2011/01/09

அடுத்து வருவது

போக்கற்ற சிந்தனை




    தைத் தமிழில் பெயர்க்கும் பொழுது சுவை குறைந்து விடும் என்று அஞ்சுகிறேன். இருந்தாலும் இதோ: ஐன்ஸ்டைனிடம் ஒரு நிருபர் கேட்டாராம்: "அறிவியல்லே புதுசா எதுனா உண்டா? சொல்லுங்க பத்திரிகைல எழுதுறேன்". ஐன்ஸ்டைன் நிருபரிடம், "இன்னும் பழைய அறிவியலே தெரிஞ்சுக்கலிங்களே? அதைப் பத்தி முழுசா எழுதிட்டீங்களா?" என்றாராம்.

'அடுத்தது என்ன?' என்ற கேள்வியை நம்மையறியாமலே கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். 'அடுத்தது' என்பதில் இருக்கும் திரைவிலகலை ரசிக்கிறோம்; எதிர்பார்க்கிறோம். நாளைக்கு என்ன நடக்கும் என்பது பற்றி அறிந்து கொள்வதில் கணிசமான நேரத்தைச் செலவழிக்கிறோம். நேரம் என்பது ரெலெடிவ் என்று தெரிந்தும். யோசித்துப் பார்த்தால், இந்த நொடியில் சுட்ட சூரியரேகை எட்டு நிமிடங்களுக்கு முந்தையது என்று தெரிந்தும், புதியதில் ஆர்வம் காட்டுகிறோம். (அப்படின்னா, சூரியன் சூபர் நோவா ஆகும் பொழுது நமக்கு எட்டு நிமிசம் டாடா பைபை சொல்ல அவகாசம் கிடைக்குமா?) யோசிக்காமல் பார்த்தால், இந்த நொடியில் இழுத்த மூச்சில் ஜூலியஸ் சீசருக்குப் பாட்டன் விட்ட மூச்சின் அணுமூலம் கலந்திருக்கச் சாத்தியம் உண்டு என்று தெரிந்தும், புதுமையில் மயங்குகிறோம். (மாலிக்யூல்னே எழுதியிருக்கலாம், அணுமூலம் பயமுறுத்துகிறது).

எல்லாமே அரதப்பழசென்றால் புதுமையின் கவர்ச்சியில் மயங்குவதேன்? புத்தாண்டிலிருந்து புதுக்காதல் வரை எல்லாவற்றிலும் ஒரு புதுமையை விரும்புவதேன்? இதற்கெல்லாம் பதில் தெரியாது. ஆனால், 'அடுத்து என்ன?' என்பது பழைய கேள்வியானாலும் புதிதாய்க் கேட்டுக் கொண்டே இருப்போம் என்பது தெரியும். இதையே வருடா வருடம் கொஞ்சம் தூசு தட்டி, நாலு வித ப்லேவருடன் அழகான அட்டை டப்பாவில் போட்டு 'மேலாண்மைத் தந்திரம்' என்று விற்று, ஆலோசகர்களும் அறிஞர்களும் நிறையப் புதுக்காசு பார்ப்பார்கள் என்பதும் தெரியும்.

காசு என்றதும் காதை உயர்த்தும் பிராணிகளில் நானும் ஒருவன். நடந்ததையே புரட்டிப் போட்டு தொலைநோக்கு என்று புது ரிப்பன் கட்டி நடமாடவிடும் சித்தர் கூட்டத்தில் பழகிப்பழகிப்பழகிப்பழகி, மூச்சு விடுவது போல் இயற்கையாகி விட்டது. 'extrapolation' மற்றும் 'marginal theory' என்ற இரண்டு 'utterly sexy and devious' சாதனங்கள் இருக்கும் வரை இந்தப் புது ரிப்பன்கள் தொடரும். எல்லாருள்ளும் நாஸ்ட்ரேடமஸ் உண்டு. அடுத்த பத்து வாரங்களில் என்ன நடக்கும் என்று பட்டியல் போட்டால், பத்தில் ஒன்றாவது நடக்கும்; "சொன்னேன் பார்த்தியா?" என்று புருவங்களைத் துரிதமாக இரண்டு முறை உயர்த்தலாம். இதை இன்னும் வித்தை அளவுக்குக் கொண்டு போனால் பிழைப்புக்கே வழியாகலாம்; பிழைப்பதோடு நிற்காமல், 'உலக மகா இவன் அல்லது அவள்' என்ற அங்கீகாரத்துடன் சில சமயம் அநியாயத்துக்கு காசு கூடச் சேர்க்கலாம். (இதையே குடுகுடுப்பைக்காரன் சொன்னால் "போப்பா, ஒண்ணுங்கிடையாதுபா" என்று விரட்டுகிறோம்; அல்லது திகில் கதை எழுதுகிறோம். வேறு விஷயம்)

அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 'தொலைநோக்கு' என்ற பெயரில் வீட்டிலும் வெளியிலும் நிறைய ஜல்லியடி நடக்கும் (இந்தச் சொல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது). சென்ற நவம்பரில் தொழிலுக்காகத் தொலைநோக்கியது போகச் சிறிது அறிவுக்கும், நிறைய வயிற்றுக்கும், ஈயப்பட்டது. பிடித்துக் கொண்டேன். 'அடுத்த நூறு வருடங்கள்' என்ற ஆங்கிலப் புத்தகம் பற்றிய ஆய்வுடன், அடுத்த நூறு வருடங்களில் என்ன ஆகும் என்ற கலந்துரையாடலில் கலந்து கொள்ள உள்ளூர் மேலாண்மை குருக்கள் கழக ஆதரவில் வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது எனக்குப் பிடிக்கும். அருமையான டிசர்ட் தருவார்கள்.

அரசியல், பொருளாதாரம், உலக வளர்ச்சி, தொழில்நுட்பம், சமூகம், மருத்துவம் என்று பல தலைப்புகளில் கலந்துரையாடுவார்கள். அவரவருக்குத் தோன்றியதை ஒரு வெள்ளைப்பேப்பரில் எழுதி சுவற்றில் தொங்க விடுவார்கள். தொங்கவிட்டதிலிருந்து எது முக்கியம் அல்லது சாத்தியம் என்று வகைப்படுத்துவார்கள். வகைப்படுத்தியதிலிருந்து ஐந்தோ பத்தோ அட்டைப் பெட்டிக்கும் புது ரிப்பனுக்கும் தயாராகும். சுவாரசியமான பொழுதுபோக்கு. டிசர்ட் பற்றிச் சொன்னேன், இல்லை?

அட்டைப் பெட்டிக்குள் என்ன போட்டோம் என்பதை விவரிக்குமுன், இந்தக் கும்மியில் நான் ரசித்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

'இருபதாம் நூற்றாண்டில் என்ன நடக்கும்?' என்று இதேபோல் நூறு வருடங்களுக்கு முன் (எதுவும் புதிதில்லை என்று சொன்னேனே?) எல்லோரும் கூடிப் பேசி வெளியிட்ட நூறு 'தொலைநோக்குக் கூற்று'களிலிருந்து என்னைக் கவர்ந்த சில :

- தெருக்களில் கார்கள் இருக்காது; பெரு நகரங்களில் ஆகாயப் போக்குவரத்து மிகும் (இது வெளிவந்த நாளில் முதல் கார் கூட தெருவுக்கு வரவில்லை; போர்ட் கார் படம் காட்டிக்கொண்டிருந்தக் காலம்)
- புகையில்லாத ரெயில்கள் மணிக்கு நூற்றைம்பது மைலுக்கும் அதிகமான வேகத்தில் ஓடும்
- கார்கள், குதிரைகளை விட சல்லிசாகக் கிடைக்கும்
- ஆகாயக் கப்பல்கள் பெருகும்
- புகைப்படங்களை உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு தந்தி மூலம் அனுப்பலாம்
- காய்கறிகளும் பழங்களும் அளவில் பெரிதாகப் பயிர் செய்யலாம்
- எந்த மலரையும் எந்த வண்ணத்திலும் எந்த மணமும் வரும்படி பயிர் செய்யலாம்
- ஆங்கில அரிச்சுவடியிலிருந்து X, Q எழுத்துக்கள் நீக்கப்படும்
- Wireless (தமிழில் கம்பியற்றவா?) தொலைபேசி வழியாக ப்ரூக்லினிலிருந்து சைனாவுடன் பேசலாம்
- கடைக்குப் போகாமல் வீட்டிலிருந்தே மளிகை வாங்கலாம் (ஒரு குழாய் வழியாக மளிகை வந்து சேரும் என்றார்கள்)
- பாஸ்டனிலிருந்து லன்டனுக்கு இரண்டே நாளில் போய்விடலாம்
- மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியமில்லாமல் நோய்களைக் குணமாக்கலாம்
அசல் பட்டியலைக் காணத் துடிப்பவர்கள் 'saturday evening post' மற்றும் 'ladies home journal' பத்திரிகைகளின் ஆவணங்களில் தேடலாம்; ஆச்சரியம் என்னவென்றால் மேலாண்மைப் பள்ளி ஆவணங்களில் இவற்றைக் காண முடியவில்லை):

இனி, இந்த நூற்றாண்டுக்காரர்களின் கும்மியிலிருந்து சில:
- சைனா உலகத்தின் சக்தி வாய்ந்த நாடாகும்; கம்யூனிச நாடாக இருக்காது
- பள்ளிக்கூடம் கல்லூரி போக வேண்டிய அவசியமில்லாமல் வீட்டிலிருந்தே படிக்கலாம்
- தண்ணீரில்லாமல் குளிக்கவும், துணி துவைக்கவும் சாதனங்கள் பெருகும்
- உலகின் எந்த மூலையிலும் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம்; மருத்துவர்கள் தொலைக்காட்சி வழியாக மருத்துவம் பழகுவார்கள்
- universal health insurance பரவும்
- அமெரிக்காவில் மிகத்தீவிர பூகம்பம் தாக்கி இருபது முப்பது வருடங்களுக்கான வளர்ச்சியில் சேதமேற்படும்
- எண்ணை வளைகுடா நாடுகளில் சிலிகன் உற்பத்தியினால் எண்ணையை விட அதிகம் செழிப்புண்டாகும்
- wireless நம் தினசரி வாழ்க்கையின் இன்றியமையாத அம்சமாகும் (பல் தேய்ப்பதிலிருந்து நிறைய விஷயங்களை wireless பாதிக்கும்)
- சர்க்கரை உபயோகம் மறையும்
- பிறக்கும் பொழுதே கண் பார்வை திருத்தப்பட வேண்டியிருக்கும்
- space weapons பெருகும்; சைனா விண்ணில் கிடங்கு கட்டும்
இதையெல்லாம் பட்டியல் போட்டு எங்கே அனுப்புவார்கள், யார் படிப்பார்கள் என்கிறீர்களா? yahoo newsலிருந்து அரசாங்க public policy institute வரை அனுப்புவார்கள். சில சமயம் ஏதாவது உருப்படியாக நிகழும்.

எனக்கென்னவோ இருபதாம் நூற்றாண்டுக் கணிப்புகளில் ஆழம் இருந்தது போல் படுகிறது. அன்றைய கலந்துரையாடல்கள் ஒரு வட்டத்துக்குள் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். இன்றைக்கு எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையும் வழியும் வகுத்து, "இதில் என்ன நடக்கும்? அது என்னாகும்?" என்று சிந்தனை வீச்சைக் குறுக்கியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சாக்லேட் டிசர்ட்டில் கை வைக்கவில்லை; அது வரை சரிதான்.

இத்தனை எழுதிவிட்டு எனக்குத் தோன்றியதை எழுதாமல் விட்டால் எப்படி? வாய்ப்பு கிடைத்திருக்கிறதே, சும்மா விடலாமா? அறிவியல் தொழில்நுட்பம் பற்றித் தொலைநோக்க எனக்கு அறிவில்லை; அதனால் சமூகம் பொருளாதாரம் போன்ற அசல் ஜல்லியடி வட்டத்துக்குள்ளேயே நிற்கிறேன். அடுத்த நூறு ஆண்டுகளில்:
- சவுதி அரேபியா உலகின் சக்தி வாய்ந்த நாடாகும் (பக்கத்து நாடுகள் சவுதியுடன் இணையும்)
- ஆண்/பெண் சார்ந்த சமூக அமைப்பு மறையத் தொடங்கும்
- பிள்ளைகள் பெற்றோருடன் வளர்வது மறையத் தொடங்கும்; பிள்ளை வளர்ச்சிச் செலவுக்குப் பொறுப்பேற்பதோடு சரி
- உலகெங்கும் பால் (milk) தடைசெய்யப்பட்ட பொருளாகும்
- பள்ளி/கல்லூரி படிப்பறிவு ஐந்தே வருடங்களில் முடியும்; பிள்ளைகள் பனிரெண்டு வயதுக்கு மேல் தான் முறையாகப் படிக்கத்தொடங்குவார்கள்
- ஆங்கிலம் உலக மொழியாகும்; வேறெந்த மொழியும் பயில வேண்டிய அவசியமிருக்காது
நடக்கிறதோ இல்லையோ. இரண்டு சிறுகதைகளுக்கான கருவும் பொருளும் கிடைத்தது.

ஐந்து நாள் கும்மி நிறைவாக இருந்ததா என்று கடைசியில் கேட்டார்கள். சாப்பாட்டில் குறை சொல்லவே முடியாது; அட்டகாசமாக இருந்தது. கடைசி நாள் காக்டெயில் பார்ட்டியில் வழக்கம் போல் எல்லோரும் சிரித்தும் சலித்தும் கொண்டிருந்தோம். "interesting.. 'போர்கள் நிற்கும்; வறுமை ஒழியும்; இனப்பகை ஒழியும்' என்று ஏன் எவருமே சொல்லவில்லை? இதெல்லாம் தொலை நோக்கு வளர்ச்சிகள் இல்லையா?" என்றார் நண்பர்.

"these hors d'œuvres are so fucking good" என்றேன்.

54 கருத்துகள்:

  1. //போர்கள் நிற்கும்; வறுமை ஒழியும்; இனப்பகை ஒழியும்' என்று ஏன் எவருமே சொல்லவில்லை?//
    நடக்க வேண்டியது மட்டும் நடக்காது.

    ஆமாம் நண்பரே என் கேள்வி இது
    மரங்கள் இருக்குமா?? மனிதம் இருக்குமா?
    எல்லாவற்றையும் விட முக்கியம் மனிதன் இருப்பானா?

    பதிலளிநீக்கு
  2. அணுமூலம் புதிய வார்த்தை. நான் மூலக்கூறு என படித்திருக்கிறேன்.
    கடைசியில் hors d'œuvres என்பதற்கு பொருள் புரியவில்லை.(French?)
    I am not so good in English.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. அருமை பலே பிரபு, வருகைக்கு நன்றி.

    அடுத்த நூறு வருடங்கள் தானே? மரங்கள் இருக்கும். மனிதன் இருப்பான். மனிதம்? கொஞ்சம் யோசிப்போம் :)

    பதிலளிநீக்கு
  5. மூலக்கூறு சரி. அணுமூலம் தவறு - எனக்குத் தெரியவில்லை, நன்றி.

    தண்ணியடிக்கும் பொழுது "கட்சிக்க"வும் பார்ட்டிகளில் உணவுக்கு முன்னர் வழங்கப்படும் சிறு திண்டிகளையும் அஅதூர்ஸ் என்பார்கள். பிரெஞ்சு இறக்குமதி.

    பதிலளிநீக்கு
  6. அடுத்து வருவது என்ன? சாத்தியமாகும் சாத்தியங்களை வரிசை படுத்தியது அழகு... மூலக்கூறு பயப்படுத்தாது என்றே நினைக்கிறென்.

    சாதரணமாகவே தமிழில் சுஜாதா நினைப்பில் இருப்பவன் ..இந்த மாதிரி பதிவுகளில் நினைப்பு கூடியே இருப்பேன்.. 2000 முடிவில் சுஜாதா சொல்லிய நினைவிலிருக்கும் ஒன்றிரண்டு..

    நம் ரத்த ஒட்டத்தில் நுழைந்து ரத்தத்தை அலசி அத்தனையும் சொல்லும் சென்சார்கள் 2020 க்குள் நம் உள் புகுந்து உயிரணுக்களை ரிப்பர் செய்யும் திறமை பெற்றுவிடும்.

    2015க்குள் குவாண்டம் கம்ப்யூட்டிங் வந்துவிடும் ,,டி.என்.எ கம்ப்யூட்டிங் என்பதற்கு முன் கட்டமாக இது இருக்கும்..

    படித்ததோடு சரி...இவை எந்த நிலை இற்றைப் படுத்த அவரில்லை எனும் ஏக்கம் தான் மிச்சம்.

    ( நட்சத்திர காலத்தில் ,சுஜாதா பதிவு உங்களிடம் வேண்டியிருந்தேன் ,,இந்த பதிவு அதை நிறைவு செய்ததாக ஒரு உணர்வு ...மிக்க நன்றி )

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாஜனவரி 09, 2011

    enna tambi eppadi irrukae ?????

    பதிலளிநீக்கு
  8. //- உலகெங்கும் பால் (milk) தடைசெய்யப்பட்ட பொருளாகும்//
    உண்மைதான் இப்பவே பாதி பேருக்கு பால் அலர்ஜியான பொருளாயிடுச்சி... ஒரு வாரம் கலக்கல் அப்பாஜி.

    பதிலளிநீக்கு
  9. இந்த நூற்றாண்டு எதிர்பார்ப்புகளில் 1,2,3,4,5,7,8,11 இவை உள்ளங்கை நெல்லிக்கனி, சோற்றிடை பூசணி.... இதெல்லாம் என்ன பேர்கள் (நெல்லி, பூசணி) என்றும் எதிர்காலச் சந்ததியர் கேட்பார்கள்.

    நல்லா இருந்தது பின்நோக்கு=முன்நோக்கு; "நச்"சத்திர வாரம்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. அதுக்கென்ன பத்மநாபன் பதிவு போட்டா போவுது..

    என்னோட வருத்தம் சுஜாதா இலக்கியவாதி அந்தஸ்தை விட்டது தான்; இன்னும் பத்து வருசம் கழித்து சுஜாதா எழுத்தைப் படிப்பாங்களா மக்கள்? நிச்சயம் படிப்பாங்கனு என்னால நம்பிக்கையோடு சொல்ல முடியலை.

    பதிலளிநீக்கு
  11. //இலக்கியவாதி அந்தஸ்தை // இப்படி அடிக்கடி இலக்கிய மரம் ஏறிருங்களே..இலக்கியத்துக்கு இலக்கணம் ஆளாளுக்கு மாறுது . காலத்துக் காலம் மாறுது..இது படிக்கும் கூட்டத்தின் அங்கீகாரத்தில் முடிவாகிறது...அந்த விஷயத்தில் சுஜாதா உச்சாணி கொம்பில் தான் இருக்கிறார்..



    //இன்னும் பத்து வருசம் கழித்து சுஜாதா எழுத்தைப் படிப்பாங்களா மக்கள்? //

    ஜவர் பதிவுக்கு ஒரு விசிட் கொடுங்க..நானும் உங்களுக்கு ஒரு சின்ன பின்னல் போட்டிருக்கேன்.
    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  12. நீங்க சொன்னா சரிதான் பத்மநாபன். 'இலக்கியவாதி அந்தஸ்து' என்பது ஒரு metaphor. எனக்கு வேறு சொல் தெரியாததால் உபயோகித்தேன். எழுத்துக்கு நீண்ட ஆயுள் இருக்குமா இருக்காதா என்பதைத் தான் சொல்ல வந்தேன். என் கருத்தைச் சொன்னேன். பத்து வருசம் பொறுத்து உச்சாணிக் கொம்பில் இருந்தால் சந்தோசம் தான்.

    பதிலளிநீக்கு
  13. சவூதி ஏன் வல்லரசு நாடாகும் என்று சொன்னீர்கள் தெரியவில்லை.எண்ணெய் வளத்தை வைத்தா...அது தன் எண்ணையை வேகமாக காலி பண்ணிக் கொண்டிருக்கிறது என்று படித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லாஜனவரி 10, 2011

    //தமிழில் கம்பியற்றவா//
    வடமில்லா இணைப்பு - சுடுதண்ணி.blogspot.com

    பதிலளிநீக்கு
  15. வல்லரசு அருமையான சொல் - பயன்படுத்திக் கொள்கிறேன், நன்றி.
    வல்லரசு நாடாகும் என்பதற்கு பதில் நாடாகும் சாத்தியம் உள்ளது என்று நான் எழுதியிருக்க வேண்டும்; பிழை.

    தொலைநோக்குக் கணிப்பு என்பதால் இன்றைய நிலையை வைத்து எடைபோட முடியாது என்பதை மட்டும் பணிவோடு சொல்லிக்கொள்கிறேன். (பத்மநாபன்: சுஜாதா பத்து வருசம் கழிச்சு இப்படி விக்குதா பார்க்கணும் :)

    சவுதியின் தற்போதைய கண்டெடுத்த எண்ணை வளம் இன்னும் 80-90 ஆண்டுகளுக்கு வரும் என்கிறார்கள். ஆனால், எண்ணை வளத்தை மட்டும் வைத்து என் கருத்தைத் தெரிவிக்கவில்லை. பொறுமையாக மிச்சக் கருத்தை எழுதுகிறேனே? நல்ல கேள்வி, bogan. நன்றி.

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. பெரியவர்கள் எல்லோருமே நிறைவாகச் சொல்லிவிட்டார்கள்.இதில் நான் என்ன சொல்ல அப்பாஜி.மனிதம் ஓரளவாவது மரணிக்காதவரை மனிதனும் மரங்களும் வாழச் சந்தர்ப்பம் இருக்கிறது !

    பதிலளிநீக்கு
  18. அடுத்த வினாடியின் ஆச்சர்யங்களில் அதிசயங்களில் 'இன்றை' அனுபவிக்காமல் தொலைத்து விடாமல் இருந்தால் சரி...2012 இல் உலகம் அழியாமல் இருந்தால் இருந்தால் அப்புறம் என் ஆரூடங்களை அல்லது ஆர்வங்களை சொல்லலாம் என்று இருக்கிறேன்!! இந்த உலகம் அழியும் ஜல்லி பற்றி எந்த நூற்றாண்டு ஆரூடங்களிலும் இல்லை என்பது மக்களின் பாசிடிவ் எண்ணங்கள் என்று நினைக்கலாமா..

    சுஜாதாவை மக்கள் வருடா வருடம் நினைவு படுத்திக் கொண்டே இருப்பதில் இளைய தலைமுறை அவரைப் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். மறக்க வாய்ப்பில்லை. இன்னும் அவரிடத்துக்கு யாரும் வரவில்லை.

    பதிலளிநீக்கு
  19. உலகம் அழியும் என்று யாரும் சொல்லவில்லை - பாசிடிவ் எண்ணமா, அப்படிச் சொன்னால் டிசர்டைப் பிடுங்கிக் கொண்டுவார்களோ என்ற பயமா தெரியாது

    எல்லாவற்றிலும் கவிதை இயல்பாக எழுதுகிறீர்கள் ஹேமா.. மனிதம் மரணிக்காத வரை.

    பதிலளிநீக்கு
  20. அப்பாதுரைஅவர்களே! காலையில் 7மணிக்கு வலையை திறப்பேன்.நேரம் பத்தவில்லை.6மணி,5மணி என்று இப்போது 4-30 கு ஆரம்பிக்கிறேன்.நசிகெதன்,மூன்றாம் சுழி,சிவகுமரன்,அடர்கருப்பு,தீராதபக்கங்கள், தமிழ் பேபர்,என்று போய்க்கோண்டே இருக்கிறது.புத்தகக் கண்காட்சி,தினமணி,தினமலர்,தீக்கதிர்,இந்து, தினகரன் வலை களைப்படிக்க ஒருநாள் பொதாது.தமிழகத்தைவிட்டு வெகு தூரத்தில் இருந்தாலும் தகவல் தொடர்பில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம் நம்மை நெருங்கச்செய்துள்ளது.உடலும், மனதும்,அறிவும்(Body,Mind, Intelect) தெளிவு பெறுகிறது.---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  21. சவுதியை வல்லரசாக்க வல்லவை அதன் மற்ற வளங்கள், 80%+ எழுத்தறிவு, வளரும் +ve balance of trade, சிலிகன் உற்பத்தியில் முன்னணி பெறும் வாய்ப்பு, வளரும் அந்நியச்செலாவணி, மேற்கத்திய நாகரீகம்; அடக்குமுறை கலாசாரம் ஐம்பது வருடங்களில் மாறிவிடும் சாத்தியம் இருக்கிறது. இன்றைய ஐரோப்பாவின் வணிகச் சிக்கல்களைத் தவிர்க்கவேனும் அரபு நாடுகளுக்குப் பொதுவான கரன்சி சவுதியிலிருந்து வந்ததும், மெள்ள மற்ற விதங்களிலும் ஒன்றிணைவார்கள். இருக்கும் அரபு நாடுகளிலேயே வெளியுறவு விவகாரங்களில் சவுதி முன்னணியில் இருக்கிறது; சவுதியுடன் சுற்று நாடுகள் இணையப் பெரும் சாத்தியம் இருக்கிறது (இரானின் முஸ்லிம் பிரிவினரும் இரேக்கின் ஏழ்மையும் இவற்றைத் தனி நாடுகளாகவே வைக்கு; இரேக்கின் நிலை சீராகி எண்ணை வளத்தால் உயரும் நாளில் சவுதியுடன் நட்பு பாராட்டும் சாத்தியம் அதிகம். மேற்கத்திய நாடுகளின் நட்பு நாடாக இருப்பது இன்னொரு பெரிய பலம். சைனா, இந்தியா வல்லரசுகளானாலும், சவுதி வல்லரசோடு செல்வந்த நாடாகவும் வரச் சாத்தியம் இருப்பதால், அதன் செல்வாக்கு கூடுதலாகும் என்று நினைக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாம் என்ற ஒரு குடையின் கீழ் இணைவோருக்கு சவுதி தான் இருப்பதிலேயே பெரிய குடை!

    பதிலளிநீக்கு
  22. வாங்க காஸ்யபன் ஐயா. இணையத்துக்கு நாம் எல்லோருமே மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  23. //ஆங்கிலம் உலக மொழியாகும்//
    இது தொலைநோக்கா? (டிசர்டைத் திருப்புங்க தோழரே)

    உமது இடுகைகளை அவகாசம் எடுத்துப் படிக்க வேண்டியிருக்கிறது. ஒரு வாரத்தில் பதினாலு இடுகைகளா? எழுத்துக்கட்டுப்பாட்டில் அவநம்பிக்கையா? கணிணிக்கு உறையில்லையா?

    பதிலளிநீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. இன்றைக்கு கூட ஒரு முறை புத்தகக் காட்சிக்கு சென்று வந்தேன். அனைத்து முன்னணி பதிப்பகங்களின் ஸ்டால்களிலும் சுஜாதா படத்தை போட்டு தான் விற்பனை செய்கிறார்கள். காலச்சுவடு தவிர்த்து. ஆழ்வார்கள் நாயன்மார்கள் இயற்றியதை நாம் இன்னமும் படிக்கவில்லையா? உடனே சுஜாதா ஆழ்வாரா என்று கேட்காதீர்கள்.

    ஒரு ஐந்தாறு கல்லூரி மாணவிகள் தூக்க முடியாமல் சுஜாதா புத்தகங்களை வாங்கி சுமந்து கொண்டு சென்றார்கள். பின்னட்டையில் இருந்து என்னை பார்த்து சுஜாதா சிரித்தார். ;-)

    பதிலளிநீக்கு
  26. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  27. சுஜாதா சுஜாதா தான். அவரைப் போல் இன்னொருத்தர் பிறந்து வரணும்.

    பதிலளிநீக்கு
  28. அப்பாதுரைக்கு ஏன் இன்னமும் நம்பிக்கை வர மாட்டிங்குது ...

    புத்தக கண்காட்சி விமர்சனங்கள் நிறைய பேர் எழுதிட்டு வர்றாங்க ...அத்தனை பேரும் சுஜாதா பாணிதான் கடைபிடிக்கிறாங்க ..

    தூக்கமுடியாமல் தூக்கிச்செல்லும் பெண்மணிகள் எல்லாம் அந்த பாணிக்கு வரும்...

    அவருடைய ட்ரெண்ட் சாகா வரம் பெற்றது... நம்புங்கள் ராஜாவே..

    பதிலளிநீக்கு
  29. இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

    பனிப் பொழிவு சற்றேனும் குறைந்ததா ?

    பதிலளிநீக்கு
  30. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

    பதிலளிநீக்கு
  31. நன்றி பத்மநாபன், RVS.. பொங்கல் வாழ்த்துக்கள்.

    ஏப்ரல் வரை பனி, பனிப்புயல் அடித்துக் கொண்டு தானிருக்கும். பழகி விட்டது.

    பதிலளிநீக்கு
  32. வாங்க poefan.

    ஆங்கிலம் உலகமொழியாவது புதுமையோ தொலைநோக்கோ இல்லை தான். (எனக்கு தொலைநோக்கத் தெரியும் என்று நானா சொன்னேன்? அவர்கள் தான் சாக்லெட் டிசர்ட் கொடுத்துக் கூப்பிட்டார்கள். அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாமே என்று..)

    இருந்தாலும் நீங்கள் கேட்டுவிட்டீர்களே என்று இல்லாத மூளையைக் கொஞ்சம் கிளறிக் கிண்டி பிசைந்து..

    என்னதான் ஆங்கிலம் பேசப்பட்டாலும் உலகில் பெரும்பான்மையினர் பேசும் மொழியில் ஆங்கிலம் மூன்றாவதோ நான்காவதோ தான். உலகில் மூன்றே நாடுகளில்தான் ஆங்கிலம் 'official' மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உலக மக்கட்தொகையில் ஆங்கிலம் பேசும் மக்கள் ஐந்து சதவிகிதம் என்று நினைக்கிறேன்.

    இந்த நிலையில் ஆங்கில உலகப்பொது மொழியாகும் என்பது தொலைநோக்கா இல்லையா என்பதை உங்கள் கணிப்புக்கே விட்டு விடுகிறேன். தொலைநோக்கோ தொல்லைநோக்கோ, உலகப்பொது மொழியென்று தேவையா பார்ப்போம்.

    'ஆங்கிலம் பொதுமொழியாகும் என்று சொல்வது மானமுள்ள தமிழன் பேச்சா?' என்று ஒரு அன்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் (பாரதியார் பற்றிய ஒரு பதிவுக்கு பதில் சொல்லும் சாக்கில், இந்தப் பதிவில் சொன்னதையும் சேர்த்து என்னைஉ ஆங்கிலத்தை ஆதரிக்கும் பார்ப்பனன், போலித் தமிழன் என்றார் அன்பர் - போகட்டும்).

    உலகப்பொதுமொழி என்று இருந்தால் சமூக முன்னேற்றத்துக்கு ஏதுவாகும் என்று நினைக்கிறேன். எழுத படிக்க பேச வணிக மருத்துவ ஆய்வு - இவற்றுக்கு ஒரு பொது மொழி இருந்தால் 'waste' குறையும் என்றும் நினைக்கிறேன். மற்ற மொழிகள் பொழுது போக்கு மற்றும் intellectual stimulation காரணங்களுக்காக வளர்க்கவோ அனுமதிக்கவோ பட்டாலும் பொதுமொழியில் பழகினால் பொது நன்மை அதிகம் என்று நம்புகிறேன்.

    இன்றைக்கு மேன்டரின் மட்டும் தான் அதிகம் ஆங்கிலம் கலக்காத மொழியாக இருக்கிறது. ஜப்பானிய மொழியில் கூட ஆங்கிலச் சொற்கள் கலக்கத் தொடங்கிவிட்டன. தமிழில் கேட்கவே வேண்டாம். சென்னையில் தெருவில் நடந்தால் காதில் விழும் வசைச்சொற்கள் கூட இந்நாளில் தமிழில் வருவதில்லை.

    கலைச்சொற்களுக்கு ஆங்கிலம் தான் வசதியாக இருக்கிறது. சென்ற நூற்றாண்டுகளில் ப்ரெஞ்சும் ஜெர்மனும் இருந்தது போல இன்றைக்கு கலைச்சொற்களுக்கு ஆங்கிலம் தான் விரும்பப்படுகிறது. ஏதோ மொழியார்வத்தில் ஆங்கிலத்துக்கான மொழிபெயர்ப்பைச் சொல்கிறோம் சரி - ஆனால் அதனால் சாதித்தது என்ன என்று பார்த்தால் கேள்விக்குறிதான்.

    எல்லாம் வைத்துப் பார்க்கையில், உலக அரசுகள் மக்கள் எல்லாரும் பொதுமொழியில் விருப்பமும் வேகமும் காட்டுவார்கள் என்று நினைக்கிறேன். இன்றைய நிலவரத்தை வைத்துப் பார்க்கையில் பொதுமொழியாக ஆங்கிலத்தைத் தேர்வு செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

    பின்னூட்டமா பதிவா.. என்ன இது?

    பதிலளிநீக்கு
  33. //போலித் தமிழன் என்றார் அன்பர் //

    நல்ல தமிழில் எழுதுபவன் / பேசுபவன் போலித் தமிழன் ..போலி அசல் தொல்லை தாங்க முடியலபா..

    //காதில் விழும் வசைச்சொற்கள் கூட இந்நாளில் தமிழில் வருவதில்லை// இன்னா நைனா மெய்யாலுமே காஞ்சு போனாமாத்ரி கீது..அசலு தமில் பக்த்ல கீறாரு எட்து வுட சொல்ட்டுமா...

    பதிலளிநீக்கு
  34. இமெயிலில் உரையாடலாம் பத்மநாபன். 'பொதுவில் கண்டனம் செய்ய வேண்டாம்' என்று அன்பர் கேட்டதை மதிக்கத் தோன்றுகிறது - தான் அப்படிச் செய்யாவிட்டாலும். இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆங்கிலம் பரவியதற்குக் காரணம் பார்ப்பனர்கள் தானாம். ஒரு மூன்றெழுத்துக்காரரைத் தான் சாடினார் என்று பார்த்தால், உங்களுக்குப் பிடித்த இன்னொரு மூன்றெழுத்துக்காரரையும் விடவில்லை. popular இலக்கியம் என்ற பெயரில் பிராமணியத்தையும் ஆங்கிலத்தையும் புகுத்திய தமிழ்த்தோல் போர்த்திய ஆரிய அடிவருடி என்று ஒரு அடி அடித்தார்! அசந்தேன். எப்படியெல்லாம் ஆராயத் தோன்றுகிறது சிலருக்கு!

    பாரதி, ஆரிய ஜல்லி இடுகைகளை பரவலாகப் படித்திருக்கிறார்கள் என்பது interesting.

    பதிலளிநீக்கு
  35. பொதுவில் வேண்டாம் என சொல்வதை மதிக்கத்தான் வேண்டும்..அதே சமயம் அவர்க்கென்றில்லாமல் பொதுவான விஷயங்கள் பகிர்வு கீழே...


    உலகம் முழுவதும் ஆங்கிலம் பரவியதற்கும் பார்ப்பனர்கள் தான் காரணம் எனும் பெருமையையும் பரப்பிக் கொள்ளட்டும்...

    எங்கும் யாரோடும் சகஜமாக பழகி இனிமையான நட்போடு இருக்கும் பிராமணர்கள் மீது வஞ்சம் காட்டும் தாழ்வு மனப்பான்மை காரர்களை பார்த்து பரிதாபப் படத்தான் தோன்றுகிறது...

    தமிழின் 247 எழுத்து தெரிந்து அதை வார்த்தைகளாக கோர்க்க தெரிந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் அம்மொழியை சொந்தம் கொண்டாட உரிமை உண்டு...

    வளர்த்தவர்களை,படிக்கவைத்தவர்களை குறி பார்த்து குறை சொல்பவர்களை ஜீவனான தமிழ் மன்னிக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  36. பத்மநாபன், 'எங்கும் யாரோடும் சகஜமாக பழகி இனிமையான நட்போடு இருக்கும் மனிதர்கள் மீது வஞ்சம் காட்டும் தாழ்வு மனப்பான்மை காரர்களை பார்த்து பரிதாபப் படத்தான் தோன்றுகிறது...' என்று உங்கள் கருத்தை ஏற்கலாமா?

    பதிலளிநீக்கு
  37. என்றோ சாதீய அடையாளங்களை தொலைத்தவன் தனிப்பட்டமுறையில்...சாதியோ கடவுளோ கோட்பாட்டளவில் அவரவர்க்கு பிறரை துன்புறுத்தாதவரை நன்மை இருந்தால் எடுத்து கொள்ளலாம். குறை கூறினால் சேற்றிரைத்தல் தான் கூடுகிறது..

    குறிபார்த்து குறியிடுபவர்களை குறியிட்டுத்தான் சொல்லவேண்டிய நிலை வந்து விடுகிறது...மற்றபடி மனிதம் தாண்டி எதுவும் இல்லை..

    நன்றி அப்பாதுரை...

    பதிலளிநீக்கு
  38. நீங்கள் சொல்ல வந்தது எனக்கு நிச்சயம் தெரியும். நன்றி பத்மநாபன்.

    பதிலளிநீக்கு
  39. பத்மநாபனின் கருத்தை மனப்பூர்வமாய் ஆமோதிக்கிறேன்.முன்பு கொஞ்ச காலம் அந்த தாழ்வு மனப்பான்மை கூட்டத்தில் நானும் இருந்தேன் என்பதை வெட்கத்துடன் ஒப்புக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  40. நம் ஒவ்வொருவரிடத்திலும் வெட்கப்பட காரணங்கள் இருக்கின்றன சிவகுமாரன். உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது.

    இரண்டாயிரம் வருடங்களாக நம் அணுக்களில் ஊறிய தாழ்வு மனப்பான்மை இருநூறு வருடங்களில் தீர்ந்து விடுமா? உலகெங்கும் இதே நிலை தான். கொடியும் சுவரொட்டியும் தான் வேறே.

    தொடர்ந்து வரிசையான படையெடுப்புகள், படையெடுப்பைத் தொடர்ந்த மொத்த மதமாற்றங்கள், கொள்ளை, கலாசார அழிப்பு, மெள்ளப் புகுந்த அடிமைத்தனம் (கிழக்கிந்தியக் கம்பெனிக்கு முன்பே இருந்தது), இடையிடையே புகுந்த தீவிர மதவாதம்... எல்லாம் சேர்ந்து நம்மை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

    சாதி மதம் தமிழன் பார்ப்பான் ஹிந்திக்காரன் துலுக்கன் கொல்டி பரயன் பள்ளன் என்று சொல்பவர்கள் எல்லாம் தங்கள் உடலுக்குள் அத்தனை மதங்களின் அதனை சாதிப்பிரிவினரின் ரத்தமும் ஓடும் சாத்தியத்தை உணரும் பொழுது இந்த கொடிபிடிப்பதும் ஜல்லியடிப்பதும் எத்தனை வீண் என்பது புரியும். கண் திறக்கும்.

    மாற்றமேற்பட கல்வி உதவுவது போல கொடிபிடிப்பது உதவாது என்று நினைக்கிறேன்.

    நாம் அடியெடுத்து வைத்த போது இருந்த நிலையை விட அடிமறந்துபோகும் போது இருக்கும் உலக நிலை மேன்மையானதென்றால், அதுவே நம் வாழ்வின் பலனாகும். நம் சாதனையாகும்.

    நம் சந்ததி நம்மை விட இன்னும் சாதிப்பார்கள் என்பதில் ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  41. // நாம் அடியெடுத்து வைத்த போது இருந்த நிலையை விட அடிமறந்துபோகும் போது இருக்கும் உலக நிலை மேன்மையானதென்றால், அதுவே நம் வாழ்வின் பலனாகும். நம் சாதனையாகும்.// வாழ்வின் சாதனைக்கு சிறப்பானதொரு விளக்கம் .
    இதில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடமை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் வகையில் வந்த விளக்கம் .

    பதிலளிநீக்கு
  42. பத்மநாபனின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  43. ரெம்பவுக்கும் மூளைக்கு வேலை குடுக்கறீங்க... நல்ல விஷயம்... சில புது வார்த்தைகளையும் கற்று கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  44. வாங்க சே.குமார், அப்பாவி தங்கமணி (அநாவசியமா பழி போடறீங்களே? மூளைனா என்னனே தெரியாதுங்க எனக்கு.. ஓரம்பாங்களே அதா?)

    பதிலளிநீக்கு
  45. சில சமயம் ஏதாவது உருப்படியாக நிகழும்.
    நிகழ்ந்தால் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  46. எல்லாம் என் தலைக்கு மேல் விஷயங்களாக இருக்கின்றன. உங்களை மாதிரி விஷய ஞானத்துடன் எழுதுவோர் வெகு சிலரே!
    வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  47. தங்களின் அருமையான பின்னூட்டம் எனது ப்ளாகில் கண்டேன். தங்கள் மெயில் முகவரி இல்லாததால் இங்கு எழுதுகிறேன். தங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் தொடர்பு கிடைத்ததில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  48. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, இராஜராஜேஸ்வரி, யாதவன், சென்னைப் பித்தன், மோகன் குமார், Kochuravi, ...

    பதிலளிநீக்கு
  49. இன்று தான் தங்கள் தளம் வருகிறேன் அருமையான தலைப்புடன்... நல்ல விடயங்களை பகிர்ந்தள்ளிர்கள்... நன்றி..

    பதிலளிநீக்கு
  50. கதைக்கு வந்து உட்கார்ந்தாச்சு....

    பதிலளிநீக்கு
  51. பத்மநாபன் சார் ..கொஞ்சம் தளளி உட்காருங்க...
    ம்...போதும்...
    அப்பாடா...நானும் உட்கார்ந்தாச்சு...

    பதிலளிநீக்கு