2014/12/27

தகாதவர்


இதற்கு முன்



    ரை மணிக்கு மேலாக வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"உங்களை என்னால் நம்ப முடியலே" என்றாள் ரமா.

"ஏன்? நான் இயல்பா நடந்துக்குறதாலா?"

"இயல்பா நடக்கறீங்களா? லெட்ஸீ. ஸ்டேஷன் ப்லேட்பாரத்துல ஒரே சட்டையை ஒரு மாசமா போட்டுக்கிட்டு வெளியை வெறிச்சுப் பாத்துட்டு உக்காந்திருந்த ஒருத்தரோட தெனம் பேசிட்டு வரீங்க. அந்தப் பெரியவர் யாருன்னு கூடத் தெரியாது. எங்கேயோ பாத்த ஞாபகம்னு சொல்லி அவருக்கு உதவி செய்ய நினைக்கறீங்க. அஞ்சோ பத்தோ கொடுத்து உதவுறதா? இல்லையே? நகை வாங்கினப்ப வாங்கின பரிசுச்சீட்டை அவருக்குத் தர முடிவு செஞ்சீங்க.. அப்புறம் இப்ப.. பரிசு விழுந்ததும் பல்டி அடிக்கிறீங்க. அவருக்கு நகையோ பணமோ தேவையில்லை, அதனால பரிசு சீட்டை பகிர்ந்துக்க அவசியமில்லைனு சொல்றீங்க.. இதுல எதை இயல்பு நடத்தைனு சொல்றீங்க ரகு?"

"எல்லாமே தான். நானும் ஒரு சராசரி மனிதன் தானே ரமா?"

ரமா முகம் சுளித்தாள். "உங்க பரிசுச்சீட்டு, உங்க பரிசு. டு எஸ் யு லைக். ஆனா ஒரு பாரத்தை சுமக்குற அவசியத்தை ஏற்படுத்திக்காதிங்க.."

"எதுக்கு காம்ப்லிகேட் பண்றே? பரிசுச்சீட்டு வெறும் சீட்டா இருந்தப்ப அதை சுலபமா தானம் செய்யத் தோணிச்சு. இப்ப நிஜமாவே பரிசு விழுந்ததும் இதை அவர்கிட்டே கொடுக்க விரும்பலே. அவரு இதை ஏத்துக்குவாரோனு கூடத் தெரியாது.. நிராகரிச்சார்னா?"

"கொடுத்துப் பார்த்தா தானே தெரியும்?"

"லெட்ஸ் லுக் அட் திஸ் ஒப்ஜெக்டிவ்லி. ப்லேட்பாரத்துல இருக்குற ஒரு ஹோம்லெஸ்... அவர் கிட்டே திடீர்னு போய் இருபது பவுன் தங்கத்தைக் கொடுத்தா அவர் நிலை என்ன ஆகும்?"

"ஏன்? எத்தனையோ ஏழைங்களுக்கு லாட்டரி விழுதில்லையா? அது போலத்தான்"

"நோ.. இட்ஸ் நாட். முதல்ல இந்தப் பரிசுச்சீட்டு தனக்கு தானமா கிடைச்சுதுனு சொன்னா, ஜாயலுகாஸ்காரன் இவரைத் திருடன்னு பிடிச்சுப் போடலாம். இல்லே இவருக்கு திடீர்னு இத்தனை தங்கம் கிடைச்ச அதிர்ச்சியிலே எதாவது ஆகலாம். இல்லின்னா தங்கம் கிடைச்சது தெரிஞ்சு திருட்டுப் பசங்க இவரை அடிச்சுப் போடலாம்.. இந்த பரிசுச்சீட்டு அவரை ஆபத்துக்கு உட்படுத்தும்னு நினைக்கிறேன்"

"ரியலி? அதே ஆபத்து உங்களுக்கும் வரலாமே?". ரமா அவனை ஏற இறங்கப் பார்த்தாள். "மை குட்னஸ்! எப்படியெல்லாம் யோசிக்கிறிங்க! இந்த இருபது பவுனா உங்களை இப்படிப் பேச வைக்குது? பரிசுச்சீட்டைக் குடுத்துட்டு நீங்களே அவரை அடிச்சுப் போட்டுருவீங்க போலிருக்கே?"

"ஸ்டாப் இட்" எரிச்சலானான் ரகு. "நான் பரிசுச்சீட்டைத் தரதா சொன்னப்ப உனக்கு சம்மதமில்லேனு சொல்லலியா? நீ மட்டும் இப்ப எப்படி மனம் மாறினே?"

பதில் சொல்லத் தயங்கி ஒரு கணம் ரகுவை நேராகப் பார்த்த ரமா, "எனக்குத் தினம் தூங்க விருப்பம் ரகு" என்றாள். அருகே வந்து அவன் தோள் தொட்டு, "அதைவிட நீங்க தினம் நிம்மதியா தூங்க விருப்பம் ரகு" என்றாள் சற்றே கலங்கி.

"லெட்ஸ் பி ரேஷனல் ஓகே? பெரியவரோட இன்றைய தேவை இருபது பவுன் தங்கமா?"

"அதே போல யோசிச்சா உங்களுக்கு எதுக்கு இருபது பவுன் தங்கம் இப்போ? வாட் வில் யு டூ?"

"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்னைத் திருப்பிக் கேட்டு என்ன பலன்?"

"ஏற்கனவே தீர்மானிச்ச பதிலை நியாயப்படுத்துறதுக்கான கேள்வியைக் கேட்டு என்ன பலன்?"

"பதில் சொல்லேன்..?"

"ஓகே. அவருடைய இன்றைய தேவை இருபது பவுன் தங்கம் இல்லைதான். அவருடைய இன்றைய தேவை ஒரு கடுகளவு சமூக அங்கீகாரம். ஒரு சின்ன வெற்றி. குளிருக்கு இதமா மூட்டைப்பூச்சி இல்லாத ஒரு போர்வை. சூடா ஒரு வாய் கஞ்சி. அப்பப்போ யாராவது சிந்துற எதிர்பார்ப்பில்லாத கனிவான புன்னகை.. தன் விழுதுகளின் பிடிப்பு.. ஒரு அரவணைப்பு.. சொல்லிட்டே போகலாம்.. இருந்தாலும் ஒரு அடிப்படை கேள்வி.. அந்தப் பெரியவரோட தேவை என்னனு தீர்மானிக்கிற தகுதி நமக்கு இருக்கா?"

"ஏன் இல்லை? அவருக்கு உதவி செய்யுற தகுதி நமக்கு இருக்கறப்ப, அவர் தேவையைத் தீர்மானிக்கிற தகுதி இல்லையா? ஆத்துல போட்டாலும் அளந்து போடுனு படிச்சதில்லையா?"

"உங்களுக்கு எது சரினு தோணுதோ அதைச் செய்ங்க". ரமா சட்டென்று வெளியேறினாள்.

விவாதத்தைத் தவிர்க்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட ரகு வாளாதிருந்தான்.

கல்கத்தாவிலிருந்து திரும்பி மூன்று நாட்களாயிருந்தாலும் பெரியவரை சந்திக்க நேரிடுமோ என்ற உறுத்தலில் ரயில்வே ஸ்டேஷன் பக்கமே போகவில்லை. பரிசு விழுவதும் விழாததும் ஒரு விபத்து தானே? பரிசு விழுமுன் இருந்த பரந்த மனமும் தாராள குணமும், பரிசு விழுந்ததும் பயந்து ஒளிவானேன்? இதென்ன சிக்கல்? யாரோ கொடுத்த பரிசை யாருக்கோ தானம் தருவதில் ஏன் இத்தனை அழுத்தம்? இது நமக்குக் கிடைக்காமலே போயிருக்கலாமே? இல்லாத இருபது பவுன், இல்லாமலே போக மனம் ஏன் அடங்க மறுக்கிறது? தெரியாத்தனமாக வாய்க்கொழுப்பில் தந்த வாக்குறுதியின் எரிச்சலா? இந்தப் பரிசு தன்னைவிட இன்னொருத்தருக்கு அதிகம் பயன்படும் என்ற உண்மை புரிந்தாலும் தன் ஆளுமைக்குட்பட்டது என்ற உரிமையா? எப்படி தன்னுடையதாகும்? இலவசமாகக் கிடைப்பது தன்னுடையதாகுமா? இலவசமாகக் கிடைத்ததை இலவசமாகக் கொடுத்தால் மனம் ஆற மறுப்பதேன்? ஆயுசுக்கும் இதே போல் இருதலை கொள்ளி எறும்பு வாழ்க்கை எல்லோருக்குமேவா இல்லை மத்யமருக்கேயான சாபக்கேடா? சே! இந்தப் பரிசு எதற்காக விழுந்து தொலைக்க வேண்டும்? இன்னும் பின்னோக்கினான். எதற்காக இந்தப் பெரியவரைப் பார்த்துத் தொலைக்க வேண்டும்? சாதாரணமாக இயங்கிக் கொண்டிருந்த வாழ்வில் எதற்கு இப்படியொரு திருப்பம்? தேவையில்லாத ஒழுக்கச் சிக்கல்?

ரகு பலவாறு சிந்தித்தபடி ரமாவை நெருங்கினான். "யு ஆர் ரைட்" என்றான். மௌனமாக நின்ற ரமாவின் கைகளைப் பிடித்தான். "நீ சொன்னது சரிதான் ரமா. என் மனம் மாறினதுக்குக் காரணம் புரியலே. பரிசு சீட்டைக் கொடுனு நான் தான் முதல்ல சொன்னேன். பிறகு நானே மனம் மாறுவேன்னு நினைக்கலே" என்றான்.

"இருபது பவுன் தங்கம்.. உங்க கண்ணை மறைக்குது"

"இருக்கலாம்.. பரிசை அப்படியே கொடுக்க மனசு கேக்கலே. நான் ஒரு சாதாரண மனுஷன். மகான் இல்லை ரமா."

ரமா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"கொஞ்சம் வெட்கமா இருந்தாலும் நான் செய்யுறது தப்பில்லைனு தோணுது. ஒரு ஹோம்லெஸ் மனிதர், வயதானவர், இருபது பவுன் தங்கத்தை வச்சுகிட்டு என்ன செய்வாருனு தோணிச்சு.. ஐ மீன்.. பரிசுச்சீட்டு வாங்கினது நாம தானே? வேணுமானா பாதியைப் பகிர்ந்துக்கலாம். பத்து பவுன் தங்கத்தையோ அதுக்கான ரொக்கத்தையோ அவர் கிட்டே குடுக்கலாம். என்ன சொல்றே?"

ரமா புன்னகைத்தாள். ரகுவின் தோளில் தட்டி, "மிடில் க்லாஸ் மகராஜா?" என்றாள். "உங்க நிலமை புரியுது. விருப்பம் போல் செய்யுங்க" என்றாள்.

    கு ஸ்டேஷன் வந்த போது காலை பத்து மணியிருக்கும். பெரியவர் தென்படுகிறாரா என்று பார்த்தான். காணவில்லை. கடற்கரை ரயில் வந்ததும் ஏறிக் கொண்டான். ஏதோ வெறித்தபடி இருந்தவன் வண்டி மெள்ள வேகம் பிடிக்கத் தொடங்கியதும் தற்செயலாகக் கவனித்தான். அதிர்ந்தான். பல்லாவரத்தில் இறங்கி அடுத்த ரயிலைப் பிடித்துக் குரோம்பேட்டை வந்தான். அவசரமாக இறங்கி எதிர்புறம் ஓடினான். பெரியவர் தான். ப்லேட்பாரம் கடந்து பாலத்தினடியில் சுருண்டு படுத்திருந்தார். நாடி பிடித்துப் பார்த்தான். அங்கிருந்து கூவி எதிர்புறமிருந்த சிலரை அழைத்தான். ஒரு ஆட்டோ டிரைவர் வந்தார். "என்னா சார், வண்டியா?"

"ஏம்பா.. இங்க ஒருத்தர் இப்படி சுருண்டு படுத்திட்டிருக்காரு.. என்ன ஏதுனு கவனிக்க மாட்டீங்களா?"

"தோடா.. ஏன் சார்.. எத்தினியோ பேரு படுத்திருக்காங்க.. எல்லாரையும் கண்டுக்கவா முடியும்? பெர்சுக்குப் போற வயசு... வூட்ல கள்டி வுட்றுப்பாங்க.. நாதியில்லே.. இங்க வந்து படுத்திருக்காரு.. உனக்கு என்ன சார் வந்திச்சு? உனக்கென்ன அப்பனா பாட்டனா? எதுனா சவாரி கேக்கறீங்கனு வந்தா இன்னாவோ டயலாக் வுட்னுகிறீங்க?"

டிரைவர் பேச்சின் யதார்த்தம் உறுத்த, ரகு அமைதியானான். "தெரிஞ்சவர்பா. இந்தா ஒரு சோடா வாங்கிட்டு வா" என்று இருநூறு ரூபாயைக் கொடுத்தான். "அப்படியே ஒரு பாட்டில் தண்ணி வாங்கிட்டு வாப்பா. இவரை எழுப்பி வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போகணும். ந்யூகாலனி. வரியாப்பா?"

    "ரொம்ப தேங்க்ஸ், ரெண்டு பேருக்கும்" என்றார் பெரியவர். "குளிப்பாட்டி வேட்டி சட்டை கொடுத்து சாப்பாடு போட்டு.. அமர்க்களப் படுத்திட்டிங்களே? மறுபடி ப்லேட்பாரத்துக்குப் போக வேண்டியவன் தானே? இன்னிக்குக் கூட்டிட்டு வந்து குளிப்பாட்டி வேஷ்டி சட்டை கொடுத்து சாப்பாடு போட்டீங்க. தினப்படிக்கு நான் என்ன செய்வேன்? வீண் ஜம்பத்தோடு பேசலே.. உங்க உதவிக்கு நன்றி, ஆனா தயவுசெஞ்சு இனிமே இப்படி உதவாதீங்க"

"உங்களுக்கு ஆட்சேபணை இல்லின்னா எங்க கூடவே இருக்கலாம் சார்" என்றான் ரகு.

ரகுவை முறைத்த ரமாவைக் கவனிக்கத் தவறவில்லை பெரியவர். "பயப்படாதமா.. உன் புருஷனுக்கு அறிவில்லைனா எனக்கும் அறிவில்லைனு ஆயிடுமா?"

பெரியவரின் நேர்மையை வியந்து சுதாரித்த ரமா, "தப்பா நினைக்காதிங்க சார். இந்த மாதிரி ஏதாவது விவரம் புரியாம உளறித் தானும் கஷ்டப்பட்டு அடுத்தவரையும் கஷ்டப்படுத்துறது அவரோட சுபாவம். இருந்தாலும் என் காதலர் இல்லையா? விட்டுக் கொடுக்க மாட்டேன்... அவரோட மனம் எனக்குப் புரியும்"

"கணவரைக் காதலர்னு சொல்ற லட்சத்துல ஒருத்திமா நீ.. நல்லா இரு.. நான் வரட்டுமா?" என்று எழுந்த பெரியவரைத் தடுத்தாள் ரமா. "உக்காருங்க சார். விவரம் புரியாம உளறிக் கஷ்டப்படுவார்னு சொன்னனே. அந்த மாதிரி ஒரு கஷ்டத்துல இருக்கோம்.. நீங்கதான் உதவி செய்யணும்"

"நானா? நான் எப்படி..."

"உங்களால தானே சார் கஷ்டமே..?" என்று அன்புடன் அழகாகச் சிரித்த ரமா, பரிசுச்சீட்டு விவரங்களைச் சொன்னாள்.

திடுக்கிட்டார் பெரியவர். "நிஜமாவா சொல்றீங்க ரெண்டு பேரும்? இல்லே இது ஏதாவது பைத்தியக்கார ஆஸ்பத்திரியா?"

"உண்மை சார். இதோ பரிசுச்சீட்டு" என்று பரிசுச்சீட்டைக் காட்டினான் ரகு. "பரிசு விழறதுக்கு முன்னால இதை உங்களுக்குத் தரலாம்னு தாராளமா சொன்னவன், பரிசு விழுந்ததும் மனம் மாறிட்டேன்.. மன்னிக்கணும்"

"ஏன்.. இது உன்னோட பரிசு தானே?"

"இருக்கலாம். ஒரு விசித்திரமான.. தார்மீகச் சவால்னு வைங்களேன்?"

"என்னப்பா.. பெரிசா என்னவோ பேசுறே? நான் எளியவன்பா. அந்தாலத்து சிக்ஸ்த் பார்ம்.."

"சார்.. எனக்கோ ரமாவுக்கோ வாழ்க்கைல எந்தப் பரிசும் கிடைச்சதில்லே சார். அந்தக்காலத்துல லாட்டரி வாங்குவோம். ஒரு நம்பர் கூட விழாது சனியன். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் எங்க ரெண்டு பேருக்கும். அன்னிக்குப் பாருங்க.. உங்களுக்கு இந்தப் பரிசுச்சீட்டைத் தரணும்னு சொன்னப்போ சத்தியமா பரிசு விழாதுனு ஒரு நம்பிக்கைல சொன்னேன். ஏன்னா, இது என்னோட சீட்டு. தனக்குப் பரிசு விழாதுனு ரமாவுக்கும் தெரியும். அதனாலதான் என்னோட சீட்டுனு இதைத் தனியா எழுதி வச்சா. நாட் தட் ஷி விஷ்ட் டு பி லக்கி. அவளோட சீட்டை நம்பினா சுத்தமா வராதுனு அவளுக்குத் தெரியும். ஆனா அதே நேரம் அவ ரொம்ப யதார்த்தமான பெண். முன்பின் தெரியாத ஒருத்தருக்கு உதவி செய்யறதுக்கு பதிலா பரிசுச்சீட்டைக் குடுத்துட்டுப் போற அகஸ்மாத்தான தர்மத்தில் அவளுக்கு ஒரு ஆட்சேபணையுமில்லே. ஒத்துக்கிட்டா..."

"கொஞ்சம் இருப்பா. எனக்குனு ஒதுக்கினதால தான் பரிசு விழுந்திருக்குனு சொல்றாப்ல இருக்கே?"

"கண்டிப்பா சார். இதை நாங்க ரெண்டு பேருமே நம்பறோம்" என்றாள் ரமா.

"ஆமாம் சார்" என்றான் ரகு. "எனக்கு ஆயுள்ல இது வரை ஒரு சின்ன பென்சில் இரேசர் கூட பரிசு விழுந்ததில்லை சார். எனக்கு மட்டுமில்லே என் பரம்பரையே அப்படித்தான். எங்கப்பா ஒவ்வொரு மாநில லாட்டரி சீட்டுனு வாங்கி வாங்கி எத்தனை வேஸ்ட் பண்ணியிருக்காருனு நினைக்கறீங்க! ஐ டெல் யு. ஐயம் பேங்க்ரப்ட் இன் லக். உங்களுக்குத் தரலாம்னு நினைச்சதால மட்டுமே இந்த சீட்டுக்குப் பரிசு விழுந்திருக்கு"

பெரியவர் சந்தேகத்தோடு பார்த்தார். "என்ன சொல்றீங்க ரெண்டு பேரும்?"

"இது உங்க பரிசுச்சீட்டு சார். என் கைல கிடைச்சது அவ்வளவுதான். எனக்குக் கிடைச்ச உரிமை ஒரு விபத்து. ஆனா என் மனசு பாருங்க, இப்ப இதை உங்க கிட்டே முழுசுமா தரத் தயங்குது. ஆனா உங்க கூட பாதியைப் பகிர்ந்துக்க ஆசைப்படுறேன் சார். முழு மனசா ஆசைப்படுறேன். பாருங்க, அதனாலதான் இன்னும் இதை கேஷ் பண்ணாமலே இருக்கேன். பணத்தையோ தங்கத்தையோ பார்த்ததும் மனசு மறுபடி மாறிடக் கூடாது பாருங்க. இன்னிக்கே போய் ரெண்டு பேரும் இதை பகிர்ந்துக்கலாம் சார். உங்களுக்கும் இப்போ இது உதவியா இருக்கும் இல்லையா?"

சற்று நேரம் அமைதியாக இருந்தார் பெரியவர். "கொஞ்சம் குடிக்கத் தண்ணி தரியாப்பா?" என்றார்.

"நீ சொன்னது கேட்டு என் நாக்கு வரண்டு போச்சுபா" என்றார் டம்ள்ரை அவனிடம் தந்தபடி. "ரொம்ப தேங்க்ஸ். தண்ணிக்கு" என்றார்.

மூவரும் பேசாதிருந்தனர். பெரியவர் மெள்ளத் தொடங்கினார். "பத்து பவுன்னா ரெண்டு லட்சமாவது தேறுமில்லையா?"

ரகு ஆமோதித்தான்.

"ஹ்ம்ம்ம்.. ரெண்டு லட்ச ரூபாயை அப்படியே எனக்கு அன்கன்டிஷனலா தானம் பண்றதா சொல்றே? அதுக்கான புண்யத்தைக் கட்டிக்கலாம்னு ஒரு ஐடியா.."

"அய்யய்யோ.. அப்படியெல்லாம் இல்லை. எங்க ரெண்டு பேருக்கும் பாவ புண்ணியத்துல நம்பிக்கை கூட கிடையாது சார். எங்களுக்குக் கிடைச்ச வெற்றியை உங்களோட பகிர்ந்துக்கறோம். ட்ரூலி, நாங்க விளையாடின காரணத்துக்காக உங்க வெற்றியை நாங்க பகிர்ந்துக்கறோம்னு சொல்றேன்.."

"நான் யாரோ.. நீங்க யாரோ.. எதுக்கப்பா.. இதென்ன உறவா பங்காளியா..."

"அப்படிப் பார்த்தா எல்லாருமே யாரோதான்.. எல்லாருமே உறவுதான் சார். நீங்க நான் ரமா எல்லாருமே ஏதோ ஒரு வட்டத்தில் இணைஞ்சிருக்கறதுனால தான் இப்ப இப்படிச் சந்திக்கிறோம்... ஹ்யுமேனிடி இஸ் எ பிக் சர்கில், ஹ்யூமெனிசம் இஸ் இட்ஸ் சென்டர்"

"இது அந்த மொள்ளமாறிங்களுக்குத் தெரியலியே" என்று முணுத்தார் பெரியவர்.

"என்ன சொல்றீங்க சார்?"

"ஒண்ணுமில்லேமா" என்றவர் திடீரென்று உற்சாகத்துடன், "ஏம்பா.. பரிசு தரப்ப போட்டோ எடுப்பாங்க இல்லே? வா, போகலாம். என் இஷ்டத்துக்கு விடணும், வற்புறுத்தக் கூடாது, சம்மதமா?" என்றார்.

    கைக்கடையில் பரிசுச்சீட்டைக் கொடுத்து ரொக்கமாக வாங்கிக் கொண்டார்கள். நாலு லட்சத்து சொச்சத்துக்கான காசோலையைப் பிடித்தபடி படம் எடுத்துக் கொண்டார்கள். ரமாவின் போலராய்டில் உடனடியாகப் படம் வந்துவிட, பெரியவர் மிகவும் சந்தோஷமாக இருந்தார்.

"நாளைக்கு வருமானவரி எடுத்துட்டு மிச்சத்தை என் பேங்க்ல போடுவாங்க சார்..."

"வரி பிடிப்பாங்களா? என்னப்பா சொல்லவேயில்லையே? அவ்வளவும் போச்சா?"

ரகு சிரித்தான். "இல்லை சார். உங்க ரெண்டு லட்சத்துக்கு வரி கிடையாது, கவலைப்படாதீங்க" என்றான். ரமாவின் முறுவலைக் கவனித்தான்.

"என்னவோ.. உங்க ரெண்டு பேருனால நான் இன்னிக்கு இந்த நிமிஷம் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இதுக்கு எந்தப் பரிசும் ஈடு கிடையாதுப்பா. எனக்கு ஒரு ரெண்டாயிரம் ரூபாய் கொடு, நாளைக்கு மிச்சத்தை வந்து வாங்கிக்கறேன். ஒரு மொள்ளையைப் பாத்துட்டு வந்துடறேன்.."

ரகு இரண்டாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்தான். "சார், நான் கொண்டு விடறேனே?"

"நோ.. நோ.. இது என்னோட தனி வெற்றிக்கான டைம். அலோ மி. ஆனா நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு ஊரை விட்டு ஓடிற மாட்டிங்களே?"

ரமா சிரித்தாள். "இல்லே சார். மாட்டோம். இன்னிக்கு உங்க உதவியால நிம்மதியா தூங்கப் போறோம்".

பெரியவர் அவர்களை அருகிலழைத்தார். "ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டிங்களே? ஒரு பென்சில் கூட பரிசு விழாத அதிர்ஷ்டக்கட்டைனு அடிச்சுக்கறிங்களே ரெண்டு பேரும்? உங்க ரெண்டு பேருக்கு எதுக்கு பரிசு? நீங்கதான் ஒருத்தருக்கொருத்தர் பரிசு! கோடிப்பொன் கொடுத்தாலும் ஈடாகாத பரிசு! எப்பேற்கொத்த ராமசீதையாட்டம் இருக்கிங்க?! எத்தனை முனிவரும் தர்மாத்மாவும் ஆசீர்வாதம் செஞ்சாலும் இப்படியொரு பிணைப்பு கிடைக்குமா? வாழ்க்கையில இதைவிட பரிசு என்னய்யா வேண்டிக்கிடக்கு? இதைப் புரிஞ்சுக்காத எத்தனையோ தம்பதி சனியன்கள் வாழ்க்கையை நாசமாக்கிட்டுத் திரியறதை தினம் பாக்குறேன். இப்படி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடக்குறீங்க, இதுதான் மகத்தான பரிசு, மகோன்னத பரிசு. ஞாபகம் வச்சுக்குங்க. பி குட். நாளைக்குப் பார்ப்போம், சரியா?" என்றார். இரண்டாயிரம் ரூபாயையும் போட்டோவையும் வாங்கிக்கொண்டு நடந்தார்.

    வீடு திரும்புகையில், "எனக்கென்னவோ அவர் நாளைக்குத் திரும்புவாரா என்னனு தெரியலே ரமா" என்றான்.

"அதனால என்ன? இன்னிக்கு ஹி வாஸ் ஹேப்பி. நம்மளையும் சந்தோஷப்படுத்தினாரு..."

"இல்லே.. இன்னிக்கே நான் ஒரு செக் கொடுத்திருக்கலாம்.. தோணாம போயிடுச்சே?!"

"வருவாரு வருவாரு.. எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாதிங்க" என்று ரகுவின் கைகளை இறுக்கினாள். "அவர் நம்மளைப் பத்தி சொன்னது எத்தனை அழகு இல்லே?"

"நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான்.. இத்தனை நாள் தெரியாமப் போச்சே!"

"ஆமா..ம்.." என்று இழுத்தாள். "மொள்ளைனு சொன்னாரே? கெட்ட வார்த்தை தானே? என்ன அர்த்தம்?"

சற்று யோசித்த ரகு, "அவர் யாருனு எனக்குத் தெரியப்படுத்தினாருனு அர்த்தம்" என்றான்.

44 கருத்துகள்:

  1. கவிதையாய் முடித்திருக்கிறீர்கள்.. அழகான முடிவு!

    பதிலளிநீக்கு
  2. பதில் சொல்லத் தயங்கி ஒரு கணம் ரகுவை நேராகப் பார்த்த ரமா, "எனக்குத் தினம் தூங்க விருப்பம் ரகு" என்றாள். அருகே வந்து அவன் தோள் தொட்டு, "அதைவிட நீங்க தினம் நிம்மதியா தூங்க விருப்பம் ரகு" என்றாள் சற்றே கலங்கி.//

    அருமை.

    //உங்க ரெண்டு பேருக்கு எதுக்கு பரிசு? நீங்கதான் ஒருத்தருக்கொருத்தர் பரிசு! கோடிப்பொன் கொடுத்தாலும் ஈடாகாத பரிசு! எப்பேற்கொத்த ராமசீதையாட்டம் இருக்கிங்க?! எத்தனை முனிவரும் தர்மாத்மாவும் ஆசீர்வாதம் செஞ்சாலும் இப்படியொரு பிணைப்பு கிடைக்குமா? வாழ்க்கையில இதைவிட பரிசு என்னய்யா வேண்டிக்கிடக்கு? இதைப் புரிஞ்சுக்காத எத்தனையோ தம்பதி சனியன்கள் வாழ்க்கையை நாசமாக்கிட்டுத் திரியறதை தினம் பாக்குறேன். இப்படி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடக்குறீங்க, இதுதான் மகத்தான பரிசு,//

    கண்ணீர் விழி ஓரங்களில் துளிர்த்து விட்டது உண்மை.
    வாழ்த்துக்கள் அருமையான சிறுகதைக்கு.

    பதிலளிநீக்கு
  3. சிறுகதையா? முடிஞ்சுடுச்சா... அநியாயம். அவ்ளோதானா?

    ஆனா இப்படி அந்தரத்துல நிறுத்தறதுனாலதான் இது மாதிரி ஏக்கமும் வரும். அளவு மீறினா திகட்டிடலாமோ என்னவோ!

    1. ரகு வந்தும் அமானுஷ்யம் இல்லையே? (இல்லையா? இருக்கோ? அ மானுஷ்யம்னா என்ன?)

    2. ரகுவுக்கும் அவரை அடையாளம் தெரிஞ்சுடுச்சுங்கறது அநியாயமாவது எப்படி என்றால் அதை ரகு நமக்குச் சொல்லாதிருப்பது! (ஆமாம், அது நமக்கு - இல்லை, இல்லை எனக்கு! - தேவையா?)

    3. என்ன ஒரு உரையாடல்... போலித்தனமில்லாத, செயற்கை உருகல்கள் இல்லாத, முகத்திலடிக்கும் இயல்பான உரையாடல்கள்.

    4. கோமதி அரசு மேடம் சொல்லியிருக்கும் இடத்தில் (பின்னணியில் கணினியில் ஹரிஹரனின் குரலோடு படித்துக் கொண்டிருந்தேன்!) என் கண்களும்.... வேணாம் விடுங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். இன்னும் சுருக்கமா சொன்னா நீங்க படிக்க சிரமப்படுவீங்களோனு தான் :-)

      நீக்கு
  4. "இல்லே.. இன்னிக்கே நான் ஒரு செக் கொடுத்திருக்கலாம்.. தோணாம போயிடுச்சே?!"

    "எனக்குத் தோணித்து. ஆனா பெரியவர் திரும்பி வந்தா பாத்துக்கலாம்ன்னு பேசாம இருந்திட்டேன்.."

    ரமா அவனை முறைத்தாள். "நீங்க சொல்றதும் சரிதான். ஆசாபாசம் நிறைஞ்ச வெத்து மனுஷங்க தானே நாமளும்?.. இப்படியே மனசைக் குழப்பிப்பானேன்?. அவர் திரும்ப வந்தா பாத்துக்கலாம்.."

    அடுத்த நாள் தான் அவர்களுக்கு அந்த ஆச்சரியம் காத்திருந்தது.

    வாசலில் வந்து நின்ற காடிலாக்கிலிருந்து வசதியான பளபளப்பு தெரிந்த ஒரு கூட்டத்தோடு பெரியவர் இறங்கியதை ரமா நம்ப முடியாமல் பார்த்தாள்.


    பதிலளிநீக்கு
  5. ஆயுசுக்கும் இதே போல் இருதலை கொள்ளி எறும்பு வாழ்க்கை எல்லோருக்குமேவா இல்லை மத்யமருக்கேயான சாபக்கேடா? ------

    அப்படிப் பார்த்தா எல்லாருமே யாரோதான்.. எல்லாருமே உறவுதான் சார். நீங்க நான் ரமா எல்லாருமே ஏதோ ஒரு வட்டத்தில் இணைஞ்சிருக்கறதுனால தான் இப்ப இப்படிச் சந்திக்கிறோம்...

    ஹ்யுமேனிடி இஸ் எ பிக் சர்கில், ஹ்யூமெனிசம் இஸ் இட்ஸ் சென்டர்"----

    -- இப்படி நிறைய முத்துக்கள். ஆனா, கதையின் சென்டர் பாயிண்ட் என்னவோ--

    "உங்க ரெண்டு பேருக்கு எதுக்கு பரிசு? நீங்கதான் ஒருத்தருக்கொருத்தர் பரிசு! கோடிப்பொன் கொடுத்தாலும் ஈடாகாத பரிசு! எப்பேற்கொத்த ராமசீதையாட்டம் இருக்கிங்க?! எத்தனை முனிவரும் தர்மாத்மாவும் ஆசீர்வாதம் செஞ்சாலும் இப்படியொரு பிணைப்பு கிடைக்குமா? வாழ்க்கையில இதைவிட பரிசு என்னய்யா வேண்டிக்கிடக்கு? ...."

    இதான்!..





    பதிலளிநீக்கு
  6. //இதைப் புரிஞ்சுக்காத எத்தனையோ தம்பதி சனியன்கள் வாழ்க்கையை நாசமாக்கிட்டுத் திரியறதை தினம் பாக்குறேன்.//
    rien ne pourrait être plus vrai que cela.
    nothing could be more true than this.
    அப்படின்னு நான் சொல்றப்போ இந்தக் கிழவி வர்றாள் .

    என்ன காலை வேளை லே முனு முணு த்திட்டு இருக்கேள்...

    இல்ல. இந்த அப்பாதுரை கதை...

    என்ன ஆச்சு அந்த பெரியவருக்கு...?

    அதெல்லாம் இருக்கட்டும். இங்கே பக்கத்திலே வா...

    ...எதுக்கு ....?
    சீ .. என்ன இந்த வயசிலே !!!!
    என்று சொல்லும்போதே
    கன்னத்தை துடைத்துக்கொண்டாள்.
    subbu thatha.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டத்தில் விட்டுப்போன கடைசி வரி.

      எழுந்துண்ட உடனே இந்தக் கதைய படிச்சு இருந்தா
      இவகிட்ட அனாவசியமா சண்டை போட்டு இருக்கமாட்டேன்
      என்று மனசு ஒரு ஓரமா சொல்லியது.

      subbu thatha

      நீக்கு
    2. brought a smile on.. அதான் :-)

      நீக்கு
  7. தில்லைஅகத்து துளசி கிட்ட சொல்லி ஒரு குறும்படமா எடுக்கச் சொல்லனும்.

    பெரியவர் ரோல் லே யக்யசாமி செல்லப்பா.
    ரகு ரோல் லே ஆவி,

    ரகுவாத்து மாமி ரோல் லே யாரு போடறது ??

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  8. கதையின் முதல் பகுதியை படித்த போது உங்களது வழக்கமான வீச்சு இல்லாத மாதிரியும் கதையின் கரு மிக சாதாரணமாக உள்ளதே என்றும் ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. அதனால் பின்னூட்டம் இடுவதற்கும் தயக்கமாக இருந்தது ஆனால் இரண்டாவது பாகத்திலும் கதையை முடித்த விதத்திலும் பின்னிட்டீங்க.

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொரு வரியையும் மிகவும் ரசித்து படித்தேன்.

    //எல்லாருமே யாரோதான்.. எல்லாருமே உறவுதான்//

    யோசிக்க வைக்கும் வார்த்தைகள்.

    முதல் பகுதி - ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இரண்டாம் பகுதி - இது தான் ஒரிஜினல் அப்பாதுரை. அசத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. மறவாமல் தொடர்ந்து படித்ததற்கும் பின்னூட்டங்களும் மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  11. உண்மையில் முதல் பகுதி இருக்கிறது என்பதை கவனிக்காமல்தான் படித்தேன். முதல் பகுதி தேவை இல்ல என்றே நினைக்கிறேன். இதுவே முழுமையானதாக உள்ளது. அட்டகாசமான எழுத்து நடை சார். பின்னீட்டிங்க .உரையாடல்ல கொஞ்சம் பாலகுமாரன் சாயல் தெரியறமாதிரி இருக்கு
    மொள்ளைக்கு அர்த்தம் தெரியவில்லை . ஊகிக்க முடிகிறது என்றாலும் உறுதிப் படுத்தபடுத்த முடியவில்லை

    பதிலளிநீக்கு
  12. படித்து முடித்த பின் வெகு நேரம் கதையே மனத்தில் ஓடிக்கொண்டிருந்தது.நிறைவு!

    பதிலளிநீக்கு
  13. கடைசிவரிக்கு அர்த்தம் தெரியவில்லை. பரவாயில்லை. கதை முழுவதும் ஓடிய எழுத்துகள் மனசை உருக்கிவிட்டன, ரமா அன்பு புத்திசாலி. காதலனை அணைக்கத் தெரிந்தவள். பெரியவர் வந்திருப்பாரோன்னு நினைத்தேன். வராவிட்டாலும் பரவாயில்லை கதை அருமை. மிக அருமை. நன்றி துரை.

    பதிலளிநீக்கு
  14. //கடைசிவரிக்கு அர்த்தம் தெரியவில்லை//
    எனக்கும்தான்.
    மொள்ளை என்றால் எதற்கும் உதவாதவன். நாட் பிட் பார் எனிதிங் .என்று இருக்குமோ என்னவோ ?

    இருந்தாலும் தொல்காப்பியம் நன்னூல் புத்தகங்களில் இந்த சொல் பயன் பட்டு இருக்கலாம், தேடி பார்க்கிறேன்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே.. தொல்காப்பியத்துல இருக்கும்

      நீக்கு
    2. தொல்காப்பியத்துல‌ மொள்ள (மாரி)னு கீதா? ஆஹா, அதாம்பா நம்ம மெட்ராஸ் டமிளு அத்தன பளசு. செம்மொளினா செம்மொளிதாம்பா.

      நீக்கு
  15. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா....

    பதிலளிநீக்கு
  16. A very happy new Year 2015 to you and all your family members,
    to all your esteemed fans, readers of your blog
    subbu thatha.
    www.subbuthatha72.blogspot.com.

    பதிலளிநீக்கு
  17. /சற்று யோசித்த ரகு’ அவர் யாருன்னு தெரியப்படுத்தினார்னு அர்த்தம்’/ அவர் யார். ?ஏதோ ஒரு மொள்ளையைப் பார்க்கச் சென்ற இன்னொரு மொள்ளையா.?முடிவை இப்படி யூகத்துக்கு விடுவதும் ஒரு யுக்திதானோ. ? புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்பாதுரை சார்.

    பதிலளிநீக்கு
  18. அவர் யாராக இருந்தாலென்ன என்றும் அரத்தம்?

    பதிலளிநீக்கு
  19. அவர் யாராக இருந்தால் என்ன! அருமையான புரிதல் கணவன், மனைவிக்குள் என்றால் அதை விட அழகாக அவர்களைப் புரிந்து கொண்ட பெரியவர்! கண்களைக் கலங்க வைத்த நிகழ்வு. உண்மை நிகழ்வு தானா? :)

    பதிலளிநீக்கு
  20. //எத்தனை முனிவரும் தர்மாத்மாவும் ஆசீர்வாதம் செஞ்சாலும் இப்படியொரு பிணைப்பு கிடைக்குமா? வாழ்க்கையில இதைவிட பரிசு என்னய்யா வேண்டிக்கிடக்கு? இதைப் புரிஞ்சுக்காத எத்தனையோ தம்பதி சனியன்கள் வாழ்க்கையை நாசமாக்கிட்டுத் திரியறதை தினம் பாக்குறேன். இப்படி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடக்குறீங்க, இதுதான் மகத்தான பரிசு, மகோன்னத பரிசு//

    இது தான் சத்தியம். நிதரிசனம், காணக் கிடைக்காதது.

    பதிலளிநீக்கு
  21. Dear Sir,
    உங்க ரெண்டு பேருக்கு எதுக்கு பரிசு? நீங்கதான் ஒருத்தருக்கொருத்தர் பரிசு! கோடிப்பொன் கொடுத்தாலும் ஈடாகாத பரிசு! எப்பேற்கொத்த ராமசீதையாட்டம் இருக்கிங்க?! எத்தனை முனிவரும் தர்மாத்மாவும் ஆசீர்வாதம் செஞ்சாலும் இப்படியொரு பிணைப்பு கிடைக்குமா? வாழ்க்கையில இதைவிட பரிசு என்னய்யா வேண்டிக்கிடக்கு? இதைப் புரிஞ்சுக்காத எத்தனையோ தம்பதி சனியன்கள் வாழ்க்கையை நாசமாக்கிட்டுத் திரியறதை தினம் பாக்குறேன். இப்படி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடக்குறீங்க, இதுதான் மகத்தான பரிசு, மகோன்னத பரிசு. ஞாபகம் வச்சுக்குங்க. பி குட்.
    Very True.
    As promised, you have finished this story. Very Nice one.
    These are the highlights of your story.

    பதிலளிநீக்கு
  22. துரை - இது நியாயமே இல்லை! அவர் யாருன்னு தெரியாம என்னைத் திண்டாட வெச்சுட்டீங்களே! மின்னஞ்சல் மூலமாகவாவது சொல்லிடுங்க! ப்ளீஸ்! (ஆனாலும் கதையை மிகவும் ரசித்தேன்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கோரிக்கை சூரி அவர்களின் கவனத்துக்கு விடப்படுகிறது.

      நீக்கு
    2. Did not kg gowthaman read my comment in the earlier chapter 1 of this wonderful story.?
      Having said that,
      let me add,
      that everyone of us,
      (me and a sir not excluded) (no offence meant)
      have to don the robe of this PERIYAVAR,
      someday during the remaining part of our lives,
      if it were to be His Dictum.

      VAKUTTHAN VAKUTHTHA VAKAI ALLAAN KODI
      THOKUTHTHAARKKUM THUYTHTHAL ARITHU.

      SUBBU THATHA.

      நீக்கு
    3. ஐயோ! சுப்புத் தாத்தா கொஞ்சநஞ்சம் தெளிந்திருந்ததையும் குழப்பி விட்டுட்டாரே! இப்போ நான் எங்கே போவேன்! ஈஸ்வரா!

      நீக்கு
    4. //சுப்புத் தாத்தா கொஞ்சநஞ்சம் தெளிந்திருந்ததையும் குழப்பி விட்டுட்டாரே!//

      நானா...!! குழப்பினேனா!!!

      நான் ஹெச். ஆர்.மேனேஜராக இருந்தபோது
      யூனியன் லீடர்ஸ் சொல்வாங்க...

      சார், அஞ்சு மணி நேரமா பேசினப் பறம் கூட நாங்க சொல்றதை நீங்க ஒத்துகிட்டீகளா இல்லையா அப்படின்னு தெரியல்லே. ரொம்பவே குழப்பிட்டீங்க சார்.

      அப்பவும் நான் இதையே தான் சொல்வேன்.. சொன்னேன்.
      As you so sow, so you reap.

      வகுத்தான் வகுத்த வழி அல்லார் கோடி
      தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

      பெரியவர் இப்ப பிளாட் பாரத்துலே இருக்கார் அப்படின்னா
      எல்லாமே பூர்வ ஜன்ம பயன். அஞ்சாம் இடம் பார்க்கணும்.

      செஞ்ச குற்றத்துக்கு சில சமயம் தண்டனை கிடைக்காது. செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்க நேரிடும்.

      அதெல்லாம் இருக்கட்டும். நீங்க , கௌதமன் சார், பாக்பான் படம் பாக்கலையோ?அமிதாப் பச்சன் நடிச்சது.

      அந்தக் கதை மாதிரி தான் இதுவும். அப்படியே அப்படின்னு இல்லாட்டாலும் ....

      இப்ப வால்யூஸ் அப்படின்னு ஒண்ணுமே லோகத்துலே கிடையாது.
      அப்பா அம்மா, தாத்தா பாட்டி, பந்தம், உறவு, எல்லாமே,
      காஸ்ட் பெனிபிட் அனாலிசிஸ் க்கு உட்பட்டது.

      இந்த மாதிரி கதை படிக்கும்போது மட்டும் அப்பப்ப கண் ஓரத்துலே கசியர மாதிரி ஒரு பீலிங் வரும். அதையும் இந்த காலத்து புள்ளைங்க சாமர்த்தியமா அடக்கிண்டு,
      சிவாஸ் ரீகல் இன்னொரு 200 மில்லி போட்டுண்டு, ஒரு அல்ப்ராக்ஸ் கூட போட்டுண்டு தூங்கிடுவாங்க.

      இதுதான் லோகம். இதுதான் இன்றைய நிலை.

      அது சரி. அந்த பெரியவர் யார் என்று கேட்டு இருக்கிறீர்கள் இல்லையா...!! மறந்தே போயிட்டேன்.

      யாராய் இருந்தால் என்ன?

      சுப்பு தாத்தா.

      நீக்கு
    5. அட்டகாசம்.

      /
      இப்ப வால்யூஸ் அப்படின்னு ஒண்ணுமே லோகத்துலே கிடையாது.
      அப்பா அம்மா, தாத்தா பாட்டி, பந்தம், உறவு, எல்லாமே,
      காஸ்ட் பெனிபிட் அனாலிசிஸ் க்கு உட்பட்டது.

      முன்பு கடமைக்காக இந்த உறவுகளின் நீட்சி சகித்துக்கொள்ளப் பட்டது்; இப்போது அந்த நிர்ப்பந்தமும் இல்லாததால் சிலருக்கு அநியாயமாகவும் சிலருக்கு இயல்பாகவும் தோன்றுகிறது.

      நீக்கு
  23. //...அவருடைய இன்றைய தேவை இருபது பவுன் தங்கம் இல்லைதான். அவருடைய இன்றைய தேவை ஒரு கடுகளவு சமூக அங்கீகாரம். ஒரு சின்ன வெற்றி. குளிருக்கு இதமா மூட்டைப்பூச்சி இல்லாத ஒரு போர்வை. சூடா ஒரு வாய் கஞ்சி. அப்பப்போ யாராவது சிந்துற எதிர்பார்ப்பில்லாத கனிவான புன்னகை.. தன் விழுதுகளின் பிடிப்பு.. ஒரு அரவணைப்பு.. சொல்லிட்டே போகலாம்.. //

    அது!

    பதிலளிநீக்கு
  24. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. கதை நல்லா இருந்தது. கதை ஃப்ளோ சூப்பர். ரெண்டு கதைக்கும் நடுவில இடைவெளி மாதிரி பெரிசா போச்சுதனால, - கதையின் முந்தைய பகுதியில் Ctrl-F செய்ய வேண்டியதாய்ப் போச்சு.:-)

    So kg gouthaman அவர்களே, தேடுங்கள் கண்டடைவீர்கள். ஏசப்பா.

    பதிலளிநீக்கு
  26. தக்கார் தகவிலார் என்பத வரவர்
    எச்சத்தால் காணப் படும்.

    ரகு, ரமா, பெரியவர் போன்ற கதை மாந்தர்களுக்கும்.

    கடைசியாய் வந்ததால் கண் கசிந்த இடமெல்லாம் சுட்டப் பட்டு விட்டன பின்னூட்டங்களில் .

    பதிலளிநீக்கு
  27. அவர் யார் என்று மட்டும் கோடிட்டாவது காட்டியிருக்கலாம்! நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  28. மிக அற்புதம்.
    அந்த பெரியவர் யார் என்று சொல்லாமல் விட்டதே உங்க கதையின் வெற்றி என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு