2013/03/12

பரணறையில் நன்னாரி மணம்

2

முன் கதை


    சாப்பிடுகையில், "கண்மணி.. ஏன் தட்டுல அப்படியே வச்சிருக்கீங்க? என்ன அது மூக்கு நுனியில? அசப்புல கோபம் மாதிரியே இருக்கு?" சீண்டினார் ராஜி. "..பின்னே நான் உங்களை எத்தனை தடவை கூப்பிடட்டும்? பிறந்தநாள் கொண்டாட்டத்துலந்து ஒவ்வொண்ணா நான் தானே செய்யணும்? பசங்க ரெண்டு நாள்ல வந்துருவாங்க.. அதுக்குள்ளே எல்லாம் முடிக்கணும்னு நான் வேகமா இருந்தா.. நீங்க உதவி செய்ய வேண்டாம்.. கூப்பிட்ட குரலுக்கு ஏன்னு கேக்கலாமுல்ல?"

பிச்சைமணி யோசித்தபடி, மெள்ளக் கொறிக்கத் தொடங்கினார்.

"கோவமா இருந்தா ஒரு வார்த்தை சொல்லிடுங்களேன் மணி.. சாப்பிடுறப்ப முகத்தை இப்படியா வச்சுக்குவாங்க? கொஞ்சம் சிரிக்கக் கூடாதா?" சிணுங்கினார். பிறகு நிதானமாக, "பரண் ரூம் கதவைத் திறந்து உள்ளே வரலாம்னு இருந்தேன். நீங்க பதிலே சொல்லாததால எனக்குள்ளே ஒரு நடுக்கம்.. ஒரு வேளை... பரண் ரூம்ல உங்களுக்கு.."

"அதான் வந்துட்டனே, ஸ்டாம்ப் ஒட்டாத தபாலாட்டம்?"

"என்ன இப்படி சொல்றீங்க? என் தவிப்பு எனக்குத்தானே தெரியும்? எண்பது வயசாகுது.."

"எண்பது.. நூறு.. இதெல்லாம் வெறும் எண்ணிக்கைனு என்னிக்கோ புரிஞ்சு போச்சு. அதைப் புடிச்சுக் கொண்டாடிக்கிட்டு.. இதை சாக்கு வச்சு உனக்கு பொழுது போகுது.. நாலு பேரை ஆள ஒரு சான்சு... பத்து நாள் பிள்ளைங்களோட சந்தோஷம்... அனுபவி.. வேணாங்கலே... என் உணர்வெல்லாம் அதுல இல்லடி. கொஞ்ச நாளா பரண் ரூம் பக்கம் போனாலே உனக்குப் பிடிக்கலே ராஜி. நான் கொஞ்சம் என்னை மறக்கற இடம்.. அதை அழிக்கிறதா சொல்றியே? அந்தப் பரண் ரூமைப் பத்தி எதுவுமே தெரியாம.. அதுவும் என் ராஜி.. நீ அப்படிப் பேசலாமா?"

"உங்களை வருத்தப்பட வச்ச என் மனசு சேறாத்தான் இருக்கணும்... அப்படி அங்கே என்ன இருக்கு? எல்லாம் பழைய தட்டுமுட்டு குப்பை கூளம்.. அதுல என்னத்தைக் கண்டீங்களோ?"

"யோசிச்சு பாரு ராஜி.. பரண் ரூம் ஒரு காலச்சுரங்கம். தோண்டித் தோண்டி ஒவ்வொரு வருஷமா போகலாம். பரண் ரூம் ஒரு காலவெளி. அங்கருந்து இங்கே, இங்கருந்து அங்கேனு போகலாம். மனம் போல் மார்க்கம். அங்கே இருக்குற ஒவ்வொரு பொருளும் ஒருவகையில் நாம வாழ்ந்ததற்கான நினைவு.. நினைவுச் சின்னம் இல்லையா? அங்க இருக்குற ஒவ்வொரு சூட் கேஸ், ட்ரங்க் பெட்டி, அலமாரி, கடிகாரம், தொட்டில், பஞ்சவர்ணக் குடை, போட்டோ ஆல்பம், சைக்கிள், தூளிக்கழி, காஞ்சுப் போன மாலை, மார்கோனி ரேடியோ, வெண்கல டம்ளர், வெள்ளிப் பால்புகட்டி, எங்கம்மா காலத்து அம்மி, உங்க பாட்டி தந்த குமிட்டி அடுப்பு, துருத்தி, நம்ம கல்யாணப் பத்திரிகை, கல்யாணத்துக்கு நீ கட்டின ஒட்டியாணம், கூரைப்படவை.. உன்னோட கர்ப்ப எக்ஸ்ரே படங்கள்.. நாம் ஜோடியா மொத மொத பார்த்த சினிமா டிகெட்.. ஒரு அம்மாவைப் பாத்து ஐயா அடிச்சாராம் கண்ணு.. அவ சிரிச்சாளாம் பொண்ணு.. ஞாபகம் இருக்கா? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு காலக் கட்டத்துக்கான நிறுத்தம் இல்லியா? ராஜி.. பரண் ரூம் நமக்கான ஒரு தனிப்பட்ட காலவண்டி. நாம தான் டிரைவர். நாம தான் பேசஞ்சர். ஒவ்வொரு ஸ்டாப்பா ஏறி இறங்கி.. அத்தனை சந்தோஷங்களையும் திரும்பத் திரும்ப அனுபவிக்கலாம்.."

"எத்தனை கஷ்டப்பட்டிருக்கோம்! எவ்ளோ அழுதிருக்கோம்! எத்தனை சீக்கு.. எத்தனை நஷ்டம்.. எத்தனை துயரம்.. எத்தனை ஏமாற்றம்.. அதெல்லாமும் கூட வருமில்லையா? என்னவோ தினம் தினம் ஒரே சந்தோஷக் கூத்தா இருந்தாப்புல பேசறீங்க.."

"ஆனா.."

"என்ன ஆனா சோனா? உங்க புத்தி இப்படி போயிட்டிருக்கேனு பயமா இருக்கு.. சந்தோஷங்களை மட்டும் ஞாபகம் வச்சிருக்கீங்க.. நீங்க சொல்லுற காலவண்டி உண்மைனே வச்சுக்குவோம்.. அங்கே போனா எனக்கு அதே நினைவுகள் வரும்னு எப்படி சொல்ல முடியும்? அட, உங்களுக்கே நாளைக்கு வருத்த நினைவுகள் வராதுனு என்ன நிச்சயம்? இந்த வயசுல வம்பெல்லாம் வாங்கணுமா? இத பாருங்க மணி.. நாம இப்ப இருக்குற நிலமை.. செலபன் டேப்புல ஒட்டின, உடைஞ்ச துண்டுகளால ஆன கண்ணாடி மாதிரி.. முகம் தெரியுது.. கனமாகவும் இருக்கு.. இருந்தாலும் மடிஞ்சு போற.. சுருட்டி வைக்கிற.. உதிர்ந்து போற.. கண்ணாடிப் போர்வை. அதை ஞாபகம் வச்சுக்க வேணாமா? உங்களை நினைச்சா எனக்கு பயமா இருக்கு மணி.. நீங்க பரண் ரூம்லயே இருக்குறது எனக்குப் பிடிக்கலே.."

"உனக்குப் பிடிக்கலேனா.. நான் இதை மெள்ள.. நிறுத்திடறேன் ராஜி" சொல்லும் பொழுது பிச்சைமணியின் குரல் நெகிழ்ந்தது.

"என்னைப் பொறுத்தவரைக்கும் நினைவுகள் ஒரு பெரிய சுமை கண்மணி.. தானா இறங்குன குரங்கை தலையில தூக்கி வச்சுக்கிட்டா ஆபத்தில்லையா? நமக்குக் கண்ணு ரெண்டும் முதுகுல இல்லே. அவ்வளவுதான் சொல்வேன்" என்ற ராஜி, பிச்சைமணியின் இடதுகையை நட்புடன் பிடித்தார். "பரண் ரூமுக்குப் போக வேண்டாம்னு சொல்லலிங்க.. அங்கயே மணிக்கணக்கா இருக்காதிங்கனு சொல்றேன்.. ரெண்டு தடவைக்கு மேலே கூப்பிட வைக்காதீங்கனு சொல்றேன்.. என் செல்லம் இல்லையா.. சொன்னா கேளுங்களேன்?"

"இன்றே கடைசி!" கீற்றுக் கொட்டகை சினிமா போஸ்டர் பாணியில் சிரித்தபடி சொன்னார் பிச்சைமணி. "நீ எங்கூட வாயேன்.. வந்து பாரேன் ராஜி?"

"என்னை விட்டுருங்க.. நீங்க வேணும்னா போங்க.. அங்கே காலடி வைக்கவே எனக்குப் பயமா இருக்கு.."

இருபத்திரண்டு வயதில் டெபுடேசனில் மோகா போன போது, "நீங்க காட்டுக்கே போனாலும் நான் கையைப் பிடிச்சுட்டு வருவேன்.. உங்க கூடத்தான் இருப்பேன். என்னைத் தனியா விட்டுப் போகாதீங்க" என்று ராஜி அடம்பிடித்துக் கெஞ்சி உடன் வந்தது பிச்சைமணியின் மனதில் படம் போல் ஓடியது. சாப்பிட்டு எழுந்தவர், ராஜியைப் பார்த்த ஏக்கப் பார்வையில் ஆழமான வலி இருந்தது.

    இரவுக்கான எளிய சமையலை மேசை மேல் வைத்தபடி கணவனை அழைத்தார் ராஜி. பிச்சைமணி பரண் ரூமுக்குள் போய் மூன்று மணி நேரத்துக்கு மேலாகியிருந்தது. "மணீ" என்று பல முறை கத்திக் கதவைத் தட்டிய பிறகு வெளியே வந்த பிச்சைமணியின் நடையில் துள்ளலும், முகத்தில் களையும் இருந்தது. "இப்ப எங்கிருந்து வரேன், தெரியுமாடி ராஜிக்கண்ணு?"

கணவரின் செயல் எரிச்சலூட்டினாலும் அவருடைய சந்தோஷத்தைக் குலைக்க விரும்பாமல், "மறுபடியும் சீதம்மாள் கடையா? ஞானப்பழ ஜூஸ் எதாவது குடுத்தாளா இந்த தடவை? அதான் வாசனையே காணோம்.."

"ஜூசில்லைடி, என் ப்ரிய லூசு. கச்சேரி! சன்னதி தெருவுல மதுரை மணி தர்மக் கச்சேரி. இசை மழை. நீ உங்க ஊர்க்காரன்னு சொல்லி அலட்டுவியே, அந்தப் பையன் ஜெயராமன்.. மொத மொதலா கானகலாதரருக்கு பக்க வாத்தியம்.. சந்தோஷமா கேட்டு வந்தேன்.. இருநூறு பேராவது இருக்கும்.. கூட்டமான கூட்டம்.. நீயும் வந்திருக்கலாம்ல?"

"மதுரை மணி கச்சேரியா? என்ன உய் உய் பாட்டு பாடினாரு?.." என்ற ராஜியின் கேலி புரியாமல் பிச்சைமணி உற்சாகமாகத் தொடர்ந்தார். "..தர ல ல ல.. பின்னிட்டார் மனுஷன், இல்லையில்லை தேவன். உனக்குப் பிடிச்ச ஸ்ரீரங்கபுரவிகார பாடினாருடி. கேளு.. ராமபக்தி, மனவியால, சரஸ சாமதான, மாஜானகினு சங்கீத அருவியா கொட்டினவரு திடீர்னு ஒரு புது பாட்டு பாடினாரு.. அடடா, நீ பக்கத்துல இல்லையேடி? கா வா வா கந்தா வா வானு முருகர் மேலே ஒரு தமிழ்ப்பாட்டு.. பிச்சு உதறிட்டாரு. அப்புறம் உங்க.. அந்த ஜெயராமனுக்குத் தனியா அஞ்சு நிமிஷம் கொடுத்தார்.. என்னமா வாசிக்கறான்! எல்லாருமே சைலன்ட்! அப்படியொரு கட்டு.. ஆகா! என் கண்ணுல தண்ணி வந்துடுச்சுடி.." என்ற பிச்சைமணியின் அசல் கண்ணீரைக் கண்டதும் ராஜிக்குத் தன் தவறு புரிந்தது. பாட்டு வரிசையெல்லாம் சொல்கிறாரே?

"என்ன சொல்றீங்க நீங்க? கச்சேரியா? அது நடந்து அறுபது வருஷமாவது இருக்காதா? நம்ம கல்யாணத்துக்கு முன்னால இல்லையா?"

"ஆமாடி.. உன்னைப் பெண் பார்த்துட்டு அப்படியே சொக்க்..க்கிப் போயிருந்தேனா? கல்யாணத்தை இப்பவே வச்சுக்கலாம்னு சொன்னா, உங்கப்பன் 'அடுத்த தை'னு குதியா குதிச்சு ஒரு வருசம் இழுத்தடிச்சா? உன்னைப் பாக்குற கிக் கிடைக்காதுனாலும் இசைலயும் போதை இருக்குல்ல? அதான் உன்னைப் பெண் பார்த்தன்னிக்கு.. போனா.. அப்பாவோட தோஸ்தாச்சே.. என்னைப் பாத்துட்டு மேடைக்கு வரச் சொல்லிட்டாரு! அங்கயே உக்காந்து.." என்றுத் தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்த பிச்சைமணியை அதிர்ச்சியுடன் பார்த்தார் ராஜி. மூளை பாதிக்கப்பட்டிருக்கும் என்ற கவலை வந்தாலும் இத்தனை விவரங்களை நினைவில் வைத்திருக்கும் ஒழுங்கு ஆச்சரியமாகவும் இருந்தது அவருக்கு. கணவரின் உற்சாகமும் வேகமும் புதிராக இருந்தது. இவருக்கா எண்பதாகப் போகிறது?!

"இதைப் பாத்தியா?" திடீரென்று பிச்சைமணி ஒரு பிலேஸ்டிக் வளையத்தை ராஜியின் கண்ணெதிரே காட்டிச் சிரித்தார்.

வளையத்தை உயரப் பிடித்தபடி "..ரிமரிமபத இதவுமாட.." என்று ஸ்வரம் பாடித் தன்னைச் சுற்றி வந்தவரைப் பார்த்து ராஜி அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார். "எங்கருந்து பிடிச்சீங்க?"

    பிச்சைமணியின் அப்பா காலத்து சைக்கிள். மரச்சக்கரத்தின் மேல் டன்லப் டயர் பொருத்திய ரேலி 1930ம் வருட மாடல். மாகாண பிரிடிஷ் காரியதரிசி பிச்சைமணியின் அப்பாவுக்குப் பரிசாகத் தந்து, பிறகு பத்து வயதில் பிச்சைமணிக்குக் கிடைத்தது. இரும்புச் சக்கர வண்டிகள் வந்ததும் அதை பரணுக்கு மாற்றிவிட்டாலும், அடிக்கடி துடைத்து வீட்டில் அழகு பார்ப்பார்களே தவிர யாருமே ஓட்டவில்லை. கல்யாணமான புதிதில் மரச்சக்கர சைக்கிளில் சவாரி போக ஆசைபட்டதும் கொஞ்சமும் தயங்காமல், "உனக்கில்லாததா ராஜிச்செல்லம்.. வா" என்று உடனே கிளம்பிவிட்டார் பிச்சைமணி. தெருக்கோடி சீதம்மாள் கடைக்கு முதல் சவாரி.

இளமையை அறிவு என்றாவது வென்றதுண்டா? 

தெருக்கோடி வரை போயிருப்பார்கள். சைக்கிளில் செயினைச் சுற்றி மூடியில்லாததால், ராஜியின் புடவை உள்பாவாடையோடு சேர்த்துச் சிக்கிக் கொண்டது.. இப்படி அப்படி இழுக்க இழுக்க இன்னும் மோசமானது. சிக்கிய இடத்தைச் சுற்றி மெள்ளக் கிழித்தார் பிச்சைமணி. செயினிலிருந்து துணித்துண்டுகளை உருவி எடுத்தார். விவரமறிந்த சீதம்மாள் ஓடிவந்து ராஜியை அழைத்துச் சென்று கடைக்குள் உட்கார வைத்தாள். 'புதுப்பொண்ணு வந்திருக்கே.. எவன் கண்ணு பட்டுச்சோ' என்று உடனடியாக ஒரு எலுமிச்சையைச் சுற்றிக் கசக்கி எறிந்தாள். இருவருக்கும் நன்னாரி கலந்த சர்பத் கொடுத்தாள். "ரொம்ப கிழிஞ்சிருச்சா கண்ணு.. என்னோட புடவை கட்டிக்கிறியா?" என்ற சீதம்மாவிடம் மறுத்து, "திரும்பலாம்" என்றார் ராஜி. "இருங்கய்யா.." என்ற சீதம்மாள் உள்ளே சென்று ஒரு ப்லேஸ்டிக் வளையத்தை எடுத்து வந்தாள். "கோலி சோடா கட்டுற வளையம். இப்படி இழுத்துப் போட்டா நிக்கும்.. திரும்பப் போவுறப்ப கொலுசைக் கொஞ்சம் உயத்திப் புடவையோட சேர்த்து இந்த வளையத்தைக் கட்டிக்க.. மறுபடி கிழியாம இருக்கும்.. கொலுசும் மாட்டாது.. வச்சுக்க.." என்று ராஜியின் புடவையையும் கொலுசையும் சேர்த்துக் கட்டினாள். "மொத மொத மகாலட்சுமி என் கடைக்கு வந்திருக்க தாயி.. உங்கிட்டே காசு வாங்கமாட்டேன்" என்று சோடா வளையம் எதற்கும் காசு வாங்கவில்லை சீதம்மா.

பிச்சைமணிக்கு உள்ளூர கிறக்கம். "முக்கால் பேன்ட் மஹாலட்சுமி.." என்று வழியெங்கும் கிண்டல் செய்தார். வீட்டெதிரே வருகையில் சொல்லி வைத்தாற்போல் ராஜி உட்கார்ந்த மரச்சக்கரம் விரிந்து உடைந்தது. சட்டென்று குதித்த ராஜி உள்ளே ஓடிவிட்டார். அழுகையாக வந்தது. தன் சிக்கலை விட மாமனாரின் 'பொக்கிஷ' சைக்கிள் உருக்குலையத் தன் ஆசை காரணமாகிவிட்டதே என்று பயம். பழைய சைக்கிளில் கூட்டிப்போனதற்காக எல்லாரும் பிச்சைமணியைத் திட்டினார்களே தவிர ராஜியை எதுவுமே சொல்லவில்லை. உடைந்த வண்டியை எப்படியோ ஆணி அடித்து ஒழுங்கு செய்து பரணில் போட்டது தான், எடுக்கவே இல்லை. புடவை மாற்றும் பொழுது எங்கேயோ தூக்கிப் போட்டதோடு சரி, வளையம் என்ன ஆனது என்று கூடத் தெரியாது, 

இத்தனை வருடங்கள் கழித்து ராசியில்லாத நாளை நினைவுபடுத்தும் வளையம்! ராஜியின் நிழலரக்கியை எழுப்பி விட்டது. "எங்கருந்து பிடிச்சீங்க?" என்றார் மறுபடி எரிச்சலுடன்.

"பரண் ரூம்ல ஒரு அதிசயம்னு சொன்னேனே? அந்த மரச்சக்கர சைக்கிள் - வெறும் சைக்கிளில்லே ராஜி, காலவண்டி! காலவண்டி, ராஜி! மேஜிக்! ஏறி உக்காந்தா எங்க வேணும்னாலும் காலப்பயணம் போகலாம்.. அதிசயம்னா அதிசயம்! ரெண்டு வாரத்துக்கு முன்னால தான் எனக்கே.." பிச்சைமணி முடிக்குமுன் வளையத்தைப் பிடுங்கினார் ராஜி. பரண் ரூம் கதவைத் திறந்து உள்ளே எறிந்தார். 

"இதோ பாருங்க மணீ... இனிமே என்னைக் கேட்காம இந்த ரூமுக்குள்ள போனீங்கன்னா, இழுத்துப் பூட்டி சாவியை எறிஞ்சுருவேன். போதும் உங்க கற்பனையும் காலவண்டியும்.." என்று எரிந்தார்.  "உங்களுக்குப் பசிக்குமேனு ஒரு மணி நேரமா கூப்பாடு போடுறேன்.. காலவண்டியா விட்டுட்டிருக்கீங்க? எண்பது வயசானா எல்லாம் இப்படிக் கழண்டுருமா? ஒரு பொறுப்பு வேணாம்? ஏற்கனவே ஒடஞ்ச வண்டி, உங்களைச் சொல்லலே.. சைக்கிளைச் சொன்னேன்.. ஒரு விவஸ்தை வேணாம்? அதுவும் அந்த வளையத்தை எடுத்துட்டு வந்து..சே!" ராஜிக்கு அழுகை வந்தது. "என் புருஷன்.. என் குழந்தை.. இன்னும் சாப்பிடலையேனு நான் கிடந்து.. சே! சாப்பிட்டா சாப்பிடுங்க.. என்னவோ பண்ணுங்க.." என்று அழுகை பொங்க அங்கிருந்து அகன்றார். "ராஜிமா.. ராஜிக்கண்ணு" என்று பின் தொடர்ந்தக் கணவரைப் பொருட்படுத்தாமல், படுக்கையறைக்குள் சென்றார்.

    நடந்தவற்றை மறக்க முடியாத பிச்சைமணி சில மணி நேரங்கள் பொறுத்துப் படுக்கையுள் நுழைந்த போது, ராஜி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். ஓசையின்றி அருகே படுத்தார். உயிரற்ற தலையணை போல் உணர்ந்தார். ராஜியைப் புண்படுத்தியதை எண்ணி அவர் கண்ணீர் நிற்கவேயில்லை. 'நான் சொல்வதை ஏன் நம்ப மறுக்கிறாள் ராஜி? இத்தனை நாள் என் எண்ணங்களை, நான் தொடங்க அவள் முடித்தாளே.. இப்போது என்ன ஆயிற்று? ராஜி.. ராஜி.. என் ராஜி. என்னைப் புரிஞ்சுக்க முடியலியா உன்னால? இது என்ன வாழ்க்கை ராஜி.. புரிஞ்சுக்க விரும்பாத ஒருத்தரோட வாழுறது ருசிக்காக சாப்பிடாம பசிக்காக சாப்பிடறது போல இல்லையா? ராஜி.. ராஜி.. எனக்கு என்ன ஆச்சு? ஏன் உன்னை கலங்கடிக்கிறேன்..?' ஏதோ சிந்தனையில் புரண்ட போது ராஜியை நெட்டி அவரறியாது எழுப்பிவிட்டார்.

"என்னங்க.." என்றார் அரைத்தூக்கத்தில் ராஜி.

"சாரி ராஜி.. உன்னைப் புண்படுத்திட்டேன்.." பிச்சைமணியின் குரல் கரகரத்தது.

"போகட்டும்.. சாப்டீங்களா?" 

பிச்சைமணிக்குச் சிரிக்கத் தோன்றியது. "தூக்கத்துலயும் உன் கவலை உனக்கு.." என்றார்.

திடீரென்று எல்லாம் தெளிவானது. அமைதியாக ராஜியின் காதுகளில் "ராஜிக்கண்ணு.. குட் பை" என்றார்.

ராஜி அரைத்தூக்கத்தில் "சரி கண்ணா, குட் நைட்" என்றபடி கைகளை நீட்டினார். அவர் விரல்களைப் பிடித்தபடி படுத்திருந்த பிச்சைமணி உறங்க முயன்றார்.

    திடுக்கிட்டு விழித்தார் ராஜி. காலை ஏழாகியிருந்தது. இத்தனை நேரம் தூங்கியிருக்கிறேனா? அருகில் பார்த்தார். பிச்சைமணியைக் காணோம். காபி டிபன் செய்யணுமே? பரபரப்போடு எழுந்தார். கணவரைத் தேடினார். "கண்மணி.. காபி சாப்பிட்டீங்களா? இன்னொரு வாய்.." என்று அறைகளை நோட்டமிட்டார். பரண் ரூம் கதவு திறந்திருந்ததைக் கவனித்தார்.

கோபத்துடன் "மணீ" என்றபடி கதவைத் திறந்து உள்ளே அடி வைத்தார். அமைதியாக இருந்தது. கட்டிய புதிதில் பரண் ரூமுள் ஒன்றிரண்டு முறை போனதோடு சரி. "மணீ..?" மின்விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. தென்பட்ட ஜன்னல்கள் அனைத்தும் கர்டன் கலையாமல் அடைத்திருந்தன. அங்கங்கே பெட்டிகள் திறந்திருந்தன. தரையில் துணிகள் கிடந்தன. கணவருக்குக் கொடுத்த தலைதீபாவளி டெரிலின் சட்டை! களையிழந்து கிடந்த சட்டையைக் கடந்து சென்றார். அங்கங்கே சில போட்டோ ஆல்பங்கள் திறந்து கிடந்தன. மதுரை மணி அய்யருடன் எடுத்துக் கொண்ட போட்டோ.  இன்னொரு ஆல்பம் முழுக்கப் பழுப்பேறிய குடும்ப, கல்யாணப் படங்கள். ஒதுக்கி நடந்தாள். 'எங்கே இவர்? ஏதாவது பெட்டிக்குள் உட்கார்ந்திருக்காரா?' "மணீ.." காலடியில் தட்டுப்பட்ட ஒரு நோட்புக் முழுக்க ஸ்ரீராஜிஜெயம் என்று எழுதியிருந்தது. லேசாகத் தொண்டையடைத்தது. "கண்மணீ.." திடீரென்று சில்லிட்டது. 'என்ன இப்படிக் குளிருதே?' கராஜ் மேலாக இருந்த ஜன்னல். திறந்திருந்த ஜன்னலை மூடிய திரை படபடத்தது. 'மணி.. மணி..' மனம் படபடக்க விரைந்தார். திரையை விலக்கிப் பார்த்தார். கம்பியற்ற ஜன்னலின் வலைச்சட்டம் கிழிந்திருந்தது. கீழிருந்து பத்துப் பனிரெண்டடி உயரம் இருக்கும். "மணி..". கராஜை ஒட்டிய வேப்பமரத்தின் வலது புறத்தில் மரச்சக்கர ரேலி சைக்கிள் நொறுங்கிக் கிடந்ததைப் பார்த்தார்.

உள்ளம் நொறுங்கிச் சுவற்றில் சரிந்தார் ராஜி. "மணி.. மணி. என்னரசே.. எங்க போனீங்க என் கண்ணே? என்னை விட்டு ஏன் போனீங்க? நீங்க சொல்லி சொல்லிப் பார்த்து நான் கேட்கலைனு கோபமா? நான் உங்களைப் புரிஞ்சுக்கலைனு ஓடிட்டிங்களே..கண்மணி.. கண்மணி.." உட்கார்ந்தபடி சுவற்றில் முட்டி மோதி அழுதார். ".. எங்க இருந்தாலும் வந்துருங்க.. என் கண்ணில்லையா.. செல்லமில்லையா.. ப்லீஸ்.. வந்துருங்க.. இனிமே பரண் ரூம்லயே இருங்க. நானும் காலவண்டில வரேன். சீதம்மா கடையானாலும் சன்னதித் தெருவானாலும் கூட வரேன். நீங்க மட்டும் தான் எனக்கு வேணும் கண்மணி.. எங்கே போனீங்க.. நீங்க கூப்பிட்டப்ப வராதது என் தப்பு தான்.. அதுக்காக எல்லாத்தையும் முறிச்சுக்கிட்டு விட்டுப் போக எப்படி மனம் வந்தது கண்மணி..?"

ராஜியின் குமுறல்கள் அவருக்கே கேட்கவில்லை. அழும் சக்தியிழந்து அழுது கொண்டிருந்தார். புலம்பும் சக்தியின்றிப் புலம்பிக் கொண்டிருந்தார். மனதின் வலிக்குக் கண்களாலும் உடலாலும் ஈடு கொடுக்க முடியவில்லை. சோகத்தின் கொடுமை கண்ணீரைத் தாண்டி வாட்டியது. முகமும் உதடுகளும் துடிக்க, கை கால் நடுங்க, கண்ணீர் வற்றி அழுதார். "..என் தலைவன்.. என் புருஷன்.. என் பிள்ளை.. என் தொண்டன்.. என் கண்மணி.. உங்க எண்ணத்தையும் செயலையும் விருப்பத்தையும் ஏக்கத்தையும் புரிஞ்சுக்காம இருந்துட்டனே.. இனிமேல் நான் என்ன செய்வேன்? பசங்க வந்தா என்ன சொல்வேன்? இப்படிப் பண்ணிட்டீங்களே.. கண்மணி.. கண்மணி.. என்னரசே.." கைகளால் முகத்தை மூடி அழுதார்.

ராஜியின் அழுகை திடீரென்று நின்றது. கைகளில்.. கைகளில்.. இல்லை, காற்றில்.. அது என்ன வாடை? மறுபடி முகர்ந்தார். வாசனை. நன்னாரி வாசனை. எங்கிருந்து வருகிறது? எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தார். "மணி..?" அறையெங்கும் தேடினார். மறுபடி ஜன்னல் வெளியே பார்த்தார்.

நொறுங்கிய சைக்கிள் அதே இடத்தில் அசையாமல் கிடந்தது. 



குறிப்பு [-]
இக்கதை ரே ப்ரேட்பரி எழுதி 1953ல் வெளியான 'A scent of sarsaparilla' எனும் அற்புதச் சிறுகதையின் தழுவல். தமிழில் சில ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.


42 கருத்துகள்:

  1. அப்பாதுரை அவர்களே! மிகச்சிறந்த பத்து படங்களில் ஒன்று citizen Kane ! அர்சன் வெல்ஸ் இயக்கிய நடித்த படம்.அதில் அந்த பிரபு மரணப்படுக்கையிலிருப்பார்! சாகும்தறுவாயில் "Rose Bed" என்று மூனுமூணுப்பார்! நிருபர் அதன் வீசாரிக்க ஆரம்பிக்க கதை விரியும்! இறுதியில் அவர் சிறு வயதில் பயன்படுத்திய ஒரு கை வண்டியின் பெயர் " Rose Bed " என்று கதை முடியும்! உங்கள் கதை எனக்கு அதனைத்தான் நினவு படுத்துகிறது! கதை சொல்லும் நேர்த்திக்காக இரண்டு முறை படித்தேன்! வாழ்த்துக்கள்---காஸ்யபன்!

    பதிலளிநீக்கு
  2. பரண் ரூம் ஒரு காலச்சுரங்கம். தோண்டித் தோண்டி ஒவ்வொரு வருஷமா போகலாம். பரண் ரூம் ஒரு காலவெளி. அங்கருந்து இங்கே, இங்கருந்து அங்கேனு போகலாம். மனம் போல் மார்க்கம். அங்கே இருக்குற ஒவ்வொரு பொருளும் ஒருவகையில் நாம வாழ்ந்ததற்கான நினைவு.//

    உண்மை, உண்மை.
    ஒரு பொருளை எடுத்துப்பார்த்தால் அது எங்கு வாங்கியது , யார் வாங்கி தந்தா, அதன் விலை வாங்க பட்ட காலம் என்று தொட்டு தொட்டு நினைவுகள் ஊர்வலம் போகுமே.
    வாழ்ந்தவாழ்க்கையின் அடையாள சின்னங்கள் அல்லவா!

    பதிலளிநீக்கு
  3. நான் உங்களைப் புரிஞ்சுக்கலைனு ஓடிட்டிங்களே..கண்மணி.. கண்மணி.." உட்கார்ந்தபடி சுவற்றில் முட்டி மோதி அழுதார். ".. எங்க இருந்தாலும் வந்துருங்க.. என் கண்ணில்லையா.. செல்லமில்லையா.. ப்லீஸ்.. வந்துருங்க.. இனிமே பரண் ரூம்லயே இருங்க. நானும் காலவண்டில வரேன். சீதம்மா கடையானாலும் சன்னதித் தெருவானாலும் கூட வரேன். நீங்க மட்டும் தான் எனக்கு வேணும் கண்மணி.. எங்கே போனீங்க.. நீங்க கூப்பிட்டப்ப வராதது என் தப்பு தான்.. அதுக்காக எல்லாத்தையும் முறிச்சுக்கிட்டு விட்டுப் போக எப்படி மனம் வந்தது கண்மணி..?"//

    ராஜியுடன் சேர்ந்து என் மனதும் புலம்ப ஆரம்பித்து விட்டது பிச்சைமணி எங்கு போனார். உண்மையில் பிச்சைமணி இல்லையா? ராஜி அவர் நினைவுகளுடன் வாழ்கிறாரா?
    அறிய ஆவல்.


    பதிலளிநீக்கு
  4. ராஜியின் அழுகை திடீரென்று நின்றது. கைகளில்.. கைகளில்.. இல்லை, காற்றில்.. அது என்ன வாடை? மறுபடி முகர்ந்தார். வாசனை. நன்னாரி வாசனை. எங்கிருந்து வருகிறது? எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தார். "மணி..?" அறையெங்கும் தேடினார். மறுபடி ஜன்னல் வெளியே பார்த்தார்.

    நொறுங்கிய சைக்கிள் அதே இடத்தில் அசையாமல் கிடந்தது.//


    இந்த இடத்தை படிக்கும் போது லா.ச.ரா நினைவுக்கு வந்தார்.

    பதிலளிநீக்கு
  5. காலன் காலா காலத்துலே கூப்பிடலேன்னா , காணும் கோலம் எல்லாமே இங்கே நிதர்சனம்.



    என்ன இருந்தாலும் எண்பதானா என்ன நடக்கும் என்று விலாவாரியா சொல்லி இந்த எழுபத்தி ஒன்ணு வயசுக்காரனைப் பயமுறுத்தி.....
    ....

    இன்னிக்கு தூக்கம் வருமா வருதா .. இல்லைன்னா இன்னொரு அல்ப்ராக்ஸ் போட்டுக்கணுமா ....

    அடியே.... எண்பதுக்கு இன்னும் எத்தனை வருசம் இருக்கு ?

    உங்களுக்கு எட்டு இருக்கு...

    உனக்கு ?

    இப்பவே பரணறையிலே நன்னாரி வாசம் இருக்கே ...

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  6. //அந்த மரச்சக்கர சைக்கிள் - வெறும் சைக்கிளில்லே ராஜி, காலவண்டி! காலவண்டி, ராஜி! மேஜிக்! ஏறி உக்காந்தா எங்க வேணும்னாலும் கடந்த காலத்துக்குப் போகலாம்..//
    //கராஜை ஒட்டிய வேப்பமரத்தின் வலது புறத்தில் மரச்சக்கர ரேலி சைக்கிள் நொறுங்கிக் கிடந்ததைப் பார்த்தார்.//

    புரிந்த மாதிரியும் இருக்கிறது;புரியாத மாதிரியும் இருக்கிறது;தமிழில் இது போன்ற முயற்சிகள் குறிஞ்சிப்பூ!
    காலத்தைக் கடந்து நிற்கும்!

    பதிலளிநீக்கு
  7. /// என்னைப் பொறுத்தவரைக்கும் நினைவுகள் ஒரு பெரிய சுமை ///

    /// இளமையை அறிவு என்றாவது வென்றதுண்டா? ///

    முடிவு : மனதில் வருத்தம்...

    பதிலளிநீக்கு
  8. //பரண் ரூம் ஒரு காலச்சுரங்கம். தோண்டித் தோண்டி ஒவ்வொரு வருஷமா போகலாம். பரண் ரூம் ஒரு காலவெளி. அங்கருந்து இங்கே, இங்கருந்து அங்கேனு போகலாம். மனம் போல் மார்க்கம். அங்கே இருக்குற ஒவ்வொரு பொருளும் ஒருவகையில் நாம வாழ்ந்ததற்கான நினைவு.//

    உண்மைதான்.

    மிகவும் அற்புதமாக இருக்கு. முடிவுதான் மனதை கலங்கச் செய்தது.

    பதிலளிநீக்கு
  9. "..என் தலைவன்.. என் புருஷன்.. என் பிள்ளை.. என் தொண்டன்.. என் கண்மணி.. உங்க எண்ணத்தையும் செயலையும் விருப்பத்தையும் ஏக்கத்தையும் புரிஞ்சுக்காம இருந்துட்டனே.. இனிமேல் நான் என்ன செய்வேன்? பசங்க வந்தா என்ன சொல்வேன்? இப்படிப் பண்ணிட்டீங்களே.. கண்மணி.. கண்மணி.. என்னரசே.." கைகளால் முகத்தை மூடி அழுதார். //

    கதை மனதை என்னவோ செய்கிறதே பசங்க வந்தால் என்னசொல்வாள் ராஜி!
    கதை முடிந்து விட்டதா?

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. First part was very nice but the second part was just opposite to it. Created a sort of mixed feelings which I was not able to control. The words you used in the conversation between the two old couples, superb and realistic. Only you used two characters and both the characters are very heavy and I am unable to put in right words the thoughts encircling my mind now.

    பதிலளிநீக்கு

  12. அன்பின் அப்பாதுரை, முதுமையில் இருப்பவருக்கு உங்கள் கதை பல உணர்ச்சிகளைத் தூண்டும்.நானும் பழைய பொருள்களை பாது காத்து வருகிறேன். பரணறை என்றில்லாவிட்டாலும் பரணறையில் இருந்து எடுத்தவை. எனக்கு அவற்றைப் பார்க்கும்போது நினைவுகள் அலைமோதும். சிலருக்கு இளவயதில் பட்ட கஷ்டங்கள் நினைவுக்கு வந்து அந்தக் கஷ்ட கால நினைவுகளில் மூழ்கி மீண்டும் வேதனைப் படுவார்கள்.ஆனால் எனக்கு அந்த நாட்களின் கஷ்டங்கள் அப்போது அப்படித் தோன்றியதே இல்லை. இப்போது நினைக்கும்போதுதான் அவை வாழ்வின் சோதனைக் காலங்கள் என்று தெரிகிறது. பார்த்தீர்களா உங்கள் கதை என்னை என்னென்னவோ சிந்திக்கச் செய்து விட்டது. கதையில் மணிக்குத் தானே கால மெஷினும் நன்னாரி வாசமும். ராஜிக்கு எப்படி. இந்த மர சைக்கிள் ஒன்றும் பிடிபடவில்லை. மர சைக்கிளா.?நினைவுகளில் நீந்த எண்பது வயதெல்லாம் வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  13. ஏன் இப்படி? ஏன் இப்படி? மனசு தாங்கலையே! :((((( இத்தனை வருஷம் வாழ்ந்த ராஜிக்குப் புரியாமல் போனது ஏன்?

    பதிலளிநீக்கு
  14. இவ்வளவு புரிதலுடன் வாழ்ந்தவர்கள் கடைசியில் ஏன் இப்படி? மணி எங்கு போனார்? இல்லையா? ராஜிக்கு என்னவாயிற்று? நன்னாரி எங்கு வந்தது? விளக்கவும்.

    பதிலளிநீக்கு
  15. அப்பாடி..... என்ன சொல்ல... வார்த்தைகள் வர மறுக்கிறது அப்பாதுரை....

    பதிலளிநீக்கு


  16. அப்பாதுரை ஸாருக்கு !

    மே ஐ கம் இன் எகைன் ஸார் !!

    நேத்திக்கு கொஞ்சம் லைட் ஹார்டட் ஆ லைட்டர் வீன்லே உங்க கதைக்கு பின்னூட்டம் கொடுத்தபின்பு தான் எனக்கே இந்த கதை மாதிரி
    எங்கேயோ எப்பவோ படிச்ச மாதிரி இருக்கேன்னு தலையை சொரிஞ்சுண்டு தூக்கம் வராமே திரும்பவும் ஒரு தரம் படிச்சா
    நீங்களே கடைசிலே + குறியிலே அந்த கதை பேரு ஆமாம்... A scent of sarsaparilla

    கொஞ்சம் சீரியஸ்ஸா ஒரு பின்னூட்டம் கொடுக்கலாமா ?

    நெகடிவ் செல்ஃப் டாக் என்று ஒரு டர்மினாலஜி உண்டு. ஆன்டனி ராபின்ஸ் கூட இந்த மாதிரி நெகடிவ் ஃபீலீங்க்ஸொட வாழ்ந்துக்கிட்டு
    இருக்கற நபர்களை அனலைஸ் பண்ணி ஒரு ட்ரீடைஸ் எழுதியிருக்காரு.

    பழைய காலத்துலே இன்பம், துன்பம் இரண்டும் தரும் தந்த நிகழ்வுகள் இருந்தாலும், சிலர் அதுலே துன்ப நிகழ்வுகள் மட்டும் எடுத்துண்டு
    அதுலேயே வாழ்ந்துட்டு இருப்பாங்களாம். துன்பம் அப்படின்னு நான் சொல்றது மெடிரீயல் வேர்ல்டுலெ. இன்னிக்கு எத்தனை கொட்டி
    கொட்டி கிடந்தாலும் அந்தக்காலத்துலே நான் கஷ்டப்பட்டிருக்கேன் கஷ்டப்பட்டிருக்கேன் அப்படின்னு சொல்லிண்டே இன்னிக்கு
    ப்ரசன்ட் ஆ இருக்கற நிஜத்திலே இருக்கற சுகத்தை கூட அனுபவிக்கத் தெரியாம பழைய துக்கத்தை துயரத்தை சொல்லப்போனா
    இல்லாமையை இன்னும் அதுவே இருக்கற மாதிரி கற்பனை பண்ணிண்டு இருப்பவர்கள் ... இது ஒரு மாதிரியான எமோஷனல்
    டிஸார்டர். இவர்கள் தானும் இன்னிக்கு கிடைக்கறத அனுபவிக்க மாட்டார்கள். தன்னுடன் கூட இருப்பவர்களையும் அனுபவிக்க‌
    விட மாட்டார்கள்.

    இந்த மாதிரி நபர்களை பாஸ்டிலேருந்து ப்ரசன்டுக்கு கொண்டுவரதுக்கு ஸி.பி.டி அப்படின்னு சொல்லக்கூடிய காக்னிடிவ் பிஹேவியர்
    தெரபி கொடுத்தால் நல்லது. தே ஷுட் பி ட்ரைனிங் தேர் மைன்ட் க்ராசுவலி தட் தே ஆர் நோ மோர் அட்டாச்டு டு த பாஸ்ட் ஈவன்ட்ஸ்.
    இந்த டிஸார்டரை அப்படியே விட்டுவிட்டா இது இன்னொரு இதே போன்ற ஓ.ஸி.டி. என்று சொல்லக்கூடிய அப்ஸ்ஸசிவ் கம்பல்சிவ்
    டிஸார்டர்க்கு கொண்டு போய்விடும்.

    இதற்கெல்லாம் காரணம் நம்ம மூளைலே உற்பத்தி ஆகிற ஒரு கெமிகல் செரடோனின். இது போதிய அளவிற்கு சுரக்காததால், அல்லது
    மற்ற ஹார்மோன்கள் டோபமின், அசிடகொயலின் போன்றவட்டுடன் சரியான அளவில் கலக்காததால், மூளையில் இருக்கும்
    சைனாப்ஸிஸ் என்று சொல்லப்படும் நரம்பு மண்டல வலையில் வெளிப்படும் தகவல்கள், செய்திகள் திரும்பவும் தனது இடத்திற்கு செல்வதில்லை. ஆங்காங்கே இந்த தகவல்கள் நிற்பதால், இந்த நிலையில் ஒரு மனிதனால் நிகழ்காலத்து சிந்தனையே இல்லாமல்
    பழசுலேயே இருக்கிறான். விந்தையாக இருக்கிறது என்றாலும் இது ஒரு மருத்துவ ரீதியான கெமிகல் இம்பாலன்ஸ்.

    நீங்கள் விவரித்த நபர் மணி இந்தமாதிரியான ஒரு கண்டிஷனுக்கு ஆளானவராக இருக்கக்கூடும். நீங்கள் சொல்லும் அந்தக்கதையிலும்
    ஒரு காரக்டர் ஆடிக்கிலே தான் தன் வாழ்க்கை என்று அடம் பிடிக்கிறார் அவர் மனைவியிடம். இவர்கள் எல்லாமே பழைய
    வாழ்க்கையில் தாம் தொடர்ந்து இருக்கவே விரும்புகிறார்கள். அதை விட்டு வெளியே வர அவர்கள் விரும்பவில்லை.

    தற்பொழுதைக்கு மெடிகல் ஸைசயாட்ரிலே இதற்கு சில தீர்வுகள் இருக்கின்றன.

    நிற்க.

    உங்களைச் சொல்லவில்லை.
    பழசைச் சொன்னேன். போனது போச்சு. இன்னிக்கு என்ன அத கவனிக்கணும்.


    கதை என்று படித்தால் கதை. உண்மையாக நடக்க வாய்ப்பிருக்கிறதா என்றால் அதுவும் எஸ்.
    அதனால்தான் வயதானவர்களை அந்தக்காலத்துலே இல்லறத்துக்கு அடுத்ததாக வானபிரஸ்தம் என்று ஒரு ஸ்டேஜ் சொல்லி
    வீட்டை விட்டு தன்னை டிடேச் செய்துகொண்டு புதுசா ஒரு வாழ்க்கை, அந்த வாழ்க்கை சன்யாசத்துக்கு ( முற்றிலும் துறப்பதற்கு)
    வழி வகுக்கும் என்றார்கள். அல்டிமேட்லி, சன்யாசம் என்பதே டிடேச்சிங் ஒன்செல்ஃப் வித் த பாஸ்ட் தானே.


    subbu rathinam

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. மணி காலவண்டியில் முற்காலத்திற்கு சென்றுவிட்டாரோ!

    பதிலளிநீக்கு

  19. சூரி சிவா சார் ஒரு சைகியாட்ரிஸ்டோ.?

    பதிலளிநீக்கு
  20. கதையோட முடிவைப் பலரும்/புரிஞ்சுக்கலையோ??????????? கண்மணி என்ன ஆனார் என்பதும், ராஜிக்கு உணர முடிந்த நன்னாரி வாசமும் எதனால் என்பதை யாரும் புரிஞ்சுக்கலையோ?

    பதிலளிநீக்கு
  21. ராஜி நிகழ்காலம், மணி இறந்தகாலமா? அல்லது மணி நிகழ்காலம், ராஜி இறந்தகாலமா?
    யார் யாரை இழந்து தவிக்கிறார்கள்?

    //நாம இப்ப இருக்குற நிலமை.. செலபன் டேப்புல ஒட்டின, உடைஞ்ச துண்டுகளால ஆன கண்ணாடி மாதிரி.. முகம் தெரியுது.. கனமாகவும் இருக்கு.. இருந்தாலும் மடிஞ்சு போற.. சுருட்டி வைக்கிற.. உதிர்ந்து போற.. கண்ணாடிப் போர்வை.//

    மனதை அசைத்த வரிகள்.

    திரு சூரி சிவா சொல்வதுபோல பலர் பழைய நினைவுகளிலேயே வாழ்கிறார்கள் அதுவும் துன்பமான நினைவுகளுடன் - ஆறின புண்ணை மறுபடி மறுபடி கீறிவிட்டுக் கொண்டு...

    கதையைப் படித்து முடித்துவிட்டு, பின்னூட்டங்களையும் படித்த பின் 'பெருமாளே! இப்படியெல்லாம் பைத்தியம் பிடிச்சு பாயை சொரண்டரதுக்கு முன்னால திருவடி சேர்த்துக்கோ' என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு

  22. //பெருமாளே! இப்படியெல்லாம் பைத்தியம் பிடிச்சு பாயை சொரண்டரதுக்கு முன்னால திருவடி சேர்த்துக்கோ' என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டேன்.//



    அதுக்குத்தான் அதுக்கு முன்னாலே இத கேட்டுடலாம் அப்படின்னுகேட்டுண்டு இருக்கேன்.

    subbu thatha.
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
  23. தொடர்ந்து படித்ததற்கும் பின்னூட்டங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  24. @G.M Balasubramaniam
    மரசக்கர சைக்கிள். மரத்தினாலான சக்கரம் (ரிம்?) அதற்கு மேல் ரப்பர் டயர். என் திருநெல்வேலி தாத்தா மரச்சக்கர சைக்கிளில் கொஞ்ச நாள் பள்ளிக்கூடம் போனதாக சொல்வார். கொஞ்ச நாள் பள்ளிக்கூடம் போனாரா இல்லை கொஞ்ச நாள் மரசக்கர சைக்கிளில் போனாரா என்பது அவருக்கும் மட்டுமே தெரியும் :). அந்த சைக்கிளின் ஒரு சக்கரம் என் பாட்டி சகோதரர் (மாமா தாத்தா?) வீட்டில் ரொம்ப நாளைக்கு பின் கட்டில் கிடந்தது. 1930 வாக்கில் இந்தியாவில் all steel சைக்கிள்கள் பரவலாக வந்தனவாம். மார்கோனி ரேடியோவும் கிராமத்தில் பார்த்தது தான்.

    பதிலளிநீக்கு
  25. ஒரு ஆட்டிக்கின் கதையா.
    எங்க வீட்டுப் பரண் நான். பரணைவிரும்பாதவர் என்னவர்:)

    நன்னாரி வாசனை வந்துவிட்டது என்றால் மணி சார் கடந்துவிட்டார். இனி ராஜி பிள்ளைகளுக்காகவும் எதிர்காலத்துக்காகவும் கண்ணீரோடு இருக்க வேண்டியதுதான்.
    முத்திரைக் கதை.

    பதிலளிநீக்கு
  26. இந்தக் கதை நிறைய பேரை பாதித்திருப்பது தெரிகிறது. ரே ப்ரேட்பரியின் அற்புதமானக் கதைக்கரு அதற்குக் காரணம்.

    கதையின் முடிவு அவரவர் புரிதலுக்குட்பட்டது என்று நினைக்கிறேன். என்றாலும், எனக்குத் தோன்றும் சில கருத்துக்கள்:

    - கதை சொல்லும் உத்திகளில் 'imagery' ஒன்று. மேற்கத்தியக் கதைகள் பலவற்றில், குறிப்பாக ப்ரேட்பரியின் பல கதைகளில் imagery கையாளப்பட்டிருக்கிறது. இந்தியப் புராணக்கதைகள் imagery உத்தியின் உற்பத்தித் தலம் என்று நினைக்கிறேன். யதார்த்தத்துக்கும் நம்பிக்கைக்கும் இடைப்பட்ட தூரத்தில், யதார்த்தத்துக்கும் அதிசயத்துக்கும் இடைப்பட்ட தூரத்தில் - நடப்பவையாக சொல்லப்படும் நிகழ்வுகளுக்கு இந்த imagery உத்தி பயன்படுகிறது. நடந்திருக்ககூடும் என்ற நினைப்பை வாசகர் மனதில் ஆழமாக விதைத்துவிட்டு செல்லும்.

    - இந்தக் கதையில் வரும் நன்னாரி, கோலி சோடா வளையம், மணி அய்யர் கச்சேரி எல்லாமே imageryஐ வைத்து வாசகரை நம்பச்செய்யும் நகாசுவேலை. ப்ரேட்பரியின் கதையிலும் நன்னாரி தான் முக்கிய imagery.

    - ஒரு imagery இரண்டு மாறுபட்ட பாதிப்புகளை ஏற்படுத்துவது கதையை முடிவுக்கு நகர்த்துவதற்கான உத்தி. சைக்கிள் வளையம். பிச்சைமணிக்கு அந்த வளையம் இன்ப நினைவுகளை, romantic நினைவுகளை, மஞ்சள் பூசிய மனைவியின் கால்களைக் காட்டிய முக்கால் பேன்டின் ரொமேன்டிக் வசீகர சாதனம். அதே வளையம் ராஜிக்கு மோசமான அவமான நினைவுகளைக் கொண்டு வந்த கொடிய சாதனம். நினைவுகள் ஒரு சுமை என்பது இது தான்.

    - காலவண்டி, காலப்பயணம் என்பதும் மரணவண்டி, மரணப்பயணம் என்பவற்றைக் குறிக்கும் pun intended imagery.

    - சூரி அவர்கள் சொன்னது போல முதுமையின் அயர்ச்சியைப் போக்க பிச்சைமணிக்கு பழைய நினைவுகள் தேவைப்பட்டது. (உங்கள் கணிப்பு பிரமாதம் சூரி சார்; உங்கள் intellect என்னை மிகவும் கவர்கிறது) முதுமையின் அயர்ச்சியை நீக்காவிட்டாலும் ஒரு பாதுகாப்பான ஒதுக்கிடமாக, an escape, அவருக்கு இந்த நினைவுகள் விளங்கின. கால்வண்டி ஒரு உருவகம். அதிலேயே மூழ்கியவர் நிஜத்துக்கும் நினைவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை முற்றிலும் மறந்தார் (அல்லது புறக்கணித்தார்). ராஜியை விட பரண் ரூம் மேல் என்பதற்குக் காரணம் இது தான். பரண் ரூமில் ராஜியின் கண்டிப்பு துணப்பு எதுவும் இல்லை. எல்லாமே அவருக்கு இன்பமயமானதாக இருக்கிறது.

    - "வயதானால் நிறைய பழங்கதை பேச ஆள் வேண்டும் அது மனைவியாக இருந்து விட்டால் அதைவிடச் சிறப்பு வேறு இல்லை. ஆனால் மனைவியோ குழந்தைகள், பேரக் குழந்தைகள் என்று வேறு உலகத்தில் நுழைந்து விடுகிறாள். கணவன் தனிமை படுத்த படுகிறான். அதில் வரும் கோளாறுகள் தான் இது என நினைக்கிறேன்" என்று முந்தைய பின்னூட்டம் ஒன்றில் கோமதி அரசு அவர்கள் கச்சிதமாக, அருமையாகச் சொன்னது போல, ஆண்களை விடப் பெண்கள் முதுமையை மிக இயல்பாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நம்புகிறேன். இன்னொரு பரிமாணத்தை அவர்களால் முதுமையில் வளர்த்துக் காட்ட முடிகிறது. நிறைய ஆண்கள் இந்த விஷயத்தில் தடுமாறி புலம்பல் கேசாகவோ, எல்லாருக்கும் எரிச்சல் ஊட்டும் வகையினராகவோ, அல்லது தனக்குள் இருப்பவராகவோ மாறிவிடுகிறார்கள். இங்கே முதுமை பிச்சைமணியின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையவில்லை.

    - என் கணிப்பில் இந்தக் கதை முடிவு இரண்டு நிகழ்வுகளின் சாத்தியங்களைக் குறிக்கிறது
    - பிச்சைமணியின் மன நோய் அவரைப் பலிவாங்கியது
    - பிச்சைமணி காலவண்டியில் காணாமல் போனார்

    - நன்னாரி மணம் ஒரு உருவகம். நிஜம்-நினைவு கலப்படத்தைக் குறிப்பதாகவோ வரப்போகும் மரணத்தைக் குறிப்பதாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

    யதார்த்தக் கண்ணோட்டத்தில் பிச்சைமணி இறந்து விடுவது புரியும். அசையாமல் கிடக்கும் சைக்கிளைப் பற்றி மட்டும் சொல்வது உருவக effectக்காக. கடைசியில் ராஜி நன்னாரி மணத்தை ஏற்பது கணவருக்குத் தான் இழைத்துவிட்ட சிறிய துரோகமோ என்ற guilt. அவருக்கும் நிஜம்-நினைவு கலப்படம் தொடங்குகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம். அது கதையை இன்னும் சோகமாக்கி விடும்.

    கதை சொல்லும் பொழுது எனக்கென்னவோ இடைப்பட்ட இடங்களில் சஞ்சரிப்பதே பிடிக்கிறது. அதனால் பிச்சைமணி காலவண்டியில் காணாமல் போனார் என்றே நினைக்கிறேன். இதில் கிடைக்கும் ஒரு hopeless romanticன் சாகச நிறைவு, சராசரி இறப்பில் இல்லை (நிரந்தர பரிமாணப் பிரிவும் ஒருவகை மரணம் தான் என்றாலும்). ராஜியும் அவருடன் காலப்பயணம் போகத் தயாராவதற்கே நன்னாரி மணத்தைத் துரத்துகிறார்.

    mohan அவர்கள் கருத்தில் ஒன்று தெளிவானது. இந்தக்கதையை ஒரே மூச்சில் படிக்க வேண்டும். இரண்டு பாகங்களில் இதைப் படிக்கக் கொடுத்தது நான் செய்தப் பெரும் பிழை.

    நிற்க, யாருக்கும் புரியாமல் எழுதுவது எனக்குப் பழகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  27. @kashyapan
    citizen kane என்னுடைய #1 படம். ஒவ்வொரு காட்சியும் அற்புதம்.
    உங்களுக்கும் பிடிக்குமா? அடுத்த இந்தியா விசிட்டில் சேர்ந்து பார்த்து ரசித்தால் போகிறது.

    பதிலளிநீக்கு
  28. // ஆண்களை விடப் பெண்கள் முதுமையை மிக இயல்பாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நம்புகிறேன். இன்னொரு பரிமாணத்தை அவர்களால் முதுமையில் வளர்த்துக் காட்ட முடிகிறது. நிறைய ஆண்கள் இந்த விஷயத்தில் தடுமாறி புலம்பல் கேசாகவோ, எல்லாருக்கும் எரிச்சல் ஊட்டும் வகையினராகவோ, அல்லது தனக்குள் இருப்பவராகவோ மாறிவிடுகிறார்கள்//

    அப்பாதுரைக்கு ஜே . நூற்றுக்கு நூற்றி இருபது சத்தியம்.

    ஆனா, அப்பாதுரைக்கு ஒரு அப்பா வந்து சொன்னாலும் இந்தக்கிழம் ஒத்துக்காதே !!


    பொண்ணா புறந்துட்டா லைஃப் முழுக்கவெ அட்ஜஸ்ட் பண்ணிண்டு போகவேண்டியது தான். பால்யத்துலே அப்பா அம்மாவை, கல்யாணம் ஆனப்பறம் புருஷனை, அவன் வீட்டாரை, வ்ருத்யாபாசத்துலெ பெத்த பையனை அவனோட பெட்டர் ஹாஃபை, எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணிண்டு தான் போயாகணும் அப்படின்னு சம்ப்ரதாயம். இந்த் அட்ஜஸ்டிங்க் ஆடிட்யூட் வயசானப்பறம் வ்ராததுனாலே தான் மனைவியை
    இழந்த கணவன்மார்கள் டிப்ரஷன் வந்து அவாளும் வைஃபைத் தேடிண்டி ஸ்வர்க்கத்துக்கு வந்துவிடரா. அங்கேயாவது நிம்மதியா இருக்கமுடியுமா என்று சீக்கிரம் போனா அங்கேயும் இவா பின்னாடியே வந்துடுவா.. எல்லாருக்கும் தெரிஞ்சது தானே....

    இந்த பிராமணன் வர்றதுக்கு முன்னாடி இந்த பின்னூட்டத்தை போட்டு விடணும்.

    மீனாட்சி பாட்டி.
    www.mymaamiyaarsongs.blogspot.com

    பதிலளிநீக்கு
  29. அப்பாதுரை சார் ,உங்கள் பின்னூட்டத்தில் என் கருத்தை குறிபிட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. இந்த 'imagery' உத்தியை தமிழில் கையாண்டவர், கிருஷ்ணன் நம்பி.
    அவரைப் பற்றி எனது 'எழுத்தாளர் பகுதி'யில் எழுதியிருக்கிறேன்.

    சூரி சார் சொன்னது, interesting.
    செரடோனின் போதிய அளவு சுரக்கலேனா பழசுலேயே ஆழ அமிழ்றதுன்னா, பழசெல்லாம் ஞாபகத்துக்கு வராம போய்ட்ற நோய்க்குக் காரணம் என்னன்னு சூரி சாரிடம் கேட்கறதுக்கு முனைஞ்சப்போ தான் கரண்ட் போயிடுத்து.

    சமயத்லே இந்த லேப்டாப் தான் பரணாத் தெரியது. எல்லாருக்கும் இப்படி ஏதோ ஒண்ணு. பழுப்பேறிய பழைய கடுதாசுகள், பழைய போட்டோக்கள்--காக்கி டவுசரில் தொங்கற சட்டையோட, சாந்து பொட்டு இட்டுண்டு.. இல்லேனா கருகரு சுருளில் பிச்சோடா, ஒட்டியாண ஒல்லி.. கீழே ஸ்டூடியோ பேரு ரவுண்டு வட்டத்துக்குள்ளே, கருப்பு-வெள்ளை கல்யாண போட்டோ ஆல்பம், பொன்னியின் செல்வனின் பழையாறை மாளிகை, கொள்ளிடக் கரை, தீவட்டி கொளுத்திய நிலவறை, காளாமுகர்கள், ஆபத்துதவிகள், ஆழ்வார்கடியான், சேந்தன் அமுதன், தலைவிரி கோலமாக மந்தாகினி, ஓடக்காரப் பூங்குழலி, அவளின் 'அலைகடலும் ஒய்ந்திருக்க' பாட்டு, அந்தப் பாட்டின் சோகத்தில் மனம் அமிழ்ந்து தோய்ந்து... இத்யாதி.. இத்யாதி.. எத்தனை, எத்தனை?..

    பழைய நினைவுகளே, பழைய நினைவுகளே, என்ன மாயம் வைத்திருக்கிறீர்கள்-- இப்படி எங்களை ஒரே சுருட்டாக உன் போர்வையில் சுருட்டிக் கொண்டு போவதற்கு?...

    மணி அற்புதமானவர். அவ்வளவு தான் சொல்ல முடியும்.

    பதிலளிநீக்கு


  31. அப்பப்பாதுரை சார் ! imagery என்று குறிப்பிட்டு என்னை 1956 ம் வருஷத்துக்கு செயின்ட் ஜோசப் காலேஜிலே
    ப்ரொஃப்சர் சேஷாத்ரி அவர்கள் இங்க்லீஷ் பொயட்ரி வகுப்புக்குக் கொண்டு போய் விட்டீர்கள்.

    இந்த இமேஜரி விஷயம் ரொம்பவும் அற்புதமானது. ஒரே பொருளிலே இரண்டு ஒன்றுக்கொன்று வேறுபட்டவைகளை
    சேர்ப்பது அல்லது உருவகப்படுத்துவது. to emphasize on underlying unity in dissimilar happenings, possibly to stress on
    the oneness of life. .

    இதை ஆங்கில கவிஞன் கீட்ஸ் மிக அபாரமாக கையாண்டு இருக்கிறான். நான் கீட்ஸின் பரம் ரசிகன். ஹி...ஹி...

    ஜாஸ்தி ஞாபகம் இல்லைன்னாலும் இரண்டு ஒண்ணு நினைவு இருக்கு.

    தன்னுடைய கவிதை ஓட் டு எ நைட்டிங்கேல். Ode to a Nightingale

    TASTING of Flora and the country green,
    Dance, and Provencal song, and sun burnt mirth!
    O for a beaker of the warm South,

    ஒன்னு இரண்டு வார்த்தைகள் தப்பா இருக்கலாம். நினைவு சரியா இல்ல.

    பார்க்கப்படும் வஸ்துக்களான ஃப்ளோராவையும் வயல்வெளிப்பச்சையையும் சுவைத்துப் பார்க்கிறார்.

    டான்ஸ் , அந்தப் பாட்டு எல்லாமே பார்ப்பது அல்லது கேட்பது , அதோடு சேர்த்துச்சொல்வதோ கதிரவனால் சுட்டெரிக்கப்பட்ட
    இன்ப உணர்வு. சுடுதலும் இன்பமும் இணைத்துப் பார்ப்பது.

    அதே கவிதையிலே இன்னொரு இடத்திலே வரும்

    But here here is no LIGHT,
    Save what from heaven is with the BREEZES BLOWN

    இங்கே வெளிச்சத்தை, இல்லை வெளிச்சம் இல்லாமையை, பரவும் அலையும் குளிர் காற்றுடன் இணைக்கிறார் . அது ஸ்வர்க்கத்திலிருந்து வருகின்ற குளிர் காற்றுடன் இணைத்து அந்த உணர்வை அனுபவிக்க வைக்கிறார்.

    இந்த கீட்ஸ் இருக்காரே அவர் இமேஜரியிலே கில்லாடி. அந்த கீட்ஸ் பாடலை எங்களுக்கு அனுபவித்து சொல்லிக்கொடுத்த‌
    ப்ரொஃபசர் சேஷாத்ரி பரம கில்லாடி இங்க்லீஷ் பொயட்ரிலே.

    ஹும். அதெல்லாம் அந்தக் காலம். அந்த 1956 வருச இங்க்லீஷ் பொயட்ரி க்ளாஸை இப்ப நினைச்சாலும் ஸ்வர்க்கத்திலே இருக்கா
    மாதிரி ஒரு ஃபீலிங் வரும்...

    அந்த 1956 முடிஞ்சு 56 வருசம் ஆயிடுத்து. இருந்தாலும் நீங்க இமேஜரி அப்படின்னு சொன்ன உடனேயே அங்க மனசு ஓடிடுத்து.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  32. JEEVI SAID:
    //சூரி சார் சொன்னது, interesting.
    செரடோனின் போதிய அளவு சுரக்கலேனா பழசுலேயே ஆழ அமிழ்றதுன்னா, பழசெல்லாம் ஞாபகத்துக்கு வராம போய்ட்ற நோய்க்குக் காரணம் என்னன்னு சூரி சாரிடம் கேட்கறதுக்கு முனைஞ்சப்போ தான் கரண்ட் போயிடுத்து.//

    இந்த பழசெல்லாம் ஞாபகத்துக்கு வராம போயிடற நோய்க்கு காரணமே கரண்ட் போறது தான். ஆனா வெளிலே இல்ல. மூளைக்குள்ளே
    ஒரு பாயின்ட்லே ஒரு 20 கேவி செல் ஒண்ணு சதா எனர்ஜி விட்டுகினே இருக்கும். அது அம்பேல் ஆயிடுத்துன்னா. டாடா ஸ்கை ரீ சார்ஜ் மாதிரி இதை ரி சார்ஜ் எல்லாம் பண்ண முடியாது. மூளைலே மட்டும் செல் செத்துப்போச்சுன்னா அது இர்ரிவர்ஸிபிள். மூளை இருக்கே அது லீவர் மாதிரி இல்ல. லீவர் லே 32 லே 31 பாகம் கெட்டுப்போனாலும் மிச்சம் இருக்கற ஒரு பாகம் கொஞ்சம் கொஞ்சமா தன்னை புதுப்பிச்சுண்டெ வந்து ஒரு ஒரு வருச டயத்துலெ பழைய ஸ்டேஜுக்கு வரும். ஆனா மூளை ஒரு பகுதி டாமேஜ் ஆயிடுச்சுன்னா.. அம்புட்டுதான். ..

    இந்த செல், ந்யூரான்ஸ் அதையெல்லாம் இணைக்கின்ற ஸைனாப்சிஸ் எல்லாத்துக்குமே செரோடினின் என்ற ஹார்மோன் வேண்டும்.
    அதுவும் சரியான அளவுக்கு வேணும். இல்லைன்னா ....???
    மனுசன் விபரீதமா செயல்படுவான். நல்லா இருந்தானே அப்படின்னு நாலு பேர் சொல்லும்படி ஏஜியிங் காரணமாத்தான் அப்படின்னு
    ஒரு நூறு வருசம் நினைச்சுக்கிட்டு இருந்த மருத்துவ உலகம் இல்ல, இது வேற விசயம்.. அப்படின்னு இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா
    முழிச்சுட்டு இப்ப இருக்காக...

    அம்னீசியா, டெமென்சியா
    இது இரண்டுக்கும் பெரியப்பா ஆஜ்மீர்ஸ் டிசீஸ்....
    எல்லாமே வயசானா இல்ல வயசாயிண்டு இருக்கு என்பதை நமக்கு புரியவைக்கீற கன்டிஷன்ஸ் தான்.
    ஸ்டிர்க்டா பாத்தா, இந்த ஆஸ்மீர் ஒன்னு தான் டிஸீஸ்.
    மற்ற இரண்டுமே கண்டிஷன்ஸ்.

    ரொம்ப சீர்யஸ்ஸா தெரிஞ்சுக்கணும்னா இதக்கொஞ்சம் டீப்பா படிங்க...
    http://www.siumed.edu/alz/Handouts%20Conf%20Nov%202011/AD%20Zec.pdf
    Learning Difficulties பத்தி ஒரு லெக்சர் கொடுக்கச்சொன்னபோது இந்த ட்ரிடைஸ் தான் அடிப்படையா வச்சுக்கிட்டேன்.

    என்னாது !! இதெல்லாம் இந்த வயசுலே புரிஞ்சுண்டு என்னத்த பண்ணப்போறோம் அப்படின்னு தோணிச்சுன்னா,
    விட்டுடுங்க..

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  33. // யாருக்கும் புரியாமல் எழுதுவது எனக்குப் பழகிவிட்டது.//

    நான் அப்படி நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில்
    யாருக்கும் புரியாமல் எழுதும் ட்ரஸ்ட் கம்பெனியின்
    ஸோல் ப்ரொஃப்ரைட்டர் ப்ரும்மா ஒத்தர் தான்.

    இந்த ட்ரஸ்ட் நடத்தும் யூனிவர்சிடியில் ப்.ஹெச்.டி வாங்கினவர்கள் இப்பெல்லாம்
    அனேகம் பேர் வலையிலே கவிதை ( ! ) எழுதுகிறார்கள்.


    ப்ரும்ம லிபி என்று சொல்வார்கள்.
    + vasudevan trimurthy அவ்ருக்குத்தான் இதைப்பற்றி விளக்கிச்சொல்லமுடியும

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  34. நானும் சுப்பு சாரோடு ஒத்துக் கொள்கிறேன்.
    புரிதல் அவரவர் மனநிலையைப் பொறுத்து இருக்கிறது.

    எல்லோர் வாழ்க்கையில் ஒத்துப் போதலும் மறுத்துப் போவதும் இருக்கவே இருக்கிறது. வெகு அழகாக எழுதி இருக்கிறீர்கள் துரை. பெரியவர்களின் பின்னூட்டங்களே சொல்கின்றன.

    பதிலளிநீக்கு
  35. சொன்னோமே, கேட்டுகிட்டாரா இல்லையா, எங்கடா ஆளைக் காணோம்ன்னு பாக்காதீங்க. படிச்சேன். உபயோகமான தகவல்களுக்கு ரொம்ப நன்றி சார். தெரிஞ்சதை வைச்சு இன்னும் தெரிஞ்சிக்க இப்ப அடிபோட்டுண்டு இருக்கேன். ஆசை, அதுவும் படிக்கற ஆசை யாரைவிட்டது?.. இப்போ ததாரினோவ்ன்னு ஒருத்தர் கிடைச்சிருக்கார்.

    வயசு ஒரு பிரச்னையே இல்லை. எனக்கு அந்த வயசிலே காலேஜ்லாம் போகமுடியாம பாடப்புஸ்தகப் படிப்பு இல்லாம போயிடுத்து. (இருபது வயசிலே வேலைக்குப் போயாச்சு) ஆனா, செமத்தியான வாழ்க்கைப் படிப்பு கிடைச்ச பாக்கியத்தைச் சொல்லத் தான் வேணும். இரண்டு படிப்பும் வேறே வேறே ஆனதாலே, அந்த வயசில் அது, இந்த வயசில் இதுன்னு இப்போ ஆயிருக்கு.

    தனக்குத் தெரிஞ்சதை இன்னொருத்தருக்குச் சொல்றவங்க இருக்கற வரைக்கும், சொல்றதை கேட்டுக்கறவங்க இருக்கறவரைக்கும்
    சொல்றதுக்கும், கேட்டுக்கறத்துக்கும்
    நிறைய விஷயங்கள் அம்பாரமா குவிஞ்சு தான் கிடக்கு. இருக்கற குவியலோட இன்னும் இன்னும் புதுசு புதுசா வந்து சேர்ற குவியல்கள் வேறே. இப்படியே வாழ்க்கை பூராவும் தெரிஞ்சிண்டு புரிஞ்சிக்க வேண்டியது மாளாமப் போயிடுத்து. எதையும் வேணாம்ன்னு விட்டுட முடிலே. அதுனாலே எதுவும் முடிஞ்சபாடாவும்
    இல்லை.

    என்னத்தைப் பண்ணப்போறோம்ன்னு என்னிக்கும் நெனைச்சதில்லை. தெரிஞ்சிக்கறதும், புரிஞ்சிக்கறதும் தனக்கு உபயோகப்படறதுக்கும், கேக்கறவங்களுக்குச் சொல்லறத்துக் கும் தானே? என்ன சொல்றீங்க?..



    பதிலளிநீக்கு
  36. சற்றும் எதிர்பாராத சுவாரசியத் திருப்பங்களுக்குக் கர்த்தாவாகியிருக்கும் சூரி அவர்களுக்கு நன்றிகள்.

    /நன்னாரி வாசனை வந்துவிட்டது என்றால் மணி சார் கடந்துவிட்டார்
    ஒரு வரியில் பிட்டு வைத்துவிட்டார் வல்லிசிம்ஹன்.

    சூரி அவர்களின் ப்ரம்ம லிபி பற்றியக் கருத்தின் கவிதைத்தனம் வாவ் போடவைக்கிறது (கருத்தில் துளியும் நம்பிக்கை கிடையாது எனக்கு :)

    ஜீவி அவர்களின் சமீபக் கருத்து மனதைக் கொஞ்சம் பிசைகிறது. நிறைகுடம் என்ற எண்ணம் வந்து போனது.

    ஜீவி அவர்களின் கேள்வி - நினைவுகளை அழிக்கும் வசதி - நூறு ஆண்டுகளுக்குள் கிடைக்கும் என்பதற்கான சாத்தியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பயம் சம்பந்தப்பட்ட சமீப நினைவுகளை மெழுகித் துடைக்கும் வசதி இன்றைக்கே திட்டாகக் கிடைக்கிறது. பணமும் துணிவும் மிகுந்தவர்களுக்கும் அநியாயத்துக்கு அடிபட்டவர்களுக்காக இலவசமாகவும் கிடைக்கும் இந்த 'மருத்துவ' வசதி, தெருவோர மெடிகல் ஸ்டோரில் சாரிடோன் போல் பரவலாகக் கிடைக்க நாளாகும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதன் அடிப்படை ingredients ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்மிடையே புழங்குகிறது. என்ன.. கொஞ்சம் crude அவ்வளவுதான். பட்டை, விஸ்கி, மரிவானா, இத்யாதி. hallucination என்பது பிரம்மாண்டமான topic. இதை முழுமையாகப் புரிந்து கொண்டு, இதன் காரணிகளை அறிந்து கொண்டு வந்து, இதன் பயன்பாடுகளைத் தெரிந்து கொண்டு, செயல்பாட்டுக் கருவிகளைக் கண்டுபிடித்து, சோதனை அளவிலிருந்து பரவலாகக் கொண்டு வந்து... நினைவுகள் 326, 389, 488ஐ மட்டும் அழிக்கும் நுட்பம் இன்னும் பிடிபடவில்லை. கிடைக்கும். அதுவரை கதைகளில் மூழ்கலாம். offloading for mrs.schwartz போன்ற புத்திசாலித்தனமான கதைகளும் eternal sunshine of spotless mind போன்ற அரைவேக்காடு கதைகளும் கிடைக்கின்றன, எல்லாமே குருட்டாம்போக்கு தான் என்றாலும். [இப்போதைக்கு காதல் தோல்விகளை என்னவோ உலகத்தின் மிகக் கொடிய சோகம் போல் பாவித்து அவற்றை அழிக்கும் கற்பனைகளைக் கதைகளாகப் புனைந்து கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு ப்ரம்ம லிபி தான் காரணம் ;-]

    பதிலளிநீக்கு
  37. துரை
    இளவயதில் வாழும் வாழ்க்கை நிகழ்காலம்.அப்போதும் பழைய நினைவுகள் விடுவதில்லை.
    இப்பொழுது இந்த வயதில் முப்பது வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த வாழ்வும் எனக்குத் தாழம்பூ வாசனையைக் கொடுக்கிறது.:) ஒவ்வொரு மணிநேரமும் நினைவுகளைப் பிரசவித்துக் கொண்டே காலம் நகர்கிறது.
    இன்ஃபாக்ட் இப்பொழுது இன்னும் சந்தோஷம் அதிகரித்திருக்கிறது.

    இவ்வளவு சிந்தனையாளர்களின் மத்தியில் ,உங்கள் கதை எத்தனை
    அலைகளைக் கிளப்பி இருக்கிறது.!!!
    மிக நன்றி துரை.

    பதிலளிநீக்கு
  38. கால தாமதமாக வந்ததால் இரு பகுதிகளையும் ஒருசேர படித்தேன். நன்னாரி வாசத்தை முழுமையாக அனுபவித்தேன். நன்றி!
    பதிவையொட்டிய பின்னூட்டங்கள் பரணில் இருந்து எடுக்கப்பட்ட காலி பெருங்காய டப்பாவாக இன்னும் மணம்!!

    பதிலளிநீக்கு
  39. பரண் ஒரு கால வண்டி.
    நாற்பது வயதுக்கே மனம் பின்னோக்கிய வண்டியை தேடுகிறது என்றால் , 80 வயதுக்கு கேட்கவே பேண்டாம்.
    கதையோட்டம் பிரமிக்க வைக்கிறது.
    முதன் முறை படித்த பொது பின்னோட்டம் இடத் தோன்றாமல் நினைவுகளில் மூழ்கிவிட்டேன்.
    மீண்டும் இப்போது --- கால வண்டியில்

    பதிலளிநீக்கு
  40. தம்பதியின் அன்யோன்யம் வெகு நெகிழ்ச்சி. குட்பை ராஜி சொன்ன போதே நடக்கவிருப்பது கீற்றாய் மனசுள் திடும் என அதிர்வுடன்...

    எங்க ப்ராட்பெர்ரி நீங்க.

    சூரி சார், ஜீவி சார், வல்லி சிம்ஹன், கோமதி அரசு எல்லாரும் எல்லாரும் கதையை விரிச்சுட்டாங்க.

    எங்க கணினிப் பரணில் இந்த கதையும் பின்னூட்டங்களும் கால காலத்துக்கும்.

    பரண் சேர்க்கும் வழக்கமுள்ள நான் பயத்தில் இப்போது.

    பதிலளிநீக்கு
  41. என்னோட கண்மணிக்கு தேடும் காலம் நல்ல துணையா இருக்கணும்னு வைராக்கியம் பண்ணிட்டேன்.

    பதிலளிநீக்கு
  42. இரண்டு பகுதிகளையும் படித்ததால்தான் இன்டெரெஸ்டிங் ஆக இருந்தது. நிறைய, நாமே புரிஞ்சுக்கணும் டைப் கதை. எப்படி வேணும்னாலும் இன்டெர்ப்ரெட் செய்யமுடியும் முடிவு. வித்தியாசமா நான் லீனியர் போல எழுதியிருக்கீங்க.

    கர்ப்ப எக்ஸ்ரே படங்கள் - அது எப்படி அப்போ எக்ஸ்ரே எடுப்பாங்க?

    பதிலளிநீக்கு