2013/04/08

(மெல்லிசை) நினைவுகள்




    ர் திரும்பியதும் சில பாடல்களைத் தேடிக் கேட்க வேண்டியிருந்தது. அவசரமாக. காரணம் பிறகு சொல்கிறேன். இது முதலாவது பாடல்.
உய்மா உய்மா எ க்யா ஹோகயா..


    றக்குறைய இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு ஜேசுதாஸ் கச்சேரிக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. குவைத் மைத்துனர் அருள். ஜேசுதாசின் கர்நாடக இசை எனக்குப் பிடிக்கும். இன்றைக்கும் குரல் பிசிறில்லாமல் அதே இளமையோடு இருப்பது, பாடும் பொழுது தெரிந்தது. சிலிர்க்க வைத்தது. கொஞ்ச நேரம் தான். அப்புறம் வித்வான்களுக்கேயுள்ள குளறுபடி. கர்நாடக இசை என்று அறிவித்துவிட்டு கர்நாடக இசையுமில்லாமல், இந்துஸ்தானியுமில்லாமல், மலையாள பக்திப்பாடல்கள் என்றுமில்லாமல், ஹிந்தி சினிமாப்பாடல் என்றில்லாமல், ஐயப்பன் பாடல்கள் என்றில்லாமல் - உப்புச்சப்பில்லாத அவியல். குரல்வளத்தை வைத்துக்கொண்டு "தாண்டு ராமா" விளையாடுகிறாரே என்று வருந்தினேன். மனிதர் ஒரு தமிழ்ப்பாட்டு கூட பாடவில்லை தெரியுமோ?

நடுவில் சண்டை வேறே. பாதிப் பாட்டின் போது (சரஸ சாமதான, ஜேசுதாஸ் நன்றாகவே பாடினார்), வரிசையில் இருந்த ஒருவர் செல்போனில் பேசத் தொடங்கினார். என் தம்பி ஏதோ சொல்லப்போய் அந்த நபர், "பஷ்டபால், டு யூ அன்டர்ஸ்டேண்டு வாட்டு ஹி இஸ் சிங்கிங்கு?" என்றார். "பன்னாடை, மூதேவி, பொறம்போக்கு நாயே, இங்லிஷ் வேறயா? செவிட்டுப் பொணமே. உனக்குப் புரியலேனா அடுத்தவனை கேக்க விடுறா.. கசுமாலம் தரித்திரம் பன்னி பன்னி" என்று சொல்லப்போன என்னைத் தடுத்து, என் தம்பி பண்புடன் ஏதோ சொல்லவே நபர் செல் மூடி அடங்கினார்.. கச்சேரி முடிந்து வெளியே வரும்பொழுது சண்டையாவது போட்டிருக்கலாம் என்று தோன்றியது.

    ப்லூமிங்டன் பயணத்தில் படித்தப் புத்தகம். இரண்டு பதிவெழுதும் அளவுக்கு விஷயம் இருக்கிறது. ஆனால் எழுதப் போவதில்லை, போரடிக்கும். பாருங்கள், இது போன்ற புத்தகங்களைப் படிப்பது சிரமம். ஓகே, எனக்கு சிரமமென்றேன்.

இரண்டாம் பகுதியில் புத்தர் தோத்திரம் மதம் என்று ஆழமற்ற விஷயங்கள். மணிமேகலை தவிர. முதல் பகுதியில் நிறைய ஆழமான விஷயங்கள். 'அருமையாக இருக்கிறதே படிக்க' என்று பத்து பக்கம் புரட்டினால் பொசுக்கென்று இனப்பகை. பிராமண இனத்தைத் தமிழின் எதிரிகள் போல் பாவித்து எழுதுவது ஏனென்று புரியவில்லை. 'என்னவோ இவர்கள்தான் தமிழ் வளர்த்தார்கள் போல.. யாரிந்த மயிலை சீனி வேங்கடசாமி?' என்று தேடிப்பார்த்தால்.. அய்யோடா, பெர்ர்ரிய சாதனையாளர்! அடக்கிக் கொண்டு படித்து முடித்தேன்.

ப்ரம்மி எழுத்துக்களிலிருந்து ஐம்பெருங்காப்பியங்கள் வரையில் தமிழ் வளர்த்த பௌத்த மதம் பற்றிய நிறையக் குறிப்புகள். தமிழில் பாலி (ஆதி பௌத்த மொழி - தமிழ் நாட்டில் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது) மொழிக் கலப்பு பற்றிய பகுதி சுவாரசியம். புத்தகத்தின் தயவால் குண்டலகேசி கதை கிடைத்தது. பெரிய பலன்.

அவ்வப்போது வசதிக்கேற்றார்போல் சமணமும் பௌத்தமும் ஒன்றே என்ற வாதம் இடிக்கிறது. தமிழ் நாட்டின் பல்வேறு ஊர்களில் இருக்கும் சமண பௌத்த இடங்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பிள்ளையார் கோவில் பற்றிய விவரம் சுவாரசியம். பிள்ளையார் இந்துக் கடவுளே அல்ல என்ற பாணியில் விவரம் சொல்லியிருக்கிறார். சமண 'வினாயகர்' கோவில்களை இடித்து இந்துக்கள் பிள்ளையார் கோவில் கட்டியதாகச் சொல்கிறார். கோவில் இடிப்பு, பௌத்த சமண நினைவாலயங்கள், தடங்கள், இடிபாடுகள் என்று பக்கம் பக்கமாகப் போகிறது புத்தகம். இந்துமதம் இதை ஏற்றுக் கொண்டது அதைத் திருடியது என்றும் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்.

இதற்கும் தமிழ் வளர்ப்புக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்குத் தோன்றினால் - ஹிஹி.. நாம் ஒரே கட்சி.

பௌத்த மதம் தமிழ் வளர்த்தது என்று சொல்லட்டும் தவறேயில்லை, உண்மையும் கூட. ஆனால் இன்னொரு மொழியோ இனமோ தமிழைக் கெடுத்தது போல் எழுதுவதால் என்ன பயன்? பழைய புத்தகம். என்றைக்கோ எழுதியது. இப்போது விமரிசித்துப் பயனில்லை.

தமிழ் வளர்க்க விரும்பிய அத்தனை பேரும் வளர்த்தார்கள் என்றே நினைக்கிறேன். ஜாம்பஜார் ஜக்கு உட்பட. நிற்க, ஐம்பெருங்காப்பியங்கள் என்பதே பொருந்தாத, போலி அங்கீகாரம் என்பது என் கருத்து. சங்க இலக்கியங்கள் (குறுந்தொகை, புறநானூறு), இறையிலக்கியங்கள் (திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், தேவாரம்) எல்லாம் தமிழ் வளர்க்காமல் தயிரா கடைந்தன?

போகட்டும். ஐம்பெருங்காப்பியங்கள் மூன்று படித்திருக்கிறேன். மூன்றில் ஒன்று மட்டுமே தமிழ் வளர்க்க எழுதப்பட்டது. இது என் கருத்து. உதைக்க விரும்புவோர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

மொழி வரலாற்றில் விருப்பமுள்ளோர் நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம். தையல் வெளியீடு. ரூ.100.

    ன்னுடன் வாஷிங்டனுக்குப் பனிரெண்டு மணி நேர விமானப்பயணம் செய்தவரைப் பற்றிச் சொல்லவேண்டும். ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் ஆறுமாத ஆராய்ச்சிக்காக வந்திருக்கிறார். 'இந்தியச் சமூகவளர்ச்சியில் திரையிசையின் பாதிப்பு' பற்றிய ஆய்வு. "இங்கே எதற்கு வந்தீர்கள்?" என்று கேட்டேன். இந்தியாவில் இல்லாத அளவுக்கு இங்கே பாடல்களைக் குறிப்புகளுடன் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்களாம். ஆராய்ச்சிக்குப் பணமும் தருகிறார்களாம். நிறைய ஆச்சரியமும் கொஞ்சம் புலம்பலும் கலந்து சொன்னார். "நம்ம ஆளுங்களுக்கு இல்லாத அக்கறை பாருங்க சார்!".

இந்த ஆராய்ச்சி பற்றிய ஆர்வம் எப்படி வந்தது என்றுத் தொடங்கி நிறைய பேசினோம். இசையமைப்பாளர் வேதா இவருடைய உறவாம். "அடடே" என்றேன். வேதாவின் இசையில் நிறைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். "அப்பட்டமான இறக்குமதி என்றாலும் கூச்சப்படாமல் வஞ்சனையில்லாமல் பாடல்கள் தந்திருக்கிறார் உங்கள் உறவினர்.." என்றேன். மனிதர் அமைதியானார். "இந்தியிலிருந்து யார் தான் தட்டவில்லை? எம்எஸ்வி எத்தனை பாடல்களைத் தட்டியிருக்கிறார் பாருங்கள்.." என்று ஒரு லிஸ்ட் கொடுத்தேன். ஒருவேளை வேதாவைக் கிண்டல் செய்வதாக நினைத்துவிடக்கூடாதே? மனிதர் அமைதியாக இருந்தார். "இந்தியிலிருந்து எடுத்தாலும் தமிழில் அட்டகாசமாகத் தந்திருக்கிறார் - அவர் இல்லையென்றால் நிறைய இந்திப்பாடல்களின் இனிமையான மெட்டுக்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும்.." என்றேன். மனிதர் எதுவும் சொல்லவில்லை. "சமீபத்தில் தெரிந்து கொண்ட 'இதய வானின் உதய நிலவே' அவருடைய உச்சப் பாடல்களில் ஒன்று.. மை மோஸ்ட் ரீசன்ட் பேவரிட்.." என்றேன். குளிர்ந்திருப்பார் என்ற நம்பிக்கையில்.

மெள்ள, "யாரைச் சொல்றீங்க?" என்றார். புருவம் சுருக்கிப் பார்த்தேன். நமக்குத் தெரியாத வேதாவா? பிறகு என்னை நேராகப் பார்த்து, "பாச்சா பாட்டுங்க கேட்டிருக்கீங்களா?" என்றார். பாச்சாவாவது மூச்சாவாவது? என்ன சொல்கிறார் இவர்? "கேட்டதில்லையே? எந்த இந்திப்பாட்டு அது?" என்றேன். "இந்திப்பாட்டில்லிங்க.." என்று விவரம் எல்லாம் சொன்னார். நெளிந்தேன். "ஹிஹி.. நீங்க சொன்னது வேதானு காதுல விழுந்துச்சு.. அதான். மன்னிக்கணும்..." என்றேன்.

தரைதொடும் வரை அவர் பக்கமே திரும்பவில்லை. பாச்சா கேட்கணுமாமே? குலை நடுங்கியது. வீட்டுக்கு வந்ததும் கேட்ட பாடல்களில் அடுத்து வருவது முதலில் கேட்ட இந்திப்பாடலின் தமிழ்.
காவிரிக்கரையின் தோட்டத்திலே..

தமிழ் வடிவம் அட்டகாசம் என்று தோன்றுவதற்குக் காரணம் வேதா மட்டுமல்ல, சுசீலா மட்டுமல்ல, புரிவது மட்டுமல்ல, 00:56 - 01:01ம். தில்லையம்பலம் போற்றிஹி.

    ன் தங்கை மகன் ஹார்வர்டில் படிக்கப் போகிறான். செய்தி கேட்டதும் அவனிடம், "எனக்குப் பெருமையாக இருக்கிறது" என்றேன். "எல்லாம் அம்பாள் அருள்" என்றாள் என் தங்கை. ஆக இருவருமே அவன் செயலை, அவன் உழைப்பை, முதலில் பாராட்டவில்லை என்பது இடித்தது. என்னை விட என் தங்கை எவ்வளவோ மேல். அவளாவது அம்பாள் என்றாள், நான் அவன் உழைப்பில் குளிர்காயப் பார்த்தேன். உருப்படமாட்டேன், விடுங்கள். தவளைகளைத் தத்தித் துரத்தி "இதோ பார் மாமா" என்று எளிய சந்தோஷங்களைத் தேடியச் சிறுவன் கண்களில் நிற்க.. ஒரு மெய்யான சாதனையை சாதாரணப் புன்னகைக்குள் மறைத்து இயல்பாகப் போகும் இவனுக்கு.. இப்பொழுது இதைப் பற்றிப் பதிவிடும் நான் எப்படிச் சொந்தமானேன்? படிப்பிலும் வேலையிலும் காட்டுத்தனமாக உழைக்கிறான். முதியோர் வீட்டு நாய் பூனைகளை தினம் ஒரு மணியாவது பூங்காவில் நடக்க அழைத்துப் போகிறான். படித்து முடித்ததும் என்ன செய்யப்போகிறான் என்றத் திட்டத்தைக் கேட்டதும் அசந்து போனேன். எண்ணத்திலும் செயலிலும் தெளிவாக இருக்கிறான். எங்கிருந்து வந்தான் இவன்?! இந்தப் பரம்பரையின் அடுத்தத் தலைமுறைக்கான ஹீரோ தயாராகிறான் என்பது புரிந்தது. இன்னும் சாதிக்கட்டும். சிறப்போடு வாழட்டும்.

    ன்னொரு பெருமைக்குரிய செய்தி சமீபப் பயணத்தில் தெரிந்தது. என் நண்பன் மகளைச் சந்தித்தேன். என் முகவரியை நினைவாக வைத்திருந்து எனக்குச் செய்தி அனுப்பியிருந்தாள். அவளுடைய அனிமேசன் திறமையைப் பார்த்த டிஸ்னி நிறுவனம் அவளை உடனடியாக வரச்சொல்லி வேலை கொடுத்திருக்கிறதாம். மும்பையிலிருந்து ப்ரான்சுக்கு வந்திருந்தாள். இங்கே ஒரு படப்பிடிப்பில் ஆறு மாதங்கள் கலந்து கொண்டு பிறகு ஹாலிவுட் போவாளாம். வரப்போகும் ஒரு படத்துக்கான முழு வடிவமைப்புப் பொறுப்பையும் இவளிடம் கொடுத்திருப்பதாகச் சொன்னாள். "அப்படியா? நல்ல சம்பளம் கொடுப்பார்களா?" என்றேன். அல்பம், அல்பம்! தொகையைக் கேட்டதும் நடுங்கிப் போனேன் என்றால், அடுத்து சொன்னதைக் கேட்டு ஆடிப் போனேன். "ஒரு படம் அங்கிள், தட்ஸ் இட். நான் திரும்பிப் போறேன். seed money.. பணத்துக்காக இதை ஒத்துக்கிட்டேன். நான் படிச்சதன் காரணம் இது இல்லே.." என்று விவரம் சொன்னாள். ஒரு பெரிய கம்பெனியில் சில வருடங்கள் வேலை பார்த்து, சம்பாதித்தது போதும் என்று வேலையை விட்டவள். புவனேஸ்வர் அருகிலோ எங்கேயோ ஒரு corporate sponsored பயிற்சி முகாம் தொடங்கப் போகிறாளாம். பில் கேட்ஸை சந்தித்திருக்கிறாளாம். அறக்கட்டளையிலிருந்து உதவி கிடைக்கும் என்று மகிழ்ச்சியோடு சொன்னாள். எட்டு முதல் பதினொரு வயது வரையிலான பின்தங்கிய வசதியற்ற பெண் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி வசதி செய்யப் போகிறாளாம். அவளுடையக் குறிக்கோள் நூறு பெண் குழந்தைகளை ஐஐடி ஐஐஎம் படிக்க வைப்பதாம்! எங்கிருந்து வந்தாள் இவள்?! அசல் ஹீரோ!

"அங்கிள்.. சின்னப்போ வீட்டுக்கு வந்து இஷ்டத்துக்கு மசாலா சேர்த்துப் புராணக் கதை சொல்வீங்களே, ஞாபகம் இருக்கா?" என்று நெகிழ்ந்து பேசினாள். இவளைத் தூங்கப் பண்ணியிருக்கிறேன். இவளுக்கு இப்போது இருபத்தைந்து இருபத்தாறு வயதிருக்குமா? இருக்கும். இவளின் அப்பா ரங்கன், என் இரட்டைபாத் வட்டத்தில் ஒருவன். "அம்மா எப்படி இருக்காங்க?" என்றேன். "ஷிஸ் ஹேப்பி.." என்றாள். "அப்பா எப்படி இருக்கான்?" என்று கேட்கவில்லை. காரணம், இவள் பிறந்த அன்றைக்கு ரங்கன் இறந்தான்.

காதல் வயப்பட்டிருந்த காலத்தில் ரங்கன் இந்தப் பாட்டை அடிக்கடி முணுமுணுப்பான். அவனுடைய காதல் பற்றி இன்னொரு சமயம். இப்போதைக்கு.. ரங்கா, உன் பெண் சாதனையரசிடா!
சந்தா ஓ சந்தா..