2012/03/27

பாலுவின் கோடை



    ம்மலில் நாங்கள் புது வீடு கட்டிக் கொண்டிருந்தக் காலம். என் தாத்தா 'நிறைய வீடு கட்டியிருக்கிறேன் பேர்வழி' என்று தனக்குத் தானே தலைமை மேஸ்திரி சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டு தினம் வெயில் வீணாகாமல் மேற்பார்வைக்குப் போய்விடுவார். நெருங்கிய நண்பன் ஸ்ரீதரின் அம்மா சிமெந்ட் வியாபாரம் செய்து வந்தவர். கடனுக்கு சிமெந்ட் கொடுத்து உதவியதோடு தானும் மேற்பார்வை பார்ப்பார். நானும் ஸ்ரீதரும் சைக்கிளில் சுற்றுவோம். சைக்கிள் சுற்று போரடித்தால் வீட்டுப் பக்கம் போவோம். சித்தாள்களை சைட் அடிக்கும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருந்த வயது. வீட்டு வாசலில் துர்கையம்மன் கோவில். கோவிலின் தென்கிழக்கு மூலையில் ஒற்றைப் பனைமரம். பனைமரத்தில் சைக்கிளை சாய்த்து நிறுத்திவிட்டு, கோவில் சுவரில் உட்கார்ந்து சைட் அடிப்போம்.

அப்படி சைட் அடிக்கும் சாக்கில் பல புது நட்புக்களைப் பெற்றேன். எல்லோரும் என்னைப் போல் ரகசியமாக சைட் அடிக்க வந்தவர்கள். ரவி, தேசி, சுரேஷ், ஜேம்ஸ், சாம்பா என்று எங்கள் கூட்டம் சேர்ந்தது. சில நாள் கோவில் வெளியறையில் உட்கார்ந்து கேரம் ஆடுவோம், சீட்டாடுவோம், அதுவும் இல்லையென்றால் 'புக் க்ரிகெட்' என்று புத்தகத்தைப் புரட்டி ரன் எடுக்கும் கேனத்தனமான ஆட்டம் ஒன்றை டீம் கட்டி ஆடுவோம்.

அப்படி ஒரு நாள் சேர்ந்தக் கூட்டத்தில் பாலுவைச் சந்தித்தேன். ரவியின் மாமா பையன் என்று அறிமுகம் செய்து கொண்டான். "பாஞ்சு நாள் லீவுக்கு வந்திருக்கான்" என்றான் ரவி. எங்களை விட சற்றே மூத்தவன் என்றாலும் பத்தே நிமிடங்களில் எங்களுடன் நெருங்கிப் பழகியவன் போல் ஆகிவிட்டான் பாலு.

தினம் வந்தான். "கூமுட்டைங்களா! சும்மா கொலுசுங்களையே பாத்துட்டிருந்தா எப்படி?" என்றபடி, சித்தாள் செங்கல் சுமக்கும் பொழுது நாங்கள் கவனிக்க வேண்டிய உடற்பகுதிகளையும் அசைவுகளையும் துல்லியமாகக் கற்றுக் கொடுத்தான். கொலுசு என்பதற்கான மெய்ப்பொருளும் எனக்கு அன்றைக்குத்தான் தெரிந்தது. பாலு பேரில் இருந்த மதிப்பு ஏகத்துக்கு உயர்ந்து போனது.

சரோஜாதேவி புத்தகம் நாலைந்து எடுத்து வந்து கைக்கிரண்டாக வைத்துக்கொண்டு வானில் உயர்த்துவான் பாலு. அதைப் பணிந்துப் பெறும் பாவனையுடன், "குருவே!" என்று பரவசமடைந்து விளிப்பான் சாம்பா. விளித்ததும் நாங்கள், "பாலுவே! ப்ராண வல்லபே! ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேகி!" என்று வணங்குவோம். கருணையே வடிவான பாலு, படம் வரைந்து பாகங்களைக் குறிக்காதக் குறையாக விவரங்களைப் படிப்பான். தன்யமாவோம்.

மதியத்தில் கோவில் பூசாரி தணிகாசலம் வாசனைக்குச் சாராயம் கலந்த நீர் மோர் அருந்திவிட்டு ஓரமாகப் புரண்டுப் படுப்பார். பாலு அவருடைய வேட்டியை உருவிவிட்டு அமைதியாக எங்களுடன் வந்து உட்கார்ந்து விடுவான். மதிய நேரங்களில் கோவிலுக்கு வரும் 'பெண்டுகள்' கிசுகிசுத்தபடி தலையை எங்கள் பக்கமாகத் திருப்பி நடப்பதைப் பார்த்து ரசிப்பான்.

ரவி சங்கடப்பட்டாலும், ரவியின் அக்காவைப் பற்றி எங்களுடன் பேசுவான். "அத்தைப் பெண் இருக்குறதே தொட்டுப் பாக்கத்தாண்டா!" என்பான். ஒரு முறை, "டேய் துரை.. உங்க தாத்தா ஏண்டா ஜட்டி கூடப் போடாம வேட்டியைக் கட்டிகிட்டு உயரத்துல ஏறி நிக்கறாரு? கோவணமாவது கட்டச் சொல்லுரா. கண்றாவி.. சித்தாளுங்கல்லாம் பயப்படுறாங்கடா" என்று சபையில் கேட்டு என்னைத் திடுக்கிட வைத்தான்.

அத்தனை சித்தாள்களின் பெயரையும் வயதையும் தெரிந்து வைத்துக் கொண்டுக் கிண்டலடிப்பான். வீட்டுப் பின்புறத்தில் இருந்த சண்முகா கொட்டகையில் ஒரு மதியம் எங்கள் அனைவரையும் இரண்டு சித்தாளுடன் சினிமா பார்க்க வைத்தது எங்களுக்கு அன்று எட்டாவது அதிசயமாக இருந்தது. ஜெய்சங்கர் படம். சத்தியமாக பாலு சினிமா பார்க்கவில்லை என்று எந்த நீதிமன்றத்திலும் சொல்வேன்.

பீடி வலிக்கக் கற்றுக் கொடுத்தவன். முழங்கை என்று நான் நினைத்துக் கொண்டிருந்த சொல்லுக்கு வேறு பொருள் அறியக் காரணமான ஆசான். கேரம் ஆடும்பொழுது சிவப்புக் காயினை திருடிக்கொண்டு விடுவான். ட்ரம்ப் விளையாடும் பொழுது எப்படியோ அவனிடம் மட்டும் ஐந்து துருப்பு எப்போதும் இருக்கும். புக் க்ரிகெட்டில் கூட ஏமாற்றுவான்.

பாலு ஊரில் இருந்த பதினைந்து நாட்களும் துர்கையம்மன் கோவிலில் சந்தித்துக் கொட்டமடித்தோம் என்பேன்.

பதிமூன்று நாட்கள் என்று திருத்தி விடுகிறேன். ஏனென்றால் பதிமூன்றாம் நாள் நள்ளிரவில் வாயிலிருந்து ரத்தம் கக்கத் தொடங்கினான் பாலு. வலது கண் மட்டும் தையல் தெறித்தது போல் பிதுங்கிப் பிளந்தது என்றார்கள். தாம்பரம் சேனடோரியம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போனார்கள். பதினாலாம் நாள் காலை டெம்ப்ரசர் எடுக்க வந்த டாக்டரின் இடது கைக் கட்டை விரலை ஒரே கடியில் கடித்து மென்றுச் சப்புக் கொட்டிச் சாப்பிட்டு விழுங்கினான் என்பதற்காக நர்சுகள் அலறி அடித்துப் போட்ட அமைதி ஊசியில், பாலு கோமா வந்தது போலானான். அன்றிரவு இரண்டு மணிக்கு ஆஸ்பத்திரி அமைதியாக இருந்த வேளையில், திடீரென்று விழித்து, ஆஸ்பத்திரியே நடுங்கும்படிப் பத்து நிமிடம் போல் சிரித்துச் செத்தான்.

தொடர்வது பாலுவுடன் பதிமூன்று நாள் கதை.

2012/03/22

முகமூடி



04:30
லுவலக எலவேடரில்
ஏறிய என்னை
அழுக்குச்சட்டை முகமூடிகள் சுட
அலறிவிழித்தது காலைக்கனவு

09:30
லுவலக எலவேடரில்
ஏறிய என்னை
அவசரமாய் ஒதுங்கி வணங்கிய
ஆறுபேரும் சூட்கோட்கள்.
ம்.


          டையில்லாதவர் அரைமனிதர்
          நீயும் நானும் சேர்ந்து
          முழுமனிதராகலாம் வா.

          சிறிய முத்தம்
          பெரிய சுமை.
          காதல் போதிமரம்.

          முன்னவன் முத்தம்
          மறைவதற்காக உதட்டுச்சாயம்.
          உண்மைக் காதலி.


                    ட்டுமணி நேரம் புணர்ந்தார்கள்
                    ஈர்ப்புப்பாய் எடுக்க மறந்து.
                    நிலவில் காதலர்கள்.

                    ன்ப்ராரெட் உஷ்ணம் காற்றுருவி மசாஜ்
                    இரண்டே நொடியில் உச்சம்.
                    காமம் சுபம்.


                              முழுதும் நம்பி
                              மந்தைகள் நுழைந்தது
                              மேய்ப்பன் கசாப்புக்கடை.

                              ரம் செத்தால்
                              மனிதனின் பேராசை.
                              மனிதம் செத்தால்
                              மகோன்னதத் திருவிளையாடல்.


                                        சி பஞ்சம் பிணி
                                        கொலை கற்பழிப்புக் கொள்ளை நடுவில்
                                        சிட்டுக்குருவிச் சாவுப் பெருங்கவலை.

2012/03/18

வாலன்டியர்



    நியூஜெர்சி அருகே ஸ்டாக்டனில், ஸ்டாப் அன்ட் ஷாப்பில், வேலை பார்க்கிறேன்.

வாடிக்கை சேவையாளர் என்று வேலைக்கு எடுத்த போது கொடுத்த பதவி, பெயருக்குத் தான். காசாளர் வேலை, பிலாஸ்டிக்கா பேப்பரா என்று கேட்டு பொட்டலம் கட்டுவது, ஸ்டாக் ரூமில் மளிகை அடுக்குவது, காய்கறி அடுக்கி வைப்பது, பாத்ரூம் துடைப்பது என்று எந்த வேலை கொடுத்தாலும் செய்ய வேண்டும். வயதான காலத்தில் வேலை கிடைப்பதே கஷ்டம், இதில் ஜம்பம் பார்த்தால் முடியாது என்று வாயை மூடிக் கொண்டு வேலை பார்ப்பேன்.

என் வேலையின் ஒரே சுவாரசியம், இங்கே நான் சந்திக்கும் குணச்சித்திரங்கள்.

இந்த வாரம் முழுதும் காலை ஆறு மணியிலிருந்து மதியம் மூன்று மணி வரை வேலை. சிகரெட் பிடிக்கவும், சாப்பிடவும், ஸ்டாக் ரூமின் இருட்டில் இள வயசுப் பசங்களுடன் ரெட் ட்யூபில் பலான படம் பார்க்கவும், இடையில் ஒன்றரை மணி நேரம் கிடைக்கும். ஒரு பலான படத்தில் பாருங்கள், ஆகாசத்தில் உட்கார்ந்து கொண்டு இந்த சர்கஸ்காரப் பெண்... ஷ், என் மேலதிகாரி வருகிறாள், பிறகு சொல்கிறேன்.

இன்றைக்கு சனிக்கிழமை. சனி ஞாயிறென்றால் கூட்டம் அதிகமாக வரும். விளம்பரக்காரர்கள்.. இலவச சாம்பிள் கொடுத்து ரெண்டு டாலர் கூப்பனும் கொடுத்து, பொருள் வாங்க மாட்டார்களா என்று ஏங்கும் வியாபாரிகள்.. தப்பிக்க முடியாதபடி ஒவ்வொரு வாசலிலும் கர்ல் ஸ்கௌட் பாய் ஸ்கௌட் என்றுக் கடைவிரித்துத் துரத்தி நன்கொடை கேட்டு நச்சரிப்பவர்கள்.. வயதான ஆசாமிகளை ஷாப்பிங் அழைத்துப் போய் கொஞ்சம் புண்ணியம் சேகரித்துக் கொள்ளும் வாலன்டியர்கள்.. என்று வாடிக்கையாளர் தவிர விதம் விதமாகக் கூட்டம் வரும். வாலன்டியர்களைக் கவனிப்பது சுகம். அதுவும் அழகான இளவயதுப் பெண்களைக் கவனித்தால் பொழுது போவதே தெரியாது.

அதோ, சிரித்த முகத்துடன் உதவி செய்து கொண்டிருக்கிறாள் ஒருத்தி. முகத்தைத் தவிர எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருக்கிறாள். இரானியராக இருக்கலாம். சற்றுத் தள்ளி, அர்த்தமில்லாமல் சிரித்து தலையைத் தலையை ஆட்டி 'ஸங்க்யூ' என்று நன்றி சொல்லிக்கொண்டு நிற்பவள், வழக்கமாக வரும் சைனாக்காரி. இரண்டு மூன்று வயதான நபர்களை, கை பிடித்தோ தள்ளுவண்டியிலோ அழைத்துக் கொண்டு போவாள். இன்னும் ஒரு மணி இரண்டு மணி பொறுத்து அவர்கள் வாங்கிய பத்து டாலர் மளிகையை என்னவோ பொக்கிஷம் போல பாதுகாப்பாய் அவர்களிடம் கொடுத்து பஸ் ஏற்றி விடுவாள். இதோ இந்தியாக்காரி. நெற்றியில் சிவப்புப் பொட்டு. சக இந்தியரைத் தவிர, பார்த்தவருக்கெல்லாம் விவரமில்லாமல் ஒரு சிரிப்பு. 'மே ஐ ஹெல்ப் யூ?' என்று அனுமதி கேட்டு உதவி செய்கிறாள். இங்கே சில்லறை பொறுக்கிக் கொடுத்து, அங்கே கைப்பிடித்து உட்கார வைத்து, இன்னொரு சமயம் பேச்சுத் துணை கொடுத்து... இன்றைக்கு இவள் தான் சூபர் ஹிட். காலையிலிருந்து இவளைத்தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். வழவழவென்று இருக்கிறாள் கட்டை. ஈங்கிவளை யான் பெறவே.

    ம்ம்ம். மணி மூன்றடிக்கப் போகிறது. வெத்துக் கூட்டமெல்லாம் போயாகி விட்டது. எனக்கும் ஷிப்ட் முடிகிற டைம். கை கால் முகம் கழுவிக் கொண்டு, இலவச காபி ஒரு கப் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

வெளியே வந்தபோது, வாசலில் என்னைப் போல் மூன்று கிழங்கள். ஷாப்பிங் உதவி பெற்றவர்கள். பஸ் வரக் காத்துக் கொண்டிருந்தார்கள். சேர்ந்து கொண்டேன். ஏதோ பேச்சு கொடுக்க நினைத்து, அவர்கள் கையிலிருந்த ஷாப்பிங் பையைப் பார்த்து, "நிறைய மளிகை போல..?" என்றேன். மொத்தமே மூன்று டாலருக்கு மேல் இருக்காது, இருந்தாலும் கேட்டு வைத்தேன்.

"ஷாப்பிங் செய்யவா வந்தேன்? நீங்க வேறே!" என்றான் ஒருவன். "எல்லாம் அந்த வாலன்டியர் பொண்ணுங்களைத் தொட்டுப் பார்க்கத்தான்" என்றான் இன்னொருவன். "எப்பவும் நம்ம ஊர் வெள்ளச்சிகளையும் கறுப்பிகளையும் தொட்டுத் தொட்டு, இது பரவாயில்லை.. புது மாதிரி. பட்டால் தான் சுகம்" "அந்த சைனாக்காரி ஸ்கர்ட் படபடனு ஆடுறப்ப இருபது வருஷம் கழிச்சு பிறக்காம போயிட்டமேனு தோணிச்சு" "இந்தியாக்காரி அடுத்த வாரமும் வராளாம். விடக்கூடாது" "மே ஐ ஹெல்ப்னு குனிஞ்சு குனிஞ்சு சிரிக்கிறாபா. என் கையைப் பிடிச்சு உட்கார வச்சப்ப, சொக்கிட்டேன்" "ஓ, அவளா? டாப்ஸ்" "வேணும்னே சில்லறையைத் தவற விட்டேனே, பாத்தியா? பொறுக்கி எடுத்து கொடுத்தா, கண்ணுக்குக் குளிர்ச்சி. சில்லறையை கைல பட்டுக்கிட்டே குடுத்தாபா" "அடுத்த வாரம், என்னை பாத்ரூம் கொண்டு விடச் சொல்லணும்".

"வயசான காலத்துல இப்படிக் கிடைச்சாத்தான் உண்டு" என்றபடி நானும் சிரித்தேன். பஸ் வந்து விட்டது.

2012/03/15

முட்சுமை



    சேன்ப்ரேன்சிஸ்கோ விமான நிலையத்தருகே பெரிய ஹோட்டலின் பதினேழாவது மாடியில், சிறப்பு விருந்தினருக்கான தனிப்பட்ட ஓய்வறையின் சொகுசு நாற்காலிகள் ஒன்றில் உட்கார்ந்திருக்கிறேன். வெளியே கண் படும் தொலைவில் கடலலைகள். முழு நிலவை விழுங்க முயல்வது போல் தாவி ஓய்ந்து போகும் அலைகளை ஒன்றிரண்டு நிமிடங்கள் கவனித்து விட்டு, நானும் அந்த அலைகளைப் போல் எதையோ எண்ணி எண்ணி அடைய முயற்சித்து ஓய்ந்து போவது போல் உணர்ந்தேன்.

அறையின் extravagant ambiance தாக்கியது. அறையில் ஐந்து பேர் கூட இல்லை. எதிரே private bar with inviting decor என்னை வா என்றது. Bar அருகே இருந்த சொகுசு சாய்வு நாற்காலியில், பெர்முடா நிஜாரும் டிசைனர் சட்டையும் அணிந்த, காலை உயர்த்தித் தொடை தெரியும்படி உட்கார்ந்திருந்தவரைத் தற்செயலாகக் கவனித்தேன். மது அருந்தியபடி என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார் என்பதையும் கவனித்து விட்டேன். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது. பத்தடி தள்ளி உட்கார்ந்திருந்த இன்னொருவன் இவரைக் கண்காணித்துக் கொணிடிருந்ததையும் கவனித்தேன். Bodyguard! 'யாரிந்த socialite bitch?' என்று நினைத்தபடி bartender தோன்றும்வரை நின்றேன். சுவரில் நீல LEDயில் நேரத்தைக் கவனித்தேன். இரவு ஒரு மணியாகப் போகிறது. இவர் ஏன் இப்படித் தனியாக உட்கார்ந்திருக்கிறார்? நினைத்து முடிக்குமுன் bartender தோன்றி 'என்ன வேண்டும்?' என்றான். "லபோய்க் இருக்கிறதா?" என்று கேட்டேன்.

என்னைப் பார்த்துப் புன்னகை செய்தவரைப் பார்த்தேன். "Thanks, may I?" என்று அவர் புன்னகையில் இருந்த அழைப்பை உறுதிப்படுத்துவது போல் கேட்டேன். எதிரே உட்கார்ந்தேன். கை குலுக்கி அறிமுகம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்று தயங்கிய போது, அவர் மெல்லிய கையுறை அணிந்திருந்ததைக் கவனித்தேன். கைகுலுக்கவில்லை. என் பெயரைச் சொல்லிக் கோப்பையை உயர்த்தி, "cheers" என்றேன். "Luciana" தன் முதற்பெயரை மட்டும் சொல்லி, பதிலுக்கு "cheers" என்றார். இவரை எங்கே பார்த்திருக்கிறேன்?

"ஸ்காச் அருந்துபவரா?" என்றார்.

"ஸ்காச் விரும்புகிறவன்" என்றேன்.

சிரித்தார். "You don't like wine either?". அவர் கையில் இருந்த கோப்பையில் சிவப்பு wine.

"I love red wine. Cabernet, particularly. But the flavonoids in red wine seem to give me nasty headaches. I don't believe in drinking any kind of blanc. So i gave up wine... but a good scotch can be sublime, you know?"

என்னுடைய பதிலை ரசித்தவர் போல், "connoisseur of fine spirits" என்றார்.

"Nah, just a misfit epicurean" என்றேன்.

விஸ்கியில் கீழுதட்டையும் மேல்நாக்கையும் மட்டும் நாசூக்காக நனைத்து எடுத்து சாராயக் காட்டம் என்னுள் பரவ ஆயத்தமானேன். நீர், சோடா, பனிக்கட்டி எதுவும் கலவாத உயர்ந்த ரக விஸ்கி சாப்பிடுவது ஒரு கலை. ஒரு வாயில் விழுங்கி விடலாம். அப்படி செய்தால் விஸ்கிக்கும் அவமரியாதை, உடனிருப்பவருக்கும் அவமரியாதை. போதாததற்கு கழுத்திலிருந்து தலை வரை மின்வேகத்தில் ஏறிப் பரவும் போதையான சாராய எரிச்சலைக் கட்டுப்படுத்த வேண்டிய தொல்லை. அவசரப்பட்டு அருந்துவதால் என்ன சுகம்?

என்ன வேலையாக மேற்கே வந்திருப்பதாகக் கேட்டார். வேலை தேடி வந்திருப்பதாகச் சொன்னேன். இதற்கு முன் வேலை பார்த்த அனுபவத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, கதவைத் திறந்து வந்த ஒருவர் நேராக barக்கு வந்து இரண்டு பீர் தரச்சொல்லிவிட்டு, எங்களருகே வந்து அமர்ந்தார்.

'Howdy? I'm Chuck' என்றார் எங்களைப் பார்த்து. "What do you do to be able afford that scotch, in a free beer society?" என்றார் என்னைப் பார்த்து. லூசியைப் பார்த்து, "oh, my! drinking with celebrity!" என்றார்.

celebrityயா? யாரிந்தப் பெண்மணி?

சிரித்தபடி லூசி என்னைச் சுட்டிக்காட்டி, "ஐயாவுக்கு வேலை போய்விட்டது. அதனால் தான் ஸ்காட்ச் குடிக்கிறார்" என்றார்.

"Unemployed? It's all because of the fucking liberals. People are hitting the street and the President is talking pie in the sky" என்ற சக், என்னைப் பார்த்து "You look Indian. Don't tell me your job got outsourced, eh?" என்றார்.

"What do liberals or conservatives have to do with the abyss we are in, or my job loss?" என்றேன்.

"அதுவும் சரிதான்" என்றார் லூசி. "அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிச்சேவை நிறுவனங்களுடன் நாற்பது வருடங்களுக்கு மேல் ஏற்பட்ட பழக்கம் இனி மாறப்போவதில்லை. முதலில் சைனா. பிறகு இந்தியா. அடுத்தது வேறு ஏதாவது நாடு"

"அமெரிக்கப் பணம் இந்த புறம்போக்கு நாடுகளுக்கெல்லாம் போய், நம் பிள்ளைகள் பிச்சையெடுக்கும்படி ஆகிவிட்டது. பதிலுக்கு ஏதாவது செய்கிறார்களா? பின்லாடினையும் தீவிரவாதிகளையும் வளர்த்து ஆளாக்குகிறார்கள், நன்றி கெட்ட நாடுகள்" என்றார் சக்.

"அமெரிக்கப் பணம் இந்த நாடுகளுக்குப் போனது உண்மை. அதனால் அந்த நாட்டவர்கள் சிலர் செல்வந்தர்களாகி இருக்கலாம். ஆனால் இந்த நாடுகளுக்கு தொழிலனுப்பிப் பெருமளவில் லாபம் சம்பாதித்து பிலியனேர்ஸ் ஆனவர்கள் அமெரிக்கர்கள் தானே? இன்றைக்கு அமெரிக்கப் பிள்ளைகள் பிச்சையெடுக்கும் நிலை உருவாகும் சாத்தியம் உள்ளதென்றால், அதற்குக் காரணம் அமெரிக்க சர்வாதிகாரித்தன வெளியுறவுக் கொள்கைகள் தான் என்று நினைக்கிறேன். வியட்னாம், ஆப்கேனிஸ்தான், இராக் என்று வரிசையாக தோல்வியடைந்த போர்களின் விளைவு தானே?" என்றேன்.

"தோல்வியா? அமெரிக்கர்களுக்குத் தோல்வி என்றைக்குமே கிடையாது" என்றார் சக்.

"வெற்றி என்றால் நாம் சம்பாதித்த லாபங்கள் எங்கே போனதென்று சொல்லுங்கள்?" என்று சேர்ந்துகொண்டார் லூசி.

"எல்லாம் அந்த ரிபப்லிகன் தேவடியா பசங்க செஞ்ச வேலை. பேராசைக்கு ஒரு அளவே இல்லை" என்றார் சக். அவரை வியப்புடன் பார்த்தேன். ஒபாமாவைச் சாடியவர் எதிர்கட்சியையும் திட்டுகிறாரே? இரண்டு புட்டிகள் பீர் பருகி விட்டிருந்ததில் அவரிடத்தில் ஒரு நிதானம் தென்பட்டது. என் பார்வையைப் புரிந்து கொண்டவர் போல், "why? you reckon me to be a rich conservative redneck catholic pedophile?" என்றார்.

"That's quite a coverage, who are you then, Canadian?" என்றேன். சிரித்தார்கள். "அமெரிக்காவிற்கு என்ன குறை?" என்றேன்.

"அமெரிக்காவிற்கு எதில் குறை என்று கேளுங்கள். எல்லாவற்றிலும் தான். ஒரு காலத்தில் உலகமே நம்மை வியந்து பாராட்டிக் கொண்டிருந்தது. இன்றைக்கு படிப்பிலிருந்து பணவசதி வரை எல்லோரையும் துரத்திக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தை நினைக்காமல் என்னென்னவோ செய்து விட்டோம். கார் தயாரிக்கிறேன் பேர்வழி என்று டிட்ராயட் தேவடியா பசங்க நம் நாட்டை எந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள் பாருங்கள். நீங்கள் சொன்ன வியட்னாம், ஆப்கானிஸ்தான், ஐரேக் எல்லாமே எண்ணையின் அடிப்படையில் நிகழ்ந்த போர்கள் தானே? எங்கே என் பேரக் குழந்தைகள் காலத்தில் அமெரிக்காவில் வேலை கிடைக்காமல் அவர்கள் எல்லாம் சைனா இந்தியா என்று போக வேண்டியிருக்குமோ என்று தோன்றுகிறது" என்றார் சக்.

"போனால் என்ன? வளர்ச்சியும் செல்வமும் எங்கே இருக்கிறதோ அங்கே போவதில் என்ன தவறு? நம் மூதாதையர்கள் செல்வமும் சுகமும் தேடி இங்கே ஓடி வந்தவர்கள் தானே?" என்றார் லூசி.

"எனக்கென்னவோ அமெரிக்காவின் இன்றைய சரிவு தற்காலிகமானதென்று தான் தோன்றுகிறது" என்றேன். "அமெரிக்காவை நம்பி மற்ற நாடுகள் இருப்பது உண்மையென்றால் அந்த நாடுகளில் அமெரிக்காவை விட வாழ்க்கை நிலை உயர வாய்ப்பே இல்லை. அமெரிக்கா has a first-mover spirit that is uncompromising. We have strong roots in innovation. அதனால் அமெரிக்காவின் எதிர்காலம் நன்றாகத்தான் இருக்கும். Our posterity has it safe and sound, right here in America" என்றேன்.

"I'll drink to that" என்று நான்காவது பீர் புட்டியைத் தீர்த்தார். "Excuse me" என்று எழுந்து விலகினார். லூசியைப் பார்த்தேன். "Another drink?" என்றார்.

"Sure" என்றேன்.

"Allow me" என்று நான் என்ன சொல்லியும் கேட்காமல் என் விஸ்கிக்கான கணக்கை ஏற்றுக் கொண்டார். "இன்றைக்கு என் பிறந்த நாள். I want to share a birthday drink" என்றார்.

"Happy birthday, young lady" என்ற குரலைக் கேட்டுத் திரும்பினோம். சக் பாத்ரூம் சென்று திரும்பியிருந்தார். "I'll have one on your tab as well" என்றார். இன்னொரு பீர் தரவழைத்து, "So how old is the young lady?" என்றார், தன் அனாகரீகக் கேள்வியைப் பற்றிக் கவலைப்படாமல். என் அதிர்ச்சியைப் புரிந்து கொண்டவள் போல் லூசி, "Ain't that relative?" என்றாள்.

"What is relative ?" என்றார் சக்.

"வயது தான். பத்து என்பதும் நாற்பது என்பதும் நாம் பயன்படுத்தும் அளவையும் வடித்த கணித முறைகளையும் பொறுத்தது தானே? ஆறு மாதத்துக்கு ஒரு முறை வயது கூடி முப்பது வயதுக்காரர் அறுபது வயதானால், முதுமையடைந்ததாகுமா? வருடத்துக்கு எழுனூறு நாட்கள் என்று கணக்கு வைத்து அறுபது வயதுக்காரர் முப்பது வயதானால், இளமையடைந்ததாகுமா?" என்றார்.

"Interesting theory" என்றேன்.

"அதுவும் சரிதான். என்னைக் கேட்டால், உடலுறவு கொள்ள முடியும் வரை வயதைப் பற்றிக் கவலைப்படுவதில் ஒரு பொருளும் இல்லை. இளமையாவது முதுமையாவது? Libido defines age" என்றார் சக்.

"Another perspective" என்றார் லூசி.

"Speaking of which, I never had anyone from India known to me in this kind of setting" என்றார் சக், என்னைப் பார்த்தபடி. என்னிடம் ஏதோ கேட்கப் போகிறார் என்பது புரிந்தது. "Is it true that Indian men have longer and stronger, you know, over there?" என்று என் இடுப்புக்குக் கீழே நோட்டம் விட்டார்.

"That's a myth" என்றேன்.

"Really? I have heard that Africans, Arabs and Indians have a longer and thicker endowment" என்றார் சக்.

"வெள்ளையரல்லாதவர் எவரையும் அந்த விஷயத்தில் இது போன்று சந்தேகப்படுவது பொதுவென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி அங்கே மட்டும் அளவுக்கதிகமாக இருந்தால் மனித வடிவின் geometric harmony becomes flawed. Are you familiar with the Vitruvian Man?" என்றேன்.

"Wasn't that Da Vinci?" என்றார் லூசி.

"The movie?" என்றார் சக்.

"No. Leonardo Da Vinci. He believed that the harmonious arrangement of human body could help explain the geometric harmony of our universe. மனித உடலின் எல்லா உறுப்புகளும் மனிதனின் மொத்த அளவின் ஒரு விகிதக் கணக்கில் அடங்கும். உதாரணமாக, மனிதனுடைய விரிந்த கரங்களின் வலது கை நுனியிலிருந்து இடது கை நுனிவரை அளந்தால், அது அவனுடைய உயரத்துக்குச் சமமாக இருக்கும். மனிதனுடைய காதளவு அவன் முகத்தளவில் மூன்றில் ஒரு பங்கு. மனிதனுடைய காலளவு அவனுடைய உயரத்தில் ஆறில் ஒரு பங்கு. இந்த விகிதாசாரம் வெள்ளையரானாலும் கறுப்பரானாலும் மாறுவதில்லை. உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் அளவுக்கதிகமாக வளருவதென்பதெல்லாம் நம்ப முடியாதது" என்றேன்.

"Darn" என்று சிரித்தார் லூசி. "Well, it's been a fine evening gentlemen. Goodluck with your job" என்றபடி எங்கள் பதிலுக்குக் கூடக் காத்திராமல் எழுந்து கிளம்பினார். அருகிலிருந்த bodyguard அவளைத் தொடர்ந்தான்.



    மேற்கண்டது 2009ல் எழுதிய ஒரு பதிவிலிருந்து பிரித்துச் சற்றே திருத்தியது. மீள்பதிவுக்கு இரண்டு காரணங்கள். வேறு விஷயம் கிடைக்காதது முதல் காரணம். லூசியானா சமீபத்தில் இறந்து போனது இரண்டாவது காரணம்.

என்னை விட மிக உயர்ந்த வட்டங்களில் தொற்றிக் கொண்டாவது வாழ்வது என்று அடாவடிக் கூத்தடித்த நாட்களில் என்னென்னவோ செய்திருக்கிறேன், எத்தனையோ பேரை சந்தித்திருக்கிறேன். அந்த வாழ்க்கை திடீரென்று சரிந்து என்னை நான் உணரத்தொடங்கிய ஆரம்ப நாட்களில் நிகழ்ந்த சம்பவம் - லூசியானாவைச் சந்தித்தது. லூசியானாவுக்கு இன்னொரு பிரபல அசல் பெயர் உண்டு.

'எங்கேயோ பார்த்திருக்கிறேனே?' என்று நான் அடையாளம் தெரியாமல் குழம்பியதற்குக் காரணங்கள் நிறைய உண்டு. என்னுடைய தனிப்பட்ட சிக்கல், அரைத்தூக்கம், அவரை மேகப் இல்லாமல் பார்த்தது இவையெல்லாம் சாதாரணக் காரணங்கள். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் ஏற்கனவே விழுந்து விட்ட நட்சத்திரம் என்பது ஒரு காரணம். அடங்கும் தணல், நட்சத்திரங்களுக்கு உகந்த அடையாளமல்ல. இன்னொரு காரணம்: அவருடைய முகம்! போதைப்பொருள் உபயோகம் அவர் முகத்தின் வயதை முப்பது வருடங்களாவது கூட்டியிருந்தது. போதைப்பொருள் தன் கொடுமையான விரலால் அவர் முகத்தில் கீறிவிட்டிருந்த கொடுமையான சித்திரம்.. காரணம். அவர் அகன்றதும் பார்டென்டர் சொல்லித்தான் அவர் யாரென்றுத் தெரிந்து கொண்டேன்.

கலைஞர்களுடன் தொழில் முறையில் பழகும் வாய்ப்பு கிடைத்த அந்த சொற்ப தினங்களில் நிறைய வளரும்/வளர்ந்த கலைஞர்கள் சர்வசாதாரணமாகக் கோகேய்ன் உபயோகிப்பதைப் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துப் பேச்சுக் கொடுத்தால், உலக நடப்புகளைப் பற்றியும் சித்தாந்தங்கள் பற்றியும் பிரமிக்க வைக்கும் intellectual ஆழத்துடன் பேசுவார்கள்.

லூசியானாவின் உரையாடலும் அப்படிச் சில பரிமாணங்களைத் தொட்டது. இவருக்கு என்ன குறை? நான் தெரிந்து கொண்ட வரையில் குறையில்லாத பிள்ளைப்பிராயம், பிரபலங்களின் உறவுமுறை, தரமான கல்வி.. எல்லாவற்றுக்கும் மேல் மேதைமை. எப்படிப்பட்டக் குரல்! ஆண் பாடகர்களுக்கு இணையாக சம்பாதித்தவர். (எல்லா இடங்களிலும் இதே கதை தான். ஒரே வேலை செய்யும் பெண்ணைவிட ஆணுக்கு சம்பளம் அதிகம்). மடானாவும் இவரும் அமெரிக்க பாப் இசைக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, எண்பதுகளில் போட்டுக் கொடுத்தப் பாதைகளில் இன்றைக்கு எத்தனை பேர் வெற்றிகரமாகப் பயணம் செய்கிறார்கள்!

நாற்பத்தெட்டு வயதில் இறந்து போயிருக்கிறார்! மிகையான போதைப்பொருள் உபயோகம். கலைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது சாதாரணம் என்றாலும், சிலர் எப்படியோ அதைக் கட்டுப்படுத்தி தங்களின் உண்மையான அடையாளம் என்னவென்று தெரிந்து கொண்டு அதைத் தேடிப் போகிறார்கள். பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகி அழிந்து போகிறார்கள். உலகக் கலைத்துறையில் போதைப் பொருளின் பரவல் மிக வேதனைக்குரியது. படைப்பாற்றல் எத்தனை மகத்தானது! அதை இப்படி இழப்பது எத்தனை கொடுமை!

இவருடன் ஒரு கணம் socialize செய்தது மென்மையாக உறுத்துகிறது. பலர் பூந்தோட்டமாகப் பிறந்து வாழ்கிறார்கள். சிலர் பூக்களைத் துறந்து முள்ளை மட்டும் பிரியத்துடன் சுமக்கிறார்கள். அழிக்கப்பட்ட ஓவியத்தில் எந்தவித அழகும் இல்லை. sad.

இவருடைய போதைப் பொருள் பழக்கமும் அன்பற்றக் கணவன் மேல் பொதுவில் விவரிக்கப்பட்ட விடாப்பிடியானப் பற்றுதலும் இவர் மேலிருந்த மதிப்பை அழித்துவிட்டன என்றாலும் இவர் குரலை அவ்வப்போது விரும்பிக் கேட்பதுண்டு. இவரின் இந்தப் பாடலைக் கேட்டபடி ஒரு வருடம் மேரதான் ஓட்டத்தின் சோர்வைப் போக்கிக் கொண்டது நினைவுக்கு வருகிறது. பூவைத் துறந்து முள்ளை மட்டும் சுமந்தக் கொடிக்கு ஒரு சிறிய மலர்.



2012/03/10

நிம்மதி



    'what now?' என்றவனை வெறியோடு பார்த்தேன். என் வீட்டில் என் கண்ணெதிரே என் மனைவியை அம்மணமாகப் புணர்ந்துவிட்டு, என்னிடமே 'வாட் நௌ?' என்னும் இந்தப் புறம்போக்குச் சொறிநாயை வெட்டிப் போடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேனே? ஏற்கனவே அவன் முகத்தில் இஸ்திரிப் பெட்டி எறிந்து ஏற்பட்ட ரத்தக்காயத்தால் விளையக்கூடியச் சட்டரீதிச் சிக்கலின் சாத்தியம், என் வெறியைச் சற்று அடக்கியது.

    ழக்கறிஞர் மாநாட்டிற்கு நான்கு நாட்கள் மெம்பிஸ் போய்த் தங்க வேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டுப் போயிருந்தேன். எதிர்பாராமல் வாய்தா விழுந்த செய்தி கிடைத்து அவசரமாகக் காரில் வீடு திரும்பிய போது பிற்பகலாகி விட்டது. கான்பரன்ஸ் ஹோட்டல் அறையைக் கூட காலி செய்ய நேரமில்லை. போட்டது போட்டபடி ஓடி வந்தேன். வீட்டுள் நுழைந்ததுமே என் சந்தேக ஏன்டனா உயிர்த்தது. குரல் கொடுக்க நினைத்தவன், குரல் கேட்டுச் சுதாரித்தேன்.

நான் உள்ளே நுழைந்ததை அவர்கள் கவனித்திருக்க முடியாது. படுக்கையறையிலிருந்து வந்தக் குரல்களைத் தொடர்ந்தேன். சிரிப்பும் கிறக்கமும் விட்டு விட்டு வந்த இரட்டைக்கிளவி முனகலும் என் நெஞ்சைக் கிழித்தன. என் மனைவியா? கள்ளக்காதலா? யாரவன்? சமையலறையில் கண்ணெதிரே கிடந்தக் கத்தியை எடுத்துக் கொண்டு அடி மேல் அடி வைத்தேன்.

"ஏன் என்னவோ போலிருக்கே? உனக்குத் திருப்தியில்லையா கண்ணா?" இது என் மனைவி. எப்படிக் கொஞ்சுகிறாள் கிராதகி!

"சேசே! அது இல்லைடா" இது ஆண். என் பெண்டாட்டியைச் செல்லமாக டா போட்டுப் பேசுகிறான். நாய்.

"பின்னே என்னவாம்?"

"எனக்கு நீ இப்பவும் வேணும், எப்பவும் வேணும். என் கூட வந்துடு. இப்படித் திருட்டுத்தனமா எவ்வளவு நாள்.."

"நான் வெளியே வரேன்"

"அதையே சொல்லிட்டிருந்தா எப்படி? என்ன தயக்கம் உனக்கு?"

"இப்ப அதையெல்லாம் இழுத்து ஏன் மூட் அவுட்டாக்குறே? இன்னும் ஆறு மாசம் பொறுத்துக்க செல்லம்" அடிப்பாவி! ஆறு மாசமா? என்ன செய்யப்போறே?

"இதையே அஞ்சு வருசமா சொல்லிட்டிருக்கியே? சொன்னா கேளு நீ வெளில வந்தின்னா நான் உன்னைக் கண் கலங்காம காப்பாத்துவேன்" தாழி.. அஞ்சு வருசமாவா நடக்குது?

"நீ ஒண்ணும் காப்பாத்த வேணாம். நானே பாத்துக்குவேன்" ..புடுங்குவே. பத்து காசு சம்பாதிக்க வக்கில்லாம, நான் போடற எச்ச ரொட்டியைத் தெனம் தின்ற நீயாவது.. உன்னைக் காப்பாத்துறதாவது?

"நான் சீரியசா பேசுறேன். என்னை நம்பி நீ இல்லைனு தெரியும். இருந்தாலும் நான் உனக்கு உதவியா இருக்கக் கூடாதா? நானுந்தானே உன்னைக் காதலிக்கிறேன்? தினம் உன் முகத்துல முழிச்சு உன் முகத்தைப் பாத்துகிட்டே தூங்க ஆசைப்படுறேன். வாழ்க்கைல காதல் அடிக்கடி வராது. நாம காதலிக்கத் தொடங்கின பிறகும் இந்த மாதிரி வாழுறது சரியா சொல்லு?" சைத்தான்! இவனும் டயலாக் விடுறானே?

"நானும் உன்னைக் காதலிக்கிறேன். என் வாழ்க்கைல இனிமைனு எதையாவது சொல்லணும்னா உன்னோடு பழகுற நேரங்கள் தான். உன் குரல், உன் பார்வை, உன் அணைப்பு. இப்போதைக்கு அந்த இனிமையிலே கொஞ்ச நாள் இருப்போமே?" வாழ்க்கையில் இனிமை இன்னொருத்தனைத் தொட்டதா? தேவடியா முண்டை! என்னமா பேசுறா?

"காதல், இனிமைனு எப்பவும் டயலாக் விட்டுகிட்டே இருக்கே. செயல்ல இறங்க மாட்றியே?"

"செயல்ல இறங்கிட்டா போச்சு" என்ற அவள் குரலைத் தொடர்ந்து சில நொடிகள் மௌனம். பிறகு சிணுங்கல்களும் முனகல்களும் தொடங்கி மறுபடி அமைதி. சில நொடிகளில் வேகமான மூச்சோசை கேட்க.. இதான் செயலா? என்னால் பொறுக்க முடியவில்லை. கதவை உதைத்துத் திறந்தேன்.

அவன் கட்டிலில் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தான். அவள் அவனுடைய வயிற்றை ஒட்டிக் கொண்டு, கால்களைக் குறுக்கி அவன் மேல் உட்கார்ந்து, அவன் தோள்களில் கைகளைப் பொருத்தியிருந்தாள். அவன் அவளுடைய முதுகைத் தன்னுடன் சேர்த்தழுத்தி அணைத்திருந்தான். துளிக்கூட உடையில்லாமல், சிவசக்தி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

என்னைப் பார்த்துத் திடுக்கிட்டு விலகினார்கள்.

யோசிக்காமல் கையிலிருந்தக் கத்தியை வேகமாக அவள் மேல் எறிந்தேன். அவன் சுதாரித்து, ஒரு தலையணையால் அதைத் தட்டிவிட்டான். அவள் அவசரமாகக் கட்டிலிலிருந்து இறங்கி மூலைக்கு ஓடினாள். நான் ஆத்திரத்தோடு சுற்றும் பார்த்து, மேசை மேலிருந்த இஸ்திரிப் பெட்டியை எடுத்து அவன் மேல் வீசி எறிந்தேன். காதுக்கும் நெற்றிக்கும் இடைப்பட்ட மண்டைப் பிரதேசத்தில் சரியாகக் குத்திக் கிழித்து கீழே விழுந்தது. ரத்தம் கசியத் தொடங்கியச் சில நொடிகளில் அவன் நிலகுலைந்து விழுந்தான்.

என் மனைவி கைகளை வீசிக் கூச்சல் போட்டு அலறிய போது, காளி போலிருந்தாள். மூலையிலிருந்த ஸ்கைலைட் திறக்கும் கழியை எடுத்து என்னைத் தாக்க ஓடி வந்தாள். தடுத்து அவளையும் கீழே தள்ளினேன். வந்த ஆத்திரத்தில் கழியைப் பிடுங்கி அவள் தோளிலும் முதுகிலும் நாலு அடி வைத்தேன். "தூ! மானங்கெட்டப் பன்னி! பஜாரி! பொறுக்கி முண்டை!" என்றேன்.

ஒன்றுமில்லாததற்கு ஊரைக் கூட்டிக் கத்திக் கூச்சல் போடுகிறவன், இதற்குச் சும்மா இருப்பேனா? நான் அலறிய அலறலில், சீறிப் பாய்ந்த கெட்ட வார்த்தைகளில், அடித்த அடியில்.. நடுங்கிப் போனாள் நிர்வாணக் காளி. உடலில் துணியில்லாததைக் கூட மறந்து வெலவெலத்துப் போனாள். அழத் தொடங்கினாள். ஆத்திரம் குறையாமல், கழியை அவள் மேலேயே எறிந்தேன்.

கதவை அறைந்து மூடிவிட்டு ஹாலுக்கு வந்தேன். அலைபாய்ந்தேன். செத்து கித்து வைக்கப் போகிறான்! சில நிமிடங்கள் பொறுத்து, படுக்கையறைக்குள் மெள்ள நுழைந்தேன்.

பேருக்கு உடையணிந்திருந்த மனைவி, அவனைக் கைத்தாங்கலாக உட்காரவைத்து, அவனுடையக் காயத்தைத் துடைத்துக் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தாள். தரையெல்லாம் காயத்துணி. அதிகம் இல்லையென்றாலும் அங்கங்கே ரத்தத்திட்டு. அவன் முனகினான். ரத்தம் கொட்டுவது நின்றுவிட்டிருந்தது. அப்பாடி! என் மனைவி என்னைப் பார்த்துவிட்டு, "மிருகமே!" என்று சீறினாள். "கெட் அவுட்!" என்று கத்தினாள். காயத்துணிகளைத் திரட்டி என் மேல் வீசி எறிந்தாள். "கெட் அவுட்!" என்றாள் மறுபடி. "இது என்னோட வீடுறி, ஓடுகாலி!" என்றேன். அவள் அவனுக்குப் பணிவிடை செய்வதைக் காணப் பொறுக்காமல், ஹாலுக்கு வந்து சோபாவில் விழுந்தேன்.

அரைமணி கழித்து என் எதிரில் வந்து அமர்ந்தான். பின்னால் நின்றுகொண்டு அவன் தலையைப் பிடித்து விட்டாள் மனைவி. பாவி. உனக்கு எவ்வளவு செய்திருக்கிறேன்! ஒரு நாளாவது எனக்கு இதமாக ஏதாவது செய்திருக்கிறாயா? நன்றி கெட்டவளே! அவர்களை மனதுள் தோலுரித்துச் சுண்ணாம்பு தடவினேன். உடல் துண்டுகளைப் பிய்த்துப் பெருச்சாளிகளுக்கு எறிந்தேன்.

என்னை நேராகப் பார்த்தான். பிறகு அமைதியாக, "what now?" என்றான்.

    what now, what now, யாரிடம் கேட்கிறான் what now? எத்தனை திமிர்! அவன் கண்களைக் கடித்துக் குதறித் துப்ப வேண்டும் போலிருந்தது. எப்படிப் பார்க்கிறான் என் மனைவியை! அவனுக்கு உடனடியாகப் பதில் சொல்லப் பிடிக்காமல் கண்களை மூடிச் சோபாவில் சரிந்தேன்.

என் மனைவி! என் மகன் உருவானத் தருணத்தில் கூட உடலில் துணியோடு என்னைப் புணர்ந்த என் மனைவி! இன்று என் கண்ணெதிரே இன்னொருவனுடன் அம்மணமாக... என்ன அக்கிரமம்! எனக்குள் ஆத்திரமும் அவமானமும் பொங்கியது.

என் மனைவிக்கும் எனக்கும் உறவு இருந்ததாக நினைவில்லை. உண்மையில் கல்யாண நாளிலிருந்தே உறவில்லை எனலாம். என்னவோ இழவு கல்யாணம், இழவு முதலிரவு என்றுதான் கழிந்தது. உடலுறவில் கொஞ்சம் கூட ஆர்வமோ வேகமோ இல்லாதிருப்பாள். சிறு குழந்தைகளுக்கு விரிக்கும் ரப்பர் ஷீட் போல இருக்கும், அவள் மேல் படுத்தால். உணர்ச்சி இல்லாத ஜடம். ஒரு தடவை கூடத் தானாக முத்தமோ அணைப்போ எதுவுமே செய்ததில்லை. என் தேவை தீர நானாகவே வலியத் தொட்டுத் தடவி எல்லாம் செய்வேன். எரிச்சலாக வரும். ஏனென்று கேட்டால்... பழகவில்லை, பேசவில்லை, நெருக்கம் வளரவில்லை, அன்பில்லை, மனமில்லை, தலைவலி என்று என்னவோ உளறுவாள். இல்லையென்றால் என் வேகத்தில் அரண்டு போவாள். ஹ்ம்ம்ம்... என்ன உறவு இது? ஏதோ கடமைக்குச் செய்து உருவான கருவும் கலைந்து விட்டது. ஆனால் இன்றைக்கு... இன்றைக்கு... எவனோ ஒருவனுடன்... வாழ்வின் இனிமை என்று வசனம் பேசிக்கொண்டு கலக்கிறாளே?

திருமணமான பின் இன்னொருவர் மீது காதல் தோன்றுவது இயற்கையாக இருக்கலாம். என் உலகில் அப்படியில்லை. என் மனைவி என்னை மட்டுமே விரும்பி, என் சொல் கேட்டு, பிடிக்காவிட்டாலும் உடன்பட்டு, அடங்கி நடப்பதையே விரும்புகிறேன். நான் வா என்றால் வர வேண்டும்; சமை என்றால் சோறாக்க வேண்டும்; படு என்றால் படுக்க வேண்டும். பின் தூங்கி முன் எழ வேண்டும். அவ்வப்போது என்னை நன்றியோடுப் புகழ வேண்டும். என்னைப் பெயர் சொல்லி அழைப்பதும் எனக்குப் பிடிக்காது. அது மரியாதை குறைவு. என் சொற்படி நடந்து என்னைச் சுகப்படுத்தவே மனைவி. பதிலுக்கு அவளுக்குச் சத்தான சோறு போடுகிறேன், தேவைக்கு மேல் புடவை நகை எடுத்துக் கொடுக்கிறேன், சினிமா பீச் போக அனுமதிக்கிறேன், ஒண்ணரை ஏக்கர் நில எட்டாயிரம் சதுரடி அழகான வீட்டில் அனைத்து வசதிகளுடன் வாழச் செய்கிறேன். இதைவிட என்ன தேவை ஒரு பெண்ணுக்கு? இப்படி இன்னொருவனுடன் காதல் கொண்டால், என் கௌரவம் என்னாவது? நான் அவளை விட்டுச் சென்றாலாவது பரவாயில்லை, நான் ஆண். இவள் என்னை விட்டுச் சென்றால் எத்தனை அவமானம்!

நான் இறந்தபின் எக்கேடோ கெட்டுப் போகட்டும், உயிருடன் இருக்கும்வரை என்னை விட்டால் நாதியில்லை என்று கிடக்க வேண்டும். அப்படித்தான் என் அம்மா, அப்பாவிடம் நடந்து கொண்டாள். என் பாட்டி தாத்தாவும் அப்படித்தான். மனைவியின் பிறந்த வீட்டிலும் அப்படித்தான். என் மனைவி மட்டும் ஏன் மாறுபட வேண்டும்? என்ன ஆனது இவளுக்கு? ஆயிரம் இருந்தாலும் கணவனை அனுசரித்து வாழ வேண்டும். அதுவே நல்ல மனைவியின் அடையாளம். நம்முடைய கலாசாரம், பண்பாடு எல்லாம் அதைத்தான் சொல்கின்றன.

பெண் விடுதலை என்ற பெயரில் பெருங்கொடுமை நடக்கிறது. சீர்திருத்தவாதிகள், கவிஞர்கள் என்று எட்டணாவுக்கு உருப்படாதவர்கள் பேச்சைக் கேட்டு.. உருப்படாத எதையெதையோ படித்து.. உருப்படாத சினிமா டிவி சீரியல் பார்த்து.. ஆண்களை விடத் தாங்கள் மேம்பட்டவர்கள் என்று நினைத்து ஏமாந்து போகிறார்கள். அதுவும் நம்மூர் பெண்கள் கொஞ்சம் படித்துவிட்டால் சிறகு முளைத்தது போலக் கிடந்துத் துள்ளுகிறார்கள். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். பிடிக்கிறதோ இல்லையோ, தாலி ஏறிவிட்டால் கனவுகளை அடக்கிக் கொண்டு, கணவன் மனம் கோணாதபடி சாகும்வரை நடக்கவேண்டும். கணவனிடம் பக்தியோடும் பணிவோடும் நடந்து கொள்ள வேண்டும். வரதட்சணை, நகைநட்டு, கல்யாணச்செலவு என்று தகப்பன் கடன்வாங்கிச் செலவழித்ததை மறக்காமல், நன்றியோடும் பொறுப்போடும் குடும்பம் நடத்த வேண்டும். அப்பொழுதுதான் உலகம் உருப்படும். புருஷனோடு வாழப்பிடிக்காமல் இன்னொருவனைக் காதலிக்கும் இவள் மாதிரி ஓடுகாலிகளைத் துருக்க தேசத்தில் செய்வார்களாமே.. அது போலக் கல்லெறிந்துக் கொல்ல வேண்டும்.

எனக்குள் ஆத்திரம் அடங்காது போலிருந்தது. விட்டது சனியன் என்று குதூகலிக்காமல் ஏன் இப்படிப் பொறுமுகிறேன்? இன்றோடு இதற்கு முடிவு கட்டவேண்டும் என்பது மட்டும் புரிந்தது. என்ன பதில் சொல்வது? என்ன செய்வது?

இவளை வீட்டை விட்டுத் துரத்தி அக்கடா என்று இருப்பதா? ஜீவனாம்சம் கேட்டால் செருப்பால் அடிக்கலாம். அடல்ட்ரி. குழந்தையும் இல்லாததால் உதவித்தொகை எதுவும் தர வேண்டியதில்லை. கட்டிய புடவைகூட நான் வாங்கிக் கொடுத்தது. அதையும் கழற்றிப் போட்டு அம்மணமாக ஓடுறி நாயே என்று அடித்து விரட்டலாம். அதே நேரம்.. இவளை அவனுடன் அனுப்பினால் அவனைக் காயப்படுத்தியதற்கு பரிகாரம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. யோசித்தேன்.

    "i'll tell you what now.. you degenerate prick.." என்றேன் அவனைப் பார்த்து. "என் வீட்டை விட்டு ஓடு. இனி இந்தப் பக்கமே வராதே. அவள் என் மனைவி. தீ வளர்த்து சத்தியம் செய்த கல்யாணம். அதை விடுவதாக இல்லை". ஏன் அப்படிச் சொன்னேன்? விட்டுத் தொலையட்டும் வியாதி என்று வினாடிகள் முன்னே நினைத்தவன், ஏன் விழுந்தேன்? ego. தேவையில்லாத கௌரவம்.

"முடியாது. இவ்வளவு நடந்தபிறகு இவளை தனியே உன்னுடன் விட்டு வர முடியாது.. நீ கொலைகாரனாக மாற நான் விரும்பவில்லை" என்றான். 'த்தா டேய்.. அட்வைஸ் வேறயா?' என்றேன் மனதுள்.

"ஆமாம்.. என்னாலும் இனிமேல் இங்கே இருக்கமுடியாது. ஐ நீட் எ டிவோர்ஸ்" என்றாள் மனைவி.

"ஐ அக்ரி" என்றான். அவள் கைகளைப் பிடிக்க முயன்றான். என்னைப் பார்த்து, "விவாகரத்துக்கான செலவெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எந்தவிதப் பண உதவியும் செய்ய வேண்டாம்" என்றான்.

என்னுள் இருந்த மிருகமா இல்லை பரம்பரைக் கண்மூடித்தனமா என்னவோ தெரியவில்லை, கொதித்தேன். என் மனைவி என்னை விட்டு விலகி, நான் இருக்கும் பொழுதே, இன்னொருவனுடன் போவதா? பொறுக்க முடியவில்லை. "முடியாது. இவள் உன்னுடன் வந்தால் போலீசுக்குச் சொல்வேன். உன் மேலும் அவள் மேலும் அடல்ட்ரி வழக்கு போடுவேன். விவாகரத்துக்குச் சம்மதம் தராமல் வருடக் கணக்கில் இழுத்தடிப்பேன். உங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டேன்" என்றேன்.

மனைவியின் முகத்தில் கோபமும் ஆற்றாமையும் வெடித்தது. அவன் என்னை அமைதியாகப் பார்த்து, "ஏன்?" என்றான்.

"வாட் டு யூ மீன்?"

"ஏன் இந்தப் பிடிவாதம்? ஏன் இந்த வரட்டுக் கௌரவம்? நீங்களிருவரும் கணவன் மனைவியாக வாழவில்லை என்பது எனக்குத் தெரியும்.."

"வாட் டு யூ மீன்?"

"வெல்.. தப்பா நினைக்காதே.. ஐ'ல் பி ப்லன்ட்.. நீ பதினஞ்சு வருஷத்துல எவ்வளவு தடவை உன் மனைவியோட உறவு கொண்டாடினயோ அதை நாங்க ரெண்டு மாசத்துல செஞ்சிருக்கோம்.."

"ஸ்டாப் இட்" என்றேன் ஆத்திரத்தோடு.

என்னைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தான். "இன் பேக்ட்.. தீ வளர்த்து சத்தியம் செஞ்சு கட்டின மனைவியை இதுவரைக்கும் நீ உடையில்லாம பார்த்தது கூட இல்லை.. சரியா?"

அந்தக் கணத்தின் அந்தச் சொற்கள் என்னை நெட்டித் தள்ளின. என்னுள் பலூன் வெடித்தது. எதிரே கண்ணாடி அலமாரியின் சேப்டி லாக்கரைத் திறந்து கைத்துப்பாக்கியை எடுத்தேன். அவனை நெஞ்சுக்கு நேராகச் சுட்டேன். திடுக்கிட்டு அலறத்தொடங்கிய மனைவியை அவசரப்படாமல் சுட்டேன்.

கொஞ்ச நேரம் திகைத்து நின்றேன்.

பிணங்களைத் தனித்தனியாக மூட்டை கட்டி கராஜ் வழியாக என் காரில் திணித்தேன். கறைகளைத் துடைத்தேன். தடங்களைத் துடைத்தேன். அறைகளை ஒழுங்குபடுத்தினேன். பேஸ்மென்டிலிருந்து கிருமிநாசினி ப்யூமிகேடரை எடுத்து வந்து அறைகளில் அடித்தேன். நாலு மணி நேர வேண்டாத வேலை. அவர்களை ஓட விட்டிருக்கலாம்.

    காரைக் கிளப்பி மெம்பிஸ் நெடுஞ்சாலையில் கலந்தேன். நல்ல வேளை கான்பரன்ஸ் ஹோட்டல் அறையைக் காலி செய்யவில்லை... அறைக்குப் போனதும் வாய்தா விவகாரம் கவனிக்கவில்லை என்று இன்றிரவு தகவல் சொல்லிவிட வேண்டும்... இனி என் மீது சந்தேகம் வராதபடி நடந்து கொண்டால் போதும். மனதுள் எண்ணங்கள் முட்டி மோதி வரிசையில் விழுந்தன.

1. கொலை நடந்தது யாருக்கும் தெரியாது
2. அவன் வீட்டில் யாராவது தேடித் தகவல் கொடுத்தால் உண்டு. தனியாளாக இருந்தால் அதுவும் சந்தேகம். என்னைத் தேடி வருவது இன்னும் சந்தேகம்
3. நான் வீடு திரும்பி நாலு நாள் பொறுத்து மனைவியைக் காணவில்லை என்று புகார் கொடுக்கலாம். பணம், காரோடு ஓடிவிட்டாள் எனலாம். ஆறு மாதம் கழித்துத் துப்பாக்கியும் காணவில்லை எனலாம். அவசரமேயில்லை
4. அதற்குள் எதிர்பாராவிதமாக ஏதாவது நிகழ்ந்தால், நான் நான்கு நாட்கள் வெளியூரில் இருந்ததற்கான அசைக்க முடியாத அத்தாட்சியும் சாட்சியும் உண்டு
5. கள்ளக்காதல் விவகாரம் என்பது எனக்கு வசதியாக மாறும். என் வீட்டில் அவனுடைய ரேகைகள் இருந்தால் கவலையில்லை. மேலும், அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டார்கள் என்ற கதை நிறைய நாள் செல்லும். பிணங்கள் கிடைக்காவிட்டால் பிரச்சினையே இல்லை.

இந்தப் பிணங்களையும் துப்பாக்கியையும் எப்படித் துறப்பது என்ற சிந்தனையுடன் சாலையில் கவனம் செலுத்தினேன். சே! இந்த டிரேபிக் நெரிசல் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. ■



2012/03/06

குதிரைக்கு ஏன் கொம்பில்லை?



    லங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. எல்லா ஜீவர்களும் புண்யாத்மாக்களாகவும் தர்மிஷ்டராகவும் இருந்து, இகத்தில் இன்பங்களை எல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர்.

அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவனாகிய பரதனுக்குப் பட்டம் கட்டாமல் தனக்கே பட்டம் கட்டிக் கொள்ள விரும்பி, தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்குப் பெருங்கோபமுண்டாகி, ராமனையும் லக்ஷ்மணனையும் ராஜ்யத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான்.

அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிப்போய், அந்நகரத்து அரசராகிய ஜனகனைச் சரணடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகைக் கண்டு மோகித்து, அவளைத் திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டகாரண்யம் புகுந்தான். அங்கு ராம லக்ஷ்மணர்கள், முனிவர்களை எல்லாம் பல விதங்களிலே ஹிம்சை செய்தனர். யாகங்களைக் கெடுத்தனர்.

இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்துவந்த சூர்பநகை தேவியின் காதில் பட்டது. ராவணனின் தங்கையாகையாலும், பிராமண குலமானபடியாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்க மாட்டாதவளாய், அவள் ராமனையும் அவன் தம்பி லக்ஷ்மணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டு வரும்படி தன் படையினிடம் உத்தரவு கொடுத்தாள். அப்படியே ராம லக்ஷ்மணரைப் பிடித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்பநகையின் சன்னிதியில் கொண்டு சேர்த்தனர். அவள் அவ்விருவரையும் கட்டவிழ்த்து விடும்படி செய்து, பல விதமான கடூர வார்த்தைகள் சொல்லி பயமுறுத்திய பிறகு, ராஜபுத்திரர்களாகவும் இளம் பிள்ளைகளாகவும் இருந்தபடியால் இதுவரை செய்த துஷ்ட காரியங்களையெல்லாம் க்ஷமிப்பதாகவும், இனிமேல் இவ்வித காரியங்கள் செய்தால் கடுந்தண்டனை கிடைக்குமென்றும் சொல்லி நானாவிதமான புத்தி புகட்டிய பின்பு, அவர்களைச் சிறிது காலம் அரண்மனையிலிருந்து விருந்துண்டு போகும்படிச் செய்தாள்.

அப்போது சீதை, ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்தான் என்றும், தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சூர்பநகையிடம் தனியாக வார்த்தை சொன்னாள். இதைக் கேட்டு சூர்பநகை மனமிரங்கி, ராமன் மறுபடியும் திருட்டாகக் கவர்ந்து கொண்டு விடக் கூடும் என்று நினைத்து, சீதையை இலங்கைக்கு அனுப்பி, அங்கிருந்து பாதுகாப்புடன் மிதிலைக்கு கொண்டு சேர்க்கும் படி அண்ணன் ராவணனுக்கு சொல்லி அனுப்பினாள்.

சீதை பத்திரமாக ராவணனுடைய அரண்மனைக்கு வந்து சேர்ந்தவுடனே, அவளை மிதிலைக்கு அனுப்ப நல்ல நாள் பார்த்தார்கள். அந்த வருஷம் முழுவதும் நல்ல நாள் அகப்படவில்லை. மறு வருஷமும் நல்ல நாள் கிடைக்கவில்லை. ஆகையால் சீதையை இரண்டு வருஷம் தனது அரண்மனையிலேயே தங்கி விட்டுப் போகும்படி ராவணன் ஆக்கினை செய்தான்.

தண்டகாரண்யத்தில் ராமன் சூர்பநகையிடம் "சீதை எங்கே?" என்று கேட்டான். மிதிலைக்கு அனுப்பி விட்டதாகச் சூர்பநகை சொன்னாள். "எப்படி நீ இந்தக் காரியம் செய்யலாம்?" என்று கோபித்து லக்ஷ்மணன் சூர்பநகையை நிந்திக்கலானான். அப்போது சூர்பநகை தன் இடுப்பில் இருந்த பழம் நறுக்கும் கத்தியை எடுத்து லக்ஷ்மணனுடைய இரண்டு காதுகளையும் கால் கட்டை விரல்களையும் நறுக்கி விட்டாள். இவளுடைய வீரச் செய்கையைக் கண்டு ராமன் இவள் மேல் மோகம் கொண்டு, "அட! சீதையைத் தான் மிதிலைக்கு அனுப்பி விட்டாய், என்னை நீ விவாகம் செய்து கொள்ளு" என்றான். இதைக் கேட்டவுடனே, சூர்பநகை கன்னமிரண்டும் சிவந்து போகும்படி வெட்கப்பட்டு "நீ அழகான பிள்ளை தான். உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் அண்ணா கோபித்துக் கொள்வார். இனிமேல் நீ இங்கிருக்கலாகாது. இருந்தால் அபவாதத்துக்கு இடமுண்டாகும்" என்றாள்.

அப்போது ராமன், "சீதையை எப்போது மிதிலைக்கு அனுப்பினாய்? யாருடன் அனுப்பினாய்? அவள் இப்போது எவ்வளவு தூரம் போயிருப்பாள்?" என்று கேட்டான். அதற்கு சூர்பநகை, "இனிமேல் சீதையின் நினைப்பை விட்டு விடு. அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பி இருக்கிறேன். அவன் அவளை மிதிலைக்கு அனுப்பக் கூடும். எது வேண்டுமானாலும் செய்யக் கூடும். மூன்றுலகத்துக்கும் அவன் அரசன். சீதையை மறந்து விடு" என்றாள். இதைக் கேட்டு ராமன், எப்படியேனும் சீதையை மீட்க வேண்டுமென்று நினைத்து அங்கிருந்து வெளியேறி, வழியில் கிஷ்கிந்தா நகரத்துக்கு வந்து சேர்ந்தான்.

அந்தக் கிஷ்கிந்தா நகரத்தில் அப்போது சுக்ரீவன் என்ற ராஜா அரசு செலுத்தி வந்தான். இவனுக்கு முன் இவனுடைய தமயனாகிய வாலி ஆண்டான். வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சிநேகம். இரண்டு பேருமே ஒரே வகுப்பில் கணக்கு வாசித்தார்கள். மூன்று உலகிலும் கப்பம் வாங்கின ராவணன் கிஷ்கிந்தா பட்டினத்துக்கு வாலி யாதொரு கப்பமும் செலுத்த வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டான். இந்த வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்ரீவன் இவன் கழுத்தை மண் வெட்டியால் வெட்டி எறிந்துவிட்டு, அவன் மனைவியாகிய தாரையை வலிமையால் மணந்து கொண்டு, அனுமான் என்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜ்ஜியத்தை வசப்படுத்திக் கொண்டான்.

இதைக் கேட்டு ராவணன் மகா கோபத்துடன், சுக்ரீவனுக்கு பின்வருமாறு ஓலை எழுதி அனுப்பினான்:
கிஷ்கிந்தையின் சுக்ரீவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது. நமது சிநேகிதனைக் கொன்றாய். உனது அண்ணனைக் கொன்றாய். அரசைத் திருடினாய். இந்த ஓலையைக் கண்டவுடன் தாரையை இலங்கையில் உள்ள கன்யா ஸ்திரீ மடத்துக்கு அனுப்ப வேண்டும். ராஜ்ஜியத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டும். நீ சந்நியாசம் பெற்றுக் கொண்டு ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறி விட வேண்டும். இந்த உத்தரவுக்கு கீழ்ப்படாத விஷயத்தில் உன் மீது படையெடுத்து வருவோம்.

உத்தரவு கண்டவுடன் சுக்ரீவன் பயந்து போய் அனுமானை நோக்கி "என்ன செய்வோம்?" என்று கேட்டான். அனுமான், "வாலியிடம் பிடித்துக் கொண்ட தாரையையும், பதினேழு வயதுக்குட்பட்ட வேறு பதினேழரை கோடிப் பெண்களையும், ராவணனுக்கு அடிமையாக அனுப்ப வேண்டும். ராவணனாலே ஆதரித்துப் போற்றப்படும் வைதீக ரிஷிகள் யாகச் செலவுக்காக நாற்பது கோடி ஐம்பது லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இருநூற்று நாற்பது ஆடு மாடுகளும், தோற் பைகளில் ஒவ்வொரு பை நாலாயிரம் படி கொள்ளக் கூடிய அளவு நானூறு கோடிப் பைகள் நிறைய சோமரசம் என்ற சாறும் அனுப்பி, அவனைச் சமாதானம் செய்து கொள்ள வேண்டும். இளவரசுப் பட்டம் அங்கதனுக்குச் சூட்டுவதாகவும், வருஷந்தோறும் நாலாயிரம் கோடிப் பொன் கப்பம் காட்டுவதாகவும் தெரிவிக்க வேண்டும். இத்தனையும் செய்தால் பிழைப்போம்" என்றான்.

சுக்ரீவன் அப்படியே எல்லாவற்றையும் சேகரம் பண்ணி, அனுமான் சொன்னபடி தூதர்களிடம் கொடுத்தனுப்பினான். தூதர்கள் ஆடு மாடுகளையும், வழியில் குடித்தது போக மிச்சமிருந்த சாறையும், ராவணன் அரண்மனையில் சேர்த்தார்கள். ஏகமாகக் குடித்து விட்டு தாறுமாறாக வேலை செய்ததால், பெண்களையும் பணத்தையும் முனிவர்களிடம் கொடுத்தார்கள். ஓலையை ராவணனிடம் கொடுத்தார்கள்.

ராவணன் தன் நண்பர்களுடன் ஆடுமாடுகளைக் கொன்று தின்று விட்டு, சாறையும் குடித்து விட்டு, ஓலையைப் பிரித்து வாசித்துப் பார்த்தான். அடிமைப் பெண்களும் பணமும் ஏன் தன் வசம் வந்து சேரவில்லை என்று விசாரணை செய்தான். அதை எல்லாம் முனிவர்களின் மடங்களில் சேர்த்து விட்டதாகவும், அவர்கள் உடனே அந்தப் பணங்களை எல்லாம் யாகத்திலே தக்ஷிணையாக்கி எடுத்துக் கொண்டபடியால் இனிமேல் திருப்பிக் கொடுப்பது சாஸ்திர விரோதமென்று சொல்லுவதாகவும், அடிமைப் பெண்கள் பெரும்பாலும் ஓடிப் போய்விட்டதாகவும், செய்தி கிடைத்தது.

கோபம் கொண்ட ராவணன், தூதர்களை உடனே கொல்லச் சொல்லிவிட்டு, அந்தக் க்ஷணமே சுக்ரீவன் மேல் படை எடுக்குமாறு சேனாதிபதியிடம் ஆக்கினை செய்தான். நல்லதென்று சொல்லி சேனாதிபதி படைகளைச் சேகரித்தான். படைகளைச் சேர்த்த பிறகு நல்ல லக்னம் பார்த்து அனுப்ப வேண்டுமென்று, ராவணன் காத்துக் கொண்டிருந்தான். இந்த விவரமெல்லாம் வேவுக்காரர் மூலமாகக் கிஷ்கிந்தைக்கு எட்டி விட்டது. உடனே அனுமான் சொற்படி சுக்ரீவன் தனது படைகளை சேர்த்தான். இதற்குள்ளே அனுமான் தன்னுடைய ஜாதி லேசான குரங்கு ஜாதியாகையினால், விரைவாக குரங்குப் படைகளைத் திரட்டிக் கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான். அந்த வழி வந்த ராம லக்ஷ்மணரும், ஆகா, நல்லதாகப் போனதென்று, அந்தக் குரங்குச் சேனையிலே போய்ச் சேர்ந்தனர்.

இவர்கள் இலங்கைக்கு வருமுன்னாகவே ராவணன் சேனையில் இருந்த ஒரு பகுதியினர், இவர்களை எதிர்த்து அநேகம் பேரைக் கொன்று முடித்து விட்டனர். ராம லக்ஷ்மணர் மாத்திரம் சேனையின் சில பகுதிகளை வைத்துக் கொண்டு, வேஷம் போட்டு ராவண சேனையுடன் கலந்து ரகசியமாக இலங்கைக்குள் வந்து நுழைந்து விட்டார்கள். உள்ளே வந்ததும் வேஷத்தைக் கலைத்தார்கள். உடனே ராவணன் 'ஹா ஹா ஹா' என்று கத்தினான். 'நமது நகரத்துக்குள் துஷ்ட மனித சேனை வருவதா? ஹா, ஹா, ஹா!' என்று பேரிரைச்சல் போட்டான். அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாகி விட்டான். சூரிய மண்டலம் தரை மேல் விழுந்தது.

ராமனுடைய சேனைகளை எல்லாம் அழித்து, அவனையும் அவன் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, பின் அவர்கள் ராஜகுமாரர் என்று இரக்கப்பட்டு அவர்களைக் கொல்லாமல் விட்டான். ராம லக்ஷ்மணர்களை இரக்கத்தினால் கொல்லாமல் விட்ட ராவணன், அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்தான். பின்னர் சில நாள் கழித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான். சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள். ஜனகன், மிகுந்த கிருபை கொண்டு, திருட்டாகக் கவர்ந்து கொண்டு போன அந்த ராமனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்தான்.

ராம லக்ஷ்மணர்கள் அயோத்திக்குப் போய், பரதனுக்கு அடி பணிந்து நடந்தார்கள். இது தான் நிஜமான ராமாயணக் கதை.


    நீங்கள் இதுவரைப் படித்தது 'குதிரைக் கொம்பு' கதையின் ஒரு கிளைக்கதை. சிலருக்கு இந்தக் கதையின் உட்கருத்து புரிந்திருக்கலாம். சிலருக்கு முற்றிலும் புதுமையாக இருந்திருக்கலாம். இதுவரை பொறுமையாகப் படித்ததற்கு நன்றி. இனி 'குதிரைக் கொம்பு' கதை.


    சிந்து தேசத்தில் ரீவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன், சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் என்று சொல்லிக் கொண்டனர். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்த பல பண்டிதர்கள் விளங்கினார்கள்.

ஒரு நாள் சபையாரை நோக்கி அரசன், 'குதிரைக்கு ஏன் கொம்பில்லை?' என்று கேட்டான். பண்டிதர்கள் எல்லோரும் திகைத்துப் போய் நிற்கையில், வக்கிரமுக சாஸ்திரி என்னும் பண்டிதர், தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். "கேளீர் ரீவண மகாராஜா, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட உமது மூதாதையர் ராவணேசுவரன் ஆக்கினைப்படி பிரம்மதேவன் குதிரைகளுக்கு கொம்பு வைக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டான்" என்றார் வக்கிரமுக சாஸ்திரி.

இதைக் கேட்டவுடன் ரீவணன் உடல் பூரித்துப் போய், "அதென்ன விஷயம்? அந்தக் கதையை விஸ்தாரமாகச் சொல்லும்" என்றான்.

அரசன் அனுமதி தந்தவுடன், மேற்படி வக்கிரமுக சாஸ்திரி "இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. எல்லா ஜீவர்களும் புண்யாத்மாக்களாகவும் தர்மிஷ்டராகவும் இருந்து, இகத்தில் இன்பங்களை எல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர்" என்று கதை சொல்லத் தொடங்கி, "இது தான் நிஜமான ராமாயணக் கதை" என்று ரீவணன் சபையிலே சொல்லி முடித்தார்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டபின், ரீவணன், "சாஸ்திரியாரே, குதிரைக்கு ஏன் கொம்பில்லை என்றால் அதற்கு மறுமொழி இன்னும் வராமல், ஏதோ கதை சொல்லி முடிக்கிறீர்களே?' என்றான்.

அதற்கு வக்கிரமுக சாஸ்திரி, "ராமன் இலங்கைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த செய்தி கேட்டு, ராவணன் 'நமது நகரத்துக்குள் துஷ்ட மனித சேனை வருவதா? ஹா, ஹா, ஹா!' என்று பேரிரைச்சல் போட்டான் என்று சொன்னேனே? அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாகி விட்டான். சூரிய மண்டலம் தரை மேல் விழுந்தது என்றும் சொன்னேனன்றோ? அப்படி விழுந்த போது, சூரியனுடைய குதிரை ஏழுக்கும் கொம்பு முறிந்து போய் விட்டது.

சூரியன் ராவணனுடைய பாதத்திலே வந்து விழுந்து, 'சுவாமி, என் குதிரைகள் சாகா வரமுடையன. இவற்றைப் போல வேறு கிடையாது. உங்கள் கூச்சல் கேட்டு பயந்து கீழே விழுந்து இவற்றுக்கு கொம்பு முறிந்து போய் விட்டது. இனி உலகத்தாரெல்லாம் என்னை நகைப்பார்களே, என்ன செய்வேன்?' என்று அழுது முறையிட்டான்.

ராவணன் அந்தச் சூரியனிடம் கிருபை கொண்டு, பிரம்ம தேவனை அழைத்து, 'இனி மேல் ஒரு குதிரைக்கும் கொம்பில்லாதபடி படைக்க வேண்டும்' என்று ஆக்கினை இட்டான். அது முதலாக இன்று வரை குதிரைக்குக் கொம்பில்லாமல் பிரம்மதேவன் படைத்து வருகிறான்" என்றார்.

இவ்விதமாக வக்கிரமுக சாஸ்திரி சொல்லியதைக் கேட்டு ரீவணன் பெரும் மகிழ்ச்சி கொண்டு மேற்படி சாஸ்திரிக்கு அக்ஷரத்துக்கு லக்ஷம் பொன்னாக, அவர் சொல்லிய கதை முழுவதிலும் எழுத்தெண்ணிப் பரிசு கொடுத்தான்.


    கதை எழுதியவர் யாரென்று கண்டுபிடிக்க முடிகிறதா? ர்யாதிரபா.


2012/03/03

நானும் கடவுளும்




1            2



    பின்னூட்டங்களுக்கு நன்றி. சென்ற பதிவில் judgmentalஆகப் பதித்தச் சொற்களை நீக்கிவிட்டேன். முடிந்தவரை இனி ஆங்கிலத்திலேயே, i mean, தமிழிலேயே எழுதுகிறேன். but seriously, அறிவுரைக்கு நன்றி :). இந்தப் பதிவை மதித்து மின்னஞ்சல் அனுப்பிய இருவருக்கும் மீண்டும் நன்றி. நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இமெயில்களைப் பொதுப் பார்வைக்கு வைக்கிறேன். பிறகு தொடர்வோம்.
**

    நாத்திகம் என்றால் 'கடவுளுக்கு எதிரி' என்ற பார்வையிலேயே ஆத்திகர்கள் பேசுகிறார்கள். ஏனென்று தெரியவில்லை. நாத்திகர்களை எதிரிகளாகவேப் பார்த்துப் பழகிவிட்டதால் இருக்கலாம். எனினும், ஆத்திகத்தின் வன்முறை நாத்திகத்தில் இல்லை என்று சொன்னால் பலருக்கும் வியப்பாக இருக்கிறது. மதத்தின் பெயரால் கொல்லப்பட்டவர்கள், நோயால் இறந்தவர்களை விட அதிகம் என்றால் நம்ப மறுக்கிறார்கள். நம்மூர் செருப்படி நாத்திகத்தை நேரில் கண்டவர்களுக்கு இது புரிவது இன்னும் சிரமம். எனினும், நம்மூரில் செருப்படி நாத்திகத்தைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டோம் என்றே நினைக்கிறேன். நம்புகிறேன்.

நாத்திகர்கள் கடவுளுக்கு எதிரியல்ல. கடவுள் தைரியமாக நாத்திகர்கள் நடுவில் வரலாம். நாத்திகர்களுக்குப் புரிந்தது, ஆத்திகர்களுக்குப் புரியாது போனது தற்காலிக வருத்தம். இது தற்காலிகம் என்றே நம்புகிறேன். என்றாலும் சிறு சங்கடம். நம் ஆயுட்காலம் தாண்டியத் தற்காலிகம் என்பதே.

இன்னும் இருநூறு வருடங்களில் தினசரி வாழ்வில் கடவுளுக்குப் பங்கிருக்காது. மதங்கள் பெரும்பாலும் ஒழிந்திருக்கும். இது என்னுடைய கணிப்பு. இருநூறு வருடம் கழித்து இது உண்மையாகி, என்னை நாத்திக நாஸ்ட்ரேடமஸ் என்றால் நான் பொறுப்பல்ல. இருந்தாலும் ஆசை விடவில்லை :).

பெயருக்கு ஆசைப்பட்டு ஜோசியம் போல் ஏதோ சொல்லிவிட்டுப் போக அறிவு இடம் தர மறுக்கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாக முடியாதது இருநூறு வருடங்களில் சாத்தியமா? சிரமம் தான். எனினும், சென்ற நூறு வருடங்களின் வளர்ச்சி பெரும் நம்பிக்கையூட்டுகிறது. இது தான் catalyst. சென்ற நூறு வருடங்களின் வளர்ச்சி தான் lever. ஆத்திகத்தைப் புரட்டி அண்டத்தில் எரியக்கூடிய lever. கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.

இருநூறு வருடங்களில் கடவுளும் மதமும் காணாமல் போக வேண்டுமென்றால் நிறைய உழைக்க வேண்டும். நாத்திகம் பரவப் பெருமுயற்சி எடுக்க வேண்டும். தெரிந்த உண்மைகளைத் தெளிவாகச் சொல்லி, தீர்மானங்களைக் கேட்பவர் பொறுப்பில் விடும் பக்குவம் வளரச் செய்ய வேண்டும்.

மலைப்பாக இருக்கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாகக் 'கண்ணைக் குத்தி' பயமுறுத்தியது மூச்சுக்காற்றோடு கலந்து விட்டது. நாத்திகத்தின் அடிப்படையே பலவீனமானது. 'கண்ணைக் குத்தாது' என்று சொன்னால் யார் மதிக்கப் போகிறார்கள்? 'அருளினால் எதுவும் வராது, உழைக்க வேண்டும்' என்றால் யார் ஏற்கப் போகிறார்கள்? 'கண்மூட வேண்டாம்' என்றால் முகத்திலேயே சிரிக்கிறார்கள். மீண்டும்.. மலைப்பாக இருக்கிறது. இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும்.
**

    "சூரியனை உண்டாக்கியது ஜீசஸ் தானே டேடி?" என்றான் மகன்.

"இல்லை" என்றேன்.

"அப்ப இந்துக் கடவுள் உருவாக்கிச்சா?"

"இல்லை"

"மொகாமெட்?"

"சூரியனை யாரும் உருவாக்கவில்லை"

"டேடி.. உனக்கு எதுவும் தெரியலை. ஸ்கூல்ல நீ 'F' தான் வாங்கியிருப்பே"

"சரி. சூரியனைப் பத்தி என்ன சொன்னாங்க டீச்சர்?"

"உலகத்துல எதுவும் நடக்கணும்னா சூரியனோட சக்தி வேணும்னு சொன்னாங்க"

"சூரியன்ல என்ன இருக்கு தெரியுமா?"

"முழுக்க முழுக்க நெருப்பு. சரியா?"

"ம்ம். சூரியன்ல இருப்பது முழுக்க முழுக்க gas"

விழுந்து விழுந்துச் சிரித்தான். "குசுவா?"

"அதுவும் வாயுதான். சூரியன்ல இருப்பது ஹைட்ரஜன்.."

"அப்படின்னா?"

"ஒரு gas. இப்போதைக்கு அது போதும். இங்கே வா" என்று கணினியில் ஒரு படத்தை வரையத் தொடங்கினேன். அவன் இன்னும் விசித்திரமான ஓசைகளுடன் சிரித்துக் கொண்டிருந்தான்.

மேசை விளக்கை ஒரு நிமிடத்துக்கு மேல் எரியவிட்டு அணைத்தேன். "இந்தா, இதைத் தொடு" என்று பல்பைச் சுட்டினேன்.

"என்னை என்னா லூசுனு நினைச்சியா? அது சுடும். நீயே தொடு" என்றான்.

ஜூரத்துக்கு உபயோகிக்கும் டெம்பரசர் பட்டி ஒன்றைப் பிரித்து பல்பில் ஒட்டினேன். விர்ரென்று நூற்றுப் பதினைந்து பேரந்ஹைட்டைத் தொட்டுச் சுர்ரென்று இளகிச் செத்தது பட்டி. "இதோ பார், நூத்துப் பதினஞ்சு டிகிரி. சூரியனைத் தொட்டா இது போல நூறு மடங்கு சுடும். சூரியன்ல இருக்குற gas எரியும் போது சக்தி கிடைக்குது, அதுவே ஒளியாவும் சூடாவும் பூமிக்கு வருது". gas என்றதும் மறுபடி சிரிக்கத் தொடங்கியவனை நிறுத்தச் சில நிமிடங்களாயின.

"அப்ப சூரியனை யாரும் உண்டாக்கினா அவங்க கையெல்லாம் சுட்டிருக்குமே?" என்றான்.

"ஒருவேளை ultra mega super cool gloves போட்டுக்கிட்டு உண்டாக்கினாங்களோ என்னவோ?" என்றபடி கணினிப் படத்தைச் சுட்டினேன். "அண்டத்துல புழுதியும் வாயுவும் வேகமா கலந்து சுத்துறப்போ அது நட்சத்திரமா மாறிடும். நட்சத்திரம் எரியத் தொடங்குறப்போ சக்தியை வெளிவிடும். பிலியன் வருஷக்கணக்கா எரியும். சூரியனும் இதுபோல உருவான ஒரு நட்சத்திரம். எத்தனையோ பிலியன் வருஷம் எரிஞ்சு எல்லா வாயுவும் அடங்கிடும். அப்போ இந்த சூரியன் நமக்கு ஒளி தராது"

"அப்ப உலகம் அழிஞ்சிடுமா? நாமெல்லாம் செத்துருவோமா?"

"கடலுக்கடியில ரொம்ப ஆழத்துல இருக்குற சில புழுக்களும் கிருமிகளும் தவிர மிச்ச எல்லாம் செத்துரும்"

"புழு பூச்சி உயிரோட இருக்குமா? அப்ப கடவுள் நம்மை சாகடிச்சுடுவாரா? this is not fair. grandma said god loves us" என்றான்.

"இந்தச் சூரியன் அழிய இன்னும் அஞ்சு பிலியன் வருசமாவது ஆகும். இதோ பார். நடுவுல இருக்கோம். இன்னும் இவ்வளவு தூரம் எரிஞ்சு வரணும். அதனால கவலைப்படாதே"

"அப்ப அந்த டயத்துல எல்லா மனுசங்களும் செத்துடுவாங்களா? பூமிக்கு என்னாகும்? this is not fair"

"யாருக்குத் தெரியும்? சூரியன் அழியுறதுக்கு முன்னால நாம பூமியைத் தூக்கிக்கிட்டு வேறே ஏதாவது சூரியனைத் தேடிப் போகலாம்" என்றேன்.

"இப்படி அழிக்கணும்னா எதுக்காக god இதை உண்டாக்கணும்? makes no sense". அவன் இன்னும் 'not fair'ல் இருந்தான்.
**

    ளமையிலேயே கற்பிக்க வேண்டும். ஒரு புறம் 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி' சொல்லிக் கொடுப்பது போல இன்னொரு புறம் தெரிந்த உண்மைகளையும் சொல்லித் தர வேண்டும். "பூமியைக் கடலுக்குள் கொண்டு ஒளிப்பதா?. கடலே பூமிக்குள் தானே இருக்கிறது?" போன்ற கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்ல வேண்டும். வீட்டிலும் வெளியிலும் எண்ணச் சுதந்திரம் வேண்டும். 'வளர்ந்த பிறகு தானே புரிந்து கொள்ளட்டும், இப்போதைக்கு என் பாட்டன் அப்பன் சொன்னது போல் கும்பிட்டுக் கிடக்கட்டும்' என்ற மனப்பாங்கு மாற வேண்டும்.

நமது கல்வித்திட்டம் ஆத்திகக் கல்வித்திட்டம். நாத்திகத்துக்கு இடமில்லை. அதுவும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் சுத்தமாக ஆத்திகச் சுண்ணாம்பு பூசப்பட்டிருக்கிறது. என்னுடைய பள்ளி நாட்களில் தான் அப்படி என்றால், இன்றைக்கும் அதே நிலைதான் போலிருக்கிறது.

2004-06 வாக்கில் அமெரிக்கக் கல்வி முறையைச் செப்பனிடுகிறேன் பேர்வழி என்று intelligent design ஆசாமிகள் கூத்தடித்தார்கள். நல்ல வேளை, Dover வழக்குகளில் தடைபட்டு நின்றுபோனது.

கொஞ்சம் பின்னோக்கிப் போனோமானால் நாத்திகம் இயல்பாகவே கல்வியாக வழங்கப்பட்டிருப்பதை அறியலாம். நான்காம் நூற்றாண்டு வாக்கில் 'சார்வகம்' எனப்படும் கடவுள்/மதம் விலக்கியத் தத்துவக்கல்வி நம் நாட்டில் இருந்தது. மெள்ள அழிந்துவிட்டதாகத் தெரிகிறது. அதற்கும் வெகு காலம் முன்னால் கடவுள், மதம், மற்றும் மூட நம்பிக்கைகளின் எதிர்வாதமாக நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களையும் புராணங்களையும் பராமரிக்கும் அளவுக்கு இவற்றைப் பராமரிக்கவில்லை.

ராமாயணக் கதையில் ஜாபாலி என்று ஒரு பாத்திரம். வால்மீகியின் அயோத்தியா காண்டத்தில், ஜாபாலி என்ற ஒரு சாதாரண பிராமணன் உலக நியதியின் அடிப்படையில் ராமன் காட்டுக்குப் போவது கண்மூடித்தனம் என்று வாதாடுகிறான். ஜாபாலியின் வாதங்களுக்கு ராமனின் பதிலில் தீவிரக் கோபம் மட்டுமே காண முடிவது, தன்னிச்சையா தெரியவில்லை. ஜாபாலியின் கருத்துக்களைப் பாடமாக ஏன் வைக்கவில்லை என்று கேட்கத் தோன்றுகிறது. பாடமோ இல்லையோ படிக்கச் சுவாரசியமானது. சிந்தனையைத் தூண்டுவது. அறத்தின் இரு பக்கமும் அறிய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ராம-ஜாபாலி உரையாடலுக்கு மீண்டும் வருவோம்.

நேர்மையானக் கல்வியை வழங்க வேண்டியது பெற்றோர், ஆசிரியர் கடமை. ஒருதலைக் கல்வியில் முழுமையான அறிவோ பக்குவமோ வளராது என்பது நமக்கே புரியவில்லை. அரசாங்கத்துக்கு எங்கே புரியப்போகிறது? இளமையிலேயே படித்தால்.. பிடித்தால்.. இருநூறு நூறாகலாம்.
**

    மெரிக்க நாத்திகர்களுக்கான ஒரு இயக்கம் குற்றுயிராய் இயங்கி வருகிறது. 'இயக்கத்தினால் என்ன பயன்?' என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்பட்டு, பாதி நேரம் இயக்கத்தின் வளர்ச்சி தடைபட்டுப் போகிறது. இருப்பினும் தொலைநோக்கு கொண்ட ஒரு சிலரால் குற்றுயிரானாலும் பிழைத்துக் கிடக்கிறது. வரும் செப்டெம்பர்-அக்டோபர் மாதங்களில் 'கடவுளிலா அமெரிக்கா' எனும் யாத்திரை நடத்தத் திட்டமிருக்கிறது. யாத்திரையில் கலந்து கொள்ளவும் பேசவும் tentative சம்மதம் தெரிவித்திருக்கிறேன். உதைபடப் போகிறேன் என்பது நிச்சயம். இங்குள்ள மதவெறியர்கள் சுட்ட பிறகு தான் கேள்வியே கேட்கிறார்கள்.

நாத்திகர்களுக்கான சங்கங்கள் நிச்சயம் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருக்கும் என்றே நினைக்கிறேன். அமெரிக்க நாத்திக இயக்கம் பிள்ளைகளுக்கு scholarship வழங்குகிறது. அதனால் பள்ளிப் பிள்ளைகளுக்கு இந்த இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ளவாவது முடிகிறது. இது போல் இந்தியாவில் ஏதாவது செய்யலாமா என்ற எண்ணம் வேர் விட்டிருக்கிறது. ஐடியா தேறுமா?
**

காவடி எடு, தேங்காய் உடை, மலைக்குப் போ என்பவை சாதாரணச் செய்திகளாகப் பாமரர்களைச் சென்றடைவது போல், 'கண்மூடித்தனத்தை விடு' என்பதும் சாதாரணச் செய்தியாகப் பாமரர்களைத் தொடும் வழியைத் தேட வேண்டும். 'கடவுளைக் கும்பிடு' 'மதத்தை மதி' என்பதன் எளிமை, 'கடவுளைக் கும்பிடாதே' என்பதில் இல்லை. இங்கே தான் நாத்திகம் தடுக்கி விழுந்ததாகத் தோன்றுகிறது. நாத்திகத்தின் செய்தி 'கடவுளைக் கும்பிடாதே' என்பதல்ல. இதைச் செய்தியாகக் கொண்டு வந்த செருப்படி நாத்திகம் அடையாளத்தோடு இருக்கும் வரை, சிந்தனை சார்ந்த நாத்திகம் வளர்வது கடினம் என்று தோன்றுகிறது.
**

எனக்கு வந்த முதல் கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சற்றும் எதிர்பாராத மின்னஞ்சல். போக்கற்ற என் சிந்தனைகளைக் கொட்டுவோம் என்று பதிவெழுதிய எனக்கு இதைப் படித்ததும் என்ன பதில் சொல்வது என்று உடனே தோன்றவில்லை.

சில வருடங்களாக என் மனதை வருத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை எழுத வேண்டும் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.

என் அப்பா எப்படிபட்டவர் என்று சுருக்கமாக சொல்லிவிட்டு என் மனதில் வருத்தத்தை உண்டாக்கிய விஷயத்தை கேட்க வேண்டும். தன்னுடைய பத்தாவது வயதிலேயே தாய் தந்தை இருவரையும் இழந்த என் அப்பாவுக்கு தம்பி தங்கை உண்டு. என் தந்தைக்கு எந்த விதமான பரம்பரை சொத்தும் இல்லாததால், தன் பத்து வயதில் பொருட்காட்சியில் டிக்கெட் கொடுக்கும் வேலைக்கு சென்றார். பின் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பத்தாவது கூட படிக்காததால் அந்த வேலையே தக்க வைத்துக் கொள்ளவே மாடாக உழைக்க வேண்டி இருந்தது. கூடவே தங்கை, தம்பிகளை வளர்க்க வேண்டிய பொறுப்பும். இந்த நிலையிலும், அந்த வயதிலேயே தன் தாய் தந்தைக்கு மிகவும் ஸ்ரத்தையாக தெவசம் செய்ய துவங்கி விட்டார். கிட்டத்தட்ட அறுபது தெவசங்கள் செய்திருப்பார். அத்தனையும் ஹோமம் வளர்த்தது தான். எந்த வித கெட்ட பழக்கமும் கிடையாது. குறிப்பாக பெண்களை மிகவும் மதிக்கும் பண்புடையவர். எங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் என்றால் மிகவும் உசத்தி. அப்பா வாயிலிருந்து தப்பித்தவறி கூட ஒரு கெட்ட வார்த்தை வந்ததில்லை. தன் வாழ்நாளில் ஒரு சினிமா, வீட்டு தொலைகாட்சியில் கூட, பார்த்ததில்லை. அம்பாள் பாலதிருபுரசுந்தரி மேல் அபார பக்தி, நம்பிக்கை. நாள்தோறும் காலையில் லலிதா சஹஸ்ரநாமம், மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்ல தவறியதே இல்லை. இந்த அம்பாளின் படம் எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து இன்று வரை எங்கள் வீட்டில் இருக்கிறது. இதற்கு frame மாற்ற வேண்டும் என்றால் தானே எடுத்து சென்று அந்த கடையில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கையோடு வாங்கி வந்து விடுவார். அப்படி ஒரு பக்தி.

என் தந்தை அடுத்தவர் பணத்தில் இருந்து ஒரு நயா பைசாவை கூட விரும்பாதவர். நாங்கள் 20 வருடங்களாக குடியிருந்த வீட்டை காலி செய்ய சொல்லி மூன்று மாத தவணை கொடுத்தனர் வீட்டின் சொந்தக்காரர்கள். அக்கம் பக்கம் இருந்தவர்களும் உறவினர்ககளும் என் தந்தையிடம் இருபது வருடம் அந்த வீட்டிலேயே குடியிருந்ததால், வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒரு சிறிய தொகை கேட்க சொல்லி வற்புத்தினர். என் அப்பா எதையும் கேட்காமல் அவர்கள் கொடுத்த மூன்று மாத கால தவணைக்கும் முன்பாகவே ஒரே மாதத்தில் வீட்டை காலி செய்து கொடுத்தார்.

இப்படிப்பட்ட என் அப்பா தன் வாழ்நாள் இறுதி வரை பணக் கஷ்டம் பட்டிருக்கிறார். எந்த ஒரு சுகபோகத்தையும் அனுபவித்ததில்லை. மரணமாவது அவருக்கு உதவியதா! அதுவும் இல்லை படுத்த படுக்கையாக ஆறு மாதம். சோடியம் குறைவினால் வாய் திறக்க முடியாமல், அது சரியாவதற்குள் அப்பாவுக்கு தலை சுற்றல் இருந்ததால் அதனால் சில முறை விழுந்திருந்ததால் உண்டான கோளாறுகள் கடைசி நேரத்தில் தலை தூக்கி, அவரை மிகவும் மோசமான நிலைமைக்கு கொண்டு சென்று விட்டது.

நான் போன் செய்து பேசும்போதெல்லாம், "என்னால வலி தாங்கவே முடியவில்லை கண்ணு. அம்மா, இது எப்பேற்பட்ட வலின்னு சொல்ல வார்த்தையே இல்லம்மா, தாங்கவே முடியலைமா" என்று அழக்கூட தெம்பில்லாமல் தன் ஈன குரலில் சொன்னதை இப்போது நினைத்தாலும் நான் கதறி அழுது விடுவேன். இறக்கும் தருவாயில் இருந்த அந்த கடைசி நாட்களில் கூட இவருக்கு ஏன் எந்த தெய்வமும் உதவவில்லை? அவர் தன் உலகமாகவே நினைத்த அவர் அம்பாள் கூட அவருக்கு ஏன் அந்த கடைசி நேரத்தில் உதவவில்லை? சரி கடவுள் வேண்டாம், பித்ருக்கள் தெய்வம் என்பார்களே அவர்களாவது உதவி இருக்கலாமே? பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தி, மாதக் கடைசியில் துண்டு விழும்போது ஓவர் டைம் பார்த்து, பஸ்சில் செல்லக் காசு குறைவாக இருந்த படியால் இரண்டு ஸ்டாப்பிங் முன்னமே இறங்கி, வீட்டிற்கு நடந்தே வரவேண்டிய நிலை இருந்தபோதும் ஒரு தெவசம் கூட விடாமல் தாய் தந்தையர்க்கு செய்ததற்கு என் தந்தை என்ன பலனை கண்டார்? தாய் தந்தையர்கள் கையால் இவர் சாப்பிட்டதை விட, இன்னும் சொல்லபோனால், சாப்பிடவேயில்லை, இவர் அவர்களுக்கு பிண்டம் போட்டதுதான் அதிகம்.

நாங்கள் குடும்பத்தோடு சினிமா, பீச் என்று எங்கும் சென்றதில்லை. கோவில் தான் சென்றிருக்கிறோம். பக்தி என்பது என் ரத்தத்திலும் ஊறிப் போன விஷயம்தான். அப்படிப்பட்ட நான் என்னுடைய அப்பா அவ்வளவு அவஸ்த்தை அனுபவித்து இறந்ததை பார்த்தபின் மிகவும் வெறுத்து விட்டேன். நடப்பதுதான் நடக்கும் என்றால் கடவுளை நம்புவதும், பித்துர்க்களுக்கு செய்வதும் எதற்காக? சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இன்றும் நானும் என் சகோதரனும் கஷ்டப்படுவது எதனால்?

சொந்த அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகள் வேண்டிய நேரத்தில் உதவி செய்ய தவறினால் உடனே விரோதம் செய்து கொண்டு விலகி விடும்போது, கண்ணுக்கு தெரியாத கடவுள், அவரை வேண்டினால் நிச்சயம் நிறைவேறும் என்று எண்ணி, செலவு பண்ணி பூஜைகள் செய்து, விரதம் இருந்து, கடைசியில் நடக்கவில்லை என்றால், அப்பொழுது கூட தெய்வத்தை நிந்திக்காமல், தான் செய்த பூஜையில் தவறு, தன் பூர்வ ஜென்ம பாவம் என்றெல்லாம் நினைத்து மீண்டும் அந்த தெய்வத்தின் காலிலேயே விழுவது எதனால்? எதற்காக கண்ணுக்கு தெரியாத, புலப்படாத அந்த தெய்வத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டும் என்றே தோன்றுகிறது.

பிறப்பதே ஒரு நாள் இறப்பதிற்காகத்தான். அந்த பிறப்பிலும் சுகம் இல்லை, இறப்பிலும் சுகம் இல்லை, இவை இரண்டுக்கும் நடுவில் வாழ்ந்த வாழ்கையிலும் சுகம் இல்லை. பிறந்தோம், உழைத்தோம், உண்டோம், இறந்தோம் என்று மரம், செடி கொடி போல ஆன என் தந்தையின் வாழ்வில், அவர் பக்தியால் கண்ட பலன் என்ன? பித்ருக்களுக்கு செய்ததால் கிடைத்த பலன்தான் என்ன?

இதற்கு யாராவது முடிந்தால் விளக்கம் சொல்லுங்கள்.
என்னை மிகவும் பாதித்தக் கேள்வி: '...மீண்டும் அந்த தெய்வத்தின் காலிலேயே விழுவது எதனால்?'. என் பதிலை அவருக்கு அனுப்பி வைத்தேன் என்றாலும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று தெரிந்து கொள்ள ஆசை. இதைப் படித்ததும் என்ன தோன்றுகிறது? கடிதம் எழுதியவரிடம் நீங்கள் சொல்ல விரும்புவது ஏதாவது உண்டா?
**

    றைந்த ஜோர்ஜ் கார்லின் அமெரிக்க நாத்திகர். அவரது பிரபலம் இயக்கத்துக்கு கொஞ்சமாவது உதவியது எனலாம். நகைச்சுவையோடு சிந்திக்க வைத்தவர். ஆத்திகத்தைக் கிண்டல் செய்து அவர் அடிக்கும் லூட்டிகளை யூடியில் காணலாம்.