2017/07/14

கொலகார பேஷன்ட்



        “டாக்டர் குரு, உங்கள் நாலு மணி பேஷன்ட் தயார். பாதுகாப்பு அறை ஏழு, புது பேஷன்ட். கைதி. மேலாய்வுக்காக டாக்டர் ஸ்னேகா வித்யுத் அனுப்பி வைத்தார்” என்று ப்லூடூத் ஹெட்செட்டில் வந்த தேன்குரல் கேட்டு “ஓகே” என்றான். கணினியில் தெரிந்த விவரங்களைப் படித்தான். இரண்டு அவசர உதவி வாக்கி டாக்கி ரேடியோக்களை எடுத்துக் கொண்டான். ஒன்றை இடது கால் சாக்ஸில் மறைவாகப் பொருத்திக் கொண்டான். மற்றொன்றை கோட் பாகெட்டில் போட்டுக் கொண்டான். ஐபேடை கணினி முன் நீட்ட பேஷன்ட் விவரங்கள் தானாகவே நகலாகின. ஐபேடை பார்த்தபடி பாதுகாப்பு அறை ஏழுக்கு நடந்தான். பேஷன்ட் பெயர் பாதித்தது.

அறைக்குள் நுழையுமுன் பாதுகாப்பு ரேடியோக்களை இயக்கிக் கொண்டான். அறைக்குள் நுழைந்ததும் கதவு தானாகப் பூட்டிக்கொண்டது.

நீண்ட மேஜையின் எதிரெதிரே இரண்டு வசதியான சாய்வு நாற்காலிகள். ஒரு நாற்காலியில் ஒருவன் அமர்ந்திருந்தான். நாற்பது வயதிருக்கும். கைகள் கட்டப்பட்டிருந்தன. மறு நாற்காலிக்குச் சென்ற குரு மனம் மாறி ஆளிருந்த நாற்காலியருகே வந்தான். கோட்டிலிருந்த ரேடியோ, ஐபேட் இரண்டையும் மேஜை மேல் வைத்தான்.

லேசானப் புன்னகையுடன் பேஷன்ட் கைக் கட்டை அவிழ்த்தான். “என் பெயர் டாக்டர் குரு” என்றான். “நீங்க?”

“என் பெயர் கொலகாரன்”

“பார்த்தேன். உங்க நிஜப்பெயரா?”

“கொல செய்யுறவன் கொலகாரன் தானே? நாம எல்லாருமே கொலகாரங்க தான். இனி உங்களையும் கொலகாரன்னே கூப்பிடவா?”

“டாக்டர் குருனே கூப்பிடுங்க…. மிஸ்டர் கொலகாரன்” தயங்கினான் குரு.

“சரி” என்ற பேஷன்ட் சட்டென்று எழுந்து மேஜையிலிருந்த ஐபேடை எடுத்து சிதறு தேங்காய் போல் தரையில் ஓங்கி அடித்தான். சுக்கு நூறான ஐபேடைப் பார்த்துச் சிரித்தான். மேஜை மேலிருந்த ரேடியோவைப் பற்களால் கடித்துக் குதறி சின்னாபின்னமாக்கித் துப்பினான். நாற்காலியில் நிதானமாக அமர்ந்தான்.

திடுக்கிட்ட குரு மெள்ள சுதாரித்தான். எதிர்புறமிருந்த நாற்காலியைப் பலத்த ஒலியுடன் பேஷன்ட் அருகே இழுத்து வந்து உட்கார்ந்தான். “நீங்க உடைச்ச ஐபேடும் ரேடியோவும் எழுவத்தஞ்சாயிரம் ரூபாய்” என்றான்.

“சட்டி சுட்டதடா கை விட்டதடா” என்று உரக்கப் பாடினான் பேஷன்ட்.

கோட் பாகெட்டிலிருந்த குறிப்பேட்டையும் பென்சிலையும் எடுத்தான் குரு. “மன்னிச்சுக்குங்க.. மிஸ்டர் கொலகாரன்… உங்களுக்கு இந்த மாதிரி கருவிகள் எந்திரங்கள் பிடிக்காதுனு மறந்துடுச்சு..” என்றான். புன்னகைத்தான். “போன வெள்ளிக்கிழமை கைது ஆயிருக்கீங்க. டாக்டர் வித்யுத் உங்களை மேற்பரிசோதனைக்காக எங்கிட்டே அனுப்பியிருக்காங்க”

“தெரியும் தெரியும் விஷயம் தெரியும் காலம் வந்தால்..” பாடினான் பேஷன்ட்.

“நல்லாருக்கு. அந்தக்காலத்து சினிமா பாட்டா?” தொடர்ந்தான் குரு. “நான் உங்களுக்கு உதவி செய்ய முடியும்னு நம்பறேன். உங்க மனசிலிருக்குறதை தைரியமா சொல்லுங்க.. என் கிட்டே சொல்லுற எதுவும் உங்களுக்கு எதிரா கோர்ட்டுலயோ பொதுவிலயோ சாட்சியமா பயன்படாது. தைரியமா எதுவானாலும் சொல்லுங்க”

“தைரியமா எதுவானாலும் கேளுங்க” என்றான் பேஷன்ட். “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே..” பாடினான்.

“மிஸ்டர் கொலகாரன்… போன வெள்ளிக்கிழமை மட்டும் அறுபது செல்போனை உடைச்சிருக்கீங்க, முப்பது டிவி உடைச்சிருக்கீங்க, நூறு லேப்டாப்களை அடிச்சு நொறுக்கியிருக்கீங்க.. பதினேழு எக்ஸ்பாக்ஸ்.. முப்பது ப்லேஸ்டேஷன்.. இருநூறு ஹெட்செட்டைப் பிடுங்கி எறிஞ்சிருக்கீங்க..”

“சும்மாவா என்னைக் கொலகாரன்னு சொல்றாங்க?”

“செல்போன் மேலே உங்களுக்கு ஏன் வெறுப்பு? நீங்க போன் உபயோகிச்சிருக்கீங்க இல்லையா?””

“இருக்கேன்., போன் எதுக்கு? ஒரு அவசரத்துக்கு பேச. நேர்ல பேச முடியாதப்பவும் ரொம்ப தொலைவுல இருக்குறவங்க கூட அப்பப்ப இருக்கியா போயிட்டியானு விசாரிச்சுப் பேச. இப்ப பாருங்க.. யாரும் நேர்ல பேசிக்குறதே இல்லே.. மாடியிலிருந்து என் பையன் டெக்ஸ்ட் பண்ணுறான் “சாப்பாடு ரெடியா”னு கேட்டு. வந்து சாப்பிட்டதும் ரூமுக்கு ஓடி விடியோ விளையாடுறான். ஹெட்செட் மாட்டிக்கிட்டா எதுவுமே காதுல விழாது.. அப்புறம் வாட்சப் யூட்யூப்.. இப்படியே போகுது அவன் வாழ்க்கை.. வெளியில எத்தனை மரங்கள்.. எத்தனை குருவிகள்.. எல்லாம் காணாம போச்சு.. இவங்க செல்போன்ல வாழுறதுக்காக இயற்கை தினம் சாகுதய்யா…”

பார்வை விலக்காமல் குரு குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். பேஷன்ட் தன்னை மறந்துப் பேசிக்கொண்டிருந்தான்.

“என் மனைவியைப் பாருங்க.. அந்த நாள்ல எங்கம்மா பாட்டி எல்லாம் சமையல் செய்து அன்போட குழந்தை கணவருக்குப் பரிமாறி சாப்பிடுறதைப் பார்த்து சந்தோஷப்படுவாங்க.. எங்க கூட விளையாடுவாங்க.. சாப்பிடுறப்ப கலகலப்பா இருக்கும். கதை பேசுவோம்.. வம்படிப்போம்.. இப்ப பாருங்க.. யாரும் ஒண்ணா சாப்பிடுறதே இல்லை.. என் மனைவி பசங்களோட சாப்பிட்டு நினைவேயில்லை.. பாதி நேரம் ஆனந்த பவன் கோணங்கி பவன்லந்து டேக் அவுட், ஸ்விக்கி பக்கினு யாரோ டிலிவரி பண்றாங்க.. அரிசி கூட வக்கறதில்லே பல நேரம்.. வாட்சப் ஃபேஸ்புக் ப்லாக்னு கலாய்ப்பா.. இல்லின்னா டிவி சீரியல்.. குடும்ப உணர்வே யாருக்கும் இல்லாமப் போனதுக்கு இந்தக் கருவிகளும் எந்திரங்களும் தானே காரணம்..”

“நீங்க சொல்றது ஒரு விதத்துல உண்மைனாலும் நாகரீகம் வளர்ச்சி இதெல்லாம் நமக்கு பல வசதிகளைக் கொடுக்குது இல்லையா மிஸ்டர் கொலகாரன்? இப்ப பாருங்க.. இணையம் வந்ததுலந்து நம்ம சமூக உணர்வுகள் எவ்வளவு விரிஞ்சிருக்கு? தொழில் நுட்பத்தினால எத்தனை முன்னேற்றங்கள். ஃபேஸ்புக் வாட்சப் வழியா புரட்சியெல்லாம் நடக்குதே? ஊழல் மந்திரிங்க மாட்டுறாங்க.. மதுரை மாணவர் அமெரிக்க எம்ஐடியில் இங்கிருந்தே படிக்க முடியுதே..” என்றான் குரு.

“ஆ.. என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்று பாடினான் பேஷன்ட். “ஐயா.. முன்னாலயும் படிச்சிட்டுத்தான் இருந்தாங்க. அப்ப இல்லாத மேதைங்களா? போஸ், சிவிராமன், தாகூர், ராஜகோபாலாச்சாரி, பாரதி, அம்பேத்கர், காந்தி.. இவங்கள்ளாம் என்ன பாமரங்களா? செல்போனும் டிவியும் ஐபேடும் இணையமும் இல்லாம இவங்க புரட்சி செய்யலியா? புதுமை செய்யலியா? தொழில் நுட்பத்துக்கு என்ன விலை கொடுக்குறோம்னு யாருக்குமே தெரிய மாட்டேங்குதே..”

“அதுனால இதையெல்லாம் போட்டு உடைக்குறது சரினு நினைக்கறீங்களா?”

“தெரியாது. ஆனா அந்த அளவுக்கு எந்திரங்கள் புழக்கத்தில் இருக்காதே? அதான்..”

“இதனால எத்தனை சேதம்னு உங்களுக்குப் புரியுதா? அதுவுமில்லாம நீங்க உடைச்சிருக்குற பொருட்கள் பெரும்பாலும் அடுத்தவங்களுக்குச் சொந்தமானது. இது குற்றம்னு உங்களுக்குத் தோணலியா?”

“கொன்றவன் கண்ணன்.. கொல்பவன் கண்ணன்..” பாடினான் பேஷன்ட். “எது சேதம் டாக்டர்? இன்னிக்கு மகன் மனைவி நட்பு என்னும் அத்தனை உணர்வுகளும் மின்னணுவில் சிக்கிச் சின்னாபின்னமாகுதே அதானே சேதம்? பசுமை வரண்டு பில்டிங்கா வளர்ந்திருக்கும் சிமென்ட் காடு.. இதுவா வளர்ச்சி? யாராவது முன்னோடியா வரணும் இல்லையா? நான் தொடங்கி வைக்கிறேன் அவ்வளவு தான்.. பாருங்க.. இன்னும் ஒரு மாசத்துல ஆறு மாசத்துல வருசத்துல எத்தனை பேர் என்னைப் போல வராங்கனு பாருங்க.. இது ஒரு இயக்கம். இந்த எந்திர மோகம் அழியும் வரை விடமாட்டோம். உலகம் முழுதும் எங்க இயக்கம் பரவும். வீடு வீடா வருவோம். கட்டிடம் கட்டிடமா தேடுவோம்.. மனித நேயம் மறுபடி மலரும் வரை எந்திரங்களைத் தேடி அழிப்போம்..”

“மிஸ்டர் கொலகாரன்..” கால் சாக்ஸிலிருந்த ரேடியோ பித்தானை அழுத்தினான் குரு. “உங்களுக்கு ஓய்வு தேவை. அதுக்கு மருந்து தருகிறேன்”

“எல்லாத்துக்கும் மருந்து மாத்திரை. இயற்கையை நேசிச்சப்ப இதெல்லாம் தேவையே இல்லாம இருந்துச்சே? தூங்க மாத்திரை.. விழிக்க மாத்திரை.. யாருக்கு வியாதி டாக்டர்? உங்களுக்கா எனக்கா? என்ன வேடிக்கை உலகம்யா இது? எந்திரங்கள் நம்மை எந்திரங்களாக்கிடுச்சே.. எழுந்திருங்க டாக்டர்.. எப்ப விழிக்கப் போறீங்க?” என்று சட்டென்று குருவின் தோள்களைக் குலுக்கிக் கையிலிருந்த ஐவாச்சை அவிழ்க்கப் போனான். “என்னோட வந்துருங்க டாக்டர்.. என் இயக்கத்துல சேர்ந்துடுங்க.. நான் உங்களைக் குணப்படுத்துறேன்..”

அதற்குள் உதவியாட்கள் வந்து பேஷன்டைக் கட்டுப்படுத்தி இழுத்துப் போனார்கள். சற்றே கலங்கியிருந்த குரு ஆயாசத்துடன் வெளியேறினான். உதவியாளரை அழைத்து, “நான் வீட்டுக்குப் போறேன். என் மிச்ச பேஷன்ட்களை இன்னொரு நாள் வரச்சொல்லுங்க”.

அலுவலகத்திலிருந்து வெளியேறி மூலைக்கு நடந்தான். கீழிறங்கிய நகர்படியில் பிறருடன் சேர்ந்து மூன்று மாடிகள் இறங்கி நடந்தான். பார்க்கிங் கராஜ் வந்ததும் கார்ச்சாவியின் பித்தானை அழுத்தினான். ஏழாம் வரிசையில் இருந்த கார் மின்னி பீப் என்றது. எஞ்சின் தானே விழித்தெழுந்து தயாரானது. ஏசியை இயக்கியது.

        வீடு வந்த போது ஆறு மணி. காரை நிறுத்திவிட்டு பதினைந்தாவது மாடி ப்ளாட்டிற்கு விரைந்தான். ஐவாச்சின் ப்லூடூத் இணைப்பில் உந்தப்பட்டுத் திறந்த துடிப்பூட்டுக் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தான். சலனமறிந்த அறை விளக்குகள் தானாக எறிந்தன. மேலே மாட்டியிருந்த சான்டலியர் துடிவிளக்கு இள நீலத்தில் ஒளிர்ந்தது. விளக்குள் பொருந்தியிருந்த ஒலிபெருக்கி ஐவாச்சுடன் தானாகவே ப்லூடூத்தில் இணைந்து கூகில் டிரைவிலிருந்து பாடல்களை ஒலிக்கத் தொடங்கியது.

ஐவாச்சின் செயலி ‘900 காலொரி’ எனும் வரை யோகா ட்ரெட்மில் வெயிட்ஸ் என்று பயிற்சி செய்தான் குரு. குளியலறைக்குள் நுழைந்தான். சலனமறிந்த குளியலறை விளக்குகள் தானாக எரியத் தொடங்கின. மின்சாரத்தில் இயங்கிய பல்விளக்கியில் அவசரமாகச் சுத்தம் செய்துகொண்டான். முன்பதிவிலிருந்த கணக்கி இரண்டு நொடிகள் தயங்கி இயங்க, தானாக வெளிவந்த மிதமான சுடுநீர்ச்சாறலில் குளித்தான். வெளியே வந்து உடையணிந்து சமையலறைக் குளிர்பெட்டியிலிருந்து கின்வா பீன்ஸ் புலவ் எடுத்து மைக்ரோவேவில் சுடவைத்தான். ப்ரொடீன் ஷேக் ஒன்றை எடுத்துக் கோப்பையில் ஊற்றினான். சாப்பிட்டபின் ஐவாச்சின் ஹெல்த் செயலியைத் தட்டி 462 காலொரி என்றான்.

வரவேற்பறையின் சொகுசுத் துடி நாற்காலியில் சாய்ந்தான். மசாஜுக்கான பித்தான்களைத் தட்டினான். அரை மணி போல் சாய்ந்து டிவியில் சானல் புரட்டினான். மனைவியிடமிருந்து வாட்ஸப் செய்தி பார்த்தான். அம்மாவைக் கூகில் டுவோவில் கூப்பிட்டுப் பேசினான்.

ஒன்பது மணி. ஐவாச் “உறக்க நேரம்” என்றது. புதிதாக அறிமுகமான உப்பு கலந்த டூத்பேஸ்டில் மறுபடி பல்விளக்கி, புதிதாக அறிமுமான வேம்பும் கிராம்பும் கலந்த மவுத்வாஷில் வாய் கொப்பளித்துச் சுத்தம் செய்து கொண்டான். படுக்கையில் விழுந்தான்.

அறை விளக்குகள் தாமாக அணைந்தன. ஐவாச் ப்லூடூத் இணைப்பில் படுக்கை தலைப்பக்க ஸ்பீக்கர்களில் இதமான மெல்லிசை ஒலிக்கத் தொடங்கியது. குருவுக்கு ஏனோ மாலையின் நினைவுகள் மீண்டன. “என்னோட வந்துருங்க டாக்டர்.. என் இயக்கத்துல சேர்ந்துடுங்க.. நான் உங்களைக் குணப்படுத்துறேன்..”. புரண்டு படுத்தான்.
■ ■


குறிப்பு [-]

இக்கதையின் கரு, ரே ப்ரேட்பரி எழுதி 1953ல் வெளியான 'The Murderer' எனும் சிறுகதை. அசை போட்டுத் தமிழில் தழுவியதில் சில ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

இன்னும் சில ப்ரேட்பரி கதைகள், என் எழுத்தில்:
ஆஸ்மா கிணறு | (The one who waits)
சிவப்பு வட்டம் | (The last night of the world)
பரணறையில் நன்னாரி மணம் | (A scent of sarasparilla)
மனதிற்கினிய மேரி டீச்சர் | (A story of love)
மகிழ்ச்சி எந்திரம் | (The happiness machine)






17 கருத்துகள்:

  1. இயந்திரங்களோடு இயந்திரமாக...

    வருங்காலம் இப்படி தான் இருக்குமோ...?

    புவ்வா...?

    பதிலளிநீக்கு
  2. நடைமுறைகளுக்கு எதிராக .....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரசியமான கொக்கி ஜிஎம்பி சார்.
      நடைமுறைக்கு எதிராக இருப்பதும் நடைமுறை தான் போலிருக்கிறது. பிரேட்பரி 1953ல் எழுதிய கதையில் தொலைபேசியைக் கண்டிப்பது போல் எழுதியிருந்தார். தினசரி வாழ்வில் விடியோபேசி ரேடியோ கருவிகளின் ஆக்கர்மிப்பைச் சாடுவது போல.

      ஐம்பது வருடங்கள் கழித்து இன்னும் பல வகைகளில் விரிவாகியிருக்கும் ஆக்கிரமிப்பு நம்மை பாதிக்கிறது என்றே நினைக்கிறேன். பதினெட்டாம் நூற்றாண்டில் நீராவி எஞ்சின் வந்தபோதும் இதே கதை என்று படித்திருக்கிறேன். வளர்ச்சியை விரும்பி ஏற்றாலும் அதன் விலைகள் பற்றிய சிந்தனைகளை அத்தனை சுலபமாக ஏற்க முடிவதில்லை.

      மாற்றங்களை ஏற்க முடியாதது ஒரு பலவீனம் தான். மாற்றங்கள் அழித்துப் போட்ட சில அற்புதங்களை மறக்க முடியாததும் ஒரு பலவீனமே. இருந்தாலும் வளர்ச்சியின் வேகம் போதாது என்பதே என் கட்சி. வளர்ச்சியின் எதிர்ப்பு கவைக்குதவாது எனினும் கதைக்குதவும் என்று நினைக்கிறேன் :-)

      நீக்கு
  3. சுஜாதாவின் என் இனிய இயந்திரா மாதிரி இருக்கு

    பதிலளிநீக்கு
  4. குரு கொலகாரனை குணப்படுத்தி, இருக்கிற ஒரே ஒரு இயற்கை விரும்பியைக் கொல்லப்போகிறாரா அல்லது குரு கொலகாரனாகி மின்னணு சாதனங்களை உடைக்கப்போகிறாரா?

    பதிலளிநீக்கு
  5. என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து விட்டாலும் தாலாட்டு பாடும் மெத்தையை வாங்கலாம். ஆனா தூக்கத்தை வாங்க முடியாது. புரண்டு படுத்த டாக்டர் புரிந்து கொண்டார்.

    பதிலளிநீக்கு
  6. மகளைப் பார்க்கும் பொழுது அவள் பாட்டியின் நினைவு வருவது போல எந்தப் புதுசிலும் பழசு பதுங்கியிருப்பதும் தெரிந்தது.

    அங்கே இணைந்து வரும் பழம் பாடல் வரிகள் கவர்ந்தன.

    பழசின் மங்கலான பின்னணியில் புதுப்புது எழுத்துச் சோதனைகளுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகளைப் பார்க்கும் பொழுது அவள் பாட்டியின் நினைவு வருவது போல

      நயமான உவமை.. (சுட்டுக்கலாமா என்கிறது உள்மனம்)

      நீக்கு
  7. //அங்கே இணைந்து வரும்..//

    அங்கங்கே இணைந்து வரும்

    பதிலளிநீக்கு
  8. இதை படிக்கும் பொழுது எனக்கு சிரிப்பு வரவில்லை வேதனைதான் வருகிறது.

    மிஸ்டர். கொலைகாரனின் எண்ணங்கள் எவ்வளவு பொதுநலமானது உயர்வானதே மிஸ்டர். கொலைகாரன் எனது எண்ண ஓட்டங்களுடன் ஒத்து வருகிறார்.

    வேண்டும் அந்த பழைய வாழ்க்கை எனக்கு மட்டுமல்ல நாளைய நமது சந்ததிகளுக்கு....

    பதிலளிநீக்கு
  9. 1953 லியே பேசப்பட்டு விட்டதா....அப்ப இப்பவும் பேசுகிறோம் என்றால்.....எக்காலமும் ஒன்றே தானோ....மனிதன் இயந்திரமாகிப் போகிறான்....சுஜாதா நினைவுக்கு வந்தார்....

    கீதா

    பதிலளிநீக்கு
  10. / மேலே மாட்டியிருந்த சான்டலியர் துடிவிளக்கு இள நீலத்தில் ஒளிர்ந்தது. விளக்குள் பொருந்தியிருந்த ஒலிபெருக்கி ஐவாச்சுடன் தானாகவே ப்லூடூத்தில் இணைந்து கூகில் டிரைவிலிருந்து பாடல்களை ஒலிக்கத் தொடங்கியது.//

    சமீபத்தில் எங்கோ பார்த்த மாதிரி இருக்கே....!!!!!!

    கொலகாரனோட இயக்கத்தில் சேரவேண்டும். எங்கே அப்ளிகேஷன் பார்ம்?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சமீபத்தில் எங்கோ பார்த்த மாதிரி இருக்கே....!!!!!!

      உன்னிப்பா கவனிக்கறீங்க போல.. ஒரு இடத்துக்கு போனமா காத்தோட்டமா தோசை சாப்பிட்டமா வந்தமானு இல்லாம..

      நீக்கு
  11. எல்லாம் யந்திர மயம்.



    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு.
    பாய்விரித்து படுப்பவனும் வாய் விரித்து தூங்குகிறான்.பஞ்சனையில் நான் படுத்தும் நெஞ்சில் ஓர் அமைதி இல்லை
    என்று பாடுவது போல் இருக்கிறது. மருத்துவரின் நிலை.
    விஞ்ஞானம் நல்லதும், கெட்டதும் செய்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு