2014/01/09

உறைவிடம்


    "இருவது வருஷத்துல நான் இப்படி எதையுமே பார்த்ததில்லை"

"அட நான் நாப்பது வருஷமா சிசரோவுல இருக்கேன்.. நானே பார்த்ததில்லை.."

"அட.. நான் பொறந்து வளந்தது டேரியன்ல.. என் ஆயுசுல நான் கண்டதில்லை"

இப்படி ஆளுக்கு ஆள் கடவுளைப் பற்றிக் கணக்கு சொல்வதாக ஒரு கணம் தோன்றலாம், தப்பில்லை. ப்லாக் அப்படி. ஆனால் அவர்கள் சொல்லும் கணக்கு சிகாகோவைப் பிடித்துலுக்கிய பனி மற்றும் குளிரைப் பற்றியது என்ற உண்மையைச் சொல்லிவிடுகிறேன்.

பனி, குளிர், கடுங்குளிர் காற்று - இவை சிகாகோவுக்குப் புதிதல்ல என்றாலும் இந்தப் பனிக்காலம் தொடக்கத்திலேயே களை கட்டி விட்டது. நானறிந்த வரையில் இப்படி ஒரு குளிரை தொடர்ந்து ஒரு சில நாட்களுக்கு மேல் அனுபவித்ததில்லை. 31 டிசம்பர் 1999ல் சிகாகோ ஓட்டல் மிலெனியம் விழாவில் ஒரே ஒரு குழுமக் கஞ்சா இழுப்புக்காக வெளியே வந்தபோது டெம்பரேசர் -52°F (-46°C). மறக்கவில்லை. அப்படி ஒன்றிரண்டு நாட்களில் ஒரு சில மணி நேரங்கள் மைனஸ் ஐம்பதுக்கும் கீழே போகும், மற்றபடி குளிர் விறைப்பு எல்லாம் எப்படியோ சமாளித்துவிடலாம். ஆனால் தொடர்ந்து இரண்டு வாரமாக மைனஸ் இருபது இருபத்தைந்து பேரந்ஹைட் தட்பத்துடன் கடுமையான காற்றும் சேர்ந்து நான் இதுவரை கண்டதில்லை. குறிப்பாக இந்த வாரம் ஜனவரி 4-7 தேதிகளின் குளிர்! நரகம் அய்யா நரகம்.. நரகம் அம்மா நரகம்.. நரகம் பிள்ளாய் நரகம். 6ம் தேதி இரவில் சில நிமிடங்களுக்கு -69°F (-56°C) தொட்டது. circumcise செய்து கொள்ளாத ஆடவர்கள் சிறுநீர் கழிக்கக் கூட கடுமையாகச் சிரமப்பட்ட அந்த நான்கு நாட்கள்! பிள்ளாய், சற்றுமுன் படித்த வரியை மறந்துவிடு. சரியான துணையுடன் இந்த நரகத்தை சொர்க்கமாக்கியவர்கள் இருப்பார்கள்.. இருக்கிறார்கள். அவர்கள் பேச்சு டூ.

மார்ச் 5-6 தேதிகளில் chicago chiberia ஆனதன் அடையாளமாகச் சில படங்கள்.


சிகாகோ என்றில்லை, வடகிழக்கு அமெரிக்கா முழுதுமே பனியில் சிக்கித் தவித்தது. திருமதி பக்கங்கள் பதிவில் பனீஸ்வரர் இறங்கி வந்திருப்பதைப் பார்த்திருக்கலாம்.

பனிக்கட்டி நயாகராவைப் பார்த்திருக்கிறீர்களா?


இது நயாகரா நீர்வீழ்ச்சியை ஒட்டியப் பூங்கா.


இது பால்டிமோர் தெருவில் ஒரு வண்டி.


இது ந்யூயோர்கின் ஹட்சன் நதி.


இது நெப்ராஸ்கா சிற்றூர் ஒன்றின் கடைவீதி. முதல் நாளிரவு தீப்பிடித்த கடையும் தீயணைப்பு வண்டியும்.


குளிர் தாங்கலியேனு ப்லோரிடா போனா.. இப்படியா? ஆரஞ்சு சாகுபடி இந்த வருஷம் அம்போ.


நானறிந்த சிகாகோ வாசிகள் எல்லோரும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கையில், இந்தக் கடும் பனிக்குளிரில் நானும் என் குடும்பமும் இடைவிடாமல் வெளியே சுற்ற நேரிட்டது எங்கள் முன்வினைப் பயனாக இருக்கலாம்.

செய்தியாளர்:
நாடு தழுவிய கடும் பனி குளிருக்கு global warming காரணம் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள்.
கமல்:
விஞ்ஞானிங்களா? முட்டாப்பயலுங்க. கடும் பனி குளிருக்கு global cooling தானே காரணமாவும்?


படங்கள்: இணையம்.

2014/01/08

மீண்டும்
சந்திரிகையின் கதை


    தொலைந்து போன பதிவுகளை முடிந்தவரை மீட்டுச் சேர்க்கும் பணியில் மும்முரமாக இருந்த போது, எதிர்பாராமல் கிடைத்த போனஸ் பூத்தூரிகை காலப் பதிவுகள். சேமித்து வைத்ததே தெரியாது. அரசன், நான், சாவித்திரி, சாய்ராம், ஹேமா துவாரக்நாத், வளர்மதி, பேட்டை சசி... பூத்தூரிகையில் நிறைய பேர் எழுதினோம். நிறையக் கும்மி அடித்தோம். என்னிடம் இருந்த பதிவுகளை சேர்த்திருக்கிறேன். 2007-08ல் எழுதப்பட்டவை. அரசனுடன் சேர்ந்து எழுதத் தொடங்கிய குமாஸ்தா, திருவினையாகாத முயற்சி. எல்லாம் சுவாரசியமான நினைவுகளைக் கிளறின.

பதிவுகளைச் சேர்க்கும் பொழுது 'சந்திரிகையின் கதை' அத்தியாயம் ஒன்று, ப்லாகர் கோளாறால் தவறிப்போய் இரண்டு முறை பதிவானதும், புதுப்பதிவாக அமைந்ததை நீக்க வேண்டியிருந்தது. அதன் விளைவே முந்தைய பதிவில் பலரும் பார்த்த பிழைச் செய்தி. பின்னூட்டத்திலும் இமெயிலிலும் விசாரித்தமைக்கு நன்று. தடங்கலுக்கு வருந்துகிறேன். (எங்கள் ப்லாக்ல சுட்டிகளை ரிப்ரெஷ் செய்யுறதில்லே.. அவங்க தயவுல நாலு பேர் என் ப்லாகைப் படிக்க வரப்ப.. நான் உள்பட.. குறை சொல்ல மனம் வருமா? :-)

பாரதியார் எழுதி, முடிக்காமல் விட்ட அற்புத காவியம் 'சந்திரிகையின் கதை'. சில கதாபாத்திரங்களின் பின்னல் படிப்பவரைச் சிலிர்க்க வைக்கும். இதுவரை படிக்காதவர்களுக்காக, முதல் அத்தியாயத்துக்கான சுட்டி இதோ: சந்திரிகையின் கதை.

ஓ, மறக்குமுன்.. திண்டுக்கல் தனபாலனின் முனைப்பு எனக்கு ஒரு முன்னுதாரணம். ப்லாகரில் பிழை செய்தி வருவதை ஏற்காமல் 'ஏன் இந்தப் பிழை வருகிறது?' என்று விடாமல் தேடிப் படித்து ஒரு பின்னூட்டமும் போட்டு விட்டார். தனபாலனுக்கு நன்றி.

2014/01/06

அதிசயம் இலவசம்


    ன் குளிர் என் குளிரல்ல, இது உய்வாரிலாதொழிக்கும் குளிர். இருபது வருடங்களில் இது போல் குளிர் கண்டதில்லை என்கிறார்கள். குளிர் விட்டுப் போச்சு என்று இனி எவரும் சொல்ல வருடக்கணக்கில் ஆகும்.

பனியும் குளிரும் சிகாகோவை இரண்டு வாரங்களாகப் பிய்த்தெடுக்கிறது. சனிக்கிழமையின் பனிப்புயலில் நிறைய சோகங்கள்.

நேற்று மாலை பனியை அள்ளி ஒதுக்க ஆள் வருவான் ஆள் வருவான் என்று காத்திருந்து கடைசியில் கடவுளும் இந்த ஆளும் ஒன்று எனத் தீர்மானித்து, வீட்டைச் சுற்றிய நடைபாதையில் பனி அத்தனையும் நானே அள்ளியொதுக்கி அப்போது தான் உள்ளே வந்திருந்தேன். "இந்தாப்பா ஹாட் சாக்லேட்" என்றாள் மகள். நன்றி சொல்லியபடி அருந்திக் கொண்டிருந்த போது, வெளியே போயிருந்த எங்கள் நாய் ஸ்டெல்லா பனியில் கால் விறைத்து அப்படியே சுருண்டு விழுந்ததைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. கேமெரா இருந்தும் படமெடுக்க மனமில்லாமல், ஹாட் சாக்லெட்டை அப்படியே வைத்து.. நாயை அள்ளி வர ஓடினேன். பனியில் கால் வைத்ததும் தான் எனக்கு உறைத்தது.

வெறுங்கால். அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!

என்ன செய்ய.. இறங்கியாகிவிட்டது, நாயை அள்ளிக்கொண்டு அலறியபடி உள்ளே ஓடி வந்தேன். இடது கால் பாதம் புண்ணாகிவிட்டது.

அக்காலை நொண்டியபடி இக்காலை வெளியே பார்த்த போது தென்பட்ட அதிசயம் ஆனால் உண்மை. ஒரு சூரியன் பார்த்தால் இன்னொரு சூரியன் இலவசம். கண்ணைக் கூசும் என்பதற்கான பொருளே இன்றைக்குத் தான் விளங்கியது. அரை மணி நேரத்துக்கு மேலானது கண்பார்வை இயல்புக்கு வர. (at your own risk போட்டோவைப் பாருங்கள்).

எது அசல், எது நகல்? எதனால் நகல், சொல்லுங்கள் பார்ப்போம். விடை கடையில்.


விடை: என்னைக் கேட்டால்?