2011/01/03

ஆழமும் சிகரமும்



    சிலர் எழுத்தில் அறிவின் ஆழம் புலப்படும். வியாசரில் தொடங்கி வரிசையாக சாக்ரேட்ஸ் அரிஸ்டாடில் ஷேக்ஸ்பியர் ந்யூடன் வோடவுஸ் அசிமவ் கார்ல் சேகன் என்று அந்தப் பக்கம் தாவினாலும், இந்தப்பக்கத்திலேயே நின்று சங்கம், கம்பன், காளிதாசன் என்று இறங்கி சமீப தாகோர், பாரதி, ஜெயகாந்தன், கருணாநிதி வரை நிறைய பேர் எழுத்தில் அறிவின் ஆழத்தை அறியலாம்.

மாறாக, சிலர் எழுத்திலும் பேச்சிலும் அறியாமையின் சிகரம் புலப்படுகிறது. இந்த விஷயத்தில் நான் உச்சியிலேறி கொடி நட்டவன்; எனினும், என்னருகில் கல்லையுருட்டி அதன் மேலேறிக் குரல் கொடுக்கும் சிலரை அவ்வப்போது காண்கிறேன்.

பாரதியின் படைப்புகளைக் கிண்டல் செய்து புத்தகம் வெளியிட்டிருக்கிறார் மதிமாறன் எனும் மதியாளர். பழைய புத்தகம் என்றாலும், பாரதி பிறந்த நாள் ஒட்டிய சமீபப்பதிவுகளின் வழியாகத்தான் முதன் முறையாகப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகத்தில்
  • பாரதியின் சாதாரணக் கவிதைகள் சில துணிச்சலுடன் அலசப்பட்டிருக்கிறதா என்று படித்தால், இல்லை
  • பாரதியின் செய்கைகளை ஆதாரத்துடன் ஆய்ந்து அவர் பாடல்களின் முரண்கள் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றவா? கிடையாது
  • கருத்துத் திருட்டு, இலக்கணப்பிழை என்று ஏதாவது.. அதுவும் இல்லை.

இன்ன காரணத்துக்காக பாரதியின் படைப்புகள் மோசமானவை என்று விவரமாக 'அறிவுடன்' சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் பெருத்த ஏமாற்றம். 'சேம் சைடு கோல்' என்று கடிந்து, பாரதி வரிகளையே திரும்ப எழுதி, பாரதிக்கு வழங்கப்பட்டிருக்கும் தகுதி தவறானது என்ற வலியுறுத்தலை ஏற்க முடியவில்லை. போலியாகப் படுகிறது. வித்தியாசமான புத்தகமாக இருக்குமோ என்று படித்தால், மதப்பிராந்தி மயக்கத்தில் வெளிவந்தக் கருத்துக்கள் என்பதைத் தவிர வேறெதையும் அறிய முடியவில்லை.

காழ்ப்புணர்ச்சிக்கு உரிமை உண்டென்றாலும், அதன் வேகம் வலுவானதென்றாலும், இப்படியா? வருந்துகிறேன். தாஜ்மெஹலின் பின்னணியில் சாதிமதத்தைக் கண்டு, அதன் மேல் கல்லெறிவதைக் காணப் பொறுக்கவில்லை. முன்பே சொன்னது போல் அறிவின் ஆழம் தொடக்கூடியதே; அறியாமையின் சிகரமும் கைக்கெட்டும். நம் நோக்கத்தில் இருக்கிறது வீச்சு.

வாளினும் ஊடகம் கூர். Sadly, intellectual vandalism is not a crime; worse, it is protected by what prompts it: freedom of expression.

பேச்சு, எழுத்துரிமைகளைப் பொதுவில் வைத்ததால் மதிமாறன் கருத்துக்கு இடமுண்டு.

பாரதிக்கும் அந்த உரிமை இருந்தது, செம்மையாகப் பயன்படுத்தினார். நூறு வருடங்களுக்குப் பின்னும் அவரின் படைப்புகளைத் துய்க்கிறோம்.

எனக்கும் அந்த உரிமை உண்டு. பாரதியாரின் படைப்புகளை அவரது பார்ப்பனப் பிறப்பின் அடிப்படையில் தாக்கிச் சீரழிக்க நினைப்பது, அறிவின் ஆழமாகத் தோன்றவில்லை.

உங்களுக்கும் அந்த உரிமை உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

22 கருத்துகள்:

  1. பெயரில்லாஜனவரி 03, 2011

    பார்ப்பன அடிவருடிகளின் பினாத்தல்கள்.. போய்யா, போய் வேலையைப் பாரு.

    பதிலளிநீக்கு
  2. பாரதியாரைப் பார்ப்பனர் என்று மட்டும் பார்க்கும் அனானியின் கருத்து வியப்பூட்டுகிறது. பெயரைச் சொல்லவும் துணிவில்லாதவர் 'அச்சமில்லை அச்சமில்லை' என்று பாடிய பாரதியாரை அவமதிப்பதா? .
    உங்கள் இந்தப் பதிவிற்கு வெறும் ஓட்டு போட்டு போய்விடலாமென்றிருந்த என் போன்றவர்களை சீண்டிவிடுகிறாரோ அனானி .
    நீங்கள் சொன்ன புத்தகம் படித்ததில்லை. படிக்கும் விருப்பமும் இல்லை. பாரதியின் பாடல்களால் அவரைப் பிடித்ததால் பாரதியாரின் படைப்புகளை அவரது பார்ப்பனப் பிறப்பின் அடிப்படையில் தாக்கிச் சீரழிக்க நினைப்பது அறியாமையின் சிகரம் என்று ஓட்டு போட்டேன்

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொன்ன அந்த மகானுபாவர், தனது தளத்தில் யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும், இன முத்திரை குத்தி சென்றுவிடுவார்.

    பதிலளிநீக்கு
  4. அவர் மட்டுமல்ல, இன்னும் பலர் இருக்கின்றனர் அந்த மாதிரி .

    பதிலளிநீக்கு
  5. நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. //பாரதியாரின் படைப்புகளை அவரது பார்ப்பனப் பிறப்பின் அடிப்படையில் தாக்கிச் சீரழிக்க நினைப்பது, அறிவின் ஆழமாகத் தோன்றவில்லை.//

    ஆணித்தரமாகக் கூறியுள்ளீர்கள் அப்பாதுரை.
    இந்தக் கருத்துக்கு எவராலும் எதிர் கருத்துக் கூற முடியாது.

    அந்த அன்பரே பாரதியைத் தொடாமல் ஒரு பதிவோ ஒரு உரையோ ஆற்றியிருக்க மாட்டார். தன்னை முன்னிறுத்த பலர் கையாளும் ஒரு உத்தி இது போன்ற எதிர்வினைகள்.

    எனக்குத்தெரிந்த ந்ண்பர் ஒருவரும் இப்படித்தான். உலகமே பாராட்டும் ஒருவரை எதிர்த்து எழுதினால் அனைவராலும் கவணிக்கப்படுவோம் என்பதனால் இப்படி எழுதுவார்.

    பதிலளிநீக்கு
  9. அட, அதற்குள் அடுத்த பதிவா...... திரைமணம் நட்சத்திரப் பதிவர் காரணமாகவா...

    பதிலளிநீக்கு
  10. geethaa santhanam கருத்துதான் எனக்கும்.

    பதிலளிநீக்கு
  11. மதிமாறன் அவர்களின் சில பத்திகளை படித்திருக்கிறேன் ...நல்ல சிந்தனையாளர் அவர் என்பதே என் ஊகம் .. அவரது புத்தகம் பற்றி அறியாமல் நான் கருத்துச் சொல்வது சரியாக இருக்காது ...

    பதிலளிநீக்கு
  12. வன்மம் தலைதூக்கி ஓரு தலைப் பட்சமாக எழுதியதை வைத்துக் கொண்டு ஒரு விவாதமா....

    அதிலும் மூளை மட்டுமல்லாமல் தலையே இல்லாதவரின் கருத்து எனும் பெயரில் ஆரம்ப பின்னூட்டம்...

    இதில் என்ன பினாத்தல் இருக்கிறது என்பதை கருத்தோடும் சொந்த பெயரோடும் வந்து சொல்ல த்திராணியில்லை எனும் போது எதற்கு மொழி, சுதந்திரம்.....

    தயவுசெய்து முண்டப்பின்னூட்டங்களை அனுமதிக்கவேண்டாம். ஆரோக்கியமான விவாதங்களுக்கு இடையூறு தான் அவை....

    அச்சமில்லை...அமுங்குதமில்லை,
    நடுங்குதலிலல்லை, நாணுத லில்லை,
    பாவமில்லை, பதுங்குதலில்லை;
    ஏது நேரினினு மிடர் படமாட்டோம்:
    அண்டஞ் சிதறினா லஞ்சமாட்டோம்:
    கடல் பொங்கி எழுந்தாற் கலங்கமாட்டோம்
    யார்க்கு மஞ்சோம், எப்பொழுது மஞ்சோம்;
    எங்கு மஞ்சோம், எப்பொழுது மஞ்சோம்......

    ...... இப்படி எழுதுபவனை சாதிப் பேய்களா அஞ்சவைக்கும்...

    முகவரியில்லாரின் அரிப்புகளுக்கு பாரதியிடம் சொறிதல் இல்லை , எழுத்திலே சாட்டையடி வேண்டுமென்றால் கிடைக்கும்....

    1/03/2011

    பதிலளிநீக்கு
  13. சின்ன எழுத்து பிழையையும் சகிக்க முடியாததால் ..திருத்தி போட்டுள்ளேன்...

    சரிங்க பதிவுக்கு உள்ள போலாம்...இந்த வோட்டிங் கான்செப்ட் நல்லா இருக்கு..இந்த தொழில் நுட்பமெல்லாம் எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்...

    நம்மூர் தேர்தல் மாதிரி இரண்டு வேட்பாளர்களின் கொள்கைகளும் பொருத்தாமாவே இல்லையே...
    அறியாமையின் சிகரத்தோடு வெறுப்பின் உச்சமல்லவா களத்தில்இறங்கியிருக்கனும்... அதில் வெறுப்பின் உச்சம் வெற்றி பெரும்

    பதிலளிநீக்கு
  14. நட்சத்திர வாழ்த்துகள்ப்பா!

    பதிலளிநீக்கு
  15. இவ்வார விண்மீனுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  16. நன்றி geetha santhanam, எல் கே, துளசி கோபால், பத்மநாபன், ஆதிரா, ஸ்ரீராம், நியோ, ப்ரியமுடன் வசந்த், பழமைபேசி, ...

    பதிலளிநீக்கு
  17. sensationalism சரிதான் ஆதிரா. அதன் வசீகரம் தனி. போதை நிலைக்குக் கொண்டு விடும்.

    பதிலளிநீக்கு
  18. பெயரைச் சொல்ல விருப்பமில்லாவிட்டாலும் கருத்தைச் சொல்ல உரிமை உண்டே, geetha santhanam, பத்மநாபன்? பரவாயில்லை. அனானி வசதியிருப்பதால் கருத்தையாவது சொல்ல முடிகிறதே? சொன்னது தான் முக்கியம், சொன்னவர் அல்ல என்று நினைக்கிறேன்.

    "முண்டப்பின்னூட்டம்" - இதை யூஸ் பண்ணிக்கிறேன் பத்மநாபன். (வோடிங் சாதனம் ப்ளாகரில் கிடைக்குது)

    பதிலளிநீக்கு
  19. நியோ, மதிமாறன் நல்ல சிந்தனையாளர் என்று சொல்லத்தான் நானும் விரும்புகிறேன்.
    "play the ball, not the player" என்று ஒரு வழக்கு உண்டு. ஆட்டத்தை விட்டு ஆள் மேல் கவனம் செலுத்தும் பொழுது சிந்தனை கலைந்துவிடுகிறது, நோக்கம் குழம்பி விடுகிறது என்பது என் கருத்து. ஆட்டமாடி வெல்ல வேண்டும், ஆளையடித்தல்ல - என்ன சொல்கிறீர்கள்? அல்லது ஆளையடிக்க வேண்டும் என்றே எண்ணினால் தகுந்த காரணம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆட்டமாடுவதால் ஆளை அடிப்பேன் என்று கிளம்புவது எந்த வகை சிந்தனை என்று புரியவில்லை. கண்மூடித்தனங்களை சாடுவது தவறில்லை; கண்ணை மூடிக்கொண்டே சாடுவது சரியா?

    பதிலளிநீக்கு
  20. //அனானி வசதியிருப்பதால் கருத்தையாவது சொல்ல முடிகிறதே// ரொம்ப பெருந்தன்மைங்க உங்களுக்கு.. உங்க பேர் நடுவில வி சேர்த்துக்கவே பிரியப்படுறிங்க....
    அவர் சொன்னது கருத்தா இருந்தா கும்புடு போட்டு வரவேற்று இல்லாத தலைக்கு ஒரு கிரிடம் வைக்கலாம்.

    சைக்கிள் வீல் ஏறினா வரும் கிய்யா கிய்யா ஆக்ரோஷம் போல கத்துவதில் என்ன சாதிக்கபோகிறார் ...என்ன கருத்து கிடைக்கப் போகிறது...

    பதிலளிநீக்கு
  21. எச்சொல் யார் யார் வாய்க் கேட்பினும்...இந்தக் குறளுக்கே அர்த்தம் தெரியாதவர்கள் நிறையவே உண்டு துரை.
    கையும் கணினியும் சேர்ந்தால்வரும் வார்த்தைகள் அர்த்தமுள்ளவைகளாகக் கருத வேண்டும் என்ற நினைப்பே அழிந்து வருகிறது.
    நீங்கள் சொல்லித்தான் இப்படியெல்லாம் புத்தகம் வருகிறது என்றும் தெரியும்.
    இனியவை நாற்பதுகளையே எழுதுங்கள்.
    மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் . நட்சத்திர வாழ்த்துகளும் தான்.:)

    பதிலளிநீக்கு
  22. 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடியவர் பாரதி. அவரது படைப்புகளையே அவர் குல பிறப்பின் அடிப்படையில் தாக்கி சீரழிக்க நினைப்பது அறியாமையின் சிகரம். வல்லிசிம்ஹன் கருத்து போல் 'எப்பொருள் யார் யார் வாய்.........மெய் பொருள் காண்பதறிவு' என்பதுதான் என் கருத்தும்.
    எழுத்துக்களுக்கு கூட சாதி பேதம் பார்ப்பவர் ஒரு நல்ல எழுத்தாளராகவோ, சிந்தனையாளராகவோ இருக்க இயலுமா!

    பதிலளிநீக்கு