2012/06/06

நாட்பட



விழித்ததும் அவள் உடனிருப்பதை உணர்ந்தேன்.
எழ முயன்ற என்னை அழுந்தப் பிடித்தாள்.
"ஆ! வலிக்கிறது" என்றேன்.
உதறி எழுந்தேன்.
என்னுடன் கழிவறைக்குள் வந்தாள்.
"ஏய்.. வெளியே இரு" என்று அதட்டியபோது சிரித்தாற் போல் தோன்றியது.
காபி அருந்துகையில் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். முதுகை இறுக்கினாள்.
"என்ன இது? விலகு. நேரமாகிறது. போக வேண்டும்" என்றேன்.
அவள் இணங்கவில்லை.
"நானும் வருவேன்" என்றாள்.
பிறகு ஹெல்த்ப்லெக்சில் ஓடத் தொடங்கியதும் திடீரென்று காணாமல் போனாள்.
ஒழிந்தாள் என்று எண்ணினேன்.
இரண்டாவது மைலில் அவளைக் கவனித்தேன்.
உருவம் சுருங்கிக் கண்ணுக்கு எளிதில் புலப்படாமல், என் காலருகே ஓடிக் கொண்டிருந்தாள்.
"எந்த உருவிலும் வருவேன்" என்றுச் சிரித்துச் சட்டென்று என் காலைக் கடித்தாள்.
துடித்தேன்.
கிக்பாக்சிங் பயிற்சியின் போது விரல்களைக் கடித்தாள்.
தினப்பழக்க நீச்சலின் போது, கூடவே வந்து என் கால்களை நீருள் இழுத்தாள்.
வீடு திரும்புகையில் தொல்லை பொறுக்காமல், "யார் நீ? ஏன் என்னைத் தொடர்கிறாய்?" என்றேன்.
"எப்போதும் உன்னைத் தொடர்ந்தே வருகிறேன், நீ தான் என்னைக் கவனிக்கவில்லை" என்றாள்.
"ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்றேன்.
"அப்போது தானே கவனிக்கிறாய்?" என்றாள்.