2012/03/03

நானும் கடவுளும்




1            2



    பின்னூட்டங்களுக்கு நன்றி. சென்ற பதிவில் judgmentalஆகப் பதித்தச் சொற்களை நீக்கிவிட்டேன். முடிந்தவரை இனி ஆங்கிலத்திலேயே, i mean, தமிழிலேயே எழுதுகிறேன். but seriously, அறிவுரைக்கு நன்றி :). இந்தப் பதிவை மதித்து மின்னஞ்சல் அனுப்பிய இருவருக்கும் மீண்டும் நன்றி. நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இமெயில்களைப் பொதுப் பார்வைக்கு வைக்கிறேன். பிறகு தொடர்வோம்.
**

    நாத்திகம் என்றால் 'கடவுளுக்கு எதிரி' என்ற பார்வையிலேயே ஆத்திகர்கள் பேசுகிறார்கள். ஏனென்று தெரியவில்லை. நாத்திகர்களை எதிரிகளாகவேப் பார்த்துப் பழகிவிட்டதால் இருக்கலாம். எனினும், ஆத்திகத்தின் வன்முறை நாத்திகத்தில் இல்லை என்று சொன்னால் பலருக்கும் வியப்பாக இருக்கிறது. மதத்தின் பெயரால் கொல்லப்பட்டவர்கள், நோயால் இறந்தவர்களை விட அதிகம் என்றால் நம்ப மறுக்கிறார்கள். நம்மூர் செருப்படி நாத்திகத்தை நேரில் கண்டவர்களுக்கு இது புரிவது இன்னும் சிரமம். எனினும், நம்மூரில் செருப்படி நாத்திகத்தைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டோம் என்றே நினைக்கிறேன். நம்புகிறேன்.

நாத்திகர்கள் கடவுளுக்கு எதிரியல்ல. கடவுள் தைரியமாக நாத்திகர்கள் நடுவில் வரலாம். நாத்திகர்களுக்குப் புரிந்தது, ஆத்திகர்களுக்குப் புரியாது போனது தற்காலிக வருத்தம். இது தற்காலிகம் என்றே நம்புகிறேன். என்றாலும் சிறு சங்கடம். நம் ஆயுட்காலம் தாண்டியத் தற்காலிகம் என்பதே.

இன்னும் இருநூறு வருடங்களில் தினசரி வாழ்வில் கடவுளுக்குப் பங்கிருக்காது. மதங்கள் பெரும்பாலும் ஒழிந்திருக்கும். இது என்னுடைய கணிப்பு. இருநூறு வருடம் கழித்து இது உண்மையாகி, என்னை நாத்திக நாஸ்ட்ரேடமஸ் என்றால் நான் பொறுப்பல்ல. இருந்தாலும் ஆசை விடவில்லை :).

பெயருக்கு ஆசைப்பட்டு ஜோசியம் போல் ஏதோ சொல்லிவிட்டுப் போக அறிவு இடம் தர மறுக்கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாக முடியாதது இருநூறு வருடங்களில் சாத்தியமா? சிரமம் தான். எனினும், சென்ற நூறு வருடங்களின் வளர்ச்சி பெரும் நம்பிக்கையூட்டுகிறது. இது தான் catalyst. சென்ற நூறு வருடங்களின் வளர்ச்சி தான் lever. ஆத்திகத்தைப் புரட்டி அண்டத்தில் எரியக்கூடிய lever. கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.

இருநூறு வருடங்களில் கடவுளும் மதமும் காணாமல் போக வேண்டுமென்றால் நிறைய உழைக்க வேண்டும். நாத்திகம் பரவப் பெருமுயற்சி எடுக்க வேண்டும். தெரிந்த உண்மைகளைத் தெளிவாகச் சொல்லி, தீர்மானங்களைக் கேட்பவர் பொறுப்பில் விடும் பக்குவம் வளரச் செய்ய வேண்டும்.

மலைப்பாக இருக்கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாகக் 'கண்ணைக் குத்தி' பயமுறுத்தியது மூச்சுக்காற்றோடு கலந்து விட்டது. நாத்திகத்தின் அடிப்படையே பலவீனமானது. 'கண்ணைக் குத்தாது' என்று சொன்னால் யார் மதிக்கப் போகிறார்கள்? 'அருளினால் எதுவும் வராது, உழைக்க வேண்டும்' என்றால் யார் ஏற்கப் போகிறார்கள்? 'கண்மூட வேண்டாம்' என்றால் முகத்திலேயே சிரிக்கிறார்கள். மீண்டும்.. மலைப்பாக இருக்கிறது. இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும்.
**

    "சூரியனை உண்டாக்கியது ஜீசஸ் தானே டேடி?" என்றான் மகன்.

"இல்லை" என்றேன்.

"அப்ப இந்துக் கடவுள் உருவாக்கிச்சா?"

"இல்லை"

"மொகாமெட்?"

"சூரியனை யாரும் உருவாக்கவில்லை"

"டேடி.. உனக்கு எதுவும் தெரியலை. ஸ்கூல்ல நீ 'F' தான் வாங்கியிருப்பே"

"சரி. சூரியனைப் பத்தி என்ன சொன்னாங்க டீச்சர்?"

"உலகத்துல எதுவும் நடக்கணும்னா சூரியனோட சக்தி வேணும்னு சொன்னாங்க"

"சூரியன்ல என்ன இருக்கு தெரியுமா?"

"முழுக்க முழுக்க நெருப்பு. சரியா?"

"ம்ம். சூரியன்ல இருப்பது முழுக்க முழுக்க gas"

விழுந்து விழுந்துச் சிரித்தான். "குசுவா?"

"அதுவும் வாயுதான். சூரியன்ல இருப்பது ஹைட்ரஜன்.."

"அப்படின்னா?"

"ஒரு gas. இப்போதைக்கு அது போதும். இங்கே வா" என்று கணினியில் ஒரு படத்தை வரையத் தொடங்கினேன். அவன் இன்னும் விசித்திரமான ஓசைகளுடன் சிரித்துக் கொண்டிருந்தான்.

மேசை விளக்கை ஒரு நிமிடத்துக்கு மேல் எரியவிட்டு அணைத்தேன். "இந்தா, இதைத் தொடு" என்று பல்பைச் சுட்டினேன்.

"என்னை என்னா லூசுனு நினைச்சியா? அது சுடும். நீயே தொடு" என்றான்.

ஜூரத்துக்கு உபயோகிக்கும் டெம்பரசர் பட்டி ஒன்றைப் பிரித்து பல்பில் ஒட்டினேன். விர்ரென்று நூற்றுப் பதினைந்து பேரந்ஹைட்டைத் தொட்டுச் சுர்ரென்று இளகிச் செத்தது பட்டி. "இதோ பார், நூத்துப் பதினஞ்சு டிகிரி. சூரியனைத் தொட்டா இது போல நூறு மடங்கு சுடும். சூரியன்ல இருக்குற gas எரியும் போது சக்தி கிடைக்குது, அதுவே ஒளியாவும் சூடாவும் பூமிக்கு வருது". gas என்றதும் மறுபடி சிரிக்கத் தொடங்கியவனை நிறுத்தச் சில நிமிடங்களாயின.

"அப்ப சூரியனை யாரும் உண்டாக்கினா அவங்க கையெல்லாம் சுட்டிருக்குமே?" என்றான்.

"ஒருவேளை ultra mega super cool gloves போட்டுக்கிட்டு உண்டாக்கினாங்களோ என்னவோ?" என்றபடி கணினிப் படத்தைச் சுட்டினேன். "அண்டத்துல புழுதியும் வாயுவும் வேகமா கலந்து சுத்துறப்போ அது நட்சத்திரமா மாறிடும். நட்சத்திரம் எரியத் தொடங்குறப்போ சக்தியை வெளிவிடும். பிலியன் வருஷக்கணக்கா எரியும். சூரியனும் இதுபோல உருவான ஒரு நட்சத்திரம். எத்தனையோ பிலியன் வருஷம் எரிஞ்சு எல்லா வாயுவும் அடங்கிடும். அப்போ இந்த சூரியன் நமக்கு ஒளி தராது"

"அப்ப உலகம் அழிஞ்சிடுமா? நாமெல்லாம் செத்துருவோமா?"

"கடலுக்கடியில ரொம்ப ஆழத்துல இருக்குற சில புழுக்களும் கிருமிகளும் தவிர மிச்ச எல்லாம் செத்துரும்"

"புழு பூச்சி உயிரோட இருக்குமா? அப்ப கடவுள் நம்மை சாகடிச்சுடுவாரா? this is not fair. grandma said god loves us" என்றான்.

"இந்தச் சூரியன் அழிய இன்னும் அஞ்சு பிலியன் வருசமாவது ஆகும். இதோ பார். நடுவுல இருக்கோம். இன்னும் இவ்வளவு தூரம் எரிஞ்சு வரணும். அதனால கவலைப்படாதே"

"அப்ப அந்த டயத்துல எல்லா மனுசங்களும் செத்துடுவாங்களா? பூமிக்கு என்னாகும்? this is not fair"

"யாருக்குத் தெரியும்? சூரியன் அழியுறதுக்கு முன்னால நாம பூமியைத் தூக்கிக்கிட்டு வேறே ஏதாவது சூரியனைத் தேடிப் போகலாம்" என்றேன்.

"இப்படி அழிக்கணும்னா எதுக்காக god இதை உண்டாக்கணும்? makes no sense". அவன் இன்னும் 'not fair'ல் இருந்தான்.
**

    ளமையிலேயே கற்பிக்க வேண்டும். ஒரு புறம் 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி' சொல்லிக் கொடுப்பது போல இன்னொரு புறம் தெரிந்த உண்மைகளையும் சொல்லித் தர வேண்டும். "பூமியைக் கடலுக்குள் கொண்டு ஒளிப்பதா?. கடலே பூமிக்குள் தானே இருக்கிறது?" போன்ற கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்ல வேண்டும். வீட்டிலும் வெளியிலும் எண்ணச் சுதந்திரம் வேண்டும். 'வளர்ந்த பிறகு தானே புரிந்து கொள்ளட்டும், இப்போதைக்கு என் பாட்டன் அப்பன் சொன்னது போல் கும்பிட்டுக் கிடக்கட்டும்' என்ற மனப்பாங்கு மாற வேண்டும்.

நமது கல்வித்திட்டம் ஆத்திகக் கல்வித்திட்டம். நாத்திகத்துக்கு இடமில்லை. அதுவும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் சுத்தமாக ஆத்திகச் சுண்ணாம்பு பூசப்பட்டிருக்கிறது. என்னுடைய பள்ளி நாட்களில் தான் அப்படி என்றால், இன்றைக்கும் அதே நிலைதான் போலிருக்கிறது.

2004-06 வாக்கில் அமெரிக்கக் கல்வி முறையைச் செப்பனிடுகிறேன் பேர்வழி என்று intelligent design ஆசாமிகள் கூத்தடித்தார்கள். நல்ல வேளை, Dover வழக்குகளில் தடைபட்டு நின்றுபோனது.

கொஞ்சம் பின்னோக்கிப் போனோமானால் நாத்திகம் இயல்பாகவே கல்வியாக வழங்கப்பட்டிருப்பதை அறியலாம். நான்காம் நூற்றாண்டு வாக்கில் 'சார்வகம்' எனப்படும் கடவுள்/மதம் விலக்கியத் தத்துவக்கல்வி நம் நாட்டில் இருந்தது. மெள்ள அழிந்துவிட்டதாகத் தெரிகிறது. அதற்கும் வெகு காலம் முன்னால் கடவுள், மதம், மற்றும் மூட நம்பிக்கைகளின் எதிர்வாதமாக நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களையும் புராணங்களையும் பராமரிக்கும் அளவுக்கு இவற்றைப் பராமரிக்கவில்லை.

ராமாயணக் கதையில் ஜாபாலி என்று ஒரு பாத்திரம். வால்மீகியின் அயோத்தியா காண்டத்தில், ஜாபாலி என்ற ஒரு சாதாரண பிராமணன் உலக நியதியின் அடிப்படையில் ராமன் காட்டுக்குப் போவது கண்மூடித்தனம் என்று வாதாடுகிறான். ஜாபாலியின் வாதங்களுக்கு ராமனின் பதிலில் தீவிரக் கோபம் மட்டுமே காண முடிவது, தன்னிச்சையா தெரியவில்லை. ஜாபாலியின் கருத்துக்களைப் பாடமாக ஏன் வைக்கவில்லை என்று கேட்கத் தோன்றுகிறது. பாடமோ இல்லையோ படிக்கச் சுவாரசியமானது. சிந்தனையைத் தூண்டுவது. அறத்தின் இரு பக்கமும் அறிய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ராம-ஜாபாலி உரையாடலுக்கு மீண்டும் வருவோம்.

நேர்மையானக் கல்வியை வழங்க வேண்டியது பெற்றோர், ஆசிரியர் கடமை. ஒருதலைக் கல்வியில் முழுமையான அறிவோ பக்குவமோ வளராது என்பது நமக்கே புரியவில்லை. அரசாங்கத்துக்கு எங்கே புரியப்போகிறது? இளமையிலேயே படித்தால்.. பிடித்தால்.. இருநூறு நூறாகலாம்.
**

    மெரிக்க நாத்திகர்களுக்கான ஒரு இயக்கம் குற்றுயிராய் இயங்கி வருகிறது. 'இயக்கத்தினால் என்ன பயன்?' என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்பட்டு, பாதி நேரம் இயக்கத்தின் வளர்ச்சி தடைபட்டுப் போகிறது. இருப்பினும் தொலைநோக்கு கொண்ட ஒரு சிலரால் குற்றுயிரானாலும் பிழைத்துக் கிடக்கிறது. வரும் செப்டெம்பர்-அக்டோபர் மாதங்களில் 'கடவுளிலா அமெரிக்கா' எனும் யாத்திரை நடத்தத் திட்டமிருக்கிறது. யாத்திரையில் கலந்து கொள்ளவும் பேசவும் tentative சம்மதம் தெரிவித்திருக்கிறேன். உதைபடப் போகிறேன் என்பது நிச்சயம். இங்குள்ள மதவெறியர்கள் சுட்ட பிறகு தான் கேள்வியே கேட்கிறார்கள்.

நாத்திகர்களுக்கான சங்கங்கள் நிச்சயம் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருக்கும் என்றே நினைக்கிறேன். அமெரிக்க நாத்திக இயக்கம் பிள்ளைகளுக்கு scholarship வழங்குகிறது. அதனால் பள்ளிப் பிள்ளைகளுக்கு இந்த இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ளவாவது முடிகிறது. இது போல் இந்தியாவில் ஏதாவது செய்யலாமா என்ற எண்ணம் வேர் விட்டிருக்கிறது. ஐடியா தேறுமா?
**

காவடி எடு, தேங்காய் உடை, மலைக்குப் போ என்பவை சாதாரணச் செய்திகளாகப் பாமரர்களைச் சென்றடைவது போல், 'கண்மூடித்தனத்தை விடு' என்பதும் சாதாரணச் செய்தியாகப் பாமரர்களைத் தொடும் வழியைத் தேட வேண்டும். 'கடவுளைக் கும்பிடு' 'மதத்தை மதி' என்பதன் எளிமை, 'கடவுளைக் கும்பிடாதே' என்பதில் இல்லை. இங்கே தான் நாத்திகம் தடுக்கி விழுந்ததாகத் தோன்றுகிறது. நாத்திகத்தின் செய்தி 'கடவுளைக் கும்பிடாதே' என்பதல்ல. இதைச் செய்தியாகக் கொண்டு வந்த செருப்படி நாத்திகம் அடையாளத்தோடு இருக்கும் வரை, சிந்தனை சார்ந்த நாத்திகம் வளர்வது கடினம் என்று தோன்றுகிறது.
**

எனக்கு வந்த முதல் கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சற்றும் எதிர்பாராத மின்னஞ்சல். போக்கற்ற என் சிந்தனைகளைக் கொட்டுவோம் என்று பதிவெழுதிய எனக்கு இதைப் படித்ததும் என்ன பதில் சொல்வது என்று உடனே தோன்றவில்லை.

சில வருடங்களாக என் மனதை வருத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை எழுத வேண்டும் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.

என் அப்பா எப்படிபட்டவர் என்று சுருக்கமாக சொல்லிவிட்டு என் மனதில் வருத்தத்தை உண்டாக்கிய விஷயத்தை கேட்க வேண்டும். தன்னுடைய பத்தாவது வயதிலேயே தாய் தந்தை இருவரையும் இழந்த என் அப்பாவுக்கு தம்பி தங்கை உண்டு. என் தந்தைக்கு எந்த விதமான பரம்பரை சொத்தும் இல்லாததால், தன் பத்து வயதில் பொருட்காட்சியில் டிக்கெட் கொடுக்கும் வேலைக்கு சென்றார். பின் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பத்தாவது கூட படிக்காததால் அந்த வேலையே தக்க வைத்துக் கொள்ளவே மாடாக உழைக்க வேண்டி இருந்தது. கூடவே தங்கை, தம்பிகளை வளர்க்க வேண்டிய பொறுப்பும். இந்த நிலையிலும், அந்த வயதிலேயே தன் தாய் தந்தைக்கு மிகவும் ஸ்ரத்தையாக தெவசம் செய்ய துவங்கி விட்டார். கிட்டத்தட்ட அறுபது தெவசங்கள் செய்திருப்பார். அத்தனையும் ஹோமம் வளர்த்தது தான். எந்த வித கெட்ட பழக்கமும் கிடையாது. குறிப்பாக பெண்களை மிகவும் மதிக்கும் பண்புடையவர். எங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் என்றால் மிகவும் உசத்தி. அப்பா வாயிலிருந்து தப்பித்தவறி கூட ஒரு கெட்ட வார்த்தை வந்ததில்லை. தன் வாழ்நாளில் ஒரு சினிமா, வீட்டு தொலைகாட்சியில் கூட, பார்த்ததில்லை. அம்பாள் பாலதிருபுரசுந்தரி மேல் அபார பக்தி, நம்பிக்கை. நாள்தோறும் காலையில் லலிதா சஹஸ்ரநாமம், மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்ல தவறியதே இல்லை. இந்த அம்பாளின் படம் எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து இன்று வரை எங்கள் வீட்டில் இருக்கிறது. இதற்கு frame மாற்ற வேண்டும் என்றால் தானே எடுத்து சென்று அந்த கடையில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கையோடு வாங்கி வந்து விடுவார். அப்படி ஒரு பக்தி.

என் தந்தை அடுத்தவர் பணத்தில் இருந்து ஒரு நயா பைசாவை கூட விரும்பாதவர். நாங்கள் 20 வருடங்களாக குடியிருந்த வீட்டை காலி செய்ய சொல்லி மூன்று மாத தவணை கொடுத்தனர் வீட்டின் சொந்தக்காரர்கள். அக்கம் பக்கம் இருந்தவர்களும் உறவினர்ககளும் என் தந்தையிடம் இருபது வருடம் அந்த வீட்டிலேயே குடியிருந்ததால், வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒரு சிறிய தொகை கேட்க சொல்லி வற்புத்தினர். என் அப்பா எதையும் கேட்காமல் அவர்கள் கொடுத்த மூன்று மாத கால தவணைக்கும் முன்பாகவே ஒரே மாதத்தில் வீட்டை காலி செய்து கொடுத்தார்.

இப்படிப்பட்ட என் அப்பா தன் வாழ்நாள் இறுதி வரை பணக் கஷ்டம் பட்டிருக்கிறார். எந்த ஒரு சுகபோகத்தையும் அனுபவித்ததில்லை. மரணமாவது அவருக்கு உதவியதா! அதுவும் இல்லை படுத்த படுக்கையாக ஆறு மாதம். சோடியம் குறைவினால் வாய் திறக்க முடியாமல், அது சரியாவதற்குள் அப்பாவுக்கு தலை சுற்றல் இருந்ததால் அதனால் சில முறை விழுந்திருந்ததால் உண்டான கோளாறுகள் கடைசி நேரத்தில் தலை தூக்கி, அவரை மிகவும் மோசமான நிலைமைக்கு கொண்டு சென்று விட்டது.

நான் போன் செய்து பேசும்போதெல்லாம், "என்னால வலி தாங்கவே முடியவில்லை கண்ணு. அம்மா, இது எப்பேற்பட்ட வலின்னு சொல்ல வார்த்தையே இல்லம்மா, தாங்கவே முடியலைமா" என்று அழக்கூட தெம்பில்லாமல் தன் ஈன குரலில் சொன்னதை இப்போது நினைத்தாலும் நான் கதறி அழுது விடுவேன். இறக்கும் தருவாயில் இருந்த அந்த கடைசி நாட்களில் கூட இவருக்கு ஏன் எந்த தெய்வமும் உதவவில்லை? அவர் தன் உலகமாகவே நினைத்த அவர் அம்பாள் கூட அவருக்கு ஏன் அந்த கடைசி நேரத்தில் உதவவில்லை? சரி கடவுள் வேண்டாம், பித்ருக்கள் தெய்வம் என்பார்களே அவர்களாவது உதவி இருக்கலாமே? பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தி, மாதக் கடைசியில் துண்டு விழும்போது ஓவர் டைம் பார்த்து, பஸ்சில் செல்லக் காசு குறைவாக இருந்த படியால் இரண்டு ஸ்டாப்பிங் முன்னமே இறங்கி, வீட்டிற்கு நடந்தே வரவேண்டிய நிலை இருந்தபோதும் ஒரு தெவசம் கூட விடாமல் தாய் தந்தையர்க்கு செய்ததற்கு என் தந்தை என்ன பலனை கண்டார்? தாய் தந்தையர்கள் கையால் இவர் சாப்பிட்டதை விட, இன்னும் சொல்லபோனால், சாப்பிடவேயில்லை, இவர் அவர்களுக்கு பிண்டம் போட்டதுதான் அதிகம்.

நாங்கள் குடும்பத்தோடு சினிமா, பீச் என்று எங்கும் சென்றதில்லை. கோவில் தான் சென்றிருக்கிறோம். பக்தி என்பது என் ரத்தத்திலும் ஊறிப் போன விஷயம்தான். அப்படிப்பட்ட நான் என்னுடைய அப்பா அவ்வளவு அவஸ்த்தை அனுபவித்து இறந்ததை பார்த்தபின் மிகவும் வெறுத்து விட்டேன். நடப்பதுதான் நடக்கும் என்றால் கடவுளை நம்புவதும், பித்துர்க்களுக்கு செய்வதும் எதற்காக? சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இன்றும் நானும் என் சகோதரனும் கஷ்டப்படுவது எதனால்?

சொந்த அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகள் வேண்டிய நேரத்தில் உதவி செய்ய தவறினால் உடனே விரோதம் செய்து கொண்டு விலகி விடும்போது, கண்ணுக்கு தெரியாத கடவுள், அவரை வேண்டினால் நிச்சயம் நிறைவேறும் என்று எண்ணி, செலவு பண்ணி பூஜைகள் செய்து, விரதம் இருந்து, கடைசியில் நடக்கவில்லை என்றால், அப்பொழுது கூட தெய்வத்தை நிந்திக்காமல், தான் செய்த பூஜையில் தவறு, தன் பூர்வ ஜென்ம பாவம் என்றெல்லாம் நினைத்து மீண்டும் அந்த தெய்வத்தின் காலிலேயே விழுவது எதனால்? எதற்காக கண்ணுக்கு தெரியாத, புலப்படாத அந்த தெய்வத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டும் என்றே தோன்றுகிறது.

பிறப்பதே ஒரு நாள் இறப்பதிற்காகத்தான். அந்த பிறப்பிலும் சுகம் இல்லை, இறப்பிலும் சுகம் இல்லை, இவை இரண்டுக்கும் நடுவில் வாழ்ந்த வாழ்கையிலும் சுகம் இல்லை. பிறந்தோம், உழைத்தோம், உண்டோம், இறந்தோம் என்று மரம், செடி கொடி போல ஆன என் தந்தையின் வாழ்வில், அவர் பக்தியால் கண்ட பலன் என்ன? பித்ருக்களுக்கு செய்ததால் கிடைத்த பலன்தான் என்ன?

இதற்கு யாராவது முடிந்தால் விளக்கம் சொல்லுங்கள்.
என்னை மிகவும் பாதித்தக் கேள்வி: '...மீண்டும் அந்த தெய்வத்தின் காலிலேயே விழுவது எதனால்?'. என் பதிலை அவருக்கு அனுப்பி வைத்தேன் என்றாலும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று தெரிந்து கொள்ள ஆசை. இதைப் படித்ததும் என்ன தோன்றுகிறது? கடிதம் எழுதியவரிடம் நீங்கள் சொல்ல விரும்புவது ஏதாவது உண்டா?
**

    றைந்த ஜோர்ஜ் கார்லின் அமெரிக்க நாத்திகர். அவரது பிரபலம் இயக்கத்துக்கு கொஞ்சமாவது உதவியது எனலாம். நகைச்சுவையோடு சிந்திக்க வைத்தவர். ஆத்திகத்தைக் கிண்டல் செய்து அவர் அடிக்கும் லூட்டிகளை யூடியில் காணலாம்.

73 கருத்துகள்:

  1. அன்பின் அப்பாதுரை சார்,

    என்னைப்பொருத்த வரை ஆத்திகம், நாத்திகம் என்பதெல்லாம் அவரவர் சூழலுக்கேற்ப அமைவதுதான். நமக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை நம்மால் நம்ப முடியாமல் இருக்க வாய்ப்பில்லை. கோள்களும், இயற்கை வளங்களுமே அதற்கான ஆதாரம். வளரும் சூழலும், குடும்பப் பின்னணியும் கூட முக்கிய காரணிகள்.

    //ஒருவேளை ultra mega super cool gloves போட்டுக்கிட்டு உண்டாக்கினாங்களோ என்னவோ?" என்றபடி கணிணிப் படத்தைச் சுட்டினேன். "அண்டத்துல புழுதியும் வாயுவும் வேகமா கலந்து சுத்துறப்போ அது நட்சத்திரமா மாறிடும். நட்சத்திரம் எரியத் தொடங்குறப்போ சக்தியை வெளிவிடும். பிலியன் வருஷக்கணக்கா எரியும். சூரியனும் இதுபோல உருவான ஒரு நட்சத்திரம். எத்தனையோ பிலியன் வருஷம் எரிஞ்சு எல்லா வாயுவும் அடங்கிடும். அப்போ இந்த சூரியன் நமக்கு ஒளி தராது"// அருமையான அறிவியல் பாடத்தை எளிமையாக புரிய வைத்துவிட்டீர்கள். அந்தக் குழந்தையின் இடத்திலிருந்து கற்றுக் கொண்டேன்....
    'not fair sense' குழந்தைக்கு மட்டுமா இருக்கிறது....?

    மூட நம்பிக்கைகள் ஒழியக் கூடிய ஆத்திகம்(?) வேண்டும். அடிமையாக முடக்கிப் போட்டு விதண்டாவாதம் பேசுகிற நாத்திகமும் வேண்டாம்...

    ஏதோ ஒரு சக்தி, அது இயற்கையாகவோ ஏன் கடவுள் என்ற பெயராகவோ இருந்து விட்டுப் போகட்டுமே. எனக்கு தன்னம்பிக்கையும் வாழ்க்கைக்கு ஒரு ஆதாரத்தையும் கொடுக்கக் கூடிய சக்தியை ஏன் இழக்க வேண்டும்? அறிவில் தெளிவு இருக்குமானால் அதுவே தெய்வமாகி வழி நடத்தி விடுகிறது. அந்த அறிவுத் தெளிவிற்கு ஒரு நம்பிக்கை அவசியமாகிறது.. இல்லாததை உணரும் போதுதான் இருப்பது தெளிவாகிறது. இல்லாததை உணர சக்தி தேவைப்படுகிறது......

    பதிலளிநீக்கு
  2. அப்பா ஸார், ஆத்திகத்தை ஊட்டி வளர்க்கப்பட்டவன் நான். பின்னாளில் பல கேள்விகள் ஆன்மீகத்தில் எனக்கு எழுந்ததினால் விளக்கம் தேடினேன்... தேடிக் கொண்டேதான் இருக்கிறேன். இம்மட்டில் பூரண நாத்திகனாகவும் இல்லாமல், பரிபூரண ஆத்திகனாகவும் இல்லாமல் ஒரு இரண்டுங்கெட்டான் நிலைதான் எனக்கு.

    ஈமெயிலில் உங்களிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி என் அப்பாவின் விஷயத்தில் எனக்கும் உண்டு. நீங்க என்ன பதில் சொன்னீர்களோ தெரியவில்லை. மற்றவர்களின் கருததுக்களைப் படித்து இதுவிஷயத்தில் ஒரு தெளிவு பெற இயலுமா பார்க்கிறேன். யாவற்றக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  3. God is definitely there as you and I are existing. The only thing is we have to do a consistent practice to realise GOD. Once we are able to maintain Alpha waves during Meditation, Nature or God will reveal itself and our problems comes to an end.

    பதிலளிநீக்கு
  4. மதங்கள் - இன்னும் இருநூறு வருஷத்தில் காணாமல் போகும் என்று சொன்னீர்கள். சந்தேகமே. நம் குணாதிசயத்தை வைத்து, நாம் எதை விரும்பவில்லை, விரும்புகிறோம் என்பதை வைத்து உலக மக்களின் எண்ணங்களை தீர்மானித்து விட முடியாது. அதில் கடவுள் நம்பிக்கையும் சேர்த்தி. மதங்களும், கடவுள்களும் அற்ற உலகில் தான் மனிதன் பிறந்தான். மதங்களை அவன் தானே உருவாக்கினானே. அதே போல கடவுள், மதங்களற்ற உலகை திரும்ப செய்ய முடியும். ஆனால் செய்ய மாட்டான். பிறரிடம் யோசனை கேட்கிற மனநிலையே கடவுள்கள் தோன்றுவதற்கான காரணமோ.

    பதிலளிநீக்கு
  5. தமிழ்மணத்தில் நான் புழங்கத் தொடங்கியதிலிருந்து இப்படியொரு, கடவுள் பற்றிய ஆழமான, தெளிவான பதிவைப் படித்ததில்லை.

    தங்களுக்கு என் நன்றி.

    பிரமிப்பூட்டும் பிரபஞ்சத் தோற்றமும், நிகழ்வுகளும்.....

    மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவைக் காட்டிலும் பெரும் பேரறிவு படைத்த‘ஏதோ ஒன்று’ இருந்தே தீர வேண்டும் என்று சிந்திக்கத் தெரிந்த பலரும் நம்பினார்கள்; நம்புகிறார்கள்.

    அந்த ஏதோ ஒன்றைத்தான் ‘கடவுள்’ என்று உருவகம் செய்து ,அந்தக் கடவுளுக்கு அளப்பரிய பேராற்றலையும் எண்ணற்ற நற்குணங்களையும் உரித்தாக்கினார்கள்.

    இப்படி இவர்கள் அனுமானித்த அவரை வணங்கினால் அடுக்கடுக்காய் வந்து தாக்கும் துன்பங்கள் அகலும் என்று நம்பினார்கள்.

    ஏன் பிறந்தோம்? இன்பதுன்பங்கள் ஏன்? செத்த பிறகு என்ன ஆகிறோம்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையே கிடைக்காததால் மிரண்டு போன மனித குலம் கடவுள் நம்பிக்கையில் பிடிவாதம் காட்டுகிறது.

    கடவுள் இல்லை என்று நினைப்பவர்களின் வாதங்கள் எடுபடவில்லை.

    மையப் புள்ளி, நீளம், அகலம், சுற்றளவு என்று எந்தவொரு அளவுகோலுக்கும் உட்படாத இந்தப் பிரபஞ்ச வெளிக்கும், அதிலுள்ள பொருள்களுக்கும் உயிரினங்களுக்கும் கடவுள் என்னும் தனி நபரே மூல காரணமாக இருக்க முடியாது என்பது போன்ற சிந்தனையை வளர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள்.

    உயிர்கள் அனுபவிக்கும் இன்பங்களைவிடத் துன்பங்களே அதிகம். எனவே எல்லாவற்றிற்கும் மூலகாரணமான கடவுள் கருணை வடிவினனாக இருக்க முடியாது என்ற வகையிலும் சிந்திக்க முனைந்தார்கள் இல்லை.

    தோற்றம் ஏன்? அது எப்போது நிகழ்ந்தது? என்பது போன்ற வினாக்களுக்கு விடை பெறுவது இயலாது என்பதால்...

    எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தை, பேரறிவு சான்ற அணுக்கூட்டம் இயக்குகிறது. பல்வகைப் பட்ட பண்புகள் அல்லது குணங்களுக்கு, வேறு வேறு அணுக்கூட்டங்கள் மூலாதாரமாக இருக்கின்றன.....

    கடவுள் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு இயங்குவாரென்றால், அது அணுக்களுக்கும் பொருந்தும்.

    என்றிப்படியான சிந்தனைப் போக்கு, கடவுளைப் பிடிவாதமாக நம்புகிற மூட நம்பிக்கையைப் போக்குவதற்கு உதவுவதாக அமையலாம்.....

    பின்னூட்ட விரிவுக்கு அஞ்சி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

    கருத்துச் சொல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  6. கடவுளின் ‘இருப்பு’ உறுதிப் படுத்தப் படாத நிலையில்......

    பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் சாகும்வரை ‘நிம்மதி’யாக வாழ்வதற்கான வழிவகைகளை, ஒட்டு மொத்த மனித குலமும் ஒருங்கிணைந்து தேடிக் கொண்டிருப்பதே பகுத்தறிவுக்கு உகந்ததாகும்.

    மனித குலத்தைத் தாக்கும் துன்பங்கள் வெகுவாகக் குறைந்துவிடும் நிலையில்,உலகில் உள்ள அனைத்து உயிர்களின் துன்பம் போக்குவது பற்றியும் மனிதன் சிந்திக்கலாம்.

    முழுமுதலானவர்; எல்லாம் வல்லவர் என்று சொல்லப்படுகிற கடவுளுக்காக, மனிதர்கள் தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு சாவது அறிவீனம்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா! என்னவென சொல்வது. எப்படி ஆத்திகம் நாத்திகம்தனை புரிந்து கொள்ளவில்லையோ, அதைப்போலவே நாத்திகமும் ஆத்திகம்தனை புரிந்து கொள்ளவில்லை. நம்பிக்கைகளின் மீது செயலாற்றும்போது நம்பகத்தன்மையும் கலந்தே இருக்கும்! இதையெல்லாம் தாண்டிய இறைவன் பற்றிய உணர்வு என்பது அத்தனை எளிதில் எவருக்குமே கிட்டுவதில்லை. தெய்வீக உணர்வு என்பது எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளும். பல விசயங்கள் புரிந்து கொள்வது கடினம் இல்லையெனினும் சில விசயங்கள் நம்முள் விதைக்கப்பட்டு இருக்கின்றன. இறைவன் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடுவார் என்பது மிகவும் கேள்விக்குரிய விசயமே. நாம் அழிவோம், இந்த அண்டசாரங்கள் எல்லாம் அழியும்! ஆனால் இறைவன் இருந்து கொண்டே இருப்பார். அதுதான் இறைவனின் தனித்துவம். மனிதர்கள் நம்புகிறார்கள் என்பதற்காக இறைவன் இல்லை. நம்பவில்லை என்பதற்காக இறைவன் இல்லாமல் இல்லை. இறைவன் இருப்பது இயக்கத்திலும் உண்டு, இயக்கத்தில் இல்லாமலும் உண்டு.

    பதிலளிநீக்கு
  8. நமது கல்வித்திட்டம் ஆத்திகக் கல்வித்திட்டம். நாத்திகத்துக்கு இடமில்லை. அதுவும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் சுத்தமாக ஆத்திகச் சுண்ணாம்பு பூசப்பட்டிருக்கிறது. என்னுடைய பள்ளி நாட்களில் தான் அப்படி என்றால், இன்றைக்கும் அதே நிலைதான் போலிருக்கிறது. //

    நிச்சயமா இல்லை. கல்வித்திட்டம் ஆன்ம வளர்ச்சிக்கு உதவி செய்வதை நிறுத்திப் பல நூறாண்டுகள் ஆகின்றன. இன்றைய ரெண்டுங்கெட்டான் நிலைக்கு நம் கல்வித்திட்டம் காரணம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் சிந்திக்க வேலை கொடுக்காமல் வெறும் இயந்திரமயமான பாடங்களையும், மனிதனும் ஒரு மிருகம் என்றே படித்துக்கொண்டிருப்பதாலும் மிருக உணர்வுகளே மிகுந்துவிடுகின்றனவோ எனத் தோன்ற வைக்கும் பாடத்திட்டம். இது குறித்து நிறையச் சொல்ல வேண்டும். மெதுவா வரேன். :))))



    //ராமாயணக் கதையில் ஜாபாலி என்று ஒரு பாத்திரம். வால்மீகியின் அயோத்தியா காண்டத்தில், ஜாபாலி என்ற ஒரு சாதாரண பிராமணன் உலக நியதியின் அடிப்படையில் ராமன் காட்டுக்குப் போவது கண்மூடித்தனம் என்று வாதாடுகிறான். ஜாபாலியின் வாதங்களுக்கு ராமனின் பதிலில் தீவிரக் கோபம் மட்டுமே காண முடிவது, தன்னிச்சையா தெரியவில்லை. ஜாபாலியின் கருத்துக்களைப் பாடமாக ஏன் வைக்கவில்லை என்று கேட்கத் தோன்றுகிறது. பாடமோ இல்லையோ படிக்கச் சுவாரசியமானது. சிந்தனையைத் தூண்டுவது. அறத்தின் இரு பக்கமும் அறிய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ராம-ஜாபாலி உரையாடலுக்கு மீண்டும் வருவோம்.//

    ராமாயணத்தில் ஜாபாலியும் ஒரு ரிஷிதான். அவருடைய கருத்துக்களை மூலத்தில் படிச்சுட்டுச் சொல்லுங்க. மீண்டும் வருவோம்னு சொல்லி இருக்கிறதாலே நிறுத்திக்கிறேன். :)))))


    //காவடி எடு, தேங்காய் உடை, மலைக்குப் போ என்பவை சாதாரணச் செய்திகளாகப் பாமரர்களைச் சென்றடைவது போல், 'கண்மூடித்தனத்தை விடு' என்பதும் சாதாரணச் செய்தியாகப் பாமரர்களைத் தொடும் வழியைத் தேட வேண்டும். 'கடவுளைக் கும்பிடு' 'மதத்தை மதி' என்பதன் எளிமை, 'கடவுளைக் கும்பிடாதே' என்பதில் இல்லை. இங்கே தான் நாத்திகம் தடுக்கி விழுந்ததாகத் தோன்றுகிறது. நாத்திகத்தின் செய்தி 'கடவுளைக் கும்பிடாதே' என்பதல்ல. இதைச் செய்தியாகக் கொண்டு வந்த செருப்படி நாத்திகம் அடையாளத்தோடு இருக்கும் வரை, சிந்தனை சார்ந்த நாத்திகம் வளர்வது கடினம் என்று தோன்றுகிறது.//

    சிந்தனை சார்ந்த நாத்திகம்னு சொல்ல முடியாது. சிந்தனை சார்ந்த ஆத்திகம்னு சொல்லலாம். மூடநம்பிக்கைகள் எல்லாமும் பின்னர் வளர்ந்தவையே. இன்றே கண்ணுக்கெதிரே திடீர் திடீர் என எத்தனை எத்தனை மூட நம்பிக்கைகள் வளர்வதைப் பார்க்கிறோம். உண்மையான ஆன்மீகம் மூட நம்பிக்கையை வளர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை.


    //இப்படிப்பட்ட என் அப்பா தன் வாழ்நாள் இறுதி வரை பணக் கஷ்டம் பட்டிருக்கிறார். எந்த ஒரு சுகபோகத்தையும் அனுபவித்ததில்லை. மரணமாவது அவருக்கு உதவியதா! அதுவும் இல்லை படுத்த படுக்கையாக ஆறு மாதம். சோடியம் குறைவினால் வாய் திறக்க முடியாமல், அது சரியாவதற்குள் அப்பாவுக்கு தலை சுற்றல் இருந்ததால் அதனால் சில முறை விழுந்திருந்ததால் உண்டான கோளாறுகள் கடைசி நேரத்தில் தலை தூக்கி, அவரை மிகவும் மோசமான நிலைமைக்கு கொண்டு சென்று விட்டது. //

    அவர் சின்ன வயசில் இருந்து வேலை செய்து பிழைக்க வேண்டி இருந்ததால் உடல்நலத்தைச் சரியாகக் கவனித்துக்கொள்ளவில்லை. அதான் சோடியக்குறைவு. இல்லையா? என்றாலும் இதை எழுதினவரும் சரி(யாரால் எழுதப்பட்டிருக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்.) நீங்களும் சரி, கடவுளைக் காரணமாகச் சுட்டிக்காட்டுவதில் இருந்து நீங்கள் இருவருமே கடவுளின் இருப்பை நம்புவதை மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? :)))))))

    என் அம்மாவும் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை; வாழ்க்கையில் நிரம்பக் கஷ்டப்பட்டதோடு அல்லாமல் கடைசியில் புற்றுநோயால் அவதிப்பட்டுத் தான் செத்தாள். ஆனால் இதற்கெல்லாம் ஒருநாளும் கடவுளைச் சுட்டிக் காட்டியதில்லை.

    பகவான் ஶ்ரீரமணர் படாத அவதியா? அவரே அவதிப்பட்டிருக்கையில் நாமெல்லாம் எம்மாத்திரம்?

    பதிலளிநீக்கு
  9. அதோடு முன்வினைப் பயன் என ஒன்று உண்டு.

    தீதும், நன்மையும் பிறர் தர வாரா!

    இதைப் புரிந்து கொண்டால்,

    சிலப்பதிகாரம் சொன்ன
    ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்"

    என்பதை ஏற்றுக்கொண்டால்,

    இப்பிறப்பில் என்னதான் நல்லவர்களாக இருந்து நல்லவைகளையே செய்திருந்தாலும் அது முற்பிறப்பின் வினையைத் தடுக்கவல்லது அல்ல என்று மதுராபதித் தெய்வம் கண்ணகியிடம் சொன்னதைப் புரிந்து கொண்டால்,

    பல சித்தர்களும், யோகிகளும் என்னதான் யோகத்தில் ஆழ்ந்தாலும் முன்வினைப் பயனைக் கழிக்கவேண்டி இப்பிறவியிலும் அனுபவிக்கும் துன்பங்களை நினைவு கூர்ந்தால் இம்மாதிரித் தோன்றாது. :)))))))))))

    பதிலளிநீக்கு
  10. மேலும் பக்தி என்பது வியாபாரம் அல்ல; நான் உனக்கு இதைச் செய்யறேனே; நீ எனக்கு அதைக் கொடுனு கேட்கிறது, எதிர்பார்க்கிறது பக்தியில் சேராது என என் கருத்து.

    என்னைப் பொறுத்தவரை இந்தப் பிரார்த்தனைகள் எல்லாம் செய்துக்கறதில்லை. மற்றவர் வற்புறுத்தலுக்காக அவங்க எனக்காக வேண்டிக்கிறதை நான் நிறைவேற்றுவது உண்டு. பக்தியும் உண்டு. ஆனால் கடவுளிடம் இதைக் கொடு அதைக்கொடுனு கேட்கிறதைவிட எல்லாரையும் நல்லா வைனு பொதுவான வேண்டுகோளே வைப்பது வழக்கம்.

    மற்றபடி நாம் ஸ்லோகம் சொல்வதோ, பூஜைகள் செய்வதோ, பிரார்த்தனைகள் நிறைவேற்றுவதோ நம் தனிப்பட்ட மனநிம்மதிக்காகவே. எந்தக் கடவுளும் இதெல்லாம் செய்யலைனா உன்கண்ணைக் குத்திடுவேன்னு சொல்லமாட்டார்.

    நல்லவேளையா எங்க வீட்டிலே இம்மாதிரிச் சொல்லி வளர்க்கலை; பிழைச்சேன். :)))))))

    பதிலளிநீக்கு
  11. ஹிஹிஹி, காலங்கார்த்தாலே இதிலே உட்கார்ந்துட்டேன். நித்யகர்மானுஷ்டானங்களை முடிக்கணும். வரேன் அப்புறமா. பரமஹம்ச யோகானந்தரின் சில கருத்துக்களையும் பகிர்ந்துக்க எண்ணம். விடமாட்டேனே! :))))))

    பதிலளிநீக்கு
  12. எவ்வளவு பொறுப்பில்லாத எழுத்து அப்பாதுரை! உங்கள் திறமையை இப்படியா விரயம் பண்ணப் போறீர்கள்?

    நிறைய எழுதத் தோணும். ஆனா நடு ராத்திரியாகிவிட்டாலும் ஒரே ஒரு கருத்தை சொல்லி அப்புறம் வருகிறேன்.

    கடிதம் என்னை உருக்கியது. எழுதியவர் பெண் என்று தோன்றுகிறது. அம்மா.. உங்கள் தகப்பனார் எந்தப் பாவமும் செய்யவில்லை. அம்பாள் அவரின் பக்தியை சோதித்தாள் என்று நான் சொல்வதை நம்புங்கள். ஒரு கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பது தடைகளை எதிர்கொள்ளும் விதத்தில் வெளிப்படுகிறது என்ற மகாத்மாவின் சொல்லை மறந்து விடாதீர்கள். உங்கள் தகப்பனார் சிலரைப் போல் வாய்ச் சொலில் வீரரடி என்று இருக்காமல் உயிரும் மெய்யும் கலந்த பக்தியினால் அம்பாள் பாதங்களைத் தொட்டிருக்கிறார். நிச்சயமாக அவர் அம்பாளின் உடன் இருக்கிறார். இனி அவருக்குப் பிறவியோ வினைப்பயனோ எதுவுமே இல்லை. என்னால் இதை உணர முடிஞ்சு சொல்கிறேன். இதை இந்தமாதிரி உதவாக்கரை பதிவுகளில் போட்டு அவர் பக்தியின் காரணத்தை தப்பாகப் புரிந்து கொள்ள டேஞ்சர் உண்டு என்று பணிவோடு சொல்கிறேன். உங்கள் மனமடங்க பிரார்த்தனை செய்வேன்.

    பதிலளிநீக்கு
  13. ஒருவர் ஒரு கருத்தை முன் வைக்கும் போது, போதிய ஆதாரங்களுடன், அதை ஆதரித்தோ மறுத்தோ கருத்துகளை வெளியிட்டால்தான், எது ‘உண்மை’ என்பதை ஆராய்ந்து அறிய முடியும்.

    அதை விடுத்து, “உங்கள் நேரத்தை இப்படி வீணடிக்கிறீர்கள்” என்றோ, “இனி அவருக்குப் பிறவியோ துன்பமோ இல்லை” என்றோ, தத்தம் நம்பிக்கையை வெளிப்படுத்துவது தேவையற்ற வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும்; மனக்கசப்பை வளர்க்கும்.

    விவாதத்தின் போக்கைத் திசை திருப்பாமல், ‘கருத்துக்குக் கருத்தை’ முன் வைக்கப் பழகுமாறு அன்புடன் நண்பர்களை வேண்டுகிறேன்.

    நான் இவ்வாறு அறிவுறுத்தியது தவறு என்றால் மன்னியுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. //நாத்திகர்கள் கடவுளுக்கு எதிரியல்ல //

    என்னங்க புதுக்கதையா இருக்கு... இங்க ஒரு கூட்டம் அத வச்சுதானே வண்டியை ஓட்டுது...

    பதிலளிநீக்கு
  15. ஆழ்ந்தப் பின்னூட்டங்களுக்கு நன்றி. பரமசிவம் நிறையவே யோசிக்க வைத்தார். இல்லாததை எந்த சக்தியை வைத்தும் உணர முடியாது என்று நினைக்கிறேன் நித்திலம். நம்பிக்கை என்ற அற்புதமான கருவியை ஆத்திகம் corrupt செய்து விட்டது என்று நினைக்கிறேன் ராதாகிருஷ்ணன். நமது கல்வித் திட்டம் 99.999999% ஆத்திகம் என்றே நம்புகிறேன் கீதா சாம்பசிவம். ஆத்திகம் கலக்காமல் ஆன்ம வளர்ச்சிக்குக் கல்வி என்றைக்குமே உதவி செய்ததாகத் தெரியவில்லை. இன்றைக்கு நிறைய பேருக்கு ஆஸ்திகம் ஆன்மீகம் இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் இருப்பதற்குக் காரணமே ஆத்திகம் என்று நம்புகிறேன். இதைப் பற்றி மேலும் விவரமாக எழுதுகிறேன். இல்லாத ஒன்றை எதிர்ப்பது புத்திசாலித்தனமா பத்மநாபன்? அதனால் தான் நாத்திகம் கடவுளை எதிர்க்கவில்லை என்றேன் :=) (நீங்க குறிப்பிடுற கூட்டம் காசுக்காக கடவுளைத் திட்டுற கூட்டம்னு நினைக்கிறேன்.)

    பதிலளிநீக்கு
  16. நாத்திகமும் ஆத்திகமும் அழியாததது. ஏனெனில் இளவயதில் நாத்திகம் பேசிவிட்டு முதுமையில் ஆத்திகம் பேசுவது சராசரி மனிதனின் இயல்பு. அனுபவம் சொல்லிக் கொடுப்பதை யாராலும் ஏற்காமல் இருக்க முடியாது.நாத்திக மிருகங்கள்தான் ஆத்திக மனிதனாக மாறியதாக பரிணாமம் சொல்கிறது.பரிணாமத்தின் ஒரு படிகட்டாக ஆத்திகம் உள்ளது.

    பதிலளிநீக்கு
  17. அப்பாஜி...நான் ஏதும் சொல்லல.ஏமாத்திட்டுப் போனவன் நல்லாயிருக்கான்.ஏமாந்துபோனவன் தான் கஸ்டப்படுறான்.கேட்டா கடவுள் பாத்துப்பாராம்.போன ஜென்மத்துக் கடனாம்.இப்போ விஜய் தொலைக்காட்சியில் முன்ஜென்மம்ன்னு ஒரு நிகழ்ச்சி போட்டு உறுதிப்படுத்துறாங்க !

    பதிலளிநீக்கு
  18. நமது கல்வித் திட்டம் 99.999999% ஆத்திகம் என்றே நம்புகிறேன் கீதா சாம்பசிவம். ஆத்திகம் கலக்காமல் ஆன்ம வளர்ச்சிக்குக் கல்வி என்றைக்குமே உதவி செய்ததாகத் தெரியவில்லை. இன்றைக்கு நிறைய பேருக்கு ஆஸ்திகம் ஆன்மீகம் இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் இருப்பதற்குக் காரணமே ஆத்திகம் என்று நம்புகிறேன்.//

    100% NO. Our education system is purely a profitable business. It is helping the younger generation to build their physical and monetary strength only. It is not giving them spiritual strength. Actually our education system is not giving us spiritual practices. Because our young people imagine their animal nature to be his only reality and are cut off from divine aspirations.you mean athigam is Bakthi and aanmigam is different from athigam? NO, again hundered percent NO. both are same.

    Quote from Emerson, "That only which we have wihtin, can we see without. If we meet no gods, it is because we harbour none."

    That is all for now. Will come back. May be. :))))))) sorry for the English.

    பதிலளிநீக்கு
  19. to be his only reality //

    to be their only reality :D

    sorry for the careless mistake.

    பதிலளிநீக்கு
  20. தெய்வத்தின் பெயரால் மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு தெய்வம் பொறுப்பாகாது! ஒரு சிலரின் பணத்தாசையாலும், மக்களின் மூட நம்பிக்கையைத் திட்டமிட்டு வளர்த்ததாலுமே ஆத்திகம் என நீங்கள் கூறும் மூட பக்தி வளர்ந்து நிற்கிறது. இதை எந்தத் தெய்வமும் செய்யச் சொல்லவில்லை. கஷ்டப்படுபவர்களுக்கு இவை ஒரு வடிகால் எனில் அவர்களை வைத்துப் பணம் பண்ணுபவர்கள் மற்றவர்கள். ஆக மொத்தம் எல்லாமே வியாபாரம் ஆகிக் கோயில்களும் இன்று வணிக வளாகமாக மாறிப் பணம் பண்ணுவது ஒன்றே குறிக்கோளாக மாறிவிட்டது.

    பதிலளிநீக்கு
  21. temples are nuclear centres of spiritual power. actually we are destroying them. :(((((( I do not know how to translate the spiritual power, so in English. :)))

    பதிலளிநீக்கு
  22. ஆன்மீகம் ஒரு இலக்கு. பயணம். ஆஸ்திகம் ஒரு பாதை. பாதையே பயணமாகாது. (ஏமாந்தா ஆகும் :-)
    ஆஸ்திகம் = "உண்டு" எனும் வழி. ஆன்மீகம் = தன்னையறியும் பயணம். ஆன்மீகத்துக்கு ஆஸ்திகம் தேவையில்லைனு நம்புகிறேன். ஆஸ்திகத்தை விட நாஸ்திகத்தால் ஆன்மீகம் அண்மைப்படும் என்றும் நம்பத் தொடங்கியிருக்கிறேன் :) மன அமைதியும் நிம்மதியும் நிரந்தர மகிழ்ச்சியும் மனித மேன்மையும் ஆத்திகத்தை விட நாத்திகத்தில் வேகமாகக் கிடைக்கும் என்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. உங்கள் வாதம் சாமர்த்தியமானது சந்துரு. மிருகங்களுக்கு ஆத்திக நாத்திகப் பாகுபாடு கிடையாது. தேவையுமில்லை. பரிணாமம் அப்படிச் சொல்லவில்லை. திரிக்கிறீர்கள்.
    இருங்கள்.. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஆத்திகத்துக்குத் மிருகத்திடம் அண்மை உண்டே தவிர நாத்திகத்துக்குக் கிடையாது என்பது புலனாகிறது. புராணங்கள் சொல்கின்றன :)

    பதிலளிநீக்கு
  24. நமது கல்வித் திட்டம் ஆத்திகத்தின் வேர்களில் வளர்ந்தது. கொஞ்சம் யோசிப்போம். அகர முதல் எழுத்தெல்லாம்? கற்றதனால் ஆய பயனென் கொல்? நான் சொல்வது புரிந்திருக்கும்.
    பணத்தைத் தேடுவதில் தவறில்லை. ஒரு வேளை ஆத்திக வேர்கள் தான் இந்த நிலைக்கு நம் கல்வியை கொண்டு விட்டதோ? :)

    பதிலளிநீக்கு
  25. பணத்தைத் தேடுவதில் தவறில்லை. ஒரு வேளை ஆத்திக வேர்கள் தான் இந்த நிலைக்கு நம் கல்வியை கொண்டு விட்டதோ? ://

    இல்லை, ஆத்திகவேர்கள் செல்லரித்துப் போகத் தொடங்கியதால் வந்த வினை. இது குறித்து எழுதத் தொடங்கினால் கொஞ்சம் கடுமையாகத் தோன்றும். ஆதலால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். ஆஸ்தி, நாஸ்தி என்ற அர்த்தத்தை வைத்துப் பொருள் சொல்லி இருக்கீங்க! சரி, அப்படியே இருந்துட்டுப் போகட்டுமே!:))))

    நாத்திகத்தின் எல்லையே உண்மையான ஆன்மிகம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஒரு சின்ன மயிரிழை தான். உண்மையில் பக்தி செய்பவர்களையும், ஆன்மிகப் பாதையில் செல்பவர்களையும் விட மிக அதிகமாக நாத்திகர்களே கடவுளுக்கு அருகாமையில் இருக்கின்றனர்.

    மந்தையிலிருந்து காணாமல் போகும் அந்த ஆட்டுக்குட்டிகளையே இறைவனும் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

    பணம் தேவை தான்; தேடட்டும். ஆனால் பணமே வாழ்க்கை இல்லை. பணத்துக்காக கணவன், மனைவி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக் கூட இயலாமல் இருப்பது வாழ்க்கை இல்லை. பணத்துக்கும் அதன் செளகரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியதுமே உறவுகள் அற்றுப் போய்விட்டன.

    பதிலளிநீக்கு
  26. //பணத்துக்கும் அதன் செளகரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியதுமே உறவுகள் அற்றுப் போய்விட்டன.

    மறுக்கமுடியாத உண்மை. இது இன்னும் (மோசமாக?) தொடரும் சாத்தியத்தைக் கவனத்தில் வைத்துக் கொண்டால் வருத்தங்களையும் ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். சில விலைகள் விசித்திரமானவை.

    பதிலளிநீக்கு
  27. எனக்கு புராணமும் (முழுசாத்) தெரியாது. (அதனாலேயே) நாத்திகமும் சரியாத் தெரியாது.எல்லாம் அரைகுறை. ஆனால் நீங்கள் எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது. யோசிக்க வைக்கிறது. நீங்கள் சில விஷயங்களைச் சொல்ல உங்கள் மகனைத் துணைக்கழைத்திருப்பது போல- உபயோகப் படுத்தியிருப்பது போல - எனக்கு சில விஷயங்களை, சில வாழும் முறைகளை வலியுறுத்த, சில பொதுப் பண்புகளை வரைமுறைப் படுத்த கடவுள் பெயர் தேவையாயிருக்கிறதோ....

    நீங்கள் லின்க்கியுள்ள வீடியோ ரசிக்க வைக்கிறது. சிரிக்க வைக்கிறது. மேலே வானத்தில் மூன்று நான்கு வகை பெரிய அரசாங்கங்கள் போல இருக்கின்றன என்றோ அவர்கள் சதா சர்வ காலமும் நம்மை கண்காணித்து தண்டனை மற்றும் பரிசுகள் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லைதான். கண்ணால் கண்டு அனுபவத்தில் உணரும்வரை நம்மால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. தெரியாத ஒன்றைக் கண்டு பயப்படுவது மனித நாகரீகம். தெரி(ளி)யும் வரை பயம்!

    வாழும் வகைக்கு சில நெறிமுறைகளை வகுக்கும்போது வந்த சம்பிரதாயங்களை இந்தக் காலம் கேள்வி கேட்டு அலசத் தொடங்கியிருக்கிறது. மறுப்பவன், ஆதரிப்பவன் ரெண்டுபேருமே அந்த சக்தியைப் பற்றிதான் பேசுகிறான். கேள்வி கேட்பவர்களைத்தான் ஆசிரியர்களுக்குப் பிடிக்குமாமே....

    பரமசிவம், கீதா மேடம், உங்கள் பின்னூட்டங்களைப் பின் தொடர்கிறேன். ராமசுப்ரமணியம் சார் கோபத்தை ரசிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  28. அனுபவத்தைச் சொன்ன மெயில் மனத்தைக் கஷ்டப்படுத்தியது. நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள் என்று தெரியாது.
    அவர் என்ன செய்திருந்தால் அவர் நிலைமை மாறியிருக்கக் கூடும்? எழுதி வைத்திருப்பதை யாராலும் மாற்ற முடியாது, விதிப் படிதான் நடக்கும் என்பார்கள். விதியை மதியால் வெல்ல முடியுமா என்றால், முடியும் அபபடி வெல்லலாம் என்று விதியிருந்தால் என்பார்கள். அந்த விதிக்குதான் இறைவன் என்று பெயர் வைத்திருக்கிறார்களோ... முன் ஜென்மத்தில் என்ன செய்தோம் என்று அறிய வழியில்லை. அடுத்த ஜென்மம் உண்டா என்றும் நிச்சயமில்லை. மறு பிறப்புகளுக்கு கதைகள் தவிர ஆதாரம் கிடையாது. அப்புறம் முன் ஜென்ம பாவம் என்று எப்படிச் சொல்வது? இப்போது செய்யும் புண்ணியம் என்னும் 'அடுத்தவர்க்கு தீங்கு செய்யாமை' அடுத்த ஜென்மத்திற்கு உதவுமோ இல்லையோ, இந்த உலகில் மற்ற ஜென்மங்களுக்கு -உயிர்களுக்கு- உதவும், அதனாலேயே வேறு தீமைகள் நமக்கும் அடுத்தவர்களுக்கும் நேராது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  29. பரமசிவம், கீதா மேடம், உங்கள் பின்னூட்டங்களைப் பின் தொடர்கிறேன்//

    பின் தொடர்கிறீர்களா??? ஆச்சரியம் தான் போங்க. நாலைந்து நாட்களாக எனக்கு இன்னமும் எந்த வலைப்பதிவிலும் இந்த ஆப்ஷன் கிடைக்கலை. :((((

    அப்புறமா வரேன், காஃபி குடிச்சுட்டு யோகாசனம் செய்யணும். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா மெயில் பார்க்க வந்தேனா! இந்தப்பதிவிலே என்ன என்ன பின்னூட்டம்னு செக் பண்ணிக் கொண்டேன். :))))

    பதிலளிநீக்கு
  30. உங்களோடு மெயிலில் பகிர்ந்துகொண்ட அனுபவத்தைபோன்று,
    எல்லோருக்குக்ம் தெரிந்த நிகழ்வு முள்ளிவாய்கால் படுகொலைகள்
    மே மாத சுட்டெரிக்கும் வெயில், கடற்கரை மணல் ,உண்ண உணவு இல்லை ,காயத்திற்கு மருந்து இல்லை,ஏன் குடிக்க கூட தண்ணீர் இல்லை,குழந்தைகள் ,வயதானவர்கள்,பெண்கள் இப்படி 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஒவ்வொரு நிமிடமும் மரணத்தின் வாயிலில் கழித்த அத்தனை பேரும் கடவுளைத்தனே நம்பி இருப்பார்கள்
    நம்பிக்கை என்றால் சுகமான வாழ்வை வேண்டியோ அல்லது மண அமைதிக்காகவோ கொண்ட நம்பிக்கை அல்ல
    தண்ணீரில் மூழ்கிகொண்டிருப்பவனுக்கு ஒரு சிறிய கயிறு கிடைத்தால் எப்படி பற்றிகொள்வானோ அப்படிப்பட்ட நம்பிக்கை
    கடவுள் என்ற ஒருவர் இருந்தால்...
    ஏன் கடவுள் அவர்களை கைவிட்டார்?
    தமிழ் பேச தெரிந்ததை தவிர அவர்கள் செய்த பாவம் என்ன?
    முற்பிறவி பலன், கடவுள் இவர்களை சோதித்தார் இப்படி இங்கும் சொல்வீர்களா?

    பதிலளிநீக்கு
  31. அருமையான கருத்துக்கள் ஸ்ரீராம். நன்றி.
    //கேள்வி கேட்பவர்களைத்தான் ஆசிரியர்களுக்குப் பிடிக்குமாமே....
    ரைட்டு. பதில் தெரிந்த அசல் ஆசிரியர்களுக்கு.. (ஹி:)

    பதிலளிநீக்கு
  32. @வேர்கள்.. நல்ல கேள்வி கேட்டீங்க. "உலகின் குறைகளுக்கெல்லாம் முன்வினை மனித அநாகரீகம் போன்றவை காரணம்; நிறைகளுக்கெல்லாம் எல்லாம் வல்ல அருளே காரணம்" என்ற புரிதல் பரவியிருப்பது ஒரு வகையில் இம்மாதிரிக் கேள்விகளைத் தூண்டுகிறது. சோசலிச/மார்க்சிச அரசுகளைத் தவிர்த்துப் பிற நாடுகளில் அவ்வப்போது எடுக்கப்படும் மத நம்பிக்கை surveyக்களில் இந்தக் கேள்வி முன் எப்போதைக்கும் இல்லாத அளவுக்கு கேட்கப்படுவதாகப் படிக்கிறேன். இதைப் பற்றி எழுத எண்ணியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. "உலகின் குறைகளுக்கெல்லாம் முன்வினை மனித அநாகரீகம் போன்றவை காரணம்; நிறைகளுக்கெல்லாம் எல்லாம் வல்ல அருளே காரணம்//

    @அப்பாதுரை,

    உலகின் குறைகளுக்கெல்லாம் முன்வினையைக் காரணமாய்க் காட்ட முடியாது. மனித அநாகரீகமே காரணம்; மனிதன் செய்யும் தவறுகளுக்குக் கடவுளைப் பொறுப்பாக்குகிறோம். நிறைகளுக்கு எல்லாம் வல்ல அருள் காரணம் எனச் சொல்ல முடியாது. அந்த மனிதர்களின் மனமே காரணம். மனம் திருப்தி அடைந்தாலே நிறைவு தோன்றும்.

    பதிலளிநீக்கு
  34. @ geethasmbsvm6
    உலகின் குறைகளுக்கெல்லாம் மனித அநாகரீகமே காரணம்
    நிறைகளுக்கு அந்த மனிதர்களின் மனமே காரணம்
    - உண்மை
    மனிதன் செய்யும் தவறுகளுக்குக் கடவுளைப் பொறுப்பாக்குகிறோம்.
    அப்படியென்றால் கடவுளின் பொறுப்பு என்ன?

    பதிலளிநீக்கு
  35. கடவுளின் பொறுப்பு என்ன?//


    :))))))))) கடவுளுக்கு எதுக்குப் பொறுப்பு? மனிதன் தான் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். அவரவர் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். மனித மனத்தின் அழுக்கான சிந்தனைகளுக்கெல்லாம் கடவுளா பொறுப்பு ஏற்க முடியும்? அதுவும் கடவுளே இல்லைனு சொல்பவர்களுக்கு??

    ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறும் வியாபாரம் அல்ல கடவுளோ அதைச் சார்ந்த ஆன்மிகமோ.

    பதிலளிநீக்கு
  36. கடவுள் நம்பிக்கை ஏற்படுவதற்கு பெரும்பாலும் சூழ்நிலைதான் காரணமாகிறது. ஆனால் அது மேலும் வளருவது அவரவர் மனதை பொருத்தது.
    வாழ்வதற்கு நம்பிக்கைதான் ஆதாரம். அந்த நம்பிக்கை எந்த வடிவில் இருந்தாலும் சரிதான். அடுத்தவர்க்கு தீங்கு செய்யாமல், அடுத்தவர் சுதந்திரத்தில்
    தலையிடாத வரையில் எதுவுமே நல்லதுதான்.

    'தெய்வம் என்றால் அது தெய்வம், அது சிலை என்றால் வெறும் சிலைதான் : உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை'
    கண்ணதாசன் வரிகள். என் மனதிலும் பதிந்திருக்கும் வரிகள். எல்லாமே நம் கண்ணோட்டத்தில்தான். நம் எண்ணங்களை பொறுத்துதான்.

    பதிவும், பின்னூட்டங்களும் மிகவும் அருமை. இரண்டிலும் பல வரிகள் மனதை தொட்டது.

    தொடர்கிறேன்.......

    பதிலளிநீக்கு
  37. //geethasmbsvm6 கூறியது...
    கடவுளின் பொறுப்பு என்ன?//
    கடவுளுக்கு எதுக்குப் பொறுப்பு? மனிதன் தான் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். அவரவர் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டும்.//

    மனிதனைப் படைத்தவன் கடவுள் என்பதற்கு பதில் மனிதனின் நல்ல செயல்கள், நல்ல குணங்கள்தான் கடவுள். தெய்வதம் என்ற உயரிய நிலைக்கு நிறைய பெயர்கள். சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளும் இடைத்தரகர்களின் வியாபாரம்! :))

    பதிலளிநீக்கு
  38. ஶ்ரீராம், உண்மைதான் நீங்க சொல்வது. பதிலை விரிவாகவே எழுதினேன். அப்புறமா வேண்டாம்னு விட்டுட்டேன். அவரவர் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். பணம் தான் முக்கியம்னு ஆயிடுச்சு இப்போ. மனிதத் தன்மை குறைந்து வருகிறது.

    படிப்புச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கு மதிப்பில்லை; அவர்கள் நல்லாப் படின்னா மாணவர்கள் கொல்றாங்க. அந்த ஆசிரியருக்கோ, மாணவனுக்கோ கடவுள் ஏன் உதவலைனு கேட்க முடியுமா? மிருக குணம் தலை தூக்கியது தான் காரணம்.

    ஹரியானா ஹிசாரில் ஏழை மாணவன் இஞ்சினியரிங்கில் நல்லாப் படிக்கிறான், முதல் வகுப்பில் பாஸ் செய்துவிட்டான் என்பதற்காக நண்பர்கள் சேர்ந்து அவனைக்கொன்று விட்டனர். இதுக்கு யார் காரணம்?

    நாம் செய்யும் தவறுகளுக்குக் காரணமாய்க் கடவுளைச் சுட்ட முடியுமா? கடவுள் இதெல்லாம் செய்யச் சொல்றாரா என்ன?

    பெற்றோரும் சரி, மாணவர்களும் சரி ஆத்ம விசாரம் என்பதைக் குறித்துப் படிக்காமலேயே வெறும் ஏட்டுப்படிப்பு மட்டும் படிப்பதே இதன் காரணம். மேலும் யாருக்கும் சிவிக் சென்ஸும் இல்லை. முக்கியமாய் இந்தியாவில் நமக்கெல்லாம் இல்லை. பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை தெரியவில்லை. இதெல்லாம் குழந்தையிலிருந்து வரவேண்டும். இன்று பெற்றோர் ஓடி ஓடிப் பணம் சம்பாதிப்பதிலே மூழ்கிக் குழந்தைகளோடு பேசக் கூட நேரமில்லாமல், கணினியிலோ, தொலைக்காட்சியிலோ அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பது தெரியாமல் இருக்கின்றனர். நம்மைத் தொந்திரவு செய்யாமல் இருந்தால் போதும் என்பதே முக்கியக் காரணம். பொறுப்பு என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  39. //மனித மனத்தின் அழுக்கான சிந்தனைகளுக்கெல்லாம் கடவுளா பொறுப்பு ஏற்க முடியும்? அதுவும் கடவுளே இல்லைனு சொல்பவர்களுக்கு??//
    அப்போ கடவுள் இருக்குன்னு சொல்றவங்க மனசுல அழுக்கான சிந்தனைகள் இருந்தா அதுக்கு கொஞ்சமாவது கடவுள் பொறுப்பு எடுத்துப்பாரான்னுதான் கேக்க தோணுதே. :)

    கடவுள் பெயரை சொல்லிதானே நல்ல எண்ணங்களையும், நல்ல சிந்தனைகளையும் வளர்கிறார்கள். எங்கும் எதிலும் கடவுள் இருக்கிறார் என்றால் அழுக்கான சிந்தனைகள் உள்ளவர்களிலும் கடவுள் இருக்கிறார் அல்லவா. :)
    எல்லோர் மனதிலும் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. இதில் நல்லதே மேலோங்கி இருக்க வேண்டும். கெட்ட எண்ணங்கள் தலையெடுக்கா
    வண்ணம் இருக்க மனம் பக்குவ பட வேண்டும். இந்த பக்குவத்தை பெற நமக்கு உதவும் வழிகள் எல்லாமே உன்னதமானதுதான், உதவுபவர்கள் எல்லோருமே உன்னதமானவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
  40. கீதா மேடம், நீங்கள் ஸ்ரீராம் அவர்களுக்கு எழுதிய கருத்தை படிக்கும் முன்பே நான் என் கருத்தை பதிவிட்டு விட்டேன்.
    நீங்கள் எழுதி இருப்பது போல் தற்போது யாருக்கும், எதற்குமே நேரமே இல்லை. எதனால் இப்படி ஆனது? மிகவும் வருத்தமாக இருக்கிறது.
    // நம்மைத் தொந்திரவு செய்யாமல் இருந்தால் போதும் என்பதே முக்கியக் காரணம். // உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  41. மீனாக்ஷி, எதனால் இப்படின்னா என்னனு சொல்வது? ஒரு வகையில் உலகமயமாக எல்லாம் ஆவதும் ஒரு காரணம்! இன்றைக்கு எல்லாமே கையிலே கிடைக்கிறது; யாருக்கும் எதற்கும் கஷ்டப்பட இஷ்டமில்லை. முன்பெல்லாம் பள்ளிப்படிப்பை முடிப்பதே ஒரு சிலருக்குக் கஷ்டம். இப்போ அப்படி இல்லை. அப்படியும் படிக்காதவங்க இருக்காங்க தான். ஆனால் அவங்களைக் கணக்கில் எடுக்கலைனா பொதுவாப் படிப்பு என்பது இப்போது தெருவுக்குப் பத்துப் பள்ளிகள். எல்லாருக்கும் கல்வி வியாபாரம் ஆகிப் போனது.

    அப்பா, அம்மாவுக்கோ இரண்டு வயசிலேயே குழந்தைகளைப் பள்ளியில் கொண்டு தள்ளிட்டு அவங்க பாட்டைப் பார்த்துக்கணும். குழந்தைக்கு வேண்டும் என்கிற பொம்மைகள், சாக்லேட், பிட்ஸா போன்றவற்றிலேயே அவங்களைத் திருப்தி செய்துவிட முடிகிறது.

    குழந்தைகளோடு பேசி, விளையாடி, அவங்க விருப்பம், அவங்க நண்பர்கள், பள்ளியில் என்ன நடந்தது, என்ன பாடம் எழுதணும், என்பதைக் கேட்கும் பெற்றோர் எத்தனை பேர்??

    பதிலளிநீக்கு
  42. சில நாட்கள் கணினியின் பலன் கிடைக்காமல் போய் விட்டதால் பதிவின் வாதப் பிரதிவாதங்களில் முன்பே பங்கெடுக்க முடியவில்லை. பதிவுடன் இதுவரை வந்த எல்லா பின்னூட்டங்களையும் படித்த பிறகு எனக்கு ஒரு அடிப்படை சந்தேகம் எழுகிறது. உண்மையில் ஆத்திகம் நாத்திகம் என்பது குறிப்பிடுவதுதான் என்ன,?கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றியா.? நான் எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன், ஆத்திகம் நாத்திகம் இவற்றை மீறி ஆன்மிகம் என்று இருப்பதாக. அது வாழ்வியலை விளக்க வைக்க உதவும் கடவுள் இருக்கிறார் என்று சொல்பவனுக்கும் இல்லை என்று சொல்பவனுக்கும் சேர்த்து. ஒருவனிடம் “ நீ இப்போது இருக்கும் நிலைக்கு என்ன , யார் காரணம்”என்று கேட்டால், பலரும் பலவற்றை சுட்டிக் காட்டுவார்கள். விதி அல்லது கடவுள் 60%, பெற்றோர் 40%, ஆசிரியர் 30%, சமூகம் 60%, அடுத்தவன் 40%, அதிர்ஷ்டம் 50%, என்றெல்லாம் காரணம் காட்டுவார்களேயன்றி, நான் தான் பொறுப்பு என்று சொல்பவர் விரல் விட்டு எண்ணி விடலாம்.வாழ்வில் முன்னேற்றம் பெற சில நம்பிக்கைகள் உதவலாம். அதுவே மூட நம்பிக்கையாகும்போதுதான் கேள்விகளே எழுகின்றன. என் பங்குக்கு நானும் குழப்பி விட்டேனா.?நிச்சயம் இல்லை. I AM VERY CLEAR.!

    பதிலளிநீக்கு
  43. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  44. தந்தையின் இறுதிக் காலத்தில் பட்ட கஷ்டத்தைக் கண்டு மனம் வருந்திப் புலம்பியது படித்து கஷ்டமாக இருந்தது. தான் கஷ்டப்பட்டாலும் கடமையிலும் கடவுள் பக்தியிலும் வழுவாது இருந்த உங்கள் தந்தை நிச்சயம் கடவுளுக்குப் (எனக்கு நம்பிக்கையிருப்பதால் கடவுள் என்றே சொல்கிறேன்) பிடித்தவராகத்தான் இருந்திருப்பார். அவர் அந்த நிலையிலும் கடவுளைத் துதித்திருப்பாரே அன்றி எனக்கு ஏன் இந்தத் துன்பத்தைக் கொடுத்தீர்களென்று குற்றம் சாட்டியிருக்கமாட்டார். என்னால் முடியவில்லையே இறைவா என்று எண்ணிய போது கடவுள் அவரை உடனே ஏற்றுக் கொண்டாரென்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? அவருக்கு ஏன் இந்த வியாதி வந்தது என்று கேட்கலாம். கீதா சாம்பசிவம் அவர்கள் சொன்னது போல் தன் உடலைப் பற்றி கவனம் எடுத்துக் கொள்ளாததுதான் காரணம். கடவுள் ஏன் தடுக்கவில்லை என்று கேட்கலாம். அவர் பல உடல் உபாதைகள் மூலம் சிக்னல் .கொடுத்துருப்பார். நாம்தான் நம் உடலைப் பற்றி சட்டை செய்வதில்லையே.
    நிச்சயமாக உங்கள் மனதிற்கும் ஆறுதல் கிடைத்து நீங்களும் கடவுளைத் துதிப்பீர்கள் என்று நம்புகிறேன்

    பதிலளிநீக்கு
  45. கடவுள் இல்லையெனும் நாத்திகவாதிகளுக்காக:
    கடவுளிருந்தால் இப்படி நடக்குமா, கடவுளுக்குக் கண்ணில்லையா என்றெல்லாம் புலம்பும் சூழ்நிலை ஏன் வருகிறது என்று கேட்கிறீர்கள். கடவுள் நிச்சயம் வந்திருப்பார், நம் மனதில் 100% நம்பிக்கை இருந்திருந்தால். கிட என்ரால் கிடந்து, நட என்றால் நடந்து சுந்தரர் சொன்னபடியெல்லாம் கடவுள் கேட்கவில்லையா? கடவுளை (சிவனோ, விஷ்ணுவோ, இயசுவோ அன்றி அல்லாவோ) நேரில் கண்டதாக நாயன்மார்கள், ஆழ்வார்கள் பற்றிப் படிக்கிறோமே, இவையெல்லாம் சில நூற்றாண்டுகள் முன்பு நடந்ததுதானே. அவர்களை நம்ப வேண்டாம். வெகு அண்மைக் காலத்தில் விவேகானந்தரும் இராமகிருஷ்ண பரமஹம்சரும் கடவுளைக் கண்டதாகக் கூறவில்லையா? ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர் அவர்களின் பாடலுக்குக் கடவுளே நடனமாடியதாகக் கூறுகிறார்களே.
    இதெல்லாம் நம்ப முடியாது என் முன்னால் கடவுள் வந்தால்தான் நம்புவேன் என்கிறீர்களா...அவர்களைப் போல் உறுதியுடன் நினையுங்கள். கடவுள் கட்டாயம் வருவார்.
    நான் பார்த்திருக்கிறேனா என்று கேட்காதீர்கள். உணர்ந்திருக்கிறேன். கடவுள் இருக்கிறார் என்று நம்பினால் மட்டும் போதாது. அவர் வரவேண்டுமென்று உறுதியாக அதை மட்டுமே நினைத்துத் தியானம் செய்தால் நமக்கும் கடவுள் தோன்றுவார்.

    பதிலளிநீக்கு
  46. @கீதா சந்தானம், அருமையாகச் சொல்லி இருக்கீங்க. கடவுள் தோன்றுவது என்றால் உடனேயே ஆடை, ஆபரணங்கள் அணிந்து கிரீடம் வைத்துக்கொண்டோ அல்லது ஏசுவைப் போலவோ தோன்றுவார் என நினைத்தால் அது தப்பு. எந்த வடிவிலும் வருவார். ஆனால் நாம் அதை இல்லை எனில் அவரைக் கடவுளாக உணரவேண்டும். அதான் முக்கியம்.

    மஹா பெரியவர்கள் கூட உடல் உபாதையை அனுபவித்து விட்டே இறந்திருக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் கர்மவினை மட்டுமல்லாது பல பக்தர்களின் கர்மவினைகளைச் சுமப்பதும் இருக்கலாம். ஆனால் அவர்கள் உடல் தான் அந்தத் துன்பத்தை அனுபவிக்குமே தவிர மனம் சாந்தமாக சாதாரணமாக இருக்கும்.

    //Many saints have ignored their illness and succeeded in their divine quest.//

    Paramahamsa Yogananda

    பதிலளிநீக்கு
  47. இதெல்லாம் தெளிவின் நிலைகளின்றி வேறோன்றுமில்லை..
    உங்கள் தெளிவு கடவுள் நம்பிக்கையோடு இருப்பவர்களை பார்த்து சாமியாவது பூதமாவுது சிரிக்க வைக்குது...

    என் தெளிவு கடவுள் நம்பிக்கையற்றவர்களை பார்த்து இவ்வளவு எளிய விஷயம் புரியவில்லையா என புன் முறுவலோடு சிரிக்க வைக்குது...

    தெளிவான தெளிவாக நம்பி இறை நிலையின் இருப்பை நொடிப்பொழுதும் உணர்கிறேன் ..

    நீங்கள் அதையும் கடந்த தெளிவு என நம்பி இருப்பை மறுக்கிறீர்கள்....

    எல்லாம் நம்பிக்கையும் தெளிவும் பாற்பட்டது..

    ஒரு வாசகத்துக்கும் உருகாதவர்கள் திருவாசகத்துக்கு உருக தவறமாட்டார்... அப்படிப்பட்ட மொழியில் இறை இருப்பை பாட கேட்டவர்களுக்கு தேவையற்ற நாத்திக நாட்டமே வராது...

    பதிலளிநீக்கு
  48. //கடவுள் தோன்றுவது என்றால் உடனேயே ஆடை, ஆபரணங்கள் அணிந்து கிரீடம் வைத்துக்கொண்டோ அல்லது ஏசுவைப் போலவோ தோன்றுவார் என நினைத்தால் அது தப்பு. எந்த வடிவிலும் வருவார். ஆனால் நாம் அதை இல்லை எனில் அவரைக் கடவுளாக உணரவேண்டும். அதான் முக்கியம்.//
    கீதா சாம்பசிவம் அவர்கள் கருத்தை 100% ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  49. //அவர்களின் கர்மவினை மட்டுமல்லாது பல பக்தர்களின் கர்மவினைகளைச் சுமப்பதும் இருக்கலாம்.

    மகா பெரியவாள் மத்தவங்களோட கர்மவினையை சுமந்தாரா? இது மத்தவங்களை இன்சல்ட் செய்யறா மாதிரி இருக்குங்க கீதா சாம்பசிவம். 'தமிழ்நாட்டில் சுனாமி வந்தது ஜெயேந்திரரை கைது செய்ததன் பலன்' என்று சிலர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

    '100% நம்பிக்கை இருந்தா வருவார், வரலைனா 100% நம்பிக்கை இல்லைனு பொருள்' போன்ற வட்டவாதங்கள் தான் கண்மூடித்தனத்தின் வேர் என்று நினைக்கிறேன், கீதா சந்தானம்.

    பதிலளிநீக்கு
  50. சுவாரசியமான பின்னூட்டம் பத்மநாபன். 'தெளிவையும் தேவையையும்' தொடர்ந்து சொல்ல எண்ணியிருக்கிறேன்.. படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

    பதிலளிநீக்கு
  51. //அவர் அந்த நிலையிலும் கடவுளைத் துதித்திருப்பாரே அன்றி எனக்கு ஏன் இந்தத் துன்பத்தைக் கொடுத்தீர்களென்று குற்றம் சாட்டியிருக்கமாட்டார்.

    possible கீதா சந்தானம். 'தந்தையின் தெய்வ நம்பிக்கை அவருக்குப் பலன் தரவில்லை' என்று எழுதியவர் எண்ணுவது சர்ச்சைக்குரியது என்றே நானும் நினைக்கிறேன். 'கடவுளைக் கும்பிட்டதால் கஷ்டப்பட்டார்' என்ற கடிதத்தின் தொனி, எழுதியவருடைய மனநிலையைச் சுட்டுகிறதே தவிர கஷ்டப்பட்டவரின் மனநிலையை அல்ல. நீங்கள் சொல்வது போல் அவர் அந்த நிலையிலும் "இந்தக் கொடுமையோடு நிறுத்திக் கொண்டாயே ஈஸ்வரி" என்று ஒருவித நிறைவோடு கூட அம்பாளைக் கொண்டாடியிருக்கலாம். யாருக்குத் தெரியும்?

    நீங்க தொட்டிருப்பது தெளிவின் பாதை என்று நினைக்கிறேன். எவருமே உதவாத நிலையில், பிணியின் கொடுமையில், தந்தைக்குப் பிடிப்பாக இருந்தது அவருடைய நம்பிக்கையே என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் அவரைப் பொறுத்தமட்டில் ஒரு அமைதி கிடைக்கும். எழுதியவருக்கு வேறு வகையில் அமைதி கிடைப்பது கடினம்.

    பதிலளிநீக்கு
  52. s.raghavan, chennaiமார்ச் 06, 2012

    கண்டிப்பாக பக்தர்களின் பாவங்களைச் சுமந்தார். காஞ்சிப் பெரியவாள் அப்படி சுமக்காமல் இருந்தா இன்னும் பாவம் தலை விரிச்சு ஆடும். உனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இதான் உண்மை. உண்மையென்று நம்பும் கோடானு கோடி பேர் இருக்கும் பொழுது உங்களைப் போல் நாலு பேர் நாலு விதமா எழுதுவது கவலையில்லை. பிறரோட பாவங்களையும் தேவையில்லாமல் சுமக்கிறாரே என்று நாங்கள் வேண்டுமானால் கவலைப்படலாம், ஆனா மகான்கள் அப்படி நினைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  53. S. Raghavan, Chennaiமார்ச் 06, 2012

    பிறரோட நலனுக்காகப் பிரார்த்தனையும் பூஜையும் செய்வதே ஆத்திகத்தின் குறிக்கோள். சர்வே ஜனா, சமஸ்த லோகமும் சுகமாக இருக்க வேண்டும் என்று பொது ஆசீர்வாதம். ஆத்திகம் ஆழமான கடல் அப்பாதுரை அவர்களே. மேலே மிதக்கிற கட்டைகளையும் கழிவுகளையும் வச்சு கடலை எடைபோடுறது சரியில்லை. இது எதற்கு சமானம் என்று உங்களுக்கே தெரியும்.

    பதிலளிநீக்கு
  54. S. Raghavan, CHennaiமார்ச் 06, 2012

    பாவங்களை இங்கே போடவும்னு தபால் பெட்டியா வைக்க முடியும்? அடுத்தவங்களோட பாவங்களை நான் ஏற்றுக்கிறேன், அவர்களை சிரமப் படுத்த வேண்டாம் என்று நினைப்பது எத்தனை உயர்ந்த மனம்! யாருக்கு வரும்? எத்தனை மகோன்னதமான தியாகம்! இதை இன்சல்ட் என்று எப்படி உங்களால் சொல்ல முடியுது அப்பாதுரை அவர்களே? என்னால் நம்பவே முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  55. மகா பெரியவாள் மத்தவங்களோட கர்மவினையை சுமந்தாரா? இது மத்தவங்களை இன்சல்ட் செய்யறா மாதிரி இருக்குங்க கீதா சாம்பசிவம். 'தமிழ்நாட்டில் சுனாமி வந்தது ஜெயேந்திரரை கைது செய்ததன் பலன்' என்று சிலர் சொன்னது நினைவுக்கு வருகிறது//

    அப்பாதுரை, மன்னிக்கவும், ஶ்ரீரமணரையும் மற்றச் சில மஹான்களையும் நினைத்துக்கொண்டு பொதுவில் மஹா பெரியவர்கள் என எழுதியது பரமாசாரியாரை மட்டும் குறிப்பிடுவதாக ஆகிவிட்டது. நான் அவரைக் குறிப்பிடவில்லை. ஶ்ரீபரமஹம்ச யோகானந்தரையும் படித்துக்கொண்டு அதில் அவர் குறிப்பிட்டிருந்த இந்தக் குறிப்பிட்ட வாக்கியத்தை நினைத்துக்கொண்டு அதை என்னுடைய மொழியில் எழுதியதன் விளைவு.

    நான் படித்தது இது தான்.

    A guru's work in the world is to alleviate the sorrows of manikend, wthether through spiritual means or intellectual conusel or will power or physical transfer of disease.

    To set an example for disciples, he chooses to bear bodily pain stoically.

    பொதுவான இந்தக் கருத்தை மனதில் வைத்து எழுதியதில் தவறான பொருள் வந்து விட்டது. என்றாலும் அதை நீக்கப் போவதில்லை. இதையும் சேர்த்துப் படித்தால் புரிந்து விடும். நன்றி.

    பதிலளிநீக்கு
  56. நான் அவரைக் குறிப்பிடவில்லை. //

    நான் அவரை மட்டுமே குறிப்பிடவில்லை//

    என்று வந்திருக்கணும், மறுபடியும் தப்பு வந்திருக்கு. பொதுவாக ஆன்மிகப் பெரியோர்கள் எல்லாருமே பக்தர்களின் பாவங்களைச் சுமக்கின்றனர் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில். திரு ராகவன் என்பவர் கூறி இருப்பது போல் அப்படிச் சுமக்கவும் மனோதைரியம் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  57. 100% நம்பிக்கை இருந்தா வருவார், வரலைனா 100% நம்பிக்கை இல்லைனு பொருள்' போன்ற வட்டவாதங்கள் தான் கண்மூடித்தனத்தின் வேர் என்று நினைக்கிறேன், கீதா சந்தானம்.//


    இது ஒண்ணும் கண்மூடித் தனம் கிடையாது. நம்பிக்கை தான் எல்லாவற்றுக்குமே ஆதாரம். கொஞ்சம் யோசிங்க. உங்களுக்கே புரியும். புரிந்திருக்கும். கடவுள் இல்லை என்பவருக்கும் வேறே ஏதோ வழியில் அவர் தன் இருப்பைக் காட்டி இருப்பார். கீதா சந்தானம் சொல்வது அதை உணர்வது குறித்த நம்பிக்கையை. உணர்தல் என்பது எல்லாராலும் முடியாது. அந்த உணர்தல் எப்போது, யாரால், என்று நேரும் என்பதையும் எவராலும் சொல்ல முடியாது. ஆகவே தான் முதலில் 100% நம்பி அவனிடம் சரணடையவேண்டும் என கீதா சந்தானம் சொல்லி இருக்கிறார்.

    இது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  58. மகா பெரியவர்கள் என்று பொதுவில் சொன்னதாக எனக்கும் உடனே தோன்றவில்லை கீதா சாம்பசிவம். மகா பெரியவாள் என்றதும் காஞ்சிப் பெரியவாளைப் பத்திச் சொனீங்கன்னு சட்டென்று நினைச்சேன். பழக்கக் கோளாறு :) என் தவறு.

    எதையும் 100% நம்புவது கண்மூடித்தனம் இல்லை. சரியே. நடக்காவிட்டால் 100% நம்பிக்கை இல்லை என்று சொல்வது வட்ட வாதம். "100% நம்பு, கடவுள் தெரிவார்; கடவுள் தெரியலையா? அப்ப உன் நம்பிக்கை 100% இல்லை" என்று சொல்வதைத் தான் கண்மூடித்தனத்தின் வேர் என்றேன். தன் நம்பிக்கை 100% இல்லை என்ற எண்ணத்தை கேட்பவர் மனதில் நிரந்தரமாக நிலைக்கச் செய்யும் வாதம். எதைச் செய்தால் 100% ஆகும் என்ற தொடர்ந்த தேடலில் கண்மூடித்தனங்கள் தொடங்குகின்றன. கடிதம் எழுதியவர் கேட்ட கேள்வி - 'மீண்டும் அந்த தெய்வத்தின் காலிலேயே விழுவது எதனால்' என்ற அந்தக் கேள்விக்கும் இது தான் பதில். அவர் தெய்வத்தின் காலிலேயே விழுந்தது தன் நம்பிக்கையின் மேலிருந்த சந்தேகத்தினால் என்றே நினைக்கிறேன். கடவுள் ஒரு தமாஷான புதிர். "எப்போ வருவார் எப்படி வருவார் எப்படி தெரிவார் என்றெல்லாம் சொல்ல முடியாது; ஆனா எப்படியாவது ஏதாவது எப்பவாவது நல்லது நடந்தா அப்ப கடவுள் வந்தார்னு அர்த்தம்" என்ற வாதம் எத்தனை நாள் செல்லுபடியாகுமோ தெரியவில்லை :)

    தனிப்பட்ட யாரையும் தாக்க எண்ணவில்லை Raghavan. இன்னொருவர் பாவங்களை சுமப்பது மிகப் பெரிய தியாகம் தான், சந்தேகமேயில்லை. மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய தியாகம். இன்றைய கிறுஸ்தவ மதமே அதன் அடிப்படையில் உருவானது தான். நான் இன்சல்ட் என்று குறிப்பிட்டது அவர் மத்தவங்களுடைய பாவங்களை சுமக்கிறார் என்பதில் புதைந்திருக்கும் "மற்றவர்கள் பாவம் செய்கிறவர்கள்" என்ற கருத்தை. தி.கீதா சாம்பசிவம் எழுதியதை முழுதும் புரிந்து கொள்ளாமல் என் கருத்தை வெளியிட்டது என் தவறு.

    உங்களிடம் ஒன்று கேட்கலாமா? ஜெயேந்திரரும் மற்றவர்களுடைய பாவங்களைச் சுமக்கிறாரா? என்ன நினைக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  59. நான் இன்சல்ட் என்று குறிப்பிட்டது அவர் மத்தவங்களுடைய பாவங்களை சுமக்கிறார் என்பதில் புதைந்திருக்கும் "மற்றவர்கள் பாவம் செய்கிறவர்கள்" என்ற கருத்தை. ///


    me 100% pavap patta athma than. appurama varen. ippo velai irukku. :)))

    பதிலளிநீக்கு
  60. வணக்கம், எனக்கு தெளிந்த குட்டையிலேயே மீன் பிடிக்க தெரியாது, நான் எங்கு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க போகிறேன். நாத்திகம், ஆத்திகம் அப்படியே ஆன்மீகம்ன்னு பதிவிலிருந்து பின்னூட்டம் வரை இன்னும் பரபரப்பாகவே இருக்கு. நான் கடவுளை நம்பி பெற்றதும், கடவுளை நம்பாமல் அற்றதும் (இழந்ததும்) இதுவரை ஏதும் இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை அதனால் கடவுளையும் நம்புபோவோம்னு நம்பிகிட்டு இருக்கேன்.
    நான் என் மகள் கேட்கும்போது சொல்லுவது இதுதான், அப்பாவின் மீதான நம்பிக்கை ட்ரஸ்ட், கடவுள் மீதான நம்பிக்கை ஃபெயித். நீ ஸ்லோகங்கள் சொல்லிப் பழகினால் நல்ல நினைவாற்றல் வளரும் என்றுதான் சொல்ல சொல்லுவேன். மற்றபடி கடவுளை சூரணம் மற்றும் லேகியம் விற்பவர்கள் போல இத சாப்பிட்டா அது சரியாப் போயிடும் என்று சித்தரிப்பதும் இல்லை.
    உடம்பு நன்றாக வேண்டி மொட்டையடிப்பவர்களை பார்த்து உயிர கொடுத்த சாமிக்கு மயிரயா கொடுத்த என்று கேள்வி கேட்ட காலங்கள் வேறு, அதையே உனக்கு கொடுக்க என்னிடம் காசு பணம் இல்லாமல் இருக்கலாம், மாறாக என் சிரை மழித்து, மற்றவர்கள் ரசிக்கும் அழகை சிதைத்து, மற்றவர்கள் கேளிக்கைக்கு உள்ளாகியும், மனம் பண்படுவதற்க்கு உதவுவதாக அமைவது அந்த காணிக்கை என எண்ணச் செய்வது வேறு ஒரு காலம்.
    அறிவியலார்கள் பூமியை முதலில் தட்டை என்றார்கள், பின்பு பூமி உருண்டை என்றவனை ஓட ஓட விரட்டினாகள். இவ்வளவு அறிவியல் ஞானம் பெறுவதற்க்கு முன்பே கோவில்களில் நவக்கிரகங்களையும், மற்ற வாழ்வியல் கோட்பாடுகளை, நெறிமுறைகளை மந்திரங்காளாகவும் சொல்லிவிட்டு போய் இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
    அவர்களை தொடர்கிறேன்... உங்க பதிவுகளை தொடர்வதைப் போல.

    பதிலளிநீக்கு
  61. வாசித்த இடுகை ஒன்றிலிருந்து http://rasekan.blogspot.com/2012/01/blog-post.html சில வரிகள்
    .....
    கடவுளுக்கு பயப்படுவதில் உள்ள அதே பயத்தை சமூக பொறுப்பிலும் காட்டி தொலையுங்கள், உங்களது சுய வணக்கங்கள் இந்த சமூகத்திற்கு எந்த பலனையும் தரவில்லை, மறைமுகமாக தருவதாக சொல்லும் அந்த பலன்கள், உங்களது நல்ல நடவடிக்கைகளால் நேரிடையாகவே இந்த சமூகத்திற்கு கிடைக்கும். என்றோ கிடைக்கும் சொர்க்கம் என்ற நம்பிக்கையை கொஞ்சமேனும் நேரிடையாக கிடைக்கும் சமூக நல்காரியங்களுக்கு செய்துபாருங்களேன்! உங்கள் மதங்களில் உள்ள நல்லதுகளை சொல்லி, எல்லோரையும் யோசிக்கவைப்பதை விட , நீங்களே நல்லதொரு முன்மாதிரி ஆகிவிடுங்கள், பக்கத்தில் உள்ளவர்கள் தாமாகவே உங்களின் வாழ்கை முறைக்கு ஆசைபடுவார்கள். நாம் வணங்கும் விதங்கள் யாரையும் இம்ப்ரஸ் செய்வதாக நினைக்கவில்லை, வாழ்வியல் முறையே உங்களை பற்றி மற்றவர்களிடம் வித்தியாசபடுத்தும்.


    நாத்திகம் பேசி அலைபவர்களுக்கும் இதேதான், சிறிய சிறிய பிரச்சனைகளையே உங்களால் தீர்க்கமுடியாத போது , கடவுள் குறித்த அறிவார்ந்த?! பேச்சை டாஸ்மார்க் உதவியோடு பேசுவதை விட எதையாவது செய்து தொலைக்கலாம். நாத்திகம் - ஆத்திகம் இரண்டை குறித்தும் சொல்லும்போது மட்டும் சிறிய எரிச்சல் பாணியை பின்பற்றியதற்கு காரணம், - நல்ல செயல் எது என்பதில் இங்கே யாரும் போட்டியிடுவதாக தெரியவில்லை, கடவுளை புரியவைக்கவும், மறுக்கவைக்கவுமே அதிகம் பேசப்படுவதாக தெரிகிறது! உலகில் நல்லதொரு சொல், நற் - செயல் மட்டுமே!
    .....

    பதிலளிநீக்கு
  62. அப்பாடா.! என்னைப் போல் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள்.விவாதங்கள் எதற்கு என்று புரிதல் வேண்டும் முதலில். எல்லாக் கருத்துக்களையும் கோர்த்து இன்னொரு பதிவு இடுவீர்களா.?

    பதிலளிநீக்கு
  63. நன்றி, பாலராஜன்கீதா. ம்ம்... ஐநா சபை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  64. இன்னும் ஒரு சில தலைமுறைகளில் பித்ரு, சத்ரு, கடவுள் எனக்கு செய்யவில்லை என்று இந்த பிரச்னை (உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியவர் போல்) வராது

    ஜனனம் எடுத்தால் கஷ்டம், கருமாதி என்று - வரும் தலைமுறைகளில் "ஆணும் ஆணும் (Gay) - பெண்ணும் பெண்ணும் (லெஸ்பியன்)" என்று கல்யாணம் செய்வது ஒவ்வொரு மாநிலமாக / நாடாக உருவெடுக்கும்போது மனித குல "ஜனனம்" கிடையாது - அப்பறம் கஷ்டம் எங்கே !!

    அனேகமாக படைக்கும் வேலைஇல்லாமல் பிரம்மா, கால் சென்டரில் வேலை கேட்கலாம் அல்லது வேலை இல்லாதோர் உதவி தொகை கேட்டு அரசாங்க அலுவலகத்தில் தொங்கலாம் !!

    பதிலளிநீக்கு
  65. பெயரில்லாமார்ச் 17, 2012

    நீங்களா எழுதிட்டு யாரும் அனுப்பியதா சொல்லும் தந்திரம். குறையவே எழுதியவர் பெயரேனும் போட்டிருந்தேல் நம்பலாம். ஏதுக்கு நீங்களே எழுதி இன்னொருவர் எழுதியதாகத் திரிக்க வேணும்? நம்பினார் கைவிடப்படார் இது வேதம். நம்பிக்கையாளர் இப்படி எழுத மாட்டார்.

    பதிலளிநீக்கு
  66. கடவுளும் மதமும் காணாமல் போக வேண்டுமென்றால் நிறைய உழைக்க வேண்டும். என்னைப் போல் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  67. பெயரில்லாஜூலை 01, 2012

    இயற்கை என்பது கடவுள் என்று மதங்களில் உரு மாறியிருக்கிறது. இங்கே இயற்க்கை என்பது சக்தி.
    கனவுக்கு விளக்கம் தேடுவதில்லை நாம். பயித்தியம் பிடிக்கக்கூடாதென்று வாழ்க்கைக்கு விளக்கம் தேடுகிறோம். பார்ப்பதோ உணர்வதோ உண்மையில்லை ஒரு நிலையில்.

    The world is a construct given to us. We embrace and hold on to our Identity because we do not have any choice emotionally. Intellectually, we can free ourself from this bondage. Think of the universe as full of atoms and molecules. Identities dissolve.

    We do not have any freedom from physical suffering. But there is freedom from mental suffering. Prayer is designed to alleviate pain, mental suffering and sometimes it helps with physical suffering. Can we harness the power the Nature to make our illusory world better for us? That is the purpose of Prayer.

    Is learning just a linear process? That is what our experience says. But the answer is no. There are people in this world who have extraordinary abilities. If you google Rex and 60 minutes, you will see something remarkable. A born blind, mentally challenged person making music. If Rex can do it, can we do it too?

    Our brain is cause and solution to all of lives problems. Science hasn't understood human brain completely. Prayer is designed to harness from nature, the power to alter our reality. We do not not have to believe in anything to try this. That is why meditation works for anyone. Western Science studies meditation.

    பதிலளிநீக்கு
  68. வாவ்! அசந்தே போயிட்டேன், பதிவையும் பின்னூட்டங்களையும் வாசித்து. சமீபத்தில் மரபின் மைந்தன் அவர்கள் பதிவில், அவர் ஜெயகாந்தன் அவர்கள் சொன்னதாகக் குறிப்பிட்டதுதான் நினைவு வந்தது - "விஸ்வரூபம் என்பது, நான் காட்டுவதல்ல. நீங்கள் காணுவது".

    பதிலளிநீக்கு
  69. மிகவும் நன்றி கவிநயா.

    (தொடர்ந்து எழுத வேண்டும் - என்ற முனைப்பு இருக்கிறது :)

    பதிலளிநீக்கு
  70. அப்பதுரை அவர்களே! ஜாபாலி பிராமணன் அல்ல! அவனுடைய தாயாய் பெயர் பாலா! அரண்மனைதாதி! அரசர்கள்,மந்திரிகள்,தளபதிகள் தங்கள் மனைவிமாரை அடிகடி தோந்திரவு செய்தால் அழகு கெட்டுவிடும்.அதனால் பாலா மாதிரி தாதிகள் பயன் படுத்தப்படுவார்கள் .அரசனும்,இளவரசனும் ,மந்திரியும்,தளபதியும் இந்தபெண்களை தங்கள் உணர்வுகளுக்கு தீனியாக்கிக்கோள்வார்கள்.அப்படி பாலா என்றதாதிக்குப்பிறந்தவன் தான் சத்த்யகாமன்.அவனுக்கு வியசனிடம் படிக்க விருப்பம்.ஆனால் அவன் என்ன குலம் என்பது தெரியாததால் வியசன் மறுத்துவிடுகிறான்.அவன் தாயார் பாலா.இனியார்கேட்டாலும் எனக்கு அம்மாவைத்தான் தெரியும்.யரோடு கூடியதி ஜனித்தேன் என்பது தெரியாது. பாலவால் ஜனித்தேன் என்பது சத்தியம் ஆகவே என்பெயரை "ஜாபாலி"என்று என் தாயார் கூறினார். என்று கௌதமமுனிவரிடம் கூருகிறான். உண்மையைச் சொன்ன உனக்கு "சத்யகாம ஜாபாலி"என்று பெயர் வைக்கிறேன் வா!உனக்கு கற்றுத்தருகிறென்.வேதம் மட்டுமல்ல,வேத மறுப்பையும் என்கிறார் கௌதமர்.---காஸ்யபன்..

    பதிலளிநீக்கு
  71. நன்றி காஸ்யபன் சார். இந்த ஜாபாலி பிறப்புக் கதையும் படித்திருக்கிறேன். வால்மீகி ராமாயணத்தில் ஜாபாலியை ரிஷி என்றே அழைத்திருப்பதால் (ராமன் கூட அப்படியே அழைப்பதாக வருகிறது) நான் அவ்வாறு நினைத்தேன். ம

    நீங்கள் சொல்லியிருப்பதிலும் ஜாபாலியின் தாய் பிராமணராக இருந்தால் ஜாபாலியும் பிராமணர் தானே? இல்லையா? தந்தை வழி மட்டுந்தானா இனம்?

    ஜாபாலியின் கதை மிக சுவாரசியமாக இருக்கும் போலிருக்கிறது. தமிழில் அதை ஒரேயடியாக அமுக்கிவிட்டார்கள். ராமனை எதிர்த்துப் பேசிய ஒவ்வொரு வரியிலும் யதார்த்தம் அறிவு தொனிக்க, ராமன் வெறும் விதண்டா வாதம் பேசுவதாகவே தோன்றியது. வால்மீகி இப்படி கதையமைத்திருக்க வேண்டிய அவசியம் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். அடுத்த முறை சாவகாசமாகப் பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  72. அப்பாதுரை அவர்களே! ஜாபாலி கதைய்க்கு ஆதாரம், உபநிஷதுதன்.Off hand நினவு தட்ட மறுக்கிறது.செம்மலரில் சிறுகதயாக எழுதியுள்ளென். முது மீனட்சி அவர்கள் இந்தியிலும் ,சம்ஸ்கிருதத்திலும் மொழி பெயர்த்துள்ளார்கள். என்னுடைய இடுகையிலும் பிரசுரமகி யிருந்தது. ஜாபாலி அனுமனுக்கு எவ்வளவோ உபதெசம் செய்தும் அவன் எடுபிடியாகவே வாழ்ந்தான் .அவனுடைய பரக்கிரமத்தை எடுத்துச்சொல்லியும் பயனில்லாமல் போய்விட்டது.ஒருவேளை அனுமன் அதனை உணர்ந்திருந்தால் வால்மீகியின் "அனுமாயணத்தை " படித்திருப்பொம் ."ராமாயணத்தை" அல்ல---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  73. பேசாமால் ஓய்வு இருக்கும் போது உங்க ஒவ்வொரு பதிவுக்கு வந்துள்ள விமர்சனங்களை படித்தாலே கொஞ்சம் புத்திசாலியாகிவிடலாம் போலிருக்கு. திகைத்துப் போய்விட்டேன்

    பதிலளிநீக்கு