2017/08/05

பல்கொட்டிப் பேய்



இது வரை: காஞ்சிபுரம் போயிருந்தனர் எங்கள் பெற்றோர். கோடை வெயிலை வீணாக்காமல் டெனிஸ் பந்தில் க்ரிகெட் விளையாடிக் கொண்டிருந்தோம் நான், என் தம்பி ஸ்ரீராம், என் பெரியம்மா மகன் ரகு, எதிர் வீட்டு நண்பன் ரமேஷ் நால்வரும். கீழே கிடந்த பந்தை எடுத்து நான் எறிய அதை ரமேஷ் பிடிக்கத் தொட்டதும் பந்து விர்ரென்று உயர்ந்து விரிந்து பேயாகச் சிரித்தது. எங்கள் வீட்டு வாசலையொட்டிய அம்மன் கோவில் பூசாரி தணிகாசலம் விவரம் கேட்டு 'அது பல்கொட்டிப் பேய்.. உங்களை விடாது' என்றார். கண்டிப்பாக அன்றிரவே பேய் எங்களைக் கடத்திச் சென்று தலைகீழாகத் தொங்கவிட்டு பல்லால் கொட்டி பலி வாங்கும் என்றார். அம்மனுக்கு பலி கொடுத்த ஆட்டு ரத்தம் தடவிய கயிற்றால் சுற்றி எங்களைக் காப்பாற்ற ஒரு திட்டம் தீட்டிக் கொடுத்தார். அதன்படி நடந்து என் தம்பி ஸ்ரீராம் பல்கொட்டியின் வாயிலிருந்த தலைப்பல்லை தட்டி எடுத்துவிட்டான். உக்கிரமாக ஆர்ப்பரித்த பேயிடம் விடியும் வரை பல்லைத் தராதிருந்து முன்னூறு வருடம் கழித்து வந்தால் தருவதாகச் சொல்லச் சொல்லியிருந்தார் பூசாரி. மறதியிலோ பயத்திலோ முன்னூறுக்கு பதில் முப்பது என்று சொல்லிவிட்டான் ஸ்ரீராம். கறுவிக்கொண்டே எங்களை விட்டு விலகிய பல்கொட்டி சரியாக முப்பது வருடங்கள் காத்திருந்து நான் தங்கியிருந்த மும்பை ஹோட்டல் அறையில் விடிகாலை என்னைத் தட்டி எழுப்பியது. முப்பது வருடங்களில் பல்கொட்டி சோர்ந்தும் நொந்தும் போயிருந்தது. வரும் ஆடி அமாவாசைக்குள் நாங்கள் கூட்டாக அதனிடம் தலைப்பல்லைத் திருப்பாவிட்டால் பெருங்கேடு நேரும் என்றது.


13

12◄

        ன்னதான் அனுசரித்து பழக்க மரியாதையுடன் நடந்துகொள்வோம் என்று நினைத்தாலும் பல்கொட்டியின் பேய்க்குணம் மாறாது என்று புரிந்துவிட்டது. கெட்ட கனவை உருவாக்கியதுடன் நில்லாமல் இப்போது தலைகீழாகத் தொங்கியபடி இடியாய்ச் சிரித்துக் கொண்டிருந்தது. கெட்ட கனவே மேல்.

கூகில் ட்ரைவில் சேமித்திருந்த என் பழைய தொடர்பு விவரங்களிலிருந்தும் லிங்க்டின் தேடலிலும் ஒருவழியாக ரமேஷைக் கண்டுபிடித்தேன். பல்கொட்டியைத் திட்டினாலும் ஒருவழியில் சந்தோஷம் தான். நட்பைப் புதுப்பிப்பது ஒரு புறம், பல்கொட்டியின் வருகையைச் சொன்னதும் அவன் எப்படி நடந்துகொள்வான் என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். இடுக்கண் கொடுப்பதாம் நட்பு.

குடும்ப நலத்திலிருந்து பக்கத்துத் தெரு வெறிநாய் மாரடைப்பில் இறந்தது வரை பேசிய ரமேஷ் பல்கொட்டி வருகையைச் சொன்னதும் ‘ராங் நம்பர்’ என்று வைத்துவிட்டான். மறுபடி முயற்சித்தபோது பெண்குரலில் மராத்தியில் பேசினான். பிறகு நாய் குரைப்பது போல். அதற்குப்பிறகு எடுக்கவே இல்லை. “இப்ப என்ன செய்ய? ரமேஷ் வீட்டை எப்படிக் கண்டுபிடிச்சுப் போவுறது?” என்றேன்.

“இங்கதான் பைகலாவில் இருக்குது, எனக்குத் தெரியும் வா போகலாம்” என்றது பல்கொட்டி.

“உனக்குப் பல்லுதான் இல்லே, மூளையுமா இல்லே? இதை மொதல்லயே சொல்லியிருக்கலாம்ல?”

“நீ மொதல்லயே கேட்டிருக்கலாம்ல? முப்பது வருசமா உங்களைப் பேயா சுத்தி சுத்தி வரேன்ல? எனக்குத் தெரியாதா?”

“அடப்பேவி!”

மேஷ் வீட்டுக்குப் போனபோது அவன் வேலைக்கார வேஷத்தில் “ரமேஷ் சாப் கா கர் நஹி.. பொலிஸ் இன்ஸ்பெக்டர் கா மகான்.. அப் ஆனேவாலா ஹை.. சலே ஜா” என்றான். பத்து நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு உள்ளே அனுமதித்தான். தலைப்பல் மீட்பு பற்றிச் சொன்னேன். பல்கொட்டியின் தலைப்பல் ஓட்டையில் விரல் விட்டு விளையாடிக்கொண்டிருந்த ரமேஷின் நாலு வயது பேரனை இழுத்து இழுத்து அருகில் வைத்தபடி மறுத்தான். பிறகு சிவாஜி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து தினம் அவன் கனவில் வந்து வசனம் பேசி நடிப்பார்கள் என்றதும் முகம் வெளிறிப் பதறி நடுங்கி அலறியடித்து ஒப்புக்கொண்டான்.

ஸ்ரீராம் சிரிக்கத் தொடங்கினான். “கெட்ட கனவு தானே? ஜமாய் மச்சி” என்று பல்கொட்டியைத் தட்டிக் கொடுத்தான். என் தம்பி எதற்குமே அலட்டாத வகை. அதுவும் தூக்கம் என்றால் அவனை யாரும் எதுவும் செய்ய முடியாது. பக்கத்து வீட்டில் இடி விழுந்து கருகும். இவன் சுகமாகத் தூங்குவான். கனவா? கனவில் வந்தவர்களுடன் பேசியபடியே தூங்குவான். கடைசியில் அவன் காலில் விழுந்தோம். வேறு வழியே இல்லை. மூத்தவர்கள் மூவர் (பேயை மூவரில் சேர்க்கலாமா?) அவன் காலில் விழுவதைப் பார்த்து மனம் மாறினான்.

      ஞாயிறு மாலை பம்மல் வந்தோம். கோவில் வெளிப்புறம் நன்கு மாறியிருந்தாலும் உட்புறம் ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முந்தைய தோற்றத்திலிருந்து மாறவில்லை. கோவிலில் இருந்த ஒன்றிரண்டு பெண்கள் எங்களைச் சந்தேகத்துடன் விசித்திரமாகப் பார்த்தபடி வெளியேறினார்கள். “ரமேஷ். வேஷம் போடாம வாடானு சொன்னா கேட்டியா? அதும் ஒரு முழத்துக்கு தாடி ஒட்டி வச்சிருக்கே.. பாரு, ஆடிக்காத்துல ஆடிக்காட்டுது” என்று இடித்தேன்.

பூசாரி வெளியே வந்து எங்களைப் பார்த்து சிரித்தான். “வாங்க.. என் பேரு உக்கிராசலம். கோவில் பூசாரி”

தணிகாசலத்தின் பேரனாக இருக்க வேண்டும். விவரம் சொன்னோம். கோவில் பின்புறம் இருந்த அவன் வீட்டுக்கு அழைத்தான். உள்ளே நுழைந்ததும் ஒருவித வேப்பிலை நடனமாடி எங்களைச் சுற்றி குங்குமம் தூவினான். ஒரு எலுமிச்சையை அசால்டாக கையால் திருகி எறிந்து வெளியே வீசினான். “பல்கொட்டி உங்க கூட இருக்குதா?” என்றான்.

“உக்கிராசலம்.. அது ஒண்ணும் பண்ணாதுபா” என்றேன். உடனடியாகத் தலைப்பல்லை எடுத்துக் கொடுக்கச் சொன்னான் ரமேஷ். “அடுத்த ப்ளைட்ல போவணும்பா..”

“முடியவே முடியாது. தாத்தா சாவுறப்ப விவரம் எல்லாம் சொன்னாரு. முப்பது வருசம் பொறுத்து வருவீங்கனாரு. பல்லைத் திருப்பினா பலி வாங்கும்னாரு.. அதான் அவுரே கோவில் பூசைபலி மேடைல பொதச்சு வச்சுட்டாரு. எடுக்க முடியாது.. பாருங்க இதைப்பத்திப் பேசுறப்பவே வெளில நிழலாடுறாப்புல இருக்குது”

"பொதைக்கலபா, பதிச்சு வச்சிருக்காரு.. சரியாச் சொல்லணும்" என்றான் ரமேஷ் தேவையில்லாமல்.

“உக்ரம்.. இங்க வாங்க” என்றான் ஸ்ரீராம். “அஞ்சாயிரம் பணம் தரேன்.. அப்புறம் இதையும் அன்பளிப்பா வச்சுக்குங்க” நேராக விஷயத்துக்கு வந்தான். தன் பையிலிருந்த இரண்டு அரை லிடர் ஷிவஸ் புட்டிகளை எடுத்துக் கொடுத்தான்.

தணிகாசலம் பரம்பரை அல்லவா? உக்கிராசலம் உடனே விழுந்தான். “புதன்கிழமை தானுங்க அமாவாசை? நீங்க போயிட்டு செவ்வா நைட்டு வாங்க. பேத்து எடுத்துருவம். அதுக்குள்ளாற எங்க பேயாத்தா கிட்டே ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடறேன்”

“பேயாத்தாவா? அது உங்க தாத்தாவுக்கு ஆத்தாவுக்கு ஆத்தாவாச்சேபா?” என்றான் ரமேஷ். “இன்னுமா சாவலே?”

“பேயாத்தாவுக்கு சாவு கிடையாது. செத்து தானே பேயாச்சு?” என்று நுட்பத்தை விளக்கினான் உக்கிராசலம்.

“போய்ட்டு வாங்க” என்று எங்களுடன் அவனும் வெளியே வந்தான். வீட்டு வாசலில் எங்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி ஒரு ஏட்டு நின்றிருந்தார். “என்னா உக்கு? கோவில் சிலை திருட்டா? எல்லாம் கேட்டுட்டு இருந்தேன்.”

“அய்யயோ அப்படியெல்லாம் இல்லிங்க இன்ஸ்பெக்டர்” என்றான் ரமேஷ். இலவசமாக் கிடைத்த பதவி உயர்வுக்கு மயங்காத கான்ஸ்டபிள் நேர்மையுடன் ரமேஷைப் பார்த்து “நீ யார்யா? ஐசிஸா? தாடி வச்சிட்டு ஒருத்தன் கோவில்ல திரியறானு அந்த பொம்பளிங்க சொன்னது உன்னியத்தானா?”

“ஏட்டய்யா.. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?” ஸ்ரீராம் நேராக விஷயத்துக்கு வந்தான்.

ஏட்டுக்குக் கோபம் வந்துவிட்டது. ஆதிகால ரஜினியின் அலெக்ஸ்பாண்டியன் போல் குதிக்கத் தொடங்கினார். தொடங்கிய வேகத்தில் படாரென்று மயங்கி விழுந்தார்.

“ஓடுங்க.. ஓடிருங்க.. என்னாச்சு தெரியலே.. அவரு எழுந்ததும் நான் பேசிக்கிறேன்” என்று எங்களை முடுக்கினான் உக்கிராசலம். “செவ்வா நைட்டு மறந்துறாதிங்க”.

விரைந்தோம். “இப்பத்தான் மொதல் தடவையா போலீசை அடிச்சிருக்கேன்” என்றது பல்கொட்டி உடன் விரைந்தபடி.

      ளே இருக்காது என்று நினைத்து செவ்வாய் இரவு பத்து மணிக்கு கோவிலுக்கு வந்தோம். ஆண் பெண் பிள்ளைகள் என்று மக்கள் கூட்டம். உள்ளே அம்மனுக்கு பூ அலங்காரம். சாம்பிராணிப் புகை. வெளியே இரண்டு இடங்களில் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். உக்கிராசலம் எங்களைப் பார்த்ததும் வெளியே வந்தான். “மன்னிச்சுக்குங்க.. அர்த்தஜாமக் கூழ் காய்ச்சணுமின்னு காலைல வந்து பணம் கொடுத்தாங்க. இல்லேன்னு சொல்ல முடியாது.. நேந்துக்கிட்ட சமாசாரம்..” என்றான்.

“ஏய்யா யோவ்.. எங்க கிட்ட பணம் வாங்கிட்டு ஜாமத்துல கூழ் ஊத்தவும் காசு வாங்கிட்டியா?” என்றேன் கடுப்பில்.

“அதில்லாம பேயாத்தா கூடாதுன்னுடிச்சு.. தலைப்பல் கிடைச்சதுமே பல்கொட்டி பழி வாங்கிடுமாம்.. எதும் செய்ய முடியாது..” என்றான் தீர்மானமாக. “அந்த ஏட்டு வேறே இங்கயே ரோந்து சுத்திட்டிருக்காரு.. பாருங்க”

“அடேய்.. நாளைக்கு அமாவாசை.. இன்னிக்கு எடுக்கலேனா பெருங்கேடு பெருங்கேடு” என்றான் ரமேஷ் பாலையா பாணியில்.

ஸ்ரீராம் எங்களைத் தனியாக வெளியே அழைத்துப் பேசியதும், “சரி உக்ரம்.. வந்ததோ வந்துட்டம்.. சும்மா ஒரு ரவுண்டு அடிச்சுட்டு நாங்களும் ஜாமக்கூழ் பூசைல கலந்துக்கறோம்.. எங்களுக்கு உள்ளாற எடம் போட்டு வை” என்றோம். பல்லில்லாமல் போவதில்லை என்று தீர்மானித்திருந்தோம்.

அங்கே இங்கே சுற்றி மெயின் ரோடு டீக்கடையில் மசாலா பால் வாங்கினோம். அகண்ட வாணலியில் சுண்டக்காய்ச்சிய பால் எடுத்து கிளாசில் ஊற்றி அதன் மேல் ஏடு போட்டு முந்திரி பாதாம் பிஸ்தா ஏலக்காய் பொடியைத் தூவிக் கொடுத்தார் டீ மாஸ்டர். மூன்று பேர் நான்கு பால் வாங்குவதையும் நாலாவது கிளாஸ் அந்தரத்தில் நிற்பதையும் பார்த்து எதுவும் பேசாமல் நடுங்கிக் கொண்டிருந்தார் கல்லாக்காரர். மசாலா பாலை அனுபவித்துக் குடித்தோம். கோவிலுக்குத் திரும்பியபோது மணி இரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. கோவில் வாயிலில் எங்களைப் பார்த்த ஏட்டு கையிலிருந்த லட்டியை சுழற்றிக் காட்டியபடி தலையசைத்தார்.

கூட்டத்துடன் கலந்து உள்ளே நுழைந்து பார்த்தோம். ஜாமக் கூழ் பூசை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

எங்களுக்காக பலிமேடை அருகே பரவலாக இடம் ஒதுக்கியிருந்தான் உக்கிராசலம். உட்கார்ந்தோம். பலிமேடை நடுவே அலங்காரங்களுக்கு இடையே துல்லியமாகத் தெரிந்தது தலைப்பல்.

நான் பல்கொட்டியைப் பார்த்தேன். தணிகாசலமும் பேயாத்தாவும் சொன்னது போல் ஒருவேளை தலைப்பல் கிடைத்ததும் பழிவாங்குமோ என்ற எண்ணம் அச்சமாகப் பரவத் தொடங்கியது.

பனிரெண்டு மணியாகிவிட்டது என்று சைகை செய்தான் ஸ்ரீராம்.

12◄ ►14



12 கருத்துகள்:

  1. பல்லை எடுத்து ப்லடாக்டர் கிட்ட போயி இம்பிளான்ட் பண்ணனுமாமா? உக்கரத்துக்குக் கொடுக்கற ஷிவாசை பல்கொட்டிக்குக் கொடுத்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  2. தொடக்கம் முதல் கடைசிவர சிரிப்பின் தரம் குறையவில்லை.

    ஃபாலோவர் கெஜட் வைக்கலாமே....

    பதிலளிநீக்கு
  3. நாலாவது கிளாஸ் அந்தரத்தில் நிற்பதையும் பார்த்து எதுவும் பேசாமல் நடுங்கிக் கொண்டிருந்தார் கல்லாக்காரர்.//

    பேய் கதையில் துளி திகில்.

    திகிலை விட நகைச்சுவை அதிகம், நீங்களே நகைச்சுவை என்று போட்டு விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. //சிவாஜி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து தினம் அவன் கனவில் வந்து வசனம் பேசி நடிப்பார்கள் என்றதும் முகம் வெளிறிப் பதறி நடுங்கி அலறியடித்து ஒப்புக்கொண்டான்.//

    அதெப்படி? கரெக்டா என்னோட டேஸ்டிலேயே இந்த சினிமா விஷயத்தில் உங்களோடதும் இருக்கு? ஹிஹிஹி க்ரேட் பீபிள் திங்க் அலைக்!

    பல்கொட்டி மசாலா பால் குடிச்ச காட்சியைக் கண்ணால் கண்டு (கற்பனையில் தான்) ரசிச்சேன். அது ஏட்டை அடிச்சப்போ அவருக்கு எப்படித் திகில் ஏற்பட்டிருக்கும்? அது சரி, இது சோதாவான பேயாட்டமில்ல தெரியுது? பல்லை எடுத்து வைச்சுட்டால் தைரியம் வந்துடுமா அதுக்கு? பார்த்தால் ரொம்ப சாதுவான பேயாட்டம் இருக்கு! எதுக்கும் அடுத்து என்ன நடக்குமோனு காத்திருக்கேன்.

    விவிசி, விவிசி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவிசி, விவிசி! - சா. அவர்கள் பயப்படாம இருந்தாச் சரிதான். இது ஏதடா ப.கொ.பே படிச்சு இப்படி ஆயிட்டாங்களேன்னு

      நீக்கு
  5. சிவாஜி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து கனவில் வருவார்களா.... ஆத்தாடி!

    பல்கொட்டிப்பேய் ஸ்வாரஸ்யம்... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. இப்படி ஒரு வித்தியாசமான சிந்தனையை....

    உங்களிடம் எதிர்ப்பார்க்கவில்லை....(!)

    பதிலளிநீக்கு
  7. முன் கதைச் சுருக்கத்துக்கு நன்றி சார் இப்போது தொடர்பு உள்ளது புரிகிறது

    பதிலளிநீக்கு
  8. வாசிக்கும் பொழுதே உடான்ஸ் என்கிற உணர்வு பல்பு எரிந்தாலும் உங்களின் நகைச்சுவை உணர்வு முட்டுக் கொடுத்து படிக்க வைத்து விடுகிறது. அங்கங்கே தொட்டுக் கொள்ள ஜனரஞ்சகமான விஷயங்கள் வேறு கிடைக்கிறதா-- கேட்கவே வேண்டாம்.

    பத்து வயசில் படித்திருந்தால் நிச்சயம் பயந்தே போயிருப்பேன்.

    பதிலளிநீக்கு
  9. துளசி : ஹஹஹ்ஹஹ் பேய் நல்லாவே ஆட்டுவிக்குதே!!! பல்கொட்டியைத் தொடர்கிறோம்..

    கீதா: ஹ்ஹஹஹஹ் பல்கொட்டிக்குத் தலைப்பல் இல்லாட்டாலும் பொக்கை வாயை வைச்சுக்கிட்டு நல்லாவே கிச்சு கிச்சு மூட்டுது!!! இதுக்குப் போயா பயந்தீங்க!!! ஹிஹிஹி...

    //முப்பது வருசமா உங்களைப் பேயா சுத்தி சுத்தி வரேன்ல? எனக்குத் தெரியாதா?”// ஹஹஹஹ்ஹ்!

    //சிவாஜி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து தினம் அவன் கனவில் வந்து வசனம் பேசி நடிப்பார்கள் என்றதும் முகம் வெளிறிப் பதறி நடுங்கி அலறியடித்து ஒப்புக்கொண்டான்.// விடு ஜூட்!! அடுத்த செவ்வாய் (உங்க கதைல வர செவ்வாய்) உக்ரத்துக்கிட்ட சொல்லி இந்த டயலாக்கை சாவாத அந்தப் பேயாத்தாகிட்ட சொல்ல சொல்லுங்க...பேயாத்தா அப்புறம் வரவே வராது!!!!

    உக்ரத்துக்கே ஷிவாஸா அஹ்ஹஹ் ஐயோ இன்னும் உக்ரமாகிடப் போறான்...பாருங்க அங்க 30 வருஷத்துல சோர்ந்து போயிருக்கற பல்கொட்டி அந்த ஷிவாசையே முறைச்சு ஏக்கத்தோடு பார்த்துக்கிட்டிருக்கு...ஹிஹிஹி...

    மிகவும் ரசித்தோம் ஸார்!!

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம் நன்றி!!! பல்கொட்டி வந்துருச்சுனு சொன்னதுக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. நல்லாவே இருக்கு அடுத்து...ம் guess பண்ணமுடியவில்லை

    பதிலளிநீக்கு