2013/04/23

சரிகைச் சாயம்




    ன் 1980களின் இரட்டைபாத் வட்டம்.

    நேன்ஸ்: குடும்பத்தின் ஒரே வாரிசு. அப்பா வடபழனி ஆண்டவரை வைத்துப் பணம் பண்ணிய சினிமாத் தயாரிப்பாளர். இறந்து பிறந்த முதல் பிள்ளைக்குப் பிறகு வந்தவன் நேன்ஸ் என்பதால் வீட்டில் செல்லமோ செல்லம். டான் பாஸ்கோ, லயோலா, லன்டன் பிசினஸ் ஸ்கூல் என்று சுறுசுறுப்பாகப் படித்தவன். இடையே, அப்பாவின் சின்னவீட்டுக் கதாநாயகி பெரிய வீட்டுக்கு வந்ததும் அவளுடன் சுலபமாகப் பழகி, தள்ளி வைக்கப்பட்ட முதல் தார அம்மாவின் 'புத்திர புருஷ விவாக சோக'க் கோழைத்தனத்தை வெறுப்பது போல் நடந்துகொண்ட, பிழைக்கத் தெரிந்தவன். இருபத்தொரு வயதானதும் சொத்துக்களைப் பிரித்தளிக்க அப்பன் மீது வழக்கு போட்டவன். மறுத்த அப்பனையும் சின்னவீட்டையும் ஆள் வைத்து ரகசியமாகக் கடத்திப் போய் அடித்து நொறுக்கியவன். வழக்கில் வெற்றி பெற்றதும் அம்மாவுக்கு லட்சக்கணக்கில் பணமும் திருப்பரங்குன்றத்தில் வீடும் கொடுத்து, 'இனியாவது உனக்காக வாழ்ந்து ஒழிந்து போ' என்று உறவைத் துறந்தவன். விரும்பிக் காதலித்த 'தானைத் தலைவர்' பெண்ணைக் கடைசி நிமிடத்தில் கைவிட்டத் துணிச்சல்காரன். சினிமாப் பக்கமே போகாமல் தனக்கெனப் பாதை வகுத்துக் கொண்டத் தீவிர உழைப்பாளி. இன்றைக்கு இந்தியாவில் பெரிய கை. அத்தனை வெற்றியிலும் ஒரு ஊனம். சாபம் போல்.

    உமேஷ்: பெருஞ்செல்வந்தப் புத்திரன். நகரின் பாதி ஹோட்டல்கள் அவன் குடும்பத்துக்குச் சொந்தம். அவன் பெற்றோரின் பேகம்பேட் வீட்டில் இல்லாத வசதி இல்லை. கிடைக்காத லாகிரி இல்லை. அவனும் அவன் சகோதரர்களும் அடிக்காதக் கூத்து இல்லை. உருதும் இந்தியும் கலந்து அவன் பேசும் தமிழ், கேட்கப் போதையாக இருக்கும். கஜல் பாடல்களின் நுண்மையை எங்களுக்கு அறிமுகம் செய்தவன். ஹூக்கா பிடிக்கச் சொல்லித் தந்தவன். அம்ஜத்தின் 'ஜன்னத் யஹிஹை யஹிஹை' இரட்டைக்கிளவிக் கவிதையை இரட்டைப் பொருளுடன் படித்தவன். ஹோலி நாட்களில் பாங்க் அருந்தும் லாவகத்தைச் சொல்லித்தந்த குரு. வாரங்கல் RECன் தலைசிறந்த மாணவன். ஸ்விட்சர்லேந்தில் மேற்படிப்புப் படித்தவன். என் வட்டத்திலேயே அதிகம் முன்னேறக்கூடியவன் என்று நம்பப்பட்டவன். மிக நொறுங்கிப் போன ஒரு தருணத்தில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று நம்பி ஒரு வாரம் என்னை நிழல் போலத் தொடர்ந்து, இரவு தூங்கும் பொழுதும் என்னருகே விழித்தபடி இருந்த லட்சுமணன். பின்னாளில் அவன் தற்கொலை செய்து கொள்வான் என்றுத் தெரிந்திருந்தால் அவனை விட்டு விலகி வந்திருக்க மாட்டேன்.

    ரங்கன்: மாரட்பல்லி வாசி. தீவிரத் தென்கலை. நாற்பது வயதுக் காலத்தில் திருமணம் செய்து கொண்டப் பெற்றோருக்கு, பத்து வருடங்களுக்குப் பிறகு பிறந்தவன். அப்பாவின் பெற்றோர் தெற்கே காஞ்சிபுரம். அம்மாவின் பெற்றோர் கிழக்கே புருலியா. தமிழ், தெலுங்கு, உருது, பெங்காலி என்று சரளமாகத் திட்டத் தெரிந்தவன். வீட்டில் அவனுடைய அறை தவிர எங்கும் விஷ்ணு மயம், விஷ்ணு மணம். ஸ்ரீவித்யாவுக்கே தெரியாத ஸ்ரீவித்யா படங்கள் சில அவனுடைய அறைச் சுவற்றில் தொங்கின. "ப்ச்.. என்னுடைய சோல் மேட், காலம் குலம் மாறிப் பொறந்துட்டா" என்பான். இடது கையால் சிகரெட் பிடித்தபடி வலது கையால் அவன் விஸ்கியருந்தும் அழகைப் படம் வரையலாம். போதையேறியதும் அச்சாகப் பிபிஸ்ரீ குரலில் பாடுவான். 'ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து?' என்று ஸ்ரீவித்யா போஸ்டரைப் பார்த்துப் பாடும் பொழுது நெகிழ்ச்சியாக இருக்கும். சில நேரம் சேக்சபோன் வாசிப்பான். 'கண்ணே... தேடி வந்தது யோகம்..' என்று அனேகமாக யாரும் கேட்டேயிருக்க முடியாத மெல்லிய ஜேஸ் மெட்டு. முதுகலை பிலாசபி படித்துவிட்டு எங்களுடன் அநியாய விலைக்கு fmcg கேஸ் கணக்கில் விற்றுத் திரிந்தான். காதலில் அரங்கனுக்கும் ஆசான். சுலபமாகச் சிரிக்க முடிந்த இவன் வாழ்வில் விழுந்த மகத்தான இடி.. என்றைக்கும் நெஞ்சைப் பிளக்கும்.

    வெங்கட்: சென்னையின் புகழ்பெற்ற டாக்டர் தம்பதிகளின் இரண்டாவது மகன். (முதல் மகனும் இப்போது புகழ் பெற்ற சாதனையாளர்). வெங்கட் அதி புத்திசாலி. நெடிதுயர்ந்த வலிமையான அழகன். உயர்தர உள்ளாடை மேலாடைகள் அணிவான். டேக் ஹைர் கைக்கடிகாரம் அணிவான். பைப் பிடிப்பான். வாட்கா அருந்துவான். சுத்த சைவம். முட்டையைப் பார்த்தாலும் அவனுக்குக் குமட்டும். வாட்காவுக்கு காய்ந்த நார்த்தங்காய் கடித்த ஒரே ஆசாமி. சைவம் என்று பார்த்தால் ஒரு நாள் மீன் சாப்பிட்டான். கேட்டால், "மீன் சைவம் தானே?" என்றான். எங்களோடு நெருங்கிப் பழகுவானே தவிர அதிகம் பேசமாட்டான். ஜெனடிக் ரிசர்ச் புத்தகங்கள் படிப்பான். தினம் ஒரு பிச்சைக்காரனுக்குப் பத்து ரூபாய் தருவான். காதல் விஷயத்தில் ஆண்களை விரும்புவான். அம்மாவை அணைத்தபடி நின்ற ஒரு புகைப்படத்தை தன் அறையில் வைத்திருப்பான். ஜமுனா பருவா சாயலில், இன்னும் அழகாக இருப்பார். தன் homosexual சார்புக்கும் விருப்பங்களுக்கும் அம்மாவே காரணம் என்று நம்பினான். freudian epitomy. வேறே கதை.

    விஜய்: அதிகமாக விளிம்பைத் தள்ளும் நபர் எங்கள் வட்டத்தில் உண்டென்றால் அது விஜய். அந்த நாளிலேயே நீலச் சாயமடித்த முடியோடு மார்கெட் விசிட் வருவான். கடுக்கண் அணிந்திருப்பான். விரைவில் அமெரிக்கா குடியேறப் போவதால் அவனை எல்லோரும் ஆவென்று பார்ப்போம். lovedaleல் படித்த பிள்ளை. ஆங்கிலத்தில் பிளந்து கட்டுவான். IIFT பந்தா காட்டுவான். sharp wit. இந்தி மலையாளம் தெலுங்கு என்று பாடுவான். அவ்வப்போது அவனுடைய இளவயது அத்தையை யாருக்கும் தெரியாமல் எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து என் அறையைக் கடன் வாங்கி, உரத்தக் காமத்தில் ஈடுபடுவான். "என்னடா இது.. உங்க அத்தையைப் போடுறியே?" என்று அருவருப்போடு கேட்பான் ரங்கன். "சும்மா இருடா ஸ்ரீரங்கம். இவ ஒண்ணு விட்ட அத்தை.. என்னை விட மூணு வயசுதான் பெரியவ.." என்று ஒருமுறை அவன் உறவை விளக்கியபோது எங்களுக்குத் தலை சுற்றியது. செயல்வீரன். எனினும், நிறைய கனவுகளைக் கவிதையாக எழுதி வைத்திருந்தான். ஒரு தவறான திருப்பத்தில் அவன் வாழ்க்கை ஒரே இரவில் தலைகீழாகிப் போனது.

    வத்சன்: மங்களூரின் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். கலெக்டர் அப்பா, கைனகாலஜிஸ்ட் அம்மா. ஒரே பிள்ளை. வீட்டில் வேலைக்கிருந்த க்ரேஸ் லட்சுமி அவனுக்கு எல்லா விதத்திலும் குரு. பதினாறு வயதில் க்ரேஸ் லட்சுமியின் ரவிக்கையைக் கழற்றி ப்ரா தழுவிய மார்பைத் தொட்டதை இன்னும் சிலாகிப்பவன். டாக்டருக்குப் படிக்கச் சொன்ன பெற்றவர்களை "வற்புறுத்தினால் கொலை விழும்" என்று மிரட்டித் தன் விருப்பப்படி ஆங்கில இலக்கியம் படித்தவன். மணிப்பூர் கல்லூரியில் தங்க மெடல் மாணவன். ஐஏஎஸ் எழுதித் தோற்ற சோகத்தில் தற்கொலை செய்யத் துணிந்து, தெளிந்து, வாழ்க்கையின் விரிந்து பரந்த வாய்ப்புக்களின் நியாய பேதங்களைக் கண்டறிந்தவன். அவனுடைய இருபதாவது வயதில் அப்பா அம்மா இருவரும் ஒப்பந்தம் செய்தாற்போல் இறந்ததும், அத்தனை சொத்துக்களையும் விற்றுக் காசாக்கி வங்கியிலும் வணிகத்திலும் முதலீடு செய்து பணக்கவலையைத் துறந்தவன். ஆண்கள், பெண்கள் இருவரையும் பட்சம் பாராது விரும்பியவன். அசாத்தியத் துணிச்சல்காரன். எதையும் செய்யக்கூடியவன். அதில் தான் நெருடல்.

    நான்: இளகிய மனதுடையவன். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவன். மனித நேயத்தில் நம்பிக்கை வைத்தவன் - இப்படியெல்லாம் எதுவும் சொல்ல முடியாதவன். என் வாழ்வின் போக்கிற்கு என்னைத் தவிர யாரையும் எதையும் நம்பாதவன். சாதிக்க நினைத்த எதையும் தவற விடாதவன். குறிக்கோள்களை அடையும் வரை உழைக்க அஞ்சாதவன். என் வெறுப்புகளை பெரும்பாலும் என்னுள்ளே அடக்கினாலும், மறக்காதவன். வெளிப்படுத்துகையில் கொடுமையானவன். என் எட்வர்ட் ஹைடை இளமையிலேயே அறிந்தவன். சாகும்வரை வெளியிடாமல் பிடித்திருக்க நினைப்பவன். மேலாண்மைப் படிப்பினால் கிடைத்த பல சமூக மேம்பாட்டு வேலைகளை ஒதுக்கி, பன்னாட்டு நிறுவனம் வழங்கிய பணப்பெட்டி வேலையை எடுத்துக் கொண்டவன். என் வகுப்பிலேயே அதிக சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்த பெருமையில் நான் கொடுத்த பார்ட்டி, ஜோகாவின் வரலாற்றில் இடம்பெறும். பார்ட்டிக்கு வந்த என் வருங்கால மேனேஜருடன் கஞ்சா அடித்தும் கலவி புரிந்தும் ஏற்படுத்திக் கொண்ட நட்பை, மேனேஜர் சமீபத்தில் HIV நோயில் சாகும் வரைத் தொடர்ந்தவன். நட்புக்களின் நாணயமான காதலன். சில கூடா நட்புக்களின் முகம் மறைத்ததைக் கண்டறியாதது என்னுடையப் பேதமை.

    நாங்கள் அனைவருமே ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்து பயிற்சி முகாமில் எதிரெதிர் அறையில் தங்கி நண்பர்களானோம். பயிற்சி முடிந்து நானும் வத்சனும் இரட்டைபாதின் தற்காலிக வாசிகளானதும், முஷிராபாத் நாற்சந்தியருகே உயரமான கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அனைத்து வசதிகளும் பொருந்திய பெரிய அபார்ட்மென்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தோம். நேன்சும் வெங்கட்டும் மாதத்தில் பத்து நாள் தங்குவார்கள். அவர்களைத் தவிர உள்ளூர் வாசிகளான உமேஷ், விஜய், ரங்கன் மூவரும் கொட்டமடித்தது எங்கள் வீட்டில் தான். மாமிசம் மதுபானங்களிலிருந்து அவ்வப்போது மதனசுக மயக்கசுக சமாசாரங்களும் எங்கள் வீட்டில் கிடைக்கும்.

ப்ப்பெரிய கம்பெனியின் அதிகாரிகள் என்பதால் எங்களுக்கு நகரில் கணிசமான செல்வாக்கு இருந்தது. போதாக்குறைக்கு நானும் வத்சனும் 'வெளியுறவு அரசர்கள்' எனலாம். extrovertக்கும் கொஞ்சம் extraவாகவே இருந்தோம். ஸ்டாக்கிஸ்ட் தயவில் தினம் யாராவது பெரிய ஆசாமி, நவாப் வம்சாவளி, பெத்த ரெட்டிகாரு, விளையாட்டு வீரர், மாடல், இரண்டாம் தட்டு சினிமா நடிகை, முக்கியமாக இரண்டாம் தட்டு சினிமா நடிகை, என்று ஏதோவொரு நட்பு கிடைக்கும். கையில் ஐநூறு ரூபாயாவது சில்லறையாக இருக்கும். தெலுங்குப் படப்பிடிப்புக்கு அவ்வப்போது வந்த ஒரு பூமகள் நடிகை, அந்த நாளில் ஒரு இரவுக்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் என்றக் கணக்கில், கணக்கிலாத படுக்கையறை இனிமைகளை வழங்க வசப்படுவார். பெற்றுக் கொண்டிருக்கிறோம். ménage à trois, group grope, you name it.

எங்களுக்கிடையே போலித்தனம் வேஷம் எதுவும் இல்லாத 'வாழு, வாழ விடு' வகைப் பந்தம் இருந்தது. ரத்தம் கலந்த நட்பு இருந்தது. நாங்கள் எல்லாருமே work hard, play hard ரகம். intellectual type வேறே. ஓய்வுபெற்ற மிலிடெரித் தாத்தாக்களின் வம்சாவளிப் பெண்கள், இரட்டைபாத் க்ளப் உறுப்பின அந்தஸ்தினரின் படாடோப வாரிசுகள், வசதி படைத்த ரெட்டிகாருகளின் பொழுது போகாத இல்லத்தரசிகள், தம் மாரோ தம் கலாசாரத்தை இன்னும் விடாமல் பிடித்துக் கொண்டிருந்த சூபி ஹிப்பிகள், social eliteகள்... என்று யாவரும் கேளிராவதற்கு எங்கள் intellect சுலபமாக தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்க, எங்கள் வயதும் துடிப்பும் வேலையற்ற மதியங்களும் அத்தொடர்புகளை கவர்ச்சியாக வலுப்படுத்தின.

    காதலில் கொடுத்த முத்தங்கள் போல் கரைந்து போன வருடக் கணக்கு.

மறந்து போன வாசனைகளாய்.. வெட்டுப்பட்டு துடிக்கும் பூரான்களாய்.. சல்லடை கிழிந்து கொட்டிய மாவாய்.. மின்னலாய்க் கிழிக்கும் கனமான நினைவுகள்.

எங்களின் கண்ணாடி நகரம் கல்லடியிலும் காற்றிலும் மாறிவிட்டது. கலவியின் இடையே வந்த மாரடைப்பாய் திடீரென்று எல்லாம் நின்று, நிலைமாறி, போர்ப் பதட்டத்தில் இழுத்தெறியப்பட்டக் குடும்பம் போல் சிதறினோம்.

என் வட்டத்தில் மூவர் இன்றைக்கு உயிரோடு இருக்கிறோம்.

இப்போது இரட்டைபாத் எங்கும் ஒளிரும் புதுச்சாயம்.. சாயத்தின் நடுவே எங்கள் வட்டம், குறுக்கே வந்து போன கோடுகளின் சுவடுகளாய்.. சுமையாய்.. ரணம் காய்ந்து.. மங்கிய சாயங்கள் இன்னும் நிழலாய் புகையாய் அணுவாய் நிறைந்திருப்பதை.. தினம் வெளுத்துப் பழுக்கும் சாயங்களின் இடையே சரிகைகளின் முன்னாள் பளபளப்பு அவ்வப்போது நெருடித் தரும் சோகமும் இதமும் வலியும் நிறைவும்.. மறுக்கமுடியாது. மறக்கமுடியாது. சொல்லி மாளாது.

      யாழ்     

12 கருத்துகள்:

  1. //கலவியின் இடையே வந்த மாரடைப்பாய்// என்ன ஒரு வார்த்தை பிரயோகம்!

    பதிலளிநீக்கு
  2. "பின்னாளில் அவன் தற்கொலை செய்துகொள்வான் என்று தெரிந்திருந்தால்...."

    ஜெயகாந்தன் சிறுகதையை நினைவுபடுத்துகிறது.

    //என் வெறுப்புகளை பெரும்பாலும் என்னுள்ளே அடக்கினாலும், மறக்காதவன். வெளிப்படுத்துகையில் கொடுமையானவன்.//

    பயமுறுத்துகிறது!

    பூமகளைப் புரிகிறது.

    திடுக்கிடவைக்கும் கவர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் சில பிரயோகங்களுக்கு ஆட்சேபம் அர்த்தமற்றதாகப் படலாம்.

    பதிலளிநீக்கு
  3. இரட்டை பாத் எங்கே உள்ளது சார்...

    எவ்வளவு வெளிப்படையான வரிகள், வார்த்தைகள், உங்கள் நட்பைப் பற்றி குறிப்பிட்டதை வாசிக்கும் பொழுது என் வயது என்னுள் என்னவெல்லாமோ சிந்திகிறது....

    நட்பின் வழிகளை சொன்ன அந்த கடைசி வரிகள், அதற்க்கு உவமையாக்கிய கலவியின் பொழுது வந்த மாரடைபாய் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  4. வார்த்தைக‌ள், வ‌ழிக‌ள், வ‌லிக‌ள், வாழ்க்கைகள்,
    எல்லாம் க‌ட‌ந்துபோம் என்ப‌தின் அன‌ர்த்த‌ம்.
    நின‌வுக‌ள் சும‌க்கும் இத‌ய‌ம்,
    சிலுவையை சுற்றும் க‌ழுகாய்.
    எழுத்தை ஒரு ப‌ண்முக‌ கைபேசியாய்
    ப‌ய‌ன்ப‌டுத்தும் ப‌யோனீர் தான் நீங்கள்.
    அது குர‌லால் வ‌ருடுகிற‌தது, ப‌டம் காண்பிக்கிற‌து,
    இண‌ய‌மெல்ல‌ம் சுற்றிச் சுற்றி தெரியாததெல்லாம்
    காட்டுகிற‌து பின் திடீரென் பாட்ட‌ரி தீர்ந்து 'மூடி'க் கொள்கிற‌து.

    பதிலளிநீக்கு
  5. கண்ணாடி நகரம் கலவியின் இடையே வந்த மாரடைப்பாய்... அசரடிச்சுட்டீங்க. படித்து முடிக்கையில் நீங்கள் சொன்ன சோகமும், இதமும், வலியும் எல்லாமுமாய் ஒரு உணர்வு ஆக்ரமித்தது. சற்றேறக்குறைய இதே போல நட்புகளும், உணர்வுகளும் அனைருக்கும் இருக்க வாய்ப்புண்டு என்பதால்.

    பதிலளிநீக்கு

  6. எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. “ உன் நண்பன் யாரென்று காண்பி. உன்னை அறிந்து கொள்ள ஏதுவாயிருக்கும். “உங்கள் நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. After reading this post, though I wanted to comment on it, I skipped it as I could not find proper words (improper words??)to suit this post. The only thing that struck my mind was the proverb :Tell me your friend and I will tell who you are". This has already been commented by Shri GMB.
    But the contents of this post, somehow or other, refused to get erased from my mind (I do not know the reason behind it). Generally, I used to go to bed when I feel sleepy and the moment I lay on the bed, nithradevi used to embrace me before my wife does it. But two days back, when I went to bed, the contents of the post disturbed my mind and after a deep analysis, the following comments emerged:-
    This post gives a clean and neat SWOT analysis of your friends, room mates, classmates, glassmates, inti-mates etc.
    Secondly, character and intelligence is neither inter related not inversely related which means intelligence has got nothing to with the character.

    பதிலளிநீக்கு
  8. insightful comment, mohan. equally prompting :)

    what is character, but a collage of socially convenient impressions, may i ask? could externalities provide a view into the depths of human mind? does heritage define every action?

    what do we know of hitler's friends? or gandhi's or einstein's? could anyone have prognosticated anything at all about these people based on their friends?

    cliches, so abysmally meaningless that they seem profound - often guide us, albeit ironically, as individuals or a society :-)

    பதிலளிநீக்கு
  9. எத்தனை விதமான மனிதர்கள்.
    Tell me your friend and I will tell who you are". என்பதில் எனக்கு உடன்பாடில்லை. என் கல்லூரிக் காலத்தில்( இன்றும் ) என் நெருங்கிய நண்பர்களின் பழக்க வழக்கங்கள் எதுவும் என்னிடம் தொற்றிக் கொள்ளவில்லை.

    அது சரி. இரட்டை பாத் என்பது ஹைதராபாத் செகந்திராபாத் தானே. ?

    பதிலளிநீக்கு
  10. எத்தனை விதமான மனிதர்கள்.
    Tell me your friend and I will tell who you are". என்பதில் எனக்கு உடன்பாடில்லை. என் கல்லூரிக் காலத்தில்( இன்றும் ) என் நெருங்கிய நண்பர்களின் பழக்க வழக்கங்கள் எதுவும் என்னிடம் தொற்றிக் கொள்ளவில்லை.

    அது சரி. இரட்டை பாத் என்பது ஹைதராபாத் செகந்திராபாத் தானே. ?

    பதிலளிநீக்கு