2011/01/08

மூன்று

வெத்து வேலை




   மூன்று என்ற எண்ணிக்கையின் பின்னே ஒரு மாயம், மகத்துவம், ஆழம் இருக்கிறது. எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? எப்படி வந்தது? இதைப் பற்றிக் கொஞ்ச நாளாக அடிக்கடி யோசித்திருக்கிறேன். (பொழுது போக வேண்டாமா?)

மூன்றின் மகத்துவத்தை மக்கள் நம்புகிறார்கள்; இன்று நேற்றல்ல, நாகரீகத்தின் தொடக்கத்திலிருந்தே மூன்றை முக்கியமாக எண்ணி வந்திருக்கிறார்கள். உலக கலாசாரங்கள் அத்தனையிலும் பொதுவாகக் காணப்படுகிறது. "மூன்று எண்ணுவதற்குள் இந்தக் கீரையைச் சாப்பிட்டு விடு" என்று, அடம் பிடிக்கும் பிள்ளையை மிரட்டும் வீட்டு வழக்கத்திலிருந்து, விளையாட்டு, சட்டம், மேலாண்மை என்று நம் வாழ்க்கையின் பல பரிமாணங்களில் மூன்றாவது எண்ணிக்கையில் இருக்கும் நிச்சயத்தன்மையை நடைமுறையில் கடைபிடிக்கிறோம்.

மூன்று முறை விளக்கப்பட்ட எதுவும், மனதில் தங்கும் தன்மை கொண்டது என்று கல்வி உளவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்

முப்பால்
முக்கனி
மூன்று தெய்வங்கள்
முக்குணம்
முப்பகை
மூவகைத் தீ
மூவுலகம்
மும்மாரி
முக்கலை
முத்தமிழ்
முச்சங்கம்
சங்கீத மும்மூர்த்திகள்
மூன்று வேளை (சாப்பாடுக்கு மட்டுமல்ல)
மூன்று முடிச்சு (சினிமா அல்ல)
மூன்று முட்டாள்கள் (சினிமா தான்)
.. யோசித்தால் இன்னும் நிறையத் தோன்றும்.

நம் கலாசாரத்துக்கு வெளியே வந்தால் அங்கேயும் மூன்றின் மகத்துவம்.
மூன்று அமைதியையும் ஒற்றுமையையும் குறிக்கும் (யூதம் - டோரா வழிபாட்டின் தியான மையம்)
மூன்று கடவுள்/புனித ஆவிச் சாதனங்கள் (கிறுஸ்துவம்)
மூன்று சீர்மையைக் குறிக்கிறது (கிறுஸ்துவம்)
மூன்று அமைதிப் பாதைகள் (புத்தம்)
மூன்று முறை பழக வேண்டிய அவசியம் (இஸ்லாம்; இருபத்து மூன்றும் மகத்துவமானது)
.. இன்னும் வேறு ஏதாவது இருக்கும்.

பொதுவாழ்வு, கல்வி, விளையாட்டு என்று பார்த்தால் அங்கேயும் மூன்று தலை காட்டுகிறது.
கணிதத்தில் மூன்றின் மகத்துவம் பற்றி தனிப்பதிவு எழுதும் அளவுக்கு விஷயம் இருக்கிறது (பயப்படாதீர்கள்; எழுதப் போவதில்லை)
மற்றத் துறைகளிலும் மூன்றை ஒட்டி நிறைய இருக்கின்றன (குறிப்பாக கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், சைகாலஜி)
இலக்கியத்தில் தடுக்கி விழுந்தால் மூன்றைப் பார்க்கலாம் (கதை, தத்துவம் என்று எதிலும் மூன்று ஒரு அடிப்படையாக ஆளப்பட்டிருக்கிறது)
ஒன் டூ த்ரீ என்றதும் ஒடுகிறோம்
அமெரிக்க பேஸ்பாலின் த்ரீ ஸ்ட்ரைக்ஸ்
.. இந்த வகையில் மூன்றுகளுக்கு அளவே இல்லை.

இந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது? என்ன காரணமாக இருக்கும்? அங்கே இங்கே (கூகில், விகி) தேடித் தோண்டிக் கிடைத்தவைகளுள் ஓரளவுக்கு நம்பக்கூடியதாகவும் பிரமிப்பாகவும் தோன்றியதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:
பூமி மூன்றாவது கோள். சூரியன் முழுமுதற் கடவுளாகக் கருதப்பட்ட நாட்களில் (எகிப்திய ரா, அதற்கு முன்) பூமியில் தான் முடிவாக வந்திறங்கி அருள் புரிவதாக நம்பினார்கள். ராவின் மூன்று குணங்களை நம்பினார்கள்: ஒளி, வளர்ச்சி, அமைதி. மூன்றின் மகத்துவம் அங்கிருந்து பரவியிருக்க வேண்டும். (சரி, ராவுக்கு ஏன் மூன்று குணங்கள் என்று கேட்டுப் பார்த்தேன். தேவையில்லாத தேடல் என்றது கூகில்)

இப்ப இது ரொம்ப அவசியமா அவசியமா அவசியமா என்று நீங்கள் மூன்று முறை கேட்கலாம். அவசியமில்லை. ஆனால் அடுத்த பார்ட்டியில் உங்கள் மதிப்பு மும்மடங்காக உயரும் அளவுக்கு விஷயம் இருக்கிறதா இல்லையா?

மூன்றைப் பிடித்துச் சிரைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. 'நசிகேதனுக்கு எமன் ஏன் மூன்று வரங்கள் வழங்கினான்? ஒரு வரத்தோடு நின்றிருக்கலாமே?' என்று யோசித்த போது கிளையாகப் பரவிய சிந்தனையின் விளைவு. நான் தெரிந்து கொண்டதைப் பகிரலாமே என்ற எண்ணம் தான். கடைசியில் நசிகேதக் கேள்விக்கு விடை ரொம்ப ஜிம்பிளாகப் புலப்பட்டது - கையில் வெண்ணை வைத்துக் கொண்டு நெய்க்கலைந்த கதை.

முக்கையை, ஐ மீன் மொக்கையைப் படித்ததற்கு நன்றி, நன்றி, நன்றி.

18 கருத்துகள்:

  1. மூன்றுக்கு பின்னால் இத்தனை விஷயங்களா.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஜனவரி 09, 2011

    moodhevi!elludha onniyum mettar illaangaatti moonu settu aadu.. athaangaatti ...

    பதிலளிநீக்கு
  3. ஓ...நீங்கள் மூன்றாம் சுழி என்று பெயர் வைத்ததற்கும் அதே காரணம்தானா...!

    பதிலளிநீக்கு
  4. முப்பரிமாணத்தை விட்டு விட்டுவிட்டீர்களே துரை

    பதிலளிநீக்கு
  5. இன்னும் நினைவுக்கு வந்தவை

    முக்குலம், முக்குறுணிப் பிள்ளையார், மூன்றாம் பிறை [திரைப்படம் அல்ல] முச்சந்தி, முப்பட்டைக் கண்ணாடி, முக்கோண ....., முயலின் மூன்று கால், மனிதனின் மூன்றாம் கால். முப்பிணி

    பதிலளிநீக்கு
  6. மூன்றாம் சுழிக்கு என் மூன்று...

    தஞ்சையில் முப்போகம் விளைந்தால் தமிழ்நாட்டுக்கு பஞ்சமில்லை...

    மூன்று புள்ளி சேர்ந்தால் தான் உருவம் அது வரை கோடு... (எற்கனவே பாஸ் சொன்னது பாட்டு மட்டும் எனது )

    மூன்றாம் நபர் சில சமயம் அந்நியர்,சில சமயம் அலசி தீர்ப்பு அளிப்பவர் ( third party assessment )

    பதிவு முக்கையுமல்ல... மொக்கையுமல்ல... சுவாரசியம் தான்..

    அண்ணாவோ , கலைஞரோ மூன்றெழுத்து மூன்றெழுத்தாக தேர்தல் கூட்டங்களில் பேசி அசத்தியதாக விட்டு பெரியவர்கள் சொல்லக் கேள்வி....அன்பு ஆரம்பித்து..நன்றி யில் முடியும்....

    பதிலளிநீக்கு
  7. நன்றி தமிழ் உதயம், ஸ்ரீராம், k_rangan, baaskaran, பத்மநாபன்,...

    பெயரில்லா கமென்டும் அட்டகாசம் தான். சிரித்து மாளவில்லை.

    பதிலளிநீக்கு
  8. நன்று. நன்று. நன்று.
    ( அந்தப் பெயரில்லாவுக்கு பெயர் சாய் தானே )

    பதிலளிநீக்கு
  9. ஆமாம், அரசியல்வாதிகள் நமக்கு போடுவதும் மூன்று(தான்) - நாமம். மூன்றை பற்றி இப்படி ஒரு முத்தான பதிவை போட்டு ஏன் மொக்கைன்னு சொல்லனும்?

    பதிலளிநீக்கு
  10. அடடா, தோணாம் போயிருச்சே அரசூரான்.. அட்டகாகசமான கமென்ட். நன்றி.

    பதிலளிநீக்கு
  11. சுவாரசியமான பதிவு!
    முச்சந்தி என்பதற்கும் எண் மூன்றுக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா?
    மூவேந்தர்கள், முப்படை, சிவனின் மூன்றாவது கண், கோவிலில் பொதுவாக மூன்று முறை வலம் வருவது, திருவேணி சங்கமம் - மூன்று நதிகளின் சங்கமம்.

    இது சும்ம்ம்ம்ம்மா!
    திரை உலகின் மூன்றெழுத்து பிரபலங்கள் - MSV., TMS., SPB., PBS., MGR., NSK., TKR.,
    அட! வலைபதிவு உலகில் ஒரு மூன்றெழுத்து பிரபலம் - RVS. :)

    பதிலளிநீக்கு
  12. நன்றி meenakshi. நிசமாவே மூணுல மயிமை கீதோ?

    பதிலளிநீக்கு
  13. ஒரு வாரத்தில் இங்ஙனம் விளாசியிருக்கிறீர்களே? புயலுக்குப் பின்னே அமைதி என்றாலும் அதிகம் வேண்டாம்.

    அனைத்து இடுகைகளிலும் உற்சாகமும் வேகமும் ரசிக்கும்படி இருந்தன. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. //சிவகுமாரன் சொன்னது…

    (அந்தப் பெயரில்லாவுக்கு பெயர் சாய் தானே)//

    தில்லுக்கு "சாய்" போல் உண்மை சொல்லுக்கும் "சாய்" தான் !!

    ஐயப்ப விரதம் இருக்கும் என்னை பார்த்து - அட போங்கையா.

    பதிலளிநீக்கு
  16. அறிவு மூன்று எழுத்து
    உறவு மூன்று எழுத்து
    பரிவு மூன்று எழுத்து
    பாசம் மூன்று எழுத்து
    பதவி மூன்று எழுத்து
    பணம் மூன்று எழுத்து
    கடன் மூன்று எழுத்து

    அட

    மனைவி கூட மூன்று எழுத்து

    பதிலளிநீக்கு
  17. கோபம் - அட எனக்கு நன்கு தெரிந்த இதுவும் மூன்றாக இருக்கு

    பதிலளிநீக்கு
  18. மும்மூணா பின்றீங்க சுவாமி!

    பதிலளிநீக்கு