2012/12/14

அறுந்த காற்றாடி


2


◄◄   1


    கு சொன்னதை என்னால் ஏற்க முடியவில்லை. ராமலக்ஷ்மி-பசுபதி தம்பதியரின் இக்கட்டு எனக்குப் புரிந்தது. அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக நடப்பதை நான் விரும்பவில்லை. "ரகு, இமிக்ரேசனுக்குத் தெரிஞ்சா எல்லார் நிலமையும் டேஞ்சர்.. வேறே ஏதாவது செய்ய முடியுமா?" என்றேன்.

ரகு சில நொடிகள் அமைதியாக இருந்தான். பிறகு, "துரை, உன்னோட வாக்குவாதம் செய்யுறதா நினைக்காதே. ரெண்டு பேர், ஆதரவில்லாத நாதியில்லாத ரெண்டு ஜீவன், இப்ப ரொம்ப இக்கட்டான நிலைல இருக்காங்க. அவங்களுக்கு நம்ம உதவி தேவை. நீ சொல்றாப்புல இது சட்டவிரோதமா இருக்கலாம். ஆனால் இவங்க நிலமை இன்னும் மோசமாகி அவங்களுக்கு ஏதாவது ஆச்சுனா அது தர்ம விரோதம்" என்றான்.

எனக்குக் கோபம் வந்தது. "ரகு.. நீ சொல்றது ஒரு விதத்துல ப்லேக்மெயில். இன்னொரு விதத்துல முட்டாள்தனம். அய்தர் வே, இல்லீகல் அன்ட் இம்ப்ரேக்டிகல். நானா அவங்களை சட்டவிரோதமா இங்கே தங்கச் சொன்னேன்? அவங்க நிலமை எனக்குப் புரியுது. அதுக்காக அவங்க மேலே எனக்கு இருக்குற கரிசனத்தையும் அக்கறையையும் தவறான முறையில பயன்படுத்திக்க அனுமதிக்க முடியலே. ஏற்கனவே நீங்க எல்லாரும் சேர்ந்து அவசரப்பட்டு, முக்கியமா நீதான் காரணம், அவங்களை இங்கே குழியில தள்ளி வாழ வச்சிட்டிருக்கீங்க. இப்ப மறுபடி மறுபடி தோண்டிட்டே இருந்தா, எத்தனை பேர் எவ்வளவு ஆழத்துல விழுந்து அல்லாடுவாங்கனு நெனச்சுப் பாரு. ரகு, நீ புத்திசாலி... தர்ம விரோதம்னு என்னவோ பினாத்திட்டு அறிவுக்கு விரோதமா நடக்கறியே?"

"மெதுவா பேசு. அனாவசியமான அடென்ஷன் வேண்டாம்.. எனக்கு இந்த அவசரத்துல வேறே எந்த யோசனையும் தோணலே துரை, ப்லீஸ் ஹெல்ப். நினைச்சுப் பாரு. ஐஎன்எஸ் அவங்களைப் பிடிச்சு உடனடியா கைது செஞ்சு உள்ள தள்ளிடுவாங்க. அறுபது நாள்ல கோர்ட் ஹியரிங் வச்சு இந்தியாவுக்கு அனுப்பிடுவாங்க. இந்திய பாஸ்போர்ட் கூட அவங்க கிட்டே கிடையாது. தொலைஞ்ச பாஸ்போர்ட்டை மீட்கணும்னா மாட்டிக்குவாங்கனு அதை அப்படியே விட்டுட்டாங்க.. நாம உதவலேனா அவங்க நடுத்தெருல தான் நிப்பாங்க"

"நான் அவங்களுக்கு உதவ மாட்டேன்னு சொல்லவே இல்லை.. ஆனா திருட்டுத்தனமா எதுவும் செய்ய என்னால முடியாது.. மேக்ஸ் நோ சென்ஸ்"

"ஓகே.. ரெண்டே நாள். ஜஸ்ட் டூ டேஸ் உங்க வீட்டுல வச்சுக்கோ. யாருக்கும் தெரியாம நான் கொண்டு விட்டு, நானே வேறே இடத்துக்கு கூட்டிட்டுப் போயிடறேன். உன்னோட தர்க்கம் எல்லாம் ரெண்டு நாளைக்கு ஒத்தி வை. இப்போதைக்கு தீயணைச்சுட்டு பிறகு பேசுவோம்"

"ரகு, உனக்குப் புரியலே. சட்டம் அதிகாரம்னு வரப்ப நான் ரொம்ப கோழை. பயந்து செத்துருவேன். இவங்களை ஒரு மணி நேரம் என் வீட்டுல வச்சுக்கிட்டா என் நிம்மதி போயிடும். நானே பயந்து போய் ஏதாவது தப்பா செஞ்சுடுவேன்.. ப்லீஸ்.. வேறே யாரிடமாவது கேட்டுப் பாரேன்?"

"சட்ட விரோதமா எதுவுமே செஞ்சதில்லைனு சொல்லு துரை? தினம் சின்ன சின்ன சட்ட மீறல்கள் செஞ்சுகிட்டுத்தான் இருக்கே. போன வருஷ வருமான வரிலே எத்தனை ஆயிரம் டாலர் அரசாங்கத்தை ஏமாத்தினே? மாட்டினா உனக்கு ஜெயில்னு தெரிஞ்சு தானே வரி ஏய்ப்பு செஞ்சே?"

"தட் இஸ் டிபரன்ட்"

"ஏன்?"

"ஒன் திங். என்னோட தப்புல மாட்டினா நான் மட்டும் தான் பலன் அனுபவிப்பேன். இதுல நீ சொன்னாப்புல ரெண்டு நிராதரவான ஜீவன்களும் பாதிக்கப்படுவாங்க. அதுக்கு மேலே என்னோட வாழ்க்கை நாசமாயிடும். என்னை நம்பியிருக்குற என் அம்மா சகோதர சகோதரிகள் பாடு திண்டாட்டமாயிடும்.."

"சில சமயம் நீ வக்கீலா இல்லை நான் வக்கீலானு எனக்கு மறந்துடுது.. குட் பாயின்ட். இருந்தாலும், அலோ மீ" என்றான் ரகு. "உன்னை நம்பியிருக்கறவங்களைப் பத்திக் கொஞ்சம் கூட கவலைப்படாமதான் தினசரி வாழ்க்கையை நடத்திட்டு வரே. நீ மட்டுமில்லே, நானும் தான். காரணம், நம்பியிருக்கறவங்கனு நாம சொல்றது எல்லாம் நம்ம கூடப் பொறந்தவங்க, இமிடயட் பேமிலினு ஒரு சின்ன வட்டம். அதனால அந்தச் சின்ன வட்டப் பார்வைலே பெரிய மீறல்கள் ஒரு பொருட்டா படறதில்லே. அதே நேரம், அந்த வட்டத்துக்கு வெளியே இருக்கறவங்களோட பழகுறப்ப மட்டும், நாம செய்ய வேண்டிய சாதாரண மனித நேயக் கடமையைக் கூட திடீர்னு சட்டம் முறைனு ஏதோ பேசி மிகச் சுலபமா ஒதுக்கி வச்சுடறோம். கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா, உலகத்துல நாம எல்லாருமே ஏதோ ஒரு காரணத்துக்காக ஒருத்தரை ஒருத்தர் நம்பித்தான் இருக்கோம் துரை. யாவரும் கேளிர். நீயும் நானும் ராமலக்ஷ்மிக்கு பிறக்கலை, அவ்வளவு தான். இருந்தாலும் இது நம்மைச் சார்ந்த ரொம்பப் பெரிய வட்டம். நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கறேன்"

"என்னமோ பெரிய வட்டம் சொட்டம்னு பேசறே? ஹூ ஆர் தீஸ் பீபில்? எனக்கு ஏதானு ஆச்சுனா நீ சொல்ற பெரிய வட்டமா வந்து தாங்கப் போகுது? ராமலக்ஷ்மி-பசுபதிக்கு இப்படி ஆச்சுனா அது அவங்க பாடு. அவங்கவங்க சிலுவையை அவங்கவங்க தான் சுமக்கணும்" என்று கத்த நினைத்தேன். ரகுவோடு வாதம் செய்து பயனில்லை என்று தோன்றியது. குருட்டுப் பரோபகாரி. மென்மையாக விலகுவதே மேலென்று முடிவு செய்து, "வேறே யார் கிட்டேயாவது கேட்டுப் பாரு ரகு.. என்னால முடிஞ்சா நான் செய்வேன்.. நாளைக்கு அவங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்னால் நிம்மதியா இருக்க முடியாது.. குற்ற உணர்வே என்னைக் கொன்னுடும்.. என்னால முடியும்னு தோணலே" என்றேன்.

இந்த முறை ரகுவுக்கு எரிச்சல் வந்தது. "முடிஞ்சா செய்வேன்றது இல்லாஜிகல் துரை. செஞ்சாத்தானே முடியுமா முடியாதானு தெரியும்? நாளைக்கு என்னாகும்ன்ற கற்பனை பயத்துல, இன்னிக்கு நிஜமான முதல் அடி வைக்கத் தயங்கினா எப்படி? முடிஞ்சா செய்வேன்னு சொல்றது கீழ்த்தரமான வழுக்குவாதம்னு உனக்கே தெரியும். அதுக்கு பதிலா என்னால முடியாதுனு வெளிப்படையா சொல்லிடேன்?"

"ஓகே. என்னால முடியாது, ரகு"

"வாட்?"

"என்னால முடியாது"

"நோ.. நோ.. நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சுரு துரை. உன்னை நம்பி வந்துட்டேன்.. அது என்னோட தப்புதான். ஜஸ்ட் ரெண்டு நாள் எனக்காக இந்த உதவி செய். இந்த வாரக்கடைசிலே, வேணாம் வெள்ளிக்கிழமை சாயந்திரமே நான் அவங்களுக்கு வேறே ஏற்பாடு செஞ்சுடறேன்.. அது கூட முடியாதுனா ஜஸ்ட் இன்னிக்கு மட்டும்.." ரகு கெஞ்சத் தொடங்கியதும், அவன் மேலிருந்த மதிப்பு குறையத் தொடங்கியது. திடீரென்று என் மனதில் ஒரு விடுதலை உணர்வு தோன்றியது. நான் எதுவும் பேசாதிருந்தேன். ரகு தொடர்ந்து கெஞ்சினான். "தயவு செய்து வெட்டிடாதே துரை.. ஒரு மணி கழிச்சு போன் செய்யுறேன்.. கொஞ்சம் யோசிச்சு சொல்லு.. உன்னையே நம்பியிருக்கேன்".

"ரகு.. எதுக்காக நீ இப்படி அவங்களுக்காகக் கெஞ்சறேனு புரியலே. இட் இஸ் நாட் ஸ்மார்ட். ஓகே, நீ சொல்றதுக்காக யோசிக்கிறேன்.. ஆனா நான் என்ன சொல்லப்போறேன்னு எனக்குத் தெரியும், உனக்கும் தெரியும். கால் மி பேக். எனக்கு வேலை இருக்கு" என்று போனை வைத்தேன்.

இரண்டு மணி நேரமாகியும் ரகுவிடமிருந்து போன் வரவில்லை. வேறு வழி தேடப் போயிருப்பான் என்று நினைத்தேன். ராமலக்ஷ்மி=பசுபதி கழிவிரக்கத்தைச் சுலபமாகக் கழுவ முடிந்த ஆறுதலில் என் வேலையில் மூழ்கினேன். மாலை நான்கு மணி இருக்கும். என்னைத் தேடி யாரோ வந்திருப்பதாகத் தகவல் வர, கீழே இறங்கி வந்தேன். லவுஞ்சில் உட்கார்ந்திருந்த யுவான் என்னைப் பார்த்து எழுந்தான். அவனுடன் வெளியே வந்து, "என்ன யுவான்?" என்றேன்.

"ராம்லா, பாசு ரெண்டு பேரும் இப்ப உங்க வீட்டுல பத்திரமா இருக்காங்க.. அவங்களை உள்ளே விட்டு வெளிக்கதவைப் பூட்டி வந்திருக்கேன். யாருக்கும் தெரியாது. ரகு உங்களோட தொடர்பு கொள்ற வரைக்கும் நீங்க பாத்துக்குங்க. ரொம்ப தேங்க்ஸ்" என்றான் இயல்பாக.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "வாட்? யாரைக் கேட்டு இதைச் செஞ்சே? கதவை எப்படித் திறந்தே?" என்று எரிந்தேன். யுவான் எதுவும் பேசாதிருந்தான். என் கேள்விகளின் முட்டாள்தனம் புரிந்து இன்னும் எரிச்சலடைந்தேன். "போலீசைக் கூப்பிடுவேன்.. உடனே அவங்களை அங்கிருந்து கூட்டிட்டுப் போ.. போலீசைக் கூப்பிடத் தயங்கவே மாட்டேன். ரகு எங்கே? நீ எப்படி என் வீட்டுக் கதவைத் திறக்கலாம்?" என்று இலக்கில்லாமல் தாவியது என் ஆற்றாமை.

யுவான் அமைதியாக, "ரிலாக்ஸ் மிஸ்டர். போலீசைத் தாராளமா கூப்பிடு. அப்புறம் உனக்கு என்னாகும்னு யோசிச்சுக்க" என்றான். "திஸ் இஸ் நாட் எ பிக் டீல். இந்த வட்டாரத்துல மட்டும் ஆயிரம் பேராவது விசா இல்லாம இருக்காங்க. இதெல்லாம் மனுசனுக்கு மனுசன் செய்யறது தான். கெட் ஓவர் இட்" என்றுப் புன்னகையுடன் நகர்ந்தான். பத்தடி போனவன் திரும்பி வந்தான். என்னை நேராகப் பார்த்தான். "மிஸ்டர், புத்திசாலித்தனமா நடந்துக்குங்க. அப்புறம் கஞ்சா வச்சிருந்ததுக்காக அனாவசியமா பேர் கெட்டு வேலை இழந்து ஜெயிலுக்குப் போகாதீங்க" என்றான். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு என்னைக் கடந்து சென்றான்.

    செய்வதறியாமல் திகைத்தேன். தவித்தேன். உடனே வீட்டுக்குச் சென்று அவர்களைத் துரத்தத் தோன்றியது. போலீசுக்குப் போகத் தோன்றியது. அதனால் சிக்கல் இன்னலாகும் சாத்தியம் புரிந்து அடங்கினேன். யுவானின் மென்மையான அச்சுறுத்தல் வேறு என்னுள் பரவத் தொடங்கியது. 'ரகுவை வென்றேன்' என்ற எண்ணம் பொடியாகி, அவன் மேல் ஆத்திரம் எழுந்தது. அவன் தான் யுவானை ஏவியிருக்க வேண்டும். என் ஆபீசுக்குச் சென்று ரகுவுக்கு போன் செய்தேன். பத்துப் பதினைந்து முறையாவது முயற்சி செய்திருப்பேன். அவனைப் பிடிக்க முடியவில்லை. கடுப்பு தாளாமல் விடுப்பு அனுமதி வாங்கி வெளியே வந்தேன். அலுவலக வாசலில் இருந்த டேக்சி ஒன்றில் ரகுவின் பாஸ்டர் சிடி காண்டோவுக்கு விரைந்தேன். செக்யூரிடி ஆசாமி அறையின் பிஎஸ்டூ கணினியில் அவசரமாக மேய்ந்துவிட்டு, "ரகு ந்யூ யோர்க் போயிருக்காரு. வர ஒரு வாரம் ஆகும். வீட்டுல யாரும் இல்லை. மெசேஜ் இருந்தா குடுத்துட்டுப் போங்க" என்றான் பணிவுடன்.

ஏமாற்றப்பட்ட ஆத்திரத்துடன் நடந்தே வீடு திரும்பிய போது இருட்டி விட்டது. வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது அமைதியாக இருந்தது. யாரையும் காணவில்லை. ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்தேன். இரண்டாவது பெட்ரூமின் குளியலறையில் அவர்களைப் பார்த்தேன். வீல்சேரில் பசுபதி, அவர் கைகளைப் பிடித்தபடி கண்களில் கலக்கத்துடன் உட்கார்ந்திருந்த ராமலக்ஷ்மி.. இருவரையும் பார்த்ததும் எனக்கிருந்த கோபம் மாற்றுக் குறைந்தாலும் ஆத்திரம் குறையவில்லை.

என்னைப் பார்த்ததும் மாமி வெளியே வந்தார். "நீ எப்ப வருவேனு தெரியாது. அதான் லைட்டைக் கூடப் போடாமல் உக்காந்திருந்தோம்" என்றார்.

எனக்கிருந்தக் கடுப்பில் பேச்சே வரவில்லை. மாமி தொடர்ந்தார். "நீ தெய்வம் மாதிரி, நான் கும்பிடுற பகவான் விசுவநாதர் உலகம்மை ரெண்டு பேரும் சேந்து வந்த மாதிரி, இது கையில்லே காலா நெனச்சுக்கோ.. அப்படியெல்லாம் எனக்குப் பேசத் தோணினாலும் அதெல்லாம் சரியில்லேனு தெரியும் துரை. கொச்சையாப் போயிடும்" என்ற மாமியின் கண்களில் ஈரம் மின்னியது. "பகவானுக்கெல்லாம் பிராண சங்கடம்னா என்னன்னே தெரியாது. பகவான்லாம் பிராணனை எடுப்பாளே தவிர சங்கடத்தை தீர்த்து வச்சதே இல்லை. சங்கடத்தைத் தீத்து வைக்கறது மனுசாளாலே மட்டுந்தான் முடியும். அதனால நீ பகவானுக்கெல்லாம் மேலேப்பா" என்றார்.

"எப்படி உள்ளே வந்தீங்க?" என்று சம்பந்தமேயில்லாமல் ஒரு கேள்வியைக் கேட்டேன்.

"யுவான் காத்து மாதிரி வந்தான். ஒரு வேன்ல எங்களை இங்கே கூட்டிண்டு வந்தான். உன் கதவைத் திறந்து சட்டுபுட்டுனு எங்களை இங்க பாத்ரூம்ல உக்கார வச்சுட்டு காத்தாப் போயிட்டான். அப்பலேந்து இந்த பிராமணர் கையைப் பிடிச்சுண்டு உலகம்மை உலகம்மைனு ஜபம் பண்ணிண்டிருந்தேன். பாதி நேரம், 'இது வேறே யாரோட வீடா இருந்தா என்ன பண்றது? இந்த யுவான் ஏதாவது திருவாழத்தான் வேலை பண்ணி... திடீர்னு உள்ளூர்க்காரா யாராவது வந்து எங்களைப் பாத்து பயந்து வச்சுட்டா?'னு நேக்கு பயம். நீ வரதுக்குள்ளே கதி கலங்கிப் போச்சுப்பா" என்றார் மாமி.

ஏனோ தெரியவில்லை, வாய்விட்டுச் சிரித்தேன். கண்ணில் நீர் வரச் சிரித்தேன்.

ஓய்ந்து, "ஏதாவது சாப்பிட்டீங்களா?" என்றேன்.

"இல்லப்பா.. ரெண்டு நாளா யுவான் வீட்டு பேஸ்மென்டுல இருந்தோம்.. அவா மாம்சம் சாராயம்னு அங்க அடுக்கி வச்சிருக்கா. யுவான் அப்பப்போ ரொட்டி ஜேம்னு கொண்டு வந்து கொடுத்தான் பாவம். நேக்குக் கொமட்டிண்டு வந்துருத்து. இவருக்கு மட்டும் அப்பப்ப ரெண்டு ஸ்பூன் ஜேம் கொடுத்தேன். நான் ரெண்டு நாளா எதுவும் சாப்பிடலை. இருந்திருந்து இப்ப பசி மயக்கம் சுத்திண்டு வரது. ரெண்டு கரண்டி கஞ்சி இருந்தாக் கூட போறும். உப்பு போட்டு, இதுக்கு ஒரு கரண்டி கரைச்சுக் குடுத்துட்டு நானும் ஒரு கரண்டி சாப்டுவேன். ஏது நான் சமைச்சுப் போடாம உங்கிட்டே கேக்கறேன்னு நினைக்காத.. பழையதுனாலும் பரவாயில்லை.. ரெண்டு கரண்டி சாதம் இருக்குமாப்பா?" என்றார் மாமி, கையை ஏந்தி.

நடுங்கும் மெழுகின் ஒளி ஆயிரம் வாட் விளக்கைவிட பிரகாசிக்கும் முரண் கடுமையான இருளில் மட்டுமே புரியும். அந்தக் கணத்தில் எனக்குள் இருந்தக் காழ்ப்பும் கடுப்பும் எரிச்சலும் பொசுங்கியதை உணர்ந்தேன்.

"மாமி, நான் சமைச்சு ஒரு வருஷமாகுது. இந்தியாலந்து போன வருஷம் அம்மா குடுத்தனுப்பின பருப்புப் பொடி, ஊறுகாய் இருக்கு. அரிசி இருக்கு. சாதம் வச்சுடறேன், பத்து நிமிஷம் இருங்க" என்றேன். அவசரமாக அந்த அறையைச் சீர் செய்தேன். மாமியிடம், "நீங்க இங்க வசதியா இருங்க. குளிக்கறதுனா துண்டு, சோப்பு எல்லாம் இங்கே இருக்கு. ஏதாவது வேணும்னா சொல்லுங்க" என்றேன். அரிசியைக் குக்கரில் ஏற்றிவிட்டு, அவசரமாக வெளியேறினேன். தெருக்கோடிக் கடையில் மோரும் உருளைக்கிழங்கு சிப்சும் வாங்கி வந்தேன்.

சாதம் மேற்பகுதி வெந்து, கீழ்ப்பகுதி சற்று அரிசியாகவே இருந்தது. "பரவாயில்லே. வெழுமூன பிசஞ்சுட்டா ஒண்ணுமே தெரியாது" என்ற மாமி, ஒரு டம்ளர் வென்னீரை அரைகுறை சாதத்தில் ஊற்றினார். இரண்டு நிமிடங்கள் போல் அழுத்திப் பிசைந்தார். கூழான சாதத்தில் இரண்டு ஸ்பூன் பருப்புப் பொடியும், உப்பும், பிறகு மோரும் கலந்தார். ஒரு பெரிய டம்ளரில் விளிம்பு வரை நிரப்பி, "இந்தா.. மாமி கையால உங்காத்து முதல் சாப்பாடு.." என்று என்னிடம் கொடுத்தார்.

"நீங்க சாப்டுங்கோ மாமி"

"சாப்பிடுப்பா..களைச்சு வந்திருக்கே.. நீ சாப்பிட்டதும் இவருக்குக் குடுத்துட்டு நானும் சாப்பிடறேன்" என்றார்.

நான் களைத்திருப்பதாகக் கவலைப்படுகிறாரே? ஒரு வாய் சுவைத்தேன். கூழ் மணத்தது. கைமணம் என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே இருந்ததில்லை. நான் கூழை ஒவ்வொரு மிடறாக விழுங்க, மாமி சிப்ஸ் பாகெட்டிலிருந்து இரண்டிரண்டாக எடுத்துக் கொடுத்தார். இரண்டாவது டம்ளர் கூழும் போன இடம் தெரியவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன், கல்யாணச் சாப்பாடு கூட அந்த அன்றையக் கூழுக்கு இணையாகாது. "போதும் மாமி" என்றேன்.

"சித்த இவரைப் பிடிச்சுக்கறியா?" என்றார் பசுபதியைக் காட்டி.

"நான் வேணும்னா ஊட்டறேனே, மாமி?" என்றேன்.

"ஊகூகூம்" என்று பதட்டமானார் மாமி. பிறகு நிதானித்து, "தப்பா நினைக்காதே துரை. இது.. இவருக்கு ஊட்டி விடறது.. இது நான் தினம் பண்ற தபஸ். காசி விசுவநாதர் உலகம்மைனு நான் சும்மா வாய்க்கு வாய் சொன்னாலும் நேக்கு எல்லாமே இப்ப இவரோட மூஞ்சி தாம்பா. ஒரு வாய் முழுங்கினதும் இவர் கண்ல ஜொலிக்கறது பார், அது நான் பண்ற தபசுக்குக் கை மேல் கிடைச்ச பலன். என்னை விட்டா இவருக்கு யாரும் இல்லைனு எல்லாரும் சொல்றா. உண்மை என்னன்னா இந்தப் பிராமணரை விட்டா நேக்கு நாதி கிடையாது. என்னோட தினசரி சோகத்தை ஒரு ஜொலிப்புல பஸ்பமாக்கிடுவார்.. அதான்.. நானே இவருக்கு ஊட்டி விடறேன்"

"என்னை மன்னிச்சுருங்க மாமி" என்றபடி அருகிலிருந்து ஒரு கைத்துண்டை எடுத்துக் கொண்டேன். "இவர் சைவப்பிள்ளைனீங்க.. பிராமணர் பிராமணர்னு வாய்க்கு வாய் சொல்றீங்களே?"

"எனக்கு இவர் பிராமணர், இவருக்கு நான் சைவப்பிள்ளை. அவ்வளவு தான்" என்றபடி மாமி ஊட்டத் தொடங்கினார். "உனக்கொண்ணு தெரியுமோ? நாங்க திருட்டுக் கல்யாணம் பண்ணிண்டது கூட இவாத்து மனுஷாளுக்குப் பெரிசா தோணலே. எம்பேரு ராமலக்ஷ்மிங்கறதுல அவாளுக்கு அவ்ளோ துக்கம். சைவம்னா அப்படியொரு சைவம். நான் சொல்றதெல்லாம் கேட்டுண்டே மனசுக்குள்ள எப்படி சிரிக்கிறது பாரு இந்தக்கிழம்?" என்றபடி பசுபதியின் மார்பில் விளையாட்டாகக் குத்தினார் மாமி.

ரகு எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறான் என்பதும், அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய உதவி என்னவென்பதும் தெளிவானது. ஆனால் என் செயல், ரகுவுக்கும் எனக்குமிடையே நிரந்தர விரிசலை உருவாக்கும் என்று அப்போது தெரியாமல் போனது.


தொடரும்>>

55 கருத்துகள்:

  1. //உலகத்துல நாம எல்லாருமே ஏதோ ஒரு காரணத்துக்காக ஒருத்தரை ஒருத்தர் நம்பித்தான் இருக்கோம் துரை. யாவரும் கேளிர்.//

    நீங்க கதை சொல்ல வந்தது போலவே தோன்றவில்லை.

    மனுஷனா பிறந்தப்புறம் நமக்குன்னு சில கடமைகள் இருக்கு. விதி முறைகள் இருக்கு. இதுலெ பலது நம்ம சமூகத்தினாலே
    (நம்ம சார்ந்திருக்கிற குடும்பம், கோத்திரம், ஊர் , ஜாதி, மதம், தேசம் ) நிர்ணயிக்கப்பட்டிருக்கிற ரூல் புக். இந்த ரூல் புக்கிலே
    சொல்லிருக்கிறதை மட்டும் தான் நம்முடைய கடமைகள் என்று தோன்றிவிட்டால் அப்பறம் நாமும் பிறந்தோம், வளர்ந்தோம்,
    இறந்தோம் அப்படிங்கற கோடானு கோடி ஜன சமுதாயத்திலே நாமும் ஒரு எண் ஆக ஆகிவிடுகிறோம்.

    அதுலே விடுபட்டு, சட்டத்துக்கு மேலே போய், நியாயம் என்ன, நியாயத்துக்கு மேலே போய் தர்மம் என்ன, தர்மத்துக்கும்
    மேலே போய் ஸ்வதர்மம் அப்படின்னா என்ன அப்படின்னு புரிஞ்சுக்கிரதுக்கு ....

    நம்ம கொஞ்சம் உசரணும்.

    உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதில் உயர்வு என்பது இந்த உயர்வான எண்ணங்களைத் தான் குறிப்பிடுகிறது.

    எண்ணங்கள் உயர்ந்தால், வார்த்தைகளும், செயல்களும் பின் தொடரும்.

    உங்க கதைய படிக்கும்போது இதெல்லாம் சொல்லணும் தோணறது. உங்க டயத்தை வீணாக்கிறேன் அப்படின்னும் தோணரது.

    இன்னொன்னும் சொல்லணும்.

    மஹாலய அமாவாசை அன்று இந்துக்களாகப் பிறந்தவர்களுக்கு ஒரு தர்ப்பண விதி முறை இருக்கு. மற்ற எல்லா அமாவாசைகளிலும்
    பித்ருக்களுக்கு எள், தண்ணீர் கொடுப்பது வழக்கம். இந்த மஹாலய அமாவாசை அன்று , காருண்ய பித்ருக்கள் அதாவது நம்ம‌
    அறிந்தும் அறியாமலும் ஏதோ ஒரு நேரத்திலே ஏதோ ஒரு கால கட்டத்திலே இப்ப நம்ம கண்ணுக்கு புலப்படாத, இப்ப ஜீவித்திராத‌
    அத்தனை பேருமெ நம்ம காருண்ய பித்ருக்கள். நம்ம மேலே கருணை வைத்து எந்த சொந்தமும் இல்லாம் , எந்த சட்டக்கடமையும்
    இல்லாம நமக்கு உதவி செஞ்சவங்க... அவங்களை நினைக்கணும் அப்படிங்கறதுக்காக ...

    ஏதோ இந்த தர்ப்பணம் செஞ்சுட்டா நம்முடைய கடமை முடிஞ்சுதா அப்படின்னு இல்லை. இந்த தர்ப்பணம் மூலமா நம்முடைய‌
    கடமைகள் என்ன அப்படின்னு ஒரு கோடி காட்டிருக்கு.

    உங்க கதை மூலமா ஒரு சித்தாந்தத்தையே சொல்லிருக்கிறீக...

    திரும்பவும் சொல்லணும். இது கதை இல்ல. மனித நேயத்தின் அடிப்படை தத்துவம்.

    சுப்பு ரத்தினம்.
    @ சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  2. கண்ணீர் கொட்டக் கொட்டப்படிச்சேன். ரொம்ப இயல்பா, ரொம்பச் சாதாரணமா எழுதிட்டு இருக்கீங்க. ஆனால் அதன் ஆழம் நினைக்கவே மனசு பூரிச்சுப் போறது. ஒவ்வொருத்தனுக்கும் சுயதர்மம்னு ஒண்ணு உண்டு. அது எந்தச் சந்தர்ப்பத்தில் எப்படி நடந்துக்கணும், என்ன செய்யணும் என்பதைச் சொல்கிறது. அந்த சுயதர்மத்தை இங்கே சொல்லாமல் சொல்லி இருக்கீங்க.

    இந்த தர்மம் ஆளாளுக்கு, சமயா சமயத்துக்கு மாறுபடும். இங்கே உங்களுக்கு தர்மமாப் படறது எனக்குப் படாது. ஆனால் இந்த இடத்தில் யார் இருந்தாலும் இதைத் தான் செய்திருப்பாங்க என்பதே இந்தக் கதையின் முக்கியமான தர்மம். மனிதர்களை மேம்படுத்திக் காட்டுவதும், மனித நேயம் என்றால் என்ன என்பதும் அதன் அடிப்படையையும் காட்டுகிறது.

    அட, நான் சொல்ல வந்ததையே சூரி சாரும் சொல்லி இருக்கிறாரே, இன்னும் தெளிவாக! :)))

    பதிலளிநீக்கு
  3. இது உங்களோட மாஸ்டர் பீஸ்னு சொல்லலாம்.


    நடுங்கும் மெழுகின் ஒளி ஆயிரம் வாட் விளக்கைவிட பிரகாசிக்கும் முரண் கடுமையான இருளில் மட்டுமே புரியும். அந்தக் கணத்தில் எனக்குள் இருந்தக் காழ்ப்பும் கடுப்பும் எரிச்சலும் பொசுங்கியதை உணர்ந்தேன்.//

    எப்படி இப்படில்லாம் எழுத முடியுதுனு நினைச்சு நினைச்சு ஆச்சரியப் பட்டுப் போறேன். உங்களுக்கு மட்டுமில்லாமல் எனக்கும் ரகுவின் மேல் இருந்த கடுப்பும் கூடக் குறைந்தது.

    பதிலளிநீக்கு
  4. அந்த துரை கேரக்டர் அற்புதம்ங்க. இப்படியான இக்கட்டில் மாட்டிக்கொள்ளாமல் நழுவுவதற்கு எவனொருவனும் என்னலாம் வழியைப் பார்ப்போனோ, அந்த வழிகளில் கொஞ்சமும் பிசிறு தட்டாமல் அத்தனை லட்சணங்களையும் வரிசையா சொல்லிண்டே போறீங்க..

    ஒரு வழியா எல்லாத்திலேந்தும் கழண்டிண்டாச்சுங்கற நிம்மதி பிறந்த கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் அதே உழைச்சலே வந்து சேர்ந்து அதை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் பொழுது--மாமியையும், அவர் கணவர் பசுபதியையும் நேருக்கு நேராகப் பார்க்கும் பொழுது, சொன்னது அத்தனையும் பொய்யாகி, ஒரு வாய்க் கஞ்சிக்கு ஏற்பாடு செய்கிற அவசரம்
    கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறதே, அந்த இடம் உன்னதம். யதார்த்தம்.

    ஒரு நிகழ்வு நிகழாத போது அதுபற்றியதான கற்பனை நிலைக்கும், அதே நிகழ்வு நிகழும் போதிருக்கும் யதார்த்த நிலைக்கும் இருக்கும் மலைக்கும் மடுவுக்குமான மனித உள்ள மனநிலைகளை வெகுவெகு துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். ஒரு துளிகூட பிசகாது, அப்படி அப்படியே.

    அந்தக் கூழை துரை குடித்து முடித்ததும் அடுத்து அவர்கள் குடிப்பதற்குள் ஐஎன்எஸ் வந்து விடும் என்று எதிர்பார்த்தேன்; வரவில்லை.
    பசுபதி கூழைக் குடித்ததும் அவர்களின் வருகை நிகழும் என்று எதிர்ப்பார்த் தேன்; நிகழவில்லை. கடைசியில் மாமி குடிப்பதற்கு முன்னாவது... அதெல்லாம், சினிமாவில், இது மனித மன உளைச்சலைப் பற்றிய காவியம் அல்லவா என்று நீண்ட கதை எனக்குப் பழிப்புக் காட்டியது.

    பதிலளிநீக்கு
  5. //ரகுவோடு வாதம் செய்து பயனில்லை என்று தோன்றியது. குருட்டுப் பரோபகாரி.//

    போன அத்தியாயத்தில் ரகுவை மகாத்மா என்றேன் நான். இந்த அத்தியாயத்தில் அவன் குருட்டுப் பரோபகாரியோ என்று யோசனை நீள்கிறது.. இது தான் உங்கள் எழுத்தின் வலிமை.

    //பழையதுனாலும் பரவாயில்லை.. ரெண்டு கரண்டி சாதம் இருக்குமாப்பா?" என்றார் மாமி, கையை ஏந்தி.//

    பரிதாபத்தின் உச்சம். ஒரு நேரத்தில் பாத்து பாத்து வக்கணையாக சமைத்துப் போட்ட மாமி, ஒரு கரண்டி சாதத்திற்கு கை ஏந்துவது. பட்டினத்தார் வந்து கரும்புக் கழியோடு நிற்கிறார். 'யப்பா. எதுவும் நிலை இல்லப்பா, இந்த லோகத்தில்.'

    எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை; எல்லாம் வழக்கப்படியே.. மாமி கைவண்ணத்தில் அமுத உணவு வழங்கல், பசுபதியின் நாற்காலி தலைசாய்த்தல்.. ஒரே ஒரு மாறுதல்.
    இப்பொழுது மாமியின் மெஸ்-- ஒரே ஒரு நாள், அதுவும் ஒரே ஒரு வேளை மாமியின் சாப்பாட்டைச் சாப்பிட்ட துரையின் அப்பார்ட்மெண்டில் என்று கொண்டு போகலாமென்றால், அப்படியில்லை என்று ஆரம்ப அத்தியாயத்திலேயே எழுதி விட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  6. //உண்மை என்னன்னா இந்தப் பிராமணரை விட்டா நேக்கு நாதி கிடையாது. என்னோட தினசரி சோகத்தை ஒரு ஜொலிப்புல பஸ்பமாக்கிடுவார்.. //

    //எம்பேரு ராமலக்ஷ்மிங்கறதுல அவாளுக்கு அவ்ளோ துக்கம். சைவம்னா அப்படியொரு சைவம். நான் சொல்றதெல்லாம் கேட்டுண்டே மனசுக்குள்ள எப்படி சிரிக்கிறது பாரு இந்தக்கிழம்?" என்றபடி பசுபதியின் மார்பில்.. //

    //நடுங்கும் மெழுகின் ஒளி ஆயிரம் வாட் விளக்கைவிட பிரகாசிக்கும் முரண் கடுமையான இருளில் மட்டுமே புரியும்.//

    //"ஊகூகூம்" என்று பதட்டமானார் மாமி. பிறகு நிதானித்து, "தப்பா நினைக்காதே துரை. இது.. இவருக்கு ஊட்டி விடறது.. இது நான் தினம் பண்ற தபஸ்.//

    --மனசைக் கவ்விய இடங்கள்..

    //யுவான் காத்து மாதிரி வந்தான்.//

    //இந்த யுவான் ஏதாவது திருவாழத்தான் வேலை பண்ணி..//

    -- மனசைக் கவர்ந்த வார்த்தைப் பிரயோகங்கள்.

    பதிலளிநீக்கு
  7. Still I am uanble to express my feelings caused by this part and unable to think how this will proced in next part. Sometimes it so happens, that for the sake of friendship we do such help which may cost the friendship especially when you lend money, we may lose money or friendship or both. Waiting again with heavy heart for next part.

    பதிலளிநீக்கு
  8. துரை இது நியாயமே இல்லை.இப்படிப் பாதியில் நிறுத்தி என்ன ஆச்சொ என்ன ஆச்சோன்னு தவிக்கிறது ரொம்பக் கஷ்டம். என்னமா எழுதுகிறீர்கள்!! இப்படி ஒரு தம்பதி. இவர்களை வைத்துக் காவியமாகப் படைக்கும் நீங்கள். ஒரு ஒரிஜினல் இந்தியன் அமெரிக்காவில் என்ன தவிப்புக்கு ஆளாகிறான்.!!! அடுத்த பதிவு அடுத்த வாரமா?

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொரு வரியும் அருமை. திரும்பத் திரும்பப் படித்தேன். ஒரு கோணத்தில் ரகு உயர்வாகத் தோன்றினாலும் ஒரு கோணத்தில் துரையின்  அனுமதி கூட இல்லாமல் அவர்களை வீட்டில் விட்டது அவரின் பிக் பாஸ் அட்டிடுடை சாடத் தூண்டுகிரது. அது போல் வயதான தம்பதியருக்கு உதவாமல் வாதமிட்ட (யதார்த்தமானது என்றாலும்) துரை மேல் கோவம்  வந்தாலும் மாமியைப் பார்த்ததும் உதவிய அவரின் இளகிய  மனத்தைப் பாராட்டத் தோன்றுகிறது. எல்லாவற்றிகும் மேல் யுவானின் உதவி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மனித மனத்தின் உணர்ச்சிகளை இயல்பாக சொல்லும் அருமையான கதை.  Hats off to you.

    பதிலளிநீக்கு
  10. அப்பதுரை அவர்களே! "பூ பூக்கும் ஓசை கேக்கத்தான் ஆசை" என்ற பாடலைப் போல முதற்பகுதி பூவாக மலர்ந்தது ! இரண்டாவது பகுதி a bit dramatised ! a bit melodramatic ! வலிமையான உங்கள் எழுத்து இவற்றை உடைத்து புத்தம் புதிய அனுபவத்தை கொடுக்கிறது ! வாழ்த்துக்கள் ! ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  11. க‌தையின் போக்கு காட்டாறாக‌ காடு, மேடு, க‌ழ‌னி எனப் ப‌ர‌சி, ப‌லவ‌ற்றை உள்ளிழுத்து, க‌டக்கும் இட‌த்தையொல்லாம் கைய‌க‌ப்படுத்திக் கொண்டு, ப‌த‌விக் கால‌ம் முடிய‌ப்போகும் நேர‌ அர‌சிய‌ல்வாதி போல் எதிர் ப‌டும் எல்லாவ‌ற்றையும் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடுகிற‌து. கொஞ்ச‌ம் எட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறோம் திருப்ப‌ங்க‌ளின் திசையை, எங்கே ந‌ம்ம‌ வ‌ய‌ல் ப‌க்க‌மும் வ‌ந்திருமோ என்ற‌ சிறு விவ‌சாயின் த‌விப்போடு க‌தை எப்போ நிலைக்கு வ‌ருமென்று.

    பதிலளிநீக்கு

  12. / பகவானுக்கெல்லாம் பிராண சங்கடம்னா என்னன்னே தெரியாது. பகவான்லாம் பிராணனை எடுப்பாளே தவிர சங்கடத்தை தீர்த்து வச்சதே இல்லை. சங்கடத்தைத் தீத்து வைக்கறது மனுசாளாலே மட்டுந்தான் முடியும். அதனால நீ பகவானுக்கெல்லாம் மேலேப்பா" என்றார்/ சந்தடி சாக்கில மனித நேயத்தை ஓங்கி உரைக்கும் கதையில் உங்கள் கருத்தை ஓசைப்படாதவாறு உரைத்திருப்பதை மிகவும் ரசித்தேன்.தவறு சரி என்பதெல்லாம் on hind sight நன்றாகவே தெரிவதுபோல் இருக்கும். நிகழ்வுகளின் நடுவில் இருக்கும்போது மனித இயல்புகளே முதலில் வரும். என்னதான் சட்ட விரோதமாக இருந்தாலும் உதவி செய்ய வேண்டுவது ரகுவின் இயல்பாய் சொல்லும் நீங்கள் முதலில் உதவ மறுத்த துரை ராமலக்ஷ்மி பசுபதி தம்பதியினர் வீட்டில் வந்துவிட்டது தெரிந்தபோது நடந்துகொள்வது மனித நேயத்தின் இன்னொரு முகம். going great sir.!

    பதிலளிநீக்கு
  13. இரண்டு பகுதிகளையும் படிச்சேன். எப்பவும் போல கதையின் நிகழ்வுகளில் கட்டிப்போடும் அருமையான நடை. அடுத்து நல்லது நடக்காதானு ஒரு நப்பாசையில படிச்சிட்டிருந்தாலும்... //அதற்குப் பிறகு அவன் சொன்னது என்னைத் திடுக்கிட வைத்தது// என்பது வேற பயமுறுத்திட்டு இருக்கு...:-(((

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லாடிசம்பர் 15, 2012

    இதை சத்தியமா ஒரு கதையாகவே நினைக்க முடியல. அவ்வளவு அற்புதமான எழுத்து நடை! Hats off!

    // "நீ தெய்வம் மாதிரி, நான் கும்பிடுற பகவான் விசுவநாதர் உலகம்மை ரெண்டு பேரும் சேந்து வந்த மாதிரி, இது கையில்லே காலா நெனச்சுக்கோ.. அப்படியெல்லாம் எனக்குப் பேசத் தோணினாலும் அதெல்லாம் சரியில்லேனு தெரியும் துரை. கொச்சையாப் போயிடும்"// அம்மா! எப்படி இந்த மாதிரி எழுத முடிஞ்சுது. படிச்சு படிச்சு மலைச்சு போறேன்.

    //நடுங்கும் மெழுகின் ஒளி ஆயிரம் வாட் விளக்கைவிட பிரகாசிக்கும் முரண் கடுமையான இருளில் மட்டுமே புரியும்.// மெய் சிலிர்க்க வைத்த வரி.

    //சந்தடி சாக்கில மனித நேயத்தை ஓங்கி உரைக்கும் கதையில் உங்கள் கருத்தை ஓசைப்படாதவாறு உரைத்திருப்பதை மிகவும் ரசித்தேன்.// ஜி.எம்.பீ. சார் இதை நான் ரசித்தேன். :)

    பின்னூட்டங்கள் மூலம் ஒவ்வொருவரும் வெளிபடுத்திய உணர்வுகளை இந்த கதையை படித்தபோது நானும் உணர்ந்தேன்.

    ஜி.வீ. அவர்களின் பின்னூட்டம் கிளாஸ்! தர்மத்தை பற்றிய கீதா மேடம் அவர்களின் கருத்தே என்னுடையதும்.

    பதிலளிநீக்கு
  15. அடுத்த அத்தியாயம் எப்ப ???

    பதிலளிநீக்கு
  16. ரகு எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறான் என்பதும், அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய உதவி என்னவென்பதும் அப்போதுத் தெளிவானது. ஆனால் என் செயல், ரகுவுக்கும் எனக்குமிடையே நிரந்தர விரிசலை உருவாக்கும் என்று அப்போது தெரியாமல் போனது....../

    கதையும் ??! பின்னூட்டங்களும் , நெகிழவைக்கின்றன ....

    பதிலளிநீக்கு

  17. CLASS.

    // ரகுவை மகாத்மா என்றேன் நான். இந்த அத்தியாயத்தில் அவன் குருட்டுப் பரோபகாரியோ என்று யோசனை நீள்கிறது.//

    ஜீவி சார்...இது அப்பாஜியின் எழுத்து மகிமை. மேலும்,

    எந்த ஒரு செயலும் முதலில் தொடங்கியவர் யாரோ, அப்புறம் அதைத் தொடர்பவர்கள் அதை இன்னும் முழுமையாக்கி, மெருகூட்டிச் செய்வார்கள். தொடங்கியவரின் பெருமை அடிபட்டுப் போகுமோ? இது எனக்குத் தோன்றுவது!

    மற்றபடி எண்ணங்களையும் ரசித்தவைகளையும் ஏற்கெனவே எல்லோரும் சொல்லி விட்டார்கள்.

    பதிலளிநீக்கு

  18. //ஒரு கோணத்தில் ரகு உயர்வாகத் தோன்றினாலும் ஒரு கோணத்தில் துரையின் அனுமதி கூட இல்லாமல் //

    இதையும் ரகுவின் கையறு நிலையிலிருந்து பார்த்தால் அவர் நிலையில் வேறு வழியில்லை என்பதும்,
    துரை நிலையில் இருந்து இயல்பான சுய எச்சரிக்கை உணர்வும், அவர்களின் நிலை கண்டதும் பரிதாபமும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது உணர்ச்சிகள் மீறி, அறிவால் செய்யக் கூடியதை யோசிப்பதும்,

    வெகு இயல்பு.

    பதிலளிநீக்கு
  19. பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. சூரி சார்: கதையை விட உங்க பின்னூட்டம் நெகிழ்வா இருக்கு. 'நாம் கொஞ்சம் உசரணும்' இந்த வரி துருவ நட்சத்திரம்.

    மஹாலய அமாவாசையின் காரணம் (அப்படி ஒரு அமாவாசை இருப்பதே தெரியாது) கொஞ்சம் சிலிர்க்க வைப்பது உண்மை தான்.

    பதிலளிநீக்கு
  21. பிரமாதமா சொன்னீங்க கீதா சாம்பசிவம். எழுதுறப்போ, சுயதர்மம் பத்தி நான் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  22. இலக்கியப் பின்னூட்டங்கள் உங்களுக்கு இலகுவாக வருவதைப் பலமுறை ரசித்திருக்கிறேன் ஜீவி சார்.

    ['தொடரும்' போட நிறைய ஐடியா தந்திருக்கீங்களே]

    பதிலளிநீக்கு
  23. மோகன் - இது கற்பனைக் கதை. ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் 'நட்பின் விலை'யில் கொஞ்சம் நிஜத்தின் நிழல்.

    பதிலளிநீக்கு
  24. காஸ்யபன் சார், நீங்கள் சொல்லியிருப்பது போல மெலோட்ராமாவா ஆயிடும்னு எனக்கும் பயமிருந்தது. கவனமாக இருந்தும் பிசகியிருக்கிறது போல. இன்னும் எழுதிப் பழக வேண்டும்.

    புறப்பார்வையில்... நமக்கு ஏற்படுற சின்ன சோகம் கூட துக்கத்தின் உச்சமாகத் தோணும். அடுத்தவங்களுக்கு ஏற்படுற பெரிய சோகம் கூட melodramaவா தோணும். in a way, வாழ்வின் சோகங்கள் அத்தனையும் shades of melodramaனு நினைக்க முடிந்தால் சூரி சார் சொல்லியிருக்கும் பக்குவத்துக்கு பக்கத்துல போயிடறோம்னு நினைக்கிறேன்.

    இந்தக் கதை ரொம்ப சோகமான கதை. கிட்டத்தட்ட இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னால நான் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தின் பூதக்கண்ணாடி கூடிய கலைடஸ்கோப் பார்வை. எழுதலாமா வேண்டாமானு ரொம்ப நாளா யோசிச்ச கரு. இதுக்கு முன்னால இப்படி ஒரு சோகக்கதை எழுதினேன் (தந்தை சொல்). அந்தக் கதையில் பாசிடிவ் முடிவு. இந்தக் கதையின் முடிவோ இன்னும் துயரமான சோகம். சமீபத்தில் படித்த செய்தி (பணத்துகாகப் பத்து மாதக் குழந்தையைக் கழுத்தை நெறித்து கொன்ற எங்கள் பாரத தேசத்துக்காரன்) இந்தக் கதையை எழுத வைத்தது என்றால்.. இரண்டு நாள் முன்பு கனெடிகட் பள்ளிக்கூடத்தில் ஆறேழு வயதான இருபது குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்ட சோகம் கதையை இங்கேயே நிறுத்திவிடத் தூண்டுகிறது.

    பொதுவாக சோகக்கதைகள் எழுதத் தயங்குகிறேன். very draining. எனக்கும், படிப்பவருக்கும்.


    பதிலளிநீக்கு
  25. நேத்திக்குக் கதையைப் படிச்சதுமே மனசு கனத்துப் போனதாலே மற்றப் பின்னூட்டங்களை இட முடியலை.

    //பகவானுக்கெல்லாம் பிராண சங்கடம்னா என்னன்னே தெரியாது. பகவான்லாம் பிராணனை எடுப்பாளே தவிர சங்கடத்தை தீர்த்து வச்சதே இல்லை. சங்கடத்தைத் தீத்து வைக்கறது மனுசாளாலே மட்டுந்தான் முடியும். அதனால நீ பகவானுக்கெல்லாம் மேலேப்பா" என்றார்.//

    "தெய்வம் மனுஷ ரூபேண" என்று சொல்வார்கள். அது போலத்தான் நீங்கள் அங்கே அந்தச் சமயம் அவங்களுக்கு உதவி செய்ததும். உங்கள் உருவில் கடவுள் தான் இந்த உதவியை அவங்களுக்குச் செய்கிறார் என்பதை அவங்களும் புரிஞ்சுக்கலை; நீங்களும் புரிஞ்சுக்கலை.

    இப்படித்தான் உதவிகள் கேட்காமல் கிடைக்கும்; நன்மைகள் எதிர்பாராமல் நடைபெறும். இதெல்லாமும் இறைவனின் சக்தியே. மிச்சத்துக்கு அப்புறமா வரேன். இப்போ மறுபடியும் ஒரு விருந்தாளி! :))))

    பதிலளிநீக்கு
  26. "இறைவனின் சக்தியே.." தவிர எல்லாம் சரிங்க கீதா சாம்பசிவம்.

    இறைவனுக்கு க்ரெடிட் குடுக்கணும்னா கேட்காமல் கிடைக்கிற துன்பங்களுக்கும் இறைவனுக்கு டெபிட் குடுக்கணும். அப்புறம் இறைவன் என்ன வேண்டிக்கிடக்கு?

    பதிலளிநீக்கு
  27. இறைவனுக்கு க்ரெடிட் குடுக்கணும்னா கேட்காமல் கிடைக்கிற துன்பங்களுக்கும் இறைவனுக்கு டெபிட் குடுக்கணும். அப்புறம் இறைவன் என்ன வேண்டிக்கிடக்கு?//


    அது சரி, நாம செய்யற தப்புக்கெல்லாம், இறைவனைக் குத்தம் சொல்ல முடியுமா? அந்தக் கஷ்டமான நேரத்தைக் கடக்க உதவுவாரே தவிர, நம் விதியின் பயனை நாம் தான் அனுபவிக்க வேண்டும். அதைக் குறைக்க வேண்டுமானால், அல்லது அதைத் தாங்கிக்க வேண்டிய சக்தியைத் தருவாரே தவிர முற்றிலும் தீராது. ஆனானப்பட்ட ரமணரே, தன் வினைப்பயனைத் தீர்க்க வேண்டிப் புற்று நோயால் அவதிப்பட வேண்டி வந்தது. சாமானியரெல்லாம் எம்மாத்திரம்!

    பதிலளிநீக்கு
  28. எல்லாம் இறைவன் செயல்னா - நாம் பண்ற தப்பு யாரோட செயல்?

    பதிலளிநீக்கு
  29. GMB, மீனாக்ஷி: சந்தடி சாக்கில் என் கருத்தை நுழைக்க எண்ணவில்லை. கருத்தைச் சொன்னக் கதைமாது கடுமையான கடவுள் நம்பிக்கை உள்ளவர்.. இறைவனைச் சபிக்கும் உரிமை கொண்டவர்.. மனிதனை இறைவன் நிலைக்கு ஏற்றிவைக்கவே அப்படிச் சொன்னதாக எழுதினேன்.

    சரியாக எழுதவில்லை போல (வசதியாப் போச்சு :).

    பதிலளிநீக்கு
  30. நாம் செய்யும் தப்புக்கு எல்லாம் முழுப் பொறுப்பு நாம் தான் அப்பாதுரை! நமக்கு நல்லது, கெட்டதைப் பிரித்துப் பார்க்கும் பகுத்தறிவைத்தான் அவன் கொடுத்திருக்கிறானே! அதை வைத்து நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

    கனெக்டிகட்டில் பச்சைக்குழந்தைகளைச் சுட்டுக் கொன்றவன் ஒருநாளும் ஆண்டவன் செயல் எனக் கூறிட முடியாது. அது அநியாயம், அக்கிரமம், அராஜகம். தெரிந்தே செய்வது.இதற்கெல்லாம் ஆண்டவன் எப்படிப் பொறுப்பாக முடியும்?

    பதிலளிநீக்கு
  31. ஆண்டவன் இல்லை. இருந்தால் இந்தப் பச்சைக்குழந்தைகள் சாவுக்கு ஆண்டவன் முழுப்பொறுப்பு.



    பதிலளிநீக்கு
  32. இது தப்பிக்கிற வழி அப்பாதுரை, தன் தவறை ஒத்துக்காமல், ஆண்டவன் மேல் பழியை ஏற்றிச் சொல்லும் வழி. ஆண்டவன் ஒண்ணும் இந்தப் பச்சைக்குழந்தைகளைக் கொன்றுவிட்டு வானு சொல்லி அவனை அனுப்பலை. அவனுடைய துர்புத்தி அவனை அப்படிச் செய்யச் சொன்னது.

    குருவை வணங்கும் நம் நாட்டில் இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒரு மாணவன் ஆசிரியையைக் குத்திக் கொன்றான். இதுவும் ஆண்டவனா செய்யச் சொன்னான்? புத்தியைச் சரியானபடி பிரயோகிக்காமல் தேவையில்லாதவற்றில் பயன்படுத்தியதால் வந்த விளைவு. இதை நீங்கள் புரிஞ்சுக்காமல் இல்லை. ஆனால் உங்கள் தர்க்கரீதியான அறிவு இதை ஏற்றுக்கொள்ளவிடாமல் உங்கள் மனதைத் தடுத்து வருகிறது.

    ஒரு நாள் வரும். அப்போ நிச்சயம் உங்கள் கல்லான மனதும் இளகும். குற்றம் எல்லாம் நம்மிடமே என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நமக்கு நன்மை செய்யவும், நல்லது செய்யவும் இயற்கைச் செல்வங்களைப் படைத்த ஆண்டவன் அவற்றை வீணாக்கச் சொல்லிக் கொடுத்தானா? நமது மேம்பட்ட அறிவு, இயற்கையையும் வெல்ல முடியும் என்ற ஆணவமே எல்லாவற்றையும் வீணாக்கச் சொல்கிறது.

    யாரோ ஒருத்தர் மேலே இருந்த வெறுப்பைக் காட்டப் பச்சைக்குழந்தைகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறான் ஒரு கயவன். இதற்கு ஆண்டவன் பொறுப்பில்லை. நீங்கள் முழுப் பொறுப்பு எனச் சொன்னதுக்கும் அவர் கோவிக்கப் போவதில்லை. :))))))

    பதிலளிநீக்கு
  33. மற்றக் குழந்தைகளை சில ஆசிரியைகள் காப்பாற்றியதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்? அதற்கும் ஆண்டவன் தானே காரணம் ஆகணும்? :))))))

    பதிலளிநீக்கு
  34. exactly my point.. ஆசிரியைகள் காப்பாத்தினா மட்டும் ஆண்டவன் காரணம்னு கூசாம நினைக்கற நாம்ப, குழந்தைகள் செத்தா ஆண்டவன் பொறுப்புனு ஏன் நினைக்க மறுக்கிறோம்?

    சுட்டுக் கொன்றவனுக்குக் கடவுள் தண்டனை கொடுப்பார்னு சொல்ற நாம, குழந்தைகள் சாவுக்கு கடவுள் காரணம்னு சொல்ல மாட்டோம். செத்துப் போன குழந்தைகளுக்கும் கொன்னுப் போட்டவனுக்கும் சேத்து சர்ச்ல இரங்கல் நடக்குது. சுட்டுக் கொன்னவன் வீட்டுல கிடங்கு கிடங்கா ஆயுதம் வச்சிருக்கானாம். அதைப் போலீஸ் கண்டுபிடிச்சதும் ஒரு கபோதி சொன்னது: "ஆண்டவன் அருளால இது இன்னும் கொடுமையாகாமத் தப்பிச்சோம்" - டிவியில் இந்தக் கபோதி பேசுறதைக் கேட்டுக் குமட்டிக்கிட்டு வருது. செத்துப் போன இருபது+ பிள்ளைகளுக்கு ஆண்டவன் அருளில்லையானு ஒருத்தர் கூட கேட்கலை. எல்லாம் மாடு மாதிரி தலையைத் தலையை ஆட்டிக்கிட்டு... sheeple!

    இது தப்பிக்கிற வழி இல்லிங்க. தப்பிக்கவே முடியாத வழினு தோணுது. எதுக்கெடுத்தாலும் கடவுளைக் கும்பிட்டுக் கும்பிட்டு நம் சந்ததிகளை உருப்படாமல் அடிக்கும் வழினு தோணுது.

    நான் செய்யும் பிழைக்கு நான் தான் பொறுப்பு - அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இதில் ஆணவம் இல்லை. அடிமைத்தனமும் இல்லை. கடவுள் போலித்தனத்திலிருந்து வெளியே வந்தேன் என்று நினைக்கும் பொழுது உண்மையிலேயே எனக்குச் சிலிர்ப்பாக இருக்கிறது. பிழைத்தேன். :-)

    பதிலளிநீக்கு
  35. அந்த ஆசிரியைகளும் தங்கள் வழியைப் பார்த்துக்கொண்டு போயிருந்தால்??? யோசிங்க அப்பாதுரை. லாஜிகலா உங்க யோசிப்பும், கருத்துகளும் சரியா இருக்கலாம்.செத்துப் போன குழந்தைங்களுக்கு ஆண்டவன் அருள் இல்லைனு சொல்ல முடியாது. ஆனால் அதையும் மறைச்சது ஒரு கண்மூடித்தனமான அசுரனின் போக்கு. கண்மூடித்திறக்கும் முன்னர் அனைவரையும் கொன்று குவித்தவனை எதில் சேர்க்கிறது?

    எச்சரிக்கை செய்யப் போன தலைமை ஆசிரியையும் சுட்டுக் கொன்னிருக்கான் என்றால் அவன் மனம் எவ்வளவு கெட்டுப்போயிருக்கும்?

    ஆதாமை ஆப்பிளைத் தின்னாதே என்றார் கடவுள். ஆப்பிளில் தான் சொர்க்கம் என்றான் சாத்தான்.

    இதையும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. ஆதாம் ஆப்பிளையே சாப்பிடாமல் இருந்திருந்தால்???? அப்படியா நடந்தது? ஆக நம் செயலுக்கு நாம் தான் பொறுப்பு. ஆணவம் என்ற சொல் உங்களைப் புண் படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன். பொதுவான குறிப்புக்காகவே அந்தச் சொல்லைப் பயன்படுத்தினேன். மற்றபடி உங்களைத் தனிப்பட்ட முறையில் சொல்ல இல்லை. :))))))))

    பதிலளிநீக்கு
  36. //கடவுள் போலித்தனத்திலிருந்து வெளியே வந்தேன் என்று நினைக்கும் பொழுது.. //

    இதைப் பாருங்கள்:

    தினம் பார்ப்பது தான்; இன்றைக்கும் அந்தக் காட்சியைப் பார்த்தேன்:

    ஒரு குட்டியூண்டு எறும்பு. கடித்தால் கூட அதன் இருப்பு தெரியும். கடிக்கக் கூடத் தெரியாத ஊர மட்டுமே தெரிந்த சாதுவான எறும்பு. அது குட்டியூண்டுக் கும் குட்டியான தன் குட்டிக் கால்கள் அசைத்து ஊர்ந்து கொண்டிருந்தது.
    அது ஊர்ந்து செல்ல என்ன விசை யார் அதனுள் வைத்தது?..

    அந்த எறும்பைத் தான் பார்த்தேன்; ஆனால் அதன் இயக்கத்தில் இறைவன் அல்லவா தெரிகிறார்!

    ஒரு விளையாட்டு பொம்மை இயங்கக் கூட பாட்டரி செல் வேண்டியிருக்கு;
    இல்லையென்றால் ரிமோட்கன்ட்ரோல்!

    இந்த எறும்பு இயங்க, என்ன ரிமோட்?
    இதன் இயக்க இயல் உயிர்
    விஞ்ஞானத்தின் சாரம் தான் என்ன?..

    யாராவது சொல்ல மாட்டார்களா என்று தவித்துக் கொண்டிருக்கிறேன்.



    பதிலளிநீக்கு
  37. அடடே.. என்ன இப்படி சொல்லிட்டீங்க. நீங்க என்னைப் புண்படுத்த வேண்டிய அவசியமே இல்லையே?

    நம் செயலுக்கு நாம் பொறுப்புனு சொல்றதன் பின்னால் 'தனக்கு மீறிய சக்தி இல்லை என்ற ஆணவம்' இருப்பதாகச் சொல்வது ஆத்திக வழக்கம்; அதன் பின்னே இருப்பது 'எதற்கெடுத்தாலும் தலை வணங்குற அடிமைத்தனம்' என்பது நாத்திக வழக்கம். நான் இரண்டுமே இல்லைனு சொன்னேன் அவ்வளவு தான். நான் சொன்னது 'தேவையில்லாமல் பழியோ நன்றியோ செலுத்த வேண்டிய அவசியமில்லாத தன்னம்பிக்கை' என்ற பொருளில். என்னோட ஆசிரிய நண்பர் அரசன் சொல்லுவார் 'உனக்கு என்னைப் புண்படுத்தத் தெரியாதுனு தான் நான் நினைக்கிறேன்பா" என்று.

    மன்னிப்பு கேட்க நினைக்கும்படி எழுதிவிட்டேனே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. நானும் மன்னிப்பு கேட்டுக்குறேன்.

    ஆச்சா.. இப்ப தொழிலுக்கு வருவோம். நம்ம கைல ஒண்ணு கெடச்சிருக்குனா அதை ரெண்டு வழி பாத்துடவேண்டாமா? நீங்களும் விடப்போறதில்லே (ஹிஹி.. நானும்).

    பதிலளிநீக்கு
  38. ஆதாம் ஆப்பிள் இதையெல்லாம் நம்பறீங்களா? (உங்களை சுலபமா ஏமாத்திடலாம் போலிருக்கே? ஸ்ரீர்ங்கம் வந்து ஒரு வழி பண்ணிடுறேன் :-)

    எறும்பு ஊர விசை யார் வைத்ததா? ஆச்சரியமா இருக்கு போங்க! aardvark, காகத்துக்கு எறும்பைக் கொத்தும் விசையை யார் வைத்தது நான் கேக்காமல் இருக்கணுமேனு ரொம்ப கஷ்டப்படுறேன் :-)

    பதிலளிநீக்கு
  39. //நான் கேக்காமல் இருக்கணுமேனு ரொம்ப கஷ்டப்படுறேன் :-)//

    அதுக்கு என்ன அப்பாஜி?.. கேட்டுத் தெளிந்து உருப்படுதலை வரவேற்கத் தானே வேண்டும்?.. கேட்டு, பார்த்துத் தெளிந்ததின் அடிப்படையில் தானே கேள்வியே வருகிறது. விடையும் அதே அடிப்படையில் தானே!

    அந்த குட்டி எறும்பைப் பார்த்ததில், அந்த ஜீவனின் இயக்கத்தில் மனம் நிலை கொண்டது.

    காக்கைகளைப் பார்க்கும் பொழுது--

    ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்
    உண்மையைச்சொன்னா ஒத்துக்கணும்
    காக்கா கூட்டத்தைப் பாருங்க, அதுக்கு
    கத்துக் கொடுத்தது யாருங்க?..

    என்று ஞான உபதேசம் கிடைக்கிறது.

    கேள்விக்காக பதில் இல்லை; கேள்விகளும், பதில்களும் தெரிந்து கொள்வதற்காகவே. நம்மை மேம்படுத்துவதற்காகவே. எரிந்த கட்சி, எரியாத கட்சி ரெண்டு வழி பார்த்திடவும் இல்லை.

    ஆக, அந்த ஆரம்ப இடத்திற்கு வருவோம். அந்த குட்டி எறும்பு இயங்குவது எப்படி அப்பாஜி?

    பதிலளிநீக்கு
  40. உண்மை என்னன்னா இந்தப் பிராமணரை விட்டா நேக்கு நாதி கிடையாது. என்னோட தினசரி சோகத்தை ஒரு ஜொலிப்புல பஸ்பமாக்கிடுவார்.. அதான்.. நானே இவருக்கு ஊட்டி விடறேன்"//
    என்னவொரு அன்பு!

    கதையா இல்லை, உண்மை சம்பவம் போலவே இருக்கிறது.
    கண்ணில் கண்ணீர் வருகிறதே கதை என்று நினைக்க முடியவில்லை.
    அருமையாக கதை சொல்கிறீர்கள்.
    ரகுவிற்கும் துரை நட்பு என்னவாயிற்று பாடிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
  41. //மன்னிப்பு கேட்க நினைக்கும்படி எழுதிவிட்டேனே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. நானும் மன்னிப்பு கேட்டுக்குறேன்.//

    என்ன இது ஃபார்மாலிடி எல்லாம்? :)))))

    //ஆச்சா.. இப்ப தொழிலுக்கு வருவோம். நம்ம கைல ஒண்ணு கெடச்சிருக்குனா அதை ரெண்டு வழி பாத்துடவேண்டாமா? நீங்களும் விடப்போறதில்லே (ஹிஹி.. நானும்).//

    இதான் சரி, இப்படித்தான் நீங்க சொல்லணும், நானும் நீங்க சொல்றதை எதிர்த்து ஒரு வழி பண்ணணும். அதை விட்டுட்டு.........:))))))

    பதிலளிநீக்கு
  42. குட்டி எறும்பு இயங்குவது தன்னால் தான் ஜீவி சார். எறும்பு தோன்றுவதற்குப் பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு முன்னால் தோன்றி வாழ்ந்து மறைந்த டைனொசர்களும் அப்படியே. அவற்றுக்குப் பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு முன்பாகத் தோன்றி இன்றைக்கு இன்னொரு பரிமாணத்தில் பரிமளிக்கும் கரப்பானும் அப்படியே. ஏதோ ஒரு சக்தி முதலில் கரப்பானைப் படைப்போம், ஆச்சா.. அப்புறம் டைனொசரைப் படைப்போம், ஆச்சா.. அதை அழித்து எறும்பைப் படைப்போம் என்று குழந்தை விளையாட்டாக விளையாடவில்லை.

    அத்தனை ஜீவராசிகள் தோன்றி மறைந்து தோன்றி மறைவது தம்மால் தான். இது இப்படி இயங்க வேண்டும் என்று யாரும் இயக்க சாத்தியமே இல்லை - மனிதம் எனும் ஜீவ ராசியைத் தவிர (அதுவும் இன்றைக்கு மிகக் குறுகிய வீச்சில் மட்டுமே). ஒரு குவளை தண்ணீரில் உப்பைப் போட்டுப் பத்து நாட்கள் அப்படியே வைத்தோம் என்றால் அதில் புது ஜீவ ராசிகள் இருக்கும். (ஏதோ ஒரு சக்தி உப்பையும் தண்ணீரையும் சேர்க்கச் சொன்னது என்று வாதிடலாம் - வட்டம்)

    aardvarkஐ படைத்து எறும்பின் பாதையில் யார் விட்டது என்று கேட்க மாட்டீர்களா?

    'வசதிக்கேற்ற ஆத்திகம்' பற்றி கலர் சட்டையில் நிறைய எழுதி/எழுத இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  43. நன்றி, அப்பாஜி.

    நான் நாத்திக-ஆத்திக சர்ச்சைகளுக்கே போகவில்லை. நீங்கள் சொன்ன குழந்தை விளையாட்டுக்கும் போகவில்லை. இது அதையெல்லாம் தாண்டிய ஒன்று. டார்வின் தத்துவத்தைத் தாண்டிய ஒன்று.

    உயிரியல் சார்ந்த விடை தெரியாத கேள்விகள். ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடும், அசாத்திய ஏற்பாடுகளுடன் அவை உடலின்
    உள் செயல்படும் விந்தையும், படிக்கப் படிக்க வணங்கித் தலை தாழ்கிறது. இந்த விந்தைகளுக்கான ஆதார சக்திக்கு இறைவன் என்று பெயரிட்டிருக்கின்றனர். அப்படி ஒரு பெயரிடாவிட்டாலும் பெரிதில்லை;
    இந்த உயிர் புதிரின் மர்மம் தெரிகிற வரை அது பற்றி தெரிந்து கொள்கிற ஆர்வமும், அந்த புதிருக்கான நாயக வணக்கமும் இருந்து தான் தீரும்.

    ஆதி மனிதனிலிருந்து தன்னை மீறிய சக்தியை மட்டுமல்ல, தனக்குத் தெரியாத சமாச்சாரங்களை வணங்கியிருக்கிறான். இந்த வணக்கமே ஒரு பிரமிப்பு. அவ்வளவு தான். பிரமிப்புக்கான தேவையே எதுவுமில்லை எந்த விந்தையும் இதில் இல்லை என்றாலும் சரியே.

    அதான் உண்டென்றால் உண்டு; இல்லை என்றால் இல்லை.

    பதிலளிநீக்கு
  44. சூழல் உண்மையில் எவன் இயல்பாய் நல்லவன் என்பதை
    வெளிக் கொணர்ந்து விடுமோ ?

    பதிலளிநீக்கு
  45. தாமதமாய் வந்ததால் கதை முழுசும் படித்து விட்டு கருத்திடலாமென இரண்டாம் பகுதி வந்தது மடத்தனம்.

    'ரகுவை வென்றேன்' என்ற எண்ணம் பொடியாகி, ஏமாற்றப்பட்ட ஆத்திரத்துடன் வீடு வந்த துரையுடன் எங்களையும் நெகிழ்த்தியது ராமலஷ்மியின் மனசு.
    "பகவானுக்கெல்லாம் பிராண சங்கடம்னா என்னன்னே தெரியாது. பகவான்லாம் பிராணனை எடுப்பாளே தவிர சங்கடத்தை தீர்த்து வச்சதே இல்லை. சங்கடத்தைத் தீத்து வைக்கறது மனுசாளாலே மட்டுந்தான் முடியும்."

    //ஏனோ தெரியவில்லை, வாய்விட்டுச் சிரித்தேன். கண்ணில் நீர் வரச் சிரித்தேன். //

    'சிரித்துத்தான் ஆற்ற வேண்டும்' என்பது இப்படித்தானோ?

    ரெண்டு கரண்டி சாதம் இருக்குமாப்பா?" என்றார் மாமி, கையை ஏந்தி.//

    விதி கொடுமை?!

    நடுங்கும் மெழுகின் ஒளி ஆயிரம் வாட் விளக்கைவிட பிரகாசிக்கும் முரண் கடுமையான இருளில் மட்டுமே புரியும். //

    அற்புதமாக மின்னும் வரி!

    நீ சாப்பிட்டதும் இவருக்குக் குடுத்துட்டு நானும் சாப்பிடறேன்"//

    ராமலஷ்மி ஓங்கி நிற்கிறார்!!

    இது நான் தினம் பண்ற தபஸ். காசி விசுவநாதர் உலகம்மைனு நான் சும்மா வாய்க்கு வாய் சொன்னாலும் நேக்கு எல்லாமே இப்ப இவரோட மூஞ்சி தாம்பா. ஒரு வாய் முழுங்கினதும் இவர் கண்ல ஜொலிக்கறது பார், அது நான் பண்ற தபசுக்குக் கை மேல் கிடைச்ச பலன். என்னை விட்டா இவருக்கு யாரும் இல்லைனு எல்லாரும் சொல்றா. உண்மை என்னன்னா இந்தப் பிராமணரை விட்டா நேக்கு நாதி கிடையாது. என்னோட தினசரி சோகத்தை ஒரு ஜொலிப்புல பஸ்பமாக்கிடுவார்.//

    என்னோட தினசரி சோகத்தை ஒரு ஜொலிப்புல பஸ்பமாக்கிடுவார்... இந்த வரிகளுக்கு கோடி ரூபாய் கூட சமமில்லை.

    "எனக்கு இவர் பிராமணர், இவருக்கு நான் சைவப்பிள்ளை. நான் சொல்றதெல்லாம் கேட்டுண்டே மனசுக்குள்ள எப்படி சிரிக்கிறது பாரு இந்தக்கிழம்?"//

    மாமியை கட்டிண்டு 'ஓ'ன்னு அழனும் போலிருக்கு.

    உங்க புத்தியும் அறிவும் எங்களை தலைவணங்கி நிற்கச் செய்யுது.வாழ்க்கைன்னா எப்படியெல்லாம் இருக்கு; மனுஷன்னா எப்படி இருக்கணும் எல்லாம், எல்லாம் புரிய வைக்குது உங்க படைப்புகள்.

    பதிலளிநீக்கு
  46. பின்னூட்டங்களின் கருத்துச் செறிவு விருந்துக்கு பிந்தைய தாம்புல நிறைவு.

    பதிலளிநீக்கு
  47. fair enough ஜீவி சார்.. இதை ஆ-நா வாதத்துக்கு வெளியே என்று நீங்கள் கருதியது என்னுடைய புரிதலில் பிழை.

    இயல்பான பிரமிப்பும் பிரமிப்பின் புரிதல்/புரியாமை தொட்ட வணக்கத்தில் வாதத்துக்கு இடமில்லை - உண்மை.

    இயற்கையின் அழகும் ஒழுங்கும் (அழகின்மை ஒழுங்கின்மை என்பது பார்வை, காட்சியல்ல என்றே நினைக்கிறேன்) ரசிக்கப்பட வேண்டியவை - ஆனால் அதன் இயக்கத்தின் பின்னே ஒரு சூத்திரதாரி இருப்பது போல் உங்கள் முந்தைய கேள்வி நிச்சயம் இதை யாரோ செய்த செயல் என்ற கருதுவதாகவே எண்ணத் தோன்றுகிறது. (டபாய்ச்சுக்க பாக்கறீங்களா?) இந்த ஆதார விந்தைகளுக்கு இறைவன் என்று பெயரிடவில்லை - இந்த விந்தைகளின் தலைவன், இயக்குனன் என்றே இறைவனை அழைக்கிறோம், அடிமையாக வணங்குகிறோம், அறிவிழந்து அருவருப்பு மறந்து எச்சில் இலையில் அங்கப்பிரத்ட்சணம் செய்கிறோம் இல்லையா? ஆக்கம், ஆதரவு, அழிவு இவை மூன்றின் மொத்த உரிமையாளர் என்று எண்ணி அடிமைகளாக வணங்குகிறோம்.


    பதிலளிநீக்கு
  48. உயிர், உடல், உறுப்புகளின் செயல்பாடுகள் இவையெல்லாம் மகத்தான விஷயங்கள். இது பற்றிய பிரமிப்பு உங்களுக்கு இருக்கிறதா, இல்லையா?.. எனக்கு இருக்கிறது. இன்றைய தேதி வரை உயிர் என்கிற புதிருக்கான சரியான விடை சொன்னவர் யாருமில்லை.

    எந்த விஷயமும் அந்தரத்தில் நடைபெற முடியாது. அந்த விஷயம் நடைபெற ஓர் ஆதாரம் வேண்டும்.
    அந்த ஆதாரத்தை- ஆதார சக்தியை- இறைவன் என்று பெயரிட்டு அழைப்பது
    மரபாகப் போயிருக்கிறது. இறைவன் என்கிற பெயர் வேண்டாமென்றால், ஏதோ ஒரு பெயர். பெயரே வேண்டாம் என்றாலும் வேண்டாம்.

    அந்த ஆதார சக்திக்கான நாயக வணக்கமும் இயல்பான ஒன்றாகப் போயிருக்கிறது. வணங்குதல் நமது பிரியத்தையும் மரியாதையையும் செலுத்துவதே தவிர பிறிதொன்று மில்லை. அது கூட நம் மனத்திருப்தி க்குத் தான்.

    மனத்தைத் தொட்டு சங்கிலி போல பல விஷயங்கள். சுற்றி சுற்றி எல்லாமே உடல், உள்ள ஆரோக்கியத்திற்கு அடிப்படையாகிப் போவது தான் அடுத்து நிகழும் அதிசயம்.









    மன்னிக்கவும். உங்கள் கவனம் சிதறுகிற உணர்வு எனக்கு. உயிர் புதிர் அடிப்படை விஷயம். அதன் அடியொற்றி அடுத்துப் போவோம்.
    என்னால் கொஞ்சம் முடிகிறது. ஒரு ஸ்டேஜில் 'திக்குத்தெரியாத காட்டில்'.
    நீங்களும் துணையாக வந்தால் கொஞ்சமானும் தட்டுத்தடுமாறி..









    பதிலளிநீக்கு
  49. "இயல்பான பிரமிப்பும் பிரமிப்பின் புரிதல்/புரியாமை தொட்ட வணக்கத்தில் வாதத்துக்கு இடமில்லை - உண்மை." இதை இவ்வளவு அழகாக எழுதியதற்கு வணக்கம்.

    "இயற்கையின் அழகும் ஒழுங்கும் (அழகின்மை ஒழுங்கின்மை என்பது பார்வை, காட்சியல்ல என்றே நினைக்கிறேன்" & "அறிவிழந்து அருவருப்பு மறந்து எச்சில் இலையில் அங்கப்பிரத்ட்சணம் செய்கிறோம்". இது இது இது தான். எச்சில் இலை அருவருப்பு என்று சிலருக்கு இன்னும் விளங்கவில்லை அல்லது விளங்கிக் கொள்ள விருப்பமில்லை. [சாதி / பிறப்பு சார்ந்து விளங்கிக் கொள்ளனும் என்பவர்கள் அப்பிடியே பஸ் பிடிச்சி மலையுச்சி போய் குதிச்சிக்குங்க.] எச்சில் இலை கடவுள் என்று சொல்லிக் கொள்பவர்களின் அழகு / ஒழுங்கு பற்றிய மதிப்பீட்டை பற்றிய கேள்வி ஆகி விடுகிறது அல்லவா? :-)

    மற்ற உயிரை ("மற்ற மானுட உயிரை" அப்படின்னும் படிச்சிக்கலாம்) வதைக்காது, இருக்கும் "இயல்பான பிரமிப்பும் பிரமிப்பின் புரிதல்/புரியாமை தொட்ட வணக்கத்தில் வாதத்துக்கு இடமில்லை".

    (ஹிஹி, இதுல நீங்க மட்டும் ....தொட்ட வணக்கத்தில் வாதத்துக்கு இடமில்லை... என்பதை ....தொட்ட வாதத்தில் வணக்கத்துக்கு இடமில்லை... என்று மாற்றிச் சொல்லியிருந்தால்! கெக்கேபிக்கே!!

    பதிலளிநீக்கு
  50. ஜீவி அவர்களே! எனக்கு அந்த ஜெர்மன் நாட்டுதாடிக்கார கிழவன் சொன்னது நினைவுதட்டுகிறது ! "Are you a being because you are a human being or are you a human being because you are abeing " கேள்வியை கேட்டான். இதற்கான விடையில் இருக்கிறது இயற்கையின் விதிகள் ,ஓழுங்குகள் ,கட்டுப்பாடுகள் ஆகியவை ! ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  51. உயிரில் எந்தப் புதிரும் இல்லை ஜீவி சார். that is begging the question.

    எனக்குப் புதிராக இருப்பது உயிர் மகத்தானது, சிட்டுக்குருவி மகத்தானது என்று எடுத்ததற்கெல்லாம் காரணம்,ஆதாரம் தேடும் நாம் உயிரை உருப்படியாகப் பயன்படுத்துவது எப்படி என்பதில் அவ்வளவு ஈடுபாடோடு கவனம் செலுத்துவதில்லை.

    எந்த விஷயமும் அந்தரத்தில் நடைபெறலாம். ஆதாரத்தோடும் நடைபெறலாம். ஆதாரம் என்பது பெரும்பாலும் relative அல்லது கற்பனையின் செயல்/வெளிப்பாடு - அந்தரம் என்பது எப்பொழுதுமே இயல்பு. கொஞ்சம் unbiasedஆக யோசித்தோமானால் உலகம் அந்தரத்தில் தான் இயங்குகிறது என்பது புரிந்துவிடும். சட்டி சுட்டதடா!

    ஜீவி சார், இங்கே கேள்வி இறைவன் என்று எதைக் குறிப்பிடுவதல்ல. சிட்டுக்குருவி குய் குய்ன்றது மகத்தானது என்றால் அதில் இறைவனைக் காண்பது may be romantic, but equally idiotic - just like romance :)

    கூப்பிட்டால் கூப்பிடட்டுமே, யார் வேண்டாம் என்பது? ஆனால் அத்தோடு நிற்பதில்லையே நாம்? இறைவன் என்று சக்தியை, எல்லா உயிர்களுக்கும் விசையாய் இயக்கமாய் இருப்பதாகக் கருதப்படும் விராட்ஸ்வரூபம், என் தினசரி வாழ்க்கையை தீர்மானித்து நடத்துவதாக அல்லவா சொல்கிறோம்? அதையல்லவா நான் பைத்தியக்காரத்தனம் என்கிறேன்?

    சிறப்பிலெல்லாம் இறையைக்காணும் அதே மனம், சேரியின் மலத்தில் இறையைக் காண்கிறதா? அதில் கூடத் தானே ஒழுங்கும் முறையும் இருக்கிறது?

    இல்லாத புதிரைத் தேடுவதே புதிர்.

    பின்னிட்டீங்க கெபி.. நிறையவே யோசிக்கிறேன்.. புரட்டிப் போட்டாலும் இன்றைய வாதங்களுக்குப் பொருத்தமாகவே இருக்கு :).

    பதிலளிநீக்கு
  52. random organization - இந்த seemingly oxymoron புரிந்தால் பிரமிப்பின் பின் புதிர் இல்லை என்பதும் புரிந்துவிடும் - என்பதைச் சொல்ல அனுமதியுங்கள் ஜீவி. இது என் அனுபவம், என் இத்தனை நாள் வாழ்வின் பட்டறிவு.

    பதிலளிநீக்கு
  53. காஷ்யபன் சார்! நன்றி. இயக்கவியல் பற்றி கோடிட்டுக் காட்டும் பொழுதே அந்த ஜெர்மன் தாடிக்காரர் தான் என் மனத்திலும் நின்றார். என்னுள் மண்டியிருக்கும் மனிதாபிமானமும், அன்புத் திரட்சியும் அவரைப் படித்ததினால் தான்.

    இந்த 'உயிர்' பற்றி மேலும் மேலும் உள் நுழைந்து யோசிக்க முனையத் தான் தோழமை தேடினேன்.

    அப்பாஜி! சில குறிப்புகளைக் கொடுத்திருக்கிறீர்கள். அந்த குறிப்புகளைத் தொடர்ந்து வாசிப்பு பயணத்தைத் துவங்க ஆவல் ஏற்பட்டிருக்கிறது. அதைச் செய்கிறேன்.

    சிந்தையைக் கிளறும் இப்படியான கருத்துப் பரிமாற்றங்களும் வழக்கம் போல தேவையே இல்லாத வேறு சம்பந்தமில்லாத விஷயங்களுக்கு இட்டுச் செல்லத் தலைப்படுவதால்
    இத்துடன் முடித்துக் கொள்ளலாம்.

    மிக்க நன்றி, நண்பர்களே!

    பதிலளிநீக்கு
  54. ஜீவி சார், கலந்து கொண்டதற்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி. சுவையூட்டியது என்பது understatement.

    //வழக்கம் போல தேவையே இல்லாத வேறு சம்பந்தமில்லாத விஷயங்களுக்கு இட்டுச் செல்லத் தலைப்படுவதால்..

    அதான் மூசு. :-)

    பதிலளிநீக்கு
  55. மூசு?..

    'மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே' வரியில் வரும் 'மூசு' தெரியும்.

    இது என்ன மூசு?

    பதிலளிநீக்கு