2008/10/05

சந்திரிகையின் கதை

பூத்தூரிகையிலிருந்து:


முன் கதை (1)



பொக்கிஷக் கதை


இரண்டாம் அத்தியாயம்: விசாலாட்சிக்கு ஜீ. சுப்பிரமணிய அய்யர் செய்த உதவி.



சென்ற அத்தியாயத்தில் கூறிய செய்திகள் நிகழ்ந்து மூன்று வருடங்களாயின. 1904-ஆம் வருடத்தின் இறுதி நடைபெற்றது. அப்பொழுது சென்னைப் பட்டணத்தில் 'சுதேசமித்திரன்' பத்திராதிபராகிய ஜீ.சுப்பிரமணிய அய்யர் சில தினங்களுக்கப்பால் பம்பாயில் நடைபெறப் போகிற 'காங்கிரஸ' என்ற பாரத ஜன சபைக்கொரு பிரதிநிதியாகச் செல்ல வேண்டுமென்ற கருத்துடன் யாத்திரைக்கு வேண்டிய உடுப்புகள் தின்பண்டங்கள் முதலியன தயார் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில் ஜீ.சுப்பிரமணிய அய்யர் மகா கீர்த்தி பெற்று விளங்கினார். அவருக்குக் கொடிய ரோகமொன்றினால் உடம்பெல்லாம் முகமெல்லாம் சிதைந்து முள்சிரங்குகள் புறப்பட்டிருந்தன. இருந்தாலும் நிகரற்ற மனோ தைரியத்துடன் அவர் தேசப் பொதுக் காரியங்களை நடத்தி வந்தார். மேற்கூறிய 1904 டிசம்பர் மாதத்திடையே ஒரு நாள் காலையில் அவர் தம் வீட்டு மேடையின் மேல் தம்முடைய விஸ்தாரமான புத்தகசாலையினருகே ஒரு சாய் நாற்காலியின் மீது சாய்ந்து கொண்டு பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார்.

அவர் முன்னே ஒரு சுமங்கலிப் பெண், அவருடைய இளைய மகள், ஒரு பிரமாண்டமான ஊறுகாய்ப் பரணியைக் கொண்டு வைத்தாள்.

"இதில் என்னம்மா வைத்திருக்கிறாய்?" என்று அய்யர் கேட்டார்.

"நெய்யிலே பொரித்த எலுமிச்சங்காய் ஊறுகாய்; நல்ல காரம் போட்டது" என்று மகள் சொன்னாள்.

"இதையெல்லாம் எப்படிச் சுமந்து கொண்டு போகப் போகிறோம்? அந்த வேலைக்காரனோ பெரிய குருட்டு முண்டம்" என்று அய்யர் முணுமுணுத்தார்.

இதற்குள், மேடையை விட்டுக் கீழே இறங்கிச் சென்ற மகள் திரும்பி வந்து, "அப்பா, வாயிலிலே ஒரு பிராமண விதவை ஒரு சிறு குழந்தையுடன் வந்து நிற்கிறாள். ஏதோ அவசரகாரிய நிமித்தமாக உம்மை உடனே பார்க்க வேண்டுமென்று சொல்லுகிறாள்" என்றாள்.

"அவளுக்கு எத்தனை வயதிருக்கும்?" என்று சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

"இருபது வயதிருக்கலாமென்று தோன்றுகிறது" என்று மகள் சொன்னாள்.

"சரி, ஒரு நாற்காலியைக் கொணர்ந்து என் எதிரே போடு. அந்தப் பெண்ணை வரச்சொல்" என்று அய்யர் சொன்னார்.

மகள் அங்ஙனமே ஒரு நாற்காலி எடுத்துக்கொண்டு வந்து அவரெதிரே போட்டாள். அப்பால் கீழே சென்றாள்.

சில கணங்களுக்குள்ளே, நம்முடைய விசாலாட்சி குழந்தை சந்திரிகையுடன் அந்த மேடைக்கு வந்து சுப்பிரமணிய அய்யருக்கெதிரே போட்டிருந்த நாற்காலியின் மேல் உட்கார்ந்தாள். எந்த விசாலாட்சி? சென்ற அத்தியாத்தில் பூகம்பத்திலே தப்பிப் பிழைத்த விசாலாட்சி. அங்ஙனமே பூகம்பத்தில் பிழைத்த சந்திரிகை என்ற குழந்தையுடன் வந்து சுப்பிரமணிய அய்யர் முடியசைப்பால் உணர்த்திய குறிப்பின்படி, அவரெதிரே ஆசனத்தில் அமர்ந்தாள்.

"எந்த ஊரம்மா?" என்று அய்யர் கேட்டார்.

"பொதியை மலைச்சாரலில் குற்றாலத்துக்கருகே வேளாண்குடி என்ற கிராமம்" என்று விசாலாட்சி சொன்னாள்.

"ஓஹோஹோ! மூன்று வருடங்களுக்கு முன்பு ஏறக்குறைய இதே மாசத்தில் கிராமத்தில், சூத்திரத் தெருக்களெல்லாம் தப்பிப் பிழைக்க அக்ரஹாரம் மாத்திரம் பூகம்பத்தில் அழிந்து போனதாகக் கேள்விப்பட்டேன். அதே வேளாண்குடிதானா?" என்று அய்யர் கேட்டார்.

விசாலாட்சி "ஆம்" என்றாள்.

"நீ மிகவும் யௌவனமுடையவளாகவும் அழகுடையவளாகவும் இருக்கிறாயே! உனக்கு இந்தக் கைம்பெண் நிலைமை நேர்ந்து எத்தனை காலமாயிற்று?" என்று அய்யர் கேட்டார்.

"பதினைந்து வருடங்களாயின" என்று விசாலாட்சி சொன்னாள்.

"உனக்கு இப்போது எத்தனை வயது?" என்று அய்யர் கேட்டார்.

"இருபத்தைந்து" என்று விசாலாட்சி சொன்னாள்.

"பத்து வயதில் கன்னிப் பருவத்தில் விதவையாய் விட்டாயா?" என்று அய்யர் கேட்டார்.

"ஆம்" என்று விசாலாட்சி சொன்னாள்.

அதைக் கேட்டவுடனே தமது சொந்த மகளொருத்தி இளம் பிராயத்திலே விதவையானதும், பிறகு தாம் அவளுக்கு பம்பாயிலே சென்று தென்னாட்டு வைதிக பிராமணரொருவருக்கு விவாகம் செய்து கொடுத்தும், அம்மகள் தன் கணவனுடன் நீடு சுகித்து வாழும் பாக்கியம் பெறாமல் மிக விரைவிலே மடிந்ததும், தம்முடைய தர்ம பத்தினி உயிர் துறந்ததும் சுப்பிரமணிய அய்யரின் ஞாபகத்துக்கு வர, அப்போது, சிங்கத்துக்கும் இடிக்கும் அஞ்சாத அவருடைய வீர நெஞ்சம் இளகி, அவர் பச்சைக் குழந்தை போல் விம்மி விம்மி அழத் தலைப்பட்டார்.

சில கணங்களுக்குள்ளே தம்மைத் தாம் தேற்றிக்கொண்டு, சுப்பிரமணிய அய்யர் விசாலாட்சியை நோக்கி, "நீ இங்கே வந்ததின் நோக்கம் யாது?" என்று கேட்டார்.

"என்னைத் தக்க கணவனொருவனுக்கு வாழ்க்கைப்படுத்திக் கொடுக்க வேண்டும். என் கையில் ஒரு கொழும்புக் காசு கூடக் கிடையாது. ஆதலால், என் கணவன் பணமுடையவனில்லாவிட்டாலும் நல்ல படிப்பும், மாதந்தோறும் கொஞ்சம் பொருள் சம்பாதிக்கும் திறமும் உடையவனாக இருக்க வேண்டும். இந்தக் குழந்தையும் என்னோடுதான் இருக்கும்" என்றாள்.

"இந்த குழந்தை ஏது?" என்று சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

"இது என் தமையனாரின் குழந்தை. வேளாண்குடி அக்ரஹாரம் முழுமையும் பூகம்பத்தில் அழிந்தபோது, நானும் இக்குழந்தையின் தாயும் மாத்திரம் மழைக்கும் காற்றுக்கும் பூகம்பத்துக்கும் இரையாகாமல் உயிர் தப்பினோம். பூகம்பமும் புயற் காற்றும் பெருமழையும் அடங்கிச் சிறிது நேரத்துக்கப்பால் இக்குழந்தை பிறந்தது. இதைப் பெறும் கடமை தீர்ந்தவுடன் தாயும் பரலோகம் போய் விட்டாள். சாகும் போது இதன் காவலை என் மீது சுமத்திக் கட்டளையிட்டாள்" என்று விசாலாட்சி சொன்னாள்.

"இந்த மூன்று வருடங்களாக நீ ஆகாரத்துக்கு என்ன செய்கிறாய்?" என்று சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

"செம்புப் பிச்சை; உவாதானமெடுத்து வயிறு வளர்த்து இந்தக் குழந்தையையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன்" என்றாள்.

சுப்பிரமணிய அய்யர் உடனே தம்முடைய கைப்பெட்டியைத் திறந்து நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து விசாலாட்சி கையில் கொடுத்தார். விசாலாட்சி அதனை எழுந்து நின்று வாங்கி, இரண்டு கண்களிலும் ஒற்றிக்கொண்டு, தன் புடவைத் தலைப்பில் முடித்து இடுப்பிலே சொருகிக் கொண்டாள்.

"சரி, அம்மா, நீ போய் வா" என்று சுப்பிரமணிய அய்யர் சொன்னார்.

அப்போது விசாலாட்சி, "ஐயா நான் தங்களைப் பிதா ஸ்தானமாக பாவித்துத் தங்களிடம் பணம் வாங்க உடன்பட்டேன். எனினும், நான் இங்கு வந்தது தங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு போவதற்கன்று என்பதைத் தாங்கள் மறக்கக்கூடாது; கணவனை வேண்டி உங்களிடம் வந்தேன்" என்றாள்.

அது கேட்டு சுப்பிரமணிய அய்யர், "அந்தக் காரியம் என்னால் செய்து கொடுக்க முடியாது" என்றார்.

"தங்களைத் தவிர எனக்கு வேறு புகலுமில்லை" என்று விசாலாட்சி வற்புறுத்தினாள்.

"என்னால் சாத்தியமில்லையே! நான் என்ன செய்வேன்?" என்றார் அய்யர்.

"நீங்கள் தயவு வைத்தால் சாத்தியப்படும்" என்று விசாலாட்சி சொன்னாள்.

"உன்னிடம் நல்லெண்ணமில்லாமலா, நீ கேட்காமலே உனக்கு நூறு ரூபா கொடுத்தேன்?" என்று சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

"அவ்வளவு தயவு போதாது. இன்னும் அதிக தயவு செலுத்த வேண்டும்" என்று விசாலாட்சி மன்றாடினாள்.

சுப்பிரமணிய அய்யர் தலையைச் சொரிந்தார். சில கணங்களுக்கப்பால் விசாலாட்சியை நோக்கி, "ராஜமஹேந்திரபுரத்தில் என்னுடைய சிநேகிதர் ஒருவர் இருக்கிறார். அவருடைய பெயர் வீரேசலிங்கம் பந்துலு. அவர் விதவைகளுக்கு விவாகம் செய்து வைப்பதில் மிகவும் சிரத்தையுடன் உழைத்து வருகிறார். உன் வசம் ஒரு கடிதம் எழுதிக் கொடுக்கிறேன். அதை அவரிடத்தில் கொண்டு கொடு. அவர் உனக்கு வேண்டிய சௌகரியம் செய்து கொடுப்பார்" என்றார்.

"சரி" என்றாள் விசாலாட்சி.

உடனே சுப்பிரமணிய அய்யர் தம்முடைய மேஜையின் மேல் வைத்திருந்த மணியைக் குலுக்கினார். கீழேயிருந்து அவருடைய மகள் வந்து, "என்ன வேண்டுமப்பா?" என்று கேட்டாள்.

"அந்த வேலைக்காரப் பயல் இன்னும் வரவில்லையோ?" என்று சுப்பிரமணிய அய்யர் உறுமினார்.

"அவன் பட்டணத்துக்கன்றோ போயிருக்கிறான், ஸ்மித் ஷாப்பிலே போய் மருந்து வாங்கிக் கொண்டு வர? இனி அவன் பன்னிரண்டு மணிக்கு மேலேதான் வருவான். உமக்கென்ன வேண்டும்?" என்றாள்.

"என்னுடைய மேஜை மேலே, பேனா மைக்கூடு வைத்திருக்கிறேன். மேஜை திறந்துதான் இருக்கிறது. அதற்குள்ளே வலப்பக்கத்து அறையில் கடிதமெழுதுந் தாளும் உறைகளும் கிடக்கின்றன. ஒரு தாளும் ஒரு உறையும் கொண்டு வா. மையொத்தும் தாளையும் எடுத்து வா" என்று சுப்பிரமணிய அய்யர் சொன்னார்.

அவர் வேண்டிய சாமான்களையெல்லாம் மகள் கொண்டு வந்து கொடுத்தாள். சுப்பிரமணிய அய்யர் ஒரு கடிதமெழுதி உறைக்குள்ளே போட்டு, அதை மகளிடம் கொடுத்து "உறையை சரியாக ஒட்டிக் கொண்டு வா" என்றார். அவள் அதை ஒட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள். கொடுத்துவிட்டு, மகள் மறுபடி பேனாவையும், மைக்கூட்டையும் மையொத்தும் தாளையும் கொண்டு மேஜையில் வைத்து விட்டுக் கீழே சென்றுவிட்டாள்.

சுப்பிரமணிய அய்யர் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டே விசாலாட்சியை நோக்கி, "உனக்குத் தெலுங்கு தெரியுமா?" என்று கேட்டார்.

"தெரியும்" என்றாள் விசாலாட்சி.

"எங்கே படித்தாய்?" என்று அய்யர் கேட்டார்.

"எங்களூரில் நானிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தெலுங்குப் பிராமணரொருவர் இருந்தார். நான் சிறு குழந்தைப் பிராய முதலாகவே அந்தக் குடும்பத்தாருடன் மிகவும் நெருக்கமாக பழகிக் கொண்டு வந்தபடியால் எனக்குத் தெலுங்கு பாஷை தெலுங்கர்களைப் போலவே பேச வரும்" என்றாள்.

"சரி, உனக்குக் கூடிய சீக்கிரத்தில் நல்ல மணமகனுடன் விவாகம் நடைபெறும். நீங்கள் தம்பதிகளிருவரும் நெடுங்காலம் இன்புற்று வாழக் கடவீர்" என்று சொல்லி, அய்யர் அவளிடம் காகிதத்தைக் கொடுத்தார்.

அவள் அக்கடித்தை வாங்கி கண்ணிலே ஒற்றிக்கொண்டு மடியில் வைத்துக் கட்டிக் கொண்டாள். பிறகு சுப்பிரமணிய அய்யரை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு, அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றாள்.

அக்குழந்தையும் சுப்பிரமணிய அய்யரை நோக்கிப் புன்னகை செய்து கொண்டே போயிற்று.



(வளரும்)
தொடர்ந்து படிக்க: சந்திரிகையின் கதை-3

கதையாக்கம்: மகாகவி சுப்ரமணிய பாரதியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக