2018/04/01

கோமதியின் காதலன்



        ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவுகளும் செய்கைகளும் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை யூகத்துக்கு இடம் வைக்காமல் தெரிவித்தன. வயதானால் இது ஒரு வரம் போல. இயங்கத் தவிக்கும் உறுப்புக்கு இயங்கித் தவிக்கும் இன்னொரு உறுப்பின் துணை.

இன்னொரு உறுப்பு என்றதும் என் மனைவி கோமதியின் நினைவு வந்தது. கோமதி இறந்து நாலு வருடங்கள் இருக்குமா? வீட்டுக்கு வரும் வருந்தினர்கள் ரம்யாவிடம் "உன் அப்பா மிகவும் நொடிந்து விட்டார்.. மனைவியை இழந்த துக்கம்" என்று சொல்லும் பொழுது தலையாட்டுவேனே தவிர எனக்குத் தெரியும் அது எத்தனை போலி என்று. அதற்காக என் கோமதியை நான் நேசித்தது பொய்யாகி விடாது. வயதான காலத்தில் அவளுடைய பொருமல்கள் எரிச்சலூட்டின என்றாலும் அவள் ஆஸ்பத்திரியில் பட்ட அவதிகள் என் விரோதிக்குக் கூட வரக்கூடாது என்று நினைத்திருக்கிறேன்.

ஆனால் எனக்கே வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கான ஆயத்தங்கள் தான் என் மகள்-மாப்பிள்ளை உரையாடல் என்பது புரிந்திருந்தால் அன்றைக்கே மூச்சைப் பிடித்துக்கொண்டு பொட்டென்று போய்ச் சேர்ந்திருப்பேன்.

"என் அப்பாவை இன்னிக்கு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்க, சொல்லிட்டேன்"

"ரம்.. அவருக்கு இஷ்டமில்லே.. டோன்ட் யு ஸீ?"

"வீட்டிலயே இருந்து அவரைச் சாகச் சொல்றிங்களா? யூ வான்ட் ஹிம் டெட்?"

"இல்லே.. நீ என்ன சொல்லியும் அவரு வர மாட்டேங்குறாரு.. ஐ'ம் ஒன்லி ஹிஸ் ஸன் இன் லா"

"அவர் கிட்டே பணம் வாங்குறப்ப வேர் வாஸ் திஸ் டிபரன்ஸ்? அப்ப மகன் மாதிரி இளிச்சிங்களே?"

"லிஸன்.. உங்கப்பா கிட்டே நான் ஒரு பைசா எனக்காக கை நீட்டி வாங்கியதில்லே.. உங்கம்மா இறந்தப்புறம் அவங்க நகை நிலம் எல்லாம் வித்து உனக்காகவும் நம்ம பசங்களுக்காகவும்னு என் கிட்டே கொடுத்த பணத்தை நான் வாங்கிக்கிட்டேன்.. அதுவும் உன் பேர்ல ட்ரஸ்ட்ல இருக்கு.. க்விட் யுர் நான்ஸென்ஸ்"

"வாடெவர்.. நீங்க தானே ட்ரஸ்டி? ஐ னோ வாட் யு டூ வித் த மனி"

"யூ அன்க்ரேட்புல் லீச்... உங்கம்மாவுக்கான அத்தனை மெடிகல் செலவும் நான் தானே கொடுத்தேன்? வேர் வில் ஐ கோ பார் மனி?" மாப்பிள்ளை குரல் உயர்ந்தது. பெண் இனி விட்டுக் கொடுக்க மாட்டாள். இருவரும் குரைக்கத் தொடங்குவார்கள். மெள்ள நகர்ந்து என் அறைக்குப் போனேன்.

"உங்கம்மா மெடிகல் செலவு போதாதுனு.. உங்கப்பாவுக்கான க்ரீன் கார்ட் செலவு.. அண்ணனு சொல்லிக்கிறியே.. ஒருத்தனாவது உங்கப்பாவை கூட வச்சுக்க வேண்டியது தானே? தொண்ணூறு வயசு ஆசாமி கூட இருந்தா தொந்தரவுனு ரெண்டு பேரும் கை விரிச்சாங்க.. நான் தான் உங்கப்பாவையும் வச்சுக் காப்பாத்த வேண்டியிருக்கு"

"ஓ மை காட்! யூ ஆர் மெஸ்ட் அப்..! என் அப்பாவை சுமைனு சொல்ற அளவுக்கு உனக்கு மூளை கோளாறு வந்திருச்சு.. உன் அப்பா அம்மாவா இருந்தா என்ன செய்வே?"

"மை பேரென்ட்ஸ் ஆர் டெட்"

நான் படுக்கையில் படுத்துக் கொண்டேன். "ராமா" என்றேன் ஆயாசத்துடன்.

"கூப்டீங்களா தாத்தா?" என்றான் இளைய பேரன். பக்கத்தில் படுத்திருந்ததை கவனிக்கவில்லை. "ராம்.. இங்க ஏன் படுத்துட்டிருக்கே? ரூமுக்குப் போ இல்லின்னா அம்மாவுக்கு கோவம் வரும்"

"தாத்தா.. பயமாருக்கு.. அண்ணா என் படுக்கைல தேள் போட்டிருக்கறதா சொன்னான்.. அதான் இங்கே வந்தேன்.. இந்த ஓரத்துல படுத்துக்கறேன் தாத்தா.. ஐ வோன்ட் பாதர் யு"

"சீசீ.. இங்க வா.. தாராளமா படுத்துக்கோ" என்று போர்வையை விலக்கி அவனை உள்ளிழுத்தேன்.

"அப்பா அம்மா சண்டை போடுறாங்களா உன்னைப் பத்தி?" என்றபடி என் கால்களின் மேல் தன் காலைப் போட்டுக் கொண்டு படுத்தான் ராம். "பேசாம டாக்டர் கிட்டே போக வேண்டியது தானே தாத்தா?"

"டாக்டர் கிட்டே போகாமலே போக முடியுமானு பாக்கறேன்"

"புரியலே தாத்தா.." என்றவனை இலேசாக வருடிக் கொடுத்தேன். "புரிய வேண்டிய அவசியமே உனக்கு வராமல் இருக்கட்டும்டா".

பத்து நிமிடம் கூட இருக்காது.. மாப்பிள்ளையும் ரம்யாவும் அறைக்குள் வந்தார்கள்.

"அப்பா.. இப்ப நீயா ஆஸ்பத்திரிக்கு வரியா, இல்லே போலீஸை கூப்பிட்டு அன்கோவாபரெடிவ்னு உன்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பவா?"

"அனுப்புறதுலயே இருடி" என்று சலித்தபடி எழுந்தேன். ராம் சட்டென்று எழுந்து "சாரிம்மா.. நான் என் ரூமுக்குப் போறேன்" என்று ஓடினான்.

"ரம்யா.. எனக்கு ஒண்ணுமில்லே.. ஜஸ்ட் வீக்" என்றேன்.

"அப்பா.. நேத்து ராத்திரி மட்டும் ரெண்டு தடவை கீழே விழுந்தே.. இன்னிக்கு மதியம் ஒரு மணி வரை நீ எழுந்திருக்கக் கூட இல்லே.. ஜஸ்ட் கோ" என்று என்னை எழுப்ப முனைந்தாள்.

"தள்ளாதடி.. நானே எழுந்து வரேன்".

                என்னை சோதனை செய்த மருத்துவர் "மிஸ்டர் ஸேடா.." என்று இழுத்தார்.

"சதாசிவம்"

"உங்க ரத்தத்துல ஹிமொக்லொபின் எண்ணிக்கை ரொம்ப குறையா இருக்கு.. 12வது இருக்கணும்.. ஆறுதான் இருக்கு.. இந்த நிலையில உங்களால எழுந்து நடமாடக் கூட முடியாது.. அதனால உங்களை இங்கே அட்மிட் பண்ணச் சொல்லியிருக்கேன்"

நான் கவனிக்கவில்லை. எனக்குத் தெரிந்து விட்டது என் நிலை. "ஹலோ.. நான் சொல்லுறது புரியுதா? உங்களுக்கு ஒரு யூனிட் ரத்தம் கொடுத்து கொஞ்சம் நீருணவும் ஐவில புகட்டச் சொல்லியிருக்கேன். காலைல எப்படி இருக்குனு பார்த்து வீட்டுக்கு அனுப்பிடச் சொல்லியிருக்கேன். ஆல்ரைட்?"

                "அப்பா எப்படி இருக்கு?"

"நீ தான் சொல்லணும்.. காலைல வீட்டுக்கு அனுப்புறதா சொன்ன டாக்டரைக் காணோம்.. வந்து ரெண்டு நாளாச்சு"

"டோன்ட் வரி பா.. உன் ஜூரம் இறங்கலியே அதான் இங்கே வச்சிருக்காங்க.. புது ரத்தம் சேர்த்ததால இருக்கலாம்.. அப்புறம் உன் வயிறு லிவர் கிட்னி சரியா வேலை செய்யலியாம்.. நாளைக்கு என்டஸ்கொபி பண்ணி வயத்துல ஏதாவது சிக்கல் இருக்கானு பார்க்கப் போறாங்க.. அதுக்குள்ள ஜூரம் இறங்கிடும்ன்றாங்க"

                "இப்ப எப்படி இருக்கு?" மாப்பிள்ளையைக் கண்ணால் பார்த்துச் சிரித்தேன். என் நிலை உனக்கு வரக்கூடாது ஐயா.

"கவலைப்படாதீங்க.. என்டஸ்கொபில சிக்கல் எதுவும் இல்லேனு சொல்லிட்டாங்க"

"அப்ப வெளில அனுப்ப சொல்லுங்க" என்றேன். "வந்து ஆறு நாளாவுது"

"உங்க ஆக்ஸிஜன் கவுன்ட் சீரா இல்லைனு சொல்றாங்க.. இந்த நிலையில வீட்டுக்கு அனுப்ப முடியாதாம். அதுவுமில்லாம நிமோனியா சிம்டம்ஸ் இருக்குல்ல.. உங்க நுரையீரல் பழுதாயிருக்கும்னு சொல்றாங்க"

"மாப்பிள்ளை.. ஐ வாஸ் ஜஸ்ட் வீக். ரெண்டு வாட்டி தடுமாறி விழுந்தேன். அவ்ளோ தான். ஆனா நானே சாப்பிட்டு நானே குளிச்சு நானே என் படுக்கையை சரி செய்து படுத்து எழுந்தேன். என்னை இங்கே கொண்டு வந்து..."

"நாட் மி. உங்க பொண்ணு தான் உங்களை வற்புறுத்தி இங்கே கொண்டு வந்தா.. ப்லீஸ் டோன்ட் ப்லேம் மி"

"ஐயோ.. பழியாச் சொல்லலே.. என் நிலமையை.." அமைதியானேன்.

                "மிஸ்டர் ஸேடா.. ஹௌ ஆர் யூ டுடே?"

இவன் வேறே.. குசலம் விசாரிச்சுக் கொல்றவன் நம்மாளு. ஹௌ ஆர் யூனு கேட்டே கொல்றவன் வெள்ளைக்காரன். பத்து நாளா காசு குடுக்குற பேஷன்ட் பெயரை ஒழுங்கா கத்துகிட்டு உச்சரிச்சா என்ன? புன்னகைக்க முயற்சித்தேன். வேண்டாமென்று நிறுத்திக் கொண்டேன். "மிஸ்டர் ஸேடா.. உங்க நிமோனியா குறையலே.. அதில்லாமே உங்க கிட்னி அறுபது சதவிகிதம் தான் வேலை செய்யுது"

"அடப்பாவிகளா.. ஒரு புட்டி ரத்தம் கொடுத்து உடனே வீட்டுக்கு அனுப்புறேன்னு உள்ளே கொண்டு வந்தீங்க.. நாசமாப் போக"

"அப்பா.. நிமோனியா குறைஞ்சதும் உன்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க" என்று என் மகள் சேர்ந்து கொண்டாள்.

"எத்தனை நாள்?"

"இன்னும் அஞ்சு நாள்"

"எனக்கு இப்பவே போகணும்னு இருக்கு"

"இப்ப வீட்டுக்கு போக விட மாட்டாங்கப்பா"

"வீட்டுக்கு யார் போகணும்னா? சாக விடுவாங்களா கேளூ. ஐ வான்ட் டு டை"

"ஸேடா ஸீம்ஸ் டிப்ரஸ்ட்" என்றான் வெள்ளை. "மூணு டோஸ் ஏன்டை டிப்ரஸன்ட் சேர்க்கச் சொல்றேன்"

                "அப்பா" என்று எழுப்பினாள் மகள். நான் உறங்கவில்லை. எப்படி உறக்கம் வரும்? இங்கே வந்த நிமிடம் முதல் இரண்டு வாரங்களுக்கு மேல் இந்தப் படுக்கையை விட்டு எழுந்திருக்கவேயில்லை. இந்த வேளைக்குத் தூக்கம் என்று தெரிந்தால் தானே? அதற்கு மேல் இந்த ஆஸ்பத்திரி ஆட்கள் என் மகள் மாப்பிள்ளை யாரையுமே பார்க்கப் பிடிக்கவில்லை. என்னை அவர்கள் இந்த நிலையில் - ஒரு சுருணை போர்த்திய உடலுடன் ஏதோ ஒதுக்கிவைக்கப்பட்ட காளான் போல் தனித்து கிடக்கும் நிலையில் - யாரும் என்னைப் பார்க்க விரும்பவில்லை. என் இயலாமை.. என்னால் சட்டென்று அத்தனையையும் அறுத்துக் கொண்டு ஓடிப்போகவும் முடியவில்லை. நான் ஒவ்வொரு நிமிடமும் வேண்டும் அத்தனை ராமன்களும் க்ருஷ்ணன்களும் மகாலக்ஷ்மி பரதேவதாக்கள் அத்தனை பேருமே என்னை வைத்துக் கேலியாட்டம் ஆடும் பொழுது நேரும் அவமானத்தையும் அவலத்தையும் சகித்துக் கொள்ள கண்களையாவது மூட முடிகிறதே என்ற அல்ப சந்தோஷத்தில் கண்ணை மூடிக் கொள்கிறேன். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருளுமா என்ற வாதம் எத்தனை உதவாக்கரை என்பது இப்போதல்லவா புரிகிறது? மகள் விடவில்லை. "அப்பா" என்றாள். "என்னப்பா தூங்கிட்டியா?"

எத்தனை மடத்தனமான கேள்வி. இருந்தாலும் கேட்டவள் மகள் அல்லவா? கேள்வியுடன் அவளைப் பார்த்தேன். "அப்பா.. உன்னை மறுபடி ஐசியூவுக்கு மாத்தப் போறாங்க.. ஆக்ஸிஜன் கூடுற வரைக்கும் மூக்குல கப் பொருத்தி எல்லாமே ஐவில தரப்போறாங்க.. அனதர் த்ரீ டேஸ்"

அவளைப் பரிதாபமாகப் பார்த்தேன். நான் என்ன சொல்வேனென்று எதிர்பார்க்கிறாள்? நான் நிதம் வணங்கும் பெருமாளே.. அசல நிர்குண ஆத்ம ராமா.. என் பெண்ணுக்கு இந்த நிலமையைக் கொடுத்துடாதே. அவளுக்கு இந்த நிலை வந்தா கடவுள்னு சொல்லிக்கத் தகுதியே உனக்கு இல்லை.

                இன்றோடு இங்கே வந்து இருபத்தேழு நாட்களாகின்றன. இரண்டு முறை டயாலிஸிஸ் செய்துவிட்டார்கள். இரண்டு முறை ஐசியூ பார்த்தாகிவிட்டது. பல்மனெரி, யுராலஜி, நெப்ராலஜி, ந்யூராலஜி இத்யாதி லஜிகளைப் பார்த்தாகிவிட்டது. பாவிகளா! ஹிமொக்லொபின் குறைஞ்சா என்னடா நாசாமாப் போனேன்? நல்லாத்தானே சாப்பிட்டுத் தூங்கி என் பாட்டுக்கு என் பேரனை அவ்வப்போது பார்த்துக்கொண்டு.. ஏதோ யுட்யூபில் நாகேஷ் படம் பார்த்துக்கொண்டு.. கோமதியை அவ்வப்போது திட்டிக்கொண்டு.. நல்லாத்தானே இருந்தேன்? ஹிமொக்லொபின் குறைஞ்சா என்ன இப்போ? எத்தனை குறைகிறதோ அத்தனைக்கேத்தாற் போல இருந்துட்டுப் போறேன்.. இப்படி தெருச் சொறிநாயை விடக் கேவலமா என்னை அலங்கோலப்படுத்தி அசிங்கப் படுத்திட்டீங்களேடா..

                "அப்பா" மகள் தான். மாப்பிள்ளை வருவதை நிறுத்திக் கொண்டாரா அல்லது அவர் வரும் பொழுது நான் உண்மையிலேயே தூங்கிவிட்டிருந்தேனா தெரியாது. அவசியமும் இல்லை. "அப்பா.. அண்ணா ரெண்டு பேரும் பேஸ் டைம் பண்றாங்கப்பா.. பேசணும்னு சொன்னியே" என்றபடி ஐபோனை என் எதிரே இருந்த டிவியில் இணைத்தாள். என் இரு மகன்கள் மருமகள்கள் பேரக்குழந்தைகள் என்று எல்லாரும் தெரிந்தார்கள். ஏதேதோ பேசினார்கள். என்னால் உரக்கப் பேச முடியவில்லை. கையசைத்து அவர்களை அமைதி காக்கச் சொன்னேன். மெள்ளப் பேசினேன்.. "இதப்பாருங்கப்பா.. உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. நீங்கள் சொன்னால் டாக்டர்கள் கேட்பார்கள்.. தயவுசெய்து என்னைச் சாக விடுங்கள்.. நீங்களா இதைச் செய்யலேன்னா இன்னிக்கு ராத்திரி நானே இந்த ட்யூப் எல்லாம் பிச்சிப் போட்டுருவேன்"

"அப்பா.. அப்படியெல்லாம் பேசாதப்பா.. உன்னால எந்த ட்யூபையும் பிச்சிப் போட முடியாது.. கண்காணிப்புல இருக்கே.. அப்படி முரண்டு பிடிச்சா உன்னை அடைச்சு வச்சுடுவாங்க"

"அப்பா.. உனக்கு என்ன குறை? ஆஸ்பத்திரிலே கேர் பண்றாங்க.. ரம்யா வேறே தினம் வரா"

"அப்பா.. உன் எரிச்சல் புரியுது.. ஆனா வியாதி வந்தா அனுபவிச்சு தானே ஆகணும்? அதைவிட்டு சாகறேன் பிச்சுப்போடுறேன்லாம் சைல்டிஷ் இல்லையா?"

என் குழந்தைகளுக்கு என்னைப் புரியவில்லை. புரிந்து கொள்ளும் சக்தியையும் அறவே இழந்து விட்டார்கள். அவர்களுக்குப் புரியவைக்க எனக்கு வலு இல்லை.

ஓ என்று அழுதேன். கோமதி.. என் கோமதி.. எனக்கு ஒரு உதவி செய்யேன்? நீ தான் சாமர்த்தியமா கழண்டுகிட்டே.. எப்படியாவது என்னையும் கூட்டிக்க.. கோமதி.. கோமதி.. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. குமுறிக் குமுறி அழுதேன். இதற்கா தொண்ணூறு வருடங்கள் வாழ்ந்தேன்? நாதியற்று கேவலமாக பிச்சைக் கேட்கும் அவலத்தில் மிதக்கவா என்னைப் படைத்தாய் ராமா?

"ப்லீஸ்" என்றேன் மென்மையாக. "ஐ வான்ட் டு கோ.. இந்தக் கொடுமையிலிருந்து எனக்கு விடுதலை குடுங்க.. உங்க குடும்பங்கள் நன்றாக இருக்கும்"

"தி ஓல்ட் மேன் இஸ் டிமென்டெட்" என் மகன் சொல்வது தெளிவாகக் காதில் விழுந்தது. கோமதி அடிக்கடி இடிப்பாள் "இதெல்லாம் நல்லா காதுல விழுமே?"

"லிஸன் மை டியர் சில்ரன்" என்றேன். "எனக்கு தொண்ணூறு ஆவப்போகுது. ஐ ஹெவ் லிவ்ட் மை லைப். எப்படியாவது என் வாழ்நாளை நீட்டிக்க எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என்ன செய்யப் போகிறேன்? எழுந்து வந்து உங்கள் யாருக்காவது உதவியாக இருக்கப் போகிறேனா? அல்லது என் போக்கில் நடமாடத்தான் போகிறேனா? ஐ கான்ட் இவன் லிப்ட் மை பிங்கர் விதவுட் யுவர் பர்மிஷன். என்னை ஏன் இப்படிக் கேலி செய்கிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்? இந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் எல்லாம் என்னவோ என் ஒரு உயிரைக் காக்கும் கடமையில் இருப்பதாக நினைக்கிறீர்களா? கூலிக்கு மாரடிக்கும் அந்தக் கூட்டத்துக்கும் என் நலத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. உண்மையில் உங்களுக்கும் எனக்கும் கூட அதிகம் இனி சம்பந்தம் இல்லை. வி லிவ் இன் டிபரன்ட் வர்ல்ட்ஸ். நான் ஒரு சுமை. என்னை ஏன் சுமக்க விரும்புகிறீர்கள்? என்னை வீட்டிலேயே இருக்க விட்டிருந்தால் இன்னேரம் இறந்திருப்பேன். அதற்கு பதிலாக இங்கே கொண்டு வந்து உடம்பெல்லாம் ஓட்டை போட்டு ட்யூப் பொருத்தி பீத்துணி மாதிரி ஒரு கவுன் மாட்டி என்னைக் கேலிக்கிடமாக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? நான் உங்கள் அப்பா இல்லையா? அந்த கரிசனம் கிடையாதா? ப்லீஸ்.. என் உயிரை நீட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தயவுசெய்து என்னை கௌரவத்துடன் சாக விடுங்கள். லெட் மி டை இன் டிக்னிடி". நான் அழவில்லை.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்கள். என் மகள் தனியாக எங்கோ போய் அண்ணன்களுடன் பேசித் திரும்பினாள். உடன் என் மருத்துவரும் வந்தார். ஐபோனை மறுபடி டிவியில் இணைக்க, பேஸ் டைமில் என் மகன் இருவரும் புன்னகைத்தார்கள். மருத்துவர் என்னிடம் "ஸேடா.. டு யூ வான்ட் டு பி டேகன் ஆப் ஆகிஸிஜன்?" என்றார்.

"ஆமாம்"

"இதை எடுத்தால் மிக விரைவில் உங்கள் இதயத் துடிப்பு நின்றுவிடும் என்பது புரிகிறதா? டு யூ ரியலைஸ்?"

"இதை வைத்திருந்தால் என்னை சாயந்திரம் டிஸ்சார்ஜ் செய்வீர்களா?"

மருத்துவர் சிரித்தார். "ஸ்மார்ட்.. உங்க முக்கிய உறுப்புகள் எல்லாமே இருவது சதவிகிதத்துக்குக் குறைவாகவே இயங்குது.. ஸோ நோ.. உங்களை டிஸ்சார்ஜ் செய்வது இம்பாஸிபில்"

"அப்ப.. எனக்கு விடுதலை கொடுங்கள்"

சில காகிதங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு மருத்துவர் எழுந்தார். என்னைத் தட்டிக் கொடுத்தார். "ப்ரேவ் மேன்" என்றபடி வெளியேறினார். "இரண்டு மணி நேரம் இருந்தால் அதிகம்" என்று அவர் என் மகளிடம் சொன்னது கேட்டது.

                அத்தனை குழாய்களையும் நீக்கி புதிதாக ஒரு சுருணை அணிவித்து அழகு பார்த்தார்கள். என் பெண், பேரக்குழந்தைகள், மாப்பிள்ளை எல்லாம் வந்திருந்தார்கள். என்னுடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள். டிவியில் என் இரண்டு மகன்களின் குடும்பம்.

"அப்பா.. வி ஆல் லவ் யூ" என்றாள் மகள். "உனக்கு என்ன வேணும்பா? வாட் கேன் வி டு பார் யூ நௌ?"

"கோமதி படத்தைக் கொண்டு வரச் சொன்னேனே?" என்றேன்.

"மறந்து போச்சுபா" என்றாள் மகள்.

"போகட்டும்.. ம்ருத்யுஞ்சய மந்த்ரம் சொல்லேன்"

"மறந்து போச்சுபா.. அம்மா சின்ன வயசுல சொல்லிக் கொடுத்தது"

"மாம்.. செக் இன் யுட்யூப்" என்றான் பேரன்.

"சரி விடு.. ராம ராமனு நாலு தடவை சொல்லு"

"கொஞ்சம் இருப்பா.. யுட்யூப்ல தேடுறேன்"

கோமதி பாடுவது போல் கேட்டது..
    அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
    அவனே யணிமருதம் சாய்த்தான் - அவனே
    கலங்காப் பெருநகரம் காட்டுவான் கண்டீர்
    இலங்கா புரமெரித்தான் எய்து.

நீ சொன்னா சரி, கோமதி.


37 கருத்துகள்:

  1. ஒரு வயதிற்கு மேல் ஹாஸ்பிடலில் வைத்து மருத்துவம் பார்ப்பது மிக கொடுமைதான் கதையை எடுத்து சென்ற விதம் அருமை.....

    பதிலளிநீக்கு
  2. அனுபவம் உள்ளவர்கள் கதை எழுதுவதற்கும் அனுபவமில்லாதவர்கள் கதை எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு நன்றாக தெரிந்துவிடும் உங்களிடம் திற்மையும் அனுபவமிருப்பதால் ஒரு நாள் இர்ண்டு நாளாகி வாரமாகி மாதங்களானதை வள வள என்று சொல்லாமல் அழகாக நகர்த்தி சொன்னவிதம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவம் உள்ளவர்கல்னதும் சட்னு பயந்துட்டேன்.. கதை எழுதும் அனுபவமா சரி சரி.. :-)

      நீக்கு
  3. இப்படி ஒரு அனுபவத்தை நான் நேரில் பார்த்து இருக்கிறேன் ஆனால் என்ன வயதான ஆள் என்பதற்கு பதிலாக இளம் சிறுவனுக்கு மிக சிறப்பாக மருத்துவம் கொடுத்து பார்த்து, பலனளிக்காமல் கடைசியில் ஆக்ஸிசன் கொடுப்பதை நிறுத்தி மரணம் அடையஸ் செய்ததை அந்த குழந்தையின் பெற்றோர்களுடனும் என் மனைவி மற்றும் குழ்ந்தையுடன் ஹாஸ்பிடலில் பிராத்தனை செய்து கொண்டே பார்த்தது இன்னும் மனதில் அகலாமல் இருக்கிறது.. ஆக்ஸிசன் நிறுத்தியதும் ஒரு மணி நேரத்தில் குழந்தை இறந்துவிடும் என்றுதான் டாக்டர்கள் சொன்னார்கள் ஆனாள் அந்த உயிரோ பல மணிநேரங்களுக்கு பின்னால்தான் பிரிந்தது அந்த கொடுமை யாருக்கும் நேரக் கூடாது

    பதிலளிநீக்கு
  4. ஹிமொக்லொபின் குறைஞ்சா என்னடா நாசாமாப் போனேன்? நல்லாத்தானே சாப்பிட்டுத் தூங்கி என் பாட்டுக்கு என் பேரனை அவ்வப்போது பார்த்துக்கொண்டு.. ஏதோ யுட்யூபில் நாகேஷ் படம் பார்த்துக்கொண்டு.. கோமதியை அவ்வப்போது திட்டிக்கொண்டு.. நல்லாத்தானே இருந்தேன்? ஹிமொக்லொபின் குறைஞ்சா என்ன இப்போ? எத்தனை குறைகிறதோ அத்தனைக்கேத்தாற் போல இருந்துட்டுப் போறேன்.. இப்படி தெருச் சொறிநாயை விடக் கேவலமா என்னை அலங்கோலப்படுத்தி அசிங்கப் படுத்திட்டீங்களேடா.//

    .


    என் மாமியார் அவர்கள் டிசம்பர் 6 ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்கள், ஜனவரி 9ம் தேதி இறந்து விட்டார்கள். ஆஸ்பத்திரிக்கு போவதற்கு முந்தினநாள் வரை அவர்கள் வேலையை அவர்க்ளே செய்து கொண்டு இருந்தார்கள்.

    95 வயதுக்கு மேல் பிழைத்து வந்து நான் என்ன செய்ய போகிறேன் என்பது தான் அவர்கள் கேள்வியாக இருந்தது.

    இப்போது கருணை கொலை செய்யலாம் என்று அனுமதி அளித்து விட்டார்கள்.
    ஆஸ்பத்திரி கொடுமையை அனுபவிக்காமல் ட்யூப்களையும் நீக்கி நிம்மதியாக செல்ல அனுமதிக்கலாம்.

    யாருக்கும் ஆஸ்பத்திரி கொடுமை வேண்டாம்.

    //கோமதி பாடுவது போல் கேட்டது..//

    கடைசி பாடல் கோமதி பாடியது கேட்டு மனம் கனத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஸ்பத்திரி அலங்கோலங்கள் கொஞ்சம் மிகை என்றே என் சமீப அனுபவங்கள் எண்ண வைக்கின்றன. கால் சுளுக்கு என்று ஆஸ்பத்திரி போனவர்கள் திரும்பி வராத பொழுது திக் என்கிறது.

      நீக்கு
  5. அருமை.
    கதை முடியும் போது மனம் கனத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  6. எவ்வளவு பழங்காலத் தலைப்பு?.. அதற்குள் எவ்வளவு உண்மையைப் பதுக்கி வைத்திருக்கும் இன்றைய உறவுமுறை தாத்பரியம்?..

    கடைசி நாலு வரிகள்.. வெண்பா தானே? இல்லே, வெண்பா மாதிரியா?..

    நம்பர் மூணு வெகுப் பொருத்தம். மூன்றாம் சுழி.. மூன்றாம் திருவந்தாதி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திவ்வியப் பிரபந்தப் பாடல். (நமக்கும் இதுக்கும் ஒத்து வராது - நான் எழுதலை சார் :-)

      தலைப்பில் இணைப்பிருப்பதால் தலைப்பு.

      ஆமா.. உங்க பதிவுல என் பின்னூட்டம் வரணும்னா என்ன செய்யணும்? (பின்னூட்டம் எழுதணும்னாதீங்க :-)

      நீக்கு
    2. இணைப்பு நீங்க கொடுத்த தலைப்பு தான் ஜீவி சார்..

      நீக்கு
    3. //ஆமா.. உங்க பதிவுல என் பின்னூட்டம் வரணும்னா என்ன செய்யணும்? (பின்னூட்டம் எழுதணும்னாதீங்க :-)//

      "என்னாச்சு?"

      "பின்னூட்டம் போட முடியவில்லை.."

      "commewnts-மேல் கர்ஸரை வைத்து க்ளிக்க வேண்டியது தானே?"

      "ஊஹூம்.. பிரயோசமில்லை.."

      ?????

      நீக்கு
  7. //அனுபவம் உள்ளவர்கள் கதை எழுதுவதற்கும் அனுபவமில்லாதவர்கள் கதை எழுதுவதற்கும்.. //

    அனுபவம் என்றில்லை.. சமீபத்தில் ஜிஎம்பீ சாரின் தளத்தில் கூட இதைத் தான் பகிர்ந்து கொண்டேன். எல்லாக் கலைகளையும் போல எழுதுவது என்பதும் ஒரு கலை.. Art of writing.. எல்லாக் கலைகளையும் போல இதையும் கற்றுத்
    தெளிய வேண்டும்.. வாசித்தல், வாசித்தறிதல், எழுதுதல், எழுதி எழுதிப் பழகுதல்.. இதெல்லாம் தான் இந்தக் கலையைக் கற்றுத் தெளிவதற்கான பாட திட்டங்கள்!..

    பதிலளிநீக்கு
  8. செம கதை...இப்போதைய உறவுகள் எப்படி ஆகிப் போயின என்ற யதார்த்தம் தெறிக்கிறது கதையில்.தலைப்பு வித்தியாசமாய்...முடிவும் அருமை..ஆனால் மனம் கனத்துவிட்டது. என்னென்னவோ நினைவுகள்..

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வெகு நாட்களுக்குப் பின் உங்கள் எழுத்து. உடல் வலுவற்றுப் போகும்போது மனம் என்னவெல்லாமோ நினைக்கும் உங்கள் எழுத்து ஜஸ்ட் ப்ராக்டிகல் அனுபவத்தை அனுபவிக்காமலேயே தெளிவாக்குகிறது வாழ்த்துகள் துரை சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவிக்க வேண்டாம்னு பார்க்கிறேன்... பார்ப்போம்.
      நன்றி சார்.

      நீக்கு
  10. நானும் முட்டை போடறேன் (am also producing) என்பதுபோல் இல்லாமல் ஒரு கதை, நிகழ்வு வாழ்வியலை ஒட்டி மனதில் தாக்கம் உண்டாக்குகிறது. சில நிகழ்ச்சிகளே அந்த ஆன்மாவின் பரிதவிப்பை நன்றாக்க் காட்டுகிறது. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க "பல்கொட்டிப் பேய்" சார். Very well done. இப்போ இருக்கிற என் உடல்நிலையையும் ரிலேட் செய்து படிக்க முடிந்தது.
    பாராட்டுகள்.

    "தளரா உடலம் எனது ஆவி சரிந்து போம் போது
    இளையாது உனது தாள் ஒருங்கப் பிடித்து
    போத இசை நீயே"

    என்ற ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே, நம்மாழ்வார் பாசுரம் நினைவில் வந்துபோனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.

      அருமையான பாசுரம்.
      உடல்நிலைனு பயம் காட்டுறீங்களே? நலம் பேண வாழ்த்துகிறேன்.

      நீக்கு
  11. சம்சாரம் இல்லேன்னா சகலமும் போச்சி...

    பதிலளிநீக்கு
  12. அன்பு துரை. கோமதி, இப்ப கோமதியின் காதலன் இரண்டும் படித்தேன். இந்த நிலை வராமலிருக்க இறைவனிடம் சரண். அருமையான எழுத்துக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. வருந்தினர்கள் என்பது வேண்டுமென்றே வந்திருக்கிறதா? மனைவி இறப்புக்காக வருத்தம் தெரிவிக்க வந்திருப்பவர்கள்!

    பதிலளிநீக்கு
  15. // அன்றைக்கே மூச்சைப் பிடித்துக்கொண்டு பொட்டென்று போய்ச் சேர்ந்திருப்பேன்.//

    இது எப்பேர்ப்பட்டவனானாலும் முடியாது என்பது என் துணிபு!

    பதிலளிநீக்கு
  16. சதாசிவத்துக்கு எண்பத்தெட்டு வயதுதானே ? ஏன் 90 என்று ரவுண்ட் செய்கிறார்?!

    பதிலளிநீக்கு
  17. ஆனால்.. நாமும் இந்தக் கட்டங்களுக்கு சீக்கிரமே வரப்போகிறோம். இருபது வருடங்கள் அல்ல, இரண்டு வருடங்களுக்கு முன்னால் இருந்தது போலவே இப்போது இல்லை... நம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பலத்தை, சுதந்திரத்தை இழக்கும் நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிற பயம் வருகிறது. என்ன முன் ஏற்பாடு செய்து கொள்ளலாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீராம்... உடல் நிலை என்பது வினோதமானது. சர்வசாதாரணமா 7-10 கிமீ நடப்பேன். ஒரு வைரல் காய்ச்சல், பிரஷர் குறைவு 7-8 நாட்களில் நிலையைப் புரட்டிப் போடுகிறது. முன்னேற்பாடு என்று ஒன்றும் கிடையாது. நாம் நடந்துகொண்டிருக்கும் வாழ்க்கைச் சாலையில் தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான்.

      நீக்கு
  18. மனைவி, தாய்க்கும் மேலாக அரவணைப்பவளோ? நல்ல மனைவி அமைபவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். ஒரு சகோதரயாக, தாயாக, மகளாக இருக்க மனைவியால் மட்டுமே முடியுமோ? அவள் இல்லாத குறையை கதாபாத்திரத்தின்மூலம் காட்டியுள்ள விதம் நெகிழ வைத்துவிட்டது. என்னை மறந்து படித்தேன், மறுபடியும் படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லாஏப்ரல் 07, 2018

    Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since Tamil Books

    பதிலளிநீக்கு
  20. முழுக்க முழுக்க இந்த அனுபவம் எங்களுக்கும் உண்டு. எங்கள் மாமியாருக்கு நடந்தது போலவே இருக்கிறது. 93 வயதில் அவரை மும்பையில் கோகிலாபென் மருத்துவமனையில் படுத்திய பாடு! அந்த வயதில் ஸ்டென்ட் எல்லாம் வைத்து! கடவுளே, கடைசியில் சாகும்போது ஒரு வாய் ரசம் சாதமும், ஒரு வாய்க் காஃபியும் கேட்டதைக் கொடுக்க முடியலை! :( மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குக் கொண்டு வரலாம் என்று சொன்னதை நாத்தனார், மைத்துனர்கள் ஒத்துக்கவும் இல்லை! :(

    பதிலளிநீக்கு
  21. உங்கள் எழுத்தைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. எப்போவும் போல் அருமைனு சொல்வது வெறும் வார்த்தையே!

    பதிலளிநீக்கு
  22. தலைப்பைப் பார்த்துட்டு ஓடோடி வந்தேன். :)

    பதிலளிநீக்கு
  23. இரண்டையும் மீண்டும் மீண்டும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  24. நமது முடிவு என்பது வாழ்க்கை நமக்கு ஒளித்து வைத்திருக்கும் கடைசி ஆச்சர்யம்! நமக்கு நடக்கும்போதும் அதை வேறொருவருக்கு நடப்பது போல பார்க்க முடிந்தால் அந்த ஆச்சர்யத்தை அனுபவிக்க முடியும் என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  25. கதை இல்லை. நிஜம். காட்சிகள் முன்பின் மாறுபடும். கோமதியின் காதலன் எதையோ நினைத்துப் படித்தால் எதெதுவோ மனதில் வரும் வயதானவர்களின் உணர்ச்சிக் காவியம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  26. நெஞ்சம் கணக்கும் கரு.. வைத்தியசாலை வேதனைகள் வேண்டாம்.. உயிர் பிரிகையில் நிம்மதியைத் தேடும். வாழ்த்துக்கள்.

    வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    பதிலளிநீக்கு