2008/10/14

சந்திரிகையின் கதை

பூத்தூரிகையிலிருந்து:


முன் கதை (1) (2) (3) (4)



பொக்கிஷக் கதை


ஐந்தாம் அத்தியாயம்: கோபாலய்யங்காருக்கு விவாகம்.



றுநாட் காலையில் வீரேசலிங்கம் பந்துலு ஒரு ஆளனுப்பி வேங்கடாசல நாயுடுவைத் தமது வீட்டுக்கு வரவழைத்தார். நாயுடு, பந்துலு, அய்யங்கார் மூவரும் ஆலோசனை செய்யத் தொடங்கினார்கள்.

நாயுடுவும் பந்துலுவும், பணிப்பெண்ணாகிய மீனாட்சியை அய்யங்கார் விவாகம் செய்ய நினைப்பது தகாதென்றும், விசாலாட்சியை மணம் புரிவதே தகுமென்றும் பல காரணங்களுடன் எடுத்துரைத்தனர்.

அய்யங்காரின் மனதில் அக்காரணங்கள் தைக்கவேயில்லை. சுயநலத்துக்கு அனுகூலமாக இருக்கும் காரணங்களை அங்கீகரிப்பதும் பிறர்க்குரைப்பதும் மனித இயற்கை. சுயநலத்துக்கு விரோதமாக நிற்கும் நியாயங்களை சாதாரணமாகப் புறக்கணித்து விடுதலும் அல்லது அவற்றுக்கு எதிர் நியாயங்கள் கண்டு பிடிக்க முயல்வதும் மனித இயல்பாம். நியாய சாஸ்திரமோ, வாதி பிரதிவாதி என்ற இரண்டு வகையினரின் கொள்கைகளுக்கும் இடங் கொடுக்கத்தக்கது.

திருவாங்கூரில் சிறிது காலத்துக்கு முன்பு "தர்மசங்கடம் சங்கரய்யர்" என்றொரு நியாயாதிபதி இருந்தாராம். அவர் தம்முன் விசாரணைக்கு வரும் வழக்குகளில் அனேகமாக ஒவ்வொன்றிலும் எந்தக் கட்சி சொல்வது நியாயமென்று தெரியாமல் மிகவும் சங்கடப்படுவாராம். "நியாயம் எப்படி வேண்டுமானாலும் போக" என்றெண்ணி, சௌகர்யப்படிக்கும் மனம் போனபடிக்கும் தீர்ப்பு செய்யுங் குணம் அவரிடம் கிடையாது. எப்படியேனும் உண்மையைக் கண்டுபிடித்து நீதி செலுத்த வேண்டுமென்பது அவருடைய கொள்கை. ஆனால், அங்ஙனம் செய்யப் புகுமிடத்தே, "வாதி சொல்வதைக் கேட்டால் வாதி கட்சி உண்மையென்று தோன்றுகிறது. பிரதிவாதி சொல்வதைக் கேட்டால் பிரதிவாதி கட்சி மெய்யென்று தோன்றுகிறது. நான் எந்தத் கட்சிக்குத் தீர்ப்பு சொல்வேன்?" என்று அவர் தம்முடைய நண்பரிடங் கூறி வருத்தப்படுவாராம்.

இது பற்றி அவருடைய நண்பர்கள் அந்த நியாயாதிபதிக்கு "தர்மசங்கடம் சங்கரய்யர்" என்று பட்டப் பெயர் சூட்டினார்கள்.

இவ்வுலகத்தில் வெறுமே நீதி ஸ்தலத்து வழக்குக்களின் விஷயத்தில் மாத்திரமேயன்றி, சமூக சம்பந்தமாகவும், மத சம்பந்தமாகவும், பிற விஷயங்களைப் பற்றியும் தோன்றும் எல்லா வழக்குகளிலும் இங்ஙனமே உண்மை கண்டு பிடித்தல் சாலவும் சிரமமென்று நான் நினைக்கிறேன். அளவற்ற தவமும் அதனால் விளையும் ஞானத்தெளிவுமுடையோரே எதிலும் பட்சபாதமற்ற மயக்கமற்ற நடு உண்மை கண்டு தேரவல்லார். மற்றப்படி உலகத்து வழக்குக்கள் பெரும்பான்மையிலும், வலிமையுடைய மனிதருக்கும் வகுப்புக்களுக்கும் சார்பாகவே நியாயந் தீர்க்கப்படுகின்றது.

"பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால்
மெய்போலும்மே; மெய்போலும்மே
மெய்யுடை யொருவன் சொல்லமாட்டாமையால்
பொய்போலும்மே பொய்போலும்மே".

இங்ஙனம் சொல்வலிமை மட்டுமேயன்று; ஆள் வலிமை, தோள் வலிமை, பொருள் வலிமை-எல்லாவித வலிமைகளும் நியாயத்தராசைத் தமது சார்பாக இழுத்துக் கொள்ளவல்லன.

எனவே, அய்யங்கார் தம்முடைய உயர்ந்த கல்வியாலும், உயர்ந்த உத்தியோகத்தின் வலிமையாலும் தம்முள்ளத்தில் அமைந்த பேராவலின் வலியாலும், நாயுடுவையும் பந்துலுவையும் எளிதாகத் தமது சார்பில் திருப்பிக் கொண்டார்.

அப்பால் நாயுடுவிடம் பணிப்பெண்ணின் பூர்வோத்தரங்களைக் குறித்து விசாரிததார். அவள் இடையர் வீட்டுப் பெண்ணென்றும், அவளுடைய தந்தை பல மாடுகள் வைத்துக் கொண்டு ஊராருக்குப் பால் விற்று ஜீவனம் செய்வாராய்ப் பக்கத்துத் தெருவில் வசிக்கிறாரென்றும், அந்தப் பெண்ணுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் ஆலையில் வேலை செய்கிறார்களென்றும், தலைக்குப் பதினைந்து ரூபாய் சம்பளமென்றும், அவளுக்குத் தாய் இறந்துவிட்டாளென்றும், தமையன்மாரின் மனைவிகளே அவர்களுடைய வீட்டில் சமையல் செய்கிறார்களென்றும், ஆதலால் மீனாட்சிக்குத் தன் வீட்டில் எவ்விதமான வேலையுங் கிடையாதென்றும், நாயுடுவின் வீட்டிலும், அவளுக்குக் குழந்தைகளை மேற்பார்த்தல், சாமான்கள் வாங்கிக் கொண்டு வருதல் முதலிய கௌரவமான காரியங்களே கொடுக்கப்பட்டிருக்கின்றனவென்றும், வீடு வாயில் பெருக்குதல், பாத்திரங் கழுவுதல், துணி தோய்த்தல் முதலிய கீழ்க்காரியங்கள் அவள் செய்வது கிடையாதென்றும், அவள் கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் படித்து நன்றாகத் தமிழ் எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டு இருக்கிறாள் என்றும், அமைதி பொறுமை இன்சொல் பணிவு முதலிய நல்ல குணங்களுடையவளென்றும், அவளுக்கு மாதம் நாயுடு வீட்டில் பன்னிரண்டு ரூபாய் சம்பளமென்றும், அதை அவள் வீட்டில் கொடுக்கவில்லையென்றும், நாட்டுக்கோட்டை ம.சி. மாணிக்கஞ் செட்டியார் கடையில் தன் பெயருக்கு வட்டிக்குக் கொடுத்து விடுகிறாளென்றும், அந்தத் தொகை இதுவரை வட்டியுடன் ஐந்நூறு ரூபாய் இருக்குமென்றும், அவளுக்கு வயது இருபதென்றும், இன்னும் விவாகம் ஆகவில்லையென்றும், விவாகத்துக்கு அவள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறாளென்றும் நாயுடு விஸ்தாரமாகத் தெரிவித்தார்.

"அவளுடைய தந்தையின் பெயரென்ன? அவர் இப்போது வீட்டிலிருப்பாரா?" என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

"அவளுடைய தந்தையின் பெயர் சுப்புசாமிக் கோனார். அவர் இப்போது வீட்டிலிருப்பார்" என்று நாயுடு சொன்னார்.

உடனே கோபாலய்யங்காரின் வேண்டுகோளுக்கிணங்கி அவருடன் நாயுடு, பந்துலு மூவருமாகப் பக்கத்துத் தெருவிலிருந்த சுப்புசாமிக் கோனாருடைய வீட்டுக்குப் போனார்கள்.

அங்கு சுப்புசாமிக் கோனார் காலையிலெழுந்து பழையது சாப்பிட்டுவிட்டு, வெற்றிலை பாக்கு புகையிலை போட்டுக் கொண்டிருந்தார். நாயுடுவையும் அவருடைய நண்பரிருவரையும் கண்டவுடன் அவர் எழுந்து நின்று, உள்ளேயிருந்து ஒரு நீளப்பலகை கொண்டு போட்டார். வந்த மூவரும் அதன்மீது உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, நாயுடு தாங்கள் வந்த நோக்கத்தை சாங்கோபாங்கமாகக் கோனாரிடம் எடுத்துரைத்தார்.

செக்கச் செவேலென்ற முகமும் கன்னங்கரேலென்ற சுருள் சுருளான கத்தரித்த முடிமயிரும், அகன்ற தெளிந்த அறிவு சுடர்கின்ற விழிகளும், துருத்த மீசையும், விரித்த மார்பும் திரண்ட தோளும், வயிரப் பொத்தான் போட்ட பட்டுச் சட்டையும், தங்கக் கடிகாரமுமாக - தமக்கு டிப்டி கலெக்டர் கோபாலய்யங்கார் மாப்பிள்ளையாக வருவதைக் கண்டு சுப்புசாமிக் கோனார் பரவசமாகி விட்டார்.

அவருள்ளத்தில் ஆனந்தக்களி ததும்பலாயிற்று. ஆயினும் பிராமணருக்கு பெண் கொடுத்தால் பாவம் நேருமென்ற ஒரு விஷயம் மாத்திரம் அவர் மனதை மிகச் சஞ்சலப்படுத்திற்று.

"நான் என்ன செய்வேன். சாமி? வயதானவன். எனக்கு இனிமேல் இவ்வுலகத்தாசை ஒன்றுமேயில்லை. எனக்கினிப் பரலோகத்தைப் பற்றிய ஆசைகளே மிஞ்சியிருக்கின்றன. அதனால் ஸ்ரீமந் நாராயணனையும் ஆழ்வார்களையும் எம்பெருமானாரையும் வைஷ்ணவர்களையும் சரணாகதியடைந்திருக்கிறேன். எப்போதும் இவர்களையே ஸ்மரித்துக் கொண்டும் இவர்களுக்கு என்னாலியன்ற கைங்கர்யங்கள் செய்து கொண்டும் என் வாழ்நாளைச் செலவிடுகிறேன். நான் சாஸ்திரங்களில் நம்பிக்கையுடையவன். பிராமணருக்கு நான் சூத்திரப் பெண்ணைக் கலியாணம் செய்து கொடுப்பதனால் எனக்குப் பாவம் நேரும். ஆதலால், நான் இந்த விஷயத்துக்கு சம்மதப்பட வழியில்லை" என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார்.

இதைக் கேட்டு கோபாலய்யங்கார், "கோனாரே, முதலாவது, நான் பிராமணனில்லை. நான் பிராமண தர்மத்துக்குரிய ஆசாரங்களைத் துறந்து சூத்திரனாகிவிட்டேன். ஆதலால் தாங்கள் என்னைத் தங்கள் ஜாதியானாகவே பாவித்து, எனக்குத் தங்கள் மகளை மணம் புரிவிக்க வேண்டுகிறேன். மேலும், நிஜமான பிராமணனே பிராமண குலத்தில் மாத்திரமின்றி மற்ற நான்கு வர்ணங்களிலும் பெண்ணெடுக்கலாம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. இந்த விஷயத்தில் உங்களுக்கு சந்தேகமிருந்தால், என்னிடம் தமிழில் மனு ஸ்ம்ருதி இருக்கிறது; உங்களிடம் அந்த நூலைக் காட்டுகிறேன். அதை நீங்களே வாசித்துப் பாருங்கள். உங்களுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமோ,தெரியாதோ? தெரியுமா? அப்படியானால் நீங்கள் நான் சொல்வது மெய்யென்பதைக் கண்கூடாகப் பார்த்தறிந்து கொள்ளலாம். இதில் எவ்விதமான பாவத்துக்கும் இடமில்லை" என்றார்.

"அங்ஙனம் சாஸ்திரமிருப்பது மெய்தான்" என்று வேங்கடாசல நாயுடு சொன்னார்.

"ஆமாம்; அதுவே மனு ஸ்ம்ருதியின் கொள்கை" என்று வீரேசலிங்கம் பந்துலு கூறினார்.

"எனினும், உலக ஆசாரத்தில் அவ்விதம் வழங்குவதைக் காணோமே?" என்று சுப்புசாமிக் கோனார் ஆட்சேபித்தார்.

"நமது தேசத்தில் பூர்வ சாஸ்திரங்களுக்கும் நடைகளுக்கும் விரோதமான ஆசாரங்கள் பல பிற்காலத்தில் வழக்கமாய்விட்டன. அவற்றுள் இந்த விஷயமும் ஒன்றாம். இவ்விஷயத்தில் நமக்குத் தற்கால ஆசாரம் அதிகப் பிரமாணமன்று. முற்காலத்து சாஸ்திரமே அதிகப் பிரமாணம்" என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

அப்போது வேங்கடாசல நாயுடு சொல்லுகிறார், "கேளும், சுப்புசாமிக் கோனாரே! பாவம் என்பதெல்லாம் வீண் பேச்சு. இது சாஸ்த்ரோக்தமான விஷயம். இதில் யாதொரு பாவமும் கிடையாது. அப்படியே பாவமிருந்த போதிலும், அது மாப்பிள்ளையையும் பெண்ணையும் சாருமேயன்றி, உம்மைச் சாராது. அது தவறி, உமக்கும் சிறிது பாவம் வந்து நேரக்கூடுமென்றாலும், அதற்குத் தகுந்த பிராயச்சித்தங்கள் பண்ணிவிடலாம். பெருமாள் கோயிலுக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தினால் போதும். அதில் எவ்வளவு கொடிய பாவமும் வெந்து சாம்பலாய்ப் போய்விடும். உமக்கு எத்தனை பணம் வேண்டுமானாலும், அய்யங்காரவர்கள் கொடுப்பார்" என்றார்.

பணம் என்ற மாத்திரத்திலே பிணமும் வாயைத் திறக்கும் என்பது பழமொழி. சுப்புசாமிக் கோனார் ஏறக்குறையக் கொட்டாவியளவுக்கு வாயைப் பிளந்தார்.

"எனக்குக் கொஞ்சம் கடன் பந்தங்களும் இருக்கின்றன. அவற்றையுந் தீர்த்து வைக்க ஏற்பாடு செய்தால் நல்லது" என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார்.

"தங்களுக்கு எத்தனை ரூபாய்க்குக் கடன் இருக்கிறது?" என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

"ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது" என்றார் கோனார்.

"மூவாயிரம் ரூபாய் கொடுக்கிறேன், போதுமா?" என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

"ஓ! யதேஷ்டம்! இந்த வாரத்துக்குள்ளே விவாகத்தை முடித்துவிடலாம்" என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார்.

அப்பால் மீனாட்சியை அழைத்து அவளுடைய சம்மதத்தையும் தெரிந்து கொண்டால் நல்லதென்று கோபாலய்யங்கார் கூறினார்.

"அவள் இப்போது வீட்டிலில்லை. நானே அவளிடம் சொல்லி விடுகிறேன். அவள் சிறு குழந்தை. அவள் பிறந்தது முதல் இதுவரை என் வார்த்தையை ஒரு முறை கூடத் தட்டிப் பேசியது கிடையாது. இப்போது இத்தனை உயர்ந்த, இத்தனை மேன்மையான சம்பந்தம் கிடைக்குமிடத்தில் அவள் என் சொல்லை சிறிதேனும் தட்டிப் பேசமாட்டாள்" என்றார் கோனார்.

"எதற்கும் அவளை அழைத்து ஒருமுறை அவளிடமும் கேட்டால் தான் என் மனம் சமாதானமடையும். நாங்கள் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறோம். அவளை அழைப்பியுங்கள்" என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

அங்ஙனமே கோனார் ஒரு ஆளைவிட்டு மீனாட்சியை அழைத்து வரும்படி செய்தார். மீனாட்சி வந்தாள். அவளைத் தனியாக அழைத்துப் போய் சுப்புசாமிக் கோனார் விஷயங்களைத் தெரிவித்தார். மாப்பிள்ளையின் படிப்பையும், செல்வத்தையும், பதவியையும் மிகவும் உயர்வாக்கி வர்ணித்தார். மாப்பிள்ளையின் அழகை அவள் பார்க்கும்படி அவரையும் காண்பித்தார்.

அவள் அவருக்கு வாழ்க்கைப்பட சம்மதமுற்றாள்.

சிறிது நேரத்துக்குள் மகளையும் அழைத்துக்கொண்டு சுப்புசாமிக் கோனர் புறத்து திண்ணைக்கு வந்து சேர்ந்தார்.

அவளுடைய விழிகளை கோபாலய்யங்கார் நோக்கினார். அவள் எதிர் நோக்களித்தாள். "கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின், வாய்ச்சொற்கள் என்ன பயனுமில" என்றார் திருவள்ளுவ நாயனார்.

அவளைப் பார்த்த மாத்திரத்திலே தம்மை மணம் புரிய சம்மதப்பட்டு விட்டாளென்று கோபாலய்யங்காருக்குத் தெளிவாகப் புலப்பட்டு விட்டுது. எனினும், பரிபூர்ண நிச்சயமேற்படுத்திக் கொள்ளுமாறு அவர் சுப்புசாமிக் கோனாரை நோக்கி, "மீனாட்சி என்ன சொல்லுகிறாள்?" என்று கேட்டார்.

"அவளிடத்திலே நேராகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே" என்றார் கோனார்.

"என்ன மீனாட்சி? என்ன சொல்லுகிறாய்? என்னை மணம் புரிந்து கொள்ள சம்மதந்தானா?" என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

மீனாட்சி "சம்மதம்" என்று மெதுவாகக் கூறித் தலை கவிழ்ந்தாள்.

கோபாலயங்காருக்கு ஜீவன் மறுபடி உண்டானது போல் ஆயிற்று. அவர் முகத்தில் புன்னகை தோன்றிற்று.

அந்த வாரத்திலேயே கோபாலய்யங்காரும் மீனாட்சியும் பிரம ஸமாஜத்தில் சேர்ந்து கொண்டார்கள். அவ்விருவருக்கும் பிரம ஸமாஜ விதிகளின்படி, சென்னப்பட்டணத்தில் ஸமாஜக் கோயிலிலே விவாகம் நடைபெற்றது.

விவாகம் முடிந்தவுடனே கோபாலய்யங்கார் தமது மனைவியை அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்குப் போய் அங்கு தம் உத்தியோகத்தில் சேர்ந்து கொண்டார்.


(வளரும்)


தொடர்ந்து படிக்க: சந்திரிகையின் கதை-6

கதையாக்கம்: மகாகவி சுப்ரமணிய பாரதியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக