2013/07/28

வாத்து வெளுப்பு

2


1


    "வாங்க அண்ணே" என்று மல்லியை மீண்டும் வரவேற்றார் கனகவல்லி. தன் இடது கையில் இருந்த ஜபமாலையை அருகிலிருந்த வட்டத்தட்டில் வைத்தார். "இப்படி உட்காருங்களேன்?" என்று வலது கையால் எதிரே இருந்த சோபாவைச் சுட்டினார். அவர் விரல்களில் இரண்டு மோதிரங்கள் மின்னின. சோபாவின் பின்புறம் இருந்த மர வடிவ மெழுகுவர்த்தி அடுக்கின் கிளைகளில் மென்மையாக எரிந்து கொண்டிருந்த மினி டீ கப் வாசனை மெழுகுவர்த்திகள். சோபாவின் எதிரே வட்டமேசை மீது சிகப்பு வெல்வெட்டில் ஒரு சக்கரம். அதையொட்டி கிழக்குமுக சுவரலமாரியில் துத்தனாகத் தகடுகள், ஆமையோடு, சிறிய துவஜஸ்தம்பச் சிற்பம், சங்குகள், பொன்சய் மரம் என்று அலங்காரப் பொருட்கள். மேல்தட்டின் வடக்கு, தெற்கு முனைகளில் துவாரபாலகர் சிலைகள். இடையே ஒரு சதுரத் தாமிரக் கிண்ணத்தில் தண்ணீரை மூடிய உதிரிப் பூக்கள். உள்ளிருந்து வந்த விசித்திரமான சமையல் மணம். அனைத்தையும் உள்வாங்கிய மல்லி, சோபாவை நோக்கி நடந்தார்.

"கனகம், நானும் இங்க உட்காரவா?" என்ற ராஜசிங்கத்தைப் புன்னகையுடன் முறைத்த கனகவல்லி, "இப்படி உக்காருங்க சிங்கம்" என்று வலதுபுறம் இருந்த தெற்குமுக நீல நிற நாற்காலியில் உட்காரச் சொன்னார்.

"என்ன இவன்? பெண்டாட்டி பர்மிசன் கேட்டுத்தான் உக்காருவானா?" என்று கிசுத்த தயாவை அடக்கிய மல்லி, மீண்டும் கனகவல்லிக்கு உரக்க வணக்கம் சொன்னார். "கல்யாணத்தப்ப பார்த்தது.. நல்லா இருக்கியாம்மா? நீங்கள்ளாம் இந்த ஊர்ல இருக்குறதே தெரியாம போச்சே! சிங்கம் இப்பத்தான் சொன்னான்..உனக்கு வாஸ்து பெங்சூய் சமாசாரங்கள்ள ஈடுபாடுனு சொன்னதும்.. உடனே பாத்துட்டு போவணும்னு வந்துட்டோம்.. எனக்கு வாஸ்துல அபார நம்பிக்கை.."

"அப்படியா! உங்களுக்கும் வாஸ்து நம்பிக்கையா!" என்ற வல்லியின் கண்கள் விரிந்தன. "ரொம்ப சந்தோசம்ணே.."

"தயாவுக்கு வாஸ்து சாஸ்திரம்னா என்னை விட அதிக நம்பிக்கை, ஈடுபாடு.."

மல்லி சொன்னதைக் கேட்டதும் சோபாவின் விளிம்பில் உட்கார்ந்திருந்த தயா அதிர்ச்சியில் வழுக்கித் தரையில் விழுந்தார்.

"அப்படியா?" என்ற கனகவல்லியின் பார்வையில் அவநம்பிக்கை. மூன்று வேளை சாப்பாட்டைத் தவிர வேறெதிலும் நம்பிக்கையற்றவரைப் பார்ப்பது போல் ஒரு கீழ்ப்பார்வை பார்த்தார். வல்லியின் முகத்தைப் பார்க்காமல் மெள்ள சோபாவில் ஏறி உட்கார்ந்த தயா, மல்லி அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்று உள்ளூர நடுங்கினார்.

"ஆமாமா.. எனக்கு வாஸ்து நம்பிக்கை வந்ததே இவனால தான்..!" என்றார் மல்லி.

'ஐயையோ!' என்று கூவிய தயா சுதாரித்து.. "அய்யய்யே.. அப்படியெல்லாம் இல்லே.. ஏதோ நம்பிக்கை அவ்வளவு தான்" என்றார். சட்டென்று எழுந்து ஓட முடியாத அவஸ்தையுடன் வாசலைப் பார்த்தார்.

"ஏதோ நம்பிக்கையா? என்னப்பா இப்படிச் சொல்றே! உன் வாஸ்து குருநாதர் தானே என்னை நம்ப வச்சாரு?!"

"குருநாதரா?" என்றனர் கனகவல்லியும் தயாவும் ஒரே நேரத்தில். கனகவல்லி வியப்புடனும், தயா திடுக்கிட்டும். அடங்காத திகிலுடன் மல்லியைப் பார்த்தார் தயா. 'சிங்கத்துக்கு உதவி பண்ணுடானு வந்தா என்னைக் கவுக்கிறானே கிராதகன்!'

"உன் குருநாதரைத்தான் சொல்றேன்" என்று மீண்டும் சொன்ன மல்லியின் கழுத்தை நெறிக்கத் தோன்றியது தயாவுக்கு.

புது மரியாதையுடன் தயாவைப் பார்த்தார் கனகவல்லி. அழுக்குச் செருப்புடன் ஓடி வந்த பிள்ளை, வாசலில் நின்று செருப்பைக் கழற்றி வைத்து உள்ளே நுழைவதைப் பாராட்டும் பார்வை. கடக் மடக் கர் புர் என்று பெருத்த ஓசையுடன் சுற்றிலும எச்சில் விழச் சாப்பிடும் பழக்கமுள்ளவர், திடீரென்று அடக்கி வாசித்து வாய் திறவாமல் அசை போடுவதைப் பாராட்டும் பார்வை. "நமக்குத் தெரியாததை குருமாருங்க கிட்டே கத்துக்குறது தான் முறை" என்றார். "தயாண்ணே.. உங்க குரு.. அவருக்கு எதுல ஈடுபாடு? மய சாஸ்திரமா விஸ்வகர்மாவா?"

'இதென்ன கர்மமோ தெரியலியே? எனக்கு கோழி குருமா தானே தெரியும்?' என்று திணறிய தயா, "அது வந்து.. சரியா தெரியலே.. ரெண்டும் தான். சில நேரம் மய சாஸ்திரம் நல்லதுனுவார்.. திடீர்னு குருமா தான் பெஸ்டும்பாரு"

"குருமாவா?"

"விஸ்வகர்மா.." என்று மறித்தார் மல்லி. "சாப்பாட்டு டைம் இலையா? கிச்சன்லந்து குருமா மணம் வேறே தூக்குது.. அதான் குருமாக்கு போயிட்டான்.."

"ஹிஹி" என்றார் தயா. "ஆமாம்.. விஸ்வகர்மா தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும்னு தோணுது.. அடடா.. இந்தக் கேள்வி எங்களுக்குத் தோணவேயில்லே பாருமா.. குரு ஏதோ வாஸ்துன்னாரு நானும் இவனும் எருமையாட்டம் தலையாட்டினோம்" என்ற தயா, எருமையை அழுத்திச் சொன்னார். "உனக்கு என்னா ஞானம்! சட்னு விவகாரத்தை புட்டு வச்சுட்டம்மா"

"எங்கே இருக்காரு உங்க குரு? அவரை நான் பார்க்கணுமே?" என்றார் கனகவல்லி.

"அது வந்து" தயா நெளிந்தார். மல்லியை மனதுள் முள்சாட்டையால் அடித்தபடி, வெளியே பரிதாபமாகப் பார்த்தார். உதவிக்கு வந்த மல்லி, "அதுக்கென்னம்மா.. அவர் உங்க வீட்டுக்கு வந்து வாஸ்து ஆசீர்வாதம் செஞ்சுட்டு போவாருமா.. ஏற்பாடு செஞ்சுறலாம்.. வீட்டுக்கு வரதுனால.. கொஞ்சம் செலவாகும் அவ்வளவு தான்.. அஞ்சாயிரம் பத்தாயிரம்.." என்றார்.

"செலவைப் பத்திக் கவலையில்லே" என்றார் கனகவல்லி. "அவசியம் ஏற்பாடு செய்யுங்கண்ணே.. தடைபட்டுக்கிட்டே போவுற என் பையன் கல்யாண விஷயமா வாஸ்து சாந்தி எதுனா சொல்வாரா பார்க்கணும்.."

"வெள்ளிக்கிழமையே வரச் சொல்லிடறோம்.. வார பூஜைக்கு இந்தப் பக்கம் சாயிபாபா கோவிலுக்கு வருவாரு.. அப்படியே இங்கே வந்து ஒரு சின்ன பூஜையும் சாந்தியும் செஞ்சுடலாம்மா.. அப்ப நாங்க கிளம்புறோம்" என்றார் மல்லி.

"நான் அவங்களை காமதேனுல விட்டு வந்துடறேன்" என்ற கணவரிடம், "ப்ச.. பார்த்துங்க.. தென்முக நாற்காலிக்கு குறுக்கே போவாதீங்க.. சுத்திப் போங்கனு சொல்லியிருக்கனே, மறந்துட்டிங்களா? உட்கார்ந்து பத்து எண்ணிட்டுக் கிளம்புங்க" என்றார் கனகவல்லி. "தயாண்ணே.. உங்க குரு.. அவர் பேரு சொல்லவேயில்லியே நீங்க?".

தடுமாறிய தயாவை மறித்த மல்லி, "சுவாமி சுந்தர்ஜி" என்றபடி வாசலை நோக்கி வேகமாக நடந்தார். தயாவும் ராஜசிங்கமும் திரும்பிப் பார்க்காமல் மல்லியை அவசரமாகப் பின்தொடர்ந்தனர்.

    வெளியே வந்து மூவரும் பேசவில்லை. லஸ் முனை வந்ததும் தெருவோர டீக்கடையில் மூன்று மசாலா டீ ஆர்டர் செய்தார் மல்லி.

"நீயே அதுல பாஷாணம் கலந்து குடுத்துருடா" என்றார் தயா கடுப்புடன். "மல்லி டேய்.. உன்னை மாதிரி நண்பன் இருக்குறப்ப எனக்கு எதிரியே தேவையில்லே.. விளங்குவியாடா நீ?"

"சும்மா இருப்பா" என்றார் மல்லி கடைக்காரனிடமிருந்து டீயை வாங்கியபடி. "உன் பிரச்சினை தீந்துருச்சுனு வச்சுக்க, சிங்கம்"

"எப்படிரா? குழியில விழுந்தவனை பாம்பு கடிச்ச கதையா இல்லே ஆயிருச்சு?" என்று பொருமினார் தயா. "இவன் பெண்டாட்டியை மாத்தி இவங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைனு சொன்னா எங்கந்தோ குருநாதரை கொணாந்து.. என்னை வச்சுல்லே காமெடி செஞ்சிருக்கே? இப்ப சாமியாரை எங்கிருந்துரா கூட்டியாறது? சுவாமி சுந்தர்ஜியாமில்லே? யாருடா அது?"

    ன்புமல்லி எல்லாவற்றையும் பொறுமையாகச் சொன்னார். சிங்காரம் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டான். தயாவும் ராஜசிங்கமும் எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார்கள். இருவர் பார்வையிலும் எதிர்பார்ப்பு. அன்புமல்லியின் பார்வையில் ஆவல். சிங்காரத்தின் பார்வையில் அதிர்ச்சி.

சிங்காரத்துக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. தவறு. கை ஒரு பக்கமும் கால் ஒரு பக்கமும் ஓட முயற்சி செய்தன என்பதே சரி. ஜெயமோகனும் மணிரத்னமும் சேர்ந்து கடல்2 கதையை உரக்கப் படிக்க, நடுவில் உட்கார்ந்து கேட்க நேர்ந்தது போல் நடுங்கினான். விஜய் படத்தை ஓடவிட்டு தியேடரில் கதவடைக்கப்பட்டது போல் குலை நடுங்கினான். வியர்த்தது. கைகள் இரண்டும் குளிர் ஜுரத்தில் நடுங்குவது போல் உணர்ந்தான். காலிரண்டும் குடுகுடுப்பை உடுக்கு போல் குலுங்கின. வயிற்றில் இட்லி கிரைன்டர் ஓடியது. துந்ழிபி தைத்ழப ப்னஞா என்று ரகுமான் இசையில் பனிரெண்டு கட்டையில் கேபி சுந்தராம்பாள் அசுர வேகத்தில் தமிழ்ப்பாட்டு பாட, பத்து பேருடன் பழைய உசிலைமணி குத்தாட்டம் ஆடுவதை, கேட்கவும் பார்க்கவும் நேர்ந்தது போல் தலை சுற்றியது. போன வருடக் காவிரி நதியாய் வரண்டது நாக்கு. இந்த வருட ரெய்டில் சிக்கிய சரவணபவன் முதலாளி போல் நெஞ்சம் துடித்தது. தலைமுதல் கால் வரை பரவிய நடுக்கத்தை அளக்க கைவசம் ரிக்டர் இருந்திருந்தால் பதினெட்டு காட்டியிருக்கும்.

"என்னப்பா சிங்காரம்.. எல்லாம் ஒகே தானே?" என்றார் தயா பொறுமையிழந்து.

டேபிள் மேலிருந்த மொத்தத் தண்ணீரையும் குடித்தான் சிங்காரம். "என்னை விட்ருங்கய்யா" என்றான் மல்லியிடம். "இப்பத்தான் உங்க நண்பர் பொண்ணு மைத்து விவகாரத்துலந்து மெள்ள மீண்டு வந்திருக்கேன்.. அதுக்குள்ளாற.. அதும் சாமியாரு கீமியாரு வேசம் எல்லாம் எனக்கு ஒத்து வராது சார்.. எதுனா உளறிருவேன்.. எசகுபிசகாயிரும்"

"இதோ பாரு சிங்காரம். நீ இதை செஞ்சே ஆவணும்.. இல்லின்னா இந்தாளு தினம் இங்க வருவாரு.. அப்புறம் இந்த மூஞ்சியை நாம தெனம் பாக்கணும்.."

ராஜசிங்கம் சிங்காரத்தைப் பார்த்து விழித்தார்.

சிங்காரம் சட்டென்று எழுந்தான். "நான் எளியவன்யா. என்னை இப்படியெல்லாம் மிரட்டலாமா நீங்க? ரைட்டுங்கய்யா. இந்த ஏற்பாட்டுக்கு நான் தயார். ஆனா முவத்தை தினம் பாக்கணுமுன்னு மட்டும் இனி பயம் காட்டாதீங்க".

"உனக்கு மட்டுந்தானா அந்தப் பயம்?" என்று முணுத்தார் மல்லி. பிறகு உரக்க, "மிச்ச ஏற்பாடெல்லாம் தயா பாத்துக்குவாரு. எல்லாம் திட்டப்படி நடக்கும், கவலைப்படாதீங்க சுவாமிஜி" என்றுச் சிரித்தார்.

    ஞ்சளும் சிவப்பும் கலந்தப் பட்டுப் புடவையில் கம்பீரமாக இருந்தார் வல்லி. தீர்க்கமான பார்வையை இன்னும் எடுத்துக்காட்டிய பெரிய கண்ணாடி, சுந்தர்ஜியின் உள்ளே இருந்த சிங்காரத்தை உற்றுப் பார்த்தது. அவர் பார்வையைத் தவிர்க்க முயன்ற சிங்காரம் நெற்றிப் பொட்டைப் பார்த்துப் பயந்து, பார்வையே பரவாயில்லையென்று நெளிந்தான். எங்கே இந்த நாடகம் வல்லிக்குத் தெரிந்து உள்ளதும் கெட்டுப் போகுமோ என்று நடுங்கிய ராஜசிங்கம், ரத்த அழுத்தம் அதிகமாகிச் சற்றுத் தடுமாறியபடி இருந்தார். தயா வழக்கம் போல் மல்லியின் பின்னே பதுங்க முயன்றார். மல்லி மட்டும் நிதானமாகவும் புன்னகையோடும் வல்லிக்கு வணக்கம் சொன்னார். கனகவல்லி அனைவரையும் வரவேற்றார். "ரொம்ப நன்றி தயாண்ணே.. சுவாமிஜியை கூட்டி வந்ததுக்கு"

"இவர் தான் சுவாமி சிங்காரம்" என்றார் தயா பெருமையாக, சிங்காரத்தைக் காட்டி.

"சிங்காரமா? சுந்தர்ஜினு சொன்னீங்க?" என்றார் வல்லி. தயா நாக்கைக் கடித்துக் கொண்டார். ராஜசிங்கத்துக்கு மூச்சு முட்டியது.

சட்டென்றுத் திரும்ப முயன்ற சிங்காரத்தைத் தடுத்து நிறுத்திய மல்லி, "அது அவரோட பூர்வீகம். காசியிலும் கேதார்நாத்திலும் குருகுலம் முடிஞ்சதும் இவரோட குருவே இவருக்கு சுந்தர்ஜிங்கற பேரைக் கொடுத்து அருள் செஞ்சாரு.. ஆனாலும் நெருங்கினவங்களுக்கு இவர் என்னிக்குமே சிங்காரம் தான்" என்றார்.

"ரைட்டு" என்றான் சிங்காரம். "நீங்க இங்கயே இருங்கம்மா" என்றான் வல்லியிடம். "வீட்டுல வாஸ்து ஓட்டம் எப்படி இருக்குதுனு பார்க்கணும்" என்று வேகமாக தயாவை இழுத்துக் கொண்டு அறையின் நடுவே சென்று நின்றான். மேலும் கீழும் பார்த்தான். கைகளை அலை போல் அசைத்தான். "பிரம்மஸ்தானம்" என்றான் உரக்க. சற்று ஆழ்ந்து சிந்திப்பது போல் நின்றான். மல்லியும் ராஜசிங்கமும் கனகவல்லியுடன் பேசினர்.

"என்ன செய்றாரு சுவாமி?" என்றார் வல்லி. "என்னவோ பிரம்மஸ்தானம்னு சொல்றாரே? அது ஹால்ல இல்லே இருக்குது இந்த வீட்டுல?"

"சுவாமி பெரிய ஞானிம்மா. ஒருவேளை வாஸ்து ஓட்டத்தை கையால அளக்குறாரோ என்னவோ?"

"நமக்கு முதுகைக் காட்டிக்கிட்டு தயாவோட என்னவோ செய்றாரே?"

"பொறுமையா இருப்போம்.. பிறகு நம்ம சந்தேகத்தை அவர் கிட்டயே கேட்போம்" என்ற மல்லி, சோபாவில் உட்கார்ந்தார். "இப்படி உக்காரும்மா.. அவரு வரட்டும்". வல்லி தன்னுடைய நாற்காலியில் அமர்ந்து ராஜசிங்கத்தையும் அருகே உட்காரச் சொன்னார்.

அதற்குள் சிங்காரம் வீட்டின் பல மூலைகளுக்கு தயாவுடன் சென்று காற்றில் கையை அங்கேயும் இங்கேயும் ஆட்டினான். சில நிமிடங்களுக்குப் பிறகு தயாவுடன் சோபாவில் வந்து உட்கார்ந்தான். ஐந்து நிமிடங்கள் போல் கண்களை மூடி அமைதியாக இருந்தான்.

"கனகம், தியானம் பண்றாரு போலிருக்கு சுவாமிஜி" என்றார் ராஜசிங்கம் மெள்ள.

"அபாரம்!" என்றான் சிங்காரம். "உங்க வீட்டுல வாஸ்து ஓட்டம் தெளிவாக இருக்கும்மா. வாஸ்து சாஸ்திரம் இங்கே சரியா அமைஞ்சிருக்கு.. ஒண்ணு ரெண்டு எடத்துல ஓட்டம் லேசா தடைபடுது. அதனால உங்க வீட்டுல நல்ல காரியங்கள் நடந்தாலும் கொஞ்சம் தடைபட்டே நடக்கும்" என்றான்.

வல்லி அசந்து போனார். "ஆமாம் சுவாமிஜி! நானே கேட்கணும்னு இருந்தேன்.. நல்லது நடந்தாலும் தடங்கல் இருந்துகிட்டே இருக்கு.."

வல்லியை சைகையால் அடக்கினான் சிங்காரம். "எல்லாம் சரியாயிரும். பிரம்மஸ்தானத்துலந்து ஓட்டம் சரியா இல்லாம போனதுக்கும், குபேர ஸ்தானத்துக்குக் குறுக்கே நிக்குற தடைக்கும் காரணம் ரொம்ப சிம்பிள்.. ஆனா அது வாஸ்துல ஊறினவங்களுக்குக் கூட சரியா தெரியாம போயிடும்.."

வல்லி பிரமித்தார். "என்ன சுவாமி அது?"

"பல்லி"

"வல்லி சுவாமி, வல்லி.. நீங்க என் பெண்டாட்டியை பல்லின்னெல்லாம் கூப்பிடக்கூடாது.." என்றார் சிங்கம்.

"இல்லிங்க. நான் சொன்னது க்ளிக்ளிக்ளிக்ளிக்ளிக்னு சப்தம் செய்யும் பிராணி. இங்லிஷ்ல லிசர்டுனு சொல்வாங்க. அசல் பல்லி"

"அசல் பல்லியா?" வல்லியின் வெள்ளை முகம் திடீரென வெளிறியது.

"மூஞ்சுரு"

சட்டென்று கால்களை உயர்த்தினார் கனகவல்லி. "என்னது, மூஞ்சுரா.. எங்கே?"

"கடைசியா கரப்பான்"

"என்ன சுவாமி.. என்னென்னவோ சொல்றீங்களே.. இந்த பல்லி கரப்பான் மூஞ்சுரு பேரைக் கேட்டாலே என் பெண்டாட்டிக்கு நடுங்கும். கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க, பயங்காட்டாதீங்க" என்றார் சிங்கம்.

"பிரம்மஸ்தானத்துக்கு பல்லி, குபேர ஸ்தானத்துக்கு கரப்பான், ஈசான மூலைக்கு மூஞ்சுரு" என்ற சிங்காரம் திடீரென்று துள்ளி எழுந்தான். அறையை வேகமாகச் சுற்றிவிட்டு வந்து உட்கார்ந்தான்.

"என்ன சுவாமிஜி.. பல்லி கரப்பான்னு என்னவோ சொல்லிட்டு நீங்களே சுண்டெலியாட்டம் ரூமை சுத்திட்டு வந்து உட்கார்ந்துட்டீங்க?" என்றார் மல்லி நிதானமாக.

சிங்காரம் வல்லியை நேராகப் பார்த்தான். "அம்மா.. உங்க வீட்டுல தடங்கல் எல்லாம் நீங்கி இப்ப எல்லாம் சரியாயிடுச்சுனு வச்சுக்குங்க. விஸ்வகர்ம வியாக்கியானப்படி கரப்பான். மய சாஸ்திரப்படி மூஞ்சுரு. ரெண்டு பேருக்குமே பொருத்தமான பல்லி.."

"புரியறாப்புல சொல்லுங்க சுவாமிஜி.." என்றார் மல்லி. "யாரு அந்த ரெண்டு பேரு? ஏன் பல்லிப் பொருத்தம் பாக்குறானுவ?"

"வாஸ்து கலையில விஸ்வகர்மா, மயமுனி ரெண்டு பேரும் ஆதிகுருமாருங்க. அவங்க போட்டுக் குடுத்த சட்டத்துல தான் என்னை மாதிரி ஆளுங்களெல்லாம் படங்காட்டிக்கிட்டு வராங்க. கனகவல்லிம்மா.. நான் சொல்றதை கவனமாக் கேளுங்க.. உங்க வீட்டு வாஸ்து ஓட்டத்துல தடங்கல் வரக் காரணம் பல்லி, கரப்பான், மூஞ்சுரு இல்லாம போனது தான். பல்லின்றது பிராமண அடையாளம். நான் ஜாதியைச் சொல்லலிங்க. பிரம்மத்தைத் தெரிஞ்சுக்கிட்டவங்களோட அடையாளம் பல்லி. அதே போல குபேரனுடைய செல்வத்துக்கு அழிவில்லைனு கேள்விப்பட்டிருப்பீங்க. அழியாத செல்வத்துக்கு அடையாளமா அழிவில்லாத கரப்பான். பிறகு அதிதி ஈசான மூலைங்களுக்கு அடையாளமா சுறுசுறுப்பும் அமைதியுமான மூஞ்சுரு. பிள்ளையார் வாகனத்தை வச்சு சிவனை அடையுற உத்தி.." என்ற சிங்காரம் மல்லியைப் பார்த்தான்.

மல்லி சிங்காரத்தைப் பெருமையாகப் பார்த்தார். "சுவாமி.. இப்ப எதுக்கு பல்லி மூஞ்சுரு பத்திச் சொல்றீங்க?" வல்லியும் தலையாட்டியபடி சிங்காரத்தைப் பார்த்தார்.

"அதாவதுமா.. முறையா வாஸ்து ஓட்டம் இருந்தா இந்த மூணுத்துல ஒண்ணோ ரெண்டோ சில நேரம் மூணுமே அந்த வீட்டுல இருக்கும். உங்க வீட்டுல சில தடைகள் இருந்துச்சு.. அதை நான் தியானம் செஞ்சு நீக்கிட்டேன். பாருங்க.. சீக்கிரத்துல உங்க வீட்டுல நிறைய நல்ல காரியங்கள் தடையில்லாம நடக்கும். எல்லா உறவுகளும் சுமுகமா இருக்கும்"

"தடைகளை நீக்கிட்டீங்களா? என்ன சொல்றீங்க..?" என்ற வல்லியின் குரலில் பயமே தொனித்தது.

"ஆமாம்.. பல்லி கரப்பான் மூஞ்சுரு மூணுத்துக்கும் உங்க வீட்டை அடையாளம் காட்டினேன்.. இன்னும் கொஞ்ச நாள்ல இந்த மூணும் உங்க வீட்டுல நடமாடும்.. அப்படி வரலின்னா என்னை மறுபடி கூப்பிடுங்க.. நான் வந்து ஒரு சாந்தி தியானம் செய்துட்டுப் போறேன்.. இப்ப எனக்கு நேரமாவுது.. வரட்டுமா?" என்று கிளம்பினான் சிங்காரம். மல்லியும் தயாவும் அவர் பின்னால் சென்றார்கள்.

மூவரையும் வழியனுப்பி ராஜசிங்கத்துடன் உள்ளே திரும்பி வந்தார் கனகவல்லி. "என்னங்க.. இந்தாளு இப்படி சொல்றாரு? பல்லி கரப்பான்லாம் நம்ம வீட்டுல இருக்கணுமா? அப்படி வரல்லின்னா மறுபடி இவரைக் கூப்பிடணுமா? சரிதான்.. எந்த ஊர்ல இந்தாளு வாஸ்து படிச்சாரு.. சரியான ஏமாத்தா இருப்பாரு போலிருக்கே? உங்க பிரண்டுங்க கூட்டியாந்தா இப்படித்தான் இருக்கும்" என்றபடி சோபாவில் உட்கார்ந்தார்.

"போகுது விடு கனகம்.. நீ உட்காரு.. டென்சனாவாதே. நான் உனக்கும் சேர்த்து டீ போட்டு வரேன்" என்றபடி சமையலறைக்குப் போனார் சிங்கம். சில நிமிடங்களில் இரண்டு கப் டீயுடன் வந்தவர், கனகவல்லியைப் பார்த்துத் திடுக்கிட்டார். "என்ன ஆச்சு கனகம்? பேயடிச்சாப்புல இருக்கே?"

சோபாவின் விளிம்பில் குந்தி உட்கார்ந்திருந்த கனகம், எதிரே சுவற்றைச் சுட்டிக் காட்டினார். ஜன்னலுக்கு மேலே அதிதி வாஸ்து மூலையில் ஒரு நீளமான பல்லி. மெள்ள நூற்று எண்பது டிகிரி திரும்பி, பித்ரு வாஸ்து நிலையைப் பார்த்து நின்றது.

"பல்லியா?" என்று சாதுவாகக் கேட்ட சிங்கம், டீ கப்களை மேசை மீது வைத்தார். "எங்கிருந்து வந்துச்சு பல்லி?" என்று சாக்ரேட்ஸ் ப்லேடோவிடம் கேட்பது போல் கனகவல்லியிடம் கேட்டார். கனகவல்லி உள்ளூர நடுங்கியபடி பல்லியைப் பார்க்க, பல்லியின் நடவடிக்கைகளை இருவரும் கண்காணிக்கத் தொடங்கினர்.

வல்லி ஓரளவுக்கு ஆரோக்கியமானவர் என்றாலும் ஜிம்னெஸ்டிக் அத்லெடிக் பயிற்சிகள் எதுவும் பெற்றதில்லை. சிறுவயதில் எப்போதோ ஒரு முறை க்ரிகெட் விளையாடிய போது தானாகத் தேடி வந்து இவர் கையில் உட்கார்ந்த பந்தைத் தவிர, ராஜசிங்கமும் எதையும் கேச் பிடித்ததில்லை. ஆனால், உலக சாதனை புரிய இருவருக்கும் ஒரு வாய்ப்பு அடுத்த சில நொடிகளில் கிடைத்தது.

வாலை லேசாக உயர்த்திச் சுவற்றில் மெள்ள நகரத் தொடங்கியது பல்லி. பல்லி எங்கே போகிறது? கரப்பைத் தேடி. ஜன்னல் சட்ட விளிம்பில் ஒரு கரப்பான் பூச்சி! 'கண்டேன் கரப்பை' என்பது போல் இவர்களை ஒரு கணம் தலை உயர்த்திப் பார்த்தது. பூச்சியைப் பிடிக்க, பல்லி மிக மெதுவாக ஊர்ந்தது. பல்லி மிக அருகில் வந்ததும் கரப்பானுக்கு உணர்வு வந்து சர்ர்ர்ர்ர்ர்ரென்றுப் பறந்து சோபாவின் பின்புற இருளில் அடைக்கலம் தேடத் தொடங்கியது. எரியும் மெழுகுவர்த்திகளைப் பிடிக்காமல் ஒதுங்கிப் பறந்து வட்டமேசையின் சிவப்பு வெல்வெட்டில் அரக்குத் திட்டாக உட்கார்ந்தது. பிறகு மனம் மாறி, சட்டென்று வெர்டிகல் டேகாஃபில் எழுந்து, சுவரலமாரியின் ஆமை ஓட்டில் அமர்ந்தது. அதுவும் பிடிக்காமல் மறுபடி விர்ர்ர்ரிட்டு சங்குகளின் சிறிய ஓட்டைகளில் புகப் பார்த்தது. சங்கில் நுழைய எடை குறைய வேண்டும் என்று உணர்ந்து, அங்கிருந்து நகர்ந்து மேல்தட்டுக்கு ஏறியது. மெள்ள ஊர்ந்து, தாமிரத் தட்டின் உள்ளே நுழைந்து தண்ணீரைத் தொட்டும் தொடாமல், தாமரை போல் நின்றது.

கரப்பானின் இந்தப் பயண அனுபவங்களை முழுமையாகப் பார்க்க இருவரும் கொடுத்து வைக்கவில்லை. பல்லியிடமிருந்து தப்பிய கரப்பான், சிறகை ஓசையுடன் அசைத்துப் பறந்து வந்த அதே நொடியில்.. ஒரு அலறல், ஒரு ஹை ஜம்ப், இரண்டு குட்டிக்கரணம், ஒரு ஹர்டில் ஜம்ப், ஒரு லாங்க் ஜம்ப் என்று வரிசையாகவும் வேகமாகவும் - அதே நேரம் இருநூறு டெசிபலில் இரண்டாவது அலறலோடும் - வல்லி புரிந்த சாகசங்கள் எந்த ஒலிம்பிக் சேம்பியனையும் தோற்கடிக்கும் சாதனையாகும். ஜம்ப், கரணம், ஜம்ப், ஜம்ப் என்று அலறிக் கொண்டு வந்த மனைவியைப் பார்த்தார் சிங்கம். அடுத்த நொடியில் தாவி வந்த மனைவியைத் தாங்கிக் கேச் பிடித்தார்.

"வல்லி.. ஏம்மா உடம்பு இப்படி நடுங்குது?"

கனகவல்லி பேசவில்லை. கணவரை இறுக்கிப் பிடித்துக்கொண்டார். சிங்கத்துக்கு உள்ளூர இனித்தது. எனினும், வல்லியின் அடுத்த அலறலில் அவரைத் தவறவிட்டார். "ஐயையோ.. கனகம்.." என்று மனைவியைத் தூக்கி எழுப்பப் போனார். ஆனால் அதற்குள் படுத்த வாக்கிலேயே ஒரு ஹை ஜம்ப் செய்து சிங்கத்தின் கரங்களில் கேச் போல் விழுந்தார் வல்லி.

"என்னாச்சும்மா?" என்ற சிங்கத்துக்கு பதில் சொல்வதற்குப் பதில் தரையைச் சுட்டி அலறினார் வல்லி. வல்லியின் விரலைப் பார்வையால் தொடர்ந்த சிங்கம், சட்டென்று இடமிருந்து வலமாக ஐந்து முறை ஸ்கிப்பிங் குதித்தார், வல்லியைக் கீழே போடாமல் பிடித்தபடி. "ஐயையோ.. எலி எங்கிருந்து வந்துச்சும்மா நம்ம வீட்டுல?" என்றார்.

மெள்ளக் கீழே இறங்கிய வல்லி சுற்றுமுற்றும் பார்த்து மீண்டும் அலறத் தொடங்கினார். சுவற்றின் பல மூலைகளில் பல்லிகள் சிறு மாநாடு நடத்தின. மூஞ்சுரு சமையலறைக்கும் ஹாலுக்குமாய் ஓடியது. நின்றும் இருந்தும் நடந்தும் கிடந்தும் பறந்தும் காட்டியது கரப்பான்.

வாசலுக்கு ஓடிய சிங்கத்தை அழைத்தார் வல்லி. "ஏங்க.. எங்கே போறீங்க என்னை விட்டு.." கூவினார்.

"ஒண்ணுமில்லம்மா.. நீ அலறுதைக் கேட்டு நான் உன்னை அடிக்கிறதா யாரும் நினைச்சுறக் கூடாதில்லே? அதான் கொஞ்ச நேரம் வெளியில பொதுப் பார்வையில நின்னுட்டு வரலாம்னு..".

"அய்யோ.. என்னை விட்டுப் போவாதீங்க" என்று இரண்டு சமர்சால்ட், ஒரு ஹர்டில் ஜம்ப், ஒரு லாங் ஜம்ப் அடித்து மறுபடி சிங்கத்தின் கைகளில் கேச் ஆனார் வல்லி. "என்னை விட்டுறாதீங்க.." என்று சிங்கத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டார்.

"நிச்சயமா விடமாட்டேன்.. என் கனகமணி.." என்ற ராஜசிங்கத்தின் குரலில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காதலும் நிறைந்திருந்தது.

    "அப்புறம் என்ன.. வாஸ்தாவது போஸ்தாவது.. எந்தக் கண்றாவியும் வேணாம்னு எல்லாத்தையும் கலைச்சுப் போடச் சொல்லிட்டா கனகம். வாஸ்து பக்கமே இனி போகமாட்டேன்னு சொல்லிட்டா. பழைய கனகவல்லியா மாறிட்டா.." என்றார் ராஜசிங்கம். "எல்லாம் உன்னால தான். ரொம்ப நன்றி மல்லி"

"நான் ஒண்ணுமே செய்யலே.. எல்லாம் சிங்காரம் தான். அவனுக்கு நன்றி சொல்லு. சிங்காரமும் தயாவும் தான் பல்லி கரப்பான் மூஞ்சுரைப் பிடிச்சு உங்க வீட்டுல போட்டது.. அவங்களுக்கு நன்றி சொல்லு" என்று மல்லி சொல்லவும், சிங்காரம் மூன்று கிண்ணங்களில் பாஸந்தி எடுத்து வரவும் சரியாக இருந்தது.

"சிங்காரம்.. ரொம்ப நன்றிப்பா" என்றார் சிங்கம், முகமெல்லாம் புன்னகையாக.

"ஆகட்டும் சார்" என்று விலகிய சிங்காரத்தை நிறுத்தினார் மல்லி. "யப்பா.. ராஜசிங்கம்.. பல்லி மூஞ்சுரு கரப்பான் எல்லாம் சேர்த்து ஒரு அஞ்சாயிரம் ஆயிருச்சு.. சிங்காரத்துக்கு பத்தாயிரமா குடுத்துரு"

"இந்தா சிங்காரம்.. இருவதாயிரம்.. இதை வச்சுக்க. வாஸ்து சாயத்தை வெளுத்து என் வீட்டுல நிம்மதியையும் என் முகத்துல சந்தோஷத்தையும் கொண்டு வந்தே பாரு.. அதுக்கு விலையே இல்லப்பா" என்று சிங்காரத்திடம் ஒரு பணப்பொட்டலத்தைத் தந்தார் சிங்கம்.

2013/07/12

வாத்து வெளுப்பு



    திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செல்வநாயகமும் - ஒரு அறிமுகம்: [-]

அடையாரிலிருந்து திருவான்மியூர் போகும் வழியில் காந்தி நகர் தாண்டி உள்ளடங்கி இருக்கும் வெடரென்ஸ் க்ளப் நிறைய மாறிவிட்டது. எழுபதுகளில் அடையார் அமைதியாக இருந்த காலத்தில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று வாதம் புரிந்தப் பெருங்கல்லூரிப் பேராசிரியர்களும் மாலை நேரங்களில் கூடி, வெளிநாட்டு பீர் விஸ்கி வைன் என்று ஆமை வேகத்தில் அருந்திக் கொண்டு, பேருக்கு டென்னிஸ் ஆடிவிட்டு, முக்கியமாக கேன்டீனில் அவ்வப்போது தயாரான உருளைக்கிழங்கு மினி போண்டா, மெதுவடை, முந்திரிப்பருப்பு கிச்சடி, அவியல் சூப், பொடிமாவடு தயிர்சாதம் என்று வரிசையாக உள்ளே தள்ளியபடி இரவு பத்து மணி வரை அரட்டை அடித்த நாளிலிருந்து... நிறையவே மாறிவிட்டது.

இடையில் சில வருடங்கள் கேட்பாரற்று கிடந்த க்ளப், சென்றப் பத்து வருடங்களில் பழைய பொலிவுக்கு வந்துவிட்டது. உறுப்பினர் கட்டணம் நாட்டின் பெரும்பான்மையினருக்கு மாதச் சம்பளமாயிருந்தாலும், சென்னையைச் சுற்றித் திரண்டிருக்கும் செலவம் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பழைய கட்டிடம் என்றாலும் சுவரிலிருந்த இந்தியாவை நினைவுபடுத்தும் சுவர்ச்சித்திரங்கள் அத்தனையும் போய், இப்போது ஒவ்வொரு அறையிலும் ஒரு வெளிநாட்டு நகரத்தின் பின்னணியில் புது அலங்காரம். புதுக் கூட்டம்.

கால் சென்டர் அரை சென்டர் என்று தெருவுக்கு ஒன்றாய்க் கிளம்பியிருக்கும் மென்பொருள், அவுட்சோர்சிங், மற்றும் வெப் 2.0 கம்பெனிகளில், கல்லூரி முடித்த மறுநாளே சேர்ந்து, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கித் தாய்மொழி மறந்த இளைஞர் கூட்டமே பெரும்பாலும். "செக் அவுட் ஹர் அஸெட்ஸ் மேன்" என்று வாட்கா குடித்து வம்படிக்கும் ஆண்களை, தயங்காமல் "யா? வேரிஸ் யுர்ஸ்?" என்று பதில் சொல்லித் தலைகுனியவைக்கும், இளவயிறு தெரிய மேல்சட்டையணிந்த ஜீன்ஸ் பெண்கள். இவர்களை எல்லாம் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டு, எங்கேயாவது "அங்கிள்" என்று கூப்பிட்டுவிடப் போகிறார்களே எனப் பயந்து, ஒதுங்கியிருக்கும் என்னைப் போன்ற முப்பத்தைந்து வயதில் முடிகொட்டிப் போன அரைகுறை முதியோர் ஒரு சிலர். இந்த மாறுதல்களுக்கிடையே வெடரன்ஸ் க்ளப் வேர்கடலைச் சங்கமாக மருவியது புதிர்.

சில விஷயங்களில் மட்டும் சங்கம் மாறவேயில்லை. அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அசைக்க முடியாதபடி சுவையான சிற்றுண்டி வகை. வியாழக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும் பாதாம் சட்டினிக்கு மைல் கட்டி நிற்கும் கூட்டம். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அரசியல் பேசக்கூடாதென்ற விதிகளுக்குட்பட்டு, பெரும்பாலும் காதல் பிரச்னை பற்றிய வம்பு, அரட்டை, துக்கப் பரிமாறல். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் இளைய சமுதாயத்திற்கு அறிவுரை சொல்லி, சில சமயம் பிரச்னை தீர்த்து, பல சமயம் குட்டையைக் குழப்பித் தள்ளும் பேர்வழிகள். இவர்களில் தனித்து நின்று சாதனை புரியும் பேராசிரியர் அன்புமல்லி.

சற்றே பெண்மையான பெயராக இருந்தாலும், ஒருவேளை அதனால் தானோ என்னவோ, அன்பு சாருக்குக் காதல் அனுபவம் அதிகம். காதலித்த அனுபவம் குறைவு, காதலிக்கப்பட்ட அனுபவம் அதைவிடக் குறைவு என்றாலும், காதல் தொடர்பான அனுபவம் எக்கச்சக்கம். திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்தக் காலத்தில் அன்புமல்லியின் அப்பா லன்டனில் இருந்தபோது அவருக்கிருந்த காதல் நெருக்கடியைத் தீர்த்து வைத்த மல்லினர் என்பவரின் நினைவாக, இவருக்கு மல்லி என்ற இடைப்பெயரை சேர்த்து அன்புமல்லி என்ற பெயரைக் கொடுத்ததாகக் கேள்வி. உண்மை விவரம் தெரியாது. அனாவசியமாக வம்பு அரட்டை என்று போக மாட்டார். ஆனால் காதல் பிரச்னை தீர வழி கேட்டு வருபவருக்கு, இல்லை எனாது அறிவுரையும் உதவியும் வழங்கும் வள்ளல். காதல் சாமியார். திருவாளர் அன்புமல்லி செல்வநாயகம்.

இனி கதை..



    ண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த இருவரில் ஒருவர் சற்றுத் தயங்கி நின்றார். அவர் முகம் முன்தினம் செய்த மெதுவடை போல் பொலிவின்றித் தொய்ந்திருந்தது. "என்ன இடம் தயா இது?" என்று மற்றவரை இடித்தார். "வேர்க்கடலை சங்கம்னு சொன்னே? வேறே சங்கமாட்டம் தெரியுது? எங்கே பாத்தாலும் காலிப்பசங்களா இருக்காங்க? ஆம்பளை பொம்பளை வித்தியாசம் இல்லாம சிரிச்சு பேசிட்டு சந்தோஷமா இருக்காங்க.. தறிகெட்ட இடமா இருக்குதே? இங்கயா இருக்கான் அன்புமல்லி? எல்லாரும் சந்தோஷமா இருக்குதைப் பாத்தா வயத்தை குமட்டுதே? போயிரலாமா?"

தயா விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் ஸ்டைலில் நிதானமாக, "என்னப்பாஆ சொல்றே சிங்கம்ம்? நாலு பேர் சிரிச்சு பேசி சந்தோசமா இருந்தா, அது உனக்குத் தறிகெட்ட இடமாயிருச்சேஏ.. ம்ம்ம்.. ஒருகாலத்துல.. பார்த்தாலே சந்தோசமா சிரிக்கத் தோணுறாப்புல, சிரிச்ச்ச்ச முகமா இருந்த ஆளை.. இந்த நிலமைக்குக் கொணாந்துட்டாளேஏஏ!.. போகட்டும் விடு.. வாப்பா.. வலது காலை எடுத்து வச்சு வா. அது இல்லே, அந்த இன்னொரு வலது கால்.. அதேதான்.. மெள்ள வா. அன்புமல்லி உள்ளாறதான் இருப்பான். உன் பிரச்சினையத் தீர்த்து வைப்பான்" என்றபடி நண்பருடன் அரையிருளில் அறைதேடி நடந்தார்.

    தன்னெதிரே உட்கார்ந்த இருவரையும் பார்த்த அன்புமல்லியின் முகத்தில் புன்னகையும் வருத்தமும் மாறி மாறித் தோன்றின. "வா தயா.. யாரு இவரு? காணாம போன பெண்டாட்டி திரும்பக் கிடைச்ச மாதிரி ஏன் இப்படி வாட்டமா இருக்காரு?"

"மல்லி.. கிடைச்ச பெண்டாட்டி காணாம போனதால வாட்டமா இருக்கான்.. இவனைத் தெரியலியா உனக்கு?"

"பெண்டாட்டி காணாம போனதால வாட்டமா? அவனவன் பட்டாசு கொளுத்தி தானதருமம் செஞ்சு கிடா வெட்டி விழா கொண்டாடுற விஷயமாச்சே! இதென்ன இந்தாளு.. புதுசா இருக்குதே..! சத்தியமா இவர் யாருனு தெரியலபா" என்ற அன்புமல்லி தயாவைப் பார்த்தே பேசினார்.

"டேய்.. மல்லி.. இவன் ராஜசிங்கம்டா. நாம மூணு பேரும் ஒண்ணா படிச்சோம் எட்டாம்ப்பு வரைக்கும்.. இவன் கல்யாணத்துக்குப் போய் ஆளுக்கு ஒரு புதுச்செருப்பு எடுத்துட்டு வந்தமே.. மறந்துட்டியா?"

அன்புமல்லி இருந்த இடத்திலேயே சற்று அதிர்ந்து குதித்தார். சட்டென்று பார்த்தவர்களுக்கு அவர் திடீரென்று உயர்ந்து சுருங்கியது போல் தோன்றியிருக்கும். "டேய் தயா.. என்னை ஏம்பா இழுக்குறே? நீங்க ரெண்டு பேரும் படிச்சீங்கனு சொல்லு.. நான் எங்க அந்தத் தப்பெல்லாம் செஞ்சேன்?" என்ற அன்புமல்லி ஒரு கணம் ராஜசிங்கத்தைப் பார்த்துத் திரும்பினார். "தப்பா நினைக்காதே. அவனைப் பார்த்தாலே துக்கமாயிடுது.. அப்படியொரு களை.. ம்ம்.. ராஜசிங்கம்.. யாரு, முத பெஞ்சுல உக்காந்திருப்பானே அவனா? அதனால தான் எனக்கு அவன் முகம் தெரியலப்பா!"

"மல்லி.. நீதாம்பா இவனுக்கு எல்ப் செய்யணும். இவனையும் இவன் பெண்டாட்டியையும் சேத்து வக்கணும்.. இந்த விஸ்கி கிளாசை உன் காலா நெனச்சுக்குறேன்" என்று உயர்த்தினார். "அட, என்னப்பா காலியா இருக்குது.. சொட்டு கூட காணோம்?"

"தயா.. காதல் சமாசாரம்னா உதவி செஞ்சு காதலர்களை சேத்து வைக்க எனக்குத் தெரியும்.. காணாம போனவங்களை கண்டுபிடிக்கறது என் வேலையில்லையே? இவனுக்கு எப்படி என்னால உதவி செய்ய முடியும் புரியலியே? மன்னிச்சுக்க சிங்கம்.. உன்னை சட்னு நினைப்பு வராமப் போயிருச்சு.. பின் பெஞ்சுலயே இருந்தனா.. உன் முதுகு நினைவிருக்கே தவிர மூஞ்சை அதிகம் பார்க்கலபா.."

"பாத்தியா சிங்கம்? மொத பெஞ்சுல உக்காந்தா யாருக்கும் அடையாளமே தெரியாம போயிரும்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?" என்ற தயாவை முறைத்து, "என் பெண்டாட்டி காணாம போகலே மல்லி" என்றார் ராஜசிங்கம். "என்னோடதான் இருக்குறா.. ஆனா முன்னாட்டம் பேச மாட்டேங்குறா"

"உன் மூஞ்சைப் பார்த்த அதிர்ச்சிலே ஊமையாயிருப்பாளோ?"

"சேசே.. முன்போல பேச பழக மாட்டேங்குறாபா"

"ஞாபகமறதி, பைத்தியம்.. இந்த மாதிரி? பாயைப் பிராண்டுறாளா? பார்க்குறதுக்கு சாதாரணமா இருப்பாங்க.. திடீர்னு பாத்தா பாயெல்லாம் பிஞ்சிப் போயிருக்கும்.. உத்துக் கவனிக்கணும் இதெல்லாம்.."

"இல்லப்பா. அவ அப்படியேதான் இருக்கா. ஆனா வேறே ஆளா மாறிட்டா"

"அப்படியே இருக்கா, ஆனா வேறே ஆளா மாறிட்டா. புரியுது புரியுது.. பேய் பிசாசு காட்டேரி கொள்ளிவாய் கிள்ளிவாய் எதுனா பிடிச்சிருக்கும்னு சொல்றே.."

"இல்லப்பா"

"அப்ப சக்தி, காளி, ருத்ரசாமுண்டி, பைரவி, ஓங்காரி.. இதுல ஏதாவது ஒரு அம்மன் கிம்மன்?"

"வாத்து. வாத்து பிடிச்சிருச்சு.. சொல்லேண்டா சிங்கம்" என்றார் தயா.

"வாத்தா?" என்றார் அன்புமல்லி. "எது..? இந்த க்வாக் க்வாக்னு சத்தம் போட்டுகிட்டு நம்ம கிராமக் குளத்துல.. அதுவா பிடிச்சிருக்கு? வாத்துப்பேய் இப்பத்தான் கேள்விப்படறேன்.. ஆமா.. என்னா செய்யுது வாத்துப்பேய்?"

"வாத்துப்பேய் இல்லே மல்லி. வாத்து ஜோசியம். ஆனா லேசுப்பட்டதில்லே, அதி பயங்கரம். படு பயங்கரம். மகா பயங்கரம். பயங்கரத்தைப் பார்க்கிலும் பயங்கரம். பேயைக்காட்டிலும் பயங்கரம். அதாக்கும் பிடிச்சிருக்கு"

"புரியலியே தயா? வாத்துப்பேய் நிசமாவே நான் கேள்விப்பட்டதே இல்லையே?"

"சும்மா இரு தயா" என்றார் ராஜசிங்கம். "மல்லி.. வாத்துப் பேயும் இல்லே ஜோசியமும் இல்லே. வாஸ்து சாஸ்திரம். அதான் பேயாட்டம் அவளைப் பிடிச்சு ஆட்டுது. அது பிடிச்ச நாள்லந்து என் கனகவல்லி கருங்கல் ஜல்லியா மாறிட்டா.. அப்பப்போ சில்லியா நடந்துக்குறா. என் பசங்களுக்குக் கூட புரியாதபடி ஆளே மாறிட்டா. முப்பது வருசமா ஓடாத் தேஞ்சு போய்.. விட்டது சனியங்கனு பசங்கள்ளாம் போனபிறகு தாம்பா நாங்க காதலிக்கவே ஆரம்பிச்சோம்! அம்பது வயசுக்கு மேலே தனிமையில நாங்க ரெண்டு பேரும் எத்தனை சந்தோசமா இருந்தோம்! இப்ப என்னாடானா அவளை எனக்கே அடையாளம் தெரியலே. இந்த வாத்து சங்கடத்துனால.. அடச்சீ.. வாஸ்து சாஸ்திரத்துனால என் குடும்ப சந்தோசமே போச்சுபா. என் அன்பு மனைவி இப்படி மாறிட்டதால என் மனசே வெம்பிப் போச்சுபா. அதான் சோகம். உன்னால உதவ முடியும்னு தயா இங்க கூட்டியாந்தான். ஜோடி சேத்து வக்கறதுல உனக்கு அனுபவமாமே? வல்லியை பழையபடி மாத்த எனக்கு ஐடியா குடுப்பா.. வழிபண்ணுப்பா..".

"சிங்கம்.. பொதுவா நான் கல்யாணமான கேசுங்களை எடுக்குறதில்லே. ஏற்கனவே கல்யாணமான துக்கத்துல கஷ்டப்பட்டு நொந்துபோய், தானாப் பிரிஞ்சவங்களை நாம வேறே சேத்து வைக்கணுமாங்கற நல்ல எண்ணம். இருந்தாலும் நாம பழைய சினேகிதம்ன்றதால.. யோசிக்கிறேன். சரி, எல்லா விவரமும் சொல்லு. உன் மனைவியைக் கல்யாணத்தன்னிக்குப் பார்த்தது.. அதுகூட தயா சொல்றாப்புல ரெண்டு ஜோடி புதுசெருப்புலயே கண்ணா இருந்தனா, சரியாக் கூட பார்க்காம வந்துட்டேன்.. என்னா நடந்துச்சுன்னு சொல்லு. இந்த வாத்து வியாதி பத்தியும் சொல்லு. அதுக்கு முன்னால தீர்த்தம் பிரசாதம் எதாவது சாப்பிடலாம்" என்ற அன்புமல்லி, சிங்காரத்தை அழைத்தார்.

"கூப்டிங்களா சார்?" என்று அருகில் வந்த சிங்காரம் உடனே கேவி அழுதான். அடங்கியதும், "இல்லே சார்.. இத்தனை துக்கமான மனுசரை நான் பாத்ததே இல்லே சார். நம்ம க்ளப்புல லைட்டெல்லாம் மங்கிடுச்சு கவனிச்சீங்களா சார்? இவர் முகத்துல ஏன் இத்தனை சோகம்?"

"அது ஒண்ணுமில்லே சிங்காரம். சாரோட பெண்டாட்டி.."

"செத்துட்டாங்கனு சோகமா?"

"இல்லப்பா"

"சாவலேனு சோகமா?

"இல்லப்பா"

"யாரோடனா ஓடிப்போயிட்டாங்கனு துக்கமா?"

"இல்லப்பா"

"அப்போ ஓடிபோகலேனு வருத்தமா?"

"அட இல்லப்பா.. அவரே நொந்திருக்காரு, நீ நோண்டிப் பாக்குறியே?"

"மன்னிச்சுங்க சார்" என்ற சிங்காரம், ராஜசிங்கத்தைப் பார்த்துவிட்டு இன்னொரு முறை அழுதான். பிறகு அன்புமல்லியைப் பார்த்துத் திரும்பி நின்றபடி, "விஸ்கி, கொத்தவரங்காய் புளிவறுவல், முட்டைபுர்ஜி, வாழைப்பூ வடை, பூண்டுச்சட்னி.. அப்புறம் எறால் மசாலா தீந்துருச்சு சார்.. கத்தரிக்காய் மசாலா எடுத்துட்டு வரவா? ஒரே மாதிரி தான் இருக்கும் டேஸ்டு. இவரையும் சாப்பிடச் சொல்லுங்க, கொஞ்சம் சரியாவும். இவரைப் பார்த்தா எனக்குத் துக்கம் தூக்குது சார்" என்றபடி வாயைத் டேபிள் துடைக்கும் துணியால் பொத்திக் கொண்டு நகர்ந்தான்.

    விஸ்கியும் கொத்தவரங்காய் புளிவறுவலும் மெள்ள உள்ளே இறங்க விவரங்களை வெளியே கொட்டினார் சிங்கம்.

"இந்த வாஸ்து சாஸ்திரம்ன்றது ரெண்டாயிரம் மூவாயிரம் வருசத்துக்கு முந்தின சமாசாரம்..வீடு எப்படி கட்டுறதுனு சொல்லி வச்சிருக்கு சாஸ்திரத்துல"

"உன் பெண்டாட்டி சிவில் எஞ்சினயரா? அவ்ளோ படிச்சுட்டு உன்னையா கல்யாணம் கட்னா?"

"அந்த வீடு இல்ல மல்லி. இதுகூட தெரியலியே உனக்கு? வூடு கட்டுறதுனா பிரம்பை எடுத்துகிட்டு ஆடுறது.. நாலா பக்கமும் தாவிக் குதிச்சு, எல்லை கட்டி ஆடுறதுக்கு பேரு வூடு கட்டுறது.. எம்ஜிஆர் படத்துல பார்த்ததில்லே? சிங்கத்தோட ஒய்பு இப்ப அது மாதிரி பிரம்பை எடுத்துட்டு ஆடுறானு சொல்றான்"

"சும்மா இருங்கப்பா ரெண்டு பேரும்" என்ற ராஜசிங்கம், முறுகலாகத் தெரிந்த பொன்னிற வாழைப்பூ வடை ஒன்றை எடுத்து முழுதாக பூண்டுச் சட்னியில் நனைத்தார். வடைமேல் கணிசமான சட்னி சேர்ந்து கொள்ள, அப்படியே கடித்து ஓசைவரச் சுவைத்தார். "அட்டகாசமா இருக்குதுபா.. ம்ம்.. வீடு கட்டுறப்ப எட்டு திசைக்கும்.."

"நாலு திசை தானேப்பா? நீ என்னா எட்டுன்றே?"

"அது வந்து தயா.. நீ படிக்குறப்ப உன் அறிவுக்கு ஏத்தமாதிரி குறைச்சுட்டாங்கடா.. மொத்தம் எட்டு திசைங்க தெரியுதா? சொல்றதக் கேளு..இல்லின்னா இந்தா இந்த வடையைத் தின்னு.." என்ற ராஜசிங்கம் தொடர்ந்தார். "எட்டு திசைக்கும் எட்டு தேவதைங்க இருக்குறதை கவனிச்சு வீடு கட்டுறப்ப அந்த தேவதைங்களை ஆராதிக்குறாப்புல வீடு கட்டினா, அந்த வீட்டுல செல்வம், சந்தோசம், நிம்மதி, எல்லாம் இருக்கும்னு சாஸ்திரம் சொல்லுது.."

"வாத்து சொல்லுது.."

"ஆமா.. அதைத்தான் என் பெண்டாட்டி பெரிசா புடிச்சுக்கிட்டு சாஸ்திரம் சம்பிரதாயம்னு வீட்டை மாத்திட்டா.. ஆளை மாத்திக்கிட்டா.. நடத்தையை மாத்திக்கிட்டா.. வீடே தலைகீழா மாறிடிச்சு.. வாஸ்துன்றா.. சூயின்றா.. மாயின்றா.. பஞ்சபூதம்ன்றா.. என்னையும் இதுல இழுத்து விடுறா.. எம் பசங்க லீவுக்கு வந்தவங்க நான் வேறே யாரையோ கல்யாணம் கட்டி வீட்டுக்கு கூட்டியாந்துட்டேன்னு என்னை மொத்தி எடுத்துட்டாங்கப்பா.. அப்புறம் விவரம் சொன்னதும் அலறி அடிச்சுகிட்டு அடுத்த வண்டியிலயே ஊருக்குப் போயிட்டாங்க.. இது போதாதுனு தினம் அவ கிட்டே சாஸ்திரம் கேட்க நாலஞ்சு பேர் வராங்க.. கனகவல்லின்ற பேரைக்கூட இப்ப வல்லிமயினு மாத்திக்கிட்டு.. என்னத்தை சொல்ல..!"

"ஆனா நீதான் வீடு கட்டி வருசக்கணக்கா அங்கியே இருக்கியேபா? இப்ப திடீர்னு வீட்டை எப்படி மாத்துறது? நீ என்ன சொல்றே?"

"வாஸ்து மகிமைனு இல்லாததையெல்லாம் வேலையத்த அம்பட்டப் படுபாவி எவனோ கிளப்பி விட்டுருக்காம்பா.. அதை மிச்ச வேலையத்த அம்பட்டங்க எல்லாரும் பிடிச்சுகிட்டு.. ஏன் கேக்குறே கூத்தை?! நீ வீட்டுக்கு வந்து பாரு.. எல்லாம் விளங்கும்"

மல்லி யோசித்தார். "சரி. நீ சொல்றது என் ஆர்வத்தை கிளப்பிருச்சு சிங்கம். இன்னக்கே உன் வீட்டுக்குப் போவோம்" என்றார். "சின்னதா தயிர்சாதம் சாப்பிட்டா நல்லாயிருக்கும்ல?"

சிங்காரம் கொண்டு வந்த தயிர்சாதம் மோர்மிளகாயை அடுத்த பத்து நிமிடங்களில் மூவரும் ஒரு பிடி பிடித்துவிட்டுக் கிளம்பினார்கள்.

    "இதான் உன் வீடா? நல்லா வசதியா இருக்கும் போலிருக்கே?" என்றார் மல்லி, காரிலிருந்து இறங்கியபடி.

"உள்ள வா.. பயந்துருவே" என்ற ராஜசிங்கம் இரும்பு கேட்டை உள்ளே இழுத்துத் திறந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த அன்புமல்லி சுற்றுமுற்றும் பார்த்தார். மென்மையாக அதிர்ந்தார். மாடிப்படியோரமாக இருந்த இடத்தில் ஒரு பெரிய படம் மாட்டியிருந்தது அதனருகே வடக்கும் இல்லாமல் மேற்கும் இல்லாமல் ஒரு கோணலான வாக்கில் போட்டிருந்த நாற்காலியில் கனகவல்லி உட்கார்ந்திருந்தார். எதிரே அதே போல் கோணலான வாக்கில் போட்டிருந்த மயிலிறகு கட்டப்பட்டிருந்த நாற்காலிகளில் இருவர். அதிராமல் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

வேகமாக நடந்த ராஜசிங்கம், "கனகவல்லி.. கனகம்.. வல்லி.. இத பாரு யாரு வந்திருக்காங்க தெரியுதா? எங்கூட படிச்ச தயாவும் அன்புமல்லியும்.. நம்ம கல்யாணத்துக்கு வந்தவங்க.. உனக்கு ஞாபகம் இருக்குதா?" என்றார் உரக்க.

"யாருயா நீ? அம்மாவை வல்லிமயினு கூப்பிடாம கனகம் முல்லைனுட்டு" என்ற நாற்காலிக்காரர் ராஜசிங்கத்தைப் பார்த்துவிட்டு, "ஓ.. நீங்களா சார்.. மன்னிச்சுருங்க.." என்றபடி எழுந்தார். "அப்போ நாங்க போயிட்டு வரோம் மாதா வல்லிமயி.." என்று பணிவுடன் வெளியேறினர்.

நாற்காலியைத் திருப்பாமல் முகத்தை மட்டும் திருப்பிப் பார்த்த வல்லிமயி புன்னகைத்தார்.

பேயைக்கூட தனிமையில் சந்திக்கத் துணிந்த அன்புமல்லி ஒரு கணம் திடுக்கிட்டார். மாதா வல்லிமயினுடைய முகம் அத்தனை வெளுப்பு. கண்களில் மை. நெற்றியின் கணிசமான முப்பரிமாண பொட்டு கொஞ்சம் விட்டால் கீழே இறங்கி வந்து இவர்களை அடித்துவிடும் போலிருந்தது. மறுபடி புன்னகைத்து, "வரணும்" என்றார்.

தயா அன்புமல்லியின் பின்னே ஒளிந்துகொண்டு, "பயமா இருக்கு மல்லி.. ஓடிறலாம் வா" என்றார்.


(இன்னொரு பதிவில் முடியும்)



2013/07/07

கண்பிடுங்கி நீலன்


    ணலில் இறங்கிய விமலா, தன்னைப் பார்த்துக் கையசைத்தபடி கரையோரம் காத்திருந்தக் கணவனைக் கண்டாள். பேயறைந்தாற்போல் திடுக்கிட்டாள்.

ஆள் விழுங்கி அலை ஒன்று திடீரென்று உயர்ந்து வேகமாக அடித்துக் கொண்டு வருகிறதே? கவனித்து ஒதுங்காமல் ரகு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறானே? "ரகு!". குரல் எழவில்லை. "பின்னால பாரு.. ஓடு!". குரலே வரவில்லையே? தவித்தாள். அவசரமாக அவனை நோக்கி ஓட.. இதென்ன கால்களை யாரோ சிமென்ட் ஊற்றிக் கட்டி வைத்திருக்கிறார்களே? அடிவயிற்றிலிருந்து அலறினாள். ஓசையில்லை. சிலை போல் கணவன் தன்னையே பார்த்தபடி.. ஒருவேளை அவன் கால்களிலும் சிமென்ட் ஊற்றி... "ரகு! லுக்! போதும் கையசைச்சது.. பின்னால பாரு.. ராட்சச அலை.. ஓடு!". விமலா அலற அலற அவள் குரலோ இன்னும் அடங்கியது. ஆ! இதென்ன? திரண்டு வந்த அலையிலிருந்து திடீரென்று வெளிவந்த பருத்த கையைப் பார்த்து அலறினாள். முடியும் நகமும் வளர்ந்த வலிய பெரிய கை! சட்டென்று ரகுவின் கழுத்தை வளைத்து அலைக்குள் இழுத்தது. "யாராவது காப்பாதுங்க.. ஹெல்ப்!". அலறினாள். ரகுவைக் காணோம். "ரகு.. ரகு.. என்ன ஆச்சு உனக்கு.. எங்கே இருக்கிறாய்.. அலைக்குள் விழுந்தாயா?". திடீரென்று ரகுவின் அலறல் பெருங்கூச்சலாக, தெளிவாகக் கரையெங்கும் எதிரொலித்தது. "ஐயோ! கண் தெரியலியே.. கண்ணெல்லாம் எரியுதே.. விமி! விமலா!". நிச்சயம் ரகுவின் குரல். அலைக்குள் சிக்கியிருக்கிறான். அந்தக்கை! "ரகு.. இதோ வரேன்!" சிமென்ட் கால்களை இழுத்து ஓடினாள் விமலா. அலை மேலும் வளர்ந்து, கணங்களில் வெடித்து, சிவந்த ரத்தமும் சிதைந்த உடலும் கரையெங்கும் தெறித்தது. ரகுவின் கைவிரல் துண்டு ஒன்று அவள் மேல் வந்து விழுந்தது.

துடித்துப் போய் விழித்தாள் விமலா.

மூச்சு முட்டியது. வியர்த்தது. அருகில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ரகுவை வெறி வந்தாற் போல் பற்றியிழுத்தாள். "ரகு.. ரகு.."

ரகு எழுந்தான். "என்ன விமி? என்னடா ஆச்சு? ஏன் இப்படி பதட்டப்படுறே?" என்றான்.

திணறலும் அழுகையும் கலந்து, கனவைச் சொல்லி முடித்தாள். அவள் கண்முன் அலை இன்னும் ஆடியது. அந்த இடமும் காட்சியும் எங்கோ கண்டாற்போல்.

ரகு ஆதரவாக அணைத்தான். "ஈஸி விமி" என்றபடி அவளின் பருத்திருந்த இளவயிற்றை வருடினான். "பாப்பா பயந்திருக்கும்னு நினைக்கிறியா?"

விமலா சில நொடிகளில் சற்று அமைதியானாள். "நான் துடிக்கிறது தெரியலே? பாப்பா பயந்திருக்குமானு கவலைப்படுறதப் பாரு?"

"சாரிடா பட்டு. டின்ட் மீன் இட். நீ தான் எனக்கு முக்கியம். எத்தனை பாப்பா வந்தா என்ன?" என்றபடி அவளை நெருக்கமாக அணைத்தான். "கெட்ட கனவுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. முக்கியமா ஸ்ட்ரெஸ். பாப்பா பிறக்குறதுக்கு முன்னே புது வீடு வாங்கி குடி போகணும்னு நீ தானே துடிச்சே? வீடு தேடல், மெடிகல் செக்கப், பேங்க் லோன் கிடைக்குமோ கிடைக்காதோனு டென்ஷன், அப்புறம் காய்கறி, பேபி பர்னிசர், யோகா, அங்கே இங்கேனு நீ அலையுறே.. டு டாப் இட் பதினேழு வார கர்ப்பம். துணைக்கும் ஆளில்லே. சரியா டயத்துக்கு புஷ்டியா சாப்பிட்டியோ என்னவோ.. இல்லே மசக்கைனு கண்டதையும் தின்னியோ என்னவோ.. எல்லாம் சேர்ந்து கெட்ட கனவு.."

விமலா பதிலேதும் சொல்லாமல் ரகுவின் தோள்களில் சாய்ந்து அவன் கைகளை இன்னும் இறுக்கமாக இழுத்துக் கொண்டாள். "ரகு.. அந்த பீச்.. அந்த இடத்தை எங்கயோ பாத்த மாதிரி.."

"எல்லா பீச்சும் ஒரே மாதிரி தான் இருக்கும்.. டோன்ட் வொரி. நீ ரொம்ப டென்சனாயிருக்கே. எல்லாம் சரியாயிடும். உனக்குப் பிடிச்ச வீடு அடம்பிடிச்சு வாங்கிட்டே.. நான் பார்ட் டைம் பிச்சை எடுக்கணும் மாசப்பணம் கட்ட.." என்றபடி அவள் முகத்தைத் தொட்டான். உதடுகளை மெள்ள வருடி, "எத்தனை கஷ்டப்பட்டாலும் நீ எங்கூட இருந்தா எங்கருந்தோ துணிச்சல் வந்துடுது.. நீ பக்கத்துல இருந்தா உலகத்தை எட்டி உதைக்கலாம் போல ஒரு தைரியம். நீ எனக்குத் தர தைரியத்துல பாதியாவது நான் உனக்குத் தரமாட்டேனா? கவலைப்படாதே. எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட். விமி, ஐ லவ் யூ ஸோ மச்"

"ம்க்கும்.. சொன்னா போதுமா.. செயல்ல காட்ட வேணாமா?

தலையைச் சாய்த்து அவளைப் பார்த்தான். "ஏய்.. நீ தானே வேணாமுன்னே?" என்றபடி அவளோடு ஒட்டினான். "ஆமா.. கர்ப்பமா இருந்தா எத்தனை நாள் வரைக்கும் ஆபத்தில்லாம செய்யலாம்?"

"ம்? யார் கண்டா? லேபர் வரைக்கும் பார்ப்போம், என்ன சொல்றே?" சிரித்தாள். தன் முதுகில் அவன் மார்பு அழுந்தும் இதத்தில் மயங்கினாள். கைகளைப் பின்னால் நீட்டி அவன் கைகளை இழுத்துத் தன் வயிற்றோடு பிணைத்துக் கொண்டாள். "ஐ லவ் யு ரகு" என்றாள் மென்மையாக.

    வீடு வாங்கல் தொடர்பான பதிவு வேலைகள் எதிர்பார்த்ததை விட சுலபமாகவும் சீக்கிரமாகவும் முடிந்ததில் ரகுவுக்கும் விமலாவுக்கும் சந்தோஷம். பத்திரம் கையெழுத்தான கையோடு வீட்டில் அன்றிரவு தங்க முடிவு செய்தார்கள். எத்தனை தடுத்தும் கேட்காமல் விமலா வண்டியோட்டுவதாகச் சொல்ல, ரகு அவளருகே உட்கார்ந்தான். நெரிசலை அலட்சியமாகக் கடந்து வேகமாகக் காரோட்டிய மனைவியைப் பெருமையுடன் பார்த்தான். பதினைந்து மைல் பயணத்தை பத்து நிமிடங்களில் முடித்து விடுவாள் போல. கண்களை மூடி வண்டியின் வேகத்தையும் ஏசி காற்றையும் அனுபவித்தவன், திடீரென்று மெலிதாகச் சிரித்தான்.

    ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்ற ரகு, அசாதாரண விளம்பரக் கம்பெனி ஒன்றில் கிடைத்த சாதாரண வேலையில் நீடிக்க மனம் ஒப்பாமல் எதையோ இழப்பது போல் தவித்தான். சமீபத்தில் வெளியான தனது குழந்தைகள் புத்தகம் பெற்ற சுமாரான வரவேற்பில் மனம் லயித்து.. தொடர்ந்து சிறார் காவியங்கள் எழுத விரும்பி வேலையை ராஜிநாமா செய்ய எண்ணி, அன்றைக்குப் புதிதாக வந்திருந்த மேனேஜரின் அறைக்குச் சென்றபோது விமலாவைச் சந்தித்தான்.

"உங்களுக்கு என் வாழ்த்துக்கள் விமலா.. என் பெயர் ரகு. காபி ரைடிங் க்ரூப். சிட்ரஸ் ப்ராஜக்ட் டீம் லீட்"

"தெரியும். உங்களைப் பத்தி நிறைய படிச்சிருக்கேன் கம்பெனி ரிபோர்ட்ல.. எல்லாம் ஏ ப்லஸ். என்ன விஷயமா வந்தீங்க?"

"வேலையை ராஜிநாமா செய்யப்போறேன். இமெயில் நோடீஸ் அனுப்பிட்டேன். சொல்லிட்டுப் போலாம்னு.."

"வாட்.. என் முதல் நாளிலா? ராட்சசி மேனேஜர்னு என்னைப் பத்தி யாராவது உங்க கிட்டே சொல்லிட்டாங்களா அதுக்குள்ளே? நான் அவ்ளோ மோசமில்லே ரகு.. ஐ ஹேவ் எ ஹார்ட், மே நாட் பி சைசபில், யெட் டிசர்னபில் யு நோ?"

சிரித்தான். "இல்லை. ஒரு மாதமாகவே வேலையிலிருந்து விலக நினைத்திருந்தேன். எனக்கு இந்த வேலையில் மனமில்லை"

"வேலையில் மனசு இல்லாட்டிப் போனா என்னா? பணம் வருதே? வேலை என்ன காதலியா?"

"ஐ காட் டு கோ"

"என்ன செய்யப் போறே?"

"குழந்தைகள் புத்தகம் எழுதப் போறேன். சாகசக் கதைகள், மொழிபெயர்ப்புகள், சித்திரக் கதைகள்.. நிறைய ஐடியா இருக்கு. சின்னஞ்சிறு மனசுகள் நிறைய படிக்கணும். சோஷலி ரெலவென்ட் அன்ட் இம்பார்டென்ட். இன்றையத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாழ்க்கை வசதிகளினால் ஏற்பட்டிருக்குற ஒரு பெரிய சமூக இழப்பு, புத்தக வாசிப்பு. வளரும் மனதுகள் நிறைய படிக்க வேண்டும். அதுக்கு என்னால ஆனதை செய்யப் போறேன். ஐ நீட் எ.."

"மீனிங்புல் லைப்?"

"யெஸ். என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேணும்"

"அப்ப நாங்கள்ளாம் என்ன புடுங்குறோமோ ரகு? இந்த வேலை எத்தனையோ பேருடைய வாழ்க்கைக்கு அர்த்தம் கொண்டு வருது. ஸ்டில், உன் விருப்பம் எதுவோ அதுல உன் திறமையைக் காட்டுறதுல தவறே இல்லை. யு மஸ்ட் பர்ஸ்யு யுர் பேஷன். குழந்தைகள் புத்தகம் எழுதுறது பிச்சைக்கார வேலையாச்சே.. பார்டன் மை ஹிட்"

"பணம் அதிகம் இல்லைதான், பட் லாங் டர்ம்.. எல்லாம் சரிவரும்"

"ரகு. உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. அதிலும் இன்னைக்கு என் முதல் நாள். உன்னை இந்தக் கம்பெனி இழப்பதை நான் விரும்பவில்லை. உன் எழுத்து உனக்கு வசதிகளைத் தரும் வரையில், எனக்கு பார்ட் டைம் வேலை பாரேன்? நீ ஆபீசுக்கு வரவேண்டாம். ஐ'ல் கிவ் யு வர்க்.. நூறு டாலர் வார ரிடெயினர்.. கான்ட்ராக்ட் வேலைக்கு கம்பெனி குடுக்குற மணிக்கூலி. என்ன சொல்றே?"

விமலாவை ரகுவுக்கு உடனே பிடித்தது. "டீல். ரொம்ப நன்றி".

தொழில் முறை தொடர்பு நாட்பட மெள்ளக் காதலாகி ஒரு நிமிடம் கூடப் பிரிந்திருக்க முடியாத ஏக்கவெறியில் முடிய, திருமணம் செய்து கொண்டார்கள். இடையில் ரகுவின் எழுத்துக்கு மதிப்பு உண்டாகி ஆறு புத்தகங்கள் சுமாராகவும் இரண்டு புத்தகங்கள் பெருமளவும் விற்று, அவற்றில் ஒன்று ந்யூபரி விருதும் பெற்றுவிட, தனி ஏஜன்ட் வைக்குமளவு வளர்ந்திருந்தான். கருவுற்ற நான்கு மாதங்களில் கர்ப்பநாள் விடுமுறையாக எட்டு மாதங்கள் எடுத்து வீட்டிலிருந்தாள் விமலா.

    "எதுக்குடா சிரிக்கிறே?" என்றாள் விமலா. அறுபத்துமூன்று மைல் வேகத்தில் சீராகச் சென்றது வண்டி. இரண்டாவது எக்சிட்டில் விலகி தனிப்பாதையில் ஆறு மைல் சென்றால் மிகச் சிறிய கடலோரக் கிராமத்தில் வீடு வந்துவிடும். முதல் சொந்த வீடு. நூறு வருடங்களாக அமெரிக்க ஜனாதிபதி போர்டின் குடும்பத்தார் இருந்த கட்டிடம் என்றாலும், அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, நன்றாகப் பராமரிக்கப்பட்ட பிரமாண்டமான வீடு. ஏழு பெட்ரூம், ஐந்து பாத்ரூம், கெஸ்ட் ஹவுஸ், டீ ரூம், கீழே ஒரு வரவேற்பரை, மாடியில் ஒரு வரவேற்பரை, லைப்ரெரி, இரண்டு ஆபீஸ்கள், கீழே ஒரு சமையலறை, மாடியில் ஒரு சமையலறை, ஸ்டீமர், சானா, நீச்சல்குளம், ஒரு ஏக்கருக்கு சற்று அதிகமான நிலம், பூந்தோட்டம்.. எல்லாம் கடந்து கால் மைல் சரிவில் சொந்தமான தனி பீச். நினைத்து நினைத்து மிகவும் மகிழ்ந்தாள். அருகே இருந்த ஆசைக் கணவன் ரகுவைப் பார்த்தாள். "எதுக்குடா சிரிச்சே?" என்றாள் மறுபடி.

"நம்ம முதல் சந்திப்பை நினைச்சு சிரிச்சேன். நல்ல வேளை நான் உன்னை நேரில் பார்த்து சொல்லிட்டு போகத் தோணிச்சேனு எத்தனை நாள் என்னை நானே பெருமையா நினைச்சுக்குறேன் தெரியுமா?"

"ஐயே.. அன்னிக்கே உன்னை பிச்சையெடுரா போடானு விட்டிருக்கணும். ஏதோ பார்க்க ஹேன்ட்சமா இருக்கானே ஒரு தனிமையான மாலை நேரத்துக்கு உதவுமேனு கணக்கு பண்ணி வச்சேன்.. ஆனா இப்படி கல்யாணம் பண்ணிக்கும்படி ஆவும்னு நினைச்சுக்கூட பார்க்கலே"

"நானா கல்யாணம் பண்ணிக்க சொன்னேன்? நீதான் துரத்தித் துரத்தி கல்யாணம் செஞ்சுக்க வற்புறுத்தினே?"

"வெல்.. எல்லாம் காரணமாத்தான். என் காரியம் முடிஞ்சுடுச்சு. உன் பேர்ல கடன் வாங்கி, எனக்குப் பிடிச்ச ப்ரைவேட் பீச் ஹவுஸ் என் பேர்ல வாங்கியாச்சு. என்னோட சொந்த பேங்க் அகவுன்ட்ல நான் சேத்த பணம் அத்தனையும் அப்படியே இருக்கு. உன்னை மாதிரியே அழகா ஒரு குழந்தையும் பெத்துக்கப் போறேன். இனிமே உன்னால எனக்கு எந்த பயனும் இருக்குறதா தெரியலியே, மிஸ்டர் வாட் இஸ் யுர் நேம்? வேணும்னா அடுத்த ஸ்டாப்புல இறங்கிக்கயேன்? லெட்ஸ் பார்ட் எமிகப்லி" என்று ரகுவின் இடுப்பில் வலது கையால் இடித்தபடி வண்டியை நெடுஞ்சாலையிலிருந்து விலக்கி வேகம் குறைத்து, தனிப்பாதையில் திருப்பினாள்.

"விமி.. வாச் அவுட்!" ரகு அலறினான். விமலா வண்டியைத் துரிதமாக இடப்புறம் ஒடித்தாள். சட்டென்று மறைவிலிருந்து வந்த ஒரு கிழவியைத் தவிர்த்தாலும், வண்டி லேசாக மோதி கிழவி ஐந்தடி பக்கவாட்டில் எகிறி விழுந்தாள்.

"மை காட்!" என்று வண்டியை நிறுத்தினாள் விமலா. ரகு கதவைத் திறந்து அவசரமாக ஓடினான். கிழவியை கைத்தாங்கலாக எழுப்பினான். கிழவிக்கு அடிபடாததில் அவனுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும். "ஐம் சாரி.. வி ஆர் சாரி" என்று பலமுறை மன்னிப்பு கேட்டான். விமலாவும் மெள்ள அருகில் வந்தாள். மன்னிப்பு கேட்டாள். ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போவதாகச் சொன்னாள். கிழவி மறுத்தாள், "ஐ'ம் ஆல்ரைட்". ரகு தந்தப் பணத்தை வாங்கிய கிழவி, அப்படியே விமலாவிடம் கொடுத்தாள். "மை கிப்ட் பார் யுவர் சைல்ட். செவ்வானமா சிவப்புல பட்டுச் சட்டையும் பொம்மையும் வாங்கி கொடு" என்றாள் சிரித்தபடி. வீட்டில் கொண்டு விடுவதாக எத்தனை சொல்லியும் கேட்காமல், "ஹேபி டு மீட் யு போத்" என்று சாலையின் குறுக்கே நடந்தக் கிழவி, எதிர்புறம் இருந்த கடைகள் ஒன்றினுள் நுழைந்தாள். இன்னும் அதிர்ச்சி அடங்காத விமலாவை பின்னிருக்கையில் வசதியாக அமர்த்திவிட்டு வண்டியைக் கிளப்பினான் ரகு. "நல்ல வேளை எதுவும் ஆகலே. உனக்கு எப்படி இருக்கு? ஆர் யு நெர்வஸ்?"

"என்னைப் பத்தியே கவலைப்படு.. பாவம் அந்தக் கிழவி.. மை காட்.."

"உன்னைப் பத்தி நான் கவலைப்படாம? நல்ல வேளை கிழவிக்கு எதுவும் ஆகலே.. வேர் டிட் ஷி கம் ப்ரம்?"

"ஆச்சரியமா இருக்கு.. நம்ம கிட்டே எதையுமே வாங்கிக்கலே.."

"ஆனா உன் வயித்தையே வெறிச்சுப் பாத்தாபுல எனக்குத் தோணிச்சு. சிவப்பு கலர்ல ட்ரெஸ்சும் பொம்மையும் வாங்கிக் கொடுனு வேறே சொல்லிட்டுப் போறா. வியர்ட்"

அதற்குள் கிராமத்தின் மையத் தெருவைக் கடந்து, மேட்டுத் தெருவில் ஊர்ந்து வளைந்து, உடன் தொடர்ந்த மலையையும் கடலையும் பார்த்து ரசித்தபடி வீட்டுக்கு வந்தார்கள். "வெல்கம் ஹோம் டார்லிங்" என்றான் ரகு, காரை போர்டிகோவில் நிறுத்தி. விமலாவை நடக்க விடாமல் அப்படியே இரு கைகளாலும் அள்ளிக் கொண்டு வீட்டு வாசலுக்கு வந்து இறக்கினான். கதவைத் திறந்தான். "உனக்காக என் உயிர்க்காதலியே. எல்லாம் உனக்காக".

ரகுவை முத்தமிட்ட விமலாவின் கண்களில் லேசாக ஈரம். "ஐ'ம் ஸோ ஹேபி ரகு. என்னை விட்டு எங்கயும் போயிடாதே" என்றபடி அவன் கைகளைக் கோர்த்துக் கொண்டு உள்ளே நடந்தாள்.

"அப்போ எமிகபலி பார்ட்னு சொன்னதெல்லாம்?"

"ஷ்!" என்று அவன் உதடுகளைப் பொத்தி மறுபடி முத்தமிட்டாள். "ஒரு தடவை சொன்னதுக்கே என்ன ஆச்சு பாத்தியா. இனிமே அப்படி விளையாட்டுக்குக் கூட சொல்லமாட்டேன்"

"ஓ.. யுர் கெடிங் முஷி. போகுது விடு பட்டு. கிழவியோட அஜாக்கிரதை. நீ என்ன செய்வே? இன் ஸ்பைட்.. நீ சட்னு வண்டியை ஒடிச்சது நல்ல ப்ரசென்ஸ் ஆப் மைன்ட்" என்றான் ரகு. "புது பர்னிசர் நாளைக்கு வந்துருமா? இன்னிக்கு நைட் எங்கே படுக்குறது?"

அவனை குறும்புடன் பார்த்த விமலா "பெட்ரூம், சோபா, ஹால், கிச்சன், மாடிப்படி, பாத்ரூம், கராஜ் எல்லாம் நிறையப் படுத்தாச்சு.. தரையில படுத்து நாளாச்சுல்ல?" என்றாள்.

அறைகளைக் கடந்து பின்கட்டுக்கு வந்தார்கள். "சரிவு வரை நடந்து பீச் பார்க்கலாம் வரியா விமி? சன்செட் டைம்" என்றான் ரகு.

பூந்தோட்டத்தைக் கடந்து புல்தரை நடுவில் இருந்த சிமென்ட் நடைபாதையில் மெள்ள நடந்தார்கள். வீட்டு எல்லையோரமாக இருந்த பாறை வேலியில் சாய்ந்து நின்றார்கள். மாலைச் சிகப்பு வானமெங்கும். சற்றுத் தொலைவில் மிதமான அலைகளுடன் கடல். யாருமற்ற தனி பீச். விமலா வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ரகுவைப் பிடித்திருந்த அவள் கை இறுகி இறுகி.."அவுச்!" என்றான் ரகு. "என்ன பட்டு, என்ன ஆச்சு? ஒய் ஆர் யு டென்ஸ்?"

"ரகு.. நேத்து கனவுல வந்துச்சே கடற்கரை.. எங்கயோ பாத்திருக்கேன்னு சொன்னனே.." என்றுச் சுட்டினாள். சொந்த வீட்டின் பின்புறம்! "திஸ் இஸ் இட்" என்ற விமலா நடுங்கினாள். பாறைமேல் உட்கார்ந்தாள்.

ரகு அவளைச் சமாதானப்படுத்தினான். "ரிலேக்ஸ் பேபி. அதெல்லாம் எதுவும் கிடையாது. திஸ் ப்லேஸ் இஸ் ப்யூடிபுல். கனவுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. பயப்படாதே"

"ரகு.. மறுபடி பாரு.. தி ஸ்கை இஸ்.."

"செவ்வானம். உன்னழகுல பாதிதான்.. பட் ப்ரிடி ஸ்டில்"

"ப்ச.. அந்த கிழவி என்ன சொன்னா? ஞாபகம் இருக்கா?"

"அதனால? எல்லாத்தையும் போட்டுக் குழப்புறியே பட்டு?"

"இல்லே ரகு. சம்திங் ஹியர். அந்தக் கிழவி நம்மகிட்டே ஆங்கிலத்துல பேசினா. சிவப்பு கலர்ல துணியும் பொம்மையும் வாங்கிக் குடுன்றது மட்டும் தமிழ். கவனிச்சியா? இப்பத்தான் எனக்கும் உறைக்குது. அதுவும் 'செவ்வானமா சிவப்புல பட்டுச்சட்டையும் பொம்மையும்'னு இந்தக் காலத்துல நம்ம ஊர்லயே யாரும் பேசுறதில்லே.. இந்த நாட்டுல, இந்த ஊர்ல, எங்கேயோ இருக்குற மூன் பே கிராமத்துல.. தமிழ் பேசுறக் கிழவி எப்படி வந்தா? அதுவும் சரியா நம்ம கார் முன்னால விழுந்து.. சம்திங் ஹியர். சம்திங் சினிஸ்டர்."

"டேக் இட் ஈஸி டியர்.. எல்லாத்துக்கும் விளக்கம் இருக்கு..". ரகுவுக்கு அவள் கலவரம் புரியாவிட்டாலும், கிழவி விமலாவின் வயிற்றை வெறித்துப் பார்த்தது நினைவுக்கு வந்தது.

"ரகு" என்று திகிலுடன் கூவினாள் விமலா. "வயிறு என்னவோ செய்யுது ரகு.. ரொம்ப வலிக்குது.. ப்லீஸ் ஹெல்ப் மி. கெட் ஹெல்ப்".

(தொடரும்) ▶2

2013/07/03

அந்தக்கடை


ஒப்பாரி யால்சோகம் போகாது போனவுயிர்
இப்பாரில் கண்ணீரால் வாராது - துப்பார்க்குச்
சிக்காத உண்மையிது போனது வருமெனில்
துக்கத்திற் கீடில்லை பொன்.
-அருளரசன்
('இயன்ற வரையிலும் இனிய தமிழில்' வலைப்பதிவிலிருந்து*)


    கரின் மையச் சாலையை ஆக்கிரமிக்கும் வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் கிழக்கோரக் கடை.

அச்சமா கூச்சமா என்றுத் தெளிவாகப் புலப்படாத பாவனையுடன் சுற்றிலும் நோட்டமிட்டுத் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தவர், சட்டென்றுத் திரும்பி கடைப்பெயரை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு, உள்ளே வந்தார்.

தரையில் இரானியக் கம்பளம் விரித்த சிறிய நூறு சதுரடி அறையின் ஒரு மூலையில் மரமேசை. மேசையின் பின்னே நாற்காலியில் புத்தகத்தலை மனிதன். இல்லை, புத்தகம் தலை மறைத்த மனிதன். எதிரே இரண்டு நாற்காலிகள். மேசையின் இடப்புறம் நாலடி உயரத்துக்கு இளம்பச்சை வண்ணமடித்த ப வடிவ மரச்சுவர்த் தடுப்பு. தடுப்புக்குள் இருந்தது தெரியவில்லை. மற்றபடி, குறிப்படும்படி எந்தவித அலங்காரமோ, விற்பனைக்கான பொருளோ தென்படவில்லை.

எல்லாவற்றையும் நோட்டம் விட்டபடி உள்ளே வந்தவர், மேசையின் பின்னே நாற்காலியில் உட்கார்ந்திருந்தவனை நெருங்கினார். "சார்.."

"வாங்க" என்ற குரலுடன், புத்தகம் துறந்து தலை காட்டினான் கடைக்காரன்.

"உங்க கடை... தினுசா இருக்குது" என்றார் வந்தவர்.

"ஏன்?"

"இல்லே... 'அந்தக்கடை'னு பேர் வச்சிருக்கீங்களே?"

"ஆமாம்"

"எந்த வியாபாரம் பண்றீங்க?" என்று வியப்புடன் கேட்டார்.

"அந்த வியாபாரம் தான்" என்றான்.

"இப்படி வெளிப்படையா செய்றீங்களே தம்பி?"

"இதுல என்ன ஒளிவு மறைவு? தெரிஞ்ச சமாசாரம் தானே? எல்லா இடத்திலயும் எல்லாருக்கும் நடக்கிறது தானே?"

"அது சரி. ஆமா.. 'நூறு சதவிகிதம் உத்தரவாதம்'னு வேறே போட்டிருக்கீங்களே?"

"கண்டிப்பா. காரியம் நடக்கலின்னா காசு வாபஸ்"

"காலம் எப்படி மாறிடுச்சுனு ஆச்சரியமா இருக்கு தம்பி! எதுக்குத்தான் உத்தரவாதம்னு ஒரு முறையே இல்லாம போச்சு. சரி, இதில ஒண்ணும் ஆபத்தில்லையே?"

"இல்லை சார்"

"எவ்வளவு பணம் வாங்குறீங்க?"

"ஒருத்தருக்கு இரண்டாயிரம் ரூபாய்"

"அதிகம் தான்.. இருந்தாலும் இந்த நாள்ல கால் சென்டர் முக்கா சென்டர்னு பசங்க எக்கச்சக்கமா சம்பாதிக்குதுங்க. சரி. எங்கே இடம்?"

"இங்கதான். பக்கத்து மறைவுல"

"என்ன சார் இது? இங்கேயா? கதவு கூட இல்லையே? நாலடி உயரம். எட்டிப் பாத்தா எல்லாம் தெரியும் போலிருக்குது? போலீஸ்.."

"அதெல்லாம் எந்தப் பிரச்சினையும் கிடையாது. பர்மிட் வாங்கியிருக்கிறேன்.. சட்டப்படியே இந்த வியாபாரம் நடக்குது.. இதுக்காக தனிப்படிப்பு படிச்சிருக்கேன்"

"அடேங்கப்பா.. இதுக்கொரு படிப்பா? நாடு முன்னேறிடுச்சு தம்பி" என்று மரச்சுவரை எட்டிப் பார்த்தார். "உள்ளாற யாரும் காணோமே?"

"நானும் நீங்களும் தான்.. வேறே யாரும் தேவையில்லை"

"என்னாது? நானும் நீங்களுமா.. என்னா விபரீதம் தம்பி இது?"

"பயப்படாதீங்க சார். யாருக்கும் உங்க விவகாரம் தெரியாது. உங்க ஊர், பேர் எதுவும் கேட்க மாட்டேன். இதுல ஒரு கையெழுத்து போட்டு பாதிப் பணத்தைக் கொடுங்க. நீங்க பிறந்த தேதி, நேரம், இன்னும் சில விவரங்கள் தேவை. அப்புறம் இந்தக் குச்சியில் உங்க வாயிலிருந்து கொஞ்சம் எச்சிலைத் தொட்டுக் கொடுங்க. நாளைக்கு என்னை வந்து பாருங்க, விவரமெல்லாம் சொல்றேன். மிச்சப் பணத்தை அப்ப கொடுத்தா போதும்" என்றான்.

"எதுக்குங்க? அந்தக்கடைனு பேர் வச்சுக்கிட்டு குச்சி எச்சில்னு என்னென்னவோ கேக்கறீங்களே தம்பி?"

"உங்க உயிரணு விவரத்தை வச்சு நீங்க எந்த தேதியில இறந்து போவீங்கனு துல்லியமா கணிச்சு சொல்வேன் சார். அந்தம்னா முடிவு. அதான் அந்தக்கடை. நீங்க என்ன நினைச்சீங்க?"

"என்னாது? எனக்கு எப்ப சாவுனு சொல்வீங்களா? அத சொல்றதுக்கு, உனக்கு காசு வேறே தரணுமா தம்பீ? அந்தக்கடைனு பேர வச்சுகிட்டு நல்லா ஊரை ஏமாத்தறீங்கப்பா. அடப் போய்யா.." என்று நொடியில் காணாமல் போய்விட்டார் வந்தவர்.

    மூன்று மாதங்களாக இதே நிலை.

கல்லூரியில் படிக்கும் போது டிஎன்ஏ ஆய்வுப் பிரிவில் கல்லூரிப் பேராசிரியருக்குத் தெரியும்படி ஒரு ஆராய்ச்சியும், அவரறியாமல் இன்னொரு ஆராய்ச்சியும் செய்து கொண்டிருந்தான். மரணகாலக் கணிப்பு. டிஎன்ஏ ஆராய்ச்சித் திறன் மற்றும் பேஸ்கல் சி கணினி மொழிகளில் அவனுக்கு இருந்த தேர்ச்சியையும் வைத்துக் கொண்டு, ஒரு நாள் தற்செயலாகத் தோன்றிய எண்ணத்தைச் செயல்படுத்தி.. எலி, முயல், பன்றியில் தொடங்கி குரங்கு வரை பரிசோதனை செய்து பார்த்து விட்டான். குறித்த நேரத்தில் ஒவ்வொன்றும் இறந்தன. அருகே மருத்துவக் கல்லூரியில், இறக்கும் தறுவாயில் வந்தவர்கள் அல்லது இறந்து போனவர்களின் டிஎன்ஏ விவரங்களைத் திருடிக் கொண்டு வந்து வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்து விட்டு, ஒரு முடிவுக்கு வந்தான்.

பிஎச்.டி படிப்பும், போஸ்ட்-டாக்டர் பயிற்சியும் முடித்த பின், மற்றவர்கள் போல் துணைப் பேராசிரியராகவோ, மருந்து நிறுவன ஆராய்ச்சிக் குழுவிலோ வேலைக்குப் போகாமல், சொந்தமாக வேலை செய்ய வேண்டும் என்ற முனைப்போடு, தனக்குத் தெரிந்த துறையில், மரண நேரத்தைக் கணித்துச் சொல்லும் தொழில் தொடங்குவதென்று தீர்மானித்தான். மரணகாலத்தைத் தெரிந்து கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வம் கொள்வார்கள் என்று நம்பினான்.

கல்லூரி நிர்வாகத்துடன் தன்னுடைய டிஎன்ஏ பற்றிய ஆராய்ச்சிக்கான வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு, தொழில் தொடங்கி மூன்று மாதமாகி விட்டது.

கேலியும் கோபமும் ஏமாற்றமும் தான் மிஞ்சியதே தவிர, ஒரு வாடிக்கையாளர் கூட அமையவில்லை. பத்திரிகைகள் டிவி என்று எல்லோரும் கிண்டலடித்தார்கள். அப்பாவோ இவனைத் தன் மகனே இல்லை என்று சொல்லிப் புறக்கணித்துவிட்டார். அம்மா உள்ளூர் வெளியூர் என்று ஒரு கோவில் விடாமல் இவனுக்காகப் பரிகாரங்கள் தேடிக் கொண்டிருந்தார். கையில் இருந்த காசையெல்லாம் கடை வாடகைக்கும் வலைமனை அமைப்பிற்கும் செலவழித்தாகி விட்டது.

இந்த நிலை தொடர்ந்தால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போவது மட்டுமில்லாமல், டிஎன்ஏ ஆய்வுத் தொழிலிலும் வேறு வேலை கிடைக்காமல் போய்விடும் என்கிற அச்சத்தில் கலங்கினான். சொந்தத் தொழிலை மூட்டை கட்டிவிட்டு, அரசாங்க வேலைக்குப் போகலாம் என்று தீர்மானித்தான்.

கடைசி நாளன்று, கதவடைக்கும் நேரத்தில் பெரியவர் ஒருவர் வந்தார். நல்ல உயரம். நரைத்த முடி. சுருள் மீசை விசித்திரமாகப் பொருந்தியது. "அந்தக் கடைனு இங்கே..."

"இது தான். ஆனால் வியாபாரம் வளரவில்லை சார். இப்பத்தான் பெயர் பலகையை எடுத்து உள்ளே எறிஞ்சேன். இழுத்து மூடப்போறேன்" என்றான்.

"உங்களுக்கு ஆட்சேபணை இல்லாவிட்டால் பத்து நிமிஷம் பேசலாமா?"

"முதலிலேயே சொல்லிடுறேன். என்னால் மரணகாலத்தைக் கணிக்க முடியும், தேவைப்பட்டா சொல்லுங்க. இல்லாவிட்டால் இரண்டு பேர் நேரமும் விரயம்"

"அது தெரிஞ்சு தானே வந்தேன்? என் தொழிலுக்கும் உங்க தொழிலுக்கும் தொடர்பிருக்கு தம்பி. சின்னவரா இருக்கீங்க, உங்களைத் தம்பினு கூப்பிடலாமா? உங்க தொழில் வளர என்னால் உதவ முடியும் தம்பி"

"என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடுங்க. என் பெயர் சித்து. முழுப்பெயர் சித்ரஞ்சன். வாங்க, வந்து உட்காருங்க"

"உங்களை எனக்கு நல்லாவே தெரியும்.. சித்ரன்" என்ற பெரியவரைக் கேள்வியுடன் பார்த்தான் சித்து. "சித்ரஞ்சன், நாட் சித்ரன். என்னைப் பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?"

"எல்லாருக்குமே தெரியும் போலிருக்குதே தம்பி? அதான் பேப்பரிலும் டிவியிலும் உங்களைப் பத்தி சொன்னாங்களே.. தற்கால எமன் என்று". இடியாகச் சிரித்தார் பெரியவர். மீசையை நீவினார்.

சித்துவின் முகம் வாடியதைப் பார்த்ததும் "வருத்தப்படாதீங்க தம்பி. அவங்களுக்கெல்லாம் உங்க திறமை புரிய ரொம்ப காலமாகும். புரியாமலே கூட போகலாம். நாம ஒருவருக்கொருவர் உதவினால், நம்ம இரண்டு பேர் தொழிலும் முன்னேறும்"

"உங்களுக்கு என்ன தொழில்? நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?"

"ரொம்ப காலமா ஏறக்குறைய உன் தொழிலைத்தான் செஞ்சுட்டிருக்கேன். என்னோட முறை வித்தியாசமானது, பழங்கால டைப். உங்கிட்ட இருக்குற வசதிகள் எல்லாம் இல்லை"

சித்து வியந்தான். தன் தொழிலறிந்தவரா? உற்சாகத்துடன், "இந்தத் தொழில்ல இருக்கீங்களா? உங்க முகம் எனக்கு அறிமுகமானதா தெரியலிங்க.. மன்னிச்சுருங்க சார்.. உங்க பேரென்ன? எங்கிருந்து வரீங்க?"

"என்னை ஒய்.டி.ஆர்னு கூப்பிடுவாங்க. முழுப்பெயர் எமதர்மராஜன். நேரா என் உலகத்துலந்து வரேன்" என்றார் பெரியவர்.

(தொடரலாம்)

*மூன்றாமடியின் நெருடலை அருளசரசன் தவிர்த்திருக்கலாம்; பெரிய விஷயமில்லை, என்ன.. எங்கள் சிவகுமாரனுக்குப் பிடிக்காது. அவர் இலக்கண நறுவசுக்காரர்.