2014/10/18
அப்பாதுரைக்கு வந்த நகசுத்தி
    நான் என் பாட்டுக்கு இமெயில் பாத்துட்டிருக்கேன். திடீர்னு 'நலந்தானா?'னு தில்லானா மோகனாங்கி ஸ்டைல்ல ஒரு இமெயில். யார் அனுப்பினாங்கனு பார்த்தா மோகன்ஜினு இருக்குது!
மோகன்ஜியை தெரியாதவங்க இருந்தா ஒரு இன்ட்ரோ. மோகன்ஜி இருக்காரே மோகன்ஜி... அதான் இருக்காருனு தெரிஞ்சு போயிடுச்சே பிறகென்ன இழுப்பு... இவரு வருஷத்துக்கு ஒரு பதிவு எழுதுவாரு. அதுக்கே அவருடைய ரசிகக் கூட்டம், 'தலைவர் ஒரு பதிவு எழுதுனா ஆயிரம் பதிவு எழுதின மாதிரி'னு பிகிலடிப்பாங்க. (என்னை மாதிரி ஆளுங்க மாஞ்சு மாஞ்சு எழுதினா இபிகோனு மிரட்டுறாங்க. தலைவிதி பாருங்க).
எனக்கு அனுப்பின இமெயில் மோகன்ஜி எழுதினதுதான்னு எப்படி கண்டுபிடிக்கிறது? சமீபத்தில் வவ்வால் அவர்கள் இன்னொருத்தர் பெயரில் பின்னூட்டமிட முடியும்னு நிரூபிச்சுக் காட்டினாரு. (என் பெயரில் பின்னூட்டம் போட்டு அசத்திட்டாரு). அந்த அனுபவத்துக்குப் பிறகு எல்லாத்தையுமே சந்தேக மூக்குடன் மோப்பம் பிடிக்கிறேன். என் பின்னூட்டமே நான் எழுதியது தானானு சந்தேகம் வருது. அந்த நடுக்கத்துல இவர் மோகன்ஜி தானா இல்லே வேறு யாராவது இவர் பெயரில் இமெயில் அனுப்புறாங்களானு சந்தேகம் வந்திடுச்சு. கொஞ்சம் விட்டு, கூடவே ஒரு கவிதை அனுப்புனாரு (கவிதைனு அவர் சொல்றாருங்க).
கவிதையை படிச்சதும் கொஞ்சம் தெஹிரியம். நிச்சயம் மோகன்ஜியாகத்தான் இருக்கணும்னு தோணிச்சு. பின்னே இப்படியெல்லாம் சிவகுமாரனா எழுதப் போறாரு?
'அண்ணாத்தே? என்ன ஆளையே காணோம்? ஒரு இமெயில் அனுப்பிட்டு வழக்கப்படி காணாமப் போய்டுவீங்களா? உங்களைக் காணாமப் பசலைப் பட்டது போதாதா? ஏன் திரும்பி வந்தீங்க?'னு சங்கமங்கை போல பதில் இமெயில் அனுப்பினேன். 'இல்லை இல்லை.. இனிமே காணாமப் போகமாட்டேன்'னு கீபோர்ட் அடிச்சு சத்தியம் செய்யாத குறையாச் சொன்னாரு.
எதுக்குச் சொல்றேன்னா... நல்லா எழுதுறவங்க, எழுதுறதை நிறுத்திக்கிட்டாங்கனா அது எழுத்துக்கு நஷ்டம்னு நான் நினைக்கறதுண்டு. மோகன்ஜி நல்லா எழுதுறவரு. அவரு திரும்ப எழுத வந்தா அதுவே தீபாவளி தான். வாங்க வாங்கனு சொல்லிக் கம்பளம் விரிப்போம், என்ன சொல்றீங்க? இதுக்கு பேரு மோஸ்தர் கவிதையாம். ஜோரா கை தட்டுவோம், என்ன சொல்றீங்க? மறுபடி இந்த மாதிரி கவிதை எழுதுனாருனா இலக்கிய போலீசு பாத்துக்கட்டும், நாம பத்தடி தள்ளீயே நின்னுக்குவோம், என்ன சொல்றீங்க?
இதோ, மோகன்ஜி எழுதியனுப்பின மோஸ்தர் கவிதை:
அப்பாதுரைக்கு வந்த நகசுத்தி
மோடி அமெரிக்கா வந்த நாளன்றே
அப்பாதுரைக்கு நகசுத்தி வந்திருந்தது.
வலது கை மோதிரவிரலில் அது குத்தலோடு குந்தியிருந்தது
அது வரும்வரை தனக்கு மோதிரவிரல்
ஒன்றிருப்பதே அவருக்கு தெரியாது.
அவரின் வலைப்பூவில் திங்களன்று
'கொக்கோக குமுறல்கள்' தொடங்க இயலாதது குறித்து
அவரிட்ட சிறுபதிவினாலேயே தான்
அனைவருக்கும் அது தெரிய வந்தது.
முதல்கருத்தாய் திண்டுக்கல் தனபாலனின்
'வாழ்த்துக்கள்' வந்தது
'நகசுத்தியும் நாகசக்தியும்' என்ற
ஆர்.வி.எஸ்ஸின் பேஸ்புக் பதிவுக்கு
ஆறாவது நிமிடமே 286 லைக்கும் 7 கமெண்டும் வந்தன.
அதற்கு பத்மநாபன் லைக் போட முனைந்த போது
ஐபாட் ஷட்டவுன் ஆகி முடியாமல் போனது.
நகசுத்தி குறித்து பதிவுபோட ஆதிரா உறுதிபூண்டார்
எலுமிச்சம்பழம் விரலில் சொருக
கீதாசந்தானம்,கோமதி அரசு மற்றும் ஶ்ரீராம்
யோசனை சொன்னார்கள்
கூரியரில் நிலாமகள் அனுப்பி வைத்த எலுமிச்சம்பழம்,
முப்பாத்தம்மன் கோவில் பிரஸாதம் எனத் தெரியாமல்
அதை அப்பாதுரை சொருகிக்கொண்டார்.
அகத்திக்கீரை சூப் ஆறுநாள் சாப்பிடச்சொன்ன சுந்தர்ஜி,
'நகஸ்ய கருணா நாஸ்தி நாகஸ்ய பயானகம் ' என்று
ஏதோ சொன்னது சற்று கலவரமாய் இருந்தது.
நகசுத்தியை 'படுவம்' என்பார்களென்றும்
தாங்கமுடியாத்து தான் 'படுவ வலி' என்றும்
அறிவன் பகிர்ந்தார்.
அதை 'பருவ வலி' என்று படித்துக்கொண்டபோது
அப்பாதுரைக்கு வலியே தெரியவில்லை.
மர்லின்மன்றோவுக்கும் நகசுத்தி வந்த கதையை
மோகன்ஜி சொன்னதன் கவர்ச்சி,
அப்பாதுரையின் அயர்ச்சிக்கு ஆறுதலானது
'கொக்கோக குமுறல்கள்' ஏதேனும்
தெய்வக்குத்தமாக இருக்குமோ என்ற
சுப்புத்தாத்தாவின் பின்னூட்டத்தை
பத்து பதிவர்கள் ஆமோதித்தார்கள்
'விரலுக்கு அதிகவேலை கொடுக்காதீர்கள்' என்ற
அனானியின் கரிசனத்தில்
டபுள்மீனிங் சாத்தியக்கூறுகள் இருப்பதாய்
அப்பாதுரைக்கு பட்டது
நகசுத்திக்கு 'நாக காந்தாரி'அல்லது 'காமவர்தினி' ராக
கீர்த்தனங்கள் சுகம் தருமே என்றார் மூவார்முத்து.
அதற்கு
'உண்மை' 'இருக்கலாம்' 'எதற்கும் கேட்டுப்பார்த்து விடுங்களேன்'
என்று முறையே
ரிஷபன்,வை.கோ,வெங்கட்நாகராஜ் தெரிவித்தார்கள்.
'நகசுத்திக்கு இலக்கியத்தில் சான்று உண்டா அண்ணா?' என்ற
சிவகுமாரன் கேள்விக்கும்,
'ஏன் அண்ணா நகசுத்தி நகத்திலேயே வருது?' என்ற
ஹேமாவின் கேள்விக்கும் பதிலை,
தனிஅஞ்சலில் அனுப்புவதாய் மோகன்ஜி சொன்னார்.
மருந்து போட்டாலும் மாங்காய் சொருகினாலும்
ஆறுநாள் இருந்துவிட்டு தன்னால் போகும் என்று
காஸ்யபன்சார் பின்னூட்டம் வந்தநாளில் வலிகுறைந்து
எலுமிச்சம்பழத்தை எடுத்து விட்டார் அப்பாதுரை.
வெட்கி சிவந்து குன்றியிருந்த விரலைப்பார்த்து
'ரிலாக்ஸ் மேன்' என்றார் வாஞ்சையோடு.
கையோடு அந்த விரலுக்கு
'அமெதிஸ்ட் சுகந்தி' கல் பதித்த
மோதிரம் போடுவதாய்
அதிவீர ராம பாண்டியருக்கு**
வேண்டிக்கொண்டார்
(**ஆண்ட்ரூ கார்னகி என்றும் பாடம்)
2014/08/09
லுக்ரீசின் சாபம்
[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    
லுக்ரீசின் சாபம் [19-25]
19
தடுத்தான் கொலாடின்.
'நில்லுங்கள் ராஜாவே!13 என்றன்
சொல் கேளுங்கள் சற்று!' என்றான்.
மனைவியரைக் காணும் மயக்கம் பலருக்கு. அவரை
மறைவினில் காணும் தயக்கம் சிலருக்கு.
ஊர்நிலம் திரும்பும் உவகை பலருக்கு. கொலாடின் போல்
போர்நிலம் மறக்கும் கலக்கம் சிலருக்கு.
'அரசே! ஆழ்ந்த நட்பின் இலக்கணமே!' என
முரசொலிக்கும் குரல் தணித்து அழைத்தான் கொலாடின்.
'சுற்றிவந்த பகைவர் சோர்ந்தடங்கி நாம் தேடும்
வெற்றிக்கனி கையில் விழும் நேரம். விரைவில்
தங்கநகர்14 வென்றச் சிங்கமென வேடமின்றி
மங்கையரை காண முகங்காட்டிப் போகலாமே?'.
'கலங்காதே கொலாடின்' என்றான் செஸ்டஸ்.
'வெற்றிப்பெண் இடையினில் என் கைகள்
சுற்றித்தான் நாட்கள் பலவானதே? வெற்றுக்
கலவரம் இவையடங்க நாளாகும். அதுவரையில்
புலனடக்கும் கவலையில் முடங்கிப் பயனில்லை.
உம்மகளிர் அனைவரும் உம்மைப் போல் நன்கு
தம்புலன் அடக்கினரா தெரிய வேண்டாம்? நீர் சொன்ன
ஒழுக்கமும் அழகும் உண்மையா அறிய வேண்டாம்?
விழுப்பத்தின் விவரத்தை நேரில் காண வேண்டாம்?
கற்புக்கு அரசிகளா அவர்கள் காமத்தின் அரசிகளா?
சொற்குற்றம் காணாது பொருள் மட்டும் தெளிந்து வருவோம்'.
மனைவியரை நேசித்த மாந்தரும் மன்னன் சொல் கேட்டு
வினையானதோ தனிமை என்று வேண்டாத சந்தேகம் கொண்டு
ஆமென்றனர். அரசர் சொல்படி கொலாடினை வேடம் பூண்டுப்
போமென்றனர். தாமும் புறப்பட்டனர்.
மனங்கலங்கினான் கொலாடின்.
மன்னனோ விடவில்லை.
'புலம்பெயர்ந்தார் படைத்தலைவர் என்பதை
அரிதியா சேனை அறியாது. நாமும்
இரவோடிருளினில் திரும்பிடுவோம்.
மாறு வேடத்தில் நாம் போவது
வேறு யாருக்குத் தெரியப் போகிறது?'
தேவையின்றிக் குரலுயர்த்திக் கூறியதைக் கேட்டுச்
சேவைக்குழுச் சிற்றாள் ஒற்றன் ஒருவன்
மெள்ள விலகியதைக் கண்டு மனதுள்
கள்ளமாய்ச் சிரித்துக் கொண்டான் செஸ்டஸ்.
மறுத்தான் கொலாடின்.
'மன்னியுங்கள் மன்னா!' என்றான்.
'பகைவர் எழும் பயமில்லை எனக்கு. எம் வீரர்
பகையழிக்கவென்றே பிறந்தவராம்.
ஊர் செல்லும் காரணம் தான் எனக்குப்
பேர் சொல்லும் காரணியாய்த் தோன்றவில்லை.
என் மனைவியின் மேல் எனக்கு நேசம் உண்டு. அதைவிட
என் மனைவியின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு.
லுக்ரீசின் அழகு உண்மை. எனில்
லுக்ரீசின் ஒழுக்கம் உண்மைக்கும் மேல்.
இனியவள் அகத்தை சந்தேகித்தால்
இனியவள் முகத்தை எப்படிக் காண்பேன்?
நெஞ்சில் என்னை வைத்திருக்கு மட்டும் என் லுக்ரீஸ்
கொஞ்சமும் தயங்காமல் சொல்வேன் என் லுக்ரீஸ்
வஞ்சிக்கமாட்டாள் என்னை. அவளைக்
கிஞ்சித்தும் சந்தேகித்தால் நான் அன்றோ துரோகி? எனவே
வீரருடன் தங்க அனுமதியுங்கள் என்னை. லுக்ரீஸைக் கண்டால்
தீராத என்னன்பைச் சொல்லுங்கள். நகருள் நீர் துணிந்து
பேருவகை பெற்றுப் பொழுதோடு வாருங்கள்' என்றான் பணிந்து.
உளமாற விடைகொடுத்த வீரத்
தளபதியை விட்டு செஸ்டசுடன்
பகை வென்றப் படைவீரர் பன்னிருவர்
நகை வியாபாரி போல் வேடம் பூண்டு
அரிதியா எல்லை கடந்தனர்
ரோம் நகருள் நடந்தனர்.
20
இரவின் போர்வையில் எத்தனை மூடல்கள்!
விழிப்பு அங்கே உறங்கினாலும்
உறக்கம் அங்கே விழித்துக் கொண்டிருந்தது.
உறங்கும் போது நரகமாகிறதா நகரம்?
விழிக்கும் போது நகரமாகிறதா நரகம்?
இயற்கை ஒளியில் மறைக்கப்படும் பாவம்
செயற்கை ஒளியில் நியாயமாகும் மாயம்.
பொது விளக்குகளின் ஜாலம். மதுக் கடைகளில்
எது ஒளி என்று இனம் அறியாக் கோலம்.
மதுவா?
மங்கையா?
பொய்யறிவா?
மெய்யறிவா?
அனுபவமா?
அறிவா?
சுகமா?
ஞானமா?
தட்டுங்கள் திறக்கப்படும். இங்கே எதுவும்
கேளுங்கள் தரப்படும்.
விற்கக் கூடாதவை விற்கப்படும்
வாங்கக் கூடாதவை வாங்கப்படும்
விற்கக் கூடாதவை வாங்கப்படும்
வாங்கக் கூடாதவை விற்கப்படும்.
ஒளிவிளக்குகளின் நிழல் சந்தையில்
களிப்பும் காணலாம். கவனித்தால்
கண்ணீரும் காணலாம்.
21
நகை வியாபாரிகள் நால்வரின் மனைவியர்
தகை மறந்து தங்களை மறந்து
இன்னொரு ஆண் இன்னொரு பெண் என
மின்னலாய்ப் புதுத்துணை தேடி
பொதுச் சந்தையிலே
மதுப் போதையில் இருந்தனர்.
இன்னும் சிலர் தம் மனைவியர்
தன்னை மறந்து தம்முடைய வீட்டுள் தம்முடைய கட்டிலில்
தனிமைக்குத் தனிமை வழங்கிக் கொண்டிருந்தது கண்டு
மனைவியைத் தழுவியக் கைகளை நொந்தனர்.
மாறுவேட வீரர்கள் வரிசையில் ஒவ்வொரு மனைவியின்
மீறல்களையும் துரோகங்களையும் கண்டனர்.
இறுதியில் லுக்ரீஸின் இல்லம் வந்தனர்.
22
இரவின் ஒளியில் லுக்ரீஸ் அங்கே
இன்னொரு நிலவாய் உலவிக் கொண்டிருந்தாள்.
இங்கொரு ஓவியம் அங்கொரு ஓவியம் எல்லாம்
தங்கமகன் காதலன் கணவன் கொலாடினின் முகம்.
நந்தவனத்தின் நடுவே அன்றரைத்த புதுச்
சந்தனத்தின் மணமும் பொலிவும் கூடி
வந்தமர்ந்த லுக்ரீஸ் அருகிருந்த
கொலாடினின் ஓவியத்தைப் பார்த்தபடி
பேசினாள் பாடினாள் பின்னர் அறைக்குள் ஓடினாள்.
வெள்ளை நிறத்தொரு ஆடை பின்
கிள்ளை நிறத்தொரு ஆடை பின்
சென்னிறத்தொரு ஆடை பின்
பொன்னிறத்தொரு ஆடை பின்
லேவன்டர் நிறத்தில் ஆடை பின்
லில்லி மலர் நிறத்திலுமொன்று.
'இது பிடிக்குமா? கண்ணாளா உனக்கு
இது பிடிக்குமா?' என்று ஓவியத்திடம்
மதுவின் குரலில் கேட்டுக் கொண்டிருந்தாள்
மணாளன் பதில் சொன்ன பாவனையில்
மாற்றுடையில் வந்தாள்.
'போர் முடிந்து வெற்றியுடன்
நீர் வரும் வேளையில் நான்
உடையணிந்தால் உமக்குக் கோபம் வருமோ?
தடையாகுமென்றால் வேண்டாம்' என்று
கையிலிருந்த உடையை எறிந்துப்
பொய்யாகச் சீண்டினாள் படத்தில் முகத்தை.
வண்ணப் பந்து போல் இங்குமங்கும் தாவி
கண்ணன் காதலன் கொலாடினின் முகம் தடவினாள்.
முத்தமிட்டாள். சிரித்தாள். அழுதாள்.
பித்தானாற்போல் பேதை.
23
திடுக்கிட்டான் செஸ்டஸ்.
போர்க்களத்திலிருந்து வந்தவன் இங்கொரு
போர்க்களத்தை எதிர்பார்க்கவில்லை.
சீர்க்களமாய் ஓர்க்களம் கண்டும்
போர்க்களமாகும் பார்வையின் காட்சி!
மிரண்டவன் மனதுக்குப் பறப்பதெல்லாம் பருந்து.
பசித்தவன் நாவுக்கு புசிப்பதெல்லாம் விருந்து.
சிரித்தான் செஸ்டஸ்.
என் பிரமையா? இல்லை உண்மை!
லுக்ரீஸ்!
இவள் ஒரு போர்க்களம்.15
இவள் முகம் ஒரு போர்க்களம்.
இவள் இடை ஒரு போர்க்களம்.
இவள் நடை ஒரு போர்க்களம்.
இவள் குரல் ஒரு போர்க்களம்.
இவள் முகத்தில் ரோஜாவுக்கும் லில்லிக்கும் போர்.
இவள் இடையில் மின்னலுக்கும் மலர்க்கொடிக்கும் போர்.
இவள் நடையில் அன்னத்துக்கும் தென்றலுக்கும் போர்.
இவள் குரலில் கன்னலுக்கும் கள்ளுக்கும் போர்.
அழகின் செம்மை.
அடக்கத்தின் வெண்மை.
இவள் உடலில் செம்மைக்கும் வெண்மைக்கும் போர்.
இவள் முகத்தின் செந்தீற்றுக்கள் போரின் ரணம்.
அழகின் ஆணவம்.
ஒழுங்கின் அடக்கம்.
இவள் பொலிவில் ஆணவத்துக்கும் அடக்கத்துக்கும் போர்.
இவளால் அழகுக்கும் ஒழுங்குக்கும் இடைவிடாதப் போர்.
இவளுக்குள் போரிடும் அழகும் ஒழுங்கும்
இவளுக்கே பாதுகாப்பா! பெரிய முரண்!
பலவாறு சிந்தித்த செஸ்டஸ்
நிலைமாறி நின்றிருந்தான்.
24
படைவீரர் பன்னிருவர் பொறாமையில் வெந்தாலும்
தடையின்றிப் போற்றினார்கள் லுக்ரீஸை.
சாகலாம் அவமானத்தால் அல்லது அரிதியா
போகலாம் என்றனர். இங்கிருந்தால் வேதனையில்
வேகலாம் என்றனர்.
விரசலாக அங்குவந்த ஒற்றனொருவன்
அரசனிடம் ஓலை தந்து ஒதுங்கினான்.
கொலாடின் கொடுத்தனுப்பிய செய்தி!
'நேசமிகு அரசே! அருமை நண்பரே!
மோசம் போனோம்.
மாறுவேடம் பூண்டு நீங்கள் போன செய்தி
கூறுகெட்டோர் கேட்டறிந்து சீறிவர
சேறானது நம் வெற்றி. உம் உயிருக்கு
ஊறானது. வஞ்சம் வேண்டித்
திரும்பும் வழியில் உம்மைக் கொல்ல
விரும்பி நிற்கிறார்கள் வில்லர்கள்.
அஞ்ச வேண்டாம். அரிதியாச்
சிறு நரிகளின் சீற்றம் நம்
சிங்கங்களுக்கு சிறு விளையாட்டு.
வீரர்களை அனுப்பிவிட்டு
அரசர் மட்டும் அங்கிருக்கட்டும்.
என் வீட்டில் தங்கி நிற்கட்டும்'.
25
பன்னிரு வீரரும் ஒவ்வொருவராய்த்
தன்னந்தனியே அரிதியா திரும்ப
மன்னன் மட்டும் மாறாப் புன்னகையுடன்
நின்றான், லுக்ரீஸ் இல்லத்து வண்ண வாயிலில்.
திட்டப்படி எல்லாம் நடந்தினித் தொடரும்
கட்டம் யாதென்ற எண்ண வாயிலில்.
[வளரும்]
13 ஹிஹி.. சுஜாதாவுக்கு என் மதிப்படங்கிய அங்கீகாரத்தின் ஒரு சிறிய அடையாளம்.
14 அரிதியா ஒரு துறைமுக நகர். மேற்கு நோக்கிய துறைமுகமானதால் ஸ்பெயின் ப்ரெஞ்சு (குறிப்பாக அந்தக்கால க்ரேக்க) நாடுகளிலிருந்து வணிகம் காரணமாக செல்வமும் நாகரீகமும் மிகுந்த பகுதியாக இருந்தது. ரோம் சற்று உள்தங்கிய (இன்றைய கணக்கில் சுமார் முப்பது கிலோமீடர்) நகரமாயிருந்ததால் அரிதியாவின் செல்வமும் செழிப்பும் ஒரு உறுத்தலாகவே இருந்தது ரோம் அரசர்களுக்கு. மேற்கத்திய கலாசாரமும் பகுத்தறிவும் ஊடுருவத் தொடங்கியிருந்ததால் அரிதியா புரட்சிக்காரர்களின் முகாமாகவும் இருந்தது. ஜூனியஸ் புரட்சிக்காரர்களுடன் தங்க நகரில் தங்கியிருந்தான். பேரரசன் லூசியசின் சேனை அரிதியாவைக் கைப்பற்ற எண்ணியதற்கு அதுவும் ஒரு காரணம். இன்றைய அரிதியா பற்றி விகியில் தேடி அறியலாம் (city of Ardea, Rome)
15 லுக்ரீசின் முகத்தில் தெரிந்த சிவப்புத்தீற்றுகள் செம்மைக்கும் வெண்மைக்கும் இடையிலான போரின் ரணம் என்பதை சேக்ஸ்பியர் மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறார். 'the silent war of lilies and roses' 'this heradlry in Lucrece's face was seen, argued by beauty's red and virtue's white' என்று எளிமையாக எழுத முடிகிற ஆங்கிலத்தின் அழகா அல்லது என் தமிழின் குறையா தெரியவில்லை, அங்கே கிடைத்த உணர்வை இங்கே கொண்டு வரத் திணறுகிறேன்.
2014/08/02
லுக்ரீசின் சாபம்
[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    
லுக்ரீசின் சாபம் [16-18]
16
'லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
என் காதலி என் மனைவி
என் மகள் என் அன்னை
என் உறவு என் சுற்றம்
என் சொத்து என் சுகம்.
லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
ஒரு சொல்லில் என்
உலகம் அடங்கும் எனினும்
சொல்லியடங்காச் சொல்
அல்லவா உன் பெயர்?
சிறப்பிலடங்கா உன் பெயர் சொல்லி
பிறக்கிறேன் தினமும்
இறக்கிறேன் தினமும்.
வாழ்கிறேன் கணமும்.
லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
எங்கோ தொலைவில் இருந்தபடி
இங்கே என்னை இயக்கி வரும்
மங்கையுன் பெயருக்கு மட்டும் எத்தனை சக்தி?
கனியே, உன்னால்
மனிதனானேன் எனினும் மிருகமானேன்
தனவானானேன் எனினும் திருடனானேன்
கணவனானேன் எனினும் காதலனானேன்
வீரனானேன் எனினும் கோழையானேன்
பேரறிஞனானேன் எனினும் பேதையானேன்.
லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
அன்னைக்கு மனையாளும் பெருமை
அரசனுக்கு உலகாளும் பெருமை
செல்வனுக்குப் பொன்னாளும் பெருமை
கவிஞனுக்குச் சொல்லாளும் பெருமை
நல்லோர் இவருக்கும் இன்னும்
எல்லாம் வல்ல இறைவனுக்கும்
இல்லாத பெருமை ஒன்று
செல்லாக்காசான
எனக்கு மட்டுமே உண்டு.
உன்னால் தினம் அன்னையானேன்
உன்னால் தினம் அரசனானேன்
உன்னால் தினம் செல்வனானேன்
உன்னால் தினம் கவிஞனானேன்.
குறையிலா உன் துணைதரும் தகுதியில்
இறைவனாகும் தேவை எனக்கில்லை.
லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
நீ பேரழகி. உன்
முகம் பளிங்கு
கண்கள் வைரம்
செவிகள் வெள்ளி
மூக்கு மரகதம்
கன்னம் பொன்
உதடுகள் பவழம்.
கூந்தல் சுரங்கத்தில்
நித்தம் நான் தேடும்
ரத்தினச் சுரங்கம் நீ.
கழுத்து வாழைக்கனி
தோளிரண்டும் பலாச்சுளை.
முலைகள் முழுமாங்கனி
மேற்காம்பிரண்டும் முழு திராட்சை.
இளவயிறு வெண் ஆப்பிள்
இடைத்தொப்புள் நாவல்கனி.
இருகை தாங்கி வரும்
அரும் பழக்கூடை நீ.
இடையோ கடவுள் போல
இனிய ஆத்திக நாத்திகக் குழப்பம்.
கனிந்தப் பேரின்ப ஞானம் தரும்
தனிப் பல்கலைக்கழகம் நீ.
தொடைகள் பெரும்பாறை
அடைபட்ட அல்குல் அருஞ்சோலை
முழங்கால் நாகப்படம்
கால்கள் கள்ளிப்பாளை
பாதமெனும் புதைமணல் தாங்கும்
போதைப் பாலைவனம் நீ.
லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
உன்
கூந்தல் கார்டினியா
முகமெங்கும் முல்லைமலர்
கன்னமிரண்டும் டெரகோடா
உதடுகள் மட்டும் ரோஜா இனம்.
கழுத்து சங்குமலர்
தோளிரண்டும் லேவன்டர்
கைகள் மக்னோலியா
கைவிரல் கனகாம்பரம்
முலையிரண்டும் வனிலா
மேற்காம்புகள் மட்டும் விஸ்டரியா வனம்.
இடை செம்பருத்தி
இளவயிறு நாகலிங்கம்
தொப்புள் டயேந்தஸ்
முதுகோ முழுத் தாமரை
பிட்டமேடு செவ்வந்தி
வல் தொடையிரண்டும் தாழம்பூ
அல்குல் மட்டும் மல்லிகை வனம்.
முழங்கால் லில்லிமலர்
காலிரண்டும் வயலட்
கால் விரல்கள் ஆலிசம்
பாதங்கள் மட்டும் பவழமல்லி இனம்.
லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
எனக்காகவென்றே நீ
தினம் மணக்கும் மலர்வனம்!9.
லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
உன்னைப் பனிக் காலமென்பதா?
பனியினும் வெண்மையன்றோ உன் தூய்மை?
நடுக்கத்தை உன் அன்பில் நான் நொடியும் கண்டதில்லை.
நீ பனிக் காலமல்ல.
உன்னை வசந்த காலமென்பதா?
வசந்தப் பூக்களை விட மென்மையன்றோ உன் மனம்?
சீற்றத்தை உன் அன்பில் நான் சிறிதும் கண்டதில்லை.
நீ வசந்தமல்ல.
உன்னைக் கோடையென்பதா?
கோடையின் கதிரைவிட ஒளியானதன்றோ உன் முகம்?
கடுமையை உன் அன்பில் நான் கணமும் கண்டதில்லை.
நீ கோடையல்ல.
உன்னை உதிர் காலமென்பதா?
உதிர்காலக் காற்றைவிட இதமல்லவா உன் அணைப்பு?
சரிவை உன் அன்பில் நான் சத்தியமாய்க் கண்டதில்லை.
நீ உதிர் காலமல்ல.
உன்னை மழைக் காலமென்பதா?
மழைச்சாரலை விட மயக்கவல்லதே உன் முத்தம்?
அழிவை உன் அன்பில் நான் அணுவும் கண்டதில்லை.
நீ மழைக் காலமல்ல.
காலங்களுடன் உன்னை ஒப்பிடுவது என் தவறே.10
காலங்களுக்கு தொடக்கமும் முடிவும் உண்டு.
உன் அழகுக்கு ஏது தொடக்கம்?
உன் அன்புக்கு ஏது முடிவு?
காலத்தைக் கடந்தவள் நீ.
அளக்கவியலும் காலத்தை
அளக்கவா முடியும் உன் அழகை?
அளக்கவியலும் காலத்தை
அளக்கவா முடியும் உன் அன்பை?
அளக்கவியலும் காலத்தை
அளக்கவா முடியும் உன் காதலை?
காலம் பிறந்தழியும் உன்
மேலான கற்பின் வலிமைக்கு அழிவில்லை..
கண்ணே லுக்ரீஸ்!
நீ காலத்தைக் கடந்தவள்.
மூப்பு உன்னை அண்டாது
மரணமும் ஒதுங்கி வழிவிடும்.
மனிதத்தின் இறுதி மூச்சு ஓயும் வரை
இனியாள் உன்னழகு பொலிவுடன் நிற்கும்.
லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
என் காதலி என் கண்மணி.
உன்னைக் கவிதையில் வடிக்க முயலும்
கவிஞரின் கர்வம் அடங்கும்.
உன்னை ஓவியமாகத் தீட்ட முயலும்
ஓவியரின் திறமை முடங்கும்.
கற்பனைகளுக்கு
புசிக்கத் தீனி தந்து
பசியால் வாடவும் வைக்கும்
உன் அழகும் கற்பும்
எனக்கு விளங்காப் புதிர்.
அரசு அழியும்
செல்வம் அழியும்
கவியும் அழியும்
உலகம் அழியும்
மரங்கள் அழியும்
காற்று அடங்கும்
காலம் முடியும்.
கண்ணே லுக்ரீஸ்!
உன் அழகுக்கு மட்டும் அழிவில்லை.
உன் கற்பின் பெருமைக்கு அழிவில்லை.
காலம் என்பதே உன் முன் கருத்தில்லாச் சொல்.11
லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
உன் அழகைக் கண்டால் என் கண்களுக்கு விருந்து.
உன்னை முத்தமிட்டாலோ என் உயிருக்கு மருந்து.
அதனால் நான் என்றும்
அழகை விட முத்தத்தை ஆராதிக்கிறேன்.
உன் பழுத்த உதட்டில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
அன்பே நான் மிருகமாகிறேன்.
உன்னைக் குதறி வெறிதணிக்க உன்மத்தம் கூடுகிறது.
உன் பருத்த மார்பில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
பெண்ணே, நான் மனிதனாகிறேன்.
உன் மென்மையும் வனப்புமென் மனதைக் கட்ட அமைதி மேவுகிறது.
உன் பரந்த வயிற்றில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
கண்ணே, நான் அரசனாகிறேன்.
எந்த அரசனுக்கும் கிடைக்காத இராஜ்ஜியம் நீ.
உன்னை முழுமையாக ஆளும் பேற்றினை பெறும் நான் பேரரசர்களின் அரசன்.
உன் செழித்த அல்குலில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
உயிரே, நான் இறைவனாகிறேன்.
உன் மாண்பை முன்னிறுத்தி மேலுமிதை விளக்காமல்
இத்தோடு அமைகிறேன் பித்தன் நான் உன் நினைவில்'.
17
கொலாடின் அமைந்ததும் அவையில் கண அமைதி.
தொடர்ந்து பெரும் ஆரவாரம்.
'இறைவனாகும் இரகசியமதை எனக்கு மட்டும்
மறைக்காது சொல்லப்பா' என்று அவையினர்
இடித்தனர், இமைத்தனர்.
துடிப்புடன் பாராட்டினர் கொலாடினை.
'உன் பேச்சைக் கேட்டு
என் மனைவி எனை விட்டு
உன்னோடு ஓடாதிருக்க உபாயமொன்று காண்பேனோ?'
விளையாட்டாய் சிரித்தான் சிற்றரசன் ஒருவன்.
இரகசியம் இரகசியம் என்று விரல் மடக்கி முகம் விரித்து
உரக்கச் சிரித்தனர் வீரர்கள்.
'இதன்றோ மெய்க்காதல்! இவனன்றோ பேறுடையவன்!'
குறையில்லா காதலைக் கேட்டு
மறைவாய் ஏங்கியது அவை.
ஆரவாரத்தின் இடையே
ஓரரவம் இல்லாது
சீராக வீற்றிருந்த செஸ்டசின் மனம்
பேரரசக் கனவா?
பேரரவம் புகுந்த வீடா?12
அமைதியாக இருந்த அரசனை
இமையாது பார்த்தான் கொலாடின்.
18
மெள்ள எழுந்தான் செஸ்டஸ்.
உள்ளமெல்லாம் கள்ளம் பொங்க
அள்ளினான் நண்பனை உவகையோடு.
'உன் பெருமை என் பெருமை' என்றான்
கள்ளம் விளங்கா மொழியில்.
'ஆ! கொலாடின். காதல் பேரரசன்!
இங்கே இறைவனுண்டு. ஏதோ நாடாளும் பேரரசன் உண்டு. அரசனும் உண்டு.
எங்களுக்குப் போட்டியாகத் தங்களை உருவாக்கினாளோ லுக்ரீஸ்?'
சிங்கம் போல் சிரிப்பாய்ச் சிரித்தான் செஸ்டஸ்.
நண்பனின் சிரிப்பில் பெருமை
கொண்டான் கொலாடின்.
மறை பொருள் ஏதும் காணாத
கறை படியா மனதுடையான்.
'உற்சாகம் மிகுந்த உங்கள் பேச்சில்
கற்காசேனும் உண்மை இல்லை'
என்றான் செஸ்டஸ்
முன்னின்ற மக்களிடம்.
'பெண்மையின் உண்மையினை
கண் முன்னே காணவேண்டும்.
வேறுமுகம் பூண்டு
ஊருக்குள் சொல்வோம்.
யாருடைய மனைவி அழகரசி?
யாருடைய துணைவி கற்பரசி?
துணை பிரிந்து
தனிமையில் வாடுவோர் யார்?
துணை மறந்து
இனிமையில் ஆடுவோர் யார்?
பேர் விளங்கும் பாவையர் யாரெனப்
பார்த்து வருவோம்.
சிறிதாக ஒரு கூட்டம்
புறப்படட்டும் என்னுடன்'.
மறைவிலேனும் மனைவியைக் காணும் ஆசையிலும்
குறை காணவியலா மன்னன் சொல் என்பதாலும்
மாறு வேடம் பூண்டு புறப்பட்டது குழு.
வேறு நோக்கம் கொண்டு புறப்பட்டான் செஸ்டஸ்.
லுக்ரீசின் சாபம் [19-25] ▶
9 மயக்கும் அழகுடன் மிகவும் மணமுடைய இந்த மலர்கள் பற்றிய விவரங்களை இணையத்தில் காணலாம்.
10 நடுக்கம், சீற்றம், கடுமை, சரிவு, அழிவு முறையே குளிர், காற்று, வெயில், உதிர், புயல் இவற்றைக் குறிக்கின்றன.
11 சேக்ஸ்பியர் எழுதிய வேறு சில பாடல்களின் (sonnets) கருத்துக்களை, பொருத்தம் கருதி ஆங்காங்கே சேர்த்திருக்கிறேன்.
12 ஓரரவம்: சிறிய ஓசை | பேரரவம்: பெரிய நாகம்.
2014/07/28
லுக்ரீசின் சாபம்
[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    
லுக்ரீசின் சாபம் [6-15]
6
அடங்கியும் அடங்காத
அந்தப்புறக் கிசுகிசுப்பென
அசை போட்டு நடந்தது
அரசினத் தளிர்.
துணை வந்தக் காவலரும்
ஆவலரும் ஏவலரும்
அணைகட்டிய ஆறென
எல்லையில் நின்றனர்.
ஏவல் பேடிகள்4 இருவரை
சேவகராய் வரச்சொல்லி
அஞ்சாமல் முன் சென்றான் செஸ்டஸ். அவனை
ஒட்டிப் பின் தொடர்ந்தான் கொலாடின். விடாமல்
விட்டுத் தொடர்ந்தனர் விடலையர் பிறர்.
நடுவில் நடந்த
ஜூனியஸின் மனதில்
படிந்தது ஒரு கேள்வி.
வலையில் சிக்கியப் பூச்சியை நோக்கிக்
கலையாத கவனம் கொண்ட சிலந்தியின் பயணமாய்
நிலையாக. மெள்ள. தெளிவாக.
ஒரே ஒரு வரம்.
உடன் வந்தோரின்
தீப்பந்தங்கள்
அருகில்
கொள்ளிவாயென எரிந்து
தொலைவில்
மின்மினியாய் மறைந்தன.
நகரம்
கடந்த கிராமம்
கடந்தக் கா
கடந்த காடு
எனச் சுற்றி
பல நாட்கள் நடந்தபின்
பனிமலையின் காலடியில்
காளையரின் காலடி.
நிலவை விழுங்கிய இரவு.
சலவை செய்தத் தரையில்
படர்ந்த வெண்பனி
பரப்பிய வெளிச்சம்.
சிறுத்தைத் தோல் போர்த்தினாற்போல்
கருவானமெங்கும் ஒளிப் புள்ளிகள்.
அடிவாரத்தை
நோட்டமிட்டான் கொலாடின்.
'இங்கே தங்கலாம்' என்றான்.
'ஆகட்டும்!' என்ற
செஸ்டஸின் ஆணையில்
அஞ்சி நடுங்கிய
அடிமை அலிகள்
பள்ளம் வெட்டி
விறகுத்தூள் பரப்பி
அகண்ட தீ மூட்டி
அத்தர் திரவியம் தூவி
அமைதியாய் ஒதுங்கினர்.
படுத்தது தீயைச் சுற்றிப்
பதின்ம வயதுக் கூட்டம்.
உறக்கம் வரவில்லை.
உற்சாகத்தின் எல்லை.
'விடியுமுன் மேலேறி
வேண்டிய குறி கேட்போம்.
பொழுதைக் கழிக்கச் சற்றுப்
பழங்கதை பேசுவோம்'
என்றான் கொலாடின்.
7
'கிரேக்கப் பித்தியாவில்5
தொடங்கியது குறி தேவதை.
சரியாகக் குறி கேட்கத் தவறினால்
கண்களைக் குதறிடுமாம் தேவதை'
என்றான் ஒரு அரசின இளைஞன்.
'என் பாட்டனார்
குறி கேட்டக் கதை கேளீர்.
தூணில் இருந்த மண்டையோடு6
துடிப்போடு அசைந்திறங்கி
தன்முன்னே வந்ததென்றார்'
என்றான் செஸ்டஸ்.
'ஆ!' என்று
அலறியோரை அடக்கி,
'கேளீர்.
அசைந்து வந்த மண்டையோடு
முகத்தை உரசி நகைத்தது.
என் பாட்டனார்
வீரர்களில் உயர்ந்தவர்.
மண்டையோட்டை அழுத்தி
வலது காலில் நசுக்க
அடுத்த மண்டையோடு
அலறியபடி இறங்கியது.
அவரைச் சுற்றி
தீப்பொறியாய்த் துப்பியது.
கலங்காத வீரரான என் பாட்டன்
அடங்காத மண்டையோட்டை
இடது கையால் ஓங்கியடித்து
இடது காலில் இட்டு அழுத்தினார்'
என்றான்.
'மேலும் சொல், மேலும் சொல்' என
நெருங்கியக் கூட்டம் கண்டுப்
பெருமையுடன் செருமினான் செஸ்டஸ்.
'இரு காலால் இரு ஓடுகளை அழுத்தி
நின்ற என் பாட்டனைப் பார்த்து
பெருங்கோபத்துடன் இறங்கியது
மூன்றாவது மண்டையோடு.
முறைத்தது. முன்கோபத்தில் முரண்டது.
'என் நண்பர்களை விடு,
உன்னை உயிருடன் விடுகிறேன்' என்றது.
பாட்டன் சிரித்தார்.
'நீ குறி சொன்னால், அதிலும்
நல்ல குறி சொன்னால்,
உன் நண்பர்களை விடுவேன்.
அன்றேல் அழுத்திப் பொடி செய்வேன்'
என்று பாட்டனார் மேலும் அழுத்தினார்.
மண்டையோடுகள் அஞ்சிக் கெஞ்சின.
'விடியப் போகிறது.
குறி சொன்னால் உன் நண்பர்கள்
பிழைத்துப் போவர்.
தவறினால் விடிந்ததும்
உன்னையும் என் கைகளால்
அழுத்திக் கொல்வேன்'
என்று அஞ்சாநெஞ்சன்
என் பாட்டன்
உறுதியாக நிற்க,
இளகி வந்தது
மூன்றாவது மண்டையோடு.
உயிர்ப் பிச்சை கேட்டு
உன்மத்தமாய் ஓலமிட்டது
குறி தேவதை.
மூன்று மண்டையோடுகளையும்
விடுதலை செய்தார் பாட்டனார்.
ஓடுகளும்
தப்பினால் போதுமெனத்
தூண்களில் ஏறின.
குறிதேவதையின் குரல்
இங்குமங்கும் ஓலமிட்டது.
பின்னர் தெளிவாக,
மூன்று திங்கள் பொறுத்து
மன்னராவாய் என்றது.
தொடர்ந்தது
என் பாட்டனாரின் வரலாறு'
என முடித்தான் செஸ்டஸ்.
'வீரப் பரம்பரை!' என்றுப்
புகழ்ந்தது அரசினம்.
'வீரப் பரம்பரை ஒரு நாள்
விதிப்படி அழியும் என்றும்
விவரமாகக் குறி சொன்னது'7
என்றான் ஜூனியஸ்.
மெள்ள.
'என்ன உளறுகிறாய்?' அரற்றினான் செஸ்டஸ்.
'ஆமாம் சகோ,
பாட்டன் பேச்சை மறந்தாயா?'
என்ற ஜூனியஸைச்
சுற்றியது அரசினக் கூட்டம்.
'அப்படியா? நீ சொல்லு.
அரச பரம்பரை அழியுமா?'.
ஜூனியஸ் அமைதியாகப் பேசினான்.
'ஆம். தேவதையின் குறிப்படி
பைரவன் பேசிடும் கட்டம்
பரம்பரை அழியும் திட்டம்'.8
சொல்லி முடித்த ஜூனியஸை
தயங்கிப் பார்த்தது கூட்டம்.
ஓகோவெனச் சிரித்தது.
'முட்டாள்களின் அரசன்
மூடர்களின் தலைவன்' எனத்
தலையிலும் வயிற்றிலும்
தரையிலும் வானிலும்
அடித்துத் தாளாமல் சிரித்தனர்.
'நாய் பேசினால்
பரம்பரை அழியுமா?
முட்டாள்.
எனில் அழிய வாய்ப்பே
இனியிலையென்று பொருள்.
இதையறியாத நீ
முட்டாள். மூடன்.
உனக்கெதற்கு குறி தேவதை?'
என்று
செஸ்டஸ் இளப்பம் காட்ட
அனைவரும் ஜூனியஸை
வேடிக்கை பாதி வேதனை மீதியெனக்
கூடிக்கூடிக் கேலி செய்தனர்.
கேலியின் களைப்பில்
கண் சாய்த்தனர்.
8
எங்கோ ஊளையிட்ட ஒநாய் ஒன்று
எழுப்பியது அனைவரையும் அவசரமாய் நன்கு.
களைப்பாற
மூலிகை நீர் கொணர்ந்தனர்
அலிகள்.
முகங்கழுவி முடிசீவி
முறையாக உடையணிந்து
குறிகேட்கத்
தயாரானது அரசினம்.
அலிகளை
அடிவாரத்தில் அமரச்செய்து
குருடர் போல் கோல் பிடித்து
இருளில் மலையேறினர்
மன்னர் மக்கள்.
உச்சிக்கு வந்த
கொலாடின்
சுற்றிலும் பார்த்துச்
சமாதானமானான்.
எதிரே தெரிந்த
குறி தேவதைக் கோயிலைக் கண்டான்.
'வாருங்கள்' என்று
மற்றவரை அழைத்தான்.
வந்தனர்.
வாய் பிளந்த குகையைக் கண்டு
வாய் பிளந்தனர்.
9
முப்பெரும் தூண்கள்.
தூண்களிடைப் பாறைச்சுவர்.
சுவற்றுக்குப் பின்புறம் எரிதணல் ஒளி.
மேலெழுந்தப் புகை
தூண்களைச் சுற்றியக் கொடி போல் படர்ந்தது.
தூண்களின் உச்சியில் மேடை.
மேடைகளில் மண்டையோடு.
வாய் பிளந்த மண்டையோடுகளின் வழியே
பேய் நுழைவது போல் வெளியேறிய புகையும் ஒளியும்
பிள்ளைகள் மனதில் பயமூட்டின.
அமைதியாக ஒவ்வொருவரும்
ஒரு காணிக்கையைச்
சுவற்றுக்குப் பின்புறம்
எரிகின்ற தணலில் எறிந்தனர்.
'குறிதேவதைக்கு வணக்கம்' என்றனர்.
அமைதியாகக் காத்திருந்தனர்.
மெள்ள வீசியக் காற்றுடன்
மோக விளையாட்டு ஆடியது புகை.
இங்கொரு தழுவல். அங்கொரு சீண்டல். பின்னொரு விலகல். மீண்டும் தழுவல்.
ஒட்டிவந்தத் தணல் ஒளியில் புகையின் காமம்.
திட்டமின்றிப் பிள்ளைகள் பார்க்கையில் திடுமென
வெட்டறிவாள் விழுந்த கன்று போல்
ஓரகில் தேவதை ஓலமிட்டாள்.
சிங்கத்தின் வாயில் சிக்கிய சிறுநரி.
இறந்து பிறந்த பிள்ளையைக் கண்டத் தாய்.
பிறந்த காரணம் புரியாதப் பிள்ளை.
பாலுக்கு அழும் சேய்.
நூலுக்கு அழும் அறிஞன்.
பொங்கியெழும் பெண்ணின் சீற்றம்.
வெற்றிக் கெக்கரிப்பு.
பற்றறுத்தப் பரதேசியின் மௌனம்.
நீண்ட ஆயுளின் வலி.
நிறைந்த கலவியின் ஆனந்தம்.
அத்தனையும் கலந்து
பித்தியா தேவதை ஓலமிட்டாள்.
மேடையில் ஓடுகள் தாளமிட்டன.
'அரசாளும் தகுதியோடு வந்திருக்கிறேன்.
தரமானக் குறி சொல்ல வேண்டும்' என்றான் செஸ்டஸ்.
'அரசனைக் கேட்டால் ஆண்டி மேலென்பான்
ஆண்டியைக் கேட்டால் அரசு வேண்டுமென்பான்.
ஆண்டியாகும் வலிமையிருந்தால்
அரசையாளும் பொலிவும் பெறலாம்'
என்றுச் சிரித்தது ஓரகில்.
சீறினான் செஸ்டஸ்.
'ஏய்! பிணந்தின்னும் பிசாசே!
நல்ல குறி சொல். இல்லை உன் மண்டையோடுகளை
நான் மண்ணில் புதைப்பேன்!'.
பயமின்றி இளித்தது ஓரகில்.
'பாட்டனின் பேரனா? வந்தாயா?
சொல்கிறேன். குறி சொல்கிறேன்.
முகத்தைப் பார்த்துச் சொல்கிறேன். கேள்.
முத்தத்தில் உள்ளது மகுடம்'.
பித்தச் சிரிப்பு.
பேய்ச் சிரிப்பு.
மண்டையோடுகள் ஆட
மனதை உலுக்கும் சிரிப்பு.
'முத்தமிடு முடிசூடு முத்தமிடு முடிசூடு'.
தணல் தீடீரென்று திக்கெங்கும் தீயாக
அணலைக் கூட்டும் எக்காளச் சிரிப்பு.
கழிந்த ஊழியின் அமைதி.
பழிக்கும் தேவதை குறி கேட்டு
விழித்தான் கொலாடின்.
வெருண்டான் செஸ்டஸ்.
குழம்பினான் ஜூனியஸ்.
தயங்கினர் பிறர்.
முயலின் குட்டி போல்
முனகிய தேவதை
மெள்ளக் குரலுயர்த்தியது.
'ஆம். முத்த மகுடம்.
முடியாளு முன்னே
முத்தமிட வேண்டும்.
தாயைத் தழுவியவள் கட்டியவள்
வாயிலே முத்தமிடுவோன்
விடியலில் உலகை வென்று
துடிப்புடன் தரணியாள்வான்.
உங்களில் ஒரு தங்கம்
முத்தமிடுவார், முடியாள்வார்'.
குறி நின்றது.
தீயும் தணலும் அணைந்தன.
தூணசைய மண்டையோடுகள் மறைந்தன.
அயர்ந்துறங்கும் கிள்ளையின்
மூச்சொலி போல்
முனகல் மட்டும்.
தீயில் வேகும் இறைச்சியின் வாடை
மேவிய காற்றின் ஓசை.
செவிடரின் அமைதி.
அரசினப் பிள்ளைகள்
விரசலாய் விலகினர்.
10
மலையிறங்க முனைந்த
மன்னர் மக்கள்
முத்தக் குறியில்
சித்தம் குழம்பினர்.
'முத்தத்தில் உள்ளது மகுடம்'
பித்தியாவின் குரல் முனகலாய்.
'நானிடுவேன் என் தாயை முத்தம்!' என்று
பதவி வேகத்தில் ஓடத்தொடங்கிய
செஸ்டசைத்
தொடர்ந்தனர் பிறர்.
நடுவில் நடந்த
ஜூனியசைத் தள்ளினர்.
இடறி விழுந்த ஜூனியஸ்
தடுமாறிப் புரண்டு உருண்டான்.
கலங்காமல் அவனை மிதித்து ஓடினர்
அலட்சிய அரசினர்.
ஒருமணி பொறுத்துத்
திரும்பிய கொலாடின்
மண்ணில் கவிழ்ந்து
புண்பட்டுக் கிடந்த
நண்பனைக் கண்டான்.
மேலேறி வந்து
கோல் கொடுத்து கைத்தாங்கலாய் எழுப்பினான்.
ஜூனியசின்
கை ஒடிந்திருந்தது.
முடி குலைந்திருந்தது.
முகம் சிவந்திருந்தது.
முகமெல்லாம் மண்.
மண் மறைத்தப் புண்.
ரத்தக்காயங்கள் நிரவியிருந்தன.
'வா' என்றழைத்த
கொலாடினின் கைபிடித்துக்
காலெடுத்தான்
ஜூனியஸ்.
11
அரச மருத்துவர்
அமைதியாக
விவரம் கேட்டார்.
ஓய்ந்திருந்தப் பிள்ளையின்
காயங்களைக் கட்டினார்.
தாயைத் தனிமையில் அழைத்தார்.
'என்னருமை யூரிதி!
உன் பிள்ளை உன்மத்தனல்ல' என்றார்.
'என்ன சொல்கிறீர் மருத்துவரே?'
என்று கேட்ட அன்னையை அடக்கினார்.
'அமைதி. யூரிதி, அமைதி.
தேவதையின் குறியைக் கேட்டாயா?
தாவி வந்துத் தாயை முதலில்
முத்தமிட ஓடியவர்கள்
மத்தியிலே உன் பிள்ளை மட்டும்
புத்தியினால் பயன் பெற்றான் யுரீதி
புத்தியினால் பயன் பெற்றான்!
அனைவருக்கும் தாயாவாள் பூமி.
அசல் தாய் அவள் ஒருத்தியே.
புவனம் அத்தனையும் ஈன்றெடுத்தாள்.
அவளை இவன் முத்தமிட்டான்.
முகத்தின் காயம் முத்தத்தின் காயம்.
விழுந்தவன் தொழுதவன்.
இவன்
உதட்டின் ரத்தம் நம்
தாயின் முத்தம்'.
திடுக்கிட்டாள் யூரிதி.
திடமாய்ச் சொன்னார் மருத்துவர்.
'ஆம் மகளே!
நீதியின் வேகம்
நத்தையின் வேகம்.
நீண்ட விரல்களின் நிற்காத பொம்மலாட்டம்.
வேண்டியபடி உன் மகன் முடியாளலாம்.
இது நீயும் நானும் நம் தாயும் அறிந்த ரகசியம்.
முத்தமிட்ட இவனை இனி
பித்தனாகவே இருக்கச் சொல்.
சத்தியம் இவனைச் சந்திக்கும் வரையில்
பித்தனுக்குப் பெரும் பாதுகாப்பு'
நன்றுரைத்து மருத்துவர்
சென்று மறைந்தார்.
12
காற்றானது காலம்.
வளர்ந்தனர் பிள்ளைகள்.
வாலிப வேகமும்
வாழ்க்கையின் வேகமும்
நண்பர்களை நெருக்கியது. விலக்கியது.
வளர்ந்து இளவரசான செஸ்டஸ்
பெருமுடி பெறுமுன்
ஒருமுடி அனுபவம் பெறக்
குறுநில மன்னன் ஆனான்.
தந்தையைத் தொடர்ந்து
முடிசூடத் தயாரானான்.
மதுவும் மாதும் மன்னருக்கழகென
புதுப் புதுக் கலைகள் பழகினான்.
இளவலின் தளபதி கொலாடின்.
இணைபிரியா நண்பனுமானான்.
அழகுத் தேவதைக் குழம்பு
இளம் பூக்களின் பிழம்பு
லுக்ரீஸ் என்னும்
இனிமைப் பெண்ணின் இதயக்கனி.
இதய அதர உரிமையாளன்.
மக்களுக்காக மக்களால் மன்னனேயன்றி
மன்னனுக்காக மன்னனால் மக்களல்ல
என்னும் பகுத்தறிவுத்
தத்துவங்கள் பேசித் திரியும்
பித்தனென்று ஊர் சிரித்தாலும்
மன்னர் குலமென்ற மரியாதையுடன்
தன்னந்தனியே வாழ்ந்தான் ஜூனியஸ்.
13
பதவி மோகம்
புறக்குருடனாய் பகை வளர்க்கும்
அகக்குருடனாய் அமைதி கெடுக்கும்
புதைகுழி
பரம்பரையை அழிக்கும்
தீராப்பிணி
நாராசம்
தனிமையின் விதை
மனிதத்தின் விழல்.
சிற்றப்பன் லூசியஸ் பதவி மோகத்தின் அதிபதி.
ஒட்டு மொத்தக் குத்தகையாளன்.
மாபெரும் எனும் அடைமொழி
விளக்காது தன்னை,
அளவிற் சிறியதென்னும்
அகந்தையுடையோன்.
அங்கிருந்தும் இங்கிருந்தும்
நாடுகளை இணைத்து
பெருஞ்சீசரின் கனவில்
இருமாந்திருந்தான்.
அடுத்தவர் நாடும் அடுத்தவர் மனையும்
எடுத்தவர் என்றும் கெடுத்தவர் ஆவர்.
தலைவனை மீறிய நெறிகள் இல்லையென
செருக்குடன் நடந்த லூசியஸ் மன்னன்
இருக்கும் நாடுகள் போதாதென்று
இன்னொன்றன்மேல் ஆசை கொண்டான்.
யுரீதியின் தந்தை மேல் போர் தொடுத்தான்.
முறையிட்டாள் யுரீதி.
மறையோதினான் லூசியஸ்.
'மாறுகிறது காலம்.
ஒரு குடையின் கீழ்
நாடுகள் இருக்க வேண்டும்.
மக்களை அடக்க முடியாமல்
சிக்கித் தவிக்கிறான் உன் தந்தை.
அவனுக்கு இது விடுதலை'.
மனம் வெறுத்த யுரீதி
மகன் நினைவில் ஒதுங்கினாள்.
கடுமையான போர்.
மகன் செஸ்டஸ் முன் நின்று போரிட்டான்.
போர் முடியும் தறுவாயில்
அரிதியா நகருக்கு
இளவலை அனுப்பிய லூசியஸ்
'மகனே, இது உன் பேரரசின் துவக்க விழா.
அரிதியா நகர ஆக்கிரமிப்பு.
இங்கிருந்து தொடங்கு உன் அரசை.
அரிதியாவில் அரியணை அமை.
சுற்றிலும் சீராக்கு.
வெற்றியுடன் திரும்பி வா.
பேரரசின் முடிசூட வா'
என்று ஆசி கூறித் திரும்பினான்.
14
அரிதியா தலைநகர்.
ஆயிரம் வீரர்களுடன் போர்.
அரிதியாவை அசர வைத்தான் கொலாடின்.
யுரீதியின் தந்தையை வென்றான்.
சிறை பிடித்த மன்னவனின்
கறை படிந்த சிரத்தைக் கொய்து
'இந்த வெற்றி உனக்கான என் பரிசு' என்று
முந்தி வழங்கினான் இளவலிடம்.
உயிர் நண்பனின் செய்கையில்
உவகை கொண்ட செஸ்டஸ்
உலகறியக் கூவினான்.
'என் நண்பன்!
என் உயிர்!
இனியவன் இனியிவன்
என் பேரரசின் பெருந்தளபதி!'.
தன் விரலையும் கொலாடின் விரலையும் கீறிக் குருதி கலந்தான்.
உன்னுயிர் என்னுயிரென்றான்.
நட்பின் சங்கமம் என்றான்.
'என் பேரரசின் தலைநகர்
உன் பெயரில் இனி
கொலாடியம் என வழங்கும்'.
நண்பனைக் கட்டினான்.
நாடு காணக் கட்டினான்.
15
எரிந்தது அரிதியா.
போரின் வெப்பம் தணியவில்லை.
மன்னனை இழந்த அரசு
மானத்தை இழக்க மறுத்தது.
இன்னும் போர் என்று இழுத்தது.
செஸ்டஸும் படையும்
இறுதி வெற்றிக்காக
உறுதியாகக் காத்திருந்தனர்.
களைப்பகலக் கூடாரத்தில்
மதுவும் மங்கையும் இருந்தாலும்
மன்னனும் நண்பனும் மக்களும்
மனம் சோர்ந்திருந்தனர்.
போருக்குத் துணைவந்த
ஓரூர் சிற்றரசன்
மாறுதலுக்கு இன்று நம்
மனைவி பற்றிப் பேசுவோமென்றான்.
'இனிமைகளைப் பேசுவோம்.
தனிமையினைப் போக்குவோம்' என்றான்.
வரிசையாகப் பேசினார்கள் வீரர்கள்.
மதுவின் போதையிலே
தத்தம் மனைவியரின்
அழகையும் அறிவையும் கற்பையும் பற்றி
பொழுதெல்லாம் பேசினார்கள்.
அள்ளவியலா லுக்ரீஸின் அழகைச் சொல்ல
மெள்ளத் தொடங்கினான் கொலாடின்.
லுக்ரீசின் சாபம் [16-18] ▶
4 இளவல்களையும் இராணிகளையும் பாதுகாக்கப் பேடிகளை நியமிப்பது எகிப்து, கிரேக்க, ரோம் அரசினர் வழக்கமாக இருந்தது.
5 கிரேக்க வரலாற்றில் பித்தியா எனும் குறிதேவதை ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பின் உடலில் புகுந்தவள். பாறைகளுக்குப் பின்னால் அருவமாகவும் உருவமாகவும் இருந்து பித்து பிடித்தாற்போல் குறி சொன்னவள்.
6 குறி தேவதையின் இருப்பிடம் பொதுவாக ஒரு குகை வாயில், மூன்று தூண்கள், தூண்களை இணைக்கும் பாறைச்சுவர், மற்றும் தூண்களின் தலைமேடையில் ஒரு மண்டையோடு எனச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
7 நல்ல குறி சொல்லும் தேவதை, சொன்ன வேகத்தில் கெடுதலும் சொல்லும். குறி கேட்டு வந்ததும் நல்லதை அல்லது சாதகமானதை பொதுவில் அறிவிப்பதும், தீய குறிகளை மிக நெருங்கியவர்கள் தவிர யாருக்கும் தெரிவிக்காதிருபப்தும் அரச வழக்காக இருந்தது.
8 ரோம் மன்னரகளின் அழிவை இரண்டு தீய குறிகள் முன் காட்டியதாகச் சொல்லப்படுகிறது.
    - நாய் மனிதக் குரலில் பேசும்
    - தாய் உதட்டில் தனயன் முத்தமிடுவான்
இரண்டும் வெவ்வேறு காலக்கட்டத்தில் சொன்னதாகவும் நடந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. இடறி விழுந்து அழுந்தி முகத்திலும் உதட்டிலும் அடிபட்டு ரத்தக்காயம் பெற்ற நிகழ்வு, பூமித் தாயைத் தொட்டு முத்தமிட்டதன் குறி. ஷேக்ஸ்பியர் கதையில் இது மட்டுமே வருகிறது. கூடுதல் சுவைக்காக தமிழ்க் கதையில் இரண்டையும் இணைத்துள்ளேன். மனிதக் குரல் நாய் பின்னால் வரும்.
2014/07/21
லுக்ரீசின் சாபம்
[அறிமுகம்]     [அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    
லுக்ரீசின் சாபம் [2-5]
2
சிங்கங்கள். சிறுத்தைகள். நரிகள். நாகங்கள்.
சில பசுக்கள். புறாக்கள்.
அரசினப் பிள்ளைகள் கூட்டம்.
பனிமலை தேவதையிடம்1
தனிமையில் குறிகேட்கச் செல்லும்
பனிரெண்டாம் வயதுப் பருவம்.
'நான் குறிகேட்டு ஆளாகும்
அவசியம் இல்லை' என்றான் செஸ்டஸ்.
'நான் கேட்பேன். நல்லதொரு குறி சொல்ல' என்றான் ஜூனியஸ்.
'மூளை வளருமா என்றா?'
பதிலுக்கு செஸ்டஸ் வாய்திறக்க
பக்கமெல்லாம் பஞ்சுவெடிச் சிரிப்பு.
'என்ன கேட்கப் போகிறாய்?' ஆவல் பூசிய கேலி.
'வளர்ந்தொரு நாள் புவியாள்வேன் எனும் நம்பிக்கை மெய்யாகுமா?' என்றான் ஜூனியஸ்.
தகர உருளை தரையில் ஓடும் சிரிப்பு.
கட்டிவைத்தப் பசுவின் மேல் கல்லெறியும் வீரம்.
'கோமாளிகளின் தலைவனாவாய்'
'புவியாளும் ஆசையைப் பார். காலொடிந்தவன் ஓடலாமா?'
'ஜூனியஸ் ஓ ஜூனியஸ். சிரித்துச் சிரித்து எமக்கு நெஞ்சு வலி'
'கோமாளிகளின் தலைவன் ஜூனியஸ்'
சிறகொடிந்தப் புறாவைச் சுற்றிக் கெக்கலிக்கும் பருந்து.
'ஓ. நிச்சயம்'. குரல் மாற்றிக் குறி சொன்னான் செஸ்டஸ். 'முட்டாள்களின் அரசனாவான் இந்த மூடன்'.
பாசிக்குளத்தில் தவளைகள் இரைச்சல். இடையே
பாறையில் மோதும்
பேரலையோசை.
'அறியாது பேசுகிறான். பொறுங்கள்'.
கொலாடினின் வெண்கொடி.
'அறியாமையறிவது அறிந்தவர் கடமை.
சுற்றம் பகைப்பது சூரியனைப் பகைப்பது.
இவன் நம் நண்பன்.
நட்பறிந்து நடப்போம்'.
நகையாட்டம் நின்றது. ஜூனியசைப் பிரித்தான்.
'ஆ! நண்பா!
இன்று நீ மட்டும் இல்லையெனில்
இவனுக்கு மூளைகுறை என்பது உலகறியாது போயிருக்கும்'
செஸ்டஸ் உறுமினான்.
'என் வருங்காலத் தளபதி கொலாடின்!
ஆருயிர் நண்பன்!
நீயும் அரசினம். அதற்காக அரியணை விரும்புவாயா?
இவனுக்கு ஏன் அந்தப் பகற்கனவு?'
'கனவு கண்களுக்குப் பொதுவன்றோ?
ஏன்? எனக்கென்ன குறை?'
ஜூனியஸ் வெம்பினான்.
மழை ஓய்ந்தாலும் மரங்களின் சாரல்.
வெப்பம் தணிந்த சூடு.
'ஜூனியஸ்! உன் வாயே உனக்கு வியாதி' சிரித்தான் செஸ்டஸ்.
'முட்டாள். அறிந்து கொள். என் தந்தையைத் தொடர்ந்து அரியணை ஏறுவது நானடா'.
'ஏன் நான் ஆளக் கூடாதா? உன் தந்தை என் சிற்றப்பா. வயதில் உன்னை விட மூத்தவன் நான்'
'வயதுக்குப் பதவியென்றால் இங்கே மரங்களன்றோ அரசாளும்?'
உடனிருந்தோர் சிரித்தார்கள்.
'வானத்தைச் சுட்டினால் விரலைப் பார்க்கிற வீணன்' என்றார்கள்.
'முட்டாள்' என்றார்கள். 'மூடன்' என்றார்கள்.
'நீ அரசினம். அரச பரம்பரை.
அறிவில் பெருங்குறை. ஆற்றலோ அதில் பாதி.
முட்டாள் குழியின் அடிமண்.
குலத்தின் அவமானக் கொடி' என்றார்கள்.
'எடைக்கு எடை பொன் கொடுக்கும் விழாவில் உன் மூளையைக் கொண்டு போகாதே' என்றார்கள்.
கைகொட்டிச் சிரித்தார்கள்.
அரசினப் பிள்ளைகள் கூட்டம்.
ஆணவச் சோற்றின் ஊட்டம்.
3
'அம்மா அம்மா!' என்றழுத ஜூனியஸை
அணைத்தாள் அன்னை யூரிதி.
விவரம் கேட்டாள்.
அன்னையின் அணைப்பும் ஆதரவு மொழியும்
வாடிய பயிருக்கு உரமும் நீரும்.
தேடிய கண்களுக்குத் தேவனின் உருவம்.
'மேதகு ஜூனியஸ் ப்ரூடஸ்2 - எனக்கு நீ என்றும் அரசன் தானே?
மழைக்கேது எல்லை மகனே?
காலம் ஒரு கருமேகம். காத்திரு'
மார்போடு அணைத்தவள்
மனதோடு மூட்டினாள் தீ.
4
கிண்டல் செய்தான் சிற்றப்பன். அசல் மன்னன் லூசியஸ் டார்க்வின்.
'யூரிதி.. உன் மகன் கருவான நேரம்
கடவுள் மூளைக் கடையை மூடிவிட்டார்'.
குலுங்கிச் சிரித்தான்.
மகன் செஸ்டஸ் சொன்ன விவரம் சொன்னான்.
'யூரிதி.. உன் மகன் உன்மத்தன்..
ஜூனியஸ் புவியாளக் குறி கேட்பானாம். ஏன் இந்தப் பேராசை?'
'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
என் மகனின் அறிவு
ஆயிரம் சூரியனை அடக்கும்
எனினும்
அறியாது பேசியிருந்தால்
அன்போடு பொறுத்திடுங்கள்' என்றாள் யூரிதி.
அச்சம் கொண்ட அன்னை.
'சிறகைக் கடன்வாங்கிப் பறந்தாலும்
சிறுபுறா கழுகாமோ?
என் மகன் நாளைய அரசன்.
உன் மகன் அவனுக்குப் பணியாள்.
இது குலவறம்.
மீறினால் கலவரம்'
எக்காளச் சொல் பேசினார்.
எள்ளல் முள் வீசினார்.
'உன் மகனை வெயிலில் அனுப்பாதே.
பித்தம் சற்றுப்
பிறருக்கும் பிடிக்கட்டும்!'.
பத்தாண்டுகளுக்கு முன்
பித்தாண்டவன் இந்த லூசியஸ்.
ஒரு வயிற்றில் ஒரு குருதியில் ஒரு உணர்வில் உடன்பிறந்த
அண்ணனை
அவன் இளம் மனைவியும்
இரண்டு வயதுக் குழவியும்
கதறுகையில்,
அவர்கள் கண்ணெதிரே கொன்று
அவன் சிற்றரசைச் சேர்த்தவன்.
நாடாளும் வெறியன்.
பெருமானின்3 பிறவியென்று
பெரிதாக எண்ணுபவன்.
குருதியில் ஆணவக் கேணி.
மனிதத்தோல் மிருகம்.
'யூரிதி!'
லூசியஸ் பொங்கினான்.
'உன் கணவனுக்கு நானளித்த வரம்
உம்மிருவர் உடலின் உரம்.
உயிர் பிச்சை.
நினைவில் வை'.
புயல் கண்ட கடலின் சீற்றம்.
'குறிகேட்கப் பிள்ளைகள்
பனிமலை போகட்டும்.
உன் மகனும் அரசினம்.
என் மகனுக்கு
சில மாதங்கள் முன்னவன்.
அனுமதிக்கிறேன்.
ஆனால் என்
நா கொடுத்த உயிரை
உன் மகனின்
நா கெடுக்கச் செய்யாதே!'
குடிகாரக் குரங்கின் சிரிப்பு.
'ஆயிரம் சூரியன் அறிவெல்லாம்
அகத்துள்ளே இருக்கட்டும்.
வெளியே அந்த அறிவொளி
வெட்க வெளிச்சமாக இருக்கிறது.
ஆயிரம் சூரியனும்
அவன் மூளையை
உருக்கி விட்டதோ?
தாங்க முடியவில்லை
உன் மகனின் அறிவு வெப்பம்!'.
இடியெனச் சிரித்தான்
தடியன்.
5
நள்ளிரவில் குறிகேட்க
நாள் குறித்துச் சொன்னார்கள்.
பண்டிதரும் ஜோசியரும்
பாவலரும் ஏவலரும்
பொதுமக்கள் பலபேரும்
வழியனுப்பி வைத்தார்கள்.
செஸ்டஸைச் சுற்றி
அரசினப் பிள்ளைகள்.
பின்னிரவில் குறிகேட்க
முன்னிரவில் புறப்பட்டது
பன்னிருவயதுக் கூட்டம்.
உச்சிமுகர்ந்த நினைவூறக்
கண்மறைவில் வாழ்த்தினாள்
யூரிதி.
ஜூனியஸின்
பேதைத் தாய்.
கண்மூடி
மனந்திறந்து
மகனுக்காக வேண்டினாள்.
'கடவுளே!
என் உயிரின் கண்களுக்கு
காட்சிகள் கடந்த
பார்வையைக் கொடு'.
லுக்ரீசின் சாபம் [6-15] ▶
1 ஓரகில் எனப்படும் தேவதையிடம் குறி கேட்கும் கிரேக்க அரசர்களின் பழக்கம், ரோம் அரசர்களுக்கும் இருந்தது. பெருஞ்சீசர் என்று வழங்கப்பட்ட ஜூலியஸ் சீசர் மற்றும் அவரைத் தொடர்ந்த சில அரசர்கள் இதைக் கடைபிடிக்காவிட்டாலும், பின்னாள் அரசர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். ஆண்களுக்குப் பனிரெண்டு வயதானதும் தொலைதூரப் பனிமலைக்கு அவர்களைத் தனிமையில் அனுப்பிக் குறி கேட்கச் சொல்வார்கள். வாலிபப் பருவத்தை எதிர் நோக்க ஒரு பயிற்சியாகவும் இதைக் கருதினார்கள்.
2 ஜூலியஸ் சீசரைக் கத்தியால் குத்திய ப்ரூடஸ் வேறு நபர்.
3 பெருமான் என்பது இங்கே கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்ட ஜூலியஸ் சீசரைக் குறிக்கிறது. பெரும் வல்லமை படைத்த சீசரின் மறுபிறவியாகவே தன்னைக் கருதினான் லூசியஸ்.
2014/07/19
லுக்ரீசின் சாபம்
[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    
லுக்ரீசின் சாபம் [1]
1
விதியின் கைகளில்
வண்ணக் கலவை.
எறிவதற்கான சுவர்
எதிர்வரும் எதிர்பார்ப்பில்.
எறிந்த வண்ணக்குழம்பு
ஓவியமாகுமா
என்பதில் விதிக்கு அக்கறையில்லை.
ஓவியமாக்குவது அதன் வேலையில்லை.
வெற்றி தோல்வியில்
அக்கறையில்லாது
எறியும் பகடையில் குறியாயிருக்கும்
விதி.
வெற்றியும் தோல்வியும்
மனிதரின் வலி.
விளையாட்டு மட்டும்
விதியின் வழி.
இரும்பும்
துரும்பும்
சந்தித்தால்
எது வெல்லும்?
விதியின் பகடை எப்படி உருளும்?
சந்திப்பவை மட்டும்
இரும்பும் துரும்பும்.
சந்திக்கும் களத்தையும் சந்திப்பையும்
உருவாக்குவது
விதி.
அலையடர் பெருங்கடலில் சந்தித்தால்
காணாமல் பயணம் போகும் இரும்பு.
கோணாமல் பயணம் போகும் துரும்பு.
கடற்களப் போரில்
இரும்பை வெல்லுமே
சிறுமரத் துரும்பு.
பெருங்கடலில்
துரும்பின் சாகசம் தெளிவாவது
துரும்பினாலா இரும்பினாலா?
விதியினாலா?
வாழ்க்கை
ஒரு பெருங்கடல்.
விதி
பெருங்கடற்ப் பேரலை.
அலையின்றிக் கடலில்லை.
கடலின்றி அலையில்லை.
அலைகடலுள் உறங்கும் கடலலை.
கடலலையில் விளங்கும் அலைகடல்.
இங்கே துரும்புகளின் பயணங்கள்
சில நேரம்
சாகசங்களின் அரிச்சுவடியாகின்றன.
துரும்புடன் மோதி இரும்படையும் காயம்.
வலியோரை எளியோர் வெகுண்டடக்கும் மாயம்.
லுக்ரீசின் சாபம் [2-5] ▶
2014/07/17
லுக்ரீசின் சாபம்
[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    
லுக்ரீசின் சாபம் [அறிமுகம்]
    கொடுமைக்குள்ளான/ஆகும் பெண்களை அறிவோம். தனக்கோ தன்னைச் சார்ந்தவருக்கோ ஏற்பட்ட அவமானத்தைக் கண்டுப் பொங்கி எழுந்து ஊரழித்த/அழிக்கும் பெண்களையும் அறிவோம்.
ஏதோ ஒரு வகையில் தன் ஆளுமைக்குட்பட்ட பெண்களை, ஆதிக்கத்தின் பிடியில் சொல்லொணாக் கொடுமைக்குள்ளாக்கி, பின் கொடுமைக்குள்ளான பெண்ணையே அவமானப்படுத்தி, அனாதரவாகத் தெருவில் நிறுத்தி, இன்னும் அவமானப்படுத்துவதாக அச்சமூட்டி அந்த அச்சத்தில் தன் வீறாப்பை எழுப்பி... கேவலமான சுய இன்பம் கண்ட/காணும் ஆண்களை அறிவோம். பெண்களைக் கண்களாகப் போற்றி பாசம், காதல் மற்றும் கடவுள் உணர்வுகளில் ஒளிகூட்டி பேரன்பின் உச்சத்தில் வைத்து ஆராதித்த/ஆராதிக்கும் ஆண்களையும் அறிவோம்.
எழுதப்பட்ட சரித்திரங்கள் சில, இரு தரப்பினரையும் அடையாளம் காட்டி வந்துள்ளன. எழுதப்படாத சரித்திரங்கள் பல, தினசரி வாழ்வின் புழுதியில் அடையாளமின்றிப் புதைந்தும் போகின்றன. தினசரி தேவதைகளின் சரித்திரங்கள் எழுதப்படாமலே போவதன் அநீதியை மறக்கவோ மறவாதிருக்கவோ, சில எழுதப்பட்ட சரித்திரங்கள் துணைக்கு வருகின்றன.
இது அத்தகைய ஒரு பெண்ணின் கதை. அல்ல, சரித்திரம்.
கொடுமைக்குள்ளான பெண்ணின் சாபம் சாம்ராஜ்ஜியத்தையே அழிக்க வல்லது. ஒரு சாதாரண ஆண் எம்மாத்திரம்? பணமோ பதவியோ எதுவுமே அந்த ஆணைக் காப்பாற்றப் போவதில்லை. பெண்ணின் சாபம் தீயாக மாறுகையில் அக்கிரமக்காரர்கள் அழிகிறார்கள். சில பெண்களின் சாபம் அடங்கியிருக்கும் தீபமாவதும் உண்டு. அதைத் தீயாக்கி, அக்கிரமங்களை அழிக்க ஏதுவானவர்களும் உண்டு. இந்தக் கதையிலும், அல்ல சரித்திரத்திலும், அத்தகைய நபர்கள் உண்டு.
சரித்திரம் ஒரு சாகரம். மிகச் சுலபமாக மூழ்கிப் போகலாம். மிகச் சுலபமாக மூழ்காமலும் நீந்தலாம். முத்தெடுக்கலாம்.
இது அத்தகைய முத்து.
சேக்ஸ்பியர் எழுதிய 'லுக்ரீசின் கற்பழிப்பு'.
சேக்கு எழுதியவற்றுள் நான் படித்த அத்தனையும் எனக்குப் பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்த ஐந்து: ஹேம்லெட், மெர்சென்ட் ஆஃப் வெனிஸ், மேக்பெத், மெரி வைஃப்ஸ் ஆஃப் வின்ட்ஸர், ரேப் ஆஃப் லுக்ரீஸ். எத்தனையோ காவியங்கள் எழுதிய சேக்கு இரண்டை மட்டும் வசன நடையில் எழுதினார். ஒன்று லுக்ரீசின் கற்பழிப்பு. சேக்கு கையாண்டிருக்கும் உவமைகளும் உருவகங்களும் அற்புத ஆகாயத்துக்கும் உயரே.
கற்பழிப்பு என்பதும் ஒருவகையில் உருவகம். தன்மானத்துடன் சுய மரியாதையுடன் வாழ முடியாமல் ஏச்சுக்கும் பேச்சுக்கும், வெளிப்படையான அல்லது மறைமுக வன்முறைக்கும், அடங்கிப் போகும் எந்தப் பெண்ணும் ஏதோ ஒரு வகையில் கற்பழிக்கப்பட்டவளாகிறாள். ஆணாதிக்கம் என்பது கணவன் காதலன் தகப்பன் தனயன் என்ற உருவத்தில் மட்டுமே காணப்பட வேண்டியதில்லை. சமூகத்தின் எந்தத் தட்டிலும், உள்ளும் புறமும், காணப்படுகிறது. எளிமைக்கும் கீழே அழுத்தப்பட்டவர்கள் மௌனமாக அழும்பொழுது அது கற்பழிப்பைப் போன்றக் கொடுமையானதொரு வலியின் வெளிப்பாடாகும். இது பரவலாகப் புரியாமலே போவதில் புதைந்துள்ள அபத்தமும் அநீதியும் எத்தனை காவியங்கள் யார் எழுதினாலும் வெளி வாரா.
இது சேக்குவின் லுக்ரீஸ். தமிழில் என் முயற்சி. தொடராக எழுதத் தொடங்கினால் முடிப்பதற்குள் சில சபலங்கள் குறுக்கிடுகின்றன. அல்லது சோம்பல். அப்படியே நின்று போவதில் எனக்கு விருப்பமில்லாததால் லுக்ரீஸ் என் மனதுள் கிளறிய சிந்தனைகளை எனக்கு மட்டுமே வைத்திருந்தேன். எழுதுவதா வேண்டாமா என்ற கேள்விப் பென்டுலம் அடங்க சில ஆண்டுகள் பிடித்திருக்கின்றன.
சில ஆக்க உரிமைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தொன்றிலக்கியத் தீவிரவாதிகள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். மன்னிக்க இயலாவிட்டால் அருகில் வரவும் - மண்டையில் ரெண்டு போடுகிறேன். எச்சரிக்கை: சேக்குவும் என்னுடன் சேர்ந்து இரண்டு போடுவார். அமானுஷ்ய மண்டையடி.
என் வசன கவிதை புரியாமல் போகும் சாத்தியத்தில், இதோ கதைச் சுருக்கம்:
(தற்காலத்துக்கு முந்தைய) த.மு 500ம் வருடவாக்கில் ரோம் நகரப் பின்னணியில் நடைபெறும் கதை.
மன்னன் மகன் செஸ்டஸ் டார்க்வின். அவன் உயிர் நண்பனும் தளபதியுமான கொலாடின். இருவரும் ஒரு போர் நாள் மாலையில் உரையாடுகிறார்கள். கொலாடின் தன் மனைவி லுக்ரீசின் பிரிவைப் பொறுக்க இயலாமல் அவளைப் பற்றி நண்பனான இளவரசனிடம் விவரிக்கிறான். லுக்ரீசின் அழகையும் அங்க அடையாளங்களையும் சீண்டல்களையும் காதலையும் கொலாடின் ஏக்கத்துடனும் தாபத்துடனும் விவரமாக எடுத்துச் சொல்லச்சொல்ல, இளவரசன் செஸ்டஸ் மனமிழக்கிறான்.
மனைவிகளின் நடத்தையைப் பார்வையிடும் சாக்கில் போர்க்களத்திலிருந்து விலகி லுக்ரீசைப் பார்த்துவிட்டுத் திரும்பிய செஸ்டஸ் போதையேறி எப்படியாவது லுக்ரீசை அடையத் தீர்மானிக்கிறான். நண்பன் என்ற சாக்கில் அவள் வீட்டுக்குப் போகிறான். இரவின் மயக்கத்தில் அவளை நெருங்குகிறான். பேதை வெருண்டு ஒதுங்குகிறாள். இளவரசன் என்ற ஆணவத்தில் அவளை அடங்கச் சொல்லி, மறுத்தால் அவள் மேல் பழி சுமத்துவதாக மிரட்டுகிறான். கருணை காட்டும்படி கதறியவளைக் கற்பழித்துக் குதறுகிறான். பிறகு இரவின் போர்வையில் மறைந்து போர்க்களத்துக்கு வருகிறான் - அவனுடைய குற்றம் இரவிலும் நிழலாகத் தொடர்வதை அறியாமல்.
பொழுது விடியக் காத்திருக்கும் லுக்ரீசுக்கு இனிப் பொழுதே விடியாதென்பது புலப்படுகிறது. மனதுக்கினியவனைத் தழுவியவள் மரணத்தைத் தழுவத் துடிக்கிறாள். அதற்கு முன் மன்னர் வம்ச முகத்திரையைக் கிழிக்கத் தீர்மானிக்கிறாள். நடந்தவற்றை ஒரு ஓலையில் எழுதி வைக்கிறாள். நடத்தியவன் விவரத்தை மட்டும் மறைத்து வைக்கிறாள். தனிமையில் ஒதுங்கித் தினம் தன்னைச் சித்திரவதை செய்து கொள்கிறாள். இடையே கணவன் கொலாடின் திரும்பி வருகிறான் - ஆசை மனைவியைப் பிரிந்திருக்க முடியவில்லை. ரகசியமாக வந்தவன் ரணகளத்தைப் பார்க்கிறான். போர்க்கணைகள் தொடுத்தவன் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறான். பேச மறுக்கும் லுக்ரீஸ் தான் எழுதிவைத்த ஓலையைத் தருகிறாள். கையெழுத்தைப் படித்துத் தலையெழுத்தைப் புரிந்து கொள்கிறான் கொலாடின். நெஞ்சிலே ஈட்டி நுழைந்தாற் போல் துடிக்கிறான். 'யார்? யார்?' என்று ஆத்திரத்தில் வெடிக்கிறான். தனக்கிழைக்கப்பட்ட துரோகத்துக்கு பழி வாங்கியே தீரவேண்டும் என்ற சபதத்தைப் பெற்றுக் கொண்டதும் பேதை, கோழையின் பெயரைக் கணவனிடம் சொல்கிறாள். கையில் மறைத்து வைத்திருந்த கத்தியினால் தன் உயிருக்கு விடுதலை கொடுக்கிறாள்.
கோபத்தில் வெடிக்கிறான் கணவன். அவமானத்திலும் துடிக்கிறான். கொல்லத் துணிகிறான். சாகவும் துணிகிறான். நண்பனைக் கொன்றானா? தற்கொலை புரிந்தானா?
நீதிக்கு முக்காடா அல்லது மகுடமா? விதி உருட்டிய பகடையாட்டத்தில் வெற்றி பெற்றது யார்?
லுக்ரீசின் சாபம் [1] ▶
2013/06/20
சங்க சொப்பனம்
    அதிகாலை சுமார் மூன்று மணிக்கு அலறியடித்து விழித்து எழுந்தேன். மறுபடி தூங்கப் பயந்து.. கொஞ்சம் மோர் நானே கலந்து குடித்து.. வேப்பிலை (ப்லேஸ்டிக்) அடித்து.. விபூதி ஸ்டாக் இல்லாததால் medicated powder சிறிது பூசி.. காக்கக் காக்கக் கனகவேல் காக்க.. டகுடகு டிகுடிகு டிங்கு டிங்கு டமுக்கு டப்பா அய்சலக்கா படபடபடபடபடப்பில் இரண்டு மணி நேரம் போல் வியர்த்திருந்தேன்.
இது தான் நான் கண்ட கனவு:
'மாவடு கண்' என்ற உவமை ஆளப்படும் சங்கப் பாடலையும் அதற்கானப் பொருளையும் விளக்கி எழுதுக. 10 மதிப்பெண்.
சங்கப் பாடலா? எனக்கோ சினிமாப் பாட்டு தவிர வேறெதுவும் நினைவுக்கு வர மறுக்கிறது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல, சங்கத்துக்குப் பதில் சினிமாவை நைசாகத் தள்ளிவிட நினைத்தபடி அடுத்தக் கேள்வியைப் பார்க்கிறேன். ஆடிப்போகிறேன்.
'பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழியை உதாரணத்துடன் விளக்குக'.
'இன்னா எயவுடா இது முருகா?' என்று எண்ணி, முதல் நாளிரவு எழுதி மறைத்து வைத்த பிட்டை நாடுகிறேன். பேன்டுக்குப் பதில் அங்கே வேட்டி. ஆ! வேட்டியா கட்டியிருக்கிறேன்?! அதிர்ச்சியடங்கி, மீண்டும் கேள்விகளைப் படிக்கிறேன்.
'10 மதிப்பெண்' என்றிருந்தது, ஸ்பிடாமீடர் போல கிடுகிடுவென உருண்டு, '50 மதிப்பெண்' என்று என் கண் முன்னே மாறுகிறது. இரண்டு கேள்விகளைத் தவிர மற்றக் கேள்விகள் மறைந்து, அங்கே என் தமிழாசிரியரின் முகம் தோன்றுகிறது. பவர்ஸ்டார் போலச் சிரிக்கிறார்.
அலறியடித்து எழுந்தேன்.
இப்படி ஒரு கனவு வந்தால் நீங்கள் மட்டும் அலறாமல் என்னவாம்? இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்றா பாடுவீர்கள்?
    மினி மனைவி. சமீபத்தில் படித்த புத்தகம் #1. மேனுவல் கன்சாலெஸ் எழுதிய பதினெட்டு சிறுகதைகள். பதினெட்டில் பதினொரு கதைகளை ரசித்தேன். இவரின் கதைத்தளங்கள், கொஞ்சம் மூளையைக் கசக்கிப் பிழியும் அசாதாரணத் திகில் கலந்த வக்கிரக் குறும்புத் தளங்கள் (அப்படியென்றால்?). படித்து முடித்ததும், கதையின் விபரீதம் வக்கிரம் இவற்றின் பின்னால் இருக்கும் யதார்த்தம் புரிந்து திடுக்கிடுகிறோம்.
| பைலட்டும் எழுத்தாளனும் சுமார் பத்தாயிரம் அடி உயரத்தில் நகரை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம், இருபது வருடங்களாக - இப்படித் தொடங்குகிறது கதை. கடத்தப்பட்ட விமானம் ஒன்றில் பயணியாக நகரை வலம் வரும் எழுத்தாளனுக்கு மெள்ள மெள்ளத் தன் நிலை பழகிவிடுகிறது. இருபது வருடங்களாக ஒரு விமானத்துக்குள் அடைபட்டுக் கிடந்தால் என்ன ஆகும்? எப்பொழுது தரை தொடுவது? பிற பயணிகள் பைலட் சேவகர் அனைவரையும் தெரிந்து கொண்டாகி விட்டது. இனி? எழுத்தாளனுக்கு பழைய நினைவுகள் துணையாகின்றன. இந்த விமானம் என்றைக்காவது தரையிறங்குமா? முதலில் கவலைப்படுகிறான். நாளாக அந்தக் கவலையையும் துறக்கிறான். இறங்கத்தானே வேண்டும் ஒரு நாள்? பயணிகளுக்கும் தினம் வயதாகிக் கொண்டே போகிறதே? யாருமற்ற விமானம் தரை தொடத்தானே வேண்டும்? யாருமற்ற விமானம் தரை தொடுவதை கற்பனையில் ரசிக்கிறான். அனுபவிக்கிறான். தரைதொடாத கடத்தப்பட்ட விமானம் ஒரு படிமம். நம் வாழ்வு நாம் விரும்பியபடியா அமைகிறது? இந்த வாழ்வுக்குள் நாம் புகுத்தப்பட்டவர்களா? எனில், அது கடத்தல் தானே? என்றைக்குத் தரை தொடுவோம்? | கலைஞன் tinnitus தெரியுமோ? அக்கம்ப்பக்கத்தில் எந்த ஒலியெழும்பாவிட்டாலும் காதிலும் மண்டையிலும் கிர்ர்ர்ர்ர் ஒலி கேட்குமே, அதான் tinnitus. இந்தக் கதையின் நாயகன் கார்ல், tinnitus extremus :). அதாவது கார்ல் தன் காதுகளால் பேசக் கூடியவன். in fact, காதுகளால் மட்டுமே பேசக் கூடியவன். ஏழு வயதில் பேசத் தொடங்கிய கார்லின் உதடுகள் அசையாமல், ஒலி மட்டும் வருவதைப் பார்த்துப் பேய் பிசாசென பயந்து போன பெற்றோரில் தொடங்கி, கார்லின் பள்ளி வாழ்வு, பின் டீனேஜ், நடுத்தர வயது அனுபவங்கள் என்று விவரமாகப் போகிறது கதை. கார்லின் நிலை பற்றிய மருத்துவக் குறிப்புகள் கொஞ்சம் இழுவையென்றாலும், புதிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. கார்ல் தன் இயலாமையே தன்னுடைய சிறப்பான திறமை என்று உணரத் தொடங்குவதாக முடிகிறது கதை. நம்மில் எத்தனை பேர் வாயிருந்தும் பேசாமல் வாழ்கிறோம்? காதால் பேசுவது ஒரு படிமம். மனதைப் பேசத் துணிவின்றி மனதுள் பேசித் திரிகிறோம். பலவீனங்களை பலமாக மாற்றுவதன் அவசியத்தை எத்தனை பேர் உணர்ந்து வாழ்கிறோம்? | மினி மனைவி அளவுச்சுருக்க விற்பன்னன் ஒருவன் தவறுதலாகத் தன் மனைவியை கட்டை விரல் அளவுக்குச் சுருக்கி விடுகிறான். அவளைப் பழைய உருவத்துக்குத் திருப்ப முயலுகையில் அவன் மனதில் வக்கிரம் தலைதூக்குகிறது. மனைவியை அதே நிலையில் விடுகிறான். ஒரு பொம்மை வீடு கட்டி அங்கே அவளை குடிவைக்கிறான். சிறையிருக்கப் பிடிக்காத மனைவி, பழி வாங்கத் தீர்மானிக்கிறாள். 'என்னை நீ பழி வாங்குவதா?' என்று சிரிக்கிறான் கணவன். இருவருக்கிடையிலான கார்கில் ஆரம்பம். கணவனும் மனைவியும் முறையெடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் சித்திரவதை செய்கிறார்கள். சோர்ந்து போகிறார்கள். எதிர்பாரா விதத்தில் கணவனைப் பழிவாங்குகிறாள் மனைவி. பதிலுக்கு வீடெங்கும் அரையடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்புகிறான் கணவன். போர் தொடர்கிறது. அளவுச் சுருக்கம் ஒரு படிமம். உருவகம். சுடுசொல்லால் தினமும் நாம் எத்தனை பேரைச் சுருக்குகிறோம்? தினம் எத்தனை சுருங்குகிறோம்? எத்தனை வதைக்கிறோம்? வதைபடுகிறோம்? |
கடுகி யதரலைக்கும் கல்சூழ் பதுக்கை
விடுவி லெயினர்தம் வீளையோர்த் தோடும்
நெடுவிடை அத்தஞ் செலவுரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண்.
சமீபத்தில் படித்த புத்தகம் #2. பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான கைந்நிலை. ஏனென்று கேட்காதீர்கள், படித்தேன். சங்குப்புலவர் எழுதிய உரை, இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. நீங்களும் படியுங்கள், ஏனென்று கேட்க மாட்டேன்.
மான்விழி மீன்விழி என்றெல்லாம் படித்துக் கேட்டிருக்கிறேன். முதல் முதலாக 'மாவடு கண்ணல்லவோ?' என்றச் சினிமாப் பாடல் வரியைக் கேட்டதும் திகைத்தது நினைவிருக்கிறது.
பெண் இலக்கணம் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது, சொல்லப்பட்டிருக்கிறது. முக்கியமானவை மூக்கும் கண்களும். ("மூக்கும் முழியுமா அழகா இருக்கா பொண்ணு" - இதில் முழியைத் தொடர்ந்து வரும் 'அழகு' என்பதற்கான பொருளறிய விரும்புவோர் 'சாமுத்ரிகா லட்சணம்' படிக்கவும். பெண்ணிலக்கணத்தில் இத்தனை நுட்பம் இருக்கிறதா எனத் திடுக்கிட வைக்கும்). ஒரு சினிமாப் பாட்டில்* கூட 'மூக்கும் விழியும் பார்க்கப் பார்க்க மோகத்தைத் தருமோ, இல்லை முன்னழகைப் பார்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ?' என்று வருகிறது. [நானறிந்த மட்டும், அன்றும் சரி, இன்றும் சரி - ஆண்கள் பெண்களை மோகிப்பதன் காரணம், பெண்களுக்குக் கண்கள் இரண்டு இருப்பதால் அல்ல, kapish?]
பின்னாளில் 'மாவடு கண்' என்று நிறைய புலவர்கள் பாடியிருக்கிறார்கள் என்பது தெரிந்து வியந்தேன்.
வஞ்சி நகரில் வாழும் தலைவியின் முகத்தை அழகு செய்த கண்கள் எப்படிப்பட்டவை? 'புறத்தன, ஊரன, நீரன, மாவின் திறத்தன' என்கிறது ஒரு தண்டியலங்காரப் பாடல்.
காட்டில் வாழும் மான்களின் கண்களைப் போன்றவை (புறத்தன). விரையும் அம்புகளைப் போன்றவை (ஊரன). நீரில் உள்ள குவளை மலர்களைப் போன்றவை (நீரன). and finally.. மாவடுக்களைப் போன்றவை (மாவின் திறத்தன).
திருவாசகத்திலும் வருகிறது. வழக்கம் போல் ஆணாத்திகப் புலம்பல் என்றாலும் தமிழை ரசிக்க முடிகிறது. 'பெண் எனும் பிசாசிடமிருந்து என்னைக் காத்தருளிய பெருமானே!' எனும் மாணிக்கவாசகர், தான் மாவடு கண்களில் சொக்கியதாகவும் சொல்கிறார். 'மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன்' என்கிறார். மாழை = மாவடு. 'மாவடெனப் பருத்த மையிட்ட அழகானக் கண்களையுடையவர் மேல் கொண்ட ஆசை, மத்தின் சுழற்சி வேகத்தில் பானையெங்கும் அலைபாயும் தயிர் போல் என்னை நிலைகொள்ளாதுத் தளர வைத்தது' என்கிறார். (துய்க்குமட்டும் துய்த்துப்பின் பிய்த்துக் கொண்டோடும் புலவரே, மிஸ்டர் மாணிக், சற்று நில்லும். 'ஆணெனும் அரக்கனிடமிருந்து என்னை விடுவித்தாயே!' என்று பெண்கள் எந்தப் பெருமானிடம் வேண்டிப் பாடுவார்கள்.. ம்?)
சங்கப் பாடலின் மாவடு கண் சுவையானது.
இங்கே தலைவி கிடந்து தவிக்கிறாள். "என் தலைவரே, யாது மொழிந்தீர்?!" என்கிறாள். தலைவனின் முரட்டு உதடுகளைத் தன் மலரன்ன விரல்களால் பொத்தித் துடிக்கிறாள்.
ஏன் துடிக்கிறாள்? தலைவன் அப்படி என்ன சொன்னான்? நம் எண்ணத்தைப் புரிந்தவன் போல் தலைவனும் "அப்படி என்ன சொன்னேன் கண்ணே?" எனறு கேட்க எண்ணுகிறான். ஆனால் உதட்டில் பட்டத் தலைவியின் விரல்கள் சுவையாகவும் சுகமாகவும் இருப்பதால் அமைதி காக்கிறான். தலைவன் இருக்கிறானே, ர..சி..கன்.
தலைவி தொடர்கிறாள்.
"எமது காதலரே! பாலை வழிப் போவதாகச் சொல்கிறீரே! இது அடுக்குமா? பாலையை நானறியேனா? பாலை வழியெங்கும் ஆங்காங்கே புதைந்திருக்கும் பெரும்பாறைகளின் பின்னே பதுங்கியிருக்கும் கொடுமையான வேடர்களைப் பற்றி நானறியேனா? வழியில் வருவோரை அடித்து அவர் பொருள் பறிக்கும் கொடுமையானவர்களாயிற்றே? அப்பாவி வழிப்போக்கர்கள் நன்கு உள்ளுக்குள் வரும்வரை பாலையின் பற்பாறைகளில் பதுங்கியிருந்து, தப்பும் வழியின்றி அப்பாவிகள் சிக்கியதும் மிகக் கடூரமான சீழ்க்கையொலியினை எழுப்பி சுற்றியிருக்கும் வேடர்களையெல்லாம் அழைப்பதை நானறியேனா? எத்தகைய வீளையொலி? வலிய காட்டெருமைகள் கூட அந்தச் சீழ்க்கையொலியினைக் கேட்டு அஞ்சிக் கலங்கி ஓடுமே! அத்தகைய இன்னல் நிறைந்த பாலை வழியே போவதாகச் சொல்கிறீரே?!" என்று விரல்களைத் தலைவன் உதட்டிலிருந்து விலக்கிக் குவித்து அவன் நெஞ்சில் குத்துகிறாள். செல்லமாகத்தான்.
இப்படித் தலைவி பிரிவாற்றாமையில் துடிக்கும் பொழுது, அவள் மாவடுக் கண்கள் கண்ணீர் மல்கின. there you go!
மாவடு கண் இங்கே மிகச்சிறந்த உவமையாகிறது என்பது என் கருத்து. அழுத கண்கள் இடுங்கிச் சுருங்கியிருக்கும். அதனால் இங்கே மாவடு கண் என்றார் புலவர். பருத்த சிரித்த தெளிந்த கண்களுக்கு மாவடு பொருந்தினாலும், அழுத கண்களுக்கு மிகச் சிறப்பாகப் பொருந்துவதாக நினைக்கிறேன். இந்தப் பாடலைப் படிப்பவர்களுக்கு மாவடு கண் உவமை மிகுந்த நிறைவைக் கொடுக்குமென நம்புகிறேன். நெடுவிடை அத்தஞ் செலவுரைப்பக் கேட்டே வடுவிடை மெல்கின கண். ஆகா! bravo!
அலோ பிரதர், சிஸ்டர்.. அப்பால இந்த 'பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழி'னா இன்னானு தெர்ஞ்சுக்க கைந்நிலையின் 'ஓங்கல் விழுப்பலவி' பாடலைப் படியுங்க தெர்தா?
நிற்க, சங்கப் பாடல்கள் படித்தால் கெட்ட கனவு வராது. கனவே வராது. நாலு பக்கம் படித்தால் அப்படி அடித்துப் போடுகிறது தூக்கம். எளிமையோ கற்பனையோ நயமோ இல்லாத அருஞ்சொற்பொருளுரை கொண்ட சங்கப்பாடல்கள் ஆர்கேனிக் வேலியம் போல. முதல் பாடலில் கொட்டாவி. இரண்டாவதில் கண் செருகல். மூன்றாவதில் மயக்கம். நான்காவதில் REM.
போகிற போக்கில்: தமிழ் சாதி, தமிழ்க் குருதி (நிதானமாகப் படிக்கவும்), தமிழ் மண், தமிழ் மூச்சு என்றெல்லாம் கொடிபிடிக்கும் கூட்டம், இது போன்ற சங்க இலக்கியங்களை சுலபமான தமிழில் எளிமைப்படுத்தி எழுதலாமே? வரும் சந்ததியும் சிந்திக்குமே? ம்ம்.. அதுவும் சரி. 'எளிய அறிமுகம்' செய்கிறேன் பேர்வழி என்று இலக்கியத்தைத் தொலைத்தாலும் ஆபத்து. பிறகு நிச்சயம் கெட்ட கனவு வரும்.
* அது என்ன சினிமாப் பாட்டு? (எங்களுக்கு மட்டும் சினிமாப் பாட்டுப் புதிர் போட வராதான்னேன்?)
2013/06/02
பொய்நகக் கீறல்கள்
சில போலி நகங்கள் அசலில் காயப்படுத்துவதை அனுபவித்திருக்கிறீர்களா?
கவிதைக்குள் நுழைகிறாய் ஒரு அறைக்குள் நுழைவது போலவே இக்கவிதைக்குள் நுழைகிறாய். கதவைத் திறந்ததும் நீ காண்பதென்ன? ஒரு கழுவுந்தொட்டி, ஒரு குளியல்தொட்டி, அல்லது கழிவறை.. கவிதையில் கழிவறை உண்டா என்ன? 'அட! இது கவிதையல்ல, குளியலறை' என்று விலகுகிறாய்.       மறுமுறை       கவிதைக்குள் நுழைகையில்       இது குளியலறை என்று       உனக்கு ஏற்கனவே புரிந்திருக்கிறது.       சுவரலமாரியில் அடுக்கப்பட்ட சில       துவட்டுந்துண்டுகளைப் பார்க்கிறாய்.       அதன் வண்ணங்களை..       சுவற்றின் கண்ணாடியை.. தரையின் பளிங்கை..       அறையோர சொகுசு இருக்கையை.. எதிரே       கண்ணாடி உருண்டைக் கைப்பிடி புதைந்த சிற்றலமாரியை..       சிற்றலமாரியுள் அடுக்கப்பட்ட அவசியங்ளை.       'அட, இது வேறு மாதிரிக் குளியலறை' என்று விலகுகிறாய். மீண்டும் கவிதைக்குள் நுழைகையில் சுவரலமாரியில் கலைந்த.. தரையில் விழுந்து சுருண்ட.. துவட்டுந்துண்டுகளைப் பார்க்கிறாய். ஆ! கண்ணாடியில் நீர்க்கறை.. பற்பசை.. அழுக்குத் தீற்றுகள்.. பளிங்குத் தரையோரம்.. நடுவில்.. எங்கும் விரிசல் ரேகைகள்.. சற்றே விலகிய கற்களின் பற்கள். அவசரமாகச் சிற்றலமாரியைத் திறக்கிறாய். நசுங்கிய கலைந்த உடைந்த ஒழுகிய விலகிய பல்துலக்கும் முகம்பொலிக்கும் உடல்விளக்கும் அழகுசாதன மிச்சங்கள்.. இதென்ன? மறந்து போன மாத்திரைப் புட்டியைப் பார்த்ததும் ஓ.. உனக்கு இப்போது புரிந்துவிட்டது இது கவிதையே என்று.     - நேற்றிரவு படிக்கத் தொடங்கிய ராபின் ஹர்ஷ் எழுதிய 'Stupid poems for the Intelligent' எனும் சுவாரசியமானக் கவிநூலின் 'you enter a poem' கவிதையைப் படித்ததும், உடனே தமிழில் தரத் தோன்றியது. 'அறிவு வளர்ந்தக் குழந்தைகளுக்கானக் கவிதைகள்' என்று முகப்பில் சொல்லியிருக்கிறார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிற ஆளில்லை. | தினப் பிராணிகள் இவர்கள் அதிகாலையில் எழுந்துவிடுகிறார்கள். அவர்களுக்குப் பற்பசை     குளியல் துணிமணி புத்தகப்பை       ஷூ சாப்பாடு கையில் டிபன்.. அவருக்கு காலையுதவி     காப்பி       அலுவல் புறப்பாட்டுச் சேவை         சாப்பாடு கையில் டிபன்.. எல்லோருக்கும் வாசலில் நின்று     சிரித்துச் சிரித்து முகமனும் விடையும் தருகிறார்கள். ஓடியாடி நின்று நடந்து எல்லோரும் உட்கார்ந்த பின்னரே உட்காருகிறார்கள். வீட்டுவேலை வெளிவேலை என்று சுழல்கிறார்கள் வழியில் காய்கறி     பால்பழம் மளிகை       சட்டைப் பித்தான்         கிழிந்த உடைக்கு ஊசி நூல் வாங்கி வருகிறார்கள்     மொழி பாட்டு நடனம் ட்யூஷன்       கோவில் மருந்துக்கடை என்று தினம் போகிறார்கள். ஓரங்கட்டிய தூசுபடிந்த வயலினைப் பார்த்தும் எப்போதேனும் பிடித்தவர் குரல் கேட்டும் பெருமூச்சு விடுகிறார்கள்.         வாக்கு தவறாமல் நடக்கிறார்கள்         தவறான வாக்கெனினும். அடுத்தவர் சோகத்தில் பங்கெடுத்து 'எல்லாம் சரியாகிவிடும்' என்று புன்னகைத் துண்டால் கவலை துடைக்கிறார்கள்.         எல்லோரும் திருப்தியானதும்       எல்லாம் அடங்கியதும்     விளக்கணைத்த நள்ளிரவில்   அமைதி கலைக்காத ஓசையுடன் தங்கள் கவலைகளில் உரக்க அழுகிறார்கள்.     - தாரியா தொமித்ரொவிச் எழுதிய 'sad women' எனும் முன்பு படித்தக் கவிதையை ஏனோ மீண்டும் தேடிப் பிடித்துச் சேர்க்கத் தோன்றியது. |
2013/05/31
சமீபத்தில்
| சிரித்தது |
:மாடி போர்ஷனை எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்றீங்களே, ஏன்..?
:என் மனைவி என்னை ரொம்ப எடுத்தெறிஞ்சு பேசுவா, அதான்!
| ரசித்தது |
| 'team had a tremendous amount of success' என்று சொல்ல நினைத்தார். என்ன சொல்றாரு கவனிங்க.. நாட்டுல இதே நினைப்பா போச்சுங்க! |
| படித்தது |
தங்கட்கு உதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட்கு உரியவரால் தாங்கொள்க - தங்கநெடுங்
குன்றினால் செய்தனைய கொங்காய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து
தங்கத்தினால் செய்த குன்றுகளைப் போல் மார்பகங்களைக் கொண்டவளே! (சுறக்கத் தயங்கும்) பசுவிடம் அதன் கன்றின் உதவியொடு பாலைக் கறப்பது போல், தமக்கு உதவி செய்யத் தயங்குபவரிடம் உதவி வேண்டின் (அவருக்கு) அண்மையானவரின் தயவுடன் உதவியைப் பெற வேண்டும்.
படித்ததும் ஒரு சந்தேகம்.
செய்யுளில் 'ஆவின்பால்' என வருவது தெருவோரப் பால் விற்பனையகம் அல்ல என்பது இன்றைய இருபதுகளுக்குத் தெரியும் என்கிறீர்கள்?
அதல்ல சந்தேகம். இது உண்மையிலேயே நன்னெறி தானா? ஏமாற்றிக் கறப்பது எப்படி நன்னெறியாகும்?
அதுவுமல்ல சந்தேகம். இந்த நெறியைச் சொல்ல, குன்றுகளைக் கூப்பிடுவானேன்?
நிற்க.
தமிழின் அற்புதமான எளிய நூல்களுள் ஒன்று. இது போன்ற நூல்களைக் கருத்துக்காகவும், குறிப்பாக நூலாசிரியர் கையாண்டிருக்கும் உவமை உருவங்களுக்காகவும் படிக்கப் பிடிக்கும். பிடித்திருந்தால் வெட்கப்படாமல் ஓசைப்படாமல் என் கதை கவதை கட்டுரைகளில் காப்பியடிக்கப் பிடிக்கும்.
ஒரு எளிய நெறியை அதை விட எளிய உவமையோடு விளக்கியிருக்கும் அழகுக்காக ஒரு முறையாவது படிக்க வேண்டிய நூல். ஓசியில் கிடைக்கிறது இணையத்தில். தினம் தூங்குமுன் சில படித்தால் ஒரு வாரத்தில் முடித்து விடலாம். தூக்கமும் நன்றாக வருகிறது. அப்படியும் இதைப் படிக்கத் தயங்குபவர்கள் அடுத்த மணிரத்னம் கமல்ஹாசன் படத்தை இரண்டு முறை பார்க்கக் கடவது.
| சுட்டது |
| | ||
| | | |
| ஈர்த்தது |
ஓகே, அறிவிப்பு அதில்லை, இது: செவ்வாய் கிரகத்தில் குடியேற ஒரு வாய்ப்பு.
2023ல் செவ்வாயில் நிரந்தரக் குடியிருப்பு அமைப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியிருக்கிறது mars-one எனும் நிறுவனம். செவ்வாய் வாசிகளாகக் குடியேற ஆளெடுக்கிறார்கள். இலவசப் பயணம். செவ்வாய்க்குக் குடியேற விரும்புகிறவர்கள் தங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை விளக்கி ஒரு சிறு விடியோ எடுத்து இங்கே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப விடியோக்களைத் தளத்தில் பார்த்து ரசிக்கலாம். சில இந்திய/சீன விண்ணப்ப விடியோக்கள் சுவாரசியமானவை.
இந்த நிறுவனத்தின் குறிக்கோள் சரியாகப் புரியவில்லை, நடைமுறை சாத்தியமா தெரியவில்லை, எனினும் முயற்சி பாராட்டுக்குரியது. பிற கிரகங்களில் நிரந்தரக் குடியிருப்புக்கான வசதிகளைச் செய்வதே இனி மனிதத்தின் தலையாயக் கடன் என்று நம்புகிறார்கள். பூபாரம்.
இலவசமாக வழங்கப்படுவது ஒருவழிப் பயணம் என்பதை சின்ன எழுத்தில் போட்டிருக்கிறார்கள். நம்ம அரசியல்வாதிகள் சிலரை இப்படி நைசா அனுப்பிரலாம்னு தோணுதே? 'செவ்வாய்த் தரணியிலே செந்தமிழ் பேச வா தோழா உடன்பிறப்பே ரத்தத்தின் ரத்தமே உயிரிலும் மேலானக் கண்மணிகளே..' என்று ஆளுக்கு நாலைந்து வேட்டிகளைப் பிடிப்போம், பார்சல் செய்து அனுப்புவோம். on second thought, இப்பவும் கோவில் கும்பாபிஷேகம்னு கிளம்புறவங்களை "செவ்வாய் கிரகத்துல கோவிலே கிடையாது, எல்லாத்தையும் படைத்து காத்து அழித்து, பூமியை மட்டும் ரட்சிக்கும் அகிலாண்டேஸ்வர/டீஸ்வரிகளுக்கு செவ்வாயில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்" என்று நம் கனவில் நாத வேத ரூபங்கள் வந்து வற்புறுத்தியதாகச் சொல்லி ஒரு கன்டின்ஜன்ட் அனுப்பிரலாமா? என்ன சொல்கிறீர்கள்?
சரி.. செவ்வாய்ல குடியேறுகிறோம். நாளைக்கு சூரியன் சூபர் நோவா கிளைமேக்சின் போது செவ்வாயும் சுவாஹா தானே? வியாழனுக்கு அப்பால் போனால் பிழைக்கலாம் என்கிறார்கள். குடியிருப்பை ஏற்படுத்துவோர் கொஞ்சம் தள்ளி ஆஸ்டிராய்ட் பட்டி தாண்டி அந்தப் பக்கமாகப் போகக்கூடாதோ?
'போவோம்.. முதலில் சந்திரன், செவ்வாய் போன்ற இடங்களில் தற்காலிக இட வாகன மற்றும் பிற பயண வசதிகளைச் செய்து கொள்ள இது போன்ற முயற்சிகள் தேவை.. எமது குறிக்கோள் ஜூபிடரின் டஜன் கணக்கான சந்திரன்களில் ஆளுக்கொன்று எடுத்துக் கொண்டு, ஆசுவாசமாகக் கால் நீட்டிச் சுகமாக இருப்பதே..' என்ற தீர்மானம் நிறைவேறும் பொதுக்கூட்டத்தில் உட்கார எனக்கு ஒரு சின்ன இடம் தர வேண்டுகிறேன்.
| குமட்டியது |
தெற்கு ப்லோரிடாவில் இருக்கும் பென் சீகல் பூச்சிக் கடையில் அவ்வப்போது நடைபெறும் 'தின்னும் போட்டி', ஏப்ரலில் நடைபெற்றது. கரப்பான், பாச்சை, வெட்டுக்கிளிக் குஞ்சு, மண்புழு, பூரான் என்று சுவையான பூச்சிகளைத் தின்னும் போட்டி. முதல் பரிசு ஒரு மலைப்பாம்பு. சாப்பிடுவதும் சாப்பிடாததும் வெற்றி பெற்றவர் இஷ்டம்.
சரி, போட்டிக்கு வருகிறேன்.
முப்பது பேர் கலந்து கொண்ட போட்டியில் எட்வர்ட் என்பவர் 'பூச்சியா புழுவா எதுவானாலும் கொண்டா' என்று சும்மா அடித்துச் சாத்தினார். வெற்றி பெற்றார் என்று அறிவித்துப் பரிசு வழங்கும் நேரத்தில் தொண்டையைப் பிடித்துக் கொண்டு சரிந்தார் எட்வர்ட். மறுநாள் மரணமடைந்தார்.
"ம்ம்ம்.. என்ன ஆச்சுனு தெரியலியே.. எல்லாப் பூச்சிங்களும் நல்லா ப்ரெஷ்ஷாத் தானே இருந்துச்சு?" என்றபடி கன்னத்தில் கை வைத்து ஆள்காட்டி விரலால் தட்டித்தட்டி யோசித்தார் சீகல் கடைக்காரர்.
அடாப்சி ரிபோர்டைப் படித்து ஆய்ந்துத் தள்ளிய கலிபோர்னியா பல்கலைக்கழக என்டமாலஜி பேராசிரியர், "அனேகமாக கரப்பான் பூச்சியில் தான் ஏதாவது கெடுதல் இருந்திருக்க வேண்டும்.." என்று அதிசயமாகக் கண்டுபிடித்தார். 'வெட்டுக்கிளிப் பச்சடி ஊசிப் போயிருக்குமோ?' என்று ஒரு மாணவர் தெரிவித்த சந்தேகத்தை பேரா பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
நடுவில் சீகல் கடைக்காரருக்கு தர்ம சங்கடம். எட்வர்டு உழைத்துப் பெற்ற வெற்றிப் பரிசான மலைப்பாம்பை அவர் குடும்பத்தார் 'இந்தப் பக்கமே கொண்டு வராதீங்க' என்கிறார்களாம். என்ன செயவதென்று தெரியாமல் விழிக்கிறார் கடைக்காரர்.
பூச்சிப்புழுக் கூட்டுக்கு அரளிவிதை மசியலே மேலென்று தோணுதோ?
2013/02/27
அஷ்டலட்சுமி காவியம்
    விக்கிரமாதித்தன், நாரதன், சிவன், இந்திரன் என்று பலர் சொன்னதாகவும், அசலாக நடந்ததாகவும், சொல்லப்பட்டு வரும் அஷ்டலட்சுமிகள் பற்றியக் கதையை எத்தனை பேர் அறிவார்களோ அறியேன்.
கதைச் சுருக்கம்: அரசன் போஜராஜன், அஷ்டலட்சுமிகளை குலதெய்வங்களாக வணங்கி வழிபடுபவன். ஒரு நாள், எட்டு லட்சுமிகளும் வெளிநடப்பு செய்வதாக அறிவிக்கிறார்கள். அரசன் விரும்பினால் எண்மரில் ஒரு லட்சுமியை மட்டும் அவனுடன் தங்க அனுமதிக்கிறார்கள். போஜராஜன் தைரிய லட்சுமியை தங்கச் சொல்கிறான். இணங்கி அவனைப் பிரிந்த ஏழு லட்சுமிகளும், "தைரிய லட்சுமி இல்லாமல் எங்களால் இயங்க முடியவில்லை" என்று சொல்லி ஒவ்வொருவராக அரசனிடமே திரும்புகிறார்கள். அரசன் மகிழ்ச்சியோடு வாழ்கிறான். சுபம்.
'தைரியத்துடன் இருந்தால், எதை இழந்தாலும் மீட்கலாம்' என்ற ஆழமான கருத்தை வலியுறுத்தச் சொல்லப்பட்டு வரும் எளிமையான மரபுக்கதை.
லட்சுமிகளைப் பிரிந்த போஜராஜன் அதனால் ஏற்பட்ட இன்னல்களை வென்று இழந்தவை அனைத்தையும் திரும்பிப் பெற்றதை, அரசனின் ஆஸ்தான கவியாகக் கருதப்படும் மகாகவி காளிதாசன் ஒரு காவியமாகப் புனைந்ததாகச் சொல்லப்படுகிறது.
அதைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனதில் வருத்தமில்லை. காரணம், அஷ்டலட்சுமி காவியத்தை நயமான எளிமையான நல்ல தமிழ்க்கவிதைகள் வழியாகப் படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது.
    'மகாகவி' வயலூர் கோ. சண்முகம் எழுதிய 'அஷ்டலட்சுமி காவியம்' படித்தேன்.
போஜராஜன், அரசி மங்களமயி, முதலமைச்சர் தயாசமுத்திரன், அவர் பெண் வில்லி சந்திரகலா, ஆஸ்தான கவி காளிதாசன், ஊழல் மருத்துவர் லிங்கர், வில்லன் இராஜகேது, இளவரசன் திலீபன், தளபதி மார்த்தாண்டன், பகையரசர் என்று கதைமாந்தர் பலரைச் சேர்த்து அஷ்டலட்சுமி வரவு பிரிவுகளின் விளைவுகளை - இழந்த செல்வங்களை ஒவ்வொன்றாக மீட்கும் அரசனின் வீரத்தை - விறுவிறுப்பான கதையாக, காவியமாக, திகட்டாதத் தமிழ்க் கவிதைகளால் சொல்லியிருக்கிறார் மகாகவி.
சென்ற இரண்டு மாதங்களில் முழுப் புத்தகத்தை இரண்டு முறையும், மடக்கி வைத்தப் பக்கங்களைப் பலமுறையும் படித்தேன்.
படித்தேன் குடித்தேன் என்பதெல்லாம் இந்தப் புத்தகத்துக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது.
போஜராஜனின் வளமான நாட்டிலே ஆறு இப்படி ஓடுகிறது:
    வற்றியோர் துயர் துடைக்கும்
    வள்ளலின் கைபோல் நீண்டே..
நாட்டுச் சோலைகளிலே நறுமணம் இப்படி வீசுகிறது:
    அருள்பழுத் தொருவன் செய்யும்
    ஆவிநேர்க் கவிதை போலே..
அரசனுக்கு எந்த விதத்திலும் அரசி இளைத்தவளல்ல என்பதை ஒரே வரியில் சொல்லியிருக்கும் விதம், துணிவும் குறும்பும் கலந்தத் தமிழம்பு. மிகவும் ரசித்தேன்:
    ..சரிநிகர் மஞ்சம் காத்தாள்..
அரசன் பூஜைகளை முடித்து நெடு நேரமாகியும் அஷ்டலட்சுமிகளைக் காணோம். இப்படிப் புலம்புகிறான்:
    காய்களைப் படைத்திட்டேனா?
    காம்புள்ள மலரைத்தானா?
    வாய்குழறி ஒருசொல் தீதாய்
    வழிபாட்டில் உளறினேனா?
    பேய்மனக்குரங்கு வேறோர்
    மேதினி குதித்ததேயோ?
லட்சுமிகள் பிரிகிறார்கள். தன் துயரம், காரணமின்றி மகன் திலீபனையும் தொடப்போவதை இப்படிப் பாடுகிறான் அரசன்:
    சர்க்கரை இருந்த கிண்ணம்
    தட்டினில் ஏறிவந்தே
    மொய்க்கின்ற எறும்பாயீயாய்
    மூளும்விதி நம்மோடிணைந்தே
    மொக்குநிகர் திலீபனையும்
    மோதுதல் உண்மை...
தன் விதி பிறரையும் வாட்டும் என்பதற்கான உவமையை மிகவும் ரசித்தேன்.
எட்டிலே எந்த லட்சுமி வேண்டும் என்பதை மன்னன் இன்னும் இரண்டு நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும். மன்னன் தவிப்பைக் காளிதாசன் அறிந்ததை இப்படிச் சொல்கிறார் மகாகவி.
    இன்னலும் இழப்பும் கவிஞன்
    இதயத்தின் விதைகள் அன்றோ?
(ஏனோ தெரியவில்லை. கவிவேல் சிவகுமாரன் நினைவுக்கு வந்தார்:-)
லட்சுமிகள் விலகியதும் அரசன் இப்படித் தத்துவம் பேசுகிறான்:
    எய்தலும் இழப்பும் வாழ்வில்
    இயல்பதாம் யார்க்கும் உண்டாம்
    நெய்யதால் பாலால் தேனால்
    நிரம்பியே வழிந்த கிண்ணம்
    பொய்யதாய் வெறுமையாகப்
    போதலும் உண்டே ஓர்நாள்..
லட்சுமிகள் விலகியதும் அரச குடும்பத்தில் பல துயரங்கள், இன்னல்கள். தீச் சகுனங்கள். மன்னன் நோயில் வீழ்கிறான். அரசிக்குத் துயரம் தாளவில்லை. ஆனால் அரசி என்பதால் துயரத்தை வெளிக்காட்ட முடியாதே? பாசத்தைக் கடமை கட்டும் என்பது மட்டுமல்ல, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் தனிப்பட்டத் துயரங்களை பொதுநலம் கருதி அடக்க வேண்டியத் தேவை, இங்கே அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது:
    பொங்கிவரும் கண்ணீருக்குப்
    புடவையால் அணையெழுப்பி
    பூத்துவரும் செருமல் துயரின்
    புலம்பலை ஊமையாக்கி..
    ..பாமர மக்களைப் போலே
    பதறினால் கதறினாலோ..
    ..பூமகள்போல் வீற்றிருப்பாள்
    புலம்பினால் நாடே புலம்பும்..
நோயில் வாடும் கணவன். நலம் வேண்டிக் குமைகிறாள் அரசி. சரளமாகத் துள்ளுகிறது பாடல்:
    மஞ்சத்தில் சாய்ந்தாரென்றால்
    மான்குட்டியாய்த் துயில்வார் என்றன்
    நெஞ்சத்தில் சாய்ந்தாரென்றால்
    நேர்காணும் மதனேயாவார்..
    ..மஞ்சளைக் காப்பாய் தாயே
    மாங்கல்யம் காப்பாய் தாயே
    பிஞ்சன்னோன் நீயே தந்தப்
    பிள்ளையைக் காப்பாய் தாயே..
அரசனின் நிலையால் அரசாங்கம் தடுமாறுகிறது. அவைக்கவிஞன் காளிதாசன் குமுறுகிறான். 'தொடையழகும் நடையழகும் மிதக்கும் எழுத்துக் கடை நடத்தும் காளிதாசன்' அரசாங்க நடைமுறையில் நுழையலாமா? கவிஞனுக்கு அங்கே என்ன வேலை? ஒரு மகாகவிக்கு வக்காலத்து வாங்குகிறார் இன்னொரு மகாகவி:
    ..கவிஞன் என்போல்
    அரசியல் எல்லைக்கப்பால்
    போனாலும்.. அவனின்
    தேனாறு போன்ற ஞானச்
    சிந்தனையில் ஆட்சிபீடம்
    நானாவித ஆக்கம் காணும்..
(நாட்டு அரசியலில் காளிதாசன் ஈடுபட்டாலும், இந்தக் காவியம் எழுதிய மகாகவி சண்முகம் அப்படியல்ல. கலைஞர் கருணாநிதியுடன் ஒன்றாகப் படித்தவர். பழகியவர். திருவாரூரில் சிறுவனாக உடன் கொட்டமடித்தவர். எந்தவித நட்புச் சலுகையும் எதிர்பாராமல் வாழ்ந்தவர், இறுதி வரை அரசியல் பக்கமே போகவில்லையாம்).
இடையே நிறைய நடக்கிறது. ஊழல் மருத்துவர் அரசனுக்குப் பைத்திய வைத்தியம் பார்க்கிறார் ('ஊழல் டாக்டர்' தற்செயல் என்று நம்புகிறேன்). இராஜகேது உதவியுடன் வில்லி சந்திரலேகா அரசியாகிறாள். மங்களமயி சிறையில் வாடுகிறாள். திலீபன் தொலைகிறான். அரசன் அரைகுறைத் தெளிவடைகிறான். தெளிவடைந்ததும் அரசியை வெறுக்கிறான் (காரணம் சஸ்பென்ஸ். புத்தகத்தில் படித்தறியலாம்). சந்திரகலாவுடன் குலாவுகிறான். காளிதாசனை இகழ்கிறான்:
    துருப்பிடித்த மனிதர் நீர்
    சொப்பனத்தை அசைபோடுவீர்
    செரிப்பதற்கே முடியாச் சொத்தைத்
    தத்துவத்தின் அழுக்கு மூட்டை..
காளிதாசனுக்குக் கோபம் வந்தாலும் பொறுக்கிறான். அரசியை அவதூறு செய்யலாகாது என்கிறான்:
    கற்றவனே, வாழ்க்கையெனும்
    கதைப்போக்கை அறிந்த வேந்தே..
    ..நிழலுக்கும் தானே இயங்கும்
    பொறுப்புகள் உண்டா? தங்கப்
    பொன்கட்டிக் கரையான் கடித்தே
    நொறுங்கியதாய்க் கேட்டதும் உண்டா?
நிழலுக்கும் தானே இயங்கும் பொறுப்புகள் உண்டா? பிரமாதம்! பிரமாதம்! அரசனுக்கு ஒரு பிரமாதம் கூடப் புரியவில்லை.
திலீபனைக் கொல்வதற்காக அவனைக் கடத்திச் சென்ற தளபதி மார்த்தாண்டன், மனம் மாறி இளவலின் குருவாக அத்தனைப் போர்க்கலைகளையும் சொல்லித் தருகிறான். (அருமையான கதாபாத்திரம். ஏன் மனம் மாறினான் என்பதையும் சஸ்பென்சாக வைக்கிறேனே?) பகைவர்களின் கொடுங்கோலால் வாடும் மாளவத்தை மீட்கத் துடிக்கிறான் திலீபன்:
    தாயகமே மாளவமே என்றன் அன்புத்
    தங்கமணித் திருநாடே! உனக்கா வீழ்ச்சி?
    நாய்களுக்கா பூமகுடம்? ஐயோ என்றன்
    நாடிகளில் ஓடுவது ரத்தம் தானா..
ஜிவ்வென்கிறது படிக்கையில்.
நாடு பகையரசர் வசம். துரத்தப்பட்ட, உண்மையறிந்த போஜனும் அரசியும் இப்போது இணைந்து மாறுவேடத்தில் வாழ்கின்றனர். காளிதாசனை வெறுத்த போஜன், இப்போது பவானிசரண் என்ற பெயரில் சாமியாராகக் கவிபாடி எளிமையாக வாழ்கிறான். 'போதும் இந்த வேடம்' என்று அவனும் சினந்தெழுகிறான்:
    கல்லுக்குள் தேரையென என்றன் நெஞ்சக்
    கசப்புக்குள் வெறுப்புக்குள் ஒரேயோர் எண்ணம்..
ஆனால் தனக்காக அல்ல:
    மன்னவனாய் இனிநானே செங்கோலேந்தி
    மாளவத்தை ஆண்டிடவே ஆசையில்லை
    சின்னவனாய்க் கண்மணியாய் இருந்தபிள்ளை
    திலீபனவன் எங்கேனும் உயிருடன்தான்
    தன்னையுண ராவாறிருப்பான்..
கயவர்கள் ஆட்சி. நாட்டிலே வறட்சி:
    பூக்குலத்து வர்ணவாசப்
    புன்னகை இருட்டிப் போக
    ஈக்குலத்துச் சிறகும் கூட
    ஈரத்தின் நைப்பு காணா
    ஏக்கத்தில் சுருளலாமா?
(ஆகா!)
கிளைமேக்சில் சிலை திறப்பு விழா. புரட்சி வெடிக்கிறது. பிரிந்தவர் கூடுகிறார்கள். ஆதிலட்சுமி, தனலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி எனும் ஏழு லட்சுமிகளின் பிரிவினால் வாழ்வில் மகிழ்ச்சி, செல்வம் (வசதி), வெற்றி (அரசு), வலிமை, பிள்ளை, நெறி (கல்வி) எல்லாவற்றையும் இழந்து, பசியில் வாடித் திரிந்து கவிபாடி, இன்னலுற்ற மன்னனும் மன உறுதி (தைரியலட்சுமி) குன்றாதிருந்து அனைத்துச் செல்வங்களையும் மீட்கிறான். பெரும் பாடம் கற்கிறான்.
    இந்தக் கதையை, கவிதைக் காவியமாக நான்கு பாகங்களில் பாடியிருக்கிறார் மகாகவி சண்முகம். சமீபத்தில் மிகவும் ரசித்து லயித்துப் படித்தப் புத்தகம். தமிழில் பாடமாக வைக்க வேண்டிய புத்தகம். சந்தேகமேயில்லை.
இறைப்புலமை மிக்கவர் என்று மகாகவி சண்முகத்தைப் பற்றிப் பலர் சொல்லியிருக்கிறார்கள். 'அஷ்டலட்சுமி காவியம்' புத்தகமாக வெளிவரு முன்பே மறைந்துவிட்ட மகாகவி, தன் படைப்பைப் பற்றிச் சொன்னது:
"இந்தக்க் காவியத்தை நான் எழுதவில்லை. இதைப் படைத்தது, எனது அன்னை வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகியே! இது காலங்கடந்தே வெளியாகும்!"
மேலும் சொன்னது:
"இந்நூல் பூஜை அறையில் இடம் பெற்ற இல்லங்களில் அஷ்டலட்சுமிகளின் அருள் சுரக்கும்.. அனைத்து ஐஸ்வர்யங்களும் பொங்கும்!".
இந்த அருமையானப் புத்தகத்தை எனக்குப் பரிசளித்த நண்பர் நேசமிகு ராஜகுமாரன், மகாகவி வ.கோ.சண்முகத்தைத் தந்தையாக அடையும் பேறு பெற்றவர். பொறாமையாக இருக்கிறது.
மகன் தந்தைக்காற்றும் உதவி, அவர்தமிழை அவனிக்கு அளித்துவிடல். சிறப்பாகச் செய்திருக்கிறார் ராஜகுமாரன்.
மனமார்ந்தப் பாராட்டுக்களும் நன்றியும்.
    பரிமளா[வின்] ராஜகுமாரன்
    பொங்கல் நாளில்
    பரிசாய் எனக்களித்தப் பாமுடி.
    வரியெங்கும்
    சொற்தேன் பொருள்மணம்,
    இளைப்பாறக்
    கவிமலராய்த் தமிழ்க்கன்னிப் பூமடி.
அஷ்டலட்சுமி காவியம் | 'மகாகவி' வ.கோ.சண்முகம்
தமிழ்க்கூடம் 2009ம் ஆண்டுப் பதிப்பு, விலை ரூ.150
2012/11/08
சூர்ப்பனகை
    சிறுகதைகள் ஆக்சிஜனைப் போன்றவை. தினசரி யதார்த்தத்தின் வேகத்திலும் அயர்விலும் விதியென்றுத் தொலைந்து போகும் பரிதாபத்துக்குரிய ஆயிரக்கணக்கான சபிக்கப்பட்ட மாந்தரைப் போல் தொலையாமல்.. குலையாமல்.. வாழ்வின் நுகர்ச்சிகளை அறிந்தே அடைந்தே தீருவது என்ற உறுதியுடன் சோர்வை விரட்டத் துணியும் சிலருக்கு, சிறுகதை வாசிப்பு ஆக்சிஜன். துரித ஆகஸ்டு பதினைந்து. அப்படித்தான் நினைக்கிறேன். மொழி, மக்கள், நாடு, இனம், கலாசாரம், பண்பாடு என்று வகை கடந்த, அல்லது வகை சார்ந்த, சிந்தனைப் பிரதேசத்துக்கான உடனடிப் பயணம் சிறுகதை. இலக்கியம் அலக்கியம் போன்றப் பாசாங்கு அளவுகோலோடு திரியாமல்,'படிப்பவர் உணர்வுகளைச் சுண்டியிழுத்தால் அது சிறுகதையின் வெற்றி' எனும் பக்குவத்தோடு படிக்கும் பொழுது அடிக்கடி இலக்கியத்தைத் தொட முடிகிறது.
ம்ம்.. எனக்குச் சிறுகதைகள் பிடிக்கும் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறேனோ? இல்லையெனில் இப்போது சொல்கிறேன். எனக்குச் சிறுகதைகள் பிடிக்கும்.
சமீபத்தில் பல முறை படித்தப் புத்தகம், 'சூர்ப்பனகை'. கெ.ஆர்.மீரா எழுதிய மனதைப் பிசையும் மலையாளச் சிறுகதைகளை மொழிமாற்றித் தமிழில் வழங்கியிருக்கிறார் கே.வி.ஷைலஜா.
'புத்தகம் படிப்பது எப்படி?' என்று virginia woolf எழுதியக் கட்டுரையைக் கல்லூரி நாளில் படித்திருக்கிறேன். இதற்கு ஒரு கட்டுரையா என்று கேலி செய்ததன் பலனை சூர்ப்பனகை புத்தகம் படிக்கும் பொழுது அனுபவித்தேன். கட்டுரையில், 'புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது புத்தகம் படிப்பதன் முக்கிய சவால்' என்பார் வர்ஜினியா. நுண்மையைக் கண்டுணரும் தேடல் இருக்கிறது பாருங்கள்.. சாகா எழுத்தின் அடையாளம். இந்தத் தொகுப்பில் நிறைய கதைகள் அந்தத் தவிப்பைத் தந்தன.
தொகுப்பில் மொத்தம் எட்டுச் சிறுகதைகள். அனைத்துமே கனமானக் கதைகள். கதைத் தலைப்புகள் ஒவ்வொன்றும் கவிதை. தலைப்புக்காக ஒரு முறை, கதைத்தளத்துக்காக ஒரு முறை, கதைக்காக ஒரு முறை, நடைக்காக ஒரு முறை, சொல்லாட்சிக்காக ஒரு முறை, புரியாத தவிப்பைப் பெற ஒரு முறை, புரிந்த அதிர்ச்சியைப் பெற ஒரு முறை, கதையின் பாதிப்புக்காக ஒரு முறை, பாதிப்பிலிருந்து விடுபட ஒருமுறை என்று பல முறை படிக்க வைக்கின்றன. எட்டில் ஆறு கதைகளாவது படித்த பின் ஆவி போல் நம்மைச் சுற்றிக் கொண்டேயிருக்க வல்லவை.
பொதுவாக, மனதை வருடியோ உலுக்கியோ செல்லும் கதைகள் நிறைய கிடைக்கின்றன. படித்திருக்கிறேன். இத்தொகுப்பில் கதைத் தளமும் சொல்லிச் சென்றப் பாங்கும் அறிவைக் குடைந்தெடுத்து விடுகின்றன. அறிவைக் குடையும் படைப்புகளுக்கு ஆயுள் அதிகம். இது மீராவின் வெற்றி, ஷைலஜாவின் சாதனை. ஷைலஜாவின் ஆக்கத்திறனுக்கு சிறிது நேரத்தில் வருகிறேன். முதலில் புத்தகத்திலிருந்து எனக்குப் பிடித்த நான்குக் கதைகளைப் பற்றி.
சூர்ப்பனகை
அனகா. பெண்ணின் சமூக அடையாளம் அந்தஸ்து அங்கீகாரங்களுக்காகப் போராடும் பெண்ணியவாதி. கணவனைப் பிரிந்து சுதந்திரமாகத் தன் பெண் சீதாவைப் வளர்ப்பவர். தன்னிலையை விட்டுக்கொடுக்காமல் போராடும் கல்லூரி விரிவுரையாளர். 'பெரிய மார்புகள் வைத்து வரைந்த படங்களுக்கும் சுவரெழுத்துக்களுக்குமிடையே பணி புரியும்' அவரை 'சூர்ப்பனகை' என்று அழைக்கிறார்கள். பெயர்க்காரணம் மறுபடியும் கதையின் இறுதியில் நம்மைத் தாக்கும் பொழுது ஒரு கணம் மூச்சுத் திணறுகிறது. கதையின் இறுதியில் அனகாவுக்கு மார்புப் புற்று நோய் வந்து மார்பை அறுத்தெறிய வேண்டி வருகிறது. சிகிச்சைக்கு முன் சீதாவை அழைத்து, "உனக்கு என்ன வேண்டும் கேள்" என்கிறார். 'லேக்டோஜன்' குடித்து வளர்ந்த அனகாவின் பெண், "முலைப்பால்" என்கிறாள். சிறுகதை இங்கே முடிந்துவிடுகிறது என்று நான் நினைத்தேன். ஆனால் அதைத் தொடர்ந்து சில வரிகள் எழுதி கதையை முடித்த விதம் அதிர்ச்சியூட்டும் வகையில் பிரமாதம். கதையின் ஆதார ஆண்-பெண் சமத்துவ வாதங்களும் நுண்பிரசாரங்களும் சொல்லாட்சியும் நடையும் திகைக்க வைக்கின்றன. 'இனிப்பூட்டப்பட்ட வார்த்தைகள் கட்டுப்பட்டியானப் பெண்களுக்கே பொருந்தும். வீழ்ச்சிகளை அறிந்துகொண்டே செய்யும் சாகசம் தான் பெண்ணியம்' என்ற வரிகள் சிந்திக்கத் தூண்டின. ஒரு கட்டத்தில், 'ஆணால் எப்படிக் கட்டுப்பட்டியாக வாழமுடிகிறது?' என்ற அனகாவின் கேள்வியைப் படித்ததும் சத்தியமாகத் திடுக்கிட்டேன்.
செய்திகளின் நாற்றம்
தலைப்பின் கவிதைத்தனத்தை ரசித்தபடி படிக்கத் தொடங்கினால் நொடிகளில் கதைத் தளம் நம்மைக் கட்டிப் போடுகிறது. ஜர்னலிசத்தில் முனைவர் பட்டம் பெற்ற அன்னா ஒரு சாதாரணப் பத்திரிகையில் இரங்கல் செய்தி, மரண அறிவிப்பு, சவ அடக்க விவரங்கள் எழுதுபவராகப் பணிபுரிகிறார். அன்னா, மகன் சன்னி, காதலன் சந்தோஷ் என்ற மூன்று பாத்திரங்களினூடே சொல்லப்பட்டிருக்கும் இறுக்கமான கதை. சூர்ப்பனகை போலல்லாமல் இந்தக் கதையின் முடிவோடு என்னால் ஒத்துப் போக முடிந்தது. ஆனால் எதிர்பார்க்கவில்லை. தில்லிக்குப் பெயரும் பொழுது, 'மரணச்செய்திகளின் வாடையை மட்டுமே உன்னால் அறிய முடிகிறது; வேறு ஜர்னலிச வேலைகளுக்கு நீ லாயக்கில்லை' என்றப் பொருளில் கிண்டலடிக்கும் சந்தோசின் வரிகள் அன்னாவின் தன்மானத்தை அப்போதைக்கு ரணப்படுத்தினாலும், கதையின் இறுதியில், அன்னாவின் கணுக்கால் நாற்றத்தைப் படிக்கையில் சம்மட்டியாக நம்மைத் தாக்குகின்றன.
அர்த்த ராத்திரிகளில் ஆத்மா
'ஹெட்மிஸ்ட்ரஸ் சரளா தூங்க ஆரம்பித்தவுடன் அவளுடைய ஆத்மா விழித்துக் கொண்டுவிடும். உடலிலிருந்து மெதுவாக இறங்கி.. வேட்டைக்காரன் போல் சோம்பல் முறித்து வெளியே வரும்' என்றுத் தொடங்கும் முதல் பத்தியில் தொலைந்து போனவன், கதை முடிந்து வெளியே வர ஒவ்வொரு முறையும் மிகவும் சிரமப்பட்டேன். உறங்கும் பொழுது உடலை விட்டுப் பிரிந்து உலவும் ஆத்மாவின் பயண அனுபவங்கள், விழித்த நிலையில் பாதிக்குமானால் என்னாகும்? உன்னதமான கதைத்தளம். கற்பனை. 'கனவுகளென்றால் என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்?' என்று முடித்திருக்கும் விதம் பிரமாதம் என்றாலும், நுட்பத்தை முகத்தின் எதிரே நிறுத்திக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. தொகுப்பில் என்னை மிகக் கவர்ந்தக் கதை.
இறந்தவளின் கல்யாணம்
'இறந்தவளின் கல்யாணம் இப்படியாக மங்களமாக நடந்தேறியது' என்று முடிகிறது கதை. முடிவை முதலில் படித்து அது வழங்கிய மெல்லிய ஆச்சரியத்தில் தூண்டப்பட்டு முழுக்கதையும் படித்தேன். ஆதர்ச நிலையிலிருக்கும் ஒருவருக்கும் அவரை அப்படி நிறுத்தியவருக்கும் இடையிலான கோழைத்தனம் பூசிய அபாண்டமான நிழலுறவின் விளைவுகளை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். படித்ததும் சிலந்தி வலையில் எதிர்பாராமல் விழுந்துச் சிக்கியச் சிறு பூச்சி போல், நாற்புறமும் எச்சில் அமிலத்தால் தன்னை வாட்டிப் புரட்டும் சிலந்தியைத் தடுக்க முடியாமல் தவிப்பது போல், உணர்ந்தேன். ஹா! என்ன கற்பனை! எப்படிப்பட்ட நடை! திருமணமும் சிலருக்கு மரணச்சடங்காகவே அமைகிறது என்ற எண்ணத்தைத் தடுக்க முடியவில்லை.
    மொழிமாற்றம் எளிதேயல்ல. மூலப்படைப்பின் வெற்றியில் அந்த மொழிக்குப் பெரும் பங்கிருக்கிறது. மூலப்படைப்பின் உயிர்த்துடிப்பில் அந்த மொழிக்குப் பெரும் பங்கிருக்கிறது. அந்த துடிப்பை இன்னொரு மொழியில் வெற்றிகரமாக வழங்குவது எப்பேற்பட்ட ஆற்றல்! ஷைலஜாவின் தமிழாக்கத்தை மட்டுமே படித்த நான், மூலத்தின் தாக்கத்தைப் பெறும் அறிவில்லையே என்று ஏங்கினேன் என்றால் அது ஷைலஜாவின் சாதனை. தமிழில் இப்படியெல்லாம் எழுத முடியுமா என்று வியக்க வைத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு எழுத்தையும் 'கைபிடித்து அழைத்துப் போய் மலையுச்சியில் வைத்து அழகு பார்க்கும் பிரபஞ்சன்' போலவே நானும் உணர்கிறேன்.
சூர்ப்பனகை
மலையாள மூலம் கெ.ஆர் மீரா | தமிழில் கே.வி.ஷைலஜா
வம்சி புக்ஸ் வெளியீடு, டிசம்பர் 2009, ரூ.50
