2011/10/03

குருமா

போக்கற்ற சிந்தனை



                          ப்போதெல்லாம் இருபது வினாடிகளுக்குள் என்னால் முடிவெட்டிக் கொள்ள முடிகிறது. இது வசதியா வருத்தமா? முடிவெட்ட இருபது வினாடியானாலும் பத்து நிமிடமானாலும் ஒரே ரேட். பதினைந்து டாலர். இப்பொழுது சொல்லுங்கள், வசதியா வருத்தமா? முடியைப் பற்றி முடிக்குமுன், இன்னொன்று. சமீபத்தில் முடியலங்காரப் பரேட் ஒன்று நடந்தது. பொதுவாக ந்யூயோர்க், பேரிஸ், மிலான் நகரங்களில் நடப்பது, யார் செய்த பாவமோ சிகாகோவில் நடந்தது. முடியிருப்பவர்கள் மட்டுமே போவார்கள் என்று நான் ஒதுங்கி நின்றாலும் சில படங்களையும் விடியோக்களையும் பார்த்தபோது ஐயோ என்றிருந்தது. இரண்டாவது முடியலங்காரப் படத்தைப் பார்த்தும் முதலில் அதிர்ந்தேன். பின்புறத்தில் இத்தனை முடியா? நல்லவேளை, மயில்தோகை.

ஒன்று நிச்சயம். என்ன பிடுங்கிக் கொண்டிருந்தாய் என்று இவர்களை யாரும் கேட்க முடியாது.

                                                                  பிடுங்குவதைப் பொருத்த வரையில் ரிபப்லிகன் கட்சிக்காரர்களை அடித்துக் கொள்ள முடியாது. தங்கள் கட்சியில் வெற்றி பெறக்கூடிய, தகுதி வாய்ந்த, எவரையும் தேட முடியவில்லையா? அல்லது, பதினேழாம் நூற்றாண்டு ஆங்கிலேய ஆளுமை மனப்பான்மையா? அல்லது இரண்டுமா தெரியவில்லை. ஓசைப்படாமல் டிக் சேனி அதிர்வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார். இத்தனை நாள் டெமோக்ரேட்களை குப்பையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் பாணியில் சொல்லிக்கொண்டிருந்தவர், திடீரென்று ஹிலெரி க்லின்டன் ஒபாமாவை விட சிறந்த அதிபராக விளங்கியிருப்பார் என்கிறார். என்றைக்கோ அறிந்த விஷயம். ஒபாமாவுக்கு எதிராக ஹிலெரியை ஆதரித்த என் போன்ற எத்தனையோ பேருக்குத் தெரிந்த விஷயம். இருந்தாலும் சேனியின் விஷமம் இந்த நேரத்தில் வெளிப்படும் சூட்சுமத்தை டெமோக்ரேட் வாக்காளர்கள் புரிந்து கொண்டால் சரிதான். இரண்டு உண்மைகள் இதிலிருந்து புரிகின்றன. ஒன்று: ஒபாமா மட்டையா இல்லையா என்ற சந்தேகம் தோன்றினாலும், டிக் சேனி குட்டை என்பது சந்தேகமறப் புரிகிறது. இரண்டு: கொஞ்சம் யோசித்ததில், ஒபாமா மட்டை என்பதும் புரிகிறது. ஹ்ம்ம்ம்.. மட்டை மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார் போலிருக்கிறது.

ஏழரை நாட்டு சனி, எட்டு வருடம் என்பார்கள். சாதனைகளை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தவன், இப்பொழுது சனியையும் நம்பத் தொடங்கிவிடுவேன் போலிருக்கிறதே?

                                                                  சாமாவைத் தீர்த்துக் கட்டியது ஒரு சாதனை. ஹிலெரி அந்த முடிவை எடுத்திருப்பாரா என்பது சந்தேகமே. திருவாளர் மட்டையின் துணிச்சலைப் பாராட்ட விரும்பும் அதே நேரத்தில், எப்படி இருந்தாலும் அந்த முடிவைச் செயல்படுத்தியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். இதை வைத்துக்கொண்டே அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைத்த மட்டைக்கு, அடிவயிறு கொஞ்சம் கலங்கத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. நாலு வருடங்களாக நாட்டுக்குத் தேவையான ஒன்றையும் பிடுங்கவில்லை. அமெரிகாவின் இன்றைய தேவை வேலைவாய்ப்பு என்று திடீர்ப்பேச்சு பேசிக்கொண்டிருக்கிறார், திருவாளர் மட்டை. 'ஆகா, ஓகோ, என்ன அறிவு!' என்று இடதுசாரி மீடியா மொத்தமும் மட்டைக்கு சிவப்புக்கம்பளம் விரித்து ரோஜாப்பூப் பாராட்டுக்களைத் தூவிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் க்ரெடிட் ரேடிங் குறைந்து போகும் அளவுக்கு உள்நாட்டு வெளிநாட்டு வணிகமும் பொருளாதாரமும் வளர்ச்சியும் கேடுகெட்டுப் போனதற்கு இந்த ஆட்சி பொறுப்பில்லையாம், முந்தைய ஆட்சியின் தவறுகள் இன்னும் பாதிக்கின்றனவாம். மட்டையின் திருவாய்மொழி. அதையும் இந்த நவராத்திரி நன்னாளில் அத்தனை மீடியாவும் ஆமோதித்து சுண்டல் போல் வினியோகித்துக் கொண்டிருக்கின்றன. மட்டைக்கு பாராட்டு மலர்களைத் தூவிக்கொண்டிருக்கின்றன.

உங்கள் நாக்கையும் நீட்டுங்கள், சேர்த்துப் பிடுங்கிக் கொள்கிறேன். ரொம்பத் தூவாதீங்கடா. தூ!

                                                                  மீபச் சனிக்கிழமையொன்றில் சினிமா பார்த்தேன். பெரிய விஷயம் இல்லை. எனினும், பிள்ளைகளுக்காக சில படங்கள் போவேனேயொழிய, எனக்காகத் தியேடர் போய் திரைப்படம் பார்ப்பது அபூர்வம். வருடத்தில் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அதிசயம். சென்ற சனிக்கிழமை பார்த்தது, killer elite என்ற ஆங்கிலப்படம். (ஹிஹி.. இங்கிலிஷ் டைட்டிலோட இப்பல்லாம் தமிழ்ப்படம் கூட வருதுங்க, அதான் :). ராபர்ட் டி நிரோவுக்காகப் பார்த்தேன். ஸ்டேதமும் ஒவனும் அடித்து நொறுக்கும் பொழுது, டி நிரோ வன்முறையை வார்த்தைகளால் காட்டுவதைப் பார்த்து ரசித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அடிதடிக் காட்சிகளைப் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், உடனடியாக யாரையாவது அடித்து நொறுக்க வேண்டும் போல..கை காலெல்லாம் அப்படிப் பற்றிக் கொண்டு வந்தது. படம் சுமார். தமிழ்ப்படமே மேல் என்று தோன்றியது. (ஒரு பேச்சுக்காகச் சொன்னேன் :)

இந்தப்படம் தமிழில் வந்தே தீரும் அபாயம் உண்டு. கமலகாசன் நடிக்கலாம். பிறகு, பதினைந்து வருடங்களாக இந்தக் கதையைத் தன் மனதில் உருட்டிக் கொண்டிருந்ததாகக் கூசாமல் உண்மை பேசலாம்.

                                                                  சென்ற வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து இன்று திங்கள் மாலை வரை எங்கள் குடியிருப்பில் மின்சாரம் தொலைந்தது.

வெள்ளிக்கிழமை மாலை வீடு சேரும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தேன் எனலாம். என்னைப் போல் ஒரு கையால் காரோட்டியவர்கள் எல்லாருமே மறு கையில் உயிரைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் என்பது புரிந்தது. சிகாகோவில் சாதாரணமாகவே காற்று பிய்த்துக் கொண்டு போகும். windy city என்றப் பெயர்க்காரணம். வெள்ளிக்கிழமை மாலை, மழையுடன் சேர்ந்து நாற்பது மைல் வேகத்தில் அசாத்தியக் காற்று, ஓடும் வாகனங்களைக்கூட அசைத்து நகர்த்தியது. திகில். போதாக்குறைக்கு மாலைச்சூரியனின் வெண்மை. கருமேகமில்லாத வானத்திலிருந்து மழை பொழிவதை இப்போதுதான் முதல் முறை பார்த்தேன். மாலைச்சூரியனின் செம்மை தொலைந்து, உச்சிவேளை சூரியன் போல் வெள்ளை வெளேறென்று horizonல் கண்ணைக் கூசுவதையும் இப்போதுதான் மு மு பா. திகிலோ திகில். ஜப்பான், கொரியக் கார்கள் எல்லாம் விழி பிதுங்கி ரோட்டோரமாக ஒதுங்கி நிற்க, அமெரிக்க ஜெர்மனியக் கார்கள் மட்டும் சுகப்பிரயாணம் செய்ததையும் இ தா மு மு பா. எல்லாம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்தால்... இருள். மின்சாரம் இல்லை. ஏறக்குறைய இருபது வருடங்களில் இதுதான் முதல் மின்சாரவெட்டு. பிள்ளைகளுக்கு ஆச்சரியம். பிறந்ததிலிருந்து இன்றுவரை மின்சாரவெட்டோ குறையோ பழகாதவர்களுக்கு, இருள் விசித்திரமாக இருந்தது. 'ஐபாட் சார்ஜ்' செய்ய மறந்த என் பெண் முதலில் கொஞ்சம் புலம்பினாலும், மெழுகு விளக்கு, பேட்டரி விளக்கு ஒளியுடன் டிவி இல்லாத "அந்தக்கால" வாழ்க்கை வாழ்ந்தாள். என்றைக்குமே இல்லாத அளவுக்கு "குடும்ப" உணர்வோடு இரண்டு நாட்களைக் கழித்தோம். "இப்படியே இருந்தால் நன்றாக இருக்குமே?" என்ற என்னிடம், "dad, எதையும் கிடைக்கும் பொழுது அனுபவித்துக் கொள்ள வேண்டும். நிலைக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்" என்று நான் வேறு எதற்கோ எப்போதோ அவளிடம் சொன்னதை நினைவில் வைத்துத் திருப்பிச் சொன்னாள்.

touche!

                                                                  சிலர் பதிவெழுதுகிறார்கள். சிலர் படிக்கிறார்கள். சிலர் எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். சிலர் எழுதாமல் படிக்க மட்டும் செய்கிறார்கள். சிலர், தான் பெற்ற இன்பம் வையம் பெறப் பகிர்ந்து கொள்கிறார்கள். 'படித்ததில் பிடித்தது' என்று நண்பர் பாலராஜன்கீதா அவ்வப்போது பதிவு digest அனுப்புகிறார். அட்டகாசம். எழுதுவதை நிறுத்திவிட்டு இவருடைய இமெயிலை மட்டும் படித்தால் போதும் என்று தோன்றும். அவர் அனுப்பிய சில ஜோக் பதிவுகளை நினைத்து முடிவெட்டிக் கொள்ளும் போதோ நடுத்தெருவில் நிற்கும் போதோ பலமாகச் சிரித்துக் கொண்டிருப்பேன். மிரண்டு போய் காதை வெட்டிவிடுவார் முடிவெட்டி. அல்லது நடுத்தெருவில் ஐந்து காசு பத்து காசு போடுவார்கள்.
     :அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
     :அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்

சிரிக்க வைக்கும் பாலராஜன்கீதா வாழ்க.

                                                                  ப்படியோ தடுமாறிச் சில பதிவுகளில் இறங்கி, படித்ததும் பிரமித்து விலகமுடியாமல் ப்லாகின் முதல் பதிவிலிருந்து தேடிப் படித்த அனுபவமுண்டா?. இவை, இனிய வலை விபத்துக்கள் என்பேன். சமீபத்தில் அப்படி விபத்துக்குள்ளாகி விழுந்த இரண்டு பதிவுகளைப் பற்றிச் சொல்கிறேன். சமுத்ரா எனும் வலைப்பூவை எழுதுகிறவரின் கைகளைப் பிடித்து இரண்டு நாள் குலுக்க வேண்டும் போலிருக்கிறது. அண்டம், ஆன்மீகம், அறிவியல், நையாண்டி, கவிதை என்று எழுதித் தள்ளுகிறார். கவிதைகளைத் தவிர மற்றவை அருமை. இவருடைய அறிவியல் பதிவுகள், தமிழுக்கு ஒரு வரம். நான் பிரமித்துத் தொடரும் இன்னொரு ப்லாக் தமிழ் தொகுப்புகள்.

இவர்களின் பொறுமைக்கும் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் வந்தனம்.

                                                                  திவுகளைப் படிப்பது ஒருபுறம். பின்னூட்டப் படிப்பும் அதற்கு இணையான சுவாரசியம். சிலரின் பின்னூட்டங்கள் வியக்க வைக்கின்றன. மஞ்சுபாஷிணியின் பின்னூட்ட sincerity, poised to become blogworld legend என்று நினைக்கிறேன். 'அருமை', 'பயனுள்ள பதிவு' போன்றோ பதிவின் கடைசி பத்து வரிகளில் இரண்டை வெட்டி ஒட்டி 'மிகவும் கவர்ந்த வரிகள்' என்றோ canned பின்னூட்டமிடாமல், ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதுகிறார். சில சமயம் பதிவை விட நீளமாகப் பின்னூட்டமிடும் இவர், பதிவெழுதுவோரின் கனவு வாசகர். Ganpath என்றொருவர் ஜவஹரின் பதிவில் பின்னூட்டமிடுகிறார். இவருடைய பின்னூட்டங்களைப் பிற பதிவுகளில் காணோம். இவருடைய பின்னூட்டத்துக்காகவே ஜவஹர் பதிவுகளைப் படிப்பதுண்டு. ஒருவேளை ராமசுப்ரமணியன் போல, வேறு வேறு பெயர்களில் பின்னூட்டமிடுகிறாரோ ganpath? எங்கள் பிலாக் ஸ்ரீராம், பின்னூட்ட நாசூக். Ganpath பின்னூட்டக் கஞ்சன் :-) என்றால், ஸ்ரீராம் பின்னூட்ட வள்ளல். எந்த ப்லாகில் பார்த்தாலும் எங்கள் ப்லாக் ஸ்ரீராமின் பின்னூட்டம் இருக்கிறது.

யாதும் ப்லாகே, யாவரும் கேளிர்.

                                                                  ங்கள் ப்லாக் ஒரு முறை சித்திரப் பயிற்சி நடத்தி படம் வரைந்து அனுப்பச் சொன்னார்கள். 'pear' பழ வடிவில் ஒன்றைக் கொடுத்து அதன் அடிப்படையில் படம் வரைந்து அனுப்பச் சொல்லியிருந்தார்கள். என்னுடைய சைக்கிள் படத்தை வெளியிட்டவர்கள், வலதுபக்கப் படத்தை ஏனோ வெளியிடவில்லை. தணிக்கையா அல்லது தயக்கமா தெரியவில்லை. அதே போல், யாதோன் கி பாராத் படம் பற்றிய ஒரு பின்னூட்டத்தையும் நீக்கி விட்டார்கள். ஒருவேளை RVS படிக்கத் தவறியிருக்கலாம் என்பதற்காக, அந்தப் பின்னூட்டம் இதோ, நினைவிலிருந்து:
    யாதோன் படத்தை மறக்கமுடியாமல் செய்த அனுபவம் இது தான்.
    படத்தில் தர்மேந்திரா ஜீனத்திடம் "ஆப் கி நாம் க்யா ஹை?" என்பார்.
    ஜீனத் சற்று இழுத்து, "சு னீ தா" என்பார்.
    தியேடரில் ஒரு குரல்: "தந்துட்டு நான் என்னமா செய்யுறது?"

                                                                  யாதோன் படத்தை நானும் ரமணியும் இன்னும் சில பம்மல் நண்பர்களும் பார்த்தது இன்றைக்கும் நினைவிருக்கிறது. தாம்பரம் நேஷனல் தியேடர் என்று நினைக்கிறேன். தியேடரில் குரல் கேட்டதும் சிரித்துச் சிரித்து இருமல் வந்துவிட்டது ரமணிக்கு. ரமணி எந்த நேரத்திலும் அமைதியாக இருப்பான். அதிர்ந்து கூடப் பேசமாட்டான். கோபமோ ஆத்திரமோ துளிக்கூட இல்லாத ரமணி, போன மாதம் மாரடைப்பில் இறந்துவிட்டான். ரமணியின் முத்திரை பதிந்த என் விடலை நாட்களை நினைக்கும் பொழுது உள்மனம் புன்னகைக்கிறது. க்ரிகெட் விளையாட்டில் மீடியம் பேஸ், ஸ்பின்.. அப்புறம் காட்டான் சுரேசுடன் சேர்ந்து அவ்வப்போது சிக்ஸர்களை காட்டடி அடிப்பான். ஹாக்கி விளையாடும் பொழுது கோல் கீப்பர் என்று சுகமாக நின்று கொண்டுவிடுவான். ரவுடித்தனத்தில் விருப்பமில்லாவிட்டாலும், எங்களுக்காக உடன்பட்டுக் கூடவே வருவான். என் குழுவின் மற்ற நண்பர்கள் என்னுடைய புரட்டுக்களை 'பட்சவண்டா' என்று ஏற்கையில், 'உடான்ஸ்' என்று வகைப்படுத்திய உறுதி நெஞ்சக்காரன். என்னைப் போலவே ரமணிக்கும் படிக்கப் பிடிக்கும். குறிப்பாக, காதல் கதைகள் மற்றும் science fiction. ரமணியுடன் அடித்தக் கூத்துக்களில் சிலவற்றை என் சிறுகதைகளில் சேர்த்திருக்கிறேன்.

நட்பின் மரணம், தாங்கமுடியாத வலி.

                                                                  லிக்கும் காதல் கதை ஒன்று.

டாம் டூலியும் ஆன் பாஸ்டரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் பழகினார்கள். ஆனுக்கு ஒரு சகோதரி, மேரி. ஆனும் மேரியும் டாமும் சிறுவயது முதல் பழகினார்கள் என்றாலும், டாமும் ஆனும் நெருக்கமாகப் பழகினார்கள். காதல் மலர்ந்தது. ஆன் காதலிப்பது தெரிந்தும், மேரி டாமைக் காதலித்தாள்; ஆனால் தன் காதலைச் சொல்லவில்லை. டாமுக்கோ ஆனை மட்டுமே காதலிக்கத் தோன்றியது. காதலிக்கத் தொடங்கிய வேளையில், டாம் போருக்குப் போக நேர்ந்தது. போரில் டாம் இறந்துவிட்டான் என்று செய்தி கிடைத்ததும், ஆன் துடித்துப் போனாள். சில வருடங்களில் இன்னொருவரை மணமுடித்தாள். சொல்லி வைத்தாற் போல் திருமணம் முடிந்த இரண்டு மாதங்களில் டாம் திரும்பி வந்தான். சாகவில்லை, செய்தி பொய் என்று தெரிந்ததும் ஆன் இன்னும் துடித்துப் போனாள். ஆனால் அவள் கர்ப்பமாகியிருந்தாள். மேலும் அவளுடைய கணவனோ, அவளை உயிருக்கு மேலாக நேசித்தான். ஆனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. புதைந்து போயிருந்த காதல் உணர்வெல்லாம் மீண்டும் துளிர்விட்டது. மனமுடைந்த டாம், அவர்கள் வாழ்வில் குறுக்கிடுவதில்லை என்று ஆனின் கணவனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு ஊரைவிட்டுக் கிளம்ப முயன்ற போது, மேரியைச் சந்தித்தான். மேரியுடன் பழகத் தொடங்கினான். சிறுவயதுப் பழக்கம் மெள்ளக் காதலாக மலரத் தொடங்கிய நேரத்தில், டாம் தயங்கினான். தன்னால் அவ்வளவு எளிதில் ஆனை மறக்க முடியாதென்றான் மேரியிடம். அவர்களிடையே சிறு ஊடல் நடந்ததை ஊரார் பார்த்தார்கள். அன்றிரவு மேரி கொலை செய்யப்பட்டாள். கழுத்திலும் மார்பிலும் கத்திக்குத்துடன் மேரி இறந்ததும், ஊடல் சண்டையைப் பார்த்த ஊரார் டாம் கொலை செய்திருக்க வேண்டும் என்று குற்றம் சுமத்திச் சாட்சி சொன்னார்கள். வழக்கை விசாரித்து, அவனுக்குத் தூக்கு தண்டனை கொடுத்தார்கள். தூக்கு மேடையில் கடைசி நிமிடத்தில், "ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" என்று கேட்டார்கள். சிவாஜிகணேசன் போல் தோளை உயர்த்தி கைகளை விரித்த டாம், "கட்டியணைக்கும் கைகள் இவை, கத்தியா செருகும்?" என்றான். ரைட்டோ என்று சொல்லி அவனைத் தூக்கிலிட்டார்கள். ஆன் மட்டும் அழுது கொண்டே இருந்தாள். பொறாமையினால் மேரியைக் கொன்றது ஆன் என்றும், ஆன் கொலை செய்தாள் என்று தெரிந்தும் அவள் மேலிருந்த காதலினால் டாம் தானே குற்றத்தை ஏற்றான் என்றும் பேசிக்கொண்டார்கள். 2001ல் டாம் நிரபராதி என்று தீர்ப்பளித்தார்கள். டாம் தூக்கிலிடப்பட்டது, 1868ல்.

ஒரு பிரபல நாட்டுப்புறக்கூத்து, பல பாடல்கள், சில திரைப்படங்கள் என்று இந்தக் கதையைத் திரித்துக் கொண்டே இருந்தார்கள், இருக்கிறார்கள். இந்தக் கதையையொட்டி ஐம்பதுகளில் வந்த ஒரு பாட்டு, பத்து வருடங்களுக்குப் பின் எம்எஸ்வி இசையில் வெளியான ஒரு முதல்தரக் காதல் பாட்டுக்கு மெட்டானது.

காதல் பாட்டு, எம்எஸ்வி... அடடா, தமிழ்ச் சினிமாவின் #1 காதல் பாட்டைப் பற்றி இன்னும் எழுதவே இல்லையே?



பிற்சேர்க்கை: bogan ஸ்பெஷல்.
    Kingston Trio ஐம்பதுகளில் பல இனிமையான பாடல்களைக் கொடுத்தார்கள். இந்த விடியோ இடம்பெறும் 1981 வருட reunion video album, சில நூலகங்களில் கிடைக்கிறது. இது நெட்டில் சுட்டது. இந்த reunion விடியோ எடுத்தபோது, இவர்களுக்கு 198 வயது - குரல் எப்படி கிண்ணெண்று இருக்கிறது!



51 கருத்துகள்:

  1. குருமா அருமை .... இரண்டு சப்பாத்தி கூடவே சேர்த்து இறங்குது .....

    சமுத்ரா ... நான் அடிக்கடி சுத்தும் பத்து பதிவுகளில் ஒன்று ... இயற்பியல் ரொம்ப இலகுவா கொண்டுபோகிறார் ... ஒளிவேக விளையாட்டு எழுதும் அவர்க்கும் சலிக்கவில்லை படிக்கும் நமக்கும் சலிப்பதில்லை ..
    தமிழ் தொகுப்பு .. முதலில் பார்க்கும் வலைப்பூ நன்றாக தொகுக்கிறார்கள் அறிமுகத்துக்கு நன்றி ....போனவுடன் தயாராக வாத்தியாரின் எழுத்து இரண்டு ..குதிரை .. அப்பா அன்புள்ள அப்பா .....அப்பப்பா பாரமாக்கி விட்டார் ...

    படம்... பின்னுட்டம் எங்களில் தணிக்கை பற்றி கூறினீர்கள் ... அவர்கள் தணிக்கையின் நியாயத்தை உணர்கிறேன் ... சில படங்கள் / வார்த்தைகள் / கருத்துகள் பால்ய பட்டு பழகி சிரித்து பகிர்வதற்கே உரியது ... பொதுவில் நிச்சயம் முகசுளிப்பு வரத்தான் செய்யும் .. இங்கு பணிபுரியும் இடத்தில் பல அமெரிக்கர்களும் சில ஐரோப்பியர்களும் பக்கித்தனமாக ஓரு வார்த்தையை உபயோகிப்பார்கள் .. கேட்டால் நாங்கள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்பார்கள் .. இன்னமும் இந்தியர்களுக்கு அது அசூசையான வார்த்தை தான். என்னளவில் அந்த பேச்சு கேட்பதை நிறுத்திவிட்டேன் (வெள்ளைக்காரனின் ஈகோவை வெல்வது அவ்வளவு எளிதல்ல ).....

    //நட்பின் மரணம், தாங்கமுடியாத வலி. // உண்மைதான் ... காலமும் நினைவுகளும் ஆற்றட்டும்

    டாம் கதை உருக்கம் ... ஆன் மேல் கோபம் வருகிறது ...

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்ம் என்ன நடக்குது இங்க? அட அப்பாதுரை கதை எழுதிட்டாஆஆஆஆர்னு படிக்க ஓடி வந்தால் கதம்ப உணர்வுகளால் விஷயங்களால் குருமா மணக்கிறதே....

    சரி ஒன்னொன்னா பார்ப்போமா?

    முடிவெட்டிக்கிறது முடி அதிகமாகி நம்மை சிரமப்படுத்தி நம் கழுத்து மறைக்குமுன் கண் மறைக்குமுன் கிடைக்கும் நேரத்தில் சடுதியா ஓடி போய் முடி வெட்டிட்டு வராங்க எங்க வீட்ல எல்லாரும்.. டைம் பற்றாக்குறை தாம்பா... ஆனா நீங்க என்னடான்னா ஒரு ஹிஸ்ட்ரியே எழுதி வெச்சிருக்கீங்க... நல்லவேளை முடியலங்கார பரேடில் நம்ம தமிழ்நாட்டு ஸ்டைல் யாரும் கொண்டு வரலை.. அப்படி வந்திருந்தால் முதல் பரிசு நம்ம இந்திய ஸ்டைலுக்கு தான் கண்டிப்பா கிடைச்சிருக்கும்.. அத்தனை அழகும் நளினமும் மென்மையும் ஈர்ப்பும் நம்ம தமிழ்ப்பெண்களின் தலைமுடிக்கு ஈடாகுமா? என்ன ஒன்னு அழகா ஜடை பின்னி பூ வெச்சுக்கிட்டு பேண்ட் ஷர்ட் போடமுடியாது... மேபி அதனால முடியலங்கார பரேடில் நம்முது மிஸ் ஆகி இருந்திருக்கலாம்.. ஆனால் அதை இந்த அளவுக்கு சிந்தித்து சிந்தித்து இப்படி கொண்டு வந்து இங்க போடுவீங்கன்னு ஹுஹும் நான் நினைக்கலப்பா சாமி....

    ஒசாமாவை தீர்த்து கட்டியது நிஜமாவே சாதனை தானே இல்லையாப்பின்னே? அந்த லிஸ்ட்ல எப்பப்பா ராஜபக்‌ஷே வருவார்?

    ஆங்கிலப்படங்களை மட்டுமல்ல இன்னும் என்னென்னவோ உல்டா பண்ணி இத்தனை வருஷம் சிந்தித்து செயல்படுத்திய வடிவம்னு கண்டிப்பா சொன்னாலும் சொல்வாங்கப்பா.. சொரணை இல்லாதவங்க செய்யும் வேலை இது.... சுயமாக சிந்தித்து பெயர் வாங்குவோர் மத்தியில் இவங்க ஒரு அவமானச்சின்னம்னே வெச்சுக்குவோமே...

    வெள்ளிக்கிழமை போன கரெண்ட் திங்கள் தான் வந்திச்சா? ஐயோ எங்க இருக்கீங்க நீங்க? மின்சார தட்டுப்பாடு என்னென்னல்லாம் செய்ததுன்னு நீங்க சொன்னதை ரொம்ப சீரியசா படிச்சுக்கிட்டே வந்தப்ப பக்குனு சிரிப்பு வந்திருச்சு... எது படிச்சு சொல்லுங்க பார்ப்போம்? இப்படி குடும்ப உணர்வோடு இருக்க முடிந்ததே நெட், கரெண்ட் டிவி லொட்டு லொசுக்கு இல்லாம அப்ப இப்படியே இது நிலைத்தால் எவ்ளோ நல்லாருக்கும்னு நீங்க சொன்னப்ப உங்க பெண் வந்து அப்பா அப்பா அப்பாதுரை அப்பா எதையும் கிடைக்கும்போது அனுபவிக்கனுமே தவிர நிலைக்கனும்னு நினைக்க கூடாது எப்பவோ நீங்க சொன்னது உங்களுக்கே ரிப்பீட் அடிச்சாங்க பாருங்க.. அதை படிச்சு... ஏன் சிரிச்சேன்னு கேக்குறீங்களா? என் வீட்டில் அடிக்கடி நடப்பது இது.. தகப்பன் சாமி போல என் குட்டி பையன் அடிக்கடி உங்க பெண் போல எனக்கு நான் சொல்வதையே திருப்பி சொல்வதை தான் சொல்கிறேன்... சிரிக்க வெச்சுடுச்சு போங்க... ஏன் தெரியுமா? அப்படி உங்க மகள் சொன்னப்ப நீங்க எப்படி என்னை போலவே திருதிருன்னு முழிச்சதை நினைச்சு பார்த்தேன் அதான் சிரிப்பு வந்துட்டுது ( தமாஷ் தமாஷ் சீரியசா எடுத்துராதீங்கப்பா )

    பதிலளிநீக்கு
  3. :அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
    :அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்

    உடனே சிரிக்க வைத்துவிட்டது இதுவும்.. பாலராஜன் கீதாவுக்கு என் சார்பில் ஒரு நன்றியை வாழ்த்தை மறக்காம சொல்லிருங்க...

    எல்லாரும் ஜோக் படிச்சா கேட்டா சிரிப்பது இயல்பு.. ஆனால் ஒரு ஜோக் எழுதி அதை படிக்கும்போதே சிரிக்கிறோமே.. அப்படி சிரிக்கவைக்கும் கலை எல்லோருக்கும் கைவருவதில்லை.. அதனால் தான் நன்றிகள் சொன்னேன்....

    கரெக்ட் எங்கள்ப்ளாக் ஸ்ரீராம் பதிவும், சமுத்ரா பதிவுகளும் பார்த்திருக்கேன்... மூளையே இல்லாத நான் என்னத்த எழுதுவது பகவானேன்னு ஆச்சர்யமா பார்த்து வியந்திருக்கிறேன்....

    தமிழ் தொகுப்புகள் படிச்சிட்டு சொல்வேன்பா...

    ரமணி - உங்கள் நண்பரை பற்றி சிலாகித்து சொன்ன விஷயங்கள் படிக்கும்போது உங்களுடன் நாங்களும் அவரை பற்றிய நினைவுகளில் ஆழ்ந்துவிட்டோம் இணைந்து....நீங்க உடான்ஸ் மாஸ்டரா இருப்பதால் தான் எங்களுக்கு இத்தனை அருமையான கதைகள் படைப்புகள் கிடைக்கிறது.. இது தெரியுமோ? நட்பின் மரணம் தாங்கமுடியாத வலி... உண்மையே.... இத்தனை நாள் நம்முடன் இருந்து பழகி சிரித்து சந்தோஷித்து நம் துக்கங்களில் பங்கெடுத்து திடிரென இல்லாது போகும் அந்த சூனியம் அதிலிருந்து நாம் வெளிவர எத்தனை காலம் பிடிக்குமோ தெரியாது.... மனம் சட்டென ஒரு நிமிடம் அமைதியாக இருந்தது அவர் மறைவை படித்தபோது.....

    வலிக்கும் காதல் கதை ஒன்றை கொடுத்தீங்க.. இப்படி ஒரு காதல் எங்க இருக்கு இந்த காலத்தில்??? எல்லாமே குப்பைக்காதல்.... காசுக்காகவும் எஸ் எம் எஸ் ரீச்சார்ஜுக்காகவும் டைம் பாசுக்காகவும் திருமணம் வரை எட்டுவதில்லை காதல்.. ரெண்டு நாள் பழகி மூன்றாவது நாள் பைபை சொல்லும் இந்த காலத்து பிள்ளைகளின் காதலுக்கு நடுவே இது போன்ற உணர்வு மிக்க காதலை படிக்கும்போது அதில் ஆழ்ந்துவிட முடிகிறதுப்பா..

    ஹூம் தான் கொலை செய்யவில்லை என்பதை எத்தனை அழகா சொல்லிட்டான். அணைக்கும் கைகளா உயிரை அடக்கி இருக்கும்? கொன்றவள் மனசாட்சியின் குதறலில் இனி உறங்கவே முடியாது... மரணித்து எத்தனை வருடம் கழித்து அவன் நிரபராதின்னு அசால்டா சொல்லுகிறது..... அதை கேட்க அவனே இல்லை....

    இன்னைக்கு மணக்க மணக்க பலதரப்பட்ட விஷயங்களை ஒன்றிணைத்து எங்களை திக்குமுக்காட வெச்சிட்டீங்க அப்பாதுரை.....

    இதில் நான் சிலாகித்த விஷயம் ஒன்று தான்
    இத்தனை அழகாய் ஒவ்வொன்றாய் நிதானமாய் மாலை போல் அழகாய் கோர்த்து அதற்கு ஒற்றை வார்த்தை அல்லது வரியால் நச் கமெண்ட் கொடுத்திருக்கீங்க பாருங்க, அதை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை...

    வெஜிடபிள் குருமா பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருந்ததுப்பா....

    அன்பு நன்றிகள் இதில் என்னையும் சேர்த்ததற்கு....

    சுவாரஸ்யமா விஷயங்களை சொல்லும்போது படிப்பவர் கவனம் சிதறாமல் இருக்க கொடுக்கும் அருமையான விஷயங்கள் வியக்கிறேன் நான்....

    அடுத்து என்னப்பா?

    பதிலளிநீக்கு
  4. நேத்து நைட்டே அண்டைட்டுல்ட்னு உங்க பதிவு பார்த்துட்டு ஓடிவந்து பார்த்தால் காணோம்... இதே ஹேர்ஸ்டைல் எல்லாம் இருந்திச்சு.. ஆனா காணோமேன்னு நினைச்சுட்டு போனேன். காலை வந்து பார்த்தால் நீங்க கோர்த்த மாலையில் நேற்று நான் பார்த்தது ஒரு பூ என்று தெரிஞ்சுது....

    பதிலளிநீக்கு
  5. எங்கள் பிளாக்கில் ஆர்,வி.எஸ் ஆ?

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  6. அமெரிக்காவிலும் மின்தடையா...அடடா....ரொம்பக் கஷ்டப்பட்டீங்களோ....(ஹி...ஹி... கண்டு பிடிச்சிட்டீங்களா....அப்பாடா...இப்போதான் கொஞ்சம் திருப்தியா இருக்கு...நீங்க இந்தியால இருக்கற மாதிரி ஃபீல் பண்ணினீங்களோ இல்லையோ நான் இப்போ சிகாகோல இருக்கறா மாதிரி ஃபீலாயிட்டேன்!!) மஞ்சுபாஷிணி போல எல்லாம் நம்மால கமெண்ட் போட முடியாது சாமி... காதலுக்கு உலகமெங்கும் ஒரே மொழிதானே...!

    பதிலளிநீக்கு
  7. விவகாரமான கமெண்ட்டுக்கு என்னை கோர்த்துவிட்டுட்டீங்களே தலைவரே!

    நல்லவேளை இதை வச்சு கும்மியடிக்காம விட்டுட்டாங்க....

    சிக்காகோவில யாரு சார் மின்துறை அமைச்சர்!! எங்க ஊரு ஆர்க்காட்டர்கிட்ட ட்ரெயினிங் எடுத்துக்கிட்டாரோ?

    ஆனா ஒன்னு மட்டும் உண்மை சார்.. சாயந்திரம் 6-10 கரெண்ட் இல்லைன்னா சென்னையில ரொம்ப நிம்மதியா இருக்கும்.. சீரியல் ஹிம்சைகளிடம் இருந்து மக்களை காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கும் மின்சாரத்திற்கு.... :-))

    பதிலளிநீக்கு
  8. அன்பு அப்பாதுரை! இந்தப் பதிவு நேற்றேல்லாம் கண்ணாமூச்சு காட்டியது... இன்று தான் மாட்டியது.. குருமான்னா இது குருமா..

    ஏதாவது நாமும் சொல்வோம்னு பார்த்தா எதையாவது விட்டு வச்சிருக்காங்களா மஞ்சுபாஷினி? I agree.. அவர் ஒரு பதிவரின் லட்சிய வாசகரே! வாழ்த்துக்கள் மஞ்சுபாஷினி... தொடர்ந்து ஊக்குவியுங்கள்...

    ஒபாமாவை நன்றாக தாளித்து குருமாவில் கொட்டியிருக்கிறீர்கள்.
    மின்தடை உங்க ஊரிலுமா? ஆற்காட் வீராசாமியை அங்கு அனுப்பி வைக்கவா?

    சமுத்ராவை இனிதான் பார்க்கவேண்டும்.. கிருஸ்டி-னரோஜா பிடிச்சுக்கிட்டு இருக்காங்க என்னை இப்போ.

    நண்பன் மரணம் மிகப்பெரிய வலி!எனக்கும் மிக அண்மையில் என் கல்லூரி நண்பனின் மரணம் பெரிய அதிர்ச்சி தந்தது. ஒண்ணா அழுவோம் துரை!

    பதிலளிநீக்கு
  9. // எங்கள் Blog to anaani
    show details 5/31/10
    உங்கள் ஆர்வம் மெச்சத் தகுந்தது.
    கற்பனை வடிவங்களை வெளியிட எங்கள் ஆசிரியர் குழு வந்த படங்களை எல்லாம் பார்த்து
    தேர்ந்தேடுக்கும்பொழுது, வெகு சனங்களுக்கு (குறிப்பாக குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ) அறிமுகமான பரிச்சயமான வடிவங்களை மட்டும் வெளியிடுதல் நலம் என்று கருதியதால்,
    இதை வெளியிட வேண்டாம் என்று முடிவு எடுத்தோம்.
    நீங்க அனுப்பிய மீதி படங்களை வெளியிட்டுவிட்டோம்.
    இதை வெளியிட இயலாததிற்கு வருந்துகிறோம்.
    மன்னிக்கவும்.
    எங்கள் ப்ளாக் //
    மே மாதம் முப்பத்தொன்றாம் தேதி, 2010 ஆம் ஆண்டு, எங்கள் ப்ளாக் ஜி-மெயில் விலாசத்திலிருந்து, anaani@hotmail.com என்ற மின்னஞ்சலுக்கு, எங்கள் ஆசிரியர் குழுவில் ஓர் ஆசிரியர் அனுப்பிய மெயில்தான் நீங்கள் மேலே காண்பது.

    பதிலளிநீக்கு
  10. குருமா கார (ஒபாமா) சார(கரெண்ட் கட்)மாக இருந்தது. ரமணி அவர்களின் மறைவு வருத்தமாக இருந்தது. உங்கள் நண்பர்களில் சாதுவானவர் என்று சொல்லலாம் அவரை. எப்படி இன்றும் பெரும்பான்மையான நண்பர்களிடம் தொடர்பில் இருக்கிறீர்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.
    கமெண்ட் திலகம் மஞ்சுபாஷிணிக்கு ஒரு ஓ போட்டுக்கறேன்.

    பதிலளிநீக்கு
  11. வெஜ்.குருமா என்று நினைத்துப் படித்தால்,நடுவில் மட்டன் துண்டு!
    அங்கும் நீ...ண்ட மின்வெட்டு என்று படிக்க மகிழ்ச்சியாக இருந்தது!!யான் பெற்ற இன்பம்...!

    பதிலளிநீக்கு
  12. பாட்டு நன்றாக இருந்தது கொஞ்சம் கிளிப் ரிச்சர்ட் சாயல் இருந்தது.யார் பாடியது?

    பதிலளிநீக்கு
  13. //அதே போல், யாதோன் கி பாராத் படம் பற்றிய ஒரு பின்னூட்டத்தையும் நீக்கி விட்டார்கள்.//

    அந்தக் கமெண்ட்டை நீக்கியது நானே!

    பதிலளிநீக்கு
  14. மிக்க நன்றி அப்பாதுரை. மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. //அடிதடிக் காட்சிகளைப் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், உடனடியாக யாரையாவது அடித்து நொறுக்க வேண்டும் போல..கை காலெல்லாம் அப்படிப் பற்றிக் கொண்டு வந்தது.//

    அதே நினைப்பில் தான் படம் முடிந்து வெளியே வந்தவுடன் எனக்கு போன் செய்தாயோ !

    மீனாக்ஷி காபி போல் அந்தப்பயம் போலிருக்கு !

    பதிலளிநீக்கு
  16. குருமா அளவுடன் சேர்த்த மசாலாவுடன் மிகவும் ருசியாக இருக்கிறது.
    இரண்டு வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. நிதானமாக படிக்க வேண்டும்.
    காதல் கதை மனதை மிகவும் வலிக்க வைத்து விட்டது. வலிமையான காதலில் வலியும் வலிமையாக இருக்கிறது.
    பாடல் மிகவும் அருமை.

    உங்களை மிகவும் கவர்ந்த தமிழ் சினிமாவின் நம்பர் 1 காதல் பாட்டு என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். பாடல் எது என்பதை விடவும், அந்த பாடல் பற்றிய உங்கள் கருத்தையும், எதனால் அந்த பாடல் உங்களை இந்த அளவு ரசிக்க வைத்திருக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ள மிக மிக ஆவலாக இருக்கிறது. அது நிச்சயம் மெல்லிசை மன்னர் பாடலாகத்தான் இருக்கும் என்பதால்தான் இந்த எத்ரிபார்ப்பு. :) தயவு செய்து விரைவில் எழுதுங்கள்.

    ஸ்ரீராம்: இந்த பதிவில் நீங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடித்த நம்பர் 1 காதல் பாடல் எது என்று எழுதியே ஆகவேண்டும். தப்பிக்க முடியாது, (கூடாது) :).

    பதிலளிநீக்கு
  17. நன்றி பத்மநாபன், மஞ்சுபாஷிணி, Jawahar, ஸ்ரீராம், RVS, மோகன்ஜி, Kasu Sobhana (வாராது வந்த மாமணி), geetha santhanam, சென்னை பித்தன், bogan, kggouthaman, பாலராஜன்கீதா, சாய், meenakshi,...

    பதிலளிநீக்கு
  18. ம்ம்ம்... 60% இன்னொரு ப்லாக் பதிவில் கமெண்ட் போட்டது ரெகார்டோ?

    பதிலளிநீக்கு
  19. புண்படப் பேசுவதற்கும் நகைச்சுவைக்கும் வேறுபாடு உண்டே பத்மநாபன்? குறிப்பிட்ட சொல்லை பயன்படுத்தாமலே வெளிப்படுத்திய நகைச்சுவை - எனக்கென்னவோ வெடிச்சிரிப்பாகத் தான் தோன்றுகிறது. அப்படியே இருந்தாலும், சொல் தானே? ஆண் பெண்களின் நிறத்தையும் அழகையும் பருமனையும் பற்றி நகைச்சுவை செய்வது ரசனைக்குறைவாக நிறைய பேருக்குத் தோன்றுவதில்லை - forbidden languageஆக நினைப்பதில்லை. கவனித்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  20. bogan, பாடலைப் பாடியது 'kingston trio'. 'tom dooley' முழுப்பாட்டும் நெட்டில் கிடைக்கிறது (1956-58 வருடத்தியது அசல்). விரும்பினால் பாடலை அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  21. புரிந்தது...

    உடனடியாக சம்பந்தமில்லாமல் சொந்த/ நொந்த அனுபவங்களை சேர்த்து விட்டேன்.. சில சமயம்feedback ,reaction ஆக மாறிவிடுகிறது...

    கவனித்திருக்கிறேன்.ஆம் நீங்கள் சொன்ன பட்டியல் தாண்டி மாற்றுத்திறனாளர் நகைச்சுவைகளும் வந்துகொண்டுதான் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  22. சொந்த/ நொந்த :)

    "take my wife, for example......... please, somebody do, i mean it.. why doesn't someone take my wife?" என்பது நூறு வருடங்களுக்கு மேலாக சிரிப்பை வரவழைத்துக் கொண்டிருக்கிறது... மனைவி என்ற உறவைக் கொச்சைப்படுத்துவதாக யாருமே நினைப்பதில்லை. விழுந்து விழுந்து சிரிக்கிறோம. (கடந்த இருபது வருடங்களாக, lily tomlin துணிச்சல் காரணமாக "take my husband for example" வலம் வருகிறது :)

    பதிலளிநீக்கு
  23. அது வந்து Jawahar... RVS ஆகப்பட்டவர் பதிவு படிக்க லேட்டா வந்து இந்த மாதிரி edit ஆன சமாசாரத்தை மிஸ் பண்ணிட்னேனு ரொம்பத் துடிச்சுப் போயிடுவார். ஒருவேளை யாதோன் கமென்டை மிஸ் பண்ணியிருக்கப் போறாரேனு ஒரு ஆதங்கத்தோட நல்லெண்ணத்தோட.. அதான்..

    பதிலளிநீக்கு
  24. கொஞ்சம் வம்பு...

    "take my wife, for example......... please, somebody do, i mean it.. why doesn't someone take my wife?" ...

    ஆமாம் சிரிப்பு வருது ..ஆனாலும் நம்மூருக்கு ஒத்து வராது சிலது வெள்ளையனுக்கே உரியது... கலாச்சாரம் சொன்னா .. கெட்ட வார்த்தையெல்லாம் பேசவேண்டாம்ன்னு சாய் யையும் கூட்டிட்டு வந்து ரவுண்டு கட்டிருவிங்க... ( நீங்க ரெண்டு பேரும் பேரிக்கா நாடு என்பது எதேச்சை )

    பதிலளிநீக்கு
  25. // இவர்களுக்கு 198 வயது //- 66 X 3
    அல்லது 60 78 60

    கிண் குரல் தான்

    பதிலளிநீக்கு
  26. பேரிக்கா? :)

    சென்னையில் வாயைத்திறந்தால் த்தா தான் தலைவரே. கெட்ட வார்த்தையெல்லாம் நானே அமெரிக்க நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். இந்தியிலும் தமிழிலும் இல்லாத கெ வார்த்தைகளா? காலையில் நாலு மணிக்கெல்லாம் குழாயடிக்குச் சென்று குடிநீர் எடுத்து வர அனுப்புவார் அம்மா. நான், சுரேஷ், ரமணி என்று தெரு நண்பர்கள் குழாயடியில் கலந்துரையாடுவதைக் கேட்டு 'காலம் கெட்டுர்ச்சிடி... பாப்பார மூஞ்சிங்களைப் பாரு, வாய்ல நரம்பில்லாம பேசுறாங்க'னு அழுது கொண்டே விலகியவர்கள் உண்டு. என் நண்பன் நாராயணசாமி டில்லியில் பெரிய சிஈஓ. இன்றைக்கும் வாயைத்திறந்தால் முதல் வார்த்தை வேறே டைப் ஓங்காரம் தான். அவனுக்குத் திருமணமான புதிதில் அவனுடைய மாமனாருடன் சரளமாக ஓ போட்டுப் பேச திடுக்கிட்டுப் போனாராம்.. சிரித்துக் கொண்டே சொன்னான். சிறந்த பக்திமான். மகா புத்திசாலி. ஆயிரம் இருந்தும்.. சென்னை வாய் சென்னை வாய் தானே?

    பதிலளிநீக்கு
  27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  28. இதுக்கு சிரிக்காம இருக்க முடியல ... சென்னை... சென்னையின் சஹஸ்ரநாமமே வேறு...எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது பற்றிய நகைச்சுவை ரசனையை பற்றி சொல்ல வந்தேன்.. நான் தான் அமெரிக்காவை இழுத்து டைவர்ட் செய்து விட்டேன் .. உங்களுக்கு சென்னையை விட்டுக் கொடுக்க முடியவில்லை...

    மேலும் சென்னை புதிது எனக்கு..முடிந்தவரை போக்குவரத்துகளில் வசவுகளுக்கு சிக்காமல் தப்பித்து வருகிறேன்....

    10/09/2011

    பதிலளிநீக்கு
  29. கலாசாரத்துக்கு ஏத்த மாதிரி மாத்திட வேண்டியது தான் பத்மநாபன்.

    தங்கவேலு or விகேராமசாமி சொல்றதா நினைச்சுப் பாருங்க..
    "ஐயா.. எதுக்குச் சொல்றேன்னா.. இப்ப என் பெண்டாட்டியையே எடுத்துக்குங்க... யோவ்.. யார்ராவன் சுத்த தகராறு பிடிச்சவனா இருக்கான்? ஒரு பேச்சுக்குச் சொன்னா மேலயே கை வைக்கறானே, வெவரங்கெட்ட பய.."

    or

    "ஐயா.. எதுக்குச் சொல்றேன்னா.. இப்ப என் பெண்டாட்டியயே எடுத்துக்குங்களேன்... வேணாவா, அப்ப உங்க பெண்டாட்டிய எடுத்துக்குவோம்... முடியாதா, சரி இவரு பெண்டாட்டிய எடுத்துக்குவோம்.."

    பதிலளிநீக்கு
  30. நல்ல சிக்க வச்சு சிரிக்க வைக்கிறிங்களே ... அதுதான் எங்கள் ஸ்ரீ இந்த விஷயத்துல ஒதுங்கிட்டாரா ...

    பதிலளிநீக்கு
  31. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  32. உண்மையில் படத்துல வந்துச்சா என்ன ? டணாலுக்கு பொருத்தமா இருக்கு ....

    பதிலளிநீக்கு
  33. //சென்னையில் வாயைத்திறந்தால் த்தா தான் தலைவரே. கெட்ட வார்த்தையெல்லாம் நானே அமெரிக்க நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்//

    இதுல சென்னை பாஷை, மதுரை பாஷை எல்லாம் என்ன, அப்படியெல்லாம் தனிப்படப் பிரிச்சிட முடியாது... தமிழ்நாது முழுக்க இதெல்லாம் பொது! இதுல புதுசு புதுசா வார்த்தைகளைக் காயின் பண்ணித் திட்டறதுல என் அப்பா கில்லாடி! என் தாத்தா அவருக்கு குரு மாதிரி! இந்த மாதிரிப் புதிய வார்த்தைகள் கேட்டுக் கேட்டு அலுத்து வெறுத்துப் போனதாலோ என்னமோ எனக்கு இந்த வார்த்தைகள் அலர்ஜியாகத் தெரிகின்றன.

    பத்மநாபன்...சென்னை வார்த்தைகள் உங்களுக்குப் புதிதா...சென்னை புதிதா....தற்சமயம் சென்னையிலா இருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  34. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  35. அடுத்து கருத்துரைத் தணிக்கை பற்றி சொல்லி விட்டு இந்த பதிவின் பின்னூட்டங்களில் ஏகப்பட்ட "கருத்துரை நீக்கப்பட்டது" இருக்கிறதே என்று கேட்க வந்தேன். எனக்கே அந்த அனுபவம்!

    பதிலளிநீக்கு
  36. //meenakshi said, "ஸ்ரீராம்: இந்த பதிவில் நீங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடித்த நம்பர் 1 காதல் பாடல் எது என்று எழுதியே ஆகவேண்டும். தப்பிக்க முடியாது, (கூடாது) :)."//

    ஏனுங்க.... மறந்திருப்பீங்கன்னு நினைச்சா மறுபடி ஞாபகப் படுத்தறீங்களே...முதலிடத்தில் முதல் கட்டமாக ஒரு முப்பது பாடல்கள் தெரிவு செய்து வைத்திருந்தேன். அப்பாதுரை வேறு 'முப்பதா...முதல்ல அப்பீட் ஆகிக்கோ'ன்னு சொல்லியிருந்தார்....சமீப காலமாகக் கணினி படுத்தும் பாட்டில் தொலைந்துபோன பல 'எழுதி வைத்திருந்தது' களில் அதுவும் ஒன்று...!!

    பதிலளிநீக்கு
  37. //சென்னை வார்த்தைகள் உங்களுக்குப் புதிதா// அதிகம் சினிமால கேட்பது தான் சென்னைத் தமிழ் ..நடைமுறை வாழ்க்கையில் புதிது...

    ஸ்ரீ ...கோவையிலிருந்து சென்னைக்கு ஜாகை மாற்றி வருடம் இரண்டாச்சு .. அங்கிருந்து அரபிக்கடல் தாண்டுவதும் போவதுமாக இருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  38. தணிக்கையில் எனக்கு நம்பிக்கையே கிடையாது ஸ்ரீராம். கவன எச்சரிக்கையில் நம்பிக்கை உண்டு - அவரவர் தீர்மானத் திறனில் நம்பிக்கை உண்டு. மனிதரை வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கத்தை அறிந்தாலொழியத் தணிக்கையில் இறங்குவதில்லை.

    என் மகன் போன வாரம் f வார்த்தை உபயோகிப்பதைக் கேட்டு அதிர்ந்து போனேன். அவனுடைய நண்பர்கள் வட்டத்தில் பயன்படுத்தினான் என்றாலும் பத்து வயதில் இப்படிப் பேசுகிறானே என்று அதிர்ச்சி. அவன் அப்படி என்றால் அவனுடைய நண்பர்கள் இரண்டு படி மேலே போனார்கள். பார்த்துக் (கேட்டுக்) கொண்டே இருக்கும் பொழுது இன்னொரு பெண் எல்லாவற்றையும் விழுங்கிச் சாப்பிடும்படி ஒன்று சொன்னாள். 'அம்மா, குருவே' என்று அவளிடம் தீட்சை கேட்கத் தோன்றியது.
    அந்தக் கூட்டத்தில் யாருக்குமே பத்து வயதுக்கு மேல் கிடையாது. என்ன செய்வது என்று ஒரு வாரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். 'இந்த வார்த்தை உபயோகிக்கக் கூடாது' என்று கடிந்தால் முதல் வேலையாக அதை மட்டுமே உபயோகிப்பான் என்று தெரியும். அடுத்தது அதற்கென்ன பொருள் என்பான். இன்னும் இரண்டு வருடங்களில் தானாகவே தெரிந்து கொள்ளவிடுவதா அல்லது இப்போது எடுத்துச் சொல்லிக் குட்டையைக் குழப்புவதா?

    என்னைப் பொருத்தவரை சொல் என்பதே உபயோகிக்கத் தான் ஏற்பட்டது. அதை உபயோகிக்கும் பக்குவம் இல்லாதவர் நாவிலுல் செவியிலும் கொச்சையாகிவிடுகிறது.

    கொஞ்சம் extrapolate பண்ணுவோம். தவறாக நினைக்க வேண்டாம் - பொருளே புரியாமல் எத்தனை பேர் இன்னும் சுலோகங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்? பெண்ணின் ஒவ்வொரு, மறுபடி ஒவ்வொரு, அங்கத்தையும் வர்ணிக்கும் வடமொழிச் சுலோகங்களை மெய்மறந்து சொல்கிறோம். (ஆணின் பாகங்களை வர்ணிக்கும் சுலோகங்கள் இருப்பதாகத் தெரியவில்லை). பொருள் புரிந்தும் திருப்பாவை சொல்லிக்கொண்டிருக்கிறோம்? ஏன் சிறிதும் சலனப்படாமலோ சங்கடப்படாமலோ ரசித்து மெய்மறந்து சொல்கிறோம்? என் பம்மல் நண்பனின் கருப்புச்சட்டைக்கார சித்தப்பா ஒருவர் சொல்வார் - "ஐருங்க த்தாசாமினு இருந்தா அதையும் சொல்லிக் கும்பிடுவானுங்க". அப்போது விழுந்து விழுந்து சிரிப்பேன். இப்போது யோசிக்கிறேன்.

    கிடக்கட்டும்.. பிள்ளைகள் கெ வா பேசாதிருக்க ஏதும் செய்ய முடியுமா? அப்படியே விட்டுவிடுவதா? அறிவுரை வழங்குவதா? என்ன நினைக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  39. meenkashi கிட்டே மாட்டிக்கிட்டீங்களா ஸ்ரீராம்... ஹிஹிஹிஹ்ஹ்ஹிஹ்ஹி..

    பதிலளிநீக்கு
  40. என் தாத்தா வாயிலிருந்து கெட்ட வார்த்தை வண்டிவண்டியாய் வரும். இத்தனைக்கும் அவர் சுதந்திரப் போராட்டத் தியாகி.

    “இவர் திட்டினதுக்கே வெள்ளக்காரன் நாட்டை விட்டுப் போயிருப்பான்” என்று நான் சொல்வது வழக்கம்.

    எல்லாம் தஞ்சை மண்ணின் பெருமை மிகு _ழி வார்த்தைகள்.

    அது சரி என்ன இது ப்ரொஃபைல் போட்டோவை 90 டிகிரி கடிகாரச் சுற்று திருப்பிப் போட்ருக்கீங்க. தலையை திருப்பிப் பார்க்கனுமா?

    என்னோட ப்ரெண்ட் ஒருத்தன் சினிமாவுக்கு போனா ஆங்கிள் ஷாட் வந்தா தலையை ரெண்டு பக்கமும் கவுத்து கவுத்து பார்ப்பான். அப்ஸைட் டவுன் ஷாட் எடுத்தா சிரசாசனம் பண்ணி பார்ப்பியாடான்னு ஓட்டுவோம்.

    :-))

    பதிலளிநீக்கு
  41. அந்த profile படம் சேர்க்குறப்ப எனக்கு கழுத்துச் சுளுக்கு RVS..

    பதிலளிநீக்கு
  42. தமிழ் கெட்ட வார்த்தையில் (திருநெல்வேலி, மதுரை, சென்னை என்று) எனக்கு அவ்வளவு பாண்டித்தயம் !! வாங்கி காதை அழுக விட்டவர்கள் ஏராளாம் ! என் சித்தப்பா மகன் புத்தகம் போடும் அளவு மகான் !!

    பதிலளிநீக்கு
  43. அப்பாதுரை,

    தங்கவேலு - வி.கே.ஆர் - சொல்வதாய் போட்டு இருப்பது அழகு

    பதிலளிநீக்கு
  44. மாவட்ட அகராதினு ஒவ்வொரு இடத்திலிருந்தும் டாப்50 கெட்ட வார்த்தைகளை புத்தகமா போட்டுறலாம் சாய். (அகராதின்னா திமிர்னும் அர்த்தம் - சரியா இருக்கும்)

    பதிலளிநீக்கு
  45. லேட்டாக வந்துவிட்டு என்னத்த சொல்றது, எல்லோரும் சொன்ன பிறகு.
    சுஜாதாவின் கட்டுரைகள் படித்தது போன்ற உணர்வு.
    உண்மை தான் மஞ்சுபாஷினி ஒரு லட்சிய வாசகர்.

    பதிலளிநீக்கு
  46. My son: 'Appa, en class mate, ennai loosu-paya-pullai-nu thitraan-pa'
    Naan: 'peria theerkka dharisiya' erukkaane...!!!

    (we are in Kutraalam now and my son has picked up quiet a 'good' no. of 'bad' words... like 'verum vaaikkum ketta ******')

    பதிலளிநீக்கு
  47. Mudi: Naan 'thalai' edutthadhea sariyillai-nu en wife solraa...?

    Adithadi: thadi ellaamal adippadhu manaivikku mattumea therindha thanthiram...!

    Osama : Manmohan 10 varudam pidungum podhu Obama 100 varudam pidungalam...!

    Vanmurai: 'pechu vaarthai nadakkum polzhudhu vanmurai koodaathu' - Delhi Ganesh in Avvai shanmuki. Whenever i want to show this scene to my spouse, conveneintly power goes...! ofcourse, i dont have power after marriage...!

    Yadhoon : Bournvita refill pack indtroduction time. Ad in theatre... 'buy bournivita refill pack and save Rs. 5.'A voice from auidience 'bournvita vaangamalea erundhu 85 roobaai mitcha padutthungal...!'

    'su ni tha' reminds me of 'poovilea sirandha poo...!!?'

    valikkum kalyaana kadhai-yai yaaraavadhu elzhudhungap-paa...!!

    பதிலளிநீக்கு
  48. Berikkaa...: thittuvadhil kooda ammaavukku thaan mudhal edam...! Hindi kaaran 'maakki' -nnu aarambikkaran...

    "aattha [O podu..!] enbadhu mudhal vaartthai... adhu thaan kulzhandhayin ....'

    'koindhayun dheivamum kontthaala vonniyi... kutthangala marandhu poodum mansaala ennikkum...!' - when i sung this song in madras paashai, my son asked how 'naan aanai ettal can be sung in madras ....?
    'naan solli puttaa... adhu nadanthu putta... enga elzhai janam kunthi-kinu erukka maattaango... vusuru erukkarava varaikkum oru thondharavu elleengo...' the song went like this...!

    பதிலளிநீக்கு
  49. Appadurai : ketta vaarthai-yai manthiram maadhiri vootlaye use pannungo... pazhagi poodum...!

    something like below:

    Triplicane Ricksha kaaran (while konju-fying his son): 'ayye... kanna paaru thirudan maadhiriyea...' 'moonji-ya paaru paakkatthu voottu kaaran madhiri..thirttu The Pulliyea...!'

    பதிலளிநீக்கு