2011/01/04

பாரதி கருத்தில் பிழை



    து பாரதியார் எழுதிய, பிழையுள்ள கதை.

வசந்த காலம், காலை நேரம். தென்காசி ஸ்டேஷன் வெளி முற்றத்தில், திருநெல்வேலிப் பக்கம் கிழக்கே போகும் ரயில் வரப்போகிற சமயத்தில், சுமார் நூறு பிரயாணிகள் கூடியிருக்கிறார்கள்.

இவர்களிலே சிலர் பிராமண வைதீகர். இன்ன ஊரில், இன்ன தேதியில், இன்னாருக்கு சீமந்தம் என்ற விஷயங்களைப் பற்றி சம்பாஷணை செய்து கொண்டிருக்கிறார்கள். பிராமண விதவைகள் பலர் ஒரு புறத்திலே இருந்து தமக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுமங்கலி பிராமணத்திகள் ஒரு பக்கத்தில் தலை குனிந்து நின்றுகொண்டு, போவோர் வருவோரைக் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில முகம்மதிய ஸ்த்ரீகள் முட்டாக்குப் போட்டு தலையையும் முகத்தையும் மூடிக் கொண்டு திசைக்கொருத்தியாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுருட்டு, பீடி, பொடிப்பட்டை, முறுக்கு, தேங்குழல், சுசியன், காப்பி முதலியன வியாபாரம் செய்யும் ஓரிரண்டு பிராமணரும் சூத்திரரும் பகற்கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ரயில் வண்டி அன்றைக்கு ஒரு மணி நேரம் தாமசமாக வந்தது. எனக்குப் பொழுது போகவில்லை. சிறிது தூரம் உலாவலாமென்று கூப்பிடு தூரம் போனேன். அங்கு ஒரு மரத்தடியிலே மிகவும் அழகுள்ள ஒரு முகம்மதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டேன். அவனைப் பார்த்த மாத்திரத்திலே அவன் பிரபுக்குலத்தில் பிறந்தவனென்று எனக்கு நிச்சயமாகி விட்டது. அவன் கண்களினின்றும் தாரை தாரையாகக் கண்ணீர் ஊற்ற, எனக்கு மிகவும் பரிதாபமுண்டாயிற்று. அவன் முன்னே போய் நின்று கொண்டு, "தம்பி, ஏன் அழுகிறாய்?" என்று கேட்டேன்.

என்னிடத்தில் எப்படியோ நல்லெண்ணம் உண்டாய் விட்டது. சற்றேனும் என்னிடம் கோபம் கொள்ளாமல் "ரயில் எப்போது வரப் போகிறது?" என்று கேட்டான்.

"இன்றைக்கு ஒரு மணி நேரம் தாமதித்து வரப்போவதாக ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார். இது நிற்க, நீ வருத்தப்பட்டுக் கொண்டிருந்த காரணம் யாது?" என்றேன்.

அந்த முகமதியப் பிரபு சொல்லுகிறான்:"என் துயரம் மற்றவர்களிடம் சொல்லக் கூடியதன்று. எனினும் உங்களிடம் சொல்லலாமென்று நினைத்துச் சொல்லுகிறேன். என் துயரத்தை தீர்த்து விட்டால் உங்களுக்கு மிகுந்த புண்ணியமுண்டு, இந்த உபகாரத்தை நான் இறந்து போகும் வரை மறக்க மாட்டேன்".

"முதலாவது உம்முடைய கஷ்டத்தைச் சொல்லும், தீர்க்க வழி கிடைத்தால் தீர்த்து விடுகிறேன்" என்றேன்.

"எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார் பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். நான் என் பிதாவுக்கு ஒரே பிள்ளை. நான் பிறக்கும் போது என் பிதா மிகவும் ஏழையாக இருந்தார். எங்கள் ராஜ்யத்தில் ஒரு பெரிய லாட்டரிச் சீட்டு ஏலம் போட்டார்கள். அந்தச் சீட்டுக்கு என் பிதா யாரிடமிருந்தோ பத்து ரூபாய் கடன் வாங்கி அனுப்பினார். அவருடைய தரித்திரத்தை நாசம் பண்ணி விடவேண்டுமென்று அல்லா திருவுளம் பற்றினார். ஒரு கோடி ரூபாய் அவருக்கு விழுந்தது. பிறகு அவர் அதைக் கொண்டு நடத்தின வியாபாரங்களிலும் அவருக்கு மிதமிஞ்சிய லாபம் கிடைக்கத் தொடங்கி சில வருஷங்களுக்குள்ளே ஏழெட்டு கோடிக்கு அதிபதியாகி விட்டார். நான் பதினைந்து வயதாக இருந்த போது அவர் இறந்து போய் விட்டார். அவர் சொத்தெல்லாம் எனக்கு வந்து சேர்ந்தது.

என் தந்தை இறக்குந்தறுவாயில் சிறிய தகப்பனாருக்கு சில லக்ஷங்கள் பெறக்கூடிய பூமி இனாம் கொடுத்து, என்னைப் பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார், முதலாவது வேலையாக, தம்முடைய குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார். இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதமில்லை. அவள் தன்னுடைய வகையில் ஒரு அழகான பெண்ணை எனக்கு மணம் புரிவிக்க விரும்பினாள். அதை விட்டு நான் சிறிய தகப்பனாரின் பெண்களை விவாகம் செய்து கொண்டாலும் அவர்களில் யாரேனும் ஒரு பெண்ணை மாத்திரம் மணம் செய்து கொள்வதே சரியென்றும் ஒரேயடியாக மூவரையும் மணம் புரிவது கூடாதென்றும் என் தாய் வற்புறுத்தினாள். என் தாயாருக்கும் சிறிய தகப்பனாருக்கும் மனஸ்தாபம் மிகுதியாக ஏற்பட்டது. என் சிறிய தகப்பனார் என் தாயாரின் அனுமதியில்லாமலே விவாகத்தை முடித்து வைத்துவிட்டார்.

சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார், என் செய்கையாலே ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலே உயிர் துறந்துவிட்டாள். சிறிய தகப்பனார் என் சொத்தில் தம்மால் இயன்றவரை தாசிகளின் விஷயத்திலும் குடியிலும் நாசம் பண்ணிவிட்டு குடல் வெடித்துச் செத்துப் போனார். சொத்தை நிர்வகிக்க வேண்டிய கடமை என்னைப் பொறுத்ததாயிற்று. சொத்து கொஞ்சம் நஷ்டமானதில் எனக்கு அதிகக் கஷ்டமில்லை. என் மூன்று மனைவிகளால் நான் படும் பாடு சொல்லுந்தரமன்று.

அதோ, ஸ்டேஷன் பக்கத்தில் முகமமதிய ஸ்த்ரீகள் கூட்டம் தெரிகின்றதோ? நடுவே இருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக்கொருத்தியாக முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மனவொற்றுமை இல்லையென்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறாள். குலாபிடம் வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்கு சம்மதமில்லை. அவளுக்கு ஒரு நகை வாங்கிக்கொடுத்தால் இவள் ஒரு நகையை உடைத்தெறிகிறாள். இவளுக்கொரு பட்டுச் சட்டை வாங்கிக் கொடுத்தால் அவளொரு சட்டையைக் கிழித்தெறிகிறாள். இங்ஙனம் ஒவ்வொரு விஷயத்திலும் மூவரும் முரண்பட்டு என் பிராணனை வதைக்கிறார்கள். என் வாழ்நாள் முழுவதும் இவர்களால் நரகமாக்கப் படுகிறது. நான் என்ன செய்வேன்?

நேற்றிரவு ஒரு கனாக் கண்டேன். அதில் முகம்மது நபி வந்து என்னை நோக்கி 'அடே! நீ உன் பத்தினிமார் மூவராலே மிகவும் கஷ்டப்படுகிறாய். யாரேனும் இருவரைத் தள்ளி வேறு விவாகம் செய்து கொள்ள விட்டு விடு. ஒருத்தியை மாத்திரம் வைத்துக் கொள். உன் துக்கம் தீரும்' என்றார். நம்முடைய மனதில் தோன்றுவது தான் கனவாக வருகிறதென்பதை நான் அறிவேன். ஆனாலும், நம்முடைய ஆத்மாவிலும் அல்லாவே இருக்கிறாராதலால் இந்தக் கனவை அல்லாவின் கட்டளை என்று தான் கருதுகிறேன். யாரைத் தள்ளுவது யாரை வைத்திருப்பது என்று என் புத்திக்குத் தென்படவில்லை. அதற்காகத் துக்கப்படுகிறேன்" என்று முகம்மதியப் பிரபு சொன்னான்.

இதற்குள் ரயில் வருகிற சத்தம் கேட்டது. அவன் திடுக்கென்றெழுந்து "சலாம்! சலாம்!" என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனை நோக்கி ஓடினான். நானும், "நல்ல வேளை, இந்தக் கடினமான விவகாரத்துக்குத் தீர்ப்பு சொல்லுமுன் ரயில் வந்ததே" என்று மகிழ்ச்சியோடு ரயிலேறப் போய்விட்டேன்.

இதுவரை படித்தது, பாரதியார் 1920ல் எழுதி வெளியான கதையின் சுருக்கம். (நடையும் எழுத்தும் அவருடையது; சுருக்கம் காரணமாகச் சில பகுதிகளை நீக்கி இருக்கிறேன்). என் அறிவையும் மனதையும் தொட்ட கதைகளில் இது ஒன்று. அந்த நாளில் இப்படி கதை எழுதி முடித்திருப்பது, அல்லது முடிக்காமல் விட்டிருப்பது, புரட்சியே. பின்வந்த இது போன்ற பல கதைகளுக்கு முன்னோடி. சமுதாய நோக்கோடு எழுதப்பட்ட இலக்கியம்.

இனி, உங்களுக்கு ஒரு கேள்வி. பாரதியின் இந்தக் கதையில் கருத்துப்பிழை இருக்கிறது. அது என்ன என்று சொல்ல முடியுமா? நீங்களும் என்னைப் போல் திருமுழியாளரென்றால், இதோ பாரதியே துணைக்கு வருகிறார். தான் எழுதிய 'முகம்மதிய ஸ்த்ரீகளின் நிலமை' என்ற கட்டுரையில் தொடர்கிறார் பாரதி:

இரண்டு தினங்களுக்கு முன்பு என்னுடைய முகம்மதிய நண்பர் ஒருவர் என்னைப் பார்க்கும் பொருட்டு வந்திருந்தார். இவர் என்னிடம் முதலாவது கேட்ட கேள்வி:"ரெயில்வே ஸ்தானம் என்றொரு கதை எழுதியிருந்தீர்களே, அது மெய்யாகவே நடந்த விஷயமா? வெறும் கற்பனைக் கதைதானா?"

"வெறும் கற்பனை" என்று நான் சொன்னேன்.

"என்ன கருத்துடன் எழுதினீர்?" என்று அவர் கேட்டார்.

"கதையென்றெடுத்தால் கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன். எனினும் என்னை மீறியே கதைகளிலும் தர்ம போதனைகள் நுழைந்து விடுகின்றன. ஒருவன் பல மாதரை மணம் புரிந்து கொண்டால், அதனின்றும் அவனுக்குக் கஷ்டம் தான் விளையுமென்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காண வேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்துகொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படிக் கதையினால் குறிப்பிடப்படும் உண்மையாகும்" என்றேன்.

அப்போது அந்த முஸ்லிம் நண்பர், "அந்தக் கதையில் ஒரு பிழை இருக்கிறது" என்றார்.

"என்ன பிழை?" என்று கேட்டேன்.

"அக்கதையில் ஒரு முகம்மதியப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள்.அப்படிச் சகோதரமான மூன்று பெண்களை மணம் புரிந்து கொள்ளுதல் முகம்மதிய சாத்திரப்படி 'ஹராம்' (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடனிருக்கையில் அவளுடன் பிறந்த மற்ற ஸ்த்ரீயை ஒரு முஸ்லிம் மணம் புரிந்து கொள்ளக்கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை" என்றார்.

"இதைக் கேட்டவுடன் நான், "சரி தான், எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்களுக்குள்ளே உண்டாததலால், அது போலே முகம்மதியர்களுக்குள்ளேயும் இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதி விட்டேன். எனவே அந்த முகம்மதியப் பிரபுவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தானென்பதை மாற்றித் தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தானென்று திருத்தி வாசிக்கும்படி எழுதிவிடுகிறேன்" என்றேன்.

இதைத் தொடர்ந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் ஒரு திருத்த அறிக்கையையும் வெளியிட்டார்: "ரெயில்வே ஸ்தானம் என்ற கதையில் நான் கூறிய தவறு புகவிட்டது பற்றி பத்திராதிபரும், பத்திரிகை படிப்போரும் என்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன். உலகமெல்லாம் மாதர்களுக்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற கிளர்ச்சி நடப்பதை அனுசரித்து முஸ்லிம்களும் ஏக பத்தினி விரதம், பெண் விடுதலை, ஆண் பெண் சமத்துவம் என்ற கொள்கைகளைப் பற்றி மேன்மை அடைய வேண்டுமென்பதே என் கருத்து. இந்தக் கருத்து நிறைவேறும்படி பரமாத்மாவான அல்லா ஹூத்த ஆலா அருள் புரிவாராக".

இதைப் படித்ததும் எனக்குத் தோன்றிய எண்ணங்கள்:
      1) பாரதி கூட சில சமயம், விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் எழுதியிருக்கிறார் என்ற வியப்பு
      2) 'ஒரு சகோதரி இருக்கும் பொழுது இன்னொரு சகோதரியை மணம் புரிவது இஸ்லாத்தில் சாத்திரப்படி தவறு' என்று பாரதி நண்பர் சொல்வது போல், இந்து மதத்தில் எங்கும் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை என்ற ஐயம். (சட்டம் தடுக்கிறதே தவிர மதம் தடுக்கிறதா தெரியவில்லை) உங்களுக்கு இதைப் பற்றித் தெரியுமா?
      3) தவறு என்று அறிந்ததும் உடனே பொதுவில் தவறையும் திருத்தத்தையும் வைத்த பாரதியின் மனப்பக்குவத்தை மதிக்க முடிகிறது. 'விவரங்கெட்ட பார்ப்பனரே' என்று கொடி பிடிக்காமல், தவறை அழகாக எடுத்துரைத்த அவருடைய முகம்மதிய நண்பரின் மனப்பக்குவம் பாரதியை விட மேலாகத் தோன்றுகிறது. நண்பர் பாரதியைக் கேட்கும் "என்ன கருத்துடன் எழுதினீர்?" என்ற கேள்வியில் இருக்கிறது ஆழம். அதற்குப் பிறகு தான் "பிழை" பற்றியே சொல்கிறார். பாரதியின் பதில் வேறு விதமாக இருந்திருந்தால், "பிழை" பாரதிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை என்று தோன்றுகிறது. இந்தக் கேள்வியின் ஆழத்தை, அதைப் பகிர்ந்து கொண்ட இரு பண்பட்ட மனங்களை, பக்கம் பக்கமாகப் புல்லரித்து எழுதலாம். பாரதிக்கு இருந்த நண்பர்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது.

ஒருசிலர் அவரை வெறும் பார்ப்பானாக அறிவார்கள். பெரும்பாலானோர் பாரதியை, 'பாப்பா பாட்டு' 'கண்ணண் பாட்டு' 'தேசீயப் பாடல்கள்' பாடியக் கவிஞராக மட்டும் அறிவார்கள். பாரதியின் கதைகளும் கட்டுரைகளும் அவர் காலத்துக்கு முற்போக்காக இருப்பதாகக் கருதுகிறேன். பாரதியின் கவிதைகளைப் போல் அவருடைய கதைகளும் கட்டுரைகளும் சொல்லில் வடித்த சிற்பங்கள். காலத்தை வென்றவை. வாய்ப்பு கிடைக்கும் பொழுது படிப்பீர்கள் என்ற நம்புகிறேன்.

பாரதியின் கவிதைகளுக்கு அப்பாற்பட்ட படைப்புகளை உங்களுக்கு இந்த இடுகை வழியாக அறிமுகமோ நினைவோ படுத்த எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பை எண்ணி மகிழ்கிறேன்.

43 கருத்துகள்:

  1. //2) பாரதி சொல்வது போல், ஒரு சகோதரி இருக்கும் பொழுது இன்னொரு சகோதரியை மணம் புரிவது தவறென்று இந்து மதத்தில் எங்கும் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை என்ற ஐயம். (சட்டம் தடுக்கிறதே தவிர மதம் தடுக்கிறதா தெரியவில்லை) உங்களுக்கு இதைப் பற்றித் தெரியுமா//


    @அப்பாதுரை
    ஏதாவது குழப்பமா ??

    //மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்களுக்குள்ளே உண்டாததலால், //

    அவர் இந்து மதம் தவறு என்று சொன்னதாக எங்கும் சொல்லவில்லை ??

    பதிலளிநீக்கு
  2. வாங்க, எல் கே. குழப்பமில்லை, ஐயம். கேள்விக்கு பதில் கேள்வியா? :)

    திருத்தி விட்டேன்; சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இல்லையே இஸ்லாம் மதம் என்று வரவேண்டும் என்று எண்ணுகிறேன் ???

    பதிலளிநீக்கு
  4. இப்போது குழம்பி விட்டேன் எல் கே :)

    நான் தெளிவாக எழுதவில்லையென்றால் மன்னிக்கவும் (என் எழுத்தில் தெளிவெல்லாம் எதிர்ப்பார்க்கிறீர்களா? :)

    எங்கே 'இஸ்லாம் மதம் என்று வரவேண்டும்' என்கிறீர்கள்?

    சகோதரிகளை மணப்பது இஸ்லாம் மதத்தில் தவறு (பாதகம்) என்பதைத் தான் நண்பர் எடுத்துச் சொல்லியிருக்கிறாரே? பாரதியும் ஏற்றுக் கொண்டு தவறைத் திருத்தியிருக்கிறாரே? மேலும், 'இந்து மதத்தில் அது தவறில்லை' (வழக்கம்) என்ற தன் அனுமானத்தையும் பாரதி சொல்லியிருக்கிறாரே? இஸ்லாத்தில் தெளிவாகச் சொல்லியிருப்பது போல் இந்துமதத்தில் 'சகோதரிகளை மணப்பது தவறு' என்று எடுத்துச்சொல்லவில்லையோ என்பதே என் ஐயம்.

    தேவையில்லாத ஐயம் விடுங்கள் - எனக்கு மதங்களில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் இந்தக் கதை/கட்டுரையைப் படிக்கும் போதெல்லாம் இந்த ஐயம் எழும். முகம்மதிய நண்பர் எடுத்துச் சொன்னது போல் அவரது இந்து நண்பர் எவரும் இந்து மதத்திற்கு பரிந்து வரவில்லையோ என்று நினைத்திருக்கிறேன்.

    நானறிந்த வரை பல திருமணங்கள் (polygamy, in general) புரிவதை மதங்கள் வெளிப்படையாகத் தடுப்பதில்லை, சட்டம் தான் தடுக்கிறது என்று தோன்றுகிறது. சில மதங்களில் வெளிப்படையாகவே அனுமதியும் கிடைக்கிறது. கத்தோலிக்க மதம் மற்றும் orthodox jewism இரண்டும் பல மணம் புரிவதை வெளிப்படையாகத் தடுக்கிறது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. இப்போது சரியா பாருங்கள் எல் கே; நன்றி. (ஒரு கட்டுரை எழுதுவதற்குள் பின்னி எடுக்கிறது; வெண்பாவே எழுதலாம் போலிருக்கிறது)

    பதிலளிநீக்கு
  6. எல் கே சொன்ன அதே குழப்பம் எனக்கும் ஏற்பட்டது. நீங்கள் சொல்ல வந்த கருத்து பிறகு புரிந்தது. எழுதியதில் ஏற்பட்ட தவறை ஒத்துக் கொள்வது இன்றளவிலும் கடினமாக இருக்கும்போது அன்றைய நிலையில் அவர் அதை செய்தது பெரிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  7. நன்று ஸ்ரீராம். அது என் தவறே.

    பதிலளிநீக்கு
  8. வெண்பா எழுதறது ஈஸி (எனக்குப் புரியாது ) இது புரிஞ்சிடுச்சி அதான் குழப்பம்

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லாஜனவரி 04, 2011

    //'ஒரு சகோதரி இருக்கும் பொழுது இன்னொரு சகோதரியை மணம் புரிவது இஸ்லாத்தில் சாத்திரப்படி தவறு' என்று பாரதி நண்பர் சொல்வது போல், இந்து மதத்தில் எங்கும் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை என்ற ஐயம்.//

    இஸ்லாத்தில் சாத்திரப்படி தவறு என்று இந்து மதம் எப்படிங்க சொல்லும்?

    பதிலளிநீக்கு
  10. எல்லாம் தெளிந்த பின் செளகரியமாக உள்ளே நுழைந்துள்ளேன் ...
    இக்கதையை பொறுத்தவரை பாரதியின் ஒரே குறிக்கோள் .. பெண்விடுதலை மட்டுமே... இங்கு அவர் மதம் பார்க்கவில்லை.. ஒரு தனிப்பட்டவரின் செய்கை ( சிற்றப்பா ) அவர்க்கு கொடுமையாக பட்டதை மதத்தில் நியாயம் தேடப் போயிருக்கிறார் ..இந்து மதம் அதற்கு ஒத்துழைக்குமா என பார்த்திருக்கிறார்...இஸ்லாமே அதற்கு உதவுகிறபோது மிக மகிழ்ச்சியாக எவ்வித தன்முனைப்பும் இன்றி மாற்றம் செய்துள்ளார்...

    பதிலளிநீக்கு
  11. ஒரு மகாகவியின் கதை, ஒரு மகாகவியின் தவறு, ஒரு மகாகவியின் நேர்மை என மூன்றையும் ஒரு பதிவில் வாசிக்க முடிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  12. முட்டிக் கொள்கிறேன், பெயரில்லா.

    பதிலளிநீக்கு
  13. கதையைப் படிச்சா 'பெண் விடுதலை' போலத் தெரியவில்லை பத்மநாபன் :)
    >>>ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறாள். குலாபிடம் வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்கு சம்மதமில்லை. அவளுக்கு ஒரு நகை வாங்கிக்கொடுத்தால் இவள் ஒரு நகையை உடைத்தெறிகிறாள். இவளுக்கொரு பட்டுச் சட்டை வாங்கிக் கொடுத்தால் அவளொரு சட்டையைக் கிழித்தெறிகிறாள். இங்ஙனம் ஒவ்வொரு விஷயத்திலும் மூவரும் முரண்பட்டு என் பிராணனை வதைக்கிறார்கள். என் வாழ்நாள் முழுவதும் இவர்களால் நரகமாக்கப் படுகிறது. நான் என்ன செய்வேன்?

    எத்தனை அனுபவிச்சு எழுதியிருக்கார் மனுசன்! இந்தக் கதையின் நோக்கம் 'அன்றிலென்று ஒன்றிப்போகும் அன்பு என்றும் வேண்டும்' என்பதே (அப்படினு நான் நினைக்கிறேன்). இதையாவது ஒழுங்கா எழுதியிருக்கனானு பாத்து இதையும் திருத்த வேண்டியதா போச்சு!

    பதிலளிநீக்கு
  14. வருக தமிழ் உதயம். பின்னூட்டத்தை மிகவும் ரசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. அந்தந்த நேரத்தில் பொருளாதார குடும்பச் சூழ்நிலைகளையும் வைத்துச் சில கருத்துக்களைச் சொல்லியிருப்பார்களோ.பாரதியை ஆணாதிக்கவாதியென்றும்தானே சொல்கிறார்கள் !

    பதிலளிநீக்கு
  16. அக்கதையின் கதாநாயகன் வதைப் படுவது உண்மை.. கதையை உருவாக்கிய பாரதியின் நோக்கம்.. ஒன்றை தாண்டும் பொழுது அவளுக்கும் அது சிறையாகிறது..செய்யாத தவறுக்கு சிறை பட்ட கைதிகளின் அட்டகாச நடவடிக்கை ஆகிறது என்பதை சொல்லி.. ``ஒன்றில் தான் அன்றிலென்று ஒன்றிப்போகும் அன்பு என்றும் நிற்கும்`` என விடுதலைக்கு அன்பு காட்டி அழைக்கிறான் ..

    பதிலளிநீக்கு
  17. வழக்கம் போலவே,பெரும்பாலோருக்குத் தெரியாத ஒரு விஷயம் குறித்து தெளிந்த நீரோடையாய் எழுதியிருக்கிறீர்கள், அருமை. முகமுடி விலகியது போல் தெரிகிறது, ஆட்டோ பயம் போய்விட்டதா?

    பதிலளிநீக்கு
  18. நகைச்சுவைக்காகச் சொன்னேன் பத்மநாபன் - நீங்கள் சொல்வது சரியாக இருக்கச் சாத்தியம் அதிகம்.

    பதிலளிநீக்கு
  19. வருக ஹேமா, வசந்தா நடேசன் (எனக்கு என்றைக்குமே ஆட்டோ பயம் தான் :)

    பதிலளிநீக்கு
  20. தந்தியை மீட்டினீர்களே, ஹேமா.

    பாரதி தன் வீட்டுக்குள் மிகத்தீவிர ஆணாதிக்கனாக இருந்தாரென்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். பாரதியின் பலம் அச்சமின்மை என்று நினைக்கிறேன். அடிமைத்தனத்தை எந்த விதத்திலும் எதிர்த்ததால் - பெண்விடுதலை ஒரு சாதனமாகப் பயன்பட்டது என்று நம்புகிறேன். பாரதியின் பலவீனங்கள் அவரை சாதாரண நிலைக்கும் கீழே அவ்வப்போது கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றாலும், அவருடைய சமத்துவ, விடுதலை, புரட்சிப்பெண் கொள்கைகளை உண்மையிலேயே நம்பினார் என்றே நான் நம்புகிறேன்.

    ஊருக்கு உபதேசம் செய்வது மனித இயற்கை. வீட்டில் பிள்ளையை ஒரு நாள் கூடக் கொஞ்சாதவர் அடுத்தவர் பிள்ளையை ஆகா ஓகோ என்பதில்லையா? இது என் கருத்து: வெளியே பெருந்தன்மையோடும் பரந்த மனத்தோடும் நடக்கும் ஆண்கள் வீட்டில் காதலி/மனைவியை "take it for granted" ஆகத்தான் நடத்துகிறோம் - சமத்துவம் நிறையவே சரிகிறது. அவ்வப்போது விழித்துக் கொண்டாலும், நானும் இதில் அடக்கம்.

    ஆணாதிக்கம் உலகக் கலாசாரப் பலவீனம் என்று நினைக்கிறேன். கிழக்கிலே இன்னும் தீவிரம். குறிப்பாக, இந்திய அந்தணக்குடும்பத்தில் இது வேருக்கும் அடியிலே ஊன்றிய வழக்கம் என்று நினைக்கிறேன். வறுமையிலும் பசியிலும் வாடினாலும் சரி, நல்ல வசதியிலிருந்தாலும் சரி - வீட்டின் ஆண்களுக்குத் தனிச்சலுகைகள் வழங்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். சிலவற்றைச் சொல்வதற்கே வெட்கமாக இருக்கும் - சாப்பாடு கூட ஆண்களுக்கு சிறப்பாகவும் அதிகமாகவும் விரைவாகவும் கிடைக்கும். சமைத்தது அதே வீட்டுப் பெண்கள் தான் என்றாலும்! சாப்பிட்டுவிட்டு அதே பெண்களை ஒரு விரட்டு விரட்டும் ஆண்களின் இடையில் தான் வளர்ந்தேன் - இன்றைக்கும் வாழ்கிறேன்.

    பெண்களும் துணியாதிருப்பது இதற்கு ஒரு காரணமோ என்று நினைக்கிறேன். ஆணையே (தந்தை, சகோதரன், கணவன், பிறகு பிள்ளை) அண்டியிருந்த - நூற்றுக்கணக்கான வருட சமூக அடக்குமுறை அல்லவா? டிஎன்ஏவையும் பாரம்பரியத்தையும் குறை சொல்லி என்ன பயன்? இனி வரும் தலைமுறைகளில் பாரதியின் ஆதர்சப் பெண் - நம் எல்லாரின் ஆதர்சப் பெண் வரவேண்டும் தான்.

    நிறைய மாறியிருக்கிறது; சமத்துவக் கொள்கைகளில் அடித்துக் கொண்டும் அணைத்துக் கொண்டும் வாழும் நட்புக் குடும்பங்களைப் பார்க்கிறேன். இருந்தாலும் மாற்றத்தின் வேகமும் தாக்கமும் பலசமயம் தீமைகளை முதலில் கொண்டு வந்துவிடுகின்றன. அவற்றையே பரபரப்பாளர்களும் பெரிதுபடுத்திக் காட்டுகின்றனர்.

    சிந்தனையைத் தூண்டினீர்கள்; நன்றி.

    பதிலளிநீக்கு
  21. //ஆணாதிக்கவாதியென்றும்தானே /// இப்படி சந்தேக மாக சொன்னதால் நான் மீட்டவில்லை .நீங்கள் ஐயம் திரிபுர மீட்டிவிட்டீர்கள்...

    பாரதியின் ஆதர்ஸமே அழகு..நிமிர்ந்த நன்னடை , நேர்கொண்ட பார்வை .நிலத்தில் யார்க்கும் அஞ்சாத ...

    பதிலளிநீக்கு
  22. ஆழ்ந்த படிப்புக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  23. யதார்த்தமான நடை.......ஆணாதிக்கவாதம் இன்றளவிலும் மாற்றத்தின் அளவில் மட்டுமே, அதாவது மதில் மேல் பூனையாகவே இருப்பதை அழகாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள் ஐயா.....நன்றி.

    பதிலளிநீக்கு
  24. ஐயா தவறு செய்வது மனித இயல்புதானே. பாரதியும் மனிதர்தானே. தவறு நிகழலாம். அதை துணிந்து ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டார் பாருங்கள் அங்குதான் ஒருபடி மேலே சென்று நிற்கிறார்.......பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. அருமையான பதிவு! சுவாரசியமான பின்னூட்டங்கள்.

    // யாரேனும் இருவரைத் தள்ளி வேறு விவாகம் செய்து கொள்ள விட்டு விடு. ஒருத்தியை மாத்திரம் வைத்துக் கொள்.//

    யாரேனும் இருவரை தள்ளி விடு, விலக்கி விடு என்று மட்டும் சொல்லாமல் வேறு விவாகம் செய்து கொள்ள விட்டு விடு. அந்த காலத்திலேயே இப்படி ஒரு முற்போக்கு சிந்தனையா! வியக்க வைக்கிறது, சிலிர்க்க வைக்கிறது. இப்படி பட்டவர் தன வீட்டில் ஆணாதிக்கனாக இருந்தார் என்பதை ஏனோ சிறிதும் நம்ப முடியவில்லை.

    என் மிக நெருங்கிய உறவினர் வீட்டில், அவர்களது மாமா தன் ஐம்பத்து எட்டாவது வயதில், திருமண வயதில் இரண்டு பையன்கள் இருக்கும்போது, தனக்கு ஒரு துணை வேண்டும் என்று திருமணம் செய்து கொண்டார். இது அவர் விருப்பம். அதே வீட்டில் முப்பத்தி ஆறு வயதில் கணவனை இழந்த பெண்ணிற்கு, அவளுக்கு ஒரு சிறு பெண் இருக்கிறது, மீண்டும் திருமணம் செய்ய எண்ணம் ஒரு பேச்சுக்கு கூட வரவில்லை. ஒரு வேளை அவள் தன் மாமாவை போல், தனக்கு ஒரு துணை வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளியிட்டிருந்தால்? நான் ஒரு முறை நேரடியாகவே இதை கேட்டதிற்கு அவர்கள் ஐயோ! என்று பதறி விட்டார்கள். பெண்கள் விஷயத்தில் இது போன்ற முற்போக்கான சிந்தனைகளை எழுதவும், அதை படிக்கவும் மட்டும்தான் முடியும்.

    பதிலளிநீக்கு
  26. அந்தப் பெண் இத்தனை வயசு ஆனதுக்குச் சுயமாக முடிவெடுக்க முடியாமல் இருந்திருக்கிறாளே?? :( அதைத் தான் சொல்லவேண்டும். பொருளாதார ரீதியாகச் சார்ந்திருந்திருக்கிறாளோ?? இப்போதெல்லாம் விவாகரத்தும் மறுமணம் செய்வதும் பெண்களிடம் சர்வ சகஜமாய் இருக்கிறது. ஆகவே கணவனை இழந்த பெண் திருமணம் செய்வது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது.

    பதிலளிநீக்கு
  27. நன்றி geethasmbsvm6, நித்திலம்-சிப்பிக்குள் முத்து, meenakshi, ...

    பதிலளிநீக்கு
  28. 'பொருளாதார சார்பு' எப்படி வருதுனு பாத்தா mind boggling. (எனக்குத் தெரிந்த தென்னிந்தியாவை வைத்தே சொல்கிறேன்). சின்ன வயசுலந்தே 'இன்னொரு வீட்டுக்கு போறவ' என்றே வளர்கிறார்கள்; 'இவ்வளவு செல்வு செஞ்சு படிக்க வச்சேன், இத்தனை நகை, இத்தனை கடன் வாங்கி கல்யாணம், இத்தனை சீதனம்' என்று செலவுக்கணக்கை சின்ன வயதிலிருந்தே அடிக்கடி கேட்டும் அனுபவித்தும் 'தான் ஒரு பொருளாதாரச்சுமை' என்ற ஆழ்மன பாதிப்பு பெண்களுக்கு ஏற்படுவது ஒரு காரணம் என்று தோன்றுகிறது. என் தோழி ஒருத்தி பத்தாவது படிக்கும் பொழுதே இதை வெளிப்படையாகச் சொன்னாள் - 'எப்படியும் கல்யாணம் செஞ்சு வச்சுருவாங்க, என்ன படிச்சா என்ன?'. படிப்புக்கும் கல்யாணத்துக்கும் முடிச்சு போட்டு.. தேவையில்லாத குழப்பம்! என் சுற்ற வட்டத்தில் ஒருவர் "நான் இத்தனை சம்பாதிக்கிறேன், இதில் மனைவி, பெண்கள் சாப்பாட்டுக்கு இத்தனை செலவழிக்கிறேன், இந்த பாவாடை சட்டை இத்தனை, இந்த சினிமாவுக்கு இத்தனை,..." என்று வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். எங்கள் குடும்பத்திலேயே கதை சொல்வார்கள்; என் சித்தி அத்தனை அருமையாகப் படிப்பாராம் - 'போறும் படிப்பு, கல்யாணம் பண்ணிக்கறவ தானே' என்று பள்ளிக்கூடத்துடன் நிறுத்தி விட்டார்களாம். படிப்பு வரவில்லை என்று நிறுத்தினாலாவது பரவாயில்லை; அல்லது என் சித்திக்குப் படிக்க இஷ்டமில்லை என்றாலாவது... 'படிப்புச் செலவுக்கா கல்யாணச் செலவுக்கா?' என்ற கேள்வியால் அடித்து அடக்கி விட்டார்களாம். என் சித்தி வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை (!!) - ஆனால் உள்ளுக்குள் வருந்தியிருப்பார் என்றே தோன்றுகிறது.

    இன்றைக்கு இத்தகைய அறியாமை குறைந்து வருவதையும் பார்க்கிறேன்; ஆனால் இந்த 'தன்மான உணர்வு' பரவலாக உள்ளதா என்பது சந்தேகமே. நித்திலம் சொல்வது போல் 'மதில் மேல் பூனை'கள் நிறைய.

    சமூக prioritiesகளில் இது பின் தங்கிவிடுகிறது; அதான் சிக்கல். ('நல்ல வேளை ஆணாகப் பிறந்தேன்' என்று எத்தனை முறை வெட்கமில்லாமல் சந்தோசப்பட்டிருக்கிறேன்!)

    பதிலளிநீக்கு
  29. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை.. பாரதியின் தன்னம்பிக்கைச் சின்னங்கள் பத்மநாபன் - அதற்கும் அவர் ஆணாதிக்கனாக இருந்தார் என்ற கருத்துக்கும் தொடர்புண்டு என்று நினைக்கிறீர்களா?

    பாரதியைப் பற்றி இன்னொரு mannerism கேள்விப்பட்டிருக்கிறேன். நேர்கொண்ட பார்வை... பாரதியார் தலைகுனிந்தே பார்க்க மாட்டாராம். அதனால் காலில் பட்டதெல்லாம் எட்டி எட்டி விழுமாம்.. இந்த eccentricity உண்மையா தெரியாது. சிறு வயதில் இதை நினைத்து சிரித்திருக்கிறேன். இப்போது உளவியல் பார்வையில் வேறாக நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. வீட்டில் ஏன் பாரதியால் முற்ப்போக்கு சிந்தனைகளை புகுத்த முடியவில்லை ?? உறவினர்கள் தலையீடு ??

    பதிலளிநீக்கு
  31. பெண்களை பற்றி அவ்வளவு எதிர்பார்ப்பு கொண்ட பாரதிக்கு ஆணாதிக்க மனோபாவம் இருக்க வாய்ப்பு இல்லை என்பதை தான் அப்படி குறிப்பிட்டேன் ...
    பாரதிக்கும் காலில் நிறையத் தட்டும் நகைச்சுவை நன்றாக இருக்கிறது ... அந்த முரட்டு விராப்பு இயல்பாக வந்தவரை ஒன்றும் செய்யமுடியாது ..வழியில் எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டியது தான் ...

    பாரதி மட்டும் 100 ஆண்டு இருந்திருந்தால் எப்படி இருக்கும் கற்பனையே கிளர்ச்சியாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  32. இதைப் பத்தி யோசிச்சிருக்கேன் எல் கே..

    ஆதிக்கம் செலுத்துவது ஒரு பக்கம்; செலுத்த அனுமதிப்பது மறு பக்கம். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன், இன்று காலை எனக்குத் தெரிந்தவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.. "என் தம்பி என்னைக் கத்து கத்துனு கத்தித் தீத்துட்டான்" என்றார். திருமணமான பெண், தன் வீட்டுக்கு விருந்தாக வந்த தம்பியிடம் (இளையவன்!) பேச்சு வாங்குகிறார். 'இனிமே கத்துறதா இருந்தா எங்கூட பேசாதே, என் வீட்டுக்கு வராதே'னு சொல்றது தானே? என்றேன். அதற்கு வந்த பதில்: "சே சே, என் தம்பி நல்லவன் தான்". நல்லவனுக்கும் இதற்கும் என்ன தொடர்பு!

    எதற்குச் சொல்கிறேன் என்றால் - expectation setting and meeting வீட்டுக்குள்ளும் கடைபிடிக்க வேண்டிய தந்திரம்.

    sexist கருத்து போலத் தோன்றச் சாத்திய அச்சத்திலும் இதை சொல்கிறேன்: பெண்கள் பாதி பொறுப்பு.

    பாரதிக்கு வருகிறேன். என் கருத்து ஒரு extrapolated opinion; விவரம் தெரியாமல் சொல்கிறேன். பாரதியின் expectations வேறு தட்டில் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். அவர் மனைவி அவரைப் போல இல்லையே என்ற ஆதங்கம் அவருக்கு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் - அதன் வெளிப்பாடு அலட்சியம். உள்ளுக்குள் கிடந்த பொருத்தமில்லாத துணையென்ற ஆத்திரம். இதை நிறைய 'arranged marriage'களில் பார்க்கலாம். celebrity or not. அந்த நாளில் நிலமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். 'கவிதை பேசவோ கஞ்சா அடிக்கவோ கண்ணம்மா தயாராக இல்லாவிட்டால் நெஞ்சுக்குள் கொஞ்சம் புண்ணம்மா' என்று ஆகியிருக்கலாம் :)

    பதிலளிநீக்கு
  33. expectations பற்றிய சொந்த அனுபவம்: நான் மிகமிகமிகமிகமிக** நேசித்த பெண்ணை தேவையில்லாமல் கத்தி சண்டை போட்டு - அந்த வயதில் தெரியவில்லை; தொலைந்தது தொலைந்தது தான் என்று புரிந்ததும் வருத்தப்பட்டதோடு சரி. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பிறகு துண்டித்துக் கொண்ட அந்தப் பெண்ணின் துணிச்சல் மட்டும் தான் இன்றைய நினைவு.

    பதிலளிநீக்கு
  34. பாரதியை தேடி தேடிப் படிக்கும் வழக்கம் கொண்டவன் நான். எப்படி இந்த பதிவை தவறவிட்டேன்.? பாரதி வீட்டில் ஆணாதிக்க போக்கு கொண்டவன் என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவன் குடும்பத்தைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்பதுதான் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  35. @அப்பாதுரை

    இருக்கலாம் . நாம் பேசுவது வெறும் யூகம்தான்

    பதிலளிநீக்கு
  36. எம்.டி.ஜெயபாலன்ஜனவரி 05, 2011

    பாரதி கருத்தில் பிழை என்ற தலைப்பைக் கண்டதுகம் என் நினைவில் தோன்றியது 1964 ஜனவரியில் நான் பயின்ற கிறித்துவக் கல்லூரியில் பொங்கல் விழாவையொட்டி பாரதிதாசனையும் இன்று நூற்றாண்டு விழாகாணும் சாண்டில்யன் அவர்களையும் பேச அழைத்திருந்தோம்.

    முதலில் பேசிய சாண்டில்யன் பாரதியின் பாடலில் பிழை என்று பாரதியின் சில பாடல்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினா.

    கண்கொட்டாமல் அவரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தான் பேச எழுந்ததும், அவைக்கு வணக்கம்கூடத் தெரிவிக்காமல் “ பாரதியின் பாடல்களில் குறைகாண்பவர்களை முட்டாள்கள் என்றுதான் நான் சொல்வேன் என்று தொடங்கினார்.

    அப் பேச்சின் முழு கருத்தும் இப்போது நினைவில் இல்லை என்றாலும் ஒருகருத்து மட்டும் பதிய விரும்புகிறேன்.

    பாரதி எழுதிய பாடல்களை அவரே மறுபடியும் படித்துத் திருத்தங்கள் செய்வாராம். சில பாடல்களில் கடைசி வரியாக “ஆரிய தேசமே” என்ற தொடர்களை அவரே அடித்துவிட்டு ‘ பாரத தேசமே’ என்று திருத்தினார் என்பது பற்றித்தான் விவாதம்.

    பாரதி வாழ்ந்தது 39 ஆண்டுகளே. இக்காலத்தில் அவர் கற்ருக் கொண்ட மொழிகள் 13 இருக்கும். கடைசியாகப் புதுவை அரசு அவரை அல்ஜிரியாவிற்கு அனுப்பப் போவதை அறிந்ததும் பாரதி அம்மொழியைப் பயிலத்தொடங்கினாராம்.

    அவர் கற்றதும் அதிகம்; கல்லாததும் அதிகம்.எல்லோரையும்போல.

    என்னைக் கவர்ந்த மூவரைப் பற்றியும் ஒரு குறிப்பு எழுத இந்த வாய்ப்பைப் பெற்றதை எண்ணி மனம் மகிழ்கிறேன்.

    எம்.டி.ஜெயபாலன்

    பி.கு. பாரதியின் கால்களில் ஆணிகள் உண்டு. கோட்டு போட்டுக்கொண்டு காலில் செறுப்பு இல்லாமலே வீரர் போல் நடப்பார். ஒரு சிறு கல் ஆணியில் அழுத்திவிட்டாலும் உடனே வலி பொறாமல் தவித்துவிடுவார்.--வ்.ரா.

    பதிலளிநீக்கு
  37. அட நானும் பாரதி தான் போலிருக்கே. கஞ்சா பழக்கம் இல்லை மற்றும் தமிழ் கொஞ்சம் என்ன நல்லவே நுரை தப்பும் இருந்தும்

    - ஆனால் கோவம் வீடு முதல் நாடு வரை.

    கடையத்தில் வளர்ந்த என் சித்தப்பா மகன்கள் சொல்ல செல்லம்மாவின் வீட்டை பற்றி கேட்டு இருக்கின்றேன்.

    கீது சொன்னது போல், ஆண் துணை இப்போதைய பெண்களுக்கு தேவை இல்லை. நன்கு படிக்கின்றார்கள், வேலைக்கு போகின்றார்கள், கிழ்த்தரமாக நடுத்தும் கணவனை விட பிறந்த வீடோ அல்லது தனியாக வாழ்வது இப்போதைக்கு கஷ்டமே இல்லை. அந்தக்கால பெண்களின் நிலை வேறு. முன்னாடியாவது குழந்தை பிறக்கும் எந்திரமாக இருந்தாள் - இனி வரும் காலங்களில்

    - ஆணும் ஆணும் கல்யாணம்
    - பெண்ணும் பெண்ணும் கல்யாணம் போய்
    - மனிதனும் மிருகமும் கல்யாணம் செய்யும் சட்டமும் நிறைவேற்ற படலாம்.
    - அதற்கும் கலிபோர்னியாவில் கொடி பிடித்து நான்கு பேர் சுற்றுவார்கள்.

    பதிலளிநீக்கு
  38. பெயரில்லாஜனவரி 05, 2011

    //3) தவறு என்று அறிந்ததும் உடனே பொதுவில் தவறையும் திருத்தத்தையும் வைத்த பாரதியின் மனப்பக்குவத்தை மதிக்க முடிகிறது. 'விவரங்கெட்ட பார்ப்பனரே' என்று கொடி பிடிக்காமல், தவறை அழகாக எடுத்துரைத்த அவருடைய முகம்மதிய நண்பரின் மனப்பக்குவம் பாரதியை விட மேலாகத் தோன்றுகிறது. நண்பர் பாரதியைக் கேட்கும் "என்ன கருத்துடன் எழுதினீர்?" என்ற கேள்வியில் இருக்கிறது ஆழம். அதற்குப் பிறகு தான் "பிழை" பற்றியே சொல்கிறார். பாரதியின் பதில் வேறு விதமாக இருந்திருந்தால், "பிழை" பாரதிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை என்று தோன்றுகிறது. இந்தக் கேள்வியின் ஆழத்தை, அதைப் பகிர்ந்து கொண்ட இரு பண்பட்ட மனங்களை, பக்கம் பக்கமாகப் புல்லரித்து எழுதலாம். பாரதிக்கு இருந்த நண்பர்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது.//

    என்ன சஞ்சேரியப்பன், பாய் யார்கிட்டயாவது காரியம் ஆவனுமா, இப்படி தேடி தேடி எதாவது இருக்குமான்னு பாராட்டுறியே.

    எப்படியோ காட்டி பலன் அடைந்தா நல்லது தானே.

    கொஞ்சம் விளங்கிற மாதிரியும் எழுதுப்பா

    பதிலளிநீக்கு
  39. நன்றி, ஜெயபாலன். கற்பூரச் சொற்கோ என்றவர் இதைச் சொன்னது தெரியாமல் போய்விட்டதே!

    பதிலளிநீக்கு
  40. சஞ்சேரியப்பன் என்றால் என்னவென்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்?

    பதிலளிநீக்கு
  41. யாருக்கு தெரியும்...சஞ்சேரியப்பனை விட்டுத் தள்ளுங்கள்...

    நீங்கள் இப்பதிவிட்ட நாளில் தமிழக அரசின் பாரதியார் விருது மம்மது எனும் தமிழ் அறிஞருக்கு கிடைத்துள்ளது

    http://www.google.com.om/url?sa=t&source=web&cd=3&ved=0CCEQFjAC&url=http%3A%2F%2Fwww.tamilspider.com%2Fresources%2F4954-Tamilnadu-government-s-Tamil-special-awards-for.aspx&ei=Z9UpTY_UE8rXrQe7vvGeDA&usg=AFQjCNG70HNb9srlDpYSLO_217lxHETLqA..
    இவர் பாரதியின் முஸ்லிம் நண்பரின் பேரனாக கூட இருக்கலாம் ...

    பதிலளிநீக்கு
  42. இத்தனை விருதுகளா! தமிழக அரசாங்கத்தைப் பாராட்டத்தான் வேண்டும். முன்பெல்லாம் கலைமாமணி என்று ஒரு விருது கொடுப்பார்கள் - அரசியலில் அகப்பட்டுச் சிக்கி நாறும். இந்த விருதுகளில் அரசியல் இல்லாமல் இருந்தால் சிறப்புதான். பாரதி விருது பெற்றவருக்கு வாழ்த்துக்கள்... உங்கள் கமென்ட் அருமை பத்மநாபன்.

    (இருந்தாலும் சஞ்சேரியப்பன்னா என்னனு தெரியாம.. )

    பதிலளிநீக்கு