2011/01/05

வரலச்சுமி சரிதம்




பத்தாம்ப்பு தொடங்குறப்ப பெரியவாத்தி கேட்டாரு:
எத்தனமேல படிப்பீங்க? என்னவேலை செய்வீங்க?
அடுத்தடுத்து முறைபோட்டு அவனவுக பதில்சொல்ல
படுக்காமத் தூங்குனவன் பளிச்சுனு முளிச்சிகிட்டேன்.

என்சினியர் ஆவேனுங்க எம்பிஏ படிக்கபோறேன்
சின்னதா தொழில்செய்வேன் சிஏவாச்சும் படிப்பேங்க
எம்பிபிஎஸ் எம்ஏபிஎல் எம்பில்கூட படிப்பேனுங்க
எம்ஜிஆர் சிவாஜியாட்டம் சினிமாவுல சேர்வேனுங்க

அரசியல்ல இறங்குவேனு ஆளுகொண்ணு சொல்லுறப்ப
வரலச்சுமி எந்திரிச்சு வாத்தியாரைப் பாத்துசொன்னா:
ஆளுக்காளு ஆசைப்படி அத்தனையும் அமையட்டும்
கேளுங்கிப்போ என்னாசை குடும்பத்தலைவி ஆவுறதே!

வரலச்சுமி பேச்சுகேட்டு வகுப்பெல்லாம் சிரிப்பாச்சு
பிரம்பெடுத்த வாத்திமூஞ்சி பாத்தபின்னே சரியாச்சு
பரவாயில்ல பேசுபுள்ள பெரியவாத்தி சொன்னபிறவு
வரலச்சுமி எந்திரிச்சு வெவரத்தையுஞ் வெளக்கிவச்சா:

படிப்பிலயோ இஷ்டமில்லே வீட்டுலயும் வசதியில்லே
துடிப்பாத்தேன் இருக்காரு அப்பாரும் தொரத்திவிட
முறையான மாமனைத்தான் கல்யாணம் கட்டப்போறேன்
குறையென்ன இதிலாச்சு எதுக்கித்தனை ஊத்தப்பல்லு?

பத்தாவது படிச்சுமேலே பலபடிப்பும் முடிச்சுப்புட்டு
சித்தாடை சின்னத்தங்கைக் கல்யாணச் சேதிகேட்டு
பரதேசம் போயங்கே பலகாலம் தங்கினவன்
சிரமங்கள் பாக்காமே சிலநாளு ஊருவந்தேன்.

கல்யாணம் முடிஞ்சபின்னே ஊருபோகக் காத்திருந்தேன்
நல்லாவே குரல்கொடுத்து நாலுதரம் பேரைக்கூவி
சென்னைக்கு விமானமேற வேகமாக் கையசச்சு
என்பக்கம் நின்னவளை எட்டிப்பாத்தா வரலச்சுமி!

குடும்பத்தலைவி! இவளெங்கே இந்தப்பக்கம் ஓடிவந்தா?
திடுமென்னு முன்வந்த முன்னாள் தோழியநான்
பார்த்தெத்தனை நாளாச்சு! நலஞ்சுகஞ் சாரிச்சு
ஊர்க்கதை ஒட்டுமொத்தம் பேசிப்பிறகு கேட்டுவச்சேன்:

மணக்குறதா சொன்னபுள்ளே, எங்கேடி உங்குடும்பம்?
கணமென்னைப் பார்த்தவளோ கண்ணுரெண்டும் காவேரியா
பிள்ளைங்க எதுவுமில்லே புருசன்நாலு கட்டியாச்சு
கொள்ளையா விவரமுண்டு குடிச்சுகிட்டே பேசுவமுன்னா.

வரலச்சுமி கையிலொரு விஸ்கிப்புட்டியப் பாத்தசந்தேன்
விரலாலே என்னோட வியப்பையெலாம் ஒடுக்கிப்போட்டு
மனசுக்குள்ளே சுமையிருக்கு விஸ்கியென்ன கசுமாலம்?
கனவுலயும் நினைக்காத கதையெங்கதை கேளுடான்னா:

கல்லூரிக்கு போகல்லே ப்ளஸ்டூவோடு படிப்புசுபம்
நல்லோருங்க ஆசியோடு நடந்தேறிச் சுன்னாலும்
முறைமாப் பிள்ளையோடு முடிச்சுவச்ச கலியாணம்
குறைமாப் பிள்ளையினு கூடும்போது கண்டுக்கிட்டேன்.

அறிவுலகுறை ஆத்தல்குறை ஆண்மையிலுங்குறை போதாம
கறிக்கொதவா சித்திரமாத் தாய்வீடு திரும்பிவந்தா
ஆயுசுங்குறையாகி ஆறுமாசத் திலெறந்து போனான்.
தேயும்நெலாப் போலே தெனமழிஞ்சுப் போனேன்யா.

ஓய்ந்த பெத்தோருக் கெத்தனைநாள் பாரமாவேன்?
தாய்தந்தை மறுபடியும் மணமுடிக்கச் சொன்னாங்க
சிறகிழந்த சின்னப்புறா எந்நெலமை தாளாமே.
பொறந்திருக்கக் கூடாது பொறந்தபின்ன பொலம்புவானேன்?

இன்னொரு கல்யாணம் இரண்டாம் தாரமானேன்
என்வயசு இருபதுதான் அவனுக்கோ ரெண்டுபங்கு
ஊருக்கு வெகுதூரம் பம்பாயில் புதுக்கணவன்
பேருக்குப் புருசந்தான் பொழுதெல்லாம் நரகந்தான்

தினமுங்குடி சச்சரவு நம்பிவந்த பெண்டாட்டிய
மனப்போக்கில் ஏச்சுமடி மாட்டைவிட மோசமய்யா!
எனக்குவந்த எரிச்சலுல என்னசெயவ தறியாமே
கனலெறிஞ்சு கட்டிலோடே கட்டியவனைக் கொளுத்திப்புட்டேன்.

புகலிடம் புரியாமே பிறந்தகம் திரும்பிவந்தேன்
சிகரெட்டுத் தீயினாலே உண்டான விபத்தென்னு
என்னமோ போலீசாரு கதைமுடிச்சு வச்சாங்க
இன்சூரன்சு தந்தபணம் பத்துலச்சம் சொச்சமாச்சு.

முதலாவது புருசங்காரன் பெத்தவங்க செத்துப்போயி
விதவிதமா வீடுநிலம் பணம்நகை பாத்திரமும்
திரும்பிய வருசத்துல திடீர்திருப்பக் கதையாட்டம்
இருக்குற சொத்துபூரா என்கைக்கு வந்துருச்சு.

முக்கிய வேலையா மூணுவருசம் தங்கிப்போக
பக்கத்துல குடிவந்த பரதேசிப் பழக்கமாச்சு
பரதேசி யாருகேளு வெள்ளைக்கார எட்வினாளு
வரலச்சுமி உங்கழுத்தில் தாலிகட்டச் சம்மதமானான்.

இதுக்கெடையே என்னோட அம்மாவும் எறந்துபோக
எதுக்கும்நான் கவலைவிட்டு எட்வினையே கைப்பிடிச்சேன்
அப்பாவோ அண்ணாமலைச் சாமியாரா ஓடிப்போக
தப்பாமே எட்வினோடே தப்ளினூரு போய்ச்சேந்தேன்.

சீரோடும் செறப்போடும் செலவருசம் வாழ்ந்தாலும்
பேருக்கொரு புள்ளகூட பொறக்கவில்லே எங்களுக்கு.
என்னுடைய பாக்கியமா என்னவென்னு புரியவில்லே
தன்னுடைய வாழ்விலினித் தனிவழி வேணுமென்னார்.

தப்ளினூரில் டைவர்சாகி வருசம்போல இருந்துபுட்டு
எப்படித்தான் தள்ளுறது மிச்சகால மென்னிருந்தேன்
பழயகுருடி கதையாட்டம் போயிடாம கதியில்லா
குழந்தைங்களைக் காப்பாத்த ஆசிரமம் நடத்திவாரேன்.

மறந்துபோன வாசகத்த நெனவுக்கேன் கொண்டுவந்தே?
பொறந்த தெனத்துலந்து பதினெட்டு வயசுவரை
இருவது பசங்கயென்னை அம்மானு அழைக்குதுங்க.
ஒருமனசா சொல்லுராசா நானுங்குடும்பத் தலைவிதானே?

அனாதைப் பிள்ளங்களுக்கு அம்மாவா வரலச்சுமி?
கனாவுலகூட உனக்குநிகர் குடும்பத்தலைவி யாருமில்லே
ஒண்ணுக்கு மூணுமுறை கலியாணமுங் கட்டிருக்கே
கண்ணுரெண்டும் தொடச்சுக்கடி கட்டாயமித தெரிஞ்சுக்கடி.

நல்லதா நாலுசொல்லி சந்தேகத்தைக் கேட்டுவச்சேன்:
எல்லாஞ்சரி எதுக்கிப்போ ஏர்போர்ட்டு வந்திருக்கே?
ஆசிரமத் தமிழ்வாத்திய நாலாவதாக் கட்டிக்கிட்டேன்
காசிருக்கு கலிபோனியாத் தேனிலவுப் போறமென்னா!

இதயமிவள் இதயமிது இரும்பினாலே செஞ்சதாமோ?
அதற்குள்ளே வாத்தியாரும் அந்தப்பக்கம் வந்துசேர
அவருடைய கைகுலுக்கி இருவருக்கும் வாழ்த்துசொன்னேன்.
இவளையா கெக்கரிச்சோம்? அசந்தபடி நகந்துபோனேன்.

14 கருத்துகள்:

  1. புரியலியே எல் கே?? சரியாத்தானே இருக்கு?

    பதிலளிநீக்கு
  2. எல் கே, internet explorer or chrome உபயோக்கிறீங்களா? formatting என்ன கோளாறு?

    பதிலளிநீக்கு
  3. இது ஏற்கெனவே படிச்சாச்சே. மீள்பதிவா?
    முன்னே உரைநடையா எழுதி இருந்தீங்களோ.

    பதிலளிநீக்கு
  4. ஆபிசில் க்ரோமில் பார்த்தேன் சரியாக வரவில்லை

    பதிலளிநீக்கு
  5. கதையா... கவிதையா... நல்லா இருக்கு சார்.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. கடைசி 3 பத்திகளில் formatting problem இருக்கிறது. ( Both in chrome & IE)

    பதிலளிநீக்கு
  8. வரலச்சுமி பெயர் பார்த்தவுடன் ஒலக நாயகன் மாதிரி தத்து பித்தாக எதாவது இருக்குமோ என பயந்து உள்ளே வந்தேன் ....

    வந்தது தான் தெரியும் ...வழுக்கு மரமாய் கவிதை சர சரவன படித்திறக்கி விட்டது ...

    நாள் பல ஆச்சு...வட்டாரவழக்கில் இப்படி பாட்டு கேட்டு..

    ( ஃபார்மெட் பிரச்சினை ஒன்னுமில்லையே... இருந்தாலும் கண்கட்டு வித்தையாய் கவி இறங்கி விட்டது )

    பதிலளிநீக்கு
  9. உண்மைக் க(வி)தை-ன்னு சொல்லியிருக்கீங்க, சொல்லிய கவிதையும் அருமை, கவிதையின் விதையும் அருமை. அவங்க வரலச்சுமி இல்லை... வாழ்க்கையை (அதன் போக்கில்) வாழ்கின்ற லச்சுமி.

    பதிலளிநீக்கு
  10. நாலு நாளில் எழு இடுகை !! அப்படி போட்டு தாக்கு.

    வரலக்ஷ்மி - அந்த "மாமா" கதையும் - பூத்தூரிகையில் வந்ததோ ?

    மாமா கதை போல் நம்மிடமும் உண்டு - ஐயப்ப விரதம் முடிந்த பிறகு தொலைபேசியில் சொல்லறேன். என்ன ரீவேர்ஸ் அவ்வளவு தான் !!

    பதிலளிநீக்கு
  11. //"கொள்ளையா விவரமுண்டு குடிச்சுகிட்டே பேசுவமுன்னா..."//

    வரலச்சுமியின் முதல் மாற்றம் இங்கே இப்படி சொல்லப் படும்போதே நிலை தெரிந்து விடுகிறது. முதல் பதிவில் என்ன சொல்லியிருந்தேன் என்று பின்னால் போய்ப் பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  12. உண்மை சிவகுமாரன்.. இன்னொரு கவிதையோடு இந்த இடுகைச் சுட்டியை இணைக்கும் பொழுது கோளாறாகி விட்டது. இடுகையை அழித்து விட்டேன் - அதனால் தான் மீள்பதிவு. (யாரும் படித்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.. நீங்கள் படிச்ச மாதிரி இருக்குறதா சொல்றீங்க, ஸ்ரீராம் பின்னூட்டம் போட்டதைத் தேடுறதா சொல்றாரே?)

    பதிலளிநீக்கு
  13. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
    தங்கள் மூன்றும் சுழி வழியாக உங்கள்
    பதிவுக்குள் நுழைந்துள்ளேன்.அருமையான பதிவு
    கவிதை பூங்காவிற்குள்ளும் நுழைந்தேன்
    நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது
    தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு