2012/02/24

காதல் தாது



1 ◀◀


    றிமுகம் செய்து கொண்டு, "உங்களை ஜே என்றே கூப்பிடுகிறேனே?" என்றேன்.

"யூ ஆர் எ ஜெந்டில்மேன் ரகு" என்ற ஜே, என் கைகளைக் குலுக்கினான். "எங்க காதலுக்குக் குறுக்கே நிப்பீங்கனு நெனச்சேன்.. கௌரவமா ஒதுங்கிட்டிங்க"

"எங்கே போறோம்?" என்றாள் லா.

"மிதக்கும் ரெஸ்டராந்ட்" என்றேன்.

மூவரும் ஏரிக்கரையோரமாக நடந்தோம். போட்கிளப் வாசலில் வார இறுதிப் பார்ட்டி ஒன்றுக்கான அறிக்கை. போட்கிளப் தாண்டி வளைந்த வழியில் அடர்ந்திருந்த பூச்செடிகளைப் பார்த்து "எவ்வளவு அழகா இருக்கு!" என்றாள் லா. "உன்னை விடவா?" என்றான் ஜே. லாவின் முகத்தில் தோன்றி மறைந்த பாவங்களைப் புரிந்து கொள்ள முயன்றுத் தோற்றேன்.

"நான் ரகு இல்லை. என் பெயர் வ்" என்றேன்.

"எதுக்குங்க.. ரகுவே நல்லாருக்கு. அது என்ன வ்? நாய் குறைக்கிற மாதிரி ஒரு பேரு?" என்றான் ஜே.

"நான் றா அதாவது இணையுலகப் பிரஜை. உங்களுக்கு எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்த எதிர்கால வாசி" என்றேன்.

ஏரியின் நடுவே கம்பீரமாக இருந்த மிதக்கும் ரெஸ்டராந்ட்டைப் பார்த்து நின்றான் ஜே. "நாம எப்போ இங்கே வந்தோம் சொல்லு?" என்றான் லாவிடம்.

"பூ-இணையுலகக் காலப்பட்டியில் குதித்து இங்கே வந்தேன்" என்றேன்.

"எங்கிட்டயே கேக்குறீங்களா? நம்ம காதல் முதல் வருடாந்திரத்துக்கு வந்தோம்.. நானா மறப்பேன்?" என்றாள் லா.

"அதோ அந்த போட் தானே வாடகைக்கு எடுத்தோம்?"

பூ வாசிகளிடம் ஒரு தொல்லை. ஒரு கூட்டத்தில் நாம் ஒருவருடன் பேச முனைகிறோம். அந்தக் கணத்தில் அதுவரைக் காத்திருந்தவர் போல் அவர் இன்னொருவருடன் பேசுவார். ஜேயும் லாவும் என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் தொடர்ந்தேன். "எங்க மூதாதையர்னு சொல்லணும்னா பூவாசிகளைத் தான் சொல்லணும். ஏதோ ஒரு காலகட்டத்துல உணர்ச்சிக் கொந்தளிப்புல உங்க உடம்புல இயற்கையா ஓடுற சக்தி, தன்னிச்சையா வெடிச்சு ஸ்பாந்டேனியஸ் எக்சிட்... ஒட்டு மொத்தமா நீங்க எல்லாரும்..."

"ரெஸ்டராந்ட் வந்துடுச்சு பாருங்க" என்றாள் லா.

உள்ளே நுழைந்து தனிமையானப் பகுதியைக் கேட்டு இடம் பிடித்து அமர்ந்தோம். சாப்பிட்டுக் கொண்டே பேசினோம்.

"சாரி ரகு.. நீங்க என்னவோ சொல்லிட்டிருந்தீங்க.. நாங்க எங்க நினைவுகள்ள இருந்துட்டோம்.. ஆமா..நீங்க எந்த ஊர்லந்து வந்ததா சொன்னீங்க?" என்றான் ஜே.

"றா. பல நூற்றாண்டு கடந்த எதிர்கால இணையுலகத்துலந்து வந்திருக்கேன்"

"கொம்பு எதுவும் காணோமே?"

"றாவில் வளர்ச்சிச் சிக்கல் இருப்பதனால் எங்க அடிப்படையை மாத்தத் தீர்மானிச்சோம். இரண்டு தலைமுறைக்கு முந்தைய றா வாசிகள் தான் முதலில் கண்டுபிடிச்சாங்க"

"என்ன கண்டுபிடிச்சாங்க?"

"இன்றைய றா வாசிகளின் வளர்ச்சியை ஒடுக்குவது எங்க மூதாதையர்களான உங்க கிட்டே இருந்து வந்த உணர்வலைகள் என்று. உங்க உணர்வுகள், உங்களை முன்னேற விடாமத் தடுக்குது. ஒரு கட்டுக்குள்ளயே சுத்த வைக்குது. அப்படியே வளர்ந்து வந்த நீங்க இணையுலகம் வந்தப் பிறகும் அந்த அலைவரிசையிலேயே இருந்தீங்க. உங்களுக்குப் பிறகு வந்த றா தலைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமா பரிணாமம் மாறினாலும், அடிப்படை சிக்கல் தொடருது"

"அடடே! அப்புறம்?"

"அதனால இந்தத் தலைமுறை றா வாசிகள் ஒரு தீர்மானத்துக்கு வந்தோம். எங்களுக்கு அடுத்த தலைமுறைகள் செழிக்க வேண்டி நாங்க சில தியாகங்கள் செய்யத் தீர்மானித்தோம். நீங்க சில தியாகங்கள் செய்ய வேண்டும் என்றும் தீர்மானமாச்சு"

"பலே.. இந்த மாங்காய் இஞ்சிச் சட்னி எப்படி இருக்கு பாருங்க.. என்ன தீர்மானம் போட்டீங்க?"

"பூ வாசிகளோட டிஎன்ஏவை மாத்திடணும்"

"ஓஹோ"

"உங்க கிட்டே இருக்குற காதல், அன்பு, பாசம் போன்ற உணர்வுகளை ஒட்டு மொத்தமாக எடுத்து உறிஞ்சி அழிச்சிட்டா, நீங்க இணையுலகம் வரப்போ வேறே பிரஜைகளா வருவீங்க.. எங்களுக்கு சிக்கல் இருக்காது.."

"ஏன் சார்.. அதுக்கு பதிலா கோபம், ஆத்திரம் உணர்வுகளை எடுத்து அழிக்க வேண்டியது தானே?"

"காதல் அன்பு பாசம் உணர்வுகளை அழிச்சா கோபம் தானா அழிஞ்சுரும்"

"காதல் மாதிரி ஆக்க உணர்வுகளை வளர்த்தாலும் கோப உணர்வுகள் அழியுமே?" என்றாள் லா.

"ஆனால் உங்க சட்ட சமூக வழக்கங்களும் கட்டுப்பாடுகளும் ஆக்க உணர்வை முடுக்கி அழிவு உணர்வைத் தானே தூண்டுது? அதனால் நீங்க மாறவே மாட்டீங்க"

"மாற்றம் மெள்ளத்தானே வரும்?"

"உங்க வீட்டுல, உங்க பெற்றோரே, உங்க காதலை ஆதரிக்கவில்லை இல்லையா?"

"அடேங்கப்பா! உங்களைப் போல எத்தனை பேர் கிளம்பியிருக்காங்க?

"என்னைப் போல இன்னும் சில றா வாசிகள் வந்திருக்காங்க.. என்னுடைய பொறுப்பு, காதல் உணர்வுகளை அழிப்பது"

"ஏன்?"

"காதல் தீது. அதனால. உங்க ரெண்டு பேரையும் இணையுலக எல்லைக்கு அழைத்துப் போய் அங்கே உணர்வை உறிஞ்சும் அலையந்திரம் உபயோகிச்சு காதலை அழிச்சிடலாம். நான் வந்த காரணம் அதுதான். நீங்க என் கூட தயவுசெய்து வரணும்"

அதற்குள் வெயிடர் சீட்டு கொண்டு வைக்க, நான் பணம் கொடுத்தேன்.

"விருந்துக்கு ரொம்ப தேங்க்ஸ் ரகு" என்றார்கள். வெளியேறி ஏரிக்கரை வழியே திரும்ப நடந்தோம்.

"நீங்க மட்டும் ரகுன்னு தெரியாம இருந்துச்சுன்னா, கீழ்பாக்கக் கேஸ்னு உத்தரவாதமா சொல்லலாம்" என்று உரக்கச் சிரித்தான் ஜே. "என்ன இமேஜினேஷன் சார்! பயமா இருக்குனு கூட சொல்வேன்.. ஆமா இந்த உறிஞ்சுற எந்திரம்.. அதுக்கு எத்தனை நாக்கு?". லாவும் சிரித்தாள். "சரியான தமாஷ் நீங்க ரகு!"

நான் விழித்தேன். நான் சொன்னது இவர்களுக்குப் புரியவில்லையா? அல்லது உடன்பட மறுக்கிறார்களா? "நான் சொன்னது உண்மை. உங்க காதல் உணர்வுகளை உறிஞ்சு எடுக்கத்தான் வந்தேன். சீக்கிரம் வாங்க. இன்னும் என் பட்டியல்ல பல பேர் இருக்காங்க. அதுக்காகத் தான் ஏரிக்கரைக்கு வரச்சொன்னேன். நீரின் சூழலிலே இணையுலகம் சுலபமாகத் தாவ முடியும். உங்க உடம்புல பாதிக்கு மேலே தண்ணி இருக்குறது அதனால தான்.." என்று ஜேயையும் லாவையும் பின் கழுத்தில் கை வைத்து அழுத்தினேன். பின் தலையின் கீழே அழுத்தும் பொழுது பூ வாசிகளின் உயிர்த்துடிப்பைக் கட்டி இணையுலகப் பயணம் செய்ய வைக்கலாம். தற்காலிகக் கூடு மாற்றம்.

ஜே முரண்டு பிடித்தான். "யோவ்!" என்றான். ""என்னய்யா இது? ஏதோ லூசாட்டம் சொல்லிட்டே போறேனு பாத்தா, இப்போ ஓவரா மேலயே கை வைக்குறே? எதுக்குயா கழுத்தைப் பிடிக்கிறே?"

"மன்னிக்கணும் ஜே. சொல்றேன். உங்க மூளைல செரிபெல்லம் கிட்டே.. சர்கில் ஆப் விலிஸ்... மூளைக்கான ரத்த ஓட்டப் பாதை..அங்கிருந்து.."

"கையை எடுயா!" என்று என்னை உதறித்தள்ள முனைந்தான். என் பிடியின் வலு அவனுக்குப் புரியவில்லை. அதற்குள் லா துவண்டு விட்டதால் இணையுலகப் பயணத்துக்கு தயார் நிலையில் இருந்தாள். விபரீதம். ஜேயை அரைகுறை நிலையில் உதறித்தள்ளி லாவுடன் பயணித்தேன்.

எல்லையில் காத்திருந்த ஜீக்களின் உதவியுடன் ஷ்கைப் பூட்டினேன். வருடல். 'காதல் உணர்வுகள் அகன்றன' என்ற ஜீ, "ஒரு கணம்" என்றது. "பூ வாசியின் அலைவரிசையை ரிகேல் செய்து பார்க்கும் பொழுது அவருடைய உணர்வுகள் அப்படியே இருக்கின்றன. குறையவே இல்லை" என்றது.

"அதெப்படி சாத்தியம்? ஷ்க் வேலை செய்கிறதா?"

"செய்கிறது. ஆனால் காதல் உணர்வு மறுபடியும் நிரம்பியிருக்க வேண்டும். இது புது விவரம். மேயிடம் தெரிவிக்க வேண்டும்"

"மறுபடியும் உறிந்து பாருங்கள்"

மறுபடியும் உறிந்த பின் ஜீ "அதே நிலை" என்றது.

நான்: மறுபடியும். மறுபடியும். மறுபடியும்.

ஜீ: அதே நிலை. அதே நிலை. அதே நிலை.

நான்: இப்போது என்ன செய்வது?

ஜீ: இவரை மீண்டும் பூவுக்கு எடுத்துச் செல்லுங்கள். மேயுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இது எதிர்பாராத திருப்பம்.

    லாவுடன் திரும்பினேன். மீண்டும் ஏரிக்கரைக்குப் போகக் கூடாதென்று அலைக்கோணங்களை மாற்றியமைத்தேன். லாவின் வீட்டருகே பூ தொட்டோம். விழித்தாள். "என்ன ஆச்சு?" என்றாள். விவரம் சொன்னேன்.

"அவருக்கு என்ன ஆச்சு?"

சொன்னேன். "ஜேயை ஏரிக்கரையிலேயே எறிந்து வந்தேன் லா. இப்போதைக்கு நீ என்னுடன் இருக்க வேண்டும். ஜேயைப் பார்க்க அனுமதிக்க முடியாது"

ஆத்திரப்பட்டாள். "துரோகி! உன்னை நம்பினேன் பார்! எங்கப்பா இன்னேரம் தேடிக்கிட்டிருப்பாரு"

"மன்னிக்கணும் லா. திருமணத்துல விருப்பம் இல்லாம நீ பம்பாய் போறதா சீட்டு எழுதி வச்சுட்டு வந்தேன். உங்க வீட்டுல உன்னை பம்பாய்ல தேடிட்டு இருப்பாங்க"

"இரக்கமே இல்லாத அரக்கன் நீ. நாங்க உனக்கு என்ன தீங்கு செஞ்சோம்?"

"ஒரு தீங்கும் செய்யவில்லை எனக்கு. ஆனா எங்க இனமே உங்க உணர்வுகளாலே.."

"போதும் நிறுத்து உன்னோட பினாத்தலை. எங்களுக்கு இருக்குற ஆயிரம் ஆயிரம் தினசரிப் பிரச்சினைகள்ள எப்பவாவது யாருக்காவது கிடைக்கிற அற்ப நிறைவு காதல். அதிலயும் ஆயிரத்துல ஒரு காதல் நிறைவா முடியுது. காதல் தோல்வியடைஞ்சு துன்பப் படுறவங்க தான் அதிகம். உடம்பு வலிக்கு குணம் உண்டு. மனவலிக்குக் கிடையாது.. தயவுசெய்து என்னை அவர் கிட்டே கூட்டிட்டுப் போ.. உன்னைக் கும்பிட்டுக் கேக்குறேன்" என்றவள் சற்று எதிர்பாராத விதமாக அழத்தொடங்கினாள்.

ஏரிக்கரைக்கு விரைந்தோம். காய்ந்த சிறகு போல தரையில் படுத்துக் கிடந்தான் ஜே. ஏதோ பாடிப் புலம்பிக்கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் லா தீவிரமாக அழத்தொடங்கினாள். ஜேயைக் கட்டிப் பிடித்து "என்னைப் பாருங்க" என்று புலம்பினாள். எனக்குப் புரியவில்லை. காதல் உணர்வுகளை அழிக்க முடியாதா? அப்படியென்றால் எங்கள் கதி?

லா என் கால்களைப் பிடித்துக் கெஞ்சினாள். "ரகு.. எதுனா செய்யுங்க. ப்லீஸ். இதுனால உங்களுக்கு என்ன லாபம்? எதிர்கால மனிதர்னு சொல்றீங்க.. இதுதான் உங்க நாகரீகமா? உலகம் வளந்து நாங்க எல்லாம் இப்படித் தான் மாறுவோமா? எங்களுடையது ரொம்ப சாதாரணமான உலகம். இங்கே கிடைக்கிற இந்த அல்ப சந்தோஷம் எங்களுக்குப் போதும். காலையில் எழுந்து ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்து சந்தோசமா சிரிச்சா அதுவே பெரிய நிறைவு. அது தான் எங்களுக்கு வேணும்.. ப்லீஸ் ரகு.. டூ சம்திங்.. இரண்டு நாளா ஏரிக்கரையில புழுவா புரண்டுகிட்டு இருக்காரு.. வளந்த சமுதாயத்துலந்து வரீங்க.. உங்களுக்கு சாதாரண நாகரீகம் கூட இல்லையா?"

எனக்குள் ஏதோ பொறித்தது. உணர்வா? நடுங்கினேன். ஒரு வேளை பூ வாசிகள் அதிகம் காதலித்தால் அந்த நிறைவினாலும் அவர்கள் அலைவரிசை மாறுமோ? லா முன்பு சொன்னது போல நிறைவேறாத காதலின் துயர அலைவரிசை தான் றா வாசிகளைப் பாதிக்கிறதோ? அல்லது அழுகையில் நழுவி விழுந்தேனா?

மூத்தவர் இதை அனுமதிக்கப் போவதில்லை. "ஒரு சோதனை செய்ய அனுமதிக்கணும்" என்றேன். லா விழித்தாள். "ஜேயை பழைய நிலைக்குக் கொண்டு வரேன். அதற்குப் பிறகு உங்க காதல் உண்மையிலேயே உங்களுக்கு ம கொடுக்குதானு தெரியணும்" என்றேன்.

"என்ன செய்யணும்?"

போட்கிளப்பில் பார்ட்டி அறிவிப்பைப் பார்த்தேன். "வாங்க உள்ளே போவோம்" என்றேன். ஜேயின் கழுத்து நரம்பை மீண்டும் அழுத்தினேன். அவன் சில நொடிகளில் தன்னிலைக்கு வந்தான். நடந்த விவரங்களைச் சொன்னேன். மன்னிப்பு கேட்டேன். "வாங்க.. முதல்ல உங்க விடுதலையைக் கொண்டாடுவோம்" என்று போட்கிளப்புள் நுழைந்தோம். "லெட் மி சேஞ்ச்" என்று ஒதுங்கினார்கள்.

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஜேயும் லாவும் பிறருடன் ஆடிப்பாடினார்கள். இன்றைய உலகம் நாளை வராது என்றார்கள். அவர்கள் உணர்ந்து பாடியது புரிந்தது. அவர்கள் முகத்தின் ம என்னை உடனடியாகப் பாதித்தது.

என் வரம்புக்கு மீறிய உரிமையும் சுதந்திரமும் எடுத்துக் கொண்டேன். 'காதல் உணர்வுகளை அழிப்பதில்லை, அழிக்கக்கூடாது' என்ற தீர்மானத்துக்கு வந்தேன். அனைத்து றாக்களுக்கும் செய்தி எண்ணினேன். மூத்தவரிடம் என் காரணத்தை எண்ணியனுப்பினேன். 'பூ வாசிகளிடையே காதல் வழக்கம் அதிகமானால் நாளடைவில் முன்னேற்றம் வரும். மாற்றத்தைக் கொண்டு வரும். அடுத்த தலைமுறையோ அதற்கடுத்த தலைமுறையோ.. நம்மிலும் வளர்ச்சி வட்டம் வந்து விடலாம். அதைவிட்டுப் பின்னோக்கிச் சென்று காதல் உணர்வுகளை அழிப்பதால், கால மற்றும் உளநிலை மாற்றங்கள் நாம் எதிர்பாராதபடி அமையலாம்' என்று திட்டமாகச் செய்தி எண்ணினேன்.

லா வீட்டுக்குத் திரும்பியதும் அவள் பெற்றோர் முகத்தில் பரவியிருந்த மவின் அதிர்வு என்னளவில் பாதித்தது. லாவின் தந்தையுடன் பேசிவிட்டு ரகுவுக்கு விடை கொடுத்தேன். அகன்றேன்.

"அப்பா!" என்று ஓடிய லாவை அணைத்துக் கொண்டார். "வேண்டாம்மா.. நீ உன் விருப்பம் போலவே கல்யாணம் செஞ்சுக்க.. அந்த ரகுவுக்கு மூளை சரியில்லைனு தோணுதுமா.. என்னவோ எதிர்கால ஞானினு சொல்றான் சோனிப்பய. நட் கேஸ்".

லாவின் முகத்தில் ஒளி.

அடுத்த வாரத்தில் லா-ஜே திருமணம். நிச்சயம் என்னை நினைத்துக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன். அவர்கள் தேநிலவு என்று எங்கோ கிளம்ப, நான் றா திரும்பினேன்.

வந்தக் கணத்தில் கைதானேன். விசாரணைக் குழுவால் என் முடிவை ஏற்கவோ மறுக்கவோ முடியவில்லை. 'காதல் போன்ற ஆக்க உணர்வுகள் பூவில் வளர்ந்தால், அது றா வாசிகளின் அடுத்த தலைமுறைகளின் வளர்ச்சியில் புலப்படும்' என்ற என் கருத்தை சோதிக்க முடிவு செய்தார்கள். பதினைந்துத் தலைமுறைகளுக்கு என்னைச் சிறை வைத்தார்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு விசாரணை.

சென்ற பதினான்குத் தலைமுறைகளாக பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. பூ வாசிகளிடையே காதல் பரவவில்லை என்பதே இதன் பொருள்.

இது பதினைந்தாவது தலைமுறைக்கான விசாரணைக் குழு. தீவிர முன்னேற்றத்துக்கான அறிகுறி ஏதேனும் தென்பட்டால் என்னைத் தொடர்ந்து சிறையில் வைப்பார்கள். இல்லையெனில் வேறு தண்டனை கிடைக்கலாம்.

விசாரணை முடிவுக்குத் தயாரானேன். முதல் முறையாகக் காதல் தீதோ என்று எண்ணினேன். பூ வாசிகளிடையே காதல் வளர்ந்திருக்குமா? ♥♥




ஹேமா எழுதிய 'இதுவும் காதல்!' என்ற பதிவின் தொடர்ச்சி இது. ஹேமாவின் பதிவைப் படித்ததும் பறந்த ஒரு பொறியை வளர்க்க இத்தனை நாளானது. பேசாமல் பாட்டை மட்டும் பதித்திருக்கலாம் என்று இப்பொழுதும் தோன்றுகிறது. எழுதும் அனுபவம் இனிது. ஹேமாவுக்கு நன்றி.

யான் பெற்ற இன்பம் வையம் பெற யாரை அமுக்கலாம் என்று நினைத்தபோது, சட்டென்று தோன்றியவர் மூன்றெழுத்து விளையாட்டுப்பிள்ளை. குறைந்தது நாலஞ்சு சினிமாப் பாட்டுக்களை மையமா வைச்சு கதை பின்னணும். RVS, நேரம் கிடைக்குறப்ப தொடருங்க. good luck.


24 கருத்துகள்:

  1. இணையுலகம். பல நூற்றாண்டு கடந்த எதிர்கால இணையுலகத்துலந்து வந்திருக்கேன்"

    எதிர்காலத்தில்
    எ(இ)துவும் நட்க்கலாம்..

    பதிலளிநீக்கு
  2. ஆர் வி எஸ் - ஹையா ...
    ம்ம்ம்ம்ம்ம் மாட்டிகிட்டாரு!

    பதிலளிநீக்கு
  3. "நீங்க மட்டும் ரகுன்னு தெரியாம இருந்துச்சுன்னா, கீழ்பாக்கக் கேஸ்னு உத்தரவாதமா சொல்லலாம்" என்று உரக்கச் சிரித்தான் ரகு.
    -இநத் இடத்தில் சிரித்தான் ஜே என்று வரணும்னு தோணுது அப்பா ஸார்... அருமையான ஸயன்ஸ் பிக்ஷன் தந்துட்டிங்க. சிறுகதைகள்ல உங்க உயரத்தை என்னிக்காவது நான தொடுவனாங்கறது சந்தேகம்தான். அருமை...

    பதிலளிநீக்கு
  4. தல... பாடல்களை வச்சு தூள் பண்ணிட்டீங்க... அதுவும் அந்தக்கால தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரை வச்சு... சயின்ஸ் ஃபிக்ஷன் வேற...

    என்னையும் மதிச்சு தொடர கூப்பிட்டத்துக்கு நன்றி. ட்ரை பண்றேன். :-)

    பதிலளிநீக்கு
  5. கமெண்டை முடிக்கறதுக்குள்ள கரண்ட் போயிட்டுது. என்ன சொல்ல வந்தேன்னா... நீங்க இந்தியா வர்றப்ப உங்களை ‘ஷ்’க்கில போட்டு கதை எழுதற திறமைய உறிஞ்சிடப் போறேன்... கபர்தார்... ஹி... ஹி...

    பதிலளிநீக்கு
  6. ஐயா, பாட்டுடன் சேர்ந்த கதை எழுதும் இந்த டெக்னிக் சூப்பர்...... கதையும் நன்றாக போகிறது... நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாபிப்ரவரி 25, 2012

    paattu mattum kettu odiyirukkanum.

    பதிலளிநீக்கு
  8. //காதல் போன்ற ஆக்க உணர்வுகள் பூவில் வளர்ந்தால், இவாசிகளின் அடுத்த தலைமுறைகளின் வளர்ச்சியில் புலப்படும்' என்ற என் கருத்தை சோதிக்க முடிவு செய்தார்கள். //கணிப்பு தவறோ.?

    பதிலளிநீக்கு
  9. அதே, அதே, கணேஷ் சொல்றதைத் தான் நானும் செய்யணும்; வேறே வழியே இல்லை. :))))))

    ஃப்ளாஷ் ப்ளேயர் க்ரோமில் இன் பில்ட் அப்படினு மெசேஜ் வருது. ஆனாலும் உங்களோட பதிவுகளில் மட்டுமே எதுவும் தெரியறதில்லை. மற்றவைகளில் முக்கியமாக் குழுமங்களில் வரும் வீடியோக் காட்சிகள், பார்க்க, கேட்க முடிகிறது. இப்போவும் இந்தப் பதிவில் பார்க்க முடியலை. எக்ஸ்ப்ளோரரில் தான் பார்க்கணும். :)))))

    பதிலளிநீக்கு
  10. நன்றி இராஜராஜேஸ்வரி, kg gouthaman, கணேஷ், RVS, நித்திலம்-சிப்பிக்குள் முத்து, G.M Balasubramaniam, geethasmbsvm6, ...

    பிழையை(களை) திருத்திவிட்டேன் கணேஷ். thanks for the catch.

    பதிலளிநீக்கு
  11. //"மறுபடியும் உறிந்து பாருங்கள்"

    மறுபடியும் உறிந்த பின்... //

    மறுபடியும் உறிஞ்சு

    மறுபடியும் உறிஞ்சிய பின்... ?

    கூடு விட்டு கூடு பாய்தலில் இரண்டு நிலைகளிலும் கூடுகளாக இருக்க வேண்டுமோ?.. இல்லை, இ.வாசி
    பூ.வாசியாகி, மீண்டும் அதே பூ.வாசி இ.வாசியாகி.. அதுவரையில் அந்த முந்தைய பூ.வாசி?.. இதற்கும் அந்த மூ ஏதாவது வழிபண்ணியிருப்பார் என்று தான் தோன்றுகிறது.

    புதுசாக எழுத முயற்சித்திருப்பதைக் கொண்டாடத் தான் வேண்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அப்பாஜி....கதை நீளமா அழகா உங்க பாணியில சூப்பரா வந்திருக்கு.எனக்குத்தான் புரிஞ்சுது...புரில.பழைய பாடல்கள் கேக்கிறதுக்காவேதான் உங்களைத் தொடர் எழுதச் சொன்னேன்.நீங்க ஏமாத்தல.அருமையான பாட்டுக்கள்.

    எந்த உயிர்களுக்கும் காதல் வேணும்.அந்த உணர்வுதான் வாழ்வுக்கு ஒரு பிடிப்பையே தருது.அன்பு இருந்தா கோபம் குறைவாத்தானே இருக்கும்.பூவுக்குள்ளும் காதல் இருக்கு.அதான் வண்டு தேடிப்போகுது.

    பல நூற்றாண்டுகள் கடந்தா மனுஷனுக்குக் கொம்பு முளைக்குமா!

    பதினைந்துத் தலைமுறைகளுக்கு அப்பாஜியைச் சிறை வைத்தார்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு விசாரணை....அப்பாடி தப்பினோம் !

    பதிலளிநீக்கு
  13. வாங்க ஜீவி சார். கருத்துக்கு நன்றி.

    //இரண்டு நிலைகளிலும் கூடுகளாக இருக்க வேண்டுமோ?
    தெரிஞ்ச 'கூட்டை' define பண்ணலாம்; தெரியாத கூட்டை கற்பனைக்குத் தான் விடணும். 'வெட்ட வெளியும் கூடு'னு சித்தர் வாக்கு :)

    சயந்ஸ் பேந்டசி எழுதுறப்ப தெரிஞ்ச நிலையை extrapolate பண்ணாம இருக்குறது betterனு எனக்குத் தோணும் (படிக்குறப்ப கற்பனையைத் தூண்டும் - இல்லாவிட்டால் ஒரு வரம்புக்குள் கொண்டு வந்துடும்னு நினைக்கிறேன் :) குழப்பியிருந்தா பொறுத்துக்குங்க.

    பதிலளிநீக்கு
  14. நன்றி ஹேமா.. பாட்டை மட்டும் கேளுங்க :) கதை எனக்கே புரியலே (இருந்தாத் தானே?)

    பதிலளிநீக்கு
  15. சார்! 2010ல எஸ்.பி.பியோட பிறந்தநாளுக்கு இந்தமாதிரி ஒன்னு ட்ரை பண்ணினேன். அதோட சுட்டி கொடுத்திருக்கேன். பாருங்க..
    http://www.rvsm.in/2010/06/blog-post_04.html

    பதிலளிநீக்கு
  16. கற்பனை சிறகு கட்டிபறக்கும் காதல் கதை ..மெல்லிசை நினைவுகள் இரண்டும் உங்கள் சிறப்பான ஏரியா.. அழகாக விளையாடி இருக்கிறீர்கள்.

    ஒற்றைஎழுத்து பெயர்கள் ..காதல் உறிஞ்சல் என கதை களேபரம்..

    டி.எம்.எஸ் அவர்கள் ஜெய்’ க்கும் ஒரு தனி மாடுலேஷன் வைத்திருந்திருக்கிறார்.. க.வெ பாட்டு கேட்கணுமா..இங்கதான் வரணும் ..ரிக்கார்டிங் பளிச்சுனு இருக்கு..( மீனாக்‌ஷிக்கு நன்றி..கூ க்ரோமில் கிடைக்காததை IEல் சென்று பிடித்துவிட்டேன்...)

    பதிலளிநீக்கு
  17. நன்றி பத்மநாபன், ஷைலஜா,...

    பதிலளிநீக்கு
  18. //பூ வாசிகளிடம் ஒரு தொல்லை. ஒரு கூட்டத்தில் நாம் ஒருவருடன் பேச முனைகிறோம். அந்தக் கணத்தில் அதுவரைக் காத்திருந்தவர் போல் அவர் இன்னொருவருடன் பேசுவார்.// :)
    அடுத்தவங்க பேசறத முழுசா கேக்கறதுக்கு முன்னாடியே ஒரு பதிலை சொல்லிடறதும் பூ வாசிகளிடம் மகா தொல்லைதான். :)

    // பூ வாசிகளிடையே காதல் வளர்ந்திருக்குமா? ♥♥// எதிர்பார்ப்புகளைக் கொண்ட எந்த உறவுகளுமே வளருவதில்லை.

    முடிவு மிகவும் அருமை. கடைசி மூன்று பத்திகள் கலக்கல். மிகவும் பிடித்தது. ஒரு சாதாரண காதல் கதையை, செம கதையாக்கிடீங்க. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. அப்பாதுரை அவர்களே! அருமையான விஞ்ஞான கற்பனை. தமிழ் வாராந்தரிகள் எதற்காவது அனுப்புங்களேன்.---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  20. இப்படி கூட பாட்டு சொல்லலாமா?சூப்பர்...:) புதுமை = அப்பாதுரை சார்னு சொல்லலாம் போல இருக்கு...:)

    பதிலளிநீக்கு
  21. //காலையில் எழுந்து ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்து சந்தோசமா சிரிச்சா அதுவே பெரிய நிறைவு. //

    சுபர்ப். இதைப் படித்தபிறகு சும்மா இருக்க முடியவில்லை. மனைவியிடம் காரணமில்லாமல் சிரித்து வாங்கிக் கட்டிக் கொண்டேன். ராத்திரினு மறந்து போச்சு :)
    கிண்டலை விடுங்க. ஆனா இந்த வரிகள் எவ்வளவு உண்மைனு நினைக்கிறேன். எதையோ இழந்திருக்கோம் இந்தத் தலைமுறையில். வரும் தலைமுறை இன்னும் மோசம். எங்கப்பா காலைல எழுந்ததும் 'தங்கம்.. நல்லா தூங்கினியா?' என்று அம்மாவைக் கேட்பது இன்னும் நினைவிருக்கிறது. தினமும் அதே கேள்வியைக் கேட்பார். அம்மா ஒரு பெரிய அடுக்கில் காபி கலந்து கொண்டு நடுக்கூட டேபிளில் வைப்பார். நான் எடுத்துட்டு வரேன்னு சொன்னா கேக்கறியா தங்கம்னு எழுந்து போய் வாங்கிக் கொள்வார். அனால் ஒரு நாள் கூட அவரா எழுந்து போய் எடுத்துட்டு நினைவில்லே. பிறகு எங்களுக்கு ஆளுக்கு ஒரு டம்ளரில் காபி விட்டுக் கொடுப்பார். எப்பவும் அம்மாவுக்குத் தான் முதல் டம்ளர். அப்புறம் அக்காவுக்கு. பிறகு எனக்கு. கடைசியில் அவருக்கு. அவருடைய கப்பிலே கொஞ்சம் விடுவார் அம்மா தன் டம்ளரிலிருந்து. அதற்குப் பிறகு தான் இருவரும் காபி சாப்பிடுவார்கள். எனக்கும் அக்காவுக்கும் இது கிண்டலான டெய்லி ருடீன். இப்போ நினைச்சா இந்த அல்ப சந்தோஷம் கூட எங்க லைப்ல இல்லே. என் மனைவி மக்களும் நானும் நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்ப்பதே வாரக் கடைசியில தான். அது தூங்குறதுக்கே சரியா இருக்கு. டக்ல்ஸ் ஏடம்ஸ் சொன்னாற்போல where is the growth?

    very nice story.

    பதிலளிநீக்கு
  22. நன்றி meenakshi, kashyapan, அப்பாவி தங்கமணி, ராமசுப்ரமணியன்,...

    பதிலளிநீக்கு
  23. போன மாதம் பழைய புத்தகக் கடையில் ராட்சச சைஸ் illustrated hitchhikers guide வாங்கினேன்.. உங்கள் நினைவு வந்தது ராமசுப்ரமணியன்..

    பதிலளிநீக்கு