2010/04/29

தாஜ்மகால் பார்வை

போக்கற்ற சிந்தனை



'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?', 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' என்றெல்லாம் படிக்கும் போது இப்படித் தன்னை மறந்து நேசிக்க முடியுமா என்று தோன்றும். எந்தக் காலக் கட்டத்திலும் சரி, சுய மற்றும் சமுதாயக் கண்ணோட்டத்தில் இது போன்ற உணர்வுகள் ஒரு சிலருக்கேனும் இயற்கையாகத் தோன்றுமா? அல்லது கற்பனை வளமா?

தாயன்பு பற்றிப் படித்திருக்கிறேன், அறிந்திருக்கிறேன். காதலி மனைவி நெருக்கம் பற்றிப் படித்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். பிள்ளைப் பாசம் பற்றிப் புரிந்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். சுற்றம் நட்பு நேசம் பற்றிப் படித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன், தெரிந்திருக்கிறேன். ஆனாலும், என்னளவில், இவை எல்லாமே புலப்படாத ஒரு வட்டத்துக்குள் இயங்கியவை போலவே தோன்றுகிறது. அளவுகோல் வைத்து அளந்தளித்தது போல் பட்டிருக்கிறது. எங்கே குறைந்தது எங்கே நிறைந்தது என்று சுட்டிக்காட்டும்படி இருந்திருக்கிறது. எதிர்பார்ப்புகளின் எல்லைகளுக்குள்ளே புழங்கியதாகப் பட்டிருக்கிறது. கடவுள் நம்பிக்கை போல் கண்மூடித்தனமாகச் செயல்படுத்தத் தோன்றியதேயில்லை. காற்றைப் போல் எதிர்பார்ப்புகளில்லாமல் பரவியதே இல்லை.

வாழ்நாளில் ஒரு முறை, ஒரே ஒரு முறையாவது இப்படிக் கண்மூடித்தனமாக அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காதா என்று அடிக்கடி நினைத்திருக்கிறேன். கற்பனையில் தான் நிகழுமென்று சலித்து அடங்கியிருக்கிறேன்.

சமீபத்தில் அந்த எண்ணம் மாறியது.

சில மாதங்களுக்கு முந்தைய இந்தியப் பயணத்தில் நண்பர் ஒருவரைச் சந்தித்து அப்படி இப்படி பேசிக்கொண்டிருந்த போது எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார். நண்பரின் தந்தை எழுதிய புத்தகம். நண்பரின் தாய் நினைவாகத் தந்தை எழுதியது. அஞ்சலி எழுத்துக்கள். ஆனால் மறைந்த மனைவியைப் பற்றி எழுதவில்லை. தங்கள் வாழ்வின் இனிமைகளையும் சிக்கல்களையும் பற்றி எழுதவில்லை. மாறாக, தங்களின் இனிமையான உலகத்துக்கு வெளியே நடைபெற்ற/பெறும் சாதாரண நிகழ்வுகளைத் தொட்டு எழுதிய அசாதாரணக் கருத்துக்கள்.

ஷா ஜெகான் மும்தாஜை சிலையாக வடித்துத் தன் காதலை வெளிப்படுத்தியிருக்கலாம். மும்தாஜைப் பற்றிக் கவிதை வடிக்கச் சொல்லியிருக்கலாம், வடித்திருக்கலாம். தாஜ்மகாலைக் கட்டுவானேன்? இந்தப் புத்தகத்தைப் படித்த போது புரிந்தது.

Abstract manifestation of uninhibited love. சிலருக்குத்தான் தெரியும். மிகச் சிலருக்குத்தான் புரியும். இன்னும் சிலரால்தான் உணர முடியும். அதை விடக் குறைவான சிலருக்குத்தான் வெளிப்படுத்த வரும்.

சிலையை ஒரு முறை ரசிக்கலாம். அது மும்தாஜ் என்று தெரிந்து விடுவதால், அடுத்த ரசனையின் தரம் குறைந்துவிடுகிறது. தாஜ்மகால் அப்படி அல்ல. காரணம், அதைப் பார்க்கும் பொழுது நினைவில் நிற்பது, அன்பின் ஆழம். கட்டிடத்தின் அழகு, கண் பார்வைக்கு மட்டும்தான். மனம், அன்பின் ஆழத்தை அழகை சிரிப்பை சோகத்தை ரசிக்கத் தொடங்கிவிடுவதால், நம்மை நாமே அடையாளம் கண்டு மகிழவும் ஏங்கவும் முடிவதால், தாஜ்மகாலைத் திரும்பப் பார்த்து அனுபவிக்க முடிகிறது. அதிசயிக்க முடிகிறது.

இந்தப் புத்தகத்தைத் திரும்பத் திரும்பத் திரும்பப் படிக்க முடிகிறது. படிக்கும் பொழுது என்னையும் என் சுற்றுப்புறத்தையும் வியக்கத்தக்க அளவில் அடையாளம் காண முடிகிறது. தெரியாத விஷயமென்றோ புதுச்செய்தியோ எதுவும் இல்லை. சொல்லியிருக்கும் விதத்தை ரசிக்க முடிகிறது. ஒரு வரித் தத்துவங்களின் ஆழம் பிரமிக்க வைக்கிறது. ஒரு சுமைதாங்கியின் உரத்த வெளிப்பாடு என்றே இதை வைத்துக் கொண்டாலும், சில உண்மைகளை அவர் எடுத்துக் காட்டியிருக்கும் விதம் இந்தத் தம்பதிகளினிடையே இருந்த நெருக்கத்தைத் தாமரை இலை நீர் போல் பட்டும் படாமல் கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் அடங்கியிருந்த எண்ணம் மறுபடி குற்றுயிராய் எழுந்து விட்டது. அன்பை வெளிப்படுத்த எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, அதை இயற்கையாக வெளிப்படுத்தத் தெரிந்த மனிதர்களிடையே நானும் வாழ்கிறேன் என்ற நிறைவே இப்போதைக்கு அந்தக் குற்றுயிரைப் பேணி வருகிறது.

இதுவும் தாஜ்மகால் பார்வை. நண்பரின் தந்தை கட்டியிருக்கும் எண்ணத் தாஜ்மகாலுக்குள், நான் கண்டு பிரமித்தவை:

சுற்றத்துக்கும் நட்புக்கும் அவசியம் பரிசளிக்க வேண்டிய புத்தகம். விலை: ரூ.40.
மொத்த விற்பனைத் தொகையும் எளியோருக்கான அறப்பணிக்குச் செல்வது தனிச்சிறப்பு.
புத்தகம் வாங்கத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
    பாலசுப்ரமணியம் ஹேமலதா, 9-16/6, பூந்தமல்லித் தெரு, S.ஆலங்குளம், மதுரை 625 017. தொலைபேசி: 9943782928



முடிவுகாலப் பெருமூச்சுகள் எல்லோருக்கும் பொது.


தாம் விரும்பாதவர்கள் நல்லது செய்தாலும் பேசினாலும் அவற்றை அங்கீகரித்துப் பாராட்டும் பெருந்தன்மை பலரிடம் இருப்பதில்லை. மாறாக, பிடித்தமான சிலர் தவறு செய்யும் போது அவர்களை உடனே கண்டிக்கவும் கோபிக்கவும் முடிகிறது.
இரு தரப்பினரின் எதிரெதிர் குணங்கள் உடனடியாகப் புலனாவதில்லை.


முதுமைக்கு ஒரு நிரந்தர அடையாளம் உண்டு - 'மழை எருமை'.


இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளாத ஏனோதானோ மனப்பான்மை; தங்கள் தகுதிகள் பற்றிய தாழ்வு மனப்பான்மை; சுய அலசல் முயற்சிக்காத பலஹீனம். எல்லோரும் 'வாழ்ந்து கொண்டு' தான் இருக்கிறார்கள்.


தனக்குத் தானே சிலவற்றில் லட்சுமணக்கோடு போட்டுக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்


ராமனுக்கு அக்கினிப் பிரவேசம் தேவைப்படுகிறது; ஏனெனில் சலவைத் தொழிலாளர் புகார்கள் நிரந்தரமானவை.


சாதாரணங்கள் அசாதாரணங்களை ஜெயிப்பதில்லை.


இனி சாவதற்கு என்ன புதிதாக இருக்கிறது?


ஏமாற்றங்கள் எங்கிருந்தோ வருகிற வெளிச்சரக்கல்ல.


ஒருமையில் இல்லை பன்மையில் தான் என்றால் அவியலுக்குத் தனிப்பெயர் என்ற கௌரவ அந்தஸ்து எதற்கு?


புதுசு, மற்றொன்றால் பழசாகாமல் இருக்குமா?


கொடுப்பதே லட்சியம், பெறுவது அல்ல - எதற்கும், எந்நிலையிலும்.


ரசமட்டம் யோசிப்பதில்லை.


சில உண்மைகள் அசௌகரியமானவை. எது நேர்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அடுத்த பணியை கவனிப்பது தான் ஒரே வழி.


எல்லாச் சந்திப்புகளுமே மகிழ்ச்சியுடன் தான் ஆரம்பிக்கின்றன; கசப்பாக முடிகின்றன.


சுற்றியுள்ள எல்லாக் கதவுகளையும் இறுக்கச் சாத்தி மூடிவிடுவது சுலபம் தான். கொஞ்ச நேரம் தானே மூச்சுத் திணறும்...!


வாழ்க்கை புதிர்களாகவே நகர்கிறது. சிலருக்கே சரியான விடை தெரிந்திருக்கிறது. இவர்கள் ஆழமானவர்கள், அகலமானவர்கள், உயரமானவர்கள் - அதனாலேயே அழகானவர்கள். இந்த 'விசுவரூபம்' அவர்கள் வாங்கி வந்துள்ள வரம்.


சின்னச் சின்ன சந்தோஷங்களை இனங்கண்டு சுவீகரித்துக் கொள்வது பலருக்குத் தெரியாது. ஆதாரமே இல்லாத, கற்பனையான கவலைகளாக, துவேஷமாக, கசப்பாகவே பொழுதுகளை விழுங்கப் பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு இந்தச் சின்ன சந்தோஷம் அடையாளம் தெரிவதில்லை. ரசனை ஒரு அற்புத மாமந்திரம்.


சிகரமேறினால் தான் வெற்றியா? அடிவாரம் வந்தாயிற்றா? அதுவும் வெற்றி தான்.


யார் மீது ஆத்திரம் வருகிறது? கோபம் பொங்குகிறது? அசூயை மீறுகிறது? எவர் போல் நம்மால் செயல்பட முடியவில்லையோ, எவரது திறமை செயலாற்றல் நமக்கு எட்டாத்தாக இருக்கிறதோ, அவர் மீது. பல இயலாமைகளின் வெளிப்பாடு; தாழ்வு மனப்பான்மையின் கோர முகம். விவஸ்தை கெட்டது இந்த மனம்.


பேசுவது எல்லோருக்குமே தெரிவது; பேசத்தெரிவது, பெரும்பாலோர்க்குத் தெரியாதது.


குறையுள்ள விமரிசனங்கள் இலக்கை எட்டுவதில்லை. துரோணருக்கும் தோல்வி; அர்ச்சுனருக்கும் அவமானம்.


நெருக்கத் தொடர்புகள் எப்போதும் அப்படியே தொடர்வதில்லை. எங்கோ ஓரிடத்தில் அவை தம்மையே துண்டித்துக் கொள்கின்றன. அதை இயல்பானதாகவும் ஏற்றுக்கொண்டு மனம் அமைதியும் பெற முடிகிறது. அநித்தியங்களுக்கும் ஆயுள் குறைவு தான்.


பிளாட்பாரத்தில் கண் தெரியாத கணவன் மனைவி குழந்தைகள்..அவர்கள் சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். உலகமே அந்தத் தம்பதியர்க்கு இருட்டு... அடுத்த வேளைக்கு என்று எந்த நிச்சய உறுதியும் இல்லாத நிலையிலேயே. அலட்டிக் கொள்பவர்கள் இதைப் பார்க்க வேண்டும்; ஆனால் பார்ப்பதில்லை.


லேசில் புரியக்கூடாது என்று சபதமெடுத்தவர்கள் போல சிலர் எழுதவும் பேசவும் செய்கிறார்கள். அதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டே ஆகவேண்டும் எனச் சிரமப்படுவது எதில் சேர்த்தி?


ஒரு விஷயம் பற்றித் தனக்குத் தெரியாது என்று சொல்லவே பலர் கூச்சப்படுவார்கள். அதில் ஏதோ தாம் தாழ்ந்திருப்பது போல மனச்சங்கடம்.


உழைப்பை அடுத்த ஓய்வு சுகமானது


பேச்சினிடையே சிலர் அலட்சியமாக வீசி எறியும் சொற்கள் மனசைக் காயப்படுத்தி விடுகின்றன. தம் பேச்சு காயப்படுத்தும் என்பது தெரியாத அப்பாவித்தனமா? காயப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்களா? சரி, எதிர் நபர்? தொட்டாற்சிணுங்கியாக இதில் சுருண்டுவிடாமல் உதறிவிட்டு மேலே போவது ஆரோக்கிய மனப்போக்கு.


பெரும்பாலானவர்களிடம் ஒரு பழக்கம். நமக்குத் தெரிய வேண்டிய ஒன்றைக் கேள்வியாகக் கேட்கும்போது உரிய பதில் உடனே நேரிடையாக வராது. எதிர்க் கேள்வி போடுவார்கள். அதற்கு பதில் சொன்ன பிறகு அதன் மீதான இன்னொரு கேள்வி. முதலில் கேட்டதற்கு பதில் இதுவரை இல்லை. இவர்கள் என்ன மனநிலைக்காரர்கள்? கேட்டதற்கு உண்டு, இல்லை என்று ஒரு வார்த்தை பதில் கூட ஏன் சொல்வதில்லை? ஒரு கொட்டாவியுடன் கிளம்பிவிடுவோம். கொட்டாவிகள் ஸ்டாக் இராது என்பதால்.


சொல்வதையே செய்தாலும் செய்வதையெல்லாம் சொன்னாலும் எந்த உறவும் எந்த மட்டத்திலும் நீடிக்காது. அவை தொடர உண்மைகள் மறைக்கப்பட வேண்டும்.


தான் செய்யும் போது சரியெனப்படுவது பிறர் செய்யும் போது எப்படித் தவறாகிறது? எனக்கும் இந்த மனநோய் எப்போதும் இருக்கிறதே?


கட்டின வீட்டுக்குப் பழுது சொல்வது எனக்குக் கைவந்த கலை. தினம் குளிக்கிறேன். கமகமக்கும் சோப் வாசனை. கைகள் முதுகை எட்டுவதில்லை.


திடீரென்று எதிர்வந்து பக்கவாட்டில் நகர்ந்து பின் பக்கமாக நழுவி விட்ட பிறகு தான் உணர்கிறோம், போய் விட்டதென்று. இதற்கு 'சந்தர்ப்பம்' என்று பெயர்.


குனிவது எதற்கு? நான் மேலேயே பார்க்கிறேனே!

20 கருத்துகள்:

  1. தாஜ்மஹால் கட்டியிருப்பதை பற்றிய அவரின் கருத்து பிரமிக்க வைக்கிறது. இப்பொழுது தாஜ்மஹாலை நினைத்து பார்க்கும்போது இன்னும் அதன் மேல் உள்ள மதிப்பு மேலோங்குகிறது. உங்களை பிரமிக்க வைத்த கருத்து குவியல்கள் மிகவும் அருமை. அன்றாட வாழ்கையில் நடக்கும் யதார்த்தமான உண்மைகள்.

    //சில உண்மைகள் அசௌகரியமானவை. எது நேர்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அடுத்த பணியை கவனிப்பது தான் ஒரே வழி.//
    நடைமுறையில் இதை செயல் படுத்துவது கடினம். நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ பழகி கொண்டுவிட்டால், வாழ்கை இயந்திர மயமாகிவிடும். கனவுகள், கற்பனைகள் என்ற இனிமையே இல்லாது போய்விடும். வாழ்கை சுவாரசியமாகவே இருக்காது. 'நம் வாழ்வு நம் கையில்' என்பதற்கு அர்த்தமே இல்லாது போய்விடும்.

    பதிவு நன்றாக இருக்கிறது. இதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    அந்த புத்தகத்தின் பெயர் என்ன?

    பதிலளிநீக்கு
  2. //சின்னச் சின்ன சந்தோஷங்களை இனங்கண்டு சுவீகரித்துக் கொள்வது பலருக்குத் தெரியாது. ஆதாரமே இல்லாத, கற்பனையான கவலைகளாக, துவேஷமாக, கசப்பாகவே பொழுதுகளை விழுங்கப் பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு இந்தச் சின்ன சந்தோஷம் அடையாளம் தெரிவதில்லை. ரசனை ஒரு அற்புத மாமந்திரம்.//

    beautiful!

    பதிலளிநீக்கு
  3. சாதாரணமாக நாம் நினைக்கும் சில விஷயங்கள் மற்றவர்கள் சொல்லும்போதுதான் விசேஷமாகத் தெரிகின்றன. இதுவும் அபபடி ஒன்றே...எடுத்துக் கொடுத்த உங்களுக்கு பாராட்டும் நன்றிகளும்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஸ்ரீராம்... தெரிந்தவை தான் மறக்கப் படுகின்றன, இல்லையா?
    ரசமட்டம் யோசிப்பதில்லை - நான் மிகவும் ரசித்தது..

    பதிலளிநீக்கு
  5. நன்றி, meenakshi.
    நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழப் பழகச் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை.
    'அடுத்த' என்பதை 'அப்படியே' என்று நீங்கள் பொருள் கொண்டிருக்கிறீர்கள். தவறில்லை. 'அடுத்த பணி' என்பது மாற்றத்தைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன். நாம் விரும்பாத ஒன்று நடப்பதைத் தடுக்க முடியாமல் போனால், குறை சொல்லாமல் அதை ஏற்றுக் கொள்வது தான் முறை?

    பதிலளிநீக்கு
  6. அட்டவணையில் இருப்பது ஒவ்வொன்றும் ஆட்டோவுக்கு பின்னால் பொன்மொழிகளாக போடலாம் போலிருக்கே ?!?

    பதிலளிநீக்கு
  7. சாய்ராம்: ஆட்டோவுல எழுதி வைக்க தான் லாயக்கு; செயல்படுத்த ஒண்ணும் சரியில்லன்ற மாதிரி இருக்கே?
    jest aside, சொல்றது சுலபம், செய்யுறது கஷ்டம் தான்.

    பதிலளிநீக்கு
  8. நான் நினைத்ததையே ஸ்ரீராமும் சொல்லியிருக்கிறார். மிளகுக் குழம்பை சாதமாகப் பிசைந்து ஏதோ ஒரு அவசரத்தில் சாப்பிட்டு வந்த பிறகு, அதே விருந்தில் நம்மோடு சாப்பிட்ட நம் ரசனைமிகு நண்பர் அந்த மிளகுக் குழம்பின் ஒவ்வொரு நல்ல அம்சத்தையும் எடுத்துக் கூறி, அதை எப்படி ரசித்துச் சாப்பிட்டார் என்பதை மற்ற நண்பர்களுக்கு விளக்கிக் கூறும்பொழுது எனக்கு என்ன உணர்வு தோன்றுமோ அந்த உணர்வு தோன்றுகிறது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். தொப்பிகளைத் தூக்கி!

    பதிலளிநீக்கு
  9. மிளகு குழம்பு பசியைக் கிளப்பி விட்டுது kgg; beter than tajmahal, i must admit - சிறிது வயிற்றுக்கும் ஈயப்படுவதால். :-)

    பதிலளிநீக்கு
  10. நல்ல கருத்துக்கள். தெரிந்தவையென்றாலும் எடுத்துச் சொல்லும் போது நன்றாக இருக்கிறது.

    //சொல்வதையே செய்தாலும் செய்வதையெல்லாம் சொன்னாலும் எந்த உறவும் எந்த மட்டத்திலும் நீடிக்காது. அவை தொடர உண்மைகள் மறைக்கப்பட வேண்டும்.//

    என்னை மிகவும் சிந்திக்க வைத்த கருத்து.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லாமே 02, 2010

    நெகிழ வைத்த பதிவு என்பது சரி.
    'அடுத்த பணி'க்குப் பொருள் 'மாற்றம்' என்று நான் நினைக்கவில்லை. நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் நடப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு தொடர்ந்தால் ஒரே நிலையில் இருக்க முடியும் என்று சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. //அன்பை வெளிப்படுத்த எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ...//
    தங்களின் இடுகையில் வெளிப்படும் அன்பின் வாசம் அந்த தம்பதிகள் வெளிப்படுத்திய அன்பிற்கு சிறிதும் குறையாத ஒன்று தோழரே ...

    "ஏமாற்றங்கள் எங்கிருந்தோ வருகிற வெளிச்சரக்கல்ல."
    நன்றி ஹேமலதா பாலசுப்ரமணியம்!

    பதிலளிநீக்கு
  13. ரொம்பக் கவர்ச்சியான நூல் மதிப்புரை. நூலைப் படிக்கத் தூண்டும் வகையில் இருக்கிறது.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  14. //
    பிளாட்பாரத்தில் கண் தெரியாத கணவன் மனைவி குழந்தைகள்..அவர்கள் சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். உலகமே அந்தத் தம்பதியர்க்கு இருட்டு... அடுத்த வேளைக்கு என்று எந்த நிச்சய உறுதியும் இல்லாத நிலையிலேயே. அலட்டிக் கொள்பவர்கள் இதைப் பார்க்க வேண்டும்; ஆனால் பார்ப்பதில்லை.//

    ஒரு வேளை எனக்கு கண்ணும், காதும், வாயும் ஒழுங்காய் இருப்பதால் தான் தொல்லையோ ?

    - கண்டும் காணாமல் இருப்பதற்கு அறியவில்லை.
    - எனக்கு பிடிப்பதையே கேட்க விளையும் காது
    - கண்டதை உளரும் வாய் ?

    தேவையா ?

    பதிலளிநீக்கு
  15. பாதி பேர் இதே கதை தான் சாய்ராம் - என்னையும் சேர்த்து.
    இந்த மாதிரி பரீட்சையில எப்பவும் முதல் மார்க் வாங்கலையேனு பாக்க முடியாது; பெயிலானாலும் பரவாயில்லை. பரீட்சைனு ஒதுக்கி வைக்காம இருக்குற வைக்கும் சரிதான் என்பது என் அபிப்பிராயம்.

    பதிலளிநீக்கு
  16. அககா, அககா அற்புதம்... அற்புதம்
    அத்துணையும் மேற்கோள்கள். முழுசா படிக்கவில்லை, கருத்துரை எழுத வந்துட்டேன். நிறைய எழுத தோணுது... தெரியல


    இங்கு ஏனோ வந்தது

    தாமதமாய்.. "என் நேரம்"!!!???


    பின் வரும் வரிகளும், தொடர்ச்சியும் அருமை


    அழகு, கண் பார்வைக்கு மட்டும்தான்...

    ..அதை இயற்கையாக வெளிப்படுத்தத் தெரிந்த மனிதர்களிடையே நானும் வாழ்கிறேன் என்ற நிறைவே..



    புத்தகத்தில்,

    இரு தரப்பினரின் எதிரெதிர் குணங்கள் உடனடியாகப் புலனாவதில்லை

    மழையில் எருமை - அறிவுக்கு எட்டினவரை.

    இலக்குகள் - அடைந்தால்தான் வெளியில் வரும், அது வரை குத்திக்கொண்டு இருக்கும் உள்மனத்தில்..

    பதிலளிநீக்கு
  17. முழுவதும் படித்ததும்...
    ************************

    அழுவதா, சிரிப்பதா தெரியவில்லை

    விடுவதா, தொடர்வதா புரியவில்லை

    அழுதுகொண்டே கேள்வி கேட்டது முட்டாள் மனம்.

    எடுத்துகொள்ள தெரியவுமில்லை, விட்டுச்செல்ல முடியவுமில்லை அப்பாவி(யி)ன் மனசு.

    பதிலளிநீக்கு
  18. தலைமறைவுக்கு மன்னிக்கவும்.
    ஓசைப்படாமல் நூறு பதிவுகளா? வளர்க.
    நூலறிமுகமும் நன்று.

    பதிலளிநீக்கு
  19. நன்றி, விஜயன். அடிக்கடி வருக. அரசனில்லாவிட்டாலும் அமைச்சனுக்கு ஆதரவு..?

    பதிலளிநீக்கு