்களால மனுஷ்ய ஜீவன்களைக் கண்டு பிடிக்க முடியாது. நீதான் அவாந்த்ர லோகத்துக்குப் போய் உன் பிள்ளை ஜீவனோட குரலை வச்சுக் கண்டுபிடிச்சுத் திருப்பிக் கூட்டிண்டு வரணும். உடனே போ, உன் பிள்ளையோட ஜீவன் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ மறு ஜென்மத்துக்கோ போயிட்டா திருப்பிக்கொண்டு வரவே முடியாது. தயவு செஞ்சு உன் பிள்ளையைக் கண்டுபிடிச்சு எங்களையும் காப்பாத்துப்பா"னு வேண்டிக்கறார் நடராஜர்.
பிரதாப ராஜாவுக்கோ கோவம் கோவமா வர்றது. "தேவாள்ளாம் சேந்து இப்படிக் கூத்தடிக்கறேளே?"னு கத்தறார். ப்ரியதர்சனியைக் கூப்பிடறார். "அம்மா, இதெல்லாம் சத்யமான வார்த்தை தானா?"னு கேக்கறார். "ஆமாம்.. தயவுசெஞ்சு உடனே போங்கோ"னு அவளோட அழுகையானக் குரல் மட்டும் கேக்கறது.
"சரி, அவாந்த்ரத்துக்கு எப்படிப் போறது? யார் என் கூட வருவா? நேக்கு வழி தெரியாதே?"னு கேக்கறார் பிரதாப ராஜா.
சிவனும் விஷ்ணுவும் பிரம்மாவைப் பாக்கறா. பிரம்மா வேற வழியில்லாம, "நான் கூட்டிண்டு போறேன்.. பிரதாப ராஜா.. உம்ம வலது கையைக் கொடும்"னு சொல்றார். தட்டித் தடவி பிரதாபனோட வலது கையைப் பிடிச்சுண்டார் பிரம்மா.
"பொண்ணே.. எங்க இருக்கே? நான் திரும்பி வரவரைக்கும் இவன் உடம்பைப் பத்திரமா பாத்துக்கோ, உன்னை நம்பித்தான் போறேனாக்கும்"னு சொல்லிட்டு, தன் கையைப் பிடிச்ச பிரம்மாவோட அவாந்த்ரத்துக்கு கிளம்பினார் பிரதாப ராஜா.
இந்த ஆள் கையை விட்டு ஓடிறாம இருக்கணுமேனு யோசிக்கறார் பிரம்மா. நிலமை கையை விட்டுப் ஓடிடும் போலருக்கேனு சிவனும் விஷ்ணுவும் ரொம்ப யோசிக்கறா. நிலமையை எப்படிக் கைக்குள்ளே போட்டுக்கறதுனு நிதானமா யோசிக்கறார் பிரதாப ராஜா.
மிச்ச கதையை அடுத்தப் பரசங்கத்துல சொல்றேன்.
மிச்ச கதை ➤
2012/06/11
தைவாதர்சனம்
◄◄   1
    கதை கேக்கத் திரும்பி வந்தவாளுக்கு ஒரு ஆத்மார்த்த வெல்கம் போட்டுடறேன்.
கார்த்தால வடபழனி கோவிலுக்குப் போக வேண்டியிருந்தது. இன்னைக்குப் பாத்து என்னோட பழைய எடர்னோ வேலை செய்யலை. கால் டேக்சி பிடிச்சு கோவிலுக்குப் போய்ட்டு வந்தேன். அசோக் நகர் பக்கம் ரோடு மகா மோசம். தூக்கித் தூக்கிப் போட்டுதா, இந்தப் பொடி டப்பா எங்கயோ விழுந்து காணாம போயிடுத்து. என்னோட மாமனார் உபயோகிச்ச வெள்ளி டப்பா. நித்யம் பொடி டப்பாவைப் பாத்தாலே அழகான முகத்தை அஷ்டகோணலா பண்ணிக்கிற எங்காத்துக்காரி, இன்னிக்கு டப்பா காணோம்னதும், பொறந்தாத்து சொத்தாச்சே, கங்களாஞ்சேரி பிராமணரைக் கல்யாணம் பண்ணிண்டா இப்படித்தான் சகலத்தையும் தொலைச்சுட்டு வந்து நிப்பார்னு இடிக்கறா. பொடி இல்லாம நேக்கு கையும் ஓடமாட்டேங்கறது, கதையும் ஓடமாட்டேங்கறது. ஜிடாக்ஷம்னு சொல்வா பாருங்கோ, துறந்த நிலை, பொடி போட்டா நேக்கு ஜிடாக்ஷம் எட்டு ஊருக்கு வரும். கால் டேக்சிக்காரா நல்லவானு சொல்றா. கொண்டு வந்து குடுத்தாலும் கொடுப்பான் தீர்க்காயுசுக்காரன். திரும்பக் கெடச்சா அந்த வைத்தீஸ்வரபுத்ரன் அனுக்ரகம். கிடைக்கலேன்னா என்னோட கர்மபலன். எல்லாமே அப்படித்தான். விடுங்கோ, கதைக்கு வரேன்.
ந்ருத்யசாலைலே பிரதாபகுமாரனும் தேவகன்னிகையும் ஒருத்தரையொருத்தர் பாத்து மெய் மறந்துட்டானு சொன்னேனில்லையா? வாஸ்தவமாத்தான். இவனோட கண்லேந்து அவளோட கண்ணுக்குப் பாலம் கட்டினா மாதிரி ரெண்டு பேர் மனசும் ஸ்ருங்கார சவாரி போய்ட்டு வரது. 'கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே'னு சினிமால ஆடுவாளே அந்த மாதிரி. இவனோட கண்ல அவ நெறஞ்சிருக்கா. அவ கண்ல இவனை விட்டா வேறே தர்சனமே இல்லை.
எத்தனை நாழி இப்படி நின்னுண்டிருந்தாளோ, அவாளுக்கே தெரியாது. சட்டுனு முழிச்சுக்கறா ரெண்டு பேரும். பிரதாபகுமாரன் சிம்ம நடை நடந்து, அவ கிட்டே ரொம்பப் பக்கத்துல போய் நின்னு, அவளோட மேலணியை எடுத்துக் குடுக்கறான். அவ வெக்கத்தோட வாங்கி இடுப்பையும் மாரையும் போத்திக்கறா. வாங்கும் போது, அவன் கை விரல் அவ உள்ளங்கைல படறது. ஊசி குத்தின மாதிரி வலிக்கிறது அவளுக்கு, அதே சமயம், சந்தனம் தடவின மாதிரி இதமாவும் இருக்கு.
"யார் நீங்கள்?"னு கேக்கறா. கோகிலம் பாடறா மாதிரி இருக்கு.
பதில் சொல்லிட்டு, அதே கேள்விய திருப்பிக் கேக்கறான் பிரதாபகுமாரன்.
"நான் தேவகுலம். ஊர்வசி தெரிந்திருக்குமே, அவள் என் மாமன் மகள்". கொம்புத் தேனாக் கொட்டறா.
"ஊர்வசி உன் உறவென்றால், ஏன் உன்னைப் போல அழகாக இல்லை?"னு ஒரு போடு போடறான் பிரதாபகுமாரன்.
அவ அப்படியே வெக்கத்துலயும் பெருமைலயும் உருகிப் போயிடறா. அழகான பொண்ணு வெக்கப்படறதைப் பாத்துட்டா அந்தக் க்ஷணமே குருடனாயிடலாம்பேன். லோகத்துல அப்புறம் பாக்கறதுக்கு கண்கொள்ளாக் காட்சி வேறே என்ன இருக்குங்கறேன்? பாருங்கோ, லஜ்ஜை அவளோட லாவண்யத்தை இன்னும் ப்ரகாசப்படுத்தறது. அந்தப் ப்ரகாசத்துல அவனோட மனசு உருகிப் போயிடறது. அவ ஏதோ சொல்ல நெனச்சு அவனை ஏறிட்டுப் பாக்கறா.
வாசல்ல டக் டக்னு பாதுகை தட்டற சப்தம் கேக்கறது.. ரெண்டு பேரும் திரும்பிப் பாக்கறா.
பிரதாப ராஜா நின்னுண்டிருக்கார். "குமரா, விநாயகரோட மீடிங்க் முடிஞ்சு போச்சு. வா, போகலாம்"னார். அந்தப் பொண்ணைப் பாத்துட்டு மரியாதையோட லேசா சிரிச்சார். அவ குடுகுடுனு ஓரமா ஓடி ஜவனியை இழுத்து மூடி மறைஞ்சுக்கறா.
அவ அந்தண்டை போனதும், ராஜா கேக்கறார்: "நான் இங்கயே நின்னுண்டிருக்கேன். ரெண்டு பேரும் என்னைக் கவனிக்கலையா?". ராஜகுமாரன் வெக்கப்படறான்.
கொஞ்சம் தயங்கி அவன் கிட்டே வரார் ராஜா. "குமரா, அவ தேவகுலம். நாம மனுஷகுலம். சேராது கண்ணா. மறந்துடு. வா, போலாம்"னு சத்தமா, கர்டனுக்குப் பின்னாடி இருந்தவ காதுல விழும்படி சொல்லிட்டு புத்திரனை இழுத்துண்டு போறார்.
வாசல் கிட்டே போறப்போ, அவன் திரும்பிப் பாக்கறான். ஒரு பட்டுத்துணியை உடம்புல போர்த்திண்டு வெளில வந்து அவனையே பாத்துண்டிருக்கா. அவ கண் கலங்கியிருக்கு. அவனைத் துளைக்கறது. 'நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா?'னு பாடறாப்ல மாதிரி இருக்கு. அவன் நிக்கறான்.
அப்பா அவனைத் தள்ளி, "ம்..ம்"ங்கறார். அவரோட நடந்துண்டே, அவள் பக்கம் திரும்பி, கைய மட்டும் காட்டறான். 'சொந்தமான உள்ளம் போடும் கணக்குப் புரியுமே'னு பாடற மாதிரி இருக்கு. அவ கண்ணைத் தொடச்சுக்கறா.
ராஜாவுக்கு வலிக்கறது. இருந்தாலும், "குமரா, சொன்னாக் கேளு, வா போகலாம்"னு அவனை வலுக்கட்டாயமா இழுத்துண்டு போயிடறார்.
    லோகத்ல பாருங்கோ, பகுசாதாரணமான குணம் ஒண்ணு உண்டு. பால்யராகட்டும், போற வயசாகட்டும், சாமான்ய லக்ஷணம் என்னனு கேட்டேள்னா இதான்: எதைச் செய்யக் கூடாதுனு சொல்றமோ, அதைச் செய்யத் தோணும். எதை மறந்து போகணும்னு சொல்றோமோ, அதை சதா சர்வகாலமும் நினைக்கத் தோணும்.
அப்பா அவளை மறந்துடுன்னார். பையனோ அவளைத் தவிர, மிச்ச எல்லாத்தையும் மறந்துட்டான். சாப்பாடில்லே, தூக்கமில்லே. 'துளியாவது சாப்பிடேன்'னு வற்புறுத்தரா வேலைக்காரா. சாப்பாட்ல மாம்பழம் போட்டிருக்கா, அவளோட முகம் ஞாபகம் வரது. தேன்ல பலாச்சுளை கலந்து போட்டிருக்கா, அவளோட ரெண்டு உதடும் ஞாபகம் வரது. கேசரிப்பூ கலந்து சாதம் வடிச்சுப் போட்டிருக்கா, அவளோட சிரிப்பு ஞாபகம் வரது.
ஒண்ணும் பிடிக்காம வெளில போய் நடக்கறான். தோட்டத்து விருக்ஷமெல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு, அவளை மாதிரி. பக்ஷிக் கூட்டம் பாடறது, அவ குரலை ஞாபகப் படுத்தறது. ஆகாசம், அவளோட உடம்பை ஞாபகப் படுத்தறது. வட்ட நிலா அவளோட குசத்தை ஞாபகப் படுத்தறது. நெளிஞ்சு ஓடற சின்ன சரசெல்லாம் அவளோட இடுப்பை ஞாபகப் படுத்தறது. அங்கே இருக்கற ஜந்து, வஸ்து ஒண்ணொண்லயும் அவதான் வியாபிச்சிருக்காப்ல இருக்கு. நின்னா, நடந்தா,மூச்சு விட்டா அவதான் அவனுக்குத் தெரியறா.
அவ என்னடான்னா, அவனை விட பரமமா உருகிண்டிருக்கா. அமரத்வம் தேவ லக்ஷணமாச்சா, அதனால சாப்பாடு, தூக்கம் இல்லாதது பாதிக்கலை. ஆனா, அவனைப் பாத்தப்புறம் வேற எதையும் பாக்கப் பிடிக்காம கண்ணை மூடிண்டு அந்த்ர நயனமா, கண்ல ஜலத்தோட, அவனையே நினைச்சுண்டு இருக்கா. காதல், பக்தி ஆதங்கத்தோட வர்ற அழுகையை ப்ரசாக்தம்னு சொல்லுவா, அவனையே ஸ்லாகிச்சுண்டு அப்படி வந்த நேத்ரஜலத்தை, கீழே விழுந்துடப் போறதேன்னுட்டு ஒரு தங்கப் பாத்திரத்துல பிடிச்சு வச்சுக்கறா. அவ கண்ணீர்லயும் நெறஞ்சிருக்கானாம் அவன்.
அப்பா அம்மா தோழிகள்ளாம் சொல்லிப் பாக்கறா, அவன் சாதாரண மனுஷன் தானே, என்ன பெரிய விஷயம், மறந்துடுங்கறா. ஆனா, அவளால முடியலை. அவனையே நினைச்சுண்டு இருக்கா. அவனைப் பாத்தே ஆகணும், அவனைத் தொட்டே ஆகணும், அவனோட கையைப் பிடிச்சே ஆகணும், அவனோட முகத்தைக் கையால வருடியே ஆகணும், அவனோட தோள்ல சாஞ்சே ஆகணும், அவனோட மார்ல முகம் புதைச்சே ஆகணும், அவனோட முத்தம் தன் மேலே பட்டே ஆகணும், அவனோட கை தன் மார்ல தொட்டே ஆகணும், அவனோட ஸ்வாசம் தன்னோட முகத்துல விட்டே ஆகணும், அவனோட தேகம் ஸ்பர்சம் பண்ணியே ஆகணும், அவனோட சேந்தே ஆகணும்னு... ஏகத்துக்கு நினைக்கறா.
இது காதல் இல்லைன்னா, வேறே எது காதல் சொல்லுங்கோ? லோகாயதமான பொடி டப்பா திரும்பக் கிடைக்குமாங்கற கவலையே என்னால தாங்க முடியலே. ஆத்மார்த்தமான காதலை இழந்துட்டோமோனு ரெண்டு பேரும் எப்படித் துடிச்சிருப்பா! யோசிச்சுப் பாக்கக் கூட முடியலே.
அத்யந்த ப்ரேமை இருக்கு பாருங்கோ. விசித்ரமானது. இழந்துட்டா அப்புறம் வராது. அந்தக் கணம் தாண்டிட்டா ப்ரேமைக்கும் புடலங்காய்க்கும் வித்தியாசம் கிடையாது. இது ப்ரேமை, இது உயிரைச் செதுக்குற காதல்னு உணர்ந்து உடனே அதைத் தேடிப் போய்ப் பிடிச்சு உசிருக்குள்ள சேத்துடணும். இல்லேனா புடலங்கா வாசனையோட சாகற வரைக்கும் பெருமூச்சு விடவேண்டியது தான். இது நிறைய பேருக்குத் தெரியறதில்லே. தெரிஞ்ச சில பேர் செயல்ல இறங்குறதில்லே. ஆனா நம்ம ஹூரோயின் அப்படியில்லை. தேவப் பொண்ணுன்னாலும் புத்திசாலிப் பொண்ணாச்சே?
தன்னை மாதிரியே அவனும் இருக்கானா, மறந்துட்டானான்னு நினைச்சுக்கறா. ஏன் இன்னும் தன்னைத் தேடிப் பாக்க வல்லைனு நினைச்சுக்கறா. ஒரு வேளை தேவகுலம்னால வரலையோனு அவளுக்குத் தோணறது.
ஒரு முடிவுக்கு வரா. தேவாளுக்கு மனுஷாளை விடப் பவர் ஜாஸ்தியாச்சே, அதனால அதீத வித்தையெல்லாம் தெரிஞ்சிண்டிருக்கா. டக்குனு அவனோட அந்தப்புறத்துல வந்து நிக்கறா. அவளை மறந்து போயிருப்பான்னு நினைச்சு அங்க வந்தவ, அவனோட பரிதாப நிலைமையப் பாக்கறா. அங்கே அவனைத் தவிர வேற யாருமில்லையா.. டக்குனு அவன் கண் முன்னாடி தெரியறா.
அதிர்ந்து போன பிரதாபகுமாரன், அவளைப் பாத்ததும் பிரசன்ன குமாரனாயிடறான். ஓடிப் போய் கட்டிக்கறான். எப்படி இருக்கேனு கேக்கறான். 'இளைய கன்னியின் இடை மெலிந்ததோ'னு பாடறான். அவள் தலைல ஆரம்பிச்சு ஒரு இடம் பாக்கியில்லாம முத்தம் குடுக்கறான். அவளும் அவனோட வேகத்துக்கு ஏத்த மாதிரி வளஞ்சு குடுத்து வாஞ்சையா இருக்கா. போது போறது தெரியாம அன்யோன்யமா இருக்கா ரெண்டு பேரும்.
"இத்தனை நெருக்கமாயிட்டோம், உன் பேர் கூடத் தெரிஞ்சுக்கலையே, உன் பேர் என்ன?"னு கேக்கறான்.
"இப்பத்தான் கேக்கத் தோணித்தா?"னுட்டு சலீலமா அவனோட கன்னத்தைத் தட்டறா. "உனக்கு எப்படி கூப்பிடணுமோ அப்படி கூப்பிடேன்?"னு கொஞ்சறா.
அவனும் விடாம, "உன்னைப் பார்க்கறது இனிமை, உன் பேச்சைக் கேக்கறது மதுரம்"னுட்டு என்னென்னமோ பாஷ்யம் சொல்றான். அவ கலகலனு நவரத்னம் கொட்ன மாதிரி சிரிக்கறா. "உன்னைப் பார்த்துண்டே இருக்கணும் போலருக்கு"னுட்டு, "அதனால உன்னை ப்ரியதர்சனின்னு கூப்பிடறேன்"ங்கறான்.
"ப்ரியதர்சனி, எனக்கும் பிடிச்சிருக்கு"ங்கறா அவ.
உடனே அவன் அவளோட ரெண்டு கையையும் கோர்த்துண்டு தன்னோட இழுத்துக்கறான். முகத்தோட முகம் ஒரசிண்டு, "ப்ரியதர்சனி, நாம கல்யாணம் பண்ணி காலா காலத்துக்கும் ஒண்ணா இருப்போமா?"ங்கறான்.
"நாம் எப்படி கல்யாணம் பண்ணி ஒண்ணா இருக்க முடியும்? ரெண்டு பேரும் வேறே ஜாதியாச்சே?"னு கேக்கறா அவ.
அவன் ரொம்ப வருத்தமாயிடறான். அப்போ அவ லேசா சிரிச்சுக்கறா. "என் மேலே அவ்ளோ ஆசையா?"ங்கறா.
"உன்னை விட்டா, எனக்கு யார் மேலயும் ஆசையில்லே. என்னோட ஹ்ருதயத்துல நீதான் நெறைஞ்சுருக்கே"ங்கறான் அவன்.
"எங்கே காமி பாக்கலாம்?"னு வெளயாடறா அவ.
இவன் பித்துக்குளியாட்டம் உடனே ஒரு கத்தியை எடுத்து நெஞ்சைப் பொளந்து காட்டறான். ரத்தமா கொட்டறது. ஹ்ருதயம் அடிச்சுக்கறது. அவ பதறிப் போயிடறா. நல்ல காலம், தேவகன்னியா இருக்கறது வசதியா இருக்கு. அவனோட காயத்தைத் தொட்ட உடனே அது சரியாயிடறது. "விளையாட்டுக்குச் சொன்னா இப்படித்தான் முட்டாள்தனமா நடந்துப்பியா? பிராணன் போயிருந்தா என்னாகும்? நீ மனுஷகுலம்னு மறந்து போச்சா?"னு கோபத்தோட கேக்கறா அவ. கோபம் அடங்கி அவனோட தலைய வருடிக் குடுத்துண்டே அவன் முகத்தை மார்ல வச்சுக்கறா. ரெண்டு பேரும் சித்த நாழி பேசாம இருக்கா.
அவ சொல்றா: "இன்னிக்கு வெள்ளிக்கிழமை. கோவிலுக்கு வராப்ல வா. நீ என்னைப் பாக்கணும்னா இனிமே ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்னிக்கும் சாயரட்சைல கோவில் நிருத்யசாலைக்குப் பின்னால இருக்கற சிற்பக் கூடத்துக்கு யாருக்கும் தெரியாம வா, நாம் சேந்து இருக்கலாம்".
அவன் சரிங்கறான். சந்தோஷமா அவனைக் கட்டிக்கறா. பட்டுனு காணாமப் போயிடறா. சாயந்திரம் அவா ரெண்டு பேரும் அபிசாரகமா சிற்பக் கூடத்துல மீட் பண்றா. சந்தோஷமா இருந்துட்டு, மறு நாள் அவா அவா இடத்துக்குப் போயிடறா.
இப்படியாகத்தானே யாருக்கும் தெரியாம வெள்ளிக்கிழமை சாயந்திரத்துலந்து சனிக்கிழமை கார்த்தால வரைக்கும் அவா சந்தோஷமா இருந்துண்டிருக்கா. வெள்ளிக்கிழமை சாயந்திரம் கோவிலுக்குப் போற பழக்கம் அப்படி வந்ததாக்கும்.
    இது இப்படி இருக்கச்சே, பிரதாபராஜா சபைல இன்னொரு விசேஷம் நடக்கறது. நாலஞ்சு வாரமா ஒரே களேபரம்.
நோட்டீஸ் போர்ட்ல வேகன்சி என்ன போட்டிருக்கா, என்னென்ன உபாதிதம், க்வாலிவிகேஷன், போட்டிருக்கானு பாக்க தேவாள்ளாம் ஓடினப்போ, ஒரு மனுஷ்யனும் அவா பின்னாடி ஓடினான்னு சொன்னேனில்லையா?
அவன் அதெல்லாம் படிச்சுட்டு, நேரா பிரதாப ராஜனண்டை போய் சேவிதம் பண்ணிட்டு, "மகராஜா, மகாபிரபு, தேவசபைல என்ன நடந்ததுன்னு தெரியலை, ஆனா நாலாவது மூர்த்தி ஒருத்தரத் தேடி விளம்பரம் பண்ணியிருக்கா"னு சப்ஜாடா விவரம் சொன்னான்.
பிரதாப ராஜாவுக்கு இது நல்ல சான்சு, ஆனா எப்படி தேவனாறதுனு தெரியலையேன்னு வருத்தமா இருக்கு. ம்ருத்யுன்னாலே மனுஷ்ய ஜாதிக்குத் தான். தேவாள்ளாம் அமரத்வம் கொண்டவாளாச்சே, அவாளுக்கு எப்படி ம்ருத்யுவ மேனேஜ் பண்ணத் தெரியும், மானுட ஜன்மமாயிருந்ததாலே தனக்கத்தனை தெரியும், தானில்லையோ இந்த வேலைக்கு உசிதம்னு நினைக்கறார்.
உடனே தனக்குண்டான அத்தனை பௌருஷத்தையும் பயன்படுத்த நினைக்கிறார். அத்தனை செல்வாக்கையும் பயன்படுத்தப் பார்த்தார்.
பழைய தர்மராஜாவண்டையே போய் கேக்கறார். அவரோ "தார்மீகமா பாத்தா தேவாள் மட்டுந்தான் அப்ளை பண்ணனுங்கறது சரியில்லே. ஆனா என்னால் எதும் பண்ணமுடியாது"னு சொல்றார். "ஏன் வேலையை வேண்டாம்னீர்?"னு கேட்டார் பிரதாபன். "பின்னே என்ன ஓய்? அவாவா நல்ல நல்ல வாகனமா வச்சுண்டிருக்கா. நேக்கு மட்டும் எருமைமாட்டைக் கொடுத்திருக்கா"னு புலம்பறார். "தெனம் எருமைமாட்டுல ஏறிப் போனாத்தான் அந்த அவமானம் புரியும்"னுட்டு ஓனு அழறார். 'ஏது, இவர்ட்ட ஐடியா கேக்க வந்தோமே'னுட்டு ராஜா அந்த இடத்தை விட்டு ஜகா வாங்கினார்.
இந்த்ரன் கிட்டே பேசினார். இந்த்ரனுக்கு பொறாமை ஜாஸ்தியோன்னோ? தன்னைவிட ஸ்டேடஸ்ல பெரிய போஸ்டுக்கு கேவலம் ஒரு மனுஷ்யன் வந்துடுவானேங்கறது பிடிக்கலை. 'நரகத்துல குவார்டர்ஸ் எடுத்துண்டு தங்கணும், தினம் எண்ணெய் ஸ்டாக் எடுத்து கொப்பறைல விடணும்'னு இல்லாத ரீலெல்லாம் விடறார். பிரதாபன் அதைக் கேட்டு இன்னும் ஆசை ஜாஸ்தியானதைத் பாத்ததும் இந்த்ரன், "நான் போகணும், யாரோ மகரிஷியோட சாபம் என்னைத் துரத்திண்டு வரா மாதிரி இருக்கு.. வரட்டா?"னு பிச்சிண்டுட்டார்.
மகாவிஷ்ணு கிட்டே மனு போட்டார். நைசா நழுவுறதை மீனுக்கே கத்துக் கொடுத்தவராச்சே விஷ்ணு? "யப்பா பிரதாபா.. நான் அவசரமா ஒரு அவதாரம் எடுக்கணும்.. வந்தப்புறம் மொதல் வேலையா உனக்கு உதவி பண்றேன்"னுட்டு மாயமா மறைஞ்சுட்டார்.
சிவன் கிட்டே பேசினார். "ஐயா.. நீர் தானே செலக்சன் கமிட்டி சீஃப்? எனக்கு அந்த வேலையைக் குடும்னு" கேக்கறார். சிவனோ, "பிரதாபா... இது தேவாள் மட்டுமே அப்ளை பண்ண முடியும்.. வேறே ஏதாவது வரம் வேணும்னா கேளேன்? கொஞ்ச நாளா யாருமே என் கிட்டே வரம் கேக்கலை.. கை நம நமங்கறது"னுட்டு போயிடறார்.
பிரம்மா கிட்டே போனார். ஒரு தலை ஆசாமி கிட்ட பேசறதே கஷ்டமில்லையோ? இந்தாளுக்கு நாலு சிரசாச்சே? வேணும்னே, "யாரு... பிரதாபனா? குரல் பிரதாபன் மாதிரி இருக்கே? எங்கேப்பா இருக்கே?"னு ஒவ்வொரு தலையா மாத்தி மாத்திக் கேக்கறார். பிரதாபனும் சுத்தி சுத்தி வந்து அலுத்து போய்த் திரும்பிட்டார்.
பிள்ளையார்ட்ட போனார். நேரா விஷயத்துக்கு வந்தார். "ஓய் கணேசரே.. உமக்கு எத்தனை வண்டி வாழைப்பழம், கொழக்கட்டை வேணும் சொல்லும்.. லைஃப் டைம் சப்ளை பண்ணிடறேன்.. இந்த வேலையை எனக்குக் கிடைக்கும்படி செய்யும். மனுஷ்யனான எனக்குத்தான் மரணத்தைப் பத்தித் தெரியும். நான் சூபர் குவாலிஃபைடு, இருந்தாலும் இந்த வேலைக்கு அப்ளை பண்ண முடியலே.. நீர் மனசு வச்சா நடக்கும்.. நானும் உம்மை கவனிச்சுக்கறேன்"னுட்டு அட்வான்சா எட்டு சீர் ரஸ்தாளி, மூணு சீர் மொந்தன், நூத்தியெட்டு வெந்த கொழுக்கட்டை, நூத்தியெட்டு பொறிச்சதுனு சம்திங் தள்ளினார். பிள்ளையார் எல்லாத்தையும் வாங்கிண்டு, "உம்ம கர்மபலன் போலவே நடக்கும்"னுட்டு மூஞ்சூர் வேகத்துல காணாமப் போயிடறார். லஞ்சம் கொடுக்கறதுல இதான் சங்கடம். கார்யம் ஜெயமாகுமானு தெரியாது.
இப்படி நாலஞ்சு வாரமா பிரதாபன் அல்லாடறார். ஒவ்வோரு தேவாளாப் பாத்து அட்ஜஸ்ட் பண்ண நெனச்சு எதுவுமே நடக்கலே. அப்ளை பண்ண கடைசி நாளோ நெருங்கிண்டு இருக்கு. இந்த வேலையை எப்படியும் வாங்கியே தீரணும்னு வைராக்கியமா இருக்கார். அப்படித்தான் இருக்கணும் தெரியுமோ? ஒரு லட்சியம்னு ஒரு கோல்னு இருந்தா அதை அடைஞ்சே தீரணும்னு செயல்ல இறங்கணும். சும்மா ஆசைப்பட்டா போறாது. என்ன தடை வந்தாலும் அதை சுக்கலாப் பண்ணி, தான் விரும்பியதை அடையறவா தான் மனுஷா. மிச்சவாள்ளாம் ப்ராணனுள்ள ஜடமாக்கும்.
இத்தனை நாளா நேரடியா ருஜ்யுத்வமா முயற்சி பண்ணி எதுவுமே நடக்கலே. இனிமே, இன்டைரக்ட் அப்ரோச்ம்பா பாருங்கோ, அப்படி அதிபலமா ட்ரை பண்ணத் தீர்மானிச்சார். தேவாள் மட்டுந்தான் அப்ளை பண்ணமுடியுங்கறது பெரிய சிக்கல். இதை மீற ஏதாவது அடாவடி பண்ணினாத்தான் உண்டுனு தீர்மானமாத் தெரியறது பிரதாப ராஜாவுக்கு. அடாவடிச் சக்ரவர்த்தி யாருன்னு யோசிக்கறார். கிங் ஆஃப் தில்லுமுல்லுனா ஒருத்தர் தான் இருக்க முடியும். மகாவிஷ்ணுவைப் பார்க்கிலும் அழிச்சாட்டியக்காரர் உண்டோ? எத்தனை ப்ராடு பண்ணினாலும் பக்தாள் மனமுருகிப் போகலியோ? எப்படியாவது மகாவிஷ்ணுவை மடக்கிப் போட நினைச்சார் ராஜா. மகாலக்ஷ்மியைப் பிடிச்சா கார்யம் ஜெயமாகும்னு தோணறது. மகாலக்ஷ்மிக்கு ரெண்டு கிலோ குங்குமம் வாங்கிக் கொடுத்தா போறும், வசப்படுத்திடலாம்னு தெரியும்.
அன்னைய பஞ்சாங்கத்தைப் பாக்கறார். உருப்படாத தினப்பலன் ஏதோ எழுதியிருக்கு. அதுக்குக் கீழே கிழமையைப் பாக்கறார். வெள்ளிக்கிழமை. சாயந்தரம் வெளக்கேத்தி வச்ச எல்லார் ஆத்துக்கும் மகாலக்ஷ்மி ஃப்லையிங் விசிட் அடிப்பார்னு தெரியும். அப்புறம் விஷ்ணுவோட சேந்து கோவில்ல இருப்பார்னும் தெரியும். இன்னிக்கு மகாலக்ஷ்மி மூலமா விஷ்ணுவை மடக்கிட வேண்டியதுனுட்டு சேவகாளைக் கூப்பிட்டு உசந்த குங்குமமா நாலு கிலோ பார்சல் பண்ணச் சொல்றார்.
    இங்க இப்படி இருக்கச்சே, தேவ ஜாகைலயும் ஒரு அமர்க்களம் நடக்கறது. தேவ ஜாதின்னாலும் அவாளுக்கு கைக்காரியம் எல்லாம் பண்ண மனுஷ்ய ஜாதி ஆட்கள் தான். மனுஷ ஜாதியோன்னோ, அடுத்தவா சந்தோஷமா இருந்தா பிடிக்கலை. "பொண்ணு வெள்ளிக்கிழமை வந்தா காணாமப் போயிடறா, சிற்பக் கூடத்துல இன்னொரு மனுஷ்ய ஜாதி யுவனோட பாத்தேன்"னுட்டு ஒரு மனுஷ ஜாதி சேடிப் பொண்ணு கம்ப்லெயின் பண்ணிடறா.
நம்ம ஹீரோயினோட அப்பா தேவருக்குக் கோபம் பொத்துண்டு வர்றது. "யாரது?"ன்னு கேக்கறார். சேடிப் பொண்ணு பிரதாபகுமாரனைப் பத்தி எல்லாம் சொல்லிடறா. "இன்னிக்கு வெள்ளிக்கிழமை, இன்னிக்குப் போனேள்னா கையும் களவுமா பிடிச்சுடலாம்"னு சொல்லிடறா. ஒடனே அந்த தேவ தகப்பனாரும் கிளம்பறார்.
    கோவிலுக்கு வந்த பிரதாப ராஜா மகாலக்ஷ்மிக்காக வெயிட் பண்றார். அப்போ தன்னோட குமாரன் நைசா நழுவுறதைப் பாத்துட்டு, அவன் பின்னாடியே சிற்பக் கூடத்துக்கு வரார்.
அவன் என்ன பண்றான்னுட்டு ஒளிஞ்சு கவனிக்கறதுக்காக எடம் தேடறச்சே, அங்கே இன்னொரு ஆசாமி ஒளிஞ்சுண்டிருக்கறதைப் பாக்கறார். யாருன்னு பாத்தா, நம்ம ஹீரோயினோட அப்பா. "என்னய்யா, உன் பையன் அடிக்கற கூத்து!"னுட்டு எரைச்சல் போடறார், தேவப்பொண்ணோட தேவத்தோப்பனார்.
"எல்லாம் உம்ம பொண்ணோட வேலை, என் பையன் பரம சாதுவாக்கும்"ங்கறார் பிரதாப ராஜா.
"பரம சாது பண்ற வேலையை பாரும்"ங்கறார் தேவ தோப்பனார். ரெண்டு பேரும் உள்ளே பாக்கறா.
அங்கே பிரதாப குமாரன் ப்ரியதர்சனியோட வஸ்த்ரத்தையெல்லாம் அச்சிதம் பண்ணிண்டிருக்கான். அவஸ்த்ரமா, பிறந்த மேனியா, இருந்தாலும் ப்ரியதர்சனி அவனோட கை படற போதெல்லாம் வெக்கத்துல சொக்கிப் போறா. 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்'னு அவன் பாடறான். அவ முனகல்லே ம்யூசிக் போடறா. சித்த நாழிலே ரெண்டு பேரும், அப்ர்யம்னு சொல்வா, அதாவது காத்தை மட்டும் உடுத்திண்டு இருக்கறதுக்கு பேரு அப்ர்யம், அப்படி இருக்கா. பிரதாபகுமாரன் மடில, அவ கந்தர்வ வீணையா மாறிடறா. இன்னொரு க்ஷணம், ரெண்டு பேரும் மானா மாறி ஒத்தரை ஒத்தர் துரத்திண்டு ம்ருக காமம் கொண்டாடறா. இன்னொரு க்ஷணம் ப்ரியதர்சனி கைல பிரதாபகுமாரன் களிமண்ணா மாற, அவ சிற்பம் செதுக்கறா. இன்னொரு க்ஷணம் அங்கயே ஒரு சின்ன தடாகம் ஏற்பாடு பண்ணி, ரெண்டு பேரும் அன்னப் பக்ஷியா மாறி கூடிக்கறா. அடுத்த க்ஷணம், மறுபடி சாதாரணமா மாறி அவ மடில இவன் தலை வச்சுக் கொஞ்சறான். இப்படி க்ஷணத்துக்குக் க்ஷணம் ரெண்டு பேரும் அதியத்புத காமக்ரியைல இருக்கா.
முதிர்ந்த ரசிகருக்கான காட்சி ஆங்காங்கே தெரியறதைப் பாத்துட்டு கண்ணை மூடிக்கறார் பிரதாப ராஜா.
தேவ தோப்பனாருக்கோ ஆத்திரம் வந்து அவா ரெண்டு பேர் முன்னாலயும் கோபாவேசத்தோடு பிரசன்னமானார். "எம்பொண்ணையா இப்படிக் கலைக்கறே பாதகா!"னுட்டு, என்ன பண்றோம்னு தெரியாம பிரதாபகுமாரனை தலையைச் சீவிக் கொன்னுட்டார்.
நாழியாயிடுத்து பாருங்கோ. மிச்ச கதையை அடுத்தப் பரசங்கத்துல சொல்றேன்.
மிச்ச கதை ➤
2012/06/09
தைவாதர்சனம்
    ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன். வியாக்யானமும் சம்பாஷணையும் ஏ சர்டிபிகேட்டா எசகுபிசகா இருக்கலாம், பால்யருக்கு உசிதமில்லேனு பெரியவாள்ளாம் பவ்யமா எடுத்துச் சொல்லுங்கோ. கேக்கலேனா, செவிட்டுல ரெண்டு சாத்துங்கோ, குத்தமில்லை, பகவான் ரக்ஷிப்பார்.
இந்த காலத்து குழந்தைகளுக்கெல்லாம் தெய்வ நம்பிக்கை பக்தி எதுவுமில்லே, கோவிலுக்குப் போச்சொன்னா வக்ரம் பேசறானு சொல்றோமே தவிர, பாருங்கோ, பதினஞ்சு பதினாறு வயசானாப் போறும், பொண்களும் சரி, பையன்களும் சரி, பக்தி வந்து துடிச்சுப் போயிடறா. வாரத்துல நாலு நாள் கோவிலுக்குப் போறான்னா, விஷயமிருக்கணுமே? ஒரு விக்கிரகம் விடாம பிரதக்ஷணம் பண்ணி, பக்தியோட அவா இருக்கறதப் பாத்தா, இவாளப் போய் குத்தம் சொன்னோமேன்னு நமக்கே அத்யானமா போயிடறது.
போன மாசம் பாருங்கோ, சைதாப்பேட்டைல காரணீஸ்வரர் கோவிலுக்கு போயிருந்தேன். சித்திரை மாசம் பிரம்மோத்சவம், நாலு நாள் தெய்வ சந்தேசம் சொல்லிட்டு போங்கோன்னா. அதுக்காகப் போயிருந்தேன். ஆதிகாரண மூர்த்தியும் ஸ்வர்ணாம்பிகையும் ஜகப் பிரசித்தியாச்சே, அப்படியே அவாளையும் பாத்துட்டு வருவோம்னு போனேன். போனா, கோவில்ல நிக்கக்கூட இடமில்லை. வயசுப் பொண்களும் பையன்களும் கோவிலைச் சுத்தி சுத்தி வரா, அவாளப் பாத்தே நேக்கு ஜன்ம சாபல்யமான மாதிரி ஆயிடுத்துன்னா பாருங்கோ.
பக்கத்துல நின்னுண்டிருந்தவர்ட்ட கேட்டேன்: "இந்த மாதிரி யுவக்கூட்டம் எல்லாம் தெய்வ பக்தியோட இருக்கறதனால தானே, லோகத்துல சன்மார்க்க சித்தம் நெலச்சு நிக்கறது?"
அதுக்கு அவர் சொன்னார்: "நீங்க வேறே, இவாள்ளாம் சாமி கும்பிடவா வந்திருக்கா? பையன்கள்ளாம் பொண்களை சைட் அடிக்க வந்திருக்கா. பொண்களோ சைட் அடிக்கறத அனுபவிக்கறதுக்கு வந்திருக்கா"
பக்கத்துல நின்னுண்டிருந்த அவாத்து மாமி சேந்துண்டா: "சரிதான். இவாளுக்கெல்லாம் உண்மைலயே பக்தி இருந்தா, நாட்டுல கரன்டு கஷ்டம் தீந்து போயிருக்காதோ?".
"தைவாதர்சனம்"னேன்.
"என்ன சொல்றேள், எங்க தெய்வ தரிசனம்?"னா மாமி.
"தர்சனமில்லே, அதர்சனம். சம்ஸ்க்ருதம். தைவ அதர்சனம்னு பிரிக்கணும். அத்ர்ஸ்யம்னா கண்ணுக்குத் தெரியாததுன்னு அர்த்தம். இவாள்ளாம் பாக்கறது, கண்ணுக்குத் தெரியாத தெய்வத்தை"னு சொன்னேன்.
"தைவாதர்சனமா, என்ன கூத்துடாது!"னு நெனச்சாளோ என்னவோ, ரெண்டு பேரும் என்னை ஒரு தினுசா பாத்துண்டே, டாக்கு டாக்குனு நடராஜா சர்வீஸ்ல கிளம்பிட்டா.
கோவில்ங்கறது எதுக்கு இருக்கு? கீதா மாமியைக் கேட்டா சிலாகிச்சு சொல்லுவார். கிராமத்துக் கோவிலையெல்லாம் எடுத்து நடத்தணும்னு ரொம்ப ஸ்ரத்தையா எழுதுறா மாமி. பக்திமார்க்கம் ஒரு பக்கம் இருக்கட்டும். கோவில்னு இருக்கறதே, நாலு பேர் சேர்ந்து பழகறதுக்குத் தானே? சித்தம் ஸ்ரேஷ்ட தேவஸ்தானம்னு சொல்லியிருக்காளே? பகவானை மட்டும் பிரார்த்தனை பண்ணனும்னா, மனசுலயே பண்ணலாமில்லையோ? கோவிலுக்கு பின்ன எதுக்கு வருவா? அப்படி இப்படி பாத்துக்கத்தான். நாம்ப மட்டுமில்ல, நாமள்ளாம் கும்பிடுற முப்பத்து முக்கோடி தேவதாங்கறாளே, அவாளும் இப்படித்தான்.
இதுக்குப் பூர்வீகம் உண்டு, தெரியுமோ?
    ஆதி நாள்ல இப்ப மாதிரி இல்லை, ரெண்டே ஜாதி தான். தேவ ஜாதி, மனுஷ ஜாதி. அப்படின்னா அசுர ஜாதி எங்கனு கேக்கலாம். அசுர ஜாதியும் தேவ ஜாதிதான். எல்லாருமே காஸ்யபர் கொழந்தைகள் தானே?
கதையைக் கேளுங்கோ, தேவ ஜாதியும் மனுஷ ஜாதியும் ஒண்ணா இருந்தா. அப்பல்லாம் தேவாள் கண்ணுக்குத் தெரிஞ்சுண்டிருந்தா.
கடைத்தெருவுல "என்ன ஓய், சுப்ரமண்யரே, எப்படி இருக்கீர்? ஆத்துல செகந்ட் ஒய்ஃப் சௌக்கியமா? என்ன தளிகை?"னு குசலம் சாரிக்கலாம். "ஒம்ம ப்ராதா.. அதான் கஜமுகன் கணேசன்.. யாருக்காவது எதாவது விக்னம் உண்டாக்கறதே ஸ்வபாவமா போயிடுத்துங்காணும் அவருக்கு. அப்புறம் மோதகம் கொண்டா கதலிபலம் கொண்டானு லஞ்சம் வாங்கிண்டு நிவர்த்தி பண்றாராமே? யாருக்கு என்ன கார்யம் ஆகணும்னாலும் இவருக்கு மொதல்ல சம்திங் வெட்டணுமாமே? கேப்பாரில்லையோ? ஜ்யேஷ்டரா இருந்துண்டு பொறுப்பா இருக்க வேண்டாமோ? பகவானே லஞ்சம் வாங்கினா, பாமரன் என்ன பண்றது?"னு சப்ஜாடா கேக்கலாம். தேவாளும் நம்மளோட சுமுகமா பேசிண்டிருந்தா. தோப்பனார் பார்யாள் ஸ்த்ரீலோலப் ப்ரச்னையெல்லாம் நம்பகிட்டே சொல்லியழுவா.
தேவாளும் மனுஷாளும் பழகிண்டாலும் பேசிண்டாலும், பேதம் இருக்கத்தான் செஞ்சுது. தேவாளுக்கும் மனுஷாளுக்கும் தனித்தனி ஜாகை. ஆனா, கோவில்ல மட்டும் நிஜமாவே க்ருஷ்ணரையும், ராமரையும், மணிகண்டனையும், மகேஸ்வரனையும் பாக்கலாம். ராஜராஜேஸ்வரியையும், மீனாக்ஷியையும், சரஸ்வதியையும் சாக்ஷாத்தா பாக்கலாம். சாயந்தரத்துல தேவாளும் மனுஷாளும் கோவில்லக் கூடிப் பேசுவா. கோலாட்டம் ஆடுவா. பாட்டு பாடுவா. தேவ தேஜஸ் படட்டுமேனு மனுஷா அத்தனைபேரும் வருவா.
"என்ன ஓய், எரனூறு மில்லி மெக்டாவல் அடிச்சுட்டு வந்திருக்கீரா?"னு நீங்க கேக்கலாம்.
அப்படியெல்லாம் இல்லைண்ணா. சபைல பொய் சொன்னா, நாக்கழிஞ்சு போகாதோ? நான் சொல்றதெல்லாம் அந்த சரஸ்வதி சாட்சியா சத்ய வாக்காக்கும். அம்பது மில்லிக்கே ஆட்டம் போடறதுண்ணா.
"அப்றம் எப்படி எல்லாம் கல்லா மாறிப் போச்சு?"ன்னு கேக்கறேளா?
வாஸ்தவமான கேள்வி. தேவா மனுஷா சகபாவம், சகஜீவிதம் எல்லாம்... ஒரு நாள் சடால்னு மாறிப் போச்சு.
ஏன் மாறிப் போச்சுன்னா? அதுக்குக் காரணம் இருக்கு. அனுராகம். மதனசந்தேசம். ப்ரேமை. அதாண்ணா லவ்வுங்கறாளே, அதே தான். அழகா காதல்னு சொல்லலாம், லவ்வு ஜிவ்வுன்னு இழுத்துண்டும் சொல்லலாம். அந்தக் கதையத்தான் சொல்லப் போறேன். சித்தே இருங்கோ, ஒரு சிட்டிகை. நல்ல பட்டணம் பொடில்லாம் இப்ப கெடைக்கறதே இல்லை...நன்னா விர்ர்ர்னு ஏர்றது...சரி, கதைக்கு வரேன்.
இப்பல்லாம் பார்லிமென்ட்ரி கமிட்டி பொருளங்கா உருண்டை ஆபரேடிங்க் கமிட்டி ஆமவடைனு என்னென்னமோ சொல்றாளே, அதே மாதிரி ஆதி நாள்லயும் உண்டு.
    ஒரு நாள் சதஸ்ல தேவாள்ளாம் ஒக்காந்துண்டு இருக்கா. சதஸ் எல்லாம் கோவில்ல தான். இதானே தேவ ஜாகை? சிவ சபை, விஷ்ணு சபை, பிரம்ம சபை மூணும் சேந்து கூடியிருக்கு. லோகத்து விஷயமெல்லாம் விசாரிக்கப் போறா. என்ன நடக்கப்போறது, அதுக்கு எப்படி எதிர் நடவடிக்கை எடுக்கலாம், யாருக்கு எப்படி சங்கடம் கொடுக்கலாம், எவ்வளவு பரிகாரம் வசூல்னு பைவ் இயர் ப்ளான் போடறா. லோக பராமரிப்புக்கு, தேவாளோட ஐந்தாண்டு திட்டம்.
"அப்பா, நமஸ்காரம்"னு விஷ்ணுவுக்கு ஒரு கும்பிடு போட்டு பேச ஆரம்பிக்கறார் பிரம்மா. அவர்தான் த்ரிசபை சதசுக்கு ஸ்பீக்கர். நம்ம ஊர் ஜெயகுமார் மெய்ராகுமார் மாதிரி. சதசை ஆரம்பிச்சு வச்சுட்டு பிரம்மா சொல்றார்:
"இன்னிக்கு ஒரு முக்ய விவாதம் நடக்கப்போறது. என்னோட ஆபீஸ்ல, ஸ்ருஷ்டிக்கே எல்லாருக்கும் டயம் சரியா இருக்கு. விஷ்ணு சபைலயோ, திரிலோக பரிபாலனத்துக்கே டயம் சரியா இருக்கு. சிவ சதஸ்லயோ சம்காரம், ரக்ஷணம்னு ஓயாம வேல பாத்துண்டு இருக்கா.
மனுஷாள் என்னடான்னா நாளுக்கு நாள் பெத்துண்டே போறா. அது போறாம ஒத்தருக்கொருத்தர் அடிச்சுண்டு சாகறா. இந்தப்பக்கம் பெத்துண்டே போறா. அந்தப்பக்கம் செத்துண்டே போறா.
என்னோட டிபார்ட்மென்டுல எல்லாரும் ஒவர் டைம் பாக்கறா. எனக்கு ஓஞ்சு போறது. ஒரு நாள் லீவ் போட்டுட்டு கல்யாணியோட ஜாலியா இருக்கலாம்னா முடியல. இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு வேணும்"
"பிரம்மா சொல்றது ரொம்ப சரி. நீங்க மூணு பேரும் பிசியா இருக்கேள். நாங்கள்ளாம் உங்களுக்கு ஸ்ருஷ்டி, சம்ரக்ஷணம், நாசம்னு எல்லா வேலைலயும் உதவியா இருக்கோம், எங்களுக்கும் டயமில்லை"னு கோரசா சொல்றா பஞ்ச பூதங்களும், மத்த தேவாளும். "இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டாகணும் இன்னைக்கு".
"பிரச்னை என்ன, சொல்லுங்கோ"ங்கறார் மகாதேவர்.
'தன்னாட்டம் துடுக்கில்லை, சிவன் சித்தே மெதுக்கு'னு விஷ்ணுவுக்குக் கொஞ்சம் அகங்காரம் உண்டு. "அதாகப்பட்டது, நமசிவாய.."னு விஷ்ணு பேசறார். "நாம்ப ஏற்கனவே ஒழச்சு ஓடாப் போயிண்டிருக்கோம். மத்த தேவாளும் தேஞ்சு போயிண்டிருக்கா. வேலையை பாக்க வேண்டியது தான், இல்லைங்கல, ஆனா பாருங்கோ, நம்ம மூணு பேர் வேலையை முடிச்சப்புறமும் நிறைய வேலை இருக்கே? நம்ம லோக பரிபாலன ஸ்ட்ரேடஜில ஒண்ண மறந்துட்டோம். செத்துப் போனவாளை யார் கவனிக்கறது? அவாளையெல்லாம் வகை வகையா பிரிச்சு ஸ்வர்க்கம், நரகம், அவாந்த்ரம்னு ஒவ்வொரு இடத்துக்கா அனுப்பிச்சு, தர்ம பரிபாலனம், தண்டகம் கொடுத்து எல்லாம் மேனேஜ் பண்ண ஆளில்லை."
"இருக்கிற தேவ கூட்டத்துல ஒத்தருக்கு குடுக்க வேண்டியது தானே?"ங்கறார் நடராஜர்.
"ஒத்தருக்கும் இந்த வேலைல இஷ்டமில்லை. தர்மராஜனுக்கு இந்த உத்யோகம் பிடிக்கலே. நோட்டீஸ் குடுத்து யுகமாப்போறது. நரக லோகத்லயும், அவாந்த்ர லோகத்லயும், ஆபீஸ் வச்சுண்டிருக்கணுமே? ஒத்தருக்கும் பிடிக்கலை"னார் பிரம்மா.
"பாயிண்டு"ங்கறார் சிவபெருமான்.
"அதான் பிரச்னை!"ங்கறார் தசாவதாரப் பெருமாள்.
"இது வெறும் லேபர் பிராப்ளம்"னுட்டு தொண்டைய கனச்சுண்டார் நீலகண்டர். "இனிமே இது நாலாவது தேவதொழிலா இன்னிலேந்து முக்யத்வம் கொடுத்தாக வேண்டியது. இந்த வேலையைச் செய்யறவருக்கு மும்மூர்த்திகளுக்கு ஈடான பவரும் ரைட்டும் உண்டு. ம்ருத்யூ பத்தின முழு பிராபிட் அன்ட் லாஸ் பொறுப்புண்டு. த்ரிலோக பரிபாலன எக்சகியூடிவ் மேனேஜ்மென்ட்ல அவா ஒத்தர். இப்படி ஒரு வேகன்சி நோட்டீஸ் போடுங்கோ"னு பிரம்மாகிட்டே சொல்றார். "ஆம்பிளை தேவாள்ளாம் அப்ளை பண்ணலாம்".
"அருமையான ஐடியா"னார் விஷ்ணு. அவருக்கு ஆத்துக்குப் போகணும்.
"சரி, இப்பவாவது யாராவது எடுத்துக்கறாளான்னு பாப்போம்"னு சொல்லிட்டு பிரம்மா எழுந்துண்டார். "சபை இன்னிக்கு முடிஞ்சுது"னு அவர் சொன்னதும், முப்பது முக்கோடி தேவர்கள்ள ரெண்டு கோடி பேர், ஆபீஸ் நோட்டீஸ் போர்டுக்கு ஓடறா. புது வேகன்சிக்கு அப்ளை பண்ணலாம்னு. மும்மூர்த்திக்கு இணையான ஜோலின்னா ஆசை வராதா?
அப்படி ஓடிப் போய் பாத்தவாள்ள, என்னடாது தேவாள்ளாம் எங்க ஓடறானு பாத்து ஸ்தம்பிச்சுப் போன மனுஷ்யன் ஒருத்தனும் இருந்தான். அவனைப் பத்தி சொல்றதுக்கு நெறய இல்லைன்னாலும், அப்புறம் சொல்றேன். கோவில்ல வெயிலுக்காக ஒதுங்கினவன், 'என்னடா எல்லா தேவாளும் எங்கே ஓடறானு போய் பாத்துட்டு வருவோம்'னு அவா பின்னாடியே ஓடினான்.
தேவராஜ்ய சபைல இப்படி இருக்கறச்சே, மனுஷ்ய ராஜ்யத்துக்கு வருவோம்.
    பிரதாபன், பிரதாபன்னு ஒரு ராஜா. மனுஷ்ய ராஜா. அவனோட வீரமும் தீரமும் இந்திரனுக்கு இணையாக்கும். புத்திலயோ மகாவிஷ்ணு. தர்ம பரிபாலனம் பண்றதுல சிவ சமானம். நாட்டு மனுஷாள்ளாம் பிரதாபன் மாதிரி ஒரு ராஜா, ரகு குலத்துல கூட இல்லம்பா. அத்தனை பிரசித்தம், அத்தனை ராஜவ்ருதம்.
இந்த பிரதாப மகாராஜாவுக்கு ஒரே ஒரு குறை. தானும் ஒரு தேவனா இல்லையேன்னு.
கோவில்ல தேவர்களோட பேசும்போதும் விளையாடும் போதும், அவா தேஜஸப் பாத்துட்டு மனுஷ ராஜனுக்கு ரொம்ப நாளா ஆதங்கம். தான் ஏன் ஒரு தேவனாகக் கூடாதுன்னு. வயசும் ஏறிண்டே போறது, ஆனா தேவாள மாதிரி நித்யத்வமில்லைன்னு தெரிஞ்சு, நொந்து போயிடறான். டயம் கிடைச்சப்பல்லாம் தேவாள் கிட்டயும், ஒரு சமயம் மகாவிஷ்ணு கிட்டயும், கேட்டுப் பாத்துட்டான். அவா என்னடான்னா, "தேவனாறது, மனுஷ ஜன்மத்துலந்து ப்ரொமோஷன் மாதிரி கிடையாதுப்பா.. உனக்கு வாச்சது அவ்ளோதான்!"னுட்டா.
இந்தப் பிரதாபனுக்கு, பிரதாபகுமாரன் பிரதாபகுமாரன்னு ஒரு புத்ரன். யுவராஜன். அவனுக்கு இருபது வயசாறது. பாக்கறதுக்கு மும்மூர்த்திகளையும் சேத்து வச்சா மாதிரி அப்படி ஒரு களை. நல்ல ஒயரம், தோள் ரெண்டும் மேரு மலை மாதிரி இருக்கு. கண்ணில தீட்சண்யம், பாக்கறவாளையெல்லாம் கட்டிப் போடறது. பேசினா அத்தனை ம்ருது, அத்தனை ஞானம். வீரம்னா, தேவாள் கூட அவன் பக்கம் வர மாட்டா, அத்தனை வீரம்.
வயசாயிடுத்து, பையனை ராஜாவாக்கிட்டு வீஆர்எஸ் வாங்கிப்போம்னு பிரதாபராஜா நினைக்கறார். மந்திரிகளையெல்லாம் கூப்பிட்டுக் கேக்கறார். எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். "மொதல்ல பிள்ளையாரைப் பாத்துப் பேசிட்டு வந்துடுங்கோ, பட்டாபிஷேகத்தை ஆரம்பிச்சுடலாம்"னு எல்லாரும் சொல்றா.
உடனே பிரதாப ராஜா, பிள்ளையாரோட செகரடரிக்கு அபாயின்ட்மென்ட் கேட்டு ஒரு சந்தேசம் அனுப்பிச்சுட்டு குமாரனோடயும், தன்னோட பரிவாரத்தோடயும், கோவிலைப் பாக்கக் கிளம்பினார்.
கோவில்ல வந்து இறங்கினா, பிள்ளையார் ஏதோ மீட்டிங்க்ல இருக்கார். சொன்ன டயத்தைத் தாண்டி பிரதாபராஜா காத்துண்டிருக்கார்.
பொறுமை போன பிரதாபகுமாரன், "அப்பா, நான் சுத்திப் பாத்துட்டு வரேன்"னு கிளம்பறான். ஒவ்வொரு பிராகாரமா சுத்திண்டிருக்கான். பர்ணசாலை, யாகசாலையெல்லாம் தாண்டி ந்ருத்யசாலைல சப்தம் கேக்கறது. ஜல், ஜல்னு சலங்கை சத்தம். யாரோ ஆடறா மாதிரி தோணறது அவனுக்கு. மொள்ள நுழைஞ்சு பாக்கறான். அங்க ஒரு தேவ பொண்ணு தன்ன மறந்து நாட்யமாடிண்டிருக்கா.
அவளைப் பாத்ததும் அவன் மனசு, எலக்ட்ரிக் ட்ரெயின் ஓடற மாதிரி அடிச்சுக்கறது. அத்தனை அப்சரஸ்களையும் அவ கால்ல கட்டிப் போடலாம், அத்தனை அழகா இருக்கா. அவளோட கண் ரெண்டும் அஸ்திரம் மாதிரி அங்கேயும் இங்கேயும் பாயறது. பாயறச்சே இவனைப் பாத்துட்டு சிலையா நிக்கறது.
பிரதாபகுமாரன் ஒண்ணும் நோஞ்சானோ நொள்ளையோ இல்லையே? அவனும் அவளுக்கேத்த புருஷோத்தமன் மாதிரி கம்பீரமா சிம்மராஜனாட்டம் நின்னுண்டிருக்கான்.
அவ என்னடான்னா, இடுப்பில செருகிண்டிருந்த கச்சையும், தாவணியும் விழுந்தது தெரியாம, இவனைப் பாத்துட்டு எல்லாத்தையும் மறந்துட்டு நிக்கறா. ஒண்ணும் பேச்சே காணோம்.
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய் சொற்கள் என்ன பயனும் இலனு தாடிக்காரப் பொலவர் சொல்லலியோ?
நேரம் போனதே தெரியலே... நாழியாயிடுத்து பாருங்கோ. மிச்ச கதையை அடுத்தப் பரசங்கத்துல சொல்றேன்.
மிச்ச கதை ➤
2011/12/29
ஸ்மரண யாத்ரை
(பெரிய) சிறுகதை
1 2 3 4 ◀◀ பூர்வத்துலே..
    "அந்தக் கமண்டலத்தை கீழே வைங்கோளேன்.. ரொம்ப நேரமா பிடிச்சிண்டிருக்கேள். கை வலிக்கப் போறது"ங்கறான் விஸ்வகர்மா. அவனோட பயம் அவனுக்கு.
"ஹ"ன்னார் கௌதமர்.
"என்னையும் மன்னிச்சிடுங்கோ"னு சாஷ்டாங்கமா கௌதமர் காலிலே விழுந்தா, தாழ்வார அகல்யா.
"அகல்யா மாதிரியே இருக்கே... நீ யாரா இருந்தாலும் தீர்க்கசுமங்கலியா இரும்மா"னுடறார் கௌதமர்.
இதான் சான்சுனுட்டு அவளும் எழுந்துண்டு, ""நான் ஸிந்து. இவரோட பார்யாள்"னுட்டு விஸ்வகர்மாவைக் காண்பிக்கிறா. "உங்க ஆசீர்வாதத்தை மறந்துடாதீங்கோ"னு கௌதமர் கிட்டே சொல்றா.
குழம்பிக் கிடந்த கௌதமருக்கு ஆத்திரமும் அவமானமும் சேர்ந்து இன்னும் பாடா படுத்தறது. விஸ்வகர்மாவையே பாத்துண்டிருக்கார்.
"பூலோகத்துல யாரோட ரூபத்தை எடுத்துக்கறதுன்னு நெனச்சப்போ... இருக்கறவாளிலே ஆதர்ச தம்பதிகளாப் பாத்து அவா ரூபத்தை எடுத்துக்கலாம்னு தோணித்து.. அப்படி யாராவது உண்டானு இவர் கிட்டே கேட்டேன்"னு சொல்றா ஸிந்து.
விஸ்வகர்மா சேந்துண்டான். "அதுக்கு நான் சொன்னேன்... அடி அசடே... நோக்குத் தெரியாதோ? கௌதம மகரிஷியையும் அகல்யாவையும் விட்டா ஆதர்ச தம்பதிகள், பூலோகமென்ன ஸப்த லோகத்லயும் கிடையாதே..?"
நன்னா ஐஸ் வைக்கறான். ஆமோதிக்கற மாதிரி ஸிந்து தலையை நாலு தடவை ஆட்டறா. மருமகள் தன்னைத்தான் கிண்டல் பண்றாளோனு பிரம்மாவுக்கு தோண்றது.. இருந்தாலும் கவனிச்சுக் கேக்கறார். விஸ்வகர்மா தொடர்ந்து சொல்றான். "மகரிஷி.. உங்களையும் அகல்யாவையும் பார்க்க ஸ்மரண யாத்ரை பண்ணி வந்தோம். குடிலுக்குள்ளே பாத்தா யாருமில்லே. அகல்யா கொட்டில்லே கோபூஜை பண்ணிண்டிருந்ததைப் பார்த்தோம். குடில் நிசப்தமா ஆளில்லாம இருந்துது. உங்க பாதம் பட்ட புண்ய பூமியா என்னனு தெரியலை, எங்களுக்கு உடனே உங்களை மாதிரி ரூபமெடுக்கணும்னு தோணித்து.."
"எல்லாம் உங்க மேலே இருந்த அதீத மரியாதையினாலே.. மன்னிச்சுடுங்கோ"னு முடிக்கறா ஸிந்து. "ஹிஹி"ங்கறான் விஸ்வகர்மா. மனசுக்குள்ளே அகல்யா சொல்லிக்கொடுத்த வசனம் எல்லாத்தையும் சரியாச் சொன்னோமான்னு கணக்கு போடறான். கௌதமர் கொஞ்சம் இறங்கின மாதிரித் தோண்றது அவனுக்கு.
'அவசரப்பட்டு சாபத்தை ஆரமிச்சுட்டோமே, முன்கோபத்தை காண்பிச்சுட்டோமே!'னு இருக்கு கௌதமருக்கு. முணுக் முணுக்னு கோவம் வந்தா இப்படித்தான். கண்மண் தெரியாமக் கோபம்னு சொல்வாளே, அது இது தான். என்ன பாக்கறோம் என்ன கேக்கறோம் என்ன செய்யறோம்னு யோசிக்காம, புரிஞ்சுக்காம கோபம் வந்துடுத்துன்னு வைங்கோ, அப்புறம் ரொம்ப சங்கடம் தான். 'கண்ணால் காண்பதும் பொய்'னு புலவர் சொல்லலியோ? 'அது கௌதமருக்கு எப்படிய்யா தெரிஞ்சிருக்கும்?'னு கேக்கறார் ஜிஎம்பி சார். வாஸ்தவம். விடுங்கோ.
முன்கோபத்தினாலே சகலத்தையும் கோட்டை விட்டுட்டோம்னு புரிஞ்சுண்ட கௌதமர், "ஸ்மரண யாத்ரை எந்த்ரமா? என்னய்யா கதை விடறே?"னு ஹீனமாக் கேக்கறார்.
"தோ பாருங்கோ"னுட்டு விஸ்வகர்மா அடுக்களையோரமா இருந்த குண்டத்தைக் காண்பிக்கறான். எடுத்துண்டு வரான். தப்பிச்சது யாரோட புண்யமோனு அவன் மனசு அடிச்சுக்கறது. சட்னு அதுல இறங்கி ஓடிப்போய்டலாமானு தோண்றது. ஆனா வித்வான் பாருங்கோ. வித்வான்களுக்கே உண்டான வித்யாகர்வம் அவனுக்கும் உண்டு. தன்னோட உன்னதமான எந்த்ரத்தை கதைனு சொல்றாரே கிழவர்னு நெனச்சுக்கறான். "கதையில்லை மகரிஷி. வாஸ்தவம்"னுட்டு குண்டத்துல இறங்கி வேறே வேறே ரூபத்துல குடில் முழுக்க ஸ்மரண யாத்ரை பண்ணிக் காட்டறான். அப்புறம் சுயரூபத்துக்கு வந்து, "உங்க பேர்ல இருந்த அலாதி பக்தியிலே.. ஒரு மோகத்துல அப்படி நடந்துண்டோம்.. மன்னிச்சுடுங்கோ"னு மறுபடி கெஞ்சறான். அவனுக்குத் தெரியும் சாபம் கொடுக்க கௌதமருக்குப் பவரில்லேனு.. இந்த்ரன் மேலே சாபம் கொடுக்க ஆரம்பிச்சாச்சே? சாப சக்தி எல்லாம் இன்னொத்தருக்கு நான்-ட்ரேன்ஸ்பரபில் இல்லியோ? அதனால கொஞ்சம் மூச்சு வந்தாலும், எதுக்கும் இருக்கட்டுமேனு மன்னிப்பு மேலே மன்னிப்பா கேட்டு வைக்கறான். விட்டா போறும்னு இருக்கு அவனுக்கு உள்ளுக்குள்ளே. அகல்யா முன்னாடி இந்த்ரன் வேஷம் போட்டதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு நெனச்சுக்கறான்.
அசல் அகலிகை கௌதமர் காலில் விழறா. "முனி ஸ்ரேஷ்டரே. உங்க தவபலனைக் கட்டுப்படுத்தறதுக்கு என்னை பிரம்மா இங்கே அனுப்பிச்சார். இங்கே வரதுக்கு முன்னாலயே இந்த்ரன் மேலே எனக்குத் தீராத காதல். உங்க நிழல்லே இருக்குற வரைக்கும் உங்க தர்மத்துக்கும் மானத்துக்கும் புறம்பா நான் ஒரு நாளும் நடக்கலே. உங்க தபோபலனை கட்டுப்படுத்துற நேரம் வந்தாச்சுங்கறதினாலே இப்போ இதெல்லாம் நடக்கறது. இனிமே நான் உங்க பத்னியா மனுஷ்ய ரூபத்துலே இருக்க முடியாது. எனக்கு தேவரூபத்துல என் வழியில போறதுக்கு அனுமதி குடுங்கோ"னு கேக்கறா.
பிரம்மாவும் "இதுக்கெல்லாம் காரணம் நான்தான். உங்களோட முன் கோபத்தைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். உங்க தபோபலன் அதீதமாகி எங்கே இந்த்ரபதவிக்குப் பங்கம் வந்துடுமோனு முன் ஜாக்ரதையா நடந்துக்க வேண்டியதா போச்சு. அதனால அகல்யாவை உண்டாக்கி... இதெல்லாம் என்னோட நாடகம்னாலும் இது என் தொழில் தர்மம். மன்னிச்சுருங்கோ"னு சொல்றார்.
கௌதமருக்கு நன்னா ஏமாந்துட்டோம்னு கடுப்பா இருக்கு. "இந்த எந்த்ரத்தை வச்சுத்தானே நீங்களெல்லாம் என்னை ஏமாத்தினேள்? இனிமே இந்த எந்த்ரம் தேவாளுக்குப் பயன்படாம போகட்டும்"னு சொல்லிடறார். அகல்யை தேவலோகத்துக்குப் போறதைப் பத்தியெல்லாம் அவர் கவலைப்படலே. முன்கோபத்துலே எல்லாத்தையும் இழந்துட்டோமேனு மட்டுமே அவருக்கு வருத்தம். 'சே!'னு ஆயிடுத்து. "இருந்தாலும் இந்த சாபத்தை நான் கொடுத்தே ஆகணும்.. இப்ப என்ன பண்றது?"னு கேக்கறார் பிரம்மா கிட்டே.
"நீங்க இந்த்ரனை கர்த்தாவாக்கி சாபம் கொடுக்க ஆரம்பிச்சதுனாலே, இந்த்ரன் தான் இதுக்கு ஒரு முடிவு சொல்லணும். அவனுக்குத் தான் சாபவலயத்துக்கு உரிமையிருக்கு"னு சொல்றார் பிரம்மா. இந்த்ரனைப் பார்த்து சாபவலய, அதாவது சாபத்தை திசை திருப்ப, யோசனை உண்டானு கேக்கறார்.
இந்த்ரனுக்கு உள்ளுக்குள்ள ஒரு சின்ன பயம் இருந்ததை இப்போ சொல்லியே ஆகணும். விஸ்வகர்மா மாதிரி ஆட்கள் சட்னு தன்னைப் போல வேஷம் போட்டு எல்லாரையும் ஏமாத்த முடியறதுன்னா, இந்த எந்த்ரத்துனாலே ஆபத்து வரத்தான் செய்யும்னு நெனச்சுக்கறான். இதல்லவோ வெபன் ஆப் மாஸ் டிஸ்ட்ரக்ஷன்னுட்டு ஒரு காரியம் பண்ணினான். பொதுவாவே வெபன் ஆப் மாஸ்டிஸ்ட்ரக்ஷன்னு சொல்றவா எல்லாருமே அவசரப்படறா.. அரைலூசா இருக்கா.. ஏன்னு தெரியலே. பாருங்கோ, அமெரிகாவிலே புஷ்ஷு பண்ணின கார்யம்.. சும்மாவானும் ஈராக்கோட ஒரு யுத்தத்தை உண்டுபண்ணி.. தேவையா சொல்லுங்கோ. நம்ம ஊர் கூடங்குளக் கதையாட்டம். பிரச்னை என்னனு நன்னா தெரிஞ்சுண்டு அதுக்கேத்த மாதிரி ஒரு உபாயத்தை.. சித்தியை செஞ்சு முடிக்க வேண்டாமோ? கூடங்குளத்தை இழுத்து மூடுனு சொல்றது கண்மூடித்தனம் இல்லையோ? இந்த்ரனுக்கும் அந்த மாதிரி ஒரு மைன்ட்லெஸ் இன்செக்யூரிடினு வைங்கோ. எந்த்ரத்தையே ஒழிச்சுடணும்னு நெனச்சான்.
கௌதமர் கிட்டே, "மகரிஷி.. உங்க சாபசக்தியை இந்த எந்த்ரத்து மேலே காண்பிச்சுடுங்கோ"னு சொல்லிடறான். கௌதமரும் எத்தனை நாழி கமண்டலத்தைக் கையிலயே பிடிச்சுண்டிருப்பார்? சரியாப் போச்சுனுட்டு சாபசக்தியை இந்த்ரன் கிட்டேயிருந்து திசை திருப்பி எந்த்ரத்து மேலே காண்பிச்சார். கமண்டலத்துலேந்து நாலு சொட்டு தண்ணியைத் தெளிச்சு "கல்லாப் போ!"னு சாபம் கொடுத்தார்.
சாபசக்தியை உள்வாங்கின எந்த்ரம் உருமாறிடுத்து. எந்திரம் இருந்த இடத்துலே குட்டியானை சைசுலே இப்போ ஒரு பெரிய பாறாங்கல் இருக்கு. விஸ்வகர்மாவுக்கு அழுகை தாங்கலை. தன்னோட மாஸ்டர்பீஸ் வேஸ்டாயிடுத்தேனுட்டு வேதனை. எப்பேற்பட்ட எந்திரம் இப்படி காதலுக்காக அடிபட்டு உருத்தெரியாமப் போயிடுத்தேனு புலம்பறான்.
கௌதமருக்கே பாவமாயிடுத்து. என்ன பண்றதுன்னு தெரியலை. "பிற்காலத்துலே ஜனங்கள் எல்லாம் என்னை முட்டாள்னு சொல்வாளே?"னு அவரும் புலம்ப ஆரம்பிச்சார்,
அப்போ பிரம்மா சொல்றார். இங்லிஷ்லே ஸ்பின் டாக்டர்ம்பா பிரம்மா மாதிரி ஆட்களை. ஏதாவது சேதி கட்டி ஏமாத்தற வித்தை தெரிஞ்சவா. "மகரிஷி. ஜனங்களைப் பத்திக் கொஞ்சம் கூட கவலைப்படாதீங்கோ. நாம அதுக்கு ஏதாவது கதை கட்டி விடுவோம். பாருங்கோ, அகலிகை தான் இந்தக் கல்லா மாறினாள்னு சொல்லிக் கதைகட்டி விடுவோம். முட்டாள் ஜனங்க தானே.. எல்லாம் கண்மூடிகள்.. எதைச் சொன்னாலும் நம்பிடுவா.. பாருங்கோ இதுக்காக ஒரு விரதம் ஒரு பூஜைனு வேறே பண்ணுவா பாருங்கோ. இதுக்கப்புறம் உங்க முன்கோபமும் போயிடும் பாருங்கோ.. இது தான் உங்களுக்குப் பாடம்"னு சொல்றார். கௌதமருக்குத் த்ருப்தியா இருக்கு.
விஸ்வகர்மா இன்னும் புலம்பிண்டிருக்கான். பிரம்மா அவன் கிட்டே போறார். "குழந்தே.. போனாப் போறது விடு. புத்திசாலிப் பெண்கள் கிட்டே நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும். இதான் உனக்குப் பாடம். இதே மாதிரி இன்னொண்ணு செஞ்சுக்கோ. விஷ்ணு கூட ஒண்ணு வேணும்னு ஆர்டர் கொடுக்கறதா சொன்னார்"னு ஏதோ சொல்லி அவனை சமாதானப் படுத்தறார். அவன் விசும்பிண்டே இருக்கான். பிரம்மா மேலும் சொல்றார். "மகனே விஸ்வகர்மா.. உனக்கு ஒரு வரம் தரேன். இந்த கல் ஒரு நாள் வெடிக்கும். கவலைப்படாதே. அதுக்குள்ளே இருக்கற ஸ்மரண யாத்ரை எந்த்ரம் வெளிவரும். இன்னொரு காதல் ஜோடியை சேர்த்து வைக்க உதவியா இருக்கும்"
"என்ன ஜோடி?"ங்கறான் விஸ்வகர்மா.
"அது ஒரு கதை. நடக்கபோற கதை. இப்ப சொல்ல முடியாது. அந்த ஜோடியை சேத்து வைக்க ஒருத்தர் கடல் தாண்ட வேண்டியிருக்கும், நெனச்ச நேரத்துல மூலிகை மலையைத் தேடிப் போக வேண்டியிருக்கும்.. அதுக்கெல்லாம் தோதுப்படும் இந்த எந்த்ரம். இந்த இடத்துக்கு அந்தக் கதையோட நாயகன் வந்ததும், இன்னொரு மகரிஷி அதை ரகஸ்யமா சொல்வார்"னு சொல்றார். தன்னோட எந்த்ரம் இன்னொரு காதல் ஜோடியைச் சேர்த்து வைக்கும்னு தெரிஞ்சுண்டு விஸ்வகர்மா அடங்கறான்.
"என்னை சித்தே தனியா இருக்க விடுங்கோ"ங்கறார் கௌதமர்.
இந்த்ரனும் அகல்யாவும் கை கோத்துண்டு கிளம்பிட்டா. பிரம்மாவும் ஐராவதத்துலே லிப்ட் கேட்டுண்டுக் கிளம்பிட்டார். "சீக்கிரம் கெளம்புங்கோ. கிழம் மனசை மாத்திக்கப் போறது"னு கிசுகிசுக்கறா ஸிந்து. விஸ்வகர்மாவும் கெளம்பறான். திரும்பத் திரும்பப் பாத்துண்டே போறான்.
மகோன்னதமான அவனோட எந்த்ரம் இருந்த இடத்துலே இப்போ ஒரு மகாப் பெரிய கல் இருக்கு.
    "இதான் நடந்த கதை"னு சொல்லிட்டு என்னைப் பார்த்தார் மாமா.
'ஆ!'னு வாயப் பொளந்துண்டிருந்தேன். ஆத்துக்காரியும் மாமியும் உள்ளே நன்னா தூங்கிண்டிருக்கா. கர்காரரவம் அதாவது குறட்டை சப்தம் திண்ணைல கேக்கறது. நடுஜாமத்துக்கு மேலே ஆயாச்சு. பக்கத்துல எங்கயோ சுவர்கோழி கத்தறது. ஆகாசத்துல நாலஞ்சு நட்சத்திரம் மினுக்கறது. ரொம்ப தூரத்துல தெருநாய் ஒண்ணு ஊளையிடறது. அதை விட்டா நிசப்தம்னா நிசப்தம்.
நேக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. "என்ன இப்படி.. ஒரேயடியா மாத்திட்டேளே? அகல்யாவை ஸ்மரணம் பண்ணினா பாவம் போகும்னில்லையா சொல்லியிருக்கு? எப்பேர்பட்ட பாவவிமோசன புண்யக் கதையை... ரஜினிகாந்த் சினிமா சயன்ஸ் பிக்சன் மாதிரி மாத்திட்டேளே?"னு கேட்டேன்.
"ஓய்! பாவபுண்யம் வினாசம் சம்ரக்ஷணம் எல்லாம் அவாவா இஷ்டத்துக்குக் கட்டினது ஓய். அகலிகையை தெனம் ஒரு தரம் நெனச்சுக்கோ பாவமெல்லாம் போயிடும்னு சொல்றது நமக்கே ஒருமாதிரியாப் படலியோ? அகலிகையை ஸ்மரணம் பண்ணிப் பாவம் போய்டும்னா தெனம் பாவம் பண்ணிண்டிருக்கலாம்னும் அர்த்தம் ஆறதே ஓய்? ஜனங்கள் கண்மூடிகளா இருக்கற வரைக்கும் இதையெல்லாம் நம்பிண்டிருப்பா"னு சொன்னார்.
நேக்கு விட்டுக் கொடுக்க மனசில்லை. "யுகக் கணக்கா ராமாயணம் பாராயணம் நடக்கறது. ராமபிரான் பாதம்பட்டு அகலிகை விமோசனம் அடைஞ்சதை பக்தியோடே லோகம் முழுக்கச் சொல்லிண்டிருக்கா. நீர் என்னமோ நேர்ல பார்த்த மாதிரியில்லே எந்த்ரம் மந்த்ரம்னு சொல்றீர்? யார் கண்மூடினு தெரியலியே?"னேன்.
"ஓய்! எல்லாம் தெரிஞ்சு தான் சொல்றேன். அனுமார் கடலைத் தாவினார் மலையைத் தாவினார்னு சொல்றேளே? அதெல்லாம் எப்படி நடந்ததுனு நெனக்கறேள்? ராம லக்ஷ்மணருக்கு அகல்யா கதையைச் சொன்ன விஸ்வாமித்ரர் ராமனைத் தனியா அழைச்சுண்டு போய் விவரமெல்லாம் சொன்னார். பையா ராமா.. இதையெல்லாம் ஞாபகம் வச்சுக்கோ. நாளைக்குத் தோதுப்படும்னு சொன்னார். ரகஸ்யத்தை ராமன் யாருக்கும் சொல்லலே. ஆஞ்சநேயருக்கு மட்டும் சொல்லிக் கொடுத்துடறான்.. ராம பட்டாபிஷேகம் முடிஞ்சதுக்கப்புறம், தன்னோட ரகஸ்யம் வேறே யாருக்கும் தெரியக் கூடாதுங்கறதுனால ஆஞ்சநேயர் எந்த்ரத்தை தலையை சுத்தி தூக்கி எறிஞ்சுட்டார்.."
விட்டா ராமாயணத்தையே மாத்திடுவார் போலத் தோணித்து. "நிறுத்தும் ஓய்!"னு கொஞ்சம் சத்தமா சொன்னேன். "சுவாரசியமா இருந்தாலும், நீர் சொல்றது எதுவுமே நம்பறதுக்கில்லே"னுட்டேன்.
சித்த யோசிச்சுட்டு, "எந்த்ரத்தைப் பாத்தா நம்புவீரோ?"னார் நாலு பக்கமும் பாத்துண்டே. "அனுமார் எறிஞ்ச எந்த்ரம் க்ருஷ்ணாபுரம் கோவில் பூமியில தான் விழுந்துது. இன்னும் அங்கயே தான் இருக்கு எந்த்ரம். வேணும்னா எங்கூட வாங்கோ. காட்டறேன்"னு சொன்னார். சட்னு எழுந்து போய் ஒரு டார்ச் லைட்டு எடுத்துண்டு வந்தார். "ஓய்.. வாரும் போலாம். விடிஞ்சா பஸ் பிடிச்சு ஊரைப்பார்க்கக் கெளமபிடுவீர். இனிமே இந்தப் பக்கம் வருவீரோ மாட்டீரோ.. இப்பவே போய்ப் பார்க்கலாம் வாரும். போய்ட்டு அரை மணியில திரும்பிடலாம். எங்கிட்டே சாவி இருக்கு"னார்.
என்னோட ரிஸ்ட்வாச்சிலே மணி ஒண்ணரை. "ஓய்! அர்த்தராத்ரி மணி ரெண்டாப்போறது.. இப்போ எதுக்கு?"னேன். வயத்துல புளியைக் கரைச்சு விட்டாப்ல இருக்கு. பேசாம இவர் சொன்னதை நம்பினதா சொல்லிடுவோமானு தோணித்து. இருந்தாலும் ஒரு விபரீத ஆசை. "சரி"ன்னுட்டேன்.
கோவிலுக்குப் பக்கத்துல தான் வீடுங்கறதாலே பத்து நிமிஷத்துக்கெல்லாம் கோவிலுக்குப் போயிட்டோம். வடக்கு வாசல்லே ஒரு சின்ன கதவு. இவர் பாட்டுக்குத் திறந்து உள்ளே போனார். என்னையும் வான்னார். பயந்துண்டே போனேன். வீரப்ப நாயக்க மண்டபத்தை தாண்டிப் போறச்சே யானைகளுக்கு உயிர் வந்தா மாதிரி தோணித்து. அவர் டாக்கு டாக்குனு நடக்கறார். இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திரும்பாமே நானும் அவர் பின்னாலே போனேன். புருஷமிருகம் தூண் கிட்டே வந்து நின்னார். நாலு பக்கமும் பார்த்தார். "ஈ காக்கா இல்லை ஓய்.. என்ன பாக்குறீர்?"னு சொன்னேன். சட்னு தரையில விழுந்து தூணும் தரையும் தொடற இடத்துலே தடவினார்.
தரை நகந்து கதவாட்டம் தொறக்கறது. பயத்துல நேக்கு மூச்சே நின்னுடும் போலருக்கு. இவரோ, "வாரும்"னுட்டு என்னை இழுக்கறார். கீழே இறங்கினேன். க்ருஷ்ணாபுரம் கோவில்லே சுரங்கம் இருக்குனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்பத்தான் மொதல் தடவையா பாக்கறேன். மாமா கதவைச் சாத்திட்டு என்னைக் கூட்டிண்டு நடக்கறார். டார்ச் லைட்டு வெளிச்சம் பயப்பிராந்தியை ஜாஸ்தி பண்ணித்தே ஒழிய குறைக்கலை. ஒரு நிமிஷமோ என்னமோ நடந்திருப்போம். "அதோ பாரும் ஓய்!"னு லைட் அடிச்சுக் காண்பிச்சார். சின்ன ஹோமகுண்டம் மாதிரி இருக்கு. சுத்திவர ஸ்படிகம் மாதிரி பளபளனு இருக்கு. "இதான் ஓய்.. ஸ்மரண யாத்ரை எந்த்ரம். சாக்ஷாத் விஸ்வகர்மா நிர்மாணம் பண்ணினது. அகல்யாவோட காதல் நிறைவேறவும் ராமாயணம் சுபமா முடியவும் காரணமானது"னு சொன்னார்.
"நேக்கு வேர்க்கறது ஓய்!"னேன். எதுக்கு சொன்னேன்னு தெரியலை. உளறினேன். அங்கேந்து போனாப் போறும்னு ஆயிடுத்து.
அவரோ விடமாட்டேங்கறார். "ஓய். இதுல இறங்கி ஏதாவது ரூபத்துல எங்கயாவது ஸ்மரண யாத்ரை பண்ணிட்டு வாரும். அப்பத்தான் நம்புவீர்"னு சொல்றார். "பயப்படாம இறங்கும்வே".
நேக்கு சப்தநாடியும் ஒடுங்கியாச்சு. "வேண்டாம் சுவாமி"னு அவரை கும்பிட்டேன். "உங்களை நம்பறேன். ஆத்துக்குப் போலாம் வாங்கோ"னு கெஞ்சினேன்.
"இல்லை ஓய். நீர் என்னை நம்பலைனு தெரியறது. சரி. நானே போய்க் காட்டறேன்"னு உள்ளே இறங்கினார். ரெண்டாவது நொடியிலே ஆளைக்காணோம்.
நடுக்கம்னா என்னன்னே அன்னிக்குத் தான் தெரிஞ்சுண்டேன். அர்த்த ராத்ரியிலே க்ருஷ்ணாபுரம் கோவில் சுரங்கத்துலே கூட இருந்த மனுஷரைக் காத்துலே பறி கொடுத்துட்டு.. நேக்கு எப்படி இருந்திருக்கும்னு நெனச்சுப் பாருங்கோ!
ரெண்டு நிமிஷம் கழிச்சு பிராமணர் குண்டத்துலேந்து ஏறி வந்தார். சர்வ சாதாரணமா "காஞ்சிபுரம் போய்ட்டு வந்தேன்"னார். அவர் கைல என்னவோ மினுக்கறது. என்னன்னு பாத்தா மூக்குத்தி மாதிரி இருக்கு. "வேணும்னா எடுத்துக்கும். ஞாபகார்த்தமா வச்சுக்கும் ஓய்!"னார். "வேண்டாம் சுவாமி. நேக்கு நம்பிக்கை வந்தாச்சு. கெளம்பலாம்"னேன். சிரிச்சுண்டே "சரி, வாரும்"னார்.
அன்னிக்கு ஆத்துக்கு வந்தும் தூக்கமே வரலை. ரெண்டு நாளைக்கு நடுக்கமே நிக்கலைனா பாத்துக்குங்கோ.
இதான் ஸ்மரண யாத்ரை ப்ரதாபம். கேட்ட அத்தனை பேருக்கும் நல்ல புத்தி கிடைக்கும். முன் கோபம் கொறையும். ஸ்த்ரீகள் மேலே மதிப்பு உண்டாகும். மழை பிடிக்கறதுக்கு முன்னாலே கெளம்புங்கோ. பொறுமையா கேட்டதுக்கு ரொம்ப சந்தோஷம். சித்தே இருங்கோ.. சிவகுமாரன் என்னமோ கேக்கறார்.
என்ன இப்படிக் கேட்டுட்டேள்? நான் பார்த்தது, "ஸ்மரண யாத்ரை எந்த்ரம்னு எப்படித் தெரியும்? மாமா எங்கயாவது சுரங்கத்துல ஒளிஞ்சுண்டிருக்கலாமே?"னு கேக்கறார். நன்னா நறுக்குனு கேட்டார். பாருங்கோ.. நான் அதுலே இறங்கிப் ப்ரயாணம் பண்ணினாலொழிய அனுபவபூர்வமா சொல்ல முடியாது தான். ஆனா, கண்ணால பார்த்ததோட நிக்காமே கொஞ்சம் தீர விசாரிச்சிருக்கேன். நம்பிக்கையா சொல்றேன், கேளுங்கோ.
கதையை ஆதியிலிருந்து கேட்டவாளுக்கு விருத்தாசலம் கோவில் பத்தி நியூஸ் ஐடம் சொன்னேனே ஞாபகமிருக்கோ? பக்கத்தாத்து மாமாவோட அநித்ய உத்யோகம் பத்தியும் அவா ஆத்துல சகல பாத்ரங்களும் வெள்ளினும் சொன்னேனே ஞாபகம் இருக்கோ? சாப்பாட்டுக்கு முந்தி மாமாவோட பேசிண்டிருக்கச்சே அவா குடும்பத்து போட்டோவையும், அவரோட அண்ணா தம்பி எல்லாருமே குருக்கள்னு குடும்ப விவரங்களைப் பேசினதையும் சொன்னேனே ஞாபகமிருக்கோ?
சித்தே பொறுமையா கேளுங்கோ. எல்லாத்துக்கும் முடிச்சு இருக்கு. விருத்தாசலம் குருக்கள் 'தான் ஊர்லயே இல்லை'னு கோர்ட்டுல சொன்னார்னு சொன்னேனில்லையா? பேப்பர்ல விருத்தாசலம் குருக்கள் போட்டோவைப் பாத்ததும் நேக்கே ரொம்ப ஷாக்காயிடுத்து. பாருங்கோ, மாமா காமிச்ச குடும்ப போட்டோவிலே அவரோட அண்ணா பாக்கறதுக்கு அசப்பிலே விருத்தாசலம் குருக்களாட்டமே இருந்தார். இப்போ எல்லாத்தையும் நீங்களே முடிச்சு போட்டுப் பாருங்கோ, புரியும்.
ஸ்மரண யாத்ரை சாத்யம். க்ருஷ்ணாபுரம் கோவில் சுரங்கத்துலே எந்த்ரம் இருக்கு. இது அசுவத்தாமன் வாக்கு. அசத்யம் இல்லாத வாக்கு. ப்ரசங்கம் சமாப்தம். போய்ட்டு வாங்கோ.
1 2 3 4 ◀◀ பூர்வத்துலே..
    "அந்தக் கமண்டலத்தை கீழே வைங்கோளேன்.. ரொம்ப நேரமா பிடிச்சிண்டிருக்கேள். கை வலிக்கப் போறது"ங்கறான் விஸ்வகர்மா. அவனோட பயம் அவனுக்கு.
"ஹ"ன்னார் கௌதமர்.
"என்னையும் மன்னிச்சிடுங்கோ"னு சாஷ்டாங்கமா கௌதமர் காலிலே விழுந்தா, தாழ்வார அகல்யா.
"அகல்யா மாதிரியே இருக்கே... நீ யாரா இருந்தாலும் தீர்க்கசுமங்கலியா இரும்மா"னுடறார் கௌதமர்.
இதான் சான்சுனுட்டு அவளும் எழுந்துண்டு, ""நான் ஸிந்து. இவரோட பார்யாள்"னுட்டு விஸ்வகர்மாவைக் காண்பிக்கிறா. "உங்க ஆசீர்வாதத்தை மறந்துடாதீங்கோ"னு கௌதமர் கிட்டே சொல்றா.
குழம்பிக் கிடந்த கௌதமருக்கு ஆத்திரமும் அவமானமும் சேர்ந்து இன்னும் பாடா படுத்தறது. விஸ்வகர்மாவையே பாத்துண்டிருக்கார்.
"பூலோகத்துல யாரோட ரூபத்தை எடுத்துக்கறதுன்னு நெனச்சப்போ... இருக்கறவாளிலே ஆதர்ச தம்பதிகளாப் பாத்து அவா ரூபத்தை எடுத்துக்கலாம்னு தோணித்து.. அப்படி யாராவது உண்டானு இவர் கிட்டே கேட்டேன்"னு சொல்றா ஸிந்து.
விஸ்வகர்மா சேந்துண்டான். "அதுக்கு நான் சொன்னேன்... அடி அசடே... நோக்குத் தெரியாதோ? கௌதம மகரிஷியையும் அகல்யாவையும் விட்டா ஆதர்ச தம்பதிகள், பூலோகமென்ன ஸப்த லோகத்லயும் கிடையாதே..?"
நன்னா ஐஸ் வைக்கறான். ஆமோதிக்கற மாதிரி ஸிந்து தலையை நாலு தடவை ஆட்டறா. மருமகள் தன்னைத்தான் கிண்டல் பண்றாளோனு பிரம்மாவுக்கு தோண்றது.. இருந்தாலும் கவனிச்சுக் கேக்கறார். விஸ்வகர்மா தொடர்ந்து சொல்றான். "மகரிஷி.. உங்களையும் அகல்யாவையும் பார்க்க ஸ்மரண யாத்ரை பண்ணி வந்தோம். குடிலுக்குள்ளே பாத்தா யாருமில்லே. அகல்யா கொட்டில்லே கோபூஜை பண்ணிண்டிருந்ததைப் பார்த்தோம். குடில் நிசப்தமா ஆளில்லாம இருந்துது. உங்க பாதம் பட்ட புண்ய பூமியா என்னனு தெரியலை, எங்களுக்கு உடனே உங்களை மாதிரி ரூபமெடுக்கணும்னு தோணித்து.."
"எல்லாம் உங்க மேலே இருந்த அதீத மரியாதையினாலே.. மன்னிச்சுடுங்கோ"னு முடிக்கறா ஸிந்து. "ஹிஹி"ங்கறான் விஸ்வகர்மா. மனசுக்குள்ளே அகல்யா சொல்லிக்கொடுத்த வசனம் எல்லாத்தையும் சரியாச் சொன்னோமான்னு கணக்கு போடறான். கௌதமர் கொஞ்சம் இறங்கின மாதிரித் தோண்றது அவனுக்கு.
'அவசரப்பட்டு சாபத்தை ஆரமிச்சுட்டோமே, முன்கோபத்தை காண்பிச்சுட்டோமே!'னு இருக்கு கௌதமருக்கு. முணுக் முணுக்னு கோவம் வந்தா இப்படித்தான். கண்மண் தெரியாமக் கோபம்னு சொல்வாளே, அது இது தான். என்ன பாக்கறோம் என்ன கேக்கறோம் என்ன செய்யறோம்னு யோசிக்காம, புரிஞ்சுக்காம கோபம் வந்துடுத்துன்னு வைங்கோ, அப்புறம் ரொம்ப சங்கடம் தான். 'கண்ணால் காண்பதும் பொய்'னு புலவர் சொல்லலியோ? 'அது கௌதமருக்கு எப்படிய்யா தெரிஞ்சிருக்கும்?'னு கேக்கறார் ஜிஎம்பி சார். வாஸ்தவம். விடுங்கோ.
முன்கோபத்தினாலே சகலத்தையும் கோட்டை விட்டுட்டோம்னு புரிஞ்சுண்ட கௌதமர், "ஸ்மரண யாத்ரை எந்த்ரமா? என்னய்யா கதை விடறே?"னு ஹீனமாக் கேக்கறார்.
"தோ பாருங்கோ"னுட்டு விஸ்வகர்மா அடுக்களையோரமா இருந்த குண்டத்தைக் காண்பிக்கறான். எடுத்துண்டு வரான். தப்பிச்சது யாரோட புண்யமோனு அவன் மனசு அடிச்சுக்கறது. சட்னு அதுல இறங்கி ஓடிப்போய்டலாமானு தோண்றது. ஆனா வித்வான் பாருங்கோ. வித்வான்களுக்கே உண்டான வித்யாகர்வம் அவனுக்கும் உண்டு. தன்னோட உன்னதமான எந்த்ரத்தை கதைனு சொல்றாரே கிழவர்னு நெனச்சுக்கறான். "கதையில்லை மகரிஷி. வாஸ்தவம்"னுட்டு குண்டத்துல இறங்கி வேறே வேறே ரூபத்துல குடில் முழுக்க ஸ்மரண யாத்ரை பண்ணிக் காட்டறான். அப்புறம் சுயரூபத்துக்கு வந்து, "உங்க பேர்ல இருந்த அலாதி பக்தியிலே.. ஒரு மோகத்துல அப்படி நடந்துண்டோம்.. மன்னிச்சுடுங்கோ"னு மறுபடி கெஞ்சறான். அவனுக்குத் தெரியும் சாபம் கொடுக்க கௌதமருக்குப் பவரில்லேனு.. இந்த்ரன் மேலே சாபம் கொடுக்க ஆரம்பிச்சாச்சே? சாப சக்தி எல்லாம் இன்னொத்தருக்கு நான்-ட்ரேன்ஸ்பரபில் இல்லியோ? அதனால கொஞ்சம் மூச்சு வந்தாலும், எதுக்கும் இருக்கட்டுமேனு மன்னிப்பு மேலே மன்னிப்பா கேட்டு வைக்கறான். விட்டா போறும்னு இருக்கு அவனுக்கு உள்ளுக்குள்ளே. அகல்யா முன்னாடி இந்த்ரன் வேஷம் போட்டதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு நெனச்சுக்கறான்.
அசல் அகலிகை கௌதமர் காலில் விழறா. "முனி ஸ்ரேஷ்டரே. உங்க தவபலனைக் கட்டுப்படுத்தறதுக்கு என்னை பிரம்மா இங்கே அனுப்பிச்சார். இங்கே வரதுக்கு முன்னாலயே இந்த்ரன் மேலே எனக்குத் தீராத காதல். உங்க நிழல்லே இருக்குற வரைக்கும் உங்க தர்மத்துக்கும் மானத்துக்கும் புறம்பா நான் ஒரு நாளும் நடக்கலே. உங்க தபோபலனை கட்டுப்படுத்துற நேரம் வந்தாச்சுங்கறதினாலே இப்போ இதெல்லாம் நடக்கறது. இனிமே நான் உங்க பத்னியா மனுஷ்ய ரூபத்துலே இருக்க முடியாது. எனக்கு தேவரூபத்துல என் வழியில போறதுக்கு அனுமதி குடுங்கோ"னு கேக்கறா.
பிரம்மாவும் "இதுக்கெல்லாம் காரணம் நான்தான். உங்களோட முன் கோபத்தைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். உங்க தபோபலன் அதீதமாகி எங்கே இந்த்ரபதவிக்குப் பங்கம் வந்துடுமோனு முன் ஜாக்ரதையா நடந்துக்க வேண்டியதா போச்சு. அதனால அகல்யாவை உண்டாக்கி... இதெல்லாம் என்னோட நாடகம்னாலும் இது என் தொழில் தர்மம். மன்னிச்சுருங்கோ"னு சொல்றார்.
கௌதமருக்கு நன்னா ஏமாந்துட்டோம்னு கடுப்பா இருக்கு. "இந்த எந்த்ரத்தை வச்சுத்தானே நீங்களெல்லாம் என்னை ஏமாத்தினேள்? இனிமே இந்த எந்த்ரம் தேவாளுக்குப் பயன்படாம போகட்டும்"னு சொல்லிடறார். அகல்யை தேவலோகத்துக்குப் போறதைப் பத்தியெல்லாம் அவர் கவலைப்படலே. முன்கோபத்துலே எல்லாத்தையும் இழந்துட்டோமேனு மட்டுமே அவருக்கு வருத்தம். 'சே!'னு ஆயிடுத்து. "இருந்தாலும் இந்த சாபத்தை நான் கொடுத்தே ஆகணும்.. இப்ப என்ன பண்றது?"னு கேக்கறார் பிரம்மா கிட்டே.
"நீங்க இந்த்ரனை கர்த்தாவாக்கி சாபம் கொடுக்க ஆரம்பிச்சதுனாலே, இந்த்ரன் தான் இதுக்கு ஒரு முடிவு சொல்லணும். அவனுக்குத் தான் சாபவலயத்துக்கு உரிமையிருக்கு"னு சொல்றார் பிரம்மா. இந்த்ரனைப் பார்த்து சாபவலய, அதாவது சாபத்தை திசை திருப்ப, யோசனை உண்டானு கேக்கறார்.
இந்த்ரனுக்கு உள்ளுக்குள்ள ஒரு சின்ன பயம் இருந்ததை இப்போ சொல்லியே ஆகணும். விஸ்வகர்மா மாதிரி ஆட்கள் சட்னு தன்னைப் போல வேஷம் போட்டு எல்லாரையும் ஏமாத்த முடியறதுன்னா, இந்த எந்த்ரத்துனாலே ஆபத்து வரத்தான் செய்யும்னு நெனச்சுக்கறான். இதல்லவோ வெபன் ஆப் மாஸ் டிஸ்ட்ரக்ஷன்னுட்டு ஒரு காரியம் பண்ணினான். பொதுவாவே வெபன் ஆப் மாஸ்டிஸ்ட்ரக்ஷன்னு சொல்றவா எல்லாருமே அவசரப்படறா.. அரைலூசா இருக்கா.. ஏன்னு தெரியலே. பாருங்கோ, அமெரிகாவிலே புஷ்ஷு பண்ணின கார்யம்.. சும்மாவானும் ஈராக்கோட ஒரு யுத்தத்தை உண்டுபண்ணி.. தேவையா சொல்லுங்கோ. நம்ம ஊர் கூடங்குளக் கதையாட்டம். பிரச்னை என்னனு நன்னா தெரிஞ்சுண்டு அதுக்கேத்த மாதிரி ஒரு உபாயத்தை.. சித்தியை செஞ்சு முடிக்க வேண்டாமோ? கூடங்குளத்தை இழுத்து மூடுனு சொல்றது கண்மூடித்தனம் இல்லையோ? இந்த்ரனுக்கும் அந்த மாதிரி ஒரு மைன்ட்லெஸ் இன்செக்யூரிடினு வைங்கோ. எந்த்ரத்தையே ஒழிச்சுடணும்னு நெனச்சான்.
கௌதமர் கிட்டே, "மகரிஷி.. உங்க சாபசக்தியை இந்த எந்த்ரத்து மேலே காண்பிச்சுடுங்கோ"னு சொல்லிடறான். கௌதமரும் எத்தனை நாழி கமண்டலத்தைக் கையிலயே பிடிச்சுண்டிருப்பார்? சரியாப் போச்சுனுட்டு சாபசக்தியை இந்த்ரன் கிட்டேயிருந்து திசை திருப்பி எந்த்ரத்து மேலே காண்பிச்சார். கமண்டலத்துலேந்து நாலு சொட்டு தண்ணியைத் தெளிச்சு "கல்லாப் போ!"னு சாபம் கொடுத்தார்.
சாபசக்தியை உள்வாங்கின எந்த்ரம் உருமாறிடுத்து. எந்திரம் இருந்த இடத்துலே குட்டியானை சைசுலே இப்போ ஒரு பெரிய பாறாங்கல் இருக்கு. விஸ்வகர்மாவுக்கு அழுகை தாங்கலை. தன்னோட மாஸ்டர்பீஸ் வேஸ்டாயிடுத்தேனுட்டு வேதனை. எப்பேற்பட்ட எந்திரம் இப்படி காதலுக்காக அடிபட்டு உருத்தெரியாமப் போயிடுத்தேனு புலம்பறான்.
கௌதமருக்கே பாவமாயிடுத்து. என்ன பண்றதுன்னு தெரியலை. "பிற்காலத்துலே ஜனங்கள் எல்லாம் என்னை முட்டாள்னு சொல்வாளே?"னு அவரும் புலம்ப ஆரம்பிச்சார்,
அப்போ பிரம்மா சொல்றார். இங்லிஷ்லே ஸ்பின் டாக்டர்ம்பா பிரம்மா மாதிரி ஆட்களை. ஏதாவது சேதி கட்டி ஏமாத்தற வித்தை தெரிஞ்சவா. "மகரிஷி. ஜனங்களைப் பத்திக் கொஞ்சம் கூட கவலைப்படாதீங்கோ. நாம அதுக்கு ஏதாவது கதை கட்டி விடுவோம். பாருங்கோ, அகலிகை தான் இந்தக் கல்லா மாறினாள்னு சொல்லிக் கதைகட்டி விடுவோம். முட்டாள் ஜனங்க தானே.. எல்லாம் கண்மூடிகள்.. எதைச் சொன்னாலும் நம்பிடுவா.. பாருங்கோ இதுக்காக ஒரு விரதம் ஒரு பூஜைனு வேறே பண்ணுவா பாருங்கோ. இதுக்கப்புறம் உங்க முன்கோபமும் போயிடும் பாருங்கோ.. இது தான் உங்களுக்குப் பாடம்"னு சொல்றார். கௌதமருக்குத் த்ருப்தியா இருக்கு.
விஸ்வகர்மா இன்னும் புலம்பிண்டிருக்கான். பிரம்மா அவன் கிட்டே போறார். "குழந்தே.. போனாப் போறது விடு. புத்திசாலிப் பெண்கள் கிட்டே நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும். இதான் உனக்குப் பாடம். இதே மாதிரி இன்னொண்ணு செஞ்சுக்கோ. விஷ்ணு கூட ஒண்ணு வேணும்னு ஆர்டர் கொடுக்கறதா சொன்னார்"னு ஏதோ சொல்லி அவனை சமாதானப் படுத்தறார். அவன் விசும்பிண்டே இருக்கான். பிரம்மா மேலும் சொல்றார். "மகனே விஸ்வகர்மா.. உனக்கு ஒரு வரம் தரேன். இந்த கல் ஒரு நாள் வெடிக்கும். கவலைப்படாதே. அதுக்குள்ளே இருக்கற ஸ்மரண யாத்ரை எந்த்ரம் வெளிவரும். இன்னொரு காதல் ஜோடியை சேர்த்து வைக்க உதவியா இருக்கும்"
"என்ன ஜோடி?"ங்கறான் விஸ்வகர்மா.
"அது ஒரு கதை. நடக்கபோற கதை. இப்ப சொல்ல முடியாது. அந்த ஜோடியை சேத்து வைக்க ஒருத்தர் கடல் தாண்ட வேண்டியிருக்கும், நெனச்ச நேரத்துல மூலிகை மலையைத் தேடிப் போக வேண்டியிருக்கும்.. அதுக்கெல்லாம் தோதுப்படும் இந்த எந்த்ரம். இந்த இடத்துக்கு அந்தக் கதையோட நாயகன் வந்ததும், இன்னொரு மகரிஷி அதை ரகஸ்யமா சொல்வார்"னு சொல்றார். தன்னோட எந்த்ரம் இன்னொரு காதல் ஜோடியைச் சேர்த்து வைக்கும்னு தெரிஞ்சுண்டு விஸ்வகர்மா அடங்கறான்.
"என்னை சித்தே தனியா இருக்க விடுங்கோ"ங்கறார் கௌதமர்.
இந்த்ரனும் அகல்யாவும் கை கோத்துண்டு கிளம்பிட்டா. பிரம்மாவும் ஐராவதத்துலே லிப்ட் கேட்டுண்டுக் கிளம்பிட்டார். "சீக்கிரம் கெளம்புங்கோ. கிழம் மனசை மாத்திக்கப் போறது"னு கிசுகிசுக்கறா ஸிந்து. விஸ்வகர்மாவும் கெளம்பறான். திரும்பத் திரும்பப் பாத்துண்டே போறான்.
மகோன்னதமான அவனோட எந்த்ரம் இருந்த இடத்துலே இப்போ ஒரு மகாப் பெரிய கல் இருக்கு.
    "இதான் நடந்த கதை"னு சொல்லிட்டு என்னைப் பார்த்தார் மாமா.
'ஆ!'னு வாயப் பொளந்துண்டிருந்தேன். ஆத்துக்காரியும் மாமியும் உள்ளே நன்னா தூங்கிண்டிருக்கா. கர்காரரவம் அதாவது குறட்டை சப்தம் திண்ணைல கேக்கறது. நடுஜாமத்துக்கு மேலே ஆயாச்சு. பக்கத்துல எங்கயோ சுவர்கோழி கத்தறது. ஆகாசத்துல நாலஞ்சு நட்சத்திரம் மினுக்கறது. ரொம்ப தூரத்துல தெருநாய் ஒண்ணு ஊளையிடறது. அதை விட்டா நிசப்தம்னா நிசப்தம்.
நேக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. "என்ன இப்படி.. ஒரேயடியா மாத்திட்டேளே? அகல்யாவை ஸ்மரணம் பண்ணினா பாவம் போகும்னில்லையா சொல்லியிருக்கு? எப்பேர்பட்ட பாவவிமோசன புண்யக் கதையை... ரஜினிகாந்த் சினிமா சயன்ஸ் பிக்சன் மாதிரி மாத்திட்டேளே?"னு கேட்டேன்.
"ஓய்! பாவபுண்யம் வினாசம் சம்ரக்ஷணம் எல்லாம் அவாவா இஷ்டத்துக்குக் கட்டினது ஓய். அகலிகையை தெனம் ஒரு தரம் நெனச்சுக்கோ பாவமெல்லாம் போயிடும்னு சொல்றது நமக்கே ஒருமாதிரியாப் படலியோ? அகலிகையை ஸ்மரணம் பண்ணிப் பாவம் போய்டும்னா தெனம் பாவம் பண்ணிண்டிருக்கலாம்னும் அர்த்தம் ஆறதே ஓய்? ஜனங்கள் கண்மூடிகளா இருக்கற வரைக்கும் இதையெல்லாம் நம்பிண்டிருப்பா"னு சொன்னார்.
நேக்கு விட்டுக் கொடுக்க மனசில்லை. "யுகக் கணக்கா ராமாயணம் பாராயணம் நடக்கறது. ராமபிரான் பாதம்பட்டு அகலிகை விமோசனம் அடைஞ்சதை பக்தியோடே லோகம் முழுக்கச் சொல்லிண்டிருக்கா. நீர் என்னமோ நேர்ல பார்த்த மாதிரியில்லே எந்த்ரம் மந்த்ரம்னு சொல்றீர்? யார் கண்மூடினு தெரியலியே?"னேன்.
"ஓய்! எல்லாம் தெரிஞ்சு தான் சொல்றேன். அனுமார் கடலைத் தாவினார் மலையைத் தாவினார்னு சொல்றேளே? அதெல்லாம் எப்படி நடந்ததுனு நெனக்கறேள்? ராம லக்ஷ்மணருக்கு அகல்யா கதையைச் சொன்ன விஸ்வாமித்ரர் ராமனைத் தனியா அழைச்சுண்டு போய் விவரமெல்லாம் சொன்னார். பையா ராமா.. இதையெல்லாம் ஞாபகம் வச்சுக்கோ. நாளைக்குத் தோதுப்படும்னு சொன்னார். ரகஸ்யத்தை ராமன் யாருக்கும் சொல்லலே. ஆஞ்சநேயருக்கு மட்டும் சொல்லிக் கொடுத்துடறான்.. ராம பட்டாபிஷேகம் முடிஞ்சதுக்கப்புறம், தன்னோட ரகஸ்யம் வேறே யாருக்கும் தெரியக் கூடாதுங்கறதுனால ஆஞ்சநேயர் எந்த்ரத்தை தலையை சுத்தி தூக்கி எறிஞ்சுட்டார்.."
விட்டா ராமாயணத்தையே மாத்திடுவார் போலத் தோணித்து. "நிறுத்தும் ஓய்!"னு கொஞ்சம் சத்தமா சொன்னேன். "சுவாரசியமா இருந்தாலும், நீர் சொல்றது எதுவுமே நம்பறதுக்கில்லே"னுட்டேன்.
சித்த யோசிச்சுட்டு, "எந்த்ரத்தைப் பாத்தா நம்புவீரோ?"னார் நாலு பக்கமும் பாத்துண்டே. "அனுமார் எறிஞ்ச எந்த்ரம் க்ருஷ்ணாபுரம் கோவில் பூமியில தான் விழுந்துது. இன்னும் அங்கயே தான் இருக்கு எந்த்ரம். வேணும்னா எங்கூட வாங்கோ. காட்டறேன்"னு சொன்னார். சட்னு எழுந்து போய் ஒரு டார்ச் லைட்டு எடுத்துண்டு வந்தார். "ஓய்.. வாரும் போலாம். விடிஞ்சா பஸ் பிடிச்சு ஊரைப்பார்க்கக் கெளமபிடுவீர். இனிமே இந்தப் பக்கம் வருவீரோ மாட்டீரோ.. இப்பவே போய்ப் பார்க்கலாம் வாரும். போய்ட்டு அரை மணியில திரும்பிடலாம். எங்கிட்டே சாவி இருக்கு"னார்.
என்னோட ரிஸ்ட்வாச்சிலே மணி ஒண்ணரை. "ஓய்! அர்த்தராத்ரி மணி ரெண்டாப்போறது.. இப்போ எதுக்கு?"னேன். வயத்துல புளியைக் கரைச்சு விட்டாப்ல இருக்கு. பேசாம இவர் சொன்னதை நம்பினதா சொல்லிடுவோமானு தோணித்து. இருந்தாலும் ஒரு விபரீத ஆசை. "சரி"ன்னுட்டேன்.
கோவிலுக்குப் பக்கத்துல தான் வீடுங்கறதாலே பத்து நிமிஷத்துக்கெல்லாம் கோவிலுக்குப் போயிட்டோம். வடக்கு வாசல்லே ஒரு சின்ன கதவு. இவர் பாட்டுக்குத் திறந்து உள்ளே போனார். என்னையும் வான்னார். பயந்துண்டே போனேன். வீரப்ப நாயக்க மண்டபத்தை தாண்டிப் போறச்சே யானைகளுக்கு உயிர் வந்தா மாதிரி தோணித்து. அவர் டாக்கு டாக்குனு நடக்கறார். இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திரும்பாமே நானும் அவர் பின்னாலே போனேன். புருஷமிருகம் தூண் கிட்டே வந்து நின்னார். நாலு பக்கமும் பார்த்தார். "ஈ காக்கா இல்லை ஓய்.. என்ன பாக்குறீர்?"னு சொன்னேன். சட்னு தரையில விழுந்து தூணும் தரையும் தொடற இடத்துலே தடவினார்.
தரை நகந்து கதவாட்டம் தொறக்கறது. பயத்துல நேக்கு மூச்சே நின்னுடும் போலருக்கு. இவரோ, "வாரும்"னுட்டு என்னை இழுக்கறார். கீழே இறங்கினேன். க்ருஷ்ணாபுரம் கோவில்லே சுரங்கம் இருக்குனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்பத்தான் மொதல் தடவையா பாக்கறேன். மாமா கதவைச் சாத்திட்டு என்னைக் கூட்டிண்டு நடக்கறார். டார்ச் லைட்டு வெளிச்சம் பயப்பிராந்தியை ஜாஸ்தி பண்ணித்தே ஒழிய குறைக்கலை. ஒரு நிமிஷமோ என்னமோ நடந்திருப்போம். "அதோ பாரும் ஓய்!"னு லைட் அடிச்சுக் காண்பிச்சார். சின்ன ஹோமகுண்டம் மாதிரி இருக்கு. சுத்திவர ஸ்படிகம் மாதிரி பளபளனு இருக்கு. "இதான் ஓய்.. ஸ்மரண யாத்ரை எந்த்ரம். சாக்ஷாத் விஸ்வகர்மா நிர்மாணம் பண்ணினது. அகல்யாவோட காதல் நிறைவேறவும் ராமாயணம் சுபமா முடியவும் காரணமானது"னு சொன்னார்.
"நேக்கு வேர்க்கறது ஓய்!"னேன். எதுக்கு சொன்னேன்னு தெரியலை. உளறினேன். அங்கேந்து போனாப் போறும்னு ஆயிடுத்து.
அவரோ விடமாட்டேங்கறார். "ஓய். இதுல இறங்கி ஏதாவது ரூபத்துல எங்கயாவது ஸ்மரண யாத்ரை பண்ணிட்டு வாரும். அப்பத்தான் நம்புவீர்"னு சொல்றார். "பயப்படாம இறங்கும்வே".
நேக்கு சப்தநாடியும் ஒடுங்கியாச்சு. "வேண்டாம் சுவாமி"னு அவரை கும்பிட்டேன். "உங்களை நம்பறேன். ஆத்துக்குப் போலாம் வாங்கோ"னு கெஞ்சினேன்.
"இல்லை ஓய். நீர் என்னை நம்பலைனு தெரியறது. சரி. நானே போய்க் காட்டறேன்"னு உள்ளே இறங்கினார். ரெண்டாவது நொடியிலே ஆளைக்காணோம்.
நடுக்கம்னா என்னன்னே அன்னிக்குத் தான் தெரிஞ்சுண்டேன். அர்த்த ராத்ரியிலே க்ருஷ்ணாபுரம் கோவில் சுரங்கத்துலே கூட இருந்த மனுஷரைக் காத்துலே பறி கொடுத்துட்டு.. நேக்கு எப்படி இருந்திருக்கும்னு நெனச்சுப் பாருங்கோ!
ரெண்டு நிமிஷம் கழிச்சு பிராமணர் குண்டத்துலேந்து ஏறி வந்தார். சர்வ சாதாரணமா "காஞ்சிபுரம் போய்ட்டு வந்தேன்"னார். அவர் கைல என்னவோ மினுக்கறது. என்னன்னு பாத்தா மூக்குத்தி மாதிரி இருக்கு. "வேணும்னா எடுத்துக்கும். ஞாபகார்த்தமா வச்சுக்கும் ஓய்!"னார். "வேண்டாம் சுவாமி. நேக்கு நம்பிக்கை வந்தாச்சு. கெளம்பலாம்"னேன். சிரிச்சுண்டே "சரி, வாரும்"னார்.
அன்னிக்கு ஆத்துக்கு வந்தும் தூக்கமே வரலை. ரெண்டு நாளைக்கு நடுக்கமே நிக்கலைனா பாத்துக்குங்கோ.
இதான் ஸ்மரண யாத்ரை ப்ரதாபம். கேட்ட அத்தனை பேருக்கும் நல்ல புத்தி கிடைக்கும். முன் கோபம் கொறையும். ஸ்த்ரீகள் மேலே மதிப்பு உண்டாகும். மழை பிடிக்கறதுக்கு முன்னாலே கெளம்புங்கோ. பொறுமையா கேட்டதுக்கு ரொம்ப சந்தோஷம். சித்தே இருங்கோ.. சிவகுமாரன் என்னமோ கேக்கறார்.
என்ன இப்படிக் கேட்டுட்டேள்? நான் பார்த்தது, "ஸ்மரண யாத்ரை எந்த்ரம்னு எப்படித் தெரியும்? மாமா எங்கயாவது சுரங்கத்துல ஒளிஞ்சுண்டிருக்கலாமே?"னு கேக்கறார். நன்னா நறுக்குனு கேட்டார். பாருங்கோ.. நான் அதுலே இறங்கிப் ப்ரயாணம் பண்ணினாலொழிய அனுபவபூர்வமா சொல்ல முடியாது தான். ஆனா, கண்ணால பார்த்ததோட நிக்காமே கொஞ்சம் தீர விசாரிச்சிருக்கேன். நம்பிக்கையா சொல்றேன், கேளுங்கோ.
கதையை ஆதியிலிருந்து கேட்டவாளுக்கு விருத்தாசலம் கோவில் பத்தி நியூஸ் ஐடம் சொன்னேனே ஞாபகமிருக்கோ? பக்கத்தாத்து மாமாவோட அநித்ய உத்யோகம் பத்தியும் அவா ஆத்துல சகல பாத்ரங்களும் வெள்ளினும் சொன்னேனே ஞாபகம் இருக்கோ? சாப்பாட்டுக்கு முந்தி மாமாவோட பேசிண்டிருக்கச்சே அவா குடும்பத்து போட்டோவையும், அவரோட அண்ணா தம்பி எல்லாருமே குருக்கள்னு குடும்ப விவரங்களைப் பேசினதையும் சொன்னேனே ஞாபகமிருக்கோ?
சித்தே பொறுமையா கேளுங்கோ. எல்லாத்துக்கும் முடிச்சு இருக்கு. விருத்தாசலம் குருக்கள் 'தான் ஊர்லயே இல்லை'னு கோர்ட்டுல சொன்னார்னு சொன்னேனில்லையா? பேப்பர்ல விருத்தாசலம் குருக்கள் போட்டோவைப் பாத்ததும் நேக்கே ரொம்ப ஷாக்காயிடுத்து. பாருங்கோ, மாமா காமிச்ச குடும்ப போட்டோவிலே அவரோட அண்ணா பாக்கறதுக்கு அசப்பிலே விருத்தாசலம் குருக்களாட்டமே இருந்தார். இப்போ எல்லாத்தையும் நீங்களே முடிச்சு போட்டுப் பாருங்கோ, புரியும்.
ஸ்மரண யாத்ரை சாத்யம். க்ருஷ்ணாபுரம் கோவில் சுரங்கத்துலே எந்த்ரம் இருக்கு. இது அசுவத்தாமன் வாக்கு. அசத்யம் இல்லாத வாக்கு. ப்ரசங்கம் சமாப்தம். போய்ட்டு வாங்கோ.
2011/12/28
ஸ்மரண யாத்ரை
(பெரிய) சிறுகதை
1 2 3 ◀◀ பூர்வத்துலே..
    பொதுவாவே தபஸ்விகள் எல்லாரும் ரொம்பவே நிதானத்தை அனுஷ்டிக்கறவா. மெதுக்குன்னோ சோம்பேறின்னோ சொல்லலாம், ஆனா பாருங்கோ நிதானம்ங்கறது காயிருப்பக் கனி கவர்ந்த மாதிரியோன்னோ, அதனாலே அப்டியே வச்சுப்போம்.
கௌதமர் பொதுவா நிதானமானப் பேர்வழினு சொல்லலாம். கார்த்தாலே நித்யகர்மாக்களைப் பண்ணி முடிக்கணும்னு நெனச்சுண்டு எழுந்துண்டவர், சித்தே நிதானமா இருக்கார். நமக்கெல்லாம் இந்த நாளிலே கண் முழிச்ச பத்து நிமிஷத்துக்குள்ளே காபி உள்ளே இறங்கலைன்னா எல்லாமே துவேஷமாயிடறது இல்லியோ? அதுவும் நல்ல டிகிரிக் காபியா வேண்டியிருக்கு நாக்குக்கு. செலபேர் காபி போடறேன்னுட்டு எதையோ போட்டுக் கொடுக்கறா. குத்தமில்லை. ஆனா, அந்த நாள்ல காபியாவது கீபியாவது? கிடையாதுன்னாலும், காச்சின பசும்பாலிலே மொத நாள் பொடிச்சு வச்ச சுக்கைக் கொஞ்சம் கலந்து உள்ளே தள்ளினாத்தான் அவாளுக்கும் இஞ்சின் ஓடித்து. அப்புறந்தான் மத்த ஆஜார அனுஷ்டானங்களோட நெனப்பே வந்துதாக்கும்.
ஒரு வகை ஆஜாரம் அகல்யைக்கு அப்புறந்தான் லோக அப்யாசத்துக்கு வந்துதுனு சொல்லுவா. அதாவது, ஸ்த்ரீகளுக்கு மாசா மாசம் ருது உண்டாறதும் தூரம் தீட்டு பாக்கறதும் அவாள்ளாம் இந்த்ரனோட பாவத்தை சுமக்கறதுனால வந்ததுனு, அகல்யை கதையை வச்சுப் புராணத்துல வந்ததா சொல்றா. அதெல்லாம் பொய்யாக்கும். இட்டுக்கட்டாக்கும். நம்ம பாவத்தை சுமக்கறதுக்கே நமக்கு ஒழியலை, இதுல இன்னொருத்தர் பாவத்தை வேறே சுமக்கணுமா? அக்ரமம் பாருங்கோ. தாய்மைங்கற ஒசந்த ஸ்தானத்தை, தெய்வங்களுக்கு மேலான ஸ்தானத்தை, ஸ்த்ரீகள் அடையறதுக்கு சாத்யமான இயற்கையான ஒரு அனுலோம கார்யத்தை, இந்த்ரனோட பாவம்னு சொல்றது அழிச்சாட்டியமில்லையோ? 'நாதியில்லாத பொம்னாட்டிகள் தானே, வாயை மூடிண்டிருப்பா'னு ஒரு குபுத்திலே சொன்னதாக்கும். அத்தனையும் வ்யாகுதி. புராணப் புருஷாளோடத் திமிராக்கும். அத்தனை லோகாதய சுகத்தையும் அதர்மத்தையும் அனுசரிச்சுட்டு, கடைசியிலே 'பெண் என்னும் மாயப் பேய்'னு அவாளைப் போட்டு மிதிச்சு த்வம்சம் பண்றது, அத்தனைப் புராணப் பண்டிதாளுக்கும் தொழிலா இருந்துது. கடவுளை கும்பிடறேன் பேர்வழின்னு வாய்ல வந்தபடி ஸ்த்ரீகளை பங்கப்படுத்தியிருக்கா. ஐயா.. உமக்கு கடவுள் ஞானம் வந்துதா? பலே, கும்பிட்டுக்கோ! வேண்டாங்கலே. என்னவோ பண்ணிக்கோ. ஏன் ஸ்த்ரீகளைப் போட்டு சாக்கடை சல்லடைனும் பிணினும் கன்னாபின்னானு சொல்லணும்? 'ஸ்த்ரீகள் கிட்டேயிருந்து என்னைக் காப்பாத்தினேடா சிவனே! வைகுந்தா!'னு இஷ்டத்துக்கு பாடுவானேன்? 'ஸ்த்ரீகள்டேயிருந்து என்னைக் காப்பாத்தினியே, மகாலக்ஷ்மி! பராசக்தி!'னு யாராவது பாடியிருக்காளா தெரியலை. கண்ணைக் குத்தியிருப்பா.
தான் என்கிற அகந்தையிலே புருஷ வம்சாவளி, என்னையும் சேத்து சொல்றேன், ஆயிரம் கோடி வர்ஷமா ஸ்த்ரீகளுக்கு மனசாலும் வாக்காலும் கார்யத்தாலும் செஞ்ச அபகாரங்களுக்கு இந்த அசுவத்தாமன் மன்னிப்பு கேட்டுக்கறேன். நல்ல வேளையா ஒரே ஒரு புலவராவது 'எங்கெங்கு காணினும் சக்தியடா'னு பாடினாரேனு த்ருப்தியா நெனச்சுக்கறேன். ஸ்த்ரீகளோட அசாத்ய சக்தியினாலே தான் அனித்யமான இந்த லோகவாழ்க்கைல நாங்கள்ளாம் ஏதோ ஒப்பேத்திட்டுப் போயிண்டிருக்கோம். இதை நான் ரொம்ப நன்றியோட சொல்றேனாக்கும். புருஷாளை மன்னிச்சுடுங்கோனு தண்டமா கேட்டுக்கறேன். நரகம்ங்கறது ஆம்ப்ளேளுக்கு மட்டும் தானாக்கும். கவலையே படாதீங்கோ. ஸ்த்ரீயாப் பொறந்தாலே அது ஸ்வர்க்கத்துக்கு ஒன் வே டிக்கட் வாங்கின மாதிரியாக்கும்.
என்னமோ சொல்ல வந்து எங்கயோ போயிட்டேன் பாருங்கோ. சித்தே இருங்கோ. ம்ம்ம்.. இந்தப் பொடிப் பழக்கத்தை விடமுடியலை.
அகல்யா உள்ளே வரதைப் பாத்துண்டிருந்த கௌதமர், "ஏது இவ்வளவு நேரமாச்சு உனக்கு?"னு கேட்டார். "இங்கே நான் எழுந்து எத்தனை நாழியாக் காத்துண்டிருக்கேன்?"
"என்னம்மா, நல்லாத் தூங்கினியா?"னு கேக்கலை. "காலங்கார்த்தாலே பச்சைத்தண்ணிலே ஸ்நானம் பண்ணிட்டு வந்திருக்கே. குளிர் ஜூரம் வந்துடப்போறது. சீக்கிரமா தலையைத் துவட்டிக்கோ. நான் வேணும்னா சாம்ப்ராணி புகைச்சுக் குடுக்கட்டுமா?"னு கேக்கலை. "சிரமபரிகாரம் ஏதாவது பண்ணிண்டியா?"னு கேக்கலை. "இத்தனை நாழியாக் காத்துண்டிருக்கேனே, தெரிய வேண்டாம்?"னு கேட்டார்.
கௌதமரைப் பிரமாதமா குத்தம் ஒண்ணும் சொல்லலை. புருஷாள் நாங்க எல்லாருமே அப்படித்தான். அம்மாவாகட்டும் அக்காவாகட்டும் ஆம்படையாளாகட்டும், அவா சிரமத்துல படுத்துண்டிருந்தாலும் சரி, "என்னை மொதல்ல கவனி.. என்னை மொதல்ல கவனி.. என்னை மொதல்ல கவனி.." இதைத்தான் பரம்பரை பரம்பரையா கௌதமர் காலத்லேந்து சொல்லிண்டிருக்கோம்னா பாருங்கோ. டிஎன்ஏலனா கலந்துடுத்து? லேசுல மாறுமோ? நாமதான் அப்படி.. ஸ்த்ரீகளாவது மாறுவாள்னா அங்கயும் டிங்கிரியானா இருக்கு? எல்லாத்தையும் பொறுத்துண்டு.. கோவில் மாடு மாதிரி தலையை தலையை ஆட்டிண்டு.. தன் மதிப்பைத் தானே கெடுத்துண்டு.. கண்றாவி போங்கோ.
"இதோ ஆச்சு.. மன்னிச்சுருங்கோ"னுட்டு உள்ளே ஓடறா அகல்யா. அவசரமா ஒரு விளக்கேத்திட்டு, கறந்து வச்சப் பாலைக் காய்ச்சரா. காஞ்ச சுக்கை ஒரு கை எடுத்து நன்னா பொடி பண்றா. அதை அப்படியே பாலில் கலக்கறா. பாலும் சுக்கும் சேந்து காயற வாசனை மூக்கைத் தொளைக்கறது. காயட்டும்னுட்டு அங்கேந்து நகந்து அன்னைய ஔபாசனத்துக்கு வேண்டிய சமித்து, பஞ்சபாத்திரம், சந்தனம், குங்குமம், மஞ்சளரிசி எல்லாம் எடுத்து வைக்கறா. அகல்யா குடுகுனு வேலை செய்றதைப் பாத்துட்டு ஒக்காந்துண்டிருந்த கௌதமர் கேட்டார். "என்ன நீ.. ரொம்ப உத்சாகமா இருக்கியே?"னுட்டு.
சில குடும்பத்துல பாத்திருக்கேன். பெண்டாட்டி சித்தே உற்சாகமா இருந்தா புருஷாளுக்குத் தாங்காது. "நான் இப்படி நோஞ்சு கிடக்குறப்போ நீ மட்டும் சந்தோஷமா இருக்கலாமா?"ங்கற மாதிரியா கேப்பா பாத்திருக்கேன். அதுமாதிரி இருக்கு கௌதமர் கேக்கறது. அகல்யாக்கு திக்குங்கறது. 'நம்ம மனசுல இருக்குற குதூகலம் ஒருவேளை மொகத்துலயும் கார்யத்லேயும் தெரியறதோ?'னுட்டு நெனச்சுக்கறா. பொங்க ஆரமிச்சப் பாலை எடுத்துக் கீழே வச்சுட்டு, "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே. ஒங்களுக்கு நேரமாறதேனுட்டு அவசரம் அதான்"னு சொல்றா.
"இருந்தாலும் இத்தனை சுறுசுறுப்பை இன்னிக்குத்தான் பாக்கறேன்"னு சொன்ன கௌதமர் சட்னு, "ஆமா, குடத்துல தண்ணி கொண்டு வருவியே.. எங்கே குடத்தைக் காணோம்? நான் முகம் அலம்பிக்கணுமே?"னு கேட்டார்.
அப்பத்தான் அகல்யாவுக்குத் திக்குனு ஆறது. அதாவது திக்குனு ஆன மாதிரி நடிக்கிறா. "அடடா! மறந்துட்டேன்"னு சொல்றப்பவே கௌதமர் குறுக்கே சொல்றார். "மறந்துட்டேனு தான் நானும் சொல்றேன். வாசப்படியிலயே வச்சிருக்கியே?"னு சொல்றார். டக்குனு அவ வாசல்ல பாக்கறா. பார்த்தவுடனே சட்னு அடுக்களைல ஒதுங்கிக்கறா. கௌதமர்ட்டே, "அதிதி வந்திருக்காப்ல இருக்கு"னு சொல்றா.
விருந்தாளி யாராயிருக்கும்னுட்டு கௌதமர் வாசல்ல பாக்க வரார். அங்க இந்த்ரன் நின்னுண்டிருக்கான். கௌதமரைப் பாத்துட்டு நம்ஸ்காரம்னு சொல்றான். சட்னு குடத்தை எடுத்து "இந்தாங்கோ.. நான் உள்ளே எடுத்துண்டு வரேன்"னு சொல்றான்.
கௌதமர் குடத்தை வாங்கற மாதிரி தவறவிடறார். தண்ணி கொட்டிடறது.
அமர்ஷஹாசம்னு சொல்வா. அதாவது சிரிப்பும் இல்லாம உறுமலும் இல்லாம முனகலும் இல்லாம ஒரு நையாண்டி.. அடுத்தவாளை மட்டம் தட்டற மாதிரி ஒரு கேனைத்தனமான சிரிப்புக்கு அமர்ஷஹாசம்னு பேர். 'ஹ'னு ஒரு சப்தம் கேட்டிருப்பேள்.. சிரிக்கறாளா மாட்டை விரட்டறாளானு தெரியாது.. அதான் அமர்ஷஹாசம். அசுவத்தாமனோட குடும்பத்லயும் அமர்ஷஹாசப் புலிகள் உண்டு.
"ஹஹ.. இந்த்ரன் கைபட்டா எல்லாம் தவறிடும் போலிருக்கே?"ங்கறார் கௌதமர். 'ஹ்ம்ம்ம்'னுட்டு கௌதமர் உள்ளேயும் வெளியேயும் பாத்தார். தாடியைத் தடவிண்டார். "உள்ளே வானு இப்ப சொல்லமுடியலியே. என்னை மன்னிக்கணும்.. நான் ஸ்நானம் பண்ணிட்டு வரேன்.. ஒரு நாழி கழிச்சு வாங்கோ"னு சொல்றார்.
"அதனால என்ன, பரவாயில்லை. நானும் ஸ்நானம் பண்ணனும். உங்ககூட வந்தா எனக்கும் இடம் தெரிஞ்ச மாதிரி. அப்புறம் இந்த ஆஸ்ரமத்துல விஷ்ணு பூஜை பண்ண நீங்க தான் அனுக்ரகம் பண்ணனும்"னு பவ்யமா சொல்றான்.
"ஆகா! வாங்கோ போகலாம்"னு சொல்லிட்டு படியிறங்கினார் கௌதமர். 'விஷ்ணு பூஜை பண்ண வந்த மூஞ்சியப் பாரு?'னு மனசுல நெனச்சுண்டார். குடிலுக்குள்ளே பாத்து, "அகல்யா.. தட்டியைச் சாத்திக்கோம்மா. யார் வந்தாலும் திறக்காதே, பத்திரம்"னு உரக்கவே சொல்றார். இந்த்ரனைப் பாத்து, "ஹ.. கதவைத் தொறந்து வச்சா.. கண்டதும் உள்ளே வந்துடறது.. காடு பாருங்கோ..நீங்க வாங்கோ தேவராஜா.. ஹ.. நாம போகலாம்"னு நடக்கறார்.
இந்த்ரன் அவர் கூடவே போறான். அவன் மனசெல்லாம் அகல்யானு ஜபம் பண்றது. இருந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாம நடக்கறான். திட்டம் போடறான். 'இந்தக் கிழவனை வஜ்ராயுதத்தால லேசா ஒரு தட்டு தட்டிடலாமா? பிரம்மஹத்தியாவது புடலங்காயாவது? எல்லாத்துக்கும் பரிகாரம் வச்சிருக்காளே, அப்புறம் என்ன?'னு அவன் மனசுல தோணறது. இருந்தாலும் கட்டுப் படுத்திக்கறான்.
அகல்யாவைக் கொண்டுவிடறப்போ பிரம்மா சொன்னதை நினைச்சுக்கறார் கௌதமர். "முனி ஸ்ரேஷ்டரே.. என்னோட பொண்ணை.. உலகத்துலயே சௌந்தரின்னு சொல்லக்கூடிய இந்த அகல்யாவை, உங்களுக்கு ஒத்தாசையா இருக்க விட்டுட்டுப் போறேன். கடுமையான தபஸ் பண்றேள், உங்களுக்கு சகல விதத்துலயும் ஒத்தாசையா இருப்பா"னு தாரை வாத்துக் கொடுத்த பிரம்மா, சும்மா இருக்காம "இந்த்ரன் கண்ல படாம பாத்துங்கோ"னு வேறே சொல்லிட்டு போனார். பிரம்மக் குசும்புன்னா சும்மாவா?
கௌதமர் மறுபடியும் மனசுக்குள்ளே 'ஹ' போடறார். இந்த்ரனை ஓரக்கண்ணாலப் பாக்கறார். 'பிரம்மா மட்டும் யோக்யனா? சொந்தப் பொண்ணுனு பாக்காம சரஸ்வதி பின்னால ஓடினவன் தானே? எல்லா தேவாளுமே அயோக்யத்தனம் பண்றதுலே சளைச்சவா இல்லே போலிருக்கு'னு நெனச்சுக்கறார். அகல்யாவைப் பார்க்கறதுக்குத் தான் வந்திருக்கான் இந்த்ரன்னு அவருக்கு நன்னா தெரியறது. சும்மா இருக்காம இந்த்ரனைக் கிண்டல் பண்றார்.
"பாக்க வந்தது பாக்க முடியாம போயிடுத்தோ தேவராஜா?"னு கேட்டார்.
பக்குனு ஆறது இந்த்ரனுக்கு. "என்ன சொல்றேள்?"னு கேட்டான்.
"விஷ்ணு பூஜை பண்ண இடம் பாக்கறதா சொன்னேளே.. நான் கரடியாட்டம் குறுக்க வந்து உங்களை என்னோட ஸ்நானம் பண்ண அழைச்சுண்டு போறதைச் சொன்னேன்.. ஹ"
"பாக்க வேண்டியதை பாத்துட்டு தான் வந்தேன்.. இருந்தாலும் உங்க அனுக்ரகம் இல்லாம ஒண்ணும் செய்யக்கூடாதுனுட்டு.."னு இழுக்கறான் இந்த்ரன். அவன் மட்டும் சளைச்சவனா?
"ஸ்நானம் பண்ணுங்கோ.. எல்லாத்தையும் முழுகிடுங்கோ"னு ஜாடையா சொல்றார் கௌதமர். "கௌதமன் அனுக்ரகம் லேசுல கிடைக்காதாக்கும்.. ஹ.."
"சாபம் மட்டும் உடனே கொடுப்பேளோ?"னு கேட்டுடறான் இந்த்ரன். அப்புறம் சமாளிச்சு "இல்லை.. உங்க கோபம் த்ரிலோகப் பிரசித்தி.. அதான் பயத்துல கேட்டேன்.. க்ஷமிக்கணும்"னு சப்பை கட்டறான்.
கௌதமர் சட்னு பேச்சை மாத்தி இன்னும் தூபம் போடறார். "அகல்யா இருக்காளே.. அழகுன்னா அத்தனை அழகு.. புருஷாள் நமக்குள்ளே சொல்றதுக்கு என்ன.. அவ அழகை வர்ணிக்கவே முடியாது தெரியுமோ? உங்க இந்த்ராணி அழகுன்னாலும் அகல்யா ஆயிரம் மடங்கு அழகுன்னு தோணறது, மன்னிக்கணும்"னு சொல்லிட்டு இந்த்ரன் முகத்தை கவனிக்கறார். பொறாமையால வேகட்டும்னு மனசுக்குள்ள நெனச்சுக்கறார். "நேத்திக்கு முழு நிலா வெளிச்சத்துலே ஆஸ்ரமத் தரையிலே அவளோட ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அகல்யாவை எனக்குக் கொடுத்த பிரம்மாவுக்கு என்னிக்குமே என்னோட க்ருதக்ஞை'னு சொல்றார். க்ருதக்ஞைனா அதிகமான ஸ்வஸ்த்யக்ஷரம்.. இங்க்லிஷ்லே க்ரேடிட்யூட்ம்பாளே.. நன்றிக்கு ஒரு படி மேலே.
'உன்னோட க்ருதக்ஞையை உடைப்புல போட'னு நெனச்சுக்கறான் இந்த்ரன். இருந்தாலும் பவ்யமா தலையாட்டறான். அவன் மனசுல உடனே அகல்யாவைக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்கணும்னு தோணியாச்சு. உதட்ல ரெண்டு மார்ல ரெண்டுனு எண்ணி நாலு முத்தம் குடுத்துட்டு மறுகாரியம் பாக்கணும்னு துடிக்க ஆரம்பிச்சான்.
அதுக்குள்ள புருஷாளுக்கான தடாகம் வந்தாச்சு. கௌதமர் மண் படிக்கட்டுல இறங்கி, "வாங்கோ, ஸ்நானம் பண்ணலாம்"னு இந்த்ரனைக் கூப்பிடறார்.
இந்த்ரனும் படிக்கட்டுல இறங்கறான். கடைசிப் படியிலே நிக்கறச்சே தடாகத்துலே கௌதமரோட உருவம் தெரியறதைப் பாக்கறான். டகால்னு அவன் மனசுல ஒரு யுக்தி. 'அடடா! அருமையான சான்சு. இந்தக் கிழம் இங்கே குளிச்சிண்டிருக்கச்சே நாம அகல்யாவை கொஞ்சிட வேண்டியது தான். கௌதமர் மாதிரியே வேஷம் போட்டுண்டு போனா அவளுக்கும் தெரியாது. சங்கடம் இருக்காது'னு அவன் மனசுல தோணறது. தேவகன்னிகைகளோட அலங்காரம் எதுவும் இல்லாம, சாதாரண கச்சைகளோட அகல்யா நடந்து போனதையும் அவளோட ஸ்தனமும் ப்ருஷ்டமும் எந்தவிதமான கட்டுமில்லாம இயற்கையா அசைஞ்சதையும் நெனச்சுப் பாக்கறான். எப்பேற்பட்ட அழகி அவள்! இந்த தபஸ்விக் கிழத்துக்கிட்டே மாட்டிண்டு முழிக்கறாளே? உடனடியா போய் அந்த அழகை ஆராதிக்க வேண்டியது தான்னுட்டு கௌதமர் போல வேஷம் போடத் தீர்மானிக்கறான். தண்ணிலே தெரிஞ்ச கௌதமரோட உருவத்துல கொஞ்சம் மண்ணைத் தள்ளறான். அது அந்த உருவத்தைக் கலைச்சுப் போட்டதை ரசிக்கறான்.
திடீர்னு தலை சுத்தறா மாதிரி இருக்கு அவனுக்கு. படியிலே உக்காந்துக்கறான். மனசுல அகல்யா மறைஞ்சு போய் விஸ்வகர்மா ஞாபகம் வரது. "விஸ்வகர்மா! விஸ்வகர்மா!"ங்கறான்.
"என்னாச்சு?"னு கேட்டார் கௌதமர்.
"தெரியலே.. குளிக்கலாம்னு நெனச்சேன்.. திடீர்னு மனசுல விஸ்வகர்மா ஞாபகம் வியாபிச்சிண்டிருக்கு.. தேவகுலத்துக்கு ஏதாவது ஆபத்தோ.. அசுரக்கூட்டம் ஏதாவது படையெடுத்து வந்துடுத்தோ தெரியலியே?"னு புலம்பறான். அதுக்குள்ளே ஐராவதம் பிளிறிண்டே வரது. இந்த்ரன் கௌதமர் கிட்டே, "என்னை மன்னிச்சுடுங்கோ.. என்னவோ நடக்கறது.. போய் பாத்துட்டு வந்துடறேன்"னு உடனே கிளம்பறான். அவன் ஏறி உக்காந்ததும் ஐராவதம் ஜெட் ஏர்வேஸ் ஜம்போ மாதிரி சொய்னு ஆகாசத்துல காணாம போறது.
'விட்டது சனி'னு கௌதமர் குளிக்கறார்.
பாதி குளிக்கறச்சே திடீர்னு அவருக்கு சந்தேகம் வரது. 'மகாபாவி ஒருவேளை ஆஸ்ரமத்துக்குப் போயிருப்பானோ?'னு நெனச்சுக்கறார். 'போறும் குளிச்சது'னுட்டு எழுந்துக்கறார். அவசரமா வேஷ்டி அங்கவஸ்திரத்தைச் சுத்திண்டு பரக்க பரக்க ஆஸ்ரமத்துக்கு நடந்தார். 'அவன் மட்டும் அங்கே இருக்கட்டும், இன்னிக்கு அவனை பஸ்பமாக்கிடறேன்'னுட்டு பொறுமிண்டே நடந்தார்.
ஆஸ்ரமத்து வேலிதாண்டி உள்ளே வந்தவர் சட்னு நின்னார். வாசல்ல தட்டிக்கதவு சாத்தியிருக்கு. ஆனா உள்ளே ஏதோ பேச்சுக்குரல் கேக்கறது. உடனே உள்ளே போகாம என்ன நடக்கறதுனு பாத்து கையும் களவுமா பிடிக்கணும்னு நெனக்கறார். பக்கவாட்டுல நடந்து மாட்டுக் கொட்டில் மேலே பரபரனு ஏறி அதுலேந்து குடிலோட கூரைக்குத் மெதுவாத் தாவினார். அடுக்களை கிட்டேயும் தாழ்வாரம் கிட்டேயும் கூரை லேசா ஜன்னல் மாதிரிப் பிரிஞ்சிருக்கும் அந்த நாளிலே. சமையல், ஹோமப் புகை போறதுக்காகவும், நிலா வெளிச்சத்துல சம்போகம் பண்றதுக்காகவும் அந்த ஏற்பாடு. இப்பலாம் சன்ரூப் மூன்ரூப் சன்லைட் வின்டோ தஸ்சுபுஸ்சுனு என்னவோ சொல்றா, எல்லா ஏகாந்தமும் நம்ம கலாசாரத்துலயும் கட்டுமானத்துலயும் உண்டு. அடுக்களையில அரவம் இல்லே. மெள்ள நகந்து தாழ்வாரக் கூரை பக்கம் போறார்.
"ஏதுடா அசுவத்தாமா? முனிஸ்ரேஷ்டாளுக்கு ஞானத்ருஷ்டி உண்டே? அப்படித் தெரிஞ்சுக்காம என்னமோ திருடனாட்டம் கூரை ஏறினார்னு சொல்றியே? இதெல்லாம் நியாயமாடா?"னு ரமணிண்ணா கேக்கறார். உங்களுக்குத் தெரியாததை நான் என்ன சொல்லிடப்போறேன்? இந்த ஞான த்ருஷ்டியெல்லாம் உடான்சுண்ணா. பாருங்கோ.. அந்த நாள்லே பாதி தபஸ்விகளுக்கு த்ருஷ்டியே கிடையாது... மிச்ச பாதிக்கு ஞானம் கிடையாது.. இதுல எங்கேந்து ஞானதிருஷ்டி வரது? எல்லாரும் இந்த அசுவத்தாமன் மாதிரிதான். பாருங்கோ.. என்னோட பால்யத்துலே.. வாத்யார் தொழிலைப் பத்திச் சொல்வா. வேறே வேலை கிடைக்கலேன்னா ஸ்கூல் வாத்யார் வேலைக்கு போம்பா. அதுமாதிரி புராண காலத்துலே.. பொழைக்க வழி வேறே ஒண்ணும் இல்லேன்னு வையுங்கோ, தபஸ் பண்ணப் போயிடுவா. வாஸ்தவமாக்கும். எல்லா தபஸ்விகளும் அப்படினு இந்த அசுவத்தாமன் ஒரு நாளும் சொல்லமாட்டான். அதே நேரம் எந்த தபஸ்விக்கும் ஞானத்ருஷ்டினெல்லாம் எதுவும் இருக்கலைனும் திட்டமா சொல்வான்.. தப்பா நெனக்காதீங்கோ.
கௌதமருக்கு ஞானம் இருந்தாலும் த்ருஷ்டி கொஞ்சம் தகராறு. அதனாலே மெள்ள நகந்து கூரையைப் பிரிச்சுப் பாக்கறார். உத்துக் கவனிக்கறார். அங்கே தாழ்வாரத்து ஓரமா ரெண்டு பேர் ரொம்ப மதாகுளமா அதாவது காம உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சிண்டும் பேசிண்டும் இருக்கா. அகல்யாவை நன்னா அடையாளம் தெரியறது. அதிர்ச்சிலே விழுந்துடக் கூடாதுன்னு கூரையைக் கவனமா பிடிச்சுண்டே பாக்கறார். இன்னொருத்தர் பாக்கறதுக்குத் தன்னை மாதிரியே இருக்கார். "இது என்னடா கூத்து?"னுட்டுக் கவனிக்கறார்.
கீழே சல்லாபம் நடந்துண்டிருக்கு.
"இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?"னு கேக்கறா அகல்யா.
"உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை"னு சொல்றார் கௌதமர். சொல்லிட்டு அகல்யாவைக் கட்டிப் பிடிக்கறார். அகல்யா அவரோட மார்லயும் முகத்துலயும் முத்தம் கொடுக்கறா. கௌதமரோ வாலிபனாட்டம் அகல்யாவை ரெண்டு கைலயும் அள்ளியெடுத்துண்டு அப்படியே முத்தம் கொடுக்கறார். அவளைக் கீழே விடாமே இடுப்போட சேத்துப் பிடிக்சுக்கறார். அவளும் கால் ரெண்டையும் கௌதமரோட இடுப்பைச் சுத்திக் கட்டிக்கறா. கையை அவரோட கழுத்தைச் சுத்திக் கட்டிக்கறா. அப்புறம் ரெண்டு பேரும் தாழ்வாரத்துலே புரள்றா. திடீர்னு அகல்யா, "என்ன.. இந்த்ரனை விட உங்களுக்கு என் மேலே ஆசை அதிகமா?"னு கேக்கறா. "நல்ல வேளை பிரம்மா என்னை இங்கே கொண்டு விட்டாரே"னு சொல்றா.
"நான் இந்த்ரன்னு சொன்னா நம்புவியா அகல்யா?"னு கேக்கறார் கௌதமர்.
மேலேந்து பாத்துண்டிருக்கற கௌதமருக்கு உடம்பெல்லாம் பத்திக்கறது. புரிஞ்சு போச்சு. இந்த்ரன் தான் வேஷம் போட்டுண்டு வந்திருக்கான். கௌதமருக்கு கோவத்துலே ருத்ரதாண்டவம் ஆடத்தோண்றது. ஆனா ஆட வராதேன்னுட்டு ஆக்ரோஷமா பாத்துண்டிருக்கார். 'மகாபாவி! விஸ்வகர்மாவைப் பாக்கணும் அப்படி இப்படினு கதைவிட்டு இங்கே வந்து என் பெண்டாட்டியைப் பாத்துண்டிருக்கியே சண்டாளா!'னு நெனச்சுக்கறார். அந்த வேகத்துல பிடியை விட்டுடறார். சரசரனு வழுக்கி வாசல் பக்கமா தட்டிக் கதவு கிட்டே விழப்போனவர், சுதாரிச்சுண்டு தட்டியிலே சாஞ்சு உள்ளே விழுந்தார்.
விழுந்த வேகத்துலே எழுந்து உள்ளே இருந்த ரெண்டு பேரையும் பார்த்தார். அவர் முகத்துல கோபாக்னி. "ஏலே.. இந்த்ரா"னார். 'ஏலே'ன்னது பக்கத்தாத்து மாமாவாக்கும். இந்த்ரன் சொன்னானா தெரியாது. "ஏட்டி.. அகல்யா"னார். 'ஏட்டி'ன்னதும் பக்கத்தாத்து மாமாதான். "உங்க ரெண்டு பேரையும் சபிக்கிறேன் பார்"னு கமண்டலத்தைத் தேடினார். "இங்க தானே வச்சேன் கமண்டலம்.. எங்கே போச்சு?"னு கத்தினார்.
சுவரோரமா கிடந்த கமண்டலத்தை எடுத்து, "ஏலே இந்த்ரா.. பொம்னாட்டி தேகத்துலே யோனி மோகத்துலே மூழ்கி நாசமாப் போற பயலே.. உனக்கு உடம்"னு சொல்லி முடிக்கறதுக்குள்ளே காலிங் பெல் சத்தம் மாதிரி கேக்கறது. திரும்பிப் பாக்கறார். தட்டியோரமா இந்த்ரனும் அகல்யாவும் நின்னுண்டிருக்கா. கௌதமருக்கு ஒண்ணும் புரியலே. 'இங்க ஒரு கௌதமர்-அகல்யா ஜோடி, அங்க ஒரு இந்த்ரன்-அகல்யா ஜோடி.. நடுவுல நான் அசல் கௌதமன்.. என்ன இது?'னு முழிக்கறார்.
"முனி ஸ்ரேஷ்டரே.. உங்க சாபத்துலே நியாயமே இல்லை"னு சொல்றான் வாசல்ல நிக்கற இந்த்ரன். "ஏன்னா.. நான் தான் இந்த்ரன்.. அது வேறே யாரோ.. அவாளை சபிக்கறதுக்கு பதிலா என்னை சபிக்கறது அநியாயம் மட்டுமில்லே, அதர்மமும் கூட"னு சொல்றான்.
"உங்க ரெண்டு பேரையும் சபிச்சுடறேன்"னு குதிக்கறார் கௌதமர்.
"அதெப்படி? நான் ஒரு தப்பும் பண்ணலையே.. என்னை எப்படி சபிக்கலாம்?"னு லா பாயின்ட் போடறான் அசல் இந்த்ரன்.
"அகல்யா.. க்ராதகி"னு தாழ்வார அகல்யாவைப் பாத்து சபிக்கப் போறார் கௌதமர்.
"நிறுத்துங்கோ.. அது அகல்யாவுமில்லை. நான் தான் அசல் அகல்யா"னு சொல்றா வாசல்ல நின்ன அகல்யா. தாழ்வார அகல்யா திருதிருனு முழிக்கறா.
கொழம்பிப் போறார் கௌதமர். சாபம் கொடுக்க எடுத்த கையும் கமண்டலமும் அப்படியே இருக்கு. ஆரம்பிச்ச சாபத்தை கொடுத்து முடிச்சே ஆகணும். இப்ப என்ன பண்றது? அப்போ காலிங் பெல் சப்தம் மாதிரி மறுபடியும் கேக்கறது. பிரம்மா படியேறி வரார். "தவ ஸ்ரேஷ்டரே.. என்னை மன்னிச்சுடுங்கோ"னு நாலு மண்டையையும் பணிவா ஆட்டறார். ஆனா ஒரு மனசுக்குள்ள, "அம்பி.. ஒன்னோட தபோபலன் எல்லாம் புஸ்வாணமாயிடுத்து.. இனிமே இந்த்ர பதவிக்கெல்லாம் ஆபத்தில்லை'னு நெனச்சுக்கறார்.
"பிரம்மா.. இது என்ன நாடகம்?"னு வசனம் பேசறார் கௌதமர். இன்னும் கமண்டலத்தைப் பிடிச்சுண்டே.
"நான் சொல்றேன்"னுட்டு தாழ்வார கௌதமர் அசல் கௌதமர் கால்லே சாஷ்டாங்கமா விழுந்தார். "எங்களை மன்னிச்சுடுங்கோ.. ஏதோ ஆசைக் கோளாறினாலே இப்படி நடந்துண்டோம். நான் விஸ்வகர்மாவாக்கும்"னுட்டு அசல் உருவத்துக்கு வந்தான் விஸ்வகர்மா.
"நெனச்ச நேரத்துலே நெனச்ச ரூபத்துல ஸ்மரண யாத்ரை போற எந்திரம் ஒண்ணு கண்டுபிடிச்சேன். அதை என் ஆம்பிடையாள் கிட்டே காமிச்சப்போ, எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஒரு ரூபத்துல பூலோகம் போய் சந்தோஷமா இருக்கணும்னு தோணித்து"னு சொல்றான் விஸ்வகர்மா. சொல்றப்பபோ வாசல் பக்கம் நிக்கற அசல் அகல்யாவைப் பாக்கறான். 'நீ சொல்லிக் கொடுத்தபடியே சொல்றேனா?"னு கேக்கற மாதிரி இருக்கு அவன் பார்வை.
கௌதமருக்கு இன்னும் கோவம் தணிஞ்ச பாடில்லை.
அடுத்த ப்ரசங்கத்துல முடிச்சுடறேன். ►►
1 2 3 ◀◀ பூர்வத்துலே..
    பொதுவாவே தபஸ்விகள் எல்லாரும் ரொம்பவே நிதானத்தை அனுஷ்டிக்கறவா. மெதுக்குன்னோ சோம்பேறின்னோ சொல்லலாம், ஆனா பாருங்கோ நிதானம்ங்கறது காயிருப்பக் கனி கவர்ந்த மாதிரியோன்னோ, அதனாலே அப்டியே வச்சுப்போம்.
கௌதமர் பொதுவா நிதானமானப் பேர்வழினு சொல்லலாம். கார்த்தாலே நித்யகர்மாக்களைப் பண்ணி முடிக்கணும்னு நெனச்சுண்டு எழுந்துண்டவர், சித்தே நிதானமா இருக்கார். நமக்கெல்லாம் இந்த நாளிலே கண் முழிச்ச பத்து நிமிஷத்துக்குள்ளே காபி உள்ளே இறங்கலைன்னா எல்லாமே துவேஷமாயிடறது இல்லியோ? அதுவும் நல்ல டிகிரிக் காபியா வேண்டியிருக்கு நாக்குக்கு. செலபேர் காபி போடறேன்னுட்டு எதையோ போட்டுக் கொடுக்கறா. குத்தமில்லை. ஆனா, அந்த நாள்ல காபியாவது கீபியாவது? கிடையாதுன்னாலும், காச்சின பசும்பாலிலே மொத நாள் பொடிச்சு வச்ச சுக்கைக் கொஞ்சம் கலந்து உள்ளே தள்ளினாத்தான் அவாளுக்கும் இஞ்சின் ஓடித்து. அப்புறந்தான் மத்த ஆஜார அனுஷ்டானங்களோட நெனப்பே வந்துதாக்கும்.
ஒரு வகை ஆஜாரம் அகல்யைக்கு அப்புறந்தான் லோக அப்யாசத்துக்கு வந்துதுனு சொல்லுவா. அதாவது, ஸ்த்ரீகளுக்கு மாசா மாசம் ருது உண்டாறதும் தூரம் தீட்டு பாக்கறதும் அவாள்ளாம் இந்த்ரனோட பாவத்தை சுமக்கறதுனால வந்ததுனு, அகல்யை கதையை வச்சுப் புராணத்துல வந்ததா சொல்றா. அதெல்லாம் பொய்யாக்கும். இட்டுக்கட்டாக்கும். நம்ம பாவத்தை சுமக்கறதுக்கே நமக்கு ஒழியலை, இதுல இன்னொருத்தர் பாவத்தை வேறே சுமக்கணுமா? அக்ரமம் பாருங்கோ. தாய்மைங்கற ஒசந்த ஸ்தானத்தை, தெய்வங்களுக்கு மேலான ஸ்தானத்தை, ஸ்த்ரீகள் அடையறதுக்கு சாத்யமான இயற்கையான ஒரு அனுலோம கார்யத்தை, இந்த்ரனோட பாவம்னு சொல்றது அழிச்சாட்டியமில்லையோ? 'நாதியில்லாத பொம்னாட்டிகள் தானே, வாயை மூடிண்டிருப்பா'னு ஒரு குபுத்திலே சொன்னதாக்கும். அத்தனையும் வ்யாகுதி. புராணப் புருஷாளோடத் திமிராக்கும். அத்தனை லோகாதய சுகத்தையும் அதர்மத்தையும் அனுசரிச்சுட்டு, கடைசியிலே 'பெண் என்னும் மாயப் பேய்'னு அவாளைப் போட்டு மிதிச்சு த்வம்சம் பண்றது, அத்தனைப் புராணப் பண்டிதாளுக்கும் தொழிலா இருந்துது. கடவுளை கும்பிடறேன் பேர்வழின்னு வாய்ல வந்தபடி ஸ்த்ரீகளை பங்கப்படுத்தியிருக்கா. ஐயா.. உமக்கு கடவுள் ஞானம் வந்துதா? பலே, கும்பிட்டுக்கோ! வேண்டாங்கலே. என்னவோ பண்ணிக்கோ. ஏன் ஸ்த்ரீகளைப் போட்டு சாக்கடை சல்லடைனும் பிணினும் கன்னாபின்னானு சொல்லணும்? 'ஸ்த்ரீகள் கிட்டேயிருந்து என்னைக் காப்பாத்தினேடா சிவனே! வைகுந்தா!'னு இஷ்டத்துக்கு பாடுவானேன்? 'ஸ்த்ரீகள்டேயிருந்து என்னைக் காப்பாத்தினியே, மகாலக்ஷ்மி! பராசக்தி!'னு யாராவது பாடியிருக்காளா தெரியலை. கண்ணைக் குத்தியிருப்பா.
தான் என்கிற அகந்தையிலே புருஷ வம்சாவளி, என்னையும் சேத்து சொல்றேன், ஆயிரம் கோடி வர்ஷமா ஸ்த்ரீகளுக்கு மனசாலும் வாக்காலும் கார்யத்தாலும் செஞ்ச அபகாரங்களுக்கு இந்த அசுவத்தாமன் மன்னிப்பு கேட்டுக்கறேன். நல்ல வேளையா ஒரே ஒரு புலவராவது 'எங்கெங்கு காணினும் சக்தியடா'னு பாடினாரேனு த்ருப்தியா நெனச்சுக்கறேன். ஸ்த்ரீகளோட அசாத்ய சக்தியினாலே தான் அனித்யமான இந்த லோகவாழ்க்கைல நாங்கள்ளாம் ஏதோ ஒப்பேத்திட்டுப் போயிண்டிருக்கோம். இதை நான் ரொம்ப நன்றியோட சொல்றேனாக்கும். புருஷாளை மன்னிச்சுடுங்கோனு தண்டமா கேட்டுக்கறேன். நரகம்ங்கறது ஆம்ப்ளேளுக்கு மட்டும் தானாக்கும். கவலையே படாதீங்கோ. ஸ்த்ரீயாப் பொறந்தாலே அது ஸ்வர்க்கத்துக்கு ஒன் வே டிக்கட் வாங்கின மாதிரியாக்கும்.
என்னமோ சொல்ல வந்து எங்கயோ போயிட்டேன் பாருங்கோ. சித்தே இருங்கோ. ம்ம்ம்.. இந்தப் பொடிப் பழக்கத்தை விடமுடியலை.
அகல்யா உள்ளே வரதைப் பாத்துண்டிருந்த கௌதமர், "ஏது இவ்வளவு நேரமாச்சு உனக்கு?"னு கேட்டார். "இங்கே நான் எழுந்து எத்தனை நாழியாக் காத்துண்டிருக்கேன்?"
"என்னம்மா, நல்லாத் தூங்கினியா?"னு கேக்கலை. "காலங்கார்த்தாலே பச்சைத்தண்ணிலே ஸ்நானம் பண்ணிட்டு வந்திருக்கே. குளிர் ஜூரம் வந்துடப்போறது. சீக்கிரமா தலையைத் துவட்டிக்கோ. நான் வேணும்னா சாம்ப்ராணி புகைச்சுக் குடுக்கட்டுமா?"னு கேக்கலை. "சிரமபரிகாரம் ஏதாவது பண்ணிண்டியா?"னு கேக்கலை. "இத்தனை நாழியாக் காத்துண்டிருக்கேனே, தெரிய வேண்டாம்?"னு கேட்டார்.
கௌதமரைப் பிரமாதமா குத்தம் ஒண்ணும் சொல்லலை. புருஷாள் நாங்க எல்லாருமே அப்படித்தான். அம்மாவாகட்டும் அக்காவாகட்டும் ஆம்படையாளாகட்டும், அவா சிரமத்துல படுத்துண்டிருந்தாலும் சரி, "என்னை மொதல்ல கவனி.. என்னை மொதல்ல கவனி.. என்னை மொதல்ல கவனி.." இதைத்தான் பரம்பரை பரம்பரையா கௌதமர் காலத்லேந்து சொல்லிண்டிருக்கோம்னா பாருங்கோ. டிஎன்ஏலனா கலந்துடுத்து? லேசுல மாறுமோ? நாமதான் அப்படி.. ஸ்த்ரீகளாவது மாறுவாள்னா அங்கயும் டிங்கிரியானா இருக்கு? எல்லாத்தையும் பொறுத்துண்டு.. கோவில் மாடு மாதிரி தலையை தலையை ஆட்டிண்டு.. தன் மதிப்பைத் தானே கெடுத்துண்டு.. கண்றாவி போங்கோ.
"இதோ ஆச்சு.. மன்னிச்சுருங்கோ"னுட்டு உள்ளே ஓடறா அகல்யா. அவசரமா ஒரு விளக்கேத்திட்டு, கறந்து வச்சப் பாலைக் காய்ச்சரா. காஞ்ச சுக்கை ஒரு கை எடுத்து நன்னா பொடி பண்றா. அதை அப்படியே பாலில் கலக்கறா. பாலும் சுக்கும் சேந்து காயற வாசனை மூக்கைத் தொளைக்கறது. காயட்டும்னுட்டு அங்கேந்து நகந்து அன்னைய ஔபாசனத்துக்கு வேண்டிய சமித்து, பஞ்சபாத்திரம், சந்தனம், குங்குமம், மஞ்சளரிசி எல்லாம் எடுத்து வைக்கறா. அகல்யா குடுகுனு வேலை செய்றதைப் பாத்துட்டு ஒக்காந்துண்டிருந்த கௌதமர் கேட்டார். "என்ன நீ.. ரொம்ப உத்சாகமா இருக்கியே?"னுட்டு.
சில குடும்பத்துல பாத்திருக்கேன். பெண்டாட்டி சித்தே உற்சாகமா இருந்தா புருஷாளுக்குத் தாங்காது. "நான் இப்படி நோஞ்சு கிடக்குறப்போ நீ மட்டும் சந்தோஷமா இருக்கலாமா?"ங்கற மாதிரியா கேப்பா பாத்திருக்கேன். அதுமாதிரி இருக்கு கௌதமர் கேக்கறது. அகல்யாக்கு திக்குங்கறது. 'நம்ம மனசுல இருக்குற குதூகலம் ஒருவேளை மொகத்துலயும் கார்யத்லேயும் தெரியறதோ?'னுட்டு நெனச்சுக்கறா. பொங்க ஆரமிச்சப் பாலை எடுத்துக் கீழே வச்சுட்டு, "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே. ஒங்களுக்கு நேரமாறதேனுட்டு அவசரம் அதான்"னு சொல்றா.
"இருந்தாலும் இத்தனை சுறுசுறுப்பை இன்னிக்குத்தான் பாக்கறேன்"னு சொன்ன கௌதமர் சட்னு, "ஆமா, குடத்துல தண்ணி கொண்டு வருவியே.. எங்கே குடத்தைக் காணோம்? நான் முகம் அலம்பிக்கணுமே?"னு கேட்டார்.
அப்பத்தான் அகல்யாவுக்குத் திக்குனு ஆறது. அதாவது திக்குனு ஆன மாதிரி நடிக்கிறா. "அடடா! மறந்துட்டேன்"னு சொல்றப்பவே கௌதமர் குறுக்கே சொல்றார். "மறந்துட்டேனு தான் நானும் சொல்றேன். வாசப்படியிலயே வச்சிருக்கியே?"னு சொல்றார். டக்குனு அவ வாசல்ல பாக்கறா. பார்த்தவுடனே சட்னு அடுக்களைல ஒதுங்கிக்கறா. கௌதமர்ட்டே, "அதிதி வந்திருக்காப்ல இருக்கு"னு சொல்றா.
விருந்தாளி யாராயிருக்கும்னுட்டு கௌதமர் வாசல்ல பாக்க வரார். அங்க இந்த்ரன் நின்னுண்டிருக்கான். கௌதமரைப் பாத்துட்டு நம்ஸ்காரம்னு சொல்றான். சட்னு குடத்தை எடுத்து "இந்தாங்கோ.. நான் உள்ளே எடுத்துண்டு வரேன்"னு சொல்றான்.
கௌதமர் குடத்தை வாங்கற மாதிரி தவறவிடறார். தண்ணி கொட்டிடறது.
அமர்ஷஹாசம்னு சொல்வா. அதாவது சிரிப்பும் இல்லாம உறுமலும் இல்லாம முனகலும் இல்லாம ஒரு நையாண்டி.. அடுத்தவாளை மட்டம் தட்டற மாதிரி ஒரு கேனைத்தனமான சிரிப்புக்கு அமர்ஷஹாசம்னு பேர். 'ஹ'னு ஒரு சப்தம் கேட்டிருப்பேள்.. சிரிக்கறாளா மாட்டை விரட்டறாளானு தெரியாது.. அதான் அமர்ஷஹாசம். அசுவத்தாமனோட குடும்பத்லயும் அமர்ஷஹாசப் புலிகள் உண்டு.
"ஹஹ.. இந்த்ரன் கைபட்டா எல்லாம் தவறிடும் போலிருக்கே?"ங்கறார் கௌதமர். 'ஹ்ம்ம்ம்'னுட்டு கௌதமர் உள்ளேயும் வெளியேயும் பாத்தார். தாடியைத் தடவிண்டார். "உள்ளே வானு இப்ப சொல்லமுடியலியே. என்னை மன்னிக்கணும்.. நான் ஸ்நானம் பண்ணிட்டு வரேன்.. ஒரு நாழி கழிச்சு வாங்கோ"னு சொல்றார்.
"அதனால என்ன, பரவாயில்லை. நானும் ஸ்நானம் பண்ணனும். உங்ககூட வந்தா எனக்கும் இடம் தெரிஞ்ச மாதிரி. அப்புறம் இந்த ஆஸ்ரமத்துல விஷ்ணு பூஜை பண்ண நீங்க தான் அனுக்ரகம் பண்ணனும்"னு பவ்யமா சொல்றான்.
"ஆகா! வாங்கோ போகலாம்"னு சொல்லிட்டு படியிறங்கினார் கௌதமர். 'விஷ்ணு பூஜை பண்ண வந்த மூஞ்சியப் பாரு?'னு மனசுல நெனச்சுண்டார். குடிலுக்குள்ளே பாத்து, "அகல்யா.. தட்டியைச் சாத்திக்கோம்மா. யார் வந்தாலும் திறக்காதே, பத்திரம்"னு உரக்கவே சொல்றார். இந்த்ரனைப் பாத்து, "ஹ.. கதவைத் தொறந்து வச்சா.. கண்டதும் உள்ளே வந்துடறது.. காடு பாருங்கோ..நீங்க வாங்கோ தேவராஜா.. ஹ.. நாம போகலாம்"னு நடக்கறார்.
இந்த்ரன் அவர் கூடவே போறான். அவன் மனசெல்லாம் அகல்யானு ஜபம் பண்றது. இருந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாம நடக்கறான். திட்டம் போடறான். 'இந்தக் கிழவனை வஜ்ராயுதத்தால லேசா ஒரு தட்டு தட்டிடலாமா? பிரம்மஹத்தியாவது புடலங்காயாவது? எல்லாத்துக்கும் பரிகாரம் வச்சிருக்காளே, அப்புறம் என்ன?'னு அவன் மனசுல தோணறது. இருந்தாலும் கட்டுப் படுத்திக்கறான்.
அகல்யாவைக் கொண்டுவிடறப்போ பிரம்மா சொன்னதை நினைச்சுக்கறார் கௌதமர். "முனி ஸ்ரேஷ்டரே.. என்னோட பொண்ணை.. உலகத்துலயே சௌந்தரின்னு சொல்லக்கூடிய இந்த அகல்யாவை, உங்களுக்கு ஒத்தாசையா இருக்க விட்டுட்டுப் போறேன். கடுமையான தபஸ் பண்றேள், உங்களுக்கு சகல விதத்துலயும் ஒத்தாசையா இருப்பா"னு தாரை வாத்துக் கொடுத்த பிரம்மா, சும்மா இருக்காம "இந்த்ரன் கண்ல படாம பாத்துங்கோ"னு வேறே சொல்லிட்டு போனார். பிரம்மக் குசும்புன்னா சும்மாவா?
கௌதமர் மறுபடியும் மனசுக்குள்ளே 'ஹ' போடறார். இந்த்ரனை ஓரக்கண்ணாலப் பாக்கறார். 'பிரம்மா மட்டும் யோக்யனா? சொந்தப் பொண்ணுனு பாக்காம சரஸ்வதி பின்னால ஓடினவன் தானே? எல்லா தேவாளுமே அயோக்யத்தனம் பண்றதுலே சளைச்சவா இல்லே போலிருக்கு'னு நெனச்சுக்கறார். அகல்யாவைப் பார்க்கறதுக்குத் தான் வந்திருக்கான் இந்த்ரன்னு அவருக்கு நன்னா தெரியறது. சும்மா இருக்காம இந்த்ரனைக் கிண்டல் பண்றார்.
"பாக்க வந்தது பாக்க முடியாம போயிடுத்தோ தேவராஜா?"னு கேட்டார்.
பக்குனு ஆறது இந்த்ரனுக்கு. "என்ன சொல்றேள்?"னு கேட்டான்.
"விஷ்ணு பூஜை பண்ண இடம் பாக்கறதா சொன்னேளே.. நான் கரடியாட்டம் குறுக்க வந்து உங்களை என்னோட ஸ்நானம் பண்ண அழைச்சுண்டு போறதைச் சொன்னேன்.. ஹ"
"பாக்க வேண்டியதை பாத்துட்டு தான் வந்தேன்.. இருந்தாலும் உங்க அனுக்ரகம் இல்லாம ஒண்ணும் செய்யக்கூடாதுனுட்டு.."னு இழுக்கறான் இந்த்ரன். அவன் மட்டும் சளைச்சவனா?
"ஸ்நானம் பண்ணுங்கோ.. எல்லாத்தையும் முழுகிடுங்கோ"னு ஜாடையா சொல்றார் கௌதமர். "கௌதமன் அனுக்ரகம் லேசுல கிடைக்காதாக்கும்.. ஹ.."
"சாபம் மட்டும் உடனே கொடுப்பேளோ?"னு கேட்டுடறான் இந்த்ரன். அப்புறம் சமாளிச்சு "இல்லை.. உங்க கோபம் த்ரிலோகப் பிரசித்தி.. அதான் பயத்துல கேட்டேன்.. க்ஷமிக்கணும்"னு சப்பை கட்டறான்.
கௌதமர் சட்னு பேச்சை மாத்தி இன்னும் தூபம் போடறார். "அகல்யா இருக்காளே.. அழகுன்னா அத்தனை அழகு.. புருஷாள் நமக்குள்ளே சொல்றதுக்கு என்ன.. அவ அழகை வர்ணிக்கவே முடியாது தெரியுமோ? உங்க இந்த்ராணி அழகுன்னாலும் அகல்யா ஆயிரம் மடங்கு அழகுன்னு தோணறது, மன்னிக்கணும்"னு சொல்லிட்டு இந்த்ரன் முகத்தை கவனிக்கறார். பொறாமையால வேகட்டும்னு மனசுக்குள்ள நெனச்சுக்கறார். "நேத்திக்கு முழு நிலா வெளிச்சத்துலே ஆஸ்ரமத் தரையிலே அவளோட ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அகல்யாவை எனக்குக் கொடுத்த பிரம்மாவுக்கு என்னிக்குமே என்னோட க்ருதக்ஞை'னு சொல்றார். க்ருதக்ஞைனா அதிகமான ஸ்வஸ்த்யக்ஷரம்.. இங்க்லிஷ்லே க்ரேடிட்யூட்ம்பாளே.. நன்றிக்கு ஒரு படி மேலே.
'உன்னோட க்ருதக்ஞையை உடைப்புல போட'னு நெனச்சுக்கறான் இந்த்ரன். இருந்தாலும் பவ்யமா தலையாட்டறான். அவன் மனசுல உடனே அகல்யாவைக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்கணும்னு தோணியாச்சு. உதட்ல ரெண்டு மார்ல ரெண்டுனு எண்ணி நாலு முத்தம் குடுத்துட்டு மறுகாரியம் பாக்கணும்னு துடிக்க ஆரம்பிச்சான்.
அதுக்குள்ள புருஷாளுக்கான தடாகம் வந்தாச்சு. கௌதமர் மண் படிக்கட்டுல இறங்கி, "வாங்கோ, ஸ்நானம் பண்ணலாம்"னு இந்த்ரனைக் கூப்பிடறார்.
இந்த்ரனும் படிக்கட்டுல இறங்கறான். கடைசிப் படியிலே நிக்கறச்சே தடாகத்துலே கௌதமரோட உருவம் தெரியறதைப் பாக்கறான். டகால்னு அவன் மனசுல ஒரு யுக்தி. 'அடடா! அருமையான சான்சு. இந்தக் கிழம் இங்கே குளிச்சிண்டிருக்கச்சே நாம அகல்யாவை கொஞ்சிட வேண்டியது தான். கௌதமர் மாதிரியே வேஷம் போட்டுண்டு போனா அவளுக்கும் தெரியாது. சங்கடம் இருக்காது'னு அவன் மனசுல தோணறது. தேவகன்னிகைகளோட அலங்காரம் எதுவும் இல்லாம, சாதாரண கச்சைகளோட அகல்யா நடந்து போனதையும் அவளோட ஸ்தனமும் ப்ருஷ்டமும் எந்தவிதமான கட்டுமில்லாம இயற்கையா அசைஞ்சதையும் நெனச்சுப் பாக்கறான். எப்பேற்பட்ட அழகி அவள்! இந்த தபஸ்விக் கிழத்துக்கிட்டே மாட்டிண்டு முழிக்கறாளே? உடனடியா போய் அந்த அழகை ஆராதிக்க வேண்டியது தான்னுட்டு கௌதமர் போல வேஷம் போடத் தீர்மானிக்கறான். தண்ணிலே தெரிஞ்ச கௌதமரோட உருவத்துல கொஞ்சம் மண்ணைத் தள்ளறான். அது அந்த உருவத்தைக் கலைச்சுப் போட்டதை ரசிக்கறான்.
திடீர்னு தலை சுத்தறா மாதிரி இருக்கு அவனுக்கு. படியிலே உக்காந்துக்கறான். மனசுல அகல்யா மறைஞ்சு போய் விஸ்வகர்மா ஞாபகம் வரது. "விஸ்வகர்மா! விஸ்வகர்மா!"ங்கறான்.
"என்னாச்சு?"னு கேட்டார் கௌதமர்.
"தெரியலே.. குளிக்கலாம்னு நெனச்சேன்.. திடீர்னு மனசுல விஸ்வகர்மா ஞாபகம் வியாபிச்சிண்டிருக்கு.. தேவகுலத்துக்கு ஏதாவது ஆபத்தோ.. அசுரக்கூட்டம் ஏதாவது படையெடுத்து வந்துடுத்தோ தெரியலியே?"னு புலம்பறான். அதுக்குள்ளே ஐராவதம் பிளிறிண்டே வரது. இந்த்ரன் கௌதமர் கிட்டே, "என்னை மன்னிச்சுடுங்கோ.. என்னவோ நடக்கறது.. போய் பாத்துட்டு வந்துடறேன்"னு உடனே கிளம்பறான். அவன் ஏறி உக்காந்ததும் ஐராவதம் ஜெட் ஏர்வேஸ் ஜம்போ மாதிரி சொய்னு ஆகாசத்துல காணாம போறது.
'விட்டது சனி'னு கௌதமர் குளிக்கறார்.
பாதி குளிக்கறச்சே திடீர்னு அவருக்கு சந்தேகம் வரது. 'மகாபாவி ஒருவேளை ஆஸ்ரமத்துக்குப் போயிருப்பானோ?'னு நெனச்சுக்கறார். 'போறும் குளிச்சது'னுட்டு எழுந்துக்கறார். அவசரமா வேஷ்டி அங்கவஸ்திரத்தைச் சுத்திண்டு பரக்க பரக்க ஆஸ்ரமத்துக்கு நடந்தார். 'அவன் மட்டும் அங்கே இருக்கட்டும், இன்னிக்கு அவனை பஸ்பமாக்கிடறேன்'னுட்டு பொறுமிண்டே நடந்தார்.
ஆஸ்ரமத்து வேலிதாண்டி உள்ளே வந்தவர் சட்னு நின்னார். வாசல்ல தட்டிக்கதவு சாத்தியிருக்கு. ஆனா உள்ளே ஏதோ பேச்சுக்குரல் கேக்கறது. உடனே உள்ளே போகாம என்ன நடக்கறதுனு பாத்து கையும் களவுமா பிடிக்கணும்னு நெனக்கறார். பக்கவாட்டுல நடந்து மாட்டுக் கொட்டில் மேலே பரபரனு ஏறி அதுலேந்து குடிலோட கூரைக்குத் மெதுவாத் தாவினார். அடுக்களை கிட்டேயும் தாழ்வாரம் கிட்டேயும் கூரை லேசா ஜன்னல் மாதிரிப் பிரிஞ்சிருக்கும் அந்த நாளிலே. சமையல், ஹோமப் புகை போறதுக்காகவும், நிலா வெளிச்சத்துல சம்போகம் பண்றதுக்காகவும் அந்த ஏற்பாடு. இப்பலாம் சன்ரூப் மூன்ரூப் சன்லைட் வின்டோ தஸ்சுபுஸ்சுனு என்னவோ சொல்றா, எல்லா ஏகாந்தமும் நம்ம கலாசாரத்துலயும் கட்டுமானத்துலயும் உண்டு. அடுக்களையில அரவம் இல்லே. மெள்ள நகந்து தாழ்வாரக் கூரை பக்கம் போறார்.
"ஏதுடா அசுவத்தாமா? முனிஸ்ரேஷ்டாளுக்கு ஞானத்ருஷ்டி உண்டே? அப்படித் தெரிஞ்சுக்காம என்னமோ திருடனாட்டம் கூரை ஏறினார்னு சொல்றியே? இதெல்லாம் நியாயமாடா?"னு ரமணிண்ணா கேக்கறார். உங்களுக்குத் தெரியாததை நான் என்ன சொல்லிடப்போறேன்? இந்த ஞான த்ருஷ்டியெல்லாம் உடான்சுண்ணா. பாருங்கோ.. அந்த நாள்லே பாதி தபஸ்விகளுக்கு த்ருஷ்டியே கிடையாது... மிச்ச பாதிக்கு ஞானம் கிடையாது.. இதுல எங்கேந்து ஞானதிருஷ்டி வரது? எல்லாரும் இந்த அசுவத்தாமன் மாதிரிதான். பாருங்கோ.. என்னோட பால்யத்துலே.. வாத்யார் தொழிலைப் பத்திச் சொல்வா. வேறே வேலை கிடைக்கலேன்னா ஸ்கூல் வாத்யார் வேலைக்கு போம்பா. அதுமாதிரி புராண காலத்துலே.. பொழைக்க வழி வேறே ஒண்ணும் இல்லேன்னு வையுங்கோ, தபஸ் பண்ணப் போயிடுவா. வாஸ்தவமாக்கும். எல்லா தபஸ்விகளும் அப்படினு இந்த அசுவத்தாமன் ஒரு நாளும் சொல்லமாட்டான். அதே நேரம் எந்த தபஸ்விக்கும் ஞானத்ருஷ்டினெல்லாம் எதுவும் இருக்கலைனும் திட்டமா சொல்வான்.. தப்பா நெனக்காதீங்கோ.
கௌதமருக்கு ஞானம் இருந்தாலும் த்ருஷ்டி கொஞ்சம் தகராறு. அதனாலே மெள்ள நகந்து கூரையைப் பிரிச்சுப் பாக்கறார். உத்துக் கவனிக்கறார். அங்கே தாழ்வாரத்து ஓரமா ரெண்டு பேர் ரொம்ப மதாகுளமா அதாவது காம உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சிண்டும் பேசிண்டும் இருக்கா. அகல்யாவை நன்னா அடையாளம் தெரியறது. அதிர்ச்சிலே விழுந்துடக் கூடாதுன்னு கூரையைக் கவனமா பிடிச்சுண்டே பாக்கறார். இன்னொருத்தர் பாக்கறதுக்குத் தன்னை மாதிரியே இருக்கார். "இது என்னடா கூத்து?"னுட்டுக் கவனிக்கறார்.
கீழே சல்லாபம் நடந்துண்டிருக்கு.
"இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?"னு கேக்கறா அகல்யா.
"உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை"னு சொல்றார் கௌதமர். சொல்லிட்டு அகல்யாவைக் கட்டிப் பிடிக்கறார். அகல்யா அவரோட மார்லயும் முகத்துலயும் முத்தம் கொடுக்கறா. கௌதமரோ வாலிபனாட்டம் அகல்யாவை ரெண்டு கைலயும் அள்ளியெடுத்துண்டு அப்படியே முத்தம் கொடுக்கறார். அவளைக் கீழே விடாமே இடுப்போட சேத்துப் பிடிக்சுக்கறார். அவளும் கால் ரெண்டையும் கௌதமரோட இடுப்பைச் சுத்திக் கட்டிக்கறா. கையை அவரோட கழுத்தைச் சுத்திக் கட்டிக்கறா. அப்புறம் ரெண்டு பேரும் தாழ்வாரத்துலே புரள்றா. திடீர்னு அகல்யா, "என்ன.. இந்த்ரனை விட உங்களுக்கு என் மேலே ஆசை அதிகமா?"னு கேக்கறா. "நல்ல வேளை பிரம்மா என்னை இங்கே கொண்டு விட்டாரே"னு சொல்றா.
"நான் இந்த்ரன்னு சொன்னா நம்புவியா அகல்யா?"னு கேக்கறார் கௌதமர்.
மேலேந்து பாத்துண்டிருக்கற கௌதமருக்கு உடம்பெல்லாம் பத்திக்கறது. புரிஞ்சு போச்சு. இந்த்ரன் தான் வேஷம் போட்டுண்டு வந்திருக்கான். கௌதமருக்கு கோவத்துலே ருத்ரதாண்டவம் ஆடத்தோண்றது. ஆனா ஆட வராதேன்னுட்டு ஆக்ரோஷமா பாத்துண்டிருக்கார். 'மகாபாவி! விஸ்வகர்மாவைப் பாக்கணும் அப்படி இப்படினு கதைவிட்டு இங்கே வந்து என் பெண்டாட்டியைப் பாத்துண்டிருக்கியே சண்டாளா!'னு நெனச்சுக்கறார். அந்த வேகத்துல பிடியை விட்டுடறார். சரசரனு வழுக்கி வாசல் பக்கமா தட்டிக் கதவு கிட்டே விழப்போனவர், சுதாரிச்சுண்டு தட்டியிலே சாஞ்சு உள்ளே விழுந்தார்.
விழுந்த வேகத்துலே எழுந்து உள்ளே இருந்த ரெண்டு பேரையும் பார்த்தார். அவர் முகத்துல கோபாக்னி. "ஏலே.. இந்த்ரா"னார். 'ஏலே'ன்னது பக்கத்தாத்து மாமாவாக்கும். இந்த்ரன் சொன்னானா தெரியாது. "ஏட்டி.. அகல்யா"னார். 'ஏட்டி'ன்னதும் பக்கத்தாத்து மாமாதான். "உங்க ரெண்டு பேரையும் சபிக்கிறேன் பார்"னு கமண்டலத்தைத் தேடினார். "இங்க தானே வச்சேன் கமண்டலம்.. எங்கே போச்சு?"னு கத்தினார்.
சுவரோரமா கிடந்த கமண்டலத்தை எடுத்து, "ஏலே இந்த்ரா.. பொம்னாட்டி தேகத்துலே யோனி மோகத்துலே மூழ்கி நாசமாப் போற பயலே.. உனக்கு உடம்"னு சொல்லி முடிக்கறதுக்குள்ளே காலிங் பெல் சத்தம் மாதிரி கேக்கறது. திரும்பிப் பாக்கறார். தட்டியோரமா இந்த்ரனும் அகல்யாவும் நின்னுண்டிருக்கா. கௌதமருக்கு ஒண்ணும் புரியலே. 'இங்க ஒரு கௌதமர்-அகல்யா ஜோடி, அங்க ஒரு இந்த்ரன்-அகல்யா ஜோடி.. நடுவுல நான் அசல் கௌதமன்.. என்ன இது?'னு முழிக்கறார்.
"முனி ஸ்ரேஷ்டரே.. உங்க சாபத்துலே நியாயமே இல்லை"னு சொல்றான் வாசல்ல நிக்கற இந்த்ரன். "ஏன்னா.. நான் தான் இந்த்ரன்.. அது வேறே யாரோ.. அவாளை சபிக்கறதுக்கு பதிலா என்னை சபிக்கறது அநியாயம் மட்டுமில்லே, அதர்மமும் கூட"னு சொல்றான்.
"உங்க ரெண்டு பேரையும் சபிச்சுடறேன்"னு குதிக்கறார் கௌதமர்.
"அதெப்படி? நான் ஒரு தப்பும் பண்ணலையே.. என்னை எப்படி சபிக்கலாம்?"னு லா பாயின்ட் போடறான் அசல் இந்த்ரன்.
"அகல்யா.. க்ராதகி"னு தாழ்வார அகல்யாவைப் பாத்து சபிக்கப் போறார் கௌதமர்.
"நிறுத்துங்கோ.. அது அகல்யாவுமில்லை. நான் தான் அசல் அகல்யா"னு சொல்றா வாசல்ல நின்ன அகல்யா. தாழ்வார அகல்யா திருதிருனு முழிக்கறா.
கொழம்பிப் போறார் கௌதமர். சாபம் கொடுக்க எடுத்த கையும் கமண்டலமும் அப்படியே இருக்கு. ஆரம்பிச்ச சாபத்தை கொடுத்து முடிச்சே ஆகணும். இப்ப என்ன பண்றது? அப்போ காலிங் பெல் சப்தம் மாதிரி மறுபடியும் கேக்கறது. பிரம்மா படியேறி வரார். "தவ ஸ்ரேஷ்டரே.. என்னை மன்னிச்சுடுங்கோ"னு நாலு மண்டையையும் பணிவா ஆட்டறார். ஆனா ஒரு மனசுக்குள்ள, "அம்பி.. ஒன்னோட தபோபலன் எல்லாம் புஸ்வாணமாயிடுத்து.. இனிமே இந்த்ர பதவிக்கெல்லாம் ஆபத்தில்லை'னு நெனச்சுக்கறார்.
"பிரம்மா.. இது என்ன நாடகம்?"னு வசனம் பேசறார் கௌதமர். இன்னும் கமண்டலத்தைப் பிடிச்சுண்டே.
"நான் சொல்றேன்"னுட்டு தாழ்வார கௌதமர் அசல் கௌதமர் கால்லே சாஷ்டாங்கமா விழுந்தார். "எங்களை மன்னிச்சுடுங்கோ.. ஏதோ ஆசைக் கோளாறினாலே இப்படி நடந்துண்டோம். நான் விஸ்வகர்மாவாக்கும்"னுட்டு அசல் உருவத்துக்கு வந்தான் விஸ்வகர்மா.
"நெனச்ச நேரத்துலே நெனச்ச ரூபத்துல ஸ்மரண யாத்ரை போற எந்திரம் ஒண்ணு கண்டுபிடிச்சேன். அதை என் ஆம்பிடையாள் கிட்டே காமிச்சப்போ, எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஒரு ரூபத்துல பூலோகம் போய் சந்தோஷமா இருக்கணும்னு தோணித்து"னு சொல்றான் விஸ்வகர்மா. சொல்றப்பபோ வாசல் பக்கம் நிக்கற அசல் அகல்யாவைப் பாக்கறான். 'நீ சொல்லிக் கொடுத்தபடியே சொல்றேனா?"னு கேக்கற மாதிரி இருக்கு அவன் பார்வை.
கௌதமருக்கு இன்னும் கோவம் தணிஞ்ச பாடில்லை.
அடுத்த ப்ரசங்கத்துல முடிச்சுடறேன். ►►
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)