2014/05/28

மேல்தட்டில் இத்தனை முரண்களா?


    'ஏன் எழுதுவதில்லை?' என்று விசாரித்த உள்ளங்களுக்கு நனி நன்றி.

சோம்பல் கொஞ்சம், ஆயாசம் கொஞ்சம், கடுப்பு கொஞ்சம்.. எடுத்துக் கொண்டிருக்கும் ப்ராஜக்டுகள் கொஞ்சம்.. என்று கொஞ்சம் கொஞ்சமாய்க் காரணங்கள். 'பெத்தாபுரம்' கதையைத் தொலைத்தது போதாதென்று 'சிவப்பு வட்டம்' கதையையும் மூடத்தனமாகத் தொலைத்ததும் என் மீதே எனக்கு கடுங்கடுப்பு. இனி கூகிலில் நேராக எழுதுவதில்லை என்று தீர்மானித்துவிட்டேன்.

இந்த இடைவெளி என்னையும் பாதித்திருக்கிறது. நண்பர் போகன் ஒருமுறை சொன்னது போல், எழுத்து (அல்லது அத்தகைய வெளிப்பாடு) வாழ்வின் சோர்வைப் போக்க வல்லது. குறிப்பாக, என் எழுத்து என் சோர்வைப் போக்கி படிப்பவர்களை சோர்ந்து போகச் செய்ய வல்லது. அதனால் தொடர்ந்து எழுத முயல்கிறேன்.

தொடர்ந்து படிப்பதற்காக - மறுபடி நன்றி. மறுபடி.

***

சமீபத்தில் இந்தியா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சென்னை போகும் பொழுது சிலரை அவசரமாகச் சந்திப்பதுண்டு. சில பதிவர்களைச் சந்திக்க எண்ணியிருந்தேன். இம்முறை சென்னை போகாததால் முடியவில்லை. ஜூன் ஜூலையில் ஒரு பயண வாய்ப்பு அமையுமென்று நினைக்கிறேன், அப்போது முடியுமா பார்ப்போம்.

இந்தியாவில் வேலை எல்லாம் முடிந்து இரவு சுமார் எட்டு மணி போல் ஓட்டலுக்குத் திரும்பினேன். மறுநாள் மாலை விமானமேற வேண்டும். வசதியான டாடா ஓட்டலில் தங்கி நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்று எண்ணியிருந்தேன். என்னையும் உடன் வந்தவர்களையும் 'கண் போல் கவனித்த' விருந்தோம்பல் பேரரசு என்னை விடவில்லை. அருகிலிருந்த ஒரு கோவிலுக்கு என்னை அவசியம் அழைத்துப் போக வேண்டும் என்று ஆறு காலில் நின்றார்.

"ரொம்ப அழுத்தாதீங்க.. நாற்காலி உடைஞ்சுரப் போகுது.." என்றேன். "நான் வரலிங்க.. கொஞ்சம் தூங்கலாம்னு இருக்கேன்..வேணும்னா அவங்களைக் கூட்டிட்டுப் போங்க". உடன் வந்தவர்களைச் சுட்டினேன். லாபியருகே குளிர்ந்த பீர் அருந்திக் கொண்டிருந்தார்கள்.

சட்டென்று முகமிறுகிய பேரரசு, "அய்யயே.. அவங்கள்ளாம் வெள்ளைத்தோலு.. இதெல்லாம் புரியாது.. நீங்க வாங்க.. போயிட்டு வந்துரலாம்.. இந்த பாக்கியம் கிடைக்காது" என்றார். "வேணாம் சார்.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு" என்ற என்னை அடிக்க வருவது போல் முறைத்தார். "என்ன்ன்ன்ன்ன சார் நீங்க.. இதெல்லாம் லேசுல கிடைக்கக் கூடிய வாய்ப்பா? வர்ர்ருஷக்கணக்கா திட்டம் போட்டா கூட நிறைய பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது.. உங்களை அவனா கூப்பிடலின்னு வைங்க.. நீங்களா என்ன நினைச்சாலும் இந்த கோவிலுக்கு போக முடியாது.. அவன் கூப்பிட்டிருக்கான்னு நெனச்சுக்குங்க.. முறைக்காம வாங்க சார்" என்று என்னை மூட்டை கட்டாத குறையாக காரில் திணித்தார். போகிற வழியில் அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சாப்பாடு கொடுத்து நல்ல மஞ்சத்தில் உறங்க வைத்தார். மறுநாள் விடியலில் என்னை எழுப்பித் தயார் படுத்தினார். காபி டிபன் கொடுத்து மறுபடி காரில் திணித்தார். கோவிலும் கோவில் சார்ந்த இடமும் சுற்றிக் காட்டினார். மதிய உணவுக்கு டாடா ஓட்டலில் இறக்கிவிட்டு டாடா சொல்லிக் காணாமல் போனார். "மாலை ஏர்போர்ட் பிக்கப்புக்கு வரேன்.. அதுவரை ரெஸ்ட் எடுங்க.."

ரெஸ்ட் எடுக்கவில்லை.

மாறாக, பேரரசு தயவில் லக்னவ் நகரிலிருந்து சுமார் நூற்று நாற்பது கிமி தொலைவில் இருக்கும் 'ராம் ஜென்ம பூமி' சென்று வந்த அனுபவத்தையே நினைத்துக் கொண்டிருந்தேன். இன்னொரு சமயம் இங்கேயோ கலர்சட்டையிலோ விவரம் எழுதுகிறேன்.
***

அடுத்த வருடம் அவசியம் தயாராக வேண்டிய ஒரு ப்ராஜக்டுக்கான ஆதார வேலைகள் செய்ய, சில புத்திசாலிகள் தேவைப்பட்டார்கள். எங்களிடம் அது பற்றாக்குறையானதால் என் புடலங்காய் கம்பெனிக்கு ஆளெடுக்க சிலரோடு இந்தியா பயணம் செய்தேன். ஐஐடி ஐஐஎம் காரர்களைத் தேர்வு செய்யத் திட்டம். ஐஐடியில் பத்து பேர், ஐஐஎம்மில் இரண்டு என்று கணக்கு போட்டு ஆராய்ச்சி கீராய்ச்சி எல்லாம் செய்து எந்த ஐஐடி ஐஐஎம் போவதென்று எல்லாவற்றையும் பயணத்துக்கு முன்பே தீர்மானித்தாகிவிட்டது.

கடைசியில் எட்டு பேரைத் தேர்வு செய்து திரும்பினேன். எட்டு பேரையும் செக்கு மாடு போல் வேலை செய்ய வைத்துப் பிழிந்து அனுப்பப் போகிறேன். காசில்லாத கம்பெனிக்கு இது போல் அடிமைகள் வேலைக்குக் கிடைத்தால் தான் உண்டு. அவர்களின் கேள்விக்குறி போல் முதுகு வளைந்த உழைப்புக்கு, ஒரு பொன்னான அனுபவம் கிடைக்கப் போகிறது என்ற என் பதிலையே சம்பளமாகக் கொடுக்கப் போகிறேன்.

இந்தியாவில் recruiting மிகக் கடினமாக இருக்கிறது. அனுபவம் உள்ளவர்களுக்கு ஒரு வருடத்துக்கு ஒரு லட்சமோ என்னவோ கொடுக்க வேண்டுமாம். அதற்கு மேல் ஒரு resumeக்கு கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் செலவாகிறது. அப்படி அனுபவஸ்தர்கள் என்ன சாதித்தார்கள் என்பதை என் முகத்தில் இருக்கும் சென்ற வருடத்து சோக வரிகள் சொல்லும். எதற்கெடுத்தாலும் ஒரு defense, எதற்கெடுத்தாலும் ஒரு argument, கடைசியில் வேலையில் ஒன்றும் அப்படி பிரமாத தரம் எதுவும் இல்லை. வேண்டாம். பட்டது போதும். இனி அனுபவம் இல்லாத பட்டதாரிகள் போதும் என்று தீர்மானித்திருக்கிறேன். green resumeக்கே சுமார் 250ரூ செலவாகிறது. லிங்க்டின் நௌக்ரி மான்ஸ்டர் எல்லாம் சரியாக வரவில்லை - வேறு காரணங்களுக்காக. ஆக, இந்தியாவுக்கு வேலை கொண்டு போனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது வருத்தமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது. எழுதத் தெரியாதவன் கீபோர்டைக் குறை சொன்னானாம் என்பது போல் ஒரு வேளை என் பெயரில் தான் தவறோ?

ஜூன் ஜூலையில் இந்தியா வரும்பொழுது மறுபடி ஆள் எடுக்கும் திட்டம் இருக்கிறது. ஐஐடி ஐஐஎம் அல்லது நல்ல யுனிவர்சிடியில் முதுகலை படித்தவர்கள், இளம் பட்டதாரிகள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் எனக்கு இமெயில் அனுப்புங்களேன்? உங்களுக்கும் வேலை வாங்கிக் கொடுத்த புண்ணியம் (ஜம்பம்) கிடைக்கும். எனக்கும் காசு மிச்சமாகும். என்ன சொல்றீங்க? operations research, applied mathematics or statistics படித்து 'R'ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வளவு தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும் :-). ஓ.. மறந்து போனது.. ஆங்கிலம் மிக மிக நன்றாகப் பேச வேண்டும், தயங்காமல் துணிச்சலோடு உரையாட வேண்டும். முக்கியம்.
***

இந்தியப் பெரும் பல்கலைக் கழகங்களில் மாணவர்களோடு உரையாடிய முதல் அனுபவம். வித்தியாசமான அனுபவம். மாணவர்களில் இத்தனை நிறங்களா!

மும்பை அளவுக்குக் கான்பூர் காரர்களுக்குப் பேச வரவில்லை. மும்பைக்கும் கான்பூருக்கும் நில இடைவெளி மட்டுமா வித்தியாசம்?! மன இடைவெளி - மை குட்நஸ்! மும்பை மாணவர்கள் சிலர் என்னை என்னிடமே விற்று விட்டார்கள். கான்பூர் மாணவர்கள் அத்தனை பேருமே கொஞ்சம் நிதானமாக இருக்கிறார்கள். தயக்கமா தத்தித்தனமா என்று தீர்மானிக்க இயலாத நிதானம்.

இதன் பின்னணியில் நிறைய கவனித்தேன். பள்ளிக்கூடப் படிப்பு, பிறந்து வளர்ந்த சூழல்.. இவை பெருங்காரணங்களாக இருக்கின்றன. கண்ணுக்குப் புலப்படாத ஆனால் மிகப்பெரிய, தலையிலிடிக்கும் பிரிவுச் சுவர் மாணவர்களிடையே காணப்படுகிறது. கான்பூர் ஐஐடி மாணவர் ஒருவர் மொத்த GPA 10/10 எடுத்திருக்கிறார். கொஞ்சம் தூண்டுவோம் என்று கேள்விகள் கேட்டால் வாய் திறக்கவில்லை. தயக்கம். நடுக்கம். இன்னொரு பெண் மாணவர் சுத்தமாகப் பேசவேயில்லை. எதற்காக இவர்கள் படிக்க வந்தார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது. ஒரு மாணவர் ஏதோ இமாசல பிரதேச குக்கிராமத்தில் படித்து ஐஐடி சேர்ந்திருக்கிறார். அவருடைய பேச்சுக்கும் படிப்புக்கும் தொடர்பே இல்லை. 6/10 GPA எடுத்திருக்கிறார், நாங்கள் ஏதோ கேள்வி கேட்டால் அவர் ஏதோ பதில் சொல்கிறார். கஷ்டம் என்றாலும் வருத்தமாக இருந்தது. இவரை எப்படி வேலைக்கு எடுப்பது?

ஐஐஎம் ஆமதாபாத், லக்னௌ போயிருந்தேன். அங்கேயும் அப்படியொன்றும் பிரமாதமாக மாணவத் திறன் காணப்படவில்லை.

மாணவர்களிடம் நிறைய எதிர்பார்க்கக் கூடாது, படிப்பவர்கள் எல்லாருமே இளங்கன்றுகள் என்பது தெரிந்திருந்தாலும், ஐஐடி ஐஐஎம் படிப்பவர்கள் மெத்த புத்திசாலிகள், aggressive ambitous ரகம் என்று ஒரு காலத்தில் நினைத்திருந்தேன். இந்தப் பயணம் அதை அடியோடு அழித்துவிட்டது. ஐஐம் ஆமதாபாத் பெண் மாணவர் ஒருவர் கூசாமல் தனக்கு 'ambition' எதுவுமே இல்லை என்றார். shock of my trip!

நிறைய பெண்கள் ஐஐடி ஐஐஎம்மில் முதுகலை படிப்பது உண்மையிலேயே நிறைவாக இருந்தது. ஆபரேஷன்ஸ் ரிசர்ச், ஸ்டஸ்டிகல் மாடலிங், ரிக்ரஷன், கன்ஸ்யூமர் பிகேவியர் என்று அவர்களில் சிலருடன் விவாதித்தது வாடிக்கிடந்த என் மூளைக்கு நல்ல உரமானது. என்னுடன் வந்திருந்த பு கம்பெனி நண்பர்கள் அசந்து போனார்கள். இன்டர்வ்யூவுக்கு வந்திருந்த பெண்கள் சிலரின் சிந்தனைத் தீவிரம் எங்களைக் கட்டிப் போட்டுவிட்டது. இதற்கு முன் லேசாகக் கேள்விப்பட்டிருந்த தில்லி லேடி ஸ்ரீராம் காலேஜ் மேல் தனி மதிப்பு ஏற்பட்டு விட்டது. எல்லாருமே இப்படி இருந்திருந்தால் எத்தனை சிறப்பாக இருக்கும்!
***

இன்டர்வ்யூ முடிந்ததும் இதற்கு ஏற்பாடு செய்த placement office புரபசர் மற்றும் மாணவ தொடர்பாளர்களோடு பேசினோம். கான்பூரில் தண்ணியடிக்கக் கூட வழியில்லை. லக்னௌ க்ளப் ஒன்று சற்று வித்தியாசமாக இருந்தது. சில மூத்த புரபசர்கள் மனம் விட்டுப் பேசினார்கள்.

"மாணவர்களிடையே தர வேறுபாடு காணப்படுவது இயல்பு என்றாலும் உங்கள் மாணவர்களிடையே இத்தனை பெரிய இடைவெளி, i mean chasm, காணப்படுகிறதே? ஒரு சிலர் தாம் தூம் என்று அதிரடியாக இருக்கிறார்கள். பெரும்பான்மையினருடன் பேசுவதே கடினமாக இருக்கிறதே? எல்லாரும் ஒரே மாதிரி தேர்வு எழுதித்தானே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்? ஐஐடி ஐஐஎம் இடம் கிடைப்பது எத்தனை அரிது என்று நிறையக் கேள்விப்பட்டு இங்கே வந்தால் மாணவர்களின் attitude, aptitude மற்றும் knowledge baseல் இத்தனை விரிசல்களா? இத்தனை வேறுபாடா? ஏன்?" என்று கொத்தாக வைத்தேன் என் கேள்விகளை.

முறுமுறு பகோடா, பருப்பு (மிக்ஸர் மாதிரி இருக்கிறது, ஆனால் எல்லாமே பருப்பு - பட்டாணியோ வேர்கடலையோ அல்லாமல் மென்மையான பொட்டுக்கடலை போல ஒரு பருப்பு.. ஹ்ம்ம்ம்.. கீதா சாம்பசிவமே அறிவார்), காலி ப்ளவர் ப்ரை என்று சுவையான திண்டிகளுடன் உரையாடினோம். இந்தியாவில் நல்ல சிங்கில் மால்ட் ஸ்காச் தாஜ் ஹோட்டல்களில் மட்டுமே கிடைப்பது ஏனென்று புரியவில்லை. இவர்கள் எல்லாம் வாட்கா அருந்துகையில் நான் வாட்டர் அருந்தினேன். (மனசே கேக்கலை தெரியுமோ?)

அப்படி இப்படி பேசிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு புரபசர் "you know what? எல்லாம் இந்த இட ஒதுக்கீட்டினால வந்த பிரச்சினை. there is no proper merit.." என்றார்.

அதற்குப் பிறகு மதிவெ போல் கருத்துக்கள்.

"மாணவர்கள் அத்தனை பேரும் ஒரே இடத்திலிருந்து வருவதில்லையே? இட ஒதுக்கீடு காரணமாக நிறைய பேருக்கு ஐஐடி ஐஐஎம்மில் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர்கள் மற்ற மாணவர்களை விட சற்று பின் தங்கியே இருக்கிறார்கள். இவர்களுக்காக 'முன்னேற்பாடு' வகுப்புகள் நடத்தினாலும் இரண்டு/நான்கு வருடக் குறுகிய இடைவெளியில் இவர்களால் மற்ற மாணவர்களுக்கு இணையாக உயர முடிவதில்லை. ஆசிரியர்களும் இவர்களை ஒரு அளவுக்கு மேல் கை கொடுக்க இயலாமல் விட்டு விடுகிறார்கள். இவர்கள் குறைந்த GPAயுடன் தேறி ஐஐடி ஐஐஎம் லேபிலை வைத்துக் கொண்டு ஏதோ வேலைக்குச் சேர்ந்து பிழைத்துக் கொள்கிறார்கள். அல்லது தகுந்த வேலை கிடைக்காமல் ஏதோ பிழைக்கிறார்கள்.."

"ஆசிரியர்கள் நாங்கள் என்ன செய்ய முடியும்? இப்படி அரசாங்கமே எங்கள் கல்வித் தரத்தை கலப்படம் செய்யும் பொழுது நாங்கள் ஒத்து ஊத வேண்டியது தான்.."

"இட ஒதுக்கீடு இல்லையென்றால் சற்று பின் தங்கியவர்களுக்கு ஐஐடி ஐஐஎம் வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விடும்.. ஆனால் அதை செயல்படுத்திய விதம் சரியில்லை.. மற்றவர்களுக்குக் கிடைக்கும் காலத்தை விட இட ஒதுக்கீட்டில் சேர்பவர்களுக்கு ஒரு வருடம் கூட்டிக் கொடுக்கலாம்.."

"என்ன செய்தாலும் உருப்படாது... இப்ப பாருங்க.. இட ஒதுக்கீட்டுல படிச்சுட்டு வந்தவங்க எல்லாம் லெக்சரராயிட்டு வராங்க.. அவங்க என்ன சொல்லிக் கொடுக்கப் போறாங்க.. என் டிபார்ட்மென்ட் பேகல்டி ஒருத்தர் நீங்க சொல்றாப்புல பேசவே பயப்படுறாரு.. அவரோட பசங்க எப்படி இருப்பாங்க பாத்துக்குங்க.."

"நீங்க சொல்றாப்புல நிறைய ஐஐடிக்கள் திறப்பது போலி எஞ்சினியரிங் கல்லூரிகளை அடையாளம் காட்டும்.. ஆனா ஓரளவுக்குத் தான்.. ஐஐடி படிப்பே போலியாகும் அபாயம் இருக்குன்றதை நிறைய பேர் புரிஞ்சுக்க மாட்றாங்க.. அரசாங்கத்துக்கு நிச்சயம் புரியலே.."

"இட ஒதுக்கீட்டுல சேர்ந்தவங்களை கம்பெனிக்காரங்க கூட அதிகம் எடுக்க மாட்றாங்க.. i tell you.. இந்த I.T மட்டும் இந்தியாவுக்கு வரலின்னா இட ஒதுக்கீட்டுல வந்த மாணவர்கள் நிலமை ரொம்ப மோசமாகியிருக்கும். ஐ.டி கம்பெனிக்காரங்க மந்தை மந்தையா ஆளெடுக்கறாங்களா.. நாங்களும் மந்தை மந்தையா அட்மிஷன் கொடுத்து ஒப்பேத்துறோம்.. இதான் சார் உண்மைல நடக்குது.. தரம் வேணும்னா நீங்க நிட்டி போய் தேடிப்பாருங்க.. அசந்துருவீங்க.."

"திறமை இல்லின்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு... times have changed.. இப்ப கல்வித்தரம் பத்தி யாரும் கவனிக்கறதில்லே.. எங்களையே நாங்க மெஷர் பண்ணிக்குறதில்லே.. எங்க மெட்ரிக் எல்லாம் இப்ப ப்லேஸ்மென்ட். ஐஐடில ஒரு மாணவருக்கு போன ப்லேஸ்மென்ட் சீசன்ல ஒரு கோடி ரூபாய்க்கு ஆபர் கிடைச்சிருக்கு.. அதைப் பெரிசு படுத்தினோமே தவிர, எண்பதாயிரம் ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்த நூத்துக் கணக்கானவங்களை யார் விளம்பரப் படுத்துறாங்க?"

"இப்ப ஐஐஎம் எடுத்தீங்கன்னா.. அது ஒரு கல்வி நிறுவனமாவா இயங்குது? it is a placement casino. அதனால படிக்க வர மாணவருங்களும் ப்லேஸ்மென்டையே குறியா வச்சு இறங்குறாங்க. day zeroல எப்படியாவது சேர்ந்துடனும்னு திறமையுள்ள டாப் ரேங்கர்ஸ் நினைக்கிறாங்க.. day fourல ஒரு வேலை எப்படியும் கிடைச்சுரும் ஐஐஎம் லேபல் வச்சுனு கீழ்த்தட்டு மாணவர்கள் நினைக்கிறாங்க. ஆக மொத்தம் 70-85% ப்லேஸ்மென்ட் முடிச்சுட்டா போதும்னு ஐஐஎம் நினைக்குது.. that's it.. education has been relegated"

"ரிக்ரஷன் டெக்னிக் எப்படி பிசினஸ்ல பயன்படுத்துறதுனு இன்டர்வ்யூல கேட்டீங்களா.. ஹ..ஹ..ஹா.. இதெல்லாம் சிலபஸ்லயே கிடையாது சார்.. ஒரு ஆசிரியரா நான் சொல்லித் தரணும்னு நினைச்சா கூட ஒண்ணு எனக்குத் தோணனும், ரெண்டு என் டிபார்ட்மென்ட் அனுமதி வாங்கணும், அதுக்கு மேலே ஓவரால் கரிகுலம் டெலிவரில ஒத்து வரணும். இல்லின்னா சான்ஸில்லே. பசங்களும் கேட்கலனு வைங்க.. then what is the use?"

"அதுக்காக எல்லா ஆசிரியர் மாணவர்களும் அப்படியில்லே.. சில பேர் have crossed the fence.. என் வகுப்புல ஒரு பெண்.. தப்பா நினைக்காதீங்க.. she is brilliant.. ஆனா பாத்திங்கன்னா she is from merit quota.. இது ஒரு பெரிய விரிசல் சார்.. நான் அந்த பெண்ணின் திறனை டிவலப் செய்ய நினைச்சாலும் முடியாது.. காரணம் என் வகுப்புல இருக்குற மத்த அறுபது பர்சென்ட் ரிசர்வேஷன் க்ரூப்பையும் மனசுல வச்சு பாடம் நடத்தணும்.."

"IIT IIM education has become a LCM proposition.."

"முன்னேற்றம் என்பதே ரெலெடிவ் கான்செப்ட் தானே சார்? முன்னேறணும். முன்னேறும். ஆனா அதுக்குள்ள நாங்க ரிடையராயிடுவோம். இப்ப பாருங்க.. ஆட்சிக்கு வரப்போறவங்க ஒவ்வொரு மாநிலத்துலயும் ஒரு ஐஐடி ஐஐஎம் தொடங்கப் போறாங்களாம்.. where is the push? எண்ணிக்கையிலா தரத்திலா?"

பதினொரு மணிக்குக் கடையடைத்த பின் மைசூர்கார புரபசர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புகுந்தோம். இரவு வெகு நேரம் வரை பேசினோம். பேசிக் களைத்திருந்த எங்கள் எல்லாருக்கும் அதிகாலை மூன்று மணிக்கு கெட்டித்தயிர், வெள்ளரிக்காய், மோர் மிளகாய் கலந்த தயிர்சாதமும் சுடச்சுட வெண்டைக்காய் சாம்பாரும் கொடுத்தார். சிறிது வயிற்றுக்கும் ஈந்த நல்ல மனிதரை வாழ்த்திக் கலைந்தோம்.

ஐஐடி ஐஐம் பற்றி என் மனதிலிருந்த ஒரு மதிப்பு சறுக்கியிருக்கிறது. இட ஒதுக்கீடு என்ற சாதனத்தை நாம் புரிந்து கொள்ளவில்லையா? அல்லது உதட்டளவில் வரவேற்று மனதளவில் ஒதுங்குகிறோமா? ஒரு வேளை மாணவர்களின் அக்கறை.. படிப்பில் இல்லையா?

99 கருத்துகள்:

  1. நீங்க பயணத்தில் இருப்பதால் பதிவு ஏதும் வரலைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா.... சோம்பல்....? நம்பமுடியலை:-))))

    இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுப்பது, நேர்காணல் எல்லாம் எப்படின்னு சொல்லித் தலையில் அடிச்சுக்குவார் கோபால்.
    அவுங்க ஃபேக்டரிக்கு (ஹிமாச்சல் ப்ரதேஷ்) ஆட்கள் எடுப்பதில் உள்ள சிக்கல்களையும், இண்டர்வ்யூவுக்கு வரும் மக்கள்ஸின் ஆட்டிட்யூட் பேச்சு எதிர்பார்ப்பு எல்லாம் நிறையச் சொல்வார். ரெண்டரை வருசம் நடந்த சமாச்சாரம் இது. தினம் பதிவெழுதலாம். ஆனால் நம்ம சமாச்சாரம் இல்லைன்னு கேட்பதோடு விட்டுருவேன்.

    முதலில் எக்ஸ்பெக்டட் ஸாலரி என்னன்னதும் அவர்கள் தன் தகுதிக்குண்டானதைவிட அஞ்சு மடங்கு அதிகம் கேட்பார்கள். காரணம்? இது வெளிநாட்டுக் கம்பெனிதானே. கொடுத்தால் என்ன?

    போகட்டும். ராம்ஜென்மபூமி எப்படி இருக்கு?

    துளசிதளத்தில் இப்போ அயோத்யாதான் ஒடிக்கிட்டு இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிச்சேன்..படிக்கிறேன். இதை எழுதும் போது உங்க ப்லாக் நினைவுக்கு வந்தது.

      இந்தியா எத்தனையோ முன்னேறியிருந்தாலும் சில அடிப்படை மனித இயல்புகள் அப்படியே தான் இருக்கின்றன என்பது முரணான ஆச்சரியம்.

      நீக்கு
  2. உங்கள் பதிவின் மூலம் இந்தியாவின் கல்வி தரம் பற்றி அறிய முடிந்தது. திறமையானவர்களும் மற்றவர்களோடு ஆட்டு மந்தை கூட்டத்தில் சேர்ந்து சோர்ந்து போகிறார்கள் என்பது வருந்தக் கூடியது அதனால்தான் திறமையானவர்கள் சான்ஸ் கிடைக்கும் போது மேலைநாட்டுக்கு பறந்து சொல்லுகிறார்கள்

    இப்படி பொதுவான விஷயங்களை படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் அதை உங்கள் எழுத்தில் படிக்கும் போது அருமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
  3. இந்த இடைவெளி என்னையும் பாதித்திருக்கிறது. நண்பர் போகன் ஒருமுறை சொன்னது போல், எழுத்து (அல்லது அத்தகைய வெளிப்பாடு) வாழ்வின் சோர்வைப் போக்க வல்லது. குறிப்பாக, என் எழுத்து என் சோர்வைப் போக்கி படிப்பவர்களை சோர்ந்து போகச் செய்ய வல்லது. அதனால் தொடர்ந்து எழுத முயல்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இதற்காக்வாவது எழுதுங்கள் துரை,. வித்தியாசமான எழுத்தை வரவேற்றுத்தானெ நமக்கு ஒரு சுஜாதா கிடைத்தார்.. இந்தியாவில் தராதரம் இண்டிஸ்க்ரிமினேஷன் இருக்கும் வரையில் க்ரீம் ஆஃப் தெ லாட் கிடைப்பது சிரமம். ஒன்று அவர்களே அங்கே வந்துவிடுவார்கள். சிலபேர் அங்கே படித்துவிட்டு மனம் மாறி இந்தியாவுக்கு சென்று நிலை கொண்டாகிவிட்டது. நேற்று நான் பார்த்த டாக்டரின் அண்ணா,தன் பெற்றோரைக் கவனித்துக் கொள்ள குடும்பத்தோடு இந்தியா போய்விட்டார்..

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் சொல்வது விளங்கவில்லை.

    ஐ ஐ டி யில் இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் சரியாக படிக்க வில்லை என்றால் எப்படி தேர்ச்சி அடைகின்றார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்ச்சி அடைவதில் குறையில்லை சக்தி. 'தேர்ச்சி' என்றால் என்னவென்பதே கேள்விக்குறி.

      இட ஒதுக்கீடு என்றாலும் படிக்காமல் யாரும் ஐஐடி/எம் சேரவோ தேரவோ இயலாது. ஆனால் சேர்ந்தவர்கள்/தேர்ந்தவர்கள் குழுவில் மெரிட்-இட ஒதுக்கீடு மாணவர்களின் இடையே இருக்கும் வேறுபாடு மிகப் பரந்ததாக இருக்கிறது என்பதே என் கருத்து. இதற்கு மாணவர்கள் மட்டுமல்ல ஐஐடி/எம் இயக்கங்களும் காரணம் என்பது என் கருத்து. இதை இப்படியே வளரவிட்டால் நாளடைவில் இந்த கல்வி இயக்கங்களின் சிறப்பு வெகுவாகக் குறைந்து விடுவதோடு நிற்காமல், வேலை/சம்பள அளவுகளிலும் பெரும் பேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக நினைக்கிறேன்.

      மாணவருக்கு மாணவர் திறமையும் புலமையும் வேறுபடும் என்றாலும் இந்த அளவு அகண்ட விரிசல் இருப்பதை இப்போது தான் காண்கிறேன். இதற்கு முன்னால் எனக்கு இத்தகைய பார்வை கிடைத்ததில்லை.

      நீக்கு
    2. ஐ ஐ டி யில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் எடுத்தாலே தகுதி பெற்றதாகத்தானே அர்த்தம்? மதிப்பெண் தவிற வேறு தேர்வு அல்லது அளவுகோல் வைக்கவேன்டும் என்று சொல்லுகின்றீர்களா?

      நீக்கு
    3. தேர்வு என்பதை நீங்களும் நானும் வெவ்வெறு கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் சக்தி.
      ஒரு மைல்கல்லைக் கடக்கும் கண்ணோட்டத்தில் நீங்கள் பார்ப்பதாகத் தோன்றுகிறது. குறைந்த அளவு திறன் என்ற கண்ணோட்டத்தில் நான் பார்க்கிறேன். இரண்டுக்கும் தொடர்பு உண்டா? தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரு கண்ணோட்டங்களும் இயல்பே. சரியா தவறா என்ற சர்ச்சைக்கே இடமில்லாமல் இரு கண்ணோட்டங்களும் இயல்பே.

      நான் சொல்வது புரிகிறதா? புரிந்தால் என் பதிவின் மையக்கருத்து அதுவே என்று சொல்லிக்கொள்ள அனுமதியுங்கள். புரியாவிட்டால் என் தவறுதான். ஒன்றும் பெரிய விஷயமில்லை.

      நீக்கு
  5. ஐஐடி ஐஐம் பற்றி பலர் மனதிலிருந்த ஒரு மதிப்பு சறுக்கியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. எண்ணிக்கையிலா...? தரத்திலா...? எண்ணிக்கையே தான்... பண எண்ணிக்கை...!

    அடுத்த முறை வரும் போது சந்திக்கிறோம் - நேரில்...

    பதிலளிநீக்கு
  7. கல்வியிலும் அரசியல் கலந்து பல வருடங்கள் ஆகிவிட்டது துரை...... தரம் பற்றிய சிந்தனை இவர்களுக்கு இல்லை.

    பதிலளிநீக்கு
  8. IIT IIM கற்காதவர்களை சேர்த்துக் கொள்வதாய் உத்தேசமில்லையா? எங்களைப் போல் அரசுப்பள்ளி கல்லூரிக்கெல்லாம் கடைக்கண் காட்டுவோர் யாருமில்லையா :-)

    மும்பை கான்பூர் வித்தியாசம் கூறினீர்களே, இங்கே சென்னை கோயம்புத்தூருக்கே அந்த வித்தியாசம் உண்டு அப்படியிருக்க எங்கோ ஒரு கோடியில் இருக்கும் ஆழ்வார்குறிச்சியை நினைத்துப் பாருங்கள், கல்வியின் தரம் மட்டுமே ஒருவனை செதுக்குவதில்லை சூழலும் தான்...

    இருந்தும் IIT IIM கூட இப்படித்தான் இருக்கிறது என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று..

    சீக்கிரம் ராம ஜென்ம பூமியை பற்றி எழுதுங்கள்

    அப்புறம் கண் விழுங்கி நீலனைக் குறிப்பிட மறந்துவிட்டீர்கள்

    இனி கூகிளில் எழுதுவதாய் உத்தேசமில்லை என்றிருக்கிறீர்கள்..

    ஆமா புத்தக வெளியீட்டிற்கு அழைப்பீர்கள் தானே :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐஐடி/எம் என்பது ஒரு சல்லடை சீனு. கீழ்த்தட்டு வர்ணனைக்கு மன்னிக்கவும். படிக்க விரும்பும் அத்தனை மாணவர்களையும் மதிக்கிறேன். ஆனால் லட்சக்கணக்கான திறமைசாலிகளில் நூறு பேரைத் தேர்ந்தெடுப்பது சிரமம். பத்து பேரைத் தேர்ந்தெடுப்பது கடினம். அதற்காகத் தான் இத்தகைய சல்லடைகளை நாடுகிறோம். ஒதுக்கீடோ இல்லையோ எப்படியோ இந்த சல்லடைக்குள் தங்கிய சில பேரை சல்லடையின் தரத்தை நம்பி நாட வேண்டியிருக்கிறது. சல்லடை சரியா இல்லையா என்ற கேள்விக்கு இடமில்லை. சக்திக்கான என் முன் வந்த பதில்களையும், பின்வரும் சக்தியின் பின்னூட்டத்துக்கான பதிலையும் படியுங்களேன்?

      கூகிலில் நேராக எழுதுவதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன். அழகியில் தனியாக எழுதி வைத்துப் பிறகு கூகிலில் சேர்க்கப் போகிறேன் :-)

      நீக்கு
  9. பெத்தா புரம் மலரை திரும்ப வரையுங்கள் ....
    இந்த முறை இன்னம் சிறப்பாக வரும்..
    நன்றி.
    வினோத்

    பதிலளிநீக்கு
  10. Disparities and discriminations are rampant in our society. இதன் அடிப்படைக் காரணங்கள் என்னவென்று நான் உங்களுக்குச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. மேல்தட்டிலிருக்கும் முரண்களுக்குக் காரணம் இட ஒதுக்கீடு என்று சுலபமாக சொல்லிப் போகலாம் அங்கு வந்து பயில்பவர்கள் ஒரு handicap race -ல் கலந்து வந்தவர்கள் என்றும் சொல்லத் தேவை இல்லை. படிப்பும் கல்வியும் ஒரு சாராருக்கே என்று விதிக்கப்பட்ட பூமியில் விளைந்த செடிகள் அவர்கள். போஷாக்கும் சத்தும் தேவை. ஆனால் மதிப்பீட்டு எண்களே எல்லாம் எனும் போட்டி உலகில் அவர்களும் மதிப்பெண்கள் பெற்று வருகிறார்கள். அதனால் முழுமையான ஒரு பெர்சொன்னெல்டெவெலொப்மெண்ட் பெறுவதில் சுணக்கம் ஏற்படுகிறது உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்று தெரிந்திருக்கும் நீங்கள் ஐஐஎம், ஐஐடி-க்களை ஏன் நாட வேண்டும் இப்போதெல்லாம் கல்விக்கும் வேலைக்கும் பெரும்பாலான இடங்களில் சம்பந்தம் இல்லை. சூட்டிகையான சிலரைத் தேர்வு செய்து உங்கள் பணியில் சிறிது பயிற்சி அளிக்கலாம் என்பது என் கருத்து. ஆமாம் ஏன் இந்தியாவில் வந்து ஆட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் மேல் நாட்டவரை விட குறைவான சம்பளம் கொடுத்தால் போதும் என்னும் எண்ணமா.
    நிறைய எழுதுங்கள். உங்கள் கலர் சட்டை வலை முகப்பு மட்டுமே காண்பிக்கிறது. பதிவுகள் திறப்பதில்லை. கவனித்தீர்களா. ஒரு வேளை எனக்கு மட்டுமா. ?இந்தியா வரும்போது எங்களூரில் என் வீட்டில் கால் பதிக்க மறக்க வேண்டாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரும்பத் திரும்பப் படித்தேன் ஜிஎம்பி சார். நிறைய கிளறியிருகிறீர்கள் சிறிய கரண்டியில். பின்னொரு சமயம் நீங்களே இதை விரிவாக எழுத வேண்டும்.

      எப்படி இந்த இடத்துக்கு வந்தார்கள் என்ற அக்கறையில்லை. வந்தவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு அடிப்படை தரம், அடையாளம் வேண்டும் என்று சொல்ல வந்தேன்.

      இங்கே ஒரு பிரபல நீச்சல் பள்ளி இருக்கிறது. பயிற்சியாளர்கள் அத்தனை பேரும் அமெரிக்க சர்வதேச ஒலிம்பிக் தரத்தினர். ஏதோ ஒரு கம்பெடிடிவ் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நீச்சல் பழக்க இந்தக் குறிப்பிட்ட பள்ளிக்கு அழைத்து வருவார்கள். அதில் ஒரு coach சற்று ஆழமான இடத்திலேயே நிற்பார். பிள்ளைகளை நீரில் குதிக்கச் சொல்வார். பிள்ளைகள் தண்ணீரில் இறங்கவே தயங்குவார்கள். பெற்றோர்களே தயங்குவார்கள். அந்த coach இதை அடிக்கடி சொல்வார்: "எப்படி தண்ணீரில் இறங்குவீர்களோ எனக்கு அக்கறையில்லை. ஆனால் இறங்கிய பின்னர் உங்கள் பாதுகாப்புக்கும் பயிற்சிக்கும் நான் உத்தரவாதம். நீரில் இறங்குவது உங்கள் திறமை ஆர்வம் முனைப்பு. நீரில் இறங்காதவர்களை நான் கவனிக்கப் போவதில்லை, அது என் பொறுப்பல்ல".

      சில பெற்றோர்கள் அவரை சற்று ஆழம் குறைந்த இடத்துக்கு அழைத்துப் போகச் சொல்வார்கள். அவர் கண்டு கொள்ளவே மாட்டர். நிறைய coachகள் ஆழம் குறைந்த (ஒரு அடி!) இடத்தில் நின்றுகொண்டு பயிற்சி அளிப்பார்கள். அங்கே போகும் பிள்ளைகள்/பெற்றோர்களும் உண்டு (அதிகம்),

      ஏதோ ஒரு உந்துதலில் உதவியில் நீரில் இறங்கியவர்கள் அத்தனை பேரையும் இந்த coach அற்புதமாகப் பழக்கி அனுப்புவார். நீரில் இறங்கும் வரை தான்.. இறங்கியதும் அவருக்கு எந்த பேதமும் பார்க்கத் தெரியாது. சரியாகப் பழகாதவர்களைப் பின்னி எடுத்து விடுவார் (நல்ல முறையில்). இவரிடம் பழகியவர்களில் குறைந்தபட்ச தரம் என்பது ஒரு மைல் நீச்சல். அதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

      ஏனோ இவர் நினைவு வந்தது.

      நீக்கு
  11. What Mr.Appadurai????
    You have come all the way upto Ahmedabad but did not tell me at all and not even a mobile call from Ahmedabad. Baroda is just a 120 KMs away only. These lines I am typing immediately after reading your visit to Ahmedabad IIM.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹி.. நான் இதை எதிர்பார்த்தேன் மோகன். மன்னிக்கணும், i don't even have a good excuse, forget reason. ஆமதாபாத் மட்டுமில்லை அலகாபாதும் போனேன் (அது வேறே மாநிலமோ?). நிச்சயம் போன் செய்திருக்கலாம். என் தப்பு.

      நீக்கு
    2. You expected my anger. Excused but only for this time. Allahabad is in Uttar Pradesh.

      நீக்கு
  12. Your entire post about the education systems in India that on top level. I feel this is only a tip of an iceberg. Yeah there is a vast difference between Mumbai and Kanpur and this difference you can find also in Chennai. Just imagine the following situation:-
    One student after scoring 66% in 11th standard, joined a leading college in Chennai. He passed out 11th from a school in a Taluka and immediately went to a Metro City. He did not understand either the atmosphere nor the language (everyone was talking in English!!!) His lack of exposure, language coupled with inferiority complex and immaturity, prevented him from mingling with them. It took one year for him to adjust with the situation. He even requested the lecturer to explain in tamil language after teaching in English. Same is the situation for the students of IIMs and IITs. Here he means me and this happened in the year 1975.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தச் சிக்கல் இன்றைக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது.

      இன்டர்வ்யூவில் பல மாணவர்கள் பேசவே தயங்கினார்கள். இதற்கான வேர் காரணங்கள் எனக்குப் புரியவே புரியாது.

      நீக்கு
  13. //இன்னொரு சமயம் இங்கேயோ கலர்சட்டையிலோ விவரம் எழுதுகிறேன்//
    அதென்ன கலர் சட்டை ? இன்னொரு வலை பிளாகா ? லிங்க கொடுங்கள்..

    பதிலளிநீக்கு
  14. இதனால் யாருக்கு நஷ்டம் ஆகிவிட்டது? மெரிட்டில் செலக்ட் ஆன மாணவர்கள் பாதிக்கபடுகின்றனரா? இல்லையே அப்புறம் என்ன?

    அப்புறம், இன்டர்வியூ செய்யும் கம்பெனிகள் மெரிட் மாணவரா இல்லை ஒதுக்கீட்டில் வந்த மாணவரா என்று பார்ப்பர்களா இல்லை இன்டர்வியூ எப்படி செய்தார் என்று பார்ப்பார்களா? இன்டர்வியூ நன்றாக செய்தாலும் இட ஒதுக்கீட்டில் வந்தவரென்று மறுத்தாலோ இல்லை இன்டர்வியூ நன்றாக செய்யாத போதிலும் மெரிட்டில் வந்தவர் என்று கண்ணை மூடிக்கொன்டு வேலைக்கு அழைத்தாலோ அது கம்பெனியே அல்ல.

    மெரிட்டில் செலக்ட் ஆன மாணவர்கள் பாதிக்கபடவே இல்லாத பட்சத்தில் இடஒதுகீட்டினால் என்ன பிரச்சினை?. ஐ ஐ டி யின் பெயர் கெடுகின்றதே அதுதான் பிரச்சினை என்றா சொல்லுகின்றீர்கள்?

    ஐ ஐ டி யின் பெயர் போனால் என்ன? இதனால் பல பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயன் அடைகின்றனரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே ஆழமான கேள்விகள். கேள்விகளுக்கு நீங்களே பதில் சொல்லிக் கொள்ள வேண்டும் - வட்ட விவாதமாகி விடும் அபாயம் இருப்பதால் :-)

      இன்டர்வ்யூ நன்றாகச் செய்யாதவர்களை - அவர்கள் எப்படி வந்திருந்தாலும் - யாரும் வேலைக்கு எடுக்கப் போவதில்லை. no point in interview then, is there?

      இன்டர்வ்யூ செய்யும் பொழுது இன்னார் இப்படி வந்தவர் என்ற விவரம் தெரியவே தெரியாது என்றே நம்புகிறேன். என் அனுபவம் மிகக் குறைவு - இது தான் முதல். என் முந்தைய அனுபவங்கள் எல்லாமே இந்த இட ஒதுக்கீடு சமாசாரமே இல்லாத இடங்களில் நிகழ்ந்ததால் எனக்கு இதை எப்படி சீரணிப்பது என்று தெரியவில்லை. இட ஒதுக்கீட்டின் பாதிப்பு என்பதே இன்டர்வ்யூ எல்லாம் முடிந்து ஒரு சமூகப் பிரச்சினை பற்றிய intellectual விவாதமாக நடந்தது. மாணவர்களை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படிச் செய்யவும் இல்லை.

      இந்தப் பதிவின் இலக்கு இட ஒதுக்கீட்டின் குறை/நிறை என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அப்படியெனில், உங்கள் கேள்விகள் இந்த அனுபவத்தில் ஏற்பட்ட ஒரு அடிப்படை ஐயத்தை நிலைப்படுத்துகிறது. இந்திய மாணவர்கள் என்று stereotype செய்ய விரும்பவில்லை, எனினும், அத்தனை கல்லூரிகளிலும் இந்த சிக்கல் காணப்பட்டது.

      ஒரு பிரச்சினையை முன் வைத்தால், அந்த பிரச்சினையின் எல்லைகளுக்குள்ளே தீர்வைக் காண வேண்டும் என்ற போக்கு காணப்படவில்லை. உடனே பிரச்சினையின் எல்லைகளைத் தாவி தொடர்புள்ள தொடர்பற்ற கிளைப்பிரச்சினைகளை உருவாக்கி அதற்கான விடை காண முயன்றது ஆச்சரியமாக இருந்தது.

      உதாரணத்துக்கு ஒரு சமூகச் சிக்கலின் ஆதாரங்களாய் A, B, X என்ற variables கொடுத்தோம். A மற்றும் B பல வகை மதிப்புகளைப் பெறலாம் என்ற hypothesis மற்றும் sampleகளை அனுமதித்து, 'A+B=X' என்ற மாடல் நிலையல்ல என்று நிரூபிக்கச் சொன்னோம். இதில் 2+2=4 என்பதும் அடக்கம்.

      ஒரு சில மாணவர்களே எல்லைக்குள் செயல்பட்டார்கள். மற்றவர்கள் எல்லாருமே 'A+B<>X', 'A+B>X', A+B"<"X என்று நிரூபிக்கக் கிளம்பிவிட்டார்கள். ஒருவர் 'X!' என்று நான் மறந்தே போயிருந்த கணிதங்களை நினைவு படுத்தினார். இங்கே 'A+B<>X' என்பதும் 'A+B>X' என்பதும் அடிப்படை உண்மையில் சரிதான் என்றாலும் வெவ்வேறு தீர்வு இல்லையா? 'A+B<>X' என்று நிரூபிப்பதால் 'A+B=X' என்பது நிலையல்ல என்று நிரூபிப்பதாகுமா?

      நான் சொல்ல வந்ததும் ஐஐடி/எம் என்ற எல்லைக்குட்பட்ட திறன் விரிசல் கணிதம்.

      மெரிட்டில் வந்தவர் என்று கண்ணை மூடிக்கொண்டு அழைப்பதில் ஒரு தவறுமில்லை சக்தி. இது தேவையைப் பொருத்தது. வேலை கொடுப்பதும் பெறுவதும் is not a social fee. சோசலிச வாதத்துக்கு இடமே இல்லை (காஸ்யபன் மன்னிக்கவும்). ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் அதை அடையச் செய்ய உதவும் மிக நேர்த்தியான கருவிகளைத் தேர்வு செய்வது போலத் தான் வேலையெடுப்பும். இதில் பாரபட்சம் பார்த்தால் அது வேலைக்கான தேவைகளை ஒட்டிப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே என் கருத்து.

      சக்தி நீங்கள் கோல்கேட் என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாங்குவீர்களா, கோபால் பல்பொடி என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாங்குவீர்களா?

      ability ஏற்றத் தாழ்வுக்கான காரணங்கள் வெவ்வேறு. அவற்றை மதிக்க வேண்டும். சீராக்க வேண்டும். ஆனால் இது சமூகப் பார்வை. வேலை எல்லைக்கப்பாற்பட்ட காரணி. அந்த எல்லைக்குள் கால் வைக்கையில் அந்தக் கவனம் இருக்க வேண்டும். நம்மில் பெரும்பாலோர் ஒரு எல்லைக்குள் புகுந்து அடுத்த எல்லைக்கான பிரச்சினைகளை தீர்க்க முயல்கிறோம். ironically.

      நீக்கு
    2. விளக்கமான பதிலுக்கு நன்றி அப்பா துரை அவர்களே.

      ஏனென்றால் கோல்கேட்டை உபயோகிப்பதன் வசதி, கோபால் பல்பொடியை விட நன்றாக இருப்பதால் நான் கோல்கேட் என்றால்தான் வாங்குவேன்.. ஆகையால் தரத்தை மற்றும் வசதியை விரும்புகின்றவர்கள் கோல்கேட்டை வாங்குவதற்க்கு எந்த தடையும் இல்லை.

      கோபால் பல்பொடி நலிந்து விட்டது எனவே கோல்கேட் வாங்குபவர்கள் வருடத்துக்கு 6 முறை கோல்கேட் வாங்காமல் கோபால் பல்பொடி வாங்கவேன்டும் என்று தனி நபரை, நிர்ப்பந்தம் செய்தால் அது தவறு. (கோல்கேட் என்பது மெரிட்டில் வந்தவர்கள், மற்றும் வாங்குபவர்கள் கம்பெனிகள்).. ஆனால் அப்படி ஒரு நிர்ப்பந்தம் தனியார் கம்பனிகளுக்கு இல்லை என்று நம்ப்புகின்றேன்.

      அதேபோல கோல்கேட் ஒன்றே தரமானது அதனால் கோபால் பொல்பொடி தயாரிக்கவே கூடாது என்று நீங்கள் சொல்லுவது முறையே இல்லை.

      எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மெரிட்டில் வந்த மாணவர்கள் நன்றாகத்தான் படிப்பர். அதைத்தான் நீங்களும் ஒத்துக்கொள்ளுகின்றீர்கள். அதே போல் இன்டர் வியூ நன்றாக செய்யும் மெரிட்டில் வந்த மாணவர்களைத்தான் கம்பெனிகளும் (நீங்களும்) வேலைக்கு எடுப்பீர்கள், அப்புறம் என்ன பிரச்சினை இங்கே? யாருக்கும் நட்டம் இல்லையே!.

      நீக்கு
    3. பார்த்தீர்களா சக்தி.. கோல்கேட் என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாங்குவீர்களா, கோபால் பல்பொடி என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாங்குவீர்களா? இது தான் கேள்வி. கோல்கேட் எப்படி இருக்கும் கோபால் பல்பொடி எப்படி இருக்கும் எது நலிந்து விட்டது கோல்கேட் தரமானது கோபால் பல்பொடி தயாரிக்கக் கூடாது என்பதெல்லாம் கேள்வியல்ல. கேள்வியில் எங்கேயும் சொல்லப்படவும் இல்லை. கேள்விக்கு வெளியே வந்து கேள்விக்கான பதிலை சொல்ல முயற்சிக்கிறீர்கள். (its okay - இந்தப் பழக்கம் நம்மிடையே பரவலாக இருக்கிறது :-)

      ஆமாம்.. கோபால் பல்பொடி தயாரிக்கக் கூடாது என்று நான் எங்கே சொன்னேன்? மோடி வாதம் செய்து என்னை மாட்டிவிடப் பார்க்கிறீர்களே? (சே... i tripped on my own trap).

      பதிவிலோ பின்னூட்டத்திலோ இதான் தரம் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற judgmental view இல்லை என்றே நம்புகிறேன். judgment என்பது படிப்பவர் மனதில் உண்டாவது.

      நீக்கு
    4. இன்னொன்று சக்தி. மெரிட்டில் வருபவர்கள் நன்றாக படிப்பார்கள் என்பதை விட, நன்றாகப் படிப்பவர்கள் மெரிட்டில் வருவார்கள் என்பதன் சாத்தியம் அதிகம். ஒரு வேளை அதைத்தான் சொல்ல வருகிறீர்களோ?

      நீக்கு
    5. நீங்கள்தான் கோல்கேட் மற்றும் கோபால் பல்பொடி இவைகளை , மெரீட் ம்ற்றும் இடஒதுகீட்டுக்கு உவமையாக சொன்னீர்கள். கோல்கேட்டும் வேன்டும் கோபால் பல்பொடி இரண்டுமே வேன்டும் நீங்களே ஒத்துக்கொன்டீர்கள்.

      ஆகையால் உங்கள் உவமைப்படி மெரீட் மற்றும் இடஒதுக்கீடு இரண்டுமே வேன்டும்தானே?

      நீக்கு
    6. இட ஒதுக்கீடு தேவையா இல்லையா என்று நான் எங்கேயும் கேட்கவில்லை சக்தி. பதிவை மறுபடி படித்துப் பாருங்களேன்?

      ஐஐடி/எம் என்பது ஒரு தரத்தின் அடையாளம். ஏதோ ஒரு வழியில் அங்கே வந்தடைந்தவர்களை எப்படி வந்தடைந்தார்கள் என்று பாராது - வந்து சேர்ந்ததே ஒரு வெற்றி அங்கிருந்து அனைவருக்கும் ஒரு அடிப்படை அடையாளம் தர ஆசிரியர்கள் கண்டிப்பாக உழைக்க வேண்டும்; அந்த அடிப்படை அடையாளத்தைப் பெற மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். தரத்தில் ஏற்றத் தாழ்வு இத்தனை வெளிப்படையாகத் தெரியும் பொழுது அதற்கான பொறுப்பை யார் ஏற்பது என்பது என் கேள்வி.

      நீக்கு
    7. ஐ ஐ டி கல்வி முறையே தவறாக உள்ளது. அதிக மார்க் எடுத்தால்தான் திறமையுள்ளவர்கள் என முத்திரை குத்துகின்றார்கள். இப்படி அதிக மதிப்பென் எடுத்தவர்கள் வேலையில் திறம் காட்டுவார்கள் என்று உத்திரவாதமாக சொல்ல முடியாது.

      இன்போசிஸ் கம்பெனியில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள்தான் சேரமுடியும் என்று ஒருகாலத்தில் இருந்தது, ஆனால் என்ன நடந்தது? அதன் MD யே பணியாளர்களுக்கு பகிரங்கமாக "ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் தூக்கிவிடுவோம்" என்று எச்சரிக்கை விட்டார். தற்பொழுது இன்போசிஸ் நிலமையே தடுமாற்றமாக இருக்கு.

      மதிப்பெண்ணுக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்தினாலே தரம் தானாக கூடிவிடும்.

      நீக்கு
  15. பள்ளி, கல்லூரி அதற்கு மேம்பட்ட படிப்பெல்லாம் சும்மா. சுத்த சும்மா. மதிப்பெண் சம்பந்தப்பட்ட போட்டி அரங்கம் அது. கல்வி என்பது குதிரைக்கு பட்டை போட்ட சமாச்சாரமும் அல்ல. தனிப்பட்ட ஒருவர் தன் திறமைகளை வளர்த்துக் கொள்வது என்பது வேறொன்றாய் இருக்கிறது, இங்கே.

    இளம் சிறார்களுக்கான கல்வி முறைகளையே எடுத்துக் கொள்ளுங்களேன். மாண்டிச்சேரி, மெக்காலே வித்தியாசம் இருக்கிறது. ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு வித்தியாசம் உண்டு.

    இன்னொன்று. ஒரு துறையில் பெறும் செம்மாந்த அறிவு என்பது எந்த நிறுவனத்திலும் பெறும் கல்வியைத் தாண்டிய ஒன்று. அது நிறுவனக் கல்வியை விஞ்சி ஒரு தனி நபர் தன் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வேள்வி..

    எட்டாவதே படித்த ஜெயகாந்தனின் சாதிப்பை நினைவு கூறுங்கள். ஜெயகாந்தன் மட்டுமில்லை; பள்ளிக் கல்வி அளவிலும் அதற்குக் குறைந்தும் அல்லது பள்ளிக்கே போகாமலும் என்று தமிழில் சாதித்த எத்தனையோ பேரை பட்டியலிட முடியும். அந்தக்காலத்தில் மாணவர்கள் கல்லூரி விழாக்களில் பேச ஜெயகாந்தனை அழைத்தால் கல்லூரி விரிவுரையாளர்கள் அதை விரும்ப மாட்டார்கள். ஏதாவது தடை ஏற்படுத்துவார்கள். அந்த அளவுக்கு அவர்ஷன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் ஜீவி சார். எனக்கென்னவோ நீங்கள் சொல்வதும் சும்மா என்று தோன்றுகிறது.

      (ஜெயகாந்தன் என்ன சாதித்தார் - தவறாக எண்ணாதீர்கள், தெரியாததால் கேட்கிறேன்)

      'Why A graders work for C graders' என்ற புத்தகம் நினைவுக்கு வருகிறது.

      outliersகளை வைத்துக் களத்தைச் சாடுவது முறையா? ஒரு பில் கேட்ஸைக் காரணம் காட்டி நல்ல கல்வி பெறத் தயங்குவோரை ஆதரிப்பது பெரும் அபாயம். இதே பில் கேட்ஸ் அரைகுறையாக வெளிவராதிருந்தால் இன்னும் மேம்பட்டிருப்பாரா? அதற்கான தேவையில்லாமல் போனது கிளைச் சமாசாரம்.

      நல்ல கல்விக்கு ஈடு இல்லை. அதை முறையாகப் பயன்படுத்தவும் சொல்லித்தரும் கல்வி நிலையங்களுக்கு இணை இல்லை.

      நீக்கு
    2. எல்லாவற்றுக்கும் கல்வி தான் காரணம் என்று சொல்லவில்லை. தனி நபர் வேள்வி என்று நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடு தான். ஆனால் அதற்கு ஆதாரமான கல்வியும் இருந்தால் வேள்வி சுலபமாகவும் தனக்கும் பிறருக்கும் சாதகமாகவும் அமையும் என்று நினைக்கிறேன். தனி நபர் வேள்வியின் சிக்கல் அது தனி நபரின் பலனுக்காகவே அமைந்துவிடுவது தான். "நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.. நீயும் கஷ்டப்பட்டு முன்னேறு" என்று சொல்லும் நிறைய குறுகிய மனப்பாங்குள்ளவர்களை நானறிவேன்.

      நீக்கு
    3. மதிப்பென் அதிகம் வாங்குவதுதான் நல்லப்படிப்பு என்று எல்லோரும் தவறாக நினைக்கின்றார்கள். நமது பாடத்திங்களும் தேர்வுத்திட்டங்களும் அப்படித்தான் இருக்கின்றன.

      நல்ல மதிப்பென் எடுப்பது , எடுத்த உடனே பெரிய கம்பனிக்கு வேலைக்கு போவதற்கு மட்டுமே உதவுகிறது.

      மற்றபடி வேலைக்கு சேர்ந்த பிறகு அவர் படித்த படிப்பு அந்த வேலைக்கு உதவுவதே இல்லை. சுத்தமாக மாறுபட்டுத்தான் இருக்கின்றது. அதன் பிறகு அவர் எப்படி வேலையை கற்றுக்கொள்கிறார், தாக்குப்பிடிக்கின்றார், சூழ்நிலையை தழுவிக்கொள்ளுகின்றார் மற்றும் மேலதிகாரிகளின் பொறுப்புகளை குறைக்கின்றார் என்பதைப்பொறுத்தே அவரது வேலைப்பதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

      எங்கள் கம்பெனியில் ஐ ஐ டி மாணவர்கள் சிலர், பி.காம் மாணவருக்குக்கீழே வேலை பார்க்கின்றனர்.

      நீக்கு
    4. பிகாம் படித்தவருக்குக் கீழே பிஎச்டிக்களும் வேலை பார்க்கிறார்கள் (ஹிஹி.. கண்ணாடியில் பார்த்தபடி எழுதுகிறேன்). அதற்காக பிகாம் சிறந்தது ஐஐடி தாழ்ந்தது என்றாகி விடுமா? அல்லது மாற்றிப் போடத்தான் முடியுமா?

      படிப்பு என்பது ஒரு வாய்ப்பு. கிடைத்த வாய்ப்பை (பிகாமோ ஐஐடியோ எதுவானாலும்) மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி நன்றாகப் படிக்க வேண்டும். மதிப்பெண் ஒரு அளவை என்றால் அதை மதித்தாக வேண்டும். மாணவர்கள் பல நிறத்தவர்கள். சொல்லிக் கொடுப்பது என்று வந்துவிட்டால் அத்தனை மாணவர்களையும் ஒரு அடிப்படை அளவைக்காவது ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டும். இதைத் தான் பதிவிலும் பின்னூட்டங்களிலும் சொல்கிறேன். மற்றபடி இது சரி அது தவறு என்று தீர்மானங்களைத் தூவும் தகுதி எனக்கில்லை சக்தி.

      நீக்கு
    5. ஆகவே ஐ ஐ டி என்பது பெரிய அப்பா டக்கர் ஒன்றும் இல்லை மற்றும் மிக நன்றாக படிக்கும் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட போவதும் இல்லை என்று நீங்களே ஒத்துக்கொன்டீர்கள். பிறகு ஏன் ஐ ஐ டி பற்றி இப்படி கவலைப்படுகின்றீர்கள்?,

      நீக்கு
    6. சரி விடுங்க சக்தி.. அப்பா டக்கர்னா என்ன? அதை முதல்ல சொல்லுங்க.

      நீக்கு
    7. இது நீங்கள் சொன்னதுதான்.

      "ஐஐடி ஐஐம் பற்றி என் மனதிலிருந்த ஒரு மதிப்பு சறுக்கியிருக்கிறது."

      நீங்கள் வைத்திருந்த அந்த மதிப்புதான் "அப்பா டக்கர்" என்பது


      இதுவும் நீங்கள் சொன்னதுதான்.

      "இப்படி அரசாங்கமே எங்கள் கல்வித் தரத்தை கலப்படம் செய்யும்"

      இட ஒதுகீட்டைதானே கலப்படம் என்று சொல்லுகின்றீர்கள்?

      நீக்கு
  16. ///இருக்கலாம் ஜீவி சார். எனக்கென்னவோ நீங்கள் சொல்வதும் சும்மா என்று தோன்றுகிறது.

    (ஜெயகாந்தன் என்ன சாதித்தார் - தவறாக எண்ணாதீர்கள், தெரியாததால் கேட்கிறேன்) ///

    சடாரென்று ஒரு விஷயத்தை தலைக்கீழாகப் புரட்டிப் போடும்... புரட்டிப்போடும்?... சாமர்த்தியமோ?.. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிச்சுக்குங்க.. புரட்டிப் போட நினைக்கவில்லை.. என் தொனியில் ஏதாவது ஆணவம் தென்பட்டால் மறுபடி மன்னிச்சுக்குங்க.

      சாதிப்பவர்களுக்கு தேவையானது பொறியும் நோக்கும் முனைப்பும் என்று நம்புகிறேன். அறிவும் படிப்பும் இரண்டாம் பட்சம் என்பதில் எனக்கும் எந்த வித மாற்றுக் கருத்து இல்லை. இவருக்கு முன் எத்தனையோ படித்த வக்கீல்கள் ரயிலிலிருந்து வெளியேற்றப் பட்டிருந்தாலும் இந்த வக்கீலுக்கு மட்டும் உண்டான பொறி, அதன் விளைவாக உருவான நோக்கு, அதைச் செயல்படுத்தத் துணிந்த முனைப்பு இருந்ததால் - நான் இன்றைக்கு சுதந்திரமாக இருக்கிறேன்.

      என் அம்மாவை விட சிறந்த சாதனையாளரை நான் இந்த உலகத்தில் பார்த்ததில்லை. பார்க்கப் போவதுமில்லை. என் அம்மாவை விட நான் அதிகம் படித்து என்ன பலன்?

      நீக்கு
  17. ஆதாரக் கல்வி வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை.

    தொழிலும், சம்பாதிப்பதும் என்பதான கோணத்தில் கல்வியைப் பார்க்கக் கூடாது.. வேறெதற்கு என்பதான கேள்வி அடுத்து வரலாம். அப்படியான கேள்வி எழுந்து விடக்கூடாது என்கிற பதைபதைப்பில் தான் இந்தக் கேள்வியும்.

    //A+B<>X', 'A+B>X', A+B"<"X என்று நிரூபிக்க... //

    உண்மையான கல்வி என்பது இப்படியான நிரூப்பித்தலும் அல்ல.. எந்த வேலைக்கு நீங்கள் நபர்களைத் தேர்ந்தெடுக்க முற்பட்டீர்களோ அந்த வேலையை செயல்படுத்துவதற்கு தேவையான education அறிவாகவும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.

    education அறிவு வேறு.. knowledge வேறு. எல்லாவற்றிற்கும் மேலான பட்டறிவு என்பதும் வேறு. ஒன்றுக்குக் கொன்று பற்றுகோலாகக் கொண்டு திறன் பட மிளிர்வதே வாழ்க்கைக் கல்விக்கான வழியுமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பட்டமான உ. படிப்பும் அறிவும் வேறு வேறு தான். பட்டறிவின் மேன்மையை எளிதில் எழுத முடியாது.

      ////A+B<>X', 'A+B>X', A+B"<"X என்று நிரூபிக்க... //உண்மையான கல்வி என்பது இப்படியான நிரூப்பித்தலும் அல்ல..

      ஆ! புரட்டிப் போட்டுட்டீங்களே..

      நான் குறிப்பிட்டிருக்கும் அ+ஆ=இ என்ற மாடல் உலகத்தில் நிறைய பயன்படுகிறது சார். சாதாரண ஜோடிப் பொருத்தத்திலிருந்து மோடிப் பொருத்தம் வரை. மோடியின் வெற்றிக்கான strategyலும் இந்த model பயன்பட்டதாகக் கேள்விப்படுகிறேன். ஜெயுடனான கூட்டணியைத் தவிர்க்க இந்த மாடலைப் பயன்படுத்தியதாகச் சொல்கிறார்கள் - இதை அவருக்கு உணர்த்திய உரமிகுந்த மெகின்ஸிக்காரர் ஹார்வர்ட் பட்டதாரி சென்னை வாசியாமே?. எல்லாம் கேள்வி.. யாருக்குத் தெரியும்?

      காலம் மாறி வருகிறதே ஜீவி சார். சில வேலைகளுக்கு படிப்பறிவு மிக முக்கியமாகி வருகிறது. top 5% என்பது இந்தக் காலத்தில் ஒரு அவசியமான அளவையாகவே மாறி வருகிறது.

      நீக்கு
  18. ஆழமான விவாதங்கள். தெரிந்து கொள்கிறேன். சக்தி, ஜி எம் பி, ஜீவி ஆகியோரின் பின்னூட்டங்களும், பதிலும் படித்துப் புரிந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. நீச்சல் கோச் நீச்சல் தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் உந்துதலும் அறிய ஆழத்தில் நின்று அழைக்கலாம் இது நீச்சல்கற்றுக் கொள்ளத் துவங்குபவர்களுக்கு வேண்டுமானால் சரியாகலாம் ஓரளவு நீச்சல் தெரிந்தவருக்கு கற்றுக்கொடுக்கும்முறையே வேறாயிருக்கவேண்டும் உங்கள் நினைவும் ஒப்பீடும் ஏனோ இதை நான் எழுதச் செய்தது. கலர்ச் சட்டை பற்றிக்கூறவில்லையே. அப்பாதுரை சார் வலை உலகிலும் மேல்தட்டு கீழ்தட்டு பதிவர்களின் எண்ணங்கள் வேறு வேறு. ஒரு பொருளை எழுதுபவர் யார் என்றுதான் முதலில் பார்க்கிறார்கள். நீங்கள் எழுதினால் அதன் பயன்பாடு வேறு நான் எழுதினால் வேறு. மன்னிக்கவும். சொல்லத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒரு பொருளை எழுதுபவர் யார் என்றுதான் முதலில் பார்க்கிறார்கள்
      மிகச் சரி சார்.

      நீக்கு
  20. உன்மையான படிப்பு என்பது வேலைக்கு சேர்ந்த பிறகுதான்.

    பதிலளிநீக்கு
  21. ///புரட்டிப் போட நினைக்கவில்லை.. என் தொனியில் ஏதாவது ஆணவம் தென்பட்டால்.. //

    நிச்சயம் இல்லை, அப்பாத்துரை சார்! ஒரு ஒருமணி நேரம் இருக்குமா?-- அவவளவே பேசிப் பழகியிருந்தாலும் உங்களை நானும் என்னை நீங்களும் அறியும் உணர்வைப் பெற்றிருக்கிறோம், அல்லவா?...

    தனது எட்டு வயதில் 'ஜனசக்தி' ஏட்டினை ப்ராட்வே தெருக்களில் கூவி விற்றவர் ஜெ.கே.

    இன்று அண்ணாசாலை ஹிக்கிம்பாதம்ஸில் அவருக்காக தனியாக ஒரு ரேக் ஒதுக்கப்பட்டு வரிசை வரிசையாக அடுக்கப்பட்ட அவர் படைப்புகள்!

    மதுரை மீனாட்சி புத்தக நிலையம் அவராலேயே பெருமைபட்டது. அதே மதுரையில் முந்தைய பருவத்தில் குதிரை வண்டி ஓட்டியாகவும் இருந்திருக்கிறார்.

    வாழ்க்கை கை நீட்டி 'வா,வா'என்று அழைத்து கட்டித் தழுவி பள்ளிக் கல்வி கற்காத அவருக்கு சொல்லித் தந்த பாடம் தான் அவரின் வளர்ச்சி. அதனால் தான் அவரைக் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றியது.

    நான் ஜெயகாந்தனின் ஸ்கூலில் படித்தவன். அதனால் தான் குறிப்பாக அவரைக் குறிப்பிட நேர்ந்தது.

    என்னைக் கவர்ந்த இன்னொரு படிக்காத மேதை ஜி.டி.நாயுடு அவர்கள். கோவை துரைசாமி நாயுடு. அவரை உங்களுக்கும் தெரியும்.

    சில தனிநபர்களின் வளர்ச்சி தானே என்று தனித்தனியாய் பார்வை கொண்டால் கற்றுக்கொள்ளலில் முழுமை கொள்ளாமல் போகலாம்.. தொழில் முனைவோருக்கு உள்ள உரமும், உறுதிப்பாடும், தளராத முயற்சியும் படிப்பைத் தாண்டிய பாடங்களே.... இன்றைய வாழ்க்கை நிலைமையோ சாதாரண எளிய வாழ்க்கையை வாழ்ந்து தொலைப்பதற்கே இந்த க்வாலிபிகேஷன்லாம் தேவையாக இருக்கிறது.

    இந்தப் பாடங்களைக் கற்பிக்கத் தான் எந்த பள்ளிக்கூடமும் இல்லை; வாழ்க்கை தான் அதற்கான திறந்த வெளி பல்கலைக் கழகம்.

    நீங்கள் எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட்டைத் தாண்டி எங்கேயோ போய்விட்டோம்.. அதனால் ஜூட்!

    பதிலளிநீக்கு
  22. //ஒரு பொருளை எழுதுபவர் யார் என்றுதான் முதலில் பார்க்கிறார்கள்
    மிகச் சரி சார். //

    Presentation தான் முக்கியம். எப்படி எழுதுகிறார் என்று பார்ப்பதிலிருந்து தான் 'யார்' உருவாகிறார்.

    பதிலளிநீக்கு
  23. பின்னூட்டங்களில் கேட்ட கேள்விகளுக்கு (குறிப்பா சக்தியின் கேள்விகள் ஒவ்வொன்றும் கூரான கத்திகள்) தாங்கள் அளித்த பதில்களில் இருந்து இந்த மேல்தட்டு முரண்கள் இட ஒதுக்கீடினால் வந்த கொடுமை அல்ல என்றுதான் நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்பது உறுதியாகிறது. அப்படியென்றால் இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் உங்களுக்கு உண்டியளித்து உபசரித்த பண்டிதர்கள். (திண்டியும் உண்டி யிடத்து ருசியால் கொண்ட பசிதீர்க்கும் எனில் - குறள் உபயம் வாலுவார்) பின்ன என்னங்க..? அறியாமையை போக்கி அறிவு வளர்பதுதான் ஆசிரியர்களின் வேலை. ஏற்கனவே நல்ல ப்ரில்லியண்டா உள்ளவங்களுக்கு மட்டும்தான் பாடம் நடத்த முடியும்னா எப்படி......?

    பீகார் மாநிலம் பாட்னாவில் ஆனந்த் குமார் என்பவரின் 'சூப்பர் 30' பற்றி தெரியும் என நினைக்கிறேன். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு இலவசமாக உரிய பயிற்சிகள் அளித்து, அவர்களை ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைய வித்திடுவதே 'சூப்பர் 30' திட்டத்தின் முதன்மை நோக்கம்.கடந்த 11 ஆண்டுகளில் ஆனந்த் குமாரின் பயிற்சி மையத்தில் படித்தவர்களில் 90% பேர் ஐ.ஐ.டி.க்களில் சேர்ந்துள்ளார்கள். மாணவர்களுக்கு ஆடிப்படைக் கல்வியைக் கூட அளிப்பதற்கு போராடும் நாட்டில், மனித ஆற்றலால் எதுவும் சாத்தியமே என்று தனியொரு மனிதர் இப்படி சாதிக்கும்போது ஐ.ஐ.டி பண்டிதர்கள் நீங்கள் சொன்ன புதுமொழி போல் "தட்டத் தெரியாதவன் கீ போர்ட் சரியில்ல" என்று சொன்ன வகையினர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொன்றும் சொல்ல விழைந்தேன். ஆசிரியர்களும் ஒரு விதத்தில் கூலிக்கு செய்பவர்களே. இட ஒதுக்கீட்டை மட்டும் (ஓட்டுக்காக?) ஆணையிட்டு ஒதுங்கி விடும் அரசு முக்கிய காரணம்.

      ஐஐடி/எம் தனியார் துறையாக இயங்கினால் என்ன ஆகும்? (நாள் தொலைவில் இல்லை).

      ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டுமானால் அதற்கான environmentம் தேவை.

      நீக்கு
  24. ஸ்ரீராமை வழி மொழிகிறேன். உங்கள் எழுத்துகளைப் படிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. அருமையான பதிவு. பதிவை விடப்பின்னூட்டங்களும், பதில்களும் சுவாரசியம். அப்பாதுரை, உங்கள் கவலையை நான் நன்கு புரிந்து கொண்டேன். ஐஐடி, ஐஐஎம் ஆசிரியர்கள் மனம் விட்டுப்பேசி இருப்பார்கள் எனத் தெரிகிறது. அதில் உண்மையும் இருக்கிறதே! நல்லசிந்தனைப் பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. Appadurai Sir,
    Few days back, my brother from Chennai called me up and asked me a simple question:
    One of our common friends has got an admission in a leading school for his son in Chennai and today he is in 10th standard. This student is attending tuition classes morning and evening despite being got admitted in a reputed school.
    My brother's question is:-
    What is the necessity to attend the tuition classes after getting an admission in a highly reputed school in Chennai?
    Won't they teach anything in the school and if so, how come they can be proclaimed as a reputed school?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்வி. இந்த முரணும் சுவாரசியமானது. எப்படி இந்த 'எல்லாத்துக்கும் ட்யூசன்' பழக்கம் பரவியதோ தெரியவில்லை. ஒரு ஆசிரிய நண்பர் இதற்குக் காரணம் பெற்றோர்கள் என்றார்.

      நீக்கு
  27. வெகு நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த ஒன்றை இந்த பதிவும் பின்னூட்டங்களும் வெளிப்படுத்தி விட்டன. இது ஒரு புறம் இருக்கட்டும். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.லிருந்து வெளிவரும் மாணவர்கள் தான் உங்கள் பார்வையில் 'தரமான' மாணவர்களா? மற்றவர்கள் எல்லாம் மட்டமானவர்களா? 'அப்படி நான் கூறவே இல்லை' என்று நீங்கள் தப்பித்து கொள்ள முடியாது. அப்படி ஒரு எண்ணம் இருந்ததால் தானே ஐ.ஐ.டி/ஐ.ஐ.எம். மாணவர்களை குறிவைத்து வந்தீர்கள். அமெரிக்காவிலேயே ஆள் எடுத்திருந்தால் பல மடங்கு அதிகம் சம்பளம் கொடுத்திருக்க வேண்டும் என்பது அடுத்த காரணம் அல்லவா?

    என்னை கேட்டால், இந்தியாவின் மிக அவசர தேவை எலெக்ட்ரீஷியன்கள், கொத்தனார்கள்,ப்ளம்பர்கள் மற்றும் தச்சர்கள் தான். இன்று ஒரு 30 நிமிட சிறிய வேலைக்கு மெட்ராஸில் கார்பெண்ட்டர்கள் 700 ரூபாய் கேட்கிறார்கள். ஏன் என்று கேட்டால், இளைஞர்கள் யாரும் இது போன்ற வேலைகளுக்கு வருவதில்லையாம். அனைவரும் பொறியாளர்கள் ஆக வேண்டும் என்றே நினைக்கிறார்கள். அதனால் தான் தெருவுக்கு 10 பொறியாளர்கள் வேலை இல்லாமல் இருக்கும் அவலம் இன்று இருக்கிறது. White collar வேலை என்றால் மேல், Blue collar வேலை என்றால் மட்டம் என்ற நமது மக்களின் misplaced attitude தான் காரணம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐஐடி/எம் தரம் என்று நான் நம்பினால் ஐஐடி/எம் தரம் என்று நான் நம்புவதாகத் தான் பொருள். ஏற்கனவே இதற்கான என் நிலையை வெளிப்படுத்தியிருக்கிறேன். இந்த வேலைக்கு இந்த இடங்களில் தரமான கல்வி வழங்கி மாணவர்களைத் தயார்படுத்துகிறார்கள் என்பது பெருமளவுக்கு உண்மையும் ஆகும். ஐஐம் மாணவரின் தரம் பாரதிதாசன் எம்பிஏவை விட உயர்ந்தது என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை expatguru. அண்ணாமலை யூ எம்பிஏவின் தரம் அடிமட்டம் என்பதும் நான் அனுபவத்தில் அறிந்தது. இதில் தப்பிக்க என்ன இருக்கிறது? எனினும் அண்ணாமலை யூ எம்பிஏக்களுக்கான தகுந்த வேலை என்னிடம் இருந்தால் நிச்சயம் கன்சிடர் செய்வேன்.

      அமெரிக்காவை விட இந்திய ஐஐஎம்களுக்கு சம்பளம் குறைவாகக் கொடுத்தால் போதும் என்பது ஒரு முக்கிய காரணம். இதிலும் எனக்கு முழு நம்பிக்கை. கல்லூரி முடித்து வரும் ஹார்வர்ட் அல்லது சிகாகோ மாணவனுக்கும் (ஹி) கல்லூரி முடித்து வரும் ஐஐஎம் மாணவ்ருக்கும் தரத்தில் பெரும் வித்தியாசம் உண்டு. இந்தியப் படிப்பறிவு உருப்போடுவதன் விளைவு. படிப்பின் அடிப்படையிலான ஒரு கேள்விக்கான விடையை இந்திய மாணவர் மிகச் சரியாகச் சொல்லுவார். படிப்பின் அடிப்படையிலான ஒரு புதிரை அமெரிக்க மாணவர் மிக நேர்த்தியாக விடுவிப்பார்.


      இன்ன யூனிவர்சிடியில் படித்தவர்கள் மட்டுமே தரமானவர்கள் என்ற நினைப்பே இல்லை. இந்த யூனிவர்சிடியில் இத்தகைய தரத்தை எதிர்பார்க்கலாம் என்ற கணிப்பு மட்டுமே.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. யுனிவர்சிடியின் தரம் போனால் என்ன? பிற்பட்ட மக்களுக்கும் நல்ல கல்வி கிடைக்கின்றது, மாற்ற அறிவாளி படிப்பாளிகளுக்கும் பிரச்சினை இல்லை, இது நல்லதுதானே?. நிறைய ஐஐடிக்கள் திறப்பதில் தவறில்லையே. யாருக்குமே எந்த பிரசினையும் இல்லாதபோது ஏன் இப்படி கவலைப்படுகின்றீர்கள்?

      நீக்கு
    4. //யுனிவர்சிடியின் தரம் போனால் என்ன? பிற்பட்ட மக்களுக்கும் நல்ல கல்வி கிடைக்கின்றது, //

      உங்கள் முரண்பாடான பதில் சிரிக்க வைக்கிறது. ஒரு பக்கம் தரம் போனால் என்ன என்கிறீர்கள். இன்னொரு பக்கம் பிற்பட்ட மக்களுக்கும் நல்ல கல்வி கிடைக்கிறது என்கிறீர்கள்! தரமற்ற கல்வியை நல்ல கல்வி எனச் சொல்லும் உங்களை எப்படிப் பாராட்டுவது எனத் தெரியவில்லை.

      என்னுடைய கருத்து யாருமே படிக்கக் கூடாது என்பதோ, யாருமே படிக்க வேண்டாம் என்பதோ அல்ல. அவரவர் குலத் தொழிலையும் மறக்காமல் கற்றால் பாரம்பரியக் கலைகள் பல காப்பாற்றப்படும். நமது படிப்பின் மூலம் அவற்றில் பல புதுமைகளையும் முன்னேற்றங்களையும் புகுத்த முடியும் என்பதோடு தக்க முறையில் விளம்பரமும் செய்ய முடியும். வெளிநாட்டினர் பலர் நம் நாட்டுக்கலைச் செல்வங்களைப் பார்த்து பிரமிக்கின்றனர். நமக்கு யாருக்கும் அதைக் குறித்த அறிவு இல்லாமல் போனதால் அதைக்காக்க வேண்டும், பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற சிறிய எண்ணம் கூட இல்லாமல் சிற்பங்களைக் கைகளை உடைத்தோ, கண்களைப் பெயர்த்தோ, கால்களை உடைத்தோ, ஓவியங்களில் நம் அழகான பெயர்களைக் கிறுக்கியோ வைத்து ஆனந்தம் அடைகிறோம்.

      இந்தப் பாரம்பரியம் மட்டும் தொடர்ந்திருந்தால் அதன் அருமை புரியும், மதிப்புத் தெரியும். அவற்றைக் காக்கக் குறிப்பிட்ட மக்கள் தயாராக இருப்பார்கள். எல்லோருமே வெள்ளை உடுப்பு அணிந்து நாற்காலியில் அமர்ந்து வேலை பார்க்க நினைத்தால் அது இயலுமா? ஏற்றத் தாழ்வுகள் இயற்கையிலேயே இருக்கிறது. நம் நாட்டிலேயே ஒரு இடத்தில் வெயில், ஒரு இடத்தில் அதிக மழை, ஒரு இடத்தில் பனி, ஒரு இடத்தில் வறட்சி, இன்னொரு இடத்தில் வெள்ளம் என உள்ளது. அதை நம்மால் சரி செய்ய முடிந்ததா?

      மனிதர்கள் பிறப்பிலேயே எவ்வளவு வேறுபாடுகள்? எவ்வளவு மாறுபாடுகள்! அதை எல்லாம் நம்மால் என்ன செய்ய முடிந்தது? படிப்புப்படிக்க வைத்தால் மட்டும் போதாது. அதை கிரஹித்துக்கொள்ளும் சக்தியும் வேண்டும். அதை நம்மால் யாருக்கானும் கொடுக்க முடியுமா? எல்லோருமே ஒரு வகுப்பில் ஒன்றாகப் படித்தாலும் ஆசிரியர் ஒரே மாதிரி கற்பித்தாலும் எல்லோருமேவா நல்லபடி அதைப் புரிந்து கொள்கிறோம்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான புரிதலும் அதற்கேற்ற அறிவும் தான் இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டால் நான் சொன்னதிலுள்ள நியாயம் புரியும்.

      நீக்கு
    5. நீங்களே சொல்லிவிட்டிர்கள் நன்றாக படிப்பவர்கள் எப்படினால்லும் படிப்பர்கள் என்று. அப்புறம் எப்படி கல்வியின் தரம் குறையும்?. நீங்கள்தான் உங்ககுளுக்குள்ளே முரன் படுகின்றீர்கள்.

      அப்பா துரைஅவர்கள் கல்வியின் தரம் பற்றி சொல்லவில்லை ஐஐடி யின் பெயர் கெடுகின்றது என்றுதான் சொன்னேன் என்று ஒத்துக்கொன்டார்.

      எல்லோரும் வெள்ளை ஆடை அணிய முடியாது என்பதற்கும், எல்லொறும் அனியக்கூடாது அதை அனிய ஒரு சிலர் முயற்சிக்க கூடாது என்பதுக்கும் வித்தியாசம் இருக்கு.

      நீக்கு
    6. குலக்கல்வி என்று சொல்லுகின்றீர்களே, உயர் சாதியில் பிறந்த மாணவனை கக்கூஸ் கழுவும் தொழிலை மாலைவேளையில் கற்க பெற்றோர்கள் அனுப்புவரா?

      குலக்கல்வி இல்லாததால் என்ன நன்மைகள் தமிழர்களுக்கு விளைந்திருக்கின்றது பாருங்கள், எல்லோரும் 300 ரூபாய்க்கு பேரம்பேசி நோகாமல், அதை விட அதிகம் ஊதியம் கிடைக்கும் வேலைக்கு சென்றுவிட்டனர்,

      நீக்கு
    7. நான் சொல்வதைச் சொல்லும் கோணத்தில் புரிந்து கொள்ளாமல் அதைத் திரிக்கிறீர்கள். போகட்டும். நான் சொல்வது என்னவெனில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான புரிதல் இருக்காது என்பதே. நன்கு படிப்பவர்கள், படிக்காதவர்கள் எனத் தராதரம் பிரிக்கவில்லை நான். மேலும் ஐஐடியில் முதல் ராங்க் வாங்கினவர்களை விட, குறைவாக வாங்கினவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். இதை எதுவும் நம்மால் மாற்ற முடியாது. படிப்பின் தரம் குறையாமல் இருக்க வேண்டுமெனில் அடிப்படைக் கல்வி தர்மாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது உங்கள் கண்களில் படவே இல்லை பாருங்கள். எல்லோருக்குமே அதிக ஊதியம் கிடைக்கும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. என்னிடம் பலருடைய பயோடேட்டா இருக்கிறது. மாசம் பத்தாயிரத்துக்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள். உயர்சாதியில் பிறந்தாலும் அவங்க அவங்க வீட்டுக் கக்கூஸை இன்றைய நாட்களில அவரவர்களே கழுவ வேண்டும். எங்க வீட்டில்/வீடுகளில் அப்படித் தான் செய்கிறோம். இதற்குத் தனிப் படிப்பெல்லாம் தேவை இல்லை. அனுபவமே போதும்.

      நீக்கு
    8. கல்வியின் தரம், கற்றலின் தரம், புரிதல் போன்றவை குறைந்ததால் தானே ஐஐடியின் தரமும் கெடுகிறது. இன்றைக்கு இந்தியா முழுவதும் இருக்கும் பிரச்னை இது. கடந்த நாற்பது ஆண்டுகளில் கல்வியின் தரமே ஒட்டுமொத்தமாகக் கெட்டு விட்டது. இந்தியாவில் படிக்கும் மாணவர்களில் ஐஐடி, ஐஐஎம் தவிர மற்ற மாணவர்களின் தரம் உலகத் தரமன்று. நம் நாட்டின் எந்தப் பல்கலைக்கழகமும் உலக அளவில் தரமானது அல்ல.

      நீக்கு
    9. உலகத்தரம் தேவையே இல்லைங்க. முதல் தேவையானது நாட்டு மக்களுக்கு உயரே வர வாய்ப்பு. அது செவ்வனே நடந்து கொன்டிருக்கின்றது நம் நாட்டில்.

      நன்றாக படிக்கும் அறிவாளி மாணவர்கள் நன்றாகத்தான் படிக்கின்றார்கள், நல்ல வேலைக்குத்தான் போகின்றார்கள். இதை நீங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள்.
      அதில் குறை ஏதும் இல்லை. பிறகு என்ன பிரச்சினை?

      நம் வீட்டு கக்கூஸை நாமே கழுவனும் சரிதான். ஆனால் அது தொழில் ஆகாது. கீழ் சாதியாக்கப்பட்டவர்கள் மற்ற விட்டு கக்கூஸை அல்லவா கழுவுகின்றார்கள். மேல் சாதி என்று அவர்களே சொல்லிக்கொள்பவர்கள் மற்ற வீட்டு கக்கூஸை கழுவும் தொழிலை செய்யமாட்டார்கள். ஆனால் மற்றவர்களை செய்யச்சொல்லுவார்கள்.

      தமிழ்நாட்டில் இந்த 50 ஆண்டுகளில் மக்களிடையே அபரிதமான கல்வி முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று. எட்டாக்கனியாக இருந்த கல்வி இன்று அனைவருக்கும் எட்டி, கிராமத்து மாணவன் கூட வெளிநாட்டில் வேலை பார்ப்பது சாதாரனமாக இருக்கின்றது.

      பெற்றோர் தொழிலைத்தான் பாக்கனும், 100 க்கு 99.99999 மதிப்பென் எடுத்தால்தான் உயர் படிப்புக்கு போகமுடியும், ரூபாய் இருந்தால்தான் படிப்பு என்ற 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய நிலை தொடர்ந்திருந்த்தால் இது சாத்தியமாகுமா?

      நீக்கு
  28. Expatguru, சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். எலக்ட்ரீஷியன்கள் ஒரு பல்ப் மாட்டினாலே நூறு ரூபாய் வரை கேட்கின்றனர். தச்சர்கள் கேட்கவே வேண்டாம். நாங்க வீடு மாறி, ஊர் மாறி இங்கே வந்தப்போ சுவாமி படங்களை மாட்ட சட்டம் அடித்து ஆணி அடித்துக் கொடுத்ததுக்கு 500 ரூ கேட்டுப் பின்னர் பேரம் பேசி 300 ரூபாய்க்கு முடித்தோம். மக்களின் மனோபாவம் மாறவேண்டும். இதற்குத் தான் ராஜாஜி சிறந்த கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். காலையில் படிப்பு, மதியம் தொழில் கல்வி என. அதைக் குலக்கல்வித் திட்டம் என்னும் பெயரில் சிதைத்து ஒழித்துவிட்டார்கள். இன்று பாரம்பரியத் தச்சர்களோ, ஸ்தபதிகளோ கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது. கொத்தனார்களும் ஒண்ணும் குறைச்சலாச் சம்பளம் வாங்குவதில்லை. அவங்களுக்கும் ஒரு நாளைக்கு அவங்க அவங்க திறமையைப் பொறுத்து 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை தினக் கூலி கிடைக்கிறது. மேஸ்திரி என்றால் மாசம் கிட்டத்தட்ட 30,000/-க்குக் குறையாது. காலத்தைப் பொறுத்தும் விலைவாசியைப் பொறுத்தும் சம்பளம் கூட்ட வேண்டும் என்பதில் ஆக்ஷேபணையே இல்லை. ஆனால் இந்த வேலைகளுக்குத் தமிழ்நாட்டில் ஆட்களே இல்லை. பிஹார், மேற்கு வங்கம், வங்க தேச அகதிகள் என்று ஆள் பிடித்து இந்த வேலைகளைச் செய்ய வைக்கின்றனர். இவங்களுக்குக் கூலியும் கொஞ்சமாய்த் தான் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டில் இந்த வேலைகள் செய்ய இப்போது யாருமே இல்லை. விவசாயக் கூலிகளும் இப்போது கிடைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்குக் காரணம் அரசாங்கத்தின் 'நூறு நாள்' வேலைவாய்ப்புத் திட்டமும் இலவசங்களும் என்கிறார்களே?
      பரவலான வளர்ச்சி ஒரு காரணமென்றும் நினைக்கிறேன்.

      நீக்கு
    2. 100 நாள் வேலை வாய்புத் திட்டம் மற்றும் இலவசங்கள் பெறுவதற்கு நம் மக்கள் தகுதியானவர்களே.

      எனக்குத்தெரிந்து தமிழ் நாட்டில் மக்கள் சோம்பேரியாக இருந்து பார்த்ததில்லை. கிராமக்களில் சிஅல் இருக்கக்கூடும்.
      சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் சென்று காலையிலும் மாலையிலும் பார்த்தால் தெரியும். அசந்துவிடுவீர்கள், உழைக்கும் மக்கள் எப்படி சுறுசுறுப்பாக மதிய உணவு எடுத்துக்கொன்டு வேலைக்கு சென்று திரும்புகின்றார்கள் என்று. அதுமட்டுமல்ல தெருக்களில் நடந்து, உட்கார்ந்து வன்டிதள்ளிக்கொன்டு சிறு வியாபாரம் செய்யும் முதியோர்களை பார்த்தாலே தெரியும் எப்படி வேலை செய்கின்றார்கள் என்று.

      ஆனால் உங்கள் நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள் அவர்கள் எல்லாம் உழைப்புக்குத்தகுந்த வருமானம் பெறுகின்றார்களா?. கன்டிப்பாக இல்லை.

      அமெரிக்காவில் 8 மணிநேரம் எந்த வேலை செய்தாலும் அதற்கான ஊதியத்தை அமெரிக்க அரசாங்கம் உறுதி செய்கின்றது. ஆனால் நம் நாட்டில் நடப்பது தெரிந்தது தானே.

      அமெரிக்கவில் அமெரிக்கர்கள் மாலை 5 மணிக்குப்பிறகு மற்றும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் வேலை செய்வது இல்லை, கையில் கோக் வைத்துக்கொன்டு நீச்சல் குளத்திலோ பீச்சிலோ இருப்பார்கள்.

      இந்தியாவில் சைதப்பேட்டை லெவல் கிராஸிங்கில் அமர்ந்து பூ கட்டி விற்பனை செய்யும் 80 வயது மூதாட்டி, இந்த அமெரிக்கர்களின் சந்தோஷத்துக்காக உழைக்கின்றார். அப்படி அவரது உழைப்பு மறைமுகமாக உறிஞ்சப்படுவதற்கு நம்மூர் கேடுகெட்ட அரசாங்கம் உதவி செய்கின்றது என்ற உன்மையை அறிவீர்களா?

      ஆகவே இலவசங்களாலும் 100 நாள் வேலைத்திட்டத்தினாலும் எலக்ட்ரிஷியன்கள் 300 ரூபாய் ஊதியமாக கேட்பதில் தவறில்லை, அமெரிக்க வருமானத்தரத்தோடு ஒப்பிட்டால் அந்த 300 ரூபாயும் மிகக்குறைவுதான்.

      நீக்கு
    3. மதுரை டி.வி.எஸ் திறப்புவிழாவில் பேசிய ராஜாஜி கேட்டார் , "எல்லோருமே பல்லக்கில் போக ஆசைப்பட்டால் யார் பல்லக்கை தூக்குவது?"

      இத்துனை காலத்துக்குப்பிறகு இதையேத்தான் பிரதிபலிக்கின்றார் geethasmbsvm6 அவர்கள்.

      நீக்கு
    4. அமெரிக்காவில் எட்டு மணி நேரம் வேலை எட்டுமணி நேரமும் வேலை மட்டும் தான் செய்ய முடியும். நடுவில் வேறே சொந்த வேலைகளை எல்லாம் பார்க்க முடியாது. அதோடுவாரத்துக்கு இவ்வளவு மணி நேரம் வேலை செய்யணும், குறிப்பிட்ட அளவு வேலையை முடிச்சிருக்கணும் என்ற கட்டுப்பாடுகள் எல்லாம் உண்டு. காலை ஆறு மணிக்கே கிளம்பி 50,60 மைல் பிரயாணம் செய்து, காரில் போகும்போதே ப்ரெட் ஸ்லைசோ, சான்ட்விச்சோ கடித்துக் கொண்டு, ஃப்ளாஸ்கில் எடுத்துச் செல்லும் காஃபி, தேநீரைக் குடித்துக் காலை ஆகாரத்தை முடிப்பவர்கள் உண்டு. வீட்டில் வக்கணையாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுப் பத்து மணி அலுவலகத்துக்குப் பதினோரு மணிக்குப் போய்க் கையெழுத்துப் போட்டு விட்டு உடனே கான்டீனுக்குக் கிளம்ப முடியாது. பூக்கட்டி விற்பனை செய்யும் மூதாட்டி எந்த அமெரிக்கனின் சந்தோஷத்துக்கு உழைக்கிறார் என ஆதாரங்களோடு சொல்லலாமே?

      அவர் வயிற்றுப் பிழைப்புக்குத் தான் பூக்கட்டி விற்கிறார். தனக்காகவே பூக்கட்டி விற்கிறார். எந்த அமெரிக்கனுக்காகவும் அல்ல. இலவசங்கள் நம் மக்களைக் குறிப்பாய்த் தமிழக மக்களைக் கெடுத்து வைத்திருக்கிறாற்போல் வேறெதுவும் கெடுக்கவில்லை என உறுதியாய்ச் சொல்வேன். எத்தனை கிராமங்களை அல்லது நகரங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. நான் பார்த்தவரை தஞ்சாவூர் ஜில்லா கிராமங்களில் எல்லாம் மக்கள் மிகவும் சோம்பேறிகளாக ஆகிவருகிறார்கள். அவங்க அவங்க ஊரிலேயே உள்ள குளம், குட்டை, ஆற்றங்கரை எல்லாம் மேடிட்டு, வேலிக்காத்தானும், ஆகாயத் தாமரையும் முளைச்சுக் கிடக்கும். வீட்டுக்கு ஒருத்தராகக் கிளம்பி அதை எல்லாம் பஞ்சாயத்து மேற்பார்வையில் சுத்தம் செய்யலாம். ஆனால் செய்வதில்லை. கேட்டால் அரசாங்கம் செய்து தரணுமாம். அவங்க சொந்த ஊரிலே உள்ள சொந்தக் குளம், குட்டையைக் கூடத் துப்புரவு செய்து கொண்டு அதை நீர் நிரம்பும்படி பார்த்துக்கொள்ள அரசாங்கம் வரவேண்டும். அவங்க காலாட்டிக் கொண்டு பேசிக் கொண்டு வம்பு வளர்த்துக் கொண்டு இருப்பாங்க. 100 நாள் வேலைத் திட்டத்திலும் எக்கச்சக்கமான ஏமாற்று வேலைகள். உண்மையில் யாருக்கு வேலை கொடுத்திருக்கோ அவங்க வர மாட்டாங்க. வேறே யாரையானும் அவங்க பெயரிலே அனுப்பிடுவாங்க. வரும் நபருக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு ரூபாய்னு பேசிக் கொடுத்துட்டு, அரசு கொடுக்கும் சம்பளம் முதல் மற்ற இலவசப் பொருட்களை அரிசி உட்பட அவங்க வாங்கிட்டுப் போயிடுவாங்க. இது ஒரு ஏமாற்றுன்னா

      இன்னொண்ணு பாதி நாட்கள் வேலையே நடக்காது. நடக்காத வேலைக்குச் சம்பளம், அரிசி எல்லாமும் கொடுக்கப்படும். ஆனால் கிராமத்தில் விவசாய வேலைகளான களை எடுப்பது, கொத்துவது. நாற்று நடுவது, அறுவடை செய்வது, நெல் தூற்றுவது போன்ற வேலைகளைச் செய்ய ஆட்களே இல்லை. இருந்தாலும் முன்வருவதில்லை. மெஷின் செய்யட்டும் என்கின்றனர்.

      வெளிநாடுகளில் மெஷின் செய்கிறது எனில் அங்கே நூற்றுக்கணக்கான ஏக்கர்களை ஒருத்தரே வைச்சிருப்பாங்க. இங்கே அப்படி இல்லை. ஒருத்தருக்கு ஒரு ஏக்கர் இருக்கும். இன்னொருத்தருக்கு ஒன்றரை இருக்கும், மூணு இருக்கும். இப்படி வைச்சிருப்பாங்க. இதிலே எல்லோருக்கும் மெஷின் வேலை பிடிக்காது. பக்கத்து வயலில் மெஷினில் அறுப்பு அறுக்கையில் தன் வயலில் ஆட்களுக்குத் தேடும் விவசாயிகள் உண்டு. எல்லாவற்றையும் நேரிலே போய்ப் பார்த்து விசாரித்தால் தான் புரியும்.

      நீக்கு
    5. இன்னமும் இருக்கு. அமெரிக்காவில் குடிப்பழக்கம் தன் நிலை மறக்கச் செய்வதில்லை. இங்கேயோ அரசு நடத்தும் டாஸ்மாக்கினால் பள்ளிப் பிள்ளைகள் உட்பட, பெண்கள் வரை அனைவருமே இதன் மூலம் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். எத்தனை பள்ளிப் பிள்ளைகள் இந்தப் பழக்கத்துக்கு ஆளாகி இருக்கின்றனர் தெரியுமா? பெண்கள்? தன் நிலை மறந்து தெருவில் விழுந்து கிடந்த ஒரு பெண்ணைப் பற்றிப் பத்திரிகைச் செய்திகள் வந்தது எனில் இன்னொரு பெண் வீட்டு வாசலிலேயே விழுந்து கிடந்திருக்கிறாள். இவை எல்லாம் முன்னேற்றம் என்றால் இத்தகைய முன்னேற்றங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவை தேவையே இல்லை.

      நீக்கு
    6. பின் தங்கிய வகுப்பினரும் நல்ல கல்வி கற்க அடிப்படையான கல்வியும் தரமானதாக இருத்தல் வேண்டும். அதற்கு ஒரே வழி மத்திய அரசுப் பாடத்திட்டம் உள்ள நவோதயா பள்ளிகளை ஒவ்வொரு பட்டி தொட்டியிலும் அமைக்க வேண்டும். ஐஐடிக்களை நிறையத் திறப்பதற்கு பதிலாக முதலில் வரும் தலைமுறையினரின் சுய சிந்தனையை வளர்க்கும் விதத்திலும் அவர்கள் தரமான கல்வியைப் பெறும் விதத்திலும் மத்திய அரசு நவோதயா பள்ளிகளைக் கட்டாயமாக்க வேண்டும். ஹிந்தி பேசாத மாநில மொழி மக்கள் அவர்கள் குழந்தைகள் தாய்மொழி கற்கவும் அதில் வசதி செய்ய வேண்டும். ஹிந்திப் பாடம் எட்டாம் வகுப்பு வரை இருந்தால் போதும். அதன் பின்னர் மாணவ, மாணவியரின் விருப்பத்துக்கு இணங்க மொழிப்பாடம் அமைய வேண்டும். மாநில அரசு தமிழ் படிக்கவில்லை எனில் தேர்வு எழுதுவது கஷ்டம் என ஒரு சட்டம் கொண்டுவரப் பார்க்கிறது. அது தவறு, படிப்பு என்பது மாணவ, மாணவியரின் அடிப்படை உரிமை. அதில் மொழியையும் அவர்களே சுயமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

      நீக்கு
    7. அமெரிக்கா நுகர இந்தியாவில் பூ தொடுத்தாலும் காசுக்காகத் தான் செய்கிறார்கள் என்னவோ கருணையினால் செய்வது போல் சொல்கிறீகளே சக்தி?

      பின் தங்கியவர்களுக்கு வாய்ப்புக்களோ வசதிகளோ வழங்குவதும்
      வழங்கியதும் தவறு என்று யாருமே சொல்லவில்லை.

      கருத்து சொன்ன ராஜாஜியைக் காட்டிலும் அதை திரித்துச் சொன்னவர்களின் communication திறன் அதிகமென்று புரிகிறது.

      நீக்கு
    8. பல ஏற்ற தாழ்வுகளுக்கு நம்மூர் அரசாங்கம் ஒரு வகையில் காரணம் என்பதை மறுக்க முடியாது தான் சக்தி.

      நீக்கு
    9. அமெரிக்கா அந்த பூவை நுகரவில்லை. அந்த பூ கட்டி விற்கும் பென்னின் உழைப்பை மறைமுகமாக நுகர்கின்றது.

      geethasmbsvm6 அவர்களே சொல்லுகிறார் ராஜாஜி யின் குலக்கல்வி அருமையானது என்று. அந்த குலத்தில் பிறந்தால் அதே தொழிலைத்தான் செய்யவேன்டும் என்பது தப்பு இல்லையா?

      நீக்கு
    10. சோம்பேரிகளும் இருக்கின்றார்கள் ஆனால் உழைப்பவர்கள்தானே அதிகம் இருக்கின்றார்கள்? அவர்கள் உழைப்புக்கு தகுந்த ஊதியம் இல்லையே. அவர்களுக்கு உரிமையானதை கொடுக்கின்றார்கள் அதை நீங்கள் இலவசம் என்று சொல்லுகின்றீர்கள்.

      நீக்கு
    11. உழைப்புக்கு ஊதியம் கொடுத்தால் யாருமே தடுக்கப் போவதில்லை. நீங்கள் ஒரு மாசம் எந்த கிராமத்திலாவது தங்கி இருந்து பார்க்கவும். உழைப்பாளி யார்? ஊதியம் பெறுவது யார் என்பது புரியும். உழைப்பே இல்லாமல் ஊதியம் மட்டும் பெறுவதே 100 நாள் வேலைத் திட்டத்தில் நடந்து வருகிறது. இதை கிராமத்தில் பலரும் ஒப்புக் கொள்கின்றனர். அரசாங்கம் கொடுக்கும்போது ஏன் வேண்டாம்னு சொல்லணும்? வாங்கிக்கறோம்!!!!! என்கின்றனர்.

      நீக்கு
    12. //அந்த பூ கட்டி விற்கும் பென்னின் உழைப்பை மறைமுகமாக நுகர்கின்றது//

      இதை எப்படி என்று கொஞ்சம் விளக்குங்கள். எனக்கு அவ்வளவு புத்திசாலித் தனம் இல்லை. சென்ட் எடுத்தாலும் சொல்லலாம். இந்தப்பெண்ணின் உழைப்பில் தயார் செய்யப்படும் சென்ட் அமெரிக்கச் சந்தைக்குப் போகிறது என! கால் கிலோ மல்லிகைப் பூவில் எட்டு முதல் பத்து முழம் வரை பூக்கட்டலாம். கிலோ 80/100 இல் இருந்து அதிக பக்ஷமாக 200 ரூ வரை மல்லிகை விற்கிறது. ஒவ்வொரு நாளும் பூ வரத்தைப் பொறுத்து விலை ஏறும், இறங்கும். பூக்காரர்கள் விற்பது மதியமெல்லாம்முழம் 15 ரூபாய் என. மாலை ஆக ஆகப் பத்து ரூபாய்க்கு வருவார்கள். அப்போதும் அவர்களுக்கு நிகர லாபம் கால்கிலோவுக்கு எண்பது ரூபாய் என்பதால் கிலோவுக்கு 320 ரூபாய். கிட்டத்தட்டப்பாதிக்குப் பாதி லாபம் கிடைக்கும். ஆகவே இதில் பூக்களை வாங்குவதும், அவற்றைத் தொடுப்பதும் பூக்காரர்களே செய்தால் நிச்சயமாய் லாபம் பார்க்கலாம். ஏனெனில் நான் தினம் கால் கிலோ மல்லிகைப் பூவைத் தொடுத்து வருகிறேன். இரண்டு நாட்களுக்கு வைச்சுப்போம். நாங்க வாங்கும் மல்லிகை ரகம் கால் கிலோ 20 ரூபாயிலிருந்து 30 ரூ வரை விற்கிறது. சில சமயங்களில் 15 ரூபாய்க்குக் கூடக் கிடைக்கும். அப்போதும் பூக்காரர்கள் அதே முழம் பத்து ரூபாய்க்குத் தான் விற்பார்கள். விலை குறையாது. இதைப் பெரும்பாலான பெண்கள் பகுதி நேர வேலையாகத் தான் செய்கின்றனர்.

      நீக்கு
    13. //பல ஏற்ற தாழ்வுகளுக்கு நம்மூர் அரசாங்கம் ஒரு வகையில் காரணம் என்பதை மறுக்க முடியாது தான் சக்தி.//

      நூற்றுக்கு நூறு உண்மை.

      நீக்கு
    14. பூக்காரியின் உழைப்பை அமெரிக்கா நுகர்கிறதா? என்ன சொல்கிறீர்கள் சக்தி? அமெரிக்கர்களுக்கு பூக்கட்டி அனுப்பினார் என்று சொல்கிறீர்கள் என்றால் டாலரின் மணத்தை பூக்காரி நுகர்கிறார். அவ்வளவு தானே? ஒருவேளை முதலாளித்துவம் புடலங்காய் என்று கம்யூனிசம் பேசுகிறீர்களா? வேலைக்கேற்ற ஊதியம் அவருக்குக் கிடைக்கவில்லையென்றால் அமெரிக்கா என்ன செய்யும்?

      நூறு நாள் வேலை பற்றி உண்மை அறிய வேண்டுமானால் சற்று தெற்கே பயணம் செய்து பாருங்கள் சக்தி.

      உங்கள் புரிதலை என் ஒப்புதலாக்குவது சற்று முதிர்ச்சி குறைவான வாதம் இல்லையா? ஐஐடி தரம் குறைகிறது என்று நான் கவலைப்படவேயில்லை. வேறே வேலை இல்லையா என்ன எனக்கு - இருக்கிற கவலை போதாதா? ஐஐடியின் தரம் என் மதிப்பில் குறைந்திருக்கிறது என்று தான் சொல்லியிருக்கிறேன். இதற்கெல்லாம் கவலைப்படுவதில்லை. அப்படி ஒரு சமூக அக்கறை எனக்கு இல்லை. நான் சராசரி.

      மிஞ்சிப்போய் ஒரு சமூக அக்கறையுடன் நான கவலைப்பட்டால்.. அப்படிக் கவலைப்பட்டால்.. அது ஒரே ஒரு அறியாமையை ஒட்டியது :-)

      நீக்கு
    15. ராஜாஜி உண்மையில் என்ன எண்ணிச் சொன்னார் என்பதோ, அதைத் திரித்தவர்கள் உண்மையில் என்ன எண்ணிச் சொன்னார்கள் என்பதோ எனக்குத் தெரியாது சக்தி. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'குலக்கல்வி' பற்றிய உரையில் 'குலம்' என்ற சொல்லையே ராஜாஜி பயன்படுத்தவில்லை. அந்த உரை அப்படியே அச்சில் வழங்கப்பட்டது என்று வைத்துக் கொண்டோமானால் - உரையின் குறிப்பு கன்னிமராவில் கிடைக்கிறது - படித்துப் பாருங்களேன்?

      குலத்தில் பிறந்தவர்கள் குலத் தொழிலையே செய்ய வேண்டும் என்பது போலி மட்டுமல்ல அக்கிரமம் கலந்த வாதமும் கூட. எத்தனை படித்திருந்தாலும் எத்தனை 'அருள்' உடையவரானாலும் அப்படிப் பேசுவதும் நடப்பதும் மனித நேயத்துக்கு எதிர்மறையாகும் என்று நம்புகிறேன். மனு வரையில் இந்த வாதம் பின்னோக்கிப் போகலாம். இப்போது வேண்டாமே?

      'பல்லாக்கு தூக்க ஆளில்லாவிட்டால் பல்லாக்கில் பயணம் செய்யும் ஆசை இருந்து என்ன பலன்?' என்ற பொருளையே நான் கொள்கிறேன். பல்லாக்கு தூக்குவதன் முக்கியத்துவம் இங்கே வெளிப்படுவதாவே நான் படிக்கிறேன், புரிந்து கொள்கிறேன்.

      'பல்லாக்கில் போகிறவர் முதலாளிகள் பல்லாக்கு சுமப்பவர்கள் தொழிலாளிகள்' என்ற பாகுபாடு கலந்த கீழ்வாதத்தைத் திருத்தி வழங்கிய கழக கம்யூனிச மனங்கள் அன்றைய தினம் போலவே இன்றைக்கும் நம்மை பின்னோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அந்த திரிப்புக்கு பின்னால் எத்தனையோ சாகசம் இருக்கிறது. அதற்கு மேற்பட்டு, அன்றைய கண்ணோட்டத்தில் அரசியல் - சாதி அரசியல் - பார்ப்பனர் மற்றவர் என்ற சாதி அரசியல் - கோவில் சாமி என்று மற்றார் போல் கும்பிட்டாலும் பூணல் அணிந்து திரிந்ததால் பாகுபட்ட ஆத்திகப் பார்ப்பனர், நாத்திகம் என்ற பெயரில் போலி பகுத்தறிவு வாதத்துடன் பூணலை எதிர்க்கும் ஒரே குறிக்கோளுடன் திரிந்த மற்றவர்களின் அரசியல் - ஓரிருவருக்கு மட்டுமே புரிந்தாலும் மாடு போல் தலையாட்டி புரிந்தது போல் புரியாத மொழியில் கடவுளை வணங்கிய பூணல் அணிந்த பார்ப்பனர் - தமிழின் துரோகி, தமிழனின் எதிரி என்ற பொய்யான சாயம் பூசி சாதி அரசியல் நெருப்பில் நெய் ஊற்றிய விதம் - எல்லாம் கலந்த பார்வையுடன் பார்த்தால், ராஜாஜி சொன்னதாக இவர்கள் திரித்தது வெறும் அரசியல் தந்திரம் - சாமர்த்தியமான அரசியல் தந்திரம் - என்றே நம்புகிறேன். அரசியல் தந்திரத்தை விட இதற்கு ஒரு மேம்பட்ட பொருளிருந்தால் - இன்றைக்கு தமிழ் நாட்டின் நிலை தமிழக மக்களின் நிலை உயர்ந்திருக்கிறதா என்ற கேள்வியில் அதற்கான விடை கிடைக்கும் என்று நம்புகிறேன். ராஜாஜியின் communicationல் ignoranceம் மேல்தட்டு வாழ்க்கையின் ஆடம்பர சொகுசும் தெரிந்தால் - திரித்தவர்களின் communicationல் mischievous brillianceம் பாமரர்களின் நிலையை சாதகமாக்கிக் கொண்ட சாகசமும் தெரிகிறது. அவ்வளவு தான். ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இதை இன்னும் திரித்துக் கொண்டிருப்பதால் தான் கோவில் கட்டுகிறேன் என்று வாக்குறுதி அளிக்கும் அரசியல்வாதிகளை தலைவர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். குண்டித்துணி இல்லாமல் சுருட்டி அத்தனையும் குடும்பத்துடன் பகிர்ந்து கொண்ட பிறகும் சாதாரணத் தொண்டன் என்று காற்றுக்கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகளைப் போற்றிக் கொண்டிருக்கிறோம். மனசாட்சியே இல்லாமல் நாட்டையே விற்றுவிட்டு இனி என் சந்ததிகள் பார்த்துக் கொள்வார்கள் நான் ஒதுங்குகிறேன் என்று கைவிடும் கயவர்களை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஹ்ம்.. யாராவது என்னை நிறுத்துங்களேன்..

      நீக்கு

    16. பூக்கட்டி அமெரிக்காவுக்கு விற்கவில்லை, இங்கே சைதை மக்களுக்குத்தான் விற்க்கின்றார்,

      80 வயது மூதாட்டி இந்த வயதில் போகட்டி வெயிலில் உட்க்கார்ந்து சம்பாதிக்க அவசியமே இல்லை. அரசாங்கம் அதற்கான சமூக பாதுகாப்பை கொடுக்கவில்லை. நியாயமாக அவருக்கு கிடைக்க வேன்டிய சமூக பாதுகாப்புக்கான செலவாகும் தொகையானது யாராலோ கையாடப்படுகின்றது. பொருளாதார பாதைகளை தொடர்ந்து சென்றால் தெரியும் இந்த நதிகள் கலக்கும் கடல் அமெரிக்கா என்று.

      இன்று அமெரிக்காவில் வேலை இல்லாத இளைஞருக்குகூட அரசங்கம் மாதம் 3000 டாலர் இனாமாக கொடுக்கின்றது. ஏனென்றால் அதை தன் கடமையாக நினைத்து செய்கின்றது.

      இதன் விளக்கத்தை சுருக்கமாக சொல்லியிருக்கின்றேன். விரிவாக சொல்லவேன்டுமென்றால் குறைந்தது 2 மணி நேரம் பேசனும்.

      ராஜாஜி என்ன சொன்னார், சாதி, குலம், பார்ப்பனர் இதையெல்லாம் விடுங்கள். இந்த 50 வருடத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் முன்னேற்றம் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. இனிமேல் இது தன்னைத்தானே பெருக்கிக்கொள்ளும். காமராஜர் வேலையை கூகிள் தொடர்ந்து செய்கின்றது.

      நீக்கு
    17. க்டைசியில் சொன்னீங்களே.. அது உண்மை.ஏற்றத் தாழ்வுகளை இணைக்கும் பாலம் முன்னேற்றம். தகவல்.தொழில் நுட்பம். (அதற்கும் சிட்டுக்குருவி சாகிறதே என்று கொடி பிடிக்கிறோம்..)

      நீக்கு
    18. எந்த சிட்டு குருவியும் சாகவில்லை. எந்த சிட்டு குருவிய சொல்லுறீங்க?

      நீக்கு
    19. ஆமாம்,
      கல்வி பயிலகம் என்பது ஒன்றுமே இல்லை அது குறித்து நாம் கவலைப்படவேன்டியத அவசியமும் இல்லை. லட்சக்கணக்கான ருபாய் கொட்டி படிக்கும் பாடங்கள் அனைத்தும் கூகிளின் தயவால் இனையத்தில் இலவசமாக கிடைக்கின்றது. ஸ்டேன்போர்டு, ஆக்ஸ்போர்டு மற்றும் ஹார்வர்டு பல்களைக்கழகங்க்ளின் அனைத்து பாட விரிவுரைகளும் வீடியோக்களாக யூ-டியூபில் கிடைக்கின்றன. சமீபத்தில் ஐஐடி யும் தனது பாட விரிவுரைகளும் வீடியோக்களாக யூ-டியூபில் வெளியுட்டுள்ளது.

      சம்பந்தம் இல்லாத பாடங்களில், சுய முனைப்பிலேயே படித்து அதில் தேர்ச்சி பெற்று அதிலேயே நல்ல வேலைக்கு போகும் நிலை இப்பொழுது ஆரம்பித்து இருக்கின்றது. இது பெருகும் மற்றும் பயிலகங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகும் நிலையை நம் வாழ் நாளிலேயே பார்க்கலாம்.

      நீக்கு
  29. பதில்கள்
    1. ரைட்டுங்க. நீங்க சொல்றது ரொம்ப சரி.

      நீக்கு
    2. இதுதான் புரிய மாட்டேன் என்கின்றது. யாரது மோகன்ஜி ஏன் அவர் பின்னூட்டங்கள் மறைக்கப்படுகின்றன? அப்பாதுரை அவர்களும் ஏன் ஒரே வார்த்தையில் பாராட்டுகின்றார்?

      நீக்கு
    3. ஹிஹி.. மோகன்ஜியின் பின்னூட்டம் எப்படி காலியாக இருக்கிறது என்பது எனக்கும் விளங்காத புதிர். காலியாக பின்னூட்டமிட கூகில் அனுமதிப்பதில்லை. வவ்வால் அவர்கள் இன்னொருவர் பெயரில் பின்னூட்டமிடுவது எப்படி என்பதை என் பெயரில் பின்னூட்டமிட்டு, டெக்னிக்கைப் பிட்டு வைத்ததும் இணையத்தில் எதுவும் சாத்தியம் என்ற முடிவுக்கு வந்து எல்லாவற்றையும் வியக்கிறேன். நானிட்ட பதில் சும்ம்ம்மா கிண்டலுக்கு. மோகன்ஜி ஒரு மோசமான நண்பர்.

      நீக்கு
    4. அவர்தான் அனைவருக்கும் தெரியாதபடி மறைத்திருக்கின்றார். அவருக்கு பிடித்தவர்களுக்கு மட்டும் தெரியவேன்டுமென்று நினைக்கின்றார் போல. எல்லோருக்கும் தெரிந்தால் பிரச்சினையாகும் என்று பயப்படுகின்றார் போல.

      நீக்கு
  30. Mr.Expatguru,
    I read your comment on carpenters. Here in Baroda, the charges of the carpenters and plumbers depends upon the cost of materials being used for making them. Because you get the materials for both these work ranging from Rs.10 to Rs.10000 and hence the cost of labour charges of carpentry and plumbing work will be directly proportionate to the cost of materials used.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Interesting.
      Regardless of price or quality of material - the effort of labor, i'd assume, is more or less the same.. cost of labor is proportional to cost of material?

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. yeah though the labour is same irrespective of the quality of the materials being used, here the carpenters and plumbers decide their charges depending upon the materials used especially for bathroom fittings, the charges are unimaginable.

      நீக்கு

  31. ரொம்ம்ம்ம்ப லேட்டா வந்துட்டேன் போல. நல்லதுதான், நிறைய நல்ல கமெண்டுகளை(யும்) பார்க்க முடிந்தது. ஃபேஸ்புக் பழக்க தோஷத்தில், பல கமெண்டுகளுக்கு லைக் பட்டனைத் தேடியது கண்கள். :-)

    அரசுப் பொறியியற் கல்லூரியில் சேர்ந்த போது, பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படித்திருந்த போதும், பாடங்கள் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தன, கிராமத்துப் பெண்ணான எனக்கு. பட்டணத்தில்/தனியார் பள்ளியில் இருந்து வந்தவர்களுக்கெல்லாம் எந்தச் சிரமமுமில்லை. சிரமம் என்று நான் சொல்வது - ஆங்கிலம் மற்றும் பாடங்கள் புரிவதில். எனக்கு ஆங்கிலம் மட்டுமே புரிந்தது. :-( நானாவது சமாளித்துக் கொண்டேன், எத்தனை பேர்கள் காணாமல் போனார்களோ...

    இரண்டாம் ஆண்டு என்று நினைவு. இரண்டு பெண்கள், ஒரு பரிட்சை அன்று, பயத்தினால் திரும்பிப் போகக் கிளம்புவதைப் பார்த்து நானும் என் தோழியும் மன்றாடினோம். பயப்படாமல் எழுது, தோல்வி என்றாலும் அடுத்த முறை எழுதிப் பாஸாகிவிடலாம் என்று. (நானே அந்த தைரியத்தில்தான் பரிட்சை எழுத வந்திருந்தேன்..) ம்ஹூம்.. கேட்கவேயில்லை.. போய்விட்டனர்.

    இத்தனைக்கும் அந்தக் கல்லூரியில் இருந்ததெல்லாம் தலைசிறந்த ஆசிரியர்கள் (பெற்றிருந்த பட்டங்களின் அடிப்படையில்). ஆனாலும், ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே புரியாது. அவர்களுக்கும் அதுகுறித்த கவலையில்லை. மாணவர்களுக்கும் - குறிப்பாக (படிப்பில்) பின் தங்கிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு பெரும் இடைவெளி இருந்தது. ஒரு நல்ல ஆசிரியர் - அவர் சொன்னார், “நீ பாஸானாலும் ஃபெயிலானாலும் எனக்கு சம்பளம் குறையாதுப்பா. படிக்கீறது உன் பொறுப்பு. என் பொறுப்பல்ல” என்று. அப்போதுதான் புரிந்தது, பல ஆசிரியர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்று. இவர் மாணவர்களோடு நன்றாகப் பழகுவார்.

    பள்ளியானாலும், கல்லூரியானாலும் ஆசிரியர்களும் பாடங்கள்மீது பற்று வர ஒரு முக்கியக் காரணம் அல்லவா?

    கம்ப்யூட்டர் துறையில் பல டாக்டரேட்டுகள் இருந்தாலும், கிரெக்க மொழி போலத்தான் இருக்கும் அவர்கள் பேசுவது. அப்போது, ஒர் தற்காலிக ஆசிரியர் புதிதாக வந்திருந்தார். அப்போதுதான் படிப்பை முடித்திருந்தாராம். அவநம்பிக்கையோடு வகுப்புக்குப் போனபோது அசந்துவிட்டேன் - க்றிஸ்டல் கிளியராகப் பாடம் புரிந்தது. பிறகு கேள்விப்பட்டேன், திருச்சி RECயில் படித்திருந்த அவர், அக்கல்லூரியில் அந்த பேட்சில் ஆகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவராம்!!

    முதலாமாண்டு, Engineering Drawing என்ற பாடம் நடத்திய (Mech Engg) பேராசிரியரின் வெறுப்புக்கு ஆளானாதாலேயே (அப்பவே கேள்வி கேப்போம்ல), Civil பிராஞ்ச் எடுக்கவில்லை நான். என் துரதிர்ஷ்டம், அவரே என் துறைக்கு (computer) துறைத் தலைவராக நியமிக்கப்பட்டது தெரிந்ததும், படிப்பை நிறுத்தலாமா என்றுகூட யோசித்திருக்கிறேன்.

    இரண்டாம் வருடம், “Material Science" என்ற பாடம் நடத்திய ராஜகோபாலன் சாரை மறக்க முடியாது. புதிய டெக்னாலஜிக்களை அறிமுகப்படுத்துகிறேன் என்ற பெயரில், கதறக் கதற மாணவர்களை காற்றோட்டமில்லா ரூமில் அடைத்து வைத்துப் பாடம் நடத்தினார். டெக்னாலஜி புதுசுதான், ஆனா பாடம் அப்பவும் புரியவேயில்லை... என் வாழ்நாளில் க்ளாஸ் டெஸ்டுக்கு லீவு போட்டது என்றது இந்த பாடத்திற்குத்தான். அப்படி என்ன புது டெக்னாலாஜின்னா- projector-ல் ஸ்லைடுகள் எழுதி வைத்துப் போட்டதுதான்.. அது அப்போ ரொம்பப் புதுசு. ஆனால், சத்தியமாக ஒரு வார்த்தைப் புரியவில்லை. மனப்பாடம் பண்ணவும் முடியாத அளவு டெக்னிக்கலா கிரிடிக்கலான பாடம் என்பதால், பல முறை அழுதிருக்கிறேன். மற்றவர்களோடு சேர்ந்து படிக்கலாம் என்றால், அவர்களும் அதே நிலைதான்!!
    பின்னாளில், நானும் அதே கல்லூரியில் இரு வருடங்கள் ஆசிரியையாக வேலை பார்த்தேன். படிக்கும்போது நான் வெறுத்த "Image processing" பாடத்தைக் கொடுத்தார்கள். நன்றாகப் புரிந்து கொண்டு, புரிய வேண்டும் என்று நினைத்துச் சொல்லிக் கொடுத்தேன் - பெருமைக்காகச் சொல்லவில்லை.

    வெல், இப்போ என் கேள்வி என்னன்னா, அரசு பொறியியற் கல்லூரியாகட்டும், ஐஐடி ஆகட்டும் - ஒரு வடிகட்டுதலுக்குப் பிறகுதானே மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் - தனியார் கல்லூரிகளைப் போல பணத்திற்க்காக எல்லா தரத்தினரும் (அறிவில்) சேர்த்துக் கொள்ளப்படுவதில்லையே.. பிறகு ஏன், அவர்களை ஒன்றிணைத்து ஒட்டு மொத்தமாக ஒரே தரமாக இல்லை என்றாலும், ஓரளவுக்கேனும் அனைவரின் தரத்தையும் சீர்படுத்த முடிவதில்லை?

    இதுவே, பள்ளிகளை எடுத்துகிட்டோம்னா, அரசுப் பள்ளிகளில் எல்லா தரத்தினரும் இருக்கிறார்கள். ஆகையால், தேர்ச்சி விகிதம் வேறுபடுகீறது என்று சொல்கீறார்கள். ஆனால், தனியார்ப் பள்ளிகள் வடிகட்டுகின்றன.

    தனியார் பள்ளிகளும், அரசுக் கல்லூரிகளும் - சேர்க்கை விதிகளில் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆனால், ரிஸல்ட் ஏன் வேறுபடுகிறது?

    பதிலளிநீக்கு
  32. சுவாரசியமான கருத்து, கேள்விகள். (ஊர்லந்து வந்துட்டீங்களா ஹூஸைனம்மா?)

    எனக்கு சம்பளம் குறையாது என்று சொன்ன ஆசிரியர் அதிர்ச்சி தருகிறார் - எனினும், இது போன்ற ஆசிரியர்கள் அதிகம் என்றே நினைக்கிறேன்.

    வடிகட்டலுக்குப் பிறகு தான் வருகிறார்கள் என்றுதான் நானும் நினைத்தேன் - வடிகட்டியின் அளவும் திறனும் வெவ்வேறாம்! எப்படியிருந்தாலும் ஐஐடி/எம் என்ற ஒரு வேலிக்குள் வந்தபிறகு அனைவரையும் ஒரு அடிப்படை தரத்துக்குக் கொண்டு வர வேண்டியது ஆசிரியர்களின் கடமை என்றும் நினைக்கிறேன்.

    ஒரு ஐஐஎம் புரபசரின் கருத்து நீங்கள் சொன்னதை ஒட்டியிருந்தது. 'அந்தப் பையனே கஷ்டப்பட்டு வந்திருக்கான். அவனை நான் ஏன் இன்னும் கஷ்டப்படுத்தணும் சொல்லுங்க? என் வகுப்பு புரியலின்னா மினிமம் எடுத்துட்டு போயிட்டே இருக்கட்டும். எப்படியோ இங்கே வந்தவங்க எப்படியோ பிழைச்சுட்டும் போவாங்க'. என்னால் நம்ப முடியவில்லை. ஆசிரியரும் நாள்பட தரம் குறைவாரில்லையா? அது அவருக்குத் தோன்றியதா தெரியவில்லை.

    படிக்காத அல்லது பிடிக்காத பாடத்தை ஆசிரியராக வந்தபிறகு புரியும்படி சொல்லிக் கொடுப்பது கடினம். எனக்குத் தெரிந்த வெகு சிலரில் இப்போது நீங்களும் ஒருவர்.

    என் கணித பேராசிரியர் தான் எஸ்எஸ்எல்சியில் கணிதத்தில் பெயிலானதாகச் சொல்வார். அப்படியும் படித்து கணிதப் பேராசிரியரானது கடும் உழைப்பைக் காட்டுகிறது. இந்நாளில் இது சாத்தியமே இல்லை என்று நினைக்கிறேன் (இந்தியாவில்). பள்ளி இறுதித் தேர்வில் பெயிலான பிறகு அதில் மேற்படிப்பு... சாத்தியமா என்ன? இந்தக் காலத்துப் பிள்ளைகள் கடும் போட்டியின் இடையே படித்து வெற்றி பெற வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் ஐஐடி/எம் போன்ற நிறுவனங்கள் எப்படி வந்தார்கள் என்ற சல்லடை நோக்கை விட்டு, ஐஐடி/எம் என்ற தரத்தை ஓரளவுக்காவது அனைவர் மேலும் பூச முற்பட வேண்டும்.

    சேர்க்கை விதிகள் ஒரே மாதிரியாக இருப்பதாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  33. அன்பார்ந்த அப்பாதுரை தாங்கட்கு
    ஒரு வித்தியாசமான அனுபவம். எழுதுங்கள் தொடர்ந்து.
    வில்லவன் கோதை

    பதிலளிநீக்கு