2012/02/22

காதல் தாது




சுவையானத் திருப்பத்துடன், ஹேமா அளவோடு எழுதிய நச் கதை இதோ: இதுவும் காதல்!



    டுத்த சில கணங்களில் என்னை விசாரிப்பார்கள்.

புதிய விசாரணைக் குழுவின் மூத்தவர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். படிக்கப்படாத அறிக்கை ஒன்று அவர்கள் கையில் படபடத்துக் கொண்டிருந்தது. இந்த முறையாவது அறிக்கை எதிர்பார்த்தபடி அமையுமா? என் பெயரின் களங்கம் நீங்கி என்னைப் பழையபடி பயணங்களுக்கு அனுப்புவார்களா? நானும் படபடத்தேன். விசாரணை தொடங்கியது.

"றாவுக்கு வெற்றி!" என்றார் மூத்தவர். பிறகு என்னிடம், "விசாரணைக்கு வருக. குழுவில் அனைவருமே புதியவர்கள். உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். உங்கள் செயல் போற்றத்தக்கது என்ற என் தனிப்பட்ட கருத்தை நான் தெரிவித்தாலும், இங்கே பொதுவில் உங்களை இன்னும் குற்றவாளியாகவே கருதி விசாரிக்கிறோம். விசாரணையின் முடிவு.. இந்த அறிக்கையாவது.. உங்களுக்குச் சாதகமாக அமையட்டும் என்ற வாழ்த்துடன் தொடங்குகிறோம்" என்றார். "நாங்கள் புதியவர்கள் என்பதாலும் சம்பவம் நிகழ்ந்து நீண்டகாலம் கடந்திருப்பதாலும், பூவில் நடந்தவற்றை ஒரு முறை விளக்கமாகச் சொல்லுங்களேன்?".

விவரத்தை அறிந்து கொள்வதை விட, கதை கேட்கும் ஆர்வம் அவர் குரலில் வெளிப்பட்டது.

"றாவுக்கு வெற்றி!" என்ற நான், பயண விவரங்களை, அதாவது கதையை, சொல்லத் தொடங்கினேன்.

    பூவில் வந்திறங்கியதும் என்னால் திகைப்பை அடக்க முடியவில்லை. திகைப்பா அல்லது குழப்பமா என்று கூடப் புரியவில்லை. புதுமையாக இருந்தது.

பூப் பயணத்துக்கு முன் சில உணர்வணுக்கள் திணிக்கப்பட்டு வந்தேன் என்றாலும் இது புதுமையாகவே இருந்தது. பழமையும் புதுமையே என்று மூத்தவர் சொன்னது நினைவுக்கு வந்தது. நான் இறங்கிய இடமும் நேரமும் எனக்குள் அடையாளமாகப் பதிவாகி என் அதிகாரிகளுக்கும் சென்றது. எல்லாமே விசித்திரமாகப் பட்டது.

எனக்களிக்கப்பட்ட விவரங்களைச் சரிபார்த்தேன். கண்ணாடிக் கட்டிடம். சரி. கண்காணிக்க வேண்டியவர்கள்.. அதோ.. தெரிகிறார்கள். சரி. ஆண், பெண் என்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிந்தன. சரி. என்னை எப்படி அடையாளம் காட்டுவது? எப்படி அறிமுகம் செய்து கொள்வது? 'அன்பர்களே, வணக்கம். நான் றாவின் பிரஜை. உங்கள் இருவரையும் கடத்திச் செல்ல வந்திருக்கிறேன், தயவுசெய்து என்னுடன் வருகிறீர்களா' என்றா? திகைத்தேன்.

வந்த விவரத்தைச் சொல்ல வேண்டும். அதற்கு முன் என்னை அடையாளம் காட்ட வழி தேட வேண்டும். என்ன இது..? எங்கோ போகிறார்களே? எதிலோ ஏறி அமர்கிறார்களே? ஆ! நினைவுக்கு வந்தது. கார்! பூப் பயணம் செய்வேன், அங்கு காரைக் காண்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. கனவிலும் நினைக்காதவை வேறு எவை என்பதைப் பட்டியலிட இப்போது நேரமில்லை. ஒரு பூப்பேச்சுக்குச் சொன்னேன். இணையுலகில் கனவுகள் கிடையாது. காரில் கிளம்பிப் போகிறார்களே? தொடர வேண்டும். அவர்களைப் பின் தொடரும் பொழுது என் அடையாளம் பற்றிச் சிந்திக்கலாம். என் அடையாளத்தைக் கண்டு பூவாசிகள் பயப்படக்கூடாது என்று மூத்தவர் சொல்லியிருக்கிறார். கவனமாக இருக்க வேண்டும். எத்தனை விதமான கார்கள்! விரைந்து அவர்களுடைய காரிலேயே தொற்றிக் கொண்டேன்.

திடீரென்று ஆண் பாடத் தொடங்கினான்.

பாடும் பொழுதும் பின்னரும் ஒருவரையொருவர் நெருங்கி அடிக்கடித் தொட்டுக் கொண்டார்கள். சிரித்தார்கள்.

இதுதான் மூத்தவர் சொன்ன மவா? இப்படித் தொட்டுச் சிரித்தால் ம வந்துவிடுமா? மூத்தவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அவர்கள் பாடிய வரிகளைப் பொருளரில் ஓட்டினேன். புரிந்து கொள்ள சற்று நேரமானாலும் சுவையாக இருந்தது. இளசு. வழக்கில் இல்லாத சொல்.

அத்தனை நெருங்கித் தொட்டுச் சிரித்துப் பேசிப் பாடியவர்கள், பிரிந்துத் தனித்தனி இடத்துக்குப் போனது குழப்பமாக இருந்தது.

யாரைத் தொடர்வது, யாரை விடுவது? பெண்ணைத் தொடர முடிவு செய்தேன்.

பெண் வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கே இன்னும் சிலர் காத்திருந்தார்கள். ஒரு பெண்ணும் ஆணும் மூத்தவர்கள் போலவே இருந்தார்கள். மூத்த பெண் அலறத் தொடங்கினார். அவரது குரலில் பலகோடி ஜூல் சக்தி இருந்தது. "எங்கேடி போய் வரே? யார் கூட சுத்திட்டு வரே? மானம் போவுது. இப்படி பஜாரியாட்டம் ஊர் சுத்துறியே? அதும் மோடார் வண்டில ஊரெல்லாம் பாக்குறாப்புல? யாரவன்.. எனக்கு இப்பத் தெரிஞ்சாவணும்.." என்று சினந்தார்.

பெண் நிதானமாக, "என்னோட காதலர்.. என்னம்மா இது.. வீட்டு வாசல்ல வச்சு இப்படி கூப்பாடு போடுறே? உள்ளே வந்து விவரம் சொல்றேன்.." என்றாள்.

காதலர். ஆ! அந்தச் சொல். தேடி வந்தச் சொல். என் இலக்கு சரிதான். இவளிடம் காதல் இருக்கிறது என்று எனக்குக் கிடைத்த தகவல் சரியே. உடனே தீர்மானச் செய்தி நினைத்தனுப்பினேன்.

நான் சற்றும் எதிர்பாராத விதமாக பெண்ணைக் கன்னத்தில் அடித்தார் மூத்த பெண். இதென்ன.. அடித்துக் கொள்கிறார்களே? வியந்த போது மூபெண் தன்னையே பல இடங்களில் அடித்துக் கொண்டார். அவர் கண்களில் திரவம் கொட்டியதைப் பார்த்து அதிர்ந்தேன். கண்ணீர்! சிலிர்த்தேன். பயண முன்னேற்பாட்டின் போது மூத்தவர் சொன்னது சரிதான்! எதற்கு அஞ்சினாலும் பூப் பெண்களின் கண்ணீருக்கு மட்டும் அஞ்சக்கூடாது. அதைப் பார்க்காமல் இருப்பதே நல்லது. கண்ணீரினால் எதையும் சாதித்துக் கொள்வார்கள் பூப் பெண்கள்.. என வரிசையாக நினைவுக்கு வந்தன. இந்தப் மூபெண் என்ன சாதிக்கப் போகிறார் என்று பார்க்க விரும்பினேன்.

அதற்குள் மூஆண் குறுக்கே வந்து அனைவரையும் உள்ளே செல்லுமாறு பணித்தார். நானும் தொடர்ந்தேன். ".. உள்ளே போகலாம் வா" என்று பெண்ணை இன்னொரு பெயர் சொல்லி அழைத்தார் மூஆண்.

ஒருவருக்கு இத்தனை பெயர்களா? இனிப் பெண்ணை லா என்று அழைக்கப் போகிறேன்.

லா உள்ளே போனதும் வீட்டுக் கதவை அடைத்த மூஆண், "இதோ பாரும்மா.. எனக்கு நீ காதலிக்கிறதுல ஒரு ஆட்சேபணையும் இல்லே.. உங்கம்மா ரெண்டு நாளுல சரியாயிடுவா. ஆனா அந்தப் பையனை எங்களுக்குப் பிடிக்கணும், அது முக்கியம். அந்தப் பையன் பொறுப்பானவனா என்னானு நாங்க தான் தீர்மானிப்போம்.. சம்மதமா?" என்றார்.

லா முகத்தில் ம. "அப்பா! உங்களுக்கு அவரைப் பிடிக்கும்பா. ரொம்ப நல்லவர்பா" என்றாள்.

"அப்ப ஒண்ணு செய். உன்னோட பொறந்த நாள் வருதுல்ல? பார்டிக்கு வரச்சொல்லு, பாத்துக்குவோம்" என்றார் மூஆண். மூபெண் அமைதியானதுடன் இல்லாமல் அவர் முகத்திலும் ம! பூ வாசிகளுக்கு ம சுலபமாக வருகிறது.

மறுநாள் லாவைப் பின் தொடர்ந்தேன். காலையில் தெருவோரமாக இருந்த ஒரு கடைக்குள் சென்று கறுப்பு நிற குழாய் ஒன்றுக்குள் ஏதோ பேசினாள். "அவசியம் வாங்க. உங்களோட பேசணும். வீட்டுக்குத் தெரிஞ்சு போயிடுச்சு!" என்றாள். பிறகு மாலை வரை வீட்டை விட்டு நகரவில்லை. மாலையானதும் கிளம்பினாள். "அம்மா.. பார்க்கு வரைக்கும் போயிட்டு வரேன்.. அவர் கூடப் பேசப்போறேன்" என்று கிளம்பினாள். நானும்.

நீண்ட நேரம் தனியாக உட்கார்ந்து சலித்துக் கொண்டிருந்தாள் லா. சற்றுப் பொறுத்து லாவின் ஆண் வந்தான்.

லா அவனை அழைத்த பெயர் எனக்குப் புரியவேயில்லை. இனி அவனை ஜே என்று அழைக்கப் போகிறேன்.

இருவரும் பேசினார்கள், பாடினார்கள். லா ஜேயிடம் விவரம் எல்லாம் சொன்னாள். "அடுத்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்துருங்க. அப்பா உங்களைப் பிடிச்சிருந்தா நம்ம காதலுக்கு ஓகே சொல்றதா சொல்லியிருக்காரு".

"நிச்சயமா.. நல்லதா போச்சு" என்று அவன் அவள் முகத்தில் உரசினான். அவளும். இருவர் முகத்திலும் ம! விசித்திரம்.

பூவில் ம எத்தனை மலிந்து கிடக்கிறது! நம் சமூகத்தில் மவுக்கு ஏன் இத்தனை போ? பூவிலிருந்து பிரிந்து வந்த நாம் எங்கேயோ மவின் அணுவைத் தவறவிட்டிருக்கிறோம் என்று செய்தி எண்ணினேன்.

என் பயணக் குறிப்புகளை வரிசைப்படுத்தி அனுப்பினேன். காதல் விவகாரம் சமூகத்துக்குப் பிடித்திருந்தது. லாவை அவசியம் கடத்தி வர ஆணை வந்து சேர்ந்தது. காதல் முனைப்பாக இருக்கும் பொழுதே ஷ்கில் பிடிக்கவேண்டும் என்று செய்தி வந்தது. நிச்சயம். ஜேயையும் சேர்த்துக் கடத்தி ஷ்கில் பிடித்து வந்தால் எனக்கு மூன்று லீக்கள் கிடைக்கும் என்றும் செய்தி வந்தது. ஒரு லீ கிடைக்குமென்றால் நான் கொ கூடச் செய்வேன். மூன்று லீயா! மூன்று லீக்கள் கிடைப்பதாக இருந்தால் லா என்ன, ஜே, இன்னும் அவர்கள் வீட்டு மூக்கள் அத்தனை பேரையும் கடத்தி ஷ்கில் பிடிப்பேனே? பூவில் ஒரு காதல் விடாமல் அத்தனையும் பிடிப்பேனே? சுறுசுறுப்பானேன்.

அவர்கள் பாடியதை நினைவியில் மீட்டேன். உன் இளமைக்குத் துணையாகத் தனியாக வந்தேன். நைஸ். இதயங்கள் சிறிசு, எண்ணங்கள் பெரிசு. அட! இதைக் குறித்துக் கொள்ள வேண்டும். மூத்தவருக்கு இது போன்ற வரிவித்தைகள் பிடிக்கும்.

அன்பார்ந்த லா மற்றும் ஜே, உங்கள் இருவரின் இதயங்களையும் எண்ணங்களையும் அணுவலைகளாக உறிந்து எடுத்தப் பிறகும் இப்படிப் பாடிக் கொண்டு திரிவீர்களா? யோசித்த போது என்னையறியாமல் புன்னகைத்தேன்.

வலிக்காது, உத்தரவாதம் தருகிறேன். உங்கள் இருவரையும் இணையுலக எல்லைக்குக் கடத்திச் சென்று ஷ்கில் பூட்டுவேன். பிறகு இறகால் தொட்டது போல் ஒரு வருடல். உணர்வுகளும் எண்ணமும் றாவின் மையத்துக்குப் போனதும் உங்களை மீண்டும் இங்கேயே கொண்டு வந்து விடுவேன். முடிந்தால் தொடர்ந்துப் பாடித் திரியலாம். காதல் அன்பு பாசம் போன்ற உங்கள் உணர்வுகளின் சாரம் இணையுலகுக்குத் தேவையாக இருக்கிறதே, என்ன செய்ய? எல்லாம் உங்களால் வந்த வினை.

    லாவின் பிறந்த நாளுக்கு நிறைய பூவாசிகள் வந்திருந்தார்கள். ஜே இன்னும் வரவில்லை. "வருவார்பா!" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள் லா.

வந்திருந்தவர்களில் ஒரு ஆண், லாவைப் பார்த்த பார்வையில் காதல் இருந்தது. அடிக்கடி மூஆணுடன் பேசுகிறானே? அவரும் தலையை அசைக்கிறாரே?

ஜே எங்கே? சுற்றுமுற்றும் பார்த்தேன். எதிரே சிகரெட் பிடித்தபடி ஒருவர் அமர்ந்திருந்தார். ஏனோ அவரைக் கண்டதும் குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு ஓடின. பெயர் ரங்காச்சாரியாம். பூவில் எல்லாமே பலமாத்திரை ஒலிகளாக இருப்பது வியக்க வைக்கிறது. எப்படி இவர்களுக்கு நேரம் கிடைக்கிறது? இணையுலகில் எல்லாமே ஒன்றிரு மாத்திரை ஒலிகள் தாம். அதற்கே எங்களுக்கு நேரமில்லை. என் பெயர் வ். அவ்வளவு தான். என்னைப் பற்றிய விவரங்கள் மைய நினைவியில் உள்ளன. வ் என்றதும் என்னைப் பற்றிய விவரங்களை எண்ணமுடியும். போதுமே? பூவில் நிறைய அவகாசமிருக்கிறது அனைவருக்கும்.

மீண்டும் அவனருகே வந்த மூஆண் அவன் தோளைத் தொட்டு, "இன்னிக்கு சொல்லிடறேன், கவலைப்படாதே" என்றார். என்னவென்று நான் பிசைந்து கொண்டிருக்கையில் அவராகவே சொன்னார். "யாரையோ காதலிக்கிறாளாம். வரச்சொல்லியிருக்கேன். ஜஸ்ட் எ லுக். சும்மா அவளை திருப்திப் படுத்த, தட்ஸ் ஆல். இல்லின்னா இந்த பர்த்டே பார்டி வேணாம்னிருப்பா. நீ தான் மாப்பிளைனு இன்னிக்குப் பார்ட்டி முடிஞ்சதும் சொல்லிடறேன் ரகு. நீ தான் எங்க வீட்டு மாப்பிள்ளை" என்றார்.

அப்படியா? திருப்பம் பிடித்திருந்தது. லாவின் காதல் உணர்வை உறிஞ்சுவது சுலபம் போலிருக்கிறதே? ரகு! பெயரும் பிடித்திருந்தது. சுருக்க வேண்டியதில்லை, ஒரு மாத்திரை போனால் போகிறது. துடிப்பாக இருந்தான். அடிக்கடி கண்ணாடியைக் கழற்றி மாட்டிக் கொண்டிருந்தான்.

கணங்களில் ஜே உள்ளே நுழைந்தான். லா ஓடிச்சென்று ஜேயை குடும்பத்துக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

"பார்டியை தொடங்கிறலாம்" என்று மூஆண் சொல்ல, எல்லோரும் பாடினார்கள். ஆடினார்கள்.

ஜேயும் லாவும் ஆடியதைப் பார்த்துக் கொண்டிருந்த ரகு முகத்தில் இப்போது காதலைக் காணவில்லை. சுளித்துக் கொண்டிருந்தான்.

இன்றைக்கு எப்படியாவது இருவரிடமும் அறிமுகம் செய்து கொண்டாக வேண்டும். கடத்திக் கொண்டு போவதை இவர்கள் ஏற்கும்படி எப்படிச் சொல்வது என்று திகைத்துக் கொண்டிருந்த போது ரகுவைப் பார்த்தேன். எனக்குள் ஒரு திட்டம் உருவானது.

என் உள்ளியக்கக் குறிகள் வேகமாகச் செயல்பட, நான் ரகுவுள் புகத் தயாரானேன். ரகுவின் வடிவில் ஜேயுடன் பேசிவிடுவது என்று தீர்மானித்தேன்.

ரகு கண்ணாடியைக் கழற்றிய ஒரு தருணத்தில் அவனுள் புகுந்தேன். அவையில் எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தாரகள். 'கூடு பாய்வது சாதாரணம்.. இதற்கு கைதட்ட வேண்டாம்' என்று சொல்ல நினைத்து கைதட்டல் எனக்கல்ல என்று புரிந்து அடங்கினேன்.

மூஆண் ஏதோ சொல்லத் தொடங்கியிருந்தார். "இன்னிக்கு என் பெண்ணுடைய பிறந்த நாள் மட்டுமல்ல. அவளுடைய திருமண நிச்சய நாளும் கூட" என்றார். லா ஜேயின் கைகளை அழுந்தப் பிடித்துக் கொண்டாள். மூஆண் தொடர்ந்தார், "மீட் மை சன் இன் லா ரகு. எங்க வீட்டு மாப்பிள்ளை" என்று ரகுவாகிய என் தோள்மேல் கை போட்டார். எல்லோரும் கை தட்டினர். விழித்தேன். "அப்பா!" என்று கோபமாக குரல் கொடுத்துவிட்டு லா அங்கிருந்து அகன்றாள். ஜே என்னருகே வந்து, "வாழ்த்துக்கள்!" என்றான். நானும் பதிலுக்கு "வாழ்த்துக்கள்" என்றேன். பதில் சொல்லாமல் ஜே வெளியேறினான்.

விருந்தினர்கள் ஒவ்வொருவராகக் கிளம்ப, ரகுவாகிய நானும் மூஆணும் மட்டும் இருந்தோம்.

"ஏம்பா ரகு, ஒரு மாதிரி இருக்கியே?" என்றார் மூஆண்.

விழித்தேன்.

"கோவமா ஓடிட்டானு பாக்குறியா? டோந்ட் வொரி. எல்லாம் சரியாயிடும். பத்து நாள் அந்தப் பையனை நினைச்சுட்டிருப்பா. தானா சரியாயிடும்"

எனக்கு விவரம் மெள்ள விளங்கத் தொடங்கியது. ரகுவுடன் பேசிக்கொண்டிருக்கிறார். இது தோதாக இருக்கும் போலிருக்கிறதே? "கவலையில்லை. நானே லாகிட்டே பேசுறேன்" என்றேன்.

"லாவா? யாருப்பா?"

சுதாரித்தேன். "உங்க பொண்ணு தான் சார். நானே அவளோட பேசி சரி பண்ணுறேன்!"

"வெரிகுட். தட்ஸ் மை பாய். லா.. நல்லாருக்குப்பா. அதுக்குள்ளே செல்லப் பெயரா?" என்றபடி என்னைத் தட்டிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றார்.

லாவின் அறைக்கதவைத் தட்டினேன். திறந்தவள் என்னைப் பார்த்தப் பார்வையில் காதல் இல்லை. "என்ன?" என்றாள்.

நான் புன்னகைத்தேன். "உன்னோட கொஞ்சம் பேசணும்" என்றேன்.

"அவசியமில்லே. ஐ டோந்ட் லைக் யூ. உங்களை என்னால் கல்யாணம் செஞ்சுக்க முடியாது. என்னுடைய காதலுக்கு குறுக்கே நிக்காதீங்க" என்றாள்.

காதல்! மறுபடி அந்தச் சொல்! சிலிர்த்தேன். "உன்னோட காதல் ரொம்ப முக்கியம்னு நானும் நினைக்கிறேன். அதனால தான் உன்னோட பேசணும்" என்றேன்.

குழப்பத்தோடு பார்த்தாள். "என்ன சொல்றீங்க?"

"முதலில் ஜேயைப் பார்த்துப் பேசி என்னை அறிமுகம் செஞ்சுக்குறேன். உங்க ரெண்டு பேருக்கும் நான் ஒரு விருந்தும், அதுக்குப் பிறகு ஒரு பரிசும் கொடுக்க நினைக்கிறேன். தயங்காம என்னோட வரணும். உங்க காதலை நான் ரொம்ப மதிக்கிறேன்"

"யாரு ஜே?"

சொன்னேன். சிரித்தாள். லாவின் முகத்தில் பழைய ம! "ரொம்ப நன்றி ரகு! உங்களைப் புரிஞ்சுக்காம பேசிட்டேன்.. வாங்க.. இப்பவே ஜேயைப் பாத்து விவரத்தை சொல்லணும்" என்றாள். நான் பதில் சொல்வதற்குள் காணாமல் போனாள்.

லா அகன்றதும் சற்று நிதானித்து அவளைப் பின் தொடர்ந்தேன். எப்படியும் ஜேயை சந்திப்பாள். முடிந்தால் அங்கேயே அவர்களுடன் அறிமுகம் செய்து கொள்ள நினைத்தேன். நான் வந்த நோக்கத்தை எடுத்துச் சொல்லத் தீர்மானித்தேன்.

முன்னர் பார்த்த இடத்தில் ஜே கோபமாக உட்கார்ந்திருந்தான். லா அவனருகே சென்று ஏதோ சொல்லி அமைதிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இருவரிடையே காதல் திரும்பிவிட்டதன் அடையாளமாகச் சிரித்துப் பேசினார்கள். தொட்டுக் கொண்டார்கள். பாடினார்கள்.

காதல் இல்லாவிட்டால் எனக்கு இங்கே என்ன வேலை? காதல் திரும்பியதில் எனக்கு ஒரு வித நிறைவு தோன்றியது. அதிர்ந்தேன். முதல் முறையாக அனுபவித்த உணர்வு. ம!



[நீ..ளமாகிவிட்டது. அடுத்தப் பதிவில் முடிக்கிறேன்]➤ 2


24 கருத்துகள்:

  1. என்ன அடுத்த பதிவுமா!!!

    அதற்குள் தமிழ் - தமிழ் - தமிழ் அகராதி ஏதாவது கிடைக்கிறதா என்று தேடிப் பார்க்கின்றேன். இல்லையேல் இந்தப் பக்கம் வராமல் இரண்டு மூன்று வாரம் விடுப்பு எடுத்துக் கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசம்னா அது அப்பாஜிதான்.

    பதிலளிநீக்கு
  3. கடவுளே அப்பாஜிஜிஜிஜிஜிஜி.....இரவு வந்து இன்னொருதரம் வாசிக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  4. ம என்றால் மலர்ச்சி, மூ, ஆண் என்றால் மூத்த ஆண்... உங்களின் விஞ்ஞானக் கதையைத் தொடர்கையில் மூளைக்கும் வேலை, விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை. கூடவே எனக்குப் பிடித்த ஜெ நடித்த பாடல்கள் வேறு... இரவு மீண்டும் படித்துவிட்டு வருகிறேன் அப்பா ஸார்!

    பதிலளிநீக்கு
  5. பாட்டு ஒண்ணு கூடக் கேட்க முடியலை. மிஸ்ட் ப்ளக் இன் அப்படினு வருதே! :(((((

    க.ந.இ.தொ. (நானும் றா)

    பதிலளிநீக்கு
  6. வித்தியாசமான கற்பனை. ரொம்ப சுவாரசியமா இருக்கு. ஒரு சாதாரண காதல் கதையை ரொம்ப அழகா ஒரு ரேஞ்சுக்கு கொண்டு போய்டீங்க. சூப்பர்! எழுதி
    இருக்கும் விதமும் அழகா இருக்கு. பல வரிகளை மிகவும் ரசித்தேன்.
    கதையை எப்படி முடிக்க போறீங்க, இன்னும் என்னென்ன பாட்டெல்லாம் வரும்னு ஆவலோட தொடர காத்திருக்கிறேன். தலைப்பு கதைக்கு மிகவும் பொருத்தம், பிரமாதம்!

    பாடல்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் -ரில் மட்டுமே கேட்க முடிகிறது. முதல் பாடலை இப்பதான் முதல் முறையா கேக்கறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு மூன்றாம் தர சினிமா கதையை இவ்வளவு சுவாரஸ்யமான கதையாக மாற்ற முடியுமா? (வாத்தியாருக்கு அப்புறம்) உங்களால் மட்டுமே முடியும்!

    பதிலளிநீக்கு
  8. அன்பின் அப்பாதுரை சார்,

    அருமை... பாட்டும் வேற. கலக்குறீங்களே. இம்மாம் பெரிய கதையா இருந்தாலும், போரடிக்காம அழகா கொண்டு போயிருக்கீங்க.... இடையிடையே பாட்டும் போட்டு...சூப்பரோ சூப்பர்...

    பதிலளிநீக்கு
  9. நன்றி kg gouthaman, ஸ்ரீராம்., ஹேமா, கணேஷ், geethasmbsvm6, meenakshi, bandhu, நித்திலம்-சிப்பிக்குள் முத்து, ...

    தமிழ் - தமிழ் - தமிழ் அகராதி.. அதே அதே கௌதமன் :))

    'புதுசு' பாட்டு 68-70 வாக்கில் பிரபலமான பாட்டு meenakshi.. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்புவாங்க :-)

    ஹிஹி.. பாட்டுக்காக எழுதினது bandhu.. மத்தபடி நாகேஷ் தேடுற கதை தான்! கதையை விடுங்க, 'தொட்டு தொட்டு' பாட்டுல விஜயலட்சுமி (?) எத்தனை அழகா புடவை கட்டியிருக்காங்க பாருங்க.. கவர்ச்சிக்காக ஆடையிழக்கணும்னு யார் சொன்னது?

    மூணு வருசம் முந்தி ஒரு சினிமா கதை டிஸ்கஷன்ல மாட்டிகிட்டு முழிச்ச அனுபவமும் உதவிச்சுனு சொல்லணும். சாப்பிட்ட நேரம் போக பாட்டு, டான்ஸ் இதே தான் பேசினாங்களே தவிர, கதையை சுத்தமா டீல்ல விட்டுட்டாங்க. அது ஏற்கனவே அடிதடி கதை.. 'இந்த இடத்துல குத்து வேணுங்க' என்று அவர்கள் சொன்னதை நான் முதலில் தவறாப் புரிஞ்சுகிட்டு...

    பாட்டு, பாட்டு சீன், லொகேஷன், கோரியோக்ரபி இதெல்லாம் மொதல்ல தயார் பண்ணிக்கிட்டு பிறகு திரைக்கதை வசனம் எழுதுவார் ஸ்ரீதர்னு கேள்விப்பட்டிருக்கேன்.. உண்மையா தெரியாது. உண்மைனா ஸ்ரீதர் மேலே மதிப்பு இன்னும் ஜிவ். (எம்ஜிஆரும் அப்படினு சொல்வாங்க. ஸ்ரீதர் படத்துல கதை இருக்கும் :)

    பதிலளிநீக்கு
  10. அ-கராதி இல்லாமல் ம என்றால் மகிழ்ச்சியா? மலர்ச்சியா இல்லை மகரந்தமா(காதல் கதையாச்சே!!!)?
    படிக்க படிக்க வ்-தான்...அ...வ்..வ்..வ்

    பதிலளிநீக்கு
  11. @மீனாக்ஷி, நன்றிங்க, எக்ஸ்ப்ளோரரில் கேட்டேன். நான் எப்போவும் க்ரோமில் ப்ரவுஸ் பண்ணறதாலே அதிலே தான் முயன்றேன். வரவே இல்லை. உங்க குறிப்பைப் பார்த்துட்டு எக்ஸ்ப்ளோரரில் முயன்றால் எல்லாம் வருது. இப்போத் தான் பார்த்தேன். :)))) நன்றி.

    பதிலளிநீக்கு
  12. மூணு வருசம் முந்தி ஒரு சினிமா கதை டிஸ்கஷன்ல மாட்டிகிட்டு முழிச்ச அனுபவமும் உதவிச்சுனு சொல்லணும்//


    அதையும் விடலையா?? சரியாப் போச்சு! அனுபவங்களைச் சொல்லிட்டீங்களா, சொல்லணுமா? :)))))

    பதிலளிநீக்கு
  13. வாங்க அரசூரான்.
    நான் நினைச்சது மகிழ்ச்சி. மலர்ச்சி எனக்கு தோணவேயில்லிங்க. மகரந்தமா? சரியாப் போச்சு போங்க. இப்படியே கதை எழுதிடலாம் போலிருக்குதே? ("ஆளாளுக்கு என்ன தோணுதோ அப்படியே வச்சுங்கப்பா..")

    பதிலளிநீக்கு
  14. 'flash player plug-in' இருக்கா பாருங்களேன் கீதா சாம்பசிவம்? நான் firefox உபயோகிக்கிறேன். (இன்னிய டெக்னிகல் கோட்டா ஓவர்)

    சினிமா கதை டிஸ்கஷன் ரொம்ப சோகக் கதைங்க. அம்பத்தூர் வரப்ப சொல்றேன். :)

    பதிலளிநீக்கு
  15. explorer le parathuten. chrome le velai seyyalai. firefox inge laptap le illai! :))))

    பதிலளிநீக்கு
  16. chrome has the IE-Tab extension. once installed, this page works fine in Chrome

    பதிலளிநீக்கு
  17. "புதுசு" பாட்டு நானும் இப்போதான் கேக்கறேன். என்னை அதில் கவர்ந்தது தாண்டிச் செல்லும் ஒரு ஆட்டோவும் அந்தக்கால காலியான சென்னையும்!
    "நான் மலரோடு தனியாக" இனிமையான பாடல். ஆனால் ஹிந்தியிலிருந்து இறக்குமதி. கதாநாயகியைப் பார்த்தால் மணியன் எழுதிய "காதலிக்க நேரமில்லை" கதைக்கு நாயகி உமாவை மாயா வரைந்த ஓவியம் போல் இருக்கிறார்
    "தொட்டுத் தொட்டுப் பாடவா" பாடலின் இசை ரகளைக்காகவே அதைச் சேர்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
    "ஆசையா கோபமா" வும் ஹிந்தி இறக்குமதி. ஆனால் இனிமையான பாடல்.
    எனக்குக் காலை நேரம்தான் பாடல்கள் இறக்க, கேட்க இலவச அனுமதி! அதனால் இப்போதுதான் பார்த்தேன்!! க்ரோம்லதான் பார்த்தேன். என்னால் க்ரோமில் பார்க்க முடிந்தது!

    பதிலளிநீக்கு
  18. இசை அமைப்பாளர் வேதா பாடல்கள் எல்லாமே முக்கால்வாசி ஹிந்தி பாடலை அப்படியே காபி அடித்த பாடல்கள்தான் ஸ்ரீராம். இப்படி காபி அடித்திருந்தாலும் இவர் இசையில் எனக்கு மிக மிக பிடித்த பாடல் 'நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்' என்ற பாடல். ரொம்பவும் இனிமையான பாடல். இதுவும் ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனா 'ஒ மேரே சோனா ரே' என்ற பாடலின் காபிதான். ஹிந்தியிலும் இந்த பாடல் கொள்ளை இனிமை.
    இந்த பாடல் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. ட்யூன் இறக்குமதியானாலும் பாட்டும் குரலும் (டிஎம்எஸ்-சுசீலா என்னமா பாடியிருக்காங்க!) மறக்க முடியாத ஒரிஜினலாச்சே? இந்தப் பாட்டைக் கேக்குறப்ப எனக்கு இந்தி ட்யூன் நினைவுக்கு வந்ததே இல்லை - நேருக்கு நேர் பாட்டைத் தவிர. இறக்குமதிக்குக் காரணம் வேதாவை விட மாடர்ன் தியேடர்ஸ் (சுந்தரம்) தான் காரணம்னு படிச்சிருக்கேன். 'தொட்டு' ட்யூன் இறக்குமதியா? தமிழில் வந்த அருமையான ரொமேன்டிக் பாட்டு top 100ல ஒண்ணா இதை சுலபமா சேர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  20. //அப்பாதுரை கூறியது...

    'புதுசு' பாட்டு 68-70 வாக்கில் பிரபலமான பாட்டு meenakshi.. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்புவாங்க :-)//

    கதை அப்பாலிக்க படிக்கறேன் - முதலில் குசும்பு !

    மீனாக்ஷி அந்த வருடங்களில் பிறக்கவே இல்லை ! பிரம்மாவிடம் இருந்தார் ! எப்படி அந்த பாட்டு தெரியும் அவருக்கு ! நாராயணா நாராயணா !

    துரை, உங்கள் கதையை நல்ல நாளில் படித்தாலே புரியாது, கௌதமன் சார் வேற பயம் முடுத்தறார். ஆனாலும் படிக்க எண்ணம்.

    பதிலளிநீக்கு
  21. அப்பாதுரை, கதை எழுதும் உத்தி ரசித்தேன். ஒரு சாதாரண கதையை ஏகப்பட்ட பில்ட்-அப் கொடுத்து....சினிமாக் கதைகளின் பாதிப்பு நன்கு தெரிகிறது எழுத்தில் பல தடங்கள் தெரிகிறது. உங்களிடம் நிறைய கற்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  22. நன்றி சாய், G.M Balasubramaniam (அடடே.. என்ன இப்டி சொல்லிட்டீங்க)..

    பதிலளிநீக்கு
  23. இப்போத் தான் இதைப் படிச்சேன். அ.சார்! அதென்ன சொக்குப்பொடி தூவி விட்டீங்களோ, தெரியலே! படிக்கற வேகத்லேயே அந்த ம. போ. எல்லாம்
    டக் டக்னு பு?

    "அ.க்கு வெற்றி!"

    பதிலளிநீக்கு