2011/07/23

ததாஸ்துக் களிம்பு

சிறுகதை


    கதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், சமஸ்தாபராதம் சமஸ்தாபராதம் முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன். வியாக்யானமும் சம்பாஷணையும் சித்தே எசகுபிசகா இருக்கலாம், இருந்தா, பால்யரெல்லாம் வாசிக்கப்படாதுன்னு பெரியவாள்ளாம் பவ்யமா எடுத்துச் சொல்லுங்கோ. கேக்கலேன்னா, செவிட்டுல ரெண்டு சாத்துங்கோ, குத்தமில்லை, பகவான் ரக்ஷிப்பார்.

சரி, இன்னிக்குச் சபைல குளித்தலை ஆசாமி ஒருத்தரோட கதையைச் சொல்றதுனால இப்பவே குளித்தலை மகாஜனங்களுக்கு அசுவத்தாமனோட நமஸ்காரத்தைச் சொல்லிடறேன். வாகனாஸ்த்ரமா ஆட்டோ கீட்டோ அனுப்பிடாதீங்கோ.

ராமலிங்கம் ராமலிங்கம்னு ஒரு புண்யவான். மகாதானபுரத்துல அவர் அம்மாவாத்துல பொறந்தாலும், புண்யாசன நாள்லேந்து குளித்தலைலயே வளந்தவர். அங்கயே படிச்சுட்டு, அங்கயும் பக்கத்துல முசிறிலயும், ஸ்கூல் வாத்தியாரா இருந்தார். அஞ்சு வருஷம் கரூர், திருச்சினு வேலை பாத்தாலும் ஜாகை குளித்தலை தான். திருச்சியைத் தாண்டிப் போனதில்லை மனுஷர். லக்ஷ்மணன் கோடாட்டம். திருச்சிதான் பட்டணம். காவேரிக்கு வடக்கே தொட்டியத்துல விக்ரகமாப் பொண் பாத்துக் கல்யாணம் பண்ணிண்டு, ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கு ஒண்ணுனு ரெண்டு பொறந்தாலும், ஆசையும் வேண்டாம் ஆஸ்தியும் வேண்டாம் ஆளவிடுரா ராமானுட்டு, ரெண்டும் அமெரிக்காவைப் பாக்க ஓடிடுத்து. போன வருஷம் பார்யாளைப் பறி கொடுத்தார். ஒண்டியா இருந்தாலும் கவலைப்படலை. ரிடையராகி ரெண்டு வருஷமாச்சு. தன் கையே தனக்குதவிடா தசரதபுத்ரானு இருந்தார். ரொம்பத் தேவைன்னா அவசரத்துக்குக் களிம்பு வேறே இருக்கேனுட்டு திருப்தியா இருந்தார்.

கை, களிம்புனா ஒடனே கற்பனாஸ்வத்தை மனோவேகத்துல விடாதீங்கோ, களிம்பைப் பத்தி சாவகாசமா விஸ்தாரம் பண்றேன்.

ஸ்ரீமான் ராமலிங்கத்தோட டெய்லி ருடீன் என்னன்னு கேட்டேள்னா, ஒரு போது யோகினு சொல்லணும். கார்த்தால அம்பீஸ்ல டிகிரிக் காப்பி ஒரு லோட்டா, மாத்யான்னிகம், ரெண்டு கறி ரெண்டு கூட்டு, உப்பொறப்பு கம்மியா சாம்பார் ரசம், சுட்டப்பளாம் தயிர் ஆவக்கானு, அம்பீஸ்லந்தே எடுப்புச் சாப்பாடு. ராத்திரி லங்கணம். சாயரட்சை, பக்கத்துல முருகன் கோவிலுக்கு வாக்கிங் போய் ஆறுமுகன் சன்னிதானத்துலயும், ஈஸ்வரன் கடம்பவனேசர், அம்பாள் முற்றிலாமுலையாம்பிகை சன்னிதானத்துலயும் ரெண்டு காலம் பூஜை முடியற வரைக்கும், சில நாள் அர்த்தஜாம பூஜை முடிய ராத்திரி ஒம்பது ஒம்பதரை ஆனாலும், உக்காந்திருப்பார். பொதுவா ஊர்வம்பு அரட்டையடிச்சாலும் பாடல் பெற்ற ஸ்தலமாச்சே, ரெண்டு மூணு திருப்புகழும் சொல்லிட்டு ராத்திரி வந்து அக்கடானு படுத்தார்னா, மறுபடியும் கார்த்தால அம்பீஸ்ல டிகிரிக் காப்பினு ஆரம்பிச்சு நடக்கும் நித்ய காலட்சேபம்.

இப்பேற்பட்ட ராமலிங்கத்துக்கு, சதாசிவம் சதாசிவம்னு ஒரு ஆப்தர். ஆத்ம சினேகிதர். ரெண்டு பேரும் குளித்தலைல ஆறாவது வரைக்கும் ஒண்ணா படிச்சு வளந்தவா. பம்பரம், கிட்டிப்புல், கோலி, எப்பவாவது கிரிகெட்னு ஒண்ணா விளையாடி வளந்தவா. ஏழாவது படிக்கறச்சே சதாசிவத்தோட தோப்பனாருக்கு திருச்சிக்கு மாத்தலாய் போனதுலேந்து சதாசிவத்தைப் பிரிஞ்சவர்... ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை ராத்திரி... எத்தனையோ வருஷம் கழிச்சு முதல் தடவையாப் பாத்தார். கோவில்லேந்து வரச்சே ஆத்து வாசல் திண்ணைல ரெண்டு பெட்டியோட உக்காந்துண்டு யாரோ காத்துண்டிருக்காளே, யாரதுனு பாத்தா, அடையாளமே தெரியாம நின்னுண்டிருந்தார் சதாசிவம்.

நேத்திக்கு பாத்தவாளையே நாம இன்னிக்கு மறந்து போய்டறோம், நாப்பது வருஷத்துக்கு மேல ஆச்சோன்னோ, ராமலிங்கம் கொஞ்சம் கஷ்டப்பட்டார்.

"யாரு வேணும் உங்களுக்கு?"

"ராமா, நான்தாண்டா சதாசிவம். என்னைத் தெரியலையா?"

பொடார்னு பொட்டுல அறஞ்சா மாதிரி ஞாபகம் வந்துது ராமலிங்கத்துக்கு. "டேய், சதா, நீயாடா? என்னை ஞாபகம் வச்சுக் கண்டுபிடிச்சுட்டியே, எனக்குத்தான் நீ யாருனே புரியலை"

"இல்லடா, எனக்கும் உன் முகம் மறந்து போச்சு. சாயந்த்ரமே வந்துட்டேன். பக்கத்தாத்துக்காரர் கிட்டே உன்னைப் பத்திக் கேட்டேன். அவர் பொண்ணு கல்யாணத்துல நீதான் ரொம்ப ஒத்தாசையா இருந்தியாம், பாருங்கோனு போட்டோல்லாம் காமிச்சார். அதனாலதான் உன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிஞ்சுது". சிரிச்சார் சதாசிவம்.

"வாடா வாடா"னுட்டு வாஞ்சையா உள்ளே கூட்டிண்டு போனார் ராமலிங்கம்.

"என்னடா, ரொம்ப நேரம் ஆச்சா வந்து? ஏதாவது சாப்பிடறியா? நான் ராத்திரி சாப்பிடறதில்ல. அம்பீஸ்ல இன்னும் தொறந்திருப்பான், சாப்பிடறியா?"

"வேண்டாம், ராமா. பேசிண்டிருப்போமே?"

"திருச்சி போனப்புறம் உன்னைப் பார்க்கவே இல்லையேடா சதா?"

"திருச்சிலேந்து, மெட்ராஸ் போனமா, அங்கதான் காலேஜ். அப்புறம், வடக்கே பூனால வேல கிடைச்சு அங்கியே செட்டில் ஆயிட்டேன். போன மாசம் ரிடையர்மென்ட் வாங்கிண்டு நேத்திக்கு மெட்ராஸ். இன்னிக்கு இங்க வந்துட்டேன். இனிமே இங்கதான். ரெண்டு நாள் உங்கூட தங்கிட்டு வேறே வீடு தேடிண்டு போயிடறேன்"

"சேசே! எதுக்குடா? நான் ஒண்டிக்கட்டை. உனக்கு ஆக்ஷேபணை இல்லேன்னா இங்கயே என்னோட தங்குடா"னார் ராமலிங்கம். பொட்டியை எடுத்துண்டு போய் ரேழிக்கடுத்த ரூம்ல வச்சார். "நாளைக்கு வேறே தோச்சுப் போடறேண்டா. இன்னிக்கு இதைக் கட்டிக்கோ"னுட்டு ஒரு நாலுமுழ வேஷ்டியும், தலகாணிப் போர்வையும் எடுத்துண்டு வந்து கொடுத்தார். ரெண்டு பேரும் பால்ய ஞாபகத்துலந்து ஆரம்பிச்சு நாப்பது வருஷ காலமா நடந்ததைப் பேச ஆரம்பிச்சா. நடுப்பற சதாசிவம், பையிலேந்து ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரிக்க ஆரம்பிச்சார்.

"என்னடா சதா அது?"

"தேர்த்தம்டா ராமா. சிவாஸ் ரீகல். ரெண்டு பெக் போடலாம் வா"

ராமலிங்கம் நடுங்கினார், "வேணாம்டா".

"ஏண்டா, இதெல்லாம் சாப்டதில்லையா நீ?"

"சாப்டிருக்கேன். திருச்சில வேலை பாத்தப்போ எங்க ஸ்கூல் சூப்ரென்ட் வந்தார்னா, சாயங்காலம் அவரோட சில சமயம் சாப்டிருக்கேன்"

"அப்புறம் என்ன ராமா? எவ்வளவு நாள் கழிச்சுப் பாக்கறோம், சேந்து கம்பெனி குடு ராமா"

"சரி, உனக்காக ரெண்டு உத்துருணி, அதுக்கு மேல வேண்டாம்"

உத்துருணில ஆரம்பிச்சு ரெண்டு பேருமா சேந்துண்டு அந்த பாட்டிலைச் சொட்டு விடாம குடிச்சா. அப்புறம் அம்பீஸ்லந்து வந்த ஸ்பெஷல் ரோஸ்ட், பூரி மசாலா, தயிர்சாதம் ஊறுகாவையும் சாப்டுண்டே பேசினா பேசினா, கதை கதையா பேசினா. காலேஜ் படிப்பு, உத்யோகம், கல்யாணம், கொழந்தை, குடும்பவம்பு, ஊர்வம்புனு கார்த்தால மணி மூணுக்கு மேல ஆகி, வாசல்ல ரோந்து போற கூர்க்கா வந்து லாத்தியால திண்ணைல ரெண்டு தட்டு தட்டிட்டுப் போற வரைக்கும் பேசினா.

"டேய் சதா, படுத்துக்கலாம்டா, கண்ணைச் சுத்த ஆரம்பிச்சாச்சு"

"படுத்துக்கோ. நல்லா போட்டிருக்கே. தூங்கு. சொப்பனத்துல த்ரிஷா தமன்னானு வந்தா என் சொப்பனத்துல வரச்சொல்லு, நானும் தொட்டுப் பாக்கறேன்"னு சிரிச்சார் சதாசிவம்.

"கண்ணை மூடினா நித்ராதேவையைத் தவிர யாரையும் தொட்டது கிடையாதுடா. சொப்பனமே வந்ததா ஞாபகமில்லை. உன் சொப்பனத்துல யாராவது வந்தான்னா அங்கேயே பூட்டி வச்சுக்கோ". ராமலிங்கம் நன்னா வாயைத் தெறந்து கொட்டாவி விட்டு அப்படியே படுத்தார். மித்தத்துல லேசா நெலா வெளிச்சம் வந்துட்டு வந்துட்டுப் போச்சு. வெளில காத்தடிக்கறது கேட்டு, "மழை வரும் போலருக்கேடா? படுத்துண்டு தூங்கு. காலைல பேசிப்போம்"னார் ராமலிங்கம்.

"தூக்கம் வந்தாத்தானேடா சொப்பனம் கிப்பனமெல்லாம்"னார் சதாசிவம், திடீர்னு ஸ்வரம் போன ஸ்ருதிப்பெட்டி மாதிரி.

"ஏண்டா சதா, தூக்கம் வராம என்னடா? உன மனசுல என்ன உளச்சல்?"

"அது.. ராமா"னு முழிச்சார் சதாசிவம். அப்புறம் சொன்னார். "யார் கிட்டயாவது சொன்னாத்தாண்டா மனசு ஆறும்"

"சொல்லுடா"

"டேய், மூணு வருஷம் முன்னால என் பொண்டாட்டியக் கொன்னுட்டேண்டா"னார் சதாசிவம்.

தேள் கொட்ன மாதிரி எழுந்து உக்காந்தார் ராமலிங்கம். "என்னடா சொல்றே?"

"நச்சு நச்சு நச்சு நச்சுனு முப்பது வருஷமா என்னைப் போட்டுப் படுத்தி எடுத்துட்டா. அவ கொஞ்சம் முடியாம படுத்துண்டப்போ இதான் சான்சுனு, அவளைக் கழுத்தை நெரிச்சுக் கொன்னுட்டேண்டா. வேலை விஷயமா பாம்பே போறதா அவகிட்டே கார்த்தால சொல்லிட்டு, பக்கத்தாத்துக்காரனை வீட்டைப் பாத்துக்கச் சொல்லிட்டுப் போனேன். ராத்திரி பின்பக்கமா உள்ள வந்து அவளைக் கொன்னுட்டு, வீட்டுல திருடன் வந்தமாதிரி அங்க இங்க உடைச்சுப் போட்டு வச்சுட்டு, பழையபடி பாம்பே ஹோட்டலுக்குப் போயிட்டேன். பக்கத்தாத்துக்காரன் சாட்சினால என் மேல சந்தேகமே வரலை. ரெண்டு வருஷம் போலீஸ் அப்படி இப்படினு நாற்காலியத் தேச்சுட்டு, 'மாப் கீஜியே'னு கேசை மூடிக் கைல குடுத்துட்டா. ஒரு வருஷம் தாக்குப் பிடிச்சுட்டு, ரிடையர்மென்ட் வாங்கிண்டு போறும்னு ஓடி வந்துட்டேன்"

ராமலிங்கம் சிற்பமா உக்காந்துண்டிருந்தார்.

"என்னால பொறுக்க முடியலடா ராமா. கல்யாணமே வேண்டாம்னு இருந்த எனக்கு, 'பொண்டாட்டினா புருஷனுக்கு அனுசரணையா நடந்துப்பா, பண்ணிக்கோடா'னுப் பண்ணி வச்சுட்டா. அவாளை சொல்லிக் குத்தமில்லை. இவ ராட்சசினா ராட்சசிடா. புருஷாளை இம்சைப் படுத்தணுங்கறதுக்கே ஜன்மம் எடுப்பா சில பொம்னாட்டிகள். இவ அந்த வம்சம். என்னைச் சித்திரவதை பண்ணனும்னே பிரம்மராட்சசி பொம்பளை அவதாரம் எடுத்திருக்காடா. அவளோட சித்ரவதை தாங்கமுடியாம கொன்னுட்டேனே தவிர, அன்னைலேந்து தூக்கமில்லேடா ராமா. கண்ணை மூடினா போதும், இவ வந்துடறா. கைலயும் கழுத்துலயும் ரத்தம் சொட்றது, நாக்க நாக்க நீட்டிண்டு பாம்பு மாதிரி எங்கிட்ட வரா. பயத்துல எழுந்துண்டுறுவேன். மூணு வருஷமா தூக்கமே கிடையாதுடா"னு அழ ஆரம்பிச்சார். கோனு அழுதார். கேவிக் கேவி அழுதார்.

அழுகை ஓஞ்சதும், "ராமா, நீ தூங்குடா, என்னோட கதையை கேட்டதே போறும்டா. நா இப்படியே இருந்துடறேன்"னார்.

ராமலிங்கம் தன்னோட சினேகிதர் தோளத் தட்டினார். "சதா, இதோ வந்துடறேன், இருடா"னு சொல்லிட்டு உள்ளே ரேழிக்குப் போனார். ஒரமா இருந்த மரபீரோவைத் திறந்து, பட்டுத்துணியால கட்டின ஒரு சின்ன வஸ்துவை எடுத்துண்டு வந்தார். சதாசிவத்துகிட்டே உக்காந்துண்டார். பட்டுத்துணியைப் பிரிச்சார். உள்ளே குங்குமச்சிமிழ் மாதிரி இருந்தக் குப்பியை எடுத்துத் திறந்தார்.

"என்னடா ராமா, இது?"னார் சதாசிவம்.

"ததாஸ்துக் களிம்பு"னார் ராமலிங்கம்.

"அப்படீன்னா?"

"நெனச்சாப்ல நடக்கும்னு ஆசீர்வாதம் பண்றக் களிம்பு"னார் ராமலிங்கம்.

ராமலிங்கத்துக்கு இந்தக் களிம்பு எப்படிக் கெடச்சது? சொல்றேன். சிட்டிகை பொடி இழுத்துக்கறேன்..

ஸ்ரீமான் ராமலிங்கம் முருகன் கோவிலுக்கு தினம் போய் திருப்புகழ் படிப்பார்னு சொன்னேனே? பார்யாள் போனப்புறம் அப்படித்தான் ஆத்துல ரொம்பக் கஷ்டம்னு ஒரு நாள் கோவிலுக்கு போனார். சந்தனக்காப்பு சாத்தியிருக்கா ஷண்முகனுக்கு. 'யாமிருக்க பயமேன்? ஒன்னோட கஷ்டத்தையெல்லாம் பஸ்பமாக்கிட மாட்டேனா?'னு சுப்ரமண்யர் அப்படியே வேலோட ஓடி வரமாதிரி இவருக்கு. மனசு விட்டு முருகன் கிட்டே கஷ்டத்தையெல்லாம் சொல்லி அழுதார். திருப்புகழ்லந்து பாட ஆரமிச்சார். பொருளங்கா உருண்டை மாதிரி இருந்தாலும், திருப்புகழ் தேன்ல மொதக்குற குல்கந்துல்லியோ? உருகி உருகிப் பாடறார் ராமலிங்கம்.
    "குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந்
    த்ருவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங்
    குறுகும் வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்த.."

பாடிண்டிருக்கச்சயே யாரோ அவரைத் தொட்டாப்ல இருக்கு. கண் தெறந்து பாத்தார். எதிர்ல ஒரு சித்தர் நிக்கறார். எப்படி எங்கேந்து வந்தார்னே தெரியலை. பாடிண்டிருந்த ராமலிங்கத்தை நெத்தில, இப்படி, தொட்டார். 'இவன் கண்ணெதிரே நீயிருக்க, இவண் கண்மூடிப் பாடலாமோ கந்தா?'னார், முருகன்ட்டே ராமலிங்கத்தைக் காமிச்சு.

ராமலிங்கமோ, "நான் எப்பவுமே பகவான் சன்னதில கண்ணை மூடிண்டு பிரார்த்தனை பண்றது வழக்கம். ஐயா, என்னைப் பாட விடுங்கோ, என் கஷ்டம் கந்தனுக்குத்தான் தெரியும்"னார்.

சித்தர் சிரிச்சார். சிரிப்பா அது? நூத்தம்பது மைல் வேகத்துல போறப்போ சடன் ப்ரேக் போட்டு நிறுத்தி ஹ்ருதயத்தையே வெளிலே கொண்டு வந்து கொட்ற சிரிப்பு. காத்துல இப்படிக் கையைக் காமிச்சு இழுத்தார். அவர் கைல ஏதோ ஒண்ணு பளபளனு மினுக்கறது. குங்குமச்சிமிழ் மாதிரி இருக்கு. ராமலிங்கத்துக்கிட்டே சிமிழைக் கொடுத்தார். "ராமலிங்கம், இது ததாஸ்துக் களிம்பு"னார்.

"எதுக்கு இது?"னார் ராமலிங்கம் பயந்துண்டே.

சித்தர் சாந்தஸ்வரூபியா, "எடுத்துன் நெற்றியில் நீறுபோல் இடும், படுத்துந் துன்பம் ஆறுபோல் விடும்"னு சொல்லிட்டு, புஸ்ஸுன்னு காணாமப் போய்ட்டார்.

"என் பேர் ஒங்களுக்கு எப்படித் தெரியும்?"னு கொஞ்சம் லேட்டா கேக்க நெனச்ச ராமலிங்கத்துக்கு ஒண்ணும் புரியல. அப்பத்தான் தன் மனசுல இருந்த சோகம்... காஷ்மல்யம்...டெஸ்பேர்ம்பாளே... அந்த வலியெல்லாம் வல்லிசாக் காணாமப் போனதைக் கவனிச்சார். அவருக்கு உடம்பெல்லாம் குறுகுறுன்னுத்து. சித்தர் நின்னுண்டிருந்த எடத்துல ஒரு பட்டுத்துணி கிடக்கு. எதுர்க்க சிவகுமாரன் எப்பவும் போலச் சிரிச்சுண்டே இருக்கார். பட்டுத்துணியை எடுத்து சிமிழை மூடிக் கட்டிண்டு வந்து ரேழி பீரோல வச்சார் ராமலிங்கம்.

ஆபத்காலத்துக்கு இருக்கட்டும்னு உள்ளே வச்சதை இப்போ ஆப்தனுக்கு உதவட்டுமேனு எடுத்துண்டு வந்து கொடுத்தார். களிம்பு கெடச்ச விவரமெல்லாம் சொன்னார்.

"இதையெல்லாம் என்னை நம்பச் சொல்றியா ராமா? இதைத் தடவினா என் மனக்கிலேசம் தீரும்னு சொல்றியா? நான் பண்ண பாவம், கர்மா, ப்ராரப்தம், என்னைச் சுத்தி வர்றதுடா"

"எனக்குத் தெரியாது சதா. நீ பாவம் பண்ணினியா இல்லையானு நான் ஜட்ஜ்மென்ட் குடுக்க முடியாது"னார் ராமலிங்கம். சிமிழை சதாசிவங்கிட்டே நீட்டி, "துளியூண்டு எடுத்துக்கோ. காயேன வாசா மனசேந்த்ரியைர்வா.. சகலம் ஸ்ரீசுப்ரமண்யாயேதி சமர்ப்பயாமினு ஒரு சரணாகதி மந்திரம் சொல்லி, என்ன வேணுமோ அதை நினைச்சு, நெத்தியில இட்டுக்கோ. என்ன கொறஞ்சுடப் போறது?"னார்.

சதாசிவமும் நெத்தியில இட்டுண்டுப் படுத்துண்டார்.

போது விடிஞ்சு பத்து பதினொரு மணிக்கு மேல ஆச்சு ரெண்டு பேரும் எழுந்துக்கச்சே. ராமலிங்கம் மொதல்ல எழுந்துண்டு பக்கத்துல இன்னும் நன்னா தூங்கிண்டிருந்த சதாசிவத்தை எழுப்பினார். "என்ன சதா, நல்ல தூக்கம் போலிருக்கே?"னார்.

சதாசிவம் ஒரு கொட்டாவி விட்டுண்டே, "இந்த மாதிரி தூங்கி வருஷக் கணக்குல ஆச்சு ராமா. சின்னப்போ கூட இப்படித் தூங்கலைடா!"னார் ஆச்சரியத்தோட.

"பொண்டாட்டி வந்து பயமுறுத்தலியே?"னு கேட்டார் ராமலிங்கம்.

"பொண்டாட்டியா பயமுறுத்தலா, என்னடா சொல்றே நீ?"னார் சதாசிவம்.

"அதாண்டா, ராத்திரி சொன்னியே, மூணு வருஷத்துக்கு முன்னால நடந்ததெல்லாம்... நீ கொலை பண்ண பொண்டாட்டி பாம்பு மாதிரி ரத்தம் கக்கிண்டு வந்து சொப்பனத்துல பயமுறுத்தறான்னியே?"

"என்னடா ராமா உளர்றே? திடீர்னு தண்ணி போட்டதனால நோக்கு புத்தி தடுமாறிப் போச்சா? யாரு பொண்டாட்டி, என்ன சொல்றே நீ? நான் கல்யாணமே பண்ணிக்கலையேடா?"னார் சதாசிவம்.

சாதாரணமா இந்த மாதிரி சமயத்துல எல்லாருக்கும் என்ன தோணும்? சரி, ஏதோ சுபமா முடிஞ்சுது, இனிமே நடக்க வேண்டியதைப் பாப்போம்னு சந்தோஷமா இருக்கத்தோணும். இல்லேன்னா, ஏதோ மதுமயக்கதுல நடந்ததுனு விட்டுறத்தோணும். நமக்கு எல்லாம் தெரியும்னு அகங்காரத்துல கண்மண் தெரியாம இருக்கோங்கறது எப்படியெல்லாம் வெளில வர்றது பாருங்கோ. இப்பல்லாம் வெளையாட்டுன்னா ஐபிஎல்னு ஏதோ ஜிங்கு ஜிங்குனு ஆடறோம் கைதட்டறோம் குதிக்கறோம். நம்மளையே யாராவது ஐபிஎல்னு ஸ்தாபிச்சு ஆடினா? இங்க அதான் நடந்துது. இக பர த்ரிலோக மாயை விளையாடறான்னா நாம எல்லாரும் வெறும் சொப்பு தானே? ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரேனு பாடலியோ மகாபுலவர்? அதனால ராமலிங்கத்துக்கு அப்படியெல்லாம் எல்லாருக்கும் தோண்றாப்ல தோணலை. ஸ்ரீமான் ராமலிங்கத்துக்கு வேற மாதிரித் தோணித்து.

சதாசிவத்தைக் கையோட இழுத்தார் ராமலிங்கம். "டேய், வாடா".

"எங்கடா?"

"மொதல்ல அம்பீஸ்ல ஒரு காபி. அப்புறம் உன்னோட ஒரு பெரிய விஷயம் பேசணும்"னு இழுத்துண்டு போனார். கொள்ளிடத்துக் காவேரி மாதிரி அவர் மனசுல ஐடியால்லாம் சுழிச்சுண்டு குதிச்சுண்டு பிச்சுண்டு ஓடித்து.

நேரம் ஆயிடுத்தே. மிச்சக் கதைய நாளைக்குச் சொல்றேனே? ►►

18 கருத்துகள்:

  1. பெயரில்லாஜூலை 23, 2011

    கலக்குறீங்க.. தொடர்ந்து கலக்குங்கள்…

    பதிலளிநீக்கு
  2. குமுதத்தில் எழுதிய சுந்தரபாகவதரின் (பாக்கியம் ராமசாமி) கதைகளை, உங்கள் கதை ஞாபகப்படுத்தியது.

    பதிலளிநீக்கு
  3. \\எதுர்க்க சிவகுமாரன் எப்பவும் போல சிரிச்சுண்டே இருக்கார் //

    -- இதை எழுதும் போது என்னை நெனைச்சுண்டேளா இல்லையா ?

    பதிலளிநீக்கு
  4. வருக Nanum enn Kadavulum..., Reverie, தமிழ் உதயம், சிவகுமாரன்,...

    பதிலளிநீக்கு
  5. கவனிச்சீங்களா சிவகுமாரன்? எழுதி நினைக்கலிங்க; நினைச்சு எழுதினது :)

    பதிலளிநீக்கு
  6. என்னது? வளருமா? கதை இப்படியே முடிந்த மாதிரிதானே இருக்கு? (ஹா ஹா பழிக்குப் பழி ! நீங்க எங்கள் ப்ளாக் 'எப்படியாவது தப்பிக்க வேண்டும்' முதல் பகுதியில் இட்டிருந்த பின்னூட்டம் உங்களைத் திருப்பித் தாக்குது!) வித்தியாசமான கதை நடைக்கு நன்றி சுந்தரபாகவதர்வாள்!!

    பதிலளிநீக்கு
  7. துரையண்ணா! திருச்சில டேரா போட்டு களிம்பைத் தடவரேள். ஸ்வாரஸ்யமா இருக்குண்ணா!

    ஆத்துக்காரிய கொல்றதுக்குல்லாம் ஒரு அம்சம் வேணும்! சட்டுபுட்டுனில்லே கொன்னுட்டேள்.?!.

    அடுத்து என்ன குண்டைப் போடப் போறேளோன்னு காத்துண்டிருக்கேன்.

    (என்னா? நீங்க நண்டையெல்லாம் பட்சணம் பண்ணுவேளாமே?நன்னாருக்கு.. சித்தே தள்ளி உக்காருங்கோ! )

    பதிலளிநீக்கு
  8. நடை நன்னா வந்துருக்கு... தண்ணியே போட்டாலும், அளவுக்கு உத்தரினியை விடாமல் பிடித்தது நல்ல நகைச்சுவை..தெளிஞ்சவுடன் மறந்தது அடுத்த நாள் அடித்தவுடன் ஞாபகம் வந்து விடும்...

    பதிலளிநீக்கு
  9. சீட்டின் நுனிக்கு வரவைத்தது ன்னு எழுதுவாளே..அது மாதிரி உண்மையிலேயே சீட்டின் நுனிக்கு வரவைத்தது ..ஒரே குறை அடுத்த அத்தியாயத்தின் தொடக்கத்தையும் இதில் எதனால் சேர்த்தீர்கள்>எனக்கு கல்யாணமே ஆகலியேன்னு ஷாக் கொடுத்த உடனே தொடரும் போட்டிருக்க வேணாமோ..

    பதிலளிநீக்கு
  10. அப்பாஜி....தமிழ்தான்.ஆனாலும் புரிய நேரமெடுக்குது.ஆனலும் கனவில த்ரிஷாவும் ,தமன்னாவும் வாறாங்கன்னு புரிஞ்சுது.தொடருங்க !

    பதிலளிநீக்கு
  11. களிம்பு சுத்தமா காலியாயிடுத்தா இன்னும் பாக்கியிருக்கான்னு சொல்லவே இல்லையேன்னா... மிச்சம் இருந்தாக்க மறுபடிக் கொஞ்சம் அவர் நெத்தியில இட்டு விருப்பமென்னன்னு சொல்லுங்கோ...ததாஸ்த்து ஆயிடட்டும்...அதை விட்டுட்டு தனியா ஏன் அழைச்சிண்டு கிளம்பறார்...எதாவது பிசினெஸ்ஐடியா வா?அதுவும் இவரே தனியா வேற இருக்கச்சே...

    பதிலளிநீக்கு
  12. நல்ல பகிர்வு, கதை சொன்ன விதம் அருமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
  13. மோகன்ஜி

    அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்.

    துரையின், இன்னொரு கதையில் பெண்டாட்டிகள் எல்லாம் சேர்ந்து நண்பர்களான கணவன்களை எல்லாம் போட்டு தள்ள ப்ளேன் போடுவார்கள். அந்த கதையும் அவர் வெளியிடுவார். காத்திருங்கள்.

    - சாய்

    நான் இந்த கதையை பூத்துரிகையில் படித்தி இருக்கின்றேன். கதையின் கடைசி கொஞ்சம் சர்ப்ரைஸ் என்று நினைவு ! என் ஞாபக சக்தியில் வெடியை வைக்க !

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. இந்த "ததாஸ்து" சமாசாரத்ல எல்லாம் எனக்கு கொஞ்சம் பயம். "Monkey Bone" ஆ -- சரியா ஞாபகம் இல்ல. ஒரு short story படிச்சேன். நாம நினைக்கறது- நாம life plan ஓட merge ஆகுமா? நாம decision நம்ம life course அ favourable ஆ திருப்புமா? "Monkey Bone" ல "நிறையா பணம் வேணும்"-னு ஆச படரவனுக்கு "Monkey Bone" அவன் பையன் போனப்றம் வரும் insurance பணத்த கொடுக்கும்... Isn't that scary? "அவன் போகணும்-ங்கறது விதி"-ங்கற dialogue கூட இங்க fit ஆகாது!!
    But this story is damn interesting... Especially, இந்த கத set -up திருச்சில இருக்கரதுனாலேயே எனக்கு கொஞ்சம் கூடுதலா பிடிச்சிருக்கு...
    "களிம்பு"-ங்கற வார்த்த இப்போ தான் life லேயே first time கேக்கறேன்!! Thanks! Interesting word ... :) அம்மா கிட்ட அர்த்தம் கேட்டு தெரிஞ்சுண்டேன்...

    Awaiting to read further, soon...

    PS: I had commented earlier, but didn't see that my dad had logged in-in my m/c. So had to delete the comment I had made under his name...

    பதிலளிநீக்கு
  16. வருக kggouthaman, மோகன்ஜி, பத்மநாபன், bogan, ஹேமா, ஸ்ரீராம், ! ஸ்பார்க் கார்த்தி @, சாய், Matangi Mawley, ...

    kggouthaman... 'நான் கல்யாணமே பண்ணிக்கலையே'ன்று சதாசிவம் சொன்னதோட கதையை முடிக்க எனக்கு ரொம்ப ஆசை உண்மையில். ஆனா களிம்புனு தொடங்கினப்புறம் கொஞ்சம் dorian gray கதை பாணில சொல்ல ஆசை வந்து தொடரும் போட்டேன்.. கதை முடிஞ்சாப்புல இருந்தா களிம்பு தரேன், தடவிட்டு மிச்சத்தைப் படிங்க :)

    மோகன்ஜி... அடிக்கடி வாங்க.

    bogan... நன்றி. இந்தக் கதைத் திருப்பங்கள் உப்புமா style.. அதான்!

    ஹேமா... இது தமிழ் என்று ஏற்றுக் கொண்டது உங்கள் பெருந்தன்மை. அடுத்த பதிவில் மணிப்பிரவாளத்தை சற்று குறைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.

    ஸ்ரீராம்... உங்க யூகம் பிரமிப்பா இருக்கு. சட்னு கதைப் போக்கைச் சொல்றீங்களே?

    சாய்... பெண்டாட்டியைக் கொல்ல எதுக்குங்க கொடுப்பினை? நம்மளைக் கொல்லாமல் இருந்தாலே போதுமே? பூத்தூரிகையில் வந்து அரசன் வெளியிடுவதாயிருந்த அசுவத்தாமன் கதைகள் புத்தகத்திலும் வருவதாயிருந்த கதை. எதையோ தேடும் போது நான் எழுதிய சில அசுவத்தாமன் கதைகளின் பகுதிகள் கிடைத்தன. நான் மட்டும் படிச்சுக் கஷ்டப்பட வேண்டுமா என்ன? எல்லாவற்றையும் கொஞ்சம் மாற்றி எழுதி முடித்து இங்கே வெளியிட எண்ணம். caution.

    (creepy.. முதல் பின்னூட்டம் என்னோடது.. ஆனாக் காணோம்)

    Matangi Mawley... more or less same premiseனு சொல்வேன். watch what you wish for, innocent temptations மாதிரி midas காலத்துக் கரு. களிம்புங்கற வார்த்தையை இப்போ தான் கேக்கறீங்களா? ain't generation gap fascinating?

    பதிலளிநீக்கு
  17. நல்ல கதை வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் இதுமாதிரிக்
    கதைகளை எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு