2014/07/16

ஆஸ்மா கிணறு


    நான் யார்?

நான் ஒரு வாசி. வாசி என்றால்? இருப்பதால் வாசியா? இயங்குவதால் வாசியா? குழப்பமாக இல்லை? பாருங்களேன். நாம் உயிராக, பிறவியாக அல்லது ஆன்மாவாக, எது வசதியோ எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு உடலுக்குள் இருப்பதால் உடல்வாசியாகிறோமா? உடல் ஒரு வீட்டுக்குள் இருப்பதால் வீட்டுவாசி? வீடு ஒரு ஊருக்குள் இருப்பதால் ஊர்வாசி.. இப்படி எத்தனை அடுக்குகள் போவது? அடுக்குவாசி? ஹ்ம். எதிலோ எங்கோ வசிப்பதால் மட்டுமே வாசியா? எனில் நான் ஒரு கிணற்று வாசி. பெரிய அகலமான ஆழமான கிணற்று வாசி. வாழ்க்கை, உலகம், அண்டம் எல்லாமே ஒரு கிணறு என்ற வேதாந்தப் பார்வையில் சொல்லவில்லை. உறவு, நெறி, ஒழுக்கம் எல்லாமே ஒரு கிணறு என்ற சித்தாந்தப் பார்வையிலும் சொல்லவில்லை. இது அசல் கிணறு. பிரம்மாண்டமான ஆழமான கிணறு. சுவர் இருக்கிறது. நீர் இருக்கிறது. இங்கிருந்து மேலே பார்த்தால் அகண்ட வானத்துண்டு தெரிகிறது. எனக்கென்னவோ இது கிணறு போலவே தெரிகிறது. எங்கோ மேலிருந்து சிறிய கீற்றாக ஒளி. அவ்வப்போது வந்து விழுந்து மறையும் நிழல் மின்னல். நான் நிச்சயமாக கிணற்றில் வசிக்கும் ஏதோ ஒரு இனம். எனில் நான் யார்? நீரா? நீரில் மிதக்கும் காட்டுக் கொடியா? கொடி படரும் சுவரா? சுவரிடுக்குத் தவளையா? நீர் மேல் படிந்த கறையா? சுவரோரம் படிந்த பாசியா? நிரவியிருக்கும் தூசியா? தூசியின் மணமா? ஒருவேளை.. எந்த வகை வாசி என்பதை விட, நான் வசிப்பது எந்த வகைக் கிணறு என்பது பொருத்தமான கேள்வியோ? எனில் எந்த வகைக் கிணறு? நீர் இருப்பதால் இதைக் கிணறு என்கிறார்களா? எனக்கென்னவோ இங்கு தேங்கியிருக்கும் நீரை விட, காற்றே அதிகம் என்று தோன்றுகிறது. காற்று தேங்கிய இடத்தைக் கிணறு என்பதில்லை - நீர் இருந்ததாலோ இருப்பதாலோ மட்டுமே இதைக் கிணறு என்கிறார்களோ? புரிந்தாற் போலிருக்கிறது. என்ன புரிந்தது என்பது மட்டும் புரியவில்லை. என்னைப் போல இன்னும் நிறைய வாசிகள் புரிந்து கொள்ளும் முயற்சியில் இருப்பதை உணர்கிறேன் ஆனால் என்னை அவர்களோ அவர்களை நானோ அடையாளம் காண முடியாததில் வியக்கிறேன். அருகில் இருப்பது திருநாவுக்கரசர் என்னும் பட்டாபி என்னும் நம்பியார் என்னும் எழிலரசியாக இருக்கும் சாத்தியத்தில், சாத்தியம் கடந்த வியப்பும் தொக்கி நிற்பது எத்தகைய முரண்?

நான் யார் என்ற கேள்விக்கே வருகிறேன். திரும்பத் திரும்பம்ருதிரும்பம்ருதிரும்ப. இதோ இதே இடத்தில் இங்கே இப்படியே இருந்தபடி காலங்காலமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் இதே கேள்வி. எனில் நான் வசிப்பது காலக்கிணறாக இருக்கவேண்டும். அல்லது கேள்விக்கிணறோ? வற்றாது கேட்டுக் கொண்டிருக்கிறேனே?

ஷ்! தொலைவில் காலடியோசை.. பேச்சுக்குரல்.

"யப்பா சீனூ.."

"என்னண்ணே?"

"அது யாருப்பா உனக்கு முன்னால போவுறது?"

"உஷாண்ணே"

"தெரியுதுபா.. நாங்கள்லாம் ஓட்டலுக்குப் போறப்ப நைசா நழுவுறியே? அதுவும் வயசுப்பொண்ணைக் கூட்டிட்டு.."

"ஸ்ஸு.. அண்ணே.. உஷா நான் கட்டிக்கப் போறவதாண்ணே.. சும்மா இருங்கண்ணே.. இப்படிக் கூவி ஊரைக் கூட்டாதீங்க.. பேசாத வேன்லயே போய் உக்காருங்க.."

"வேன்ல யாருமில்லபா.. எல்லாம் ஓட்டலுக்குள்ள போயிட்டாங்க.. நாம ஒண்ணா வந்தது ஊர் சுத்திப் பார்க்க இப்படி தனியா நழுவ இல்லடே."

"அண்ணே.. போங்கண்ணே.. நாங்களும் பத்து நிமிசத்துல வந்துர்றோம்.. அதா பாருங்கண்ணே.. ஏதோ கிணறு போலருக்குது.. எவ்வளவு பெரிய கிணறு பாருங்கண்ணே.."

"அது ஆஸ்மா கிணறுடா.."

"ஆஸ்மா கிணறா? என்னண்ணே வாணம் விடுறீங்க?"

"ஆமடா. இங்க்லிஸ்காரன் காலத்துக்கு முன்னாலந்து இருக்குதுனு சொல்வாங்க. அந்தத் தண்ணியக் குடிச்சா ஆஸ்மா வியாதி வரும்னு ஊர்ல சொல்லிக் கேட்டிருக்கேன்.. எதுக்குடா வியாதின்னு அந்தப் பக்கமே போவலே.. இப்ப நாப்பது வருசம் கழிச்சு வந்தா ஊருக்கு கிணறு அப்படியே இருக்குது பாரேன்.."

"சரிண்ணே.. பெரிய கிணறுனா அதுல நிறைய வசதி இருக்குண்ணே. நாங்க கிணத்துக்கு அந்தாண்டையா ஒதுங்கிட்டு வந்துர்றோம்.. ஜல்தியா ஒரு ஜல்சாண்ணே.."

"ஜல்சா கில்மானு புதுசு புதுசா என்னவோ சொல்றீங்கடா.. கொஞ்சிட்டு வரேன்னு அழகா தமிழ்ல சொன்னா என்னா? சரி சரி சீக்கிரம் வந்து தொலைங்க.. மத்தவங்க வரப்ப துணியில்லாம நின்னிங்கன்னா அசிங்கமாயிரும்.. வெளியிலயே கொஞ்சுங்க புரியுதா? கிணத்துல இறங்கிறாதிங்க.. நான் தாண்டே டூர் கேப்டன்.. உங்களையெல்லாம் பொறுப்பா ஊர்ல சேக்க வேணாம்? எனக்கு நீச்சல் வேறே தெரியாதுடா.. ஏம்மா நீ தான் சொன்னா கேக்ககூடாதா? ஆம்பிளக்கு சமமா இறங்குறியே.. என்னடி பொண்ணே சிரிக்கிறே..? கல்யாணம் கட்டி ரூம் போட்டுக் கொஞ்சக்கூடாதா? சரி.. சீக்கிரம் வந்து தொலைங்க"

"வந்துர்றோம் பாலண்ணா".

.
.
.


அமைதி. அமை. அ.

யாரோ நெருங்கி வருகிறார் போல் அமைதியழிக்கும் ஓசை. மெள்ள அதிகரிக்கிறது. அலை போல் அங்கே இங்கே தாவுகிறது.

"உஷா.. நில்லு.. கிணத்தைச் சுத்தி ஓடாதே.. சொன்னாக் கேளு.."

"ஓடி வந்து என்னைப் பிடி பாக்கலாம்.. கையைப் பிடிச்சா பெறவு கட்டிப் பிடிக்கலாம்"

"இத்தாம் பெரிய கிணத்த சுத்தி ஓடிப் பிடிச்சாடவா வந்தோம்? மத்தவங்க வரதுக்குள்ளாற ஒரு தடவை என் நாக்கோட சேத்தாப்புல ஒரு கிஸ் தருவியா?"

"ஐ.. என் மூஞ்சிலயே முழிக்காதடி முண்டைனு வாய்ல நரம்பில்லாம பேசிட்டு.. இப்ப என்னவாம்?"

"நாக்குல நரம்பில்லாமனு சொல்லுடி. சரி, அதான் எத்தனை மன்னிப்பு கேட்டேன்?! சத்தியமா இனி உன் மேலே சந்தேகமே வராதுடி. என்னை மன்னிச்சுரு. உன் மேலே எனக்கிருந்த ஆசையும் பிடிப்பும் அப்படி சந்தேகமா மாறிடுச்சு. சத்தியமா சொல்றேன். உன்னைப் புரிஞ்சுக்காத நான் குருடன். தரித்திரம். கேனக்.."

"சரி சரி. இன்னொரு தடவை அப்படி எதுனா சந்தேகப்பட்டு கன்னாபின்னானு பேசினா இந்த மாதிரி கிணத்துல.."

"ஐயோ வேணாம்டி.. குதிச்சு வக்காதே.. நான் செஞ்சது தப்பு"

"ஐ.. நான் ஏன் குதிக்கணும்? உன்னைத் தள்ளிடுவேன்னு சொல்ல வந்தேன்.. ஆளைப்பாரு! என்னை என்ன இளிச்சவாயினு நினைச்சியா? நீ இல்லாம என்னால இருக்க முடியும் தெரியும்ல?"

"தெரியும்டி என் ராணி. உன்னை சந்தேகப்பட்ட எனக்கு உன் மூஞ்சியைப் பாக்கவே அருகதையில்லே.."

"அது.."

"அப்ப வேறே எதையாவது பாக்குறனே..?"

"ச்சீய்"

"ஓடாதடி. கிட்ட வாயேன்.. கிணத்தை சுத்தி ஓடுறப்ப இப்படி குலுங்குறியேடி.. தாங்கலியே.. என்னைக் கொஞ்சம் கட்டிக்கயேன்"

"ச்சீபே.. அதெல்லாம் மாட்டேன்"

"உஷா.. இங்கருந்து பார்த்தா இந்தக் கிணறு எவ்ளோ பெரிசா இருக்குது பாரேன்.. இங்கே வா.. கிட்ட வா"

"மாட்டேன்றன்ல? வந்தா நீ சும்மா இருப்பியா? எதுனா செய்வே.. அங்க இங்கே தொடுவே.. தடவுரேன்னு தொந்தரவு செய்வே.. அப்புறம் எனக்கு மாரெல்லாம் முறுக்கிக்கிட்டு பேஜாராயிடும்.."

"ஐயே.. என்னவோ இதெல்லாம் உனக்குப் பிடிக்காதது போல பேசுறே. உன்னைத் தொட்டா எனக்கு மட்டும் எல்லாம் அடங்கியா இருக்கப் போவுது? கிளப்பிவிட்டுக் கிளம்புற ஆளாச்சே நீ? இப்ப நீ பக்கத்துல வரலின்னா நான் கிணத்துக்குள்ள குதிச்சுருவேன்.. குதிச்சுரவா?"

"ஏய்.. இரிரு.. வேணாம் வரேன்.. அட.. அப்படி எட்டிப்பாக்காதே.. உள்ளே விழுந்துறப் போறே.."

"ஏன்? விழுந்தா என்னைத் தூக்கிட மாட்டியா?"

"எனக்கு நீச்சல் தெரியாது"

"கவலைப்படாதே.. நீ விழுந்தாலும் நான் காப்பாத்திருவேன்.. உஷா.. எத்தனை ஆழத்துல தண்ணி இருக்குது பாரேன்.. ஒரே பாசி.. காட்டுச்செடி.. இருந்தாலும் அழகா இருக்குது.. சிவப்புலயும் மஞ்சள்லயும் சின்னச் சின்னப் பூவா எத்தனை அழகா இருக்குது பாரேன்.. உனக்காகப் பறிச்சுட்டு வரவா?"

"வேணாம் சீனு.. லூசாட்டம் எதுனா செய்யாதே.. அப்படிக் கிணத்துள்ள குனியாதே.. ப்லீஸ்.. இது விளையாட்டுல்ல".

சட்டென்று மேலே பார்த்தேன். குனிந்து பார்த்துக் கொண்டிருந்த உருவத்தை.

"சீனூ.. ஏய்.. உள்ளே குனியாதன்னு சொன்னன்ல?.."

"சீனு.. அதான் பக்கத்துல வந்துட்டன்ல.. சும்மா கிணத்தைப் பாத்துட்டா இருக்கப் போறே?.. சீனு.. சீனா... என்ன ஆச்சு? ஏன் என்னை என்னவோ போல பாக்குறே?.."

"சீனு.. என்னாச்சு? ஏன் இப்படி நடுங்குறே? எனக்கு பயமாயிருக்கு.. வா.. போயிரலாம்.."

"சீனு.. சீனூ.. ஐயோ.. ஐயோ.. பேச்சு மூச்சு காணோமே.. யாராவது ஓடி வாங்களேன்.. பாலண்ணே.. சீனுவை பாருங்கண்ணே.. பொணமாட்டம் விழுந்துட்டான்.. ஐயோ.. பாலண்ணே.. சித்ரா.. சுப்பு.. யாராவது வாங்களேன்.. ஹெல்ப்! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! சீனு.. சீனு.. எந்திரிடா.. விளையாடேதாடா.. எந்திரிடா.. ப்லீஸ் எந்திரிடா.."

எழுந்தேன்.

என் பெயர் சீனுவா? நன்று.

எத்தனை காலமாக நான் யாரென்று தேடிக்கொண்டிருந்தேன்! இதோ இவன் தான் நானா? இரண்டு கைகள் இரண்டு கால்கள் சிறிய தொப்பை முடியடர்ந்த மார்பு என்ற அடையாளங்களுடன் கூடிய கண்ணாடியணிந்த பரட்டைத்தலை ஆணா நான்? நன்று. தொடர் கேள்வி கேட்காதிருப்பது மேலும் நன்று.

சுற்றிலும் பார்த்தேன். சேரன் கிணறு! சட்டென்று அடையாளம் தெரிந்தது. ஆ! இங்கே எப்படி வந்தேன்? ஷ்ஷ்ஷ்ஷு. இனிமேல் கேள்விகள் கேட்கப் போவதில்லை. உடனடியாக விலக எண்ணி நடந்தேன்.

போகிற போக்கில் ஒரே ஒரு கேள்வி.

என்னைத் தடுத்து நிறுத்தி, "தடிமாடு.. நான் எப்படி நடுங்கிட்டேன் தெரியுமா? இப்படியா பயங்காட்டுவாங்க? நீ செத்துட்டேன்னு நினைச்சேண்டா.." என்று என் மார்பில் வேகமாகக் குத்தும் இந்த இளம்பெண் யார்?

ஏதாவது பதில் சொல்லலாமென்றால் குரலே எழும்பவில்லை. ஏனோ மிகுந்த முயற்சியிலும் வெறும் கனைப்பு மட்டும் ஒலிக்கிறது. தவித்தேன்.

"என்ன குதிரையாட்டம் கனைக்கிறே? ஏண்டா அப்படி செஞ்சே? கேக்குறேன்ல? எதுனா சொல்லேன்?" என்று என் முகத்தை நேராகப் பார்த்தாள்.

வேண்டாம் பெண்ணே. என்னை நேராகப் பார்க்காதே.

"ரொம்ப மோசம்டா நீ. இப்படிக் கலங்கடிச்சுட்டல்ல? சீ.." என்னைக் கட்டிக் கொண்டாள்.

வேண்டாம் பெண்ணே. என்னைத் தொடாதே.

நடந்தேன்.

இருவர் என்னை நோக்கி ஓடி வந்தார்கள்.

"டேய் சீனு.. என்னடா கூச்சல்? காப்பாத்துங்க காப்பாத்துங்கனு உஷா கூவினாப்புல இருந்துச்சே? என்னாச்சு? எங்க அவ?"

வேகமாக நடந்தேன். நான் இங்கிருந்து சடுதியில் விலக வேண்டும் அன்பர்களே. பேச்சு வராமல் கலங்கினேன்.

"டேய்.. சீனு.. எங்கடா போறே? உஷா எங்கடா?"

நின்றேன். என்னை மடக்கி நின்றவர்களைப் பார்த்தேன். தயங்கினேன். பேச முயன்றால் ஏதோ ஒலி வருகிறதே தவிர பேச்சைக் காணோம். என் சிந்தனைகளுக்கு சொல் வடிவம் கொடுக்க முடியாமல் திணறினேன். கிணற்றை நோக்கிய என் பார்வையைத் தொடர்ந்தார்கள். தடுமாறினேன். தலை சுற்றியது.

"பாலண்ணே.. அதா பாருங்கண்ணே.. கால் மட்டும் தெரியுறாப்புல கிணத்தோரமா கீழே விழுந்து கிடக்கே, அது உஷாவா? இவனைக் கவனிங்கண்ணே. இவனும் தள்ளாடுறான்.. டேய்.. என்னாடா ஆச்சு?"

"சுப்பு.. நீ இவங்கூட இரு.. இதா.. அவளைப் பாத்துட்டு வரேன்". பாலண்ணே எனும் சற்றே முதியவர் கிணற்றை நோக்கி ஓடினார்.

அவர் சற்று விலகியதும் சுப்பு என்னைப் பார்த்தான். "என்னடா செஞ்சே அவளை? கொன்னுட்டியா? அவ மேலே சந்தேகப் பட்டுட்டிருந்தியே? கொலை செய்யப் போறதா சொன்னப்ப விளையாட்டுன்னு நினைச்சேன்.. அவளைப் போய் சந்தேகப்பட்டியே? எல்லாத்தியும் மறந்து ஒண்ணா சேந்துட்டதா சொன்னப்ப நம்பினமேடா. துரோகி. கொலை செஞ்சுட்டு நிக்கிறியே? நல்லா இருப்பியாடா?"

"நான்.." அதற்கு மேல் குரலோ பேச்சோ வரவில்லை. காத்திருந்து காத்திருந்து கிடைத்த அடையாளத்தினால் சரளமாகப் பேச முடியாது என்ற ஏமாற்றத்தின் துவக்கம் உறுத்தியது.

"கேக்குறன்ல.. சொல்லுடா.. சந்தேகப்படுறதுக்கு அளவில்லியாடா? கேக்குறன்ல? சொல்லுடா. என்னைப் பாத்து சொல்லுடா.. அவளைக் கொலை செஞ்சியாடா?"

வேண்டாம் சுப்பு. என்னைப் பார்ப்பது தப்பு.

"படுபாவி. உண்மைய சொல்லுடா. உன்னை இங்கியே அடிச்சுக் கொன்னுறுவேன்". என்னைத் தள்ளினான்.

வேண்டாம் சுப்பு. என்னைத் தொடுவது தப்பு.

"டேய்.. டேய்.. எங்கடா போறே? சீனூ.. நில்லுடா" பின்னால் குரல் கேட்க நின்றேன். அருகில் வந்த பாலண்ணே என்னைப் பார்த்தார். கீழே கிடந்தவனைப் பார்த்தார்.

"என்னடா ஆச்சு சுப்புவுக்கு?"

"தெரீ..ய..ல". என் குரல் எனக்கு வியப்பாக இருந்தது.

"தெரியலியா? வாயெல்லாம் கக்கி விழுந்து கிடக்கான்.. என்னாச்சுடா.. என்னா செஞ்சே?"

"நான் எ.து.வு.ம் செ.ய்.ய.லே. அ.வ.ன் எ.ன்.னை.த் தொ.ட்.டா.ன்"

இதற்குள் இன்னும் சிலர் அங்கே வந்தனர். பாலண்ணே கத்தினார். "டேய்.. ரவி ரம்யா.. போலீஸைக் கூப்பிடுங்க.. ஆம்புலன்ஸை கூப்பிடுங்க.." என்று இரைய அவர்கள் அருகே இருந்த கட்டிடம் நோக்கி விரைந்தனர். "இவன் வேறே ஸ்லோ மோசன்ல பேசிட்டு நிக்கறான்" என்றார் என்னைப் பார்த்து. "என்னடா சொல்லுறே சீனு? தொட்டா இப்படி நுரை கக்கி விழுவானா? ஆமா நீ ஏன் ஒரு மாதிரி பாத்துட்டு நிக்குறே? அந்தக் கிணத்துல இறங்கி தண்ணியை கிண்ணியை குடிச்சிங்களா?"

"தொடாதேனு சொன்னாலும் கேட்காம.." என்றேன். என் பேச்சு வேகத்தின் முன்னேற்றம் எனக்குப் பிடித்திருந்தது.

"சரி சரி.. என் பின்னால வா.. ஒரு கை குடு. இந்தப் பொண்ணை அங்கிருந்து நவத்துவோம். கிணத்துல விழுந்துருவா போலிருக்கு. உசிர் போயிட்டாப்ல இருக்குதேடா.. இதென்ன திருகுவலியோ" என்றபடி கிணற்றுக்கு விரைந்தார்.

நின்றேன்.

"பின்னால வானு சொல்றேன்ல? சப்பாணியாட்டம் நிக்காதடா.. கூட வா"

சென்றேன்.

"அது ஆஸ்மா கிணறுனு சொன்னேன்ல? கிட்டே போவாதீங்கன்னு சொன்னேன்ல.." புலம்பிக் கொண்டே நடந்தார்.

"ஆத்மா கிணறு". அட, என் பேச்சு தெளிவாகிறதே!

"என்ன?"

"ஆத்மா கிணறு. சேரர் கட்டின கிணறு"

"இவரு கண்டாரு.. டேய்.. நான் பக்கத்தூர்ல பொறந்து வளந்தவன்.. ஆத்மா கிணறாம்.."

"ஆமாம்.. கிராமமெல்லாம் செத்துட்டிருந்தாங்க. திடீர்னு தொத்து வியாதி போல பரவி பதினேழு கிராம எல்லைவரை செத்துட்டிருந்தாங்க. அரச வைத்தியரும் ஜோசியரும் இதை பாவஜென்ம வியாதினு சொல்லி செத்தவங்களை இந்தக் கிணத்துல எறியச் சொன்னாங்க. ஆனா வியாதி தணியலே. கிணத்துல பாவ ஆத்மாக்கள் இருக்குறதால முகத்தை மூடிக்கிட்டு கிணத்துல பிணங்களை எறிய உத்தரவு போட்டாங்க. அப்படித் தவறிப் பாத்தவங்களை கிணத்துல இருந்த பாவாத்மாக்கள் தொத்திக்கிட்டு வந்து மறுபடி வியாதியா பரவுதுனு.. ஊர்ல இருந்த மத்தவங்களையும் கொன்னுட சொல்லி உத்தரவு போட்டாங்க...எல்லாரையும் கிணத்துல தள்ளி மொத்தமா கொளுத்தி.."

"டேய் என்னடா கதை வுடுறே?" என்ற பாலண்ணா நின்றார். "டேய்.. உன் ஸ்லோ மோசன் என்னாச்சு? சரளமா பேசுறியே? இதெல்லாம் உனக்கெப்படிரா தெரியும்?" என்று என்னைப் பார்த்தார். "ஆமா.. ஏன் ஒரு மாதிரி நிக்குறே? உண்மையை சொல்லுடா.. இவளை எதுவும் செய்யலியே? இவ செத்துக் கிடக்கா. விபத்தா இருந்தாலும் எதுவா இருந்தாலும் போலீஸ் வரதுக்குள்ளாற உண்மையை சொல்லு.. அங்கே அவன் வேறே விழுந்து கிடக்கான்.. லூசாட்டம் உளறாம உண்மையைச் சொல்லுடே" என்று என் நேரெதிரே நின்று முறைத்தார்.

வேண்டாம் பாலண்ணே. என்னைப் பார்க்காதீங்க.

"கேக்குறன்ல.. ஆத்மா கிணறுனு உனக்கெப்படி தெரியும்? யாருடே நீ? அறைஞ்சா முகறை பேந்துக்கும்.. சொல்லுடா"

வேண்டாம் பாலண்ணே. என்னைத் தொடாதீங்க.

ஊருக்குள் நடந்தேன்.




குறிப்பு [-]

இக்கதையின் கரு, ரே ப்ரேட்பரி எழுதி 1949ல் வெளியான 'The one who waits' எனும் சிறுகதை. அசை போட்டுத் தமிழில் தழுவியதில் ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

கொசுறு:
கதையின் சுவாரசியம் தொட்டு எழுத்துக்களை உருக்களாக்கும் வித்தை 1940களில் ப்ரேட்பரி அறிமுகப்படுத்தியது. அதற்குப் பிறகு எத்தனையோ நகல்கள். என்னைப் போல்.

இன்னும் சில ப்ரேட்பரி கதைகள், என் எழுத்தில்:
சிவப்பு வட்டம் | (The last night of the world)
பரணறையில் நன்னாரி மணம் | (A scent of sarasparilla)
மனதிற்கினிய மேரி டீச்சர் | (A story of love)
மகிழ்ச்சி எந்திரம் | (The happiness machine)

19 கருத்துகள்:

  1. தழுவல்ன்னா ஒரு தளை வந்திடுது போல.. இல்லை, தழுவலும் சுயமும் கலக்கும் பொழுது அதுவுமில்லாம இதுவும் இல்லாமா வேறெண்ணா காட்சி தருதோ..

    சுத்த சுயம்பிரகாச சுயம் தான் சுகம். அதில் இருக்கும் care free எதிலுமில்லை. இல்லையா?..

    பதிலளிநீக்கு
  2. அங்கங்கு திருப்பங்கள் சுவாரஸ்யம் + திக் திக்...!

    பதிலளிநீக்கு
  3. விபரீதக்கதை எனத் தலைப்பிட்டது
    வெகு வெகுப் பொருத்தம்
    ஆமானுஷ்யம் கூட ஒரு ஆனந்தம் தான்
    இல்லையா.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    பதிலளிநீக்கு
  4. தொடருமா? முதல் பத்தி படிக்கிறச்சேயே புரிஞ்சாலும் அப்புறம் நடந்தவை அமாநுஷ்யத்தின் உச்சம். முதல் பத்தியில் லா.ச.ரா.வை நினைவூட்டி விட்டீர்கள். ஆத்மாவைப் போய் உலுக்கி எடுக்கும் எழுத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.
      அவ்வளவு தான் கதை. ப்ரேட்பரி எழுதிய அசல் கதையில் ஆத்மாவுக்குத் திடீரென்று நல்லெண்ணம் உதித்து தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மறுபடி கிணற்றிலேயே விழுந்துவிடும். தமிழனாச்சே.. எனக்கு அதெல்லாம் தோணுமா? தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுக்கறது சுவாரசியமாவும் இயல்பாவும் தோணிச்சு. முடிவை மாத்திட்டேன்.

      நீக்கு
  5. ஊருக்குள் போய் என்ன நடக்குமோனு கவலையா இருக்கு! :)

    பதிலளிநீக்கு
  6. நான் அதுவா இல்லை, இதுவா இல்லை எதுவோ இல்லை. ஒருகுழப்பவாசி என்றே தோன்றுகிறது. வித்தியாசமான தொடக்கமாயிருக்கிறதே என்று படிக்கத் துவங்கினால் வழக்கம் போல் விபரீதமாகத்தான் போகிறது.

    பதிலளிநீக்கு
  7. முதல் பத்தியிலேயே சுழன்று கொண்டிருந்த புத்தியை இடறி கிணற்று மேட்டில் தள்ளி, வாயு வேகத்தில் பறக்க வைத்து விடுகிற உங்க வீச்சு...! எத்தனை எத்தனை யுக்திகள் இக்கதை சொல்லிக்குள்...!

    பதிலளிநீக்கு
  8. வாழ்க்கை, உலகம், அண்டம் எல்லாமே ஒரு கிணறு என்ற வேதாந்தப் பார்வையில் சொல்லவில்லை. உறவு, நெறி, ஒழுக்கம் எல்லாமே ஒரு கிணறு என்ற சித்தாந்தப் பார்வையிலும் சொல்லவில்லை.//

    நான் யார்? நீரா? நீரில் மிதக்கும் காட்டுக் கொடியா? கொடி படரும் சுவரா? சுவரிடுக்குத் தவளையா? நீர் மேல் படிந்த கறையா? சுவரோரம் படிந்த பாசியா? நிரவியிருக்கும் தூசியா? தூசியின் மணமா? //

    தியானத்தில் மட்டுமல்ல... எழுத்திலும் அதை வாசிப்பிலும் கூட கைவருமோ ஆல்ஃபா நிலை...?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க.
      நடைமுறையில் எத்தனையோ இந்தியர்கள் (பாமரர்களும் திணிக்கப்பட்ட திருமணத்தில் உழலும் பல பெண்களும்) ஆல்பா நிலையில் இயங்குவதாகவே நினைக்கிறேன். அதனால் தான் அவர்களால் அவ்வப்போது சிரிக்கவோ ரசிக்கவோ முடிகிறது என்பது என் கருத்து.

      நீக்கு
  9. அப்பதுரை அவர்களே! "நான் இருப்பதால் வசியா ?இயங்குவதால் வாசியா ?" ! நினவு வருகிறது ! நான் இருப்பதால்மனிதனா ? இல்லை மனிதனாக இருப்பதால் இருக்கிறேனா ? மார்க்ஸ் கேட்பார் ! அங்கிருந்து அமானுஷ்யத்திற்கு போய் விட்டீர்கள் ! ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மார்க்ஸை விட தேகார்ட் சொன்னது எனக்குப் பிடிக்கும் சார்.

      நீக்கு
    2. ஐ திங்க் ஐ ஆம்
      என்பதற்கும்
      ஐ ஆம் ஐ திங்
      என்பதற்கும் இடையே உள்ள தூரத்தைக்
      கடப்பதை விட ,

      //நீ விழுந்தாலும் நான் காப்பாத்திருவேன்.. /

      என்ற சொற்களின் ஆழத்தைப் புரிந்துகொள்வதை விட,

      அந்த "சேரன் கிணறு" @ ஆஸ்மா கிணறு !!
      ஆமா... அதில் யுக யுகமா தன்னையும் அறியாம விழுந்து கொண்டே
      இருக்கும்,

      திருநாவுக்கரசர், @பட்டாபி, @நம்பியார் , @எழிலரசி
      !!!
      மன நிலைகளைப் புரிவது எளிதாக இருக்குமோ ??

      அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
      யோவ் !!
      அதெல்லாம் குப்பை.
      யதார்த்த வாழ்க்கைக்கு தேவையில்லாத ட்ராஷ்.

      எதுக்கு உனக்கு இந்த விசாரம் எல்லாம் !!

      அந்த உஷா எழுந்துகிச்சு அப்படின்னா
      எனக்கு ஒரு எஸ். எம்.எஸ். அனுப்பு.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
    3. ஐ திங்க் ஐ ஆம் என்பதற்கும் ஐ ஆம் ஐ திங் என்பதற்கும் இடையே உள்ள தூரம்... ரொம்ப யோசிக்க வைக்கிறதே. இத்தனை சுலபமாகத் தடுக்கி விழ முடியுமா!!

      ஹிஹி.. நம்ம கவலை நமக்கு. உஷா எந்திரிச்சா எல்லாருமே விசிலடிக்கலாம்.

      நீக்கு
  10. யுகங்களைக் கடந்த ஆத்மாவா? இவ்வளவு எளிதாக உடல் புக முடியுமா? சுவாரஸ்ய அமானுஷ்யம்!

    பதிலளிநீக்கு
  11. //இருப்பதால் வாசியா? இயங்குவதால் வாசியா?//

    அற்புதம், அப்பாதுரை. அங்கங்கு நசிகேத வெண்பாவை நினைவூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  12. இருப்பதால் வாசியா? இயங்குவதால் வாசியா?//
    One can visualize the first as ANATOMICAL EXISTENCE, whereas the second one could mean PHYSIOLOGICAL EXISTENCE.
    Without physiological activity, the earlier one, that is pure existence per se is vegetative existence, which can never substantiate the predicate IS.
    If one IS, that means that one functions.
    The whole question therefore has to be revisited and redefined .
    One there is little function, you do not say that the person IS.
    We could have said, the person WAS.
    So, existentialism leads to a process of thought which means the uninterrupted brain activity.

    Again, one can never define in physical terms the process of brain activity .
    For more brain storming, in this direction, you may look at or persuade your tribe to accept the challenge at
    http://gracevine.christiantoday.com/video/1-million-dollar-prize-for-a-scientific-explanation-for-the-biological-basis-of-an-idea-1877
    subbu thatha

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்பதாலும் இயங்குவதாலும் வாசி - என் கணிப்பில்.
      existentialism leads to existentialism. circular.

      நீக்கு