2014/07/17

லுக்ரீசின் சாபம்


[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    


லுக்ரீசின் சாபம் [அறிமுகம்]

    கொடுமைக்குள்ளான/ஆகும் பெண்களை அறிவோம். தனக்கோ தன்னைச் சார்ந்தவருக்கோ ஏற்பட்ட அவமானத்தைக் கண்டுப் பொங்கி எழுந்து ஊரழித்த/அழிக்கும் பெண்களையும் அறிவோம்.

ஏதோ ஒரு வகையில் தன் ஆளுமைக்குட்பட்ட பெண்களை, ஆதிக்கத்தின் பிடியில் சொல்லொணாக் கொடுமைக்குள்ளாக்கி, பின் கொடுமைக்குள்ளான பெண்ணையே அவமானப்படுத்தி, அனாதரவாகத் தெருவில் நிறுத்தி, இன்னும் அவமானப்படுத்துவதாக அச்சமூட்டி அந்த அச்சத்தில் தன் வீறாப்பை எழுப்பி... கேவலமான சுய இன்பம் கண்ட/காணும் ஆண்களை அறிவோம். பெண்களைக் கண்களாகப் போற்றி பாசம், காதல் மற்றும் கடவுள் உணர்வுகளில் ஒளிகூட்டி பேரன்பின் உச்சத்தில் வைத்து ஆராதித்த/ஆராதிக்கும் ஆண்களையும் அறிவோம்.

எழுதப்பட்ட சரித்திரங்கள் சில, இரு தரப்பினரையும் அடையாளம் காட்டி வந்துள்ளன. எழுதப்படாத சரித்திரங்கள் பல, தினசரி வாழ்வின் புழுதியில் அடையாளமின்றிப் புதைந்தும் போகின்றன. தினசரி தேவதைகளின் சரித்திரங்கள் எழுதப்படாமலே போவதன் அநீதியை மறக்கவோ மறவாதிருக்கவோ, சில எழுதப்பட்ட சரித்திரங்கள் துணைக்கு வருகின்றன.

இது அத்தகைய ஒரு பெண்ணின் கதை. அல்ல, சரித்திரம்.

கொடுமைக்குள்ளான பெண்ணின் சாபம் சாம்ராஜ்ஜியத்தையே அழிக்க வல்லது. ஒரு சாதாரண ஆண் எம்மாத்திரம்? பணமோ பதவியோ எதுவுமே அந்த ஆணைக் காப்பாற்றப் போவதில்லை. பெண்ணின் சாபம் தீயாக மாறுகையில் அக்கிரமக்காரர்கள் அழிகிறார்கள். சில பெண்களின் சாபம் அடங்கியிருக்கும் தீபமாவதும் உண்டு. அதைத் தீயாக்கி, அக்கிரமங்களை அழிக்க ஏதுவானவர்களும் உண்டு. இந்தக் கதையிலும், அல்ல சரித்திரத்திலும், அத்தகைய நபர்கள் உண்டு.

சரித்திரம் ஒரு சாகரம். மிகச் சுலபமாக மூழ்கிப் போகலாம். மிகச் சுலபமாக மூழ்காமலும் நீந்தலாம். முத்தெடுக்கலாம்.

இது அத்தகைய முத்து.

சேக்ஸ்பியர் எழுதிய 'லுக்ரீசின் கற்பழிப்பு'.

சேக்கு எழுதியவற்றுள் நான் படித்த அத்தனையும் எனக்குப் பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்த ஐந்து: ஹேம்லெட், மெர்சென்ட் ஆஃப் வெனிஸ், மேக்பெத், மெரி வைஃப்ஸ் ஆஃப் வின்ட்ஸர், ரேப் ஆஃப் லுக்ரீஸ். எத்தனையோ காவியங்கள் எழுதிய சேக்கு இரண்டை மட்டும் வசன நடையில் எழுதினார். ஒன்று லுக்ரீசின் கற்பழிப்பு. சேக்கு கையாண்டிருக்கும் உவமைகளும் உருவகங்களும் அற்புத ஆகாயத்துக்கும் உயரே.

கற்பழிப்பு என்பதும் ஒருவகையில் உருவகம். தன்மானத்துடன் சுய மரியாதையுடன் வாழ முடியாமல் ஏச்சுக்கும் பேச்சுக்கும், வெளிப்படையான அல்லது மறைமுக வன்முறைக்கும், அடங்கிப் போகும் எந்தப் பெண்ணும் ஏதோ ஒரு வகையில் கற்பழிக்கப்பட்டவளாகிறாள். ஆணாதிக்கம் என்பது கணவன் காதலன் தகப்பன் தனயன் என்ற உருவத்தில் மட்டுமே காணப்பட வேண்டியதில்லை. சமூகத்தின் எந்தத் தட்டிலும், உள்ளும் புறமும், காணப்படுகிறது. எளிமைக்கும் கீழே அழுத்தப்பட்டவர்கள் மௌனமாக அழும்பொழுது அது கற்பழிப்பைப் போன்றக் கொடுமையானதொரு வலியின் வெளிப்பாடாகும். இது பரவலாகப் புரியாமலே போவதில் புதைந்துள்ள அபத்தமும் அநீதியும் எத்தனை காவியங்கள் யார் எழுதினாலும் வெளி வாரா.

இது சேக்குவின் லுக்ரீஸ். தமிழில் என் முயற்சி. தொடராக எழுதத் தொடங்கினால் முடிப்பதற்குள் சில சபலங்கள் குறுக்கிடுகின்றன. அல்லது சோம்பல். அப்படியே நின்று போவதில் எனக்கு விருப்பமில்லாததால் லுக்ரீஸ் என் மனதுள் கிளறிய சிந்தனைகளை எனக்கு மட்டுமே வைத்திருந்தேன். எழுதுவதா வேண்டாமா என்ற கேள்விப் பென்டுலம் அடங்க சில ஆண்டுகள் பிடித்திருக்கின்றன.

சில ஆக்க உரிமைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தொன்றிலக்கியத் தீவிரவாதிகள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். மன்னிக்க இயலாவிட்டால் அருகில் வரவும் - மண்டையில் ரெண்டு போடுகிறேன். எச்சரிக்கை: சேக்குவும் என்னுடன் சேர்ந்து இரண்டு போடுவார். அமானுஷ்ய மண்டையடி.

என் வசன கவிதை புரியாமல் போகும் சாத்தியத்தில், இதோ கதைச் சுருக்கம்:

(தற்காலத்துக்கு முந்தைய) த.மு 500ம் வருடவாக்கில் ரோம் நகரப் பின்னணியில் நடைபெறும் கதை.

மன்னன் மகன் செஸ்டஸ் டார்க்வின். அவன் உயிர் நண்பனும் தளபதியுமான கொலாடின். இருவரும் ஒரு போர் நாள் மாலையில் உரையாடுகிறார்கள். கொலாடின் தன் மனைவி லுக்ரீசின் பிரிவைப் பொறுக்க இயலாமல் அவளைப் பற்றி நண்பனான இளவரசனிடம் விவரிக்கிறான். லுக்ரீசின் அழகையும் அங்க அடையாளங்களையும் சீண்டல்களையும் காதலையும் கொலாடின் ஏக்கத்துடனும் தாபத்துடனும் விவரமாக எடுத்துச் சொல்லச்சொல்ல, இளவரசன் செஸ்டஸ் மனமிழக்கிறான்.

மனைவிகளின் நடத்தையைப் பார்வையிடும் சாக்கில் போர்க்களத்திலிருந்து விலகி லுக்ரீசைப் பார்த்துவிட்டுத் திரும்பிய செஸ்டஸ் போதையேறி எப்படியாவது லுக்ரீசை அடையத் தீர்மானிக்கிறான். நண்பன் என்ற சாக்கில் அவள் வீட்டுக்குப் போகிறான். இரவின் மயக்கத்தில் அவளை நெருங்குகிறான். பேதை வெருண்டு ஒதுங்குகிறாள். இளவரசன் என்ற ஆணவத்தில் அவளை அடங்கச் சொல்லி, மறுத்தால் அவள் மேல் பழி சுமத்துவதாக மிரட்டுகிறான். கருணை காட்டும்படி கதறியவளைக் கற்பழித்துக் குதறுகிறான். பிறகு இரவின் போர்வையில் மறைந்து போர்க்களத்துக்கு வருகிறான் - அவனுடைய குற்றம் இரவிலும் நிழலாகத் தொடர்வதை அறியாமல்.

பொழுது விடியக் காத்திருக்கும் லுக்ரீசுக்கு இனிப் பொழுதே விடியாதென்பது புலப்படுகிறது. மனதுக்கினியவனைத் தழுவியவள் மரணத்தைத் தழுவத் துடிக்கிறாள். அதற்கு முன் மன்னர் வம்ச முகத்திரையைக் கிழிக்கத் தீர்மானிக்கிறாள். நடந்தவற்றை ஒரு ஓலையில் எழுதி வைக்கிறாள். நடத்தியவன் விவரத்தை மட்டும் மறைத்து வைக்கிறாள். தனிமையில் ஒதுங்கித் தினம் தன்னைச் சித்திரவதை செய்து கொள்கிறாள். இடையே கணவன் கொலாடின் திரும்பி வருகிறான் - ஆசை மனைவியைப் பிரிந்திருக்க முடியவில்லை. ரகசியமாக வந்தவன் ரணகளத்தைப் பார்க்கிறான். போர்க்கணைகள் தொடுத்தவன் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறான். பேச மறுக்கும் லுக்ரீஸ் தான் எழுதிவைத்த ஓலையைத் தருகிறாள். கையெழுத்தைப் படித்துத் தலையெழுத்தைப் புரிந்து கொள்கிறான் கொலாடின். நெஞ்சிலே ஈட்டி நுழைந்தாற் போல் துடிக்கிறான். 'யார்? யார்?' என்று ஆத்திரத்தில் வெடிக்கிறான். தனக்கிழைக்கப்பட்ட துரோகத்துக்கு பழி வாங்கியே தீரவேண்டும் என்ற சபதத்தைப் பெற்றுக் கொண்டதும் பேதை, கோழையின் பெயரைக் கணவனிடம் சொல்கிறாள். கையில் மறைத்து வைத்திருந்த கத்தியினால் தன் உயிருக்கு விடுதலை கொடுக்கிறாள்.

கோபத்தில் வெடிக்கிறான் கணவன். அவமானத்திலும் துடிக்கிறான். கொல்லத் துணிகிறான். சாகவும் துணிகிறான். நண்பனைக் கொன்றானா? தற்கொலை புரிந்தானா?

நீதிக்கு முக்காடா அல்லது மகுடமா? விதி உருட்டிய பகடையாட்டத்தில் வெற்றி பெற்றது யார்?


லுக்ரீசின் சாபம் [1]