2014/05/24

சாத்தான் கோவிலும் சோடா ப்ரிஜ்ஜும்


    ர்போர்ட் லவுஞ்சில் பொழுது போவதற்காகப் படிப்பேனே.. எச்சூச்மி.. புரட்டுவேனே தவிர, இந்த மாதிரி பத்திரிகை மீதெல்லாம் என் பார்வை கூட விழாது. சமீப லவுஞ்ச் வாய்ப்பொன்றில் 'இகானமிஸ்ட்' பத்திரிகை புரட்டிய போது, கடைசி பக்கத்தில் நீனா கேசியன் காலமான செய்தி கண்ணில் பட்டது. கேசியன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில் எனக்கு மிக நெருங்கிய தோழியாக இருந்த சாவித்திரி, இவரைப் பற்றி நிறைய புலம்பியிருக்கிறாள். கேசியன் ஒரு புரட்சிக்கவி என்பாள்.

அந்த நாட்களில் 'madras poet society' என்று ஒரு அமைப்பு இருந்தது. சென்னை மவுண்ட் ரோடின் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் மாதமொரு முறை கூடி ஆங்கில கவிதைகள், மொழியாக்கங்கள், உரைகள் முதலியவற்றை படிப்பார்கள். [ஆங்கிலம் எனக்கு மிகவும் பிடித்த மொழி. இன்றைக்கும். உண்மையைச் சொல்லப் போனால், அப்போதெல்லாம் ஆங்கிலத்துக்கு இணையில்லை என்று நினைப்பேன். 'வீ டோன்ட் ஸ்பீக் டேமில்' டைப்பில் வாழ்ந்தேன்]. கேசியனின் கவிதைகளை சாவி அந்த அரங்கத்தில் படிப்பாள். அத்தோடு நில்லாமல், பக்கத்தில் ஸ்பென்சர் கடையில் பைனாப்பிள் கேக்கை சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், விடாமல் எனக்கு வேறே படித்துக் காட்டுவாள்.. "ஆமா.. ஓஹோ.. அப்படியா.. வெரி குட்.." என்று ஏதோ சொல்லி வைப்பேன். அத்தோடு சரி.

சில வருடங்கள் முன் சாவி செத்தாள். அவளை அவ்வப்போது நினைப்பதுண்டு. சமீபத்தில் கேசியன் செத்த செய்தி படித்ததும், சாவி நினைவு வந்து.. மரணச் செய்தியைப் படித்தேன். கேசியன் பற்றிச் சில குறிப்புகளைப் பார்த்து லேசாக அசந்து போனது உண்மை. நேற்று உள்ளூர் நூலகத்தில் இவர் படத்தை வைத்து நாலைந்து புத்தகங்களை அடுக்கி, வருவோர் போவோரை அழைத்துப் பேச முயன்று கொண்டிருந்த ஒரு ரொமேனியப் பெண்மணி என்னை மிகக் கவர்ந்தார். அதைவிட கேசியனின் புத்தகத் தலைப்புகள் என்னை இன்னும் கவர்ந்தன. எல்லாம் கரடுமுரடான ரொமேனியத் தலைப்புகள். கொஞ்சம் படித்துத் தான் பார்ப்போமே என்று சில பக்கங்களைப் படித்.. புரட்டினேன்.. "fără frică" என்ற அவரது 1950ம் வருட ரொமானியக் கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கம். முதல் சில பக்கங்களில் 'காதல்' பற்றி இப்படி ஒரு கவிதை:

இதயத்தைக் குத்திச்
  சல்லடையாக்கி
    ஒட்டுமொத்தமாய்
      வெட்டியெடுத்து
        ஓங்கித் தரையிலடித்து
          உடைத்து
            மிகச் சுக்கலாக்கி
            மிதித்துக்
          கடும் தூளாக்கி
        அழுத்திப்
      பொடியாக்கித் தேய்த்துத்
    தூசாக்கிக்
  காறி உமிழ்ந்துப்
பார்த்ததுண்டா?

"fără frică" என்றால் 'பயமற்ற' என்று பொருளாம். கவிதையைப் படித்து நடுங்கிப் போனேன். இகானமிஸ்ட் பத்திரிகையையும் சாவியையும் கேசியனையும் இனிய மனதோடு திட்டினேன். இன்னாங்கடி? வொய் திஸ்? 1950லேயே இப்படியா? அதுவும் காதல்? நைசாகப் புத்தகத்தை அங்கேயே வைத்துவிட்டு ரொமேனியப் பெண்மணியிடம் ஒரு புன்னகையை செலவழித்து நடையைக் கட்டினேன். ஆளை விடுங்கடி.

    ன்ஸ்யூமர் இலக்ட்ரானிக்ஸ் விழாவுக்குப் போயிருந்தேன். சேம்சங் அறிமுகப்படுத்தியிருக்கும் ப்ரிஜ் ஒன்று, சோடா கலந்து கொடுக்கிறது. அட்டகாசமாக இருக்கிறது. சோடா ஸ்ட்ரீம் எனும் இந்த அமைப்பை ப்ரிஜ்ஜில் பொருத்திவிட்டால் கோடைக்கு இதமான சோடா கிடைக்கும். கோடையில்லாவிட்டாலும் கிடைக்கும். பெரியே, ஜிஞ்சர் ஏல், ஆரஞ்சு க்ரஷ் என்று வகை வகையாகச் செய்து தருகிறது. பன்னீர் சோடா செய்து தரும். கோக், பெப்ஸி நிறுவனங்களுக்கு இது ஒரு விற்பனை சாதனமாகும் நாள் தொலைவில் இல்லை. நாடார் கடையில் கோக் மிக்ஸ் வாங்கி சேம்சங் சோடா ஸ்ட்ரீமில் பொருத்த வேண்டியது, தேவைப்படும் பொழுது கோக் பருக வேண்டியது.. அக்கடா.. ஆனந்தம்.. பேரானந்தம். நமக்குத் தேவையான co2 அளவை அமைத்துக் கொள்ளலாம் என்பது இன்னும் உசிதம். சும்மா ஜ்ஜ்ஜிவ்வுன்னும் ஏற்றிக் கொள்ளலாம் - சிங்கில் மால்ட், ரம், இத்யாதிகளுடன்.

பள்ளிக்கூடம் விட்டு வரும் பிள்ளைகள் முதல் வேலையாக சோடா ஸ்ட்ரீம் ப்ரிஜ்ஜை நோக்கி ஓடுவார்கள். ஹிஹி. காலம் வெல்லும்.

பார்த்து அசந்து போன இன்னொரு சமாசாரம் சேம்சங் டிவி. எப்8000 என்று ஒரு மாடல். ஸ்க்ரீன் வளைந்திருக்கிறது. என்னென்னவோ செய்கிறது. ஆனால் அசந்து போனது இங்கே தான். டிவி எதிரே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று வையுங்கள். ஏதோ வேலையாக எழுந்து பாத்ரூம் போனவன் திரும்பி வராமல் இருக்கிறேன் (என்ன பொல்லாத வேலை? சோடாஸ்ட்ரீம் உபயோகித்த வினை, வேறென்ன?). நான் ரொம்ப நேரமாக எதிரில் இல்லாதது தெரிந்த டிவி, என்னைக் கூப்பிடும். 'துரை கண்ணா, வந்து என்னைப் பார்க்கிறியா, இல்லை நான் தூங்கட்டுமா?" என்று கொஞ்சிக் கேட்கும். நான் "ஓகே. தூங்கு" என்றால் அவ்வளவு தான்.. ச்ச்ப் என்று டிவி அணைந்து விடும்.

விலையை விட இந்த டிவி இன்னும் என்னென்ன செய்யுமோ என்ற பயம் தான் அதிகமாக இருக்கிறது.

    கூகில்+ உபயோகிப்பதால் நீங்கள் சிறை செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அதே. நான் எழுதியதை கவனமாக இன்னொரு முறை படியுங்கள். கூகில்+ உபயோகிப்பதால் நீங்கள் சிறை செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

உண்மைக் கதைங்காணும். சொல்றேன். சொல்றேன்.

அமேரிக்காலே மேசசூஸட்ஸ்னு ஒரு மாநிலம். அங்கே வூஸ்டர் வூஸ்டர்னு ஒரு ஊர். அங்கே டாம் டாம்னு ஒரு ஆசாமி. சரி, ஒரு வூஸ்டர், ஒரு டாம் தான். இந்த டாமுக்கு ஜீனானு ஒரு காதலி. ரெண்டு பேரும் பழகினாங்க. உயிருக்குயிரா காதலிச்சாங்க. பலானதெல்லாம் செஞ்சாங்க. டயர்டா போச்சு. திடீர்னு அடிச்சுக்க ஆரம்பிச்சாங்க. ஜீனாம்மா 'அடேய், டாம்! இனிமே என் பக்கம் வந்தே தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு!'னுட்டு கோர்ட் ஆர்டர் வாங்கிட்டாங்க. பிரிஞ்சுட்டாங்க.

எல்லாம் தினசரி சகஜமா நடக்குறது தான். ஒண்ணும் பெரிய விஷயமில்லே. அப்போ என்னாச்சுன்றீரா? சொல்றேன்.

டாமும் ஜீனாவும் பிரிஞ்சு, கொஞ்ச நாள் விட்டு ஜீனாவுக்கு கூகில்+லந்து ஒரு அழைப்பு வருது. டாமோட கூகில்+ வட்டத்துல சேந்துக்கடி சிட்டுனு ஒரு மெசேஜ் வேறே. முதல் தடவை கண்டுக்காம விட்ட ஜீனாவுக்கு தொடர்ந்து கூகில்+லந்து அழைப்பு வர, ஜீனாவுக்கு வந்ததே ஜின்ஜின்னா! நேரே கோர்ட்டுக்கு போனா, இன்னொரு ஆர்டர் வாங்கி போலீஸ் கிட்டே கொடுத்தா. அரெஸ்ட் வாரென்டோட டாமைப் பிடிச்சு உள்ளே தள்ளிச்சு போலீசு.

இதுல டாம் செஞ்ச தவறு எதுவுமேயில்லை. "கழிசடை.. அவளுக்கு நான் ஏன் அழைப்பு அனுப்பறேன்?" என்று டாம் புலம்ப, விஷயம் மெள்ள வெளி வந்தது. கூகில்+ தானாவே அழைப்பு அனுப்புதாம். 'அடிச்சது லாட்டரி' என்று ஒரு வக்கீல் துணைக்கு வர, கூகில் மேலே மான நஷ்ட வழக்கு போட்டிருக்காரு டாம்.

    ரு அதி காலையில் என் பெண்ணுக்கு இந்தக் கடிதம் எழுதினேன். முதல் நாள் சற்றுக் கடுமையாக நடந்து கொண்டதன் குற்ற உணர்ச்சியா, அல்லது என் பெண் சுதந்திரமாகப் பறந்து போகிறாள் என்ற அச்சமா தெரியவில்லை. வாயு தொல்லையால் தூக்கம் வராததும் காரணமாக இருக்கலாம்.

I am sorry for hurting you with my words.

I love you because I want to. I care about you because I want to. Not because I expect anything back from you.

I am not expecting anything from you, except may be that you can demonstrate to yourself from time to time - that you are a capable, mature and responsible person.

You are entering a new world tomorrow. You will weild enormous power and authority over your life. It's direction. Path. Milestones. Destination. Only you can make the journey as exciting, meaningful, rewarding and fulfilling as you want. Everything changes from here on. We don't travel together anymore. Your fatigue and frustrations are your own. Your victories and accomplishments are your own. I become a spectator. I am standing at the platform waving at you take off. That's it.

As morose as it sounds, I am waving at you with pride and hope that you are on your own. Capable, mature and responsible. I know, as I know my heart beat, that you will blaze a few trails.

Here's something for you.

Valluvar was an ancient Tamil scholar. He wrote poems about his views on way of life. His book, Thirukural, is the second most translated work after the Bible. The book has 1330 short two-line poems, 10 couplets each on 133 different aspects of life. That I am quoting two as thoughts for your graduation day is testimony to the book's timelessness.

Here are two couplets from the ten that Valluvar wrote on parent-child reciprocity.

What greater service shall the parent provide
Than guiding the child to lead the learned.

What greater praise shall the child bestow
Than the words 'blessed are thy parents'.

I love you my dear. Happy graduation.

படித்ததும் என்னைக் கட்டிக் கொண்டாள். ஐ மிஸ் யு டேடி என்றாள். வாழ்க நீ என்றேன். இந்த வாலுவார் புக் வாங்கித் தரியா என்றாள். அவசியம் என்றேன்.

தமிழுக்கு நான் பட்ட கடன் இனிதே தீர்ந்தது.

    கூகில் க்லேஸ் வாங்கியிருக்கிறேன். என் புடலங்காய் கம்பெனி வாங்கியிருக்கிறது. இந்தக் கண்ணாடியை வைத்துக் கொண்டு பெண்கள் பாதுகாப்பு பெற முடியும் என்று ஒரு ஐடியா வழங்கியதன் பெயரில் இந்த வாய்ப்பு கிட்டியது. கூகில் க்லேஸ் அணிந்து செல்லும் பெண்களிடம் வம்பு செய்யும் ஆண்களை படம் பிடித்து நொடிகளில் போலீஸ் இன்டர்நெட் என்று பல இடங்களில் செய்தி அனுப்பும் மென்பொருளை எழுதப் போகிறேன். அதாவது என் புடலங்காய் கம்பெனி எழுதப் போகிறது.

ஒரு சின்ன சிக்கல். இந்த கண்ணாடி விற்கிற விலையில் பாதுகாப்புக்காக ரெண்டு பயில்வான்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம். இது புரியாமல்...

    சைனாவிலிருந்து அமெரிக்காவுக்கு கடலடி ரயில் பயணம் செய்யச் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது.. அலாஸ்கா வழியாக கடலடி ரயில் பாதை கட்டத் திட்டம் போட்டிருக்கிறார்கள். சைனா ரசியா கேனடா அமெரிக்கா என்று பன்னாட்டுக் கூட்டுறவுடன் இந்த எட்டாயிரம் மைல் ரயில் திட்டத்தை செயல்படுத்தச் சித்தமாக இருக்கிறார்களாம் சீனப் பொறியாளர்கள். சைனா-அமெரிக்கா கடலடி ரயில் பயணம் நடைமுறையில் வர இருபது வருடங்களாவது ஆகுமென்று கணக்கிட்டிருக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்குள் முடிக்க என்ன செய்யலாமென்று யோசனைகள் கேட்டு சீன பல்கலைக் கழகங்கள் போட்டி வைத்திருக்கிறார்களாம். "சைனாவில் செய்ததாச்சே, கடலுக்கடியில ரயில் ஒழுங்கா போகுமா?" என்று இங்கே எள்ளுகிறார்கள். இருந்தாலும் துடிப்புடன் செயல்படத் தொடங்கியிருக்கும் சீனப் பொறியாளர்கள் வெற்றி பெறட்டும்.

நம் கதை வேறு. நாம் கடலுக்கடியில் ரயில் விட வேண்டியதில்லை. நிலப்பரப்பில் ராமர் கோவில் கட்டுவதாகத் தேர்தல் அறிக்கையில் தெளிவு படுத்தியவர்களை இப்பொழுது தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம். கடல் பயணம் செய்யாவிட்டாலும் கடல் கடந்தவருக்குக் கோவில் கட்டி சந்தோஷப்படுவோம். நம்மால் முடிந்ததை நாம் செய்வோம். அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்கிறார்கள்.

    ன்னொரு கோவில் சமாசாரம். ஓக்லஹோமாவில் சாத்தானுக்கு ஒரு கோவில் (மாதிரி) கட்டியிருக்கிறார்கள். ஜீசசுக்கும் மேரிக்கும் மட்டும் தான் ஆலயமா? கிறுஸ்தவ மதப்படி சாத்தானும் ஒரு தேவன் தானே? அவனுக்கு வைத்தாக வேண்டும் என்று அடம்பிடித்து கடைசியில் அனுமதி வாங்கி விட்டார்கள். இந்த வருடத் துவக்கத்தில் வைக்கப்பட வேண்டிய சிலை, ஒரு வழியாக போன மாதம் வைக்கப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது. சாத்தான் சிலையின் மடியில் உட்கார்ந்து ஜெபம் செய்யலாமாம். சும்மா உட்கார்ந்து எழுந்தால் கூட மனதுக்கு அப்படியொரு நிம்மதி கிடைக்கிறதாம்.

மதவெறி ரிபப்லிகன் டெமொக்ரேட் காரர்கள் இதை அவமானமாகக் கருதிக் கூச்சலிடுகிறார்கள். சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையினால் அவர்கள் கூச்சலிட அனுமதி கிடைத்திருக்கிறது. இவர்கள் சிலை வைத்து கோவில் கட்டவும். சாத்தான் மடி மெத்தையடி என்று பாடவும்.

சாத்தான் கோவில் ஒரு நாத்திக அமைப்பு. நாத்திகம் எனக்குத் திரட்டுப்பால் போலப் பிடிக்கும். இருந்தாலும் சாத்தான் கோவில்.. நாத்திகம் தானா என்ற கேள்வி எழுகிறது. சுவாரசியத்துக்காக அவர்களுக்கு ஒரு ஜே போடுகிறேன்.

பத்தாயிரம் டாலர் கொடுத்தால் எனக்கும் கோவிலில் ஒரு சிலை வைப்பதாக சொல்கிறார்கள். ஹிஹி. என்னிடம் எல்லாம் மூணு டாலர் நோட்டாக இருப்பதால் தயங்குகிறேன்.

    செவ்வாயைக் கடந்து சுற்றும் ஆஸ்டிராய்ட் பட்டி பற்றி எப்போதோ எழுதியிருக்கிறேன். ஆஸ்டிராய்ட் பட்டி கொஞ்சம் விலகத் தொடங்கியிருக்கிறதாம். அங்கிருந்து விலகிய பலவகை சைஸ் ஆஸ்டிராய்டுகள் என்றைக்காவது ஒரு நாள் பூமியைத் தாக்கும் என்று அமைதியாக இருந்த கூட்டம், திடீரென்று விழித்துக் கொண்டு, "இல்லை.. இல்லை.. இந்த அபாயம் அடுத்த ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளுக்குள் பூமியை நெருங்க வாய்ப்பிருக்கிறது.. அதனால் உடனே ஏதாவது செய்தாக வேண்டும்" என்று முழங்கியபடி ந்யூயோர்க் நகரில் கூடித் திட்டம் போட்டிருக்கிறார்கள். ஆஸ்டிராய்ட்களை பூமியின் பாதைக்குள் புகுமுன்னரோ புகும் நேரத்திலோ அடித்து நொறுக்கும் ஏவுகணைகளைத் தயாரிக்கத் திட்டம் போட்டிருக்கிறார்கள். ஏவுகணை தயாரிக்க யார் காசு தருவார்கள் என்று அடுத்த வருடக் கூட்டத்தில் விவாதிக்கப் படலாம். தயாரித்தாலும் அதை யார் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்பது இன்னொரு வருடம் விவாதிக்கப்படலாம்.

படிக்கும் பொழுதே புல்லரித்தேன். என் கணக்குக்குப் பத்து டாலர் எழுதிக் கொள்ளுங்கள் புத்திசாலிகளே.

30 கருத்துகள்:

  1. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒரே விதமாக இல்லாமல் ஜாக்கிரதை யாகப் பார்த்துக்கொண்டிருக் கிறீர்கள். (ரொம்ப நாள் கழித்து பார்த்தில் கரைகொள்ளா சந்தோஷம் வேறயா..)

    வள்ளுவர் தலைகாட்டிய இடம் சூப்பர்.சும்மாச் சொல்லக் கூடாது, அந்த மொழிபெயர்ப்பும் வழக்கமாக இது வரை படித்தறிந்திரா வண்ணம் different ஆக இருந்தது.

    சத்தப்படாமல் சேம்சங்குக்கு ஒரு விளம்.. நோ. புதுமைகளைப் பாராட்டி மகிழும் இயல்பு.

    நாத்திகம் எனக்கு திரட்டுப்பால் போல் போலப் பிடிக்கும்; அல்லது திரட்டுப்பால் நாத்திகம் போலப் பிடிக்கும். (ஒன்றே போலவாம் மயக்கம் இருப்பினும் இந்த இரண்டுக்கும் ஏதோ நுண்ணிய வித்தியாசம் ஊடாடுவது போலப்படுகிறது.. என்னன்னு நீங்க தான் சொல்லணும்..)

    கூகில்+. அப்புறம் கூகில் கிலேஸ்,
    சைனா டு அமெரிக்கா கடலடி ரயில்
    -- நிறைய்ய சுவாரஸ்யங்கள்.

    அத்தை மடி மெத்தை சரி; சாத்தான் மடி எப்படியிருக்கும் தெரியலையே!

    படிச்சிண்டே வர்றத்தே இத்தனைக் கும் நடுவே நம்ம மூன்றெழுத்துக் காரர் நினைப்பு வேறே! விஷயக்கார மனுஷர்.. எத்தனை பேரில் தடம் பதித்திருக்கிறார், பாருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றே போலவாம் மயக்கம்.. நுண்ணிய வித்தியாசமா? சரியாப் போச்சு. திரட்டுப்பால் எனக்கு நாத்திகம் போல் பிடிச்சா நான் அவ்வளவு தான்!

      சாத்தான் மடி எப்படி இருக்குனு உக்காந்து பாத்துட்டு சொல்றேன்.

      நீக்கு
  2. கலந்த கலவை சாதமாய் பல்வேறு சுவை! தனிச்சுவையாய் ஜீவி ஸாரின் பின்னூட்டம். ஒவ்வொன்றைப் பற்றியும் கேள்வி கேட்கத் தோன்றினாலும் 'சின்னப் புள்ளத் தனமா' இருக்கும்னு ஜோரா ஒரு தரம் கை தட்டிட்டு ஓரமா நின்னு அடுத்தடுத்த பின்னூட்டங்களுக்கு வெய்ட் பண்றேன்.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொண்ணா ஒவ்வொரு நாளைக்கு
    ஒவ்வொரு பலானா பத்தியும்
    ஒண்ணே ஒண்ணு பின்னூட்டம் போடறேன்.

    இன்னிக்கு நேரம் இல்லை . அதுனாலே
    ஒண்ணே ஒண்ணு இருக்கு. அந்த
    ஒண்ணே ஒண்ணு மட்டும் மனசை
    வின்னோ வின் வின்னி விட்டதாலே ..

    //என் புடலங்காய், கம்பெனி வாங்கியிருக்கிறது//

    கம்பெனி வாங்க கூடிய அளவுக்கு , அப்பாடி,
    அந்த புடலங்காய் அவ்வளவு ரிச்சா ?


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்து டாலர் வச்சுகிட்டு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்ம்பிக்கிறாங்க சார்.

      நீக்கு
  4. சோடா ஸ்ட்ரீம் ஃப்ரிட்ஜ் சமாச்சாரம் வியக்க வைத்தது. ஸாம்ஸங் டிவியின் சமாச்சாரமோ மிரள வெக்குது. கொஞ்சம் வுட்டா பின்னாலயே ஸ்டாண்டோட நகர்ந்து வந்து நாம என்ன செய்யறோம்னு எட்டிப் பார்த்துடும் போலயே... அவ்வ்வ்வ்!!! காதல் பற்றிய கவிதை... பிரமிப்பு!

    பதிலளிநீக்கு
  5. காதல் பற்றிய கவிதை - பதிந்த விதமும் அருமை...

    சேம்சங் ப்ரிஜ் சமாசாரம் + டிவி - அசர வைக்கிறது...!

    கூகில்(ள்...?)+ - ஐயோ சாமீ...!

    பதிலளிநீக்கு
  6. வாலுவரும், சே, வள்ளுவரும், காதல் கவிதையை எழுதினவரும் அசத்திட்டாங்க. வள்ளுவரைச் சரியான இடத்தில் மொழிபெயர்த்திருப்பதால் உங்களை வாலுவர் எனப் புகழ்ந்திருக்கிறேன் என அறிக. :)))

    ரொம்ப நாள் கழிச்சு ஒரு வாசனைக் கதம்பம். சாம்சங் ஃப்ரிஜ் இந்தியாவுக்கு எப்போ வரும்? ஆனால் நாங்க இந்த பெப்சி, கோலா, ஜோடாவெல்லாம் சாப்பிடறதில்லை. ஃப்ரெஷ் ஜூஸ் மட்டும் தான். ஃப்ரெஷ் ஜூஸாக் கொடுக்குமா?

    பதிலளிநீக்கு
  7. உங்களோட பெத்தாபுர மலர் கதையிலே பின்னூட்டம் போட முடியவில்லை. புதிய கருத்துகள் அனுமதிக்கப்படுவதில்லைனு அறிவிச்சிருக்கீங்க!!!!!! :(

    பதிலளிநீக்கு
  8. ஃப்ரிட்ஜ் சமாச்சாரம் வியக்க வைத்தது

    பதிலளிநீக்கு
  9. ஃப்ரிட்ஜ் - வியக்க வைத்தது.....
    கவிதை பயமுறுத்தியது......

    சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு..... மகிழ்ச்சி.



    பதிலளிநீக்கு
  10. தலைப்பைப் பார்த்ததும் ஏதோ பேய் கதைப் போலன்னு வந்தேன்.
    வெவ்வேறு விஷயங்கள் . . .
    சாத்தான் கோயில் வித்தியாசமாய் இருக்கிறது. (நடிகைக்கு தான் கோயில் கட்டணும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கிறதா என்ன!)

    பதிலளிநீக்கு
  11. காதல் பற்றிய கவிதை காதலில் ஏமாந்து கோட்டை விட்டவன் எழுதியதாக இருக்கும் மகளுக்கு எழுதிய கடிதம் சூப்பர். ஒரு பொறுப்பான தந்தை என்று காட்டுகிறது. இந்த கூகில்+ நிஜமாகவே அச்சுறுத்துகிறது. யார்யாரோ எழுதுவதுபோல் மினஞ்சல்களில் வேண்டுதல்கள் வருகிறது. யார் யாரோ நம்மை அவர்களின் தொடர்பு எல்லைக்கு வருந்தி அழைப்பதும் காண்கிறேன் சாத்தானுக்குக் கோவில் என்பது நம்மூரில் களபலி கேட்கும் கிராமதேவதைகளுக்கான கோவில்கள் போலவா. ஒவ்வொரு விஷயமும் தனிப் பதிவாய் இருந்தால் இன்னும் ஏதேதோ கருத்துக்கள் சொல்லமுடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாத்தான் கோவில் ஆத்திகர்களுக்கு எதிராக ஏறக்குறைய கிண்டல் அமைப்பு போல் தொடங்கப்பட்டது. கிறுஸ்தவ மதவாதிகளை வெறுப்படிக்கவே தொடங்கப்பட்ட அமைப்பு என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  12. மீண்டும் உங்களது எழுத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

    நாத்திகம் திரட்டுப்பால் போலவா? ஒரு வழியாக நாத்திகம் திரிந்த பால் என்று நீங்களே ஒப்புக்கொண்டதில் ஆறுதல்:) சந்தடி சாக்கில் காவிகளை ஒரு பிடி பிடிக்காமல் விட்டதில் அதை விட ஆறுதல்.

    மகளுக்கு எழுதிய மடல் அற்புதம். மகள் தந்தைக்காற்றும் உதவி என்று வள்ளுவர் ஏன் எழுதவில்லை?

    பதிலளிநீக்கு
  13. Letter to your daughter is a POKKISHAM for me. Every father, who has daughter(s), needs to copy this (should we pay any loyalty for this???) and send the same to their respective daughter(s). REALLY TOUCHING. Hats off.
    Regarding temple for Devils, it is like building a temple for Ravanan who is also portrayed as devil in Ramayana.
    Asteroids, I am a big zero in this subject.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரி சாரோட பின்னூட்டம் பாத்துட்டேன்.. அதனால அங்கே..

      நீக்கு
  14. //I am a big zero//

    what a revelation !!
    High Time, I sign underneath this statement , if not for asteroids, on some x , which eludes us ever .

    Most of us , me not unincluded, do not have the honesty in declare likewise in public, albeit, to ourselves, many a time, we say it to ourselves.

    Hats off to Mohan Baroda !

    A lot to write about other things bombard my head no doubt, but let me wait, for a better analysis within myself.
    Let us hope that Appadurai buy first ARATHUPAL as a gift on the eve of his daughter's graduation. It will; also be a pleasure for me to send a copy of Valuvar direct from here, if i could know his address.
    subbu thatha.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. the courageous admit.. உண்மை தான் சூரி சார்.

      இந்த வாலுவார் பிஸினஸ் எல்லாம் ரெண்டு நாளோட சரி - இது என்னோட அனுபவம். இருந்தாலும் உங்க offer நான் பயன்படுத்திக்கிறேன். (நானே திருக்குறள் முழுக்க படிச்சதில்லை.. 1330ஐயும் ஒரு போட்டிகாக ஸ்கூல் டேஸ்ல மனப்பாடம் செஞ்சிருக்கேன், ஆனா படிச்சதில்லே.. how is that?)

      நீக்கு
  15. துரை ஊருக்கு வந்தச்சா. பெண் க்ராஜுவேஷன். கல்லூரிக்கு எப்போ போகிறார். தந்தையின் பெருமிதம் அழகாக இருக்கிறது. சாம்சங் சோட கொடுக்கிறதா. பேரனுக்குச் சொல்லக் கூடாது. நோ ஃபிஸ்ஸ்ஸ்ஸ்ஸ். வால் கொண்ட வள்ளுவர் வாழி. தந்தைக்கும் மக்ளுக்கும் பாலமானார். ரொமானியக் காதல். எந்த லைப்ரரி. எனக்குத் தெரியாமல் போச்சே..... வெகு நாட்களுக்குப் பிறகு உங்களைப் படிக்க முடிந்தது சந்தோஷம் துரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேபர்வில் லைப்ரரி - இன்னும் இருக்கு.

      நீக்கு
  16. அத்தனையும் சுவாரசியம். அற்புதமான நடை. ஒவ்வொன்றின் நிறைவு பஞ்ச் சுஜாதாவை நினைவு படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  17. கொஞ்சம் லேட்டானாலும் பல லேட்டஸ்ட்டான தகவல்களுடன் உங்களது புதிய பதிவு செம்ம கலக்கல்

    பதிலளிநீக்கு
  18. அப்பா(டா) துரை-யை மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சி!
    கடித்தில் கரைந்து போனேன்... மோஹன் மற்றும் சுப்பு தாத்தா சொன்னதைவிட வேறு ஒன்றும் இல்லை நான் சொல்ல!!

    பதிலளிநீக்கு
  19. Soon my daughter is also going to finish her graduation. At the most I thought of giving her a hug but after reading your letter to your daughter, I am also thinking of writing such a letter to her squeezing my mind (if any). Let me try.

    பதிலளிநீக்கு