போக்கற்ற சிந்தனை
                          இப்போதெல்லாம் இருபது வினாடிகளுக்குள் என்னால் முடிவெட்டிக் கொள்ள முடிகிறது. இது வசதியா வருத்தமா? முடிவெட்ட இருபது வினாடியானாலும் பத்து நிமிடமானாலும் ஒரே ரேட். பதினைந்து டாலர். இப்பொழுது சொல்லுங்கள், வசதியா வருத்தமா? முடியைப் பற்றி முடிக்குமுன், இன்னொன்று. சமீபத்தில் முடியலங்காரப் பரேட் ஒன்று நடந்தது. பொதுவாக ந்யூயோர்க், பேரிஸ், மிலான் நகரங்களில் நடப்பது, யார் செய்த பாவமோ சிகாகோவில் நடந்தது. முடியிருப்பவர்கள் மட்டுமே போவார்கள் என்று நான் ஒதுங்கி நின்றாலும் சில படங்களையும் விடியோக்களையும் பார்த்தபோது ஐயோ என்றிருந்தது. இரண்டாவது முடியலங்காரப் படத்தைப் பார்த்தும் முதலில் அதிர்ந்தேன். பின்புறத்தில் இத்தனை முடியா? நல்லவேளை, மயில்தோகை.
ஒன்று நிச்சயம். என்ன பிடுங்கிக் கொண்டிருந்தாய் என்று இவர்களை யாரும் கேட்க முடியாது.
                                                                  பிடுங்குவதைப் பொருத்த வரையில் ரிபப்லிகன் கட்சிக்காரர்களை அடித்துக் கொள்ள முடியாது. தங்கள் கட்சியில் வெற்றி பெறக்கூடிய, தகுதி வாய்ந்த, எவரையும் தேட முடியவில்லையா? அல்லது, பதினேழாம் நூற்றாண்டு ஆங்கிலேய ஆளுமை மனப்பான்மையா? அல்லது இரண்டுமா தெரியவில்லை. ஓசைப்படாமல் டிக் சேனி அதிர்வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார். இத்தனை நாள் டெமோக்ரேட்களை குப்பையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் பாணியில் சொல்லிக்கொண்டிருந்தவர், திடீரென்று ஹிலெரி க்லின்டன் ஒபாமாவை விட சிறந்த அதிபராக விளங்கியிருப்பார் என்கிறார். என்றைக்கோ அறிந்த விஷயம். ஒபாமாவுக்கு எதிராக ஹிலெரியை ஆதரித்த என் போன்ற எத்தனையோ பேருக்குத் தெரிந்த விஷயம். இருந்தாலும் சேனியின் விஷமம் இந்த நேரத்தில் வெளிப்படும் சூட்சுமத்தை டெமோக்ரேட் வாக்காளர்கள் புரிந்து கொண்டால் சரிதான். இரண்டு உண்மைகள் இதிலிருந்து புரிகின்றன. ஒன்று: ஒபாமா மட்டையா இல்லையா என்ற சந்தேகம் தோன்றினாலும், டிக் சேனி குட்டை என்பது சந்தேகமறப் புரிகிறது. இரண்டு: கொஞ்சம் யோசித்ததில், ஒபாமா மட்டை என்பதும் புரிகிறது. ஹ்ம்ம்ம்.. மட்டை மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார் போலிருக்கிறது.
ஏழரை நாட்டு சனி, எட்டு வருடம் என்பார்கள். சாதனைகளை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தவன், இப்பொழுது சனியையும் நம்பத் தொடங்கிவிடுவேன் போலிருக்கிறதே?
                                                                  ஒசாமாவைத் தீர்த்துக் கட்டியது ஒரு சாதனை. ஹிலெரி அந்த முடிவை எடுத்திருப்பாரா என்பது சந்தேகமே. திருவாளர் மட்டையின் துணிச்சலைப் பாராட்ட விரும்பும் அதே நேரத்தில், எப்படி இருந்தாலும் அந்த முடிவைச் செயல்படுத்தியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். இதை வைத்துக்கொண்டே அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைத்த மட்டைக்கு, அடிவயிறு கொஞ்சம் கலங்கத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. நாலு வருடங்களாக நாட்டுக்குத் தேவையான ஒன்றையும் பிடுங்கவில்லை. அமெரிகாவின் இன்றைய தேவை வேலைவாய்ப்பு என்று திடீர்ப்பேச்சு பேசிக்கொண்டிருக்கிறார், திருவாளர் மட்டை. 'ஆகா, ஓகோ, என்ன அறிவு!' என்று இடதுசாரி மீடியா மொத்தமும் மட்டைக்கு சிவப்புக்கம்பளம் விரித்து ரோஜாப்பூப் பாராட்டுக்களைத் தூவிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் க்ரெடிட் ரேடிங் குறைந்து போகும் அளவுக்கு உள்நாட்டு வெளிநாட்டு வணிகமும் பொருளாதாரமும் வளர்ச்சியும் கேடுகெட்டுப் போனதற்கு இந்த ஆட்சி பொறுப்பில்லையாம், முந்தைய ஆட்சியின் தவறுகள் இன்னும் பாதிக்கின்றனவாம். மட்டையின் திருவாய்மொழி. அதையும் இந்த நவராத்திரி நன்னாளில் அத்தனை மீடியாவும் ஆமோதித்து சுண்டல் போல் வினியோகித்துக் கொண்டிருக்கின்றன. மட்டைக்கு பாராட்டு மலர்களைத் தூவிக்கொண்டிருக்கின்றன.
உங்கள் நாக்கையும் நீட்டுங்கள், சேர்த்துப் பிடுங்கிக் கொள்கிறேன். ரொம்பத் தூவாதீங்கடா. தூ!
                                                                  சமீபச் சனிக்கிழமையொன்றில் சினிமா பார்த்தேன். பெரிய விஷயம் இல்லை. எனினும், பிள்ளைகளுக்காக சில படங்கள் போவேனேயொழிய, எனக்காகத் தியேடர் போய் திரைப்படம் பார்ப்பது அபூர்வம். வருடத்தில் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அதிசயம். சென்ற சனிக்கிழமை பார்த்தது, killer elite என்ற ஆங்கிலப்படம். (ஹிஹி.. இங்கிலிஷ் டைட்டிலோட இப்பல்லாம் தமிழ்ப்படம் கூட வருதுங்க, அதான் :). ராபர்ட் டி நிரோவுக்காகப் பார்த்தேன். ஸ்டேதமும் ஒவனும் அடித்து நொறுக்கும் பொழுது, டி நிரோ வன்முறையை வார்த்தைகளால் காட்டுவதைப் பார்த்து ரசித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அடிதடிக் காட்சிகளைப் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், உடனடியாக யாரையாவது அடித்து நொறுக்க வேண்டும் போல..கை காலெல்லாம் அப்படிப் பற்றிக் கொண்டு வந்தது. படம் சுமார். தமிழ்ப்படமே மேல் என்று தோன்றியது. (ஒரு பேச்சுக்காகச் சொன்னேன் :)
இந்தப்படம் தமிழில் வந்தே தீரும் அபாயம் உண்டு. கமலகாசன் நடிக்கலாம். பிறகு, பதினைந்து வருடங்களாக இந்தக் கதையைத் தன் மனதில் உருட்டிக் கொண்டிருந்ததாகக் கூசாமல் உண்மை பேசலாம்.
                                                                  சென்ற வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து இன்று திங்கள் மாலை வரை எங்கள் குடியிருப்பில் மின்சாரம் தொலைந்தது.
வெள்ளிக்கிழமை மாலை வீடு சேரும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தேன் எனலாம். என்னைப் போல் ஒரு கையால் காரோட்டியவர்கள் எல்லாருமே மறு கையில் உயிரைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் என்பது புரிந்தது. சிகாகோவில் சாதாரணமாகவே காற்று பிய்த்துக் கொண்டு போகும். windy city என்றப் பெயர்க்காரணம். வெள்ளிக்கிழமை மாலை, மழையுடன் சேர்ந்து நாற்பது மைல் வேகத்தில் அசாத்தியக் காற்று, ஓடும் வாகனங்களைக்கூட அசைத்து நகர்த்தியது. திகில். போதாக்குறைக்கு மாலைச்சூரியனின் வெண்மை. கருமேகமில்லாத வானத்திலிருந்து மழை பொழிவதை இப்போதுதான் முதல் முறை பார்த்தேன். மாலைச்சூரியனின் செம்மை தொலைந்து, உச்சிவேளை சூரியன் போல் வெள்ளை வெளேறென்று horizonல் கண்ணைக் கூசுவதையும் இப்போதுதான் மு மு பா. திகிலோ திகில். ஜப்பான், கொரியக் கார்கள் எல்லாம் விழி பிதுங்கி ரோட்டோரமாக ஒதுங்கி நிற்க, அமெரிக்க ஜெர்மனியக் கார்கள் மட்டும் சுகப்பிரயாணம் செய்ததையும் இ தா மு மு பா. எல்லாம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்தால்... இருள். மின்சாரம் இல்லை. ஏறக்குறைய இருபது வருடங்களில் இதுதான் முதல் மின்சாரவெட்டு. பிள்ளைகளுக்கு ஆச்சரியம். பிறந்ததிலிருந்து இன்றுவரை மின்சாரவெட்டோ குறையோ பழகாதவர்களுக்கு, இருள் விசித்திரமாக இருந்தது. 'ஐபாட் சார்ஜ்' செய்ய மறந்த என் பெண் முதலில் கொஞ்சம் புலம்பினாலும், மெழுகு விளக்கு, பேட்டரி விளக்கு ஒளியுடன் டிவி இல்லாத "அந்தக்கால" வாழ்க்கை வாழ்ந்தாள். என்றைக்குமே இல்லாத அளவுக்கு "குடும்ப" உணர்வோடு இரண்டு நாட்களைக் கழித்தோம். "இப்படியே இருந்தால் நன்றாக இருக்குமே?" என்ற என்னிடம், "dad, எதையும் கிடைக்கும் பொழுது அனுபவித்துக் கொள்ள வேண்டும். நிலைக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்" என்று நான் வேறு எதற்கோ எப்போதோ அவளிடம் சொன்னதை நினைவில் வைத்துத் திருப்பிச் சொன்னாள்.
touche!
                                                                  சிலர் பதிவெழுதுகிறார்கள். சிலர் படிக்கிறார்கள். சிலர் எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். சிலர் எழுதாமல் படிக்க மட்டும் செய்கிறார்கள். சிலர், தான் பெற்ற இன்பம் வையம் பெறப் பகிர்ந்து கொள்கிறார்கள். 'படித்ததில் பிடித்தது' என்று நண்பர் பாலராஜன்கீதா அவ்வப்போது பதிவு digest அனுப்புகிறார். அட்டகாசம். எழுதுவதை நிறுத்திவிட்டு இவருடைய இமெயிலை மட்டும் படித்தால் போதும் என்று தோன்றும். அவர் அனுப்பிய சில ஜோக் பதிவுகளை நினைத்து முடிவெட்டிக் கொள்ளும் போதோ நடுத்தெருவில் நிற்கும் போதோ பலமாகச் சிரித்துக் கொண்டிருப்பேன். மிரண்டு போய் காதை வெட்டிவிடுவார் முடிவெட்டி. அல்லது நடுத்தெருவில் ஐந்து காசு பத்து காசு போடுவார்கள்.
     :அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
     :அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்
சிரிக்க வைக்கும் பாலராஜன்கீதா வாழ்க.
                                                                  எப்படியோ தடுமாறிச் சில பதிவுகளில் இறங்கி, படித்ததும் பிரமித்து விலகமுடியாமல் ப்லாகின் முதல் பதிவிலிருந்து தேடிப் படித்த அனுபவமுண்டா?. இவை, இனிய வலை விபத்துக்கள் என்பேன். சமீபத்தில் அப்படி விபத்துக்குள்ளாகி விழுந்த இரண்டு பதிவுகளைப் பற்றிச் சொல்கிறேன். சமுத்ரா எனும் வலைப்பூவை எழுதுகிறவரின் கைகளைப் பிடித்து இரண்டு நாள் குலுக்க வேண்டும் போலிருக்கிறது. அண்டம், ஆன்மீகம், அறிவியல், நையாண்டி, கவிதை என்று எழுதித் தள்ளுகிறார். கவிதைகளைத் தவிர மற்றவை அருமை. இவருடைய அறிவியல் பதிவுகள், தமிழுக்கு ஒரு வரம். நான் பிரமித்துத் தொடரும் இன்னொரு ப்லாக் தமிழ் தொகுப்புகள்.
இவர்களின் பொறுமைக்கும் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் வந்தனம்.
                                                                  பதிவுகளைப் படிப்பது ஒருபுறம். பின்னூட்டப் படிப்பும் அதற்கு இணையான சுவாரசியம். சிலரின் பின்னூட்டங்கள் வியக்க வைக்கின்றன. மஞ்சுபாஷிணியின் பின்னூட்ட sincerity, poised to become blogworld legend என்று நினைக்கிறேன். 'அருமை', 'பயனுள்ள பதிவு' போன்றோ பதிவின் கடைசி பத்து வரிகளில் இரண்டை வெட்டி ஒட்டி 'மிகவும் கவர்ந்த வரிகள்' என்றோ canned பின்னூட்டமிடாமல், ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதுகிறார். சில சமயம் பதிவை விட நீளமாகப் பின்னூட்டமிடும் இவர், பதிவெழுதுவோரின் கனவு வாசகர். Ganpath என்றொருவர் ஜவஹரின் பதிவில் பின்னூட்டமிடுகிறார். இவருடைய பின்னூட்டங்களைப் பிற பதிவுகளில் காணோம். இவருடைய பின்னூட்டத்துக்காகவே ஜவஹர் பதிவுகளைப் படிப்பதுண்டு. ஒருவேளை ராமசுப்ரமணியன் போல, வேறு வேறு பெயர்களில் பின்னூட்டமிடுகிறாரோ ganpath? எங்கள் பிலாக் ஸ்ரீராம், பின்னூட்ட நாசூக். Ganpath பின்னூட்டக் கஞ்சன் :-) என்றால், ஸ்ரீராம் பின்னூட்ட வள்ளல். எந்த ப்லாகில் பார்த்தாலும் எங்கள் ப்லாக் ஸ்ரீராமின் பின்னூட்டம் இருக்கிறது.
யாதும் ப்லாகே, யாவரும் கேளிர்.
                                                                  எங்கள் ப்லாக் ஒரு முறை சித்திரப் பயிற்சி நடத்தி படம் வரைந்து அனுப்பச் சொன்னார்கள். 'pear' பழ வடிவில் ஒன்றைக் கொடுத்து அதன் அடிப்படையில் படம் வரைந்து அனுப்பச் சொல்லியிருந்தார்கள். என்னுடைய சைக்கிள் படத்தை வெளியிட்டவர்கள், வலதுபக்கப் படத்தை ஏனோ வெளியிடவில்லை. தணிக்கையா அல்லது தயக்கமா தெரியவில்லை. அதே போல், யாதோன் கி பாராத் படம் பற்றிய ஒரு பின்னூட்டத்தையும் நீக்கி விட்டார்கள். ஒருவேளை RVS படிக்கத் தவறியிருக்கலாம் என்பதற்காக, அந்தப் பின்னூட்டம் இதோ, நினைவிலிருந்து:
    யாதோன் படத்தை மறக்கமுடியாமல் செய்த அனுபவம் இது தான்.
    படத்தில் தர்மேந்திரா ஜீனத்திடம் "ஆப் கி நாம் க்யா ஹை?" என்பார்.
    ஜீனத் சற்று இழுத்து, "சு னீ தா" என்பார்.
    தியேடரில் ஒரு குரல்: "தந்துட்டு நான் என்னமா செய்யுறது?"
                                                                  யாதோன் படத்தை நானும் ரமணியும் இன்னும் சில பம்மல் நண்பர்களும் பார்த்தது இன்றைக்கும் நினைவிருக்கிறது.
தாம்பரம் நேஷனல் தியேடர் என்று நினைக்கிறேன். தியேடரில் குரல் கேட்டதும் சிரித்துச் சிரித்து இருமல் வந்துவிட்டது ரமணிக்கு. ரமணி எந்த நேரத்திலும் அமைதியாக இருப்பான். அதிர்ந்து கூடப் பேசமாட்டான். கோபமோ ஆத்திரமோ துளிக்கூட இல்லாத ரமணி, போன மாதம் மாரடைப்பில் இறந்துவிட்டான். ரமணியின் முத்திரை பதிந்த என் விடலை நாட்களை நினைக்கும் பொழுது உள்மனம் புன்னகைக்கிறது. க்ரிகெட் விளையாட்டில் மீடியம் பேஸ், ஸ்பின்.. அப்புறம் காட்டான் சுரேசுடன் சேர்ந்து அவ்வப்போது சிக்ஸர்களை காட்டடி அடிப்பான். ஹாக்கி விளையாடும் பொழுது கோல் கீப்பர் என்று சுகமாக நின்று கொண்டுவிடுவான். ரவுடித்தனத்தில் விருப்பமில்லாவிட்டாலும், எங்களுக்காக உடன்பட்டுக் கூடவே வருவான். என் குழுவின் மற்ற நண்பர்கள் என்னுடைய புரட்டுக்களை 'பட்சவண்டா' என்று ஏற்கையில், 'உடான்ஸ்' என்று வகைப்படுத்திய உறுதி நெஞ்சக்காரன். என்னைப் போலவே ரமணிக்கும் படிக்கப் பிடிக்கும். குறிப்பாக, காதல் கதைகள் மற்றும் science fiction. ரமணியுடன் அடித்தக் கூத்துக்களில் சிலவற்றை என் சிறுகதைகளில் சேர்த்திருக்கிறேன்.
நட்பின் மரணம், தாங்கமுடியாத வலி.
                                                                  வலிக்கும் காதல் கதை ஒன்று.
டாம் டூலியும் ஆன் பாஸ்டரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் பழகினார்கள். ஆனுக்கு ஒரு சகோதரி, மேரி. ஆனும் மேரியும் டாமும் சிறுவயது முதல் பழகினார்கள் என்றாலும், டாமும் ஆனும் நெருக்கமாகப் பழகினார்கள். காதல் மலர்ந்தது. ஆன் காதலிப்பது தெரிந்தும், மேரி டாமைக் காதலித்தாள்; ஆனால் தன் காதலைச் சொல்லவில்லை. டாமுக்கோ ஆனை மட்டுமே காதலிக்கத் தோன்றியது. காதலிக்கத் தொடங்கிய வேளையில், டாம் போருக்குப் போக நேர்ந்தது. போரில் டாம் இறந்துவிட்டான் என்று செய்தி கிடைத்ததும், ஆன் துடித்துப் போனாள். சில வருடங்களில் இன்னொருவரை மணமுடித்தாள். சொல்லி வைத்தாற் போல் திருமணம் முடிந்த இரண்டு மாதங்களில் டாம் திரும்பி வந்தான். சாகவில்லை, செய்தி பொய் என்று தெரிந்ததும் ஆன் இன்னும் துடித்துப் போனாள். ஆனால் அவள் கர்ப்பமாகியிருந்தாள். மேலும் அவளுடைய கணவனோ, அவளை உயிருக்கு மேலாக நேசித்தான். ஆனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. புதைந்து போயிருந்த காதல் உணர்வெல்லாம் மீண்டும் துளிர்விட்டது. மனமுடைந்த டாம், அவர்கள் வாழ்வில் குறுக்கிடுவதில்லை என்று ஆனின் கணவனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு ஊரைவிட்டுக் கிளம்ப முயன்ற போது, மேரியைச் சந்தித்தான். மேரியுடன் பழகத் தொடங்கினான். சிறுவயதுப் பழக்கம் மெள்ளக் காதலாக மலரத் தொடங்கிய நேரத்தில், டாம் தயங்கினான். தன்னால் அவ்வளவு எளிதில் ஆனை மறக்க முடியாதென்றான் மேரியிடம். அவர்களிடையே சிறு ஊடல் நடந்ததை ஊரார் பார்த்தார்கள். அன்றிரவு மேரி கொலை செய்யப்பட்டாள். கழுத்திலும் மார்பிலும் கத்திக்குத்துடன் மேரி இறந்ததும், ஊடல் சண்டையைப் பார்த்த ஊரார் டாம் கொலை செய்திருக்க வேண்டும் என்று குற்றம் சுமத்திச் சாட்சி சொன்னார்கள். வழக்கை விசாரித்து, அவனுக்குத் தூக்கு தண்டனை கொடுத்தார்கள். தூக்கு மேடையில் கடைசி நிமிடத்தில், "ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" என்று கேட்டார்கள். சிவாஜிகணேசன் போல் தோளை உயர்த்தி கைகளை விரித்த டாம், "கட்டியணைக்கும் கைகள் இவை, கத்தியா செருகும்?" என்றான். ரைட்டோ என்று சொல்லி அவனைத் தூக்கிலிட்டார்கள். ஆன் மட்டும் அழுது கொண்டே இருந்தாள். பொறாமையினால் மேரியைக் கொன்றது ஆன் என்றும், ஆன் கொலை செய்தாள் என்று தெரிந்தும் அவள் மேலிருந்த காதலினால் டாம் தானே குற்றத்தை ஏற்றான் என்றும் பேசிக்கொண்டார்கள். 2001ல் டாம் நிரபராதி என்று தீர்ப்பளித்தார்கள். டாம் தூக்கிலிடப்பட்டது, 1868ல்.
ஒரு பிரபல நாட்டுப்புறக்கூத்து, பல பாடல்கள், சில திரைப்படங்கள் என்று இந்தக் கதையைத் திரித்துக் கொண்டே இருந்தார்கள், இருக்கிறார்கள். இந்தக் கதையையொட்டி ஐம்பதுகளில் வந்த ஒரு பாட்டு, பத்து வருடங்களுக்குப் பின் எம்எஸ்வி இசையில் வெளியான ஒரு முதல்தரக் காதல் பாட்டுக்கு மெட்டானது.
காதல் பாட்டு, எம்எஸ்வி... அடடா, தமிழ்ச் சினிமாவின் #1 காதல் பாட்டைப் பற்றி இன்னும் எழுதவே இல்லையே?
பிற்சேர்க்கை: bogan ஸ்பெஷல்.
    Kingston Trio ஐம்பதுகளில் பல இனிமையான பாடல்களைக் கொடுத்தார்கள். இந்த விடியோ இடம்பெறும் 1981 வருட reunion video album, சில நூலகங்களில் கிடைக்கிறது. இது நெட்டில் சுட்டது. இந்த reunion விடியோ எடுத்தபோது, இவர்களுக்கு 198 வயது - குரல் எப்படி கிண்ணெண்று இருக்கிறது!