அன்புமல்லி கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்புமல்லி கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2013/07/28

வாத்து வெளுப்பு

2


1


    "வாங்க அண்ணே" என்று மல்லியை மீண்டும் வரவேற்றார் கனகவல்லி. தன் இடது கையில் இருந்த ஜபமாலையை அருகிலிருந்த வட்டத்தட்டில் வைத்தார். "இப்படி உட்காருங்களேன்?" என்று வலது கையால் எதிரே இருந்த சோபாவைச் சுட்டினார். அவர் விரல்களில் இரண்டு மோதிரங்கள் மின்னின. சோபாவின் பின்புறம் இருந்த மர வடிவ மெழுகுவர்த்தி அடுக்கின் கிளைகளில் மென்மையாக எரிந்து கொண்டிருந்த மினி டீ கப் வாசனை மெழுகுவர்த்திகள். சோபாவின் எதிரே வட்டமேசை மீது சிகப்பு வெல்வெட்டில் ஒரு சக்கரம். அதையொட்டி கிழக்குமுக சுவரலமாரியில் துத்தனாகத் தகடுகள், ஆமையோடு, சிறிய துவஜஸ்தம்பச் சிற்பம், சங்குகள், பொன்சய் மரம் என்று அலங்காரப் பொருட்கள். மேல்தட்டின் வடக்கு, தெற்கு முனைகளில் துவாரபாலகர் சிலைகள். இடையே ஒரு சதுரத் தாமிரக் கிண்ணத்தில் தண்ணீரை மூடிய உதிரிப் பூக்கள். உள்ளிருந்து வந்த விசித்திரமான சமையல் மணம். அனைத்தையும் உள்வாங்கிய மல்லி, சோபாவை நோக்கி நடந்தார்.

"கனகம், நானும் இங்க உட்காரவா?" என்ற ராஜசிங்கத்தைப் புன்னகையுடன் முறைத்த கனகவல்லி, "இப்படி உக்காருங்க சிங்கம்" என்று வலதுபுறம் இருந்த தெற்குமுக நீல நிற நாற்காலியில் உட்காரச் சொன்னார்.

"என்ன இவன்? பெண்டாட்டி பர்மிசன் கேட்டுத்தான் உக்காருவானா?" என்று கிசுத்த தயாவை அடக்கிய மல்லி, மீண்டும் கனகவல்லிக்கு உரக்க வணக்கம் சொன்னார். "கல்யாணத்தப்ப பார்த்தது.. நல்லா இருக்கியாம்மா? நீங்கள்ளாம் இந்த ஊர்ல இருக்குறதே தெரியாம போச்சே! சிங்கம் இப்பத்தான் சொன்னான்..உனக்கு வாஸ்து பெங்சூய் சமாசாரங்கள்ள ஈடுபாடுனு சொன்னதும்.. உடனே பாத்துட்டு போவணும்னு வந்துட்டோம்.. எனக்கு வாஸ்துல அபார நம்பிக்கை.."

"அப்படியா! உங்களுக்கும் வாஸ்து நம்பிக்கையா!" என்ற வல்லியின் கண்கள் விரிந்தன. "ரொம்ப சந்தோசம்ணே.."

"தயாவுக்கு வாஸ்து சாஸ்திரம்னா என்னை விட அதிக நம்பிக்கை, ஈடுபாடு.."

மல்லி சொன்னதைக் கேட்டதும் சோபாவின் விளிம்பில் உட்கார்ந்திருந்த தயா அதிர்ச்சியில் வழுக்கித் தரையில் விழுந்தார்.

"அப்படியா?" என்ற கனகவல்லியின் பார்வையில் அவநம்பிக்கை. மூன்று வேளை சாப்பாட்டைத் தவிர வேறெதிலும் நம்பிக்கையற்றவரைப் பார்ப்பது போல் ஒரு கீழ்ப்பார்வை பார்த்தார். வல்லியின் முகத்தைப் பார்க்காமல் மெள்ள சோபாவில் ஏறி உட்கார்ந்த தயா, மல்லி அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்று உள்ளூர நடுங்கினார்.

"ஆமாமா.. எனக்கு வாஸ்து நம்பிக்கை வந்ததே இவனால தான்..!" என்றார் மல்லி.

'ஐயையோ!' என்று கூவிய தயா சுதாரித்து.. "அய்யய்யே.. அப்படியெல்லாம் இல்லே.. ஏதோ நம்பிக்கை அவ்வளவு தான்" என்றார். சட்டென்று எழுந்து ஓட முடியாத அவஸ்தையுடன் வாசலைப் பார்த்தார்.

"ஏதோ நம்பிக்கையா? என்னப்பா இப்படிச் சொல்றே! உன் வாஸ்து குருநாதர் தானே என்னை நம்ப வச்சாரு?!"

"குருநாதரா?" என்றனர் கனகவல்லியும் தயாவும் ஒரே நேரத்தில். கனகவல்லி வியப்புடனும், தயா திடுக்கிட்டும். அடங்காத திகிலுடன் மல்லியைப் பார்த்தார் தயா. 'சிங்கத்துக்கு உதவி பண்ணுடானு வந்தா என்னைக் கவுக்கிறானே கிராதகன்!'

"உன் குருநாதரைத்தான் சொல்றேன்" என்று மீண்டும் சொன்ன மல்லியின் கழுத்தை நெறிக்கத் தோன்றியது தயாவுக்கு.

புது மரியாதையுடன் தயாவைப் பார்த்தார் கனகவல்லி. அழுக்குச் செருப்புடன் ஓடி வந்த பிள்ளை, வாசலில் நின்று செருப்பைக் கழற்றி வைத்து உள்ளே நுழைவதைப் பாராட்டும் பார்வை. கடக் மடக் கர் புர் என்று பெருத்த ஓசையுடன் சுற்றிலும எச்சில் விழச் சாப்பிடும் பழக்கமுள்ளவர், திடீரென்று அடக்கி வாசித்து வாய் திறவாமல் அசை போடுவதைப் பாராட்டும் பார்வை. "நமக்குத் தெரியாததை குருமாருங்க கிட்டே கத்துக்குறது தான் முறை" என்றார். "தயாண்ணே.. உங்க குரு.. அவருக்கு எதுல ஈடுபாடு? மய சாஸ்திரமா விஸ்வகர்மாவா?"

'இதென்ன கர்மமோ தெரியலியே? எனக்கு கோழி குருமா தானே தெரியும்?' என்று திணறிய தயா, "அது வந்து.. சரியா தெரியலே.. ரெண்டும் தான். சில நேரம் மய சாஸ்திரம் நல்லதுனுவார்.. திடீர்னு குருமா தான் பெஸ்டும்பாரு"

"குருமாவா?"

"விஸ்வகர்மா.." என்று மறித்தார் மல்லி. "சாப்பாட்டு டைம் இலையா? கிச்சன்லந்து குருமா மணம் வேறே தூக்குது.. அதான் குருமாக்கு போயிட்டான்.."

"ஹிஹி" என்றார் தயா. "ஆமாம்.. விஸ்வகர்மா தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும்னு தோணுது.. அடடா.. இந்தக் கேள்வி எங்களுக்குத் தோணவேயில்லே பாருமா.. குரு ஏதோ வாஸ்துன்னாரு நானும் இவனும் எருமையாட்டம் தலையாட்டினோம்" என்ற தயா, எருமையை அழுத்திச் சொன்னார். "உனக்கு என்னா ஞானம்! சட்னு விவகாரத்தை புட்டு வச்சுட்டம்மா"

"எங்கே இருக்காரு உங்க குரு? அவரை நான் பார்க்கணுமே?" என்றார் கனகவல்லி.

"அது வந்து" தயா நெளிந்தார். மல்லியை மனதுள் முள்சாட்டையால் அடித்தபடி, வெளியே பரிதாபமாகப் பார்த்தார். உதவிக்கு வந்த மல்லி, "அதுக்கென்னம்மா.. அவர் உங்க வீட்டுக்கு வந்து வாஸ்து ஆசீர்வாதம் செஞ்சுட்டு போவாருமா.. ஏற்பாடு செஞ்சுறலாம்.. வீட்டுக்கு வரதுனால.. கொஞ்சம் செலவாகும் அவ்வளவு தான்.. அஞ்சாயிரம் பத்தாயிரம்.." என்றார்.

"செலவைப் பத்திக் கவலையில்லே" என்றார் கனகவல்லி. "அவசியம் ஏற்பாடு செய்யுங்கண்ணே.. தடைபட்டுக்கிட்டே போவுற என் பையன் கல்யாண விஷயமா வாஸ்து சாந்தி எதுனா சொல்வாரா பார்க்கணும்.."

"வெள்ளிக்கிழமையே வரச் சொல்லிடறோம்.. வார பூஜைக்கு இந்தப் பக்கம் சாயிபாபா கோவிலுக்கு வருவாரு.. அப்படியே இங்கே வந்து ஒரு சின்ன பூஜையும் சாந்தியும் செஞ்சுடலாம்மா.. அப்ப நாங்க கிளம்புறோம்" என்றார் மல்லி.

"நான் அவங்களை காமதேனுல விட்டு வந்துடறேன்" என்ற கணவரிடம், "ப்ச.. பார்த்துங்க.. தென்முக நாற்காலிக்கு குறுக்கே போவாதீங்க.. சுத்திப் போங்கனு சொல்லியிருக்கனே, மறந்துட்டிங்களா? உட்கார்ந்து பத்து எண்ணிட்டுக் கிளம்புங்க" என்றார் கனகவல்லி. "தயாண்ணே.. உங்க குரு.. அவர் பேரு சொல்லவேயில்லியே நீங்க?".

தடுமாறிய தயாவை மறித்த மல்லி, "சுவாமி சுந்தர்ஜி" என்றபடி வாசலை நோக்கி வேகமாக நடந்தார். தயாவும் ராஜசிங்கமும் திரும்பிப் பார்க்காமல் மல்லியை அவசரமாகப் பின்தொடர்ந்தனர்.

    வெளியே வந்து மூவரும் பேசவில்லை. லஸ் முனை வந்ததும் தெருவோர டீக்கடையில் மூன்று மசாலா டீ ஆர்டர் செய்தார் மல்லி.

"நீயே அதுல பாஷாணம் கலந்து குடுத்துருடா" என்றார் தயா கடுப்புடன். "மல்லி டேய்.. உன்னை மாதிரி நண்பன் இருக்குறப்ப எனக்கு எதிரியே தேவையில்லே.. விளங்குவியாடா நீ?"

"சும்மா இருப்பா" என்றார் மல்லி கடைக்காரனிடமிருந்து டீயை வாங்கியபடி. "உன் பிரச்சினை தீந்துருச்சுனு வச்சுக்க, சிங்கம்"

"எப்படிரா? குழியில விழுந்தவனை பாம்பு கடிச்ச கதையா இல்லே ஆயிருச்சு?" என்று பொருமினார் தயா. "இவன் பெண்டாட்டியை மாத்தி இவங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைனு சொன்னா எங்கந்தோ குருநாதரை கொணாந்து.. என்னை வச்சுல்லே காமெடி செஞ்சிருக்கே? இப்ப சாமியாரை எங்கிருந்துரா கூட்டியாறது? சுவாமி சுந்தர்ஜியாமில்லே? யாருடா அது?"

    ன்புமல்லி எல்லாவற்றையும் பொறுமையாகச் சொன்னார். சிங்காரம் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டான். தயாவும் ராஜசிங்கமும் எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார்கள். இருவர் பார்வையிலும் எதிர்பார்ப்பு. அன்புமல்லியின் பார்வையில் ஆவல். சிங்காரத்தின் பார்வையில் அதிர்ச்சி.

சிங்காரத்துக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. தவறு. கை ஒரு பக்கமும் கால் ஒரு பக்கமும் ஓட முயற்சி செய்தன என்பதே சரி. ஜெயமோகனும் மணிரத்னமும் சேர்ந்து கடல்2 கதையை உரக்கப் படிக்க, நடுவில் உட்கார்ந்து கேட்க நேர்ந்தது போல் நடுங்கினான். விஜய் படத்தை ஓடவிட்டு தியேடரில் கதவடைக்கப்பட்டது போல் குலை நடுங்கினான். வியர்த்தது. கைகள் இரண்டும் குளிர் ஜுரத்தில் நடுங்குவது போல் உணர்ந்தான். காலிரண்டும் குடுகுடுப்பை உடுக்கு போல் குலுங்கின. வயிற்றில் இட்லி கிரைன்டர் ஓடியது. துந்ழிபி தைத்ழப ப்னஞா என்று ரகுமான் இசையில் பனிரெண்டு கட்டையில் கேபி சுந்தராம்பாள் அசுர வேகத்தில் தமிழ்ப்பாட்டு பாட, பத்து பேருடன் பழைய உசிலைமணி குத்தாட்டம் ஆடுவதை, கேட்கவும் பார்க்கவும் நேர்ந்தது போல் தலை சுற்றியது. போன வருடக் காவிரி நதியாய் வரண்டது நாக்கு. இந்த வருட ரெய்டில் சிக்கிய சரவணபவன் முதலாளி போல் நெஞ்சம் துடித்தது. தலைமுதல் கால் வரை பரவிய நடுக்கத்தை அளக்க கைவசம் ரிக்டர் இருந்திருந்தால் பதினெட்டு காட்டியிருக்கும்.

"என்னப்பா சிங்காரம்.. எல்லாம் ஒகே தானே?" என்றார் தயா பொறுமையிழந்து.

டேபிள் மேலிருந்த மொத்தத் தண்ணீரையும் குடித்தான் சிங்காரம். "என்னை விட்ருங்கய்யா" என்றான் மல்லியிடம். "இப்பத்தான் உங்க நண்பர் பொண்ணு மைத்து விவகாரத்துலந்து மெள்ள மீண்டு வந்திருக்கேன்.. அதுக்குள்ளாற.. அதும் சாமியாரு கீமியாரு வேசம் எல்லாம் எனக்கு ஒத்து வராது சார்.. எதுனா உளறிருவேன்.. எசகுபிசகாயிரும்"

"இதோ பாரு சிங்காரம். நீ இதை செஞ்சே ஆவணும்.. இல்லின்னா இந்தாளு தினம் இங்க வருவாரு.. அப்புறம் இந்த மூஞ்சியை நாம தெனம் பாக்கணும்.."

ராஜசிங்கம் சிங்காரத்தைப் பார்த்து விழித்தார்.

சிங்காரம் சட்டென்று எழுந்தான். "நான் எளியவன்யா. என்னை இப்படியெல்லாம் மிரட்டலாமா நீங்க? ரைட்டுங்கய்யா. இந்த ஏற்பாட்டுக்கு நான் தயார். ஆனா முவத்தை தினம் பாக்கணுமுன்னு மட்டும் இனி பயம் காட்டாதீங்க".

"உனக்கு மட்டுந்தானா அந்தப் பயம்?" என்று முணுத்தார் மல்லி. பிறகு உரக்க, "மிச்ச ஏற்பாடெல்லாம் தயா பாத்துக்குவாரு. எல்லாம் திட்டப்படி நடக்கும், கவலைப்படாதீங்க சுவாமிஜி" என்றுச் சிரித்தார்.

    ஞ்சளும் சிவப்பும் கலந்தப் பட்டுப் புடவையில் கம்பீரமாக இருந்தார் வல்லி. தீர்க்கமான பார்வையை இன்னும் எடுத்துக்காட்டிய பெரிய கண்ணாடி, சுந்தர்ஜியின் உள்ளே இருந்த சிங்காரத்தை உற்றுப் பார்த்தது. அவர் பார்வையைத் தவிர்க்க முயன்ற சிங்காரம் நெற்றிப் பொட்டைப் பார்த்துப் பயந்து, பார்வையே பரவாயில்லையென்று நெளிந்தான். எங்கே இந்த நாடகம் வல்லிக்குத் தெரிந்து உள்ளதும் கெட்டுப் போகுமோ என்று நடுங்கிய ராஜசிங்கம், ரத்த அழுத்தம் அதிகமாகிச் சற்றுத் தடுமாறியபடி இருந்தார். தயா வழக்கம் போல் மல்லியின் பின்னே பதுங்க முயன்றார். மல்லி மட்டும் நிதானமாகவும் புன்னகையோடும் வல்லிக்கு வணக்கம் சொன்னார். கனகவல்லி அனைவரையும் வரவேற்றார். "ரொம்ப நன்றி தயாண்ணே.. சுவாமிஜியை கூட்டி வந்ததுக்கு"

"இவர் தான் சுவாமி சிங்காரம்" என்றார் தயா பெருமையாக, சிங்காரத்தைக் காட்டி.

"சிங்காரமா? சுந்தர்ஜினு சொன்னீங்க?" என்றார் வல்லி. தயா நாக்கைக் கடித்துக் கொண்டார். ராஜசிங்கத்துக்கு மூச்சு முட்டியது.

சட்டென்றுத் திரும்ப முயன்ற சிங்காரத்தைத் தடுத்து நிறுத்திய மல்லி, "அது அவரோட பூர்வீகம். காசியிலும் கேதார்நாத்திலும் குருகுலம் முடிஞ்சதும் இவரோட குருவே இவருக்கு சுந்தர்ஜிங்கற பேரைக் கொடுத்து அருள் செஞ்சாரு.. ஆனாலும் நெருங்கினவங்களுக்கு இவர் என்னிக்குமே சிங்காரம் தான்" என்றார்.

"ரைட்டு" என்றான் சிங்காரம். "நீங்க இங்கயே இருங்கம்மா" என்றான் வல்லியிடம். "வீட்டுல வாஸ்து ஓட்டம் எப்படி இருக்குதுனு பார்க்கணும்" என்று வேகமாக தயாவை இழுத்துக் கொண்டு அறையின் நடுவே சென்று நின்றான். மேலும் கீழும் பார்த்தான். கைகளை அலை போல் அசைத்தான். "பிரம்மஸ்தானம்" என்றான் உரக்க. சற்று ஆழ்ந்து சிந்திப்பது போல் நின்றான். மல்லியும் ராஜசிங்கமும் கனகவல்லியுடன் பேசினர்.

"என்ன செய்றாரு சுவாமி?" என்றார் வல்லி. "என்னவோ பிரம்மஸ்தானம்னு சொல்றாரே? அது ஹால்ல இல்லே இருக்குது இந்த வீட்டுல?"

"சுவாமி பெரிய ஞானிம்மா. ஒருவேளை வாஸ்து ஓட்டத்தை கையால அளக்குறாரோ என்னவோ?"

"நமக்கு முதுகைக் காட்டிக்கிட்டு தயாவோட என்னவோ செய்றாரே?"

"பொறுமையா இருப்போம்.. பிறகு நம்ம சந்தேகத்தை அவர் கிட்டயே கேட்போம்" என்ற மல்லி, சோபாவில் உட்கார்ந்தார். "இப்படி உக்காரும்மா.. அவரு வரட்டும்". வல்லி தன்னுடைய நாற்காலியில் அமர்ந்து ராஜசிங்கத்தையும் அருகே உட்காரச் சொன்னார்.

அதற்குள் சிங்காரம் வீட்டின் பல மூலைகளுக்கு தயாவுடன் சென்று காற்றில் கையை அங்கேயும் இங்கேயும் ஆட்டினான். சில நிமிடங்களுக்குப் பிறகு தயாவுடன் சோபாவில் வந்து உட்கார்ந்தான். ஐந்து நிமிடங்கள் போல் கண்களை மூடி அமைதியாக இருந்தான்.

"கனகம், தியானம் பண்றாரு போலிருக்கு சுவாமிஜி" என்றார் ராஜசிங்கம் மெள்ள.

"அபாரம்!" என்றான் சிங்காரம். "உங்க வீட்டுல வாஸ்து ஓட்டம் தெளிவாக இருக்கும்மா. வாஸ்து சாஸ்திரம் இங்கே சரியா அமைஞ்சிருக்கு.. ஒண்ணு ரெண்டு எடத்துல ஓட்டம் லேசா தடைபடுது. அதனால உங்க வீட்டுல நல்ல காரியங்கள் நடந்தாலும் கொஞ்சம் தடைபட்டே நடக்கும்" என்றான்.

வல்லி அசந்து போனார். "ஆமாம் சுவாமிஜி! நானே கேட்கணும்னு இருந்தேன்.. நல்லது நடந்தாலும் தடங்கல் இருந்துகிட்டே இருக்கு.."

வல்லியை சைகையால் அடக்கினான் சிங்காரம். "எல்லாம் சரியாயிரும். பிரம்மஸ்தானத்துலந்து ஓட்டம் சரியா இல்லாம போனதுக்கும், குபேர ஸ்தானத்துக்குக் குறுக்கே நிக்குற தடைக்கும் காரணம் ரொம்ப சிம்பிள்.. ஆனா அது வாஸ்துல ஊறினவங்களுக்குக் கூட சரியா தெரியாம போயிடும்.."

வல்லி பிரமித்தார். "என்ன சுவாமி அது?"

"பல்லி"

"வல்லி சுவாமி, வல்லி.. நீங்க என் பெண்டாட்டியை பல்லின்னெல்லாம் கூப்பிடக்கூடாது.." என்றார் சிங்கம்.

"இல்லிங்க. நான் சொன்னது க்ளிக்ளிக்ளிக்ளிக்ளிக்னு சப்தம் செய்யும் பிராணி. இங்லிஷ்ல லிசர்டுனு சொல்வாங்க. அசல் பல்லி"

"அசல் பல்லியா?" வல்லியின் வெள்ளை முகம் திடீரென வெளிறியது.

"மூஞ்சுரு"

சட்டென்று கால்களை உயர்த்தினார் கனகவல்லி. "என்னது, மூஞ்சுரா.. எங்கே?"

"கடைசியா கரப்பான்"

"என்ன சுவாமி.. என்னென்னவோ சொல்றீங்களே.. இந்த பல்லி கரப்பான் மூஞ்சுரு பேரைக் கேட்டாலே என் பெண்டாட்டிக்கு நடுங்கும். கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க, பயங்காட்டாதீங்க" என்றார் சிங்கம்.

"பிரம்மஸ்தானத்துக்கு பல்லி, குபேர ஸ்தானத்துக்கு கரப்பான், ஈசான மூலைக்கு மூஞ்சுரு" என்ற சிங்காரம் திடீரென்று துள்ளி எழுந்தான். அறையை வேகமாகச் சுற்றிவிட்டு வந்து உட்கார்ந்தான்.

"என்ன சுவாமிஜி.. பல்லி கரப்பான்னு என்னவோ சொல்லிட்டு நீங்களே சுண்டெலியாட்டம் ரூமை சுத்திட்டு வந்து உட்கார்ந்துட்டீங்க?" என்றார் மல்லி நிதானமாக.

சிங்காரம் வல்லியை நேராகப் பார்த்தான். "அம்மா.. உங்க வீட்டுல தடங்கல் எல்லாம் நீங்கி இப்ப எல்லாம் சரியாயிடுச்சுனு வச்சுக்குங்க. விஸ்வகர்ம வியாக்கியானப்படி கரப்பான். மய சாஸ்திரப்படி மூஞ்சுரு. ரெண்டு பேருக்குமே பொருத்தமான பல்லி.."

"புரியறாப்புல சொல்லுங்க சுவாமிஜி.." என்றார் மல்லி. "யாரு அந்த ரெண்டு பேரு? ஏன் பல்லிப் பொருத்தம் பாக்குறானுவ?"

"வாஸ்து கலையில விஸ்வகர்மா, மயமுனி ரெண்டு பேரும் ஆதிகுருமாருங்க. அவங்க போட்டுக் குடுத்த சட்டத்துல தான் என்னை மாதிரி ஆளுங்களெல்லாம் படங்காட்டிக்கிட்டு வராங்க. கனகவல்லிம்மா.. நான் சொல்றதை கவனமாக் கேளுங்க.. உங்க வீட்டு வாஸ்து ஓட்டத்துல தடங்கல் வரக் காரணம் பல்லி, கரப்பான், மூஞ்சுரு இல்லாம போனது தான். பல்லின்றது பிராமண அடையாளம். நான் ஜாதியைச் சொல்லலிங்க. பிரம்மத்தைத் தெரிஞ்சுக்கிட்டவங்களோட அடையாளம் பல்லி. அதே போல குபேரனுடைய செல்வத்துக்கு அழிவில்லைனு கேள்விப்பட்டிருப்பீங்க. அழியாத செல்வத்துக்கு அடையாளமா அழிவில்லாத கரப்பான். பிறகு அதிதி ஈசான மூலைங்களுக்கு அடையாளமா சுறுசுறுப்பும் அமைதியுமான மூஞ்சுரு. பிள்ளையார் வாகனத்தை வச்சு சிவனை அடையுற உத்தி.." என்ற சிங்காரம் மல்லியைப் பார்த்தான்.

மல்லி சிங்காரத்தைப் பெருமையாகப் பார்த்தார். "சுவாமி.. இப்ப எதுக்கு பல்லி மூஞ்சுரு பத்திச் சொல்றீங்க?" வல்லியும் தலையாட்டியபடி சிங்காரத்தைப் பார்த்தார்.

"அதாவதுமா.. முறையா வாஸ்து ஓட்டம் இருந்தா இந்த மூணுத்துல ஒண்ணோ ரெண்டோ சில நேரம் மூணுமே அந்த வீட்டுல இருக்கும். உங்க வீட்டுல சில தடைகள் இருந்துச்சு.. அதை நான் தியானம் செஞ்சு நீக்கிட்டேன். பாருங்க.. சீக்கிரத்துல உங்க வீட்டுல நிறைய நல்ல காரியங்கள் தடையில்லாம நடக்கும். எல்லா உறவுகளும் சுமுகமா இருக்கும்"

"தடைகளை நீக்கிட்டீங்களா? என்ன சொல்றீங்க..?" என்ற வல்லியின் குரலில் பயமே தொனித்தது.

"ஆமாம்.. பல்லி கரப்பான் மூஞ்சுரு மூணுத்துக்கும் உங்க வீட்டை அடையாளம் காட்டினேன்.. இன்னும் கொஞ்ச நாள்ல இந்த மூணும் உங்க வீட்டுல நடமாடும்.. அப்படி வரலின்னா என்னை மறுபடி கூப்பிடுங்க.. நான் வந்து ஒரு சாந்தி தியானம் செய்துட்டுப் போறேன்.. இப்ப எனக்கு நேரமாவுது.. வரட்டுமா?" என்று கிளம்பினான் சிங்காரம். மல்லியும் தயாவும் அவர் பின்னால் சென்றார்கள்.

மூவரையும் வழியனுப்பி ராஜசிங்கத்துடன் உள்ளே திரும்பி வந்தார் கனகவல்லி. "என்னங்க.. இந்தாளு இப்படி சொல்றாரு? பல்லி கரப்பான்லாம் நம்ம வீட்டுல இருக்கணுமா? அப்படி வரல்லின்னா மறுபடி இவரைக் கூப்பிடணுமா? சரிதான்.. எந்த ஊர்ல இந்தாளு வாஸ்து படிச்சாரு.. சரியான ஏமாத்தா இருப்பாரு போலிருக்கே? உங்க பிரண்டுங்க கூட்டியாந்தா இப்படித்தான் இருக்கும்" என்றபடி சோபாவில் உட்கார்ந்தார்.

"போகுது விடு கனகம்.. நீ உட்காரு.. டென்சனாவாதே. நான் உனக்கும் சேர்த்து டீ போட்டு வரேன்" என்றபடி சமையலறைக்குப் போனார் சிங்கம். சில நிமிடங்களில் இரண்டு கப் டீயுடன் வந்தவர், கனகவல்லியைப் பார்த்துத் திடுக்கிட்டார். "என்ன ஆச்சு கனகம்? பேயடிச்சாப்புல இருக்கே?"

சோபாவின் விளிம்பில் குந்தி உட்கார்ந்திருந்த கனகம், எதிரே சுவற்றைச் சுட்டிக் காட்டினார். ஜன்னலுக்கு மேலே அதிதி வாஸ்து மூலையில் ஒரு நீளமான பல்லி. மெள்ள நூற்று எண்பது டிகிரி திரும்பி, பித்ரு வாஸ்து நிலையைப் பார்த்து நின்றது.

"பல்லியா?" என்று சாதுவாகக் கேட்ட சிங்கம், டீ கப்களை மேசை மீது வைத்தார். "எங்கிருந்து வந்துச்சு பல்லி?" என்று சாக்ரேட்ஸ் ப்லேடோவிடம் கேட்பது போல் கனகவல்லியிடம் கேட்டார். கனகவல்லி உள்ளூர நடுங்கியபடி பல்லியைப் பார்க்க, பல்லியின் நடவடிக்கைகளை இருவரும் கண்காணிக்கத் தொடங்கினர்.

வல்லி ஓரளவுக்கு ஆரோக்கியமானவர் என்றாலும் ஜிம்னெஸ்டிக் அத்லெடிக் பயிற்சிகள் எதுவும் பெற்றதில்லை. சிறுவயதில் எப்போதோ ஒரு முறை க்ரிகெட் விளையாடிய போது தானாகத் தேடி வந்து இவர் கையில் உட்கார்ந்த பந்தைத் தவிர, ராஜசிங்கமும் எதையும் கேச் பிடித்ததில்லை. ஆனால், உலக சாதனை புரிய இருவருக்கும் ஒரு வாய்ப்பு அடுத்த சில நொடிகளில் கிடைத்தது.

வாலை லேசாக உயர்த்திச் சுவற்றில் மெள்ள நகரத் தொடங்கியது பல்லி. பல்லி எங்கே போகிறது? கரப்பைத் தேடி. ஜன்னல் சட்ட விளிம்பில் ஒரு கரப்பான் பூச்சி! 'கண்டேன் கரப்பை' என்பது போல் இவர்களை ஒரு கணம் தலை உயர்த்திப் பார்த்தது. பூச்சியைப் பிடிக்க, பல்லி மிக மெதுவாக ஊர்ந்தது. பல்லி மிக அருகில் வந்ததும் கரப்பானுக்கு உணர்வு வந்து சர்ர்ர்ர்ர்ர்ரென்றுப் பறந்து சோபாவின் பின்புற இருளில் அடைக்கலம் தேடத் தொடங்கியது. எரியும் மெழுகுவர்த்திகளைப் பிடிக்காமல் ஒதுங்கிப் பறந்து வட்டமேசையின் சிவப்பு வெல்வெட்டில் அரக்குத் திட்டாக உட்கார்ந்தது. பிறகு மனம் மாறி, சட்டென்று வெர்டிகல் டேகாஃபில் எழுந்து, சுவரலமாரியின் ஆமை ஓட்டில் அமர்ந்தது. அதுவும் பிடிக்காமல் மறுபடி விர்ர்ர்ரிட்டு சங்குகளின் சிறிய ஓட்டைகளில் புகப் பார்த்தது. சங்கில் நுழைய எடை குறைய வேண்டும் என்று உணர்ந்து, அங்கிருந்து நகர்ந்து மேல்தட்டுக்கு ஏறியது. மெள்ள ஊர்ந்து, தாமிரத் தட்டின் உள்ளே நுழைந்து தண்ணீரைத் தொட்டும் தொடாமல், தாமரை போல் நின்றது.

கரப்பானின் இந்தப் பயண அனுபவங்களை முழுமையாகப் பார்க்க இருவரும் கொடுத்து வைக்கவில்லை. பல்லியிடமிருந்து தப்பிய கரப்பான், சிறகை ஓசையுடன் அசைத்துப் பறந்து வந்த அதே நொடியில்.. ஒரு அலறல், ஒரு ஹை ஜம்ப், இரண்டு குட்டிக்கரணம், ஒரு ஹர்டில் ஜம்ப், ஒரு லாங்க் ஜம்ப் என்று வரிசையாகவும் வேகமாகவும் - அதே நேரம் இருநூறு டெசிபலில் இரண்டாவது அலறலோடும் - வல்லி புரிந்த சாகசங்கள் எந்த ஒலிம்பிக் சேம்பியனையும் தோற்கடிக்கும் சாதனையாகும். ஜம்ப், கரணம், ஜம்ப், ஜம்ப் என்று அலறிக் கொண்டு வந்த மனைவியைப் பார்த்தார் சிங்கம். அடுத்த நொடியில் தாவி வந்த மனைவியைத் தாங்கிக் கேச் பிடித்தார்.

"வல்லி.. ஏம்மா உடம்பு இப்படி நடுங்குது?"

கனகவல்லி பேசவில்லை. கணவரை இறுக்கிப் பிடித்துக்கொண்டார். சிங்கத்துக்கு உள்ளூர இனித்தது. எனினும், வல்லியின் அடுத்த அலறலில் அவரைத் தவறவிட்டார். "ஐயையோ.. கனகம்.." என்று மனைவியைத் தூக்கி எழுப்பப் போனார். ஆனால் அதற்குள் படுத்த வாக்கிலேயே ஒரு ஹை ஜம்ப் செய்து சிங்கத்தின் கரங்களில் கேச் போல் விழுந்தார் வல்லி.

"என்னாச்சும்மா?" என்ற சிங்கத்துக்கு பதில் சொல்வதற்குப் பதில் தரையைச் சுட்டி அலறினார் வல்லி. வல்லியின் விரலைப் பார்வையால் தொடர்ந்த சிங்கம், சட்டென்று இடமிருந்து வலமாக ஐந்து முறை ஸ்கிப்பிங் குதித்தார், வல்லியைக் கீழே போடாமல் பிடித்தபடி. "ஐயையோ.. எலி எங்கிருந்து வந்துச்சும்மா நம்ம வீட்டுல?" என்றார்.

மெள்ளக் கீழே இறங்கிய வல்லி சுற்றுமுற்றும் பார்த்து மீண்டும் அலறத் தொடங்கினார். சுவற்றின் பல மூலைகளில் பல்லிகள் சிறு மாநாடு நடத்தின. மூஞ்சுரு சமையலறைக்கும் ஹாலுக்குமாய் ஓடியது. நின்றும் இருந்தும் நடந்தும் கிடந்தும் பறந்தும் காட்டியது கரப்பான்.

வாசலுக்கு ஓடிய சிங்கத்தை அழைத்தார் வல்லி. "ஏங்க.. எங்கே போறீங்க என்னை விட்டு.." கூவினார்.

"ஒண்ணுமில்லம்மா.. நீ அலறுதைக் கேட்டு நான் உன்னை அடிக்கிறதா யாரும் நினைச்சுறக் கூடாதில்லே? அதான் கொஞ்ச நேரம் வெளியில பொதுப் பார்வையில நின்னுட்டு வரலாம்னு..".

"அய்யோ.. என்னை விட்டுப் போவாதீங்க" என்று இரண்டு சமர்சால்ட், ஒரு ஹர்டில் ஜம்ப், ஒரு லாங் ஜம்ப் அடித்து மறுபடி சிங்கத்தின் கைகளில் கேச் ஆனார் வல்லி. "என்னை விட்டுறாதீங்க.." என்று சிங்கத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டார்.

"நிச்சயமா விடமாட்டேன்.. என் கனகமணி.." என்ற ராஜசிங்கத்தின் குரலில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காதலும் நிறைந்திருந்தது.

    "அப்புறம் என்ன.. வாஸ்தாவது போஸ்தாவது.. எந்தக் கண்றாவியும் வேணாம்னு எல்லாத்தையும் கலைச்சுப் போடச் சொல்லிட்டா கனகம். வாஸ்து பக்கமே இனி போகமாட்டேன்னு சொல்லிட்டா. பழைய கனகவல்லியா மாறிட்டா.." என்றார் ராஜசிங்கம். "எல்லாம் உன்னால தான். ரொம்ப நன்றி மல்லி"

"நான் ஒண்ணுமே செய்யலே.. எல்லாம் சிங்காரம் தான். அவனுக்கு நன்றி சொல்லு. சிங்காரமும் தயாவும் தான் பல்லி கரப்பான் மூஞ்சுரைப் பிடிச்சு உங்க வீட்டுல போட்டது.. அவங்களுக்கு நன்றி சொல்லு" என்று மல்லி சொல்லவும், சிங்காரம் மூன்று கிண்ணங்களில் பாஸந்தி எடுத்து வரவும் சரியாக இருந்தது.

"சிங்காரம்.. ரொம்ப நன்றிப்பா" என்றார் சிங்கம், முகமெல்லாம் புன்னகையாக.

"ஆகட்டும் சார்" என்று விலகிய சிங்காரத்தை நிறுத்தினார் மல்லி. "யப்பா.. ராஜசிங்கம்.. பல்லி மூஞ்சுரு கரப்பான் எல்லாம் சேர்த்து ஒரு அஞ்சாயிரம் ஆயிருச்சு.. சிங்காரத்துக்கு பத்தாயிரமா குடுத்துரு"

"இந்தா சிங்காரம்.. இருவதாயிரம்.. இதை வச்சுக்க. வாஸ்து சாயத்தை வெளுத்து என் வீட்டுல நிம்மதியையும் என் முகத்துல சந்தோஷத்தையும் கொண்டு வந்தே பாரு.. அதுக்கு விலையே இல்லப்பா" என்று சிங்காரத்திடம் ஒரு பணப்பொட்டலத்தைத் தந்தார் சிங்கம்.

2013/07/12

வாத்து வெளுப்பு



    திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செல்வநாயகமும் - ஒரு அறிமுகம்: [-]

அடையாரிலிருந்து திருவான்மியூர் போகும் வழியில் காந்தி நகர் தாண்டி உள்ளடங்கி இருக்கும் வெடரென்ஸ் க்ளப் நிறைய மாறிவிட்டது. எழுபதுகளில் அடையார் அமைதியாக இருந்த காலத்தில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று வாதம் புரிந்தப் பெருங்கல்லூரிப் பேராசிரியர்களும் மாலை நேரங்களில் கூடி, வெளிநாட்டு பீர் விஸ்கி வைன் என்று ஆமை வேகத்தில் அருந்திக் கொண்டு, பேருக்கு டென்னிஸ் ஆடிவிட்டு, முக்கியமாக கேன்டீனில் அவ்வப்போது தயாரான உருளைக்கிழங்கு மினி போண்டா, மெதுவடை, முந்திரிப்பருப்பு கிச்சடி, அவியல் சூப், பொடிமாவடு தயிர்சாதம் என்று வரிசையாக உள்ளே தள்ளியபடி இரவு பத்து மணி வரை அரட்டை அடித்த நாளிலிருந்து... நிறையவே மாறிவிட்டது.

இடையில் சில வருடங்கள் கேட்பாரற்று கிடந்த க்ளப், சென்றப் பத்து வருடங்களில் பழைய பொலிவுக்கு வந்துவிட்டது. உறுப்பினர் கட்டணம் நாட்டின் பெரும்பான்மையினருக்கு மாதச் சம்பளமாயிருந்தாலும், சென்னையைச் சுற்றித் திரண்டிருக்கும் செலவம் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பழைய கட்டிடம் என்றாலும் சுவரிலிருந்த இந்தியாவை நினைவுபடுத்தும் சுவர்ச்சித்திரங்கள் அத்தனையும் போய், இப்போது ஒவ்வொரு அறையிலும் ஒரு வெளிநாட்டு நகரத்தின் பின்னணியில் புது அலங்காரம். புதுக் கூட்டம்.

கால் சென்டர் அரை சென்டர் என்று தெருவுக்கு ஒன்றாய்க் கிளம்பியிருக்கும் மென்பொருள், அவுட்சோர்சிங், மற்றும் வெப் 2.0 கம்பெனிகளில், கல்லூரி முடித்த மறுநாளே சேர்ந்து, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கித் தாய்மொழி மறந்த இளைஞர் கூட்டமே பெரும்பாலும். "செக் அவுட் ஹர் அஸெட்ஸ் மேன்" என்று வாட்கா குடித்து வம்படிக்கும் ஆண்களை, தயங்காமல் "யா? வேரிஸ் யுர்ஸ்?" என்று பதில் சொல்லித் தலைகுனியவைக்கும், இளவயிறு தெரிய மேல்சட்டையணிந்த ஜீன்ஸ் பெண்கள். இவர்களை எல்லாம் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டு, எங்கேயாவது "அங்கிள்" என்று கூப்பிட்டுவிடப் போகிறார்களே எனப் பயந்து, ஒதுங்கியிருக்கும் என்னைப் போன்ற முப்பத்தைந்து வயதில் முடிகொட்டிப் போன அரைகுறை முதியோர் ஒரு சிலர். இந்த மாறுதல்களுக்கிடையே வெடரன்ஸ் க்ளப் வேர்கடலைச் சங்கமாக மருவியது புதிர்.

சில விஷயங்களில் மட்டும் சங்கம் மாறவேயில்லை. அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அசைக்க முடியாதபடி சுவையான சிற்றுண்டி வகை. வியாழக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும் பாதாம் சட்டினிக்கு மைல் கட்டி நிற்கும் கூட்டம். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அரசியல் பேசக்கூடாதென்ற விதிகளுக்குட்பட்டு, பெரும்பாலும் காதல் பிரச்னை பற்றிய வம்பு, அரட்டை, துக்கப் பரிமாறல். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் இளைய சமுதாயத்திற்கு அறிவுரை சொல்லி, சில சமயம் பிரச்னை தீர்த்து, பல சமயம் குட்டையைக் குழப்பித் தள்ளும் பேர்வழிகள். இவர்களில் தனித்து நின்று சாதனை புரியும் பேராசிரியர் அன்புமல்லி.

சற்றே பெண்மையான பெயராக இருந்தாலும், ஒருவேளை அதனால் தானோ என்னவோ, அன்பு சாருக்குக் காதல் அனுபவம் அதிகம். காதலித்த அனுபவம் குறைவு, காதலிக்கப்பட்ட அனுபவம் அதைவிடக் குறைவு என்றாலும், காதல் தொடர்பான அனுபவம் எக்கச்சக்கம். திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்தக் காலத்தில் அன்புமல்லியின் அப்பா லன்டனில் இருந்தபோது அவருக்கிருந்த காதல் நெருக்கடியைத் தீர்த்து வைத்த மல்லினர் என்பவரின் நினைவாக, இவருக்கு மல்லி என்ற இடைப்பெயரை சேர்த்து அன்புமல்லி என்ற பெயரைக் கொடுத்ததாகக் கேள்வி. உண்மை விவரம் தெரியாது. அனாவசியமாக வம்பு அரட்டை என்று போக மாட்டார். ஆனால் காதல் பிரச்னை தீர வழி கேட்டு வருபவருக்கு, இல்லை எனாது அறிவுரையும் உதவியும் வழங்கும் வள்ளல். காதல் சாமியார். திருவாளர் அன்புமல்லி செல்வநாயகம்.

இனி கதை..



    ண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த இருவரில் ஒருவர் சற்றுத் தயங்கி நின்றார். அவர் முகம் முன்தினம் செய்த மெதுவடை போல் பொலிவின்றித் தொய்ந்திருந்தது. "என்ன இடம் தயா இது?" என்று மற்றவரை இடித்தார். "வேர்க்கடலை சங்கம்னு சொன்னே? வேறே சங்கமாட்டம் தெரியுது? எங்கே பாத்தாலும் காலிப்பசங்களா இருக்காங்க? ஆம்பளை பொம்பளை வித்தியாசம் இல்லாம சிரிச்சு பேசிட்டு சந்தோஷமா இருக்காங்க.. தறிகெட்ட இடமா இருக்குதே? இங்கயா இருக்கான் அன்புமல்லி? எல்லாரும் சந்தோஷமா இருக்குதைப் பாத்தா வயத்தை குமட்டுதே? போயிரலாமா?"

தயா விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் ஸ்டைலில் நிதானமாக, "என்னப்பாஆ சொல்றே சிங்கம்ம்? நாலு பேர் சிரிச்சு பேசி சந்தோசமா இருந்தா, அது உனக்குத் தறிகெட்ட இடமாயிருச்சேஏ.. ம்ம்ம்.. ஒருகாலத்துல.. பார்த்தாலே சந்தோசமா சிரிக்கத் தோணுறாப்புல, சிரிச்ச்ச்ச முகமா இருந்த ஆளை.. இந்த நிலமைக்குக் கொணாந்துட்டாளேஏஏ!.. போகட்டும் விடு.. வாப்பா.. வலது காலை எடுத்து வச்சு வா. அது இல்லே, அந்த இன்னொரு வலது கால்.. அதேதான்.. மெள்ள வா. அன்புமல்லி உள்ளாறதான் இருப்பான். உன் பிரச்சினையத் தீர்த்து வைப்பான்" என்றபடி நண்பருடன் அரையிருளில் அறைதேடி நடந்தார்.

    தன்னெதிரே உட்கார்ந்த இருவரையும் பார்த்த அன்புமல்லியின் முகத்தில் புன்னகையும் வருத்தமும் மாறி மாறித் தோன்றின. "வா தயா.. யாரு இவரு? காணாம போன பெண்டாட்டி திரும்பக் கிடைச்ச மாதிரி ஏன் இப்படி வாட்டமா இருக்காரு?"

"மல்லி.. கிடைச்ச பெண்டாட்டி காணாம போனதால வாட்டமா இருக்கான்.. இவனைத் தெரியலியா உனக்கு?"

"பெண்டாட்டி காணாம போனதால வாட்டமா? அவனவன் பட்டாசு கொளுத்தி தானதருமம் செஞ்சு கிடா வெட்டி விழா கொண்டாடுற விஷயமாச்சே! இதென்ன இந்தாளு.. புதுசா இருக்குதே..! சத்தியமா இவர் யாருனு தெரியலபா" என்ற அன்புமல்லி தயாவைப் பார்த்தே பேசினார்.

"டேய்.. மல்லி.. இவன் ராஜசிங்கம்டா. நாம மூணு பேரும் ஒண்ணா படிச்சோம் எட்டாம்ப்பு வரைக்கும்.. இவன் கல்யாணத்துக்குப் போய் ஆளுக்கு ஒரு புதுச்செருப்பு எடுத்துட்டு வந்தமே.. மறந்துட்டியா?"

அன்புமல்லி இருந்த இடத்திலேயே சற்று அதிர்ந்து குதித்தார். சட்டென்று பார்த்தவர்களுக்கு அவர் திடீரென்று உயர்ந்து சுருங்கியது போல் தோன்றியிருக்கும். "டேய் தயா.. என்னை ஏம்பா இழுக்குறே? நீங்க ரெண்டு பேரும் படிச்சீங்கனு சொல்லு.. நான் எங்க அந்தத் தப்பெல்லாம் செஞ்சேன்?" என்ற அன்புமல்லி ஒரு கணம் ராஜசிங்கத்தைப் பார்த்துத் திரும்பினார். "தப்பா நினைக்காதே. அவனைப் பார்த்தாலே துக்கமாயிடுது.. அப்படியொரு களை.. ம்ம்.. ராஜசிங்கம்.. யாரு, முத பெஞ்சுல உக்காந்திருப்பானே அவனா? அதனால தான் எனக்கு அவன் முகம் தெரியலப்பா!"

"மல்லி.. நீதாம்பா இவனுக்கு எல்ப் செய்யணும். இவனையும் இவன் பெண்டாட்டியையும் சேத்து வக்கணும்.. இந்த விஸ்கி கிளாசை உன் காலா நெனச்சுக்குறேன்" என்று உயர்த்தினார். "அட, என்னப்பா காலியா இருக்குது.. சொட்டு கூட காணோம்?"

"தயா.. காதல் சமாசாரம்னா உதவி செஞ்சு காதலர்களை சேத்து வைக்க எனக்குத் தெரியும்.. காணாம போனவங்களை கண்டுபிடிக்கறது என் வேலையில்லையே? இவனுக்கு எப்படி என்னால உதவி செய்ய முடியும் புரியலியே? மன்னிச்சுக்க சிங்கம்.. உன்னை சட்னு நினைப்பு வராமப் போயிருச்சு.. பின் பெஞ்சுலயே இருந்தனா.. உன் முதுகு நினைவிருக்கே தவிர மூஞ்சை அதிகம் பார்க்கலபா.."

"பாத்தியா சிங்கம்? மொத பெஞ்சுல உக்காந்தா யாருக்கும் அடையாளமே தெரியாம போயிரும்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?" என்ற தயாவை முறைத்து, "என் பெண்டாட்டி காணாம போகலே மல்லி" என்றார் ராஜசிங்கம். "என்னோடதான் இருக்குறா.. ஆனா முன்னாட்டம் பேச மாட்டேங்குறா"

"உன் மூஞ்சைப் பார்த்த அதிர்ச்சிலே ஊமையாயிருப்பாளோ?"

"சேசே.. முன்போல பேச பழக மாட்டேங்குறாபா"

"ஞாபகமறதி, பைத்தியம்.. இந்த மாதிரி? பாயைப் பிராண்டுறாளா? பார்க்குறதுக்கு சாதாரணமா இருப்பாங்க.. திடீர்னு பாத்தா பாயெல்லாம் பிஞ்சிப் போயிருக்கும்.. உத்துக் கவனிக்கணும் இதெல்லாம்.."

"இல்லப்பா. அவ அப்படியேதான் இருக்கா. ஆனா வேறே ஆளா மாறிட்டா"

"அப்படியே இருக்கா, ஆனா வேறே ஆளா மாறிட்டா. புரியுது புரியுது.. பேய் பிசாசு காட்டேரி கொள்ளிவாய் கிள்ளிவாய் எதுனா பிடிச்சிருக்கும்னு சொல்றே.."

"இல்லப்பா"

"அப்ப சக்தி, காளி, ருத்ரசாமுண்டி, பைரவி, ஓங்காரி.. இதுல ஏதாவது ஒரு அம்மன் கிம்மன்?"

"வாத்து. வாத்து பிடிச்சிருச்சு.. சொல்லேண்டா சிங்கம்" என்றார் தயா.

"வாத்தா?" என்றார் அன்புமல்லி. "எது..? இந்த க்வாக் க்வாக்னு சத்தம் போட்டுகிட்டு நம்ம கிராமக் குளத்துல.. அதுவா பிடிச்சிருக்கு? வாத்துப்பேய் இப்பத்தான் கேள்விப்படறேன்.. ஆமா.. என்னா செய்யுது வாத்துப்பேய்?"

"வாத்துப்பேய் இல்லே மல்லி. வாத்து ஜோசியம். ஆனா லேசுப்பட்டதில்லே, அதி பயங்கரம். படு பயங்கரம். மகா பயங்கரம். பயங்கரத்தைப் பார்க்கிலும் பயங்கரம். பேயைக்காட்டிலும் பயங்கரம். அதாக்கும் பிடிச்சிருக்கு"

"புரியலியே தயா? வாத்துப்பேய் நிசமாவே நான் கேள்விப்பட்டதே இல்லையே?"

"சும்மா இரு தயா" என்றார் ராஜசிங்கம். "மல்லி.. வாத்துப் பேயும் இல்லே ஜோசியமும் இல்லே. வாஸ்து சாஸ்திரம். அதான் பேயாட்டம் அவளைப் பிடிச்சு ஆட்டுது. அது பிடிச்ச நாள்லந்து என் கனகவல்லி கருங்கல் ஜல்லியா மாறிட்டா.. அப்பப்போ சில்லியா நடந்துக்குறா. என் பசங்களுக்குக் கூட புரியாதபடி ஆளே மாறிட்டா. முப்பது வருசமா ஓடாத் தேஞ்சு போய்.. விட்டது சனியங்கனு பசங்கள்ளாம் போனபிறகு தாம்பா நாங்க காதலிக்கவே ஆரம்பிச்சோம்! அம்பது வயசுக்கு மேலே தனிமையில நாங்க ரெண்டு பேரும் எத்தனை சந்தோசமா இருந்தோம்! இப்ப என்னாடானா அவளை எனக்கே அடையாளம் தெரியலே. இந்த வாத்து சங்கடத்துனால.. அடச்சீ.. வாஸ்து சாஸ்திரத்துனால என் குடும்ப சந்தோசமே போச்சுபா. என் அன்பு மனைவி இப்படி மாறிட்டதால என் மனசே வெம்பிப் போச்சுபா. அதான் சோகம். உன்னால உதவ முடியும்னு தயா இங்க கூட்டியாந்தான். ஜோடி சேத்து வக்கறதுல உனக்கு அனுபவமாமே? வல்லியை பழையபடி மாத்த எனக்கு ஐடியா குடுப்பா.. வழிபண்ணுப்பா..".

"சிங்கம்.. பொதுவா நான் கல்யாணமான கேசுங்களை எடுக்குறதில்லே. ஏற்கனவே கல்யாணமான துக்கத்துல கஷ்டப்பட்டு நொந்துபோய், தானாப் பிரிஞ்சவங்களை நாம வேறே சேத்து வைக்கணுமாங்கற நல்ல எண்ணம். இருந்தாலும் நாம பழைய சினேகிதம்ன்றதால.. யோசிக்கிறேன். சரி, எல்லா விவரமும் சொல்லு. உன் மனைவியைக் கல்யாணத்தன்னிக்குப் பார்த்தது.. அதுகூட தயா சொல்றாப்புல ரெண்டு ஜோடி புதுசெருப்புலயே கண்ணா இருந்தனா, சரியாக் கூட பார்க்காம வந்துட்டேன்.. என்னா நடந்துச்சுன்னு சொல்லு. இந்த வாத்து வியாதி பத்தியும் சொல்லு. அதுக்கு முன்னால தீர்த்தம் பிரசாதம் எதாவது சாப்பிடலாம்" என்ற அன்புமல்லி, சிங்காரத்தை அழைத்தார்.

"கூப்டிங்களா சார்?" என்று அருகில் வந்த சிங்காரம் உடனே கேவி அழுதான். அடங்கியதும், "இல்லே சார்.. இத்தனை துக்கமான மனுசரை நான் பாத்ததே இல்லே சார். நம்ம க்ளப்புல லைட்டெல்லாம் மங்கிடுச்சு கவனிச்சீங்களா சார்? இவர் முகத்துல ஏன் இத்தனை சோகம்?"

"அது ஒண்ணுமில்லே சிங்காரம். சாரோட பெண்டாட்டி.."

"செத்துட்டாங்கனு சோகமா?"

"இல்லப்பா"

"சாவலேனு சோகமா?

"இல்லப்பா"

"யாரோடனா ஓடிப்போயிட்டாங்கனு துக்கமா?"

"இல்லப்பா"

"அப்போ ஓடிபோகலேனு வருத்தமா?"

"அட இல்லப்பா.. அவரே நொந்திருக்காரு, நீ நோண்டிப் பாக்குறியே?"

"மன்னிச்சுங்க சார்" என்ற சிங்காரம், ராஜசிங்கத்தைப் பார்த்துவிட்டு இன்னொரு முறை அழுதான். பிறகு அன்புமல்லியைப் பார்த்துத் திரும்பி நின்றபடி, "விஸ்கி, கொத்தவரங்காய் புளிவறுவல், முட்டைபுர்ஜி, வாழைப்பூ வடை, பூண்டுச்சட்னி.. அப்புறம் எறால் மசாலா தீந்துருச்சு சார்.. கத்தரிக்காய் மசாலா எடுத்துட்டு வரவா? ஒரே மாதிரி தான் இருக்கும் டேஸ்டு. இவரையும் சாப்பிடச் சொல்லுங்க, கொஞ்சம் சரியாவும். இவரைப் பார்த்தா எனக்குத் துக்கம் தூக்குது சார்" என்றபடி வாயைத் டேபிள் துடைக்கும் துணியால் பொத்திக் கொண்டு நகர்ந்தான்.

    விஸ்கியும் கொத்தவரங்காய் புளிவறுவலும் மெள்ள உள்ளே இறங்க விவரங்களை வெளியே கொட்டினார் சிங்கம்.

"இந்த வாஸ்து சாஸ்திரம்ன்றது ரெண்டாயிரம் மூவாயிரம் வருசத்துக்கு முந்தின சமாசாரம்..வீடு எப்படி கட்டுறதுனு சொல்லி வச்சிருக்கு சாஸ்திரத்துல"

"உன் பெண்டாட்டி சிவில் எஞ்சினயரா? அவ்ளோ படிச்சுட்டு உன்னையா கல்யாணம் கட்னா?"

"அந்த வீடு இல்ல மல்லி. இதுகூட தெரியலியே உனக்கு? வூடு கட்டுறதுனா பிரம்பை எடுத்துகிட்டு ஆடுறது.. நாலா பக்கமும் தாவிக் குதிச்சு, எல்லை கட்டி ஆடுறதுக்கு பேரு வூடு கட்டுறது.. எம்ஜிஆர் படத்துல பார்த்ததில்லே? சிங்கத்தோட ஒய்பு இப்ப அது மாதிரி பிரம்பை எடுத்துட்டு ஆடுறானு சொல்றான்"

"சும்மா இருங்கப்பா ரெண்டு பேரும்" என்ற ராஜசிங்கம், முறுகலாகத் தெரிந்த பொன்னிற வாழைப்பூ வடை ஒன்றை எடுத்து முழுதாக பூண்டுச் சட்னியில் நனைத்தார். வடைமேல் கணிசமான சட்னி சேர்ந்து கொள்ள, அப்படியே கடித்து ஓசைவரச் சுவைத்தார். "அட்டகாசமா இருக்குதுபா.. ம்ம்.. வீடு கட்டுறப்ப எட்டு திசைக்கும்.."

"நாலு திசை தானேப்பா? நீ என்னா எட்டுன்றே?"

"அது வந்து தயா.. நீ படிக்குறப்ப உன் அறிவுக்கு ஏத்தமாதிரி குறைச்சுட்டாங்கடா.. மொத்தம் எட்டு திசைங்க தெரியுதா? சொல்றதக் கேளு..இல்லின்னா இந்தா இந்த வடையைத் தின்னு.." என்ற ராஜசிங்கம் தொடர்ந்தார். "எட்டு திசைக்கும் எட்டு தேவதைங்க இருக்குறதை கவனிச்சு வீடு கட்டுறப்ப அந்த தேவதைங்களை ஆராதிக்குறாப்புல வீடு கட்டினா, அந்த வீட்டுல செல்வம், சந்தோசம், நிம்மதி, எல்லாம் இருக்கும்னு சாஸ்திரம் சொல்லுது.."

"வாத்து சொல்லுது.."

"ஆமா.. அதைத்தான் என் பெண்டாட்டி பெரிசா புடிச்சுக்கிட்டு சாஸ்திரம் சம்பிரதாயம்னு வீட்டை மாத்திட்டா.. ஆளை மாத்திக்கிட்டா.. நடத்தையை மாத்திக்கிட்டா.. வீடே தலைகீழா மாறிடிச்சு.. வாஸ்துன்றா.. சூயின்றா.. மாயின்றா.. பஞ்சபூதம்ன்றா.. என்னையும் இதுல இழுத்து விடுறா.. எம் பசங்க லீவுக்கு வந்தவங்க நான் வேறே யாரையோ கல்யாணம் கட்டி வீட்டுக்கு கூட்டியாந்துட்டேன்னு என்னை மொத்தி எடுத்துட்டாங்கப்பா.. அப்புறம் விவரம் சொன்னதும் அலறி அடிச்சுகிட்டு அடுத்த வண்டியிலயே ஊருக்குப் போயிட்டாங்க.. இது போதாதுனு தினம் அவ கிட்டே சாஸ்திரம் கேட்க நாலஞ்சு பேர் வராங்க.. கனகவல்லின்ற பேரைக்கூட இப்ப வல்லிமயினு மாத்திக்கிட்டு.. என்னத்தை சொல்ல..!"

"ஆனா நீதான் வீடு கட்டி வருசக்கணக்கா அங்கியே இருக்கியேபா? இப்ப திடீர்னு வீட்டை எப்படி மாத்துறது? நீ என்ன சொல்றே?"

"வாஸ்து மகிமைனு இல்லாததையெல்லாம் வேலையத்த அம்பட்டப் படுபாவி எவனோ கிளப்பி விட்டுருக்காம்பா.. அதை மிச்ச வேலையத்த அம்பட்டங்க எல்லாரும் பிடிச்சுகிட்டு.. ஏன் கேக்குறே கூத்தை?! நீ வீட்டுக்கு வந்து பாரு.. எல்லாம் விளங்கும்"

மல்லி யோசித்தார். "சரி. நீ சொல்றது என் ஆர்வத்தை கிளப்பிருச்சு சிங்கம். இன்னக்கே உன் வீட்டுக்குப் போவோம்" என்றார். "சின்னதா தயிர்சாதம் சாப்பிட்டா நல்லாயிருக்கும்ல?"

சிங்காரம் கொண்டு வந்த தயிர்சாதம் மோர்மிளகாயை அடுத்த பத்து நிமிடங்களில் மூவரும் ஒரு பிடி பிடித்துவிட்டுக் கிளம்பினார்கள்.

    "இதான் உன் வீடா? நல்லா வசதியா இருக்கும் போலிருக்கே?" என்றார் மல்லி, காரிலிருந்து இறங்கியபடி.

"உள்ள வா.. பயந்துருவே" என்ற ராஜசிங்கம் இரும்பு கேட்டை உள்ளே இழுத்துத் திறந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த அன்புமல்லி சுற்றுமுற்றும் பார்த்தார். மென்மையாக அதிர்ந்தார். மாடிப்படியோரமாக இருந்த இடத்தில் ஒரு பெரிய படம் மாட்டியிருந்தது அதனருகே வடக்கும் இல்லாமல் மேற்கும் இல்லாமல் ஒரு கோணலான வாக்கில் போட்டிருந்த நாற்காலியில் கனகவல்லி உட்கார்ந்திருந்தார். எதிரே அதே போல் கோணலான வாக்கில் போட்டிருந்த மயிலிறகு கட்டப்பட்டிருந்த நாற்காலிகளில் இருவர். அதிராமல் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

வேகமாக நடந்த ராஜசிங்கம், "கனகவல்லி.. கனகம்.. வல்லி.. இத பாரு யாரு வந்திருக்காங்க தெரியுதா? எங்கூட படிச்ச தயாவும் அன்புமல்லியும்.. நம்ம கல்யாணத்துக்கு வந்தவங்க.. உனக்கு ஞாபகம் இருக்குதா?" என்றார் உரக்க.

"யாருயா நீ? அம்மாவை வல்லிமயினு கூப்பிடாம கனகம் முல்லைனுட்டு" என்ற நாற்காலிக்காரர் ராஜசிங்கத்தைப் பார்த்துவிட்டு, "ஓ.. நீங்களா சார்.. மன்னிச்சுருங்க.." என்றபடி எழுந்தார். "அப்போ நாங்க போயிட்டு வரோம் மாதா வல்லிமயி.." என்று பணிவுடன் வெளியேறினர்.

நாற்காலியைத் திருப்பாமல் முகத்தை மட்டும் திருப்பிப் பார்த்த வல்லிமயி புன்னகைத்தார்.

பேயைக்கூட தனிமையில் சந்திக்கத் துணிந்த அன்புமல்லி ஒரு கணம் திடுக்கிட்டார். மாதா வல்லிமயினுடைய முகம் அத்தனை வெளுப்பு. கண்களில் மை. நெற்றியின் கணிசமான முப்பரிமாண பொட்டு கொஞ்சம் விட்டால் கீழே இறங்கி வந்து இவர்களை அடித்துவிடும் போலிருந்தது. மறுபடி புன்னகைத்து, "வரணும்" என்றார்.

தயா அன்புமல்லியின் பின்னே ஒளிந்துகொண்டு, "பயமா இருக்கு மல்லி.. ஓடிறலாம் வா" என்றார்.


(இன்னொரு பதிவில் முடியும்)



2012/10/27

மைத் மை டியர்

3


◄◄   1   2



    கோவில் வாசலில் நின்று கொண்டிருந்தவர்களை சிங்காரமும் ரகுவும் தொலைவிலிருந்து அளந்தனர். மைத்தைப் பார்த்ததும் ரகுவின் இதயத்துடிப்பு எழுநூறைத் தொட்டது. ஆரவாரித்த ரகுவை அடக்கினான் சிங்காரம். "தம்பி.. நீங்க இப்ப என் கூட வரக்கூடாது, நீங்க செய்ய வேண்டியது கவனமிருக்கட்டும்.. நானே போய் அந்தப் பொண்ணோட பேசுறேன்.."

"பாத்து பேசுங்க சிங்காரம்.. கொஞ்சம் வல்லினமா பேசினாலும் அவ காது நோகும்.." என்றபடி ரகு வேறு திசையில் கோவிலைச் சுற்றி நடக்கத் தொடங்கினான்.

    "அங்கிள் எங்கே சிங்காரம்? என்னை வரச்சொன்னாரே? மணி மூணாவுது, கோவில் திறக்க இன்னும் ஒரு மணியாவது ஆகும்.. இப்படிக் கழுத்தறுக்குறாரே?" என்றாள் மைத், அருகில் வந்த சிங்காரத்திடம்.

"வருவாரும்மா.. அவரு கார் டைர் பஞ்சராயிடுச்சு.. அதான் உங்களை வெயிட் பண்ணச் சொல்லியனுப்பினாரு.. கூல் ட்ரிங்ஸ் எதுனா வாங்யாரட்டுமா?"

"வேணாம்..."

"அப்ப இங்கயே இருங்க.. நான் போய் ஒரு சோடா குடிச்சுட்டு வரேன்.. தாகம் தாங்கலே" என்ற சிங்காரம் அவசரமாகக் கிளம்பி கோவிலின் பின்புறம் பீச் ரோட் பக்கமாக நடக்கத் தொடங்கினான்.

    ன்புமல்லி தன்னைத் தனியாக வரும்படி மைத் மூலம் சொல்லியனுப்பியதன் காரணத்தை அசைபோட்ட வாசு, பீச் ரோடில் இறங்கிக் கோவிலை நோக்கி நம்பிக்கையோடு நடந்தான். ஒருவேளை தன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்லிவிட்டால் அன்புமல்லியை என்ன செய்யலாம் என்றுத் தயங்கி யோசித்தான். கையை உடைத்து வயிற்றை நசுக்குவதா அல்லது முதுகை உடைத்துப் பிறகு மூக்கை நசுக்குவதா என்று வரிசையைத் தீர்மானிக்க முடியாமல் தவித்தான். தவிப்பைக் குறைக்க அவசரமாகக் காற்றில் தை க்வான் தோ பழகினான். ஒரு குத்துக்கு இரண்டு பல் விழுந்தால் முப்பத்திரண்டு பல் விழ எத்தனைக் குத்துக்கள் தேவைப்படும் என்ற உபரிக் கணக்கு மனதில் தோன்ற, கைவசம் கேல்குலேடர் இல்லாமல் மிகவும் நொந்து போனான். அமைதிப்படுத்திக் கொள்ள மணல் தரையில் தண்டால் எடுக்கத் தொடங்கினான். பதினேழாவது முறையாக எழும் போது முகத்தில் ஈரமாக ஏதோ உணர்ந்து தலை நிமிர்ந்தான். முகத்திற்கு நேராக முகம் வைத்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தது ஒரு கரிய நாய். சங்கத்தில் பார்த்த அதே தினேஷ்குமார்.

அடுத்து நிகழ்ந்தவற்றை விவரிக்கப் புலவரின் தமிழ் போதாது.

நரன் ஐயோ எனவில்லை, நாய் வள் எனவில்லை. வாசுவும் நோக்க வைரவரும் நோக்க அங்கே வாய்ச்சொற்கள் பலனிலாது போயின.

கம்பன் வாசுவைப் பார்த்திருந்தால் 'எடுத்தது இற்றது' என்றெல்லாம் எழுதாமல், 'பல் கண்டனன் பாதம் கண்டனன் அன்ன' என்று வாசுவின் வேகத்துக்கு மாற்றுக் குறைவாகவே ராமனின் வில்முறித் திறனை வர்ணித்திருப்பார். புறநானூற்றுப் பட்டினிப் புலவர் யாராவது பார்த்திருந்தால், 'பரியுட னிரியும மரியதுஞ் சரியுமே' என்று புரியும்படி விவரமாகப் பாடியிருப்பார். கண்ணதாசன் பார்த்திருந்தால் 'வாசுக்கென்ன வேலி' என்று பாடியிருப்பார், அல்லது 'கண்ணெதிரே தோன்றிநாய் கடுமுகத்தைக் காட்டிநாய்' என்றும் பாடியிருக்கக் கூடும். வைரமுத்து பார்த்திருந்தால் 'கண்கள் கோப ஜன்னல், கால்கள் ராஜ மின்னல்' என்று பாடியிருப்பார். வாலி பார்த்திருந்தால் 'இட்டாலக்கடி உய்!' என்று பாடியிருப்பார்.

கற்பனைக்குக் கட்டுப்படாதவனாக ஓடத் தொடங்கினான் வாசு. இதைச் சற்றும் எதிர்பாராத நாய், சுதாரித்துப் பாய்ந்து அவனை அதே வேகத்தில் தொடர்ந்தது. ஒரு கணம் நாய் அவனை நெருங்கிக் காலைக் கவ்விடும் போலத் தோன்றும். மறு கணம் வாசு உயரத்தாண்டல் நீளத்தாண்டல் சாதனைகளை வரிசையாக முறியடித்து வாகை சூடுவான். அவன் நோக்கும் காலை நோக்கும் நாயும், நோக்காக்கால் நைசாய் உறுமிப் பாயும்.

பார்த்துக் கொண்டிருந்தப் பொதுஜனம் உற்சாகமடைந்தது. கைகள் தட்டின. உதடுகள் விசிலடித்தன. குதிரைப் பந்தயம் பழகிய ஒரு சிலக் கண்கள், 'இது போட்டோ பினிஷ்' என்று பதட்டப்பட்டன. ஒரு தாடி, 'வெறிநாய் துரத்தினா வடிவேலும் உசைன் போல்டு தான்' என்று சொறிவுக்கிடையே தத்துவம் பேசியது. அருகிலிருந்தக் காக்கிச்சட்டை, 'இதை என் ஆட்டோல எயிதிக்கவா சார்?' என்றது. ஒரு புடவை அருகிலிருந்த சல்வாரிடம், 'இந்த நாய் வாடகைக்குக் கிடைக்குமா தெரியலியே? தீபாவளிக்கு ஊர்லந்து மாமியார் வராங்க' என்று அக்கறையுடன் விசாரித்தது. ஒரு லுங்கி மற்ற லுங்கிகளிடம் 'இன்னிக்கு அந்தாளு கோயிந்தா.. இன்னான்ற நீ?.. கட்னா வெட்டு ராஜா.. கட்னா மூணுக்கு ஒண்ணு.. வெட்னா ஒண்ணுக்கு மூணு.. வை ராஜா வை' என்று உற்சாகமாக ஐந்து ரூபாய் எறிந்து பெட் கட்டியது.

இடையே, திடீரென்றுக் குறுக்கே வந்த நபர் மீது இடித்து விழுந்து புரண்டு எழுந்தான் வாசு. நபரைப் பார்த்ததும் நாயும் நின்றது.

"என்ன தம்பி, இப்படி ஓடியாறீங்க?" என்றார் நபர்.

"யோவ் சிங்காரம்.. நீதான்யா எனக்கு எமன்.. எருமைக்குப் பதிலா நாயோடு சுத்துறே.. நாய்க்கரடி என்னைத் துரத்துறதை இத்தனை நேரம் பாத்துட்டா இருந்தே? உன்னை முதல்ல சுளுக்கெடுக்கணும்"

"ஐயையோ தம்பி.. தெரியாதுங்களே.. மல்லி ஐயாவோட கார் டைரு பஞ்சராயிடுச்சுங்க.. வர லேட்டாவும்னு உங்க கிட்டேயும் மைதிலியம்மா கிட்டயும் சொல்லச் சொன்னாரு.. அவங்க கோவில்ல இருந்தாங்க.. போய் சொல்லிட்டு வரதுக்குள்ள நாய் ஓடிருச்சுங்க.. அதை எப்படியோ தெரிஞ்சுகிட்டு உங்களைத் துரத்தவிட்டு என் கிட்டே கொணாந்து சேர்த்ததுக்கு ரொம்ப நன்றிங்க. கஸ்டமரோட நாய்.."

"இப்ப மட்டும் ஏன்யா கரடி ரெண்டடி விட்டு செலயாட்டம் நிக்குது?"

"வசியம் தம்பி, வசியம்"

"வசியமா?"

"தம்பி.. உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்றேன். சிறுவசியம் பெருவசியம்னு ரெண்டு இருக்குங்க. நாய் துரத்துதுனு வைங்க. உடனே ஓடக்கூடாது. அதுக்குப் பதிலா நின்னு நிதானமா நாயுருவி இலை, எருக்க இலை ரெண்டையும் கசக்கி நாய் முகத்தில எறிஞ்சீங்கன்னா அந்த வாடையில நாய் அடியெடுக்க முடியாம மயங்கிரும். இது சிறுவசியம்"

"யோவ் சிங்காரம்.. உனக்கு வெங்காயம்னு பேர் வச்சிருக்கணும்யா. இந்த நாயோட பல்லைப் பாத்த பிறகும் பச்சிலை மூலிகைனு பேசுவியாய்யா நீ? அடங்கிடுமோனு உயிரையும் அவுந்துருமோனு பேன்டையும் பிடிச்சுக்கிட்டு நாய்க்குப் பயந்து நானே பேயாட்டம் ஓடுறப்ப, எருக்க இலைக்கு எங்கய்யா போவேன்? நாயுருவின்னா என்னான்னே தெரியாதேய்யா? நின்னு ரெண்டுத்தையும் கசக்கி எறியுற மட்டும், நாய் என்னா பாத்துட்டா நிக்கும்? அப்படியே நீ சொல்றாப்புல கசக்குனா, அந்த வாடையில நானே மயக்கம் போட்டுருவேன்யா. என்னய்யா ரீல் வுடுறே? ஐடியா குடுக்குற மூஞ்சியைப் பாரு. சரி, அது என்னா பெரு வசியம்?"

"இதாங்க" என்று சிங்காரம் தன் பையிலிருந்து ஒரு கல்லை எடுத்தான். "தம்பி.. நாய்க்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? நாம நாயைக் கல்லால அடிக்கலாம். ஆனா நாய் நம்மளைக் கல்லால அடிக்க முடியாது. நாய் பல்லைக் காட்டினா நாம பயந்துடறோம். நாம கல்லைக் காட்டினா நாய் பயந்துரும். இந்தாங்க, சும்மா ட்ரை பண்ணுங்க" என்று வாசுவிடம் கல்லைக் கொடுத்தான் சிங்காரம். "சும்மா ஓங்குங்க சொல்றேன்.."

வாசு கல்லெறிவது போல் கை ஓங்கியதும், தினேஷ்குமார் முனகிப் பயத்துடன் அடங்கி உட்கார்ந்தது. "சிங்காரம்! பிரமாதம்யா.. என்னா தத்துவம், என்னா உண்மை, என்னா டெக்நிக்! கல்லைக் காட்டி ஓங்கினதும் அடங்கிடுச்சே? இதான் பெரு வசியமா? தெரியாமப் போச்சே? நீ பெரிய ஆள்யா"

"இதுக்கும் கேக்கலின்னா குறி வச்சு கல்லை எறிஞ்சுருங்க.. ஒண்ணு அடங்கும், இல்லே ஓடிறும். கவலையே படாதீங்க. கடவுள் ஏன் கல்லானான்? நாயை அடிக்கத்தான்" என்றபடி தன் பையிலிருந்து இரண்டு கற்களை எடுத்து வாசுவிடம் கொடுத்தான் சிங்காரம். "கவனம் தம்பி. ரொம்ப நாளா தேச்சு வழவழப்பா வச்சிருக்கேன். என் கண்ணு ரெண்டையும் உங்க கிட்டே ஒப்படைக்கிறாப்புல.. இந்தாங்க.. கைவசம் வச்சுக்குங்க. அவசியமுன்னா ஒரு கல்லை மூக்குலயும், மத்ததைக் கால்லயும் பாத்து அடிங்க. இதப் பாத்தீங்களா..? இது மூக்குல அடிக்க. இந்தா பாருங்க, தட்டையா இருக்குற இந்தக் கல்லு, கால்ல அடிக்கறதுக்காவத் தேச்சதுங்க. வீசினமுன்னா நாலு கால்ல எதுனா ஒரு கால்லயாச்சும் படுங்க.. ஆண்டவன் நாய்க்கு நாலு கால் படைச்சதும் அதுக்காவத்தான்.. இந்தாங்க, பிடிங்க. நீங்க தைரியமா கோவிலாண்ட போய் மைத்தம்மாவோட பேசிட்டிருங்க.. நான் ஐயா வராரானு பாத்துட்டிருக்கேன்"

"சிங்காரம்.. சிங்காரம்.. உன்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்ட இந்தப்பாவியை மன்னிச்சுடு சிங்காரம். நீ ஒப்பற்ற ஞானி சிங்காரம்.." என்று கண்களில் நீர் முட்ட, கற்களை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டான் வாசு. கைக்கு ஒரு கல்லாக எடுத்து இரண்டு கைகளையும் ஓங்கினான். கையிலிருந்தக் கற்களைப் பார்த்த தினேஷ்குமார், தன் வாலைச் சுருட்டி கால் கட்டி முடங்கிக் கெஞ்சலாய் முனகியது. மறுமுறை உயர்த்த, ஏறக்குறைய அழுதது. கற்களைப் பையில் போட்டு, புது நம்பிக்கையுடன் கோவிலை நோக்கி நடந்தான் வாசு.

    கோயிலருகே மைத்தைக் காணாது சுற்றுமுற்றும் பார்த்த வாசு, தொலைவில் அலையருகே மைத் தனியாக அமர்ந்திருப்பதைக் கவனித்தான். வேகமாக அருகே சென்று "மைத்.. உங்கிட்டே முக்கியமா பேசணும்" என்றான். திரும்பியவள் கண்களில் வழக்கமான காதலைக் காணாமல் கோபத்தைக் கண்டவன் நிதானித்தான். "ஏன் ஒரு மாதிரியா இருக்கே?"

"வாசு" என்று அவனைத் தழுவிக் கொண்டாள். பிறகு விலகி, "உனக்குக் குழந்தைகள் பிடிக்குமா?" என்றாள்.

"ஏன் கேக்குறே?" என்றான் வாசு திகைப்புடன்.

மைத் அப்படிக் கேட்டதன் காரணம் வாசுவுக்குத் தெரியாது. அவன் தினேஷ்குமாருடன் ஓடிக்கொண்டிருந்த போது நடந்து முடிந்த நிகழ்ச்சி.

    வசரமாக வந்த ஜே, தனியாக நின்றுகொண்டிருந்த மைத்தை நெருங்கி "என்ன மைத், எதுக்காக வரச்சொன்னே?" என்றான்.

"நான் வரச்சொல்லலே ஜே, என் அங்கிள் தான் வரச்சொன்னாரு.. அவரைப் பாத்துப் பேசினே இல்லே?"

"ம்" என்றான். "எங்கே அந்த ஆளு? என்ன சொன்னாரு உங்கிட்டே?"

"டயர் பஞ்சராயிடுச்சுனு வர லேட்டாகுமாம். சிங்காரம் இப்பத்தான் சொல்லிட்டு போனாரு.."

"மைத்.. நானே உங்கூட பேசணும்.. அங்க வா.. அலையோரமா மேட்டுல உக்காந்து பேசுவோம்" என்று அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.

இருபது அடி நடந்திருப்பார்கள். திடீரென்று ஒரு சிறுவன் "அப்பா! அப்பா!" என்று கூவிக்கொண்டு அவர்களை நோக்கி ஓடி வந்தான். ஏதும் புரியாமல் இருவரும் திரும்பிப் பார்க்க, ஓடி வந்தச் சிறுவன் சட்டென்று ஜேயைக் கட்டிக் கொண்டான். "அப்பா, என்னை விட்டு எங்கப்பா போனே? இதோ வரேன்னு சொல்லிட்டுப் போனியே?" என்றான்.

"என்னது? அப்பாவா? யார் அப்பா? யாருக்கப்பா? யாருப்பா நீ? விடுப்பா" என்று ஜே வலுக்கட்டாயமாகக் கால்களை உதறியதில் கீழே விழுந்தான் சிறுவன். எழுந்து மறுபடி அணுகினான். "அப்பா!"

"ஏய்.. யார்பா நீ?" என்று ஜே எரிச்சலுடன் சிறுவனைத் தடுத்தான். அக்கம்பக்கம் பார்த்தான். யாருமில்லை. "அப்பா.. அப்பா!" என்று குதித்தான் சிறுவன். மைத்தைச் சுட்டி, "இது யாருப்பா? புது அம்மாவா?" என்றான். "புது அம்மா.. ஐ.." என்று மைத்தைக் கட்டிக் கொண்டான். "நீ ரொம்ப அழகா இருக்கே, புது அம்மா"

"அடச்சீ அவளை விடுறா.." என்றான் ஜே.

"இரு ஜே. சின்னப் பையன் கிட்டே எரிஞ்சு விழாதே. தம்பி, யாருப்பா நீ?" என்றாள் மைத் அமைதியாக.

"என்னைப் பாத்தா தம்பி மாதிரியா இருக்கு? எம்பேரு மணி. எனக்குப் பத்து வயசு. இது எங்கப்பா. பீச்சுக்குக் கூட்டிவந்தாரு. இதோ வரேனு சொல்லிட்டு ஓடிட்டாரு"

"பல்லை உடைப்பேன்.. யாருடா அப்பா?"

"நீ தான். நீ தான் அப்பா"

"ஐயையோ.. இந்த வயசுலயே இப்படி அடாவடி பண்றானே? மைத்.. இந்தப் பையனை நான் பார்த்ததே இல்லை.."

"நான் ஏன் பொய் சொல்லணும்? பத்து வயசுப் பச்சைப் பிள்ளைக்கு எங்கயாவது அப்பாவைத் தெரியாம இருக்குமா? நீங்களே சொல்லுங்க புது அம்மா"

"பாத்தியா பாத்தியா.. இப்ப உன்னை அம்மான்றான்.. விடாதே இவனை"

மைத் ஜேயை ஆழமாகப் பார்த்தாள். ஜே பதறினான். "மைத்.. சத்தியமா எனக்குத் தெரியாது. அடப்பாவி.. டேய். டேய்.. யாரு பெத்த பிள்ளையோ நீ? பத்து வயசுலயே இப்படி பாதகனா இருக்கியே"

"அப்பா.. என்னை விட்டுப் போகாதப்பா.. தங்கச்சி அழுவுதுபா"

"என்ன.. தங்கச்சியா?" என்றாள் மைத்.

"ஐயோ, அது வேறேயா?" என்றான் ஜே.

"ரெண்டு தங்கச்சி. ரெட்டையாக்கும். ஷீலா மாலா"

"யாரு.. என்ன.. ரெட்டைத் தங்கச்சியா? டேய்.. டேய்.. எத்தினி பேர்டா கெளம்பியிருக்கீங்க?" என்று ஜே குதித்தான்.

"எங்கப்பா உன் தங்கச்சிங்க?" என்றாள் மைத் கனிவுடன்.

"ஷீலா ஆஸ்பத்திரில இருக்கா. நேத்து அப்பா கோவத்துல அவளை அடிச்சுட்டாரு. மண்டை வீங்கியிருக்கு. இப்பத்தான் டாக்டர் வீட்டுக்குக் கூட்டிப்போனாரு இந்தப்பா.."

"என்ன.. இந்தப்பாவா? பல்லை உடைப்பேன்"

"அதான் நேத்து ஷீலாவோட மண்டையை உடைச்சுட்டியேப்பா.. இன்னிக்கு என் பல்லை உடைக்கப் போறியா? ஏற்கனவே எனக்கு பல்லு கம்மி.."

"ஆ! இப்படிப் பேசுறானே? ஐயையோ.. எனக்கு எதுவுமே தெரியாது. சனியன். மூஞ்சைப் பாரு"

"உன் இன்னொரு தங்கை மாலா எங்கேப்பா?" என்றாள் மைத் அன்புடன்.

"புது அம்மா. உன் குரல் தேனாட்டம் இருக்கு.. நீ ரொம்ப நல்லவ"

"டேய்.. டேய்.. நிறுத்துடா. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுடா சில்லறை. எங்கடா உன் தங்கை? கதை வுடறான்"

"மாலா.." என்று பையன் கூச்சலிட, அண்மையில் இருந்த ஒரு சில பெண்கள் குழம்பித் திரும்பிப் பார்த்தனர். பையன் தொடர்ந்து கூப்பிட்டான். சில நிமிடங்களில் ஒரு சிறு பெண் கோவிலருகிலிருந்து ஓடி வந்தாள். ஏழெட்டு வயதிருக்கும். "அப்பா.. அப்பா" என்று ஜேயைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் குதித்தாள். "எங்கப்பா போனே? இதோ வரதா சொல்லிட்டு எங்களை அந்தக் கடை வாசல்ல.. எனக்குப் பயமா இருந்துச்சுபா"

"என்னங்கடா.. குடும்பத்தோட கிளம்பிட்டீங்களா? யாருடீ அப்பா?"

"நீ தான். நீ தான் அப்பா"

"சனியங்களா.. எனக்குக் குழந்தைங்கள்னாலே ஆவாது.. அதுவும் உங்களை மாதிரி ஊரை ஏமாத்துற.." என்ற ஜேயின் கால்களைக் கட்டிக் கொண்டாள் மாலா. "அப்பா!" என்று தன் மூக்கை உறிந்து ஜேயின் பேன்டில் துடைத்தாள்.

"ஐயையோ.. புதுப் பேன்ட்ல சளியைத் தடவுதே சனியன்.. எந்திரிடி.. யாருடி நீ?"

"ஜே.. என்ன இது?" என்றாள் மைத் கடுப்புடன்.

"ஐயையோ மைத்.. இந்த சனியனுங்க யாருனே எனக்குத் தெரியாது. இதுக்குத்தான் நான் குழந்தைங்களே வேணாம்னு இருக்கேன். குழந்தைங்களா இதுங்க... ஏய்.. அரை டிகெட்.. நவுறுடி.. உங்கண்ணனை இழுத்துக்கிட்டு எங்கனா ஓடு.. இந்தா அஞ்சு ரூவா.. ஐஸ்க்ரீம் வாங்கித் தின்னுங்க போங்க.. ஆளை விடுங்க.."

"அப்பான்னா அப்பா தான்" என்று ஐந்து ரூபாயைப் பிடுங்கிக் கொண்டான் பையன்.

அதற்குள் ஒரு ஜீன்ஸ் பெண் வேகமாக ஓடிவந்தாள். ஜே, மைத் இருவரையும் கும்பிட்டாள். "மன்னிச்சுருங்க.. இதுங்க ரெண்டும் என் பிள்ளைங்க. சினிமால நடிக்கிறாங்க.. குழந்தைங்களை வெறுக்குற அப்பாவோட வசனம் பேசணும்.. டயலாக் ட்யூடர் இப்படி தற்செயலா யாரையாவதுப் பார்த்துப் பேசினா தைரியமா இயல்பா நடிக்க வரும்ணு ஐடியா குடுத்தாரு.. தொந்தரவுக்கு மன்னிச்சுருங்க" என்றபடி இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனார்.

ஜே நிம்மதியுடன் "அஞ்சு ரூவாய சுட்டுகிட்டுப் போயிட்டான் பாத்தியா மைத்? எப்படியெல்லாம் கிளம்பிடறாங்க நாட்டுல.." என்றான்.

மைத் பதில் சொல்லவில்லை. எதுவும் பேசாமல் மௌனமாக நடந்தாள்.

"என்ன மைத்.. பேச மாட்டேங்குறே" என்று பத்து முறை கேட்டதும், மைத் வெடித்தாள். "குழந்தைங்க பிடிக்காதுனு சொன்னியே?"

"ஆமாம்.. என்ன இப்ப?"

"என்ன இப்பவா? உன் உண்மையான குணம் தெரிஞ்சிடுச்சு. குழந்தைங்க பிடிக்காதுன்றத ஏன் மறைச்சே? பச்சப் பிள்ளங்களை சனியன்னு திட்டறப்பவே நினைச்சேன்"

"சனியனைச் சனியன்னு திட்டாம எப்படித் திட்டுறது மைத்? அந்தக் குழந்தைங்களைத் திட்டினதால என் குணம் மோசமாயிருமா? நீ கூடத்தான் என் கிட்டே உண்மையை மறைச்சே.."

"என்ன சொல்றே?" மைத் தீர்க்கமானாள்.

"ரெண்டு பேரைக் காதலிக்கிற உண்மையை"

"அதனால?"

"ஒரு பொண்ணு.."

"ஸ்டாப் இட். என்ன சொன்னே? ஒரு பொண்ணா..? பொண்ணுன்னா அதெல்லாம் கூடாதா? ஆம்பிளங்கனா பரவாயில்லையா? ஷேம் ஆன் யூ" என்று பொரிந்தாள். "நீ சொல்றது சரிதான். உன்னையும் சேத்து காதலிச்சிருக்கக் கூடாது. ஐ டோன்ட் லவ் யூ. கெட் லாஸ்ட்"

"ஐயோ மைத்.."

"போதும் ஜே. எப்படியிருந்தாலும் நாளைக்கு இது நமக்குப் பிரச்சினையா முடிஞ்சிருக்கும். உனக்குக் குழந்தைங்களையும் பிடிக்கலே. பொண்ணுன்னாலும் கீழ்த்தட்டுல பாக்குறே. ப்லீஸ். லீவ் மீ" என்று வேகமாக அலைகளைப் பார்த்து நடந்தாள். சிறிது உலாத்திவிட்டு ஒரு மேட்டில் உட்கார்ந்தபடி அலைகளைக் கவனித்து சற்று அடங்கினாள்.

    "மைத்.. உன்னைத்தான். கேக்குறேன் இல்லே? ஏன் குழந்தைங்க பிடிக்குமானு கேட்டே?" என்று வாசு அவளை சற்றே உலுக்க, "ஒண்ணுமில்லே" என்றாள்.

"மைத்.. உங்கிட்டே ஒண்ணு கேக்கணும்.. நீ என்னையும் ஜேயையும்.." என்றபடி அவளருகே அமர்ந்தான்.

"ஓவர். ஜேயைப் பத்தி இனிமே பேசாதே" என்றாள் மைத். வாசுவின் கைகளை இழுத்துக் கொண்டாள். "எவ்வளவோ கனவுகளைத் தேக்கி வச்சிருந்தேன். ரெண்டு கணவன், நாலு குழந்தைங்க, ஆளுக்கு ஒரு நாய்.. ஹ்ம்ம். இப்ப ஒரு கணவன்னு ஆயிடுச்சு. அதான், உனக்குக் குழந்தைங்க பிடிக்குமானு கேட்டேன்"

வாசு குளிர்ந்தான். இன்றைக்கு எல்லாம் கனிந்து வருவதாக உணர்ந்தான். முதலில் நாய் வசியம். இப்போது மைத் வசியம். குளிர்ச்சியில் மைத் கேட்டதைச் சரியாகக் கவனிக்கவில்லை. மைத் பேச்சுவாக்கில் ஏதோ நாய் என்றது போல் தோன்றியது. "குழந்தைங்க தானே? அதுக்கென்ன அவசரம்?" என்றான்.

"ரைட். கல்யாணத்துக்கப்புறம் குழந்தைங்க. இப்ப முதல்ல நாய் வளப்போம். ஐ லைக் இட்" என்றாள். அவன் கைகளைப் பிணைத்துக் கொண்டாள். "நல்ல சகுனம் வாசு. நாய்னதும் பாரேன்.."

பார்த்தான். அவர்களுக்கு பத்தடி தொலைவில் அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த கறுப்பு நாய் நின்று இவர்களைப் பார்த்தது. பல்லைக் காட்டியது. தன்னைக் கிண்டல் செய்துச் சிரித்தது போல் பட்டது வாசுவுக்கு. "தினேஷ்குமார்!" என்றான் உரக்க.

"யாரு?"

"உனக்குத் தெரியாது" என்று கைகளை விடுவிக்க முயன்றான் வாசு. "ஏன் கையை இழுக்குறே?" என்றாள் மைத்.

தினேஷ்குமார் நெருங்கியது. "உர்ர்" என்றது.

"இந்த நாய் நம்மளைக் குதறிடும் மைத். கையை விடு" என்று உதறினான் வாசு. "ஆனா நீ பயப்படாதே. நானிருக்கேன். எனக்கு நாய் வசியம் தெரியும்" என்று பையிலிருந்தக் கற்களை எடுத்து ஓங்கினான்.

"வாசு.. நிறுத்து.. வாயில்லாப் பிராணியைக் கல்லால அடிக்காதே.."

"இதா வாயில்லாப் பிராணி? இதோட பல்லைப் பாத்துட்டுப் பேசு" என்று இன்னும் ஓங்கினான்.

நாய் நிற்கவில்லை. வாலை ஆட்டியபடி வேகமாக அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தது.

ஒரு கல்லை நாயின் முகத்தைக் குறி வைத்து வீசினான் வாசு. கல் குறி தவறி முகத்தோரமாக உரசி விழுந்தது. லேசாக முனகிய நாய் வாலை ஆட்டியபடி இன்னும் நெருங்கியது. அடுத்தக் கல்லை எடுத்தான். காலுக்கு குறி வைத்தான்.

"வாலை ஆட்டுது வாசு.. ஸ்டாப் இட். என்ன இது? பாகெட் நிறையக் கல்லோட ரெடியா வந்திருக்கே? நாய் அடிக்குறது வழக்கமோ?"

"உனக்கு எதுவும் தெரியாது மைத். இந்த தினேஷ்குமார் சாதாரண பிராணி இல்லே.." என்று கால்களைக் குறிபார்த்து வீசினான். கல் சரியாக அதன் இடது கால்களில் பட்டுத் தெறிக்க, நாய் வலியுடன் குரைத்துத் தடுமாறி விழுந்தது. பிறகு மெள்ள எழுந்து இருவரையும் பார்த்தது. அடிபட்ட ஊனத்துடன் மெள்ளத் தேய்த்து நடந்து அவர்களருகே வந்தது. மைத்தை நெருங்கி அவள் கைகளை முகர்ந்து லேசாக நக்கியது. வாசுவை ஏக்கத்துடன் பார்த்தது.

"ஏய்.. ஓடு" என்றான் வாசு பயத்துடன்.

நாய் மறுபடி மைத்தை நக்கிவிட்டு, தடுமாறித் தடுமாறி அலைகள் அருகே சென்றது. ஒரு முறை திரும்பி அவர்களைப் பார்த்தது. புரண்டு விழுந்தது.

மைத் துடித்து எழுந்தாள். "வாசு.. யூ ப்ரூட்"

"ஐயையோ.. மைத்.. இது அத்தனையும் நடிப்பு. தேவர் பிலிம்ஸ்ல இருந்த நாய். இப்ப படம் எடுக்குறதில்லேன்றதுனால இப்படி பீச்ல சுத்திட்டு இருக்கு. சத்தியமா சொல்றேன், என்னைத் துரத்தியெடுத்த நாய்.."

"சே! என்ன மனுசன் நீ? ஆதரவில்லாத உயிரை இப்படித் துன்பப் படுத்துறியே?"

"ஐயோ மைத்.. ஆதரவாவது மண்ணாவது.. சொன்னாக் கேளு.. ஆஸ்காருக்குப் போக வேண்டிய நாய் இது.. நம்பாதே.. எல்லாம் வேஷம்". சிங்காரத்தை நினைத்துக் கொண்டான். "டேய் வெங்காயம்.. உன்னை என்ன செய்யுறேன் பாரு"

"யாரு வெங்காயம்?" என்று மைத் கேட்டு முடிப்பதற்குள் ஒரு வாலிபன் வேகமாக வந்து, கீழே கிடந்த நாயைக் குழந்தை போல் இரு கையாலும் அள்ளி எடுத்தான். அலையில் இறங்கி நாயின் முகத்தில் நீர் தெளித்தான். வெளியே கொண்டு வந்து கிடத்தித் துடித்து அழுதான். "ஐயோ.. ஒரு நிமிசம் உன்னை விட்டுப் போனா இப்படி அடிபட்டு கிடக்கிறியே!" என்று புலம்பினான். "ஏன் சார், கல்லாலயா அடிச்சீங்க? பெரிய கல்லா சார்?" என்றான் வாசுவிடம்.

"யோவ்.. என்னைத் துரத்தி எடுத்துச்சுயா உன்னோட நாய். அப்புறம் என் மேலே பாயுற மாதிரி வரப்ப நான் என்னய்யா செய்ய முடியும்? வேணும்னா ஐம்பது ரூவா நஷ்ட ஈடு குடுத்துடறேன்.. இந்தா"

மைத் அவனை நெருங்கி, "மிஸ்டர்.. ரொம்ப சாரி.. இது என் தப்பு. உடனே நாயை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போங்க.. என்ன செலவானாலும்.." என்று அவனைப் பார்த்தாள். "உங்களை எங்கியோ.."

"நேரமில்லே மேடம்.. நான் உடனே ஆஸ்பத்திரிக்குப் போகணும்.. சார்.. உங்க தாராள மனசுக்கு ரொம்ப நன்றி. என்னோட நாய் குடுத்தத் தொந்தரவுக்கு மன்னிச்சுருங்க" என்று நாயை எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினான். நாலடி ஓடிவிட்டுத் திரும்பி வந்து வாசுவின் கையிலிருந்த ஐம்பது ரூபாய் நோட்டை உருவிக்கொண்டு மீண்டும் ஓடினான்.

"விட்டது சனி.. வா மைத்" என்றான் வாசு.

மைத் அவன் கைகளை உதறினாள். "நாய் மேலே கல்லெறிய உனக்கு வெட்கமாயில்லே வாசு?"

"மைத்.. விவரம் தெரியாமப் பேசாதே"

"எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறேன். கைல கல்லோட அலையுறதைப் பாத்தாலே தெரியுதே விவரம்? எங்கெங்கே நாய் கிடைக்கும் அடிக்கலாம்னு அலைவே போலிருக்கு. உன் முகத்திலயே இனி முழிக்க மாட்டேன்.." என்று நடந்தாள்.

"யா? உன்னைக் கல்யாணம் கட்டிக்கிட்டு அரை டஜன் நாயுங்களுக்குத் தினம் பயந்துத் தண்டம் அழுவணும்னு எனக்கு மட்டும் தலையெழுத்தா? நானும் உன் முகத்தில முழிக்கலே" என்று வேகமாக எதிர் திசையில் நடந்தான்.

    திரே உட்கார்ந்திருந்த மைத்தை அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் அன்புமல்லி.

"போனாப் போவுது விடு மைதிலி. எனக்கு அப்பவே தெரியும் அந்தப் பசங்களைப் பத்தி. ஆனா நீ காதலிக்கறதா சொன்னதால.."

"அங்கிள். நீங்க சொன்னது ரொம்ப சரி. இனிமே யாரையுமே காதலிக்கப் போறதில்லே. ஆம்பிளைங்க எல்லாருமே ஏமாத்துக்காரங்க.."

"இப்படித்தான் என் மருமகன் ஒருத்தன் காதல் வேணாம்னு கவிதை எழுதிட்டிருந்தான்"

"என்ன அங்கிள், என் பிரச்சினைக்கு பதிலா கண்டவனைப் பத்திப் பேசுறீங்களே?"

"கண்டவன் இல்லம்மா, கபிலன். என் ஒண்ணு விட்ட அக்கா பையன்.. அவன் கதை சொல்லியிருக்கேனோ?"

"என் கதையே எப்படி முடியும்னு தெரியலே, இதுல கண்டவன்.."

"கபிலன்மா கபிலன்"

"அங்கிள்.. காதல்ன்றது இனிமே என் அகராதியிலயே கிடையாது" என்று மைத் சொல்லி முடிக்கவும், சிங்காரம் ஒரு வாலிபனுடன் அருகே வரவும் சரியாக இருந்தது.

வாலிபன் நேராக மைத்தைப் பார்த்தான். படபடவென்றுப் பேசினான். "மேடம்.. சாரி, அவசரமா ஓட வேண்டியதாப் போச்சு. என்னோட நாய்க்கு என்ன ஆச்சோனு ஒரே பயம், அதான். இப்ப ஒண்ணுமில்லேனு வெட் சொல்லிட்டாரு. கால்ல லேசாக் கட்டு போட்டிருக்காரு. ரெண்டு நாள்ல சரியாயிடும். உங்களுக்கும் உங்க ஹஸ்பென்டுக்கும் - எங்கே அவர் - தொந்தரவு கொடுத்ததுக்கு மன்னிச்சுருங்க. அதைச் சொல்லத்தான் வந்தேன்"

"இவளுக்கு இன்னும் கல்யாணம் ஆவலே" என்றார் அன்புமல்லி.

"ஓ.. அப்ப உங்களுக்கும் உங்க காதலருக்கும்.."

"ஹி இஸ் நாட் மை லவர் ப்ரென்ட ஆர் எனிதிங்" என்றாள் மைதிலி.

"ஓ.. அப்ப உங்களுக்கு.."

"தம்பி.. யாருப்பா நீ? சும்மா பேசிட்டிருக்கியே.. உக்காரு" என்றார் அன்புமல்லி.

"நன்றி சார். எம்பேரு ரகுராம். சுருக்கமா ரகுனு கூப்பிடுவாங்க. நீங்க மேடம்?"

"என் பேர் மைதிலி"

"என் பேர் அன்புமல்லி.. சுருக்கமா"

"இருக்கட்டும் சார். மேடம், உங்களைச் சுருக்கமா மைத்னு கூப்பிடவா?"

மைத் குளிர்ந்தாள். "இதுக்கு முன்னால் உங்களை.."

"பாத்திருக்கோம் மிஸ் மைத். காலைல உங்க பேரைக் கேட்டப்ப, அழகான குரல்ல, தேன் சொட்டச் சொட்டச் செருப்பு பிஞ்சிரும்னு சொன்னீங்க. ஆனா அது உன் பேரா இருக்காதுனு அப்பவே நெனச்சேன் மைத்"

சிரித்தாள். "உங்க நாய்க்கு அடிபட நானும் ஒரு காரணம்.. ப்லீஸ் என்னை மன்னிச்சுருங்க"

"நோ நோ. அப்படி நடக்கலின்னா ரகுராம்-மைதிலி சேர்ந்திருக்க முடியுமா? ஐ மீன் நாம இப்படி அறிமுகமாகியிருக்க முடியுமா? தட்ஸ் ஆல் ரைட். பேர் பொருத்தம் எப்படி? அட்டகாசமா இல்லே?"

"நாய்னா உங்களுக்குப் பிடிக்குமா?"

"மை டியர் மைத். எனக்கு உலகத்துல ரெண்டே ரெண்டு தான் பிடிக்கும். ஓகே, மேக் இட் மூணு. ஒண்ணு காதல். இன்னொண்ணு குழந்தைங்க. மூணாவது நாய். பொதுவா எல்லாமே ப்லூரலா வேணும் எனக்கு. பல குழந்தைகள். பல நாய்கள். ஆனா காதல் மட்டும் சிங்குலர். ஒரே காதல். உனக்கு எப்படி வசதி?"

"எனக்கும்" என்ற மைதிலி சிரித்தாள். "ரொம்ப விட்டா பேசுறீங்க ரகு"

"விட்டா ரொம்ப பேசுவான் போலிருக்கே.." என்று குறுக்கிட்டார் அன்புமல்லி. "தம்பி.. உங்க ஊர் எது? அப்பா அம்மா யாரு? என்ன படிச்சிருக்கீங்க? என்ன வேலை? சும்மா காதல் நாய்க்குட்டினு பட்டாசு வெடிச்சா எப்படி? என்னா விசயம்ன்றேன்.."

"ஓல்ட் மேன். ப்லீஸ் டோன்ட் பாதர்" என்ற ரகு, மைத்தின் கையைப் பிடித்து எழுப்பினான். "மைத். இனிமே என்னை ஒருமையில கூப்பிடு. நீங்கனு கூப்பிட்டா நெருக்கமா தோணலே. வாயேன், பேசிட்டே போவோம்?" என்று அவளுடன் நடந்தான். சற்றுத் தொலைவு நடந்ததும், தலையைத் திருப்பி அன்புமல்லிக்குக் கண்களால் நன்றி சொன்னான்.

சிங்காரம் டேபிளைச் சுத்தம் செய்து, "வேறெதும் வேணுமா சார்?" என்றான்.

"சிங்காரம்.. உனக்கு சிலை வைக்க யாராவது நன்கொடை சேக்குறாங்கனா சொல்லு.. நானே முழுச் செலவையும் எடுத்துக்குறேன்"

"உங்களுக்கு உதவ முடிஞ்சதே சந்தோசம்யா.."

"விவரமெல்லாம் நான் கேட்கப் போறதில்லே.. எத்தனை செலவாச்சு சொல்லு, மேலயே கொடுத்துடறேன்"

"நாய், சினிமா எக்ஸ்ட்ரா, குழந்தைங்க.. ஐயா.. நாளைக்குக் கணக்குப் போட்டுச் சொல்றேன்யா.. அவசரம் இல்லே"

"நல்லது சிங்காரம், நல்லது" என்ற அன்புமல்லி மெள்ள அகன்றார். காரை எடுக்கும் பொழுது ரகுவும் மைத்தும் நெருக்கமாக இன்னொரு கார் மேல் அமர்ந்திருப்பதைக் கவனித்தார். 'காதல் வாழ்க' என்று வாழ்த்தியபடி வெளியேறினார்.

முற்றும்.

2012/10/20

மைத் மை டியர்

2


◄◄   1



    த்து நிமிடங்களுக்கு முன்னால் நடந்தது அன்புமல்லிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

வேர்கடலைச் சங்கப் பார்க்கிங் தளத்தில் அனேகமாக எல்லா இடங்களிலும் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. நுழைவாயிலருகே இருந்த ஒரு இடத்தைப் பார்த்த இரண்டு சிவப்புக் கார்கள் ஒரே நேரத்தில் அந்த இடத்தை ஆக்கிரமிக்க முனைந்து லேசாக உராய்ந்து நின்றன. உள்ளிருந்து இறங்கிய இரண்டு வாலிபர்கள் முதல் வேலையாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். "நான் தான் முதலில் வந்தேன்" என்று வாதிட்டனர். சிவப்புச் சட்டைக்காரன் சற்றுத் தயங்கி, "ஏய்..நீ வாசு இல்லே?" என்றான். நீலச்சட்டை நிதானித்தான்.

"நெய்வேலி டௌன்ஷிப்..?" தொடர்ந்தான் சிவப்புச்சட்டை.

"ஆமாம்.."

"டேய்.. என்னைத் தெரியலே? ஜே..?"

"ஜே? மை காட்! ஜே! ஜோதிக்கா பையன்? பத்துப் பதினஞ்சு வருசம் இருக்கும்ல பார்த்து? சாரி, அடையாளமே தெரியலேடா, எப்படி இருக்கே?"

ஒருவரையொருவர் அரைகுறையாகத் தழுவி விலகினர். "சாரி.. நான் பேக் பண்ணிடறேன்.. நீ எடுத்துக்க இந்த இடத்தை" என்றான் வாசு.

"நோ.. நோ.. நீ தான் முதலில் வந்தே.. யூ டேக் இட்"

"நீ தாம்பா வந்தே.. நான் சண்டை போட்டதுக்கு மன்னிச்சுரு.. ப்லீஸ் ஜே, எடுத்துக்க.." என்ற வாசு தன் காரைப் பின்வாங்கி வேலியோரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு வந்தான். ஜேயிடம், "அஞ்சு நிமிசத்துல ஏதாவது இடம் காலியாகும், நான் பார்க் பண்ணிடறேன், அதுவரை பேசுவோம்.. எங்க வேலை பாக்குறே?" என்றான்.

"விப்ரோல எம்பெடட் டெஸ்டிங் க்ரூப் லீடர்"

"அக்செஞ்சர்.. ஈஆர்பி டெஸ்டிங்"

சிரித்தார்கள். "உள்ளே போய் பேசுவோம்... உனக்கு மேரேஜ் ஆயிடுச்சா?" என்றான் ஜே.

"இல்லப்பா.. உனக்கு?"

"இல்லே... பட் ஐ'ம் இன் லவ்"

"நானும்.."

"வெரி குட். இங்கே எங்க வந்தே?"

வாசு பதில் சொல்வதற்குள் வாயிலருகே வந்துவிட்டார்கள். சுழற்கதவருகே உறுமல் கேட்டுத் தயங்கினான் வாசு. மூன்றடி உயர, கறுப்பு நிற ஜெர்மன் செபர்ட் நாய் ஒன்று கால்களை ஊன்றிக் கண்களைத் தீட்டி உறுமிக் கொண்டிருந்தது.

"யாருப்பா கரடியை உள்ளே விட்டது?" என்றான் வாசு.

அதற்குள் அவசரமாக உள்ளிருந்து ஓடி வந்தப் பணியாள், "மன்னிச்சுருங்க. இது கஸ்டமரோட நாய். என்னைக் கவனிச்சுக்கச் சொன்னாங்க.. அவசரமா உள்ளே போனதால இங்கே நிறுத்திட்டேன்.." என்றபடி நாய்க் காலரைப் பிடித்துக் கொண்டு நின்றான். "நீங்க உள்ளே போங்க. தினேஷ்குமார் ரொம்ப சாது"

"கரடியைப் பத்திக் கேட்டா தினேஷ்குமாருன்றே? யார்யா அவன்?"

"நாய் பேருதாங்க. நல்லா இல்லே? ஒண்ணும் செய்யமாட்டான், வாங்க"

"நாய்க்குத் தெரியுமாய்யா ஒண்ணும் செய்யக்கூடாதுனு? தினேஷ்குமாருனு பேரு வச்சவன் தினசரி சோறு வச்சானாய்யா? விரதம் கிடந்த நாய் மாதிரி இருக்குது.." என்று பொருமினான் வாசு. "காலம் கெட்டுப் போச்சுப்பா. நாய்னா ஜிம்மி பப்பினு பேர் வச்சுகிட்டு ஏதோ குட்டியா காலை நக்கிட்டு இருக்கும்.. ஏன்யா.. இந்த நாய்க்கு நாக்கையே காணோமே? எல்லாம் பல்லா இருக்குதே? அந்தப்பக்கம் கூட்டிட்டுப் போய்யா கொஞ்சம். எனக்கு நாய்னா பயம்.. நாட்டுல கரடியை எல்லாம் இப்ப நாய்ன்றாங்க.."

"தினேசு, வா" என்று பணியாள் நாயை இழுத்துக் கொண்டு நடக்க, ஜே தொடர்ந்தான். "வாசு, இங்கே எங்க வந்தேனு சொல்லலியே நீ?"

"அதுக்குள்ள நாய் விவகாரமாயிடுச்சு. அது பெரிய கதை. நான் லவ் பண்றேன்னு சொன்னேனில்லே? என் ஆளோட மாமா, குடும்ப நண்பராம், இங்கே இருக்காரு இப்ப. அவரைப் பாத்துப் பேசச் சொன்னா.. அவர் சம்மதம் இல்லாம கல்யாணம் நடக்காதுன்றா.. அதான் வந்தேன்.. அவரு உள்ளே இருக்காரா கேட்டுருவோம் வா" என்றபடி உள்ளே சென்ற வாசுவைத் தொடர்ந்தான் ஜே.

அடுத்த ஒரு நிமிடத்தில் இருவரும் வெளியே வந்துத் தீவிரமாக வாக்குவாதம் செய்யத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் வாசு ஜேயை நெட்டித் தள்ளிவிட்டான். விழுந்து சுதாரித்த ஜே, வாசுவைத் தாக்க விரைந்தான்.

இதையெல்லாம் பார்த்து அதிசயித்தப் பணியாள், நாயை அருகிலிருந்த காரருகே கட்டிவிட்டு வேகமாக வந்தான். "சார்.. சார்.. என்னாச்சு? சுமுகமா பேசிட்டிருந்தீங்க.. உள்ளே போய் ஒரு நிமிசத்துல இப்படி ஓடியாந்து அடிச்சுக்கறீங்களே?" என்று இருவரையும் பிரித்தான்.

சற்று அமைதியான ஜே, "வாசு.. நாம ரெண்டு பேருமே மைத்தைக் காதலிக்கிறோம்; அவளும் நம்மைக் காதலிக்கிறா. ஒருவேளை நம்ம ரெண்டு பேருல ஒருத்தனை செலக்ட் பண்ண முடியாம, அவ அங்கிள் கிட்டே பேசச் சொல்லியிருக்கலாம். மாமாக்காரன் என்னதான் சொல்றானு கேப்போம். அவரு யாரை செலக்ட் செய்யுறாரோ அவங்களே மைத்தைக் கட்டிக்கட்டும்.. மே த பெஸ்ட் மேன் வின்" என்றான்.

"டீல்" என்ற வாசு, உடைகளைச் சீராக்கிக் கொண்டான். "சாரி ஜே, ஒரு பெண்ணுக்காக நாம சண்டை போடுறது சரியில்லே".

"இங்கே வாப்பா" என்று பணியாளை அழைத்தான் ஜே. "இந்தா" என்று அவனிடம் இருபது ரூபாய் கொடுத்தான். "எங்க சண்டையைப் பிரிச்சதுக்கு".

"நன்றிங்க. டேபிள் ரிசர்வ் செஞ்சிருக்கீங்களா?"

"இல்லே. அன்புமல்லினு சங்க மெம்பர் ஒருத்தரைப் பாக்கணும்.. எங்க உக்காந்திருக்காருனு தெரியுமா?"

"மல்லி சாரா? நல்லாத் தெரியும். வாங்க, நானே கூட்டிப் போறேன். என் பேரு சிங்காரம். நான் தாங்க அவருக்கு ஆல் இன் ஆல் இங்கே. இப்ப ரெண்டு மூணு இடம் கிளியராயிடுச்சு பாருங்க. நீங்க போய் காரைப் பார்க் பண்ணிட்டு வாங்க" என்றான் பணியாள்.

ஆமோதித்துச் சென்ற வாசு, சில நொடிகளில் அலறியடித்துத் திரும்பினான். "யோவ் சிங்காரம்.. என்னய்யா நீ? கரடியை என் கார் கிட்டே கட்டி வச்சிருக்கே? மேலே பாஞ்சிருச்சுயா.. கீழே விழுந்து கார்ல மோதி பல்லு ஒடஞ்சிடுச்சு"

"ஐயையோ.. வாயில்லாப் பிராணி.. தினேசு" என்று ஓட முனைந்த சிங்காரத்தை நிறுத்தினான் வாசு. "யோவ்.. உடைஞ்சது என் பல்லுயா.. நான் தான் பல்லில்லாப் பிராணி இப்ப.. வாய் கூட கிழிஞ்சிருச்சு.. புசு புசுன்னு வீங்க ஆரம்பிச்சுடுச்சு பாருய்யா"

"மன்னிச்சுருங்க.. வேலியோரமா கட்டினேன்.. பக்கத்துல உங்க கார்னு தெரியாதுங்க.. இதா விலக்கிடறேன்.. நீங்க பார்க் பண்ணி உள்ளாற வந்து முகம் கழுவிக்குங்க.. லேசாத்தான் அடிபட்டிருக்கு, சரியாயிரும்" என்று நாயை இழுத்து வர ஓடினான் சிங்காரம்.

    அனுமதி கோராமல் எதிரே வந்தமர்ந்த இருவரையும் வியந்து பார்த்தார் அன்புமல்லி. உள்ளுக்குள் யூகம் உதற, "யாரு நீங்க?" என்றார்.

"அங்கிள்.. நான் ஜே, ஜோதிக்கா மகன்.."

"நீங்க?" என்றார் மற்றவனிடம்.

பெயர் சொன்னான்.

"ராமுவா..?"

வேகமாகத் தலையசைத்து மறுபடியும் பெயர் சொன்னான்.

"பாபுவா?"

ஜே தலையிட்டு, "வாசு.. சந்தானம் மாமா புள்ள" என்றான்.

"ஏன் அடிக்கடி பேர் மாத்துறான்?" என்ற அன்புமல்லியை முறைத்த வாசு, மேசை மேல் குத்தினான். பிறகு தன் வாயைக் காட்டினான்.

அதற்குள் சிங்காரம் ஒரு தட்டில் இரண்டு ஒத்தடப்பைகளும் இன்னொரு சட்டியில் பனிக்கட்டிகளும் கொண்டு வந்தான். பனிக்கட்டிகளைப் பைக்குள் திணித்து, வாசுவிடம் கொடுத்தான். "தம்பி.. இந்தாங்க ஒத்தடம் வச்சுக்குங்க, எறங்கிடும்" என்றான். அன்புமல்லியிடம், "ஐயா.. தம்பிக்கு அடிபட்டு வாயில லேசா வீக்கம்.. அதான் பேச்சு குழறுது.. அஞ்சு நிமிசத்துல சரியாயிடும் பயப்படாதீங்க" என்றான்.

"ஒண்ணும் அவசரமில்லே" என்ற அன்புமல்லி தன் துரதிர்ஷ்டத்தை நொந்தார். 'அஞ்சு வருசம் ஆனால் நல்லா இருந்திருக்கும்' என்று நினைத்தார்.

"ஐயா.. மூணு பேருக்கும் எதுனா எடுத்தாறவா?

"ஏன் நாலாவது ஆளை விட்டு.." என்ற அன்புமல்லி திகைத்தார். ரகுவைக் காணவில்லை. "சிங்காரம்.. சங்கத்துல பேய் ஆவி எதுனா உலாத்துதா?"

"தெரியாதய்யா.. ஏன்?"

"ஒண்ணுமில்லே. சரி, நீ இவங்களுக்கு எதுனா கொண்டா. எனக்கெதுவும் வேண்டாம்".

சிங்காரம் விலகியதும், ஜே நேரே விஷயத்துக்கு வந்தான். "அங்கிள்.. மைதிலி எங்க ரெண்டு பேரையும் காதலிக்கிறான்றதை நாங்களே இங்க வந்தப்பிறகு தான் புரிஞ்சுக்கிட்டோம்"

"அது மட்டுமில்லேபா. உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொல்றா. இல்லின்னா உயிரை விடறதா சொல்லியிருக்கா"

"என்ன அங்கிள் இது.. நீங்க எடுத்து சொல்ல வேணாமா? ஒரு வேளை எங்க ரெண்டு பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணத் தெரியாம தவிக்கிறாளோ என்னவோ?"

அன்புமல்லிக்கு ஜேயின் பேச்சு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை வயதானதும் முதிர்ச்சி வந்துவிட்டதோ? வியப்புடன் ஜேயைப் பார்த்தார்.

"நீங்க குடும்ப நண்பர்ன்றதால அவளை அரை லூசுனு சொல்ல முடியுமா? பாவம், அவ என்ன செய்வா?" என்று ஜே முடிக்க, அன்புமல்லியின் வியப்பும் மறைந்தது.

"இதப் பாருங்க அங்கிள்.." என்றான் வாசு. "..எனக்கு வாய் வலிக்குது. அதனால விஷயத்தை சுருக்கமா சொல்லிடுறேன். நீங்க என்னைத்தான் மைத்துக்குக் கட்டி வைக்கணும். இல்லின்னா விஷயம் விபரீதமாயிடும். உங்களை நான் சும்மா விடமாட்டேன்"

"என்னப்பா இது.. நாம ஒரு முடிவுக்கு ஒத்துக்கிட்டுத் தானே பேச வந்தோம்?" என்றான் ஜே.

"இப்பவும் அதான் சொல்றேன். இவர் யாரை செலக்ட் செய்யுறாரோ அவங்களே மைத்தைக் கல்யாணம் செய்துக்கட்டும்னு ஒத்துக்கிட்டேன். ஆனா இவரை சும்மா விடுறதா நான் ஒத்துக்கலியேபா? அன்பங்கிள், என்னை செலக்ட் செய்யலின்னா உங்களுக்கு நடக்கிறதே வேறே. வாய் வீங்கியிருக்குதுனு பாக்காதீங்க, நான் எப்பவுமே அதிகமா பேசமாட்டேன். எல்லாம் செயல் தான். ஒழுங்கா என்னை செலக்ட் செஞ்சு உங்க உடம்பைத் தேத்திக்குங்க.. ஏற்கனவே வாயு உபத்திரவம்னு அலையுறீங்க.. வயிறே இல்லாமப் போயிடும்" என்றான் வாசு.

பழைய நினைவுகளைக் குத்திக் கிளறியவுடன் அன்புமல்லி காற்றிழந்த பலூனானார்.

"ஓகே.. நீ இப்படிச் சொல்றதுனால நானும் சொல்லிடறேன். அன்பங்கிள், நீங்க என்னை செலக்ட் செய்யலின்னா இவன் கிட்டே அடிவாங்குறதுக்குக் கூட உங்க உடம்பு தேறாது, புரியுதா? போற வயசுல ஒழுங்கா ஒரு முடிவெடுத்துட்டுப் போங்க" என்றான் ஜே.

"ஏம்பா.. நான் போவணும்னே தீர்மானிச்சுட்டியா?"

"பின்னே என்ன அங்கிள்? உங்கள மாதிரி ஆளுங்களால எத்தனை லொள்ளு பாருங்க. ஏதோ காதலிச்சமானு இல்லாம, உங்களைப் போய் மீடியேட் பண்ணச் சொல்லியிருக்கா பாருங்க. அங்கிள், உங்களை மாதிரி ஆளுங்க உலகத்துல இருந்தா முறையான காதலுக்கு அது நல்லதா, நீங்களே சொல்லுங்க. எங்கனா ஓடி சாமியாராவாம இப்படி காதலுக்கும் காதலருக்கும் கஷ்டம் கொடுக்குறீங்களே? நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க அங்கிள்"

"என்ன செய்றீங்க அங்கிள்?"

"யோசிக்கிறேன்" என்ற அன்புமல்லி, "ஏம்பா வாசு.. ஒரு பேச்சுக்கு உன்னை செலக்ட் செய்யுறேன்னு வச்சுக்க. அப்ப இந்த ஜே என்னை அடிக்க வராம பாத்துக்குவியா?" என்றார்.

"அதெப்படி அங்கிள் முடியும்? உங்களுக்கும் ஜேக்கும் நடுவுல நான் தலையிடுறது நியாயமா? ஆனா ஜேகிட்டே அடி வாங்கி உங்களுக்கு கை கால் உடைஞ்சிருச்சுனு வைங்க, உங்களுக்கு சீக்கிரம் குணமாகணும்னு நானும் மைத்தும் நிச்சயமா பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்குறோம் அங்கிள்.. கவலைப்படாதீங்க"

"அதானே.." என்ற அன்புமல்லி ஜேயைப் பார்த்தார். "நீ எப்படிப்பா?"

"என்ன இப்படிக் கேக்குறீங்க? தேங்காய் உடைக்கிறவனா நானு? எத்தனை வருசமா எங்க குடும்பத்துல பழகியிருக்கீங்க? என்ன அங்கிள் நீங்க.. இந்த வாசு உங்களைப் போட்டுத் தள்ளினா நான் சும்மா பாத்துட்டிருக்க முடியுமா? தர்ம அடி கொடுக்க இப்பல்லாம் சான்சே கிடைக்குறதில்லே அங்கிள். அதனால நானும் அவனோட சேர்ந்து உங்களை ரெண்டு தட்டு தட்டுறேன் அங்கிள், ப்லீஸ்.. கூடாதுனு மட்டும் சொல்லிடாதீங்க.. நல்ல அங்கிள், செல்ல அங்கிள்.."

"பலே, பலே!" என்ற அன்புமல்லி அமைதியானார். மைத்தைச் சபித்தார்.

இரண்டு தட்டுக்களில் உருளைக்கிழங்கு பஜ்ஜி கொண்டு வைத்தான் சிங்காரம். "சாப்பிடுங்க தம்பி.. சூடா இருக்கு பாருங்க. இந்தாங்க தக்காளி சட்னியோட தூக்கலா இருக்கும் பாருங்க" என்றான்.

பஜ்ஜியும் சட்னியும் காலியான வேகத்தைப் பார்த்து அதிர்ந்தார் அன்புமல்லி. "பஜ்ஜி சாப்பிடுற ஒலிம்பிக்ஸ் எதுனா இருக்கா சிங்காரம்?" என்றார் மெதுவாக.

"ஓகே அங்கிள். அப்ப நான் வரேன். சொன்னது ஞாபகம் இருக்கட்டும்" என்றான் வாசு.

"எதுக்கும் ஆம்புலன்ஸ் நம்பர் ரெடியா வச்சுக்குங்க அங்கிள், வரட்டா?" என்றான் ஜே. சிங்காரத்தைப் பார்த்து, "பஜ்ஜி சூபர். அங்கிள் கிட்டயே பில் குடுத்துருங்க" என்றான்.

"ஆகட்டும் தம்பி" என்று சிங்காரம் சொல்லி முடிக்குமுன் இருவரும் விலகினர்.

    அன்புமல்லி சோகமாக இருந்தார். "சிங்காரம்.. ஒரு விஸ்கி கொண்டாப்பா".

"இதோ கொண்டாறேன் ஐயா" என்று சிங்காரம் கொடுத்த விஸ்கியை ஒரே வாயில் விழுங்கிய அன்புமல்லி, "சிங்காரம்.. உனக்குப் பெண் குழந்தை உண்டா?" என்றார்.

"இல்லிங்க ஐயா"

"பெத்துக்கிட்டா சின்ன வயசுலந்தே அடிச்சு வளக்கணும், மறந்துடாதே"

"ஆவட்டும் ஐயா"

"உன் பெண்டாட்டி என்ன சொன்னாலும் கேக்காதே"

"அவசியம் இல்லிங்கய்யா. எனக்கு கல்யாணம் ஆவலிங்க"

"ஏம்பா? எதுனா காதல் தோல்வியா?"

"ஆமாய்யா.. ஒருத்தியை உயிருக்குயிரா காதலிச்சேன்.."

"அவ உன்னைக் காதலிக்கலியா?"

"அவளும் என்னை உயிரை விட மேலா காதலிச்சா.."

"பின்னே.. பெத்தவங்களுக்குப் பிடிக்கலியா?"

"இல்லய்யா.. அவ புருசனுக்குப் பிடிக்கலே" என்றபடி சிங்காரம் டேபிளைச் சுத்தம் செய்யத் தொடங்கினான். "நீங்க ஏன் சோகமா இருக்கீங்க?"

"இந்த உடம்பைக் கடைசியாப் பாத்துக்க சிங்காரம். பாத்துக்கிட்டியா?"

"சரிங்கய்யா"

"இனிமே இப்படி முழு உடம்பா.. கை கால் முகம் ஒடம்போட ஒட்டி இங்கே வரமுடியுமானு தெரியலப்பா" என்ற அன்புமல்லி, நடந்ததைச் சொன்னார்.

"அட, இதுக்கா இப்படி கலங்குறீங்க? அந்தப் பொண்ணுக்கு போன் செஞ்சு பெசன்ட் நகர் பீச்சுக்கு இன்னும் அரை மணி நேரத்துல வரச்சொல்லுங்க. அஷ்டலச்சுமி கோவிலாண்ட வரச்சொல்லுங்க. அந்தப் பசங்களை அரை மணி வித்தியாசத்துல தனித்தனியா வரச்சொல்லும்படி சொல்லுங்க. மிச்சத்தை.." என்ற சிங்காரத்தின் பேச்சை

"..நாங்க பாத்துக்குறோம்" என்று முடித்தான் ரகு.

திடுக்கிட்டு அரையடி உயரம் துள்ளிக் குதித்தார் அன்புமல்லி. "அட, ஆவிமனுசா! நீ எப்போ வந்தே?"

"நீங்க விஸ்கி கொணாரச் சொன்னப்பவே வந்துட்டேன் சார்"

"எங்கே உன் காலைக் காட்டு.. நீ பிசாசானு முதல்ல தெரியணும்பா"

"சிங்காரம் சொன்னாப்புல உடனே மை டியர் மைத்துக்குப் போன் செஞ்சு சொல்லுங்க சார்!"

மைத்துக்கு போன் செய்து விவரங்களைச் சொன்னார் அன்புமல்லி. "ஏம்பா.. நீங்க வேறே எதுனா வம்புல மாட்டிவிடப் போறீங்கப்பா.."

"பீச்சுக்குப் போகலாம், வாங்க சிங்காரம்" என்றான் ரகு.

"ஏம்பா.. நான் வர வேணாவா?" என்றார் அன்புமல்லி.

"வேணாமய்யா. நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க பாத்துக்குறோம். எல்லாம் நல்லபடியா முடிஞ்சுரும் ஐயா, வாங்க தம்பி" என்றான் சிங்காரம்.


வளரும் >>

2012/10/15

மைத் மை டியர்


    திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செல்வநாயகமும் - ஒரு அறிமுகம்: [-]

அடையாரிலிருந்து திருவான்மியூர் போகும் வழியில் காந்தி நகர் தாண்டி உள்ளடங்கி இருக்கும் வெடரென்ஸ் க்ளப் நிறைய மாறிவிட்டது. எழுபதுகளில் அடையார் அமைதியாக இருந்த காலத்தில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று வாதம் புரிந்தப் பெருங்கல்லூரிப் பேராசிரியர்களும் மாலை நேரங்களில் கூடி, வெளிநாட்டு பீர் விஸ்கி வைன் என்று ஆமை வேகத்தில் அருந்திக் கொண்டு, பேருக்கு டென்னிஸ் ஆடிவிட்டு, முக்கியமாக கேன்டீனில் அவ்வப்போது தயாரான உருளைக்கிழங்கு மினி போண்டா, மெதுவடை, முந்திரிப்பருப்பு கிச்சடி, அவியல் சூப், பொடிமாவடு தயிர்சாதம் என்று வரிசையாக உள்ளே தள்ளியபடி இரவு பத்து மணி வரை அரட்டை அடித்த நாளிலிருந்து... நிறையவே மாறிவிட்டது.

இடையில் சில வருடங்கள் கேட்பாரற்று கிடந்த க்ளப், சென்றப் பத்து வருடங்களில் பழைய பொலிவுக்கு வந்துவிட்டது. உறுப்பினர் கட்டணம் நாட்டின் பெரும்பான்மையினருக்கு மாதச் சம்பளமாயிருந்தாலும், சென்னையைச் சுற்றித் திரண்டிருக்கும் செலவம் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பழைய கட்டிடம் என்றாலும் சுவரிலிருந்த இந்தியாவை நினைவுபடுத்தும் சுவர்ச்சித்திரங்கள் அத்தனையும் போய், இப்போது ஒவ்வொரு அறையிலும் ஒரு வெளிநாட்டு நகரத்தின் பின்னணியில் புது அலங்காரம். புதுக் கூட்டம்.

கால் சென்டர் அரை சென்டர் என்று தெருவுக்கு ஒன்றாய்க் கிளம்பியிருக்கும் மென்பொருள், அவுட்சோர்சிங், மற்றும் வெப் 2.0 கம்பெனிகளில், கல்லூரி முடித்த மறுநாளே சேர்ந்து, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கித் தாய்மொழி மறந்த இளைஞர் கூட்டமே பெரும்பாலும். "செக் அவுட் ஹர் அஸெட்ஸ் மேன்" என்று வாட்கா குடித்து வம்படிக்கும் ஆண்களை, தயங்காமல் "யா? வேரிஸ் யுர்ஸ்?" என்று பதில் சொல்லித் தலைகுனியவைக்கும், இளவயிறு தெரிய மேல்சட்டையணிந்த ஜீன்ஸ் பெண்கள். இவர்களை எல்லாம் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டு, எங்கேயாவது "அங்கிள்" என்று கூப்பிட்டுவிடப் போகிறார்களே எனப் பயந்து, ஒதுங்கியிருக்கும் என்னைப் போன்ற முப்பத்தைந்து வயதில் முடிகொட்டிப் போன அரைகுறை முதியோர் ஒரு சிலர். இந்த மாறுதல்களுக்கிடையே வெடரன்ஸ் க்ளப் வேர்கடலைச் சங்கமாக மருவியது புதிர்.

சில விஷயங்களில் மட்டும் சங்கம் மாறவேயில்லை. அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அசைக்க முடியாதபடி சுவையான சிற்றுண்டி வகை. வியாழக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும் பாதாம் சட்டினிக்கு மைல் கட்டி நிற்கும் கூட்டம். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அரசியல் பேசக்கூடாதென்ற விதிகளுக்குட்பட்டு, பெரும்பாலும் காதல் பிரச்னை பற்றிய வம்பு, அரட்டை, துக்கப் பரிமாறல். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் இளைய சமுதாயத்திற்கு அறிவுரை சொல்லி, சில சமயம் பிரச்னை தீர்த்து, பல சமயம் குட்டையைக் குழப்பித் தள்ளும் பேர்வழிகள். இவர்களில் தனித்து நின்று சாதனை புரியும் பேராசிரியர் அன்புமல்லி.

சற்றே பெண்மையான பெயராக இருந்தாலும், ஒருவேளை அதனால் தானோ என்னவோ, அன்பு சாருக்குக் காதல் அனுபவம் அதிகம். காதலித்த அனுபவம் குறைவு, காதலிக்கப்பட்ட அனுபவம் அதைவிடக் குறைவு என்றாலும், காதல் தொடர்பான அனுபவம் எக்கச்சக்கம். திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்தக் காலத்தில் அன்புமல்லியின் அப்பா லன்டனில் இருந்தபோது அவருக்கிருந்த காதல் நெருக்கடியைத் தீர்த்து வைத்த மல்லினர் என்பவரின் நினைவாக, இவருக்கு மல்லி என்ற இடைப்பெயரை சேர்த்து அன்புமல்லி என்ற பெயரைக் கொடுத்ததாகக் கேள்வி. உண்மை விவரம் தெரியாது. அனாவசியமாக வம்பு அரட்டை என்று போக மாட்டார். ஆனால் காதல் பிரச்னை தீர வழி கேட்டு வருபவருக்கு, இல்லை எனாது அறிவுரையும் உதவியும் வழங்கும் வள்ளல். காதல் சாமியார். திருவாளர் அன்புமல்லி செல்வநாயகம்.

இனி, மைத் மைடியர்.


    வேர்கடலைச் சங்கத்துக்குள் நுழைந்து தன் வழக்கமான இடத்தில் உட்கார்ந்த அன்புமல்லிக்கு முழுதுமாக வியர்த்திருந்தது. குளிர் நீரில் நனைத்துப் பிழிந்த கைத்துண்டைக் கொண்டு வந்த சிங்காரத்தை நன்றியுடன் பார்த்தார். கழுத்தையும் முகத்தையும் ஒத்தடம் கொடுத்தபடி, காலையில் வீட்டுக்கு வந்த கிளி ஜோசியக்காரனை நினைத்துக் கொண்டார். "ஐயாவுக்கு வாழ்க்கையிலே ஒரு திருப்பம் காத்திருக்குனு சொல்லுடி மங்கம்மா" என்ற ஒரு வரி ஜோசியத்தை எட்டு வரிப் பாடலில் தேக்கி வாசித்தவனுக்கு இரண்டு ரூபாய் கொடுத்து அனுப்பியிருந்தார். வழியில் பள்ளம் குழிகளினாலும், வெட்டப்பட்டிருந்த சாலைகளினாலும், இரண்டு விபத்துகளினாலும், நெரிசலினாலும்.. ஆலந்தூரிலிருந்து திருவான்மியூர் வருவதற்குள் இருபத்தாறு திருப்பங்களை எதிர்கொண்டார். கொடுத்த இரண்டு ரூபாயைப் பிடுங்கிக்கொண்டு கிளி ஜோசியக்காரனை கூண்டுக்குள் அடைத்து வைக்க வேண்டும் என்று தோன்றியது.

சிங்காரம் தானாகவே கொண்டு வைத்த குளிர்ந்த ஸ்காச்சை ஆசையோடு பருகினார். உடன் கொண்டு வைத்த வறுத்த முந்திரிப்பருப்பில் இரண்டை எடுத்து மென்றபடி ஆசுவாசப் படுத்திக் கொண்டார். "சிங்காரம், என்னுயிரப்பா நீ, என் சொத்தெல்லாம் உனக்குத்தான் எழுதி வைக்கப் போறேன்" என்றார்.

"ரொம்ப நல்லதுங்கய்யா" என்றான் சிங்காரம்.

"இன்னொரு ஸ்காச் கொண்டா. இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?" என்றார்.

"தயிர்வடை, உருளைக்கிழங்கு பஜ்ஜி, பால்போளி. சரக்கு மாஸ்டர் லீவுன்றதால இன்னிக்கு எல்லாம் ரொம்ப சிம்பிள் சார்"

"சிம்பிளா இருந்தா உலகத்துக்கே நல்லது. அகலக்கால் வச்சு வச்சு எல்லாத்தையும் போட்டு கொழப்பிட்டிருக்கோம். சரி, பொடியா சீவின வெங்காயம், ஒரு ஸ்பூன் சீரகம், அரிஞ்ச கொத்தமல்லி ஒரு பிடி அத்தனையும் லேசா நெய்யிலே வதக்கி, தயிர்வடைல தூவி எடுத்துட்டு வா. நான் கொஞ்சம் ஓய்வெடுக்கணும். என்னைத் தேடி யாராவது வந்தா உடனே இங்கே அனுப்பிராதே" என்ற அன்புமல்லி, மூலையில் முகம் புதைத்து அமர்ந்திருந்த வாலிபனைப் பார்த்தார். தற்செயலாக நிமிர்ந்த வாலிபன் இவரைப் பார்த்துப் புன்னகைத்தான்.

வழியில்லாமல் அன்புமல்லி புன்னகைத்ததும், வாலிபன் சடுதியில் அவரருகே வந்து, "என் பேர் ரகுராம் சார்.. சுருக்கமா ரகுனு கூப்பிடுவாங்க" என்றான்.

"ஏன்? சுருக்கமா ராம்னு கூப்பிட மாட்டாங்களா?" என்ற அன்புமல்லி, "அதை அங்கயிருந்தே அவசரமில்லாம சொல்லியிருக்கலாமேபா? எதுக்கு இப்படி மூச்சு வாங்க மூலைலந்து ஓடியாறே?"

"என் சோகக்கதையை யார் கிட்டயாவது சொல்லணும்னு தோணுது.. ஏன்னு தெரியலே உங்களைப் பாத்த உடனே என் கதையைச் சொல்லத்தோணிச்சு சார்.."

"காதல் சோகமா?"

"ஆமா சார்!"

"உயிர்க் காதலா?"

"அட.. பாத்தீங்களா சார்.. கரெக்டா சொல்லிட்டீங்க!"

"அதானே? சரி.. சொல்லு.. சொல்லு.. இந்தா இப்படி உக்காந்து சொல்லு"

"என்னோட வாழ்க்கை வானத்தின் வானவில் சார் அவள். ஒரே ஒரு சின்ன ஒளிக்கீத்து கூடப் போதும்னு ஏங்கிட்டிருந்த என் இருண்ட மனசுல பத்து சூரியனைப் பத்த வச்சுட்டுப் போயிட்டா சார்"

"ச்ச்சோ.. போயிட்டாளா? அடப்பாவமே?!"

"அதில்ல சார்.. அதுக்குள்ள சாவடிக்கிறீங்களே? மனுசனா சார் நீங்க?"

"அப்ப இருக்காளா? வெரி குட்.. மேலே சொல்லு.. அவ பேர் என்ன?"

"தெரியாது"

"ஊரு?"

"தெரியாது"

"அவளை நேரிலயாவது பாத்திருக்கியா?"

"இப்பத்தான் பத்து நிமிசத்துக்கு முன்னால இங்க பார்க்கிங் லாட்ல முதல் தடவையா அவளைப் பார்த்தேன் சார்"

"பத்து நிமிசத்துக்கு முன்னாலே முதல் தடவையா பாத்தேன்றே.. அதுக்குள்ள வானவில் அது இதுன்றே?"

"உயிர்க்காதலுக்கு நிமிசம் நாள் யுகமெல்லாம் ரெலெடிவ் சார். காலம்ன்றது நாம தீர்மானிக்கிற அறிவுப் பரிமாணம். ஆனா காதல்ன்றது நம்ம யாராலயும் தீர்மானிக்க முடியாத ஆன்மப் பரிமாணம். இவளை எனக்குப் பத்து ஜென்மமா தெரிஞ்சாலும் பத்து நிமிசமா தெரிஞ்சாப்புல இருக்கும்.. அதே போல பத்து நிமிசமா.."

"போதும் நிறுத்துப்பா.. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. இந்தா இதை வச்சுக்க" என்று அன்புமல்லி தன் பர்சிலிருந்து நூறு ரூபாய் நோட்டை அவன் கைகளில் திணித்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார். "தத்துவம் தாங்கலப்பா".

சிங்காரம் கொண்டு வைத்த இரண்டாவது விஸ்கியை ஒரு வாய் பருகினார். "அப்பாடி!" என்றார். உற்சாகமானார். சட்டென்று ரகுவின் கைகளிலிருந்து நூறு ரூபாய் நோட்டைப் பிடுங்கிக் கொண்டார். "ஏம்பா ரகுத்தம்பி.. உயிர்க்காதல்னு சொல்றே? யுகம் யுகமா பாத்தேன்னு சொல்றே.. அப்ப பேரைத் தெரிஞ்சுக்க வேணாமா?"

பணம் வந்து போன வேகம் புரியாத ரகு, "கேட்டேன். சொல்லிட்டு சட்டுனு போயிட்டா.. ஆனா அது அவ பேரா இருக்க முடியாது சார்"

"ஏன்?"

"ஒரு அழகான பெண்ணுக்கு 'செருப்பு பிஞ்சிரும்'னு யாராவது பேர் வைப்பாங்களா?"

"வாஸ்தவம்" என்ற அன்புமல்லி, திடீரென்று எழுந்த ரகுவிடம் "ஏம்பா திடீர் மரியாதை.. உக்காரு உக்காரு" என்றார்.

"மரியாதையெல்லாம் இல்லே சார்.. அப்புறம் பேசுவோம்.. அதோ அங்க நிக்குறது அந்தப் பொண்ணு போலவே இருக்கு. இப்போ அந்த முகத்தைப் பார்த்தா எனக்கு ரொம்ப சோகமாயிடும் சார்.." என்றபடி அவர் பதிலுக்குக் காத்திராமல் பழைய மூலைக்குள் காணாமல் போனான், ரகு என்று சுருங்கிய ரகுராம்.

    தயிர்வடையும் இன்னொரு கிண்ணம் முந்திரிப்பருப்பும் கொண்டு வைத்தான் சிங்காரம். தயிர்வடையின் நிறமும் மணமும் கண்ட அன்புமல்லி, "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்று மென்மையாகப் பாடி சிங்காரத்தின் கையில் இருபது ரூபாயைத் திணித்தார். ரகுவை அகற்றிய முகம் தெரியாத பெண்ணுக்கு நன்றி சொன்னார். ஒரு முந்திரிப்பருப்பை எடுத்து மணம் பார்த்தார். "ஆகா!" என்றார். சொன்ன வேகத்தில் சுனாமி வந்தது போல் அதிர்ந்தார், "அங்கிள்" என்ற குரலைக் கேட்டு.

அதிர்ச்சியில் கை தவறிக் கீழே விழுந்த முந்திரிப்பருப்பை வருத்தத்துடன் பார்த்தபடியே, குரலுக்குச் சொந்தக்காரரை முறைத்தார். மறைந்த நண்பன் கேகேயின் பெண்! கேகே மாரடைப்பால் இறந்து போனதற்கு கொலஸ்டிரால் காரணமென்று டாக்டர்கள் சொன்னாலும், மைதிலியின் திடீர் கூக்குரல்களும் காரணமாக இருந்திருக்குமோ என்று இப்போது தோன்றியது. "அங்கிள்!" என்றாள் மறுபடி, பனிரெண்டு கட்டையில்.

ரேடியோ டிவியில் இருப்பது போல் ஒலிக்கட்டுப்பாட்டு விசை மனிதர்களுக்கு இல்லையே என்று ஒரு கணம் வருந்தினார் அன்புமல்லி. பிறகு, 'என்ன இருந்தாலும் கேகே மகள் தன்னுடைய மகள் போல்' என்று நினைத்து அவளைக் கனிவுடன் பார்த்தார். இளவயதில் தாயை இழந்து சமீபத்தில் கேகேயும் இறந்த பிறகு, தனியாக வசித்து வந்த மைதிலி மேல் அவருக்குப் பாசம் பொங்கியது. "என்னம்மா மைதிலி? எப்படி இருக்கே? முந்திரிப்பருப்பு சாப்பிடுறியா?" என்றார்.

"மைத் அங்கிள். என் பேரை கர்நாடகப் படுத்தாதீங்க"

அன்புமல்லி இன்னும் கீழே கிடந்த முந்திரிப்பருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். "திரௌபதி தெரியும்ல அங்கிள்?" என்று மறுபடி அலறிய மைத்தைத் திடுக்கிட்டு அண்ணாந்தார். முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக உயரே எறிந்து வாய் திறந்துப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

"யாருமா, உன் ப்ரென்டா?"

"இல்லே அங்கிள்" என்றபடி அடுத்த முந்திரிப்பருப்பை உயரே எறிந்தாள். "பாண்டவர் பெண்டாட்டி" என்றபடி வாயுள் பிடித்தாள்.

"ஓ, அந்த திரௌபதியா? தெரியுமே" என்றார். மைத் முந்திரிப்பருப்பு தின்னும் விதத்தை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு தலை சுற்றியது. சட்டென்று அவள் கையைப் பிடித்து நிறுத்தி, "முந்திரிப்பருப்புல டென்னிஸ் விளையாடாதம்மா. தலை சுத்துது. அழகா இந்தமாதிரி ஒண்ணொண்ணா எடுத்து வாயில போட்டு சாப்பிடேன்? நல்ல பெண் இல்லே, சொன்னா கேக்கணும்" என்றார்.

"ரைட். அந்த திரௌபதியைப் பத்தி என்ன நினைக்கிறீங்க அங்கிள்?"

"திரௌபதியைப் பத்தி நான் நினைக்கறதே இல்லியே?"

மறுபடியும் கிளி ஜோசியனை நினைத்துக் கொண்டார் அன்பு. ஸ்காச்சை எடுத்தார். தயிர்வடையை மைத் பக்கம் நகர்த்தினார். "சிங்காரம், இன்னொரு ப்ளேட் கொண்டா" என்றவர் மைத்தைப் பார்த்து, "ஏன் திடீர்னு திரௌபதியைப் பத்திக் கேக்குறே? ஏதாவது பரீட்சையா?"

"இல்லே, அஞ்சு பேரைக் கல்யாணம் செஞ்சவளாச்சே பரவாயில்லையானு கேட்டேன்"

"ஏம்மா, அந்த திரௌபதி அஞ்சு பேரை கட்டினா என்ன அம்பது பேரைக் கட்டினா என்ன? அதைப் பத்தி விவாதம் செய்யவா இங்கே வந்து முந்திரிபருப்பு கேச் விளையாடுறே?"

"நான் ரெண்டு பேரைக் கல்யாணம் செஞ்சுக்கலாமானு பாக்குறேன், அதான்" என்றாள் நிதானமாக.

அப்போது விழுங்கிய விஸ்கி தொண்டையில் குத்திப் புரையேற, அன்புமல்லி இருமித் தள்ளினார். "என்னம்மா சொல்றே?"

"ஆ..மாம் அங்கிள்.." என்று கொஞ்சினாள். "நான் ரெண்டு பேரைக் காதலிக்கிறேன். ரெண்டு பேரையுமே பிடிச்சிருக்கு. அதான் என்ன செய்யுறதுனு தெரியலே"

"அவங்க ரெண்டு பேர் கிட்டேயும் இதைச் சொல்லுறது தானே?"

"என்னைப் போல பரந்த மனப்பான்மை அவங்களுக்கு இல்லின்னா? ஏடாகூடமா சொல்லி ரெண்டு பேரையும் இழந்துடக்கூடாதே? அதான் என்ன செய்யறதுனு உங்க கிட்டே ஐடியா கேக்க வந்தேன்"

அன்புமல்லியின் ரத்த அழுத்தம் 150/90ஐத் தொட்டது. மைத்தை அடித்து வளர்க்காத கேகேயை மனதுள் திட்டினார். "ரெண்டு பேரையும் கல்யாணம் செஞ்சுக்கப் போறியா? அது சட்ட விரோதமாச்சே? ஒரு பொண்ணு எப்படிம்மா ரெண்டு ஆம்பிளங்களைக் கல்யாணம் கட்டுறது?"

"பின்ன ஒரு ஆணா ரெண்டு ஆம்பிளங்களைக் கல்யாணம் கட்ட முடியும், என்ன அங்கிள் நீங்க? ஆக்சுவலி.. அதுவும் பாசிபிள் தான். வை நாட்?.."

"என்னவோமா.. என்னை மாதிரி கை நாட் ஆசாமிங்களுக்கு இந்தக் வை நாட் புரியுறது கஷ்டம் தான்.. இந்தக்காலம் ரொம்ப மாறிட்டுது"

"அந்தக்கால திரௌபதிய மறந்துட்டீங்களே அங்கிள்? மிசஸ் தருமன், மிசஸ் பீமன், மிசஸ் அர்சுனன் அப்புறம் மத்த ரெண்டு பேர் பேரு மறந்துடுச்சு.. அவங்களுக்கும் திரௌபதி தானே மிசஸ்?"

"கதைக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லியா? சும்மா வெளயாடதம்மா.. ரெண்டு பேர்ல ஒருத்தனை கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோசமா இரும்மா. குறும்புக்கா..ஆரி, வெளயாட்டைப்பாரு"

"உண்மையாத்தான் சொல்றேன் அங்கிள். நீங்கதான் எனக்கு அவங்க ரெண்டு பேரையுமே கல்யாணம் செஞ்சு வைக்கணும். இல்லின்னா காதல் சோகம் தாளாம உயிரை விட்டுறுவேன். அப்புறம் அந்தப் பாவம் உங்களுக்குத் தான் வரும்" என்றாள்.

"காதல் சோகமா?"

"ஆமாம் அங்கிள். அதும் டபுள் சோகம். ரெண்டு காதல் இல்லியா?"

"சரியா போச்சு. இந்த மாதிரி உருப்படாத வேலைக்கெல்லாம் நானா கிடைச்சேன்? ரெண்டு காதல் எல்லாம் வேண்டாம், இந்தா, என்னோட ரெண்டு தயிர்வடையும் சேத்து நிம்மதியா சாப்பிட்டு வீடு போய்ச் சேருமா" என்றார் எரிச்சலுடன்.

விசும்பினாள்.

"ஏம்மா.. தயிர்வடை காரமா? பச்சை மிளகாயக் கடிச்சிட்டியா?"

"ஹ்ம்..ஹ்ம்..ஹ்ம்.. எங்கப்பா சாவுறப்போ அவர்கிட்டே நீங்க கொடுத்த சத்தியத்தை மறந்துட்டு பேசறீங்களே அங்கிள்? எங்கப்பா ஆவி இப்போ என்ன துடி துடிக்குதோ?"

"சுச்சு போட்டாப்புல அழுவுறீங்கப்பா... என்னம்மா இது.. நிறுத்து.. பொது இடம் பாரு..."

"ஹ்ம்ம்ம்ம்ம்.. எங்கப்பா ஆத்மா சாந்தியடையாம சுத்திட்டிருக்கணும்னு நினைக்கறீங்க.." சிணுங்கினாள்.

"சரி.. சரி.. அழுகையை நிறுத்து முதல்ல"

"அப்ப என் விருப்பத்தை நிறைவேத்தி வைங்க" என்றபடி முந்திரிப்பருப்பை இரண்டிரண்டாக மேலே எறிந்து வாயில் பிடிக்கத் தொடங்கினாள்.

"ஏம்மா, ரெண்டு புருசன்னா என்ன ரெண்டு முந்திரிப்பருப்பா, இப்படி விளையாட்டா போட்டுப் பிடிக்க? வாழ்க்கைப் பிரச்சினைமா, யோசிச்சுப் பாரு. உங்கப்பா கிட்டே உன்னைக் காப்பாத்துறதா வாக்கு கொடுத்தேன் சரி, அதுக்காக நீ கிறுக்குத்தனமா என்ன செஞ்சாலும் பொறுக்கணுமா? இதெல்லாம் விளையாட்டில்லே. வினையாயிடும். வெயில்லே அதிகமா அலையாம வீட்டுக்குப் போ" என்றார்.

"அதெல்லாம் முடியாது அங்கிள். நீங்கதான் எனக்கு இப்போ அப்பா அம்மா எல்லாம். உங்க அனுமதியோட கல்யாணம் செஞ்சுக்குவேன். ரெண்டு பேர் கிட்டேயும் விவரத்தை சொல்லி ரெண்டு பேரையுமே கல்யாணம் செஞ்சு வையுங்க."

"நானா? அதெப்படி? அவங்க யாருனு கூட எனக்குத் தெரியாதே?"

"அதனால தான் ரெண்டு பேரையும் இங்கே வரச்சொல்லியிருக்கேன்.. உங்களோடப் பேசச் சொல்லியிருக்கேன்"

திடுக்கிட்டார் அன்புமல்லி. 'இதென்ன இருபத்தேழாவது திருப்பமா இருக்குதே இன்னிக்கு?' என்று நினைத்தார். "யாரவங்க, ரெண்டு பேர்? எங்க இருக்காங்க?"

"அங்கிள்... இன்னும் அரை மணி நேரத்துல வருவாங்க.. தே போத் ஆர் மை டியர் லவர்ஸ்.. நீங்கதான் எப்படியாவது என்னோட ஆசையை நிறைவேத்தணும்..அவங்களைக் காதலிக்குறதா தனித்தனியா சொல்லியிருக்கேன். ஒருத்தருக்குத் தெரியாம இன்னொருத்தனை லவ் பண்றேன். ஆனா ரெண்டுமே டிவைன் லவ் அங்கிள். நீங்களே ஏதாவது ஐடியா யோசிச்சு அவங்க கிட்டே உண்மையைச் சொல்லுங்க" என்றாள்.

தேவைக்கதிகமாகச் சுதந்திரம் கொடுத்துப் பெண்ணை வளர்த்து விட்ட நண்பன் கேகேயை மறுபடி மனதுள் திட்டினார் அன்புமல்லி. 'டேய்.. உன் ஆத்மாவுக்கு சளி பிடிக்கட்டும்'. "என்னம்மா இது, விளையாட்டு?" என்ற அன்புமல்லியின் குரலில் கோபம் தொனித்தது. "யார் அவங்கனு சொல்லித் தொலை"

"ரெண்டு பேரையும் உங்களுக்குச் சின்ன வயசுலந்தே தெரியும், அங்கிள்" என்றாள்.

"சின்ன வயசுலந்தா?"

"அதாவது அவங்களோட சின்ன வயசுலந்துனு சொன்னேன். உங்களுக்குத்தான் இப்போ போவுற வயசாயிடுச்சே அங்கிள்?" என்றாள்.

"நீ குடுத்த ஷாக்குல போனாலும் போயிருவேன்.. அதை விடு, யார் அவுங்கன்னு சொல்லு.."

"ஜோதி ஆன்ட்டி பையன் ஜே, சந்தானம் அங்கிள் மகன் வாசு" என்றாள்.

"இதென்ன.. விஸ்கியா வெயிலா வயசா.. என்ன கண்றாவியோ தெரியலே, ரெண்டு காதும் சரியா கேக்க மாட்டேங்குது" என்ற அன்புமல்லி, குடைந்து கொண்டார். "ஜோதிக்கா பையன் ஜே, சந்தானம் புள்ளை வாசுனு சொன்னாப்புல கேட்டுச்சுமா.."

"அவுங்களே தான்"

தயிர்வடையைக் கடிக்காமல் அது இருந்த நாக்கைக் கடித்துக் கொண்ட அன்புமல்லி இடிந்து உட்கார்ந்தார். கெட்டக்கனவிலிருந்து மீண்டது போல் மிரண்டு விழித்தார். வாழ்க்கையில் 'அறவே பிடிக்காதவை' வரிசையில் டி.ராஜேந்தர் திரைப்படம், இந்துஸ்தானி இசை, விளக்கெண்ணெய்க்கு அடுத்தபடி ஜோதிக்கா, சந்தானம் உறவுகளை வைத்திருந்தார். சிறு வயதில் மதுரையருகே சில வருடங்கள் வளர்ந்த போது, ஜோதியும் சந்தானமும் அவருடன் ஒரே பள்ளியில் படித்த அக்கம்பக்கப் பங்காளிகள். ஒரு முறை 'ஐ ஸ்பை' விளையாடுவதாகச் சொல்லிப் பள்ளிக்கூடக் கிணற்றடிக்கு அழைத்துச் சென்று, அன்புமல்லி எண்ணத் தொடங்கியதும் அவர்கள் இருவரும் சைக்கிளில் ஏறி வீடு சேர, அவர் மட்டும் தேடித்தேடி அலைந்து வீட்டுக்கு நடந்து வந்தது நினைவுக்கு வந்தது.

நடுங்கினார்.

வளர்ந்த ஜோதிக்கா சந்தானத்தின் பிள்ளைகள் அவர்களுடைய ராடசசக் குணத்தை அப்படியே கொண்டிருந்தார்கள். அன்புமல்லி லன்டனிலிருந்து திரும்பியதும் ஒரு முறை ஜோதிக்கா வீட்டுக்குப் போயிருந்தபோது அவளுடைய ஐந்து வயது மகன் ஜே, அவரை நிற்க வைத்து இங்கே அங்கே நகர முடியாமல் ஒரு மணி நேரம் போல் அவரைச் சுற்றிச் சுற்றி அதிவேகமாக ஓடியது நினைவுக்கு வந்தது. பிறகு ஜோதி வந்ததும், "அம்மா, மாமா என்னிய நல்லா முதுகுல அடிச்சுட்டாங்க" என்று பொய் சொல்லி அதிரவைத்தது நினைவுக்கு வந்தது. "ஏண்டா அப்படிப் பொய் சொல்லுறே?" என்று தனியாக அவனிடம் கேட்ட போது, "நீ தினம் எனக்கு நாலணா தந்தா சும்மா இருப்பேன். இல்லே இனிமே என்னை அடிச்சதாவும் உதைச்சதாவும் மூக்குல குத்தினதாகவும் சொல்லுவேன்" என்றபடி தன்னைத்தானே மூக்கில் குத்திக்கொண்டு "அம்மா..ஆ" என்று அலறியபடி ஜோதிக்காவைத் தேடி ஓடிய ஜேயின் சதிகாரத் துணிச்சலுக்கு அடிபணிந்தது நினைவுக்கு வந்தது.

மிக நடுங்கினார்.

சந்தானத்தின் தங்கை திருமணத்துக்காக நெய்வேலி சென்றபோது, முதல் நாள் எக்கச்சக்கமாக எதையோ சாப்பிட்டு வாயுத்தொல்லை தாளாமல் தவிக்கையில் அருகிலிருந்த சந்தானத்தின் ஐந்து வயது மகன் வாசு அவர் அருகே வந்து, மிக மெதுவான குரலில், "மாமா, நீங்க சத்தம் போடாம் குசு விடுறது எனக்குத் தெரியும்" என்றான். அதிர்ச்சியில் அசடு வழிந்த அன்புமல்லி சட்டென்று அடுத்த இருக்கைக்கு நகர்ந்தார். வாசு உடனே "அன்பு மாமா ஒவ்வொரு நாற்காலியா குசு விட்டு விட்டு எழுந்து எழுந்து போறாங்க.." என்றுச் சத்திரத்தில் இருந்த ஒவ்வொருவரிடமும் சொல்லத் தொடங்க, அந்த வரிசையிலேயே யாரும் உட்காராமல் அவரை எல்லாரும் வெறுத்து முறைக்க, வாசுவுக்குப் பயந்து சத்திரத்தை விட்டு ஓடியதும், அதற்குப் பிறகு எந்தக் குடும்பக் கல்யாணத்துக்கும் பயந்தபடி போய் வந்ததும் நினைவுக்கு வந்தது.

மிக மிக நடுங்கினார்.

"என்ன அங்கிள்.. உக்காந்துகிட்டே செல்லாத்தா மாரியாத்தா டேன்ஸ் ஆடுறீங்க?" என்றாள் மைத்.

மிச்சமிருந்த விஸ்கியை எடுத்துக் குடித்தார். முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

"அந்தச் சண்டாளனுங்க.. உனக்குக் காதலிக்க வேறே யாரும் கிடைக்கலியா? அதுவும் ரெண்டு பேத்தையும் காதலிக்கறதா சொல்றியே? நியாயமா? அவங்க எங்கே இங்கே வந்தாங்க?"

"அங்கிள், என் லவர்ஸை அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க, எனக்கு கோபம் வரும்" என்றாள் மைத் செல்லமாக. "ரெண்டு பேரும் சென்னைல தான் இருக்காங்க. விப்ரோவிலும் அக்செஞ்சரிலும் வேலை பாக்குறாங்க. இப்போ வந்துருவாங்க. பேசி ஒரு முடிவுக்கு வந்து என் கிட்டே சொல்லுங்க" என்றாள். "உங்களைத்தான் நம்பியிருக்கேன்" என்றவள், எழுந்து நொடிகளில் காணாமல் போனாள்.

அதிர்ச்சியிலிருந்து மீளக் கண்களை மூடிப் பெருமூச்சு விட்டார் அன்புமல்லி.

    கண் திறந்த போது எதிரே ரகு உட்கார்ந்திருந்தான். "என்ன சார், தியானம் செய்றீங்களா?" என்றான்.

"அது ஒண்ணு தான் குறை. ஆமா, நீ என்ன திடீர்னு காணாம போறே, திடீர்னு வர்றே.. சாமியா பூதமா?"

"இப்ப உங்ககூடப் பேசினாளே அந்தப்பொண்ணு.. அவ பேர் என்ன சார்?"

"ஏம்பா?"

"அவதான் என்னோட பார்க்கிங் லாட் பைங்கிளி. உங்களை அங்கிள்னு சொன்னாளே? எப்படியாவது என்னை அறிமுகம் செஞ்சு வைங்க சார்"

"நாங்க பேசினத ஒட்டு கேட்டியா?"

"தேவையில்லே.. அவ குரல் எத்தனை கணீர்னு ஒலிக்குது சார்!"

"கணீரா? சரியாப்போச்சு போ. டெலிபோன் கம்பெனிக்காரங்களுக்கு அவளைக் கண்டாலே ஆவாதுபா. டில்லிலே இருக்குற சித்தப்பாவோட போன் இல்லாமலே வடக்குப் பக்கமா உக்காந்து பேசுவானா பாத்துக்க.."

"ஹிஹி.. தமாஷ் சார் நீங்க.. அவ பேர் என்ன சார்?"

"மைத்" என்றார். "மைதிலி என்கிற பேரைச் சுருக்கிட்டா, உன்னைப் போலத்தான்"

"சார்!" என்று அன்புமல்லியின் காலில் விழுந்தான் ரகு. "எப்படியாவது எங்களைச் சேத்து வைங்க சார். இது ஒரு சகுனம். செய்தி. என் பேரு ரகு, அவ பேர் மைதிலி. நானும் சுருக்கிட்டேன், அவளும் சுருக். என்ன பொருத்தம் பாருங்க சார்! என்னைப் பத்தின விவரம் எல்லாம் சொல்றேன். உங்க மைதிலியை மைடியரா காப்பாத்துவேன் சார். ப்லீஸ், எங்களைச் சேர்த்து வையுங்க" என்று கெஞ்சினான்.

"எழுந்திரப்பா.. இதெல்லாம் என் கையில் இல்லை" என்ற அன்புமல்லி அவனை எழுப்பினார். "இதோ பாருப்பா ரகு, அவ ஏற்கனவே இன்னொருத்தனைக் காதலிக்கறா" என்றார்.

"ஒருத்தனை இல்லே ரெண்டு பேரை"

"எல்லாத்தையும் கேட்டியா?"

"கணீர் கணீர்"

"அப்புறம் ஏம்பா என் காலில் விழறே?"

"நீங்க மனசு வச்சா முடியும். நீ காதலிப்பவளை விட உன்னைக் காதலிப்பவளை நம்புனு பொன்மொழி இருக்கு சார்.."

"ஆட்டோல படிச்சியா?"

"ஆமா சார்"

"இதோ பாரு.. இன்னொரு தடவை பொன்மொழினு எதுனா சொன்னே, பொல்லாதவனாயிடுவேன்.."

"அட கேளுங்க சார்.. நான் அவளை யுகம் யுகமா, அட்லீஸ்ட் பத்து நிமிசத்துக்கு மேலா, காதலிக்கிறேன் சார். ஆனா அவ காதலிக்குற ரெண்டு பேரும் அவளை பத்து நொடியாவது காதலிக்குறாங்கனு எப்படிச் சொல்வீங்க?"

"நல்லா கேட்டே, ரகு" என்று அன்புமல்லி வியந்தக் கணத்தில், அவர் எதிரே இரு வாலிபர்கள் வந்தமர்ந்தனர்.


வளரும் >>


நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்புமல்லியை அழைத்து வந்திருக்கிறேன். பழைய அன்புமல்லிக் கதைகளுக்கு:
1. கடத்தல் கல்யாணம்
2. காசிருந்தால் கல்யாணம்
3. மல்லி கடாட்சம்

2009/07/18

கடத்தல் கல்யாணம்


திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செல்வநாயகமும் - ஒரு அறிமுகம்: [-]

அடையாரிலிருந்து திருவான்மியூர் போகும் வழியில் காந்தி நகர் தாண்டி உள்ளடங்கி இருக்கும் வெடரென்ஸ் க்ளப் நிறைய மாறிவிட்டது. எழுபதுகளில் அடையார் அமைதியாக இருந்த காலத்தில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று வாதம் புரிந்தப் பெருங்கல்லூரிப் பேராசிரியர்களும் மாலை நேரங்களில் கூடி, வெளிநாட்டு பீர் விஸ்கி வைன் என்று ஆமை வேகத்தில் அருந்திக் கொண்டு, பேருக்கு டென்னிஸ் ஆடிவிட்டு, முக்கியமாக கேன்டீனில் அவ்வப்போது தயாரான உருளைக்கிழங்கு மினி போண்டா, மெதுவடை, முந்திரிப்பருப்பு கிச்சடி, அவியல் சூப், பொடிமாவடு தயிர்சாதம் என்று வரிசையாக உள்ளே தள்ளியபடி இரவு பத்து மணி வரை அரட்டை அடித்த நாளிலிருந்து... நிறையவே மாறிவிட்டது.

இடையில் சில வருடங்கள் கேட்பாரற்று கிடந்த க்ளப், சென்றப் பத்து வருடங்களில் பழைய பொலிவுக்கு வந்துவிட்டது. உறுப்பினர் கட்டணம் நாட்டின் பெரும்பான்மையினருக்கு மாதச் சம்பளமாயிருந்தாலும், சென்னையைச் சுற்றித் திரண்டிருக்கும் செலவம் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பழைய கட்டிடம் என்றாலும் சுவரிலிருந்த இந்தியாவை நினைவுபடுத்தும் சுவர்ச்சித்திரங்கள் அத்தனையும் போய், இப்போது ஒவ்வொரு அறையிலும் ஒரு வெளிநாட்டு நகரத்தின் பின்னணியில் புது அலங்காரம். புதுக் கூட்டம்.

கால் சென்டர் அரை சென்டர் என்று தெருவுக்கு ஒன்றாய்க் கிளம்பியிருக்கும் மென்பொருள், அவுட்சோர்சிங், மற்றும் வெப் 2.0 கம்பெனிகளில், கல்லூரி முடித்த மறுநாளே சேர்ந்து, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கித் தாய்மொழி மறந்த இளைஞர் கூட்டமே பெரும்பாலும். "செக் அவுட் ஹர் அஸெட்ஸ் மேன்" என்று வாட்கா குடித்து வம்படிக்கும் ஆண்களை, தயங்காமல் "யா? வேரிஸ் யுர்ஸ்?" என்று பதில் சொல்லித் தலைகுனியவைக்கும், இளவயிறு தெரிய மேல்சட்டையணிந்த ஜீன்ஸ் பெண்கள். இவர்களை எல்லாம் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டு, எங்கேயாவது "அங்கிள்" என்று கூப்பிட்டுவிடப் போகிறார்களே எனப் பயந்து, ஒதுங்கியிருக்கும் என்னைப் போன்ற முப்பத்தைந்து வயதில் முடிகொட்டிப் போன அரைகுறை முதியோர் ஒரு சிலர். இந்த மாறுதல்களுக்கிடையே வெடரன்ஸ் க்ளப் வேர்கடலைச் சங்கமாக மருவியது புதிர்.

சில விஷயங்களில் மட்டும் சங்கம் மாறவேயில்லை. அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அசைக்க முடியாதபடி சுவையான சிற்றுண்டி வகை. வியாழக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும் பாதாம் சட்டினிக்கு மைல் கட்டி நிற்கும் கூட்டம். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அரசியல் பேசக்கூடாதென்ற விதிகளுக்குட்பட்டு, பெரும்பாலும் காதல் பிரச்னை பற்றிய வம்பு, அரட்டை, துக்கப் பரிமாறல். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் இளைய சமுதாயத்திற்கு அறிவுரை சொல்லி, சில சமயம் பிரச்னை தீர்த்து, பல சமயம் குட்டையைக் குழப்பித் தள்ளும் பேர்வழிகள். இவர்களில் தனித்து நின்று சாதனை புரியும் பேராசிரியர் அன்புமல்லி.

சற்றே பெண்மையான பெயராக இருந்தாலும், ஒருவேளை அதனால் தானோ என்னவோ, அன்பு சாருக்குக் காதல் அனுபவம் அதிகம். காதலித்த அனுபவம் குறைவு, காதலிக்கப்பட்ட அனுபவம் அதைவிடக் குறைவு என்றாலும், காதல் தொடர்பான அனுபவம் எக்கச்சக்கம். திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்தக் காலத்தில் அன்புமல்லியின் அப்பா லன்டனில் இருந்தபோது அவருக்கிருந்த காதல் நெருக்கடியைத் தீர்த்து வைத்த மல்லினர் என்பவரின் நினைவாக, இவருக்கு மல்லி என்ற இடைப்பெயரை சேர்த்து அன்புமல்லி என்ற பெயரைக் கொடுத்ததாகக் கேள்வி. உண்மை விவரம் தெரியாது. அனாவசியமாக வம்பு அரட்டை என்று போக மாட்டார். ஆனால் காதல் பிரச்னை தீர வழி கேட்டு வருபவருக்கு, இல்லை எனாது அறிவுரையும் உதவியும் வழங்கும் வள்ளல். காதல் சாமியார். திருவாளர் அன்புமல்லி செல்வநாயகம்.

இனி, கடத்தல் கல்யாணம்.


    வேர்கடலைச் சங்கத்தில் உறுப்பினர் கூட்டம் குறைந்து விட்டது. பொருளாதார நெருக்கடியா தெரியவில்லை, வேர்கடலைச் சங்கத்தில் முன்போல் இளைஞர் கூட்டம் வருவது இல்லை. இளைஞர் கூட்டத்துக்கு அஞ்சி ஒதுங்கியிருந்த 'நாற்பதுக்கு மேல்' கூட்டம் இப்போது பெரும்பாலும் ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டதன் பாதிப்பு, சங்க அறை அலங்காரத்திலிருந்து மதுபானம் சாப்பாடு வரை தெரியத் தொடங்கியது. அறைகளிலிருந்த படங்கள் விலகி வெள்ளையடிக்கப்பட்டிருந்தன. சிற்றுண்டிகளில் உப்பு குறைக்கப் பட்டிருந்தது. மதுபான வகைகளும் குறைந்திருந்தன.

சாய், நெடுமாறன், சித்து மூவரும் உள்ளே நுழைந்த போது, மாலையை விழுங்கிக் கொண்டிருந்தது மார்கழி இரவு. உள்ளே வந்த மூவரும் திடுக்கிட்டனர்.

"என்னடா நெடு, சாவு வீட்டுக்கு வந்துட்டமா? எல்லாம் போற கேசா இருக்குதேடா?" என்றான் சாய்.

"வேர்கடலை சங்கமா, வேற ஏதாவது சங்கமா? பெர்சுங்க கொட்டமா இல்ல இருக்கு?" என்றான் சித்து.

"சமரசம் உலாவுதுடா, விடு. எகானமி தடுக்கி விழுந்திடுச்சு இல்ல? இதுங்களுக்கு நேரம். அங்க பாருடா, கந்த சஷ்டி படிக்குற கிராக்கி. நம்ம பக்கத்துல வர்றதுக்கு முன்ன ஓடிலாம்டா" என்றான் நெடு.

"இருடா, அன்புமல்லியைப் பாக்க வந்தோம். பாத்துட்டு போவோம்" என்றான் சித்து.

வழக்கமாக உட்காரும் இடத்தில் அன்புமல்லியைக் கவனித்தனர். தனியே அமர்ந்து ஸ்காச் அருந்திக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த சாய், "அதோ இருக்காருடா" என்றான். "சித்து, வந்த காரியத்தை முடிச்சுகிட்டு சட்டுனு போயிறலாம், என்ன? விட்டா, அவரு ஏதாவது கதை சொல்றேனு தொடங்கிடுவாரு, ஜாக்கிரதை".

மூவரும் அன்புமல்லி அருகே வந்து அமர்ந்தனர். "எப்படி இருக்கீங்க?" என்றார் அன்பு.

"கல்யாணம் சார்" என்றான் சித்து. "நீங்க கொடுத்த ஐடியாவை வச்சு என் காதலை நிறைவேத்திக்கிட்டேன் சார்."

"அப்படியா?" என்றார் அன்பு. "என்ன ஐடியா கொடுத்தேன்?"

"அதான் சார், நீங்க உங்க மருமகன் சிவாவைப் பத்தி சொன்னீங்களே? சிகாகோல ஒரு பெண்ணை லவ் பண்ணி அவங்க அப்பா அம்மாவை பயமுறுத்தி கல்யாணம் செஞ்சுகிட்டதா சொன்னீங்களே? அதை வச்சுத் திட்டம் போட்டு இப்ப என்னோட கல்யாணமும் நடக்கப் போகுது சார். இந்தாங்க அழைப்பு. அடுத்த மாசம் கல்யாணம். நீங்க கண்டிப்பா வரணும் சார்" என்றபடி சித்து ஒரு திருமண அழைப்பை அவரிடம் கொடுத்தான். வாங்கிக் கொண்ட அன்புமல்லி, "சந்தோசம், வாழ்த்துக்கள்" என்றார்.

"ஓடிறலாம்டா" என்றான் சாய், மெதுவாக.

"ஆமா, இப்ப ஞாபகத்துக்கு வந்திடுச்சு. காசு சேத்தபின்னே கட்டிக்கலாம்னு உன் காதலி சொன்னதா சொல்லி ஐடியா கேட்டே, ஞாபகம் வந்திடுச்சு"

"கழண்டுக்க" என்றான் சாய், மறுபடி.

"என்ன செஞ்சே? விவரமா சொல்லு" என்றார் அன்பு.

"நேரமாயிடுச்சுல்ல நெடு? நீ எங்கியோ போவணும்னு சொன்னியே?" என்றான் சாய். "நானா, இல்லியே?" என்ற நெடுவின் காலில் செருப்பை வைத்து அழுத்தினான்.

"கலாவைக் கடத்திக்கிட்டு போய் அவ அப்பா அம்மாகிட்டே கல்யாணம் செஞ்சு வைக்க மிரட்டினோம்; அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. எல்லாம் உங்க ஐடியா தான் சார்" என்றான் சித்து நெகிழ்ந்து போய்.

"அடடா, வெரி குட். வெரி குட். இப்ப எல்லாம் ஞாபகம் வந்திடுச்சு. என் அத்தை பையன் கஜா இப்படித் தான்" என்று தொடங்கினார் அன்பு.

"முன்னாலயே சொல்லிட்டீங்க சார்" என்றான் சாய்.

"இல்லடா, சொல்ல ஆரம்பிச்சாரு. கதை எங்கடா சொன்னாரு?" என்றான் நெடு.

"கூமுட்டை" என்றான் சாய், உரக்க.

அன்புமல்லி எழுந்து, "உக்காருங்கப்பா. உலகமே காதல்ல தான் இயங்குது. காதல் கதையெல்லாம் பொறுமையா சொல்லணும், கேக்கணும்" என்று மூவர் தோளையும் அழுத்தி உட்கார வைத்தார். சிற்றுண்டி பானம் தரவழைத்தார். "என்னோட அத்தை பையன் கஜா... என்ன உதவி வேணும்னாலும் என் கிட்டே தான் வருவான். இப்படித்தான் ஒரு நாள்" என்று சொல்லத் தொடங்கினார்.

ஜா என் அத்தையின் கடைக்குட்டி.

ஈர்குச்சி தலையில ஒரு வேர்கடலை வச்சுப் பாத்தீங்கன்னா கஜா மாதிரியே இருக்கும். அவன் அத்தனை ஒல்லி. பிறந்த போது அவனை எடுத்த டாக்டர், "இங்கே தான் வச்சேன், காணோமே?" என்று ஒரு மணி நேரம் அவனைத் தேடினதாகக் கேள்வி. கஜா சின்ன பிள்ளையா இருந்தப்ப, என் அத்தை வீட்டுல வேகமா விசிறக் கூட மாட்டாங்க. "என்னப்பா, உங்க வீட்டுல உனக்கு சாப்பாடு போடுறாங்களா இல்லையா?" "பாத்துபா, வெளிலே காத்து பலமா அடிக்குது, நீ வேறே இப்ப ஏன் வெளில போவணும்றே?" "மண்டை மட்டும் பெரிசா இருக்கு, கை கால் உடம்பெல்லாம் வரைஞ்சாப்புல இருக்கே?" என்று அவனைப் பற்றிக் கேட்காதவரோ கிண்டல் செய்யாதவரோ கிடையாது. ஒவ்வொரு தீபாவளிக்கும், வீட்டில் மற்ற பிள்ளைகளுக்குத் துணி வாங்கி தைச்சது போக மிச்சமிருக்கும் துணியில் கஜாவுக்கு இரண்டு மூன்று டிரவுசர் சட்டைங்க தைச்சுடுவாங்கன்னா பாத்துக்குங்க. பள்ளிக்கூட சயன்ஸ் டீச்சர் எலும்புக்கூட்டுக்கு பதிலா அவனை நிக்க வச்சு பாடம் நடத்தியிருக்காங்க.

இத்தனைக்கும் அவனுக்கு சாப்பாட்டிலோ எதிலுமே குறை வைக்காம அன்பாத்தான் நடத்தினாங்க அத்தையும் மாமாவும். இருந்தாலும் உடல்வாகு சரியாக அமையாம போனதுனால சின்ன வயசுலருந்தே அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. அவனை விட நான் பனிரெண்டு வயது பெரியவன் என்பதால் என்னோட மட்டும் நெருங்கி நம்பிக்கையாப் பழகுவான். அவனுக்குப் பத்து வயசோ என்னவோ இருக்கும்... நான் மேல் படிப்புக்காக லன்டன் போயிருந்தேன்.

"நிறுத்துங்க சார்" என்று மறித்தான் நெடு. "குருநானக்ல பிஎஸ்சி பாடனி படிக்கவே நீங்க ததிங்கிணத்தோம் போட்டதா சொல்றாங்க, இதுல எங்கே லன்டன் போனீங்க? இதானே வேணாங்கறது?" என்றான். "காதெல்லாம் மணக்குது சார்".

"நீ கேள்விப்பட்டது சரி தான். லன்டன் படிக்கப் போனதும் உண்மை தான். அது வேறே கதை" என்றார் அன்புமல்லி.

பதறிப் போன சாய், "ஏண்டா டேய், உனக்கு அறிவு கிறிவு செதறிப் போச்சா?" என்று நெடுவை இடித்தான். அன்புமல்லியைப் பார்த்து, "சீக்கிரம் இந்தக் கதையைச் சொல்லி முடிங்க சார்" என்றான்.

அன்புமல்லி தொடருமுன் முட்டைக்கோஸ் பகோடா, வெந்த வாழைத்தண்டு பஜ்ஜி, மாங்காய் இஞ்சி-தக்காளிப் பச்சடி, வியாழக்கிழமை வழக்கப்படி பாதாம் சட்டினி, பீட்ரூட் குல்கந்து, சாத்துகுடி ஜூஸ், அன்புமல்லிக்காக சர்க்கரை கலக்காத காபி என்று சிற்றுண்டி, பான வகைகளைக் கொண்டு வைத்தான் பணியாள். "மணமும் நிறமும் தூக்குது, ஒரு கை பாருங்க எல்லாரும். சிங்காரம், இந்தா வச்சுக்க" என்று ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்த அன்புமல்லி, பொன்னிறத்தில் முறுகலான ஒரு வாழைத்தண்டு பஜ்ஜியை எடுத்து சற்று நேரம் புரட்டிப்பார்த்து ரசித்து விட்டு, சட்டினியிலும் பச்சடியிலும் மாற்றி மாற்றி இரண்டு மூன்று முறைத் தோய்த்தெடுத்து சற்றே ஒலியெழும்பக் கடித்து ரசித்து மென்றபடி, தொடர்ந்தார்.

லன்டன்லந்து திரும்பி வந்து வருசக்கணக்குல சென்னையிலேயே தங்கிட்டனா? எதுனா கல்யாணம் காரியம் தொட்டு மட்டும் ஊர்ப்பக்கம் போனதாலே சொந்தக்காரங்களோட கொஞ்சம் தொடர்பு விட்டுப் போயிடுச்சு.

திடீர்னு ஒரு நாள் ராத்திரி என் வீட்டு வாசல்லே வயசுப் பையன் ஒருத்தன் வந்து நின்னான். அவன் வச்சுக்கிட்டிருந்த ஈஸ்ட்மென் கலர் தாடி மீசை அரை இருட்டுல பயமுறுத்தினாலும், குச்சி உடம்பும் வேர்கடலைத் தலையும் காட்டிக் கொடுத்துடுச்சு. பேன்ட் சட்டை போட்டிருக்கான், அவ்வளவு தான். "கஜா, வா, வா, உள்ளே வா" என்று அவனை அழைத்து மின்விசிறியை நிறுத்தினேன். "மன்னிச்சுடுபா, பழக்க தோசம். இப்ப கொஞ்சம் ஒடம்பு தேறிடுச்சு போலிருக்கே?" என்றேன்.

"அன்பண்ணா, நீ தான் எனக்கு உதவி செய்யணும்" என்றான். வாழ்த்து விசாரணை எல்லாம் ஒதுக்கிவிட்டு நேரே விசயத்துக்கு வந்தான்.

"என்ன சொல்லு?"

"ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். நீ தான் எப்படியாவது அவளை எனக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கணும்". மறுபடியும் நே வி வந்தான்.

சாதாரணமாகவே காதல் பிரச்சினை என்றால் உதவத் தயாராக இருக்குறவன் தானே நான்? அதுலயும் என்னோட சொந்த அத்தை மகன் கேட்டா மாட்டேனு சொல்வனா? அதுலயும் என்னோட அத்தை பிள்ளைங்கள்ளயே கஜா எனக்கு மிகவும் பிரியமானவன். இருந்தாலும் இவனை யார் காதலிக்கப்போறாங்க என்று எனக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது. "யாருடா பொண்ணு?" என்றேன்.

"என்னோட அத்தை பொண்ணு சுபா" என்றான்.

சுபா. எனக்கு லேசாக நினைவுக்கு வந்தது. அந்தப் பெண்ணை சின்ன வயசுல பார்த்திருக்கிறேன். சில வருசங்களுக்கு முன்னால் ஒரு கல்யாணத்தில் பார்த்த நினைவும் வந்தது. அழகான பெண்ணை 'கிளி போல் இருப்பாள்'னு சொல்றோம், இல்லையா? சுபா உண்மையிலேயே கிளி போலத்தான் இருப்பாள். கண்கள் இரண்டும் முகத்தின் இரு மூலையில் இருக்க, பெரிய மூக்கு நுனியில் நன்றாக வளைந்து கிளி போலவே இருப்பாள். போதாக்குறைக்கு சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வாள். "என்னம்மா எப்படி இருக்கே?" என்று கேட்டால், "நல்லா இருக்கேன், நல்லா இருக்கேன், நல்லா இருக்கேன்" என்று பல முறை சொல்வாள். அடுத்த கேள்வி கேட்கும் வரை நிறுத்த மாட்டாள். ஒரு முறை வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருவர் தெரியாத்தனமாக "உன் பெயர் என்ன பாப்பா?" என்று கேட்க, "என் பேரு சுபா" என்று வலிய அவரைத் தொடர்ந்து சென்று இருபது முறைக்கு மேல் சொன்னதாகவும், வந்த விருந்தினர் இவளை நிறுத்த வழி தெரியாமல் ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டதாகவும் என்னுடைய அத்தை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

"யாருடா, கிளி மூக்கு சுபாவா?" என்றேன்.

கஜாவின் முகம் கறுத்தது. ஏற்கனவே அவன் கறுப்பு நிறம் தான் என்றாலும், இப்போது கன்னத்தில் அத்தனை கறுப்பும் சேர்ந்து அறையில் வெளிச்சம் மங்கி கரன்ட் போய் லோ வோல்டேஜில் திரும்பி வந்தது போல இருந்தது. "அன்பண்ணா, அவளைக் கிண்டல் செய்யாதே" என்றான்.

"செய்யல. சுபா உன் அத்தை பொண்ணு தானே? உன் அத்தை மாமா கிட்டே சொல்லி கல்யாணம் செய்துக்க வேண்டியது தானே?" என்றேன்.

"எங்க அத்தைக்கும் மாமாவுக்கும் என்னைப் பிடிக்காது" என்றான்.

"ஏம்பா? உனக்கென்ன குறை? அதான் எக்கச்சக்க சொத்து இருக்குதே?" என்றேன். என்னுடைய தாத்தா என் அத்தைக்கு எழுதிய நிலம் நகைக்கு மேல், புகுந்த வீட்டில் என் அத்தையின் கணவர், அதான் என் மாமா, பரம்பரை மிராசுதார்.

"நான் பாக்குறதுக்கு கறுப்பு, உடல்வாகும் இல்லேனு சொல்றாங்க" என்றான்.

"கிளிமூக்கு கிளிநாக்கு பொண்ணைப் பாக்குறப்ப நீ எவ்வளவோ மேல்" என்று சொல்ல வந்தேன். அடக்கிக் கொண்டேன்.

"படிப்பு வேறே இல்லனு சொல்றாங்க" என்றான்.

"ஏண்டா, நீ தான் ப்ளஸ்டூ பாஸ் பண்ணிட்டயே?" என்றேன். அந்தப் பெண் பத்தாவது கூட படித்தாளா என்று சந்தேகம் தான், இருந்தாலும் கேட்கவில்லை.

"நல்லா படிச்ச பையனா சுபாவுக்கு பாக்கணும்னு எங்க மாமா சொல்றாரு" என்றான்.

"சரி, சுபாவுக்கு உன் மேலே காதல் உண்டா?"

"நிச்சயமா அண்ணா. அதனால தானே.." என்று அவன் சொல்லி முடிக்குமுன், "அப்ப இது என்னப்பா கூத்து? இத்தனை சொத்து இருக்கு. சொந்தம் வேறே. அதையெல்லாம் பார்க்காமே... நீ என்ன பொறுக்கியா ரவுடியா? நல்ல குணமான பையன்..ஒருத்தருக்கொருத்தர் விரும்புறீங்க. இதுக்கு மேலே என்ன வேணும்?" என்றேன்.

"ஒரே ஒரு தடவை ஜெயிலுக்குப் போனதை காரணம் காட்டி முடியாதுனு சொல்றாங்க" என்றான்.

திடுக்கிட்டேன். "ஜெயிலுக்கு போனியா?"

"என்னோட மாமாவை எனக்குப் பிடிக்காதுனு தான் உனக்குத் தெரியுமே அன்பண்ணா. ஒரு தடவை அம்பீஸ் ஹோட்டல் வெளியே ஒரு டிவிஎஸ் பைக்கு இருந்திச்சு. எங்க மாமாவுடைய வண்டி போலவே இருந்ததால சத்தம் போடாம ரெண்டு டயர்லயும் ஆணி ஏத்திட்டு வந்தேன். ஆனா அது ஒரு இன்ஸ்பெக்டர் வண்டி. திருடனைப் பிடிக்க மப்டியிலே ஹோட்டலுக்கு வந்திருந்தாராம். எனக்கு எப்படி தெரியும்?"

"டயர்ல ஆணி ஏத்துனதுக்கா ஜெயில்லா போட்டாங்க?"

"இல்ல. என்னை அடிக்க வந்த வண்டிக்காரனை போலீசுனு தெரியாம நல்லா அடிச்சு போட்டேன். போலீஸ் இன்ஸ்பெக்டரை அடிச்சதுக்காகவும், வண்டியை நாசம் செய்த காரணத்துக்காகவும் திருடனோட கூட்டாளினு என்னைப் பிடிச்சு ரெண்டு நாள் உள்ளே தள்ளிட்டாங்க" என்றான்.

"பலே பலே" என்றேன். "போலீஸ் இன்ஸ்பெக்டரை அடிச்சுப் போட்டியா? பாத்தா ஒட்றை மாதிரி இருக்கே? நம்ப முடியலயேபா?"

"ரெண்டு மூணு கல்லை எடுத்து குறி வைச்சு அடிச்சேன். மூக்கிலயும் மண்டைலயும் புண்ணாக்குலயும் குறி வச்சு அடிச்சு ரத்தம் வர மாறி ஆயிடுச்சு. அண்ணா... நான் குறி வச்சேன்னு வை, எதுவுமே தப்பாது. நீ சும்மா ஒட்றைனு சொல்லிக்கிட்டிருக்காதே" என்றான்.

"அப்ப திருட்டு, கொலை ரெண்டு தான் பாக்கினு சொல்லு. அதையும் செஞ்சுட்டா ஒண்ணு சாமியாராயிடலாம் இல்லே சீப் மினிஸ்டராயிடலாம்" என்றேன்.

"ஒரு விதத்துல கொலை மட்டும் தான் பாக்கினு சொல்லணும்ணா" என்றான் மெதுவாக.

"அடப்பாவி, என்ன திருடினே?" என்றேன். கஜா மேல் எனக்கு ஒரு புது மதிப்பே வந்தது.

"சுபாவை இழுத்துக்கிட்டு ஓடி வந்துட்டேன். அவங்கப்பன், அதான் என் மாமன், சுபாவைக் கடத்திட்டு வந்துட்டதா போலீஸ்ல புகார் கொடுத்துட்டான். பேப்பர்ல வேறே என் போட்டோவை போட்டு சன்மானம் கொடுக்குறதா சொல்லியிருக்கான். இதோ பார்" என்று தினமலர் உள்ளூர் பிரதியைக் காட்டினான்.

"அதான் தாடி மீசையா? பச்சைக் கலர்லே தாடி எவனாவது வைப்பானா? யோசிக்க மாட்டியா?" என்றபடி தினமலரை வாங்கிப் பார்த்தேன். அதிர்ந்தேன். பேப்பரில் அவன் போட்டோவை பார்த்ததால் அல்ல. பேப்பரை நீட்டுமுன் அவன் சொன்னது உறைத்ததால். "எங்கடா, சுபா எங்க இருக்கா இப்போ?"

"வெளியில தான், நான் சொல்ல வரதுக்குள்ள நீ கேள்வி மேலே கேள்வியா கேட்டு..." என்று சொல்லிக் கொண்டிருந்தவனைப் பொருட்படுத்தாமல் கதவைத் திறந்து வெளியே பார்த்தேன். அரை இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. "எங்கடா.." என்று கேட்கும் போது வெளி கேட் அருகே சுவர் அசையறாப்புல இருந்துச்சு. அந்த சுவர் என்னைப் பார்த்து வருவதைப் பார்த்து இன்னும் அதிர்ந்தேன். அது சுவர் இல்லை, சுபானு தெரிந்ததும் பயந்தே போனேன்.

"இவளாடா?" என்றேன் கஜாவிடம்.

"ஆமாண்ணா.. நீ அவளை எப்ப கடைசியா பாத்தே? கொஞ்சம் சதை போட்டிருக்கா அவ்வளவு தான்" என்றான்.

"கொஞ்சமா, என்னடா இது? அழிச்சா நாலு சுபா பண்ற அளவுக்கு கிழக்கு மேற்கா வளர்ந்திருக்கா, ஆமா இவளை எப்படிரா இழுத்துக்கிட்டு ஓடி வந்தே? இழுக்க முடியற மாதிரியா இருக்கா? ஆள் மோதி லாரி மரணம்னு சொல்லிக் கேட்டிருக்கேன், இவளை வச்சுத் தான் சொன்னாங்க போ..." என்று நான் சொல்லிக் கொண்டே போக, கஜா என்னைத் தடுத்தான். "அண்ணா, அவ என் காதலி, அவளைப் பத்திக் கிண்டலா பேசுறது நல்லா இல்லே. இன்னொரு வார்த்தை கிண்டலா சொன்னே.." என்றபடி அருகிலிருந்த ஒரு பேப்பர் வெயிட்டை எடுத்து உருட்டினான்.

அவனுடைய குறியைப் பற்றி முன்னமே சொல்லியிருந்ததால் கொஞ்சம் தயங்கி, "சும்மா சொன்னேம்பா. அதை அங்கியே வை" என்று நான் சொல்லி முடிக்கவும், சுவர் அதாவது சுபா அசைந்து அசைந்து உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவளைப் பார்த்ததும் எனக்கே கொஞ்சம் பாவமாகி விட்டது. "என்னம்மா, வெளியிலயா நிக்குறது? உள்ளே அவனோட வர வேண்டியது தானே? உள்ளே வா" என்றேன்.

கிளி மூக்கு சுபா சுவர் போல இருந்தால் என்ன? அண்டாத் தலை கஜா குச்சி போல் இருந்தால் என்ன? அவர்களுக்குள் காதல் வளர்ந்து கொழுக்கட்டையாகி இருக்கிறது என்பது தானே முக்கியம்? உதவி கேட்டு என்னிடம் வந்தவர்களை எப்படி கைவிட முடியும்? அதுவும் காதல் நிறைவேற உதவி கேட்டு வந்திருக்கிறார்கள், விட முடியுமா?

வாசக்காலை உடைக்காமல் பக்கவாட்டாக உள்ளே வந்தவள், என்னைப் பார்த்து புன்னகைத்தாள். "உன்னை நம்பித்தான் வந்திருக்கோம் அன்பண்ணா" என்று அவள் சொன்னதைக் கேட்டதும் கோடைகாலக் கிணற்று நீர் போல் என் கிண்டலெல்லாம் வற்றி விட்டது என்றாலும், அவள் திரும்பத் திரும்ப அதையே சொல்லத் தொடங்குவதற்குள் முந்திக் கொண்டேன். "சரி, தெருக்கோடி ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வரேன். சாப்பிட்டு இன்னிக்கு இங்கியே படுத்து தூங்குங்க. காலைல எந்திரிச்சு யோசிக்கலாம்" என்றபடி அவர்களை ஒரு அறையில் தங்கச் செய்துவிட்டு வெளியே வந்தேன். ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வரும் சாக்கில் ஊரில் என் அத்தையுடன் தொலை பேசினேன். அன்போடு பேசினார்.

"நீயே உருப்படாத பய. உன்னாண்ட தான் வந்திருக்காங்களா ரெண்டு பேரும்? கழுதை கெட்டா குட்டிச்சுவரு. சரியாத் தான் இருக்குது. குட்டிச் சுவருன்னதும் தோணுது. அவளை அங்கியே விட்டுறு, எதுனா லாரி கீரி மோதி நொறுங்கட்டும். ஒரு குழி தோண்டி கஜாவை ஆழம் பாக்க இறங்க சொல்றதா சொல்லிட்டு கபால்னு மண்ணைப் போட்டு மூடிறு. இனி எனக்கு போன் செய்யாதே" என்ற போனை வைத்த என் அத்தையின் குரலில் தொனித்த ஆதரவைக் கேட்டு நெகிழ்ந்து போனேன். உடனே அவர்களை ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.

ழியெல்லாம் சுபாவும் கஜாவும் என்னுடன் பேசப் பிடிக்காமல் முறைத்துக் கொண்டே வந்தார்கள். கம்பார்ட்மென்ட் பகுதியில் என்னைத் தவிர சுபாவும் கஜாவும் தான். பாண்டியன் எக்ஸ்பிரஸ் வழக்கத்தை விட மெதுவாகச் சென்றதால் அருகிலிருந்த பயணிகள் சுபாவை அடிக்கடி முறைத்துப் பார்த்தனர், என்னவோ அவள் தான் காரணம் போல. கஜாவின் மீசை தாடியை வருவோர் போவோரெல்லாம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விருத்தாசலத்தில் வண்டி ஏறிய குடும்பத்தின் ஒரு பெண் குழந்தை, அவனைப் பார்த்து விட்டுத் தொடங்கிய அழுகையைத் திண்டுக்கல்லில் அவர்கள் இறங்கிப் போகும் வரை நிறுத்தவில்லை. பால் குடிக்காமல் அடம்பிடித்துக் கொண்டிருந்த இன்னொரு குழந்தையை அதன் தாய் எங்கள் காதில் விழும்படி, "டேய், சாப்பிடுறயா இல்லை பக்கத்து செக்சன்ல பிள்ள புடிக்கறவன் இருக்கான், அவனைக் கூப்பிடட்டுமா?" என்று மிரட்டிக் கொண்டிருந்தாள். "என்னடா இது, மீசை ஒரு கலர்லயும் தாடி ஒரு கலர்லயும் வச்சுகிட்டு வந்தா மசான கொள்ளை விழாவுக்கு வந்த மாதிரி இருக்கு. குழந்தை என்னடா, எனக்கே கூட பயமா இருக்குது" என்றேன். அவன் யார் பேச்சையும் பொருட்படுத்தவில்லை. மீசை தாடியையும் கழட்டவில்லை. சுற்றாமல் சண்டி செய்த மின்விசிறியைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான். டிக்கெட் கேட்க வந்த டிடிஆர் அவனைப் பார்த்துவிட்டு பயந்துபோய் மெள்ள பின்பக்கமாகவே நடந்தபடி அந்த கம்பார்ட்மென்டில் யாரிடமும் டிக்கெட் கேட்காமல் போனவர், திரும்பி வரவேயில்லை.

ஊர் வந்து சேர்ந்தும் கஜா மீசை தாடியைக் கழட்டவில்லை. முதலில் வந்த டாக்சிக்காரன் கஜாவின் பலவண்ண மீசை தாடியைப் பார்த்ததும் நிறுத்தாமலே போய்விட்டான். பிறகு வந்த டாக்சிக்காரன் சுபாவைப் பார்த்ததும் இருபதடி தொலைவிலிருந்தே ஒதுங்கி வேகமெடுத்தான். கடைசியாக ஒரு வேன் டிரைவர் எங்களை ஏற்றிக் கொண்டு என்னருகே வந்து ரகசியமாக "அந்த அம்மாவுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ்" என்றான். ஏறிக் கொண்டு, "திருப்பரங்குன்றம் போப்பா" என்றேன்.

பசுமலை தாண்டியதும் கஜா என்னுடன் பேசத் தொடங்கினான். "அண்ணா, நீ பாட்டுக்கு எங்களை இங்கே கூட்டியாந்துட்டியே. அவங்க அப்பா வேறே போலீஸ்ல புகார் கொடுத்திருக்காரு. எனக்கு பயமா இருக்கு".

தரமான புன்னகை ஒன்றை அவன் பக்கமாக வீசினேன். "அத்தை தான் உங்களை உடனே கையோட கூட்டியாரச் சொன்னாங்க. சொந்த ரத்தமும் நரம்பும் விட்டுப் போவுமா? நீங்க ரெண்டு பேரும் என்னைப் பாக்கத்தான் வந்தீங்கன்னு சொன்னதும் அப்படியே உருகிப் போயிட்டாங்க. என்னைப் பத்தியும் உங்களைப் பத்தியும் ரொம்ப சாரிச்சுட்டு, அடுத்த ரயிலேறி வரச்சொன்னாங்க. வந்த உடனே ரெண்டு பக்கமும் கலந்து பேசி, கல்யாணம் செய்து வக்கறதா சொன்னாங்க"

"எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை" என்றார்கள் இருவரும், ஒரே நேரத்தில். இது அல்லவோ காதல்!

"கவலைப் படாதீங்க" என்றேன். கஜாவிடம் "முதலில் சுபா வீட்டுக்குப் போவோம். அவளை வீட்டுல சேத்தபின்னே நம்ம வீட்டுக்குப் போவோம்" என்றேன்.

சுபா வீட்டில் எங்களைப் பார்த்ததும் அவர்களுக்கு ஒரே சந்தோசம். ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். சுபாவின் அப்பா என் கையைப் பிடித்து குலுக்கிய குலுக்கலில் இரண்டு மூன்று நகங்கள் பெயர்ந்து விட்டன. அவளுடைய அம்மாவும் அப்பாவும் எங்களை வரவேற்ற விதத்தைப் பார்த்ததும் எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. "என்னடா இப்படி செய்யலாமா?" என்று சுபாவின் அம்மா கஜாவைக் கட்டிக் கொண்டு அழுதாள். சுபாவின் அப்பாவோ "மாப்பிள்ளை" என்று அவன் கையைப் பிடித்துக் குலுக்கத் தொடங்கினார். "உள்ளே வாங்க" என்று எங்களை அழைத்துச் சென்றனர்.

"என் பெண்ணை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்ததற்கு ரொம்ப நன்றி, அன்பு" என்று என் கையை மறுபடி குலுக்க வந்தார் சுபாவின் அப்பா. ஒதுங்கிக் கொண்டு, "பரவாயில்லை, இது என் கடமை. சிறிசுங்க விரும்பினாங்கன்னா நாம அவங்க விருப்பத்தை நடத்தி வைக்கணும். இவங்க கல்யாணத்துக்கு நீங்க தடையா இருக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். வழியெல்லாம் அதான் இவங்க கிட்டே சொல்லிக்கிட்டே வந்தேன்" என்றபடி சுபாவையும் கஜாவையும் பார்த்தேன். அவர்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை என்றாலும் என்னைப் பார்த்த பார்வையில் நன்றியும் பெருமையும் இருந்தது.

"ஆமாமா, இப்படி ஓடிப் போயிருவாங்கன்னு தெரியாமப் போயிடுச்சே. நீங்க வீட்டுக்குப் போங்க தம்பி. கஜா, நீயும் தான். நாளைக்கு நாங்க பரிசம் போட வந்துடறோம் என்ன? என் மச்சான் என்ன எதிர்த்தாலும் நான் பாத்துக்கறேன்" என்றார் சுபாவின் அப்பா. "ஆமாம் கஜா, உன் அத்தை நான் இருக்கேன். எல்லாம் பாத்து ஏற்பாடு செய்யுறேன். வீட்டுக்கு போய் அண்ணங்கிட்டே சொல்லுங்க போங்க" என்றாள் சுபாவின் அம்மா.

நானும் கஜாவும் வீட்டுக்கு வந்தோம். இங்கேயும் வரவேற்பு பலமாக இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தோம். வரும்போதே அத்தை "குட்டிச்சுவரும் கழுதையும் ஒண்ணா வருதே" என்றார். என் மாமனோ ஒரு செருப்பை எடுத்து எங்கள் பக்கம் வீசினார். "வாடா பொறுக்கி. என் மானத்தை எடுக்க வந்த கோடாலிக் காம்பு" என்று அன்புமொழியுடன் இன்னொரு செருப்பை எடுத்து கஜா பக்கம் வீசினார். முதல் செருப்பு சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த ஒரு சிறு பெண் தலையிலும், இரண்டாவது செருப்பு பழைய துணிக்குப் பாத்திரம் விற்றுக் கொண்டிருந்த ஒரு ஆள் தலையிலும் விழுந்தது. "பழைய பாத்திரம் தேவையில்லேன்னு வாயில சொல்லுங்கண்ணே, செருப்பாலயா அடிக்குறது? இந்த மருதக்காரகளே இப்படித்தேன்" என்று புலம்பிக் கொண்டே போனான். சிறு பெண்ணோ சைக்கிளைப் போட்டுவிட்டு, "ஆத்தா ஆத்தா" என்று கத்திக் கொண்டே எதிர் வீட்டுக்கு ஓடினாள்.

இவருடைய மகனா கஜா? குறி தப்பாமல் போலீசை அடித்துப் போட்ட மகனின் குறி எங்கே, எதிரில் இருப்பவரை விட்டு எல்லாரையும் அடித்த தந்தையின் குறி எங்கே? "நல்ல குறி மாமா" என்றபடி கஜாவை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். "எங்கடா, எங்க வீட்டுக்குள்ளாற போறீங்க?" என்றபடி என் பின்னாலேயே ஓடி வந்தார்கள் அத்தையும் மாமாவும்.

"அத்தே... இப்ப என்ன ஆயிபோச்சு? உங்க பையன் கஜா. உங்க மருமக சுபாவை விரும்புறான். இதுல என்ன குறை கண்டீங்க? சொத்தும் பத்தும் சொந்தத்துக்குள்ளே நிக்கப் போகுது. இவனுக்கும் வயசாயிடுச்சு. அவளுக்கும் வயசாயிடுச்சு. ஆனா உங்க அனுமதியோடத் தான் கல்யாணம் செஞ்சுக்க விரும்புறாங்க. அதை பெரியவங்க நீங்க பாத்து நடத்த வேணாமா? போவுது விடுங்க அத்தை. உங்க நல்ல மனசு எனக்குத் தெரியாதா?" என்று இன்னொரு கோணத்தில் பேச்சைத் தொடங்கினேன்.

"அத்தை கூட எங்களை ஏத்துக்கிட்டு பரிசம் போட வரதா சொல்லியிருக்காங்க. நீங்க என்னடான்னா செருப்பால அடிக்கிறீயளே?" என்றான் கஜா.

"என்னடா சொன்னே? பரிசம் போட ஒத்துக்கிட்டாங்களா?" என்றார் இந்த அத்தை. எல்லா விவரத்தையும் சொன்னோம்.

"சரி, இவன் தலை விதி இவ்வளவு தான். கட்டின பிறகு கோபம் வந்து அவ கொஞ்சம் தவறிப் போய் இவன் மேலே உக்காந்தா இவன் சட்டினி" என்றார் மாமா. "சரி சரி, சாப்பிட்டுப் படுங்க. காலையில் பாப்போம்".

றுநாள் காலை பத்து மணி சுமாருக்கு எழுந்தேன். பல் விளக்கி, காபி குடித்து விட்டு அத்தை கொடுத்த இரண்டு இட்டிலி, வெங்காயச் சட்டினி, மெதுவடை, பொங்கல் எல்லாவற்றையும் விழுங்கினேன். இன்னொரு கப் காபி குடித்து விட்டு, "கஜா எங்கே?" என்றேன்.

"சுபா வீட்டுக்குப் போயிருக்கான். நீ சொன்னது போல அவங்க பரிசம் கேட்டு வந்தாங்கன்னு வை, எதுனா பதிலுக்கு செய்யணும். பூ பழம் வாங்கியாங்கன்னு மாமனையும் இப்பத்தான் அனுப்பி வச்சேன். நீ எப்படி இருக்கே? நீ ஒரு கல்யாணம் கட்டிக்கிட்டா அண்ணன் ஆத்மா சாந்தியாவும், ம்ம்ம்ம்" என்று பெருமூச்சு விட்டார்.

"என்னை விடுங்க அத்தே. நீங்க போன்ல அப்படிப் பேசினதும் இவங்க கிட்டே எதுவும் சொல்லாம பயந்துகிட்டே வந்தேன். நல்ல வேளையா சுபா வீட்டுல சுமுகமா போயிடுச்சு. பிழைச்சோம். உங்களுக்கு இந்தக் கலியாணத்துல ஒரு குறையும் வராது பாருங்க. ரெண்டு பேரும் அமோகமா இருப்பாங்க" என்றேன்.

"எனக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்கலை. பொய்யா சொல்லப் போறேன்? ஆனா இவன் என் மகன். பேரைக் கெடுத்துக்கிட்டுத் திரியாமே இருந்தா சரிதான்" என்று என் அத்தை சொல்லி முடிக்கவும் கஜா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

மிகக் கோபமாக உள்ளே வந்தான். "உன்னை நம்பி வந்தோம் பாரு, என் புத்தியைச் செருப்பால அடிக்கணும்ணா" என்றபடி, என் மேல் எறிவதற்கு இசைவாக ஏதாவது இருக்கிறதா என்று தேடினான்.

"என்ன ஆச்சு?" என்றேன்.

"அத்தை வீட்டுக்குப் போனனா? அங்கே சுபாவைக் காணோம்."

"எங்கனா கடைக்குப் போயிருப்பா"

"அத்தை மாமா கிட்டே பரிசத்துக்கு எப்ப வரீங்கனு கேட்டேன். கண்ணகி கோயில் பேயாட்டம் சிரிச்சாங்க அத்தை. மாமா ஒரு கட்டையைத் தூக்கிக்கிட்டு என்னை அடிக்க வந்தாரு. இனி இந்தப் பக்கம் வந்தா கொலை விழும்னு சொன்னாரு" என்றான்.

"என்னடா இது.." என்றார் அத்தை.

"ஆமாம். அதுக்கு மேலே அண்ணா நீ அந்தப் பக்கம் எங்கனா வந்தீன்னா உன் கையையும் காலையும் துண்டு துண்டா ஒடச்சு கண்ணகி கோவிலுக்கு மாலை போடறதா வேண்டிக்கிட்டாங்க அத்தை. அதனால நீ உடனே அங்கன போ. எங்க கலியாணத்தைத் தான் கெடுத்தே. அவங்க வேண்டுதலையாவது நிறைவேத்து போ" என்றான் கோபம் தணியாமல்.

"பதறாம பேசுடா... சுபாவைப் பாத்தியா?"

"அதான் சொன்னனே, சுபா அங்க இல்லைனு. பிறகு குத்தகை நில பங்களாவுக்கு ஓடினேன். அங்கே சுபாவை கைதியாட்டம் அடச்சு வச்சிருக்காங்க. என்னைப் பாத்து சன்னல்லேந்து கத்தினா"

"அவ கெத்துக்கு சுவரை உடைச்சுக்கிட்டு வரவேண்டியது தானே?" என்றார் அத்தை.

"நீ சும்மா இரும்மா. உங்க சொத்து பத்து எதுவும் வேணாமுன்னு தானே ஓடினோம்? சுபா அப்பவே சொன்னா வேறே எங்கனா போவம்னு. நாந்தேன் அண்ணன் கிட்ட போய் உதவி கேப்பம்னு அவளையும் கூட்டிக்கிட்டு போனேன். என்னை செருப்பால அடிக்கணும்" என்று இன்னும் கத்தினான்.

"சரி, சுபாவைக் கூட்டிட்டு வர வேண்டியது தானே?"

"நாலு தடியனுங்க வெட்டறிவாளோட காவல் நிக்குறானுங்க. அது போதாம போலீஸ்ல வேறே இன்னொரு புகார் கொடுத்துட்டாரு மாமா. என்னை உள்ளே தள்ளின அதே இன்ஸ்பெக்டர் அங்கே இருந்தாரு. ஓடியாந்துட்டேன். என்னால இங்க இருக்க முடியாது" என்று புலம்பத் தொடங்கினான்.

அதற்குள் மாமாவும் வந்து விட்டார். ஒரு கூடை பழம் பூ சகிதம். விவரம் தெரிந்ததும் கூச்சல் போட்டார். பழக்கூடையிலிருந்த மாம்பழத்தை எடுத்து என்னைப் பார்த்து எறிந்தார். அது ஜன்னல் வழியாக வெளியே போனது, யார் தலையிலாவது பட்டிருக்க வேண்டும். 'அய்யோ' என்ற குரல் மட்டும் கேட்டது.

"சரி விட்டுது சனியன். நீங்க பதறாதீங்க" என்றார் அத்தை மாமாவிடம். மாமா கோபத்துடன் மாடிக்குச் சென்று விட்டார்.

கஜாவை இழுத்துக் கொண்டு வெளியேறினேன். "வாடா, குத்தகைப் பண்ணை வரைக்கும் போயிட்டு வரலாம்" என்றேன்.

"எதுக்குடா?" என்றார் அத்தை.

"சுபாவைக் காப்பாத்திக் கூட்டியாறத்தான். பொண்ணைக் கடத்திப் போயிட்டதா பொய்ப் புகார் கொடுத்தவரு இப்ப நிசமாவே புகார் கொடுக்க வேண்டியது தான். அதுக்கு முன்னால இவங்க ரெண்டு பேருக்கும் திருப்பரங்குன்றக் கோவில்ல நானே கல்யாணம் நடத்தி வச்சுட்டுப் போயிடறேன்" என்றேன்.

"அவளை விட்டா உனக்கு வேறே பொண்ணா கிடைக்க மாட்டாங்க?" என்றார் அத்தை, கஜாவிடம்.

"அம்மா, நீ செஞ்ச முட்டைகறியை விட சுபா எனக்கு முக்கியம். அவதான் எனக்கு இந்த சன்மத்துல பெண்டாட்டி" என்றான் கஜா.

அவ்வளவு தான். அத்தை ஆடிப் போய்விட்டார். பொதுவாக அம்மா சமையலைக் கிண்டல் செஞ்சுகிட்டு, திருமணமானதும் மனைவி சமையலை "எங்கம்மா சமைக்கிறாப்புல இல்லை"னு குற்றம் சொல்லுறவங்க தான் நாம எல்லாம். இது என் அத்தைக்கும் தெரியும். ஆனா அத்தை சமையலைக் கிண்டல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. வெங்காயமும், தக்காளியும், பூண்டும், இஞ்சியும், வால்மிளகும் கலந்து அவங்க முட்டைகறி செஞ்சாங்கன்னா நாள் முழுக்க சாப்பிடலாம். கஜா முட்டைகறியை வேண்டாம்னு ஒதுக்குறதா சொன்னதும், அவன் சுபா மேலே வச்சிருந்த காதல் உண்மையானதுனு அத்தைக்குப் புரிஞ்சு போச்சு.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, ஒரு நீண்ட பெருமூச்செறிந்தார் அத்தை. பிறகு, "சரி, அப்ப நானும் கூட வரேன்" என்றார்.

எங்களுக்கு வியப்பான வியப்பு. "பொண்ணைக் கடத்தி செயிலுக்குப் போவணும்னு விதி இருந்தா, நான் என்ன செய்யட்டும்?" என்றார்.

மூவரும் கிளம்பி பண்ணைப் பக்கம் வந்தோம். பண்ணை பங்களா தாண்டி பம்புசெட்டுக்குப் பின்னால் பலாத்தோப்பு. ஒரு மரத்தடியில் நின்றபடி தொலைவிலிருந்து நோட்டம் விட்டோம். "இது நடக்காது போலிருக்கு" என்றேன்.

"ஏணா இப்ப ஜகா வாங்குறே?" என்றான் கஜா. "தடிப்பசங்களப் பாத்து பயந்துட்டியா?"

"இல்லடா. தடிப்பசங்களப் பத்தி சொன்னே சரி, அவங்க பக்கத்துலயே நின்னுட்டிருக்கறதைப் பத்தி சொன்னியா? இல்லயே?"

"நாய்க்கா இப்படி பயப்படுறீங்க?" என்றான் கஜா.

"சாதாரண நாயாடா அது? ராஜபாளையம் நாய்" என்றேன்.

"ஆமடா... உன்னோட சாதகத்துல கூட நாய் கடி பட்டுத்தேன் சாவுன்னு சோசியன் சொன்னதா அண்ணன் அடிக்கடி சொல்வாரு" என்றார் அத்தை.

"அதுவும் நாலு நாயுங்க. ராஜபாளையம் நாய்குட்டி பொறந்ததும் அதனோட அம்மா பக்கத்துல இருக்குற முதலாளி ஆளுங்களைக் கடிச்சு தான் ட்ரெயினிங் கொடுக்குமாம். கண்ணதாசன் கூட பாடியிருக்காரு, 'நாய்களிலே அவள் ராஜபாளையம், பேய்களிலே அவள் பசுமலை'னு கேட்டதில்லையா?" என்றேன்.

"சேசே, 'கனிகளிலே அவள் மாங்கனி, காற்றினிலே அவள் தென்றல்'னு பாடினாருடா" என்றார் அத்தை.

"நல்லா தெரியுமா அத்தே? எனக்கென்னவோ நாயையும் பேயையும் பத்திக் கேட்டதாத் தான் ஞாபகம்" என்றேன்.

"இல்லடா, எனக்குத் தெரியும்" என்று பாட்டைப் பாடிக் காட்டினார்.

"ஏம்மா, அத்தையும் மருமவனும் இப்பத்தான் பாட்டுக் கச்சேரி நடத்தணுமா? அத பாரு, அந்த ஆளு நம்மள பிச்சக்காரங்கன்னு நினச்சுக்கிட்டு பத்து பைசா வீசி எறிஞ்சுட்டுப் போறாரு" என்றான் கஜா.

"கஜா, உனக்கு வாக்குக் கொடுத்துட்டனில்ல? காப்பாத்தியே தீருவேன். ராஜபாளையம் நாயா இருந்தாலும் சரி நரசிங்கப்பேட்டை நரியா இருந்தாலும் சரி, நான் கொடுத்த வாக்கைக் காப்பாத்தியே தீருவேன், கவலைப் படாதே" என்றபடி, எதிரில் விழுந்த பத்து பைசாவை எடுத்து வைத்துக் கொண்டேன்.

"நல்லா பேசுங்க. என்ன செய்யுறதா இருக்கீங்க? உங்களை நம்பி வந்த வினைக்கு என்னை ராஜபாளையம் நாய் கடிச்சா தகும். இப்படி மரத்தடிலே நின்னுக்கிட்டிருந்தா பலாக்காய் பழுத்து மண்டையிலே விழுந்து, மண்டையிடில சாக வேண்டியது தான்."

அவன் சொன்னதும் என் மனதில் ஒரு திட்டம் உருவானது. "டேய், நீ சித்தன்டா. போயிட்டு ஒரு மணிக்கா திரும்பி வருவோம். நீ போய் ஒரு வேனை பேசி எடுத்துகிட்டு வா. பங்களா பின்னால திருப்பரங்குன்றம் ரோட்டுல வேனோட காத்துக்கிட்டு நில்லு. அத்தையும் நானும் சுபாவைக் கடத்திக்கிட்டு வந்துடறோம். வேன்லயே பிச்சுக்கலாம்" என்றேன்.

"எப்படிரா?" என்றார் அத்தை.

என் திட்டத்தைச் சொன்னேன். "கொஞ்சம் பயமா இருக்குடா" என்றார் அத்தை.

"கவலைப் படாதீங்க. ஒண்ணும் ஆவாது" என்றேன்.

"ஆமாம்மா... போனாகூட உசிரு தானே அம்மா? அதான் இத்தனை நாள் சந்தோசமா இருந்திட்டீங்களே. இப்ப உன் பையனோட சந்தோசத்தை நினைச்சு தியாகம் செஞ்சதா வச்சுக்க" என்றான் கஜா.

ரு மணி பொறுத்து வேனில் வந்து இறங்கினோம். தடியன்களை சமயம் பார்த்து அடித்துப் போட்டு விட்டு நான் உள்ளே சென்று சுபாவை அழைத்து வருவதாகத் திட்டம். பழைய மீசை தாடி பொருத்திக் கொண்டிருந்த கஜா, வேனை ஓட்டிக் கொண்டு வந்தான். "டேய் அன்பு, யாருடா இந்த வேன் டிரைவர்? பாத்தாலே பயமா இருக்கு" என்று கிசுகிசுத்த அத்தையிடம் உண்மையைச் சொல்லி அழைத்து வருவதற்குள் பொறுமை இழந்து விட்டேன். நான் என் முகத்தில் கரி பூசிக் கொண்டிருந்தேன். அத்தை முந்தானையால் தலையை மூடிக் கொண்டு இறங்கினார்.

எதிரே கைக்குழந்தையுடன் நடந்து போய்க்கொண்டிருந்த பெண்மணி எங்களைப் பார்த்து விட்டு அதிர்ந்து போய் குழந்தையைக் கீழே போட்டு விட்டு ஓடத் தொடங்கினாள். பிறகு என்ன தோன்றியதோ, திரும்பி வந்து குழந்தையை எடுத்துக் கொண்டு எதிர் பக்கமாக ஓடினாள்.

கஜா பலாமரத்தில் ஏறி கையாலெறியும்படி கணிசமான அளவில் பத்து பனிரெண்டு பலாக்காய்களைப் பறித்துக் கொண்டு இறங்கினான். "டேய், நானும் அத்தையும் பம்புசெட்டு பக்கம் போனதும் நீ அந்த ஆளுங்களை அடிச்சுப் போடு. போட்டு வேனை எடுத்துக்கிட்டு பங்களா பின்னால வா" என்றேன். அத்தையுடன் பம்பு செட்டு பக்கம் போனேன்.

"டேய், இந்த நாயுங்களுக்குத் தீனி போட்டு சாணி போடக் கூட்டிப் போ. இங்கனே போட்டா நாத்தம் கொமட்டும்" என்று ஒரு தடியன் சொல்லவும், இன்னொருவன் நாய்களை இழுத்துக் கொண்டு வயலுக்குள் சென்றான். கஜாவுக்கு சைகை காட்டினேன். அடுத்த ஒரு நிமிடத்தில் தடியன்களின் தலை முதுகு தலை முகம் என்று மாறி மாறி ராகெட் வேகத்தில் பலாக்காய்கள் தாக்கவும், கீழே மயங்கி விழுந்தார்கள். அவசரமாக அத்தையை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றேன். "சுபா, அத்தை, நீங்க ரெண்டு பேரும் புடவையை மாத்திக்குங்க" என்றேன்.

"ஏண்டா, இந்தப் புடவைக்கு என்ன குறை?" என்றார் அத்தை.

"சொன்னா கேளுங்க, சீக்கிரம். அவளோட புடவையை நீங்களும் உங்க புடவைய அவளும் மாத்திக்குங்க" என்றேன். மாற்றிக் கொண்டதும் சுபாவை இழுத்துக் கொண்டு பின்பக்கமாக வெளியேறவும் கஜா வரவும் சரியாக இருந்தது. சுபா வேனில் ஏறிக் கொண்டதும் "கொஞ்சம் நில்லு, அத்தையையும் கூட்டிக்கிட்டு... இதா வந்துட்டாங்க" என்றேன்.

"நீயாச்சு உன் அத்தையாச்சு. எப்படியாவது தப்பிச்சு போங்க. இனிமே உன்னை நம்ப முடியாது. வரோம், ரொம்ப தேங்க்ஸ் அண்ணா" என்று வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனான் கஜா. எங்களுக்காக நிற்கவில்லை.

நானும் அத்தையும் அதிர்ந்து போய் ஒருவரையொருவர் பார்த்தபடி நடுத்தெருவில் நின்றோம்.

"அயோக்கியப் பய" என்றார் அத்தை மூச்சு வாங்க. "இப்ப என்னடா பண்ணட்டும்? குட்டிச்சுவராட்டம் உன்னை நம்பி நான் வந்தேன் பாரு" என்றார்.

"சரி, திட்டம் மாறிடுச்சு. உள்ளே போவலாம் வாங்க" என்று அத்தையை இழுத்துக் கொண்டு மறுபடி பங்களா உள்ளே சென்றேன். ஒன்றிரண்டு வயலுர மூட்டைகள், ஒரு மண்வெட்டி, நாலைந்து கடப்பாரைகள், கிணற்றுக் கயிறு, பம்பு செட்டு குழாய்கள் என்று அறைக்குள் நிறைய கடாபுடா. சன்னலோரமாக இருந்த ஒரு சாய்வு நாற்காலியில் அத்தையை உட்காரச் சொன்னேன். "ஓய்வு எடுங்க ஒரு நிமிசம். நான் யோசிக்கணும், அந்தத் தடியனுங்க எழுந்து வரதுக்குள்ளாற" என்றேன்.

அவர் உட்கார்ந்ததும் தாவிப் போய் கிணற்றுக் கயிற்றை எடுத்து வந்து அவரைக் கட்டிப் போடத் தொடங்கினேன். "என்னடா?" என்று அலறினார். "ஷ்!" என்று அடக்கினேன். "அத்தை, உள்ளாற ஒரு பொன்ணு இருக்குறதா நினைச்சுக்குவாங்க. நான் அதுக்குள்ள போலீசுக்குப் போய்" என்று சொல்லி முடிப்பதற்குள் அறை வாசலில் அரவம்.

ராஜபாளையம் நாய்களுடன் தடியன் திரும்பி வந்துவிட்டிருந்தான். அவனருகில் சுபாவின் அப்பா. சுபாவைக் காணாமல் கோபத்தில் அவர் கண்கள் ரெண்டும் சாராயம் அடித்தது போல் சிவந்திருந்தது. "என்ன செஞ்சுகிட்டிருக்கீங்க ரெண்டு பேரும்?" என்றார். சாராயம் அடித்துத் தான் கண்கள் சிவந்திருந்தன என்று புரிந்தது. "டேய், நாய விடுங்கடா இவங்க மேலே. சொந்தக்காரனுங்கனும் பாக்க மாட்டேன்" என்று கத்தினார்.

அந்த சமயத்தில் எங்களைப் பார்த்திருந்தால் ஜெமினி சர்கசில் உடனே எங்களுக்கு வேலை கொடுத்திருப்பார்கள். கையிலிருந்த கயிற்றை வீசிவிட்டு அருகிலிருந்த பீரோ மேல் தாவி ஏறினேன். அத்தையோ பக்கத்திலிருந்த சுவரலமாறி மேல் பல்லி போல் கிடுகிடுவென்று ஏறி மேல் தட்டில் தொற்றிக் கொண்டார். உள்ளே வந்த நான்கு நாய்களும் தாவித் தாவி பயமுறுத்தின. அத்தை எந்த நிமிடமும் விழுந்து விடுவார் என்று தோன்றியது. நான் பீரோவின் மேல் இன்னும் கவனமாக ஒதுங்கிக் கொண்டேன்.

"எத்தினி நேரம் அங்கே உட்கார்ந்திருப்பீங்க?" என்று கொக்கரித்தார் சுபாவின் அப்பா. "டேய், அவங்களை இழுத்துக் கீழே போடுறா" என்றார் தடியனிடம். அதற்குள் கீழே விழுந்து கிடந்த தடியன்களும் எழுந்து கொண்டார்கள். நடுங்கினேன்.

நடுங்கியவன் வியந்தேன். எழுந்த தடியன்கள் எழுந்த வேகத்திலேயே விழுந்தார்கள். அடுத்த நொடிகளில் அறைக்குள் வந்த பலாக்காய் ராகெட்டுகள் சுபாவின் அப்பாவையும் மிச்சமிருந்த தடியனையும் தாக்கின. பட்பட்டென்று சரமாரியாக வந்த பலாக்காய் ராகெட்டுகளின் வேகம் தாங்காமல் அடிபட்டு விழுந்தனர். கஜா! திரும்பி வந்துவிட்டானா? நன்றியுடன் நினைத்துக் கொண்டிருந்தபோது இன்னும் சில பலாக்காய்கள் நாய்களைப் பதம் பார்த்தன. ஊ என்று கத்தியபடி மயங்கி விழுந்தன. உள்ளே வந்தது மாமா. "மாமா, நீங்களா?" என்று வியந்தேன். "நாயுங்களை குறி பாத்து அடிச்சுட்டீங்களே, நம்பவே முடியலையே?"

"அந்த ஆளுங்களைக் குறி பார்த்தேன். நாயுங்க இங்கன இருக்குறதே தெரியாது. அச்சச்சோ, வாயில்லா பிராணிங்களையா அடிச்சேன்?" என்று வருந்தினார்.

"நீங்க வேறே. அந்தப் பிராணிங்களோட பல்லைப் பாத்துட்டு சொல்லுங்க" என்றபடி கீழே இறங்கி வந்தேன். அத்தையும் இறங்கினார். "அப்போ இந்த ஆளுங்களை அடிச்சது?"

"கஜா தான். அவன் தான் என்னை இங்கே கூட்டியாந்தான். மொதல்ல யாரோ தாடிக்காரன் என்னைக் கடத்திக்கிட்டுப் போறான்னு நினைச்சேன், பிறகு தான் கஜானு தெரிஞ்சுது. விவரமெல்லாம் சொன்னான்" என்று அவர் சொல்ல கஜா உள்ளே வந்தான். "டேய், என்னடா ஓடிட்டியோனு நெனச்சேன்" என்றேன்.

"சொந்தமாச்சே, எப்படி விட்டு ஓடுறது? தடியனுங்களைக் கட்டிப் போட்டாச்சு. இந்த நாயுங்க எழுந்திருச்சு நம்மள குதற வாருமுன்னே ஓடிடுவோம்" என்றான்.

"சுபா எங்கடா?" என்றார் அத்தை.

"சுபா பத்திரமா இருக்கா. உன்னண்ட சொல்றதா இல்ல. ஒரு தடவை உதவி செஞ்சதே போதும். உயிரோட இருக்கணும்னா உடனே கிளம்புங்க. இல்லா, நான் போறேன்" என்று அவசரப்பட்டான்.

"இருடா, இருடா" என்றார் அத்தை. "ஒண்ணா போவோம்"

"யாரும் எங்கயும் போவ முடியாது. எல்லாரும் கையை உசத்திக்கிட்டு நில்லுங்க" என்று குரல் கேட்டு அறைவாசல் பக்கம் பார்த்தோம். இன்ஸ்பெக்டரும் இரண்டு ஏட்டும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் நாங்கள் பார்த்த பெண், கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். "இவங்க தான் சார். பிள்ளை பிடிக்கிற கூட்டம்னு சொன்னனே, இவங்க தான்" என்றாள். கைக்குழந்தை எங்களைப் பார்த்து விட்டு கலகலவென்று வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கியது.

"பிள்ளைப் பிடிக்குறவங்க போலத் தெரியலையே?" என்றபடி அறையை நோட்டம் விட்ட இன்ஸ்பெக்டர் கீழே விழுந்து கிடந்த தடியனையும் சுபாவின் அப்பாவையும் நாய்களையும் பார்த்தபடி பேசினார். "ஒரு வேளை இவங்க மலைக்கோட்டை முத்தையா கூட்டமா இருக்கும் போலத் தோணுதே?" என்றார்.

"மலைக்கோட்டையாவது முத்தையாவாவது? இன்ஸ்பெக்டர், எல்லாத்தையும் விவரமா சொல்லுறேன், கேளுங்க" என்றேன். "இதா இருக்காரே இவரு" என்று நான் அடையாளம் காட்டி எல்லா விவரத்தையும் சொல்லி முடிக்கவும் சுபாவின் அப்பா எழவும் சரியாக இருந்தது.

எழுந்ததும் சுற்று முற்றும் பார்த்து விட்டு, "இன்ஸ்பெக்டர், நல்ல நேரத்துக்கு வந்தீங்க. இவங்களையெல்லாம் கைது செய்யுங்க" என்றார்.

இன்ஸ்பெக்டர் சிரித்தார். "யாரு யாரை கைது செய்யுறது? எல்லாத்தையும் டேசன்ல வந்து சொல்லுங்க" என்று சுபாவின் அப்பாவைக் கைது செய்து கொண்டு போனார். விட்டால் போதும் என்று நாங்கள் எல்லாம் கஜாவின் வேனில் ஏறி வீடு வந்து சேர்ந்தோம். எங்களை இறக்கி விட்டு அடுத்த நொடியே சுபாவைப் பார்க்கணும்னு கஜா பறந்து விட்டான்.

"இதான் என் அத்தை மகன் கஜாவின் காதல் கதை" என்று அன்புமல்லி சொல்லி முடித்தார்.

வாழைத்தண்டு பஜ்ஜி மூன்றாவது ரவுண்டு முடிந்து விட்டிருந்தது. எஞ்சியிருந்த பாதாம் சட்டினியைத் தனியாகப் பதம் பார்த்துக் கொண்டிருந்த சித்து, "என்ன சார் இது? பாதியிலே கதைய விட்டா எப்படி?" என்றான்.

"விட்ட வரைக்கும் பிழைச்சோம்னு ஓடுவம்டா. பின்பக்கம் எதுனா வேன் இருக்குதா பாரு, நாமளும் கஜா மாதிரி ஓடிருவோம். பத்து வருசம் பொறுத்து வருவோம்" என்றான் சாய்.

"அவன் கிடக்கான் சார், நீங்க சொல்லுங்க" என்றான் நெடு.

பணியாளை அழைத்தார் அன்புமல்லி. "சிங்காரம். இன்னொரு சுத்து குல்கந்து கொணாறியா? எனக்கு நெய் வேணாம், பசங்களுக்கு எக்ஸ்ட்ரா நெய் தெளிச்சு கொண்டா" என்றார். எங்களைப் பார்த்து, "நெய் மணக்க குல்கந்து சாப்பிட்டா தான் ருசி. எனக்கு வயசாயிடுச்சு, கொலஸ்ட்ரால் பயம். கொலஸ்ட்ரால்னதும் நினைவுக்கு வருது. என்னோட பழைய நண்பன் கொலஸ்ட்ரால் கந்தசாமி, கேகேனு கூப்பிடுவோம். அவன் பொண்ணு மைதிலி ஒரு சமயம் என் கிட்டே உதவி கேட்டு வந்தா. ரெண்டு பையன்களை ஒரே நேரத்துல காதலிக்கிறதாவும் தீர்மானம் செய்ய முடியாம தவிக்கிறதாவும் சொல்லி ரொம்ப துடிச்சுப் போயிட்டா. என்ன செய்ய, ஆயுசு கம்மி"

"ஏன் சார், மைதிலி இறந்துட்டாங்களா?" என்றான் சித்து.

"இல்லப்பா, கேகேயைச் சொன்னேன். கொலஸ்ட்ரால் மிகுந்து போய் ஒரு நாள் போயிட்டான். மைதிலி நல்லாத்தான் இருக்கா. அவ கதையைச் சொல்லி இருக்கேன் இல்லே?"

சாய் வெலவெலத்துப் போனான். "விடுங்க சார், இந்தக் கதையே போதும்னு பாத்தா டக்குனு ரூட் மாறி இன்னொரு கதைக்குத் தாவுறீங்களே?"

"இதான் முடிஞ்சுருச்சே" என்றார் அன்புமல்லி.

"ஒழுங்கா முடிங்க. கஜாவுக்கு என்ன ஆச்சு, போலீசுல என்ன நடந்தது எல்லாம் விவரமா சொல்லுங்க" என்றான் நெடு.

"அதெல்லாம் முக்கியமில்லைபா. இருந்தாலும் சொல்றேன். இந்தா குலகந்து வந்திருச்சு பார், ஒரு வெட்டு வெட்டு" என்றபடி ஒரு ஸ்பூன் நிறைய குல்கந்தை எடுத்து வாயுளிட்டு மென்றபடியே தொடர்ந்தார்.

"இதா இருக்காரே இவரு"னு சுபாவின் அப்பாவை அடையாளம் காட்டினேன். "இவரு என்னோட அத்தையைக் கடத்திக்கிட்டு வந்து இங்கே அடைச்சு வச்சிருக்கிறதை என் அத்தை மகன் கஜா... இதோ இவன் தான்... தாடி மீசையை எடுறா டேய், கண்டு பிடிச்சு என் கிட்டே சொன்னான்"

"இவரு ஏன் இந்தம்மாவைக் கடத்தணும்?" என்றார் இன்ஸ்பெக்டர்.

"அதானே, அவரு ஏண்டா என்னைக் கடத்தணும்?" என்றார் அத்தை. பிறகு புரிந்து கொண்டு, "ஆமாமா..." என்றார்.

"சொத்து விவகாரம் சார். என்ன சண்டையோ எனக்கெப்படித் தெரியும்? ஆனா கடத்திக்கிட்டு வந்துட்டாரு. நாங்க இங்க வந்து பாத்தா நாலஞ்சு தடியனுங்க நாயுங்களோட நின்னுட்டிருக்காங்க. எங்களை அடையாளம் வேறே தெரியுமா, என்ன செய்யுறதுன்னு யோசிச்சோம். அதான் வேஷம் போட்டுக்கிட்டு வந்தோம். எங்களைப் பாத்து பயந்து போன இந்த அம்மா ஓடிப்போய் உங்களைக் கூட்டியாந்துட்டாங்க. நீங்க வரதுக்குள்ளாற, கஜா குறி தான் உங்களுக்கே தெரியுமே, பட்டு பட்டுனு பலாக்காயுங்களை எறிஞ்சு இவங்களையெல்லாம் அடிச்சுப் போட்டான். அத்தையைக் கூட்டிக்கிட்டு நாங்கக் கெளம்பத் தயாரா இருந்தோம். அவ்வளவு தான்" என்றேன்.

"நம்பவே முடியலையே?" என்றார் இன்ஸ்பெக்டர். "சொந்த மச்சினிய கடத்திட்டு வந்துட்டாரே?" என்றார் இன்ஸ்பெக்டர்.

"விடாதீங்க சார், புடிச்சு உள்ளே போட்டு முட்டிக்கு முட்டி தட்டுங்க" என்றான் கஜா. அவனுடைய கோபம் அவனுக்கு.

"நிறுத்துங்க" என்றார் அந்த பெண். "இவங்க பொய் சொல்லுறாங்க. நான் இவங்களைப் பாத்தப்ப இந்தம்மாவும் கூட இருந்தாங்க. இன்னொரு கலர் புடவை கட்டியிருந்தாங்க" என்றார்.

கஜா அந்தப் பெண்மணியைப் பார்த்தான். கையில் ஒரு பலாக்காய் இல்லாமல் போன வருத்தமும் ஆத்திரமும் அவன் முகத்தில் தெரிந்தது. பிறகு அவன் இன்ஸ்பெக்டரைப் பார்த்த பார்வையில் முன்னெச்சரிக்கை இருந்தது. இன்ஸ்பெக்டர் அத்தையைப் பார்த்த பார்வையில் சந்தேகமிருந்தது. அத்தை என்னைப் பார்த்த பார்வையில் கோபமிருந்தது. நான் என்னருகே நின்றுகொண்டிருந்த ஏட்டைப் பார்த்த பார்வையில் பொருளிருந்தது.

"அட நீ வேறம்மா, பயத்துல எதுனா எசகு பிசகா கவனிச்சிருப்பே. அதான் சாரு இத்தனை அளகா எடுத்துச் சொல்லிட்டாரே. வாங்க போவலாம்" என்றார் ஏட்டு. என் கையிலிருந்த பத்து ரூபாய் அவர் கைக்கு மாறியதை யாரும் கவனிக்கவில்லை. அதற்குள் சுபாவின் அப்பா எழுந்து கொண்டார்.

எழுந்ததும் சுற்று முற்றும் பார்த்து விட்டு, "இன்ஸ்பெக்டர், நல்ல நேரத்துக்கு வந்தீங்க. இவங்களையெல்லாம் கைது செய்யுங்க" என்றார்.

இன்ஸ்பெக்டர் சிரித்தார். "யாரு யாரை கைது செய்யுறது? எல்லாத்தையும் டேசன்ல வந்து சொல்லுங்க" என்று சுபாவின் அப்பாவைக் கைது செய்து கொண்டு போனார்.

சுபாவின் அப்பாவைப் போலீஸ் லாக்கப்பில் தள்ளினதும் அவர் ஆடிப் போய் விட்டார். அவரைத் தனியாகச் சந்தித்து, "கஜா பேர்ல நீங்க கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கிட்டு, சுபாவையும் கஜாவையும் கல்யாணம் செஞ்சு சேத்து வக்கிறதா சொல்லுங்க, அத்தை கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கிறோம். இல்லேன்னா உங்களுக்கு ஜெயில் தான்" என்றேன்.

"டேய், டேய், தம்பி. என் பொண்ணும் கஜாவும் எக்கேடோ கெட்டு போகட்டும். புகாரை வாபஸ் வாங்கிக்கிட்டு என்னை விடுதலை செய்யச் சொல்லுங்கடா. உனக்கு வேணும்னாலும் கல்யாணம் செஞ்சு வக்கிறேன். மானம் போவுதுடா, வெளியே விடுங்கடா" என்றார்.

புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டு எல்லோரும் வீட்டுக்கு வந்தோம். கஜாவும் சுபாவும் திருப்பரங்குன்றத்தில்... இவன் முருகனாட்டமும் அவள் தேவயானையாட்டமும், பாக்கறதுக்கும் யானை மாதிரி இருந்தானு வைங்க, கல்யாணம் செய்துகிட்டாங்க. இப்போ அமோகமா இருக்காங்க.

"இப்போ திருப்தி தானே?" என்ற அன்புமல்லி, மூவரையும் பார்த்து "ஏம்பா, என்ன அவசரம், எதுக்கு இப்படி ஓடுறீங்க?" என்றார்.
  ♥♥