சீராகச் சென்று கொண்டிருக்கையில் எதிர்பாராமல் எங்கோ இடறுகிறது. எங்கே எப்போது இடறி எல்லாம் தலைகீழாக மாறுகிறது என்பது மாறும்போது தெரிவதில்லை. மாறியது புரிந்தும் ஏதும் செய்ய முடியாத நிலையில் மனம், கதவிடுக்கில் சிக்கிய விரலாகப் பதறித் துவண்டு போகிறது. உடல், முன்னிரவு படுத்தெழுந்தப் பாயாகச் சுருண்டு போகிறது.
எல்லாம் இந்த வாழ்க்கையைப் பற்றித்தான் சொல்கிறேன்.
என் பெயர் சதாசிவம். எண்பத்து நான்கு வயதாகிறது. ரிடையர்ட் பி.எஸ்.ஹைஸ்கூல் கணக்கு வாத்தியார். சப்ஸ்டிட்யூட் இங்லிஷ் நான்டீடெயில் மற்றும் பி.டி டீச்சர். எனக்கு இரண்டு பையன், ஒரு பெண். முதல் பையன் தில்லியில் மினிஸ்டரி ஆப் கம்ப்யூனிகேஷனில் யுடிசி. இளையவன் ஐஐஎம் கொல்கத்தாவில் புரபசர். ஒரே பெண் இலைலிலி என்று ஒரு அமெரிக்க மருந்து கம்பெனியில் ஆரகிள் டிபிஏ எனும் சித்து வேலை பார்க்கிறாள். மாப்பிள்ளை சொந்தமாக சிகாகோ அருகே வின்ட்மில் கன்சல்டிங் என்று சுயமாக என்னவோ செய்கிறார். என் மனைவி பெயர் கோமதி. எழுபத்தொன்பது வயது ஆகிறது. அறுபது வருடங்களாக என்னுடன் ஒட்டிகொண்டு சரியான சள்ளை.
நை நை என்று இந்த வயதிலும் எதையாவது சொல்லிக் கழுத்தறுப்பாள். "..இதைச் சாப்பிடுங்க.. அதை விடுங்க.. ஸ்வெட்டர் போடலியா.. டிவி என்ன வேண்டிக்கிடக்கு.. சின்ன குழந்தை மாதிரி என்ன பிடிவாதம்.. சட்டுபுட்டுனு குளிச்சு வந்தா சாப்பிடலாமில்லையா.. தினம் பத்து நிமிஷம் உள்ளுக்குள்ளயே வாக்கிங் போகக் கூடாதா.. சாமி கும்பிட்டா என்ன கொறஞ்சா போயிடும்.. கணக்கு வாத்தினா கடவுள் நம்பிக்கை இல்லாம போயிடுமா.. அய்யோ போகட்டும் விடுங்க.. உங்க பசங்கனு அவங்களுக்கு எல்லாம் செஞ்சீங்க அதுக்காக இப்ப உங்களை யாரும் கவனிக்கறதில்லேனு புலம்பறது அசிங்கம்.. வயசுக்கேத்த மாதிரி நடக்க வேண்டாமா.. அப்படி என்ன மறதி.. தேவையில்லாம அவங்க விஷயத்துல ஏன் தலையிடுறீங்க.. தொண்ணூறு வயசாகப் போகுது, இன்னும் என்ன சென்டர் ஆப் அடென்ஷன் வேண்டிக்கிடக்கு... போற காலம் வந்தாச்சுனு தெரிய வேண்டாமா.. அவ சொல்றபடி தான் கேளுங்களேன்.. உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும்னு ஏன் கண்டதுல கையை வச்சு உடைக்கறீங்க.. வயசானா கணக்கு வாத்தியார் கம்ப்யூடர் மெக்கானிக்காயிட முடியுமா.. ப்ளட் ப்ரஷர் கொலஸ்டிரால்னு கெடந்து வியாதிப் பட்டணமா இருக்கீங்க.. காது வேறே மந்தமாயிட்டு வருது.. மாத்திரை மருந்து சாப்பிட்டு அடுத்தவங்களுக்குத் தொந்தரவு இல்லாம இருந்தா என்ன.." இப்படி வினாடிக்கு மூன்று முறையாவது புலம்புவாள்.
பாருங்கள்.. நேற்றிரவு இரண்டு மணிக்கு மேல் உறக்கம் வராமல் டிவியில் ஒலிகுறைத்துப் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஆசையில் கொஞ்சம் ஒலி கூட்டினேன். காது சரியாகக் கேளாது என்பதால் அதிகமாகக் கூட்டிவிட்டேன் போலிருக்கிறது. பக்கத்தில் படுத்திருந்த கோமு சட்டென்று விழித்து என்னை இடித்தாள். "என்ன இப்படி சத்தமா வச்சிருக்கீங்க? மாப்பிளை முழிச்சிக்கப் போறாரு.. காலைல அவங்க வேலைக்குப் போக வேண்டாமா? இது என்ன படம் இது.. ரெண்டு வெள்ளைக்காரன் ஆம்பளைக்கு ஆம்பளை முத்தம் கொடுத்திட்டிருக்கான்.. கண்றாவி.. இந்த வயசுல இதையா பாக்கறது?" என்று சிடுசிடுத்தாள். "பிலடெல்பியா.. நல்ல படம்டி.. உனக்கென்ன தெரியும்.. இங்லிஷ்ல அவன் சொல்றது சரியா கேட்க மாட்டேங்குது.. அதான் வால்யூம் வச்சேன்" என்றேன். "போதும் போதும்.. படுத்துத் தொலைங்க.. அமெரிக்கா வந்தா.. உடனே இங்லிஷ் படம் பீத்துணி பாட்டுனு என்ன போலித்தனம் வேண்டிக்கிடக்கு?" என்றாள். "பீத்துணி இல்லேடி.. பீதோவன்.. பட்டிக்காடு உனக்கு என்னடி தெரியும்?" என்றேன். "எனக்கொண்ணும் தெரிய வேண்டாம்.. டிவியை அணைச்சுட்டு படுங்க.. வயசு ஏறிட்டே போகுது, புத்தி இறங்கிட்டே போகுது" என்று எரிந்து விழுந்தாள். "சரிதான் போடி கிழவி" என்றேன். மனதுள். பிறகு டிவியை அணைத்துவிட்டுப் படுத்தேன். தூங்க முடியவில்லை. அரைமணியில் கோமு விதிர்த்து எழுந்தாள். என்னை உலுக்கி, "மூச்சு முட்டுது" என்றாள். என் கைகளை இறுகப் பிடித்தாள்.
    அமெரிக்காவில் ஒரு வசதி. இரவு மூன்று மணியானாலும் எமர்ஜென்சி என்றால் போன் செய்து கீழே வைக்குமுன் உடனே வந்துவிடுகிறார்கள். ஆக்சிஜன், டிபிப் என்று அத்தனை வசதியுடனும் வந்தார்கள் பேராமெடிக்ஸ் ஆசாமிகள். கிழவியை அலாக்காக வண்டியில் தூக்கிக் கிடத்தினார்கள். தேவைப்படுகிறதா இல்லையா என்று சிந்திக்காமல் ஆக்சிஜன் குழாய் பொருத்தினார்கள். ஒரு நர்ஸ் கோமதியின் நாடித்துடிப்பு, கண், மார்பு, வயிறு, கால்விரல் என்று சடுதியில் வரிசையாகச் சோதனை செய்தாள். யாருக்கோ போன் செய்தாள், என் மாப்பிள்ளையிடம் ஒரு கையெழுத்து வாங்கினாள். அவ்வளவு தான், வண்டி கிளம்பிவிட்டது. எல்லாம் இரண்டு நிமிடங்களுக்குள்ளாக.
"அம்மாவுக்கு ஹார்ட் அடேக்.. நீ இங்கயே இருப்பா.. நாங்க ஆஸ்பத்திரி போய்ட்டு வந்துடறோம்" என்றாள் மகள்.
"அவ என் வொய்ப்"
"அட.. எனக்குத் தெரியாதாப்பா? சும்மா இருப்பா.. மணி மூணாகுது.. நீ அங்கே வந்தா கஷ்டமாயிடும்.. வீட்டுல பசங்களைப் பாத்துக்கப்பா.. ஆம்புலன்ஸ் எல்லாம் பாத்து பயந்து போயிருக்காங்க.. நாய் வேறே விடாம குலைக்குது.. இவங்களைப் பாத்துக்கப்பா.. நாங்க ஆஸ்பத்திரி போய் பார்த்துட்டு உடனே வந்துடறோம்.. இந்தா இந்த செல்போனை வச்சுக்க.. கூப்பிட்டு விவரம் சொல்றேன், ஓகே?"
"நானும் வரேனேடி.."
"அடம் பிடிக்காதப்பா ப்லீஸ்.. ஆக்ட் யுர் ஏஜ். வந்து உன்னைக் கூட்டிப் போறேன்".
மாப்பிள்ளையைப் பார்த்தேன். சங்கடமாகப் புன்னகைத்தார். என் பெண்ணுடன் காரில் புறப்பட்டுப் போனார்.
விழித்துப் பயந்திருந்த என் பேரப்பிள்ளைகளைப் பார்த்தேன். "யு ஹெவ் டு லிசன் டு மாம் அன்ட் டேட்" என்றான் மூத்த பேரன். இரண்டாமவன் என்னைத் தள்ளாத குறையாகத் தள்ளினான். "ஐ வான்ட் டு கோ டு பெட் க்ராம்பா". நாய் கூட என்னை வாலாட்டாமல் முறைத்தது.
பேரப்பிள்ளைகளைப் படுக்கையில் கிடத்திப் போர்த்துகையில், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் என் மகளிடம் நான் சொன்னது தெளிவாக நினைவுக்கு வந்தது. "சும்மா அடம் பிடிக்கக் கூடாது ரம்யா. அப்பாம்மா சொல்றபடி நடந்து சமத்தா படுத்து தூங்கினா எல்லாம் சரியாயிடும். சாயந்திரம் மெக்ரெனட் கேக் வாங்கிட்டு வருவேன்".
அரை மணிக்குப் பிறகு பெண் போன் செய்தாள். "அப்பா... ஹார்ட் அடேக் கொஞ்சம் மேஸிவ். ஆஞ்சியோ பண்ணப் போறாங்க.. அப்புறம் சரியாகலேன்னா சர்ஜரி.. பசங்களைப் பாத்துக்கப்பா. ரெண்டு பேருக்கும் மால்டோவா கொடு. ஆர்கேனிக் மில்க் இருக்கு பார். உனக்கு வச்சிருக்குற சாதாரண பாலில் கலந்துடாதே. கொஞ்ச நேரம் கழிச்சு நாங்க வந்துருவோம்".
"வந்து கூட்டிப் போறியா?". போனை வைத்துவிட்டாள்.
அரை மணிக்குப் பிறகு மாப்பிள்ளை மட்டும் அவசரமாக வந்தார். உடனே குளிப்பதற்காக மாடிக்குப் போனார். உடையணிந்து திரும்பி வந்து கிச்சன் பேன்ட்ரியிலிருந்து புரோடீன் பார் ஒன்றை எடுத்துக் கடித்தபடி ஆரஞ்சு ஜூஸ் குடித்தார். "தேங்க்ஸ் பார் டேகிங் கேர் ஆப் த கிட்ஸ் அங்கிள். நான் போய் ரம்யாவை அனுப்புறேன். எனக்கு ஏழு மணிக்கு மீடிங் இருக்கு"
"கோமதிக்கு எப்படி இருக்கு?"
"ஓ.. ஐ டோனோ.. ஷிஸ் ஃபைன் ஐ கெஸ்.. டாக்டருங்க பாத்துட்டிருக்காங்க.. ரம்யாக்கு விவரம் தெரியும்.. வரட்டுமா?".
'உனக்கு என் நிலை வரக்கூடாது மாப்பிள்ளை' என்று நினைத்துக் கொண்டது எனக்கே அசிங்கமாக இருந்தது.
    மூன்று நாட்களுக்கு மேலாக இன்டென்சிவ் கேரில் கிடக்கிறாள் கோமதி. தினம் அரை மணி நேரம் பார்வைக்கு அழைத்துப் போகிறாள் மகள். கோமதி இயற்கையில் அப்படியொன்றும் அழகில்லை. வாய்க்குள் ஒரு நீலக்குழாய் பொருத்தியிருந்தார்கள். புக் புக் என்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். முகமெல்லாம் வீங்கியிருந்தது. அழுக்குச் சுருணை போல் எதையோ அவள் உடலில் போர்த்தியிருந்தார்கள். கால்களிலும் கைகளிலும் ட்யூப் செருகியிருந்தார்கள். முடியை வெட்டியிருந்தார்கள். கண்களை மூடியிருந்தாள். வாய் கோணியிருந்தது. என் கோமதி இப்போது அழகாகத் தோன்றினாள்.
ஆஞ்சியோ பலனளிக்கவில்லை. சர்ஜரி செய்தார்கள். ஸ்டன்ட் என்றார்கள், என்ன ஸ்டண்டோ! அடுத்த நாள் கிட்னி வேலை செய்யவில்லை என்றார்கள். ப்லூயிட் எல்லாம் உள்ளுக்குள்ளே தேங்கத் தொடங்கிவிட்டது என்றார்கள். அன்று சாயந்திரம் வலுவில் டயூரிஸிஸ் செய்வோம் என்றாகள். "அப்படின்னா?" என்றேன் மகளிடம். "மூத்திரம் உண்டாக்கணும்பா. நாட் எ பிக் டீல்" என்றாள்.
அன்று இரவு ஆஸ்பத்திரியிலிருந்து போன் வந்தது. அவசரமாக ஓடினார்கள் மகளும் மாப்பிள்ளையும். "அப்பா.. ப்லீஸ் வீட்டுல இருப்பா. பசங்களைப் பாத்துக்க. நீ வேறே கிடந்து டென்சன் தராதே".
ஒரு மணி நேரத்துக்குப் பின் திரும்பினார்கள். "அப்பா.. அம்மாவுக்கு மிட்றல் வேல்வ் பழுதாயிருக்குப்பா. ஹார்டுலந்து ரத்த ஓட்டம் சரியா இல்லே. அதனால வேறே வேல்வ் பொருத்தப் போறாங்க"
"பிழைப்பாளா?" என்றேன், குரலில் நடுக்கத்தை மறைத்து.
"இதெல்லாம் சகஜம்பா. ஷி இஸ் ஃபைன்" என்றாள் மகள். "எதுக்கும் அண்ணா ரெண்டு பேத்துட்டயும் சொல்லிடுபா".
தில்லிக்கும் கொல்கத்தாவுக்கும் போன் செய்தாள். விவரம் சொன்னாள். இரண்டு மகன்களும் என்னுடன் பேசினார்கள். "நீ அமெரிக்கா போயிருக்கவே கூடாது. இந்த வயசுல உனக்கு அப்படி என்ன ஆசை? ஊர் ஒலகத்துல நான் அமெரிக்கா போய்ட்டு வந்தேன்னு பீத்திக்கணும்.. இப்ப பாரு.. யாரு அவஸ்தைப்படறது?" என்றான் மூத்தவன். அவனுக்கே அறுபது வயதாகப் போகிறது. எண்பது வயதுக்காரனை விரட்டினான். "அப்பா.. உனக்கு எதுவுமே தெரிய மாட்டேங்குது. வயசாயிடுச்சே தவிர அறிவு? இப்ப உன்னை அங்கே போகணும்னு யார் கேட்டாங்க?"
"அப்பா.. கவலைப்படாதே. அம்மாவுக்கு சரியாயிடும். அப்படியில்லேன்னா அங்கேயே எல்லாத்தையும் முடிச்சுடுபா. பாடியை இந்தியா எல்லாம் எடுத்துட்டு வர வேண்டாம். வேஸ்ட்" என்றான் இளையவன். எப்போதும் நேரடியாகப் பேசுகிறவன். "அப்பா, அம்மா.. நான் ஷிரீனைக் கல்யாணம் பண்ணிக்கபோறேன். ஜாதி லொட்டுன்னு சொல்லிட்டிருந்தா ரெண்டு பேரும் என் கல்யாணத்துக்கு வர வேண்டாம். வி டோன்ட் நீட் யூ பீபில்" என்று எங்களை ஐந்து வருடங்கள் புறக்கணித்தவன். "அப்பா.. உனக்கு எதுவுமே ஆவல பாரு.. நீ ஸ்ட்ராங்கா இருக்கே. அம்மாவுக்கு எல்லா சிக்கலும் வருது. குட். ஷி லிவ்ட் ஹர் பார்ட். ஜஸ்ட் செலப்ரேட் ஹர் லைப். பிழைச்சா சந்தோஷப்படுவோம்.. இல்லாட்டி இன்னும் சிரமப்படலியேனு நிம்மதியாயிருப்போம்".
எனக்குத் தைரியம் சொல்ல முன்வந்தார்கள் என்பது மட்டும் புரிந்தது. பள்ளி நாட்களில் இவர்களுக்கு நான் கணக்கு சொல்லிக் கொடுத்தால் அனியாயத்துக்குக் கோபப்படுகிறேன் என்று என்னைத் தடுத்து, கோமதி பாடம் சொல்லிக் கொடுப்பாள். "ஊர்ல தான் வாத்தி. வீட்டுல பசங்களுக்குச் சொல்லித் தரத் தெரியலே. என்ன பெரிய உத்தியோகம்?". அவள் தப்பாகச் சொல்லிக் கொடுத்ததை நான் திருத்துவேன். ஒரு முறை கணக்கு ஒன்றைச் சொல்லிக் கொடுத்தாள் பாருங்கள்.. தப்பாகச் சொல்லிக் கொடுப்பதிலும் உழைப்பு இருப்பதை அன்று புரிந்து கொண்டேன். விடுங்கள். எத்தனை தப்பாக இருந்தாலும் அவளைத்தான் கொண்டாடுவார்கள் பிள்ளைகள்.
அண்ணன்களுடன் நெடு நேரம் பேசிவிட்டு வந்தாள் மகள். தயங்கி, "அப்பா.. உன்னோட கேஷ் ஸிசுவேஷன் எப்படி இருக்குபா?" என்றாள். "அம்மாவோட மெடிகல் செலவு நிறைய ஆயிரும் போலிருக்குப்பா. உனக்காக வாங்கின இன்டர்நேஷனல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் செல்லாதுன்னுட்டாங்க. அண்ணா ரெண்டு பேர்கிட்டயும் அதிகம் பணம் இல்லே. பொண்ணு பிரசவத்துக்கு இப்பத்தான் செலவழிச்சேன்னு சொல்றான் பெரியண்ணா. த்ரீ லேக்ஸ் தரதா சொல்றான் சின்னண்ணா. இவருக்கும் பிசினஸ்ல கொஞ்சம் முடக்கம்பா. எங்கிட்டயும் அவ்வளவா பணமில்லே.."
விழித்தேன்.
"கவலைப்படாதப்பா.. உங்கிட்டே விஷயத்தை சொல்லணும்னு தான். பட்..எப்படியாவது பாத்துக்கலாம்.. இப்ப போய் படுத்து தூங்குப்பா" என்று அறைக்குள் ஒதுங்கினாள். நான் இரவு முழுதும் உறங்கவில்லை. "சம்பாதிச்சது எல்லாம் எதுக்குங்க. பசங்களுக்குத் தானே? பையன் டில்லிலே வீடு வாங்கறதுனா சும்மாவா? அம்பதாயிரம் உதவி பண்ணக் கூடாதா? கிறுஸ்தவளா இருந்தா என்ன? நம்ம மருமக. அவளுக்கு ஒண்ணுன்னா நம்ம பொண்ணுக்கு வந்த மாதிரி தானே? ஒரு லட்சம் தானே? வீட்டை வச்சுக் கொடுங்க.. இருந்திருந்து நம்ம பொண்ணுக்கு நல்ல வரன் வந்திருக்கு.. பத்து பவுன் இருவது பவுன்னு பாக்காதீங்க.. நம்ம பொண்ணு நல்லா இருக்கணும்.. வீடு போனா என்ன, வாடகை வீட்டுல இருந்துக்கலாம்.. பிஎப் எல்லாம் எதுக்கு வச்சிருக்கீங்க. எல்லாத்தையும் எடுத்துப் போட்டு கல்யாணத்தை முடிப்போம்".
    எட்டு நாட்களாக மாலை தவறாமல் பதினைந்து நிமிடம் என்னை அழைத்துப் போகிறாள் மகள். கோமதி கண் விழிக்கவில்லை. இன்னமும் இன்டென்சிவ் கேர். மிட்றல் வேல்வ் மாட்டினார்கள். பிறகு இன்டர்னெல் இன்பெக்சன் என்றார்கள். மூளை தசையெடுத்து சோதனை செய்தார்கள். எதற்கும் ரெஸ்பான்ஸ் இல்லை என்று டாக்டர்கள் கன்னத்தில் விரல் தட்டிப் போலியாகக் கவலைப்பட்டார்கள். கிட்னி மறுபடி வேலை செய்யவில்லை என்றார்கள். ஜூனியர் மருத்துவர்களுக்கு வகுப்பெடுத்தார்கள். கோமதியை இஷ்டத்துக்குக் கோரப்படுத்தியிருந்தார்கள். எனக்கு இப்போது தான் அழகாகத் தெரிந்தாள்.
"பிழைப்பாளானு கேளேன்?"
"என்னப்பா இது? நாகரீகமே இல்லையா உனக்கு? பொழுது போகாமலா இத்தனை நாளா இத்தனை வைத்தியம் பாக்குறாங்க?"
"இல்ல ரம்யா.. கோமதியைப் பாரு. புக்கு புக்குனு பம்புல மூச்சு விடறாளேனு பாக்காதே. மனசுக்குள்ள இன்னமும் என்னைப் பத்தி நெனச்சுப் புலம்பிட்டிருக்கா. ஷி நீட்ஸ் ஸாலஸ்".
    பத்தாம் நாள் எங்களை அனுமதிக்க மறுத்தார்கள். "உங்க மனைவிக்கு இன்பெக்சன் த்ரெட். அவங்களோட இம்யூன் சிஸ்டம் கொலேப்ஸ் ஆகியிருக்கு. அதனால இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு பார்வையாளர் அனுமதி கிடையாது".
வீடு திரும்பியதும், "ஹார்ட் அடேக்னா.. இத்தனை நேரம் விஜயா ஆஸ்பத்ரிலே எல்லாம் சரி பார்த்து வீட்டுக்கு அனுப்பியிருப்பாங்கடி" என்றேன்.
மாப்பிள்ளை கிண்டலாக, "வயித்து வலின்னு போனா கூட விஜயாஸ்பத்ரிலே ஹார்ட் அடேக்னு வைத்தியம் பாத்து அனுப்பியிருப்பாங்க மாமா" என்றார்.
"ஏம்பா.. இவ்ளோ சின்சியரா எல்லாம் பாக்கறாங்க.. உனக்கு வேலிட் இன்ஷூரன்ஸ் கூட இல்லே.. அப்படியும் தே ஆர் கிவிங் ப்ரிமியம் கேர்.. கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம பேசுறியே?" என்றாள் மகள்.
"இட் இஸ் ஓகே அங்கிள். உங்க மனநிலை புரியுது" என்றார் மா. "ரம்யா, ஹி இஸ் ஜஸ்ட் வென்டிங். லெட் ஹிம்".
சாப்பிட்டபின் வழக்கம் போல் இந்தியாவில் பிள்ளைகளுடன் பேச்சு.
    மூன்று வாரங்களாகியும் கோமதி விழிக்கவில்லை. இப்போது பல்மொனெரி ஹைபர் என்று ஏதோ சொன்னார்கள். நுரையீரலில் மறுபடி ஏதோ திரவம் சேர்வதாகச் சொன்னார்கள். "ஹார்ட் அடேக் என்றால் வேஸலின் தடவி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் எங்கள் இந்தியாவில்.. எல்லாம் சரியாயிடும்.. இத்தனை வசதி படிப்பு என்று இருந்தும் கிட்டத்தட்ட ஒரு மாசமா இப்படி வறுத்தியெடுக்கறீங்களே.." என்றேன் தமிழில்.
"வாட் டஸ் ஹி ஸே?" என்றாள் நர்ஸ் என் மகளிடம். சிரித்தவாறே என்னை முறைத்தாள் ரம்யா.
வீடு திரும்பியதும், "அப்பா.. உனக்கு ஒண்ணுமே தெரியலே. சின்ன குழந்தையாட்டம் நடந்துக்குறே. அம்மாவுக்கு இப்படி ஆச்சுன்னா டாக்டருங்க என்ன செய்வாங்க? தெ ஆர் டூயிங் தெர் பெஸ்ட்"
"தெரியும்.. என்னை மன்னிச்சுரு செல்லம்" என்றேன்.
அருகில் வந்து என் தோளை அணைத்தாள் மகள். "அப்பா.. தப்பா நெனக்காதப்பா.. வீ ஆர் ரனிங் அவுட் ஆப் மனி.."
"யெட்.. ஷி இஸ் நாட் ரனிங் அவுட் ஆப் டைம்.." என்றேன் மெதுவாக.
"டோன்ட் பி எ சைல்ட்" என்றாள். என் மகள், என்னைக் குழந்தை என்கிறாள். "அப்பா, நிதி நிலவரம் எப்படி இருக்குனு கணக்கு போடலாம்பா. கடன் வாங்கணும்னாலோ எதையாவது விக்கணும்னாலோ அண்ணாவுக்கு போன் செய்யலாம்.. உங்கிட்டே பேங்க் பேலன்ஸ் எவ்வளவு இருக்கு?"
"நான் வேணும்னா யாருக்கும் தெரியாம கோமதியோட ட்யூப் ரெண்டை நாளைக்குப் பிடுங்கி விட்டுறட்டுமா?" என்றேன் இயல்பாக.
"அப்பா.. என்ன உளறல் இது. ஆர் யூ டிமென்டெட்?
"இல்லடி.. இத்தனை செலவு பண்ணி வைத்தியம் பாத்து இவ எழுந்து வந்தா எப்படி இருப்பா? இப்பவே போன வார பஜ்ஜி மாதிரி இருக்கா. பிழைச்சு வந்தாலும் இவளோட லைப் எப்படி இருக்கும்? அதான்.. நான் வேணும்னா சட்டுனு யாருக்கும் தெரியாம ஒரு ட்யூபை இழுத்து விட்டுடறேனே..?"
"ஷடிட் டேடி. என்ன பேச்சு இது?"
"இல்லம்மா.. அவளுக்கும் நிம்மதி. காசுக்கேத்த வைத்தியம் பாத்தா போதும்"
"ஸ்டாப் இட் டேட். உனக்குத் தான் பைத்தியம் பிடிச்சிருக்கு" என்று விருட்டென்று எழுந்து போனாள் மகள். அண்ணன்களுடன் கதவடைத்து ஏதோ காரசாரமாகப் பேசுவது காதில் விழுந்தது.
    கோமதியை நினைத்துக் கொண்டேன். 'சனியன், சாக மாட்டியோ? கிடைச்ச சான்சுல போய்த் தொலையாம இழுத்துப் பிடிச்சிட்டிருக்கியே? எதுக்கு? பிழைச்சு வந்து மறுபடி புலம்பி என் உயிரை வாட்டப் போறியா? ஹ்ம்.. கவலைப்படாதே. எதையோ சொல்லி எதையோ செய்து எப்படியோ புரட்டி உன் பிள்ளைகள் உனக்கு வைத்தியம் பார்ப்பார்கள். அப்பா அம்மா என்ற கடமை அவர்களுக்கு. இன்னும் இரண்டு வாரமோ ஒரு மாதமோ அமெரிக்க டாக்டர்கள் வைத்தியம் பார்ப்பார்கள். ஒரு வேளை நீ பிழைத்து வரலாம். ஒரு வேளை நாம ரெண்டும் பேரும் இந்தியா கூடத் திரும்பலாம். அங்கே உன்னை என்னால் பார்த்துக் கொள்ள முடியாமல் போனால்? அட, அங்கே போனதும் எனக்கு ஏதாவது ஆகி.. விஜயாஸ்பத்ரி கூட போக முடியாது போனால்?'
திடீரென்று உறைத்தது. எங்கள் விருப்பம் என்று இனி எதுவும் வாழ்வில் இல்லை. என் வாழ்வில் எனக்கிருந்த பிடிப்பு, என்று எந்தக் கணத்தில் இளகி விலகியது என்று நினைத்துப் பார்க்கிறேன். சரியாகப் புரியவில்லை. மங்கலாகவே இருக்கிறது.
உறக்கம் வராமல் அன்றும் படுத்த போது, தினம் கோமதி கரைந்தது.. இல்லை, தேனொழுகப் பாடியது.. நினைவுக்கு வந்தது.
..மதி வேண்டும், நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்..
2013/12/28
கோமதி என்றொரு அழகி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)