2009/10/09

நாகூர் 2012, கசம் சே!

விபரீதக் கதைகள் (நினைவுகள்)


    ன் அம்மாவின் அறுபதாவது பிறந்த நாளையொட்டி ஊர்ப்பக்கம் சென்றிருந்தேன். சாதாரணக் கோவிலில் கொண்டாடினால் சரியாக இருக்காது என்று, அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே ஒரு கோவில் இருப்பதாகச் சொல்லி அங்கே கொண்டாடுவதாக ஏற்பாடு. கடலூர் தாண்டி இருக்கும் அந்த ஊரின் பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது. அபிராமி அம்மன் கோவில், மார்க்கண்டேயன் கோவில் இருக்குமிடம். ஆ! நினைவுக்கு வந்து விட்டது, திருக்கடையூர்.

போன இடத்தில் கொஞ்சம் கூட எதிர்பாராவிதமாக ரகுவைச் சந்தித்தேன். ரகுவுடன் எனக்கு ஓட ஓட உறவு. (என் அம்மாவோட ..வோட ..னோட மகன்). என்னை விட சில வருடங்கள் முதியவன். என் மாமா வீட்டு வேலையாள் குப்புசாமிக்கு அடுத்தபடியாக, வளரும் பருவ விவகாரங்களை எனக்கு விளக்கிச் சொன்னவன் ரகு. சிறு வயதில் நான் காரைக்காலில் சில வருடங்கள் வளர்ந்தேன். ரகு நாகூரில் வளர்ந்தான். கோடை விடுமுறைகளில் நாகூர் நாகப்பட்டினம் திருநள்ளார் பகுதிகளில் நிறையப் பொறுக்கி இருக்கிறோம். சென்னை வந்த பிறகு அவனை அடிக்கடி சந்திக்கவில்லை என்றாலும், அவனுடன் கழித்த அந்த நாகூர் கோடை விடுமுறையை மறக்கவில்லை.

அம்மாவின் பிறந்த நாளுக்கு வந்ததற்காக நன்றி சொன்னேன். "உண்மையைச் சொல்லணும்னா, அதுக்காகனு வரலைடா. வழக்கமா இந்தப் பக்கம் வந்தேன், அப்படியே உங்கம்மாவையும் பார்த்த மாதிரி இருக்குமே" என்றான்.

"நீ கல்கத்தால இருக்குறதா சொன்னாங்க, வழக்கமா எதுக்குடா இந்தப் பக்கம் வரே?" என்றேன்.

"நாளன்னிக்கு நாகூர் போகணும்டா. அதான்" என்றான். என்னை உற்றுப் பார்த்தான்.

அவன் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "அடப்பாவி! இன்னுமா அதையெல்லாம் நம்பிக்கிட்டிருக்கே?" என்று அதிர்ந்தேன்.

"ஒக மாட, ஒக பாண. அந்த ரகு மாதிரி தாண்டா, இந்த ரகுவும். கொடுத்த வாக்கைக் காப்பாத்தணும்டா. நீ தான் மறந்துட்டே போல. இவ்வளவு தூரம் வந்திருக்கே, இந்த முறை எங்கூட வாயேன்" என்றான்.

எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. அதனால் பேய், பிசாசு, பித்ரு, சாபம், ஆசி, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம், லொட்டு லொசுக்கு இதிலெல்லாமும் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் இங்கே ஒன்று சொல்ல வேண்டும். நாங்கள் இருவரும் கடைசியாகக் கழித்த நாகூர் கோடை விடுமுறையின் அந்த இரவில் நடந்த நிகழ்ச்சி, அசம்பாவிதம் தான். அறிவுக்கப்பாற்பட்ட நம்பிக்கைகளின் எல்லையில் நடந்த எசகுபிசகான சம்பவம். சித்திரா பௌர்ணமி இரவில் எலுமிச்சை பழத்தின் மேல் சூடமேற்றி உடுக்கை ஓசையுடன் 'ஹூ' என்று அலறி, விபூதியெறிந்து, நெத்தியிலடிக்கும் சம்பவம். சென்ற நாற்பது வருடங்களின் ஒரு சில இரவுகளில் விழித்தெழுந்து வியர்வை சிந்த வைத்த சம்பவம்.

"என்னடா பேச்சே காணோம்?" என்றான் ரகு. தெளிந்தேன்.

சற்று யோசித்து விட்டு சம்மதித்தேன். பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்ததும், நானும் அவனும் இன்னொரு பஸ் பிடித்துக் காரைக்கால் போனோம். அன்றிரவு காரைக்காலில் தங்கிவிட்டு, மறு நாள் அங்கிருந்து நாகூர் போவதாகத் திட்டம். தரங்கம்பாடி வருவதற்குள் ரகு தூங்கி விட்டான். பஸ்ஸில் கூட்டமே இல்லை. வழக்கமாக பஸ் கிளம்பிய பத்து நிமிடங்களுக்கெல்லாம் அயர்ந்து தூங்கிவிடும் எனக்கு, அன்று தூக்கம் வரவில்லை. எதிரில் அமர்ந்திருந்தவர் புகை பிடிப்பதில் கருத்தாக இருந்தார். அவர் துப்பிய புகையைப் பொறுத்திருந்த எனக்கு, நாகூர் நினைவுகள் புகை வளையங்களாய்த் தோன்றி மறைந்தன.

    றுபத்தெட்டோ ஒன்பதோ வருடம் சரியாக நினைவில்லை. கோடை விடுமுறை. நாகூரில் என் அம்மாவின் மாமா (மாமா தாத்தா?) வீட்டிற்குப் போயிருந்தேன். ரகு அந்த வருடம் பத்தாவது முடித்திருந்தான். 'டேய் ரகு... எஸ்எல்சி வந்தாச்சுடா, ஒழுங்கா படிக்கணும்டா.. லீவ்னாலும் எதாவது கணக்குப் புஸ்தகத்தை எடுத்து படிடா' என்ற வழக்கமான நச்சரிப்பை ஒதுக்கி விட்டு பெரியம்மா ரகுவிடம், 'டேய், பக்கத்து வீட்டுல டெல்லிலேந்து வந்திருக்காடா' என்றார்.

அந்த நாளில் நாகூர் மிகச் சிறிய கிராமம். எங்கள் மாமா தாத்தா இருந்த தெருவின் கோடியில் ஒரு சிவன் கோவில். சிவன் கோவிலை ஒட்டிக் குறுக்காக இரண்டு தெருக்கள். கொஞ்சம் தள்ளி தர்கா. ஒரு அரசினர் பள்ளிக் கூடம். ஒரு மாட்டாஸ்பத்திரி. அதைத் தாண்டி TAFE நிறுவனத்தாரின் ஒரு கிடங்கு. நாகூர் அம்புட்டுதேன். பெரியம்மா பேச்சைக் கேட்டதும் எங்கள் இரண்டு பேருக்குமே சிலிர்ப்பு. டெல்லிலேந்தா? செவ்வாய் சந்திரனிலிருந்து யாரோ வந்திருப்பது போல் வியந்தோம். உடனே பக்கத்து வீட்டுக்கு ஓடினோம்.

அந்த நாள் நாகூர் அக்ரகாரத் தெருவில் வீடுகள் ஒன்றை ஒன்று ஒட்டியிருக்கும். எங்கள் தாத்தா வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் நடுவில் பொதுவாகக் கிணறு. இரண்டு வீடுகளிலும் கிணற்றை ஒட்டி முற்றம், தாழ்வாரம். இரவில் மட்டும் கிணற்றையும் தாழ்வாரத்தையும் மூட ஒரு மூங்கில் தட்டிக் கதவு. காலையில் நாலு ஐந்து மணிக்கெல்லாம் யாராவது எழுந்து தாழ்வாரக் கதவையும் கிணற்றுக் கதவையும் திறந்து விடுவார்கள். இல்லையென்றால் பால் தயிர் பூ காய்கறி என்று ஏதோ ஒரு காரி காரன் வந்து திறந்து விடுவார்கள். எங்கள் வீட்டிலிருந்து பக்கத்து வீட்டிற்குக் கிணற்றைச் சுற்றித் தாழ்வாரம் வழியாகத் தாவி ஓடுவோம். அன்றைக்கும் அப்படித் தான்.

வழக்கமாக நாங்கள் அப்படி குறுக்கும் நெடுக்கும் ஓடும் போது கிணற்றடியில் யாராவது இருப்பார்கள். நாங்களும் கவனிக்க மாட்டோம் அவர்களும் கவனிக்க மாட்டார்கள். அன்றைக்குக் கிணற்றைச் சுற்றிப் பக்கத்து வீட்டு முற்றத்தில் அடி வைத்தபோது, 'ஊஒ' என்ற கூச்சலைக் கேட்டு இரண்டு பேருமே திடுக்கிட்டு நின்றோம். கிணற்றடியில் பதினாலு பதினைந்து வயதில் அழகான பெண். ஒரு பாவாடையைச் சுற்றிக் கொண்டு முக்காலியில் உட்கார்ந்திருந்த பெண்ணின் அருகே இருந்த ஒரு பெரிய தொட்டியில் நீரை எடுத்து நிறைத்துக் கொண்டிருந்தாள் ஒரு வேலைக்காரி. குளிக்கத் தொடங்கியிருந்ததால், அந்தப் பெண் அணிந்திருந்த பாவாடை தண்ணீர் பட்டு அரை குறையாக நனைந்திருந்தது. அவளையே பார்த்தபடி ரகு சிலை போல் நின்றான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த பெண், திடீரென்று கூவினாள். 'பெரீமா.. சோர்.. கசம் சே...தோ பத்மாஷ் சோக்ரே கஹான் சே குசரே...' என்று எங்களுக்குப் புரியாத மொழியில் அலறத் தொடங்கினாள். கூக்குரல் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டு மாமி எங்களைப் பார்த்து விட்டுச் சிரித்தாள். "என்னடா ரகு, பேயடிச்சாப்ல நிக்கறே?". வேலைக்காரி கூட ரகுவைப் பார்த்துச் சிரித்தாள்.

"இவ என் தங்கை பொண்ணு. ஷ்யாமளா. டெல்லிலேந்து வந்திருக்கா. வா, வா" என்றார். பிறகு அந்தப் பெண்ணைப் பார்த்து, "ஷ்யாமி, இவன் பேரு ரகு. பக்கத்து வீடுதான். அவன் கூட இருக்குறது யாரு?" என்றவர், என்னைப் பார்த்து "யாருடா? இந்திரா பையனா? நீ எப்படா வந்தே?" என்றார். நான் பதில் சொல்லாமல் தலையாட்டினேன்.

எங்களை உள்ளே தள்ளிக் கொண்டு போனார். "டெல்லியோன்னோ... நஹி பிஹின்னு வாயத்தொறந்தா இந்தி தான் முத்தா உதுறது" என்றார். அதற்குள் அவருடைய தங்கையும் வந்து விட்டார், "என்ன இங்கே கொள்ளை அமர்க்களம்? எதுக்குக் கத்தறா பிடாரி?" என்று தன் பெண்ணைப் பற்றி கனிவுடன் விசாரித்தபடி.

ரகுவும் நானும் பேருக்குக் கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்து விட்டு, வெளிவாசல் வழியாக வெளியேறினோம். அந்தத் தருணத்தில் நாங்கள் இருவருமே வளர்ச்சியின் அடுத்தத் தட்டுக்குத் தாவினோம் என்று நினைக்கிறேன்.

அன்றைக்கு மாலை. ரகு கொல்லைப்புறத்தில் பனை நொங்கு எடுத்து வரப் போயிருந்தான். வாரா வாரம் நடைபெறும் நிகழ்ச்சி. வேலைக்காரன் பனை மரமேறி குலையோடு நொங்கை வெட்டிப் பொட, ரகு அதைப் பொறுக்கி எடுத்து எண்ணி ஒரு பெரிய முறத்தில் அள்ளிப் போடுவான். பிறகு இன்னொரு வேலைக்காரன் அவற்றைக் கழுவி சுத்தம் செய்து மூட்டை கட்டி வைப்பான். ரகு நாலைந்து நொங்கை எடுத்துக் கொண்டதும், வேலைக்காரன் மூட்டையை ரயிலடி பக்கம் மரைக்காயர் கடையில் போட்டு வருவான்.

நான் தாழ்வாரத்தில் இரும்புக்கை மாயாவி காமிக் படித்துக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டிலிருந்து அவளே வந்து விட்டாள். நேராக என்னிடம் வந்தாள். "ஏய், உன் பேர் என்ன?" என்றாள் தமிழில்.

சொன்னேன்.

அவளுடைய அடுத்த கேள்வி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. "நீ பெரியவனாயிட்டியா?"

"என்ன கேக்கறே நீ?"

"நான் கேக்கறது புரியலைனா நீ பெரியவனாகலேனு அர்த்தம்" என்ற அவள் என்னைப் பார்த்த பார்வையில் நிச்சயமாக ஏளனம் இருந்தது. தலை குனிந்தேன். "நீ ஆயிட்டியா?" என்றேன் கடுப்புடன்.

"நான் பெரியவதான். கசம் சே. பாரு, மாரெல்லாம் வளர ஆரம்பிச்சாச்சு. பெரியவா குளிக்கற எடத்துக்கெல்லாம் நீயெல்லாம் வரக்கூடாது. டெல்லியா இருந்தா உங்க ரெண்டு பேரையும் பின்னியிருப்பேன்..கசம் சே" என்றாள்.

"நாங்க எப்பவுமே..." என்று நெளிந்தேன். "ஆமாம், உனக்கு இந்தி மட்டும் தான் தெரியும்னு சொன்னாங்க மாமி?"

"எனக்குத் தமிழ் நல்லா தெரியும், கசம் சே.. ஆனா சட்டுன்னு இந்தி வந்துடும்"

"அதான் வரிக்கு வரி கசமுசாங்கிறியா?"

"கசமுசா இல்லே. கசம் சே. ட்ரூலி...சத்தியமானு அர்த்தம். உனக்கு இந்தி கொஞ்சம் கூடத் தெரியாதா?" என்று சிரித்தாள். நான் முதல் முதலாகக் கேட்ட கவிதை.

"எங்கே ரகு?" என்றாள்.

"மரைக்காயர் கடைக்குப் போயிருப்பான். போலாம் வரியா?" என்றேன். ரகுவின் சைக்கிளை எடுத்தேன். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது, இருந்தாலும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. நான் சைக்கிளைப் பிடித்த விதமோ என்னவோ தெரியாது, ஷ்யாமி உடனே கேட்டு விட்டாள். "கசம் சே.. சைக்கிள் ஓட்டுவியா?".

"இப்பத்தான் கத்துக்கிட்டிருக்கேன். தனியா இருந்தா ஓட்டுவேன்..." என்று இழுத்தேன்.

"சரி, வா. கடை எங்கே இருக்கு சொல்லு" என்று சைக்கிளை எடுத்து அசால்டாக ஏறி உட்கார்ந்தாள். அப்படியே ஓட்டிக் கொண்டு வெளிவாசலுக்குப் போய் படிகளின் நடுவில் இருந்த சறுக்கில் இறங்கித் தெருவில் பிரேக் போட்டு நின்றாள். நான் வாயைப் பிளந்தபடி தொடர்ந்தேன். "இங்கே உட்காரு" என்று என்னை ஹேன்டில் பாருக்கும் சீட்டுக்கும் குறுக்கே இருக்கும் 'ஆம்பிளை' பாரில் உட்கார வைத்து ஓட்டத் தொடங்கினாள். பேசாமல் பாவாடை சட்டை போட்டுக் கொள்ளலாமா என்று தோன்றிவிட்டது எனக்கு.

மரைக்காயர் கடையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த ரகுவுக்கு எங்களைப் பார்த்ததும் ஒரே சங்கடம். என்னை மட்டும் பார்த்து, "எங்கேடா என்னோட சைக்கிளை எடுத்துக்கிட்டு வந்திருக்கே?" என்றான்.

"நான் தான் அவனை வரச்சொன்னேன். கசம் சே" என்றாள். "என் பெயர் ஷ்யாமி".

தலையாட்டினான். "தெரியும். உங்க பெரியம்மா சொன்னா" என்றான்.

"அவ குளிக்குறப்போ நாம போனது அவளுக்குப் பிடிக்கலே. அதான் இந்திலே திட்டினா" என்றேன். ஏதாவது சொல்ல வேண்டுமே?

"கசம் சே" என்றாள்.

"அப்படினா சத்தியமானு அர்த்தம்" என்றேன் பெருமையுடன்.

"எல்லாம் தெரியும்டா, குடாக்கு" என்று என்னை அடக்கினான். அவளைப் பார்த்து "சாரி.. நீ கிணத்தடிலே குளிக்குறது எனக்குத் தெரியாது" என்றான்.

"கிணத்தடிலே குளிக்காம வீட்டு வாசல்லயா குளிப்பாங்க? அஜீப் பாத் ஹை?" என்று சிரித்தாள். அன்றைக்கு என்னவோ அது நாகேஷ் காமெடி போல் தோன்ற, மூன்று பேரும் வயிறு வெடிக்கச் சிரித்தோம். அந்தக் கணத்தில் நண்பர்களானோம்.

"சரி, வாங்க" என்று ரகு எங்கள் இருவரையும் சைக்கிளில் முன்னும் பின்னும் உட்கார வைத்து வீட்டுக்கு ஓட்டிச் சென்றான். என்னைத் தள்ளி விட்டு ஷ்யாமி முன்புறத்தில் உட்கார்ந்து கொண்டாள். வீட்டுக்குப் போனதும் பின்கட்டிற்குச் சென்றோம். அங்கே பதுக்கி வைத்திருந்த நாலைந்து பனை நுங்குகளைச் சீவிக் கொடுத்தான் ரகு. எங்களுக்கு ஒரு நுங்கு கூட விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் தீர்த்துக் கட்டினாள் ஷ்யாமி. நுங்கைத் தலை சீவி, கட்டை விரலை அதன் கண்களில் நுழைத்து, கனியை வெளியெடுத்த ரகுவின் திறமையைக் கண்களை அகல விரித்துப் பார்த்தபடி ரசித்தாள். "எவ்ளோ நல்லா இருக்கு!" என்று குதுகலித்தாள். ஒவ்வொரு நுங்காக அவன் எடுத்துக் கொடுக்க, என்னருகே நின்று கொண்டிருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ரகு பக்கம் சென்றாள். எனக்கு ஒன்று புரியத் தொடங்கியது. இவள் ஊருக்குப் போகும் வரை ரகு என்னைக் கவனிக்கப் போவதில்லை.

"நீ எப்போ ஊருக்குத் திரும்பிப் போறே?" என்றேன், சட்டென்று.

"நான் இங்கே தான் இருக்கப் போறேன். எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை. அது முடியற வரைக்கும் இங்கே தான் இருக்கப் போறேன். எங்கம்மா இனிமே டெல்லி போக போறதில்லனு சொல்றா. ஆனா நான் திரும்பிப் போயிடுவேன்"

"ஏன், நாகூர் பிடிக்கலியா?" என்றான் ரகு. அவன் கேட்டது நாகூரைப் பற்றி இல்லை என்பது எனக்குக் கூடப் புரிந்தது.

"சப்..சுப்" என்று சுளித்தாள். "பேகார்.. பேகார். அப்பா மட்டும் அம்மாவை முண்டச்சின்னு திட்டலைனா நாங்க இங்கே வந்திருக்கவே மாட்டோம். எங்கப்பா அம்மா சண்டைனால தான் கசம் சே.." என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க பக்கத்து வீட்டிலிருந்து அவளுடைய அம்மா வந்துவிட்டார். "என்னடி ஷ்யாமி, இங்கே என்ன பண்றே? பெரியம்மா சிவன் கோவிலுக்குப் போறா, நாமளும் போலாம் வா" என்றார்.

"நீயும் வரியா?" என்றாள் ஷ்யாமி ரகுவிடம். ரகு தயாராக இருந்தவன் போல், "ரெடி. என் கூட சைக்கிள்ல வரியா?" என்றான்.

என்னை எவரும் அழைக்கவுமில்லை. நான் போகவுமில்லை. உள்ளே சென்று ஒரு குப்பி நிறைய திரட்டுப்பால் கேட்டு வாங்கிக்கொண்டு தாழ்வாரத்திற்குச் சென்று இரும்புக்கை மாயாவியுடன் உட்கார்ந்தேன்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் இன்னும் இரண்டு இ.கை.மா புத்தகங்களைப் படித்து முடித்தேன். ரகு ஷ்யாமி தொல்லை தாங்க முடியவில்லை. எதற்கெடுத்தாலும் ஒன்றாக வந்து விடுவார்கள். என்னைக் கிண்டல் வேறு செய்வார்கள். "சின்னப் பையன்" என்று ரகு சொல்லும் போது எனக்கு உடம்பெல்லாம் எரியும். நான்காவது நாள் ஷ்யாமியைக் காணோம். என்னவென்று ரகு சென்று விசாரித்த போது அவள் மூன்று நாட்களுக்கு 'வர முடியாது' என்று சொல்லி விட்டாள். அந்த மூன்று நாட்களில் நானும் ரகுவும் நிறைய சுற்றினோம் என்றாலும் ரகு முன் போல் இல்லாதது எனக்குப் புரிந்தது. மூன்றாம் நாளிரவு மொட்டை மாடியில் படுத்துக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டு மாடிக்கும் பக்கத்து வீட்டு மாடிக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளியை மறைத்து, இரண்டடி அகல எட்டடி நீள பழைய கல்யாண ஊஞ்சல் பலகை ஒன்றைப் போட்டிருப்பார்கள். பகலில் அதன் மேல் ப்ளாஸ்டிக் கித்தான் விரித்து அரிசி, கத்தரிக்காய், பாகற்காய், தக்காளி, ஜவ்வரிசி என்று பலவகை வடாம் இட்டுக் காய வைப்பார்கள். எலுமிச்சை பிழிந்த அரிசி வடாம் இடும் போது அதை அரைகுறையாகக் காய்ந்த நிலையில் எடுத்து ருசித்தது நினைவுக்கு வருகிறது. ம்ம்ம். இரவில் பலகை அங்கேயே தான் இருக்கும். நான் திடீரென்று விழித்துப் புரண்ட போது அருகே ரகுவைக் காணோம். கலகலவென்று சிரிப்பும் பேச்சும் அடக்கி வாசித்த தொனியில் கேட்டது. எழுந்திருக்காமல் மறுபுறம் புரண்டு பார்த்தால் இரண்டு மாடிக்குமிடையே பலகை மேல், நடுவில் தலைவைத்து, கை கோர்த்து, இந்தப் பக்கம் கால்கள் தொங்க ரகுவும் அந்தப் பக்கம் கால்கள் தொங்க ஷ்யாமியும் படுத்துக் கொண்டிருந்தார்கள். என்னவோ அரேபியத் தந்திரக் கம்பளத்தில் படுத்திருப்பது போல் வானத்தைப் பார்த்தபடி கவலையில்லாமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். எழுந்து போய் சேர்ந்து கொள்ளலாமா என்று தோன்றினாலும் பயமாக இருந்தது. பலகையின் நேர் கீழே கிணறு. ஒரே ஒரு முறை அந்தப் பலகையில் ஏறி நின்ற போது கை காலெல்லாம் நடுங்கிக் கீழே விழப் போனவனை ரகு தான் தாங்கி பிடித்தான். ரகு மட்டும் தனியாகப் பலகையின் விளிம்பில் நின்று கைகளை அகல விரித்து ஆட்டித் தலை குனிந்தபடி 'மனிதப் பறவை' என்பான். எழுந்திருக்காமல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பத்து நிமிடமிருக்கும், பக்கத்து வீட்டிலிருந்து ஷ்யாமியின் அம்மா மேலே வந்து லைட் அடித்து விட்டார். ரகுவையும் ஷ்யாமியையும் பார்த்து விட்டு ஓடி வந்தார். ஷ்யாமி உடனே எழுந்து மாமியுடன் போனாள்.

"என்னடி இது, குளிரப் போறதுனு போர்வை கொண்டு வந்தா நீ ஆம்பிளப் பசங்களோட ஊஞ்சல்ல, அதுவும் தூர நாள்ல?" என்று அவர் ஏதோ சொல்லிக் கொண்டு போக, ஷ்யாமி பதிலுக்கு ஏதோ 'கசம் சே' என்று சொல்லியபடி கீழே இறங்கினாள். ரகு இறங்கி வந்து என்னருகே படுத்துக் கொண்டான். நான் மெதுவாக, "தாத்தா கிட்டே அவ அம்மா எதாவது சொல்லுவானு பயமா இருக்கா?" என்றேன்.

"முழிச்சிக்கிட்டுத் தான் இருக்கியா?" என்றவன், "ப்ச்" என்றான். "சொன்னா என்ன? ஷ்யாமி என்னைக் கல்யாணம் செஞ்சுக்குறதா சொல்லியிருக்கா. நானும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்" என்றான்.

நான் எழுந்து உட்கார்ந்தேன். "என்னடா நீ? இன்னும் ஸ்கூல் கூட முடிக்கலை. ஸ்கூல் முடிச்சு, காலேஜ் முடிச்சு, வேலைக்குப் போய்.. அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கறதா?" என்றேன். "இதென்ன, பால்ய விவாகமா?"

"உனக்குத் தெரியாதுடா. நீ இன்னும் வயசுக்கு வரலை" என்றான்.

"டேய், உனக்கு மட்டும் என்னடா வயசாயிடுச்சு?"

"இது காதல்டா. பதினாறு வயசுல காதலிக்கலாம், தப்பில்லே. உனக்கு இப்போ புரியாது. அவ இங்கே தான் இருக்கப் போறா, அவளோட அம்மா சொன்னாளாம். ஸ்கூல் திறந்ததும் இங்கே தான் நாகப்பட்டினத்துல நேசனல் ஸ்கூல்ல படிக்கப் போறாளாம். நாங்க எஸ்எல்சி முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கிட்டு டெல்லி போயிடறதா இருக்கோம். அவ அப்பா அவளுக்கு கவர்ன்மென்டு வேலை வாங்கித் தரதா சொல்லியிருக்காராம். எனக்கும் அங்கே வேலை கிடைக்கும்" என்றான்.

நான் பிரமித்தேன். "சரி தான், இவ்ளோ திட்டம் போட்டு வச்சிருக்கீங்களா? சரி, நாளைக்குக் காலையிலே பெரியம்மா உதைக்க வந்தா அதுக்கு என்ன செய்யறதா திட்டம்?"

மறுபடியும் "ப்ச்" என்றான். மறுநாள் காலை இவன் உதை வாங்கப் போகிறான் என்ற தீர்மானத்துடனும் இவனுடன் சேர்ந்த குற்றத்திற்கு நானும் உதை வாங்க நேரிடும் என்ற பயத்துடனும் தூங்கி விட்டேன்.

நினைத்தபடி காலையில் நடக்கவில்லை. ஆறு மணி கூட இருக்காது. கீழே பக்கத்து வீட்டில் கூச்சல். அவசரமாக எழுந்து கீழே போனோம், விபரீதத் தொடர்ச்சியின் துவக்கம் என்பது புரியாமல்.


அடுத்த பதிவில் முடிக்கிறேன்

(2)   (3)   (4)   (5)   (6)

31 கருத்துகள்:

  1. அது என்ன விபரீதம்? கீழ போய் அப்படி என்ன பாத்தீங்க? கொஞ்சம் சொல்லிட்டு இந்த பதிவ முடிச்சிருக்க கூடாதா? மண்ட காயறது எனக்கு. கொஞ்சம் பயமாவும் இருக்கு.

    ஏங்க, ...வோட ....வோட உறவெல்லாம் ஓட, ஓட உறவா? நீங்க ரொம்ப ஓடறீங்கன்னு நினைக்கறேன், அதான் இப்படி.

    பதிலளிநீக்கு
  2. //அநாளில் நாகூர் மிகச் சிறிய கிராமம். எங்கள் மாமா தாத்தா இருந்த தெருவின் கோடியில் ஒரு சிவன் கோவில். சிவன் கோவிலை ஒட்டிக் குறுக்காக இரண்டு தெருக்கள். கொஞ்சம் தள்ளி தர்கா. ஒரு அரசினர் பள்ளிக் கூடம். ஒரு மாட்டாஸ்பத்திரி. அதைத் தாண்டி TAFE நிறுவனத்தாரின் ஒரு கிடங்கு. நாகூர் அம்புட்டுதேன்//

    நீங்கள் சொல்வது போல் நாகூர் அப்பொழுதும் அவ்வளவு சிறிய கிராமம் அல்ல. சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில் பகுதிகள் மேற்குப் பகுதியில் இருந்தாலும் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் கொஞ்சம் நெரிசலான பகுதிகள். வண்டிக்கார தெரு முதல் ரயிலடி தெரு வரை சுமார் 1 1/2 கிலோ மீட்டருக்கு மேற்குப் பகுதிகள் பரவியிருந்தன. என்ன!, பெரிய வளர்ச்சி ஏனோ அந்த ஊருக்கு இது வரை ஏற்படவில்லை. எழுபதுகளில் எப்படி இருந்ததோ அது போலவே எந் வித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது நாகூர். மக்கள் தொகையும் அந்தளவிற்கு பெருக வில்லை என்றே நினைக்கிறேன்.
    நன்றி
    அபூ ஷாகிர்

    பதிலளிநீக்கு
  3. உண்மை தான், அபூ ஷாகிர். ரயிலடி பக்கம் கொஞ்சம் நினைவிலிருக்கிறது. 1970க்கு முற்பட்ட நாகூரை நினைவுக்குக் கொண்டு வருவதில் சிக்கல். நினைவலைகள் சீராக இல்லை. கேனரா பேங்க் இருந்த தெருவில் கொஞ்சம் மக்கள் நடமாட்டம் இருக்கும். சிறிய ஊர் என்பதில் ஒரு குறையுமில்லை. நாகூர் அருமையான ஊர் தான். தரங்கம்பாடியிலிருந்து காரைக்கால் வரை நிறைய சிறு ஊர்கள் பொக்கிஷங்களாய் இருக்கின்றன - வளர்ச்சியின் கைகள் இன்னும் அவற்றைப் பற்றவில்லை. அதில் ஒன்றும் குறையில்லை என்று தான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  4. ஐயோ...அடுத்த பதிவா...அப்போ இன்னும் பன்னிரண்டு நாள் காத்திருக்கணுமா?

    பதிலளிநீக்கு
  5. முத்து காமிக்ஸ் ல இரும்புக்கை மாயாவி மட்டும்தான் படிப்பீங்க போல...லாரென்ஸ் டேவிட் ஜானி நீரோ ல்லாம்...?!!!

    பதிலளிநீக்கு
  6. After all this spooky setup, payback needs to measure up. Halloween theme?

    /சிரித்தாள். நான் முதல் முதலாகக் கேட்ட கவிதை./
    Nice.

    பதிலளிநீக்கு
  7. "மனிதப் பறவை " ......."கிருஷ்ணப் பருந்து...கிருஷ்ணப் பருந்து..."

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராம். சொன்னது…
    "மனிதப் பறவை " ......."கிருஷ்ணப் பருந்து...கிருஷ்ணப் பருந்து..."


    புரியலையே? கிருஷ்ணப் பருந்து என்றால்? (எனக்கு ஞானம் கம்மி தாங்க)

    பெய்ரூட்டில் ஜானி என்னைக் கவர்ந்த புத்தகம். லாரன்ஸ் டேவிட் மறந்தே விட்டது. அடுத்த முறை சென்னை போகும்போது இவற்றையெல்லாம் தேட வேண்டும். நினைவுபடுத்தினீங்க, நன்றி ஸ்ரீராம்.

    நான் படித்த இரும்புக்கை முத்து காமிக்சுக்கு முந்தையது - முத்து காமிக்ஸ் வெளியிட்டிருக்கலாம். இங்கிலீசு இரும்புக்கை மாயாவி. எனக்கு அப்போ தமிழ் எழுதப்படிக்க வராது. என் அப்பா ஒவ்வொரு மாதமும் ஒன்றிரண்டு காமிக்ஸ் கொண்டு வருவார். அதைத் தான் நான் எடுத்துப் படிப்பேன். எழுபதுகளில் நான் சென்னை வந்த பிறகு தான் முத்து காமிக்ஸ் தமிழ் வெளியீடுகள் வரத் தொடங்கின என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. இரண்டு வாரங்களாக சாய்ராம் சென்னையில் இருந்தார்.. இந்தப் புத்தகங்களைத் தேடச் சொல்லியிருக்கலாம்.

    இணையத்தில் தேடிய போது discovered this முத்து காமிக்ஸ் fan blog

    படித்ததும் நினைவு உப்புமாவை நன்றாக கிண்ட முடிந்தது.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் அப்பாதுரை. உங்க அடுத்த பிறந்தநாளுக்கு என்ன பரிசு அனுப்பலாம் என்பதற்கு ஐடியா கிடைத்து விட்டது.

    இந்த இடுகையைப் படித்ததும் எனக்கு Ray Bradburyன் 'My kabala mistress' நினைவுக்கு வருகிறது.

    Open Id உபயோகித்து கருத்துரைக்க முடியவில்லையே - குறுக்கெழுத்து புதிர் சிக்கலைக் கூட அவிழ்த்து விடலாம் போலிருக்கிறதே?

    பதிலளிநீக்கு
  11. 'யாதும் ஊரே, யாவரும் கேளீர்' மாதிரி நீங்க எதாவது ஊரை பத்தி எழுதினா உடனே அந்த ஊர்க்காரங்க கிட்டேந்து அழகா comment வருது. சுவாரசியமா இருக்கு. ஆமாம், எங்க 'பேட்டை' பக்கம் எதுக்காகவாவது வந்திருக்கீங்களா?

    //தரங்கம்பாடியிலிருந்து காரைக்கால் வரை நிறைய சிறு ஊர்கள் பொக்கிஷங்களாய் இருக்கின்றன - வளர்ச்சியின் கைகள் இன்னும் அவற்றைப் பற்றவில்லை.//
    அழகா எழுதி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  12. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே - நண்பனே நண்பனே நண்பனே .......!

    பதிலளிநீக்கு
  13. // 1970க்கு முற்பட்ட நாகூரை நினைவுக்குக் கொண்டு வருவதில் சிக்கல்//
    அப்பாதுரை - அந்தணப்பேட்டையை மறந்துவிட்டீர்களே - நாகூரும் , நாகையும் - சிக்கலும் மட்டும் வந்துள்ளதே - இரண்டாம் பகுதியில் அதை எதிர்பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  14. // அந்த நாளில் நாகூர் மிகச் சிறிய கிராமம். //
    இப்ப மட்டும் என்னவாம்? நாகூர் பெரிய டவுனா !! நாகூரை நான் பார்த்ததும் - 1960 களில்தான் - அந்த சமயங்களில் இரண்டு விஷயங்கள்தாம் - அங்கே பிரபலம் - ஒன்று நாகூர் தர்க்காவில் - பாத்தியா ஓதி - மந்திரித்துச் செல்லும் - எல்லா மதத்தினரும் ; இரண்டு கள்ளக் கடத்தல் சாமான்கள் விற்கும் கடை வீதி - அங்கு என் அரவங்காடு அண்ணன் வாங்கும் பிளேடு, பில்லி கார்பியூர் எழுது கோல், வின்செஸ்தார் டார்ச் லைட் -- இத்யாதிகள் !!

    பதிலளிநீக்கு
  15. /kggouthaman கூறியது... வின்செஸ்தார் டார்ச் லைட் -- இத்யாதிகள்/

    கள்ளக்கடத்தல் தெருவுக்குப் போனதில்லை. வின்செஸ்டர் டார்ச் லைட், சீட்டா தீப்பெட்டி இரண்டும் நினைவிருக்கிறது. பழைய அரிகேன் விளக்கும், கெரொசின் பம்படித்து எரியும் திரி ஸ்டவ்வும் நினைவிருக்கிறது. ஸ்டவ்வின் நடுவே ஒரு சிறிய கம்பியை வைத்துக் குத்திக் குத்தி எடுக்க வேண்டும் - தாத்தா, பெரியம்மாவுக்கு கண் தெரியாததால் எங்களிடம் விட்டு விடுவார்கள். உதவி செய்தால் எக்ஸ்ட்ரா ஏதாவது கிடைக்கும். ...பெருமூச்சு. அந்த நாள் ஞாபகங்களின் இனிய வலி சில சமயம் தேவைப்படுகிறது. At least for me!

    மிகவும் நீளமாகி விட்டதால் இன்னொரு பதிவில் முடிக்க நினைத்தேன். தர்காவில் மந்திரித்து ஓதியதைப் பற்றி எழுதியிருக்கிறேன். மீரான் சாயிபுக்கு நேர் வழியில் வந்தவர் என்று சொல்லி ஒரு ஏமாற்று குடுகுடுப்பைக்காரன் வைத்த 'மை' இன்னும் ரகுவைத் தொடர்கிறது. (நான் நம்புகிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை)

    மிச்சத்தை இப்படி ஒரு வரிலே புட்டு வைக்க வச்சுட்டீங்களே? இனிமே இதை முடிக்கணும்னு அவசியமில்லை போங்க.

    பதிலளிநீக்கு
  16. வாங்க ஹேமா. (உங்க ஐடியில் சேர்த்திருக்கும் புகைப்படம் ஜோர். இனிமேல் உங்களை நேரில் சந்திக்கும் போது அடையாளம் தெரியும் பாருங்க)

    ஸ்ரீராமரு என்னடான்னா குரோம்பேட்டை க்ரிகெட் பத்தி எழுதினா 'ஸ்ரீரங்க தேவதை'னாரு. இப்போ நாகூர் 'கபால மை' பத்தி எழுதினா, நீங்க சாதாரணமா 'கபாலா மிஸ்ட்ரெஸ்'னு சொல்லிட்டீங்களே?

    ரே ப்ரேட்பரி படிச்சிருக்கேன் - என்னோட கபால மைமேல கை வச்சு சொல்றேங்க, கபாலா மிஸ்ட்ரெஸ் படிச்சதில்லீங்க. இருந்தா அனுப்பி வையுங்க.

    (மீனாட்சியம்மா - ஸ்ரீரங்க தேவதை இருக்குறதா சொன்னீங்க, நீங்களும் அதை அனுப்பி வையுங்க. சும்மா பேச்சோட சரியா?)

    பதிலளிநீக்கு
  17. என்னுடைய அரைகுறை வடமொழி அறிவை வைத்து 'கறுப்பு பறவை' (பருந்து) என்பதைத் தவிர வேறு எதுவும் புரியாததால் 'க்ருஷணப் பருந்து' என்று இணையத்தில் தேடிய போது மோகன்லால் திரைப்படம் பற்றிய விவரங்கள் தான் வந்தன. இன்னும் சில கடவுச்சொற்களை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் போட்டுப் புரட்டினால் விபரீத வேதங்கள், occult science என்று சில விவரங்கள் வந்தன. இப்போ 'க்ருஷ்ணப் பருந்து' பற்றித் தெரிந்து கொள்ளாமல் ஆறாது போலிருக்கிறது. பத்த வச்சிட்டியே பரட்டை! (இந்த நாளுக்கேற்ற கூல் டயலாக் ஏதாவது மாற்றிக் கொள்ளவும்)

    பதிலளிநீக்கு
  18. அப்பாதுரை சொன்னது…

    "இரண்டு வாரங்களாக சாய்ராம் சென்னையில் இருந்தார்.. இந்தப் புத்தகங்களைத் தேடச் சொல்லியிருக்கலாம்."

    "மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்" என்று என் Blog இல் நேற்று காலை தான் எழுதினேன் !!

    அந்த வெய்யிலில் அலுவலகம் தேடி போவதே கஷ்டம் இதில் இந்த புத்தகம் வேறே தேடணுமா. ரொம்ப தான் குசும்பு துரை உனக்கு.

    - சாய்ராம் கோபாலன்

    பதிலளிநீக்கு
  19. meenakshi சொன்னது…
    'யாதும் ஊரே, யாவரும் கேளீர்' மாதிரி நீங்க எதாவது ஊரை பத்தி எழுதினா உடனே அந்த ஊர்க்காரங்க கிட்டேந்து அழகா comment வருது. சுவாரசியமா இருக்கு. ஆமாம், எங்க 'பேட்டை' பக்கம் எதுக்காகவாவது வந்திருக்கீங்களா?

    உங்கள் பேட்டை பற்றி எழுத என்ன இருக்கின்றது மீனாக்ஷி ?

    ஜாம்பாஜர் ஜக்கு நீ சைதாபேட்டை கொக்கு ?

    பதிலளிநீக்கு
  20. //உங்கள் பேட்டை பற்றி எழுத என்ன இருக்கின்றது மீனாக்ஷி ?//

    என்ன இல்லை எங்க பேட்டையை பத்தி எழுத? காரணீஸ்வரர் கோவில்லேந்து, கருமாரி அம்மன் கோவில் வரைக்கும், காய்கறி மார்க்கெட்லேந்து, மீன் மார்கெட் வரைக்கும், சிடி பஸ்லேந்து, மொபஸல் பஸ் வரைக்கும், train ஸ்டேஷன் எல்லாமே ரொம்ப பக்கம். ரொம்ப அழகான ஒரு ஜெயின் கோவில், திரௌபதி கோவில் கூட இருக்கு.

    போதாதுக்கு பாடல் பெற்ற ஸ்தலம் வேற. அந்த கால கவிஞர்லேந்து இந்த கால கவிஞர் வரைல பாடி இருக்காங்க. 'ஜாம்பஜார் ஜக்கு, நா சைதாபேட்டை கொக்கு', 'சவாலங்கிடி கிரி கிரி, சைதாபேட்டை வடகறி' (சைதாபேட்டை மாரி ஹோட்டல் வடகறி அவ்வளவு பிரசித்தம்) 'சைதாபேட்டை, ராணிபேட்டை, க்ரோம்பேட்டை பேட்டை ராப்" இப்படி எவ்வளவு பேர் எங்க பேட்டையை பத்தி பாடி இருக்காங்க.

    "கலைஞர் ,சைதாபேட்டை" .....இவ்ளோ கீது எழுதோ, நீ இன்னாமோ சல்லிசா கேட்டுகின!

    பதிலளிநீக்கு
  21. 'கலைஞர் கோட்டை, சைதாபேட்டை'
    இதுதாங்க நான் எழுதினதுலேயே பன்ச் டயலாக். இதுல போய் 'கோட்டையை' கோட்ட விட்டுட்டேனே!

    பதிலளிநீக்கு
  22. meenakshi சொன்னது…

    'கலைஞர் கோட்டை,சைதாபேட்டை'

    கோட்டை தானே !!!

    சரியா சொல்லுங்க மேடம் !!

    "திரௌபதி கோவில் கூட இருக்கு"

    ஷிப்ட் போட்டு ஐந்து பேருடன் குடும்பம் நடத்திய பெண்ணுக்கு - ரொம்ப அவசியம் !!

    பதிலளிநீக்கு
  23. வேடிக்கையா சொல்லணும்னா ஒருத்தரோட குடும்பம் நடத்தறதே பெரும்பாடா இருக்கும்போது, அஞ்சு பேரோட குடும்பம் நடத்ததினவளுக்கு நிஜமாவே கோவில் கட்டிதான் கும்பிடணும்.

    ஒருத்தர பத்தி இந்த மாதிரி comment அடிக்கணும்னா, அவங்கள பத்தின விவரங்கள் முழுசும் தெரிஞ்சிருக்கணும். நீங்க திரௌபதி கதைய முழுசா படிச்சு இருக்கீங்களா?

    'பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்வை பாராட்ட யாருமில்லை நிஜ வாழ்க்கையிலே
    பல சேரும் பரந்தாமன் தன்னை புகழ் பாட கேட்டதுண்டு இந்த பூமியிலே
    நியாயங்களோ பொதுவானது புரியாமல் போனது'
    சரியாதான் எழுதி இருக்கார் கங்கை அமரன்.

    பதிலளிநீக்கு
  24. அடடே! கங்கை அமரனே எழுதிட்டாரா, அப்புறம் என்ன? பாஞ்சாலி கதியை நெனச்சா தூக்கம், i mean, துக்கம் தான் போங்க! இந்த மாதிரி எதுக்கெடுத்தாலும் கோவில் கட்டிக் கும்பிடுற பழக்கத்தினால தான் நாடு ரொம்ப உருப்பட்டு இருக்குனு சொல்வேன் (அதையும் கங்கை அமரன் சொல்லியிருக்கப் போறாரு..) குஷ்பூவுக்குக் கோவிலாமே?

    to think of it, க்ருஷ்ணருக்குக் கோவில் கட்டிக் கும்பிடுறோமே?

    பதிலளிநீக்கு
  25. சாய்ராம் கோபாலன் கூறியது...
    ஷிப்ட் போட்டு ஐந்து பேருடன் குடும்பம் நடத்திய பெண்ணுக்கு..



    ஷிப்டு போட்டா?
    சுவாரசியமே போச்சப்பா!

    பதிலளிநீக்கு
  26. மகா ஜனங்களே ! எங்கியோ ஆரம்பிச்சு, எங்கியோ ஜல்லியடிச்சுகிட்டு இருக்கீங்க.
    அமைதி, அமைதி!
    நம்ப எல்லாருடைய மூக்குகளும் நல்லா இருக்கணும் !

    பதிலளிநீக்கு
  27. Meenakshi Said:

    நீங்க திரௌபதி கதைய முழுசா படிச்சு இருக்கீங்களா?

    அப்பாதுரை கதை படிக்கவே நேரம் இல்லை, நான் வெறும் கருத்தை படித்து மறு கருத்து போட்டு பஜன் பண்ணிக்கொண்டிருக்கிறேன் !! நீங்கள் வேறு திரௌபதி கதை படிக்க சொல்லுகிறீர்கள்.

    ஏதோ ஹாசியமாக படித்தோம் விட்டோம் என்று இல்லாமல் டோன்ட் ரீட் டூ மச் இன் மை லைன்ஸ்

    - சாய்ராம்

    PS: கங்கை அமரன் ஏதோ மகா கவி போல் நீங்கள் அவரை மேல்கோள் காட்டியது ரொம்ப ஜாஸ்திங்க

    பதிலளிநீக்கு
  28. கண்ணதாசனோ, கங்கை அமரனோ யார் சொன்னா என்ன இப்போ?
    //எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.//

    கௌதமன் சொல்றா மாதிரி இது எங்கேயோ ஆரம்பிச்சு, எங்கேயோ போறது. அதனால நான் இனிமே இந்த topic பொறுத்தவரை கப்சிப்.

    பதிலளிநீக்கு
  29. meenakshi சொன்னது…

    "வேடிக்கையா சொல்லணும்னா ஒருத்தரோட குடும்பம் நடத்தறதே பெரும்பாடா இருக்கும்போது, அஞ்சு பேரோட குடும்பம் நடத்ததினவளுக்கு நிஜமாவே கோவில் கட்டிதான் கும்பிடணும்"


    வேடிக்கை என்ன இதில், குடும்பமே வேதனை தான் !!

    ஒருத்தி பேச்சையே ஒருவனால் தாங்க முடியவில்லை, ஐந்து பேரையும் எவ்வளவு படுத்தி இருந்தால் அவர்கள் அவளை பணயம் வைத்து ஆடி இருப்பார்கள் ??

    ஏதோ இப்போது தினசரி ஐந்து பத்து தமிழ் சீரியல்களில் பெண்கள் பிசியாக இருப்பதால் நாங்கள் பிழைத்துக்கொண்டிருக்கின்றோம் !!

    இந்த சென்னை விஜயத்தில் கண்ட உண்மை, நிறைய பேச்சு தமிழ் சீரியல் பார்ப்பதால் தான் வருகின்றதோ என்று !!

    - சாய்ராம் கோபாலன்

    பதிலளிநீக்கு
  30. "'ஒருத்தி பேச்சையே ஒருவனால் தாங்க முடியவில்லை, ஐந்து பேரையும் எவ்வளவு படுத்தி இருந்தால் அவர்கள் அவளை பணயம் வைத்து ஆடி இருப்பார்கள் '
    சாய்ராம் கலக்கற போ. geedhu

    பதிலளிநீக்கு