2010/10/01

கடவுள் வைரஸ்

சிறுகதை


        புது உலகத்திற்கு முன்பு ஆண்களும் பெண்களும் இணைந்து வாழ்ந்ததைப் பற்றிப் படித்திருக்கிறேன். தாய், தந்தை, கணவன், மனைவி என்று போலி உறவுமுறைகளுடன் வாழ்ந்ததாகப் காலச்செய்திப் படங்களில் பார்த்திருக்கிறேன். தொல்கலை நூலகத்தின் முப்பதாவது அடித்தளத்தில் ஒன்றிரண்டு முறை பார்த்த படங்களில், பெண்கள் கருப்பெட்டிகளை வயிற்றில் சுமந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். 'பெண்களும் ஆண்களும் எப்படி இணைந்து வாழ்ந்தார்கள், எத்தனை பிற்போக்கான வாழ்க்கை நெறி' என்று மற்ற ஆண்களுடன் அடிக்கடி வியந்திருக்கிறேன். நான் வெளிவந்த இருபத்துமூன்று ஆண்டுகளில், பெண்களை நேரில் பார்த்ததில்லை. உலகப் பொதுவிழா விருந்தின் போது, தடுப்புச்சுவருக்கப்பால் இருக்கும் பெண்கள் கூட்டத்தை ஒளிப்படத்தில் காண்பதோடு சரி. நேரில் சந்திக்கும் வாய்ப்பே கிடையாது.

இருபது நாட்களுக்கு முந்தைய நிகழ்ச்சி, எல்லாவற்றையும் அடியோடு மாற்றிவிட்டது.

தொழிலறையிலிருந்து வெளிவந்தவன், வழக்கம் போல் பொழுதுபோக்குத் திரையைச் சுட்டினேன். கோள் செய்திகள், விளையாட்டு என்று வரிசையாக ஒளியலை மாறிக் கொண்டே வர, ஒன்றும் பிடிக்காமல் நிறுத்தச் சொன்னேன். அணைந்த திரை விழித்துக் கொண்டது. நிறுத்து என்றேன். நின்று அணைந்த திரை, மறுபடி நான் சொல்லாமல் சுட்டாமல், தானாகவே விழித்தது. ஏதோ கோளாறு என்று எழுந்து சுவற்றிலிருந்த விசையை அழுத்தி நிறுத்தியும், திரை தானாகவே விழித்துக் கொண்டது. பழுது மையத்திற்குத் தெரிவிக்க நினைத்தேன்.

"உட்கார்" என்றது, திரையிலிருந்து வந்த குரல். அதிர்ந்து போய் அமர்ந்தேன். திரையில் ஒரு நிழலுருவம்.

"யார் நீ?" என்றேன்.

"என்னைக் கடவுள் என்பார்கள்"

"இது புது உலகம். போ, போ, பக்கத்துக் கோள் எங்காவது போய் நிதி கேட்டுப் பார், கடவுள் தேவையில்லை" என்று ஒளியலை மாற்றச் சொன்னேன். நிதி திரட்டுவோர் தொல்லை தாளவில்லை.

அடுத்த ஒளியலையிலும் தோன்றிய அதே உருவம், "தேவை இருக்கிறது. தேவையை வலியுறுத்தும் அதிகாரமும் எனக்கு இருக்கிறது" என்றது.

"நீ யார்? மைய அதிகாரியா? உன் அடையாளம் என்ன, சொல்?" என்றேன் கோபமாக.

"இந்தக் கோள், உலகம், நீ... எல்லாமே என் அடையாளம் தான். நீ எனக்காக ஒரு மகத்தான காரியம் செய்யப் போகிறாய்"

"நானா? என்ன செய்ய வேண்டும்?" சற்றுப் பேச்சு கொடுத்தேன். திசை திருப்ப வேண்டும்.

"இரண்டு நாளில் உலகப் பொதுவிழா வருகிறது அல்லவா? விருந்து முடிந்ததும் நீ அங்கேயே பின்தங்க வேண்டும். அனைவரும் வெளியேறியதும், அறை மூலையில் இருக்கும் தடுப்புச்சுவர்க் கதவை நீ திறக்க வேண்டும்"

"வேண்டாத வம்பு. கதவைத் திறந்து சுவருக்கப்பால் போக எனக்கு அனுமதியில்லை. பூட்டிய கதவை என்னால் திறக்க முடியாது. மேலும், விருந்து முடிந்ததும் நான் தங்கிவிட்டால் தானாகவே செய்தி போய் என்னை வெளியேற்றி விடுவார்கள்"

"பூட்டைப் பற்றிக் கவலைப்படாதே. உன்னைப் பற்றிய செய்தி எதுவும் போகாது"

"எப்படிச் சொல்கிறாய்?"

"சொன்னேனே, நான் கடவுளென்று? எனக்கு சக்தியிருக்கிறது. நீ கதவைத் திறந்தால் போதும், சுவருக்கப்பால் போக வேண்டாம்"

"உனக்கு சக்தியிருக்கிறதென்றால், நீயே கதவையும் திறக்க வேண்டியது தானே?"

"நீ தான் திறக்க வேண்டும். உன்னை ஆட்டுவித்தால் தானே நான் ஆள முடியும்?"

"புரியவில்லையே?"

"புரிந்து கொள்வாய். கதவைத் திறந்தால் போதும். அதுவே மகத்தானது"

"அதிலென்ன மகத்துவம்?"

"திறந்த கதவுகள், மறந்த உண்மைகளுக்கு விடுதலை தரும். அதில் மகத்துவம் வரும்"

"வேறே யாரையாவது கேட்பது தானே?"

"நீ தான் தகுந்தவன்"

"நான் முடியாதென்றால்?"

    மையத்திற்குச் செய்தி அனுப்பியதும் உடனே வரச் சொன்னார்கள். நான் கடவுளைச் சந்தித்த விவரமெல்லாம் கேட்டுக் கொண்டு, பரிசோதனைக்குப் பின், என்னை அடித்தளத்தின் நாற்பதாவது நிலையில் மையத்தலைவரைச் சந்திக்கச் சொன்னார்கள். என்னைப் பெயர் சொல்லியழைத்துப் புன்னகை செய்தார் மையத்தலைவர். "கடவுள் கிடையாது என்று உனக்குத் தெரியுமில்லையா?" என்றார் கனிவுடன். "கவலைப்படாதே. கடவுள் சொன்னதை மறைக்காமல், ஒன்று விடாமல் மீண்டும் என்னிடம் சொல்"

"உலகப் பொதுவிழா விருந்து முடிந்ததும் பின்தங்கி, எல்லோரும் வெளியேறிய பின், மூலைக்கதவைத் திறக்க வேண்டும். அவ்வளவு தான்"

"ஏன்?"

"ஏனென்று சொல்லவில்லை. ஆனால் கதவைத் திறப்பது மகத்தான காரியம் என்று..."

"நீ இதையெல்லாம் மறப்பது தான் மகத்தான காரியம்"

"முடியாதென்றால் தொல்லை கொடுப்பேன் என்றதே உருவம்?"

"ஒரு தொல்லையும் கிடையாது. கடவுளுக்கு சக்தியில்லை என்பது எப்பொழுதோ நிரூபிக்கப்பட்டு விட்டது"

கேட்பதா வேண்டாமா என்று தயங்கினேன். "இதற்கு முன், என்னைப் போல் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு யாராவது வந்திருக்கிறார்களா?" என்றேன் மெதுவாக.

என்னை நேராகப் பார்த்த மையத்தலைவர், எதிரிலிருந்த திரையைத் தொட்டார். திரையில் தோன்றிய வரிகளைப் படித்துவிட்டு "வந்திருக்கிறார்கள். ஆயிரம் வருடங்களில் நூறு பேர்" என்றவர், எதையோ கவனித்துவிட்டு "உனக்கும் அவர்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது" என்றார். என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு "ஒரு வேறுபாடும் இருக்கலாம்" என்றார்.

"என்ன ஒற்றுமை?"

"நூறு பேருக்கும் உன்னுடைய பெயர் தான்"

"எனக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?"

"நீ இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறாய். அவர்கள் எல்லாரும் உடனடியாக உயிர்பிரி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்"

கண்கள் இருண்டு, மூச்சு முட்டி, நான் மீண்டுவரச் சில நொடிகளாயின. "என்னையும் உயிர்பிரி நிலையத்திற்கு அனுப்புவீர்களா?" என்றேன்.

"கடவுளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?" என்றார்.

"ஒன்றும் தெரியாது. கடவுளைப் பற்றி பழங்காலச் சுவடுகளிலும் படங்களிலும் பார்த்திருக்கிறேன். ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் கடவுளுக்கெதிராக நடந்த எழுச்சியில் மக்கள் கடவுளை மறந்துவிட முடிவு செய்தனர் என்று படித்திருக்கிறேன். திரையில் தோன்றிய உருவம்.." என்று சொல்லிக் கொண்டிருந்த என்னை நிறுத்தினார்.

"நிச்சயமாக வைரஸ். புது உலக முறைகளுக்கும் விதிகளுக்கும் இடையில் எங்கோ முடங்கிக்கொண்டு சில நூறு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளிவந்து தொந்தரவு தரும் கிருமி. ஒவ்வொரு முறையும் உன் பெயர் கொண்ட நபரையே அது தாக்குவது தான் வியப்பு. உன்னை வைத்தே அந்தக் கிருமியைக் கண்டுபிடிக்கலாமோ என்று எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. என்றாலும், இதையெல்லாம் மறந்துவிடு. அதுதான் உனக்கும் நல்லது"

"கதவுக்கப்பால் என்ன இருக்கிறது?" என்று கேட்டேன், நிதானமாக.

சற்று யோசித்து விட்டு, "அனைவருக்கும் தெரிந்தது தானே?" என்றார் மையத்தலைவர்.

"எனக்குத் தெரியாது, சொல்லுங்களேன்?"

"பெண்கள்! பூட்டிய கதவுக்கப்பால் பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் இணைந்து வாழ முடியவில்லை என்பதால் புது உலகத் தொடக்கத்திற்கு முன்பே பெண்களை நம் வாழ்விலிருந்து அகற்றிப் பூட்டி விட்டோம் அல்லவா? ஒருவருக்கொருவர் தேவையில்லை என்பது நிரூபிக்கத் தேவையில்லாமல் தெளிவாகி விட்டதே?" என்றார். நிதானித்து, "இந்தக் கேள்விகள் எல்லாம் உன்னை ஆபத்தில் கொண்டு விடும். கடவுள் வைரஸ் உன்னைப் பாதித்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. உன் மூளையிலிருந்து வரும் எண்ண அலைகளை பரிசோதனை செய்து பார்த்து விடுவோமா?"

'வைரஸ் என்றால் என் மனதிலிருந்ததை அதனால் எப்படிப் படிக்க முடிந்தது?' என்று கேட்க நினைத்தேன். பயமாக இருந்தது. ஏதாவது கேட்டால் பரிசோதனை என்று தொடங்கி உயிர்பிரி வரை போய்விடப் போகிறதே என்று அமைதியாக எழுந்தேன். "வேண்டாம், நன்றி. நான் வருகிறேன்" என்றேன்.

"பயப்படாதே. நீ இங்கே வந்ததை நான் மறந்து விட்டேன். இங்கு வந்ததை நீயும் மறந்துவிடு" என்றார்.

வெளியேறினேன். வீட்டுக்குள் நுழைகையில் பொறி தட்டியது. நான் பயந்தேன் என்பது மையத்தலைவருக்கு எப்படித் தெரிந்தது?

        லகப் பொதுவிழாவின் போது எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். மற்ற ஆண்களுடன் விளையாட்டிலும் கேளிக்கையிலும் பொழுதைப் போக்கிவிட்டு விருந்துக்குச் சென்றேன். விருந்து முடியும் நேரம் அருகில் இருந்தவனுடன் பேசிக்கொண்டிருக்கையில், திடீரென்று "அதோ எதிரில் நிற்கிறாரே, அவர் தான் புது மையத்தலைவர். எனக்குத் தெரிந்தவர்" என்றான்.

"பழைய தலைவர் என்ன ஆனார்?" என்றேன்.

"மையத்திற்கு எதிராக நடந்து கொண்டாரென்று சொல்கிறார்கள். நாளைக்குத் தீர்ப்பாம். அவரை உயிர்பிரி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறார்களாம். இரண்டு நாள் முன்பு அவரைச் சந்தித்த நபர் ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி. கடைசியாகச் சந்தித்த நபர் பற்றிய விவரங்களெல்லாம் முறைப்படி அழிக்கப்பட்டனவாம். என்ன விவரம் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவரை உயிர் பிரிக்கப் போகிறார்களென்றால், தீவிரமாகத்தான் இருக்க வேண்டும்" என்று வரிசையாக விவரங்களைக் கொட்டினான்.

நான் திடுக்கிட்டேன். அவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். "கடைசி நபர் பற்றிய விவரம் தெரிந்தால் மையத்திற்குச் செய்தியனுப்ப வேண்டுமென்று திரையில் செய்தி வந்ததே, தெரியாதா?? சரியான துப்பு கொடுத்தால் ஏழு புதுப்பணம் தருவார்களாம்."

மையத்தலைவர் கடைசியாகச் சந்தித்த நபர் யார்? நான் தானா? என்னைப் பற்றிச் சொல்லியிருந்தால்? இருக்காது. இத்தனை நேரம் உயிர்பிரி நிலையத்திலிருந்து தேடிக் கொண்டு வந்திருப்பார்களே? ஏன் என்னைப் பற்றிச் சொல்லவில்லை? இங்கு வந்ததை மறந்துவிடு என்றாரே? நான் அங்கே போனதை மறைத்து விட்டாரா? ஏன்? எனக்குள் கேள்விகள் வெடிக்க, எழுந்து அகன்றேன்.

"எங்கே போகிறாய்?" என்றான்.

"இதோ வந்து விடுகிறேன்" என்று அவனிடமிருந்து விடுபட்டு, மெள்ள தடுப்புச் சுவரை நோக்கி நடந்தேன்.

விருந்து முடிந்து, கூட்டம் கலையத் தொடங்கியிருந்தது. நான் இங்குமங்கும் நடந்து கதவருகே வந்துவிட்டேன். கதவை மெதுவாகத் தொட்டேன். கதவை அழுத்திப் பார்த்தேன். அசையவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். அனேகமாக எல்லாருமே வெளியேறி விட்டார்கள். இதான் கதவா? வேறு ஏதாவது இருக்கிறதா? அதிக ஓசை வராதபடி, கதவைத் தட்டினேன். பயனில்லை. அழுத்தித் திறந்து பார்த்து விடுவோமா? எனக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. சுற்றிலும் பார்த்தேன். யாருமில்லை. என் மனம் முழுவதையும் மூடிய கதவு ஆக்கிரமித்துக் கொள்ள, திறந்தே விடுவது என்று அழுத்தினேன். திறந்தது.

திறந்த கதவில் அழைப்பிருந்தது போல் பட்டது. 'வேண்டாம், போகாதே. கதவுக்கப்பால் போக வேண்டாம் என்று கடவுள் சொல்லவில்லையா? திரும்பி விடு' என்றது என்னுள் ஒரு குரல். 'கதவையோ திறந்தாகி விட்டது. போய்ப் பார்' என்றது இன்னொரு குரல். புதுமையான அனுபவம். எங்கிருந்து வருகின்றன இந்தக் குரல்கள்?

கதவுக்கு அப்பால் தலையை நுழைத்துப் பார்த்தேன். யாருமில்லை. அடியெடுத்து வைத்தேன். வெட்டவெளி போலிருந்தது. இது தானா மகத்துவம்? போய்விடலாமென்று நினைத்துத் திரும்பிய போது அவளைப் பார்த்தேன். திறந்த கதவுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள். முதன் முதலாக ஒரு பெண்ணை நேரில் பார்த்தேன். என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தேன்.

அவள் ஓசையின்றிச் சிரித்தாள். "என்னை இங்கே வரச் சொன்னதும் கடவுள் தான்" என்றாள்.

"நான் ஆடம்" என்றேன்.

"என் பெயர் அதிதி" என்றாள். என் அருகில் வந்தாள். "ஆடம், உன்னைத் தொட்டுப் பார்க்கலாமா?" என்றாள்.

பழங்காலத் திரைப் படங்களில் ஆடை களைந்தப் பெண்களைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவள் ஆடையில்லாமல் எப்படி இருப்பாள் என்று தோன்றியது.

"என்ன சிந்தனை?" என்றாள்.

சொன்னேன்.

"நானும் அந்தப் படங்களைப் பார்த்திருக்கிறேன். நீ நிர்வாண நிலையில் எப்படி இருப்பாய் என்று நானும் யோசித்துக் கொண்டிருந்தேன்" என்றாள். என்னைத் தொட்டாள்.

"மையத்திற்கு தெரிந்து விட்டால் ஆபத்து" என்றேன்.

"மையத்திற்கு தெரியாது, பயப்படாதே" என்றாள். என் ஆடையைக் களைந்து விட்டாள்.

"அதையும் கடவுள் சொன்னாரா?"

அவள் பதில் சொல்லவில்லை. தன் ஆடையையும் முழுவதுமாகக் களைந்து விட்டாள். நான் அதுவரை நேரில் பார்த்திராத உடலுறுப்புகளைப் பார்த்துப் பிரமித்தேன். "தொடவா?" என்றேன். தொட்டபோது என்னுள் ஒரு இழப்பை உணர்ந்தேன். 'வேண்டாம் ஆடம், போய் விடு' என்றது குரல்.

அதற்குப் பிறகு பலமுறை அவளைச் சந்தித்தேன். கதவருகே வந்து நின்றதும் அவள் சொல்லிவைத்தாற்போல் கதவைத் திறப்பாள். மையத்துக்கு விவரம் தெரியாதது ஏனென்று புரியவில்லை. அச்சமாக இருந்தாலும், அவளைப் பற்றி நினைத்ததுமே அச்சம் மறைந்து அவளைத் தொட்டுச் சேரும் ஆர்வம் வந்து விடும். மையத்தைப் பற்றி அவளும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

    ன்றிரவும் அவளைச் சந்திப்பதாகத் திட்டம். கடவுளிடம் பேசியதாகவும் என்னிடம் அவசரமாக ஏதோ சொல்ல வேண்டுமென்றும் முந்தைய சந்திப்பின் போது சொல்லியிருந்தாள். நான் அவளுடைய உடல் சரிவுகளில் கவனமாக இருந்ததால் அவள் பேச்சைப் பொருட்படுத்தவில்லை. அவளை மறுபடி சந்திக்கத் துடித்தேன். இது ஒரு தொல்லையாகி விட்டது. அவளைச் சந்தித்த போது பிரிய முடியவில்லை. பிரிந்த போது சந்திக்கத் துடித்தேன். எப்பொழுதும் அவள் சிந்தனையாகவே இருந்தது. இது என்ன உணர்ச்சி? இது என்ன வேதனை? இதை யாரிடமும் சொல்ல முடியவில்லை. நான் ஏதோ தவறு செய்கிறேனேன்று புரிந்தது. இருந்தாலும் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எல்லாம் கடவுள் கொடுத்த தொல்லை என்று தோன்றியது. அவளை மறக்க எண்ணித் திரையைச் சுட்டினேன். செய்தி, விளையாட்டு என்று ஒளியலை மாற, திடீரென்று திரையில் நான் பார்த்த மையத்தலைவர், "ஆடம்" என்றார். அவர் குரலில் அவசரம் தொனித்தது.

"உன்னை உயிர் பிரித்து விட்டார்கள் என்று சொன்னார்களே?" என்றேன்.

"என்னை உயிர் பிரிக்க முடியாது. நான் கடவுள். நான் உன்னிடம் அவசரமாகப் பேச வேண்டும்"

"நீ பழைய மையத்தலைவர். கடவுள் இல்லை" என்றேன்.

திரையில் மையத்தலைவர் முகம் மறைந்து, நான் முதலில் பார்த்த நிழலுருவம் தோன்றியது. "ஆடம், உனக்கு என்னை எப்படிப் பார்க்க விருப்பமோ அப்படியே பார். ஆனால் நான் சொல்லப் போவதைக் கவனமாகக் கேள்" என்றார்.

எனக்குப் பெருங்கோபம் வந்தது. "உன் பேச்சைக் கேட்டதால் வந்த தொல்லை போதாதா?. எப்பொழுதும் அவள் நினைவாகவே இருக்கிறது. என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கவலை. எங்களுக்கு என்ன நேரும் என்ற கவலை. கவலையே இல்லாமலிருந்த நாங்கள், இப்போது ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்துக் கொண்டு கலவரப்பட்டு... நில், நீ சொன்ன மகத்துவம் இது தானா?"

பொறுமையாகப் பார்த்துவிட்டு "நான் கதவைத் திறந்தால் போதும் என்றுதான் சொன்னேன். போனது உன்னுடைய செயல்" என்றார்.

"திறந்த கதவில் ஒரு அழைப்பு இருந்தது. என்னையறியாமலேயே அப்பால் போக வேண்டும் என்று தோன்றியது" என்றேன்.

உருவம் சிரித்தது. "அது தான் மகத்துவம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இது நிகழ வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தேன்"

"இப்பொழுது என்ன செய்வது? எதற்காக மறுபடி தோன்றினாய்?"

"உனக்கும் அதிதிக்கும் ஆபத்து. ஓடி விடுங்கள், உடனே, உடனே."

எனக்கு நடுக்கமாக இருந்தது. "ஏன்? என்ன ஆபத்து?"

"எல்லாம் சரியாகி விடும். இன்றிரவே தப்பித்து எங்கேயாவது ஓடிவிடுங்கள்."

"ஓடாவிட்டால்?"

"உங்களை உயிர்பிரி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறார்கள். உங்களிருவரையும் விட, அதிதிக்குப் பிறக்கப் போகும் உங்கள் குழந்தைக்குப் பேராபத்து. பல்லாயிரம் வருடங்களுக்குப் பின் இயற்கையாகப் பிறக்கப் போகும் முதல் மனிதக்குழந்தை. புதுச் சமுதாயம். நான் தேவையென்று நம்பப் போகும் சமுதாயம். நீங்கள் தப்பி ஓடாவிட்டால் எல்லாம் அழிந்து விடும். போ, உடனே போ." என்றது.

குழந்தையா? கடவுளை நம்பும் புது சமுதாயமா? "நீ பித்தலாட்டக்காரன். உன்னை நம்ப ஒரு சமுதாயம் வேண்டுமென்பதற்காக எங்கள் நிம்மதியைக் குலைப்பதா? ஏன் எங்களைப் பகடையாக்கி விளையாடுகிறாய்?" என்று கோபமாக ஏசினேன். உருவம் உண்மையிலேயே கடவுள் தானா? அது ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, அங்கிருக்கப் பிடிக்காமல் திரையை நிறுத்தாமலே நகர்ந்தேன். ஒதுக்க முடிந்தது வியப்பாக இருந்தது. இதே கடவுளை முதல்முறை சந்தித்த போது என்னால் ஒதுக்க முடியவில்லை என்பது நினைவுக்கு வந்தது. கடவுளை நம்பத் தொடங்கி விட்டேனா? அதனால் தான் ஒதுக்க முடிகிறதா?

மையத்தில் சரணடைந்து விடுவோமா? வெளிவந்த இருபத்து மூன்று வருடங்களுக்குள் உயிர்பிரி என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 'கடைசி நபர் இவர் தான்' என்று அதிதியைப் பற்றிப் அனாமதேயப் புகார் கொடுத்தால் அவளை உயிர் பிரித்து விடுவார்கள். மையத்தலைவரின் உயிர்பிரி முடிந்ததும் எல்லாம் அடங்கி விடும். இதைப் பற்றித் தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. பழைய நிலைக்கு வந்து விடலாம். எண்ணங்கள் விகாரமாக ஒன்றை ஒன்று துரத்தின. அதிதியைக் காட்டிக் கொடுத்து நான் தப்புவதா? இல்லை நான் சரணடைவதா? நான் சரணடைந்தாலும் அவள் சிக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?

எனக்கு உடலெங்கும் வலித்தது. என்னால் தானே அவளுக்கு ஆபத்து? அவளும் என்னைப் போல் ஏமாற்றப் பட்டவள் தானே? கடவுள் சொன்னது போல் அதிதியுடன் எங்காவது தப்பித்து ஓடிவிடலாமா? தப்பி ஓடினாலும் எங்கே போவது? எப்படி வாழ்வது? புதுச் சமுதாயமாமே? இதற்கு நானா கிடைத்தேன்? இன்னும் பத்தோ நூறோ ஆண்டுகள் பொறுத்து இன்னொரு ஆடம் கிடைத்தால் பிடித்துக் கொள்ளட்டும். ஒதுக்க நினைத்தாலும், அதிதி நினைவு வந்ததும் வேதனையாக இருந்தது. எல்லாம் சரியாகி விடுமென்றாரே, சரியாகி விடுமா? எதற்காகக் கதவைத் திறந்தேன்? எதற்காக உள்ளே சென்றேன்? என் மேல் ஆத்திரமும் கோபமும் வந்தது. புது உலகின் ஆதார நம்பிக்கைகளை அழித்து விட்டதாகத் தோன்றியது. குழம்பினேன். கடவுள் தேவையா? அதிதி தேவையா? சிக்கலற்ற வாழ்க்கை தேவையா? வெகு நேரம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.

மையத்திற்குச் செய்தியனுப்பினேன். "மையத்தலைவர் கடைசியாகச் சந்தித்த நபர் யாரென்று எனக்குத் தெரியும்". அன்றிரவு நான் அதிதியைச் சந்திக்கப் போகவில்லை. எனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள் என்ற நினைவு வாட்டியது. தூங்கத் தொடங்கினேன்.

44 கருத்துகள்:

  1. ஆத்மா வைத்து சுஜாதா எழுதும் கதைகள் ஞாபகம் வந்தது. இதே பாணியில் ஒரு பெண்ணை பெண்காட்சியாக வைத்து ஒரு கதை எழுதியிருப்பார். இருந்தாலும் இது மூன்றாம் சுழியின் தனித்துவ முத்திரை. ஆடமும், அதிதியையும் கொஞ்சம் ஓடவிட்டு காண்பித்திருக்கலாம். ஆடமின் வலி படிப்பவருக்கும் தொற்றிக்கொள்கிறது.

    எவ்ளோ பெரிய கதவு!!!!

    பதிலளிநீக்கு
  2. அப்பாதுரை சார்! ரொம்ப விறு விறுப்பாக,தொய்வே இல்லாமல் வார்த்தைகளை பூச்சரமாய்க் கோர்த்திருக்கிறீர்கள். எதிர்கால நடைமுறைக்கு, நிகழகால வழிமுறையோடு முடித்திருக்கிறீர்கள். இறைவனை விட,இன்பவல்லி பெரியவள். இன்பவல்லியை விடவும் இன்னுயிர் பெரியது.இந்த நியதி என்றும் மாறாது என்றே தோன்றுகிறது..சபாஷ்!

    பதிலளிநீக்கு
  3. அற்புதம்.ஆனால் கடைசியாய் ஆடம் அந்த முடிவுதான் எடுப்பான் என்பது நம்பச் சிரமமாக இருக்கிறது.ஒரு நோக்கில் உண்மையாகவும் தோன்றுகிறது.காமமும் பிரச்சினையற்ற வாழ்வும் எதிர் எதிர் திசைகளில் இருக்கிறது.உருவாக்கப் படும் மனிதர்கள் எல்லாவற்றையும் மீறிப் பார்க்கும் இந்த உணர்வு நீக்கப் பட்டுதான் உருவாக்கப் படுவார்கள் இல்லையா

    பதிலளிநீக்கு
  4. எல்லா உணர்வுகளையும் எடுக்க முடிந்த எதிர்காலத்தால் துரோக சிந்தனையை மட்டும் எடுக்க முடியவில்லை இல்லையா?

    பதிலளிநீக்கு
  5. காதல் வைரஸ் மாதிரி கடவுள் வைரஸ்....

    அற்புதமான ப்ளாட் கிடைத்தவுடன் அடிச்சு விளையாடிருக்கிறீர்கள்.

    இந்த அறிவிக்கற்பனை கதையில் முழுக்க முழுக்க உங்கள் ஆளுமை இருந்தாலும், வாத்தியார் ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை

    ( தப்பொன்றுமில்லை..அந்த எழுத்தோட்டம் கிடைப்பது பெரியவிஷயம்)

    முரண்களை ரொம்ப ஆராய்ச்சி செய்தால் கதை கோவிந்தா ஆகிவிடும்..

    கதைகளும் கடவுள் மாதிரி முரண்கள் கிடைத்தால் சிம்மாசனம் இட்டு உட்கார்ந்துவிடும் .

    புலன்மயக்கம் இருக்கும் வரை கடவுள் நம்மோடு இருப்பார்... புலன் மயக்கம் தீர்ந்தவுடன் நாம் கடவுளோடு இருப்போம்...

    கடவுள் வைரஸ் பலருக்கு நன்மை பயக்கும் வைரஸ் ( சின்ன வயதில் நன்மை பயக்கும் பாக்டிரியா படித்த தாக்கம் ) சிலருக்கு அலர்ஜி .....

    பதிலளிநீக்கு
  6. //என் மேல் ஆத்திரமும் கோபமும் வந்தது. .... குழம்பினேன். கடவுள் தேவையா? அதிதி தேவையா? சிக்கலற்ற வாழ்க்கை தேவையா? வெகு நேரம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தேன்//

    Same feeling guru

    பதிலளிநீக்கு
  7. நன்றி RVS, மோகன்ஜி, bogan, ஸ்ரீராம், பத்மநாபன், சாய்..

    RVS அண்ணே..சரியாப் பிடிச்சீங்க பாயின்ட். இந்தக்கதைக்கு முதலில் கதவு என்று தான் பெயர் வைத்திருந்தேன். ஆசிரிய நண்பர் அரசன் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்ட பொழுது கதவு என்ற தலைப்பில் எழுதிக் கொடுத்த கதை. கதவில் இருந்த கவர்ச்சி வைரசில் இல்லை. என்றாலும் காப்புரிமை கலாட்டாவில் நான் எழுதியது எனக்கே சொந்தமில்லை என்றானதும், கொஞ்சம் மாற்றி, சுருக்கி, வேறு பெயரில் மறுபடி பதிவு செய்திருக்கிறேன்.

    நம்முடைய பிளாக் பதிவுகள் நிறைய மலேசியா, பிரான்ஸ், கேனடா நாடுகளில் அச்சில் எட்டணாவுக்கும் குறைவாக 'time pass' என்று விற்பனையாகிறது தெரியுமோ? பதிவுகளிலிருந்து இடுகை சுட்டு, இலவசமாக இணையத்திலேயே பத்திரிகை லே-அவுட் பிடிஎப் அச்சேறி நூறு காபி இருநூறு காபி என்று சல்லிசான விலைக்கு விற்கிறார்களாம். entrepreneurial minds! 'யானை மேட்டர்' நிச்சயம் ஒரு நாள் அச்சேறியிருக்கும். இப்படிச் செய்பவர்கள் ஒரு காபியை நமக்கு அனுப்பக் கூடாதோ?

    பதிலளிநீக்கு
  8. ஆடமின் முடிவை வாசகர் கற்பனைக்கே விட்டிருந்தேன். bogan, ஸ்ரீராம் எழுதியிருப்பதைப் படிக்கும் பொழுது கடைசி நேரத்தில் ஒன்றிரண்டு வரிகள் சேர்த்தது தவறோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  9. நல்ல தூண்டில் போட்டீர்கள் ஸ்ரீராம். எல்லா உணர்வுகளையும் எடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான் - எந்தக் காலத்திலும். உணர்வுகளை அடக்கவும் திசை திருப்பவும் முடியும் என்று நினைக்கிறேன். இந்தக் காதல், காமம், பாசம், பந்தம் போன்றவை அனேகமாக அடங்கி ஒடுங்கி திசை திரும்பும் சாத்தியம் எதிர்காலத்தில் இருக்கிறது என்று நம்புகிறேன். பாசம் பந்தம் போன்றவை இன்றைக்கே ஒடுங்கி வருகிறது. சந்ததிப் பெருக்கத்துக்கு ஆணும் பெண்ணும் சேர வேண்டியதில்லை என்ற நிலையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் சமூக முறை/எதிர்பார்ப்பு மறைந்து விடும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. RVS.. சுஜாதா எழுத்துக்களில் 'அனிதா இளம் மனைவி'க்குப் பிறகு ஆத்மாவை மையமாக வைத்து அவர் புனைந்த சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அசிமவ், ப்ரேட்பரி கருக்களை சுலபமாகத் தமிழில் கொண்டு வந்தவர்.

    பதிலளிநீக்கு
  11. brilliant, பத்மநாபன். அனேக விதங்களில் காதலும் கடவுளும் ஒன்று தான். இருப்பதாக நம்பும் வரை உருகிப் போகிறோம். இரண்டுமே வைரஸ் தானோ? இந்தக் காலக்கட்டத்தில் ஒன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம் என்கிறோமே? காதல் வைரஸ் மட்டும் போதுமோ?

    வாத்தியார் என்று சுஜாதாவைச் சொல்கிறீர்களா? (அவருக்கு வாத்தியார் என்று பெயரா?) சுஜாதாவின் தாக்கம் இல்லாமல் நவீனத் தமிழ் எழுதுவது ரொம்ப சிரமம். இறையிலக்கியங்களுக்குப் பிறகு தமிழில் நான் அதிகமாகப் படித்தது சுஜாதாவின் எழுத்துக்கள் தான். எழுபதுகளின் முடிவில் ரம்பம் போடத் தொடங்கிவிட்டார் என்றாலும் தமிழில் இன்றைக்கு இத்தனை பேர் எழுதுகிறோம் என்றால் சுஜாதா ஒரு பெரிய காரணம் என்று நினைக்கிறேன்.

    முரண்கள் பற்றி நீங்கள் எழுதியிருப்பதை ஒப்புக் கொள்கிறேன். உடனே தெரியாதபடி வாசகர்களைத் தள்ளிச் செல்லும் எழுத்து வன்மை சிலருக்குத் தான் வரும். ஆங்கில எழுத்தாளர்கள் பலர் அப்படி எழுதினார்கள். (shakespeare கதைகளைக் கொஞ்சம் யோசித்தால் முரண்களை கடிகார பார்ட்ஸ் போல கழற்றி வைக்கலாம்) தமிழில் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு எழுத்தாளர் மட்டுமே அந்த வித்தைக்கு வாத்தியார். ஜெயகாந்தன்.

    பதிலளிநீக்கு
  12. இன்னொரு காரணமும் தோன்றுகிறது பத்மநாபன். தமிழில் 'விஞ்ஞானப்' புனைவு என்றாலே சுஜாதா தான் நினைவுக்கு வருகிறார். புதுமைப்பித்தன் சில கதைகள் எழுதியிருக்கிறார் - படித்தால் சுஜாதாவுக்கு அவர் தான் வாத்தியாரோ என்று நினைக்கத் தோன்றும். ( விஞ்ஞானப் புனைவு என்பதே முரண்)

    சுஜாதாவின் மறைவுக்குப் பின்னர் நடந்த நிகழ்ச்சி. போன அக்டோபர்/நவம்பர் என்று நினைக்கிறேன். ஒரு பிரபல தமிழ் இயக்குனரின் கம்பெனியுடன் என் சென்னை நண்பர் வழியாகத் தொடர்பு ஏற்பட்டது. அரைகுறையாக விஞ்ஞானப் புனைவு ஒன்றின் ட்ரீட்மென்ட் எழுதி, முழு திரைக்கதையாக எழுத ஆள் தேடுவதாகவும் எனக்கு விருப்பமா என்றும் கேட்டிருந்தார்கள். நான் எழுதிய 'யுவதி' என்ற 'விஞ்ஞானக்' குறுநாவலை என் ஆசிரிய நண்பர் அவர்களுக்கு அனுப்பியிருந்தார். எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் 'இதை சுஜாதா போல எழுதிக் கொடுங்கள்' என்று benchmarkகோடு கேட்டிருந்தார்கள். சில சுஜாதா கதைகளையும் படிக்கச் சொல்லியிருந்தார்கள். கூசாமல் அக்ரகாரத்திலேயே திருடச்சொல்லும் அந்தணர்கள். இறந்து போனாலும் மறந்து போகக்கூடியவரா சுஜாதா?

    தமிழ் எழுத்தில் சுஜாதாவின் தடங்கள் இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு நிற்கும் என்று நினைக்கிறேன். (சுப்ரமண்ய ராஜூ போல எழுதிக் கொடுங்கள் என்று அவர்கள் கேட்காதது ஏன்?)

    சுஜாதாவை நினைவுபடுத்தி விட்டீர்கள். அவர் எழுதின ஏதாவது ஒரு புத்தகம் படிக்கவேண்டும் என்று தோன்றிவிட்டது. விபரீதக் கோட்பாடுகள்?

    பதிலளிநீக்கு
  13. போனாப் போகுது சாய்... ப்ளாக் தானே?
    (எழுதினா ஒரு பிளாக். எழுதாட்டா எல்லாமே பிளாக்!)

    பதிலளிநீக்கு
  14. ஆமாங்க வாத்தியாரைத் தான் வாத்தியார்ன்னு குறிப்பிடுகிறோம்... சுஜாதாவைத்தான்..... மனுஷன் எத்தனை பேரை படிக்கவைத்திருக்கிறார் எழுத வைத்திருக்கிறார்....

    முரண்களை பற்றி நான் குறிப்பிட வந்தது ..``ஆராய்ச்சிபண்ணக்கூடாது அப்படியே அனுபவிக்கனும்``` என்பதற்காக

    கொஞ்சம் ஸ்ருதி சுத்தம் பண்ணி கடவுள்வைரஸை பரப்ப விட்டால் காதல்வைரஸை விட அலுப்பில்லாமல் இருக்கும்.

    ///எழுபதுகளின் முடிவில் ரம்பம் போடத் தொடங்கிவிட்டார் // இதற்கு கருத்து சொல்ல கடமை பட்டுள்ளேன் ..உங்களுக்கு எழுபதின் முடிவு எனக்கு என்பதின் முடிவாக இருக்கலாம்... பாதாம் அல்வாவின் திகட்டலுக்கு பாதாம் அல்வாவை குறைசொல்லக்கூடாதல்லவா...அவரையே படித்துக்கொண்டிருப்பவன் தன் தளத்தை உயர்த்திக் கொண்டுவிட்டான்.. இதனால் தான் ``ஆல் டைம் பெஸ்ட்`` ஆளாளுக்கு மாறுகிறது. அவரும் இதை உணரத்தவறவில்லை.. நாமும் ரசிப்பை மாற்றிக்கொண்டோம் எளிய திருக்குறளை இன்னமும் எளிதாக்கினார்...புறநானுறு பக்கம் திரும்பவைத்தார்..ஏ.எ.எ வில் அறிவியல்பக்கம் புத்தகங்களை தேட வைத்தார். பத்திகளையும் கட்டுரைகளையும் படிக்கசெய்தார் ... கற்றதும் பெற்றதும் க்காகவே அவர் உயிரோடு இருந்திருக்க கூடாதா எனும் ஏக்கம் தோன்றாத நாளில்லை..

    பதிலளிநீக்கு
  15. நிங்க சொன்னது சரி...புதுமைபித்தனையும் ஜெயகாந்தனையும் சுஜாதா சிலாகிக்க தவறியதே இல்லை.....

    // சுஜாதா போல எழுதிக் கொடுங்கள்' // இப்படியும் நேரடியாகவே கேட்கிறார்களா.. வாசகர்களுக்கு ஆச்சர்யம்... தகுதியானவரைத்தான் கேட்டிருக்கிறார்கள்...

    சுப்ரமணியராஜ் அவர்களை நினவுபடுத்தியதற்கு மிகவும் நன்றி...தமிழ் எழுத்துக்கு மின்னலென வந்து போன அற்புதம் ( பாலகுமாரன் நண்பனாக நின்று ஆறுதல் படுத்தினார் )

    பதிலளிநீக்கு
  16. //இறந்து போனாலும் மறந்து போகக்கூடியவரா சுஜாதா?//
    விழுந்துட்டேன்!! எதுகை மோனையா அடிக்கிறீங்களே... சொல்லால் அடிக்கும் சுந்தரர் நீங்கள்.
    வா.சுஜாதா தருமு மாமா என்று எமதர்ம ராஜனை வைத்து ஒரு நாலு பக்கம் தலை தூக்க விடாமால் அசத்தியிருப்பார். அவ்வளவு செல்லமா எமனுக்கு யார் பட்டப்பெயர் வைக்கமுடியும். அந்தகே கதையின் நடைக்காகவே ரெண்டு மூணு தடவை புத்தகத்தை கீழே வைக்காமல் பரீட்சைக்கு படிப்பது போல் படித்தேன்.. ஆடிட்டரி ஹலுசினேஷேன் வைத்து ஒவ்வொரு சாப்டேரையும் "ஆ" என்று முடித்த "ஆ".... தலைவர் நினைப்பு ரொம்ப வாட்டுது. நிறைய இடங்கள்ள நீங்களும் அடித்து ஆடறீங்க சார். உங்களுடைய லிக சூப்பரோ சூப்பர். தலைப்பு வைத்ததையே என் மனையாளிடம் ரெண்டு நாளைக்கு சொல்லிக்கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  17. பத்மநாபன், நீங்க சொல்றது வளர்ச்சி, முதிர்ச்சி என்கிற வகையில agreeable. சுஜாதா, ரஜனிகாந்த் (அவங்களுக்கு முன்னால வோடவுஸ், ஹிட்ச்காக்) எல்லாருமே இந்தக் கருத்தைச் சொல்லியிருக்காங்க: "என் திறமை மாறவில்லை; ரசிகர்கள் வளர்ந்துவிட்டார்கள்". இதை முழுமையா என்னால் ஏற்க முடியவில்லை. தொடக்கமும் வளர்ச்சியும் உச்சமும் சீர்நிலையும் தொய்வும் சில சமயம் அழிவும் - திறமைக்கும் கிரியேடிவ் எனர்ஜிக்கும் பொருந்தும் என்று நம்புகிறேன். ஒவ்வொருத்தருக்கும் மைல்கல் வேறு வேறு என்றாலும், in my view, sujatha கரையெல்லாம் செண்பகப்பூ காலத்தில் உச்சத்தைத் தொட்டார் என்று நினைக்கிறேன். கொஞ்சம் அலசிப்பாத்தா, he let himself to be overusedனு தோணுது.

    விஞ்ஞானம், இலக்கியம் பத்தி அவர் எழுதியிருப்பதை அதிகம் படித்ததில்லை; புத்தகக் கடைகளிலும் காட்சிகளும் பார்த்துப் புரட்டியதோடு சரி. திருக்குறள் பற்றி எழுதியது தெரியாது, படித்ததில்லை; அவர் எழுதிய சிலப்பதிகார விளக்கம் வாங்கிப் படித்தேன் - கஷ்டம்! எனக்கு ஒரு தகுதியும் கிடையாது, என்றாலும் இலக்கிய ஆர்வத்தைப் பொசுக்கும் வண்ணம் எழுதியிருக்கிறார் என்று வருத்தப்படுகிறேன். வரும் தலைமுறையினர் தமிழ் படிக்கத் தூண்டும் வகையில் சுஜாதா எழுதினார் என்று நண்பர்கள் சொல்லும் பொழுதெல்லாம், என் மனதில் ஒரு பெரிய கேள்விக்குறி தோன்றுகிறது (கடைசி வரிகளில் எழுதியிருக்கிறேன்).

    நான் தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்து கொண்டதே எழுபதுகளின் தொடக்கத்தில் தான் - பாடப் புத்தகங்களுக்கு வெளியே முதல் முதலாகப் படித்தது சுஜாதாவின் எழுத்தைத் தான். அன்றைக்கு அவரைக் காதலித்தவன் இன்றைக்கும் நிறுத்தவில்லை. சுஜாதா மேல் அபிமானமும் மதிப்பும் எனக்கு என்றும் உண்டு என்றாலும், சுட்ட கருக்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். கமலஹாசன் க்ரேசி மோகன் போன்ற பக்காத் திருடர்களின் மோடிவேசனைப் புரிந்து கொள்ள முடிகிறது, அறிவுஜீவி சுஜாதா? ஒரு கருத்து ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்குத் தோன்றும் சாத்தியத்தைத் தீவிரமாக நம்புகிறேன்; என்றாலும் தோன்றிய கருத்தைத் தனக்கு முன்னால் செயல்படுத்தியவர்களை மதிப்பது அவசியம், முதிர்ச்சியின் அடையாளம் என்று நினைக்கிறேன். 'விழுந்த பூ திரும்ப கிளைக்குத் தாவு'வதில் ஆகட்டும், சில ஆத்மா கருக்களாகட்டும், கணேஷ்-வசந்த் கதைச்சம்பவங்கள் ஆகட்டும்... நிறைய கையாண்டிருக்கிறார். வோடவுஸ், அசிமவ் (இவரும் வோடவுஸைப் பின்பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார், ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லி விட்டார்), ரே ப்ரேட்பரி போன்றவர்கள் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் எழுதியதை - அந்த வடிவத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்தமைக்கு சுஜாதாவுக்கு நன்றியும் பாராட்டும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்/றோம். அங்கீகாரம் தராவிட்டாலும், நல்ல வேளை, கமல்ஹாசன் க்ரேசி மோகன் போல் தானே எழுதியது போல் வெட்கமில்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. அந்த வகையில் வாத்தியார் (ஹை?) பரவாயில்லை.

    தமிழ் எழுத்துலகைப் பொறுத்தவரை சுமு சுபி என்று நிர்ணயிக்கும் அளவுக்கு சுஜாதாவின் தாக்கம் நிச்சயம் உண்டு. yet, he took more than he gave என்பது என் குறைகுட எண்ணம். அதற்குக் காரணம் அவரா, நாமா என்பது சர்ச்சைக்குரியது. சிங்கில் மால்ட், வருத்த முந்திரி, முதிர்ந்த நட்புடன் செய்ய வேண்டிய சுவையான சர்ச்சை.

    பதிலளிநீக்கு
  18. நன்றி, பத்மநாபன்.

    மொத்தமாக இந்தியா திரும்பி சினிமாவில் சேர வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கும் போதெல்லாம் (குடும்பத்தில் வேரா ஓடுது - தலைவேதனையைக் கேக்காதீங்க, அடி பட்டாலும் தெரிய வேண்டாமோ?) நண்பர்களைத் தேடிப் போவேன். அப்போது தெரிந்து கொண்டது தான். சுஜாதாவைத் திரையுலகில் திரைக்கதை-வசனத்துக்கு எத்தனை மதிக்கிறார்கள் என்பதை. எந்திரன் வெற்றிக்குப் பிறகு science/fantasy என்று தமிழ்த் திரையுலகம் போகலாம் - leads the indian film industry என்று சங்கரைப் பத்தி ஒரே பேச்சாமே? - கதை வசனம் எழுத நிறைய வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.

    சமீபத்தில் இந்தியா போன போது கூட நண்பர் புலம்பினார் - கதை வசனம் எழுத ஆளில்லை என்று. 'severe shortage of supply' என்றார். என் வயது நட்பெல்லாம் ஓய்வெடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஒருத்தரைத் தவிர மற்றவரெல்லாம் கூலிக்கு மாரடித்து (என்னைப் போல்) பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணி தாமிரபரணிப் பக்கம், காவிரிப் பக்கம் என்று ஓடத் தயாராக இருக்கிறார்கள். இருபது வயதுகாரர்கள் சிலரைச் சந்தித்தேன் - என்னமாக எழுதுகிறார்கள்! அவர்களுக்குத் தான் தகுதியிருக்கிறது. எனக்கு இல்லை.

    பதிலளிநீக்கு
  19. நன்றி RVS..அது என்ன கதை என்று சொல்லுங்களேன். (எமனைப் பற்றியும் எழுதிவிட்டாரா வாத்தியார்? போச்சுடா... இருந்து இருந்து ஒரே ஒரு கதை எழுதினேன் இறப்பையும் எமனையும் வைத்து.. ஹ்ஹ்ஹ்ம்ம்ம்.)

    பதிலளிநீக்கு
  20. சுஜாதா பாலகுமாரன் பற்றி ஜெயமோகன் இதே போன்று ஒரு கருத்தைத் தெரிவித்தார்.அதற்கு ஏகப்பட்ட கண்டனங்கள் வந்ததில் அவர் பின்னூட்டப் பெட்டியையே மூடிவிட்டுப் போய்விட்டார்.அப்போது அவரிடம் சண்டைக்குப் போனவர்களில் நானும் ஒருவன்.பாலகுமாரன் வேறு விதம்.அவரை விட்டுவிடுவோம்.அதில் அவர் சுஜாதாவின் அறிவியல் புனைகதைகளை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துவிடலாம் என்பது போல் சொல்லியிருந்தார்.அறிவியல் புனைகதைகளிலேயே நிறைய sub genres உள்ளன.சுஜாதா அதில் அசிமாவின் வகை என்று சொல்லியிருந்தேன்.அதில் அறிவியலை விட புனைவே அதிகமாய் இருக்கும்.வேறுவகை அறிவியல் புனைவுகள் தமிழில் எழுதாதது மற்றவர் தவறே தவிர அவர் தவறல்ல.தமிழுக்கு அவரது முக்கியமான பங்களிப்பே அவரது நடையும் இரண்டொரு வார்த்தைகளில் சூழலின் ஒரு பிம்பத்தை உருவாக்கி விடுவதும்தான்.அதற்கு முன்பு வரை எல்லோரும் 'ஆதவன் பொலபொல வென்று தன பொன்னிறக் கிரணங்களை விரித்தபடி விடிந்து கொண்டிருந்தான்' என்றுதான் ஆரம்பிப்பார்கள்.அவர்தான்,''காலை.ஆறு மணி.அன்று குரு பிரசாத் ஒரு கொலை செய்யப் போகிறான் என்று நான்காவது கியரில் ஆரம்பித்தார்.குருவி தீற்றினார் போல் அவசரமாக ஒரு கதையை களத்தை விவரித்துவிட்டு ஓடிவிடுகிறார் என்று சொல்வதுண்டு.ஆனால் இன்றைய மிகுவேக உலகை சரியான உணர்வுடன் காண்பிக்க அவர் நடையே சரி.நீங்கள் கூட அறிவியல் கதைகளை அவர் நடையிலேயேதான் எழுதுகிறீர்கள்.உண்மையில் அவர் நடையை உதறி ஒரு அறிவியல் புனைகதையை இன்று தமிழில் எழுதுவது சவாலாகவே இருக்கும்.ஜெயமோகன் விசும்பு என்ற பேரில் சில கதைகளை எழுதியுள்ளார்.ஆனால் கழுத்தை நெரித்துக் கேட்டால் அவை அறிவியல் கதைகள் அல்ல என்றே சொல்லவேண்டும்

    பதிலளிநீக்கு
  21. உணர்ச்சி பூர்வமான கருத்து,bogan.

    சுஜாதாவின் தாக்கம் இல்லாமல் தமிழில் எழுதுவது மிக மிகக் கடினம். மனிதர் கையாளாத உத்தியே இல்லை. சுஜாதாவின் எழுத்துக்குப் பின்னால் இருக்கும் அவரின் உழைப்பு அசாத்தியம் என்றே தோன்றுகிறது. He is a genius workaholic who chose to write. நான் உட்பட, எனக்குத் தெரிந்த பலருக்கு இரண்டு வகையிலும் தட்டுப்பாடு. சுஜாதா போல் எழுத நினைத்தால் மட்டும் போதுமா?

    தமிழில் சிலரின் படைப்புகளை மட்டுமே படித்திருக்கிறேன். பத்து விரலில் எண்ணி விடலாம். அதில் நான் அதிகமாகப் படித்தது சுஜாதா மட்டுமே. சுஜாதாவை நான் குறை சொல்லவேயில்லை. நீங்கள் சொல்வது போல் தமிழில் அதிகம் மற்றவர் எழுதவில்லை என்றால் அவரா பொறுப்பு? உண்மை தான். ஆனால் ஆலநிழலில் எதுவும் வளர்வதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? we created him, and not the other way around. this applies to every super star phenomenon. sujatha is no exception. He is a genious workaholic who chose write initially for release, then got caught in the web. சலவைக்கணக்கை எழுதினாலும் மக்கள் படிப்பார்கள் என்று சுஜாதாவை வைத்துக் காசு பண்ணும் ஒரு வியாபாரி நினைத்தால் சரி; சுஜாதாவும் இடம் கொடுப்பதா? where do you draw the line? i think that's where Sujatha started his fall, in my count.

    சுஜாதாவைக் குறை சொல்வது, மழைக்குட்டைத் தவளையிரைச்சலுக்கு இணை..i agree. yet, ஒரே ஒரு நினைவை இங்கே topicalஆகப் பகிர்ந்து கொள்கிறேன். சுஜாதாவை ஆலநிழலாக நினைக்க வைத்த சம்பவம். பதின்ம வயதில் எழுதத் தொடங்கிய போது சுஜாதா போல எழுத வேண்டும் என்று தான் நினைப்பேன். முதல் சிறுகதை குமுதத்தில் வந்த போது (அறிவியல் தொலைனோக்கு இல்லாவிட்டாலும் எதிர்காலம் என்றாலே அறிவியல் புனைவு என்ற பட்டம் இன்றைக்கும் தொடர்கிறது) சுஜாதாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சம்பவத்தைப் பற்றி விவரமாக எழுத விரும்பவில்லை.(அடுத்த முறை இந்தியா வரும்பொழுது உங்களை நிச்சயம் சந்திக்க எண்ணியிருக்கிறேன்; அப்போது சொல்கிறேன்) சொற்களின் வேகத்தை ஒதுக்கி செய்தியின் உண்மையை மட்டும் சேகரித்துக் கொள்ளும் மனப்பக்குவம் அன்றைக்கு எனக்கு இல்லை (இன்றைக்கு மட்டும் வந்துவிட்டதா என்ன?).

    சுஜாதா அசிமவ் வகை என்பது அசிமவுக்கு இழுக்கு என்பதை மட்டும் பணிவுடன் சொல்லிக் கொள்ள அனுமதி கொடுங்கள். notwithstanding, sujatha has his own two strong pillaresque legs. ஒப்பீடு தேவையில்லை என்று நினைக்கிறேன். சில genreக்களில் சுஜாதா அரை கிணறு தாண்டியவர் என்பது என் அரைகுறை அறிவின் கருத்து. அவர் தாண்டாவிட்டால் அது கூட நமக்குத் தெரிந்திருக்காது என்பது வேறு விஷயம். (example: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குருபிரசாத் வரிகள்). கிணறே தென்படாத போது அரை கிணறு தாண்டியது தான் சுஜாதாவின் சாதனை. என்னையும் உங்களையுமே எடுத்துக் கொள்ளுங்கள். காமத்தைப் பற்றி பாதி கிணறு தாண்டும் எழுத்து என்னுடையது. நீங்கள் ஜித்தர். யோனி என்று சுற்றி வளைக்கிறவன் நான். அதன் நடுவில் தொடங்கி சிலம்பாடுகிறவர் நீங்கள். இதற்கு நிறைய root cause காணமுடியும். இதனால் ஒருவர் மேல், இன்னொருவர் குறை என்று சொல்ல முடியாது என நினைக்கிறேன். வோடவுசை எத்தனை விதத்தில் சுஜாதா திருப்பிப் போட்டிருக்கிறார் தெரியுமோ? தவறே இல்லை. திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது materialistic proposition மட்டுமில்லை.

    பல வருடங்களுக்குப் பிறகு மூத்த சுஜாதாவை சந்தித்த போது அவர் சொன்னது: "எல்லாம் எழுதினேனே தவிர, didn't make much". this is what i meant. சுஜாதாவை மேல்தட்டிலிருந்து இறக்கும் நோக்கம் எனக்கு இல்லை. என் வாழ்நாளில் அவரைப் போல் இன்னொரு தமிழ் எழுத்தைப் படிப்பேன் என்று தோன்றவில்லை - நம்பிக்கை இருந்தாலும். அழகான முகத்தில் அழுக்கு மச்சம் இருந்தால் ஒதுக்கி விட முடியுமா?

    கேள்வி: அறிவியல் கதை என்றால் என்ன?

    (ஜெயமோகன் விவரம் தெரியாது - சுட்டி இருந்தால் கொடுங்கள் படித்துச் சொல்கிறேன்.)

    பதிலளிநீக்கு
  22. இன்னொரு கேள்வி, bogan: மாலனின் எழுத்தைப் படித்திருக்கிறீர்களா? அவர் எழுத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  23. ஏற்கனவே ஜெயமோகனின் தளத்தில் நானும் பிறரும் அவர் இதே போன்ற ஒரு கருத்து தெரிவித்ததற்காக ஒரு பின்னூட்ட எதிர்ப்பு கும்பமேளாவே நடந்து முடிந்தது.[அதில் முதல் கும்பமே நான்தான்!]தற்போது அதே போன்ற ஒரு கருத்தை நீங்களும் சொல்கிறீர்கள்.ம்ம்..யோசிக்கத்த் தூண்டுகிறது.சுட்டி இணைத்துள்ளேன்.குறிப்பாக அதில் கீழே சுஜாதாவின் அறிவியல் என்ற சுட்டியில் உள்ள கட்டுரை பார்க்கவும்.

    சுஜாதாவை தமிழின் உச்சமாக நான் கருதவில்லை.ஆனால் அவரைப் புறக்கணித்துவிட்டு தமிழ் இலக்கியத்தைப் பேசமுடியாது.குறைந்த பட்சம் அவர் நடைக்காகவாவது கொண்டாடப் பட வேண்டியவர் அவர்.இல்லாவிடில் யோசித்துப் பாருங்கள்,கடவுள் வைரசை இது போல் இரண்டு மடங்கு கணினியில் தட்ட வேண்டி இருக்கும்!

    அசிமாவின் தரத்தில் அவரை நான் வைக்கவில்லை.அசிமாவின் வகை என்றே சொன்னேன்.அதுவும் தமிழில்.ப்ராட்பரி,கிளார்க் போன்றோர் வேறுவகை இல்லையா.

    அப்புறம் என்னையும் உங்களையும் ஒப்பிடுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.நான் அயன் பிளெமிங் செய்தது போல் இருத்தலின் சோர்வு மாற்ற மட்டுமே இணையத்தில் எழுதுகிறேன்.அதுவும் இலவசம் என்பதால்!நீங்கள் அதை சிலாகிக்க எனக்கு மகிழ்ச்சியை விட பதற்றமே அதிகம் ஏற்படுகிறது.ஐயோ இனி நாம உலக இலக்கியம்லாம் படைக்கணும் போல இருக்கே என்று இரவெலாம் பீதியில் உறக்கமே வரவில்லை.

    நான் ரொம்ப தைர்யமாய் எழுதுவதும் நிஜமில்லை.ஒவ்வொரு விசயத்தையும் தயங்கித் தயங்கி ரொம்ப நீர்க்கவைத்தே எழுதுகிறேன்.அதற்கே கலாச்சாரத்தைக் கெடுக்கவந்த நச்சப் பாம்பே என்று மெயில் அனுப்புகிறார்கள்.இதற்கே இப்படி எனில் இன்செஸ்ட் பற்றி நான் வைத்திருக்கும் ஒரு கருவை கறுப்புப் பூனைப் படை துணையுடன்தான் எழுத வேண்டும்.ஆனால் நேர் எதிராய் கண்ணி தொடரில் அந்த கற்பழிப்புக் காட்சி ரொம்ப சாப்ட் என்று ஒரு வாசகர் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார்.இப்போது எனக்கு ஒரு தயக்கம் வந்துவிட்டது.பின்னால் வரக் கூடிய ஒரு உக்கிரமான க்ளைமாக்சை நியாயப் படுத்த அதில் பாதியாவது இதில் இருக்கவேண்டும்.பேசாமல் உலக இணைய வரலாற்றிலயே முதல் முறையாக போன பகுதி சரியா வரலே அதனால ஒரு திருந்திய பதிப்பு எழுதறேன்னு மறுபடி எழுதலாமா என்று யோசிக்கறேன்.

    மாலனின் சில கட்டுரைகளை மட்டுமே படித்திருக்கிறேன்.ராஜு,மாலன்,பாலகுமாரன் மூன்றுபேரும் ஒரே இடத்தில் நேரத்தில் ஆரம்பித்தார்கள்.இல்லையா.

    http://www.jeyamohan.in/?p=8412

    பதிலளிநீக்கு
  24. சுஜாதாவுடன் நேர்ந்த லேசான கசப்பு கூடிய சந்திப்பு பற்றி எழுதி இருந்தீர்கள்.ஒரு வளரும் எழுத்தாளன் [வாசகன் அல்ல]அவனது ஆளுமையும் எழுத்தும் ஓரளவு நிலைப் படும்வரை ஏற்கனவே அறியப் பட்டுவிட்ட ஒரு எழுத்தாளரை சந்திப்பதை தவிர்ப்பதே நல்லது என்பது என் கருத்து.இதையும் ஜெமோவின் தளத்திலேயே நான் ஒருதடவை சொன்னேன்.இது ஒரு உளவியலே.வயது வந்த ஒரு பையனுக்கும் அவன் அப்பாவுக்கும் நிகழும் ஒரு எதிர்ப்புணர்வு போன்றதே இது.

    பதிலளிநீக்கு
  25. நன்றி bogan. ஜெயமோகன் பற்றிப் படிக்கிறேன்.

    சுஜாதாவைப் பற்றி நான் தவறாக என்ன சொன்னேன் to incur your wrath என்பது புரியவில்லை. 'he took more than he gave' என்றதா? எப்படி இருந்தாலும், nobody is untouchable. கருத்துக்களை எதிர்க்க எவ்வளவு உரிமை இருக்கிறதோ சொல்வதற்கு அதே உரிமை இருக்கிறது அல்லவா?

    சுஜாதாவுடன் ஏற்பட்ட சந்திப்பு கசப்பான அனுபவம் என்றும் நான் சொல்லவில்லையே?

    நீங்கள் விளையாட்டாக ஆட்சேபிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், என்றாலும் உங்களையும் என்னையும் ஒப்பிட்டது ஒப்பவில்லை என்றால் மன்னிக்க வேண்டுகிறேன். தவறு என்னுடையது.

    'அசிமவ் வகை' என்று நீங்கள் குறிப்பிட்டதை இப்போது புரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  26. எழுதுவதும் தவிர்ப்பதும் உங்கள் விருப்பம், போகன்.

    திரும்ப சுஜாதாவுக்கே வருகிறது எண்ணம். குமுதத்தில் எழுதத் தொடங்கிய கதையை எதிர்ப்புகளுக்கு அஞ்சி நிறுத்தியதும் அவருடன் 'madras poets society' கூட்டமொன்றில் நாங்கள் உரையாடியது நினைவுக்கு வருகிறது. குமுதம் கொடுத்த வியாபார நிமித்த சங்கடத்துக்கு பயந்து கருத்துச் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்தவர் சுஜாதா. எழுத்தாளன் வியாபாரியாக இருக்க வேண்டும் என்பதில் எந்த வித ஆட்சேபமும் எனக்குக் கிடையாது. எந்த வித ஐடியலிசமும் எனக்கு இல்லை, yet, die-hard capitalists can be principled என்று நினைக்கிறேன். 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற பாரதி பாட்டையும் அழகாக மேற்கோள் காட்டினார் சுஜாதா அதே மேடையில்.

    ரொம்ப நாளாகிறது, இது போல் intellectually stimulating விவாதம் செய்து. நன்றி.

    பதிலளிநீக்கு
  27. bogan, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'குருபிரசாத்' வரிகள், இருபது-நாற்பதுகளில் வெளியான pulp fiction கதைகளில் ரொம்ப சகஜம். Raymond Chandler கதைகளைப் படித்துப் பாருங்கள். சுஜாதா ஒரு கதையில் முதல் வரியில் ஏறக்குறைய இப்படித் தொடங்கியிருந்தார்: "முழுவதுமாக செத்திருந்தான்". அதிர்ச்சியும் ஆர்வமும் ஒருங்கே கிளப்பிய குருபிரசாத டைப் தொடக்கம். அதற்காகவே சுஜாதா காலடியில் விழுந்தேன். பின்னர் ஜிம் ப்லிசின் அறிவியல் கதைகளை கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த போது "Instantly, he died" என்பதை (or similar) முதல் வரியாக பல கதைகளில் எழுதியிருப்பதைக் கண்டேன். சுஜாதா ஜிம் ப்லிசைப் படித்திருப்பாரா? பெரும் சாத்தியம். His appetite for reading exceeded his appetite for writing. இதை அவரே சொல்லியிருக்கிறார். சேன்ட்லர், க்ளார்க் (கடவுள் வருகிறார் என்ற கருத்தில் கல்கியில் ஒரு கதை எழுதியிருந்தார், vintage clarke), ப்ரேட்பரி, வோடவுஸ், அசிமவ் இவர்களின் தாக்கம் அவர் எழுத்தில் காணப்படுகிறது. we write what we read. என்ன, சுஜாதாவின் எழுத்தில் புதுமைவரக் காரணமாயிருந்ததற்காக தாக்கங்களைக் குறை சொல்ல முடியுமா? சுஜாதாவைத் தான் குறை சொல்ல முடியுமா? இதையெல்லாம் வைத்து சுஜாதாவைப் போலி என்பது மடமை, பொறாமை. என்னைப் பொறுத்த வரை, சுஜாதா எழுதியதைப் படித்துத் தான் நான் எழுதவே தொடங்கினேன். சுப்ரமண்ய ராஜூ had talent but did not have the breadth that sujatha brought to the field. ஒரு வேளை அகால மரணம் ஏற்படவில்லையென்றால் வேறு சு.ராவை பார்த்திருப்போமோ என்னவோ. பாலகுமாரன் எழுத்தை நான் ரசித்ததே இல்லை, no comments there. மாலன் சுஜாதா காலத்தில் தனித்தன்மையோடு எழுதினார் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. ஜெமோ சுட்டியில் கடைசி கமெண்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 'சுஜாதா எனக்காக எழுதினார் உனக்காக எழுதவில்லை' என்ற கருத்தில் ஒரு ரசிகனின் உண்மையான ரசனை வெளிப்பட்டது. சுஜாதா எழுதியது ஒரு தரப்புக்குப் பிடிக்கவில்லையென்றால் இன்னொரு தரப்பு அனுபவித்து விட்டுப் போகட்டுமே?

    ஜெமோ எழுதியிருக்கும் "பிடிக்கிறது-பிடிக்கவில்லை என்ற பைனரி நிலை விவாதம்" பற்றிய கருத்து சரியென்றே படுகிறது. நானும் அப்படித்தான் வளர்ந்தேன். இளையராஜா பிடிக்கவில்லையென்றால் அவர் இசையமைத்த அத்தனை பாடல்களிலும் ஏதாவது குறை காண்பேன்; கமலகாசன் நடித்த அத்தனை படங்களிலும் ஓட்டை ஒடிசல் பார்ப்பேன். முதிர்ச்சி வர வெகு நாளானது. அவர் சொல்லியிருப்பது போல் விமர்சனக்கலையைப் பள்ளிப்பாடமாக வைத்திருக்கலாம். பின்னாளில் சக மனிதர்களுடன் பழக பெரும் உதவியாக இருந்திருக்கும்.

    நீங்கள் சொல்லவில்லையென்றால் ஜெமோ என்ற எழுத்தாளர் பற்றி எதுவுமே தெரிந்திருக்காது; நன்றி போகன்.

    பதிலளிநீக்கு
  29. நீங்கள் சொல்வது சரியே.ஜெமோ அப்படித்தான் தடாலடியாய்ச் சொல்வார்.முன்பெல்லாம் நாடக அரங்குகளில் மைக் இல்லாததால் கடைசி நபருக்கும் கேட்கவேண்டும் என்பதற்காக ரொம்ப சத்தம் போட்டு பேசுவார்கள்.இன்றைய தமிழ்ச் சூழலில் இப்படி தடாலடியாய்ச் சொன்னால்தான் கொஞ்சமாவது காது கேட்கும் என அவர் நினைக்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு.

    சுஜாதாவின் நடை புதுமை என்றது தமிழ்ச் சூழலிலேயே.

    என்னை உங்களுடன் ஒப்பிடவேண்டாம் என்று சொன்னது அந்த அளவு எல்லாம் நான் இன்னும் வரவில்லை என்பதால்தான்..அது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.எம்.எஸ் வந்து ஒரு சீசன் பாடகியிடம் 'நீ என்ன விட நல்லா பாடறிடி குழந்தே என்று சொன்னால் அந்த 'குழந்தை'இதுல எதுவும் உள்குத்து இருக்கான்னு யோசிக்காதா!

    சுஜாதாவிடம் ஜேம்ஸ் தர்பரின் பாதிப்பும் உண்டு என தோன்றியதுண்டு.

    பதிலளிநீக்கு
  30. அப்பாதுரை , போகன் ..இவ்வளவு அழகாக யோசிச்சு விவாதிக்கிறிர்களே .. எனக்கு வாசிக்கற அளவுக்கு யோசிக்க வராது..

    ஜெ. மோ. அவர்களின் சுஜாதா அவர்கள் மீது உள் நோக்க சீண்டலை படித்து ஒரு வரி மட்டும் எழுதினேன் ..செய்நன்றி மறந்து இப்படி எழுதுவதற்கு என்ன அவசியம் வந்தது.

    நிங்கள் அக்கட்டுரைகளை அவ்வளவாக படிக்காமலேயே உள்நோக்கத்தை பளிச்சென்று புரிந்து கொண்டுவிட்டீர்கள்.....

    கடவுள் வைரஸ்ஸை மீண்டும் படிக்கவேண்டும் ...வாத்தியார் வந்துவிட்டால் அவரை சுற்றியே இருப்போம்.....

    பதிலளிநீக்கு
  31. சுஜாதா காபியடித்தார்னு எழுத உங்களுக்கு அருகதையே கிடையாது. ஐம்பது வருடங்களா எழுதினவர் உழைப்பை ஒர் செகண்டுல மெழுகுவத்தி அணைக்கறது போல நீங்க சொல்லியிருப்பது வேடிக்கை. Height of stupidity. எழுதுவதை எழுதிவிட்டு பிறகு சுஜாதாவை தலைக்கு மேல் வைத்திருக்கதா தாஜா செய்வது Height of hypocressy.

    நான் பத்திரிகைத் துறையில் இருப்பவன். Let me tell you one thing mind you. இன்றைக்கு பாமர ரசனைக்கேற்ப அறிவியல் சொற்களைத் தேட நாங்கள் சுஜாதா புத்தகங்களைத் தான் படிக்கிறோம். எங்கிருந்து எடுத்து எழுதினால் என்ன? கையாண்டார் என்ற சொல்லுக்கு நெல்லை வழக்கில் திருடினார் என்று பொருள் - சுஜாதாவைத் திருடன் என்று சொல்லும் உங்கள் குற்றச்சாட்டின் பின்னே ஏதாவது காரணம் இருக்கிறதா? இல்லையென்றால் இப்படி எழுதுவது inaccurate மட்டுமல்ல indecency and offensive என்பதைத் தெரிவிக்கிறேன். குறைகுடம் என்று உங்கள் கருத்தைப் போல நீங்களும் நடந்து கொள்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  32. போகனும் அப்பா சாரும் செய்யும் "சுஜாதாவின் அறிவியல் புனைவுக் கதைகள்" கருத்துக்களம் அப்பப்பா ரொம்ப நல்லா இருக்கு.. இன்னும் கொஞ்சம் தொடருங்கள்... நன்றாக இருக்கிறது.

    தர்மு மாமா
    ஒரு மத்திய தர வகுப்பினன், அரசு வேலைப் பார்த்துக்கொண்டு சென்னையில் ஒரு மாடி போர்ஷனில் குடியிருக்கிறான். ஒரு நாள் டி.வி பார்க்கும்போது ஒருவர் அந்தத் திரையில் தோன்றி "எ... நாந்தான் தர்மு மாமா வா.. என்னோட வா.." என்று கூப்பிடுகிறார். கீழ் போர்ஷனில் சென்று அங்கிருக்கும் டி.வி.யில் எல்லாம் அந்த மாமா வரவில்லை என்று தெரிந்தபின், மிகவும் பயந்து போகிறான். அடிக்கடி அவர் டி.வியில் வரவே டாக்டரிடம் போய் மருந்து எழுதி வாங்கிக்கொண்டு, மருந்துக் கடையில் வாங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு சிவப்பு நிற மாருதியில் இருந்து அதே தர்மு மாமா கூப்பிட... அதிர்ந்து போய் வேறு பக்கம் ஓட ஆரம்பிக்க...... ஒரு லாரியில் அடிபட்டு.... ரத்தம் கொட்ட.. நினைவிழந்து.... மீண்டும் பார்க்கும் போது அதே தர்மு மாமாவுடன் மாருதி காரில் நம்ம செத்த ஹீரோ ராஜாங்கம்.

    "முன்பெல்லாம் எருமை பாசக்கயிறு எல்லாம் வெச்துண்டு இருந்தேன்... சமாளிக்க முடியலை.. பிசி... அதான்.. இப்ப மாருதியில..இன்னும் இன்னிக்கி எட்டு அட்ரெஸ் இருக்கு... எல்லாம் போயிட்டு அப்புறமா மேலே போலாம்" என்று எமதர்மராஜா சொல்வதாக கதை முடிவில் வரும்... அசத்தல் ராகம்.. எளக்கியம் தெரியாத, தீந்தமிழ்,பைந்தமிழ், நற்றமிழ் தெரியா என்போன்ற தற்குறிகளுக்கு இந்த தமிழ் போதைத் தமிழ்தான் இல்லையா அப்பா சார்?சுஜாதாவால் நாகரீகத்தமிழ் வாசிக்கவும் சுவாசிக்கவும் கற்றுக்கொண்டோம்.
    (உங்கள் கண்ணோட்டத்தில் நீங்கள் வாத்தியார் சுஜாதாவைப் பற்றி சொல்வதை நான் எதிர்க்கவில்லை என்று தயைகூர்ந்து அறியவும்.)

    பதிலளிநீக்கு
  33. thanks, RVS.
    கதை பெயரே 'தர்மு மாமா'வா? சுவையான கரு, கதை. of course, சுஜாதா நடையில் நன்றாகத் தான் இருக்கும்.

    சுஜாதாவின் பரம ரசிகர் போல நீங்கள்... looks like i have certainly missed his ascension to such superstardom.

    பதிலளிநீக்கு
  34. அமாம் அப்பா சார். கதை பேரே "தர்மு மாமா". இதே மாதிரி தலை வெடித்து செத்துப் போகிற கதை ஒன்னு இருக்கு. அப்புறம் டெலிபோர்டிங் கதை ஒன்னு. அடாடா.. எதைன்னு சொல்ல... பத்துஜியும் ஒரு டை ஹார்ட் ஃபேன்னு நினைக்கிறேன்.

    எதையாவது வாசிக்கலாம் என்று நான் அலைந்த நாட்களில்... ஜிப்பாத் தமிழுக்கு ஜீன்ஸ் டீஷர்ட் மாட்டி விட்டவர் சுஜாதா.

    பதிலளிநீக்கு
  35. வாத்தியார்ங்கற கண்ணாடி போட்டுதானே மற்றவர்களை படித்தேன்..பேசும் மொழியளவுக்கு வாத்தியார் கூட இருக்கிறார். உனது மொழி எது எனக்கேட்டால் தமிழ் என்பதற்கு பதில் சுஜாதா என்று கூறினாலும் கூறிவிடுவேன்...இது சற்று உணர்ச்சி வசப்படுதல் தான் ஆனால் இயற்கையாக வரும் உணர்ச்சியை ஒன்றும் செய்யமுடியாது... இப்படி ஒரு முறை சுஜாதாதேசிகன் அவர்கள் சேட்டில் வந்திருந்தார்.. வாத்தியாரை பற்றி தட்ட தட்ட பொல பொலன்னு கண்ணீர்.. அவ்வளவு கடமைப்பட்டுள்ளோம் வேறு என்ன சொல்வது ஆர்.வி.எஸ்...

    அப்பாஜி , நீங்களும் அந்த ரசிப்பில் சளைத்தவர் அல்ல..நீங்கள் பூவிலிருந்து அந்த தேனை குடித்தவர்கள்..நாங்கள் பாட்டிலில் அடைத்தபிறகு எடுத்து குடித்தோம்...

    பதிலளிநீக்கு
  36. வாவ் பத்மநாபன்.. உங்க ரசனைக்கும் மதிப்புக்கும் ஒரு சலாம். பக்தி லெவல்ல போய்ட்டீங்க.

    பதிலளிநீக்கு
  37. வருகைக்கு நன்றி ராமசுப்ரமணியன். எப்பனா வந்தாலும் உங்க வருகையை மறக்க முடியாம செய்யுறீங்க. அது வித்தை.

    கொஞ்சம் அடிக்கடி வந்துட்டுப் போங்க. திருச்சி வந்தா கோதாவுல இறங்குவோம் :)

    பதிலளிநீக்கு
  38. அன்புள்ள அப்பாஜி,
    சுஜாதா பற்றிய விவாதத்தில் நானும் ஒரு கருத்தை உங்கள் வலையில் ஏற்ற முயன்றபோது, அதன் நீளத்தின் காரணத்தால் பதிவேராமல் சதி செய்து விட்டது. காணாமலும் போயிற்று.
    நினைவு கூர்ந்து மீண்டும் முயற்சிக்கிறேன்.
    தமிழ் எழுத்துலகின் ராஜ பாட்டையில், ஜாம்பவான்கள் பலர் மைல்கற்களாய் இருந்தாலும், மறைந்த சுஜாதா அவர்கள், அவற்றுக்கு நடுவே ஓர் எழிலார் மண்டபமாகவே இருந்தார். அவரின் தாக்கம் இல்லாத இன்றைய எழுத்தாளன் அநேகமாக இருக்க முடியாது. தீவீர இலக்கிய வாசிப்பு பழகியவர்கள் கூட, அவரோடு முரண்படினும், ரசிக்கவே செய்தனர். அவரே கூறியது போல் தீவிர இலக்கியம் அவருக்கானதல்ல. அது அவருக்கு தேவையும் படவில்லை எனும் வண்ணம் அவரே ஒரு இலக்கிய முறையாக மாறிப்போனார் என்பது தான் உண்மை. அதே சமயம் அவரின் இலக்கிய அறிவு யாருக்கும் குறைந்ததல்ல. அவரின் ஆளுமையாலோ அல்லது வாழ்க்கை முறை காரணமாகவோ, எழுத்தில் ஈடுபாடற்ற அந்நியம் தொக்கி நிற்பதாய்த் தோன்றும்.அந்த அளவில் மட்டும் சுஜாதாவின் நிலைப் பாட்டை பற்றி திரு.ஜெயமோகனின் கருத்து சரி. மற்றபடி சுஜாதா இலக்கியங்களை எளிமைப் படுத்தி அறிமுகப் படுத்தியது, அவரின் லட்சக் கணக்கான வாசகர்களை, அவற்றின் பால் ஈடுபடுத்ததான். அந்த முயற்சியில் எழுந்த சில பிழைகளை
    பெரிது படுத்தத் தேவையில்லை என்பது என் எண்ணம். சுஜாதாவைப் படிப்பவர் மேலும் இலக்கியம் தேட, அந்த முனைப்பை ஏற்படுத்திய அளவில், இது சுஜாதாவின் வெற்றியே.
    மற்றபடி ஆழ்ந்த இலக்கியத் தேடலுக்கு தான் வேறு வழிகாட்டிகள் உள்ளனரே!
    தென் தமிழ் நாட்டின் ஊர்களில் ’அம்பி அய்யர் காபி ஹோட்டல்’
    போன்ற கடைகளில் கும்பகோணம் டிக்ரீ காப்பி குடித்தால் அமிர்தமாய் இருக்கும். அவற்றில் ‘டீ’ குடித்து பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்காது. சுகுமாரன் நாயர் டீ ஸ்டாலில் டீ சுவைக்கும்.. காப்பியோ சகிக்காது. எது வேண்டுமோ அது கிடைக்கும் இடம் சென்றால் பிரச்சனை இல்லை. மற்றபடி
    ஒரு ஜெயமோகன் பதிவில் வெளியான என் பின்னூட்டம் கீழே
    மிகுந்த சூட்சமமான புரிதலுடனே சுஜாதா அவர்களின் அணுகுமுறையை எழுதியிருக்கிறீர்கள். சுஜாதா மொழியில் சொன்னால் “குடலாப்பரேஷன்” செய்திருக்கிறீர்கள்.
    வாசகனின் புரிதலையும் ஊகத்தையும் சற்றே உயர்த்தி தன் எழுத்தின் களத்திற்கு ஈர்க்கும் செப்பிடு வித்தையில், அவர் எழுத்தில் இழையோடும் நகைச்சுவையில், நீங்கள் குறிப்பிடும் EVASIVENESS எங்கோ நிஸ்சலனமாய் பொதிந்திருக்கிறது.
    அவரின் பரந்த பட்டறிவும் ரசனையும் அவர் எழுத்தின் லாவகத்தை மேம்படுத்தி வாசகரிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதேன்னவோ நிஜம். எல்லோருக்கும் சொல்ல ஏதோவொன்று அவர் வசம் இருந்தது.
    எழுத்து எனும் கவசம் இருக்கும் வரை ,எழுத்தாளன் எளிதில் வெல்ல முடியாத கர்ணனாகவே இருக்கிறான். நீங்கள் குறிப்பிட்டது போல் அவர் ‘கை விட்டது’ பிம்பங்களையே.. எழுத்தாளன் மறையலாம். எழுதுக்கோ என்றும் மரணமில்லை.
    மோகன்ஜி,ஹைதராபாத்
    By மோகன்ஜி on Jul 31, 2010
    ரொம்ப எழுதிட்டேனோ. எனக்கு சுஜாதாவின் காபியும் பிடிக்கும், ஜெயமோகனின் இஞ்சி டீயும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  39. மோகன்ஜி 20-20 கிரிக்கெட்ல தொடர்ந்து சிக்ஸர் அடிக்கரமாதிரி இருக்கு உங்களோட பின்னூட்ட அலங்கார நடை. அதெப்படி சார் எங்க கும்மி நடந்தாலும் துண்டை போட்டு சீட் பிடித்து ஆஜர் ஆகிடறீங்க. Excellent!!!

    உங்களோட இலக்கிய விவாதத்தில் இந்தக் கடைநிலை ரசிகனின் சில சுஜாதா சிலாகிப்புகள்.. சிலது வாத்தியாரைப் பற்றி என் ப்ளோகில் எழுதியவை...
    ஒன்று
    ----------
    "தடக் தடக்" என்று பாசஞ்சர் ரயில் வரும் சப்தம் தண்டவாளங்களில் கேட்க... நான் ஒரு நிமிஷ தயக்கத்தில் அங்கேயே இருப்பதா அல்லது பாலக்கரைக்கு போய்விடுவதா என்று தீர்மானிக்க இயலாமல் தண்டவாளங்களின் இடையில் நடக்க ஆரம்பித்தேன்...

    இருப்பதா - நடப்பதா
    இருப்பதா - நடப்பதா

    மழை மேகம் போல் புகை கக்கிக் கொண்டு வந்த ரயில் என்மேல் செல்லும் போது எனக்கு பதிலாக அது அலறியது

    'ஆ...!"
    (வாத்தியார் தேர்ந்தெடுத்த இருப்பதா-நடப்பதா வார்த்தைகளை தொடர்ந்து சொல்லிப் பார்த்தால் ரயில் போலவே "தடக் டடக் தடக் டடக்" என்ற ஒலியோசையுடன் இருக்கும்.
    )
    இரண்டு.
    ------------
    உடல் எத்தகைய கலைப் பொருள். அதன் இயக்கத்தில், மென்மையில் , வளைவுகளில், உயிரில் எத்தனை அழகு இருக்கிறது. செதுக்கப்படாத பளிங்குபோல அந்த உடலை ஒரு மைக்கேல் அஞ்சலோவின் ஆர்வத்துடந்தான் பார்த்தான். எந்த நூற்றாண்டிர்க்கும் செல்லுபடியாகும் காட்சி அது. ஒரு மரம், ஒரு நிழல், ஒரு பொய்கை, ஒரு பெண்ணின் உடல்.
    -கொலையுதிர் காலம்

    பதிலளிநீக்கு
  40. அமர்க்களம் மோகன்ஜி.
    சுஜாதா எழுத்து இலக்கியமில்லை என்பவர்கள் இலக்கியம் தெரியாதவர்கள்.
    தமிழுக்குப் புதுமை கொண்டு வந்த முன்னணி எழுத்தாளர்களில் அவர் தனித்திருக்கிறார்.
    உங்கள் பின்னூட்டத்தை நாலு முறை படித்து ரசித்தேன் (சிலது புரியவில்லை).

    பதிலளிநீக்கு
  41. RVS..சுஜாதா நடை பிட் எழுதி வச்சிருப்பீங்களோ?
    நடைன்னதும் அவர் எழுதின 'மேகத்தைத் துரத்தினவன்' நினைவு வருது. அந்தப் புத்தகம் என்னிடம் இல்லை. அசல் மாலைமதி (ராணிமுத்து?) பிரதி ரொம்ப நாள் வச்சிருந்தேன். ஒரு தடவை ஊருக்குப் போன போது அத்தனை சுஜாதா புக்சும் கோயிந்தா. என்ன பண்ண?

    பதிலளிநீக்கு
  42. அன்பு ஆர்.வீ.எஸ், உங்கள் சிக்ஸர் கருத்துக்கு நன்றி. தன்யோஸ்மி! உங்களின் சுஜாதா QUOTES அருமை! நல்ல ரசனை உங்களுக்கு!

    அப்பாஜி!ரொம்ப தமிழிட்டேனோ? இன்னொருதரம் ஆற அமர படிச்சு பாருங்க.. அப்புறமும் புரியலேன்னா?
    விட்ருங்க.. சுஜாதாவையே விட்டுட்டோமே?

    பதிலளிநீக்கு
  43. ஆர்.வீ.எஸ். 'கொலையுதிர் காலம்' எப்பவோ படித்தது என்றாலும், இந்த வரிகளை படித்தபோது, நானும் இதை மிகவும் படித்து ரசித்தது நினைவுக்கு வருகிறது. குமுதத்துல தொடரா வந்தபோது ஒரு வெறியோட படிச்சது. பெண்களை பற்றிய அவர் வர்ணனை மிகவும் elegant ஆக இருக்கும். அந்த வர்ணனைக்கு ஏற்றார் போல் 'ஜெ' ஓவியம், ஆஹா!!! படித்து ரசித்து, ரசித்து படித்து, மீண்டும் ரசித்து படித்து ......... ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்.
    ஆமாம் எப்படி டக்குன்னு இந்த வரிகளை எழுதிட்டீங்க! கதையே மனப்பாடம் ஆயிடுத்தா!

    பதிலளிநீக்கு
  44. சுஜாதாவை மனசுல வெச்சுருக்கேனே தவிர இந்த மரமண்டைக்குள்ள மனப்பாடமா வைக்க முடியலை மீனாக்ஷி. அப்பா சார் சொன்னா மாதிரி பிட் தான்.
    போன ஃபிப்ரவரி சுஜாதா நினைவு நாளுக்காக
    ராஜனுக்கு ராஜன் - இந்த ரெங்கராஜன் தான்
    அப்படின்னு ஒரு பதிவு எழுதினேன். அதற்காக மூலத்தை சிதைக்காமல் அவர் எழுதியதை அப்படியே எடுத்துப் போட்டது. அந்த பதிவு இங்கே. http://mannairvs.blogspot.com/2010/02/blog-post_27.html.
    பெண்களை பற்றி சுஜாதா எழுதிய மென்மையான வர்ணனைகள் நிறைய உண்டு... ஏதோ ஒரு நாவலில் அவளின் அழகை வர்ணிக்கும் போது "அவளைப் பார்த்தால் பார்த்தவர்கள் வாய் பேசா அழகைக் கொண்டவள்." எவ்ளோ அர்த்தம்!!!
    இன்னொரு நாவலில்... நில்லுங்கள் ராஜாவே என்று நினைக்கிறேன்... அவளுக்கு பதினெட்டுக்கு மேல் இருக்கும் இருபதுக்கு மேல் இருக்காது.. என்று வயதைப் பற்றி எழுதியிருப்பார்...
    ஆதலினால் காதல் செய்வீரில் - அந்தப் பெண் ஆறாவது மாடிவரை வாசனையுடன் வந்தாள். காதோரத்தில் பாட்டரி இணைத்தாற்போல் மின் அதிர்வு ஏற்ப்பட்டது.
    அடுக்கிக்கொண்டே போகலாம். இப்போதைக்கு இத்தோட நிறுத்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு